Friday, December 30, 2011

சிந்தனைக்கு:



கருத்துக்கோழைகள்
 
அல்லது
 
சக்கரைவியாதிப்புண்கள்!








ம்மவர்களிடம் ஒரு பழக்கம் உள்ளது.

 தமது உண்மையான உணர்வுகளை உள்ளபடியே நேர்மையாக வெளிப்படுத்தாமல் தானும் குழம்பி பிறரையும் குழப்பத்திற்குள்ளாக்குவது.


 ஒருவர் தனது கருத்துக்களை மற்றவரிடம் முன்வைக்கும்போது அந்தக் கருத்துகள் சிலவேளை கேட்டுக் கொண்டிருப்பவருக்கு உடன்பாடில்லாத ஒன்றாக இருக்கலாம். ஆனாலும் ஒரு மரியாதை கருதி அதனை கேட்டுக் கொண்டிருப்பதிலே தவறில்லை.


ஆனால் அதையும் மீறி, 'ஆமாம் நீங்கள் சொல்வது வேதவாக்கு' என்று பாசாங்கு செய்வதைப் பற்றி என்ன கூறலாம்? இப்படிச் செய்வதனால் கருத்தைக்கூறுபவரை விடவும் அதை மிகையாக ஆமோதித்து அவரைப் பிழையாக வழி நடாத்தும் இரண்டாம் நபர்தான் மோசமான பேர்வழி எனலாம்.


இது ஒருவகை என்றால் இன்னொரு வகையினர் இருக்கிறார்கள். இவர்கள் தங்களை ஒரு பெரிய அறிவாளி போலவும் அடுத்தவர்களின் கருத்துக்களை மதித்து நடப்பவர்கள் போலவும் நியாயமான உணர்வுகளையும் அக்கறையுடன் கேட்பவர்கள் போலவும் பாசாங்கு நாடகம் ஆடுவார்கள். ஆனால் உள்ளுக்குள் முற்றிலும் வேறு மாதிரி நடந்து கொள்வார்கள்.


இத்தகையோர் ஏதோ தாங்கள் தர்க்க ரீதியாகச் சிந்திப்பவர் எனக்காட்டி மற்றவர்களின் கவனத்தைக் கவரும் முனைப்புடன் நாமெல்லாம் சாதாரண வழக்கில் பயன்படுத்தாத சில கடினமான வார்த்தைகளை தேடியெடுத்து தமது புழக்கத்தில் வைத்துக் கொள்வார்கள்.


அதாவது யாருக்கும் இலகுவில் புரியாத பதங்களை அடிக்கடி உச்சரிப்பதன் மூலம் தானொரு அறிவுஜீவி போன்ற பிம்பத்தை மற்றவர்களிடம் உருவாக்குவதே அவர்களது ஓரே நோக்கம். ஆனால் உள்ளுக்குள் வெற்று வேட்டுக்களாக இருப்பார்கள். அவர்களது பேச்சுக்கும் உள்ளார்ந்த நம்பிக்கைளுக்கும் சம்பந்தமே இராது. உதாரணமாக பேச்செல்லாம் விண்வெளி ஓடங்கள் பற்றியிருக்கும் ஆனால் சிந்தனையோ மாட்டுவண்டி மேய்க்கும்.


 மேலே குறிப்பிட்ட இரு வகையானோரைத் தவிர பிறிதொரு விதமான மனிதர்களும் நம்மிடையே இருக்கின்றார்கள்.  இவர்கள் ஏற்கனவே நாம் முன்னிரு பந்திகளிலும் எடுத்தக் காட்டிய குணாம்சங்களோடு சேர்த்து இன்னொரு கேவலமான இயல்பையும் வைத்திருக்கிறார்கள்.


இவர்களுக்கு தம்மைத் தவிர வேறுயாரும் சிறந்த கருத்துக்களை முன்வைத்துவிடவோ கூடாது.  அப்படி வைத்து விட்டால் முகம் விடியவே விடியாது. அந்தக் கருத்துக்களை ஏற்கவும் முடியாமல் மறுக்கவும் திராணியில்லாமல் மனம் புழுங்கி உள்ளுக்குள் வெம்பித்திரிவார்கள். அல்லது அவ்வாறான  கருத்துக் கூறிக் கண்ணைத்திறந்தவர்களை வேறுவழியிலே (கருத்துகளாலல்ல) மட்டம் தட்ட வழிதேடியலைவார்கள்.


அப்படியும் எதுவும் கிடைக்காவிட்டால் தனக்கு வேண்டியவர்களிடம் அவரைப் பற்றி புலம்பித் திரிவது, புறம் பேசுவது, அவதூறு சொல்லி அலைவது போன்ற கீழத்தரமான வேலைகளில் ஈடுபடுவார்கள். இப்படியெல்லாம் செய்து தமது ஆற்றாமைக் காய்ச்சலைத் தணித்துக்கொள்ள முயல்வார்கள்.


ஆனால்  இதிலுள்ள பெரும் சோகம் என்னவென்றால் இந்தக் கோழைகள் ஒருபோதும் நிம்மதியடைவதில்லை. ஏனெனில் கருத்தால் கருத்தை வெல்ல முடியவில்லையே என்ற சோக முள் சக்கரை வியாதிக்காரனின் புண் போல எப்போதும் ஆறாமல் இருந்த அவர்கள் நெஞ்சை உறுத்திக் கொண்டேயிருக்கும்!

-Jesslya Jessly

Wednesday, December 28, 2011

அழையா விருந்தாளிக்கு ஆண்டு நிறைவு - 7






ஓர் ஈர அனுபவம்!







ன்று ஓர் அழையா விருந்தாளியின் 7வது ஆண்டு நிறைவு!


2004ம் ஆண்டின் கிறிஸ்துமஸ் தினத்தை அடுத்து வந்த ஞாயிறு தினம் அது. அதைச் சுனாமி என்றோ கடல்கோள் என்றோ அல்லது ஆழிப்பேரலை என்றோ எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம். எப்படி அழைத்தாலும் இந்தோனேசியத் தீவுகளிலிருந்து ஓர் அழையா விருந்தாளியாய் வந்து இந்த சமுத்திர நிலத்திணிவுகளின் கரையோரங்களில் அது ஏற்படுத்திய உடனடி அனர்த்தங்களையும் இன்றும் கூட தொடரும் அதன் மறைமுக விளைவுகளையும் மறந்துவிட பல வருடங்களும் அதைவிடப் பாரிய அனுபவங்களும் தேவைப்படும்.


அந்த நிமிடத்தில் கரையோரப்பகுதிகளில் நிரந்தரமாய் வாழ்ந்திருந்தவர்கள், தொழில் அல்லது தேவைகள் நிமித்தம் அங்கு சென்று வருபவர்கள், அன்றுதான் அப்படியான இடத்திற்கு வாழ்நாளில் சென்றிருந்தவர்கள்...என்று ஒரு நீண்ட பட்டியலே உள்ளது.


கரையோரத்திலே பிறந்து அங்கேயே கிடந்து வளர்ந்தவர்களில் பலர் அன்றைய தினம் பார்த்து வேறு எங்கோ சென்றிருந்ததனால் உயிர்தப்பிவிட, கடல் என்றால் எப்படியிருக்கும் என்று அதற்கு முன்பு தொலைக்காட்சியில் மட்டுமே பார்த்திருந்தவர்களில் சிலர் உயிரிழந்திருப்பதுதான்,  ஒரு சோகமான வேடிக்கை.



அழிவு பொதுவானதாக இருந்தாலும் அன்றைய தினம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவம். 'அன்று நாங்கள் இன்ன இடத்திலிருந்தோம்...நீங்கள் எங்கிருந்தீர்கள்?'  என்று கேட்டு அவற்றினைப் பகிர்ந்து கொள்வது கூட
ஒருவித ஆறுதல்தான்.



 அவ்வாறான ஒர் அனுபவம்தான் இது:


கிறிஸ்துமஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை  பின்னிரவில் வெகுநேரம் வரை விழித்திருந்து பார்த்துவிட்டுத் தூங்கப்போயிருந்ததால் விடிந்தபின்னும் உறங்கிக் கொண்டிருந்தேன்."எழும்புங்க மச்சான்..எழும்புங்க..டவுனுக்குள்ள கடல்பொங்கி வெள்ளமாம்" என்று எனது மைத்துனி அறைக்கதவைத் தட்டினாள்.



ஒன்றும் புரியாமல் கையில் அகப்பட்ட  சட்டையை அணிந்து கொண்டு வீதிக்கு ஓடிவந்து பார்த்தால் நாலு கிமீ தள்ளியிருக்கும் நகரத்திலிருந்து வரும் வாகனங்களெல்லாம் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி விரைந்து வந்து கொண்டிருந்தன.என்னவென்று பார்ப்பதற்காகப் புறப்பட்ட பக்கத்து வீட்டவரின் மோட்டார் சைக்கிளில்  உடுத்தியிருந்த சாரத்துடன் காலில் செருப்புத்தானும் இல்லாமல் தொற்றிக்கொண்டேன். 



திருகோணமலைப் பிரதேசமெங்கும் சிதறிக்கிடக்கும் குன்றுகளின் மீது எப்போதுமே எனக்கு சந்தேகம் உள்ளது. ஆதிகாலத்தில் எரிமலை வெடிப்பு நிகழந்த இடமாக இருந்திருக்குமோவென்று. கன்னியா வெந்நீரூற்றுகளுக்கு கூறப்படும் புராணக்கதைகளை ஒதுக்கிவிட்டு யோசித்தால் இப்பகுதியில் பூமிக்கடியிலே எங்கோ இருக்கும் உருகிய பாறைக்குழம்பு (magma) தான் காரணமாக இருக்கவேண்டும் என்று புவியியல் அறிவு எச்சரிப்பதுண்டு. இதனால் கொட்டியாரக்குடாக்கடலில் உள்ள சிறுகுன்றுகளில் ஒன்றுதான் எரிமலையாய் குமுறிவிட கடலும் பொங்கிவிட்டதோ என்றுதான் நினைத்தேன்.


இரண்டு கிமீ தூரம் நகரை நோக்கிப்போயிருப்போம். மட்கோ  சந்தியைத் தாண்டி IOC பெற்றோல் நிரப்பு நிலையத்தருகே திருவிழாவுக்கூட்டம் பதற்றமாய் நின்றிருந்தது. மட்டிக்களி தொடக்கம் பொலீஸ் நிலையம் வரை கடல் எது வீதி எது என்று பிரித்தறியாதளவுக்கு எங்கும் ஒரே தண்ணீர் தண்ணீர்தான். இடுப்பளவு வெள்ளத்திலே சிலபேர் மட்டும் கண்களிலே பயப்பீதியுடன் குழந்தைகளைத் தலையில் தூக்கிக் கொண்டுவீதிவழியே கரையேறிக் கொண்டிருந்தார்கள். தூரத்தில் அவர்கள் பயணம் புரிந்த பஸ் வண்டிகள், வாகனங்கள் நீரில் மூழ்கிக்கிடந்தன.


அவர்களின் கண்களில் இருந்த மிரட்சி பயம் தந்தாலும் நகரிலே  தாய் சகோதரிகள் இருப்பதால் அவர்களைப் பார்க்க எப்படியும் போகவே வேண்டிய நிலை எனக்கு. எனவே கூடவந்தவர் தடுத்தும் கேளாமல் வேறுவழியின்றி இறங்கிவிட்டேன்.



ஆனால் அந்தச் செயல் எவ்வளவு அசட்டுத்தனமானது என்பதை கடல் நீருக்குள் இறங்கிச்சில நிமிடங்களுக்குள்ளேயே தெரியவந்தது எனக்கு. வீதிவழியே மார்பளவு வெள்ள நீரோட்டத்தை எதிர்த்து என்னோடு சிலர் கூட வந்தபோதிலும் இடையிலேயே பின்வாங்கி விட்டனர். அப்பொழுதுதான் மட்டிக்களி கடலின் மேற்குப்புறமாக ஒரு மெகா சைஸ் கரும்பொலித்தீன் சுருள்போல சூரிய ஒளியில் பளபளப்பாய் ஏதோ தெரிந்தது. தூரத்தில் நின்றவர்கள் எல்லோரும் 'அலை வருது! அடுத்த அலைவருது!' என்று கத்துவது கேட்டது. பின்வாங்குவதற்கோ முன்னேறுவதற்கோ எனக்கு நேரமிருக்கவில்லை.



