Wednesday, June 11, 2014

நந்திக்கடலில் உண்மையில் நடந்தது என்ன?




 
Print Friendly
ltte.prabakaran-dead-20விடுதலைப் புலிகளின் தலைவராக இருந்த பிரபாகரன், யுத்தமுனையில் உயிரிழந்து 5 ஆண்டுகள் முடிகின்றன. பற்பல காரணங்களுக்காக இதை நன்கு தெரிந்த சிலர்கூட, வெளியே சொல்ல விரும்புவதில்லை. வேறு சிலருக்கோ, இப்போது பிரபாகரன் இறந்து விட்டார் என்பது தெரியும். ஆனால், எப்படி இறந்தார் என்பது தெரியாது.

இதைப்பற்றி எந்த தமிழ் மீடியாவும் வாய் திறக்க விரும்புவதில்லை. காரணம், துரோகிப் பட்டம் கிடைக்கலாம் என்ற அச்சம். நாமும் (விறுவிறுப்பு) இது பற்றி எழுதவில்லை. காரணம், எம்மிடமும் முழுமையாக தகவல்கள் இதுவரை இருக்கவில்லை.
பிரபாகரன் இறந்த விதம் எப்படி என்பதை யாரிடம் கேட்டு அறியலாம் என்றால், தற்போது உள்ள ஒரே சாய்ஸ், இலங்கை ராணுவம் தான்.
யுத்தம் முடிந்தபின் சமீபத்தில் இலங்கையில் பாதுகாப்பு அமைச்சகத்தின் அனுமதியுடன் சில ராணுவ உயரதிகாரிகளிடம் இருந்து பெற்ற தகவல்களை தொகுத்து இந்த கட்டுரையில் தருகிறோம்.
 

2009-ம் ஆண்டு மே, 17-ம் தேதி. மாலை 4 மணி.

முள்ளிவாய்க்கால் பகுதியில் மிகச் சிறிய இடத்துக்குள், சுமார் 2 சதுர கி.மீ. பரப்பளவுக்குள் விடுதலைப் புலிகளை பாக்ஸ் அடித்துவிட்ட ராணுவத்தின் வெவ்வேறு படைப்பிரிவுகள், யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் இறுதி தாக்குதலுக்கு தயாராகின.
இந்த நேரத்துக்குள், புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் இருந்த பொதுமக்கள் ஏராளமான எண்ணிக்கையில், ராணுவம் நின்றிருந்த பகுதிக்குள் செல்ல தொடங்கி விட்டனர். ஆரம்பத்தில் நூற்றுக்கணக்கில் என்று தொடங்கி, பின் ஆயிரக் கணக்கில் பொதுமக்கள் ராணுவப் பகுதியை நோக்கி நகரத் தொடங்கியதை, விடுதலைப் புலிகளால் தடுக்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.

இரவு 7 மணி.

அதிரடிப்படை-8 முற்றுகையிட்டு நின்றிருந்த இடத்தின் ஊடாக சரணடைய வந்த ஆயிரக்கணக்கானவர்களை சோதனை செய்து, ராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் அனுப்பிக்கொண்டு இருந்தார்கள். அந்த கூட்டத்தில், துப்பாக்கியை வீசிவிட்டு, சரணடைய வந்த விடுதலைப் புலிகள் உறுப்பினர்களும் அதிக எண்ணிக்கையில் இருந்தார்கள்.

இரவு 10 மணி.

இதற்குமேல் சரணடைய வந்தவர்கள் யாரையும், ராணுவ பகுதிக்குள் உள்ளே அனுமதிப்பதில்லை என முடிவு எடுக்கப்பட்டது. காரணம், இந்த பகுதியூடாக விடுதலைப் புலிகள் அதிக எண்ணிக்கையில் சரணடைவதால், இருளில் சரணடைவது போல வந்து புலிகள் தாக்குதல் நடத்தலாம் என்ற முன்னெச்சரிக்கை.

18-ம் தேதி அதிகாலை 1.30 மணி.

