Saturday, April 28, 2012

எங்கோ இடிக்கிறதே சம்ஸித்?






Kinniya net  www.kinniya   இணையத்தளத்தில் முஸ்லிம் கிராமிய உளவியலும் நம்பிக்கையும்" என்றொரு தொடரை எழுதிவருகின்றார்  சம்ஸித் மூமின் எனும் ஒரு நண்பர்  .


அவரது தொடரை வாசித்தபோது, அது தொடர்பாக ஒரு கருத்துரையைச்
சொல்லத்தோன்றியது. அவ்வாறே செய்த பின்பு, ஏனோ அதை உங்களோடு பகிர்ந்து கொள்ளத் தோன்றியது.

அதன் விளைவுதான் இது:








அன்பர் சம்ஸித்,

உங்கள் ஆய்வு சுவாரசியமாகத்தான் இருக்கின்றது. ஆனால் நம்பத்தகுந்த மாதிரி உள்ளதா என்று கேட்டால்தான் எங்கோ இடிக்கின்றது?



அதாவது மதநம்பிக்கைகள் கிராமிய மக்களை சமூகக் கட்டுக்கோப்புகளை மீறாமல் ஒழுக்கமாக வாழ்வதற்கு உதவுகின்றது என்பதுதானே உங்களது பத்தியின் சாராம்சம்?


உலகில் தோன்றிய அத்தனை மதங்களும் அவற்றின் கட்டுப்பாடுகளும் மனிதனை நல்வழிப்படுத்துவதற்காகத்தான் உருவாகின. ஆனால் காலத்துக்குக் காலம் கண்டுபிடிக்கப்பட்ட தொழில் கருவிகளின் வருகையுடன் மனித வாழ்க்கை முறைமையும் மாறிக்கொண்டே செல்வதால் தவிர்க்க முடியாமல் மதங்களின் கட்டுப்பாட்டு எல்லைகளையும் விரிவுபடுத்த வேண்டிய தேவை ஏற்பட்டு விடுகின்றது. இதனால்தான் காலத்துக்குக் காலம் வேறுவேறு மதங்களும் அல்லது ஒரு மதத்திற்குள்ளேயே பல பிரிவுகளும் ஏற்பட்டு வந்திருக்கின்றன.


அங்ஙனம் ஒவ்வொரு காலகட்டத்திலும் தோன்றுகின்ற மதங்களும் அந்தந்த காலகட்டத்திற்குரிய அம்சங்களைத்தான் தங்களது கடவுளர்களிலும் கட்டுப்பாட்டு நெறிமுறைகளிலும் பிரதிபலிக்கின்றன.



உ-ம்: இந்துக் கடவுள்களில் ஒன்றான காளிமாதாவின்  கரங்களில் இருப்பவை உலோகங்களாலான ஆயுதங்கள் ஆகும். ஏனெனில் இந்துமதம் வளர்ச்சிபெற்ற காலம் மனிதன் கற்களாலான கருவிகளைப் பயன்படுத்திய காலகட்டத்திலிருந்து உலோக ஆயுதங்களை பயன்படுத்திக் கொண்டிருந்த காலத்திலாகும்.



ஒரு பேச்சுக்காக, இதே காளிமாதா இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றியிருந்தால் அவளது கரங்களிலே இருப்பவை AK 47 ,T 56 துப்பாக்கிகளாகவும்தானே இருந்திருக்கும்? க்ரனைட் முதல் ரொக்கட் லோஞ்சர்கள் வரை கூட இருந்திருக்கும்.







இன்றைய இருபத்தியோராம் நூற்றாண்டிலே ஒரு மதம் தோன்றினால் அதிலே பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போன டைனோஸர்களின் அழிவு பற்றியும்  கணணி வைரஸ் பற்றியும் குறிப்புகள் நிச்சயமாக இருக்கவே செய்யும். ஏன் MP3, இன்டர்நெற், டொங்கல், ஐபேட் நனோ டெக்னோலொஜி பற்றியெல்லாம் கூட சொல்லப்படும்.


மதங்கள் எனும் கருத்தியல் சார்ந்த நம்பிக்கைகளால் கிராமிய மக்கள் ஓரளவு தங்கள் ஒழுக்க விழுமியங்களைப் பேணி வந்தாலும் இன்றைய முதலாளித்துவ பல்தேசியக் கம்பனிகளின் அசுர வளர்ச்சி உலகையே சிறு கிராமமாக்கி பண்டங்களையும் சேவைகளையும் மட்டுமன்றி ஒருகாலத்தில் புனிதமாகவும் தூய்மையானதாகவும் மக்களால் போற்றப்பட்டு வந்த அத்தனை அம்சங்களையும் காசுகொடுத்து வாங்குமளவுக்கு மலினமாக்கிக் கொண்டிருக்கின்றது.



இதனால் மதநம்பிக்கைகளால் பிணைக்கப்பட்டிருந்த சமூகங்கள் இன்று வெறும் பண்டங்களை நுகர்வதிலே போட்டிபோடும் சிறுசிறு குழுக்களாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதுதான் இன்றைய யதார்த்தம்.
இந்தப் பொருளாதாரச் சுனாமி அலைகளுக்குள் மரணம் நீங்கலாக உண்மை, நேர்மை, மதபக்தி, குருபக்தி, ஆண்-பெண் உறவு, நட்பு, பெண்மை, தாய்மை, பாசம் உட்பட அள்ளுண்டு போகாத எதுவுமே இல்லை எனலாம்.




யதார்த்தம் இப்படியிருக்கையிலே நீங்கள் இப்படியொரு பத்தியை எழுதிக் கொண்டிருப்பதை நினைத்து அனுதாபப்படுகின்றேன். நான் கூறுவது கசப்பாக இருந்தாலும் உண்மையான நிலைமை இதுதான் நண்பரே.



இதிலே... கிராமமென்ன நகரமென்ன?


எனது கருத்து பற்றி உங்கள் விமர்சனத்தையும் சொல்லுங்கள் நண்பரே / பார்வையிடும் நண்பர்களே!


- Jesslya Jessly

மரத்துப்போனதா உங்கள் மனச்சாட்சி?





பாரதத்தில் நிகழும் பாரபட்சம்!








முஸ்லீம்கள் என்றாலே பயங்கரவாதிகள், சந்தேகத்துடன் பார்க்கப்பட வேண்டியவர்கள், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்  இதுதான் இன்று இந்தியாவில் மக்களின் பொதுப்புத்தியில் முஸ்லீம்கள் மீதான அபிப்பிராயமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எங்கே எப்போது குண்டு வெடித்தாலும் முதலில் கைது செய்யப்படுவது அப்பகுதியில் வாழும் இஸ்லாமியர்கள்தான். எல்லா குண்டுவெடிப்புகளுக்கும் காரணம் முஸ்லிம் தீவிரவாதிகள்தான் என ஆளும் வர்க்கமும்  ஊடகங்களும் உடனே தீர்ப்பெழுதிவிடுகின்றன.

ஆனால் உண்மையில் குண்டு வெடிப்புகளில் கைது செய்யப்படுபவர்களில் பலர் அப்பாவி இஸ்லாமியர்கள். பல ஆண்டுகளைச் சிறைச்சாலையில் கழித்த பின்னர் வழக்கிற்கும் இவர்களுக்கும் சம்பந்தமில்லை எனக் கூறி இவர்களில் பலர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். முஸ்லீம் என்ற ஒரே காரணத்திற்காக செய்யாத குற்றத்திற்குத் தங்களது வாழ்நாளை இழந்தவர்கள் கோவை முதல் தில்லி வரை இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரது துயரக் கதைதான் இது.

முகமது அமீர்; 18 வயதில் நாட்டை அச்சுறுத்திய மிகப்பெரிய தீவிரவாதி எனக் கைது செய்யப்பட்டு 14 ஆண்டுகளைத் தனிமைச் சிறையில், இருட்டில் கழித்த இவர், கடந்த ஜனவரி மாதம் அப்பாவி என விடுவிக்கப்பட்டுள்ளார்.
 







1996 டிசம்பர் முதல் 1997 அக்டோபர் வரை பத்து மாத காலத்தில், தில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட சிறிய குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. இதில் 5 பேர் கொல்லப்பட்டனர். இவற்றில் 5 குண்டுகள் ஓடும் பேருந்துகளில் வெடித்தன. 1997ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மட்டும் 10 குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன; இவற்றில் 5 ஒரே நாளில் வெடித்தன. அதுவும் வெவ்வேறு இடங்களில். ஒரே நேரத்தில் தில்லியின் சதார் பஜார் பகுதியிலும்,  காசியாபாத் பகுதியிலும் குண்டுகள் வெடித்தன. இதுபோல அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்புகள் ஒரே நேரத்தில் நடந்தன. காசியாபாத்தில் நடந்த குண்டுவெடிப்பு ஓடும் ரயிலில், அதுவும் வெவ்வேறு பெட்டிகளில் நடந்தது.

ஓராண்டு வரை தொடர்ச்சியாக நடந்த இந்தக் குண்டுவெடிப்புகளில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாமல் தில்லி போலீசார் திணறினர். இந்தச் சூழலில் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்த பகுதியிலிருந்த அமீர் ஒரு முறை பாகிஸ்தான் சென்று திரும்பியது போலீசின் கண்களை உறுத்தியது. உண்மையில் பாகிஸ்தானில் மணம் முடித்துள்ள தனது சகோதரி வீட்டுக்குத்தான் அமீர் சென்று வந்தார். அதுவும், மேற்கூறிய குண்டு வெடிப்புகள் எல்லாம் முடிந்த பின்னர் 1997ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில்தான் அவர் அங்கே சென்றார். ஆனால் அமீர், பாகிஸ்தான் சென்று குண்டு வைக்கப் பயிற்சி எடுத்து வந்து  இந்தியாவில் குண்டுவைப்புகளில் ஈடுபட்டதாகக் கூறி அவரைப் போலீசார் கைது செய்தனர்.

1998ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அமீர் கைது செய்யப்பட்டார். அவர்மீது கொலை, பயங்கரவாதம், அரசுக்கு எதிராகப் போரிட்டது ஆகிய பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 20 குண்டுவெடிப்பு வழக்குகளில் அமீர் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். இந்த குண்டு வெடிப்புகள் அனைத்தையும் அமீர், அவரது கூட்டாளி சகீலுடன் இணைந்து நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் 10 வழக்குகளில், விசாரணை துவங்கும் முன்னரே சகீல் விடுவிக்கப்பட்டார். அதுமட்டுமன்றி, 2009ஆம் ஆண்டு தாஸ்னா சிறைச்சாலையில் சகீல் பிணமாகத் தொங்கினார்.  அந்தச் சிறைச்சாலையின் கண்காணிப்பாளர் வி.கே.சிங் மீது சகீலைக் கொலை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அமீரின் வழக்கறிஞரான என்.டி.பன்சோலி கடந்த 35 ஆண்டுகளாகக் குற்றவியல் வழக்கறிஞராக உள்ளார். இது போன்றதொரு வழக்கைத் தனது அனுபவத்தில் பார்த்ததே இல்லை எனக் கூறும் அவர், ஒரு 18 வயது சிறுவன் தனியாகத் திட்டமிட்டு 20 குண்டு வெடிப்புகளை நிகழ்த்தியதாக, எவ்வித ஆதாரமும் இன்றி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்.

நீண்ட நெடிய சட்டப்போராட்டத்திற்குப் பின், இறுதியாக அமீர் சிறைச்சாலையை விட்டு வெளியே வந்துள்ளார். அவர் மீது போடப்பட்ட 20 வழக்குகளில் 18லிருந்து அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இவற்றில் 17 வழக்குகளில் அவருக்கு எதிராக ஒரு சாட்சியைக் கூட அரசால் காட்ட முடியவில்லை. எஞ்சியுள்ள இரு வழக்குகளிலும் இதே நிலைதான்.

இத்தனை ஆண்டுகளையும் அவர் தனிமையில், இருட்டுச் சிறையில் கழித்துள்ளார். சிறைக்கொட்டடியே அவரது உலகமாக இருந்தது. ஆனால் சிறைச்சாலைக்கு வெளியிலிருந்த உலகம் 14 ஆண்டுகளில் வெகுவாக மாறிப் போயிருந்தது. அவர் பிறந்து வளர்ந்த தில்லி மாநகரம் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருந்தது. அமீரின் தந்தை நோய்வாய்ப்பட்டு இறந்தது கூட அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. அவரது தாய் மூளைக் கோளாறால் பக்கவாதத்தில் பாதிக்கப்பட்டு, ஊமையாகியிருந்தார். இதுவும் சிறையிலிருந்த அமீருக்குத் தெரிந்திருக்கவில்லை.

அமீரின் மீது போடப்பட்ட 20 வழக்குகளில் எதிலாவது அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டிருந்தால் கூட, அவருக்கு வெறும் 10 ஆண்டுகள்தான் தண்டனை கிடைத்திருக்கும். ஆனால் அவர் எல்லா வழக்கிலும் நிரபராதி என விடுவிக்கப்பட்டாலும் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்துள்ளார்.

அமீரைப் போன்றே இன்னும் எத்தனையோ அப்பாவி முஸ்லீம்கள் போலீசால் குற்றவாளிகளாகச் சித்தரிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கோவை குண்டுவெடிப்பு வழக்கி பல அப்பாவிகள் பல ஆண்டுகளைச் சிறையில் கழித்த பின்னர் நிரபராதிகள் என விடுவிக்கப்பட்டுள்ளனர். 10 ஆண்டுகால சிறைவாசத்தில் வெளியே எல்லாம் மாறிவிட, விடுதலையாகி வந்த பின்னர் அவர்களது வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிட்டது.
 









அமீர் மீதான 20 வழக்குகளும் சிறிய அளவிலான வெடிகுண்டு தாக்குதல்கள் தான். இது போன்ற சிறிய குண்டுகளை ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவா கும்பல் பல இடங்களில் வைத்துள்ளது என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மாலேகான், அஜ்மீர், நாந்தேடு, தானே, கோவா, ஹைதராபாத், கான்பூர், பானிபட், சம்ஜௌதா எக்ஸ்பிரஸ்   என இந்து மதவெறியர்களின் தாக்குதல்கள் நீண்டு கொண்டே செல்கின்றன. ஆனால் எல்லா இடங்களிலும் முதலில் கைது செய்யப்பட்டவர்கள் முஸ்லீம்கள்தான். ஹைதராபாத் மற்றும் உ.பி.யில் நடந்த பல சம்பவங்களில் இஸ்லாமிய சமூகத்தில் முன்னணியில் நின்று போராடுபவர்களைக் குறிவைத்துப் போலீசார் கைது செய்தனர். அவர்கள் நிரபராதிகள் என்ற போதும் வழக்கிலிருந்து வெளிவர, குறைந்தது 10 ஆண்டுகளாவது ஆகும் என்பதால் இதை வைத்து அவர்களை முடக்கிவிட அரசு முயற்சிக்கிறது.

வழக்குகளில் குற்றமற்றவராக விடுதலை செய்யப்படுபவர் அனுபவித்த சிறைத் தண்டனை குறித்து யாரும் கவலைப்படுவதில்லை; அதற்கு யாரும் பொறுப்பாக்கப்படுவதில்லை. இதனால் அப்பாவி முஸ்லீம்களை அச்சுறுத்த குண்டு வெடிப்புகளை ஆளும் வர்க்கம் பயன்படுத்திக் கொள்கிறது. இவையெல்லாம் இந்திய அரசும் ஆளும் வர்க்கமும் முஸ்லீம்களை இரண்டாந்தரக் குடிகளாகப் பார்ப்பதையே நிரூபித்துக் காட்டுகின்றன.