அப்போது நான் நின்று கொண்டிருந்த இடம் தற்போது நீர் வடிகாலமைப்புச் சபைத் தலைமையகத்தின்  பிரதான வாயில் இருக்கும் இடம். அந்த இடத்தில் ஏற்கனவே  வந்த அலைகளால் புரட்டிப்போடப்பட்ட வாகனங்களும் சரிந்து கிடந்த மின்கம்பங்களும் மட்டுமே இருந்தன. தொடுவானத்தில் தெரிந்த கரும் அலை கண்ணிமைக்கும் நேரத்தில் வெகு அருகில் தெரிந்தது.


திரண்டுவரும் கருமையான அலையின் வேகத்திற்குத் தாக்குப்பிடிக்க முடியாது பற்றிப்பிடித்துக்கொள்ளவும் எதுவுமில்லை. என்ன செய்யலாம் என்று பரபரத்தபோதுதான் சற்று அருகில் இருந்த ஒரு மின்கம்பத்திலே ஓர் பொலீஸ்காரன் ஏறிக்கொண்டிருப்பதைக் கண்டேன். அந்த மின்கம்பம் ஆள் ஏறி நிற்கத்தக்கதாக இடையிடையே இடைவெளிகள் கொண்ட புதிய வகையானது.முதுகுத்தண்டினூடாக ஏதோ சில்லிட்டுப்பாய்ந்து காதுமடல்களைச் தீய்த்துச் செல்ல,  அடுத்த கணம் நான் செயற்பட்ட வேகமிருக்கிறதே.. அது இன்றுவரை என்னாலேயே நம்ப முடியாதது.



ஆபத்து வரும்போது துரித கதியில் செயல்படுவதற்காக பாலூட்டி வகை உயிரினங்களுக்கெல்லாம் இயற்கை வைத்திருக்கும் அதிரினலீன் ஹோமோன் பற்றி இதை வாசிக்கும் நீங்களும் சிறிது அறிந்திருந்தால் அவசரப்பட்டு தெய்வச்செயல்,முன்பிறவிப் பயன் என்றெல்லாம் நெக்குருகத் தேவையில்லை. 


அந்த மார்பளவு கடல்நீரில் கம்பத்தை நெருங்கி வினாடிகளுக்குள் ஏறி,  "அனே மல்லி! மகே அத்த அல்லபாங்' என்று கதறிக் கைகொடுத்த பொலீஸ்காரனின் காலைச் சரியாகப்பற்றி... (அதுதான் என் கைக்கு எட்டியது! )  உன்னி நான் மேலே ஏறவும் உயர்ந்து வந்த அலை மிகச்சரியாக நாங்கள் இருவரும் நின்ற இடத்திலே வந்தவுடன் சட்டெனத் தாழ்ந்து பரவிச்செல்லவும் சரியாக இருந்தது.


அதன் பின்பு சென்ற அலை திரும்ப வந்து வடியும்வரை காத்திருந்தது...இறங்கி நகருக்குள் சென்றது.. 'திருகோணமலை நகரமே கடலுக்குள் மூழ்கிவிட்டது' என்ற வந்திகளுக்கு மாறாக நகரமத்தி ஒரு சொட்டுத் தண்ணீர்படாமல் இருந்தது... 'இதையெல்லாம் பார்த்தபிறகும் மனிசனுக்கு துனியா (உலக) ஆசை வருமா?' என்று சுனாமி ஞானம் பேசிய அதே வாயால் இன்று 'போங்க! போங்க! ஒவ்வொரு நாளும் தாறதுக்கு அதுக்கு வேறயாச் சம்பாதிக்கணும்'  என்று பிச்சைக்காரிகளை விரட்டும் கடை முதலாளிகளைச் சந்தித்தது...பற்றியெல்லாம் எழுதப்போனால் இப்போதைக்கு மீண்டுவரவே முடியாது என்பதால் நிறைவுசெய்கின்றேன் நண்பர்களே!





 
ஓரு சிறுகுறிப்பு:

                                  கடல்கோள் நிகழ்ந்து இரண்டொரு நாட்கள் கழியும் வரை 'சுனாமி' எனும் அந்த மந்திரச்சொல் நம்மில் பலருக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனால் கிண்ணியாவில் ஓர் ஆசிரியர் மட்டும், அலைகள் கரையைத்தாக்கும் முன் கடல் வற்றிக்கொண்டு பின்வாங்கிச் சென்றதைக் கண்டவுடனேயே, 'டேய்! 'சுனாமி' வரப்போகுது கரையில யாரும் நிற்காதீங்க ஓடங்கடா!' எச்சரித்துக் குரலெழுப்பியவாறு தனது குடும்பத்தைக் காப்பாற்ற விரைந்திருக்கின்றார்.


அதற்குக் காரணம் அவரது பரந்துபட்ட வாசிப்பறிவுதான்.

இலங்கைத் தீவிலேயே சுனாமி என்ற சொல்லை, அந்த அனர்த்தத்திற்கு சற்று முன்னர் உச்சரித்தவர் அநேகமாக அவராகத்தான் இருப்பார். அவர் வேறுயாருமல்ல நண்பர் ஆங்கில ஆசிரியர் முனவ்வர் தான்.

-'Mutur' Mohammed Rafi
(on26.12.2011)

Sunday, December 25, 2011

திறமை < திருகுதாளம்



 யார் வசதியானவர்கள்?

ர் அரசு அலுவலகத்தில் அல்லது ஒரு பாடசாலையில் அல்லது ஒரு தனியார் நிறுவனத்தில் தலைமை வகிக்கும் ஒருவர் தனக்குக் கீழே பணிபுரிபவர்கள் எப்படியானவர்களாக இருக்க வேண்டுமென விரும்புவார்?

அவர், தனது நிருவாக விடயங்கள் தடையில்லாமல் நிகழ்வதற்கும் எதிர்பார்க்கும் குறிக்கோள்களை அடைவதற்கும் துணைபுரியக்கூடிய ஊழியர்களை வைத்திருக்க விரும்பினால் அது நியாயமானது.

ஆனால் இப்போதெல்லாம் சில அரிதான விதிவிலக்குகள் தவிர அதிகமான தலைமைப் பொறுப்பிலுள்ளவர்கள் எப்படியானவர்களை விரும்புகின்றார்கள் தெரியுமா? இதுபற்றியும் இன்றைய போக்குகள் பற்றியும் அறிந்து கொள்வதற்கு வசதியாக இருவகையான பணியாளர்களைக் கருதுவோம்.

  • A  எனும்  ஊழியர்/ எழுதுவினைஞர்/ ஆசிரியர்  திறமையானவராகவும் துறைசார்ந்த நிபுணராகவும் இருக்கின்றார் என்றும்
  •  B எனும் பிறிதோர் ஊழியர் /எழுதுவினைஞர்/ ஆசிரியர் திறமை குறைந்தவராகவும் துறைசார் அறிவில் குறைபாடுகள் கொண்டவராகவும் இருக்கிறார் என்றும் வைத்துக் கொள்வோம்.

நீங்கள் ஒரு திணைக்களத் தலைவராகவோ நிர்வாக அதிகாரியாகவோ அல்லது ஒரு பாடசாலை அதிபராகவோ இருந்தால் இந்த இருவரில் நீங்கள் யாரைத் தேர்ந்தெடுப்பீர்கள்?

 அட! என்ன கேள்வி இது? வேறுயாரை? Aயைத்தான் என்று அவசரப்படுகின்றீர்களா? அப்படியானால் உங்களுக்கு சமகால அனுபவம் போதவில்லை அல்லது பிழைக்கத் தெரியவில்லை என்றுதான் அர்த்தம். சற்று இருங்கள்!


ஏனெனில், இன்னுமொரு நிபந்தனையும் உண்டு.

இந்த இருவரிலும் தமது இருப்பு சார்ந்த நலன்களுக்கும் ஏனைய பல நலன்களுக்கும் அதிக ஒத்தாசையாக இருக்கக் கூடியவர் யார்? என்று ஒரு  அளவுகோலும் இன்றைய பிழைக்கத் தெரிந்த தலைமைகளிடம் உள்ளன நண்பர்களே!


"ஏன் ஊழியர் ஒருவர் A யாகவும் மேலே கூறிய தனிப்பட்ட நலன்களுக்கு ஒத்துழைப்பவராகவும் இருக்க முடியாதா?" என நீங்கள் கேட்கலாம். அப்படியொரு சாத்தியமுள்ளதா? என்று பார்ப்போம்.

A வகையான ஒருவர், அவர் திறமைசாலியாக இருப்பதால் இயல்பாகவே அவரிடம் தன்னம்பிக்கை செறிந்திருக்கும். தவிர, எங்கேயும் பிழைத்துக் கொள்ளலாம் என்ற தைரியமும் இருக்கும். அப்படியான ஒருவர் பொதுவாக சுயமரியாதை கொண்ட ஒருவராகவும் தனது ஆற்றல்கள் காரணமாக சிறிது கர்வமுள்ளவராக இருப்பார்கள். இப்படியானவர்கள் இலகுவில் அவசியமின்றி பிறருக்கு அடிபணிய விரும்புவதில்லை.

ஆனால் B வகையறாக்கள் அவ்வாறின்றி, தமது திறமைக் குறைவு காரணமாகவும் குறைபாடுகள் காரணமாகவும் தன்னம்பிக்கைக் குறைபாடுள்ளவர்களாகவே இருப்பார்கள். இதனால் தமது இருப்பு மற்றும்

பிறநலன்களுக்காக  Aபிரிவினருடன் போட்டியிட முடியாது. இதன்விளைவாக தமது தலைமையிலிருப்பவர்களிடமிருந்து சலுகை வழியிலும் பின்கதவு சூட்சுமங்களினாலும் மட்டுமே முன்னேற்றங்களைப் பெறமுடியும். எனவே இவர்களிடம் அதனைத் தவிர வேறு தெரிவுகள் இருக்க முடியாது அல்லவா?

இப்போது கூறுங்கள். இன்றிருக்கும்  ஆளுமையும் சமூகப் பிரக்ஞையுமற்ற பெரும்பாலான தலைமைகளுக்கு துதிபாடல் மற்றும் தனிநபர் சேவைகள் புரிவதற்கெல்லாம் வசதியானவர்கள் யார்?

யோசித்து வையுங்கள்! 
-Jesslya Jessly

Saturday, December 24, 2011

Happy Christmas & Newyear!







நண்பர்கள்

அனைவருக்கும்

இனிய

கிறிஸ்துமஸ் திருநாள்

மற்றும்

இன்னும் சில தினங்களிலே

பிறக்கவுள்ள

2012

புதுவருட வாழ்த்துக்கள்!

- Jesslya Jessly-

Thursday, December 22, 2011

நரிக்குறவனும் ஒரு எழிலரசியும்!




ஒரு நிழலும் ஒரு நிஜமும்! 


சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்த 'மகாநதி' எனும் ஒரு தமிழ் திரைப்படத்தை நம்மில் பலருக்கு நினைவிருக்கலாம். 


அந்தத் திரைப்படத்தில்   மக்கள் செல்வாக்குள்ள கிராமவாசி ஒருவர் தனக்கு எதிர்பாராத விதமாக அறிமுகமாகும் மோசடிப் பேர்வழி ஒருவனை நம்பி நகரத்தில் குடியேறி  நிதிநிறுவன சதிவலையில் வீழ்ந்து சிறை செல்லும்படியாகி விடுவதும் பின்பு அதற்குக் காரணமானவர்களை வித்தியாசமான முறையில் பழிதீர்த்து பிரிந்த உறவுகளை ஒன்றுசேர்ப்பதுதான் கதை.


இந்தக் கதையை மிகவும் சிறப்பாக திரைக்கதையாக்கம் செய்து  தனக்கேயுரிய மிகையில்லா நடிப்பால் அற்புதமான காவியமாக்கியிருப்பார், கமல்ஹாசன்.


அந்தப் படத்தில் ஒரு காட்சி வரும்.


இரண்டு வருடப் பலத்த போராட்டத்தின் பின்பு சிறையிலிருந்து கமல் பிணையில் வெளியில் வருவார் கமல். அப்போது அவரது தாயில்லாப் பிள்ளைகள் இரண்டும் தொலைந்து போயிருப்பார்கள். தன்னுடன் சிறையில் இருந்த மற்றொரு அப்பாவிப் பிராமணரான பூர்ணம் விஸ்வநாதனைத் துணைக்கழைத்துக் கொண்டு பிள்ளைகளைத் தேடியலைவார் கமல்.


அப்போது தற்செயலாக வீதியில் வித்தை காட்டிக்கொண்டிருக்கும் நரிக்குறவர்களிடம் வாழ்ந்திருக்கும் தன் மகனைக் கண்டு கொள்வார்கள். அவர்களிடம் தமது கண்ணீர்க் கதையைக்கூறி மகனை மீட்டுச் செல்வதற்காக அவன் தூங்கும் வரை அவர்களது குடிசையில் காத்திருப்பார்கள், கமலும் பூர்ணமும்.


