Thursday, February 8, 2018

குறும்படம்

சிறுகதை எழுத்தாளரான நண்பர் மூதூர் மொகமட்ராபி முதன் முதலாக குறும்படம் ஒன்றை எழுதி இயக்கி வருவதாக தெரிவித்திருந்தார்.

கதைகள் எழுதுவது எத்தனை சுலபமான வேலை என்பது படப்பிடிப்புக்காக குழுவினரை ஒன்றுசேர்க்கும்போதே தனக்குப் புரிய ஆரம்பித்து விட்டதாகவும்  குழுவினரை வைத்து படப்பிடிப்பை நடாத்துவதற்கு தயார்படுத்துவதை க்யூப் எனப்படும் நிறங்களை ஒன்று சேர்க்கும் விளையாட்டுக்கு ஒப்பிட்டிருந்தார்.

படப்பிடிப்புக்கு அனுமதி பெற்று வந்தால் குறித்த தினத்தில் நடிப்பவருக்கு நேரமிருக்காது. அவருக்கு நேரமிருந்தால் ஒளிப்படக் கலைஞருக்கு வேளை இருக்காது. இருவருக்கும் வேளை வந்தால் குறித்த தினத்தில் வெளிச்சம் போதாதிருக்கும் அல்லது அனுமதி இருக்காது. இப்படியே பலநாட்கள் வெட்டியாக கடந்து கொண்டிருந்த காரணத்தால் அந்தவேளையில் தனது கோபத்தையெல்லாம் சேர்த்து குறும்படம் என்ற பெயரில் ஒரு சிறுகதையை எழுதியதாகவும் கூறினார்.





குறும் படம்
 
 
 
 


தியம் பன்னிரண்டு மணியளவில் நானும் நேசனும் வீடியோ கேமரா சகிதம் போஸ்ட் ஒபிஸிற்கு முன்னால் போய் இறங்கினோம்.

அந்தத் தெரு அதிக சனநடமாட்டமில்லாமல் இருக்க மேற்கு வானம் லேசாக இருட்டியிருந்தது.

'மழை வந்தால் பரவாயில்லையா, ஆதில்?' என்றவாறு கேமராவின் உறையைக் கழற்றி ஸ்டேண்ட்களை பிரித்தான் நேசன்.

'ஸ்க்ரிப்ட்ல மழையெல்லாம் கிடையாது. மண்டையப் பிளக்கிற வெயில் என்றுதான் இருக்கு'

'சரி, மழை வர்றதுக்குள்ள முதல் ஸீனை எடுத்திரலாம். மற்றதெல்லாம் போஸ்ட் ஒபிசுக்குள்ளதானே நடக்குது..'

'ஓமோம், ஆனா இவன் ரமீஸைக் காணல்லியே..?'

'பதினொன்றரைக்கே நிப்பேன் என்று பெரிசாப் பீத்தினானே.. இன்னும் என்ன செய்யிறானாம். பேசாம அந்த பாலசிங்கம் கேரக்டரை நீயே செய்திருக்கலாம்.. இவன எதுக்குடா போட்ட நீ?'

'நடிச்சிட்டே டைரக்ட்டும் பண்றது கஷ்டம்டா நேசன். தவிர, அந்த வயசாளி கேரக்டருக்கு அவன்தான் சரியா வருவான். ஆட்டோ வேற புதுசா வாங்கி வச்சிருக்காம் பாரு. விடலாமா? இல்லாட்டி அதுக்கு வேறயா அலையணும்'

'எதுக்கும் அவனுக்கு போனப் பண்ணு. மழை வந்திடப்போகுது..'

'இரு.. இரு, எப்பிடியும் வந்துருவான். பைக்கைத் தள்ளிட்டு போற கேரக்டருக்கு ஒரு சிங்களப் பொடியன கேட்டிருந்தமே. அவனைக் கூட்டிட்டு வரத்தான் போயிருப்பான்'

'அவன் எதுக்கு ஆதில்? மழை வந்திட்டா பைக்கை தள்ளிட்டு போறஸீன் இன்டைக்கே எடுக்கேலாது தெரியுமா?'

