Tuesday, September 30, 2014

சிறுவர் தினம் - 2014






காலம் மாறிப் போச்சு!







காலம் இப்போ மாறிப்போச்சு தோழா
காசுக்கெல்லாம் அடிமையாச்சு தோழா
சிறுவர் எங்கள் உரிமையெல்லாம் தோழா - வெறும்
ஒருநாள் கூத்தாய் ஆகிப்போச்சே தோழா!


ஓடியாட நேரமில்லை தோழா - எம்மை
ஓய்வில்லாமல் கொல்லுகின்றார் தோழா
பட்டி மாடு ஆட்டைப்போல தோழா - தினம்
காலை மாலை அடைக்கின்றாரே தோழா!


புத்தகப்பை பாரமாச்சு தோழா
பாலர் முதுகும் இங்கே கூனிப்போச்சு தோழா
பள்ளிச்செலவு கூடிப்போச்சு தோழா - ஆனால்
படிப்பின் நோக்கம் மாறிப் போச்சே தோழா..!


பள்ளிப்பாடம் கூடிப்போச்சு தோழா - ஆனால்
கல்வித் தரமோ இறங்கிப்போச்சு தோழா
பாடுபட்டு படித்தபோதும் தோழா - ஓர்
பலனும் அதிலே இல்லையடா தோழா!


கோயில் வாசல் உண்டியலோ தோழா - எங்கள் தலை
குப்பை நிறைக்கும் தொட்டியாமோ தோழா
வாழும் கலை சொல்லிடாமல் தோழா - வெறும்
ஏட்டுச்சுரைக்காய் சமைக்கின்றாரே தோழா..?


தேடிக் கற்கும் நாளும் வந்தால் தோழா - கல்வி
தேனைப்போல இனிக்குமேடா தோழா
வேறு எதுவும் வேண்டாமடா தோழா -முதலில்
எம் கட்டுகளை அவிழ்க்கச் சொல்லு தோழா!


-மூதூர் மொகமட் ராபி

Thursday, September 25, 2014

திருகோணமலை இளைஞன் S.S. லிங்கேஸ்வரனின் 'வலயம்' குறும்படம்






டந்த 20.09.2014 சனிக்கிழமை மாலை திருகோணமலை நகரசபை மண்டபத்தில் வலயம் எனும் குறும்படம் திருகோணமலை நகர முதல்வர் அவர்களால் வெளியிட்டு வைக்கப்பட்டது. அலஸ்தோட்டத்தைச் சேர்ந்த S. S. லிங்கேஸ்வரன் எனும் இளைஞனின் நெறியாள்கையின் கீழ் அவருடைய நண்பர்கள் குழு மற்றும் இரு பாடசாலைச் சிறார்கள் நடித்திருந்தனர்.



இந்தக் குறும்படத்தை விமர்சிப்பதற்கு முன்பு ஒன்றைத் தெளிவாகச் சொல்லி விடுகின்றேன். திரைப்படம் சார்ந்த போதிய அறிவோ அனுபவமோ இல்லாதநிலையிலே குறைவான நிதி மற்றும் தொழினுட்ப வசதிகளை வைத்துக்கொண்டு குறும்படம் ஒன்றை உருவாக்க நினைத்த இளைஞன் லிங்கேஸ்வரனினதும் அவரது குழுவினரதும் தைரியத்தை முதலிலே பாராட்டியாக வேண்டும்.


முதன்முதலாக ஒரு சைக்கிளை சுயமாக ஓட்டிப்பார்க்கும் சிறுவன் பலதடவை விழுவதும் மீண்டும் எழுந்து முயல்வதுமான அந்தப் புது அனுபவத்தைப்போல இந்த இளைஞனும் இந்தத்துறையில் இறங்கியிருக்கின்றான். அவனுடைய முதல் முயற்சியிலேயே அவனுடைய முழுத்திறமையையும் மட்டிட முடியாது. மட்டிடவும் கூடாது.
இனிமேல் படத்திற்கு வரலாம்..


'வலயம்' படத்தின் கதை நமது மண்ணின் சூழலுக்கு சம்பந்தமில்லாத ஒன்று என்பது ஆரம்பக் காட்சியிலேயே புரிந்து விடுகின்றது. ஆம் இப்போதெல்லாம் தமிழக சினிமாவில் ஒரு போக்காக ஆகிவிட்ட கேங்ஸ்டர் & டாஸ்மாக் வகைக் கதை.

அதாவது சட்ட விரோத செயல்களைப் புரிந்துவரும் பாதாளக்கோஷ்டி ஒன்றில் இயங்கும் துப்பாக்கி இளைஞர்கள் படம் முழுவதும் சாராயம் குடிக்கின்றார்கள். மதுபோதையுடன் பணத்துக்காகவும் அதிகாரத்துக்காகவும் சந்தர்ப்பம் வாய்க்கும்போதெல்லாம் தமது சகாக்களுக்கு துரோகம் செய்து போட்டுத்தள்ளுகின்றனர். இது ஒரு வளையமாக நடந்துகொண்டிருப்பதை 23 நிமிடத்துக்குள் காண்பிக்கின்றார்கள்.


படத்தின் ஒளிப்பதிவு நன்றாகவுள்ளது. இசை பெரும்பாலும் கதையின் தன்மையை ஒட்டிச் செல்கின்றது. எடிட்டிங்கும் பரவாயில்லை. ஆனால் உரையாடல் படத்தின் நிச்சயமாக விமர்சனத்திற்குரியது.

கண்களை சிறிது மூடி படத்தின்  உரையாடலை மட்டும் ஒருவர் கேட்க நேர்ந்தால் தான் பார்ப்பது ஒரு தென்னிந்திய சினிமாவைத்தான் என்று கேள்வி கேட்காமல் நம்பிவிடுவார். அந்தளவுக்கு படத்தில் கோடாம்பாக்கம் மற்றும் மதுரைத் தமிழ் கோலோச்சுகின்றது.

உதாரணத்திற்கு ஒரு காட்சி:

கதவு தட்டப்படுகின்றது. வந்திருப்பது யாரென்று பார்க்கும்படி அடியாட்களை பணிக்கின்றார் போதையிலிருக்கும் தலைவன். கதவு திறக்கப்பட ஒருவன் கையிலே பையுடன் நிற்கின்றான். உள்ளே வந்து,


'இதுல 10 லச்சம் பணம் இருக்கு. அண்ணன் குடுத்திட்டு வரச்சொன்னாப்பல' என்கின்றான். (இதிலே 'சொன்னாப்பல' என்ற வார்த்தையை கவனியுங்கள்) சரி, அதே காட்சியில் தொடரும் உரையாடலை கேட்போம்.

'பணமெல்லாம் கரெக்டா இருக்கில்ல'

' இருக்கும்ண வேணுண்னா எண்ணிப்பாருங்க!'

'சரக்கு சாப்பிர்றியாப்பா!'

'பரவால்லண்ண'

'யேய்.. அவன் எங்க?'

'கடைக்காரன் வாட்டர் பாட்டில் வக்க மறந்திட்டாண்ண.. இட்டான்டு வரப்போயிருக்கான்..'

'சரிண்ண.. நான் கௌம்பறேன்!'

இப்படிப் போகின்றது அந்த உரையாடல்.

இந்தப் பேச்சு-வழக்கு நமது திருகோணமலையை அண்டியுள்ள எத்தனையோ தமிழ் கிராமங்களிலே எங்காவது பேசப்படும் ஒன்றா..? அவ்வளவு ஏன் இந்திய வம்சாவழியினர் வாழ்ந்துவரும் மலையகம் நீங்கலாக நமது நாட்டில் எந்தப்பிரதேசத்திலாவது பேசப்படுகின்றதா..?


மரத்திலே அழகான பூக்களைக் காணும் நமது தமிழ் பேசும் ஒரு சிறுமி எப்படி குதூகலிப்பாள்..?

'அங்க பாரு.. எவ்வளவு வடிவான பூ..!'  பொதுவாக இப்படித்தானே..

ஆனால் இந்தப்படத்தில் வரும் நம்மூர்ப் பாடசாலைச் சிறுமி, 'ஐ! பூவு!   என்கிறாள். அதுமட்டுமல்ல,


"டேய் ஜீவாஅதை ஏறிப் பிச்சித் தாவன்" என்று கேட்பதற்குப் பதிலாக  'டேய் ஜீவா பறிச்சிக் குடுரா!' என்கிறாள்.

கூட வரும் சிறுவனோ 'முடியாது.. முடியாது இம்மாம் பெரிய ஒயரம் இஞ்ச பாரு என்னால மரல்லாம் ஏற முடியாது' என்கின்றான்.


இந்த உரையாடல்களிலே வருகின்ற வார்த்தைகளும் அதை உச்சரிக்கும் பாங்கும் தென்னிந்திய தமிழ் பிரதேசத்திற்குரியது என்பதை படங்களைப் பார்க்கும் சிறுகுழந்தையும் கூறிவிடும்.


இப்படி அந்நியத்தனமாய் படம் எடுப்பது யாருக்காக....?


பெரும் முதலாளிகளின் கைகளிலே இருந்த வந்த சினிமா எனும் வலுவான ஊடகம் விஞ்ஞான வளர்ச்சியின் பேறாக குறும்படம் எனும் வடிவில் தற்போது சாமானியர்களும் கையாளத்தக்கதாகியிருக்கின்றது. இதனை நாம் நம்முடைய மண்ணின் மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்காமல் வெறும் ஃபேன்டஸி காட்சிகளை எடுத்து வீணடித்துக் கொண்டிருப்பது நியாயமா?


ஷங்கர் போல படம் எடுப்பதற்கு நாம் தேவையில்லை. அதற்கு ஷங்கரே போதும். விஜய், சூர்யா, அஜீத் போல நடிப்பதற்கு அவர்களே போதும். யோசித்துப் பாருங்கள் நம்மவர்களை வைத்து மதுரைத்தமிழில் உரையாடுவதற்குப் பயிற்சியளித்து நம்மூரிலே படம் பிடிப்பதற்குப் பதில் அதை அவர்களே அவர்களது ஊரில் இன்னும் நன்றாகச் செய்யவிடலாமே.


எந்தவொரு படைப்பையும் உருவாக்க நினைக்கும்போது நாம் நம்முடைய கால்களை நமது மண்ணிலே ஊன்றிக்கொள்ள வேண்டும். உலகம் நமக்கு கொடுத்திருக்கும் அறிவியல் வளர்ச்சியை நம்முடைய தனித்துவத்தை வெளிப்படுத்துவதற்கு பயன்படுத்துவதுதான் நியாயம். அதைவிட்டு எல்லாவற்றையும் அப்படியே பிரதி பண்ணவேண்டும் என்று நினைத்தால் இறுதியில் காகம் அன்ன நடைபோட்ட கதையாகத்தான் இருக்கும்.

குறும்படம் எடுப்பதை நாகரீகமாகவும் தமது அறிவுஜீவித்தனத்தை பறைசாற்றிக்கொள்வதற்குரிய வழிமுறையாகவும் பின்பற்றுவது தற்போது ஒரு (Fashion) போக்காகி விட்ட நிலையில் இந்தப்படமும் இப்படியான ஒரு நோக்கில்தான் உருவாக்கப்பட்டிருக்கும் என்பதை யூகிக்க முடிகின்றது.

இன்றைய இளைஞர்கள் தென்னிந்திய மற்றும் ஹொலிவுட் சினிமாக்களை பார்த்து அதேபோல தமது குறும்படங்களை தமது சூழலுக்குள் மிகக்குறைவான வசதி வாய்ப்புகளைக் கொண்டு எடுப்பதற்கு முயல்வதைக் காணமுடிகின்றது. ஆனால் அந்த முயற்சி நமது மண்ணின் சூழலுக்குப் பொருந்தாமலும் நமது வாழ்க்கை முறையினைப் பிரதிபலிக்காமலும் இருக்கின்றது. சுருங்கச் சொன்னால் இத்தகைய படைப்புகள் ஆறாவது விரல்போல நம்மை விட்டு விலகி தனியே பயனின்றி நிற்கின்றது.


இறுதியாக..


இந்தப் படத்திற்கு பின்னே மறைந்திருக்கும் இளைஞன் லிங்கேஸ்வரனின் அசாத்திய உழைப்பு, விடா முயற்சி, பொறுமை, நம்பிக்கை அத்தனைக்கும் நாம் மதிப்பளித்தே ஆக வேண்டும்.

இனிவரும் காலங்களிலே நமது மண்சார்ந்த படைப்புகளை உருவாக்கி வெற்றிபெறுவார் என்று நம்புவோமாக.

'ஒருவன் எத்தனை தடவை விழுந்தான் என்பது அவசியமல்ல. ஆனால் எத்தனை தடவை மீண்டும் எழுந்து வந்தான் என்பதுதான் முக்கியமானது.'

-'மூதூர்'  மொகமட் ராபி
25.09.2014

Tuesday, September 2, 2014

பாலைவனத்தில் கற்கள் தானாகவே நகரும் மாயம்





ரேஸ்டிராக் பிளாயா பகுதி. ஒரே சம தரையாக
அமைந்துள்ளதைக் கவனிக்கவும்



மெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தின் தென் பகுதியில் ஓரிடத்தில் பாறைகள் தாமாக இடம் பெயர்ந்து செல்கின்றன. 100 ஆண்டுகளுக்கும் மேலாக இது பெரும் புதிராக இருந்து வந்துள்ளது. அவை இடம் பெயரும் மர்மத்துக்கு இப்போது விடை கண்டுபிடித்திருக்கிறார்கள்.