அது இரவு உணவுவேளையாதலால் அவர்கள் இருவருக்கும் கடையில் வாங்கிவந்த சாப்பாட்டை ஒரு அலுமினியத்தட்டில் போட்டுக் கொடுத்து, "நீங்கள்லாம் எங்க சாப்பாட்டைச் சாப்பிடுவீகளா எஜமான்?" என்று தயங்கியவாறு கேட்பான், நரிக்குறவர்களின் குடும்பத்தலைவன்.

ஆச்சாரம் மிக்க பூர்ணம் தயங்கி, ஏதோ கூறி சமாளித்து நழுவ, 'என்னங்க கேள்வி இது? ரெண்டு வருசமா என் மகன் சாப்பிட்ட சாப்பாட்டை நான் சாப்பிட மாட்டேனா?' என்று கண்கள் பனிக்க நன்றிப் பெருக்குடன் அதை வாங்கிச் சாப்பிடுவார் கமல்.


கடைசியில்,  பிரிவாற்றாமை தாளாமல் அழுதுபுலம்பும் நரிக்குறவப் பெண்களிடமிருந்து உறங்கிக் கொண்டிருக்கும் தன் மகனைத் கனத்த மனதுடன் தூக்கிச் செல்வார் கமல். இந்தஉணர்வுபூர்வமான காட்சியமைப்பும்  அதை அற்புதமாகவும் இயல்பாகவும் நடித்த கலைஞர்களின் திறமையும் சிலாகிக்கத்தக்கது.


ஆனால் இந்தப் பத்தியில் நான் கூறவந்த விடயம் இதுவல்ல. இனிமேல் சொல்வதுதான்:


அந்தக் காட்சியில், ஓரிடத்தில் பூர்ணம் விஸ்வநாதன் நரிக்குறவனுக்கு நன்றி சொல்ல நினைத்து  பரம ஏழையான அவன் கைமாறாக எதையாவது எதிர்பார்க்கின்றானா என்பதையும் அறிவதற்காக அவனிடம், 'தம்பீ! இந்தப் புள்ளய இத்தனை காலமும் வளர்க்கிறதுக்கு எவ்வளவோ கஸ்டப்பட்டிருப்பீங்க...' என்று தயங்கித் தயங்கி பேச்சை ஆரம்பிப்பார்.


அதற்கு அவன், 'யோவ்! அய்யரே, எனக்கொண்ணும் கஸ்டமெல்லாம் கெடையதுய்யா! அதெல்லாம் உன்னமாதிரி ஆளுங்களுக்குத்தான்யா...!'  என்பான் பளிச்சென்று.

மேலேயுள்ளது செலுலோய்ட் கதை. இனிவருவது நிஜக்கதை:


தமிழ்நாட்டிலே கும்பகோணம் அருகேயுள்ள ஒரு குக்கிராமத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பத்தைச் சேர்ந்த செங்கல் தொழிலாளியான இளைஞன் சத்யராஜின் கதையைக் கேளுங்கள்.


சத்யராஜ் கூலி வேலைபார்த்த சூளையில் தனக்கு ஒத்தாசையாக இருந்த யுவதியான சக தொழிலாளி  ரேகாவிடம் காதல்வயப்பட்டான். இவரும் திருமணம் செய்து கொள்ளத்தீர்மானித்த வேளையில் ரேகாவின் தந்தையின் பக்கமிருந்து சாதி வேற்றுமை பலமாகக் குறுக்கிட்டது. அத்துடன் வேலை பார்த்த இடத்திலிருந்து தனது ஊரான திருத்துறைப்பூண்டிக்கே அழைத்துச் செல்லப்பட்டாள் ரேகா.


இதனால் காதலர்கள் இருவரும் பிரிய வேண்டியதாயிற்று.


காதல் தோல்வியால் சிறிதுகாலம் கலங்கித் திரிந்தான் சத்யராஜ். இந்த நாட்களில் அவனது பரிதாபத்தைப் பார்த்து கலங்கிய முறைப்பெண் எழிலரசி  சத்யராஜுக்கு மிகவும் ஆறுதலாக இருந்து வந்தாள்.  காலக்கிரமத்தில் தனது பழைய காதல் நிறைவேறாது என்றுணர்ந்து  எழிலரசியை, அதுவும் தனது பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக, மணமுடித்தான் சத்தியராஜ்.


ஆனால் அத்துடன் முடியவில்லை சத்யராஜின் பிரச்சினை. மறுபுறம் திருத்துறைப்பூண்டியில் அவனையே நினைத்து திருமணம் புரியாமல் வாழ்ந்த காதலி ரேகாவுக்கு இந்தத் திருமண விடயம் எப்படியோ தெரிந்துவிட ஆவேசம் பொங்கியவளாய் சத்யராஜின் இடத்திற்கே வந்திறங்கி விட்டாள்.


இதனால் ஏற்கனவே தன் பெற்றோருடன் எழிலரசிக்காக சமரசம் செய்து வாழ்ந்து கொண்டிருந்த அந்த ஏழை இளைஞன் செய்வதறியாது திகைத்துப் போனான்.  வேறு ஒரு நல்ல இளைஞனை மணந்து கொள்ளுமாறு ஊரவர்கள் எடுத்துக் கூறிய புத்திமதியெல்லாம் ரேகாவின் வைராக்கியத்திற்கு முன்பு எடுபடவேயில்லை. ஆற்றாமல் தீர்மானத்தை சத்யராஜ் எழிலரசி தம்பதிகளிடமே விட்டு விட்டு விலகினர் ஊர்ப் பெரியவர்கள்.


தன்னைக் கட்டிக் கொண்டவளைக் கைவிடவும் முடியாமல் காதலுக்காக ஊர் உறவுகளையெல்லாம் உதறிவிட்டு ஓடி வந்தவளை சேர்த்துக் கொள்ளவும் முடியாமல் தடுமாறிய சத்தியராஜின் சங்கடத்தைத் தீர்த்து வைக்க அந்த கனத்த இரவிலே துணிச்சலாக முடிவெடுத்தாள் ஒருத்தி.


 பின்னிரவிலே திரும்பிப் போன ஊரவர்கள் அதிகாலையில் ஒலித்த கல்யாண நாதசுர ஓசை கேட்டு ஆச்சரியப்பட்டு "இது என்ன கூத்து தாயி?" என்று சத்தியராஜின் வீட்டை நோக்கி விரைந்து வந்தார்கள்.


அங்கே புதுமாப்பிள்ளைக் கோலத்தில் ரேகாவுக்குத் தாலி கட்டிக்கொண்டிருந்தான் சத்தியராஜ். அருகிலே ஏற்கனவே அவன் கட்டிய தாலியுடன் மணக்கோலத்தில் எழிலரசியும் அட்சதை போட்டுக் கொண்டிருந்தாள்.


ஆம்! ஒரு பெண்ணின் மனம் மற்றோர் பெண்ணுக்குத்தான் தெரியும் என்பதை நிரூபிப்பது போல இருவரும் வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ளலாம் என முடிவெடுத்து ரேகாவுடனும் சத்தியராஜுடனும் பேசி சம்மதிக்க வைத்தாள் அதிகம் படிக்காதவளான எழிலரசி.


"நான் இப்ப இரண்டு மாசம் கர்ப்பமாக இருக்கிறேங்க. இந்த நேரத்துல ஏம் மாமாவ எம்புட்டு விரும்பியிருந்தா அந்தப் பொட்டப் புள்ள ஊரு ஒறவையெல்லாம் வுட்டுப்போட்டு ஓடியாந்திருக்கும்? அதை வெரட்டிவுட்டா நா பொம்பளையே இல்லங்க! அதான் மாமாக்கிட்டப் பேசிச் சம்மதிக்க வச்சுட்டேனுங்க" என்று  பளிச்சென்று வெள்ளந்தியாகக் கூறும் எழிலரசியிடம் தான் ஒரு தியாகம் செய்த உணர்வோ கர்வமோ சிறிதும் தெரியவில்லை.


அந்த செலுலோயிட் கதையின் ஏழை நரிக்குறவனையும் இந்த நிஜக்கதையின் ஏழை எழிலரசியையும் நினைத்துப் பாருங்கள்.


நாம் வாழும் சமூகத்தில் மேல்தட்டு வர்க்கத்தினரும் மத்தியதரத்தினரும்தான் போலித்தனமான சிந்தனைகளாலும் சமூகக்கட்டுப்பாடுகளாலும் கட்டுண்டு கிடப்பவர்கள். தம்மைச் சுற்றிலும் அவசியமேயில்லாத வேலிகளையும் தடைகளையும் அமைத்துக் கொண்டு சிறு பிரச்சினைகளைக்கூட பெரிது பண்ணிக் கொண்டு வாழ்பவர்கள். தைரியமாக முடிவெடுக்கத் திராணியின்றி உறவுகளைச் சிக்கலாக்கிக் கொள்பவர்கள்.


வரட்டுக் கவுரவம் போலி அந்தஸ்துகளையெல்லாம் கட்டிக்கொண்டு அலைபவர்கள். "அடுத்தவர்கள் என்ன சொல்வார்கள்?" என்பதை நினைத்து நினைத்து அன்றாடம் சாகுபவர்கள். வசதியாக வாழ்வதாகக் காட்டிக்கொண்டு பணக்கார நோய்களைத் தேடுபவர்கள். சுருக்கமாகச் சொன்னால், முகங்களை விற்றுவிட்டு முகமூடி மாட்டியவர்கள்தான் இந்த மேல் மற்றும் மத்தியதர வர்க்கத்தினர்.


ஆனால் ஆணும் பெண்ணும் அன்றாடம் உழைத்துச் சாப்பிடும் சாதாரண அன்றாடங்காய்ச்சி மக்களிடம் இந்த அவசியமில்லாத போலித்தனங்கள் கிடையாது. இவர்கள் வாழ்க்கையை நின்று நேருக்குநேர் போராடி வாழ்பவர்கள் என்பதால் எதையுமே யதார்த்தமாக அணுகுபவர்கள். இவர்களிடம் மெகா சீரியல் மாமிகள் கிடையாது. M.N.நம்பியார் போல கண்களை உருட்டும் அண்ணிகள் கிடையாது.


படுக்கையறைகளிலும் பட்டுப்புடவை, உதட்டுச்சாயம் மேக்கப் சகிதம் படுத்துறங்கும் பெண்கள் கிடையாது. சமையலறையில் கூட எதுகை மோனை வசனங்கள் அடுக்குமொழிகளால் பேசிக் கொள்ளும் டாடிகள் மம்மிகள் கிடையாது.  டை கட்டிக் கொண்டு போனும் லாப்டொப்புமாக பைக்கிலும் காரிலும் அலைந்து, தூக்கம் குறைந்த இளைஞர்கள் கிடையாது.


அது மட்டுமா, இளம்வயதில் புரட்சிகள் பேசிவிட்டு, வயதானதும் வசதியான வாழ்கைக்குள் ஓடி ஓளியும் கபட மனிதர்கள் கிடையாது. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.


ஒரு குக்கிராமத்துப் பெண் எழிலரசிக்கும் செங்கல் தொழிலாளி ரேகாவுக்கும்  ஒரே கணவனுக்கு இயல்பான மனைவிகளாக ஒரேவீட்டில் வாழும் சாத்தியமான துணிச்சல் எப்படி வந்தது என்று இப்போது புரிகிறதா?


இதை நமது மத்தியதர 'உதட்டுச்சாய' மாமிகளால் நினைத்துப் பார்க்கக்கூட முடியுமா? விதிவிலக்காக எங்காவது நிகழ்ந்தாலும்  இந்த வாழ்வை அந்த ஏழைப் பெண்களைப்போல இயல்பாக வாழத்தான் இவர்களால் முடியுமா என்ன ?


"கஸ்டமெல்லாம் ஒன்னமாதிரி ஆளுங்களுக்குத்தான்யா!" எனும் நரிக்குறவனின் பதிலில் இருக்கும் வாழ்க்கை பற்றிய தன்னம்பிக்கை, எதிர்காலம் பற்றிய பயமின்மையெல்லாம் எங்கிருந்து வருகிறது தெரிகிறதா?


இனியாவது சிந்தித்துப் பாருங்கள்!

-மூதூர் மொகமட் ராபி

Wednesday, December 21, 2011

குதூகலம் Vs பெரிசுகள்!



நிறைவுநாள்!
இன்று
நிறைவுநாள்!