'அடப்பாவி, அதுக்குள்ள நீ கதையை மறந்திட்டியா? போஸ்ட் ஒபிசுக்குள்ள பாலசிங்கம் மெனக்கெடுற நேரம் பெக்ரவுண்ட்ல சனங்களும் அந்தச் சிங்களப் பொடியனும் நடமாடுறது தெரியணும். அப்பதான் பின்னால க்ளைமாக்ஸ்ல எல்லாம் பொருந்தி வரும் யோசிச்சுப் பாரு..'

'ஓ! அதை நான் யோசிக்கல்ல.. ஓகே அப்ப அவனைக் கூட்டிட்டே வரட்டும். அதுசரி, ஆட்டோ பொடியன் ரோல் யாரு செய்யிறது?'

'அதுக்கும் ரமீஸ்தான் பொறுப்பு. யாரையாவது இழுத்துட்டு வருவான்'

000



ரியாகப் பன்னிரன்டரைக்கு ரமீஸ் ஆட்டோவை ஓட்டிக்கொண்டு வந்து சேர்ந்தான். ஒரு சிங்களப் பையனும் மற்றொருவனுமாக இரண்டு பேர் உள்ளே இருந்தார்கள்.

நான் கேட்டுக்கொண்டபடி தொள தொளவென்ற ட்ரவுசரும் சேட்டும் அணிந்து வந்திருந்தான் ரமீஸ். அதைப் பார்த்ததும் சிரிப்பை அடக்கிக் கொள்வதற்காக
நானும் நேசனும் மறுபுறம் திரும்பிக் கொண்டோம்.

'ரமீஸ், நீ இப்ப பாலசிங்கம். கொஞ்சம் அப்பிடியே ஆட்டோவுலருந்து இறங்கி நடந்து வா பாப்பம்' என்று நான் கூற சிறிது தளர்வாக நடந்து வந்து நின்றான். அது எனக்கு திருப்தியாக இருக்கவில்லை என்றாலும் காட்டிக்கொள்ளாமல் புன்னகைத்தேன்.

'ரமீஸ், நீ பிறவி நடிகண்டா!'

கேமராவுக்குள்ளால் அவனைப் பார்த்து கூவிய நேசன், கட்டை விரலை உயர்த்திக் காட்டிக் கண்ணடித்தான்.

எல்லோரும் தயாரானதும் முதல் காட்சியை எடுப்பதற்கு வேண்டிய ஆயத்தங்களை செய்யலானேன்.

முதலில் ரமீஸின் ஆட்டோவை போஸ்ட் ஒபிசுக்கு முன்னாலிருந்த வேப்பமரத்தின் கீழே நிறுத்தினோம். நேசனின் பைக்கை நுழைவாயிலருகே ஸைட் ஸ்டாண்டில் நிற்பாட்டிவிட்டு திறப்பை விட்டு வைத்தோம். சிங்களப் பையனின் கையில் ஹெல்மெட் ஒன்றைக்கொடுத்து கையில் கொழுவிக்கொள்ளச் செய்தேன்.

ரமீஸை ஆட்டோவுக்குள்ளே இருத்தி தோள்பைக்குள்ளிருந்த மேக்-அப் செட்டைத் திறந்தேன். அவனுடைய காதோர கேசத்துக்கு சிறிது நரை நிறம் பூசியபடியே, 'டேய் பாலசிங்கம், தலை நரைச்சிருந்தா மட்டும் காணாது.. ஒரு அம்பது அம்பத்தஞ்சுதாண்டின வயசாளி மாதிரி உன்ட பொடி-லேங்வேஜும் சரியா இருக்கணும் விளங்குதா?' என்றேன் நான்.

'சும்மாவே இவன் அப்பிடித்தானேடா இருக்கிறான். ரெண்டு வருசம் போனா மச்சானுக்கு மேக்-அப்பே தேவைப்படாது' என்றான் அருகிலிருந்த நேசன்.

'ஒதச்சனென்டா கேமராவோட போஸ்ட் மாஸ்டர்ர றூமுக்குள்ளபோய் விழுவடா மவனே. பாவம், படமெடுக்கிறீங்களேன்டு நடிக்க ஒத்துக்கிட்டா எல்லாருமாச் சேர்ந்து கலாய்க்கிறீங்களாடா..?' என்று காலை உயர்த்தி உதட்டைக்கடித்தான் ரமீஸ்.