பாறைகள் இவ்விதம் இடம் பெயரும் இடத்தின் பெயர் ரேஸ்டிராக் பிளாயா என்பதாகும். இது மரணப் பள்ளத்தாக்கு எனப்படும் பாலைவனத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. பெயர் தான் ரேஸ்டிராக்கே தவிர இங்கு ரேஸ் எதுவும் நடப்பதில்லை.
அதை ஒரு பாலைவனம் என்றும் சொல்லலாம். ஆனால் மணல் கிடையாது. என்றோ வற்றிப்போன ஏரியின் படுகை என்றும் வருணிக்கலாம். கண்ணுக்கெட்டிய தூரம் வரை செடி கொடி கிடையாது. புல் பூண்டு கிடையாது. விலங்குகளும் இல்லை. மனித நடமாட்டமும் கிடையாது.


ஆனால் இங்குமங்குமாக சிறிய பாறைகள் கிடக்கின்றன. வெடிப்பு விட்ட  தரையில் அந்தப் பாறைகள் சட்டென்று கண்ணில் புலப்படும். பல பாறைகளின் எடை சுமார் 13 கிலோ. 300 கிலோ எடை கொண்ட பாறைகளும் உண்டு.


பல பாறைகள் நகர்ந்துள்ளதால் ஏற்பட்ட தடங்கள்
வானிலிருந்து எடுக்கப்பட்ட படம்.

ஓரிடத்தில் கிடக்கின்ற பாறை பின்னர் பார்த்தால் இடம் மாறியிருக்கும். அந்தப் பாறை நகர்ந்து சென்ற தடம் தெரியும். இவை “கால் முளைத்த” பாறைகள்.ஒன்றல்ல பல  பாறைகள் நகர்ந்து சென்ற தடம் தெளிவாகத் தெரிகிறது. தடத்தை வைத்துச் சொல்வதானால் சில பாறைகள் 1500 அடி அளவுக்கு நகர்ந்துள்ளன.


அந்தப் பாறைகளை யார் நகர்த்தியிருப்பார்கள்? காற்றில் உருண்டு சென்றிருந்தால் இப்போது தெரிகின்ற தடம் ஏற்பட வாய்ப்பில்லை. யாராவது கயிற்றைக் கட்டி இழுத்துச் சென்றால் மட்டுமே பாறை நகர்ந்து சென்ற தடம் ஏற்பட முடியும்.


ஒரு பாறை எவ்வளவு தூரம் நகர்ந்து வந்துள்ளது என்பதைக் கவனிக்கவும்.


அப்படி யாரேனும் இழுத்துச் சென்றிருந்தால் அவரது காலடித் தடமும் மண்ணில் பதிவாகியிருக்கும். ஆகவே பாறைகள் தானாகத் தான் நகர்ந்து சென்றிருக்க வேண்டும். அல்லது ஏதோ ஒன்று அவற்றை நகரச் செய்திருக்க வேண்டும்.


1900 ஆம் ஆண்டிலிருந்தே இந்த மர்மம் குறித்து பல்வேறு கருத்துகள் கூறப்பட்டு வந்துள்ளன. எதிலும் மர்மத்தைக் காண விரும்புகிறவர்களோ இது வேற்றுலகவாசியின் வேலையாக இருக்கலாம் என்று கூறினர்.


ஒரே நேர்கோட்டில் நகர்ந்து வந்துள்ள பாறை

ஆனால் இந்தப் பாறைகள் நகருவதை கடந்த காலத்தில் யாருமே நேரில் கண்டதில்லை. காமிராவிலும் இது பதிவாகியது இல்லை.


இந்த நிலையில் தான் நிபுணர் ஜேம்ஸ் நாரிஸ்  அங்கு தானியங்கி காமிராவைப் பொருத்தி விட்டு வந்தார். அது விட்டு விட்டு அவ்வப்போது படம் எடுக்கின்ற காமிராவாகும்.


அந்த காமிரா சரியாக செயல்படுகிறதா என்று சோதிக்க அண்மையில் அவர் ரேஸ்டிராக் பிளாயாவுக்குச் சென்றார். அவருடன் ரிச்சர்ட்  நாரிஸும் சென்றார்.


அங்கு அவர்கள் ஒன்றல்ல சுமார் 60 பாறைகள் தாமாக நகர்வதைக் கண்ணால் கண்டனர். அவை நகர்ந்த போது லேசான சத்தமும் கேட்டது.பாறைகளை நகர்த்தியது வேறு எதுவுமல்ல. நீரில் மிதக்கின்ற பனிக்கட்டி வில்லைகள்தான். தண்ணீர் எங்கிருந்து வந்தது?


பாறைகள் எப்படி நகருகின்றன என்பதை பின்னர் ஜேம்ஸ் நாரிஸ் விவரித்தார்.




ஜோடியாக நகர்ந்து வந்துள்ள பாறைகள்



பாறைகள் நகருவதில் பெரிய மர்மம் எதுவுமில்லை. அந்த இடத்தில் மழை என்பது அபூர்வம். வருஷத்தில் இரண்டு அங்குலம் மழை பெய்தால் உண்டு. குளிர் காலத்தில் இப்படி மழை பெய்தால் களிமண் பூமி என்பதால் இரண்டு மூன்று செண்டிமீட்டர் அளவுக்குத் தண்ணீர் தேங்கி நிற்கும்.


அது கடும் குளிர் வீசுகின்ற பகுதியாகும். ஆகவே தேங்கும் தண்ணீரின் மேற்புறம் உறைந்து போகும். உறைந்த பனிக்கட்டி சில்லு சில்லுகளாக நீரில் மிதக்கும்.  தேங்கும் தண்ணீர் குறைவு என்பதால் பாறைகளின் மேற்புறம் தண்ணீருக்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்கும்.


அந்தப் பகுதியில் குளிர்காலத்தில் தென்மேற்கிலிருந்து வட கிழக்கு நோக்கி மணிக்கு சுமார் 140 கிலோ மீட்டர் வேகத்தில் கடும் காற்று வீசும். இதன் விளைவாக மிதக்கும் பனிக்கட்டி சில்லுகள் பாறைகள் மீது மோதும். இவை மெல்லியவை தான். ஆனால் கெட்டியானவை.


தேங்கும் தண்ணீர் காரணமாக நீருக்கடியில் உள்ள களிமண் தரை சறுக்கிச் செல்வதற்கு உகந்த அளவில் இருக்கும்.  கடும் காற்று பனிக்கட்டி சில்லுகளைத் தாக்கும் போது அவை பாறை மீது மோத பாறைகள் சறுக்கியபடி நகருகின்றன. காற்று விட்டுவிட்டு அடிக்கும் போது ஒவ்வொரு தடவையும் பனிக்கட்டி சில்லுகள் மோதும் போது பாறை சில மில்லி மீட்டர் நகரலாம்.


பின்னர் வெயில் காரணமாக தண்ணீர் ஆவியாகி விடும். பாறைகள் நகர்ந்த இடம் காய்ந்து தெளிவான தடமாகத் தெரியும்.


 குளிர்காலமாக இருக்க வேண்டும். மழை பெய்ய வேண்டும். மிதக்கும் பனிக்கட்டி சில்லுகள் இருக்கவேண்டும்.கடும் காற்று வீச வேண்டும். இப்படியாக பல நிலைமைகளும் ஒன்று சேரும் போது தான் பாறைகள் நகருகின்றன.


இந்தப் பகுதியானது  சிறிது கூட மேடுபள்ளம் இன்றி நூல் பிடித்தது போல சமதரையாக இருப்பதும் பாறைகள் நகருவதற்குக் காரணமாக உள்ளது.


பாறைகள் நகரும் சூழ்னிலைகள் உண்டானாலும் அந்தத் தடவை மிகச் சிறிது தூரமே நகரலாம். வேறு சில சமயங்களில் அதிக தூரம் நகரலாம். அல்லது  தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பாறைகள் அதே இடத்தில் காணப்படலாம். ஆகவே பாறைகள் இடம் பெயருவது என்றோ எப்போதோ நடைபெறுவதாக இருக்கிறது.. ஆகவேதான் இது யார் கண்ணிலும் படாமல் இதுவரை மர்மமாக இருந்து வந்துள்ளது.

Thanks: Ariviyalpuram

Thursday, August 21, 2014

மனதை ஈர்க்கும் புவியீர்ப்பு!






டந்த ஆண்டு இறுதியில் வெளியாகி ஏராளமான விருதுகளை வென்றெடுத்த ஆங்கிலத் திரைப்படமான க்ராவிட்டி யை அண்மையில் பார்த்தேன். ப்ளு-ரே எனும் சிறப்பு ஒளித்தகடு வடிவமும் வழமையான டீவீடி தகடும் இருந்தன. சாதாரண வடிவில் பார்க்கும்போதே திரைப்படத்தின் ஒளிப்பதிவும் தொழினுட்ப நுணுக்கங்களும் வியக்க வைக்கின்றன. முப்பரிமாண சிறப்பு வடிவத்தில் பார்த்திருந்தால் எப்படியிருந்திருக்கும் என்று தோன்றுகின்றது


இனி படத்திற்கு வருவோம்..








நாஸா விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களும் மூன்று ஆண்களுமாக ஐந்து பேர் அடங்கிய விண்வெளி தொழினுட்ப வல்லுனர்கள் குழு ஒன்று பூமியிலிருந்து 600 கிலோ மீற்றர் உயரத்தில் வலம் வந்து கொண்டிருக்கும் ஹப்பிள் தொலைக்காட்டியைப் பழுதுபார்த்துக் கொண்டிருக்கின்றது.


அவ்வேளையில் எதிர்பாராதவிதமாக பயன்பாடு தீர்ந்துபோன செய்மதி ஒன்று அழிக்கப்பட்டதன் காரணமாக உண்டான சிதறல்கள் மிகுந்த வேகத்துடன் இக்குழுவினரின் விண்வெளி ஓடம், தொலைகாட்டி, மற்றும் குழுவினரையும் தாக்குகின்றது. இதனால் விண்வெளி ஓடம் பலத்த சேதமுறுவதனால் அதனுள் பாதுகாப்பற்றிருந்த வல்லுனர்கள் இருவரும் உடனடியாக மரணிக்கின்றனர். வெளியே தொலைகாட்டியை பழுதுபார்த்துக் கொண்டிருந்தவர்களில் மூவரில் ஒருவரும் மரணிக்க, அனுபவம் வாய்ந்த விண்வெளி வீரரான மெற் கோவ்லாஸ்க்கி (Matt Kowalski) யும் மருத்துவப் பொறியியலாளரான வீராங்கனையான டாக்டர் ரையான் ஸ்டோனும் (Ryan Stone)விண்வெளியில் வீசப்படுகின்றனர்.


தனது முதலாவது விண்வெளிப்பயணத்தில் வந்திருக்கும் டாக்டர் ரையான் மிகவும் பயந்து தவிக்கின்றார். ஆயினும் அனுபவஸ்தரான மெற் கோவ்லாஸ்க்கி தன்னிடமிருக்கும் உந்துவிசை வாயுக்கலனின் உதவியோடு ரையானைத் தேடிப்பிடித்து ஆசுவாசப்படுத்தியவாறு எப்படியாவது பூமிக்குத் திரும்பும் முயற்சியில் ஈடுபடுகின்றார். இதற்காக 1400 கிலோ மீற்றர் தூரத்தில் தாழ்வாக பூமியைச் சுற்றிவரும் சர்வதேச விண்வெளி நிலையத்தை நோக்கி உந்துவிசைக் கலனின் உதவியோடு பயணிக்கின்றனர்.


அவ்வாறு சர்வதேச விண்வெளி நிலையத்தை இவர்கள் நெருங்கும் போது மெற் கோவ்லாஸ்க்கியின் வாயுக்கொள்கலன் தீர்ந்து விடுகின்றது. இதனால் விண்வெளி நிலையத்தை அடைந்து அதைப் பற்றிப்பிடித்துக் கொள்வதற்காக இருவரும் பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருக்கின்றது.  முடிவில்  ரையான் மட்டுமே பற்றிக்கொள்ள இருவரும் ஊசலாடுகின்றனர்.  இருவருமே சாவதைவிட ஒருவராவது உயிர் பிழைப்பதுதான் விவேகம் என்று கூறிவிட்டு பற்றிப்பிடித்துக்கொள்ள  மெற் தன்னைத்தானே விடுவித்து Dr. Ryan னை விண்வெளி நிலையத்தினுள் சென்று உயிர்தப்புமாறு கூறுகின்றார்.



 Dr. Ryan  விண்வெளி நிலையத்தினுள்ளே நுழைந்து ஆசுவாசப்படுத்திக் கொள்கின்றார். அதேவேளை  மெற் முடிவில்லாத விண்வெளியில் கட்டுப்பாடின்றி மிதக்கின்றார். தொடர்ந்து வானொலித் தொடர்பில் இருக்கும் Matt, Dr. Ryan  Stone க்கு பூமிக்குத் தப்பிச் செல்லக்கூடிய சாத்தியங்களை கூறியவாறு இறுதியில் தொடர்பற்றுப் போகின்றார்.


சர்வதேச விண்வெளி நிலையம் இயங்கு நிலையில் இருந்தாலும் குறிப்பிடத்தக்க பல சேதங்களோடு விண்வெளி வீரர்களால் கைவிடப்பட்ட நிலையில் வெறிச்சோடிக்கிடக்கின்றது. பூமிக்குத் தப்பிச் செல்வதற்குள்ள ஒரே வழியான சோயுஸ் தரையிறங்கு கலனும் தவறுதலாக பரசூட் விரிந்த காரணத்தால் புறப்படுவதற்குப் பொருத்தமில்லாத நிலையிலே விண்வெளி நிலையத்தின் பாகங்களுக்குள் சிக்குண்டு கிடக்கின்றது.


