Friday, December 30, 2011

சிந்தனைக்கு:



கருத்துக்கோழைகள்
 
அல்லது
 
சக்கரைவியாதிப்புண்கள்!








ம்மவர்களிடம் ஒரு பழக்கம் உள்ளது.

 தமது உண்மையான உணர்வுகளை உள்ளபடியே நேர்மையாக வெளிப்படுத்தாமல் தானும் குழம்பி பிறரையும் குழப்பத்திற்குள்ளாக்குவது.


 ஒருவர் தனது கருத்துக்களை மற்றவரிடம் முன்வைக்கும்போது அந்தக் கருத்துகள் சிலவேளை கேட்டுக் கொண்டிருப்பவருக்கு உடன்பாடில்லாத ஒன்றாக இருக்கலாம். ஆனாலும் ஒரு மரியாதை கருதி அதனை கேட்டுக் கொண்டிருப்பதிலே தவறில்லை.


ஆனால் அதையும் மீறி, 'ஆமாம் நீங்கள் சொல்வது வேதவாக்கு' என்று பாசாங்கு செய்வதைப் பற்றி என்ன கூறலாம்? இப்படிச் செய்வதனால் கருத்தைக்கூறுபவரை விடவும் அதை மிகையாக ஆமோதித்து அவரைப் பிழையாக வழி நடாத்தும் இரண்டாம் நபர்தான் மோசமான பேர்வழி எனலாம்.


இது ஒருவகை என்றால் இன்னொரு வகையினர் இருக்கிறார்கள். இவர்கள் தங்களை ஒரு பெரிய அறிவாளி போலவும் அடுத்தவர்களின் கருத்துக்களை மதித்து நடப்பவர்கள் போலவும் நியாயமான உணர்வுகளையும் அக்கறையுடன் கேட்பவர்கள் போலவும் பாசாங்கு நாடகம் ஆடுவார்கள். ஆனால் உள்ளுக்குள் முற்றிலும் வேறு மாதிரி நடந்து கொள்வார்கள்.


இத்தகையோர் ஏதோ தாங்கள் தர்க்க ரீதியாகச் சிந்திப்பவர் எனக்காட்டி மற்றவர்களின் கவனத்தைக் கவரும் முனைப்புடன் நாமெல்லாம் சாதாரண வழக்கில் பயன்படுத்தாத சில கடினமான வார்த்தைகளை தேடியெடுத்து தமது புழக்கத்தில் வைத்துக் கொள்வார்கள்.


அதாவது யாருக்கும் இலகுவில் புரியாத பதங்களை அடிக்கடி உச்சரிப்பதன் மூலம் தானொரு அறிவுஜீவி போன்ற பிம்பத்தை மற்றவர்களிடம் உருவாக்குவதே அவர்களது ஓரே நோக்கம். ஆனால் உள்ளுக்குள் வெற்று வேட்டுக்களாக இருப்பார்கள். அவர்களது பேச்சுக்கும் உள்ளார்ந்த நம்பிக்கைளுக்கும் சம்பந்தமே இராது. உதாரணமாக பேச்செல்லாம் விண்வெளி ஓடங்கள் பற்றியிருக்கும் ஆனால் சிந்தனையோ மாட்டுவண்டி மேய்க்கும்.


 மேலே குறிப்பிட்ட இரு வகையானோரைத் தவிர பிறிதொரு விதமான மனிதர்களும் நம்மிடையே இருக்கின்றார்கள்.  இவர்கள் ஏற்கனவே நாம் முன்னிரு பந்திகளிலும் எடுத்தக் காட்டிய குணாம்சங்களோடு சேர்த்து இன்னொரு கேவலமான இயல்பையும் வைத்திருக்கிறார்கள்.


இவர்களுக்கு தம்மைத் தவிர வேறுயாரும் சிறந்த கருத்துக்களை முன்வைத்துவிடவோ கூடாது.  அப்படி வைத்து விட்டால் முகம் விடியவே விடியாது. அந்தக் கருத்துக்களை ஏற்கவும் முடியாமல் மறுக்கவும் திராணியில்லாமல் மனம் புழுங்கி உள்ளுக்குள் வெம்பித்திரிவார்கள். அல்லது அவ்வாறான  கருத்துக் கூறிக் கண்ணைத்திறந்தவர்களை வேறுவழியிலே (கருத்துகளாலல்ல) மட்டம் தட்ட வழிதேடியலைவார்கள்.


அப்படியும் எதுவும் கிடைக்காவிட்டால் தனக்கு வேண்டியவர்களிடம் அவரைப் பற்றி புலம்பித் திரிவது, புறம் பேசுவது, அவதூறு சொல்லி அலைவது போன்ற கீழத்தரமான வேலைகளில் ஈடுபடுவார்கள். இப்படியெல்லாம் செய்து தமது ஆற்றாமைக் காய்ச்சலைத் தணித்துக்கொள்ள முயல்வார்கள்.


ஆனால்  இதிலுள்ள பெரும் சோகம் என்னவென்றால் இந்தக் கோழைகள் ஒருபோதும் நிம்மதியடைவதில்லை. ஏனெனில் கருத்தால் கருத்தை வெல்ல முடியவில்லையே என்ற சோக முள் சக்கரை வியாதிக்காரனின் புண் போல எப்போதும் ஆறாமல் இருந்த அவர்கள் நெஞ்சை உறுத்திக் கொண்டேயிருக்கும்!

-Jesslya Jessly

No comments:

Post a Comment