Saturday, March 2, 2013

மம்மூட்டி






நடிகர் மம்மூட்டி மலையாளத்தில் ‘காழ்ச்சபாடு’ என்ற தலைப்பில் எழுதிய அவருடைய வாழ்வனுபவங்கள், தமிழில் கே.வி.ஷைலஜாவால் மொழிபெயர்க்கப்பட்டு, ‘மூன்றாம் பிறை’ என்ற தொகுப்பாக வெளியாகவிருக்கிறது! அதில் இருந்து சில பகுதிகள்…


‘வக்கீலாகப் பணி ஆரம்பித்த நாட்கள். ஆரம்பம் என்ற பொருளை உள்ளடக்கி அது பெரிதாக நீண்டு நிலைக்கவில்லை. நீதிமன்றம், வழக்கு என்று கேட்கும்போதே ஒரு மாதிரி பிரமிப்பாக இருக்கும். முதல்முறை நீதிமன்றத்தில் வாதிட்டபோது, எனக்குக் கால்கள் இரண்டும் நடுங்கி வேர்த்துக்கொட்டின.


மஞ்ஞேரி நீதிமன்றத்தில் 60 வயதான, மிகவும் ஐஸ்வர்யமும் சாந்தமுமான மனைவிக்கும், விவசாயியைப்போல எளிமையான தோற்றமும் உடையும் அணிந்த கணவருக்கும் இடையிலான வழக்கு. காலையிலேயே நீதிமன்ற வளாகத்தில் உள்ள வராந்தாவில் காத்திருப்பார்கள். பெரும்பாலான நாட்களில் மாலை வரை அங்கேயே இருப்பார்கள். திருமண பந்தத்தை முடித்துக்கொள்ள நினைத்து, கணவனிடம் இருந்து ஜீவனாம்சம் வேண்டி மனைவி வழக்கு தொடுத்திருக்கிறார். மஞ்ஞேரி நீதிமன்றத்தில் மட்டுமல்ல;


பெரும்பான்மையான நீதிமன்றங்களில் இதுதான் நிலைமை. பல வழக்குகள் உண்மையானவை. பல வழக்குகள் சொந்தபந்தங்களின் கௌரவப் பிரச்னை தொடர்பான வழக்குகள். இதில் கணவருக்கோ மனைவிக்கோ இடம் இல்லை.
மனைவி, தன் சகோதரனின் காரில் வந்து இறங்குவாள்.


சகோதரர்களுக்காகத்தான் இந்த கேஸை நடத்துகிறாள் என்பது பார்த்தாலே தெரியும். அவளின் கணவரோ யாருடைய துணையும் இல்லாமல் தனியாக பஸ்ஸில் வந்து இறங்குவார். ஜூனியர்களான நாங்கள் நீதிமன்றத்துக்குள் காரசாரமாக எதிர் எதிரே விவாதித்தாலும் வெளியில் ஒரு சிகரெட்டைப் பலர் இழுத்தும், ஒரு டீயைப் பலர் பகிர்ந்தும் குடிக்கும் நண்பர்களாக இருந்தோம். ஆனால், கட்சிக்காரர்கள் உடன் இருந்தால் இப்படி நடந்துகொள்வது இல்லை.
அந்த வயதானவரிடம் கடுமையான கேள்விகள் கேட்கும்போது மிகவும் மெதுவான குரல், தன்மையான மொழியில் பதில் சொல்லிக்கொண்டு இருந்தார். கணவர் பதில் சொல்லும்போது அவர் மனைவியையே பார்த்துக்கொண்டு இருந்தேன். கணவரிடம் இருந்து மங்காத பிரியமும் மரியாதையும் அந்த முகத்தில் இருந்தது. ஒவ்வொரு கேள்வியும் பதிலும் இதயத்தாலும் கேட்கப்படுகிறது என்பதை நான் உணர்ந்து இருந்தேன்.
விசாரணைக்குப் பிறகு, கூண்டில் இருந்து இறங்கும்போது அவர் மனைவியை ஒரு முறை பார்ப்பார். அவருடைய முகத்தில் துடித்துத் தெறித்து விழத் தயாராக இருந்த உணர்வுக் கலவைகளை நாம் பார்க்க முடியும்.