(நன்றி:புதிய ஜனநாயகம், மார்ச் – 2012)

- Jesslya Jessly


Friday, April 27, 2012

தண்ணீரில் மீனழுதால்...







தக்கைகள் அறிவதில்லை

நீரின் அடியாழம்! 











னது நண்பர் ஒருவரைச் சந்திக்கச் சென்றிருந்தபோது, தமிழகத்திலிருந்து வெளிவரும் நவீன விருட்சம் எனும் இலக்கியச் சிற்றேடு ஒன்றின் பழைய பிரதி ஒன்றை வாசிக்கத் தந்தார். அவ்வப்போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் அதைப்புரட்டிப் பார்த்துக் கொள்வதுண்டு. அதிலே சிறந்த பல மரபுக்கவிதைகளும் புதுக்கவிதைகளும் இருக்கின்றன. அவற்றிலே ஒரு கவிதை...


வடகரை வேலன் எழுதியிருக்கும் கவிதை..இது!


அலுவலக ஊழியர் ஒருவரின் தனிமையின் வேதனையைக் கூறும் இந்தக் கவிதையிலே இலக்கியத் தரமான வார்த்தைகளோ கவித்துவமான படிமங்களோ கிடையாது.

தனித்தனியே பார்த்தால் எதுவித நேர்த்தியுமில்லாத அங்கங்களையுடைய சில பெண்களிடத்தில் அல்லது ஆண்களிடத்தில் மொத்தமான தோற்றத்திலே பேரழகை மிஞ்சும் ஏதோ ஒரு கவர்ச்சி இருக்குமே அதுபோலத்தான் இந்த  கவிதையையும் முழுமையாகப் படித்து முடிக்கையில் ஏற்படும் உணர்வுத் தாக்கம்தான் இந்தக் கவிதையின் ஜீவன்.

வெகுசாதாரணமாக ஆரம்பித்து மெல்ல சுதியேறி... 'தக்கைகள் அறிவதில்லை நீரின் அடியாழம்' என்று முடிவுக்கு வரும்போது மனதை ஏதோ பிசைவதை என்போல் நீங்களும் நிச்சயம் உணர்வீர்கள்.


-'Mutur' Mohd.Rafi


கவிதை:


ஒன்பதுமணி அலுவலகத்திற்கு...!












9.10,9.15, ஏன் 10.30க்குக் கூட
வருகிறீர்கள்.
நான் 8.00 மணிக்கே வருகின்றேன்
அறைத்தனிமையின்
அவலம் நீங்க.

வெண்டைக்காய் புளியங்குழம்பு
கத்தரிக்காய் காரக்குழம்பு
முள்ளங்கிச்சாம்பார் முட்டைப்பொரியல்
முள்ளில்லாமீனும்
தென்படும் சிலபொழுது..
உங்கள் மதியஉணவில்

எனக்கு மாதவன் நாயரின்
உப்பு,சப்பு,
உறைப்புமற்ற..
மற்றநாளைப் போலவே
சவசவ சப்பாடு

மாலையில் திரும்பியடைய
அவரவருக்கென்றொரு கூடு
தார்சுவேய்ந்தோ அல்லது
ஓடுவேய்ந்தோ குறைந்தபட்சம்
கூரைவேய்ந்தேனும்

எனக்கிருப்பது ஒரு பொந்து
ஏன்போகவேண்டும் அங்கு
எனவெழும் கேள்வியோடு...

உங்கள் இணைகளோடு
கூடிமுயங்கிப்பெற்ற
வேர்வைத்துளிகள் வடிய
விரியத்திறக்கிறீர்
உங்கள் சாளரங்களை...

என்றேனும் நினைத்ததுண்டா
விளக்கணைத்ததும் கவிழும்
இருட்டைப்போல-
என்போல்வர் விரகத்தாபமும்
ஏக்கப்பெருமூச்சுகளும்
செறிந்தது அக்காற்றென...

தக்கைகள் அறிவதில்லை
நீரின் அடியாழம்  ஒருபோதும்!





-வடகரை வேலன்

(நன்றி:  நவீன விருட்சம் மார்ச் 2009)




Thursday, April 26, 2012

'எதிர்நீச்சல்' வழங்கும் எதிர்வுகூறல்!









டந்த வருடம் மூதூரிலே 'எதிர் நீச்சல்' எனும் தலைப்பிலே ஒரு கவிதைத்தொகுதி வெளியிடப்பட்டது. அதிலே மறைந்த கவிஞர் வீ.எம் நஜிமுத்தீன் எழுபதுகளில் ஆரம்பித்து மண்ணைவிட்டு மறையும் வரை அவ்வப்போது சமகால பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் எழுதிய மரபுக் கவிதைகள் இடம்பெற்றுள்ளன.


அவற்றிலே நான் ரசித்த கவிதை ஒன்றை தருகின்றேன்.


இன்றைய அவசரயுகத்திலே கல்வி, சுகாதார வசதிகள் போன்ற பல தேவைகளுக்காக சிந்தித்து முடிவெடுப்பதற்குக் கூட அவகாசமின்றி அடித்துப்பிடித்து ஓடிக்கொண்டிருக்கின்றோம் நாம்.


நமக்குப் பொருத்தமானது என்பதையெல்லாம் யோசிக்கப் பொறுமையின்றி  மற்றவரைப் பார்த்துத் தேர்ந்தெடுப்பதுதான் ஏறக்குறைய வசதியானதாக மாறி விட்ட இன்றைய குருட்டுச் சுயநலவாழ்க்கை முறை ; அதனால் பல்கிப்பெருகும் அறியாமை; விரோதம்;


இவற்றையெல்லாம் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி  ஏமாற்றி காசுபார்க்கும்    (இன்றைய முதலாளித்துவ பல்தேசியக் கம்பனி முகவர்களின்) சுரண்டலை அன்றே உணர்ந்தது போல இக்கவிதை சொல்லப்பட்டிருக்கின்றது.


இது கவிஞரது தீர்க்கதரிசனமோ அல்லது தற்செயலோ தெரியவில்லை. ஆனாலும் படிக்கும்போது வியப்பை ஏற்படுத்துவது மட்டும் உண்மை.


1986.12.28 அன்று சிந்தாமணி பத்திரிகையில் பிரசுரமான அந்தக் கவிதையை  பாருங்கள் இனி...


 -'Mutur' Mohd. Rafi



கவிதை:



வேறு என்ன செய்வார்கள்?







ம்பியின் வருத்தம் போக்குவதற்குத்
        தரணியின் வைத்தியர் அனைவரையும்
கும்பிட்டு உடனே கூட்டிவந்து
        கொட்டி நின்றேன் பணத்தையெல்லாம்




பேய்க்கு மந்திரம் உரைப்பவர்கள்
              பெருமிதமாகச் சொன்னார்கள்
வயிரவன் வேம்பு மரத்தடியில்
              வைத்துப் பார்வை கொண்டதென்று





சூனியம் பார்ப்பதிலே பேர் பெற்றோர்
                         சுதந்திரமாகச் சொன்னார்கள்
மனிதன் எவனோ செய்கையொன்றைச்
                          செய்து மறைத்துள் ளானெவே





வாதநோய்க்கு மருந்து செய்து
                  வாழ்ந்து வரும் ஒருபரிகாரி
இதுவே அனல்வாதம் என்று
                எடுத்த எடுப்பில் சொல்லி விட்டான்





ஆங்கில வைத்தியம் பார்க்கின்ற
               அனைத்துப்பேரும் சன்னியென்று
இங்கிதமாகச் சொல்லிவிட்டு
               ஏதேதோ மருந்து கொடுத்தார்கள்





தாங்கள் முயன்று படித்ததை
              தம்பியின் வருத்தம் என்கின்றார்
வாங்கி உண்ணும் தொழிலால்
              வாழ்பவர் என்ன செய்வார்கள்?





- வீ.எம். நஜிமுத்தீன்


Thanks: MMK Foundation,  Mutur

Wednesday, April 25, 2012

கவிதை :






தாவரத் தலைக்கனம்









கார்காலக் காற்றிலே
கருவுற்றுக் காத்திருக்கும்
நிறைமாதக் குளிர்மேகங்கள்
மழையைப் பிரசவிப்பதா வேண்டாமாவென
யோசனையில் ஆழ்ந்திருந்த
ஒர் ஜுலைமாதத்தின் காலைப்பொழுதில்
அந்தப் -
புகழ்பெற்ற பூங்காவுக்கு நீ
முதன்முதலாய் வந்திருந்தாய்!



அதுவரையில்
ஆடம்பர மலர்களைச் சுமந்திருந்த
அகங்காரப் பூமரங்களெல்லாம்
தங்கள்-
புன்னகையைத்
தொலைத்துவிட்டு
பொறாமையைப் பூசிக்கொண்டன!



கண்ணாடிக் காட்சியறைக்குள்
காக்கிச்சட்டைக் காவலோடு
கர்வமாய் வீற்றிருந்த
ஒயிலான -
ஓர்க்கிட் மலர்களெல்லாம்
உன் வதனம்பார்த்ததுமே
ஒருதடவை தமது
ஒப்பனையைச் சரிபார்த்துக் கொண்டன!



சேற்றுக்குளங்களுக்குள்
குளித்துச் சிலிர்த்த நீராம்பல் மலர்களெல்லாம்
உன்னிரு இதழ்களின்
'இளமை ரகசியம்' அறிந்திட
உன் துணைக்குவந்த
என்னையல்லவா துளைத்தெடுத்தன!



சிறுமொட்டு மழலையர்க்கு
செந்நிறம் யாசித்து
உனது இதழ்களிடம்
தவமிருந்த ரோஜாச்செடிகள்
உன் நிர்மலப்பாதங்களிலேயே
நிறவரத்தை நிறைவாகப் பெற்றதனால்
போதையுற்று மெய்மறக்க...



ஓ! அன்பே
அந்தத் தாவரவியல் பூங்காவின்
தலைக்கனமே
அன்றுதான் தவிடுபொடியானது!


-மூதூர் மொகமட் ராபி

Tuesday, April 24, 2012

சோனகமொழி :









மது நாட்டில் முஸ்லீம் மக்களை பொதுவாக சோனகர் என்று அழைக்கும் வழக்கம் இன்றும் கூட இருந்து வருகின்றது. இவ்வாறு அழைக்கப்படுவதை முஸ்லீம்கள் அநேகமாக விரும்புவது கிடையாது. எனினும் அவ்வாறு வழங்கப்படுவதற்கு  நிச்சயமாக வரலாற்றுக் காரணங்கள் உள்ளது. இது தொடர்பாக வெகு அண்மைக்காலம் வரையில் குறிப்பிடத்தக்க அளவில் ஆய்வுகள் செய்யப்படவில்லை  என்பது துரதிஷ்டமானதே. இன்றுள்ள இளைய தலைமுறையினர் பலருக்கு தம்மை ஏனைய இனத்தவர்கள் சோனகர் என்று விளிப்பது கூடத் தெரிந்திருக்குமா என்பது சந்தேகம்தான்.

இவ்வாறான நிலையில் இலங்கையில் சோனகர்கள் பற்றியும் அவர்களால் நாடு தழுவியளவிலே தாய்மொழியாகப் பேசப்பட்டுவரும் மொழி பற்றியும் புதிய கோணத்தில் ஆராயத் துணிந்தவர் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்திலுள்ள மூதூர் பட்டினத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட நண்பர் திரு. அ.வா. முஹ்ஸீன்.

அதாவது இதுவரையில் நாம் அனைவரும் அறிந்துள்ளபடி இலங்கையிலுள்ள முஸ்லீம்களால் பேசப்பட்டு வரும் மொழி உண்மையிலே தமிழ் மொழி அல்ல; அது சோனகர்களுக்கே உரித்தான சோனக மொழியாகும் என்பதுதான் அவரது வாதம். தனது வாதத்துக்குரிய பல ஆதாரங்களை முன்வைத்திருக்கும் திரு. அ.வா. முஹ்ஸீன் தான் ஒரு முறையான துறைசார் ஆற்றல்வாய்ந்த வரலாற்றாய்வாளர் அல்லவெனவும்  தனது ஆய்வு எவ்வளவு தூரம் சரியானதும் உண்மையானதும் என்பதை  தனது முன்வைப்பைத் தொடர்ந்து நிகழப்போகும் வரலாற்று ஆய்வுகள்தான் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தனது நூலின் முன்னுரையில் குறிப்பிட்டிருந்தார். சோனகர்கள் தொடர்பாகவும் சோனக மொழி தொடர்பாகவும் ஓரிரு நூல்களை எழுதி வெளியிட்டு வரும் அவர் தொடர்ந்தும் பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார் எனத் தெரியவருகின்றது.

எது எவ்வாறிருப்பினும் இலங்கைத் தீவு முழுவதும் வாழும் முஸ்லீம்கள் இன்றுவரை தமது தாய்மொழியாக தமிழர்கள் பேசும் தமிழ்மொழியைப் பெரிதும் ஒத்த ஆனால் தமக்கேயுரித்தான மத கலாசார அடையாளங்களுடனான சொற்பிரயோகங்களைக் கொண்ட மொழியைத்தான் பேசிவருகின்றார்கள் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை. இந்த மொழி தமிழ் மொழியின் வேறுபட்ட பிரதேச வழக்கா அல்லது அ.வா. முஹ்ஸீன் குறிப்பிடுவது போல தனியான ஒரு மொழியா என்பதை அவரே கூறுவது போல எதிர்காலத்துக்கு விட்டு விடுவோம்.


இப்போது திரு. அ.வா. முஹ்ஸீன் "சோனக மொழி" யிலே எழுதிய 'இங்கினயும் ஒரு மஹ்ஷர்' என்ற தொகுப்பிலிருந்து சிறுகதை ஒன்றைத் தருகின்றோம். அதற்கு முன்பு திரு அ.வா. முஹ்ஸீன் பற்றிய சிறு அறிமுகம்....


ஓர் ஆங்கில ஆசிரியராக பணியாற்றிவரும் திரு அ.வா. முஹ்ஸீன் அரசியல், மொழியியல் மற்றும் இலக்கியம் ஆகிய துறையில் குறிப்பிடத்தக்க ஆற்றலும் ஈடுபாடும் கொண்ட ஓர் மனிதநேயமிக்க படைப்பாளியுமாவார்.
 
 


ஆரம்ப காலங்களிலே மார்க்ஸிய லெனினிய அரசியல் பொருள்முதல்வாத சித்தாந்தங்களிலே வலுவான நம்பிக்கையும் தீவிரமான ஈடுபாடும்  கொண்டிருந்து நாட்டின் முற்போக்கு சக்திகளுடன் இணைந்து இயங்கிவரான திரு. அ.வா. முஹ்ஸீன் பின்பு படிப்படியாக கருத்துமுதல்வாத சிந்தனைகளிலே ஆர்வம் கொண்டுள்ளதையும் காணமுடிகின்றது.


தற்போது எல்லாம் வல்ல அல்லாஹ் சுபஹானஹுதாலாவின் கிருபையால் புனித இஸ்லாமியமத சிந்தனைகளின்பால் தன்னை ஆட்படுத்திக் கொண்டவராக மாறி, முஸ்லீம்கள் தொடர்பான அரசியல் இலக்கிய நிகழ்வுகளிலே ஆர்வமுடன் கலந்து கொண்டு வருகின்றார், இந்த முன்னாள் மார்க்ஸியவாதி.