'டேய் அடங்குடா! ஓவரா ஸீன் போடாம'

'சரி, ரெண்டுபேரும் கொஞ்சநேரம் சும்மாயிருங்க. ரமீஸ், எப்பிடிப் பாத்தாலும் நீதான மச்சான் படத்துக்கு ஹீரோ. என்ட அடுத்த ப்ரொஜெக்ட்லயும் நீதான். அதில நீ ஒரு யுத் தெரியுமா? ப்ரேக் டான்ஸ்லாம் வச்சிருக்கிறன்'

'யேசுவே, என்னால அதையெல்லாம் பாக்கேலாது.. கேமராவுக்கு வேறாளப் போட்டுக்க ஆதில்.' என்று நேசன் முகத்தை சோகமாக்கி மார்பில் சிலுவை கீற அவனை முறைத்தான் ரமீஸ்.

'நேசன் நீ ஒண்ணு செய்யிறியா.. ரோட்டுக்கு அந்தப்பக்கம் போய் அங்கருந்து போஸ்ட் ஒபீஸ ஒரு லோங் ஷொட் எடுத்திட்டுவா.. நேம் போர்ட் க்ளியராத் தெரியணும் ஓகே?'என்று அனுப்பிவைத்தேன்.

அவன் அகன்றதும், 'இஞ்ச பாரு ரமீஸ், நேசனை உனக்குத் தெரியுந்தானே.. அதையெல்லாம் ஸீரியஸாக எடுத்துக்காதே' என்றேன்.

'இல்லடா ஆதில், இவன் ஓவரா கலாய்க்கிறான். உனக்காகத்தான் பாத்திட்டிருக்கிறன். கொஞ்சம் சொல்லி வை' என்றான் ரமீஸ் சிறிது கோபத்தோடு.

இருவரையும் ஒருவாறு சமாதானப்படுத்தி எல்லோரையும் அடுத்த காட்சிக்குத் தயாராக்கினேன்.

நுழைவாயிலில்; நின்றிருக்கும் பாலசிங்கம் மோட்டார் சைக்கிளிலிருந்து திறப்பை உருவியெடுத்தபடி போஸ்ட் ஒபீசுக்குள்ளே நுழையும் காட்சியை படமாக்கினோம். முதல் தடவை ரமீஸ் கேமராவைக் கடைக்கண்ணால் பார்த்து சிரித்து விட்டான். இரண்டாவது டேக்கில் ரமீஸ் சரியாகச் செய்ய நேசன் தயாராகாமல் சொதப்பினான்.

ஒருவழியாக மூன்றாவது டேக் திருப்தியாகி எல்லோரும் ஆசுவாசப் பெருமூச்சுடன் நிமிர்ந்தால், 'எய் மாஸ்டர், மூட்ட ஹெல்மெட் துன்நெத்த' என்ற குரல்கேட்டு எல்லோரும் திரும்பினோம்.

அங்கு ரமீஸ் அழைத்து வந்த அந்த சிங்களப் பையன் புன்னகைத்தவாறு பின்னால் நின்றிருக்க எல்லோரும் ஒருவருக்கொருவர் முகத்தைப் பார்த்துக்கொண்டோம்.

'அதானே? நானும் கேக்க மறந்திட்டன். பைக்கை வச்சிட்டு போறவருட கையில ஹெல்மெட் இருக்கணுமே ஆதில்?'

நான் முறைக்க, நேசன் 'பொத்திட்டு நடிக்கிறியா?' என்று சைகையால் ஏதோ ரமீஸுக்கு காண்பித்தான். உடனே அவன் சிங்களப் பையனைத் தோள்மீது கைபோட்டு தனியாக தள்ளிச் சென்றான்.

நானும் நேசனும் போஸ்ட் ஒபிசுக்குள்ளே எடுக்கவேண்டிய காட்சிகளுக்கு வேண்டிய ஆயத்தங்களை செய்யலானோம்.