அதை விடுவிப்பதற்காக மீண்டும் Ryan விண்வெளி உலாவருகின்றார். அப்பொழுது நிகழும் விண்வெளிச் சிதறல்களின் தாக்குதலினால் எதிர்பாராத நல்விளைவாக சோயுஸ் தரையிறங்கு கலன் விடுபட்டுத் தனியாகின்றது. இதனால் நம்பிக்கை கொள்ளும்Ryan அதனுள் நுழைந்து இயக்குவதற்கு முயல்கின்றார். ஆயினும் எரிபொருள் தீர்ந்த காரணத்தால் அது கிளம்ப மறுக்கின்றது. இதனால் நம்பிக்கையிழந்த Ryan ஒரு கட்டத்தில் ஒக்ஸிஜனின் அளவைக்குறைத்து வைத்து தற்கொலை செய்து கொள்ள முடிவெடுக்கின்றார். ஆயினும் மீண்டும் உத்வேகம் வந்து முடிவை மாற்றிக்கொண்டு மாற்று வழியொன்றைக் கண்டறிகின்றார்.


அதன்படி வெடித்து வேறாகும் வகையில் சோயுஸ் கொள்கலனை இயக்கி சற்றுத் தூரத்தில் பூமியை நோக்கி இறங்கிக் கொண்டிருக்கும் சீனாவின் Tiangong விண்வெளி நிலையத்தைச் சென்றடைகின்றார். அதுவோ சிறிது நேரத்தில் ஈர்ப்பு விசைக்குள்ளாகியதன் காரணமாக பூமியை நோக்கி அதிபயங்கர வேகத்தில் இழுபடுகின்றது. காற்று மண்டலத்தினுள் பிரவேசித்ததும் விண்வெளி நிலையத்தின் பாகங்கள் உரசி தீப்பிடித்து வெடிக்கின்றன. ஆயினும் Ryan  இருக்கும் Shenzhou குடுவைப்பகுதி தனியாகப் பிரிந்து வந்து தன்னியக்க பாரசூட் விரிதலுடன் அரிசோனா பிரதேசத்திலுள்ள ஏரியொன்றினுள் (Powel lake) வந்து வீழ்கின்றது.



குடுவையினுள்ளே ஏற்படும் புகையினால் வெளியேறுவதற்காக கதவைத் திறக்கின்றார் Ryan. இதனால் குடுவை நீர் நிறைந்து ஏரியின் அடியில் மூழ்குகின்றது. வெகுசிரமத்துடன் விண்வெளியுடையை கழற்றி விட்டு ஏரியின் மேல்மட்டத்திற்கு வருகின்றார். மெல்ல நீந்திக் கரைசேர்ந்து மணலில் வீழ்ந்து கிடந்த பின்பு எழுந்து நிற்பதுடன் வானை அண்ணாந்து பார்த்துவிட்டு தடுமாற்றத்துடன் முன்னோக்கி நடப்பதுடன் படம் முடிவடைகின்றது.

கதை இதுதான்.

-Mutur Mohammed Rafi




Wednesday, August 20, 2014

செவ்வாய்க்கு அருகே வால் நட்சத்திரம் :




நாஸா கவலை





செவ்வாய் கிரகத்தை “உரசி“ செல்லும் அளவுக்கு ஒரு வால் நட்சத்திரம் செவ்வாய் கிரகத்தைக் கடந்து செல்ல இருக்கிறது. இது குறித்து அமெரிக்கா நாஸா கவலை கொண்டு செவ்வாயை சுற்றுகிற தனது செயற்கைக்கோள்களையும் காப்பதற்கு நடவடிக்கை எடுக்க இருக்கிறது.

அந்த வால் நட்சத்திரத்தால் செவ்வாய் கிரகத்துக்குப் பெரிய ஆபத்து ஏற்படப் போவதில்லை. சொல்லப் போனால் அந்த வால் நட்சத்திரம் செவ்வாயைக் கடந்து செல்லும் போது செவ்வாய்க்கும் அந்த வால் நட்சத்திரத்துக்கும் இடையே சுமார் ஒரு லட்சத்து 32 ஆயிரம் கிலோ மீட்டர் இடைவெளி இருக்கும். இருந்தாலும் விண்வெளிக் கணக்குப்படி இது “மிக அருகில்” என்றே கருதப்படுகிறது.

அமெரிக்காவின் இரு விண்கலங்கள் இப்போது செவ்வாய் கிரகத்தை சுற்றிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்றின் பெயர் மார்ஸ் ரிகன்னைசன்ஸ் ஆர்பிட்டர். மற்றொன்றின் பெயர் மார்ஸ் ஒடிசி. அவற்றுக்கும் வால் நட்சத்திரத்தால் நேரடியாக ஆபத்து ஏற்படப் போவதில்லை. இந்த இரண்டும் சுமார் 500 கிலோ மீட்டர் உயரத்தில் அமைந்தபடி செவ்வாயின் செயற்கைக்கோள்கள் போல அக்கிரகத்தைச் சுற்றிக் கொண்டிருக்கின்றன.

வால் நட்சத்திரத்தின் வால் காரணமாக இந்த இரு விண்கலங்களுக்கும் பாதிப்பு ஏற்படுமோ என்பது தான் நாஸாவின் கவலை. ஒரு வால் நட்சத்திரத்தின் வால் என்பது எண்ணற்ற மிக நுண்ணிய துணுக்குகளால் ஆனது. இவை வால் நட்சத்திரத்திலிருந்து வெளிப்படுபவை. காற்றில் பறக்கும் ஒரு பெண்ணின் கூந்தல் போல வால் நட்சத்திரத்தின்   வாலானது தலையில் தொடங்கி அகன்று விரிந்து அமைந்திருக்கும்..மிக அகன்ற வாலின் ஒரு பகுதி செவ்வாயின் காற்று மண்டலத்தைத் தொடலாம் என்று கருதப்படுகிறது.

ஆகவே வாலில் அடங்கிய துணுக்குகள் நாஸாவின் செயற்கைக்கோளைத் தாக்கும் வாய்ப்பு உள்ளது. நுண்ணிய துணுக்குகள் அப்படி என்ன பாதிப்பை ஏற்படுத்தப் போகின்றன என்று நீங்கள் நினைக்கலாம். வால் நட்சத்திரம் மணிக்கு சுமார் 2 லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருக்கும். வாலின் துணுக்குகளும் அதே வேகத்தில் செல்லும். அவ்வித வேகத்தில் வரும் அரை மில்லி மீட்டர் குறுக்களவு கொண்ட துணுக்கு கூட செயற்கைக்கோளில் அடங்கிய கருவிகளுக்கு சேதத்தை உண்டாக்கலாம்.

அந்த வால் நட்சத்திரத்தின் பெயர் சைடிங் ஸ்பிரிங் என்பதாகும். ஆஸ்திரேலியாவில் உள்ள சைடிங் ஸ்பிரிங் வான் ஆராய்ச்சிக்கூடம் கண்டுபிடித்ததால் அதற்கு அப்பெயர். 2013 ஆம்  ஆண்டு ஜனவரியில் கண்டுபிடிக்கப்பட்ட அந்த வால் நட்சத்திரம் சூரிய மண்டல வெளி எல்லையிலிருந்து சூரியனை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. 

அது சூரியனை சுற்றி முடித்த பின்னர் வந்த வழியே திரும்பிச் சென்று விடும். சூரியனை நோக்கி வருகின்ற அது செவ்வாயைக் கடந்து வர இருக்கிறது. பொதுவில் வால் நட்சத்திரங்கள் இந்த அளவுக்கு அருகாமையில் கடந்து செல்வது கிடையாது. கி.பி 1770 ஆம் ஆண்டில் ஒரு வால் நட்சத்திரம் பூமியை மிக அருகாமையில் கடந்து சென்றது.






சைடிங் ஸ்பிரிங் வால் நட்சத்திரம் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி செவ்வாயை நெருக்கமாகக் கடந்து செல்ல இருக்கிறது. இந்த வால் நட்சத்திரத்தின் துணுக்குகளால் செயற்கைக்கோள்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்து வாய்ப்பு சுமார் இருபது நிமிஷமே நீடிக்கும். ஆகவே அந்த நேரத்தில் மட்டும் தனது இரு செயற்கைக்கோளையும் பாதுகாப்பான இடத்தில் இருக்கும்படி செய்ய நாஸா திட்டமிட்டுள்ளது.

பூமியைச் சுற்றுகிற அல்லது செவ்வாயைச் சுற்றுகிற ஒரு செயற்கைக்கோளை பறக்காமல் ஓரிடத்தில் நிறுத்தி வைப்பது என்பது சாத்தியமற்றது. செயற்கைக்கோள்கள் பறந்து கொண்டே இருந்தால் தான் வானில் இருக்கும். இல்லாவிடில் கீழே விழுந்து விடும்.
எனவே ஆபத்து வாய்ப்புள்ள நேரத்தில் இரு செயற்கைக்கோள்களும் தமது பாதையில் செவ்வாயின் மறுபுறத்தில் அமைந்திருக்கும்படி செய்ய நாஸா திட்டமிட்டுள்ளது. அதாவது அவை தொடர்ந்து பறந்து கொண்டு தான் இருக்கும். 






ஆனால் அந்த இருபது நிமிஷ நேரத்தில் அவை செவ்வாயின் மறுபுறத்தில் பறந்து கொண்டிருக்கும். இதற்கான வகையில் அவற்றின் பாதையில் திருத்தங்கள் செய்யப்படும்.

நாஸா 2013 ஆம் ஆண்டில் செவ்வாயை நோக்கி செலுத்திய மாவென் என்னும் செயற்கைக்கோள் வருகிற செப்டம்பரில் போய்ச் சேர்ந்து அதுவும் செவ்வாயைச் சுற்ற ஆரம்பிக்கும். அதன் சுற்றுப்பாதையையும் இவ்விதம் தக்கபடி மாற்றியாக வேண்டும்.

 ஐரோப்பிய விண்வெளி அமைப்பு 2003 ஆம் ஆண்டில் செலுத்திய மார்ஸ் எக்ஸ்பிரஸ் விண்கலம் செவ்வாயை நீள்வட்டப் பாதையில் சுற்றிக் கொண்டிருக்கிறது. அனேகமாக ஐரோப்பிய விண்வெளி அமைப்பும் வால் நட்சத்திர ஆபத்தை மனதில் கொண்டு தக்க நடவடிக்கை எடுக்கும் என்று கருதப்படுகிறது.
இந்தியா 2013 நவம்பரில் செவ்வாயை நோக்கிச் செலுத்திய மங்கள்யான் விண்கலம் இந்த ஆண்டு செப்டம்பர் 24 ஆம் தேதி போய்ச் சேர்ந்து செவ்வாயை சுற்ற இருக்கிறது. ஆகவே தனது செயற்கைக்கோளுக்கு பாதிப்பு ஏற்படாதபடி பாதுகாக்க இந்தியாவின் இஸ்ரோவும் உரிய நடவடிக்கையை மேற்கொள்ளலாம்
. வால் நட்சத்திரம் மூலம் தோன்றும் துகள்கள் கீழே இறங்கி செவ்வாயின் தரையில் ஏற்கெனவே செயல்பட்டு வரும் கியூரியாசிடி என்னும் நடமாடும் ஆராய்ச்சிக்கூடத்தைப் பாதிக்காதா என்று கேட்கலாம். இத்துகள்கள் செவ்வாயின் காற்று மண்டலம் வழியே கீழ் நோக்கி இறங்கும் போது மிகுந்த சூடேறித் தீப்பிடித்து எரிந்து விடும்.
கியூரியாசிடி சேகரிக்கும் தகவல்கள் நாஸாவுக்குக் கிடைக்கச் செய்வதில் அமெரிக்காவின் இரு செயற்கைக்கோள்களும் முக்கிய பங்காற்றுகின்றன. செவ்வாய் கிரகம் பூமியைப் போலவே தனது அச்சில் சுழல்கிறது. 

ஆகவே கியூரியாசிடி இருக்கின்ற இடம் மறுபக்கத்துக்குச் சென்று விடுகிற நேரத்தில் அது அனுப்பும் தகவல்கள் பூமிக்கு வந்து சேர வாய்ப்பில்லை.
இப்பிரச்சினையைத் தவிர்க்கும் வகையில் செவ்வாய்க்கு மேலே பறக்கின்ற இரு அமெரிக்க செயற்கைக்கோள்களும் கீழிருந்து கியூரியாசிடி அனுப்பும் தகவல்களைச் சேகரித்து நாஸாவுக்கு அனுப்புகின்றன. 

இந்த இரண்டும் செவ்வாயை வடக்கிலிருந்து தெற்காகச் சுற்றுவதால் எப்போதும் பூமியைப் பார்த்த வண்ணம் இருக்கும். இதன் பலனாக நாஸாவுக்குத் தொடர்ந்து தகவல்கள் கிடைத்துக் கொண்டிருக்கும்.

 நாஸாவுக்கு உலகில் ஆங்காங்கு தகவல் சேகரிப்பு கேந்திரங்கள் உள்ளன.  எனவே பூமி சுழன்று கொண்டிருந்தாலும் இந்த தகவல் சேகரிப்புக் கேந்திரங்களில் ஏதாவது ஒன்று செவ்வாயைப் பார்த்தபடி அமைந்து அங்கிருந்து வருகிற தகவல்களைப் பெற்றுக்கொள்ளும்.