.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2011 இன்று முற்பகல் 11.30 உடன் நிறைவடைந்திருக்கின்றது. இப்பரீட்சையை நம்பிக்கையுடன் தோற்றி முடித்திருக்கும் பெரும் பொறுப்பு ஒன்றை இறக்கி வைத்த நிம்மதியில் உற்சாகம் கொப்பளிக்க நீங்கள் பரீட்சை நிலையத்தை விட்டு வெளியேறிய காட்சிகளையும் சிலர் உற்சாக மிகுதியால் நண்பர்களுக்கிடையே 'நீலமடிப்பு' எனும் நிறச்சாயங்களை ஊற்றித் தெளித்து ஒருவரையொருவர் 'அழகாக்கி'க் கொண்ட நிகழ்வுகளையும் காணும்போது எவ்வளவு மகிழ்ச்சியாகவுள்ளது தெரியுமா?

இந்த அனுபவங்கள் பாடசாலைப் பருவத்திற்கேயுரியவை மட்டுமல்ல பின்பு ஒருகாலத்தில் என்றும் நீங்காத பசுமையான நினைவுகளாக மாறி ஏங்கச் செய்யக்கூடியவை. சில பாடசாலைகளில் இந்தக் கடைசி நாள் கொண்டாட்டங்களுக்குத் தடை போட்டிருப்பார்கள்.

'ஐயோ இந்த காலாவதியான தினம் ஆகிப்போன பெருசுகளக்கெல்லாம் இப்படித்தான் சின்னஞ்சிறிசுகளின் குதூகலத்துக்குத் தடைபோடுவதிலே ஒரு குரூர திருப்தி' என்று நீங்கள் நினைப்பது ஓரளுவக்கு உண்மைதான். ஆனால் உங்களது நியாயமான மகிழ்ச்சிக்கு அதரவாக உள்ள ஆசிரியர்கள் அதிபர்கள் பெற்றோர்கள் மற்றும் பொலீஸ் அதிகாரிகளும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.


ஆயினும் முந்திய வருடங்களிலே சில மாணவர்கள் வரம்பு மீறி வீதியில் செல்லும் பொதுமக்களுக்கும் இடைஞ்சல் செய்யும் வகையில் இந்த 'நீலமடிப்பு' கொண்டாட்டத்தை நடாத்தியதால்தான் உங்கள் மீது சில கட்டுப்பாடுகள் விழுந்துள்ளன. எனவே கிடைக்கும் சுதந்திரத்தை அளவாகவும் முறையாகவும் பயன்படுத்தினால் உங்களுக்கு ஆதரவாக இருந்துவரும் அவர்களுக்கும் அந்தக் காலாவதியான பெரிசுகளிடம் ஒரு நியாயம் இருக்குமல்லவா?

சரி அதெல்லாம் இருக்கட்டும்.
இனி என்ன செய்வதாக உத்தேசம்? சற்று இருங்கள் அது பற்றி விரிவாகப் பேசுவோம்.
 (தொடரும்)

-Jesslya Jessly

Tuesday, December 20, 2011

யார் அந்தப் பாவி?



ரு மரண தண்டனை!






ரு நீண்ட விசாலமான பலபேர் ஒரே நேரத்தில் ஒன்றாக உணவருந்தக்கூடிய சாப்பாட்டுக் கூடம் அது.


மதிய உணவுவேளை முடிவடைந்த ஒரு பிற்பகல்வேளையில் பெண் சிற்றூழியர்களால் அந்தக் கூடத்தின் கதவுகள் யன்னல்கள் அனைத்தும் சடுதியாக மூடப்படுகின்றன. இரு ஆண் ஊழியர்கள் சாக்குப் பைகள் சகிதம் எதையோ தேடும் உக்கிரப் பார்வையுடன் உள்ளே வருகின்றார்கள்.


அவர்களுக்குப் பின்னாலிருந்து ஒரு பெண் குரல் சில ஆணைகளைப் பிறப்பித்துக் கொண்டிருக்கின்றது.


ஒன்றும் பயந்து விடாதீர்கள். வெகுநாளாக அந்த உணவுக்கூடத்தினுள்ளே புகுந்து தொல்லைதரும் மூன்று பூனைகளைக் கட்டி அப்புறப்படுத்தும் காட்சியைத்தான் விபரித்துக் கொண்டிருக்கின்றேன்.


என்ன இது? இதையெல்லாமா எழுதிக் கொண்டிருப்பீர்கள்...என்று நீங்கள் யோசிப்பது புரிகின்றது.


 விசயம் இருக்கிறது. தொடர்ந்து வாசியுங்கள்!


உள்ளே வந்தவர்கள் தாம் தேடி வந்த அந்த மூன்று வாயில்லா ஜீவன்களையும் எப்படியாவது சாக்குப்பைகளுக்குள்ளே கட்டிவிடும் நோக்கத்தில் மூன்று பூனைகளையும் பிடிப்பதற்காக துரத்தியோடுகின்றனர். சிறிது நேரம் அங்குமிங்கும் ஓடித்திரிந்து போக்குக்காட்டிய இரண்டு பூனைகள்  அவர்களின் முயற்சிகளையெல்லாம் வீணடித்து விட்டு எப்படியோ  தப்பியோடிவிட்டன.

களைத்துப் போன ஊழியர்கள் இருவரும் மீதமிருக்கும் பூனையையாவது எப்படியும் பிடித்து விடும் முனைப்பிலே தவித்தார்கள்.


அவர்களை இதுவரையில் பின்னாலிருந்து வழிப்படுத்திக் கொண்டிருந்த பெண்மணியின் முகத்திலே கோபம் கொப்பளித்தது.


வெண்ணிற அங்கியை அணிந்திருந்தவரான அந்தப் பெண்மணியின் வாயிலிருந்து சற்றும் எதிர்பாராத விதமாக வார்த்தைகள் உதிர்ந்தன.

"அந்தப் பூனையை அடிச்சுக் கொன்றாலும் பரவாயில்ல! தப்ப விடாதீங்க!"

மறுநிமிடம் அந்த வாயில்லா ஜீவன் கதறக் கதற சிறிதும் கருணையின்றி தடிகளால் இரத்தம் தெறிக்கத்  தெறிக்க அடித்து நையப்புடைக்கப்பட்டது.

அது எந்தளவுக்கென்றால் அந்தப் பரிதாபத்தைப் பார்க்கச் சகிக்காமல், 'தயவு செய்து கதவைத் திறந்து விடுங்கள்' என்று  கெஞ்சிய சில மாணவிகளையும் வெளியே போக விடாமல் வைத்துக் கொண்டு அவர்களின் முன்னிலையிலேயே அந்த சிறு அப்பாவிப் பூனை  துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்டது.

ஒரு பிரபல பெண்கள் பாடசாலையின் விடுதியில் நடந்ததுதான் இந்தச் சம்பவம்.


இதிலே என்ன விசயம் இருக்கிறது என்று கேட்பவர்களுக்காக இதனைக் கூறவேண்டியுள்ளது.


ஆடம்பரச் சுகபோக வாழ்க்கைக்காக பொதுச்சொத்துகளில் மோசடி செய்யும் பெரும் பதவியிலுள்ளள சுயநல மனிதர்களைக் கூட கண்டும் காணாமல் சமாளித்து விட்டு விடுகின்ற இந்தக் காலத்தில், பாவம் தன் வயிற்றுப்பசிக்காக உணவைத் திருடிய அந்த வாயில்லாச் சிறு பிராணியை கொடூரமாக அடித்துக் கொல்லுமாறு ஆணை பிறப்பித்த பெண்மணி யார் தெரியுமா?


ஓர் ஆசிரியையான அவர் வேறுயாருமல்ல!


தன்னைக் கொல்ல வந்தவனையே மன்னித்து அவனுக்காகப் பிரார்த்தனை புரிந்தவரும் உலகுக்கு அன்பையும் கருணையையும் போதித்தவருமாகிய இயேசுக் கிறிஸ்து வின் சேவையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும்... ஒரு  கன்னியாஸ்திரி!

-Jesslya Jessly

Friday, December 16, 2011

புதிய தொடர்


 மூதூர் : அன்றும் இன்றும்!





மூதூர், இலங்கை வரலாற்றில் பல விடயங்களுக்காக எப்போதும் பிரபல்யமாகவே இருந்து வந்துள்ளது. போத்துக்கேயரின் ஆட்சியினைத் தொடர்ந்து ஒல்லாந்தர்கள் இலங்கைத் தீவின் கரையோரங்களைக் கைப்பற்றியிருந்த காலத்தில் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆன் (Ann) எனும்  கப்பலின் மாலுமி ரொபர்ட் நொக்சும் (Robert Knox ) அவனது சகாக்களும் அப்போது கொட்டியாரம் என்று அழைக்கப்பட்ட இன்றைய மூதூரில் வந்திறங்கினார்கள். அன்றைய கண்டி இராச்சியத்தை ஆண்ட மன்னனால் அவர்கள் அனைவரும்   சிறைப்பிடிக்கப்பட்டதும் அங்கு 19 ஆண்டுகள் திறந்தவெளிக் கைதிகளாய் அலைந்து திரிந்தபின் அந்த ஆங்கிலேய மாலுமியின் மகன் இங்கிலாந்துக்குத் தப்பிச் சென்று தனது அனுபவங்களை ஓர் நூலாக வெளியிட்டதும் தனிக்கதை.


பின்னர் ஆங்கிலேயர் இலங்கைத் தீவைக் கைப்பற்றியவுடன் தமது வருகைக்கு ஒரு வகையில் முன்னோடியாகவிருந்த அந்த மாலுமி Robert Knox  நினைவாக அவர் கைதுசெய்யப்பட்ட இடத்திலிருந்த புளியமரத்தை ஓர் வரலாற்று நினைவுச்சின்னமாய் ஆக்கினார்கள்.
'Whiteman's Tree' என அழைக்கப்பட்ட அந்தப் பழம்பெரும் புளிய விருட்சம் பின்னர் 1964ல் வீசிய புயலில் வீழ்ந்த போதிலும் மீண்டும் அதே இடத்தில் புதிய புளியம் கன்று நடப்பட்டு வளர்த்து அது இன்றும் நினைவுச்சின்னமாய் காட்சி தந்து கொண்டிருக்கின்றது. அதுமட்டுமன்றி  அந்த மரமிருக்கும் இடத்திலிருந்து மூதூர் நகரின் மையப்பகுதியினுடே செல்லும் முக்கியமான வீதியொன்று Knox-Road என்ற சிறப்புப் பெயரால் வழங்கப்பட்டு வருகின்றது.
அதன் பிறகு நடந்தவற்றையெல்லாம் ஒன்றும் விடாமல் கூறப்போனால்
இப்போதைக்குத் திரும்பி வர முடியாது.

அதெல்லாம் பழைய கதை!
இன்றைய புதிய கதை எது தெரியுமா? மூதூரை அதன் ஆரம்ப காலம் தொட்டே கிழக்கு மாகாணத்தின் இரு பெரும் நகரங்களான திருகோணமலை-மட்டக்களப்பு ஆகியவற்றை இதுவரைகாலமும் நிலத்தொடர்பின்றி பிரித்து வைத்திருந்த மகாவலி  மங்கையின் கிளையாறுகளுக்கெல்லாம்  பாலங்களிட்டு அவற்றை ஒன்றிணைத்திருப்பதுதான்.
ஆம் நண்பர்களே! இன்று A-15 வீதியில் இரவு பகலாக் இடைவிடாது நிகழும் போக்குவரத்தைப் பார்க்கும் போது சிலசமயம் கனவு போலத் தோன்றுகின்றது. இத்தனை காலமும் கடல்வழிப் போக்குவரத்து நமது சமகால மற்றும் பழைய தலைமுறையினருக்கும் எத்தனை விரயங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. லோஞ்சுக்கும் கப்பலுக்கும் காத்திருந்தே வயதுகளைத் தொலைத்தவர்கள் நாம்.