மூன்று நாட்களுக்கு முன்பே அனுமதி கோருவதற்காக போஸ்ட் மாஸ்டரை அவரது அலுவலகத்தில் சந்திந்தோம். ஆளைப் பார்த்ததுமே நம்பிக்கை போய்விட்டது. பெருவிரலின் புறப்பக்கம் போலிருந்தது அவரது முகம். கொடுவாள் மீசை, கிருதா எல்லாம் வைத்து ஏறக்குறைய துப்பாக்கி இல்லாத சந்தனக்கடத்தல் வீரப்பனைப் போலிருந்தார். காகம் கொண்டு வந்து போட்ட மீன் தலையைப் பார்ப்பது போல இருவரையும் பார்த்தார்.

நல்லவேளையாக நேசனுக்கு ஒரு சித்தப்பா இருந்து தொலைத்தார். அவருடைய க்ளாஸ்மேட்டாக இருந்த தமயந்தி எனும் ஒரு பெண்மணி அங்குதான் வேலை செய்து வந்தார். எதேச்சையாக போஸ்ட் மாஸ்டரின் அலுவலகத்திற்குள் வந்த ஆன்ரி தமயந்தி எங்களைக் கண்டு பேசியதைப் பார்த்த ச.க. வீரப்பன் என்ன நினைத்தாரோ தெரியவில்லை சட்டென அனுமதி தந்துவிட்டார். ஆனாலும் தன்னுடைய ஊழியர்களின் வேலைகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடைஞ்சல் தராதபடி எடுத்தால் சரி என்ற நிபந்தனையோடு அரைமணி நேரம் மட்டுமே வழங்கியிருந்தார்.

'ரெடியா ஆதில்..? ரமீஸ் எங்கே?' கேமராவை ஸ்டாண்டில் வைத்து விட்டு கேட்டான் நேசன். மதியவேளை என்பதால் உள்ளே அலுவகத்தினுள்ளே வாடிக்கையாளர்கள் குறைவாக இருந்தார்கள்.

'வெளியில மரத்தடியில நிக்கிறான்.. வந்திடுவான். நீ வா ஒருக்கா பிஎம்முக்கிட்ட சொல்லிட்டு வருவோம்' என்று அழைத்தேன்.
'ஐயோ அந்த வீரப்பனுக்கிட்டயா? வேணாம்டா ஆதில். அதான் அன்றைக்கு கேட்டாச்சே..?'

'இல்லடா, எதுக்கும் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு வந்து எடுப்பம்' என்றேன் நான்.

'சரி, இரு போனை எடுத்திட்டு வாறன்'

இருவரும் அறைக்கதவை மெதுவாகத் தட்டி விட்டு மெல்ல உள்ளே சென்றோம். அங்கே நாங்கள் கண்ட காட்சி இருவரையும் தூக்கி வாரிப்போட்டது. மூன்று நாட்களுக்கு முன்பு பார்த்த வீரப்பன் அறையின் அலுமாரி இருக்கும் மூலையில் எங்களுக்கு முதுகைக் காண்பித்தவாறு தமயந்தி ஆன்ரியை அணைத்தபடி நின்றிருந்தார். நாங்கள் வந்ததைக்கூட கவனிக்காமல் இருவரும் ஒருவரையொருவர் தழுவியவாறு கண்கள் மூடி மெய்மறந்து நின்றிருந்தனர்.

அதைப்பார்த்ததும் நான் வெலவெலத்து வெளியே ஓடிவந்து விட்டேன். ஆனால் நேசன் சிறிது நேரம் கழித்துத்தான் வெளியில் வந்தான். அவனுடைய நமுட்டுச் சிரிப்பே அந்தக்காட்சியை நின்று நன்றாக ரசித்து விட்டு வந்திருக்கிறான் என்பதைக் கூறியது.

'என்ன கொடுமைடா நேசன்? இப்ப என்ன செய்யிறது?'

'சிவபூசையில நமக்கேன் கரடி வேலை? வா பேசாமப் போய் படத்தை எடுப்பம்'
நாங்கள் திரும்பிச் செல்ல நினைத்த கணத்தில், 'யெஸ் கமின்' என்ற கண்டிப்பான குரல் உள்ளிருந்து கேட்டது. வேறுவழியின்றி மீண்டும் அறைக்குள் நுழைந்தோம்.