- Jesslya Jessly





 சிறுகதை:

கொலிசங்கன்னா










கொலிசத்துக்கு பன்னெண்டு வயசி இரிக்கக்குள்ளெதா அவ மொதெமொதெலா அவடெ உம்மாவொடெ புள்ளெபேறு பாக்கெ போனா. அப்பெ அவ பெரியாளா பீத்து ஒள்ளுப்ப நாள்தா பீத்திரிந்திச்சி. கொலிசத்திடெ உம்மாக்கு அப்பெ ஒடெம்பு நல்லா இல்லாமெ பீத்திது. அதாலெ இம்புட்டு காலமா தான் பாத்து வந்தெ மருத்துவிச்சி தொழிலெ தன்டெ மவளுக்கு சொல்லிக் குடுக்கெ அவ முடிவு செஞ்சா.

கொலிசத்திரெ மொதெலாவது அனுபவம் சரியானெ அரிகண்டமா இரிந்திச்சி. எரெத்தெமு நாத்தமு கத்துவச் சத்தமு சேந்து கொலிசத்துக்கு சத்தி வந்திட்டு. கொள்ளப்பக்கமா பீத்து சத்தி எடுத்துப்புட்டு வந்தா. பொறவு போவெப்போவெ எல்லாம் பழகிப் பீத்திது. கொலிசத்துக்கு பதினாலு வயசிலெ கலியாணம் நடந்திச்சி. அடுக்கடுக்கா அவெக்கு அஞ்சி புள்ளயொளு பொறெந்திச்சி. எல்லா புள்ளெயளுக்கும் அவெடெ உம்மாதான் மருத்துவம் பாத்தா. சரியா அவெக்கு இருவெத்திரெண்டு வயசி வரெக்குள்ளெ அவெடெ உம்மாவாலெ புள்ளெப்பேறு பாக்கேலாமெ பீத்திது. அதுக்கு பொறவு கொலிசந்தா இந்தெ வேலெயெ பொறுப்பெடுத்தா.

பம்முஸ் மூட்டத்துக்குள்ளெ கொலிசத்துக்கு இருவெத்தஞ்சி வயசி. ஜப்பாங்காரெ போட்டெ குண்டுலெ வெள்ளெக்;காரனெல்லா பயந்து பீத்தா. ஆக்களெல்லா ஓடிப்பீத்து கோட்டெயாத்து பள்ளிக்கொடத்துக்குள்ளெ இரிந்தாகெ. அப்பெ அந்த பள்ளிக்கொடத்தொடெ ஒட்டுனாப்பலதா ஆசுபத்திரி இரிந்திச்சி. அதிலெ இரிந்தெ மருத்துவிச்சியெல்லா பயத்திலெ ஓடிப் பீத்தாளொலு. அந்தெ நேரெத்திலெ கொலிசந்;தா அங்கெ இரிந்தெ வெள்ளெக்காரெ டாக்குத்தருக்கு ஒதெவியா இரிந்தா. அந்தெ மூட்டத்திலெ நாலு பேருக்கு புள்ளெ பொறெந்திச்சி. கொலிசந்தா அவங்களுக்கெல்லா மருத்துவம் பாத்தா. அவ வேலெ செஞ்செ மொறெயெப் பாத்து அந்தெ வெள்ளெக்காரெ டாக்குத்தர் அவவெ அதுக்குப் பொறவு அந்த ஆசுபத்திரிலேயே வேலெ பாக்கும்படி கேட்டாரு. ஆனா கொலிசம் அதுக்கு ஒத்துக்கேலெ.


'ஐயா எனெக்கி இப்பிடியெல்லா ஒரு எடெத்திலெ அடெஞ்சி கெடெந்து வேலெ செய்யெ புறியமில்லெ.' என்டு சொல்லிப்புட்டு அவ ஊட்டுக்கு வந்துட்டா.

புள்ளெப்பேறு பாத்தத்தாலெ கொலிசத்துக்கு பெரிய வருமானம் எதுவுங் கெடெக்கேலெ. மொதெல்;லெ ஒரு ரெண்டு மூனு ரூவா காசும் பொறவு வெள்ளாமெ வெட்டு நேரெத்திலெ ஒள்ளுப்பங்கானு நெல்லுங் குடுப்பாகெ. வெள்ளாமெச் செய்யாதெ ஊட்டுலெ அதுவுமில்லெ. என்டாலு கொலிசம் ஒருநாளு காசெயோ இல்லாட்டிக்கி நெல்லெயோ எதிர்பாத்து அந்தெ வேலெயெ செய்யேலெ. அவக்கு அது ஒரு கட்டாயக் கடமெயாவே பேய்த்துது. எங்கெடெ ஊரிலெ இரிக்கிற கனக்கப் பேர் அவ புள்ளப்பேறு பாத்து பொறெந்தாக்கள்தா.

ஆறுங் கடலுந்தா கொலிசத்துக்கு சாப்பாடு கெடெக்கெ ஒதெவி செஞ்சிது. பால்தொறெயிலயு கடக்கரெயிலயு புடிக்கிற மீனும் எடுக்கிறெ மட்டியுந்தான் அவடெ வாழ்க்கெயெ கொண்டு போவெ ஒதெவி செஞ்சிச்சி. மீன் புடிக்கிறத்துக்கு அவக்கு வலெயோ இல்லாட்டிக்கி தூண்டலோ தேவெப்படாது. தன்டெ முந்திச்சீலெயாலெயே மீனெயெல்லா வடிச்சி புடிச்சிப்புடுவா. அந்தமாரித்தா மட்டி எடுக்கக்குள்ளெயு. அவ ஒரு நாளுங் கத்திக்கம்பெல்லா கொண்டு போறெதில்லெ. கால் பெருவிரலாலயோ இல்லாட்டிக்கி உள்ளங்காலாலயோ தடவிப் பாத்தே மட்டியெ எடுத்துப்புடுவா.


ஒருதரக்கம் இப்பிடி மீன்புடிச்சிக்கிட்டு வரெக்குள்ளதா அந்தெச் சம்பவம் நடெந்திச்சி. புடிச்செ மீனெயெல்லா முந்திச்சீலயிலெ கட்டி எடுத்துக்கிட்டு கொலிசம் ஊட்டுக்கு வந்திக்கிட்டிரிந்தா. அப்பெ மஹ்ரிபர்ரெ நேரெமா பேய்த்திது. அவ கபுறடிக்காட்டுக்குள்ளாளெ வந்திக்கிட்டிரிந்தா. அவ ஒரு நாளுமே எதுக்கும் பயப்பிர்ரதில்லெ. பக்கீரப்பாடெ கபுறடியெ தாண்டி வந்திக்கிட்டிரிக்கக்குள்ளெ பின்னாலெ யாரோ வாறெமாரி சத்தம் கேட்டிச்சி. கொலிசம் திரும்பிப் பாத்தா. ஒரு பொம்புளெ. அந்த பொம்புளெயெ இதுக்கு முந்தி அவ ஒருநாளும் கண்டதில்லெ.

'யாரிடி நீ?'

அந்தெ பொம்புளெயெ பாத்து கொலிசம் சத்தமா கேட்டா. ஆனா அவ மறுமுழி சொல்லாமெ கொலிசத்துக்கு கிட்டெ வந்து அவவெ கட்டிப்புடிச்சா. கொலிசத்துக்கு ஒடெம்பெல்லா நடுங்கி பேய்த்திது.

'பயப்புடாதெ. நா ஜின். ஒனெக்கி ஒதெவி செய்யத்தா வந்திக்கே. இனிமெ நீ புள்ளெப்பேறு பாக்கக்குள்ளெ ஒனெக்கி நா ஒதெவியா இரிப்பே.'

சொல்லிப்புட்டு அந்தெ பொம்புளெ பேய்த்தா. அவ எங்காலெ போனா என்டு கொலிசத்துக்கு தெரியேலெ. கொலிசம் ஒரே ஓட்டமா ஊட்டெ வந்தா. அவ அதெப்பத்தி யாருக்கிட்டயு சொல்லேலெ. ஆனா அன்டு ராவு முத்துலு அவக்குச் சரியானெ காச்சல் அடிச்சிது. நெத்திரெயிலெ அவ ஒரு சாங்கமா வாய் உலாத்திக்கிட்டு இரிந்தா.


ரெண்டு மூனு நாள்லெ கொலிசம் எல்லாத்தயு மறந்திட்டா. ஒரு மாசத்துக்கு பொறவு வவுத்து மம்மறாயன் காக்காடெ பொஞ்சாரிக்கு புள்ளெப்பேறு பாக்கெ சொலிசம் பீத்திரிந்தா. அந்தெ மனுசி ஒடெம்பெல்லா வீங்கி, நல்லா பெருத்துப் பீத்திரிந்தா. கடுந்நோக்காட்டுலெ அவ கத்திக்கிட்டிரிந்தா. கொலிசம் அவடெ வவுத்தெ தடவிப் பாத்தா. புள்ளெ குறுக்காலெ கெடெந்திச்சி. பன்னீர்கொடம் ஒடெஞ்சி, ஓடிக்கிட்டிரிந்திச்சி. எப்பிடியாவது ஒடெனடியா புள்ளெயெ வெளியாலெ எடுக்கணும். எடுக்காட்டிப்போனா புள்ளெக்கும் தாய்க்கும் ஆபத்து. இப்பிடி ஒரு நெலெமெயெ கொலிசம் இப்பதா மொதெமொதெலா பாக்கிறா. என்ன செய்யிறேன்டு தெரியாமெ நிக்கெக்குள்ளெ அவெடெ கையெ யாரோ பின்னாலெ இரிந்து புடிச்சமாரி இரிந்திச்சி. திரும்பி பாத்தா. கபுறடிக்காட்டுக்குள்ளெ பாத்தெ அதே பொம்புளெ.

'நா சொல்றமாரி செய்.'

அவ சொன்னா. கொலிசம் அவ சொன்னமாரியெல்லா செஞ்சா. மொதெல்லெ வவுத்தெத் தடவி, புள்ளெயிரெ தலெப்பக்கத்தெ ஒள்ளுப்பம் ஒள்ளுப்பமா அமெத்தி அமெத்தி கீழெ கொண்டு வந்தா. பொறவு கையெ நல்லா உள்ளெ உட்டு, அந்த புள்ளெயிரெ தலெயெ புடிச்சி இழுத்து எடுத்தா. மம்மராயன் காக்காடெ பொஞ்சாதி நோக்காடு தாங்கேலாமெ கீசி கத்திக்கிட்டு மயங்கிப் பேய்த்தா. கடெசியிலெ புள்ளெயுந் தாயும் பொழெச்சிக்கிட்டாகெ.


அதுக்குப் பொறவுதா தனக்கு ஜின் வாசலாத்து வந்திரிக்கி என்டெதெ கொலிசம் ஒணந்தா. ஆனா அதெப்பத்தி அவ யாருக்கிட்டயு சொல்லேலெ. அந்த பொம்புளெ ஜின்னு அவக்கிட்டெ எப்பவு இரிக்கிறதில்லெ. எப்பவாவது கஸ்டமானெ புள்ளெப்பேறு இரிக்கக்குள்ளதா அது அவக்கிட்ட வரு.


இன்னொரு தரக்கம் ஒரு மனுசிக்கு புள்ளெப்பேறு. அது கொறெமாசப் புள்ளெ. புள்ளெ வவுத்துக்குள்ளயே மரிச்சிப் பீத்திது. அப்பவு அந்தெ ஜின்தா, அந்தெ புள்ளெயெ எப்பிடி எடுக்கிறெ என்டெதெ சொல்லிக் குடுத்துது. தாயெ மொழெங்கால்லெ குந்தியிருக்கெ வெச்சி, அவெக்கு பின்பக்கமா நின்டு, வவுத்தெ நீவி நீவி அந்தெ புள்ளெயெ வெளியெ எடுத்தா. அப்பிடியொரு புள்ளெயெ அதுக்கு முந்தியோ பிந்தியோ ஒரு நாளும் கொலிசம் காணேலெ. அதிடெ தலெ நொழுக்கு நொழுக்கென்டு இரிந்திச்சி. கண் ரெண்டும் வெளியெ பிதுங்கி தள்ளிக்கிட்டிரிந்திச்சி. மூக்கு வாயெல்லாம் சப்பட்டயா ஒட்டி பீத்திரிந்திச்சி. வவுறு பெருத்து கையுங் காலும் ஈக்குச்சிமாரி இரிந்திச்சி. அதெப் பாத்தா ஒரு மனிசப் பொறெவியாவே தெரியேலெ. சுத்துலு ஒரு வாலாந்தவெக்கட்டமாரியே அந்தெ புள்ளெ இரிந்திச்சி. அந்தெ புள்ளெயெ வேறெ யாருக்கிட்டெயு காட்டாமெ ஒடனெயே அடக்கிப்புட்டாகெ.


0 0 0 0 0



பெருவெள்ளத்துக்குள்ளெ கொலிசாத்தாக்கு நாப்பது வயசி முடிஞ்சிட்டு. கொலிசாத்தாடெ மாளெயு அந்தெ வெள்ளம் அடிச்சிக்கிட்டு பேய்த்திது. அந்தெ மாளுக்குள்ளெ ஒன்னும் பெரிசா இரிக்கேல்லதா. ரெண்டு ஓலெப்பாய், ஒரு தலெவாணி, ஒரு வெத்திலெத் தட்டம், ஒள்ளுப்பம் உடுப்பு, அதுபோகெ நாலஞ்சி சட்டி, பானெ. இம்புட்டுத்தா அவெக்கிட்டெ இரிந்தெ சொத்து. அதெ எல்லாத்தயுமே வெள்ளம் கொண்டு பேய்த்திது.


வெள்ளம் வடியெ நாலஞ்சி நாளா பேய்த்திது. அதுக்குப் பொறவு ஊருலெ வவுத்தாலயு சத்தியு வந்திட்டு. கனெக்கச் சின்னப் புள்ளெயொலு மௌத்தாப் பேய்த்திரொளு. கொலிசாத்தாடெ புருசனும் கடெசிப் பொடியனும் மௌத்தாப் பீத்தாகெ. ரெண்டு மூனு மாசத்துக்கு கூப்பன் கடெயிலெ சும்மா சாமா குடுத்தாகெ. நீட்டு நீட்டு மிச்சாட் அரிசி, கறுத்தச் சீனி, மாசி, பருப்பு என்டு கனெக்கச் சாமான் குடுத்தாகெ. ஒள்ளுப்ப நாள்லயே வாழ்க்கெ மறுவாடியு முந்தினமாரி வந்திட்டு. அதுக்கு பொறவு கொலிசாத்தா கல்யாணம் முடிக்காமாலெயே கடெசிவரெக்கும் வாழ்ந்தா.


இப்பெ ஊரிலெ பெரியெ ஆசுபத்திரி கட்டி, தனியா ஒரு புள்ளப்பேறு வாட்டும் கட்டியிருந்தாகெ. என்டாலு வேதெக்காரெ பொம்புளயளு மத்திரந்தா ஆசுபத்திரிக்கு புள்ளெப் பெறெப் போனாகெ. சோனவ பொம்புளயலு யாரும் அங்கெ போறெதில்லெ. எப்பவும்போலெ கொலிசாத்தாதா


அவெகளுக்கெல்லாம் புள்ளெப்பேறு பாத்தா.

ஒருதரக்கம் ஒட்டி நெய்னாடெ பொட்டெக்கி வவுத்து நோ வந்திட்டு என்டு கொலிசாத்தாக்கு ஆள் அனுப்பினாகெ. கடெவாயிலெ சாறு வழிஞ்சோடெ, வெத்திலெயெ சப்பிக்கிட்டு கொலிசாத்தா வந்தா. அந்தெ பொட்டெக்கி அது தலெப்புள்ளெ. பாயிலெ கெடெந்து துடிச்சிக்கிட்டு இரிந்தா.

'புருசனொடெ படுக்கக்குள்ளெ நோக்காடு தெரியேலியாம் – இப்பெ
புள்ளெப்பேறு என்டெ ஒடனே கெடெந்து துடிக்கிறவாம்.'