Thanks: Ariviyalpuram

Friday, August 15, 2014

ரத்தமும் பொய்யும் வழியும் யுத்த பூமி!





தமிழ் அறிவுஜீவிகளின் பக்கச்சார்பு தலையங்கங்களில் இஸ்ரேல் அரபு பிரச்னை பற்றிய பொய்களின் காரணமென்ன?


ரத்தம் வழியும் யுத்த பூமி! என்ற தலைப்பில் இரா ஜவஹர் என்ற மூத்த பத்திரிக்கையாளர் எழுதிய கட்டுரையை வாசிக்கப்பெற்றேன்.
எதை விற்க வேண்டுமென்றாலும் குழந்தைகளை உபயோகப்படுத்தலாம் என்பது நவீன விளம்பர யுக்தி. குழந்தைகள் இறக்கிறார்கள் என்றால், உடனே இரங்குவது மனித இயல்புதானே? அதனை வைத்து கிறிஸ்துவ மதமாற்றத்துக்கு பணம் வசூலிப்பதிலிருந்து, ஹமாஸுக்கு ஆதரவு திரட்டுவது வரை எல்லாமே நடக்கும்.
ஆகவே கட்டுரையும் இப்படி ஆரம்பிக்கிறது.

“இன்று 10 குழந்தைகள் உட்பட 50 பேர் கொல்லப்பட்டார்கள்”

“இன்று 20 குழந்தைகள் உட்பட 100 பேர் கொல்லப்பட்டார்கள்”
- என்பது போன்ற செய்திகள் நாள்தோறும் வெளியாகின்றன.
பாலஸ்தீன நாட்டின் காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திவரும் கொடூரமான குண்டுவீச்சில் கொல்லப்படும் பொதுமக்கள்தான் இவர்கள்.
ஆனால், இந்த கட்டுரை ஒரு மூத்த பத்திரிக்கையாளர் எழுதியது என்று சொல்வது தான் ஒரேயடியாக இடிக்கிறது. ஏனெனில், அடிப்படை ஜர்னலிஸ்ட் ஒழுக்கம் எதுவுமின்றி, தான் தோன்றித்தனமாக, பிரச்சார கட்டுரை போல, ஒரு பக்க சார்புடனும், suppresso veri suugesto falsi என்ற அடிப்படை கருதுகோளுடன் எழுதப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு தி இந்து இந்த வேலையில் உச்சகட்டத்தில் இருந்தாலும், இவரும் அந்த உச்சகட்ட பிரச்சாரத்துக்கு முயற்சிக்கிறார்.
முதலாவது வரியிலிருந்து பக்கச்சார்புடன் எழுதப்பட்டுள்ள இந்த கட்டுரையை, ஆய்வுக்கட்டுரை என்று அவரே சொல்லமாட்டார். ஆனால், இது போலத்தான் தமிழ்நாட்டின் முன்னணி பத்திரிக்கைகளின் தலையங்கங்களே இருக்கும்போது, இந்த வகை பிரச்சார கட்டுரைகள் தலையங்கங்களுக்கு ஈடாகவும், ஆய்வுக்கட்டுரை என்றும் தமிழ்நாட்டு அளவில் கூறிவிடலாம்.

இஸ்ரேலிய இளைஞர்கள் 3 பேர் பாலஸ்தீனத்தின் மேற்குக் கரைப் பகுதியில் கொல்லப்பட்டார்கள். “இவர்களை ஹமாஸ் அமைப்பினர்தான் கொன்றார்கள். எனவே ஹமாஸ் அமைப்பினர் வலுவாக உள்ள காசா பகுதியில் தாக்குதல் நடத்தி அவர்களை அழிக்கப் போகிறோம்” என்று இஸ்ரேல் கூறியது. ஆனால் அதற்கான எந்த ஆதாரத்தையும் அளிக்கவில்லை.
கடந்த ஜூலை 8-ம் தேதி இஸ்ரேல் ராணுவம் தாக்குதலைத் தொடங்கியது. இதனால் கடந்த 22 நாட்களில் நூற்றுக் கணக்கான குழந்தைகள் உட்பட 1,250 க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டார்கள். இதற்குப் பதிலடியாக ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது குண்டு வீசியதில் 50-க்கு மேற்பட்ட இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டனர்.
மூன்று பேர் பாலஸ்தீனத்தின் மேற்குக்கரை பகுதியில் உடனே கொல்லப்படவில்லை. கடத்தப்பட்டார்கள். ஜூன் 12, 2014 அன்று இவர்கள் கடத்தப்பட்டார்கள். ஒரு பயங்கரவாத இயக்கத்தை மேற்குக்கரை பகுதியில் அரசாங்கத்துக்குள் கொண்டுவருவதால் வரும் பிரச்னை என்று இஸ்ரேல் கூறியது. ஜூன் 14 அன்று இஸ்ரேலிய அதிகாரிகள், தங்கள் தேடுதலில், ஹமாஸ் இயக்கத்தை சேர்ந்த 20 பேரை கைது செய்தார்கள். ஜூன் 15ஆம் தேதி, சுமார் 86 அரபுகளை கைது செய்தது. காஸாவுக்குள் செல்லும் வியாபார வண்டிகளும், மக்களும் நிறுத்தப்பட்டனர். இதனால், ஹமாஸ் தனது ராக்கெட் தாக்குதலை ஆரம்பித்தது. இதற்கு பதிலடியாக எந்த இடத்திலிருந்து ராக்கெட்டுக்கள் வருகின்றனவோ அந்த இடங்களை இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தியது. அதாவது இஸ்ரேல் பதிலடியாக காஸாவுக்குள் கண்ட இடத்தில் குண்டு வீசுவதில்லை. எந்த இடத்திலிருந்து ராக்கெட் வருகிறதோ அதனை குறி வைத்து, அந்த இடத்தை மட்டுமே அழிக்க முனைகிறது. அதற்கு முன்னால், அந்த இடத்தில் குண்டு வீசி ராக்கெட் தளத்தை அழிக்கப்போகிறோம் என்று எச்சரிக்கையும் விடுகிறது. (இதனை என் டி டி வி வெளியிட்ட வீடியோவிலும் காணலாம். ஸ்ரீனிவாசன் ஜெயின் என்னும் என் டி டி வி நிருபர் காஸாவிலிருந்து வெளியேறிய பிறகு, அங்கு எடுத்த வீடியோவை வெளியிட்டார். அதில், அந்த இடத்தில் குண்டு வீசப்போவதாக இஸ்ரேல் அறிவித்தது என்பதையும் குறிப்பிடுகிறார். கவனிக்கவும்)
ஆகவே இஸ்ரேல் மேற்குக்கரை பகுதியில் கொல்லப்பட்ட இஸ்ரேலியர்களுக்காக இஸ்ரேலிய ராணுவம் தாக்குதலை தொடங்கவில்லை. போலீஸ் அதிகாரிகள் காணாமல் போன இஸ்ரேலியர்களை தேடி மீட்பதை மட்டுமே செய்தார்கள். காஸா பகுதியிலிருந்து ராக்கெட்டுகளை ஹமாஸ் அனுப்ப ஆரம்பித்த பின்னாலே, அந்த இடங்களை இஸ்ரேல் அழிக்க முயன்றிருக்கிறது. இதனை இந்த மூத்த பத்திரிக்கையாளர் வசதியாக மறைத்துவிடுகிறார். suppressio veri!

கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை ஆயிரம் இல்லை; ஒரு லட்சத்துக்கும் மேல், அங்கே இஸ்ரேல் என்ற நாடு செயற்கையாக உருவாக்கப்பட்ட 1948-ம் ஆண்டு முதல் கணக்கிட்டால்.
அதுமட்டுமல்ல; லட்சக்கணக்கானோர் படுகாயம் அடைந்து ஊனமானார்கள். 70 லட்சம் பேர் வெளி நாடுகளில் அகதிகளாக உள்ளனர். மற்றவர்கள் சொந்த நாட்டிலேயே மேற்குக் கரைப் பகுதியில் 25 லட்சம் பேரும், காசா பகுதியில் 15 லட்சம் பேரும் அகதிகளைப் போல் வாழ்கிறார்கள்.
எப்படி ஏற்பட்டது இந்தச் சோகம் ? இதன் வரலாறு என்ன ?
இதனை suggestio falsi என்ற வகையில் சேர்க்கலாம். இந்த வரிகளை படித்தால், இஸ்ரேல் அங்கே உருவானதால் கொல்லப்பட்டவர்கள் பாலஸ்தீனர்கள் மட்டுமே என்பது போலவும், அகதிகளாக்கப்பட்டது பாலஸ்தீன அரபுகள் மட்டுமே என்பது போலவும் உங்களுக்கு தோன்றினால், மூத்த பத்திரிக்கையாளர் வெற்றி பெற்றுவிட்டார் என்று நிச்சயம் சொல்லலாம்.
உண்மை என்ன? அங்கு நடந்த போர்களில் இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டார்கள். அரபு நாடுகளில் இருந்த யூதர்கள் அங்கிருந்து துரத்தப்பட்டு அகதிகளாக இஸ்ரேல் வந்தார்கள்.
முதலாவது 1948- அரபு இஸ்ரேலிய போரில் சுமார் ராணுவ வீரர்களாக 6000 இஸ்ரேலியர்களும், 3700 அரபுகளும் இறந்தார்கள். பொது மக்களாக இருந்த 15000 யூதர்கள் கொல்லப்பட்டார்கள். இந்த போரில்தான் மிக அதிகமாக யூத மக்கள் உயிரிழந்தார்கள்.

அன்றிலிருந்து கணக்கிட்டால், சுமார் 25000 யூதர்கள் இந்த போர்களில் இறந்திருக்கிறார்கள். சுமார் 92000 அரபுகள் இந்த போரில் இறந்திருக்கிறார்கள். இந்த போரினால் சுமார் 10 லட்சம் யூதர்கள் அகதிகளாக அரபு பெரும்பான்மை நாடுகளிலிருந்து துரத்தப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இந்த யூதர்கள் அகதி முகாம்களில் வாழவில்லை. இஸ்ரேலின் அங்கமாக எடுத்துகொள்ளப்பட்டுவிட்டார்கள்.

ஆனால், அரபு நாடுகள் இந்த பாலஸ்தீனர்களை அகதிமுகாம்களில் இழி நிலையிலேயே வைத்திருக்கின்றன.பாலஸ்தீனத்திலிருந்து வெளியேறிய அரபுகளுக்கு அடிப்படை உரிமைகளை கூட லெபனான், ஜோர்டன், சவுதி அரேபியா, கட்டார், குவாய்த் எகிப்து போன்ற நாடுகள் தர மறுக்கின்றன. ஜோர்டனில் பெரும்பான்மையாக இருக்கும் பாலஸ்தீன அரபுகள், தேர்தலில் நிற்க உரிமை கிடையாது. அகதி முகாம்களில் அடைக்கபப்ட்டிருக்கும் இவர்கள் அந்த அகதி முகாம்களிலிருந்து வெளியேறக்கூடாது, வெளியிடங்களில் அவர்களுக்கு வீடு விற்கக்கூடாது, வாங்கக்கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடுகளை இந்த அரபு அகதிகள் மீது மற்ற அரபு நாடுகள் விதிக்கின்றன. இந்த செய்திகளை ஏன் இந்த மூத்த பத்திரிக்கையாளர் தமிழக மக்களுக்கு தெரிவிக்க மறுக்கிறார்?

இதுதான் அரபுகள் அரேபியாவிலிருந்து வெளியேறி ஆக்கிரமித்துள்ள நிலங்கள். இதில் இந்த அரபு மக்களுக்கு இடமில்லையா?


map_tinyisrael


இந்த படத்தில் ஈரான், சோமாலியா அரபு நிலங்களாக குறிக்கப்பட்டுள்ளது தவறு. மற்ற நிலங்கள் பெரும்பான்மை அரபு நிலங்களே.


“ஆப்ரஹாமை நோக்கிக் கர்த்தர் சொன்னார். ‘நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனாருடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ”.

கர்த்தர் காட்டிய தேசம், ‘கானான் தேசம்’. அப்போது அந்த தேசத்தில் பிலிஸ்தீனியர்கள், கானானியர்கள், பீனிசியர்கள் உட்படப் பல பழங்குடியினர் இருந்தார்கள். இந்தக் கானான் பிரதேசத்தில் ஆப்ரஹாமும் அவரைச் சார்ந்தவர்களும் குடியேறினார்கள்.
ஆப்ரஹாமின் சந்ததியில் தோன்றிய ஜேக்கப் தனது இனத்தவருக்குப் பெரும் தலைவராக விளங்கினார். ஜேக்கப் பின்னாளில் ‘இஸ்ரேல்’ என்று அழைக்கப்பட்டார். அவரது சந்ததியினர் தான் ‘இஸ்ரேலியா’ அல்லது ‘யூதர்கள்’ என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் வாழ்ந்த கானான் தேசம் ‘இஸ்ரேல்’ என்று அழைக்கப்பட்டது.
எனினும் அண்டை நாடுகளில் அடுத்தடுத்து அமைந்த பேரரசுகள் இஸ்ரேலை ஆக்கிரமித்து, யூதர்களைக் கொடுமைப்படுத்தி, விரட்டியடித்தன. இஸ்ரேலின் பெயரும் பின்னாளில் மாற்றப்பட்டு ‘பாலஸ்தீனம்’ என்று பெயரிடப்பட்டது.
எனவே ‘பைபிள்’படி யூதர்களுக்குக் கர்த்தர் – கடவுள் – கொடுத்த தேசமான பாலஸ்தீனத்தில் மீண்டும் யூதர்கள் குடியேறி, இழந்த நாட்டைக் கைப்பற்ற வேண்டும்”
- என்று அறிவித்து, ‘ஜியோனிஸ்ட் இயக்கம்’ தோன்றியது 1897-ம் ஆண்டில்.
இது போன்ற பிதற்றல் மூத்த பத்திரிக்கையாளர்களிலிருந்துதான் வருமோ என்னவோ? ஆனால், சுமார் 3000 வருட புராணக்கதையையும், 2000 வருட வரலாற்றையும் கலந்துகட்டி நான்கே வரிகளில் பொய்யும் புளுகுமாக சொல்லுவதும் ஒரு திறமைதான்.