மனைவியிடம் விசாரணை நடக்கும்போது, அவர் எதிர் கூண்டின் அருகில் நின்றபடி இருப்பார். அன்றைக்கும் அப்படித்தான் நின்று இருந்தார். நீதிமன்றத்தின் கேள்விகள் பல நேரங்களில் வயோதிகத்தையும், பெண் என்பதையும் மறந்துபோனதாகத்தான் இருக்கும். பள்ளி வராந்தாவைக்கூட வேடிக்கை பார்த்திராத அந்த முதியவள் எதிர் விசாரணை தொடங்கிய சற்று நேரத்துக்கு எல்லாம், வக்கீல் கற்றுக் கொடுத்து இருந்த எல்லாவற்றையும் மறந்துபோய் இருந்தாள்.


பதப்படுத்தாத மொழியில் வெகுளித்தனமாக, களங்கம் இல்லாத வார்த்தைகளைக் கோத்து அவள் பேசிக்கொண்டே இருந்தாள். பொய் சொல்லும்போது ஏற்படும் இடறல் அவளது வார்த்தைகளில் அப்பட்டமாகத் தெரிகிறது. கணவரின் குரூரத்தையும், அன்பில்லாமையையும், கணவரால் வீணடிக்கப்பட்ட தன் வாழ்க்கையையும் பற்றி வக்கீல் அவளிடம் கேட்டபோது அதைக் கேட்டுக்கொண்டு இருந்த முதியவரின் கண்கள் நிறைந்து இருந்தன. அதை மறைப்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டவராக அவர் நான்கு திசைகளிலும் கண்களை ஓடவிட்டார். பிடிமானத்துக்காக வேண்டி கூண்டின் மரச் சட்டங்களில் கை ஊன்றி ஒட்டி நின்றபடி மனைவியை ஒரு முறை பார்த்தார். பார்வை உரசியபோது மனதில் இருப்பதைச் சொல்ல முடியாமல் அந்த முதிய பெண் உடைந்து அழுதாள்.



அவளுடைய அழுகைச் சத்தம் நீதிமன்றத்தின் ஒவ்வோர் இதயத்திலும் மோதித் திரும்பியது. எண்ணி எண்ணிச் சொல்லும் வார்த்தைகளுக்கு இடையில் கேவல்களுடன், ‘என்னால முடியல தெய்வமே’ என்று சொல்லிக்கொண்டே கூண்டில் தளர்ந்தபடி விழுந்தாள். நீதிமன்றம் அப்படியே அமைதியில் உறைந்துபோனது. சட்டென முதியவர் கூண்டில் இருந்து இறங்கி ஓடி வந்து மனைவியைத் தாங்கிப் பிடித்து எழுப்பினார். தோளில் இருந்த துண்டால் முகத்தை அழுந்தத் துடைத்து நெஞ்சோடு சேர்த்து எழுப்பி நிற்கவைத்து மெள்ள நடக்கவைத்தார்.



நீதிமன்றத்தையோ, வக்கீலையோ, தீர்ப்பையோ, அவளின் சகோதரர்களையோ யாரையுமே மதிக்கவோ, உதாசீனமோ செய்யாமல், ஒரு குழந்தையைத் தோள் மேல் போட்டுக்கொள்வது மாதிரி, தோளோடு சேர்த்துப் பிடித்தபடி வக்கீல்களுக்கு நடுவில் வழி ஏற்படுத்தி வெளியேறினார். படி இறங்குவதற்கு முன்னால் எங்களைப் பார்த்த அவரின் பார்வையில் பகைமை இல்லை.