ஒரு காலத்தில் மூதூருக்குச் செல்வதும் மூதூரை விட்டுச் செல்வதும் ஏதோ கடல்கடந்து வேறு நாட்டுக்குள் புகும் யாத்திரை போலத்தான் இருந்தது. எத்தனை காத்திருப்பு கெடுபிடிகள் பீதிகள். இன்று நினைத்த நேரம் அங்கு சென்று வரலாம் எனும்போதுதான் இத்தனைகாலமும் அனுபவித்த அந்த மெகா விரயத்தின் கனம் சரிவர உணரப்படுகின்றது.
முதலில் கிண்ணியாவுக்கான பாலம்தான் ஆரம்பிக்கப்பட்டது. முன்பெல்லாம் கிண்ணியாவுக்கு வாக்குச் சேகரிக்கத் துறைகடந்து வரும் அத்தனை அதிகாரத்திலிருந்த அரசியல் தலைவர்களும் தவறாமல் சொல்லி விட்டு மறந்து போகும் வாக்குறுதி: 'வெகுவிரைவில் பாலம் கட்டித் தருவோம்!' என்பதுதான்.
உங்கள் பாலம் கூட வேண்டாம் (அப்போது) இருந்த இரண்டு துருப்பிடித்த  பாதைப்படகுகளையாவது தொடர்ந்து இயங்கும்படி பார்த்தால் போதும் என்ற அங்கலாய்ப்பில் இருந்தார்கள் மக்கள்.  பின்னர் மகிந்த ராஜபக்ச அவர்கள் சந்திரிகா அம்மையாரின் அரசில் நெடுஞ்சாலைகள்  அமைச்சராக இருந்தபோது ஒரே தடவையில் பல வாகனங்களை ஏற்றிச் செல்லக்கூடிய அதிக குதிரைவலுக்கொண்ட படகுப்பாதையை கிண்ணியாத் துறைக்கு வழங்கியிருந்தார். அதனைச் சேவைக்குத் திறந்து வைத்த நிகழ்ச்சியில் விரைவில் பாலம் அமைக்கப் போவதாகவும் கூறியிருந்தார்.
பின்னர் ராஜபக்ச அவர்கள் நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றதும் அந்த வாக்குறுதியை நினைவில் வைத்துச் செயற்பட்டார். பாலத்திற்கான முயற்சிகளில்  ஏனைய பலரோடு சேர்ந்து அவரும் இறங்கியிருந்தார். அப்பொழுது கூட பாலம் நிர்மாணிக்கப்படும் என்று யாரும் பொதுவாக நம்பவில்லை. 'வழமை போலத்தான் இதுவும்' என்று அலட்டிக் கொள்ளாமல் இருந்து விட்டார்கள். கிண்ணியாவாசிகள். ஆனால் பாலத்தின் நிர்மாண  ஆரம்பக்கட்ட வேலைகள் தொடங்கியபோதுதான் 'ஓகோ ஏதோ செய்யத்தான் போகிறார்கள் போல' என்ற சிறு நம்பிக்கைக் கீற்று அவர்கள் மனங்களில் தோன்றியது.
உண்மையில் கிண்ணியாப் பாலத்துக்கு அந்தப் பெயர் பொருத்தமில்லை என்றுதான் சொல்ல வேண்டும். (அட! கிண்ணியாவின் தவப்புதல்வர்களே அவசரப்படாதீர்கள்! விசயத்துக்கு வருகின்றேன்.) அதாவது 'மூதூருக்கான முன்னோடிப் பாலம்' என்று வைத்திருந்தால் கூட மிகச்சரியாகவே இருந்திருக்கும். ஏனெனில் கிண்ணியா மக்களுக்கு துறைகடத்தல் என்பது மூதூர் மக்களின் கடல் கடத்தலுடன் ஒப்பிடும்போது நடிகர் சிவாஜிராவ் (ரஜினிகாந்த்) பாணியில் சொன்னால் ஜுஜுபி!
ஆம்! மிக அவசரமான அத்தியாவசியத் தேவைகளுக்காக விரையும் வெகு சில பயணிகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் பொதுவாக கிண்ணியா மக்களுக்கு திருகோணமலைக்குச் செல்லும் பயணம் அப்படி ஒன்றும் பெரும் தாமதத்தையும் சிரமத்தையும் எற்படுத்தியதாகக் கூற முடியாது. பயணம் ஆரம்பிக்கும் போதும் பயணத்தை முடித்து விட்டுத்திரும்பி வரும்போதும் ஒரு செக்போஸ்ட் போலத்தான் அந்தத் துறையடி அவர்களுக்கு.

படகுப் பாதைப் பயணம், துறையடியில் இறங்கி நடந்து ஊர்வாசிகளுடன் ஒன்றாகச் சில நிமிடங்கள் காற்றோட்டமாய் அன்றைய ஊர்ப்புதினங்களை விசாரித்துக் கொண்டு வரும் சிறு ஆசுவாசமாகவும் இருந்து வந்திருக்கிறது. தவிர தம்பலகாமப் பகுதிகளை ஊடறுத்துச் செல்லும்  தரைமார்க்கப் போக்குவரத்து வழி இருந்ததனாலும் கிண்ணியாத்துறை என்பது பழகிப்போன சிறு தொந்தரவுகளில் ஒன்றாகவே இருந்தது.
ஆனால் மூதூர்வாசிகளின் நிலைமை முற்றிலும் வேறுபட்டிருந்தது.

நாவலடி, கங்கை,  உப்பாறு, கிண்ணியா ஊடான தரைவழிப்பாதை முற்றாக கைவிடப்பட்டிருந்த நிலையில் அலிஓலுவ, கல்லாறு மற்றும் அல்லை     ஊடான தரைமார்க்கப்பாதை மிக அதிக நேரத்தை விழுங்கும் சுற்றுப்பயணமாக இருந்தது. அதுமட்டுமன்றி அந்த வீதியின் தரக்கேடு மற்றும் மாரிகால வெள்ளத்தினால் தடைப்படும் நிலையிலும் கடல் வழிப்பயணம் மட்டுமே ஒரே தெரிவாக இருந்து வந்துள்ளது.
கடல்வழிப் பயணம் என்றால்,  ஒன்று முதல் ஒன்றரை மணி நேரத்திற்கும் அதிகமான நேரத்தை எடுக்கும். அதுவும் மிகவும் தரம் தாழ்ந்த வசதிகள் கொண்ட லோஞ்ச்கள் எனப்படும் சற்றுப் பெரிய படகுகளில்தான் ஆபத்தான கடல்பகுதியை தாண்டியாக வேண்டியிருந்தது. இருக்கும் அந்த லோஞ்ச் சேவையைக்கூட அடிக்கடி குழப்புவதற்கென்றே காலநிலை, கடல் கொந்தளிப்பு, இயந்திரக் கோளாறுகள் என்றே  ஒரு காரணங்களின் பட்டியல் காத்துக் கிடக்கும். இதனால் பயணம் என்பது மூதூர் பயணிகள் அனைவருக்கும் ஓர் அன்றாட சாகசமாகவே இருந்து வந்திருக்கின்றது.
இந்நிலையில்தான் 1993 ஜனவரி 25ம் நாளில் கொட்டியாரக் குடாக்கடலில் நிகழ்ந்தது ஒரு கோர விபத்து. எறத்தாழ 140 பயணிகளுடன் சென்ற லோஞ்ச் படகு ஒன்று மூழ்கிய அந்த அனர்த்தத்தை மூதூர் மக்களால் மறக்கத்தான் முடியுமா என்ன? நூறு எனும் எண்ணிக்கையைத் தாண்டிய அந்த மனிதப் பலியின் பின்னர்தான் அன்றைய ஆட்சியாளர்களுக்கு லேசாய் கண்திறந்தது. இதனால் அதன் பின்னர் இ.போ.ச வினால் மேலும் சற்றுப் பெரிய படகுகள் சேவைக்கிடப்பட்டன. 
இப்படகுகள் சிறிது சௌகரியமாகவும் பாதுகாப்பானதாகவும் இருந்தன. ஆயினும்   இப்படகுகளால் தினமொன்றுக்கு  இரண்டு சேவைகள் மட்டுமே நடாத்தப்பட்டன. அதுவும் ஒரு தடவைக்குரிய பயணிகளின் எண்ணிக்கை நூறுபேர் மட்டுமே என்று மட்டுப்படுத்தப்பட்டு அது மிகவும் இறுக்கமாகவும் கடைப்பிடிக்கப்பட்டது.  அந்த நாட்களிலே நூறுபேருக்குள் அடங்குவதற்காக நிகழ்ந்த முண்டியடிப்புகளை விபரிக்க வாரத்தைகள் போதாது.
அதுமட்டுமல்ல மதியம் 2.30 மணி என்பது திருகோணமலையில் இருந்தும் வெளியூர்களிலிருந்தும் ஊர் திரும்புவோருக்கெல்லாம்   மூதூருக்குரிய கடல்கதவுகள் அடைக்கப்படும் நேரமாய் ஆகிப் போனது. இந்தச் சேவைகளும் படகுகளின்  பழுதுகள் திருத்தம் என அவ்வப்போது வாரக்கணக்கில் தடைப்படும் ஒன்றாகவே இருந்து வந்தது.

இங்கு ஒரு விடயத்தைக் கவனித்தாக வேண்டும். படகு விபத்தினால் பாதிக்கப்பட்டு பாதுகாப்பான கடல்பயணம் வேண்டும் என்ற மூதூர்வாசிகளின் போராட்டம் சிறந்த இரு படகுகளைப் பெற்றுத்தந்த அதேவேளை முன்பு லோஞ்ச் காலத்தில் இருந்து வந்த 'ஒருநாளில் பலசேவைகள்' என்ற வசதி பறிபோனது.
இதை வேறுவிதமாகக் கூறினால், மூன்று வேளையும் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒருவனிடம், அவன் சாப்பாட்டின் தரம் சரியில்லை என்று சொல்லிவிட்டான் என்பதற்காக தினமும் பிரியாணிப் பொட்டலமொன்றைக் கொடுத்து, 'இந்தா பிடி! ஒருவேளை மட்டும் சாப்பிட்டுக் கொள் போதும்!' என்று கூறியதைப் போலானது நிலைமை.


அதன் பின்னர் நாட்டில் அடுத்தடுத்து தேர்தல்கள் பல வந்தன. விளைவாக மூதூர் பயணிகள் மீது அரசியல்வாதிகளுக்கு திடீர் கரிசனைகள் முளைக்கலாயின. அதன் பயனாக துறைமுக அதிகாரசபைக்குச் சொந்தமான கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டது. சேருவில-II என்ற அந்தக் கப்பல் ஒரே நேரத்தில் அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றது. பயண நேரமும் பாதியாகக் குறைந்தது.
ஆனால் குறிப்பிட்ட எண்ணிக்கையான பயணிகள்,மோட்டார் சைக்கிள்கள் என்ற கட்டுப்பாடுகள், போலீசாரின் பரிசோதனைக் கெடுபிடிகள் காரணமாக பாரமான மோட்டார் சைக்கிளைக் கூட ஏறத்தாழ 200 மீற்றர் நீளமான இறங்குதுறைக் கடல்பாலம் வழியாகத் தள்ளிக் கொண்டு செல்ல வேண்டிய நிலைமை, சமூகத்தில் எத்தனை கௌரவமானவராக இருந்த போதிலும் கப்பல் பயணி என்று வந்து விட்டால் தள்ளுமுள்ளுகளில் மாட்டி கௌரவம் குறைய வேண்டியதும்  காயமடைய வேண்டியதுமான அவலம், என்றெல்லாம் மூதூர் மக்களுக்குரிய இம்சைகள் அதிகரித்தன.

இலங்கைத்தீவில் இனமுறுகல் நிலைமைகள் ஆரம்பித்து வன்முறைப் போராட்டமாக மாறி உச்சகட்டத்தை அடைந்த காலத்திலே அடிக்கடி பாதிப்புக்குள்ளான பிரதேசங்களுள் மூதூர் முக்கியமான இடத்தை வகித்துள்ளது. இயற்கையிலேயே புவியியல் காரணிகளால் போக்குவரத்து தொடர்புகளில் கணிசமானளவு பின்தங்கியிருந்த இப்பிரதேசம் இனமுறுகல் வன்முறைகளினால் மேலும் பின்தங்கிப்போயிருந்தது. மிகச்சரியாகக் கூறப்போனால், மூதூர் பட்டினத்திற்குள் மக்கள் நடமாடக்கூடிய பரப்பளவு சில சதுர கிலோமீற்றர்களுக்குள்யே அடங்கிப்போயிருந்தது.
ஒரு காலகட்டத்தில் இவ்வெல்லைக்குள்ளிருந்து பயணம்போகும் ஒருவர் பாதுகாப்பாகத் திரும்பி வந்தாலே பெரும்பேறு என அவரது குடும்பத்தினர் கருதுமளவுக்கு நிலைமைகள் இருந்தன. தவிர பயணப்பாதைகளின் பராமரிப்பு மற்றும் திருத்தவேலைகள் நீண்ட காலமாக சரிவர நிகழாததால் தரைவழிப் போக்குவரத்தின் தரமோ படுமோசமாக இருந்து வந்தது.