ஜியோனிஸம் 1897இல் துவங்கப்பட்டது மத நம்பிக்கையுள்ள யூதர்களால் அல்ல. கடவுள் மறுப்பு யூதர்களால் அது துவங்கப்பட்டது. அந்த நேரத்தில் மத நம்பிக்கையுள்ள யூதர்கள் இஸ்ரேலுக்கு போவதை எதிர்த்தார்கள். ஜூலை 1845இல் பிராங்க்பர்ட்டில் நடந்த ரப்பைகள் மாநாடு இஸ்ரேலுக்கு திரும்ப போவதை ஒருமனதாக எதிர்த்தது. ஏனெனில், மெஸியா வராமல், திரும்ப இஸ்ரேலுக்கு செல்வதே மத நம்பிக்கைப்படி தவறானதாகும். இன்றும்கூட தீவிர மத நம்பிக்கையுள்ள யூதர்கள் அமெரிக்காவில் இஸ்ரேலுக்கு எதிராகவும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் பெருந்திரளாக, முக்கியமாக நியூயார்க்கில், போராட்டத்தில் கலந்துகொள்வதை பார்க்கலாம்.
மத நம்பிக்கையற்ற யூதர்களால் துவங்கப்பட்டதாக இருந்தாலும், அந்த தலைவர்கள், பெரும்பான்மை யூதர்கள் மத நம்பிக்கையுடையவர்கள் என்ற உணர்வும், இஸ்ரேலும் யூதர்களும் கலாச்சார ரீதியில் பிணைக்கப்பட்டவர்கள் என்பதையும் அறிந்தே இருந்தார்கள். இதனால்தான் அவர்கள் பிரிட்டன் உகாண்டாவில் அவர்களுக்கு ஒரு வாழ்நிலம் தருவதாக சொன்னபோதும் அதனை நிராகரித்தார்கள்.

இதை மறுத்தார்கள் அரபு இனத்தைச் சேர்ந்த பாலஸ்தீனியர்கள்.
“பைபிள்படியே பார்த்தால் கூட பாலஸ்தீனத்தின் பழங்குடியினர், மண்ணின் மைந்தர்கள் – பிலிஸ்தீனியர்களும், மற்ற பழங்குடியினரும்தான். பிலிஸ்தீனியர்களின் தேசம்தான் பாலஸ்தீனம் எனப்பட்டது. அவர்களது சந்ததியினர்தான் அரபு இனத்தைச் சேர்ந்த பாலஸ்தீனியர்களாகிய நாங்கள். மறுபுறம் வரலாற்றின்படி பார்த்தால் சிரியாவின் ஒருபகுதியாகத்தான் பாலஸ்தீனம் இருந்தது. சிரியா, அரபு நாடுதான். எனவே எங்கள் தாயகமான பாலஸ்தீனத்தை வேறு எவரும் ஆக்கிரமிக்க விடமாட்டோம்” என்றார்கள் பாலஸ்தீனியர்கள்.
தவறு.

பிலிஸ்தினியர்களும் பாலஸ்தீனர்களும் ஒன்றல்ல. பிலிஸ்தினியர்களை பாலஸ்தீனத்தின் பழங்குடிகள் என்று ஒரு போதும் பாலஸ்தீன அரபுகள் தங்களை கூறிக்கொண்டதில்லை. பிலிஸ்தீனியர்கள் பின்னால், யூதர்களாகி விட்டார்கள். ஆகவே அவர்களை பாலஸ்தீனர்கள் என்று சொல்வது தவறானது. 2000 வருடங்களுக்கு முன்னால், ரோம அரபு போர் நடக்கும்போது, அரபு இனத்தை சேர்ந்தவர்கள் ஒரு போதும் இஸ்ரேல் நிலத்தில் இருந்ததில்லை. சிரியா அரபு நாடுதான் என்று தனது அறிவையும் பறை சாற்றுகிறார். சிரியா நாட்டில் பின்னால் வந்த அரபுகளின் ஆக்கிரமிப்பால் அது இன்றைக்கு அரபு தேசமாக கூறப்படுகிறது. அது முன்பு அஸ்ஸிரிய தேசம். ஜோஸபஸின் வரலாற்றில் சிரியர்களும் அரபியர்களும் தனித்தனியாகவே குறிப்பிடப்படுகிறார்கள். மேலும் இஸ்ரேலுக்கு கீழே இருப்பது அரபு தேசமல்ல. அது எடாம் தேசம். எடாமைட்டுகள் இன்று அரபு மொழி பேசுவதால் அரபியர்களாக ஆக்கப்பட்டிருக்கலாம். அல்லது எடாமைட்டுகள் கொல்லப்பட்டு அந்த இடத்தை அரபுகள் ஆக்கிரமித்திருக்கலாம். அதே போல இன்றைய ஈராகும் அரபு நாடு அல்ல. அது முன்பு நபாட்டு தேசம். நபாட்டியர்கள் கொல்லப்பட்டு அங்கு அரபியர்கள் ஆக்கிரமித்திருக்கலாம். இன்றைய ஜோர்டானும் அரபு தேசமாக குறிப்பிடப்பட்டதே இல்லை. அது மோயப் தேசம். அவர்கள் மோயபைட்டுகள் என்றே குறிப்பிடப்பட்டார்கள். இன்று அந்த இடங்களில் இருப்பவர்கள், அரபு மொழி பேசுவதாலேயே அரபிய நிலமாகிவிடுமா?

போர் முடிந்தது. 1918-ம் ஆண்டில், போரில் துருக்கி தோற்று சரண் அடைந்தது. துருக்கியின் ஆதிக்கத்தில் இருந்த சிரியா நாட்டை பிரான்ஸ் ஆக்கிரமித்துக்கொண்டது. துருக்கியின் ஆதிக்கத்தில் இருந்த பாலஸ்தீனம், ஜோர்டான், ஈராக் ஆகிய நாடுகளை பிரிட்டன் ஆக்கிரமித்தது.
அரபு மக்களுக்கு அளித்திருந்த வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்ட பிரிட்டன், பாலஸ்தீனத்தில் யூதர்களைக் குடியேற்றுவதில் தீவிரமாக இறங்கியது.
இன்னொரு பேத்தல்.

பெல்பார் அறிவிப்புக்கும், பிரான்ஸ் சிரியாவை எடுத்துகொண்ட பின்னாலும், அரபுகள் யூதர்களுக்கு எதிராக கலவரத்தில் இறங்கிய காரணத்தால், யூதர்கள் இஸ்ரேலுக்குள் வருவதை கட்டுப்படுத்தியது. இத்தனை யூதர்கள் மட்டுமே வரலாம் என்று வரையறுத்தது. 1000 பவுண்டுகள் பணம் கொடுத்துவிட்டு வரலாம் என்று அதிலும் காசு பண்ணியது. இதனால் யூதர்கள் உலகம் முழுவதும் உள்ள யூதர்களிடம் பணத்தை வசூல் செய்து அதனை இவ்வாறு வரும் யூதர்களுக்கு கொடுத்து அவர்களுக்கு அனுமதிச்சீட்டு வாங்கியது. இவ்வாறு சுமார் 82000 யூதர்கள் பாலஸ்தீனம் வந்தார்கள். எவ்வளவு பணத்தை பிரிட்டன் பார்த்திருக்கும் என்று கணக்கிட்டுக்கொள்ளுங்கள். இவ்வாறு இருக்க, பாலஸ்தீனத்தில் யூதர்களை குடியேற்ற பிரிட்டன் தீவிரமாக இறங்கியது என்று திரிக்கிறார் இந்த மூத்த பத்திரிக்கையாளர்.

சமீபத்தில் இஸ்ரேலிய இளைஞர்கள் மூவர் கொல்லப்பட்டதைச் சாக்காக வைத்து, காசா பகுதியை சுடுகாடாக்கும் கொடூர நடவடிக்கைகளில் இப்போது இஸ்ரேல் ராணுவம் ஈடுபட்டுவருகிறது. நாள் தோறும் படுகொலைச் செய்திகள்………
மேலும் ஒரு “மூத்த பத்திரிக்கையாளத்தனமான” வரிகள். இதற்கான பதில்கள் இந்த பதிவிலேயே இருக்கின்றன.

மற்றொன்று,



பாலஸ்தீனத்தை கைவிடலாமா என்ற தி இந்து தமிழ் கட்டுரை

இது அதிகாரப்பூர்வமான தி இந்து தலையங்கம். முன்னரே சொன்னது போல ஆங்கில தலையங்கத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு.
காஸா பகுதியில் பாலஸ்தீனர்களுக்கான நிலப்பரப்பு மிகவும் குறுகியது. திட்டமிட்டு இஸ்ரேல் தொடர்ந்து நிகழ்த்திவரும் ஆக்கிரமிப்பு களால் தங்களுடைய பகுதி நிலத்தை இழந்துவரும் பாலஸ்தீனர்கள் வேறு வழியில்லாமல் நெருக்கியடித்துக்கொண்டு வசிக்கிறார்கள். அவர்களுக்காக ஆயுதமேந்திப் போராடும் ஹமாஸ் இயக்கமும் இடநெருக்கடி காரணமாகவே குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகிலேயே இருந்தபடி இஸ்ரேலியப் பகுதிகள் மீது ராக்கெட் குண்டுகள் மூலம் தாக்குகிறது. இதுதான் உண்மை என்பது உலக நாடுகளுக்கும் தெரியும். ஆனாலும், இதையெல்லாம் சாக்காக வைத்துக்கொண்டு, தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியிருக்கிறது இஸ்ரேல்.
தி இந்து சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று நினைக்கும் அப்பாவிகள் தமிழ்நாட்டில் நிறையபேர் இருக்கிறார்கள். இருந்தாலும் இது எந்த அளவுக்கு உண்மை என்று பார்ப்போம்.
இதுதான் கூகுள் மேப்பில் பார்க்கக்கூடிய காஸாவின் விண்கோள் காட்சி.


gazamap



இதில் மஞ்சளாக இருக்கும் இடங்களில் யாரும் வசிக்கவில்லை. நரைத்தது போல, இருக்கும் சற்று க்ரேயாக இருக்கும் இடங்கள் மக்கள் வசிக்கும் கட்டிடங்கள். முடிந்தால் நீங்களே gaza , israel என்று போட்டு கூகுள் மேப்பில் பார்க்கலாம். நீங்கள் பார்ப்பது போல, மஞ்சள் இடங்களே அதிகம். க்ரேயாக இருக்கும் இடங்கள் நடுவே திட்டு திட்டாக இருக்கின்றன. மஞ்சள் இடங்கள் ஏறத்தாழ பாலைவனம். அங்கிருந்து ராக்கெட் வீசினால், பதிலுக்கு வரும் இஸ்ரேலிய ராக்கெட்டுகள் அந்த ராக்கெட் தளங்களைத்தான் தாக்கும். ஹமாஸ் வேண்டுமென்றே மக்கள் வசிக்கும் இடங்களிலிருந்து ராக்கெட்டை அனுப்பி, பதில் ராக்கெட்டுகள் மூலம் இறக்கும் மக்களை காட்டி அனுதாபம் தேட முயல்கிறது. தி இந்து போன்ற இடதுசாரி, இஸ்லாமிய பயங்கரவாத பாசக்கார அண்ணன்கள், உண்மையை மூடி மறைத்து புளுகித்தள்ளுகின்றார்கள்.
கூடவே
உலகின் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல்கொடுப்பதும், அப்பாவிகளுக்கு ஆதரவாகக் களமிறங்குவதும் வெறும் சர்வதேச அரசியல் மட்டுமல்ல, தர்மமும்கூட.

என்று தர்மத்தை பற்றி பாடம் எடுக்கிறது தி இந்து. களமிறங்குவது என்றால், அது இஸ்ரேலுக்கு எதிராக, அரபுகளுக்கு ஆதரவாகத்தான் இந்தியா இறங்க வேண்டும். ஐ.எஸ்.ஐ.எஸ்ஸுக்கு எதிராகவும், ஈராக்கில் கொல்லப்படும் சிறுபான்மை யாஜிதி மக்களுக்காகவும், கிறிஸ்துவர்களுக்காகவும் இந்தியா களமிறங்க வேண்டும் என்று தி இந்து எழுதும் என்று நினைத்தால், உங்களை அப்பாவி என்றுதான் உலகம் சொல்லும். பாகிஸ்தானில் கொல்லப்படும் இந்துக்களுக்காகவும் கிறிஸ்துவர்களுக்காகவும் இந்தியா களமிறங்கவேண்டும் என்று தி இந்து எழுதும் என்று நினைத்தால், உங்களை பார்த்து உலகமே நகைக்கும்.


பொருளாதாரரீதியாக இந்தியாவுக்கு முக்கியமான ஒரு பிராந்தியம் மேற்காசியா. அங்கே தொடர்ந்து அமைதியின்மை நிலவக் காரணம் பாலஸ்தீனப் பிரச்சினைதான். எனவே, அதை நீடிக்க விடாமல் சுமுகமாகத் தீர்த்துவைப்பதில் முக்கியப் பொறுப்பும் கடமையும் இந்தியாவுக்கு உண்டு!