22 வருடங்களுக்கு முன்பாக வீட்டில் இருந்து இறக்கிவிடப்பட்ட அந்த மனிதன், அதன் பிறகு, முதல்முறையாகத் தன் மனைவியைத் தொடுகிறார். அவளோடு பேசுகிறார். வீட்டு ஆட்களின் குடும்பப் பகையினால் அவர்கள் இருவரும் வார்த்தைகள் இழந்த வெற்றுப் பார்வையால் இதயத்தில் மங்கிப்போகாத ப்ரியத்தைத் தேக்கிவைத்து, கொடுங்காற்றுக்கு இடையிலும் அணையாத நெய் விளக்கினை ஏந்தி நடப்பதுபோல வாழ்ந்து இருக்கிறார்கள்.
நீதிமன்றம் அந்த வழக்கை ரத்து செய்தது. பிறகு எப்போதும் அவர்கள் நீதிமன்றத்துக்கு வரவில்லை.



என் மனைவியிடம் ஒரு வார்த்தை கோபமாகப் பேசும்போதுகூட அந்த முதியவரின் கண்ணீர் நிறைந்த கண்கள் நினைவுக்கு வரும். அப்போது எனக்குத் திருமணமாகி இருக்கவில்லை. திருமணத்துக்குப் பின் மனைவியை, இந்தப் பெரியவரைப்போல நேசிக்க வேண்டும் என்று நான் முடிவு செய்திருந்தேன்.



கைகளுக்குள் பொத்திவைத்துக்கொள்ளும் அளவு, அன்பு இருக்கிறது என்ற நினைப்பில் இறுமாந்திருந்த நான் அன்று கடலை தரிசித்தேன். ப்ரியத்தில் நிறைந்திருந்த கடல். ஞாபகங்களின் கரை ஓரத்தில் நிற்பதே மனதை ஈரமாக்குகிறது. நாமும் அவர்களைப்போல ப்ரியம் மீதூர வாழ்வோம்!

தமிழில் : கே.வி.ஷைலஜா

Friday, March 1, 2013

பூமியை மிரட்டும் விண்கற்கள்

 
 
ந்தியாவின் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளித் தளத்திலிருந்து பிப்ரவரி 25 ஆம் தேதி பி.எஸ்.எல்.வி ராக்கெட் ஒரே சமயத்தில் ஏழு செயற்கைக்கோள்களை உயரே செலுத்தி சாதனை புரிந்தது.
இந்த ஏழு செயற்கைக்கோள்களில் இந்தியாவும் பிரான்சும் சேர்ந்து உருவாக்கிய சரல் ( சரல் என்பது Satellite with ARgos and ALtika என்பதன் சுருக்கம்) என்னும் செயற்கைக்கோள் தான் வடிவில் பெரியது. எடை அளவிலும் (சுமார் 400 கிலோ) பெரியது. அந்த வகையில் சரல்செயற்கைக்கோள் விண்வெளியில் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டது தான் செய்திகளில் முக்கிய இடம் பெற்றது.
பி.எஸ்.எல்.வி. C 20 ராக்கெட்
சரல் செயற்கைக்கோள் கடல்களை ஆராய்வதற்கானது. குறிப்பாக கடல் மட்டத்தில் ஏற்படும் சிறு மாற்றங்களையும் கண்டறிந்து கூறக்கூடியது. அமெரிக்காவும் பிரான்சும் சேர்ந்து உருவாக்கி உயரே செலுத்திய ஜேசன் -1, ஜேசன் -2 செயற்கைக்கோள்கள், இந்தியாவின் ஓஷன்சாட் -1, ஓஷன்சாட் -2 செயற்கைக்கோள்கள் உட்பட பல செயற்கைக்கோள்கள் உலகின் கடல்களை ஏற்கெனவே ஆராய்ந்து வருகின்றன். அந்த வகையில் கடல்களை ஆராய்வதற்காக செயற்கைக்கோள் உயரே செலுத்தப்படுவது இது முதல் தடவை அல்ல.