கொலிசாத்தா சிரிச்சிக்கிட்டு பாட்டு படிச்சா. ஆனா அந்தெ பொட்டெயிரெ வவுத்தெ தொட்டுப் பாத்தெ பொறவுதா நெலெமெ சிக்கல் என்டு அவெக்கு வெளெங்கினிச்சி. புள்ளெ குறுக்காலெ கெடெந்திச்சி. ஒட்டி நெய்னாடெ பொட்டெ சின்னாள். வயசுங் கொறெயெ. அதோடெ தலெப்புள்ளெ. கொலிசாத்தா தனெக்குத் தெரிஞ்செ எல்லா மொறெயெயு செஞ்சி பாத்தா. ஒன்னுஞ் சரி வரேலெ. தலெ திரும்பெ மாட்டேன்டுட்டுது.
கொலிசாத்தாக்கு ஒன்னும் வெளெங்கேலெ. இனிமெ என்ன செய்யிற என்டு யோசிச்சிக்கிட்டு இரிக்கக்குள்ளெ அவெக்கு பின்னாலெ அந்த ஜின் வந்து நின்டிக்கிட்டு இரிந்திச்சி.

'நா சொல்றமாரி செய்.'

அது சொன்னிச்சி. அந்தெ ஜின் சொன்னமாரியே கொலிசாத்தா செஞ்சா. கையெ உள்ளெ உட்டு முன்னுக்கு தெரிஞ்செ அந்தெ புள்ளெயிர கையெ முறிச்சா. பொறவு அந்தெ புள்ளெயெ ஒள்ளுப்பம் அசெச்சிப்புட்டு, அதுடெ காலெமுறிச்சா. அதுக்கு பொறவுதா அந்த புள்ளெயிர தலெயெ மடெக்கி, கீழெ கொண்டு வந்து, புள்ளெயெ வெட்டெயாலெ எடுக்கெ ஏண்டிச்சி. புள்ளெ மௌத்தாப் பீத்திது. ஆனா தாய் ஒரு கொறெயு இல்லாமெ தப்பிட்டா. அதுக்கு பொறவு சொத்தி நெய்னாடெ பொட்டெக்கி நாலு புள்ளெ பொறெந்திச்சி. நாலும் சொகெப் பிரசவந்தா. நாலுக்கும் கொலிசாத்தாதா மருத்துவம் பாத்தா.


0 0 0 0 0


ப்பயெல்லாம் கொலிசங்கன்னாவெ புள்ளப்பேறு பாக்கெ கனெக்க பேர் கூப்புர்ரதில்லெ. ஊரிலெ இரிக்கிற ஆசுபத்திரியெ நல்லா பெரிசா கட்டிக்காகெ. டாக்குத்தர்மாரும் நாலஞ்சி பேர் இரிக்காகெ. ஏதாவது சீரியஸ் என்டா மலெவூர்லெ இரிக்கிற பெரியாஸ்பத்திரிக்கி அனுப்பிர்ராகெ. ஆனா என்னென்டா, இப்பெ கனெக்க பேருக்கு ஒப்பரேசன் பண்ணித்தான் புள்ளெயெ எடுக்கிறாகெ. அதுக்கு பொறவு ஒப்பரேசன் பண்ணினெ பொம்புளெ இன்னொரு தரக்கந்தான் புள்ளெப் பெறேலுமா.

கொலிசங்கன்னாக்கு இப்பெ நல்லா வயசாப் பேய்த்திது. என்டாலு அவடெ ஓருமெ இன்னுங் கொறெயேலெ. இப்பவு அவ எடெக்கெடெ மீன் புடிக்க, இல்லாட்டி மட்டி எடுக்க போறாதா. முன்னமாரி இல்லாட்டியு ஒள்ளுப்பங்கானு என்டாலு அவ மீன் புடிக்கிறாதா. அவடெ புள்ளெயளும் பேரப் புள்ளெயளும் எம்புட்டுத்தா சொன்னாலு அவ கேக்கெ மாட்டா.

'சும்மா போங்க புள்ளெயளா. என்டெ ஒடெம்பிலெ தெம்பு இரிக்கி மட்டு நா ஏராவரு செஞ்சிக்கிட்டுத்தா இரிப்பே.'


வெத்திலெச் சாத்தெத் துப்பிக்கிட்டு அவ உறுதியா சொல்லிப்புட்டா.
என்டாலு காலம் முன்னமாரி இல்லெ. இப்பெ நெலெமெ மாறி பேய்த்திது. ஊருலெ அடிக்கடி பெரெச்சினெ. எல்லாம் இந்தெ புலித் தூமெயாலெ வாறெ பெரெச்சினெதா. கொலிசங்கன்னாடெ நடுவுள்ளெ மருமவனெ புலி சுட்டுக் கொன்டு பொட்டானொளு. அவெ ஒரு வாய்பேசா அப்பாவி. கொள்ளி எடுக்கயென்டு றாக்குழிப் பக்கம் போனெவந்தான். அதுக்குப் பொறவு அவெ உசிரோடெ வரவேயில்லெ. ரெண்டு நாளெக்கி பொறவுதா, மாம்புஞ்சா ஆத்துக்குப் பக்கத்திலெ ஒரு பத்தைக்குள்ளெ இரிந்து சூட்டுக் காயத்தோடெ அவன்டெ மையத்தெ எடுத்தாகெ.

அதுக்கு பொறவு கொலிசங்கன்னா ஆத்துக்கோ இல்லாட்டி கடக்கரெக்கோ மீன் புடிக்கப் போறெதில்லெ. கொளெத்தெ போறத்துக்கும் இப்பெ கண்டங்காட்டு பக்கம் அவ போறதில்லெ. அவடெ மூத்த பேரென், ஊட்டுலயெ கக்கூஸ் கட்டிக்கான். அதுக்குள்ளெ போறது மொதெல்லெ கஷ்டமாத்தா இரிந்திச்சி. ஆட்டுமாலுக்குள்ளெ காத்து படப்பட கொளத்தெபோறெ மாரி இல்லத்தா. என்டாலு இது அவக்கு இப்பெ பழகிப் பேய்த்திது.



இப்பெ ஊரிலெ ஒவ்வொரு நாளும் எதென்டாலு நடந்துக்கிட்டே இரிக்கி. ஒன்னு யாரயென்டாலு கொன்டுர்ரானொளு, இல்லாட்டி கடத்தி பேத்திர்ரானொளு. அதுவுமில்லாட்டி எங்கயென்டாலு களவெடுக்கிறானொளு. முன்னெயமாரி இப்பெ யாரு வெள்ளாமெச் செய்யிறேல்லெ. முஸ்லிமாக்கள்ரெ வயலயெல்லா தமிழனொளுதா செய்யிறானொளு. வெள்ளாமெ வெட்டுனத்துக்கு பொறவு ஒள்ளுப்பம் ஆயம் கொண்டு வந்து கொடுக்கிறானொளு. அதுவு சிலாக்கள்தா. மத்தாக்கள் ஒன்னுமே குடுக்கிறதில்லெ.


கொலிசங்கன்னாடா மூத்தெ மவளும் நடுவுள்ளெ மவளும் மூத்தெ பேரனும் வெளிநாட்டுக்குப் பேய்த்தாகெ. ஊரிலெ கனெபேர் இப்பெ வெளிநாட்டிலதா இரிக்கிறாகெ. கொலிசங்கன்னாடெ பேரன், அவடெ மாளெ இடிச்சிப்புட்டு அந்தெ எடெத்திலெ ஒரு சின்ன கல்ஊடு கட்டிக் குடுத்திக்கா. அந்தெ ஊட்டெ மட்டெயாலெ மேயாமெ, அதுக்கு சீட் போட்டுக் குடுத்திக்கா. வெளிநாட்டுக்கு பேய்த்திரிக்கிறெ ரெண்டு மவெள்ரெ ஊட்டுலயு டீபி பொட்டி இரிக்கி. அதுக்குள்ளெ என்னெ;னமோ தெரீரு. கொலிசங்கன்னாக்கு இப்பெ தூரெ இரிக்கிறெ சாமானெல்லா கண்ணுக்கு தெரீதில்லெ. என்டாலு அவ அந்தெ பொட்டிக்கு கிட்டெ பேய்த்து நின்டுக்கிட்டு, அதிலெ தெரியிறதெ செத்தெ சாமத்துக்கு பாப்பா. பொறவு வாசல் குந்திலெ இரிந்திக்கிட்டு வெத்திலெ போடத் தொவெங்கிடுவா. அவடெ பேரப் புள்ளெயளும் பக்கத்து புள்ளெயளும் ஒரே ஒரெயெ அந்த டீபி பொட்டியத்தா பாத்திக்கிட்டு இரிக்கிமொளு. அதாலெ அவ இந்தெ டீபி பொட்டிக்கு 'செய்த்தான் பொட்டி' என்டு பேரும் வெச்சிப்புட்டா.


ஒரு நாள் ராவு ஒம்பது மணி இரிக்கும். அப்பதா ரேடியோவுலெ செய்தி சொல்லெ தொவெங்கியிரிந்திச்சி. திடீரென்டு குண்டு மொளெங்கிறெ சத்தம் கேட்டிச்சி. பொறவு வெடிச்சத்தம். வெடியென்டா சும்மா கிம்மா வெடியில்லெ. காது கன்னம் வெக்கேலாதெ வெடி. ஆக்களெல்லாம் சத்தம் போட்டுக்கிட்டு அங்காலயும் இங்காலயும் ஓடினாகெ.

'புலி வந்திட்டானொளு. ஊட்டெயெல்லா எரிக்கிறானொளு.'

எங்ஙின பாத்தாலும் இந்த சத்தந்தான். எல்லாரும் பள்ளிவாசலுக்குள்ளெ ஓடிப் பேய்த்து இரிந்தாகெ. பள்ளிவாசலுக்குள்ளெ சரியானெ சனம். அம்புட்டு பேரும் அதுக்குள்ளெ நிக்கிறத்துக்கே எடெமில்லெ. சின்னெப் புள்ளெயொளெல்லாம் கீசிக் கத்தத் தொவெங்கிட்டுதொளு. ஊரெல்லாம் நெருப்பு பத்தி வெளிச்சமாவும் பொகெயாவும் இரிந்திச்சி.


அந்தெ நேரெத்திலெ பாத்து சுருட்டு முஸ்தவா காக்காடெ மகளுக்கு வவுத்து நோக்காடு வந்திட்டு. அந்தெ நெலெமெயிலெ அவவெ ஆசுபத்தரிக்கி கொண்டு போறெத்துக்கும் எந்தெ வழியுமில்லெ. சுருட்டு முஸ்தவா காக்காவும் அவர்ரெ மருமவனும் பதறிக்கிட்டு இரிந்தாகெ. புள்ளெ பொர்ரத்துக்கு இன்னும் நாலு நாள் இரிந்திச்சி. மலெயிலெ பெரியாஸ்பத்திரியிலெ ஒப்பரேசன் பண்ணித்தா புள்ளெயெ எடுக்கணுமென்டு சொல்லியிரிந்தாகெ. நாளெக்குத்தா அவவெ மலெயாஸ்பத்திரிக்கி கூட்டிக்கிட்டு போவெ இரிந்தாகெ. அதுக்குள்ளெ இப்பிடி நடந்து, இப்ப அவெக்கு வவுத்து நோவும் வந்திட்டு. அப்பதா கொலிசங்கன்னா சொன்னா.

'அடியேய். பொட்டெயெ ராசாத்தம்பிடெ ஊட்டுக்கு கூட்டிக்கிட்டு வாங்கடி'
பள்ளிவாசலுக்கு பக்கத்திலெதா ராசாத்தம்பி நானாட ஊடு. அந்த ஊட்டுக்கு முஸ்தவா காக்காடெ மகளெ கூட்டிக்கிட்டு போனாகெ. செத்தெ சாமத்திலெ ஒரு குஞ்சிப் புள்ளெ கத்திறெ சத்தம் பள்ளிவாசலுக்குள்ளெ இரிந்தெ எல்லாருக்கும் கேட்டிச்சி.

0 0 0 0 0

கொலிசங்கன்னாவெ நா போய் பாக்கக்குள்ளெ, அவகெ ஒரு பாயிலெ படுத்துக் கெடெந்தாகெ. இப்பெ அவகெலாலெ எழும்பி நடக்கேலா. அவகெளுக்கு ரெண்டு கண்ணும் முழுசா தெரியாமாப் பேய்த்திது. வரெண்டு, வெள்ளெயாப் போனெ கண்ணிலெ இரிந்து தண்ணி வடிஞ்சிக்கிட்டிரிந்திச்சி. வாய் மத்திரம் இப்பவு வெத்திலெயெ சப்பிக்கிட்டுத்தா இரிந்திச்சி.
அந்த ஊர்த்தாயின் வரலாற்றை எங்கெ ஊருக்கு யாபகப்படுத்தணுமென்டு நா எடுத்தெ முடிவு, காலம் கடந்ததோ என்டு எனெக்கி சந்தேகம் வந்திட்டு. அம்புட்டு தூரத்துக்கு கொலிசங்கன்னா வருத்தப்பட்டுக் கெடெந்தாகெ. என்டாலு நா கேட்டெ சில கேள்விக்கு அவகெ ஒள்ளுப்பம் ஒள்ளுப்பமா மறுமொழி சொன்னாகெ. கதெச்சிக்கிட்டிரிக்கக்குள்ளெயே தான் கதெக்கிறத்தெ மறந்து பேய்த்திடுவாகெ. பொறவு மறுவாடியு அவகெ உட்டெ எடெத்தெ யாபகப்படுத்தி, அவகெளெ கதெக்கப் பண்ணணு. என்டாலுந் தன்டெ வாழ்க்கெயெ அவகௌhலெ சரியாச் சொல்லெ முடிஞ்சிது.


'அது சரி கன்னா. அந்தெ ஜின்னுக்கு பொறவு என்ன நடெந்திச்சி.'
நா கேட்டே.

'அரா. அரு பீத்திரு. ஒரு தரக்கம் ராவுலெ நா ஊட்டிலெ தனியா இரிந்தே. அப்பெ மஹ்ரிபுக்கும் இசாவுக்கும் எடெப்பட்டெ நேரொ. அப்பெ அரு வந்திச்சி. வந்து எனெக்கி முன்னாலே இரிந்திச்சி. இரிந்துக்கிட்டு எனெக்கிட்டெ சொன்னிச்சி.
'நா போறெ. இனிமெ நா ஒனெக்கிட்டெ வரெ மாட்டே. ஒன்னாலெ ஏன்டமாரி நீ ஒன்டெ வேலெயெ செஞ்சிக்கெ.'

என்டு சொல்லிப்புட்டு என்னெப் பாத்து சிரிச்சிப்புட்டு அரு பீத்திரு. அருக்குப் பொறவு அரு வரவேயில்லெ.'

'கன்னா ஒன்னு கேக்கணு. ஒரு கொறெமாசெ புள்ளெயெ எடுத்தீங்கென்டு சொன்னிங்கதானே. அது யார்ரெ புள்ளெ கன்னா?

'இல்லெ தம்பி. அரெல்லா சொல்லப்படாரு தம்பி. நா இன்டெக்கி வரெக்கு அரெப்பத்தி யாருக்கிட்டயு சொல்லேலெ. இப்பிடி கனெக்கெ இரிக்கி தம்பி. ஆனா என்டெ உசிருள்;ளெ வரெக்கு அரெப்பத்தியெல்லா நா யாருக்கிட்டயு சொல்லெ மாட்டே.'