ஆனால் இவையெல்லாம்  முடிவுக்கு வரக்கூடிய நிலைமை தோன்றியது என்னவோ ஒரு சடுதியான அரசியல் நிகழ்வு ஒன்றினால்தான். ஆம், 2001ம் ஆண்டு இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் இடையே கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையானது பல தடவைகள் இரு தரப்பினராலும் பலமுறை மீறப்பட்ட பின்னர் உச்சகட்டமாக, விடுதலைப் புலிகள் மூதூரில் மாவிலாறு  அணையின் துருசைக் கைப்பற்றித் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். சர்ச்சைக்குரிய பல நியாயங்களையும் நிபந்தனைகளையும் அரசுக்கு முன்வைத்து வயல்நிலங்களுக்குரிய நீரைப் பாயவிடாமல் தடுத்து வைத்திருந்தனர். பலநாள் இழுபறியின் பின்னர் அடுத்த கட்ட நகர்வாக மூதூர் நகரைக் கைப்பற்றினார்கள்.



இதுவே அவர்கள் செய்த தற்கொலைக்கு ஒப்பான மிகப்பெரும் தவறாகவும் அமைந்துவிட்டது.  சந்தர்ப்பம் பார்த்துக் காத்திருந்த அரசு மக்களை மீட்கவென நடவடிக்கையில் இறங்கியது. அதன்பின்னர்  வெள்ளி முள்ளிவாய்க்கால் வரை நிகழ்ந்ததெல்லாம் யாவரும் அறிந்த வரலாறு.
கிழக்கு மாகாணம் முற்றாக விடுவிக்கப்பட்டதும் A-15வீதியினூடாக திருகோணமலைக்குச் செல்லும் கனவு நனவாகுமா என்ற நப்பாசை மூதூர் மக்களுக்குத் தோன்றியதில் வியப்பில்லைதானே. முன்பு ஒருகாலத்தில் பாதை இருந்த இடமே  தெரியாதளவுக்கு உருக்குலைந்து போயிருந்த வழியால் பலர் போய்வர ஆரம்பித்து பின்னர் மெல்ல மெல்ல அதிகமான மக்கள் துறையினூடாக தோணிகள் படகுகள் மூலம் பயணத்தில் ஈடுபடலானார்கள்.
கிழக்கின் நகரங்களை கரையோரத்தினூடாக இணைக்கும் அரசின் முயற்சி ஆரம்பித்தவுடன் கிண்ணியாப் பாலம் நிர்மாண வேலைகள் ஆரம்பித்து முடிவடைந்தது. அதன்பின் A-15 வீதியிலுள்ள ஏனைய பாலங்களான உப்பாறு, கங்கை, இறால்குழி...என்று தொடர்ந்து அன்று மணித்தியாலங்களை விழுங்கிய மூதூர்- திருகோணமலை பயணம் இன்று சில நிமிடங்களில் என்றாகிப் போயிருக்கின்றது. 

இப்பொழுது கூறுங்கள். கிண்ணியாப்பாலம் என்பது மூதூருக்கான முன்னோடிப் பாலம்தானே?

(Contd...)

-'Mutur' Mohammed Rafi

Tuesday, December 13, 2011

சுதந்திரம் 27 & டைட்டானிக் 1




வயது வித்தியாசம் 100 ஆண்டுகள்!


2011












1911










மேலேயுள்ள இரு புகைப்படங்களையும் பாருங்கள்.


இவை இரண்டிற்குமிடையில் ஒரு ஒற்றுமையும் 100 வித்தியாசமும் (வித்தியாசங்களல்ல!) உண்டு. ஒற்றுமை என்ன தெரியுமா? இவை இரண்டும் எடுக்கப்பட்டது ஒரே இடத்தில்தான்.


ஆம்!  திருகோணமலை நகரின்  நகரசபை (Urban Council), வாடிவீடு (Rest Hose), புனித மரியாள் கல்லூரி (St. Mary's College) ஆகிய இருக்கும் முச்சந்தியில் வைத்து வாடிவீடு புனித மரியாள் கல்லூரி ஆகியவை தெரியும் கோணத்தில் எடுக்கப்பட்டுள்ள படங்கள் ஆகும்.  இவை இரண்டிற்கும் இடையேயான காலவித்தியாசம் ஒன்றும் அதிகமில்லை நண்பர்களே.


வெறும் 100 வருடங்கள்தான்!


இடது புறமாக இருக்கும் படம் 1911ம் ஆண்டில் அதாவது நமது இலங்கைத் தீவிற்கு சுதந்திரம் வழங்கப்படுவதற்குச் சரியாக 27 வருடங்களுக்கு முன்பு இன்னும் சொல்லப்போனால் பிரபல டைட்டானிக் கப்பல் மூழ்குவதற்கு ஏறத்தாழ ஓராண்டுக்கு முன்பு எடுக்கப்பட்டுள்ளது. அக்காலத்தில் திருகோணமலையில் மிகவும் செல்வாக்குடன் இருந்தவராகக் கூறப்படும் அப்துல் ரசூல் எனும் பிரமுகரால் எடுக்கப்பட்டுள்ளதாக இந்தப் புகைப்படத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது பாருங்கள்.

வலது புறமிருக்கும் புகைப்படம் இந்த வருடம் அதாவது 2011ம் ஆண்டு,  1911 புகைப்படம் எந்தக் கோணத்தில் எடுக்கப்பட்டுள்ளதோ கிட்டத்தட்ட அதே இடத்தில் அதே விதமாகவே எடுக்கப்பட்டுள்ளது.

இதை எடுத்தது இன்னும் சரிவரப் பிரபலமாகாதவரும் ஒருவேளை தப்பித்தவறிப் பிரபலமாகி விட்டால் அதனால் தனது தனிப்பட்ட சுதந்திரம் பாதிக்கப்படுமே என்று கவலைப்படும் ஒருவருமாகும்.


அவர் வேறு யாருமல்ல அடியேன்தான்!

 -மூதூர் மொகமட் ராபி

Monday, December 12, 2011

தெரிந்திருக்க வேண்டாமா?




ஒரு பவுர்ணமிச் சறுக்கல்!









"நேற்றிரவு இந்த வருடத்தின் கடைசி சந்திர கிரகணத்தை இலங்கையிலுள்ள மக்களில் பலர் கண்டு களித்தனர்..." என்றுதான் நமது நாட்டின் சக்தி வாய்ந்த தொலைக்காட்சி சேவையின் தமிழ் செய்தி அறிக்கையில் கிரகணம் பற்றிய செய்தியை அறிவிப்பாளர் கூற ஆரம்பித்தார். இதிலே என்ன இருக்கிறது என்று கேட்பவர்களுக்குத்தான் இதைச் சொல்லப் போகின்றேன்.

2011.12.10ம் திகதி மாலை முதல் நள்ளிரவு வரை நீடித்த சந்திர கிரகணம் பற்றிய செய்தியினை மறுநாள் இரவுச் செய்திக்காக வாசித்த கடமை நேரச் செய்தி அறிவிப்பாளர், " நேற்று ஓர் போயா (பவுர்ணமி அல்லது முழுமதி) தினமாக இருந்தமையினாலும் சந்திர கிரகணத்தை அதிகமானோர் கண்டுகளிக்கக் கூடியதாக இருந்தது குறிப்பிடத்தக்கது" என்றும் கூறினாரே பார்க்கலாம்.

இதைக் கேட்டவுடன் தூக்கிவாரிப்போட்டது. "எந்தக் காலத்திடா அம்மன் பேசியிருக்கிறாள்?" என்று கலைஞரின் வசனங்களை நக்கல் தொனியில் பேசுவாரே நமது நடிகர்திலகம், ஞாபகமிருக்கிறதா? அந்தப்பாணியில், "எந்தக்காலத்திலடா சந்திர கிரகணம் பௌர்ணமி தினத்தில் வராமல் வேறுதினத்தில் வந்திருக்கிறது?"


என்று கேட்க வேண்டும் போலிருந்தது.


 சரி பாவம், அந்த அறிவிப்பாளர் விடுங்கள். அவர் என்ன செய்வார் யாரோ எழுதிக் கொடுத்ததை காமிரா லென்ஸைப்பாரத்து வாசிப்பவரைக் குறைசொல்லிப் பயனில்லை.   ஆனால் ஒரு பொறுப்புள்ள தொலைக்காட்சி சேவையின் செய்திகள் தயாரிப்பாளர்களுக்கு ஓர் எட்டாம் தரத்தில் படிக்கும் மாணவிக்குத் தெரிந்த விஞ்ஞானப் பொது விடயங்கள் தெரிந்திருக்க வேண்டாமா?


நீரில் வாழும் பாலூட்டி வகை விலங்கான திமிங்கிலத்தை ஒரு மீன் என்றும் தனது நீ....ண்ட கைவிரல்களுக்கிடையிலே அமைந்திருக்கும் மென்சவ்வின் உதவியுடன் பறந்து திரியும் முலையூட்டியான வவ்வாலை ஒரு பறவை என்றும் யாராவது கூறினால் இந்தக்காலத்தில்  இரண்டாம் தரத்தில் கற்கும் குழந்தை கூட கேலிசெய்யும்.

இதைச் சொல்லும்போது ஒரு ஆசிரியரின் ஜோக் ஒன்று ஞாபகத்திற்கு வருகின்றது. அவருக்கு தமிழ் கொஞ்சம் தகராறு. ஒருநாள் அவர் கரும்பலகையில் 'அ-னி-ல்' என்று எழுதினாராம். ஒரு மாணவன் எழுந்து நின்று, 'அணிலுக்கு மூன்று சுழியுள்ள 'ணி' வந்து அ-ணி-ல் என்று அல்லவா வரும். நீங்கள் என்ன சேர் இரண்டு சுழியுள்ள 'னி' யைப் போட்டுள்ளீர்களே' என்று கேட்டானாம். "அது வந்து இதுவும் அணில்தான்...ஆனால் பாவம், கொஞ்சம் சின்ன அணில், அவ்வளவுதான்!" என்றாராம்.

-மூதூர் மொகமட் ராபி

பரீட்சை!





ன்று (2011.12.12)  கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் -G.C.E.(O/L)- பரீட்சைக்குத் தோற்றும்  சகல பாடசாலை மாணவர்களுக்கும் எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இந்தப் பரீட்சையை முதற்தடவையாகத் தோற்றும் மாணவர்களுக்கு ஒரு வார்த்தை உங்கள் பாடசாலை வாழ்விலே ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைக்குப் பிறகு நீங்கள் சந்திக்கும் முதலாவது அரசாங்கப் பரீட்சை இது.

  உங்கள்  சொந்த இடங்களிலும் பழகிய பாடசாலையிலுமே நடைபெறுவதால் எதுவித பதற்றமுமின்றி நம்பிக்கையுடன் எழுதுங்கள். இதுவரை காலமும் பாடசாலைகளில் நீங்கள் சந்தித்த பரீட்சைகளில் போலன்றி சில வேறுபாடுகளைச் சந்திப்பீர்கள்.

1. அடையாள அட்டை பரிசீலிப்பு
2. அனுமதி அட்டைகளில் கையெழுத்திடுதல்


ஆகிய விடயங்களை முன்கூட்டியே ஆசிரியர்கள் அல்லது பரீட்சை அனுபவமுள்ளவர்களிடம் கேட்டுத் தெரிந்து வைத்திருத்தல் நல்லது. 


முதல்நாள் பரீட்சையின் போது தவிர பின்பு இவையெல்லாம் பழகிவிடும். இம்முறை பரீட்சைத் திணைக்களம் மிகச்சரியாக முதல்நாளில் கடினமான பாடங்கள் இல்லாமல் நன்கு பரிச்சயமான சமயப்பாடங்களை வைத்திருப்பது  ஒரு சிறந்த முடிவு.


இந்தப் பரீட்சை தொடர்பாக ஆசிரியர்கள் வழிகாட்டியிருப்பார்கள். அவற்றோடு இவற்றையும் தெரிந்த கொள்ளுங்கள்- தேவையெனில்.


• வீட்டிலிருந்து அல்லது தங்குமிடத்திலிருந்து புறப்படுவதற்கு முன்பே அடையாள அட்டை அனுமதி அட்டை உங்கள் வசம் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.


• குறைந்தது தேர்வு ஆரம்பிக்கும் நேரத்திற்கு அரைமணி முன்கூட்டியே பரீட்சை மண்டபத்துக்குச் சென்று விடுங்கள்.


• பரீட்சைக்குத் தேவையான உபகரணங்கள் அனைத்தையும் நீங்களே உங்கள் வசம் வைத்திருங்கள்.


• வினாத்தாள்களை நன்கு வாசித்து அறிவுறுத்தல்களை தெளிவாக விளங்கிக் கொண்ட பின்னரே விடைகளை எழுதத் தயாராகுங்கள்.