சரல் செயற்கைக்கோள்
 
அந்த வகையில் பார்த்தால் பி.எஸ்.எல்.வி செலுத்திய செயற்கைக்கோள்களில் முக்கியமானது கனடா தயாரித்து அளித்த NEOSSat ( Near- Earth Object Surveillance Satellite) செயற்கைக்கோள் ஆகும்.பெரிய சூட்கேஸ் சைஸிலான இந்த செயற்கைகோளின் எடை வெறும் 65 கிலோ.இந்த செயற்கைக்கோளில் 15 செண்டிமீட்டர் நீளம் கொண்ட டெலஸ்கோப் ஒன்று உள்ளது.
 
பூமியின் மீது மோத வாய்ப்புள்ள விண்கற்களை (Asteroids) கண்டறிவது தான் இதன் முக்கிய பணியாகும்.அண்மையில் ரஷிய வானில் ஒரு விண்கல் பயங்க்ரமாக வெடித்ததன் விளைவாக ஆயிரக்கணக்கான அடுக்கு மாடிக் கட்டடங்களில் ஜன்னல் கண்ணாடிகள் தூள் தூளாக உடைந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தது நினைவிருக்கலாம்.
 
இப்பின்னணியில் பார்க்கும் போது கனடிய செயற்கைக்கோளின் முக்கியத்துவம் புரியும். பூமிக்கு அருகே வரும் வாய்ப்புள்ள விண்கற்களைக் கண்டறியும் பணி ஏற்க்னவே நடந்து வருவது தான். பூமி இருக்கின்ற வட்டாரத்தை நோக்கி வருகின்ற -- ஆனால் பூமியைத் தாக்காமல் கடந்து செல்கின்ற விண்கற்களின் எண்ணிக்கை 1300 க்கும் அதிகம்.

அமெரிக்க நாஸாவும் சரி, வேறு பிற அமைப்புகளும் சரி, இவ்வித விண்கற்களைக் கவனித்து அவற்றின் பாதைகளையும் கணக்கிட்டு பட்டியலிட்டு வருகின்றன. ஆனால் இவ்வித அமைப்புகள் அனைத்தும் பூமியிலிருந்தபடி வானை ஆராய்ந்து புதிது புதிகாக விண்கற்களைக் கண்டுபிடிப்பவையே. இந்த அமைப்புகளின் டெலஸ்கோப்புகள் இரவு நேரங்களில் மட்டும் வானை ஆராய்பவை. ஏனெனில் இரவு நேரங்களில் மட்டுமே விண்கற்கள் தென்படும்.சூரிய ஒளி காரணமாக பகலில் இவை தெரியாது.

 
ஆனால் பூமிக்கு மேலே வானில் இருந்தபடி விண்கற்களைக் கண்டுபிடிக்க இதுவரை எந்த ஏற்பாடும் இருக்கவில்லை. கனடாவின் செயற்கைக்கோள் அக்குறையைப் பூர்த்தி செய்வதாக இருக்கும்.வேறு விதமாகச் சொல்வதானால் விண்கற்களைக் கண்டறிய விண்வெளியில் அமையும் முதலாவது செயற்கைக்கோள் இதுவே ஆகும்.
 
கனடாவின் செயற்கைக்கோள் சுமார் 800 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்தபடி பூமியை வடக்கிலிருந்து தெற்காகச் சுற்றி வரும். அப்போது அது பூமியை நோக்கி வரக்கூடிய விண்கற்களைக் கண்டறிந்து தகவல் தெரிவிக்கும். இதில் வேறு முக்கிய அம்சமும் உள்ளது.
கனடாவின் செயற்கைக்கோள்
 