இப்பொழுது அந்தப் பெண்மணி எதுவுமே நடவாதது போல எங்களைப்பார்த்து புன்னகைத்தபடி மேசையின் ஓரத்தில் நின்று ஒவ்வொரு பைலாக நீட்டிக் கொண்டிருக்க போஸ்ட்மாஸ்டரும் அவற்றில் சாவதானமாக கையெழுத்திட்டுக் கொண்டிருந்தார்.

'யெஸ் போய்ஸ், பீ ஸீட்டட். ஹவ் கேன் ஐ ஹெல்ப் யூ?' என்று அவர் வெகுகூலாக கேட்க, சற்று முன்பு நாங்கள் கண்டதெல்லாம் காட்சிப் பிழையோ என்ற சந்தேகமே வந்து விட்டது.

அறையை விட்டு வெளியே வந்ததும், 'யப்பா! இவர்தாண்டா ஆதில் ஒலக நாயகன்' என்றான் நேசன்.

000
 
 
பால் ஊழியர்களின் ஒத்துழைப்புடன் பாலசிங்கமாக நடிக்கும் ரமீஸ் கவுண்டரின் முன்னால் நின்று முத்திரை வாங்குவதையும் கடிதமொன்றை பதிவுத் தபாலில் இடுவதையும் பலகோணங்களில் படமாக்கினோம்.
வெளியில் வந்த பார்த்தபோது மழைமேகங்கள் விலகி வெய்யில் எறித்துக் கொண்டிருந்தது. படப்பிடிப்பைத் தடையில்லாமல் தொடரலாம் என்ற சந்தோசத்தில் 'எடுத்த ஸீனெல்லாம் நல்லா வந்திருக்காடா நேசன்' என்று கேட்டான் ரமீஸ்.

'இதெல்லாம் ஒரு ஸீனாடா ரமீஸ்..? உள்ள பாத்தமே ஒரு ஸீன். அது ஸீன்! என்ன ஆதில்?' என்று கெக்கலித்துச் சிரித்தான் நேசன்.

'அப்படி என்னடா பாத்தீங்க?'

'அதெல்லாம் கேக்கப்படாது மிஸ்டர் பாலசிங்கம், பாத்துத்தான் தெரியணும்?'

'நேசன் நீ சும்மாவேயிருக்க மாட்டியா? ரமீஸ் இங்க பார், நீ வெளியில வந்தா பைக் இருக்காது. முகத்தில ஷொக் தெரிய அக்கம் பக்கத்தில தேடணும்.. ஓகே?'

'ஓகே, நான் ரெடி!'

'இரு, க்ளோசப் ஷொட்டுகளுக்கு மட்டும் மைண்ட் வொய்ஸ்ல ரெகோடட் டயலாக் இருக்கு. அது உன்ட பொக்கட்லருக்கிற போன்ல ப்ளேயாகும். அதுக்கேற்றபடி முகத்தை வச்சுக்கோ.. ஓவராக்ட் மட்டும் பண்ணிடாத சரியா?' என்றேன்.

அந்த காட்சி பிரச்சினையின்றி படமானது. ஆனால் ரமீஸுக்கும் ஆட்டோ ட்ரைவராக நடிக்கும் பையனுக்குமிருந்த அடுத்த காட்சி உயிரை எடுத்தது.
'நீங்களாண்ண டைரக்ட் பண்றீங்க..?' என்று கேட்டான் அந்த ஆட்டோ பையன்.
அவனை ஒருதடவை உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை பார்த்தேன்.
அவனுக்கு மிஞ்சிப்போனால் பதினெட்டு வயதுக்கு மேலிருக்காது. ஒரு காதில் தோடு மணிக்கட்டுகளில் ஏராளமான வண்ணப்பட்டிகள் அணிந்து கழுத்தில் பச்சையும் குத்தியிருந்தான். செங்கபில டீசேர்ட் அணிந்து தலை முடியை ஒருவிதமாய் கத்தரித்து பார்ப்பதற்கு மரங்கொத்தி போலிருந்தான்.