• பொருத்தமில்லாத மேசைகள் நாற்காலிகள் குறைவான ஒளிச்செறிவு மழை காரணமாக வரும் தூவானச் சாரல் ஆகிய இடையூறுகள் இருந்தால் உங்கள் மேற்பார்வையாளர்களிடம் தயக்கமின்றித் தெரிவித்து மாற்று ஏற்பாடுகளைப் பெற்றுக் கொள்ளுங்கள். அதிலும் கணிதம் போன்ற பாடங்களுக்கு நேரம் மிகவும் முதன்மையானது என்பதால் இவ்விடயத்தில் அவதானமாக இருங்கள்.


இனியென்ன இளம் கன்றுகளே பயமறியாமல் ஜமாயுங்கள்!

-Jesslya Jessly

Sunday, December 11, 2011

ஒரு கடிதம் இரு நண்பர்கள்!









ன்புள்ள வாசகர்களே!


எனது நண்பர்களிலே ஒருவர் லண்டனிலே இருக்கிறார். முன்பு இங்கே இலங்கையில் ஓர் ஆசிரியராகக் கடமையாற்றியவர்.   மேல் படிப்புப் படித்துக் கொண்டே உழைத்து வாழ்க்கையில் முன்னுக்கு வரலாம் என்ற நம்பிக்கையில் அங்கு சென்றிருக்கிறார்.


அவர் மிகவும் நேர்மையானவர். அத்துடன்  தான் நம்பும் இறைவனுக்கு உண்மையாகவே பயந்து வாழ்பவர்.

இந்த இரண்டு குணங்களும் போதாதா அவரால் பிழைக்க முடியாதிருப்பதற்கு?


ஆம், அவருக்கு லண்டன் போகும் போது ஓர் ஆசை இருந்தது. அது ஒன்றும் பெரிய ஆசையெல்லாம் கிடையாது. அதாவது  இலங்கையில் தனது ஊரிலே முழுமையாகக் கட்டி முடிக்கப்படாதுள்ள  இறையில்லம் ஒன்றுக்கு 10 பக்கட் சீமந்து வாங்கி அன்பளிப்புச் செய்ய வேண்டுமென்பததான் அந்த ஆசை. ஆனால் லண்டன் போய் பல வருடங்களாகியும் கூட அவரால் தனது ஆசையை நிறைவேற்றிக் கொள்ள இயலாமல் போனது ஏன் தெரியுமா?


வேறொன்றுமில்லை மேலே கூறிய இரு இயல்புகள்தான்.


நேர்மையாய் சம்பாதித்த பணத்தை மட்டும் வைத்து வாழ்வதற்கே போதாதிருக்கும் போது எங்கனம் தான தருமம் செய்வது? நேர்மைக்கும் சுபீட்சத்துக்கும் உள்ள தொடர்பை நீங்கள் இன்னம் விளக்கமாக அறிய வேண்டுமா....?

அப்படியானால்   மேலே நான் குறிப்பிட்ட லண்டன் நண்பருக்கு இலங்கையில் அவரது ஊரிலிருந்து  நெருங்கிய நண்பர் ஒருவர் வரைந்திருக்கும் கடிதமொன்றைப் பாருங்கள்!


இதோ அந்தக் கடிதம்:


மச்சான் சுலைமான்,

அஸ்ஸலாமு அலைக்கும்டா!


எப்படிச் சுகமா இருக்கியாடா? இந்தக்கடிதத்தை எழுதிறதை நினைச்சால் கவலையாகவும் சங்கடமாகவும் இருக்குடா. ஆனாலும் வேறு வழியில்லாததால்தான் அனுப்புறன். உண்மையான விசயத்தைச் சொல்றதுக்கு சொந்த மொழி அதுவும் பேச்சு மொழிநடைதான் நல்லது என்டதால அப்படியே எழுதுறன். சரிதானே?


மச்சான், இந்த உலகத்தில நேர்மையா வாழ்றதுக்கு வழியே இல்லடா. அப்படி நேர்மையா வாழ்ந்தா இந்த உலகமே நம்மள பைத்தியக்காரன் அல்லது பொழைக்கத் தெரியாதவன் என்றுதான் கணக்கெடுக்குதுடா. சின்னவியாபாரம் முதல் கொண்டு பெரிய அரசாங்கத் தொழில் வரைக்கும் பொய்யும் புரட்டும் லஞ்சமும் மோசடி களவும்தான்டா நடக்குது. இதில எதையாவது ஒரு பாவத்தையாவது செய்யாதவனால இன்றைய வாழ்க்கைக்குரிய மாதிரி சம்பாதிக்க இயலாது. அப்படிச் சம்பாதிக்க முடியல்லண்டா அப்படியானவன அவனைப்பெத்த தாய் முதல் கொண்டு அவனுக்குப் பிறந்த பிள்ளைகளும் கூட மதிக்காத நிலைமைதான்டா இப்ப இருக்கு



சிறு வட்டியைக்கூட பெறாதே என்று சொல்லியிருக்கிற சமூகத்திலதாண்டா கொள்ளை லாபம் வச்சு விக்கிறானுகள். போலியாக பொருளைத் தயாரிச்சு வித்து ஏமாத்துகிறான்கள். இலட்சக்கணக்கில லஞ்சம் வாங்கிட்டு கடமையைச் செய்யாம விடுறான்கள். பாடசாலையில கடமையைச் செய்யாம டியுசனுக்கு வரவைக்கிறான்கள்.



தலையில் தொப்பியும் தொழுகையுமாக மீற்றர்ல மோசடி செய்து கள்ள கரண்ட் எடுக்கிறான்கள். இதையெல்லாம் ஆண்டவனுக்குப் பயப்படாமல் செய்துவிட்டு ஹஜ்ஜுக்கும் போறானுகள். பள்ளிவாசல் தலைவராகிறான்கள். அரசியல்வாதிகளோடு சேர்ந்து இரவுப் பார்ட்டி போட்டுக் குடிச்சிட்டு சுபஹுக்கும் வாறான்கள். வாப்பாமார் சுனாமி நிவாரணத்தில சுருட்டிச் சேர்த்த ஹறாமான பணத்தை முதலாக வைத்து மகன்மாரெல்லாம் ஹாட்வெயார் துணிக்கடை போட்டு  ஹலாலா வாழறானுகள் மச்சான்.



இதையெல்லாம் ஏன் சொல்றேன் தெரியுமாடா. உன்னையும் என்னையும் போல இரண்டொரு மடையன்கள் லண்டன்லயும் நம்மட ஊர்களிலயும்  இருந்துக்கிட்டு நேர்மையாச் சம்பாதிச்சு முன்னுக்கு வரலாம் என்டு நம்பிக்கொண்டு வாழுறோமே...அந்த மடத்தனத்தை சொல்றதுக்குத்தான் இதை எழுதிறன்டா சுலைமான். மனிசன மனிசன் அடிச்சுத்திங்கிற நெலமை வந்திட்டுதுடா. இனியும் நம்ம நேர்மை அது இது என்டு சொல்லிக்கிட்டிருந்தா சரி வராது போல இருக்குதுடா.



நான் இஞ்ச இந்த நிலைமையை அனுபவிச்சிட்டிருக்கிறேன். இந்த பொழைக்கத் தெரியாத வாழ்க்கை வாழ்ந்ததெல்லாம் போதும்டா என்று தோணுதுடா.



உனக்கு நினைவிருக்காடா என்ட ஒரு மாமி தலையில ஒரு ஓப்பரேசனுக்கு காசு இல்லாம இருநதா என்டு சொன்னேனே. அந்த மாமியிட புருசன்ட தொழில் என்ன தெரியுமா? ப்ரைஸ் கொன்ட்ரோல் இன்ஸ்பெக்டர்! லஞ்சம் புழுத்து வழியுற வேலை. ஆனா எங்க மாமா அல்லாஹ்வுக்கு உண்மையாகவே பயப்படுறவரு. அவரோடு ஒத்த இன்ஸ்பெக்டர்மார்களிலே ஒரு காரோ பைக்கோ இல்லாத ஒரே ஒருவர் என்டா அது இவர்தான்.



மாமிக்கு உயிராபத்தான நோய் வந்து ஒப்பரேசனுக்குக் காசு இல்லாத நெருக்கடியான நிலமையிலும் மனிசன் நேர்மையாக இருந்தாரு. கடைசியில என்ன ஆச்சு தெரியுமா? மாமி குணமடைஞ்சிட்டா. ஆனா இவரு மருந்துக்குச் செலவழிச்சுக் கடனாளியாகி  யோசனை பிடிச்சு மென்டலாகிவிடும் நிலைமைக்கு இருக்கிறாரு. இப்ப சொல்றா சுலைமான். தேவையா மச்சான் இந்த நேர்மை? பதில் சொல்றா சுலைமான்?



நீ ஆண்டவனைத் தொழுதிட்டேயிரு. அவனுக்கு உண்மையாப் பயந்து வாழு. அப்பதான் உன்ட ஊர்ல இருக்கிற பள்ளிக்குக் கூட சீமந்து 10 பக்கட் வாங்கிக் குடுக்கேலாம இருப்பாய். அதையெல்லாம் விட்டுப்போட்டு பொழைக்கிற வழியப்பாரு மச்சான். இனி நானும் அதைத்தாண்டா செய்யப்போறன். நல்லது கெட்டா நாயிலும் கேடுன்டுவாங்க. ஏதோ உனக்கிட்டச் சொல்லணும் போல இருந்திச்சுடா. அதுதான்டா இந்த சாமத்துல ஈமெயில் பண்றன். உன்ட எண்ணத்தைச் சொல்லு மச்சான்.

இப்படிக்கு

இர்பான்


 ( குறிப்பு: பெயர்கள் மட்டும் மாற்றப்பட்டுள்ளன)



- Jesslya Jessly

Thursday, December 8, 2011

வீதிகள்+வாகனங்கள்= உயிர்கள்!



நேற்றைய தினம் (2011.12.06)  காலை 7.30 மணியளவில் திருகோணமலை அபயபுர பகுதியில் ஓர் வீதிவிபத்து நிகழ்ந்தது.இவ்விபத்தில் திருகோணமலை புனித மரியாள் கல்லூரியின் ஆசிரியர்களில் ஒருவரான வகாப் மொகமட் எனும் இளைஞர் பலியாகியுள்ளார்.

அன்றைய தினம் பாடசாலையில் நிகழவிருந்த ஒளிவிழாவில் கலந்து கொள்ளும் முனைப்புடன் தனது பிறப்பிடமான மூதூரிலிருந்து அதிகாலையில் புறப்பட்டு விரைந்து வந்தவர், அனுராதபுரச் சந்தியைத் தாண்டி அபயபுர பகுதியிலுள்ள சுற்றுவட்டத்தை நோக்கி இறங்கிச் செல்லும் சரிவான வீதியில் வைத்து தனக்கு முன்னாகப் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியை முந்துவதற்கு முயற்சித்திருக்கிறார்.


அவ்வேளையில் சிறுமழை காரணமாக நனைந்திருந்த தார் வீதி, மற்றும் கால்நடைச் சாணி காரணமாக வழுக்கி, எதிர்ப்புறமாக வந்த கொண்டிருந்த பயணிகள் பஸ்ஸின் சில்லுக்குள் மாட்டியதன் காரணமாக தலைப்பகுதியில் படுகாயமுற்றதாக பார்த்தவர்கள் கூறியுள்ளார்கள்.


உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு  செல்லப்பட்ட போதும் தலையிலும் மூளைப்பகுதியிலும் குருதிப்பெருக்குக் காரணமாக சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்திருக்கின்றார் எனவும்தெரிவிக்கப்பட்டது.


மிக இளம் வயதிலேயே தனது வாழ்வைப் பறிகொடுத்த இந்த ஆசிரியரின் அகால மரணத்தினால் அவரது குடும்பத்தினர் உறவினர்கள் நண்பர்கள் ஊரிலுள்ளவர்கள் மட்டுமல்லாது அவரது பாடசாலை சக ஆசிரியர்கள் மாணவிகள் அனைவருமே சோகத்திலாழ்ந்திருக்கின்றார்கள்.


வீதி விபத்துகள் என்பது இப்போதெல்லாம் வெகு சாதாரணமாக ஆகிவிட்டிருக்கின்றன. விபத்துகள் நிகழ்வதற்கு பல காரணங்களுள்ளன.  வாகன ஓட்டிகளின் கவனக்குறைவு, அலட்சியம், தவறான செலுத்துகை, மிதமிஞ்சிய வேகம், சாமர்த்தியமின்மை, மோசமான வாகனப் பராமரிப்பு, வீதிகளின் குறைபாடுகள்... என்று கூறிக்கொண்டு செல்லமுடியும்.