அப்படி போடு! இந்த மாதிரி இந்திய அரசுக்கு ஒரு இந்திய பத்திரிக்கை அறிவுரை செய்யுமென்றால், அதனை என்ன சொல்லலாம்? அமைதியின்மை நிலவக் காரணம் பாலஸ்தீன பிரச்னையா? அல்லது யூதர்களை அழிக்கத்துடிக்கும் அரபு இனவெறியா? என்றாவது இந்த பத்திரிக்கைகள் அரபுகளின் பிடிவாத குணத்தையும், யூதர்களின் வாழ்வுரிமையை மறுக்கும் மத/இன வெறியையும் கண்டித்திருக்கிறார்களா?


வாளாவிருந்தால் எப்படி? என்ற தினமணி தலையங்கம்

ஹிட்லரின் நாசிப் படைகளால் வேட்டையாடப்பட்டு, தங்களுக்கு என்று நாடு எதுவும் இல்லாமல் இருந்த யூதர்களுக்கு, விவிலியத்தின் பழைய ஏற்பாட்டை அடிப்படையாகக் கொண்டு, ஜெருசலேமைத் தலைநகராகக் கொண்டு இஸ்ரேல் என்கிற நாட்டை அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் உருவாக்க முற்பட்டதே ஒரு சரித்திர மோசடி.


இஸ்ரேல் என்ற நாட்டை அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகியவை உருவாக்க முற்படவில்லை. இந்த வரியே தவறு. இஸ்ரேலியர்கள்தான் தங்கள் நாட்டை மறுபடியும் உருவாக்கிக்கொண்டார்களே தவிர மற்ற நாடுகள் அதற்கு முடிந்தவரை தடைக்கற்களைத்தான் ஏற்படுத்திகொண்டிருந்தார்கள். 2000 வருடங்களுக்கு முன்னால், இஸ்ரேலிலிருந்து யூதர்கள் துரத்தப்பட்டாலும், அவர்கள் அந்த இடத்தை விட்டு முழுவதுமாக நீங்கிவிடவில்லை. அவர்கள் ஒவ்வொருவருடமும், அடுத்த வருடம் இஸ்ரேலில் சந்திப்போம் என்றுதான் உறுதிமொழி எடுத்துகொண்டிருந்தார்கள். யூதர்கள் எங்கே தங்கியிருந்தாலும், தங்களை இஸ்ரேலின் மக்கள் என்றுதான் அழைத்துகொண்டார்கள். பணம் இருந்தவர்களும், பலம் இருந்தவர்களும், விரும்பியவர்களும், சமூக, அரசியல் சூழ்நிலை மாறியபோதெல்லாம் இஸ்ரேலுக்கு சென்றுகொண்டே இருந்தார்கள். இரண்டாயிரம் வருடமாக அவர்கள் அங்குதான் சென்றுகொண்டிருக்கிறார்கள். 1492இல் கத்தோலிக்க வாடிகனும், ஸ்பெயின் அரச குடும்பமும் இணைந்து யூதர்களை ஸ்பெயினிலிருந்து ஒட்டுமொத்தமாக வெளியேற்றியபோதும், அவர்கள் இஸ்ரேலுக்கு சென்றிருக்கிறார்கள். ஆகவே இஸ்ரேல் உருவாக்கப்படும்போது அங்கு யூதர்களே இல்லை என்பது போன்ற suggestio falsi விளையாட்டுகள் யாரை குஷிப்படுத்த எழுதப்படுகின்றன? இரண்டாம் உலகப்போர் முடியும்போது, இஸ்ரேலில் 33 சதவீத மக்கள் யூதர்களாகத்தான் இருந்தார்கள். அவர்கள் பலவேறு இடங்களிலிருந்து துரத்தப்பட்டு அங்கு சென்றிருந்தார்கள்.
முதலாம் உலகப்போரின் முடிவில் அது பிரிட்டனின் மண்டேட் (mandate) கீழ் வந்தது. 1920இலிருந்து 1948 வரைக்கும் இஸ்ரேல் பிரிட்டனின் கீழ் இருந்தது. அந்த நேரத்தில் யூதர்களுக்கு எதிராக ஜெர்மனியில் பெரும் இனப்படுகொலை நடந்துகொண்டிருந்தது. அதிலிருந்து தப்ப யூதர்கள் பலர் இஸ்ரேலுக்கு ஓடியபோது, அவர்கள் வரக்கூடாது என்று ஒரு வருடத்துக்கு 15000 யூதர்கள் மட்டுமே இஸ்ரேலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று சட்டம் போட்டது. அதிலும் ஒவ்வொருவரிடமும் பணம் வசூல் செய்தது. அங்கிருந்து தப்பி இஸ்ரேலுக்கு வருபவர்கள் எண்ணிக்கை 15000 ஐ தாண்டினால், அவர்கள் சிறை பிடிக்கப்பட்டு மொரீஸியஸ் போன்ற இடங்களுக்கு நாடு கடத்தப்பட்டார்கள். ஹிட்லரின் வெறியாட்டம் அதிகரித்தபோது அங்கிருந்து தப்ப அவர்கள் உதவாக்கரை தோணிகளிலும் படகுகளிலும் இஸ்ரேலுக்கு வந்தபோதும், அந்த படகுகளை பிரிட்டனின் கடற்படையும், சோவியத் நீர்மூழ்கி கப்பல்களும் அழித்தன. போருக்கு பின்னால், ஐரோப்பாவில், 2,50,000 யூதர்கள் அகதி முகாம்களில் சிறைபிடிக்கப்பட்டார்கள். அமெரிக்க ஜனாதிபதி ஹாரி ட்ருமன் போன்றவர்கள் கேட்டுகொண்டபின்னாலும், சுமார் 100000 பேர்களே பாலஸ்தீனத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். பிரிட்டன் யூதர்கள் இஸ்ரேலுக்கு வரக்கூடாது என்ற தன் தடையை விடவே இல்லை.
இதனால், சில யூதர்கள் பிரிட்டனுக்கு எதிராக வன்முறை போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தார்கள். பல பிரிட்டன் தலைவர்கள் கொல்லப்பட்டனர். பிரிட்டனுக்கு எதிரான யூத பயங்கரவாதத்தின் காரணமாக சுமார் ஒரு லட்சம் பிரிட்டிஷ் போர்வீரர்கள் இஸ்ரேலுக்குள் நிற்கும் நிர்ப்பந்தம் தோன்றியது.

இந்த இடத்தில் யூத பயங்கரவாதத்தை பற்றி குறிப்பிட வேண்டும். யூதர்களிலும் பயங்கரவாத அமைப்புகள் தோன்றியிருக்கின்றன. 1940களில் lehl அமைப்பும் irgun அமைப்பும் பிரிட்டனுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போரில் ஈடுபட்டிருக்கின்றன. இது வின்ஸ்டன் சர்ச்சில் உட்பட பல பிரிட்டிஷ் தலைவர்களை ஜியோனிஸத்துக்கு எதிராக திருப்பியிருக்கிறது. ஆனால், யூதர்களின் முக்கிய அமைப்பான Jewish Agency, பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை 1940 முதற்கொண்டு எடுத்து வந்திருக்கிறது. வன்முறைக்கு எதிராக வன்முறை எடுக்கவேண்டாம் என்று இந்த ஏஜென்ஸி தன் உறுப்பினர்களை வெளிப்படையாக கேட்டுகொண்டிருந்திருக்கிறது. அப்படி எடுத்தால் அது உள்நாட்டு போரில்தான் முடிவடையும் என்று அறிவித்திருக்கிறது. ஆனால், யூத வன்முறை கிளர்ச்சியாளர்கள், பிரிட்டிஷ் அதிகாரிகளை கொலை செய்ததுதான், இஸ்ரேலை விட்டு வெளியேற வேண்டும் என்று பிரிட்டிஷ் மக்களை தூண்டியது என்று கூறுவார்கள். இஸ்ரேல் சுதந்திரம் அடைந்த பின்னாலும், இஸ்ரேலில் பயங்கரவாத இயக்கங்கள் தோன்றியிருக்கின்றன. குஷ் எமுனிம் Gush Emunim (1979-84), கெஸட் (keshet) 1981-89, Bat Ayin (2002), Brit HaKanaim (1950-53), Kingdom of Israel(1950) ஆகிய அமைப்புகள் குறிப்பிடத்தக்கவை. இவை அனைத்தும், கடுமையாக இஸ்ரேலிய அரசால் ஒடுக்கப்பட்டிருக்கின்றன.

பிரிட்டன் தான் இஸ்ரேலிலிருந்து வெளியேற முடிவு செய்ததை ஐநாவுக்கு அறிவித்தது. ஐநா, United Nations Special Committee on Palestine http://en.wikipedia.org/wiki/UNSCOP என்ற அமைப்பை உருவாக்கியது. இதில் இந்த பிரச்னைக்கு சம்பந்தப்படாத நடுநிலை நாடுகள் அங்கம் வகிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆஸ்திரேலியா, கனடா, செக்கோஸ்லாவாகியா, குட்டமாலா, இந்தியா, ஈரான், நெதர்லாந்து, பெரு, ஸ்வீடன், உருகுவாய், யுகோஸ்லாவியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்க அழைக்கப்பட்டன. (இதில் இந்தியா சார்பாக கலந்துகொண்ட அப்துர் ரஹ்மான், உலக யூதர் பிரச்னையை பாலஸ்தீனத்துக்கு கொண்டுவரக்கூடாது என்று எதிர்பார்ப்பது போல பேசியிருக்கிறார்)
இந்த அமைப்புதான் இஸ்ரேலை மூன்றாக பிரித்து, ஒரு பகுதி அரபுகளுக்கும் ஒரு பகுதி யூதர்களுக்கும், ஜெருசலம் நகரை ஐநாவின் கீழும் வைத்துகொள்ள பரிந்துரைக்கிறது. அதனை ஐநாவும் ஒப்புகொள்கிறது.
இப்படி இருக்கையில் இந்த ஐந்து நாடுகளும் ஏதோ சதி செய்து அங்கு யூத அரசை உருவாக்கியிருப்பதாக எழுதியிருப்பது, தினமணிக்கு ஏதோ உள்நோக்கம் இருக்கிறதோ என்று சிந்திக்கவைக்கிறது.
பாலஸ்தீனியத்திலுள்ள தீவிரவாதிகளின் மறைவிடங்களை அழிப்பது மட்டுமல்ல இஸ்ரேலின் நோக்கம். இஸ்ரேலிய மக்களவையான “நெஸ்ùஸ’ உறுப்பினர் ஆயிலெட் ஷாகேத் கூறுவதுபோல, ஆண், பெண், குழந்தைகள் என்று ஒருவர்விடாமல் எல்லா பாலஸ்தீனியர்களும் அழிக்கப்படும் வரை இந்த யுத்தம் தொடரும் என்பதுதான் திட்டம்.

ஒரு சாதாரண நெஸட் உறுப்பினரான ஆயிலெத் ஷாகெத்தை இஸ்ரேலின் சர்வாதிகாரியாக மாற்றியிருக்கும் தினமணியை பாராட்டலாம். இதே மாதிரி தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் உளறுவாயர்களும், குரூரமானவர்களும் எம்பிகளாகவும் எம் எல் ஏக்களாகவும் நிச்சயம் இருக்கிறார்கள். அப்படி உளறும் எல்.எல்.ஏக்கள் , எம்பிகள் உளறுவதெல்லாம், இந்தியாவின் அதிகாரப்பூர்வமான நிலைப்பாடு ஆகிவிடுமா?


http://en.wikipedia.org/wiki/Ayelet_Shaked


ஆனால் ஒரு சாதாரண நெஸட் உறுப்பினரான இவரது கருத்தையே இஸ்ரேலின் ராணுவ அரசியல் தலைமையின் கருத்தாக சொல்வது தினமணி என்ற ஒரு பத்திரிக்கை, ஒரு சாதாரண பிரச்சார கந்தல் பத்திரிக்கை நிலைக்கு இறங்கி தாழ்ந்துவிட்டதைத்தான் காட்டுகிறது.

இந்தியாவின் பொருளாதாரம் மேற்கு ஆசிய கச்சா எண்ணெயில்தான் அடங்கி இருக்கிறது. இஸ்ரேல் – பாலஸ்தீனிய சர்ச்சையில், சுமுகமான பேச்சுவார்த்தைகளுக்கு வழிகோல வேண்டிய கடமை இந்தியாவுக்கு உண்டு.