'ஓம், ஏன் தம்பீ?'

'இல்லண்ண, படத்தில லவ் சீன், பாட்டெல்லாம் வைக்கல்லயா?'

'வச்சுத்தான் இருந்தனான்.. அதுக்கு நடிக்கிறதுக்கு ஒரு அழகான ஆம்பிளை கிடைக்கல்லண்டு பிறகு கட் பண்ணிட்டன். நீங்க நடிக்கிறீங்களா?'

'போங்கண்ண பகிடி பண்ணாம.. ஒரு பைட் சீனாவது வச்சிருக்கலாந்தானே.. நான் கராத்தே பைட்லாம் நல்லா செய்வன். படத்தைப் பாத்திட்டு நம்ம பசார் பொடியன்கள்லாம் கேப்பாங்க. அதான் கேட்ட நான்'

'அப்பிடியா? அடுத்த படத்துல லவ்சீன், பைட், கார் சேஸிங்லாம் இருக்கு. இப்ப நான் சொல்றதை மட்டும் செய்வம்'

ஒரேயொரு வீடியோ கேமராவை வைத்துக்கொண்டு ஆட்டோவின் உள்ளிருந்தும் வெளியேயிருந்தும் நிறைய ஷொட்டுகள் மாற்றி மாற்றி எடுக்க வேண்டியிருந்த காரணத்தால் நிறைய தாமதம் ஏற்பட்டது. போதாதற்கு ஆட்டோ பையன் வேறு நான் சொல்லிக் கொடுப்பதை மனதில் வாங்காமல் நடிப்பிலும் உதட்டசைவிலும் சொதப்பிக் கொண்டேயிருந்தான்.

நேசனால் கேமராவைத் தனியாக சமாளிக்க முடியவில்லை. எனவே சிங்கள பையனையும் உதவிக்கு வைத்துக்கொள்ள வேண்டியிருந்தது. கோல்ஃப் விளையாட்டில் ஸ்டிக்குகளை சுமப்பவன் போல அவன் நேசனின் போன், கேமரா பாகங்களையெல்லாம் காவிக்கொண்டு பின்னால் திரிந்தான்.
அன்றைய நாளுக்குரிய படப்பிடிப்பு நிறைவடைய இன்னும் இரு ஸீன்கள் மட்டுமேயிருந்தன.

போஸ்ட் ஒஃபிஸ் அருகேயுள்ள நாற்சந்திவரையில் ரமீஸ் விரக்தியுடன் நடந்து செல்வதையும் அங்கு நின்று கடந்து போகும் பைக்குகளையெல்லாம் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருப்பதையும் படம்பிடித்து விட்டால் அதற்கடுத்த காட்சியையும் முடித்துவிடலாம்.

'சந்திக்குப் போய் நிற்பமா, ஆதில்?'

'கொஞ்சமிரு, முதல்ல சணச பேங்க் பில்டிங் மொட்டைமாடிக்கு ஏறி டொப் ஆங்கிள் ஷொட்டை முடிப்பம். அதுக்குப் பிறகு டௌன் ஷொட்ஸ் எடுத்துக்கலாம்.. எடிட்டிங்ல மாத்திக்கலாம்'

'சரி, பரவாயில்லை. இதுவரைக்கும் எடுத்ததெல்லாம் தொடர்ச்சியாத்தான் வந்திட்டிருக்கு.. ம்.. இப்பிடிச் செய்தாலென்ன ஆதில்?'

'எப்பிடி?'

'ரமீஸ் போஸ்ட் ஒஃபீசுலருந்து சந்திக்கு வர்ரதை மேலருந்து ஸும் பண்ணி ரன்னிங்ல எடுப்பம். லோங் மிடில் ஷொட்டெல்லாம் அதுக்குப் பிறகு வரட்டுமே. அடுத்த ஷொட் க்ளோசப்பும் இருக்கல்லவா?'

'குட் ஐடியா நேசன், இங்கருந்து எடுத்தா யாரும் கேமராவைக் கவனிக்கவும் மாட்டான். நேச்சுரலாகவும் இருக்கும். அதுசரி, எங்கடா உன்ட புது அஸிஸ்டென்ட் அந்த சிங்களப் பொடியன்?'