இவற்றிலே, அண்மைக்காலமாக திருகோணமலைப் பகுதியில் நிகழ்ந்துவரும் வீதி விபத்துகளுக்கு வாகனங்கள் பயணிக்கும் பாதைகளின் சீரற்ற நிலைமையே காரணமாக அமைந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.


அதிலும் குறிப்பாக 4ம் கட்டை -அனுராதபுரச் சந்தி-அபயபுர- மட்கோ சந்தி ஊடாக நகரை நோக்கிச் வரும் கண்டி வீதியே மிகவும் மோசமான நிலையில் தொடர்ந்து இருந்து வருகின்றது.

இதில் வேடிக்கை என்னவென்றால் ஆரம்ப காலங்களில் மிகவும் மோசமாக இருந்த நிலாவெளி ஊடாக புல்மோட்டை செல்லும் வீதி சீனக்குடா- கிண்ணியா- மூதூர் ஊடாக மட்டக்களப்பு வரை செல்லும் A-15 வீதி ஆகியவை எல்லாம் இப்போது அழகாகச் செப்பனிடப்பட்டுள்ள நிலையில் இருக்கின்றது. திருகோணமலை -அனுராதபுர வீதியும் ஓரளவு நல்ல நிலையில்தான் இருக்கின்றது.ஆனால், திருகோணமலை நகருக்கு அதிகமான வாகனப் போக்குவரத்து நிகழும் கண்டி வீதி மட்டும் குன்றும் குழியுமாகவே இருந்து வருகின்றது.


- 'Mutur' Mohammed Rafi


(தொடரும்)

Tuesday, December 6, 2011

ஆழ்ந்த அனுதாபங்கள்!



ன்று 2011.12.06 செவ்வாய் தினம் காலை திருகோணமலை அபயபுர பகுதியில் நிகழ்ந்த மோட்டார் சைக்கிள் வீதி விபத்தில் அகால மரணமடைந்த திருகோணமலை புனித மரியாள் கல்லூரியின்  ஆங்கில ஆசிரியர் ஜனாப். வகாப் மொகமட் (24 வயது ) அவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்கள்  மற்றும்  நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்!





வேகத்தால் வந்த வேகம்!



புயலாக மாறாத வரை
வாழ்க்கை ஒரு தென்றல்தான்
தென்றலாகச் சுற்றித்திரிந்து 
எல்லோரையும் ஈரத்துவிட்டு கடைசியில்
எம்மனதினை ஓயவைத்தது அப்புயல்!
0
வேகம் நிறைந்த வாழ்க்கையின்
வேகத்தையே முந்தும் உன்செயல்கள்- இன்றோ
வேகம் கூட கேள்விக்குறியாய் மாறி
உன்னை மீண்டும் எதிர்பார்க்கச் செய்கின்றது!
0
வாழ்க்கை எனும் வரைபடத்தை
வேகமாய் வரைந்து திரிந்த நீ 
அந்தக் கொடூர டிசம்பர் ஆறையும்
வேகமாய் கடந்துவிட நினைத்ததாலா 
அதைமட்டும் முன்னேவிட்டு
உன் உயிரின் வேகத்தை ஓயவைத்தாய்?
0
இன்றோ உன் புன்னகை பூத்த வேகத்தையும்
கண்ணீருடன் தொடர்கின்றோம் நாம்
அதுவேகமா வேதனையா
சொல்வதற்குத்தான் நீ இல்லை!


-பிரிவால் துயருறும்

11A மாணவிகள் 

 

Wednesday, November 23, 2011

தனிமனித ஆளுமை


அப்ரிடி:  அதிரடிப் போராட்டம்!






கிரிக்கட், இன்றைய நவீன முதலாளித்துவ உலகில் தாம் ஏகாதிபத்திய சக்திகளாலும் பல்தேசியக் கம்பனிகளின் தரகர்களாலும் சுரண்டலுக்குள்ளாவதை மறைத்து மக்களை ஒருவித லாகிரியில் ஆழ்த்தி வைத்திருப்பதற்கு பயன்படுகின்ற ஒரு விளையாட்டாக மாறிப்போய் விட்டிருக்கின்றது.


இதை சிந்திக்கக்கூடியவர்கள் நன்கறிவர்.


இதனாலேயே அவ்விளையாட்டினுள் ஊழல், சர்வதேச பேரம், சூது, திறமையான வீரர்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுதல் போன்ற இன்னோரன்ன பிறழ்வுகள் மலிந்து வருகின்றன.


ஆயினும், விளையாட்டு என்ற வகையில் கிரிக்கட்டை இரசிப்பதற்குத் தடையேதும் கிடையாது. அந்த வகையில் இன்றைய கிரிக்கட் அணிகள் பலவற்றில் திறமையான வீரர்கள் ஒதுக்கப்படுவதும் அதிலே பலர் காணாமற்போவதும் சிலர் மீண்டும் முயன்று போராடித் தம்மை வெளிப்படுத்தி வெற்றி பெறுவதும் நடந்து காலாகாலமாக கொண்டுதானிருக்கிறது.


மேற்கிந்தியாவின் கிறிஸ்கெயில் பாகிஸ்தானின் சகிட் அப்ரிடி ஆகிய இருவரையும் இதிலே குறிப்பிடலாம். கிறிஸ் கெயில் சிறந்த சகலதுறை அதிரடி வீரர். இவர் சிறந்த அதிரடித் தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தால் மேற்கிந்திய அணி வெற்றிபெறும் சாத்தியமாகும் என்ற நிலை இன்னும் இருந்து வருகின்றது. தனது கிரிக்கட் நாட்டின் கிரிக்கட்சபையுடன் ஊதியம் தொடர்பான முறுகல் ஏற்பட்டதன் காரணமாக விலக்கப்பட்டிருந்தார்.


பாகிஸ்தானின் சகிட் அப்ரிடி கடந்த உலகக் கிண்ணப் போட்டியில் அதுவரையில் உள்முரண்பாடுகளால் பிளவடைந்து பின்தங்கியிருந்த தனது அணியை ஒன்றிணைத்து உற்சாகமூட்டி தனது சிறந்த பந்து வீச்சு சகலதுறை ஆட்டத்தின் மூலம் அரையிறுதியாட்டம் வரை சிறப்பாக வழிநடத்தியிருந்தார். தனிப்பட்ட வகையிலும் உலகக்கிண்ணத் தொடரில் 21 விக்கட்டுக்களை வீழ்த்தி புகழ் பெற்றிருந்தார். இத்தனையையும் நிகழ்த்திக் காட்டிய அந்தத் திறமைசாலிக்கு அந்நாட்டின் கிரிக்கட் சபை வழங்கிய பரிசு என்ன தெரியுமா? காரணத்தைக்கூட அறிவிக்காமல் அவரை அணித்தலைவர் பதவியிலிருந்து விலக்கியதுதான்.

'ஒரு அணிக்குரிய வீரர்களைத் தெரிவு செய்வதிலே அவ்வணித் தலைவருக்குரிய பங்களிப்பே  மிகவும் முக்கியமானது. பயிற்றுவிப்பாளர்களின் பிரதான பணி தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு பயிற்சியளிப்பதுதான்' என்றார் அப்ரிடி. இயல்பிலேயே எதையும் வெளிப்படையாகவும் துணிச்சலாகவும் பேசும் அப்ரிடியின் இந்தப் போக்கு கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபையிலிருந்த பழழ்பெருச்சாளிகளுக்கு ஒத்து வரவில்லை.

இதனால் ஏதோ சாக்குப்போக்குகளைக் கூறி அப்ரிடியை ஒரேயடியாக ஒதுக்குவதற்கு முனைந்தனர். அப்ரிடியின் நேர்மை, திறமை, இரசிகர்களின் ஆதரவு ஆகிய விடயங்களால் நேரடியாக ஓரங்கட்ட முடியாமல் போனதால் திரைமறைவு சித்துவேலைகள் நடக்கலாயின.


ஆனால், இதனை உணர்ந்த சுயமரியாதையுள்ளவரான அப்ரிடி, தன்னை மதிக்காத கிரிக்கட் நிர்வாகத்தின் கீழ் விளையாட விரும்பவில்லை என்றும் குறித்த தலைமையின் பதவிக்காலம் முடிவடைந்து அது கலைக்கப்படும் வரை நிபந்தனையுடனான தனது ஓய்வை அறிவித்திருந்தார். "மீண்டும் நான் சகல மரியாதைகளுடனும் அணிக்குத் திரும்புவேன்" என்றும் பேட்டியளித்திருந்தார்.


அப்ரிடியின் பங்களிப்பும் பிரபல்யமும் அணிக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை அனைவரும் உணர்ந்து கொள்வதற்கு இந்த இடைவெளி பயன்பட்டது. அப்ரிடி இல்லாத அணி கவர்ச்சியற்றது என்றும் கற்றுக்குட்டித்தனமானது என்றும் விமர்சனங்கள் எழுந்தன. அப்ரிடியை மீண்டும் இணைக்கக்கோரி இரசிகர்களின் ஏகோபித்த ஆதரவு அலையும் வெகுண்டெழுந்தது.


இதற்கிடையில் இஜாஸ் பட் தலைமையிலான கிரிக்கட்சபை கலைக்கப்பட்டது.


இதனால்  சில மாதங்கள் ஓய்வின் பின்பு மீண்டும் அப்ரிடி தனது ஓய்வை இடைநிறுத்திக் கொண்டு விளையாடத் தயாரானார். ஐக்கிய அரபு இராஜ்யத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் இணைக்கப்பட்டுள்ளார்.


தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் தொடரில் பாகிஸ்தான் இரு ஆட்டங்களிலும் இலங்கை அணி ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெற்றிருக்கும் நிலையில் தொடரை பாகிஸ்தானுக்கு வென்று தரவேண்டிய நான்காவது ஆட்டம் கடந்த 20ம் திகதி சார்ஜாவில் ஆரம்பமானது.


இலங்கையின் பந்துவீச்சில் முன்னணி துடுப்பாட்ட வீரர்களைப் பறிகொடுத்திருந்த பாகிஸ்தான் அணி 71-5 என்ற நிலையில் தடுமாறித் தத்தளித்துக் கொண்டிருக்கையில் 6வது வீரராக களமிறங்கிய அப்ரிடி, தனது வழமையான அதிரடிப் பாணியை ஆரம்பத்தில் தேவைக்கேற்ப சாதுரியமாக நெகிழ்த்திப் பொறுமையுடனும் பின்பு விரைவாகவும் குவித்தார். பெறுமதியான அந்த 75 ஓட்டங்களின் உதவியுடன் அணியின் மொத்த ஓட்ட எண்ணிக்கை ஓரளவு மரியாதைக்குரிய 200 ஓட்டங்கள் என்றானது.


201 என்ற வெற்றி இலக்கைத் துரத்திய இலங்கை அணி, ஆரம்பத்தில் சிறிது தடுமாறிய போதிலும் சங்கக்கார, ஜயவர்த்தன எனும் இரு வல்லவர்களின் 102 ஓட்ட இணைப்பாட்டத்தின் மூலம் வெற்றி பெறும் வலுவான நிலையை அடைந்தது.


ஏறக்குறைய அனைத்து பாகிஸ்தான் வீரர்களும் இலங்கையின் வெற்றியைத் தடுத்துவிட முடியாது என்று நினைத்துச் சோர்ந்து விட்ட நிலையில் ஒரே ஒரு வீரர், அப்ரிடி, மட்டும் தனது வலது முழங்காலின் உபாதையையும் பொறுத்துக் கொண்டு சளைக்காமல் பந்து வீசிக் கொண்டேயிருந்தார். அவரது இடைவிடாத முயற்சியின் பலன் 37.5 வது ஓவரிலே சங்கக்காரவின் விக்கட் தகர்ப்புடன் ஆரம்பமாகி மகேல ஜயவர்த்தன மெண்டிஸ் பெரேரா ப்ரஸன்ன என்று தொடர்ந்து 5-35 என்ற பந்து வீச்சுப் பெறுதியுடன் அணிக்கு 3-1 என்ற தொடர் வெற்றியாகவும் கனிந்தது.


ஒரு நிலையில் திட்டமிட்டு ஒதுக்கப்பட்ட நிலையிலும் சோர்ந்து விடாது போராடி மீண்டெழுந்து தனது அவசியத்தை நிருபித்து... தன்னந் தனியாளாய் தொடர் வெற்றியை ஈட்டிக்கொடுத்து... தன்னை ஒதுக்கியவர்களையெல்லாம் ஆட்டத் திறமையால் வெட்கப்படச் செய்து நிமிர்ந்து நிற்கும் அப்ரிடியின் ஆளுமை போற்றத் தக்கதே.

-மூதூர் மொகமட்ராபி