 
பூமியில் சூரியனை நோக்கிய ஒரு பாதியானது பகலாக இருக்கும். மறு பாதி இரவாக இருக்கும். இரவாக உள்ள பாதியிலிருந்து டெலஸ்கோப்புகள் மூலம் வானை ஆராய்ந்து விண்கற்களைக் கண்டறிவது. எளிது.ஆனால் பகலாக உள்ள வானில் இருக்கக்கூடிய விண்கற்களை பூமியிலிருந்தபடி ஆராய்வது இயலாத காரியம். சூரியனின் பிரகாசமே இதற்குக் காரணம். கனடாவின் செயற்கைக்கோளானது பகலாக உள்ள வான் பகுதியிலிருந்து வருகின்ற விண்கற்களையும் கண்டறிந்து கூறி விடும். அது எப்படி?
.
 
பகல் நேரத்தில் வானம் நமக்கு நீல நிறத்தில் தெரிவதற்குக் காற்று மண்டலம் காரணம்.ஆனால் கனடாவின் செயற்கைக்கோள் காற்று மண்டலத்தைத் தாண்டி 800 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்தபடி செயல்படும் என்பதால் அந்த உயரத்தில் வானம் கரிய நிறத்தில் தெரியும். வானில் சூரியன் இருந்தாலும் சூரியனைச் சுற்றியுள்ள வானம் கரியதாகவே இருக்கும். சூரியனும் தெரியும். நட்சத்திரங்களும் தெரியும். அஸ்டிராய்டுகள் அதாவது விண்கற்கள் மீது சூரிய ஒளி படும் என்பதால் அவையும் வானில் தெரியும்

நட்சத்திரங்கள் இடம் பெயராது. ஆனால் அஸ்டிராய்டுகள் இடம் பெயருபவை (கிரகங்களும் தான்). கனடாவின் செயற்கைக்கோளில் அமைந்த டெலஸ்கோப் இந்த அஸ்டிராய்டுகள் நகரும் விதத்தைப் ப்டம் எடுத்து அனுப்பும் போது அஸ்டிராய்டுகளின் பாதையைக் கணக்கிட்டு விட முடியும்.
கனடாவின் செயற்கைக்கோள் ஒரு நாளில் பல நூறு படங்களை எடுத்து அனுப்பும். எனவே இதுவரை அறியப்படாத பல அஸ்டிராய்டுகளின் பாதைகளைக் கண்டறிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
கனடிய செயற்கைக்கோள் பகலில் செயல்படும் விதத்தைக் காட்டும் படம்.
 
 
தவிர, கனடாவின் செயற்கைக்கோள் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் என்பதால் வருகிற நாட்களில் பூமி வட்டாரத்தை நோக்கி வருகின்ற ஏராள்மான விண்கற்கள் கண்டறியப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெலஸ்கோப்புடன் கூடிய இந்த செயற்கைக்கோளை உயரே செலுத்த கனடாவிடம் ராக்கெட்டுகள் கிடையாது என்பதால் அது இதனை செலுத்த இந்தியாவின் உதவியை நாடியது. உயரே செலுத்தப்பட்ட பின்னர் கனடாவின் செயற்கைகோள் செயல்படத் தொடங்கி விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்கைக்கோள் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதை கனடாவில் விண்வெளித் துறைக்குப் பொறுப்பான அமைச்சர் தலைமையில் நிபுணர்கள் கொண்டாடினர். க்னடா இந்த செயற்கைக்கோளை ‘ வானில் ஒரு காவல்காரன்’ என வருணித்துள்ளது.இந்திய ராக்கெட் இதைச் செலுத்தியது என்றாலும் கனடிய நிபுணர்களே இதிலிருந்து கிடைக்கும் தகவல்களைப் பெற்று வருவர்.

இந்த செயற்கைக்கோளை செலுத்தியதன் மூலம் பூமியை நோக்கி வரும் விண்கற்களைக் கண்டுபிடிப்பதில் இந்தியாவுக்கும் பங்கு உள்ளதாகக் கூறலாம்.
 
Thanks: Ariviyalpuram