'போனுக்கு பெற்றி போய்ட்டு. புதுசு மாத்திட்டு வரச்சொல்லி நாந்தான் கடைக்கு அனுப்பியிருக்கிறன்'

'பெறுமதியான போன் அது. அதை அவனை நம்பிக் குடுத்திருக்க.. ஏதாவது பண்ணிடப் போறான் கவனம்டா. அதுசரி, நல்ல ஆள்றா நீ, நடிக்கிறதுக்கு வந்தவனை எடுபிடிக்கு வச்சிட்டிருக்க. ஒரு கலைஞனை இப்பிடியெல்லாம் இன்ஸல்ட் பண்ணக் கூடாது தெரியுமா?' என்றேன் வேடிக்கையாக.

'ஓமடா, பைக்கைத் தள்ளிட்டு இன்னர் ஹாபர்
ரோட்டுல நடக்கிறவனெல்லாம் ஒரு கலைஞன்.. இதெல்லாம் ஒரு நடிப்பு? இத நானே செய்வனே'

'அப்பிடியா? ஓகே, இப்ப உன்ட கேமராவை பறிச்சு அவனுக்கிட்ட குடுத்திட்டு பைக்கை உன்ட கையில தர்ரேன் தள்ளுறியா?'

'இப்பவும் அவன் நம்ம ஷுட்டிங்கை படம் புடிச்சிக்கிட்டுத்தான் இருக்கிறான் தெரியுமா?'

'என்னடா சொல்ற?'

'நாந்தான் என்ட போனைக் குடுத்து ஒரு ஒரமா நின்டு நம்ம பண்றதையெல்லாம் ஒண்ணும் விடாம எடுக்கச் சொல்லியிருக்கன். மேக்கிங் ஒஃப் 'ஆயிரத்தில் ஒருவன்' எப்பிடி நம்ம ஐடியா?' என்று கொலரைத் தூக்கி விட்டுக்கொண்டான் நேசன்.

'எப்பிடிடா நேசன்? இது எனக்கே ஸ்ட்ரைக் ஆகல்ல பாரு. பேய்க் காய்டா நீ! உன்னாலதான்டா நம்ம டீமுக்கு பெரிய பேர் வரப்போகுது' என்று அவன் தோளில் தட்டிக் கொடுத்தேன்.

'சரி, வா ஆதில் பில்டிங்ல ஏறுவோம்'

'ஒரு நிமிஷம் இரு நேசன், ரமீஸுக்கு ஷொட் மாத்தினதைப்பத்தி இன்ஸ்ட்ரக்ஷன் குடுத்திட்டு வாறன்'

'சரி, அவன்ட பொக்கட்லருக்கிற போனை அவுட் ஸ்பீக்கர்ல போட்டா மேல நின்று கொண்டே குடுக்கலாம். சொல்லிட்டு கெதியா வா'

000
 
 
 
றுநாள் பிற்பகல் ஒன்றரை மணி.

இரவு வெகுநேரம் வரை விழித்திருந்து கம்ப்யூட்டரில் வேலை பார்த்த காரணத்தால் காலை பத்து மணிக்குத்தான் இருவரும் எழுந்திருந்தோம். முதல் நாள் படப்பிடிப்பின் மிகுதிக் காட்சிகளை எடுப்பதற்காக மீண்டும் போஸ்ட் ஒஃபீஸுக்கு முன்னால் ஒன்று கூடுவதாக உத்தேசித்திருந்தோம்.

நானும் நேசனும்தான் முதலில் வந்தோம். நாங்கள் வந்தபோது அந்தச் சூழல் ஏதோ வித்தியாசமாக சோகையாக இருப்பது போலத் தோன்றியது. ஆனால் என்னவென்றுதான் தெரியவில்லை.

இருபது நிமிடம் கழித்து ரமீஸ் ஆட்டோவை நிறுத்திவிட்டு இறங்கி வந்தான்.

'ஏய் என்னடா தனிய வர்றா.. அவனெங்க?'