கொலிசங்கன்னா களெச்சி பேய்த்தாகெ. என்னொடெ கதெச்சிக்கிட்டிரிந்தமாரியே அவகெ நெத்திரெ கொண்டுட்டாகெ. நா அங்ஙின இரிந்து போறத்துக்கு எழும்பினே. கொலிசங்கன்னாடெ மூத்தெ பேரென் அப்பதா அங்ஙின வந்தா. ஒரு மாசத்துக்கு முந்தித்தா அவெ சவூதியிலெ இரிந்து வந்திக்கா. அவெனெ என்னாலெ மதிக்கெ முடியேலெ. நல்லா தெளிஞ்சு பெரியாளா இரிந்தா. என்னெ பாத்து அவெ மருவாதியா சிரிச்சா.


அவென்டெ கையிலெ ஒரு சின்ன டெலிபோன் இரிந்திச்சி.

- அ.வா. முஹ்சீன்
(இங்கினயும் ஒரு மஹ்ஷர்)

நன்றி: சோனகர் வலைத்தளம்

Sunday, April 22, 2012

3000 ஆண்டுகால கருப்பின அடிமை வரலாறு!




ஒளிந்திருக்கும்

நரகம்!








''நான் கீழ குனிந்து என் கால்களுக்கு நடுவில் பார்த்தேன். மருத்துவச்சி உக்கார்ந்து கொண்டிருந்தாள். பிளேடின் ஓரங்கள் காய்ந்துபோய், ரத்தக்கறை படிந்திருந்தன.


'த்துப்..'


பிளேடின் மீது எச்சில் துப்பினாள் மருத்துவச்சி.


அடுத்த நொடி, 'சர்ர்க்' என்று ஒரு சத்தம். படக்கூடாத இடத்துல பிளேடு பட்டு, என் பிறப்புறுப்பு கிழிவது நன்றாகத் தெரிந்தது. நரநரவென்று முன்னும் பின்னுமாக இழுத்தாள். அந்தக் கிழவியின் அருகில் அக்கேசியா மரத்தின் முட்கள், குவியல் குவியலாகக் கிடந்தன. அவள் கைகள் முழுக்க ரத்தம்.


ஒரு கோழியை வெட்டி, மீதியை விட்டிருந்தால் எப்படி இருக்குமோ அப்படி ரத்தச் சகதியோடு இருந்தது பாறை. என் பிறப்புறுப்பின் உணர்ச்சிமிக்க பாகங்கள் வெயிலில் காய்ந்துகொண்டிருந்தன.''



-வாரிஸ் இப்படிச் சொன்னபோது, லாராவால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. தேம்பித், தேம்பி அழ ஆரம்பித்தார்.

வாரிஸின் நெருங்கிய நண்பர்கள்கூட அறிந்திராத அந்த உண்மையை, அன்றுதான் உலகம் தெரிந்து கொண்டது.

வாரிஸ் டைரி! உலகின் முன்னணி ஆஃப்ரிக்க மாடல் அழகி. லாரா ஸிவ், உலகின் முன்னணி ஃபேஷன் பத்திரிகையான 'மேரி க்ளேய்ர்' நிருபர்.

வாரிஸ், தன் கதையைச் சொல்ல ஆரம்பிக்கிறார்.











'சோமாலியாவில், கரடுமுரடான ஒரு பாலைவனக் கிராமத்தில்தான் நான் பிறந்தேன். எங்களது நாடோடிக் குடும்பம். இங்குள்ள பாத்ரூமைவிட மிகச் சிறியது எங்கள் குடிசை. பசுமையே பார்த்திராத கண்கள் என்றாலும், எல்லா குழந்தைகளையும்போல நானும் சந்தோஷமாகத்தான் இருந்தேன். ஆடு மாடுகளை மேய்ப்பேன். வரிக்குதிரைகளோடு ஓடுவேன். ஒட்டகச்சிவிங்கிகளை துரத்துவேன். பாட்டுப் பாடுவேன்.
ம்ஹ்ம்... இந்த சந்தோஷமெல்லாம் கொஞ்ச நாட்களுக்குத்தான். எனக்கு மட்டுமில்லை. சோமாலியாவில் பிறந்த எல்லா பெண்களுக்குமே இப்படித்தான்.

ஆஃப்ரிக்காவைப் பொறுத்தவரை பெண்கள்தான் எல்லாமே. ஆண்களைவிட அவகள் கடினமாக உழைக்கிறார்கள். வீட்டு வேலைகளையும் பார்த்துக் கொள்கிறார்கள். ஆனால், என்ன செய்து என்ன? எந்த உரிமையும் அவர்களுக்கு கிடைப்பதில்லை. காலம் முழுக்க ஆண்களுக்கு அடிமையாக இருந்தே சாகவேண்டும்.

என் வாழ்க்கை ஐந்தோடு முடிந்தது.

எங்களது நாடோடிக் குடும்பமில்லையா? அங்கே, 'கல்யாணமாகாதவள்' என்கிற பேச்சுக்கே இடமில்லை. பாடையோ, பரதேசியோ! எவன் கையிலாவது எங்களை பிடித்துக் கொடுத்துவிடவேண்டும். அதுவும் கன்னித் தன்மையோடு. அதுதான் அவர்களின் வாழ்க்கை லட்சியம்.
பெண்களைப் பொறுத்தவரை, சோமாலியர்களின் ஞானம் ரொம்பவே வித்தியாசமானது. எல்லா கெட்ட விஷயங்களும் பெண்களின் தொடைகளுக்கு நடுவில் ஒளிந்து கிடப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள்.
இதற்காக அவர்கள் செய்கிற அக்கிரமம் இருக்கிறதே...


அப்போது, எனக்கு ஐந்து வயது இருக்கும். ஒரு சாயங்கால நேரம்.
அம்மா என்னிடம் வந்து, ''உங்கப்பா, மருத்துவச்சியை பாக்கப் போயிருக்கார். அந்தப் பொம்பள எப்ப வேணாலும் வீட்டுக்கு வரலாம்'' என்றார்.
அன்றைக்கு, என்றும் இல்லாத கவனிப்பு எனக்கு. போதுமான அளவுக்கு சாப்பிடக் கொடுத்தார்கள்.

''பாலையும் தண்ணியையும் அதிகம் குடிச்சிறாதடி'' -அம்மா அறிவுரை சொன்னாள்.

சாப்பிட்டு முடித்து, போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு சந்தோஷமாக படுத்தேன். முழிப்பு வந்தப்போது, வானம் இருட்டாக இருந்தது.

மீண்டும் படுத்துவிட்டேன்.

''வாரிஸ்''

அம்மா திடீரென்று எழுப்பினாள்.

நாங்கள், தூரத்துல தெரிந்த குன்றை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.

''இப்படி உக்காருவோம். அவ வருவா.'' என்றார் அம்மா.
வானம் நன்கு விடிந்திருந்தபோது, 'சர்க், சர்க்' என்று செருப்பு சத்தம் கேட்டது. மருத்துவச்சி வந்துவிட்டிருந்தாள்.

படுக்கை மாதிரி இருந்த ஒரு பாறையைக் காட்டி, ''அங்க போய் உக்காரு' என்றாள். அம்மாதான் என்னை பாறை மேல் படுக்க வைத்தார்கள். அங்கே, பேச்சுக்கே இடமில்லை. என்னை படுக்க வைத்துவிட்டு.. அம்மா, என் தலைக்குப் பின்னால் உக்கார்ந்துகொண்டாள். என் தலையை இழுத்து அவள் மடியில் வைத்துக்கொண்டு, தன் கால்களை எடுத்து என் கைகள் மீது போட்டாள். நான் அம்மாவின் தொடைகளை இறுக்கிப் பிடித்துக்கொண்டேன்.
பிறகு ஒரு மரத்துண்டை எடுத்து என் வாயில் வைத்தாள்.

''இறுக்கமா கடிச்சுக்க. அம்மாவ பாரு. எவ்ளோ தைரியமா இருக்கேன். அதுபோல நீயும் இருந்தா, சட்டுனு முடிஞ்சிடும்.''
நான் கீழ குனிந்து என் கால்களுக்கு நடுவில் பார்த்தேன். பழைய கைப்பை ஒன்றை வைத்துக்கொண்டு அந்த மருத்துவச்சி உட்கார்ந்து கொண்டிருந்தாள். அவள் கண்ணில் அப்படியொரு பேய்த்தனம்.

பைக்குள், தன் விரல்களைவிட்டு அரக்கப் பரக்க எதையோ தேடினாள். இறுதியாக ஒரு ரேசர் பிளேடு வந்தது. ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது என்பது மட்டும் புரிந்தது.
பிளேடின் ஓரங்கள் காய்ந்துபோய், ரத்தக்கறை படிந்திருந்தன.

'த்துப்..'

பிளேடின் மீது எச்சில் துப்பினாள் மருத்துவச்சி. அதை, தன் துணியில் துடைத்தாள். அவள் துடைத்துக்கொண்டிருக்கும்போதே, அம்மா தன் கைகளை எடுத்து என் கண்களை மூடினாள்.
நான், உலகமே இருண்டதுபோல் உணர்ந்தேன்.
அடுத்த நொடி...

'பர்ர்க்' என்று ஒரு சத்தம்.

படக்கூடாத இடத்தில் பிளேடு பட்டு, என் சதை கிழிவது நன்றாகத் தெரிந்தது. எந்த காலத்து பிளேடோ? துருபிடித்து, பற்களோடு இருந்திருக்கவேண்டும். நரநரவென்று மேற்கொண்டு முன்னும் பின்னுமாக இழுத்தாள் அந்தக் கிழவி.

'அய்யோ...!' -நரக வேதனை.

அசையக்கூடாது. அசைந்தால், வலி இன்னும் கொடூரமாகும். பற்களைக் கடித்துக்கொண்டு படுத்துக்கிடந்தேன். என் தொடைகள் நடுங்கின.

'கடவுளே! இந்த நரகத்திலிருந்து என்னைக் காப்பாற்ற மாட்டாயா?'
ஒரு வழியாக அம்மா என் கண்களை விடுவித்தாள். வெளிச்சத்துக்கு பழகியதும் பார்க்கிறேன். அந்த கிழவியின் அருகில் அக்கேசியா மரத்தின் முட்கள். குவியல் குவியலாகக் கிடந்தன. அவள் கைகள் முழுக்க ரத்தம். அக்கேசியா முட்களைத்தான் ஒவ்வொன்றாக என் பிறப்புறுப்பில் குத்தியிருக்கிறாள். பிறகு கடினமாக வெள்ளை நூல் கொண்டு உறுப்பை தைத்திருக்கிறாள்.

சிறுநீர் கழிக்க ஒரே ஒரு துவாரம் வைத்துவிட்டு மீதி உறுப்பு மூடப்பட்டுவிட்டது. என் கன்னித் தன்மையும், ஒரு இனத்தில் கவுரவமும் காப்பாற்றப்பட்டுவிட்டது. இதற்கு, நான் செத்துப்போய் இருக்கலாம்.
தையல் முடிந்ததும் கிழவி போய்விட்டாள். நான் எழுந்திருக்க முயன்றேன். என்னால் அசையக்கூட முடியவில்லை. என் இரண்டு கால்களும் துணிப்பட்டையால சுற்றப்பட்டிருந்தன. அம்மா என்னை நகர்த்தியதும் பாறையைத் திரும்பிப் பார்த்தேன்.




ஒரு கோழியை வெட்டி, மீதியை விட்டிருந்தால் எப்படி இருக்குமோ அப்படி ரத்தச் சகதியோடு இருந்தது பாறை. என் பிறப்புறுப்பின் உணர்ச்சிமிக்க பாகங்கள் வெயிலில் காய்ந்துகொண்டிருந்தன. காற்று, நெருப்பு மாதிரி வீசிக்கொண்டிருந்தது. என்னால் சித்திரவதையைத் தாங்க முடியவில்லை. ஒருவழியாக அம்மாவும் அக்காவும் சேர்ந்து பக்கத்தில் இருந்த மர நிழலுக்கு என்னை இழுத்துக்கொண்டு போனார்கள். அங்கே, சிறிய குடிசை ஒன்று வேயப்பட்டிருந்தது. காயம் குணமாகிறவரை அங்கேதான் இருந்தாகவேண்டும்.

முதன் முதலாக எனக்கு சிறுநீர் வெளியேறியது நன்றாக நினைவிருக்கிறது. அந்த இடத்தில் அமிலத்தை ஊற்றினால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இருந்தது. உயிரே போய்விடும்படி எரிச்சல்... திகுதிகுவென தீப்பற்றி எரிந்தது பிறப்புறுப்பு. தையல் போடப்பட்டிருந்த பொத்தல்களின் வழியே தீக்குச்சி இறைத்தார்போல் சிறுநீர் வெளியேறியது.

மரண வேதனை.

இதனால், சிறுநீர் வந்துவிடுமோ என்கிற பயத்தில், தண்ணீர் குடிக்கவே பயந்தேன். பல நாட்கள் இப்படித்தான் வாழ்ந்தேன். திடீரென்று ஒருநாள் கிருமித்தொற்று ஏற்பட்டு கடுமையான காய்ச்சல் அடிக்க ஆரம்பித்தது. அம்மாதான் பார்த்துக்கொண்டாள். அந்த வயதில், எனக்கு செக்ஸ் என்றால் என்னவென்றே தெரியாது. ஆனால், ஒன்று மட்டும் தெரியும். ஒவ்வொரு தாயின் ஆசீர்வாதத்தோடுதான் இந்த சடங்கு நடைபெறுகிறது.
என் பெண்மை சிதைக்கப்பட்டது கொடூரமான விஷயம்தான். ஆனால், மற்ற பெண்களைக் காட்டிலும் நான் அதிர்ஷ்டசாலி என்றே சொல்லவேண்டும். பல சிறுமிகள் அதிர்ச்சியினாலும், ரத்தப்போக்கு, நோய்த்தொற்று காரணமாவும் இறந்து போய்விட, நான் மட்டும் உயிரோடு பிழைத்துக்கொண்டேன்.
நாட்கள் ஓடின.




நான் பதிமூன்று வயதை நெருங்கிக்கொண்டிருந்தேன். ஒரு நாள், மாலை நேரம்... ஆடுகளை அதன் பட்டியில் அடைத்துவிட்டு, வீட்டிற்குள் நுழைந்தேன்.

''வாரிஸ்! இங்க வாம்மா'' -அப்பா அன்போடு அழைத்தார்.
தன் மடிமேல் என்னை உட்காரவைத்துக்கொண்டார். வழக்கமாக அவர் குரலில் கடுமை இருக்கும்.

''ஒண்ணு தெரியுமா? நீ ரொம்ப நல்ல பொண்ணு. ஆம்பளைங்களைவிட அதிகமா உழைக்கிற. மந்தையை ஒழுங்கா கவனிச்சுக்கிற. ஆனா... உன்னை பிரியப்போறதை நெனச்சா எனக்கு வருத்தமா இருக்கு''

அப்பா, சம்பந்தமே இல்லாத வார்த்தைகளைப் பேசினார்.

'அடடா! அக்கா மாதிரி நானும் ஒடிடப்போறேன்னு பயப்படுறாரோ!'
நான் அவரை கட்டிப்பிடித்துக்கொண்டு,

''அப்பா. நீங்க நினைக்கிற மாதிரி நான் எங்கேயும் ஓடிப்போக மாட்டேன்'' என்றேன்.

அவர் என் முகத்தை திருப்பி, ''எனக்கு தெரியும். நீ என் பொண்ணு. அப்பா உனக்கு ஒரு மாப்பிள்ளை பாத்திருக்கேன்!'' என்றார்.
எனக்கு தூக்கிவாரிப் போட்டது.