இறுதியில் வழக்கம்போல தி இந்து ஸ்டைலில் மேற்கு ஆசியாவிலிருந்துதான் எண்ணெய் வாங்குகிறோம், ஆகவே, அரபுகள் ஆதரவாகவும் இஸ்ரேலின் எதிர்ப்பாகவும் இந்தியா மாறவேண்டும் என்று கோரிக்கை. இதுதான் உண்மையான காரணமாக இருந்தால், அதற்கு ஏன் இந்த சுற்றிவளைத்து பம்மாத்து? நேரடியாக சொல்லவேண்டியதுதானே? இங்கே ஒழிக்கப்படுகிறவர்கள் இஸ்ரேலியர்கள்தான். ஆனாலும் அரபுகள் ஆதரவாக நின்றால்தான் நமக்கு பெட்ரோல் வரும். ஆகவே அரபுகள் சார்பாக நிற்போம் என்று உண்மையை சொன்னால் அது கொஞ்சம் பச்சையாக இருக்குமோ?
சுமுகமான பேச்சுவார்த்தை என்பது நான் முன்னரே குறிப்பிட்டது போலவும், 1948இலிருந்து இஸ்ரேலிய அரசாங்கம் கேட்டுகொண்டிருப்பது போலவும் ஒன்றே ஒன்றுதான். யூத பெரும்பான்மையான ஒரு இஸ்ரேலை அங்கீகரிக்கப்பட்ட அரசாக ஒப்புக்கொள்ளுங்கள் என்பதுதான் அது. அதற்காக தான் வெற்றிபெற்ற நிலத்தை திருப்பி கொடுக்கவும் இஸ்ரேலிய அரசு முன்வந்திருக்கிறது. அப்படி ஒரு யூத பெரும்பான்மை அரசே இருக்கக்கூடாது, அனைத்து யூதர்களும் கொல்லப்படவேண்டும் என்பதுதான் ஹமாஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகளின் கோரிக்கை. இதற்கு நடுவே ஒரு பேச்சுவார்த்தை இருக்கமுடியாது. இதில் யாருக்கு நீங்கள் அறிவுரை சொல்லவேண்டும்?


இந்த தலையங்கங்கள் போன்ற பிரம்மாண்டமான பொய்களால் இந்த பத்திரிக்கைகள், இந்திய முஸ்லீம்களை வெறியேற்றுவதை தவிர வேறு எதையும் சாதிக்கப்படப்போவதில்லை.


இஸ்ரேல்- பாலஸ்தீன பிரச்னை என்று ஒன்றும் இல்லை. இஸ்ரேல்-அரபு பிரச்னைதான் இருக்கிறது. அதனை இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்னையாக அடையாள அரசியலாக ஆக்கி, அதனை பாலஸ்தீன இனம் என்று இருப்பதாக உருவாக்கி, அதற்கு இஸ்லாமை துணைக்கழைத்து, இஸ்லாமியர்கள் எல்லோருக்கும் வெறியேற்றும் வகையில் எழுதும் இப்படிப்பட்ட கட்டுரைகளால் இந்த மூத்த பத்திரிக்கையாளர்கள் சாதிக்க விரும்புவது என்ன?


இதே போன்ற வரிக்கு வரி புளுகும் பொய்யும் பக்கச்சார்புடனும் எழுதப்பட்ட இன்னொரு மூத்த பத்திரிக்கையாள கட்டுரை தொடர் “நிலமெல்லாம் ரத்தம்” என்ற பெயரில் வெளிவந்தது. வரிக்கு வரி, அது அரபுகளை விதந்தோதியும், இஸ்ரேலியர்களை பழித்தும் எழுதப்பட்ட வக்கிரமான கட்டுரைத்தொடர்.
கிறிஸ்துவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் யூதவெறுப்பின் காரணம் அது மதத்தில் ஊடுருவிய, மத நம்பிக்கையோடு ஊடுருவிய பிரித்தறியப்பட முடியாத நிலைப்பாடு. கிறிஸ்துவர்களும் முஸ்லீம்களும் அல்லாத இடது சாரிகளும், ஏன் இந்த வக்கிர நிலைப்பாட்டை எடுக்கிறார்கள்? இவர்களுக்கும் பாலஸ்தீனத்துக்கும் என்ன சம்பந்தம்?


பாலஸ்தீனத்தில் இருப்பவர்கள் மனிதர்கள், அதனால் அவர்களுக்கு பரிந்து பேசுகிறோம் என்று பம்மாத்து விடும்போது, அதே இடதுசாரிகள் ஏன், நைஜீரிய கிறிஸ்துவர்களுக்கோ, தாய்லாந்தில் முஸ்லீம்களால் கொல்லப்படும் பௌத்தர்களுக்கோ, அல்லது கிறிஸ்துவர்களால் கொல்லப்படும், அவமதிக்கப்படும் கொரிய பௌத்தர்களுக்கோ, அல்லது முஸ்லீம்களால் விரட்டப்பட்ட காஷ்மீர இந்துக்களுக்கோ, பங்களாதேஷிலும் பாகிஸ்தானிலும் கொல்லப்படும் கிறிஸ்துவர்களுக்கோ, அல்லது இந்துக்களுக்கோ, இந்தோனேஷியாவில் கொல்லப்பட்ட பாலி இந்துக்களுக்கோ, அல்லது ஈராக்கில் அல்குவேதாவாலும் புத்தம்புது ஒரிஜினல் பிராண்டு காலிபேட்டாலும் கொல்லப்படும் ஷியா, யாஜிதி, கிறிஸ்துவர்களுக்கோ, மனித அந்தஸ்தை ஏன் இவர்கள் தருவதில்லை என்ற கேள்வியும் எழுகிறது. ( இந்தியாவின் இந்துக்கள் எல்லோரும் பார்ப்பன பாஸிஸ பயங்கரவாதிகள் என்று நம் அறிவுஜீவிகள் அறிவித்துவிட்டதால், அதனை பற்றி கேள்வி கேட்பதில் ஒரு பயனும் இல்லை. )


உதாரணமாக இந்த செய்திகளை பாருங்கள்.


1) நைஜீரியாவில், போகோ ஹராம் என்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு கடந்த ஆறு மாதத்தில் 2053 பொதுமக்களை கொன்றிருக்கிறது.

2) பாகிஸ்தான் அரசு பலுச்சிஸ்தானில் நடத்தும் அடக்குமுறை ஆட்சியில் இதுவரை 1628 பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள், 1,40,000 மக்கள் இடம் பெயர்ந்திருக்கிறார்கள்.

3) பாகிஸ்தான் வடமேற்கு பிராந்தியமான பக்தூனிஸ்தானில் கடந்த ஜூன் 15,2014இலிருந்து நடத்தும் ராணுவ நடவடிக்கையில்
570 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். சுமார் 10 லட்சம் பேர் இடம் பெயர்ந்து, அகதிகளாக கையேந்தி வாழ்கிறார்கள். அப்படி இடம் பெயர்ந்தவர்களில் இருக்கும் இந்துக்களுக்கும் பாரபட்சமான உதவி.

4) ஈராக்கில் தோன்றியிருக்கும், இஸ்லாமிய காலிபேட் யாஜிதிகள் எனப்படும் மக்களை படுகொலை செய்யப்போவதாக அறிவித்தே செயல்படுகிறது. இதுவரை 500 ஆண்கள் கொல்லபட்டிருக்கிறார்கள், 500 பெண்கள் அடிமைகளாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். 50000க்கும் மேற்பட்டவர்கள் சிஞார் என்ற மலையில் சிறைப்பட்டிருக்கிறார்கள். அவர்களை சுற்றி இந்த படைகள் நிற்கின்றன. அவர்களை பட்டினி போட்டு கொல்வதற்கு.
சுமார் 2 லட்சம் ஈராக்கிய சிறுபான்மை மதத்தினர் இந்த இஸ்லாமிய காலிபேட்டுக்கு பயந்து தப்பி ஓடிகொண்டிருக்கிறார்கள்
உதவிகளுக்கு ஹெலிகாப்டர்கள் வந்தட்போது 70 சதவீதத்துக்கு மேற்பட்டவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டிருந்தார்கள்.
இது போல இன்னும் எவ்வளவோ எழுதலாம்.


இவை எவற்றுக்காகவும் தி இந்து, அல்லது தினமணி, அல்லது மூத்த பத்திரிக்கையாளர்களோ தலையங்கங்கள் எழுதியோ, அல்லது இடதுசாரிகளோ போராடியோ பார்த்திருக்கிறீர்களா? பார்த்திருக்கமாட்டீர்கள். அதே போலத்தான், இஸ்லாமிய பயங்கரவாதத்தின் கீழ் யூதர்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டாலும், மூத்த பத்திரிக்கையாளர்கள் வாய் மூடி இருப்பார்கள். பத்தோடு பதினொன்று என்று யூதர்கள் கொல்லப்பட்டால், நாலாம் பக்கத்தின் மூலையில் புரட்சிகர இஸ்லாமிய போராளிகளால், சதிகார யூதர்கள் இரண்டு லட்சம் பேர் கொல்லப்பட்டதால் இஸ்ரேலில் அமைதி வந்தது என்று எழுதினாலும் எழுதிவிட்டு மறந்துபோவார்கள்.


இது மட்டுமல்ல, இடதுசாரிகளும், காங்கிரஸ்காரர்களும், முன்னாள் சிமி போராளிகளின் இன்றைய இஸ்லாமிய இயக்கங்களும், சமீபத்தில் உதித்த ஆம் ஆத்மி கட்சியும் தமிழகம், டெல்லி, மும்பை, கல்கத்தா போன்ற இடங்களில் இஸ்ரேலுக்கு எதிராகவும், அரபுகளுக்கு ஆதரவாகவும், ஹமாஸ் ஆதரவாகவும் போராட்டங்கள் நடத்தியிருக்கின்றன. ஷாருக்கான், சோனாக்‌ஷி சின்ஹா போன்ற மும்பை இந்தி நடிகர்கள் அரபுகளுக்கு ஆதரவாக பிரார்த்தனை செய்கிறார்கள். ஹாலிவுட் நடிகர்கள் அரபுகளுக்கு ஆதரவாக கண்ணீர் வடிக்கிறார்கள். அவர்களில் எவரும் காஷ்மீர இந்துக்களுக்காகவோ, அல்லது ஈழத்தில் இறந்த மக்களுக்காகவோ, அல்லது நைஜீரிய கிறிஸ்துவ குழந்தைகளுக்காகவோ, அல்லது பாகிஸ்தானிலிருந்தும் பங்களாதேஷிலிருந்து துரத்தப்படும் இந்துக்களுக்காகவோ பேசியதில்லை. நான் இவ்வாறு இவர்களையும் மனிதர்களாக கருதுங்கள் என்று யாரிடமும் கோரிக்கை வைக்கவில்லை. இது ஒரு அவதானம் மட்டுமே. அழுகின்ற பிள்ளைதான் பால் குடிக்கும் என்பது உண்மை. ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ்ஸாலும் அல்குவேதாவாலும் கொல்லப்படும் ஷியா பிரிவினருக்காக இந்திய ஷியாக்கள் போராடுவதில்லை. தெருக்களை அடைப்பதில்லை. கல்லெறிவதில்லை. அமர் ஜவான் ஜோதியை காலால் எட்டி உதைத்து உடைப்பதில்லை. ஆகவே ஈராக்கில் கொல்லப்படும் ஷியா பிரிவினருக்காக, இந்திய பத்திரிக்கைகளின் மூத்த பத்திரிக்கையாளர்கள் கட்டுரை வரைவதுமில்லை, அல்லது இந்திய அறிவுஜீவிகளோ போராட்டம் நடத்துவதுமில்லை. எவன் பேயாட்டம் போடுகிறானோ, அவனது சார்பினை எழுதத்தானே பத்திரிக்கைகள் இருக்கின்றன. Victim’s human rights are less important than the victimizer’s human rights என்பதுதானே இந்திய அறிவுஜீவிகளின் அடிப்படை கருதுகோள்.
இந்த மூத்த பத்திரிக்கையாளர்களின் இரக்கத்துக்காகவோ, அல்லது அவர்கள் கும்மிடி பூண்டியில் ஒரிஜினல் அல்லது டூப்ளிகேட் கம்யூனிஸ்டுகள் நடத்தும் போராட்டங்களுக்கோ காத்துகொண்டு, தங்களது குழந்தைகளை ஹமாஸ் கொல்வதற்கு இஸ்ரேல் அனுமதிக்க தயாராக இல்லை. அவர்கள் இந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் கற்றுகொண்ட ஒரே ஒரு விஷயம், தங்களது போராட்டங்களை தாங்கள்தான் நடத்திகொள்ளவேண்டும், தங்களை தாங்கள்தான் காத்துகொள்ளவேண்டும் என்பது. (அவர்களது தெய்வமான யாஹ்வே, அவர்களது பைபிளில் சொல்லியுள்ளது போல, மெஸியாவை (மீட்பரை) அனுப்பி அவர்களுக்கு இஸ்ரேலை மீட்டுத்தருவார் என்பதைக்கூட பெரும்பான்மை இஸ்ரேலியர் நம்ப தயாராக இல்லை!) அவர்களுக்கு இரங்கி வருபவர்கள் வரட்டும். உதவுபவர்கள் உதவட்டும். ஆனால், அவர்கள் உதவுகிறார்கள் என்ற ஒரே காரணத்துக்காக அவர்கள் சொல்லை கேட்டு தங்களை காயப்படுத்திகொள்ள அவர்கள் தயாராக இல்லை என்பவைதான்.
அந்த அறிவுரைதான் நமக்கும்.
-Sinnakaruppan

Thanks: Thinnai

Tuesday, July 22, 2014

ஃபீதாயின் ரச்சேல்



மெரிக்க இராணுவம் வானத்திலிருந்து ஈராக் மக்களைப் படுகொலை செய்யத் தொடங்குவதற்கு நான்கு நாட்கள் முன், அந்தக் கோழைத் தனத்தை நிராகரிக்கும் வீரமாக, அந்த ஆக்கிரமிப்புக்கு எதிரான தோழமையாக, பாலஸ்தீன மண்ணில் ரத்தம் சிந்தினாள் ஒரு கல்லூரி மாணவி.