'யாரு? நேத்து ஆட்டோ பொடியனா நடிச்சவனா?'

'உன் மண்டை, அவனுக்குத்தான் இனி ஸீன் இல்லியே. அந்த சிங்களப் பொடியனெங்கடா?

'அவனா? அவன் தங்கியிருக்கிற இடத்துக்கு போயிட்டுத்தான் வாறேன். காலையில பேக்கை எடுத்திட்டு எங்கேயோ போனானாம். என்று சொன்னான்கள்.. நான் நெனைச்சேன் ஒருவேளை இஞ்சதான் வந்திருப்பானென்டு. அப்ப அவன் இஞ்ச வரல்லியா?'

'யா அல்லாஹ்!' என்று நான் அப்படியே தலையில் கை வைத்து தரையில் குந்திவிட்டேன்.

நேசனின் முகத்தில் கடுகு வெடித்தது.

'ஆண்டவனே, இன்டைக்கு எடுக்கிற ஸீனெல்லாம் உங்க ரெண்டு பேருக்கும்தான் தெரியுமா உனக்கு? எல்லாம் கொம்பினேஷன் ஷொட்ஸ். இனி வேறாளையும் போடேலாது. கொன்டினியூட்டி மிஸ்ஸாகிரும்' புலம்பினான் நேசன்.

'சே! காலையிலயே நீ அவனுக்கிட்ட பேசியிருக்கலாமே ரமீஸ். சரி, அவனுக்கு நம்பர் இருக்குதானே? உடனே போனைப் போடு'

'அங்கேயே வச்சு அடிச்சுப் பாத்திட்டுத்தான் வாறேன். 'அடைய முடியவில்லை' என்று வருது. நீ வேணா அடிச்சுப்பாரு நேசன்'

'எனக்கு வர்ற கோவத்துக்கு..'

'கூல்டவுன் நேசன், சிலவேளை அவன் இஞ்சதான் பக்கத்துல எங்கேயாவது வந்து நிக்கிறானோ என்னவோ.. நேற்றும் இஞ்ச வேலை செய்யிற மிகிந்தபுர பெட்டையோட சிரிச்சுப் பேசிட்டிருந்தான். ரமீஸ், நீ ஒருக்கா போஸ்ட் ஒஃபிசுக்குள்ள போய்ப்பாத்திட்டு வா' என்று அவனை அனுப்பி வைத்தேன்.
சில நிமிடங்கள் கழித்து ரமீஸ் ஓட்டமும் நடையுமாய் திரும்பி வந்தான்.

'என்னடா அவன் இருந்தானா?'

'ஆதில் நீ சுணங்காம பைக்கை எடு. டேய் நேசன், நீ கேமராவையெல்லாம் எடுத்திட்டு ஆட்டோவுக்குள்ள கெதியா ஏறு பாப்பம்' என்று ஆட்டோவுக்குள் ஏறிக்கொண்டு ஸ்டார்ட் செய்தான் ரமீஸ். அவன் முகம் பேயறைந்தவன் போலிருந்தது.

'டேய் எங்கடா போற? லூசா உனக்கு?' வெடித்தான் நேசன்.

'டேய், அங்க நிலைமை சரியில்ல. மூடிட்டு ஏறு கெதியா!' என்று பதறினான் அவன்.

'டேய் ரமீஸ் நில்றா! என்னென்டு விசயத்தைச் சொல்றா முதல்ல' என்று நான் அவனைமறித்தேன்.

'அதுக்குள்ள வேலை செய்த ஒரு ஆன்ரியோட வீடியோ ஒண்ணு இரவு பேஸ் புக்ல வைரலாகியிருக்குதாம். அதைப்பாத்திட்டு அவ காலையில வீட்ல தூக்கில தொங்கிட்டாவாம். போஸ்ட் மாஸ்டரை பொலீஸ் அரஸ்ட் பண்ணியிருக்கு. அந்த வீடியோவை அப்லோட் செய்தவனை போலீஸ் தேடிட்டிருக்கிறாங்களாம். வாங்கடா முதல்ல இஞ்சருந்து போவம்' என்றான் ரமீஸ்.

-மூதூர் மொகமட்ராபி