''அப்பா. எனக்கு கல்யாணத்துல விருப்பமில்லை.''
நான் கொஞ்சம் தைரியமாக வளர்ந்தவள். இப்போது பலவீனமாக உனர்ந்தேன்.
அடுத்த நாள் காலை. நான், பால் கறந்துகொண்டிருந்தேன்.


''வாரிஸ்.. இங்க வா. இது நான் நீ...'' அப்பா அழைத்தார்.
அவரோடு அவரைவிட மூத்த ஒருவன் உட்கார்ந்துகொண்டிருந்தான்.
அப்பா சொன்னதை நான் காதிலேயே வாங்கவில்லை. அவனும் அவன் மூஞ்சியும்! ஆட்டுக்கெடா மாதிரி தாடியை தொங்கப் போட்டுக்கொண்டு... 60 வயதிருக்கும் அவனுக்கு.


''வாரிஸ்! வந்திருக்கிறவங்களுக்கு முதல்ல வணக்கம் சொல்லு.''

''வணக்கம்.''

நான் எவ்வளோ முடியுமோ அவ்வளவு குழைந்து சொன்னேன். அந்தக் கிழட்டு ஓநாய், என்னைப் பார்த்து பல் இளித்துக்கொண்டே உட்கார்ந்திருந்தது.

அவனை கொலைவெறியோடு முறைத்துவிட்டு, என் ஆப்பாவைப் பார்த்தேன். அப்பாவுக்கு புரிந்துவிட்டது.

சிரித்தவாறே... ''சரி, சரி, போய் வேலையைப் பாரு'' என்று சமாளித்தார்.

நான் மீண்டும் பால் கறக்க போய்விட்டேன்.

மறுநாள் காலையில் அப்பா கூப்பிட்டார்.

''வாரிஸ். அவர்தான் நீ கட்டிக்கப்போற புருஷன்.''

''அப்பா! அந்தாள் ரொம்பக் கிழவனா இருக்கான்''

''அதுதாம்மா உனக்கு நல்லது. வயசான மனுஷன் இல்லையா! உன்னை விட்டு எங்கேயும் போகமாட்டார். உன்னை நல்லா பாத்துக்குவார். ஒண்ணு தெரியுமா? மாப்ள நமக்கு... அஞ்சு ஒட்டகம் குடுத்திருக்காரு'' அப்பா, வாயை பிளந்துகொண்டு பெருமை பேசினார்.

அன்று முழுக்க நான் ஆட்டு மந்தையையே வெறித்துக்கொண்டிருந்தேன். மனதில் ஆயிரம் சிந்தனைகள். பாழும் பாலைவனத்தில் ஒரு கிழவனிடம் வாழ்க்கைப்படுவதை நினைத்துப் பார்த்தேன்.

'த்தூ..

இந்த வாழ்க்கைக்கு, நாண்டுகிட்டு சாகலாம்.' -ஒரு முடிவுக்கு வந்தேன்.
அன்று இரவு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது வீடு.

நான் அம்மாவை நெருங்கி,

''எனக்கு இங்கிருக்கப் பிடிக்கல. நான் ஓடப்போறேன்.'' என்றேன்.

''அடிப்பாவி. எங்க ஓடுவ?''

''மொகாதி. அக்கா வீட்டுக்கு.''

''முதல்ல போய் படு'' -பல்லைக் கடித்தவாறு அம்மா சொன்னாள்.
நான் கையை தலைக்கு வைத்துக்கொண்டு தூங்கப் போய்விட்டேன். திடீரென்று கை முட்டியில் யாரோ தட்டினார்கள்.

அம்மாதான்.

''அந்தாள் முழிச்சிக்கிறதுக்குள்ள எழுந்து ஓடு'' -கிசுகிசுத்தாள்.
நான் சுற்றி முற்றி பார்க்கிறேன். எடுத்துச் செல்ல உணவோ, தண்ணீரோ, ஒட்டகப் பாலோ எதுவுமே இல்லை. நான் எழுந்து அவளை அணைத்துக்கொண்டேன். அந்த இருட்டிலும், அவள் முகத்தைப் பார்க்க முயற்சித்தேன். முடியவில்லை. தாரை தாரையாக கண்ணீர் மட்டுமே வழிந்தது.

''எதுக்கும் கவலைப்படாத. நீ எங்க இருந்தாலும் நல்லா இருப்பே. அம்மாவை மட்டும் மறந்துடாதே'' என்றாள்.

''சத்தியமா''

சொல்லிவிட்டு ஓட ஆரம்பித்தேன். பாலைவனம் முழுக்க ஒரே கும்மிருட்டு.
எவ்வளவு தூரம் ஓடினேன் என்பது தெரியவில்லை. ஆனால், கொஞ்சமும் ஈவிரக்கமில்லாத கரடு முரடான பாலைவனம் அது.


அந்தப் பயணம், முடிவில்லாத ஒன்றாக எல்லையற்று நீண்டிருந்தது. பசியும் தாகமும் என்னை சோர்வடையச் செய்தன. பொழுது விடிந்தபோது, என்னுடைய ஓட்டம் முற்றிலும் தளர்ந்துபோய் இருந்தது.

''வாரிஸ், வாரிஸ்''

திடீரென்று என் தந்தையின் குரல் கேட்பதை உணர்ந்தேன். பயத்தில் என் உடல் நடுங்க ஆரம்பித்துவிட்டது. என்னை அவர் பிடித்துவிட்டால்?
இப்போது மீண்டும் ஆரம்பத்திலிருந்தே தொடங்கவேண்டும்.

நான் ஓடத் துவங்கினேன். பயம், என் ஓட்டத்தை வேகப்படுத்தியது. அதி பயங்கரமாக ஒரு துரத்தல் காட்சி அது. பல மணி நேரங்களுக்கு இது தொடர்ந்தது. சூரியன் மறையும்வரை நான் ஓடிக்கொண்டிருந்தேன். என் அட்ரினல் சுரப்பிகள் ஒழுங்காக வேலை செய்திருக்கவேண்டும்.

அப்பா தோற்றுவிட்டார்.

சூரியன் வேகமாக மறையத் தொடங்கியது.

ஆனால், இது நேற்றைய இரவைப்போல் இல்லை. பசி, வயிற்றை எரிக்க ஆரம்பித்தது. சோர்வும் மயக்கமும் ஒருசேர, அங்கிருந்த மரத்தடி ஒன்றில் அமர்ந்தேன். மெல்ல என் கால்களை எடுத்துப் பார்க்கிறேன்...

'உஃஃப், உஃஃப்...'

வெப்பத்தில் கொப்பளித்து, பாறைகளில் மோதி, ரத்தச் சகதியாய் காட்சியளித்துக் கொண்டிருந்தது கால்கள்.

அப்படியே தூங்கிவிட்டேன்.



சூரியன் கண் திறந்திருக்கவேண்டும்.

என் கண்கள் கூச ஆரம்பித்தன. சுற்றி முற்றிப் பார்க்கிறேன். யாரும் இல்லை. இந்த இடம் பாதுகாப்பானதல்ல. நடக்க ஆரம்பித்தேன். எத்தனை நாட்கள் நடந்தேன், எவ்வளவு தூரம் நடந்தேன் என்பதெல்லாம் தெரியாது. பசி, தாகம், பயம், வலி எல்லாம் சேர்ந்து என்னை வாட்டியது. எப்போதெல்லாம் இருள் சூழ்கிறதோ, அப்போதெல்லாம் பயணத்தை நிறுத்திவிடுவேன். வெயில் கடுமையாக இருந்தால், மரத்தின் கீழ் ஓய்வெடுப்பேன்.

அப்படித்தான் ஒருநாள் மரத்தடியில் படுத்துக்கிடந்தேன். அருகில் யாரோ குரட்டைவிடுவதுபோல் இருந்தது.

'அப்பாவாக இருக்குமோ?!'

பதறியடித்து எழும்பினால், 'கடவுளே..! அது ஒரு சிங்கம்.' என்னை முறைத்தபடி இருந்தது. நான் எழுந்து ஓட முயற்சித்தேன். ஆனால், கொலை பட்டினி என் கால்களை பலவீனமாக்கி இருந்தது. கொடூரமான ஆஃப்பிரிக்கச் சூரியனிடமிருந்ந்து எந்த மரம் எனக்கு அடைக்கலம் கொடுத்ததோ, அதன் கீழ் தலைக்குப்புற விழுந்தேன்.


நீண்ட நெடிய என் பாலைவனப் பயணம் முடிவுக்கு வரப்போகிறது.
இப்போது எனக்கு துளிகூட பயமில்லை. நான் சாகத் தயாராக இருக்கிறேன்.


''வா! வந்து என்னைச் சாப்பிடு.'' -சுரத்தில்லாத குரலில், நான் சிங்கத்தை அழைத்தேன்.


எச்சி ஊறும் நாக்கால் தன் உதடுகளை தடவியபடி, என்னை முன்னும் பின்னும் அது சுற்றி வந்தது. இதோ! ஒரே நொடியில் என்னைக் கவ்விக் கடித்து விழுங்கப்போகிறது. நான் கண்களை மூடிக் காத்திருந்தேன்.


'ஹ.. ஹ...' என்ன நினைத்ததோ, சிங்கம் பின்வாங்கிவிட்டது.
சந்தேகமே இல்லை. என்னிடம் சாப்பிடத் தகுந்த அளவுக்கு சதை இல்லை. நான் எதற்கும் பயனில்லாதவள்.

அப்படியானால்?

கடவுளின் திட்டம் வேறாக இருந்திருக்கவேண்டும். எதற்காகவோ என்னை விட்டு வைத்திருக்கிறார்.

'அது என்னவாக இருக்கும்?'

நம்பிக்கையுடன் மீண்டும் நடக்க ஆரம்பித்தேன்.

வீட்டை விட்டு ஓடி வரும் முன்பு, குடும்பம் ஒன்றுதான் எனக்கு வாழ்க்கை. எங்கள் தினசரி வாழ்க்கை, ஒட்டகத்தின் கையில் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அங்கே தண்ணீர் கிடையாது. காலை எழுந்தாலும் சரி, இரவு படுத்தாலும் சரி, ஒட்டகப்பால்தான் நாங்கள் உயிரோடு இருக்கக் காரணம். நான் தூங்கி எழுந்ததும் சுமார் 60, 70 செம்மறி ஆடுகளை ஓட்டிக்கொண்டு பாலைவனத்தை நோக்கிக் கிளம்பிவிடுவேன். வழி நெடுக பாடிக்கொண்டே செல்வேன்.


ஆடுகளை வழிநடத்த ஒரே ஒரு குச்சி வைத்திருப்பேன். ஆடுகள் மேய்ச்சலில் இருக்கும்போது ஏராளமான வேட்டை விலங்குகளைப் பார்த்திருக்கிறேன். வழி தெரியாமல் சிதறும் ஆட்டுக்குட்டிகள் மீது ஹெய்னாக்கள் பதுங்கிச் சென்று பாயும். சிங்கங்கள் வந்து போகும்.


வீடு வந்ததும், இரவில் நட்சத்திரங்களுக்கு கீழ் குழந்தைகளெல்லாம் ஒன்றாகப் படுப்போம். எங்களுக்கு பாதுகாப்பாக அப்பா இருப்பார்.
அப்பா, ஆறடி உயரத்தில் அம்மாவைவிட கொஞ்சம் வெள்ளையாக, ரொம்பவும் அழகாக இருப்பார். அம்மாவும் அழகில் குறைந்தவள் இல்லை. கருப்பாக இருந்தாலும் கரும் பளிங்கு சிற்பம்போல் இருப்பார். தோல் மிருதுவாகவும் மினுமினுப்பாகவும் இருக்கும். ஆனால், ரொம்ப அமைதி. பேச ஆரம்பித்தால், குலுங்கக் குலுங்க சிரிக்க வைத்துவிடுவாள்.


மொகாதிவில் செல்வாக்குமிக்க வசதியான குடும்பத்தில் பிறந்தவள் அம்மா. மாறாக, எப்போதும் பாலைவனத்தில் அலைந்து திரியக்கூடிய நாடோடி, என் அப்பா. அம்மாவை கல்யாணம் செய்துகொள்ள அவர் விருப்பம் தெரிவித்தபோது, 'வாய்ப்பே இல்லை' என்று என் பாட்டி விரட்டிவிட்டாராம். எப்படி இருந்தால் என்ன? அம்மாவுக்கு 16 வயதாகும்போது, அவரும் வீட்டைவிட்டு ஓடி வந்துதான் அப்பாவை கல்யாணம் செய்திருக்கிறார்.
அம்மா எப்போதும் என்னை 'அவ்டஹொல்' என்றுதான் கூப்பிடுவார். அவ்டஹொல் என்றால், 'சின்ன வாய்' என்று அர்த்தம். ஆனால், 'வாரிஸ்' என்பதுதான் என் உண்மையான பெயர். வாரிஸ் என்றால் 'பாலைவனப் பூ' என்று அர்த்தம்.


நான் ஓடி வந்த கதையை விட்டுவிட்டேனே! சுமார் 300 மைகள் கடந்து, புண்ணாகிப்போன கால்களுடன் ஒரு வழியாக நான் மொகாதிவுக்கு வந்து சேர்ந்திருந்தேன். அது, இந்தியப் பெருங்கடலில் ஒரு அழகான நகரம். அந்த நகரத்தை சுற்றி நிறைய பனைமரங்களும் கலர் கலரான பூச்செடிகளும் இருந்தன. அங்கிருந்த வீடுகளும் கொள்ளை அழகு. அவற்றில் பெரும்பாலானவை இத்தாலியர்களால் கட்டப்பட்டிருந்தன. மொகாதி  ஒரு காலத்தில் இத்தாலியர்களின் தலைநகரமாக இருந்ததே இதற்குக் காரணம். ஒரு கொக்கு மாதிரி கட்டடங்களை எட்டி, எட்டி பார்த்துக்கொண்டு நடந்தேன்.
ஒரு மார்கெட் வந்தது. அங்கிருந்த பெண்களிடன்

 'எங்க அக்கா அமென் தெரியுமா?' என்று விசாரித்தேன்.

''உன்னை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே!'' -யோசித்த ஒரு பெண்மணி, தன் மகனை அழைத்து, ''இவளைக் கொண்டுபோய் அமென் வீட்டில் விடு'' என்றாள்.

நான் அக்கா வீட்டுக்குள் நுழைந்தபோது, அவள் நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தாள்.


நல்லவேளையாக அவளுக்கு நல்லதொரு கணவன் கிடைத்திருந்தான். அவர்கள் தமது முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்திருந்தார்கள். நான் வீட்டு வேலைகள் முழுவதையும் பார்த்துக்கொண்டேன். கொஞ்ச நாள் கழித்து அக்காவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. நான்தான் அவளையும் பார்த்துக்கொண்டேன்.


அதன் பிறகு அக்காவுக்கும் எனக்கும் ஒத்துப்போகவில்லை. ஒரு முதலாளிபோல் என்னிடம் நடந்துகொண்டாள்.
மொகாதி{வில் எனக்கு வேறு சில சொந்தங்களும் இருந்தன.
நான் என் சித்தி வீட்டுக்குப் போய், ''கொஞ்ச நாள் இங்கேயே தங்கிக்கவா?'' என்றேன்.

எதிர்பார்த்ததைவிட அவர்கள் அன்பானவர்களாக இருந்தார்கள்.
'தாராளமா தங்கிக்கோ. உனக்கு இங்க ஒரு பிரண்டுகூட இருக்கா.' என்றார்கள்.
வழக்கம்போல், அங்கேயும் நான்தான் வீட்டு வேலைகளை கவனித்துக்கொண்டேன்.