மார்ச் 16. பாலஸ்தீன மக்களின் தாயகத்தை ஆக்கிரமிக்கும் யூதவெறி பிடித்த இசுரேல் இராணுவத்தின் புல்டோசர், ரச்சேல் கோரி என்ற அந்த வீராங்கனையின் மீது ஏறி இறங்கியது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க  அவற்றின் மீது சொடுக்கவும்]
ரச்சேல், சர்வதேச ஒற்றுமை இயக்கம் என்ற அமைப்பின் உறுப்பினர். பாலஸ்தீனத்தை ஆக்கிரமிக்கும் இசுரேல் அரசையும் அதற்குத் துணை நிற்கும் அமெரிக்காவையும் எதிர்த்துப் போராடும் இந்த அமைப்பின் பெரும்பாலான உறுப்பினர்கள் அமெரிக்க பிரிட்டிஷ் இளைஞர்கள்.


ரச்சேல் கோரி


ரச்சேல், சர்வதேச ஒற்றுமை இயக்கம் என்ற அமைப்பின் உறுப்பினர் ரச்சேல் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவி. “பயங்கரவாதத்துக்கெதிரான போர்” என்ற பெயரில் அமெரிக்கா நடத்தி வரும் இராணுவ வெறியாட்டங்களை எதிர்த்துப் போராடுவதில் அவள் முன்னணியில் நின்றதாக ரச்சேலை நினைவு கூர்கிறார்கள் அவளது ஆசிரியர்கள்.

குறிப்பாக பாலஸ்தீன மக்களின் துயரத்தைத் தன் சொந்தத் துயரமாகவே கருதினாள் ரச்சேல். ஈராக்கை அமெரிக்கா ஆக்கிரமிக்கும் தருணத்தில் உலகின் கவனம் அங்கே திரும்பியிருக்கும் போது, பாலஸ்தீனத்தை இசுரேல் விழுங்கி விடும் என்று அவள் அஞ்சினாள்.


ரச்சேல் கோரி


ரச்சேலும் அமெரிக்க பிரிட்டிஷ் இளைஞர்கள் ஏழு பேரும் பாலஸ்தீனத்திற்கு வந்து விட்டனர்.
அதைத் தடுப்பது தம் கடமை என்று கருதிய ரச்சேலும் அமெரிக்க பிரிட்டிஷ் இளைஞர்கள் ஏழு பேரும் இரண்டு மாதங்களுக்கு முன்பே பாலஸ்தீனத்திற்கு வந்து விட்டனர். பாலஸ்தீனத்தில் இசுரேல் அன்றாடம் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் காசா பகுதியில், ரஃபா எனும் சிறு நகரில் பாலஸ்தீன ஏழை மக்களின் குடும்பங்களுடன் சேர்ந்து வாழ்ந்தது அந்த இளைஞர் குழு.
திடீர் திடீரென இசுரேலிய இராணுவத்தின் புல்டோசர்கள் வருவதும் அவற்றை மறித்து நின்று போராடுவதும் ரச்சேல் குழுவினரின் அன்றாட நடவடிக்கையாகி விட்டது. அத்தகைய சம்பவம் ஒன்றினைத் தனது பெற்றோருக்கு எழுதிய கடிதத்தில் விவரிக்கிறாள் ரச்சேல்.


“நாங்கள் புல்டோசரை மறித்து நின்றோம். மண்வாரியில் எங்களை அள்ளி வீசினான் ஓட்டுனர். நாங்கள் வீட்டின் ஒரு முனையில் கிடந்தோம். மறுபாதியை இடித்துத் தள்ளியது புல்டோசர்.”

மார்ச் 16-ம் தேதி நடந்ததும் அதுதான். வெறியுடன் வந்து கொண்டிருந்தது இராணுவத்தின் புல்டோசர். அதன் பாதையில் மண்டியிட்டு அமர்ந்திருந்தாள் ரச்சேல். “நிறுத்து…நிறுத்து” என்று ரச்சேலின் தோழர்கள் கத்தினார்கள். பயனில்லை. ரச்சேலின் தலையைப் பிளந்தபின்தான் அது நின்றது.

“நிராயுதபாணிகளான பாலஸ்தீன மக்களைச் சுட்டுத் தள்ளுகிறது இசுரேல் இராணுவம். ஆனால் நிராயுதபாணியான ஒரு அமெரிக்கக் குடிமகனைச் சுட்டுத் தள்ளும் தைரியம் அவர்களுக்கு இருக்குமா?” என்று தன் பெற்றோருக்கு எழுதிய கடிதமொன்றில் குறிப்பிடுகிறாள் ரச்சேல்.


ரச்சேல் கோரி தெரு

ரச்சேல் கோரி தெரு (பாலஸ்தீனத்தின் ரமலா நகரில் ரச்சேல் பெயரில் தெரு)


பாசிஸ்டுகளை எடை போடத் தெரியாத அந்தப் பெண்ணின் வெகுளித்தனம் நம்மைக் கண்கலங்கச் செய்கிறது. வெள்ளைத் தோலானாலும், அமெரிக்கக் குடிமகனானாலும் தனது ஆதிக்கத்தை எதிர்த்து நிற்போர் யாரையும் பாசிஸ்டுகள் விட்டு வைப்பதில்லை என்ற உண்மை புரியும் தருணத்தில், புல்டோசரின் கொலைக்கரங்கள் அவளை நெருங்கிய அந்தத் தருணத்தில் ரச்சேல் ஓடவில்லை. மரணத்தின் தறுவாயில் தான் உணர்ந்து கொண்ட உண்மையை அமெரிக்க மக்கள் அனைவரும் உணர்ந்து கொள்ளட்டும் என்பதற்காக அவள் உயிர் விட்டாள்.


ரச்சேல் ஒரு மனிதாபிமானியா, வீராங்கனையா, தியாகியா, அல்லது போராளியா? அவள் ஒரு போராளி. ஃபிதாயீன்!


ஃபிதாயீன் என்ற அரபிச் சொல்லின் பொருள் தற்கொலைப்படை வீரன். பாலஸ்தீனத்தின் மீசை அரும்பாத இளைஞர்களும் இளம் பெண்களும் தம் உடலையே வெடிமருந்து கிடங்காக்கி வெடிக்கச் செய்து இசுரேலை நிலைகுலையச் செய்கிறார்கள். அவர்களுடைய இலக்கு யூதவெறி அரசு.
ரச்சேலின் இலக்கோ அமெரிக்க சமூகத்தின் அலட்சியம்; உலக மக்களின் மவுனம். வெடிமருந்துகளால் தகர்க்க முடியாத இந்த ‘எதிரியை’ முறியடிக்க அந்த அமெரிக்க மாணவி கண்டுபிடித்த அதி நவீன ஆயுதம் ரத்தம்.

“நாம் வாழும் வாழ்க்கை இந்தக் குழந்தைகளுக்குத் தெரிந்தால்…” -  ரச்சேலின் கடிதம்.

இசுரேல் இராணுவத்தால் கொல்லப்படுவதற்குச் சில நாட்கள் முன்னால் ரச்சேல் தன் பெற்றோர்களுக்கு எழுதிய கடிதத்திலிருந்து சில பகுதிகள் :


சிண்டி, கிரெய்க் கோரி


2007-ம் ஆண்டு நடந்த “ஆக்கிரமிப்பை முடிவுக்கு கொண்டு வா” ஆர்ப்பாட்டத்தில் ரச்சேலின் பெற்றோர். சிண்டி, கிரெய்க் கோரி


நான் பாலஸ்தீனத்துக்கு வந்து சரியாக இரண்டு வாரங்களும் ஒரு மணி நேரமும் ஆகி விட்டது. ஆனால் இங்கே நான் காண்பதை உங்களுக்கு விவரிக்க, அதாவது அமெரிக்காவுக்குப் புரிய வைக்க வார்த்தைகள் கிடைக்காமல் தவிக்கிறேன்.

குண்டுகளால் துளைக்கப்பட்ட வீட்டுச் சுவர்கள், கழுகுப் பார்வையால் கண்காணிக்கும் இராணுவம் – இவையிரண்டும் இல்லாத ஒரு வாழ்க்கையை இங்குள்ள குழந்தைகள் வாழ்ந்ததேயில்லை. இருப்பினும் “வாழ்க்கை என்பது எல்லா இடங்களிலும் இந்த மாதிரி இல்லை” என்பதை இங்குள்ள சின்னஞ்சிறு பிள்ளைகள் கூடப் புரிந்து வைத்திருக்கிறார்கள்.

நான் இங்கே வந்து இறங்குவதற்கு இரண்டு நாட்கள் முன் ஒரு 8 வயதுச் சிறுவனை இசுரேலிய இராணுவம் சுட்டுக் கொன்று விட்டது. “அவன் பெயர் அலி” என்று என்னிடம் கிசுகிசுக்கிறார்கள் இங்குள்ள குழந்தைகள். “ஷரோன் யாரு – புஷ் யாரு” என்று அரபியில் அவர்கள் கேட்க, “ஷரோன் கிறுக்கன் – புஷ் கிறுக்கன்” என்று நானும் எனக்குத் தெரிந்த அரபு மொழியில் பதில் சொல்கிறேன். அரபு மொழியை இப்படித்தான் எனக்குக் கற்றுத் தருகிறார்கள் இந்தச் சிறுவர்கள். உலக அரசியலின் அதிகாரம் எப்படி இயங்குகிறது என்பதைப் பற்றி நான் முன்னர் புரிந்து வைத்திருந்ததைக் காட்டிலும் இங்கே இருக்கும் 8 வயது வாண்டுகள் தெளிவாக அறிந்திருக்கிறார்கள்.


புத்தகங்கள், கருத்தரங்குகள், விவாதங்கள், செய்திப் படங்கள் போன்ற பல வழிகளில் பாலஸ்தீனத்தைப் பற்றி நான் சேகரித்த அறிவு அனைத்தையும் விஞ்சுகிறது இங்குள்ள எதார்த்தம். நேரில் பார்த்தாலொழிய நீங்கள் இதைப் புரிந்து கொள்ளவே முடியாது; ஒருவேளை நேரில் வந்து அனுபவித்தாலும் முழுமையாகப் புரிந்து விட்டதாக நான் சொல்லிக் கொள்ள முடியாது.
என்னையே எடுத்துக் கொள்ளுங்கள். இங்குள்ள கிணறுகளை இடித்தாலும் தண்ணீர் வாங்கிக் குடிக்க என்னிடம் பணம் இருக்கிறது; நினைத்தால் நான் உடனே அமெரிக்காவுக்குத் திரும்பி விடலாம்; என் குடும்பத்தினர் யாரையும் இராணுவம் ராக்கெட் வீசிக் கொன்றதில்லை; எனக்கொரு வீடு இருக்கிறது; நான் ஆற அமரக் கடலைக் கண்டு ரசித்திருக்கிறேன்; பள்ளிக் கூடத்திலிருந்து திரும்பும் வழியில் இராணுவத்தால் கொல்லப்படுவேனோ என்ற பயமின்றி சந்தோஷமாக நான் வீடு திரும்பியிருக்கிறேன்.

ஒலிம்பியா ஆர்ப்பாட்டம்


அமெரிக்காவின் ஒலிம்பியா நகரில் அமைதி ஆர்ப்பாட்டம்


எனவேதான் இக்குழந்தைகள் வாழும் உலகத்திற்குள் கால் வைத்த மறுகணமே இந்தக் கொடூரங்களைக் கண்ணால் கண்ட மறுகணமே என் ரத்தம் கொதிக்கிறது. “ஒருவேளை ஒரு பாலஸ்தீனச் சிறுவன் அமெரிக்கா எனும் என்னுடைய உலகத்தை நேரில் வந்து பார்த்தால் அந்தப் பிஞ்சு மனம் எப்படித் துடிக்கும்” என்ற கேள்வி என்னை வாட்டுகிறது.

இவர்களைப் போலன்றி நான் வேறொரு வாழ்க்கையை வாழ்ந்து பார்த்திருக்கிறேன். அமைதியான இடத்தில் வசித்திருக்கிறேன். கிணற்றை இடித்து குடிக்கும் தண்ணீரை இராணுவம் பறித்து விடும் என்று நான் கற்பனையில் கூட அஞ்சியதில்லை; இரவு தூங்கிக் கொண்டிருக்கும் போது வீட்டின் சுவர்கள் உட்புறமாக இடித்துத் தள்ளப்பட்டு நான் பதறி விழித்ததில்லை; தனது சொந்தங்களை இராணுவத்திற்கு காவு கொடுத்த யாரையும் நான் அமெரிக்காவில் சந்தித்ததில்லை; என்னுடைய வீட்டை நாற்புறமும் இராணுவக் கோபுரங்கள் கொலைவெறியுடன் குறிபார்க்கவில்லை.

ஆனால், இந்த பாலஸ்தீனச் சிறுவர்களோ நாம் வாழும் அமைதியான வாழ்க்கையை அறிந்ததே இல்லை. நினைத்துப் பாருங்கள். உங்கள் குழந்தைப் பருவம் முழுவதும் உயிர் வாழ்வதற்காக மட்டுமே நீங்கள் போராடிக் கொண்டிருந்தால் எப்படி இருக்குமென்று ! உலக வல்லரசின் ஆதரவுடன், உலகின் நான்காவது பெரிய இராணுவம் உங்களையும் உங்கள் வீட்டையும் துடைத்தெறிவதற்கு மூர்க்கத்தனமாக முனைந்து கொண்டேயிருக்க, அதையெதிர்த்து நீங்கள் போராடிக் கொண்டேயிருக்க… வாழ்க்கை என்பதே இதுதான் என்றால்…


அதனால்தான் எனக்கு இப்படித் தோன்றுகிறது. இந்த பாலஸ்தீனக் குழந்தைகள் அமெரிக்கா எனும் என்னுடைய உலகத்தை உண்மையிலேயே நேரில் பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்ற கேள்வி என்னை வாட்டுகிறது.


நன்றி : ஃபிரண்ட்லைன் 11.04.2003