அம்மாவை தனியாக விட்டுவிட்டு வந்தது எனக்கு வருத்தமாக இருந்தது. பாவம்! எல்லா வேலைகளையும் அவள் ஒருத்திதான் செய்தாக வேண்டும்.
'நான் ஏதாவது செய்தாகவேண்டும். பணம் சம்பாதித்து அவளுக்கு அனுப்பவேண்டும்.' என்று தீர்மானித்தேன்.


பணம் சம்பாதிக்க வேண்டுமென்றால், வேலைக்குப் போகவேண்டுமே. தேடினேன். ஒரு இடத்தில் சித்தாள் வேலை கிடைத்தது. ரொம்பவும் கடினமான வேலை. எல்லோரும் நான், ஓடிப்போய்விடுவேன் என்றுதான் நினைத்தார்கள். ஆனால், கடுமையாக உழைத்தேன். 60 டாலர்கள் கிடைத்தது.
நாட்கள் ஓடியது...





ரு நாள் சித்தி வீட்டில், வீட்டு வேலைகளை செய்துகொண்டிருந்தேன். ஊரிலிருந்து முகம்மது சித்தப்பா வந்திருந்தார். என் இன்னொரு சித்தியின் வீட்டுக்காரர்.

''அடுத்த நாலு வருஷமும் லண்டன்லதான் இருக்கப்போறேன். வீட்டு வேலைக்கு ஆள் வேணும். யாராவது நல்ல பொண்ணா இருந்தா சொல்லு'' -முகம்மது சித்தப்பா, சித்தியிடம் பேசிக்கொண்டிருந்தது காதில் விழுந்தது. அவர், லண்டனில் சோமாலியத் தூதரகத்தில் வேலை பார்ப்பவர்.
நான், மெல்ல என் சித்தியை கூப்பிட்டு,

''நான் வேணும்னா, அவர் வீட்டுக்கு போறேனே.. ப்ளீஸ்'' என்று கெஞ்சினேன்.
சித்தி, ஒரு நிமிஷம் யோசித்துவிட்டு, ''ஏன் நீங்க வாரிஸை கூட்டிட்டுப் போகக்கூடாது. இவ ரொம்ப சுத்தமா வேலை செய்வா.'' என்றார்.
சித்தப்பா என்னை உற்றுப் பார்த்தார்.

''ஓகே. நாளைக்கு மதியம் ரெடியா இரு. நாம லண்டன் கிளம்பறோம்.''
மறுநாள், என்னுடைய பாஸ்போர்ட் வந்தது. எனக்கு பயங்கர ஆச்சர்யம்! முதன் முதலாக என்னுடைய பெயர் அச்சில் வார்க்கப்பட்டிருந்தது.

ஒரு வழியாக லண்டன் வந்தாகிவிட்டது. ஆடம்பரமான மாளிகைகள், வெள்ளை வெளேர் மனிதர்கள், விழுகின்ற வென் பனி என முற்றிலும் புதிதாக, முழுவதும் அந்நியமாக இருந்தது லண்டன். சித்தப்பாவுக்கும் அழகான ஒரு மாளிகை ஒதுக்கப்பட்டிருந்தது.

மரியம் சித்தி, என்னை முகம் மலர வரவேற்றார். அவரை ஓடிச் சென்று கட்டிப்பிடிக்க எண்ணினேன். ஆனால், அவரது நவநாகரீக உடை என்னை அச்சம் கொள்ளச் செய்தது. சித்தி எனக்கு பெட்ரூமை திறந்து காட்டினாள்.


'அம்மாடி!' அவ்வளவு பெரிய படுக்கை அறையை நான் கனவிலும் கண்டதில்லை. என் வீட்டைவிட பெரியதாக இருந்தது. சொகுசான மெத்தை. அப்படியொரு சொகுசை என் வாழ்நாளில் அனுபவித்ததே இல்லை. அன்றிரவு சொர்க்கத்தில் உறங்கினேன்.


அடுத்த நாள்...


பெருக்குவது, துடைப்பது, துவைப்பது, கழுவுவது என்று வழக்கம்போல் என் வேலைகள் தொடர்ந்தன. எப்படி சமைக்கவேண்டும் என்பதை சித்தி எனக்கு கற்றுக்கொடுத்தாள்.


எனக்கு 16 வயது இருக்கும்போது, முகம்மது சித்தப்பாவின் சகோதரி இறந்துபோய்விட, அவளது மகள் எங்களோடு வந்துவிட்டாள். நான்தான் அவளை கான்வென்ட்டுக்கு அழைத்துச் செல்வேன். ஒருநாள் ஸ்கூல் வாசலில் வைத்து ஒரு ஆள், என்னை முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தார். அவருக்கு சுமார் 40 வயசு இருக்கும். இப்படி முறைத்துப் பார்ப்பது குறித்து அவர் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளவில்லை.


நான், குழந்தையை ஸ்கூலில் விட்டுட்டு திரும்புகிறேன், திடீரென்று அந்த ஆள் என் பக்கத்தில் நிற்கிறார். எனக்கோ ஆங்கிலம் தெரியாது. அவர் என்ன பேசுகிறார் என்பதும் புரியவில்லை. நான் பயந்துகொண்டு வீட்டுக்கு வந்துட்டேன். அந்த ஆளின் மகளும் அதே ஸ்கூலில்தான் படித்தாள்.
பிறகு, எப்போதெல்லாம் என்னை பார்க்கிறாரோ, அப்போதெல்லாம் சிரித்து வைப்பார். ஒரு நாள், தன் விசிட்டிங் கார்டை என்னிடம் நீட்டினார். நான் வேண்டா வெறுப்பாக வாங்கிக்கொண்டேன்.


வீட்டுக்கு வந்ததும், என் சித்திப் பெண்ணிடம் காட்டி, ''என்னதிது?'' என்றேன்.


''இதுவா? இந்த ஆள் ஒரு போட்டோகிராபராம்''


'போட்டோகிராபருக்கு நம்மகிட்ட என்ன வேலை?' ம்ம்... நான் அதை மறந்துவிட்டேன்.


இதற்கிடையே சோமாலியாவில் உள்நாட்டுக் கலவரம் தீவிரமடைந்திருந்தது. பலர் சுட்டுக்கொல்லப்பட்டனர். சோமாலிய அரசாங்கம் சொல்லிவிட்டது. சித்தப்பா, குடும்பத்துடன் மறுநாளே ஊருக்குத் திரும்பியாகவேண்டும். இதை நினைக்கும்போதே, எனக்கு அடி வயிறு கலங்கியது.


''சித்தப்பா! என் பாஸ்போர்ட்டை எங்கேயோ தொலைச்சிட்டேன்'' -நான் வேண்டுமென்றே பொய் சொன்னேன்.
பயணத்துக்கான எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சு. திடீர்னு இப்படிச் சொன்னா என்ன அர்த்தம்?'' சித்தப்பா கோபப்பட்டார்.

''பரவாயில்லை சித்தப்பா. நீங்க கிளம்புங்க. நான் எப்படியாவது சமாளிச்சுக்கிறேன்''

என்னால் நம்ப முடியவில்லை. அதிர்ஷ்டவசமாக சித்தப்பா என்னை விட்டுவிட்டுக் கிளம்பினார்.

'யாருமற்ற அநாதையாய், லண்டனை எதிர்கொள்ளவேண்டும்'
எனக்குள் பயம் பரவத் தொடங்கியது.

அடுத்த நாள் கடை வீதி ஒன்றில் 'ஹல்வு'வைச் சந்தித்தேன். உயரமாக, கவர்ச்சியாக இருந்தாள்.

''என்ன பண்ற வாரிஸ். எப்படி இருக்கே?'' என்றாள் சோமாலியில்.
நாங்கள் முன்பின் அறிமுகமானவர்கள் இல்லை.

''என்னத்தைச் சொல்ல! என் சித்தப்பா தூதரக அதிகாரியா வேலை பார்த்தார். இத்தனை நாள் அவரோடுதான் இருந்தேன். இப்போ அவர் வேலை முடிஞ்சு சோமாலியா போய்ட்டார். எங்க தங்கறது, எப்படி சாப்பிடுறதுன்னு இப்பவரை தெரியலை''

ஹல்வு, என்னை அமைதியாகப் பார்த்தாள்.


''ஒய்.எம்.சி.ஏ-ல எனக்கு ஒரு ரூம் இருக்கு. இன்னிக்கு ராத்திரி அங்கேயே தங்கிக்கோ''


இப்போது, நானும் ஹல்வுவும் நெருங்கிய நண்பர்கள் ஆகியிருந்தோம்.


''மெக் டொனால்டில் வேலைக்குப் போறியா?'' -ஹல்வு கேட்டாள்.


''சான்ஸே இல்லை. எனக்கு இங்கிலிஷ் தெரியாது. என்கிட்ட வொர்க் பெர்மிட்டும் இல்லை''


ஹல்வு என்னை விடவில்லை. என்னை மெக்டொனால்டில் வேலைக்குச் சேர்த்துவிட்டாள். பாத்திரங்களைக் கழுவுவது, தரையைத் துடைப்பது, குப்பைகளை அள்ளுவதுதான் என் வேலை. வார இறுதியில், ஹல்வு என்னை டிஸ்கொதேவுக்கு அழைத்துச் சென்றாள். அதுதான், கட்டுப்பட்டியான ஆஃப்ரிக்க வளர்ப்பிலிருந்து நான் வெளியேற உதவியது. கருப்பு, வெள்ளை, ஆண், பெண் எல்லோரிடமும் பேசினேன். ஜஸ்ட் பேசினேன். அவ்வளவுதான். இந்தப் புதிய உலகில் எப்படி வாழ்வது என்பதை ஹல்வு மூலமாக கற்றுக்கொண்டேன்.









னிதான், என் வாழ்க்கையின் இரண்டாவது அத்தியாயம் ஆரம்பம்.


''இந்த ஆளுக்கு என்னதான் வேணுமாம்?'' ஓய்வு நேரம் ஒன்றில், போட்டோகிராபரின் விசிட்டிங் கார்டை காட்டி ஹல்வுவிடம் கேட்டேன்.


''அதை அவர்கிட்டயே கேளு. போனைப் போடு''


''நான் பேசுறது மொக்க இங்கிலீஷ். நீயே பேசு''


'''மைக் கோஸ்.' அவர்தான் அந்த அன்புக்குரிய போட்டோகிராபர். அன்று, மைக்கின் ஸ்டுடியோவுக்குள் நுழைந்தபோது, நான் வேறொரு உலகத்தில் விழுந்ததுபோல் உணர்ந்தேன். சுவர் முழுக்க அழகழகான பெண்கள் தொங்கிக்கொண்டிருந்தார்கள்.


மைக் என்னிடம், ''யூ ஹேவ் தெ மோஸ்ட் பியூட்டிஃபுல் ப்ரொஃபைல். நான் உன்னை போட்டோ எடுக்க விரும்புகிறேன்'' என்றார்.


''இதைப் போலவா? இந்த பொண்களைப் போலவா?''


''ஆமாம்'' எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.


''எவ்ளோ பணம் தருவீங்க?''


''ஹ.. ஹ..! வா, இப்படி வந்து நில்லு'' மைக், தன் காமிராவை கையில் எடுத்தார்.


இரண்டு நாட்களுக்குப் பிறகு... ஸ்பான்ச், பிரஷ், க்ரீம், பெயின்ட், பவுடர்.


எல்லாம் என் முகத்தில் விளையாட ஆரம்பித்தன. எனக்கு மேக்கப் போட்ட பெண், சற்று பின் நகர்ந்து சென்று என்னை பார்த்தாள்.


''ஒகே. போய் கண்ணாடியைப் பார்''


''வாவ்...! நானா இது?'' பட்டுப்போன்ற மேனி, பளபளக்கும் கன்னம்... அங்கிருந்த வெளிச்சத்தில் நான் தங்கம்போல மின்னினேன்.


''ஓகே வாரிஸ். லிப்ஸை இப்படி வச்சிக்கோ, இங்க பார்... க்ளிக், க்ளீக், க்ளிக்...'' -மைக்கின் விரல்கள் க்ளிக்கொண்டே இருந்தன.


வேலைக்கார வாரிஸ், இப்படியாகத்தான் ஒரு மாடல் அழகியாக மாறினாள்.
சில நாட்களுக்குப் பிறகு... ஒரு மாடலிங் ஏஜென்சி என்னை அழைத்திருந்தது. அழகழகான பெண்கள் அங்கே கூடியிருந்தனர்.


''இங்கே என்ன நடக்குது?''


''பைரேலி காலண்டர்''


''ஓ... சூப்பர். அப்டினா, என்ன?''


போட்டோகிராபர் 'டெரன்ஸ் டொனோவன்'தான் கடந்த ஆண்டுக்கான பைரேலி காலண்டரை என் முன் எடுத்துப் போட்டார்.


'ஸ்டன்னிங் பியூட்டிஃபுல்.'


ஒவ்வொரு பக்கத்திலும், துக்கிச் சாப்பிடக்கூடிய அழகிகள் ஆக்கிரமித்திருந்தார்கள்.


''இந்த வருடம், வித்தியாசமா ஒரு ஆஃப்ரிக்கன் மாடலை வைத்துச் செய்யப்போகிறோம். நீதான் அந்த மாடல்'' –டெரன்ஸ், ஒவ்வொன்றாக என்னிடம் விளக்க ஆரம்பித்தார்.


ஷூட்டிங் முடிந்தபோது என் படம் 'அட்டை'க்குத் தேர்வாகி இருந்தது.
ஒரு மாடலாக, நான் வேகவேகமாக வளர்ந்தேன். பாரிஸ், மிலன், நியூயார்க் என்று பறந்தேன். பணம், மழைபோல் கொட்ட ஆரம்பித்தது. மிகப்பெரிய கமர்ஷியல் விளம்பரங்கள் தேடி வந்தன. 'ரெவ்லான்' விளம்பரத்தில் சின்டி கிராவ்ஃபோர்டு, கிளாடியா ஸ்கிஃபர், லாரன் {ஹட்டன் ஆகியோருடன் காட்சியளித்தேன். எல்லீ, கிளாமர், இத்தாலியன் வாக்ய் மற்றும் பிரிட்டிஷ், அமெரிக்கன் வாக்ய் போன்ற உலகின் முன்னணி ஃபேஷன் பத்திரிகைகளில் இடம் பிடித்தேன். ஜேம்ஸ்பான்ட் படத்தில்கூட நடித்தேன்.


ஆனால், வெற்றிகரமான இந்த வாழ்க்கைப் பயணத்தில், என் பழைய தழும்புகள் எதுவும் மறையவில்லை. எல்லாம் அப்படியே இருந்தன. அந்த சின்னஞ்சிறிய துவாரம் வழியே ஒரு சொட்டு யூரின் மட்டுமே வெளியேறியது. ஒவ்வொரு முறை சிறுநீர் கழிக்கும்போதும் எனக்கு பத்துப் பதினைத்து நிமிடங்கள் தேவைப்பட்டது.


மாதவிடாய் நேரம் என்றால், இந்தக் கொடுமை பலமடங்கு வீரியத்தோடு இருக்கும். படுக்கைக்குச் செல்லும் ஒவ்வொரு இரவும், 'தூக்கத்தின்போதே செத்துவிட்டால் தேவலாம்' என்று நினைப்பேன்.
முன்பு ஒருநாள் சித்தப்பா வீட்டில் இருந்தபோதே, மாதவிடாய் நேரத்தில் மயங்கி விழுந்துவிட்டேன். சித்திதான் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாள். ஆனால், உண்மைக் காரணம் என்னவென்பதை நான் டாக்டரிடம் சொல்லவில்லை.


''உதிரப்போக்கை நிறுத்தணும்னா, கர்ப்பத்தடை மாத்திரை ஒண்ணுதான் தீர்வு. வேற வழியில்லை'' என்றார் டாக்டர்.


எல்லா டாக்டர்களும் இதையேதான் சொன்னார்கள்.


இந்த மாத்திரைகள் எனக்குள் வேறு மாதிரியான விளைவுகளை உண்டு பண்ணியது. என் மார்பகங்கள் பெரிதாகத் தொடங்கின. உடல் எடை கூடியது.
'இந்த வேதனைக்கு, உதிரப்போக்கையே தாங்கிக்கலாம்' என்று தோன்றியதால், மாத்திரைகளை நிறுத்தினேன்.


மீண்டும் வலி.


''சித்தி! ஸ்பெஷல் டாக்டரைப் பார்த்தா நல்லா இருக்கும்''


''பார்த்து? என்னன்னு அவர்கிட்ட சொல்வே?''


சித்தியின் கேள்விக்கு என்ன அர்த்தம் என்பது தெரியும்.


'ஆஃப்ரிக்க பழங்குடிப் பெண், தன் அந்தரங்கத்தைப் வெள்ளைக்காரனிடம் காட்டுவதா? எவ்வளவு பெரிய குற்றம்!'












காலங்கள் உருண்டோடின. இப்போது நான் சொந்தக் காலில் நிற்கிறேன். ஒய்.எம்.சி.ஏ தோழியை அழைத்துக்கொண்டு டாக்டர் 'மேக்ரே'வை சந்தித்தேன்.


''டாக்டர். நான் சோமாலியாவில் இருந்து வர்றேன். எனக்கு...'' அடுத்த வாக்கியத்தை முடிக்கவில்லை.

''இட்ஸ் ஓகே. சரி பண்ணிடலாம். போய் ட்ரெஸ்ஸை மாத்திட்டு வா'' என்றார்.
நர்ஸை கூப்பிட்டு, ''இங்க, சோமாலி தெரிஞ்ச லேடி இருக்காங்கல்ல. அவங்களையும் கூட்டிட்டு வாங்க.'' என்றார்.

ஆனால், வந்தது லேடி இல்லை ஆம்பிளை.

அவன் முகத்தில் மகிழ்ச்சியே இல்லை.

''உண்மையிலேயே உனக்கு விருப்பம்னா, இவங்க திறந்து விடுவாங்க. ஆனா, இது நம்ம பன்பாட்டுக்கே விரோதம். இது உங்க வீட்டுக்கு தெரியுமா?'' என்றான்.

''தெரியாது''

''முதல்ல அவங்ககிட்ட பேசு.'' -அவன் ஒரு அக்மார்க் சோமாலியன். போய்விட்டான்.

கடந்த வருடமே நான் இந்த அறுவை சிகிச்சையை செய்திருக்கவேண்டும். ஆனால், அப்போது சில நடைமுறை சிக்கல்கள் இருந்தன. டாக்டர். மேக்ரே மிகவும் நல்லவர். அவருக்கு நான் எப்போதுமே கடமைப்பட்டிருக்கிறேன்.

''நீ மட்டும் இல்லை வாரிஸ். குடும்பத்துக்குத் தெரியாமல் எகிப்திலிருந்தும், சூடானிலிருந்தும், சோமாலியாவிலிருந்து ஏராளமான பெண்கள் இங்கு வருகிறார்கள். பாவம், சில பெண்கள் கற்பமாகக்கூட இருப்பார்கள். என்னால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு சிறப்பாக செய்கிறேன். நீ கவலைப்பட வேண்டாம்'' என்றார்.

சிகிச்சை முடிந்து மூன்று வாரங்கள் ஆகியிருக்கும்.

ஒருநாள், டாய்லெட்டில் உட்கார்ந்து நான் சிறுநீர் கழித்தபோது...
'உஷ்ஷ்ஷ்ஷ்...'

ஆஹா! என்ன ஒரு அற்புதம். நான் அடைந்த மகிழ்ச்சியை, அந்த சுதந்திரத்தை... வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. இந்த உலகில் இதைவிட மகிழ்ச்சியான ஒரு அனுபவம் இருக்கவே முடியாது.

1995-ம் ஆண்டு. என்னுடைய வாழ்க்கையை ஆவணமாக்குவதென்று பி.பி.சி தீர்மானித்தது.

''நல்லது. ஆனால், சோமாலியாவுக்குச் சென்றதும் என் அம்மாவைக் கண்டுபிடிக்க நீங்கள் உதவவேண்டும்'' -டைரக்டர் கெரி பொமிராயிடம் கோரிக்கை வைத்தேன். அவர் ஒப்புக்கொண்டார்.


என் குடும்பம் நகர்ந்ததாக சந்தேகிக்கப்படும் பல்வேறு இடங்களில் பி.பி.சி குழுவினர் தேடத் துவங்கினர்.

சிலர், 'நான்தான் உன் அம்மா' என்று வந்தனர்.

''உனக்கும் உன் குடும்பத்துக்கும் மட்டுமே தெரிந்த ரகசியங்கள்னு சிலது இருக்கும். அது என்னன்னு யோசி'' என்றார் கெரி.

''ஓ... ஆமால்ல! என்னை 'அவ்டஹொல்'னு எங்க அம்மா கூப்பிடுவாங்க''

''இந்தப் பேரை அவங்களுக்கு ஞாபகம் இருக்குமா?''

''நிச்சயமா''

இப்போது அவ்டஹொல் என்கிற வார்த்தை சீக்ரட் பாஸ்வேர்டாக கொண்டு செல்லப்பட்டது. ஒருநாள் பி.பி.சி ஊழியர்கள் என்னை அழைத்து, ''அநேகமா உங்க அம்மாவை கண்டுபிடிச்சிட்டோம்னு நினைக்கிறோம். அந்தம்மாவுக்கு அவ்டஹோல் என்கிற வார்த்தை மறந்துபோச்சு. ஆனா, தனக்கு வாரிஸ்னு ஒரு பொண்ணு இருந்ததாகவும், அவ லண்டன் தூதரகத்துல வேலை பார்த்தாகவும் சொல்றாங்க'' என்றனர்.

நாங்கள் உடனடியாக எத்தியோப்பியா பறந்தோம். அங்கிருந்து சிறியரக விமானம் ஒன்றில், 'கலாடி'க்கு பயணம். எத்தியோப்பியரூசோமாலிய எல்லை கிராமமான அங்குதான், உள்நாட்டுப் போரிலிருந்து உயிர்காத்துக்கொள்ள அகதிகள் முகாம் அமைத்து இருந்தனர்.
கடைசியில் அது என் அம்மாவே இல்லை.

ஆனால், நாங்கள் முயற்சியை கைவிடவில்லை. அந்த கிராமத்தை அங்குலம் அங்குலமாக அலசினோம். அப்போதுதான் அந்த வயதான மனிதர் வந்தார்.

''என்னை தெரியுதா? நான்தான் இஸ்மாயில். உங்க அப்பாவோட நெருங்கிய நண்பர். எனக்கு காஸ் வாங்க பணம் தந்தா, நான் உங்கம்மாவை கண்டுபிடிச்சித் தர்றேன்'' என்றார்.

பி.பி.சி குழு ஒப்புக்கொண்டது.

மூன்று நாட்கள் ஆகிவிட்டது. என் அம்மா வருவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.

அடுத்த நாள் காலை, ஜெரி என்னிடம் வந்து,

''நீ நம்பப்போறதில்லை. அந்த ஆள் வந்துட்டார். அது உங்க அம்மாதான்'' என்றார். நான் அவள் முகத்தைக்கூட பார்க்கவில்லை. முக்காடு அணிந்தபடி ட்ரக்கில் இருந்து இறங்கும்போதே தெரிந்துவிட்டது.

''அம்மா...''

ஓடிச் சென்று அவளை அணைத்துக் கொண்டேன்.

ட்ரக் வந்தபோது அப்பா தண்ணீர் தேடச் சென்றுவிட்டாராம். ஆனால், என் சின்னத் தம்பி அலி வந்திருந்தான். நானும் அம்மாவும் பல விஷயங்களைப் பேசினோம்.

''அப்பாவுக்கு ரொம்ப வயசாயிடுச்சி. கண் பார்வையும் சரியா தெரியல.

அவருக்கு ஒரு கண்ணாடி வாங்கித் தந்தா நல்லா இருக்கும்'' என்றார் அம்மா.
திடீரென்று, அலி என்னைப் பிடித்துக்கொண்டு அழ ஆரம்பித்துவிட்டான்.

''டேய்! நான் சின்னக் குழந்தை இல்லை. எனக்கு கல்யாணம் ஆகப்போவுது. விட்றா!'' என்றேன்.

''என்னது கல்யாணமா? உனக்கு என்ன வயசு?''''அதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனா, கல்யாணம் பண்ற வயசு''

ஒரு வழியாக அலி, சமாதானம் ஆனான்.

''எனக்கும் பேரப் பிள்ளையை பார்க்கனும்னு ஆசையா இருக்கு'' என்றார் அம்மா.

அன்றிரவு நானும் அலியும் நட்சத்திரங்களைப் பார்த்தபடி குடிசைக்கு வெளியே தூங்கினோம். அவன் என்னிடம் நிறைய கேள்விகள் கேட்டான். எனக்கு பழைய ஞாபகங்கள் ஒவ்வொன்றாகத் திரும்பின. நான், மிகுந்த சந்தோஷமாகவும் மிக அமைதியாகவும் உணர்ந்தேன்.

மறுநாள் காலை... விமானம் புறப்படத் தயாராக இருந்தது.

''அம்மா! போதுமான அளவுக்கு நீ உழைச்சிட்டே. இனிமே நீ ஓய்வெடுத்தாகணும். கிளம்பு என்கூட.'' என்றேன்.

''இல்லை. உங்க அப்பா இங்கதான் இருக்கார். அவரை நான்தான் பாத்துக்கணும். அவர் இருக்கிற இடம்தான் எனக்கு வீடு, நாடு எல்லாமே. முடிஞ்சா ஒண்ணு செய். சோமாலியாவுல எங்களுக்கு ஒரு வீடு வாங்கிக்கொடு. அது போதும்.''

நான் அவளை இறுக அணைத்துக்கொண்டேன்.

''அம்மா! நான் உன்னை உயிருக்கு உயிராக நேசிக்கிறேன். உன்னைப் பார்க்கத்தான் இங்கு வந்தேன். இதை மறந்துடாதே.''

இப்போது நான் லண்டன் திரும்பிவிட்டேன். ஆனால், வாழ்க்கையில் நான் பட்ட துன்பங்கள் யாருக்கும் தெரியாமல் மறைந்தே இருந்தது. உலகத்தைப் பொறுத்த அளவில் நான், பிரபலமான ஒரு மாடல்.

மாதங்கள் உருண்டன. ஆண்டு, 1997. உலகின் முன்னணி ஃபேஷன் பத்திரிகையான 'மேரி க்ளேய்ர்' உலகின் முன்னணி மாடல் அழகியான வாரிஸை பேட்டி காண வந்தது.

''சொல்லுங்கள். எப்போது உங்கள் போட்டோகிராபரை சந்தித்தீர்கள்? அதுதான் உங்கள் வாழ்க்கையில் திருப்புமுனை இல்லையா?''

''இல்லை''

''என்ன?''

''ஆமாம். நீங்கள் நினைப்பதல்ல என் வாழ்க்கை. என்னிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்று தெரியவில்லை லாரா. ஆனால், மாடலிங் பற்றி ஏற்கெனவே நீங்கள் எழுதியிருப்பீர்கள். நான் சொல்ல நினைப்பது அதுவல்ல. எனக்கு சத்தியம் செய்து கொடுத்தால், நான் உங்களுக்கு உண்மைக் கதையைச் சொல்கிறேன்.''

ரிப்போர்ட்டர் 'லாரா ஸிவ்'வின் கண்கள் அகல விரிந்தன.

''ஐ டூ மை பெஸ்ட்'' சொல்லிக்கொண்டே டேப் ரெக்கார்டரை ஆன் செய்தார்.
நான் என் கதையைச் சொல்ல ஆரம்பித்தேன்.....



ஆம்,
லாராவால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இப்படி ஒரு கதையை கனவிலும் அவர் நினைத்திருக்க மாட்டார். தேம்பித், தேம்பி அழ ஆரம்பித்துவிட்டார். என் நெருங்கிய நண்பர்கள்கூட அறிந்திராத உண்மையை, இப்போது உலகமே தெரிந்துகொண்டுவிட்டது.

''ஆனால், செக்ஸ் என்றால் என்ன? இன்றுவரை எனக்குத் தெரியாது. என் வாழ்நாளில் ஒருபோதும் நான் செக்ஸ் இன்பத்தை அனுபவித்ததில்லை. அனுபவிக்கவும் முடியாது. நாங்கள் ஆண்களுக்காக, அவர்களின் தேவைக்காக மட்டுமே படைக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு கன்னிப் பெண் வேண்டும் என்பதற்காக ஐந்து வயதுக்குள்ளாகவே எங்கள் உறுப்பை அறுத்து, க்ளிட்டோரியஸை வெட்டி எறிந்துவிடுகிறார்கள். மீண்டும் எப்போது அவர்களுக்குத் தேவையோ, அதாவது முதலிரவுக்கு முன்பு வெட்டித் திறந்துவிடுகிறார்கள்.

3,000 ஆண்டுகளாக வெட்டவெளியில், எந்தவித மருத்தவ உபகரணங்களும் இன்றி, மயக்கமருந்துகூட இல்லாமல் இந்த அறுவை நடக்கிறது. சிலருக்கு கத்தி, கத்தரிக்கோல்கூட கிடைக்காது. கூமையான பாறைக் கற்கள்தான்.
நான் பிழைத்துவிட்டேன். ஆனால், லட்சக் கணக்கான என் சகோதரிகள்? அறுவையின்போது சிலர், அறுவைக்குப் பின் நோய்த் தொற்று ஏற்பட்டு சிலர், அப்படியே உயிர் பிழைத்தாலும் குழந்தைப் பேற்றின்போது சிலர் என அடுக்கடுக்காய் செத்துப் போகிறார்களே! அவர்களை யார் காப்பாற்றுவது?


மத அடிப்படைவாதிகளால், என் உயிருக்கு ஆபத்து என்று நண்பர்கள் அஞ்சுகிறார்கள். இருக்கட்டும் அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. பெண்களின் பிறப்றுப்பை சிதைக்கவேண்டும் என்று குரானில் எங்காவது கூறப்பட்டிருக்கிறதா? சொல்லுங்கள்!''


பேட்டி வெளியான பிறகு வந்த அழைப்புகளை அடுத்து, ஐ.நா. அரங்கில் இப்படித்தான் பேசினேன். இப்போது, பெண் உறுப்பு சிதைத்தலுக்கு எதிரான இயக்கத்தின் சிறப்புத் தூதுவராக ஐ.நா என்னை நியமித்திருக்கிறது.

அடிப்படைவாதிகளால், என் உயிருக்கு ஆபத்து இருப்பதும் தெரியும். முதலில், அந்தக் கிழவனிடமிருந்து கடவுள் என்னைக் காப்பாற்றினார். பிறகு சிங்கத்திடமிருந்து. அவர் என்னை உயிரோடு வைத்திருப்பதற்கான காரணம் இதுதான். ஒரு நாள், இந்தக் கொடுமையிலிருந்து அணைத்துப் பெண்களும் வெளியேறி சுதந்திரம் பெறுவார்கள்.

வாரிஸ், அதற்காகத்தான் உழைத்துக்கொண்டிருக்கிறாள்.

- Jesslya Jessly

(ரீடர்ஸ் டைஜஸ்ட் பத்திரிகையில் வெளியான கட்டுரையின் அடிப்படையில்
மொழிபெயர்க்கப்பட்டது.)