அதிரடிப்படை-8 தளபதி கர்னல் ஜி.வி.ரவிப்பிரியவுக்கு காவலரணில் இருந்து போன் அழைப்பு வந்தது. “சுமார் 100 பொதுமக்கள் சரணடைய வேண்டும் என்று வந்திருக்கிறார்கள்”
“இரவில் யாரையும் அனுமதிக்க முடியாது. அவர்களை நாளை காலை பகல் வெளிச்சத்தில் வரச் சொல்லுங்கள்” என்றார் ரவிப்பிரிய.
இதற்கு காவலரணில் இருந்த ராணுவ அதிகாரி, “இந்த பொதுமக்கள் கடலேரியில் (நந்திக்கடலுடன் இணைப்பாக உள்ள ஏரி) நிற்கிறார்கள்.
இடுப்பளவு தண்ணீரில் நின்றபடி, தம்மை அனுமதிக்கும்படி கோருகிறார்கள். பெண்கள், குழந்தைகளும் உள்ளார்கள். குழந்தைகள் வீரிட்டு அழுகின்றன” என்றார்.
“எப்படி இருந்தாலும் அனுமதிக்க முடியாது. அவர்களை மீண்டும் நாளை வரச் சொல்லுங்கள்”
இந்த தகவல், தண்ணீரில் நின்றிருந்த பொதுமக்களுக்கு சொல்லப்பட்டது. “வந்த வழியே திரும்பி போங்கள். மீண்டும் நாளை வாருங்கள்”
தம்மை உள்ளே அனுமதிக்க மாட்டார்கள் என்பது அந்த பொதுமக்களுக்கு நன்கு புரிந்தவுடன், காட்சி மாறியது. பெண்கள், குழந்தைகளுடன் நின்றிருந்த ‘பொதுமக்கள்’ 20 பேர், தமது பைகளில் இருந்து பல ரகத்திலான துப்பாக்கிகளை எடுத்தார்கள்.
58-வது கெமுனு வாட்ச் படைப்பிரிவால் அமைக்கப்பட்டிருந்த காவலரண்கள் இரண்டை நோக்கி சுட்டபடியே, அந்த இடத்தில் ராணுவ முற்றுகையை உடைக்க முயன்றார்கள்.
முள்ளிவாய்க்காலுக்குள் முடிக்கப்பட்டு இருந்த புலிகளின் முக்கியஸ்தர்கள், ராணுவ முற்றுகையை உடைத்துக்கொண்டு, வெளியேறும் திட்டம் இது என்று ராணுவத்துக்கு புரிந்து போனது. துப்பாக்கியால் சுட்டபடி தண்ணீரில் முன்னேறி வந்தவர்களை நோக்கி, அதிரடிப்படை-8 ராணுவத்தினர் திருப்பி சுட தொடங்கினார்கள்.
இதையடுத்து, துப்பாக்கியால் சுட்டபடி முன்னேற முயன்றவர்களால் நேரே வர முடியவில்லை. தண்ணீருக்கு உள்ளே இடது புறம் திரும்பி ஓடி, நந்திக் கடலோரம் தண்ணீரில் வளர்ந்திருந்த புதர்களுக்குள் மறைந்தார்கள். அந்த புதர்களை நோக்கி, அதிரடிப்படை-8 ராணுவத்தினர் RPG (Rocket-Propelled Grenade) தாக்குதலை நடத்தினார்கள்.
ராக்கெட்டுகள், அந்த புதர்களை சிதறடித்ததில், அதற்குள் மறைந்திருந்த அனைவரும் கொல்லப்பட்டனர். சில மணி நேரத்தின் பின் சூரிய வெளிச்சம் வந்தபின், புதர்களுக்குள் இறந்து கிடந்தவர்களின் உடல்களை ராணுவம் வெளியே இழுத்து போட்டபோது, விடுதலைப் புலிகளின் தளபதிகள் சூசை, சொர்ணம், ஆகிய இருவரும் அடையாளம் காணப்பட்டனர்.
அந்த 20 பேரில் பிரபாகரன் இல்லை.

மீண்டும் சற்று பின்நோக்கி போகலாம். 17-ம் தேதி. இரவு 7 மணி.

சவிந்திர சில்வா தலைமையிலான 58-வது படைப்பிரிவினர், கும்மிருட்டு காரணமாக அன்றைய ஆபரேஷனை நிறுத்தினார்கள். இதையடுத்து, முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து புறப்பட்ட சவிந்திர சில்வா, கிளிநொச்சியில் அமைந்திருந்த 58-வது படைப்பிரிவு தலைமையகத்துக்கு செல்ல கிளம்பினார். அவர் கிளிநொச்சியை சென்றடைந்த போது, நள்ளிரவு நேரமாகி விட்டிருந்தது.
58-வது படைப்பிரிவு தலைமையகத்தில், முள்ளிவாய்க்காலுக்கு மேலே பறந்து கொண்டிருந்த உளவு விமானம் எடுத்து அனுப்பிய போட்டோக்களை ஆராய்ந்து கொண்டிருந்தார் சவிந்திர சில்வா.

நேரம் அதிகாலை 1.30.

இந்த நேரத்தில், முள்ளிவாய்க்கால் 58-வது படைப்பிரிவு ஆபரேஷன் சென்டரில் இருந்து போன் அழைப்பு வந்தது. விடுதலைப் புலிகள் ராணுவ முற்றுகையை உடைப்பதற்காக தாக்குதல் நடத்துவதாகவும், 53-வது படைப்பிரிவு முற்றுகையிட்ட இடத்தில் தாக்குதல் நடப்பதாகவும் சொல்லப்பட்டது.
53-வது படைப்பிரிவின் முற்றுகை லைன் மீது தாக்குதல் நடந்தால், அதற்கு அடுத்ததாக உள்ள முற்றுகை லைன், தமது படைப்பிரிவாக 58-வது டிவிஷனுக்குரியது என்பதால், மீண்டும் முள்ளிவாய்க்கால் நோக்கி புறப்பட்டார் சவிந்திர சில்வா.
கிளிநொச்சியில் இருந்து முள்ளிவாய்க்கால் நோக்கி புறப்பட்ட சவிந்திர சிலாவாவின் ஜீப் புதுக்குடியிருப்பை நெருங்கிய நிலையில், அவரது வாக்கி-டாக்கியில் அழைத்தால், ராணுவ உளவுப்பிரிவை சேர்ந்த அதிகாரி ஒருவர்.
“53-வது படைப்பிரிவின் முற்றுகை லைனை உடைக்க தாக்குதல் நடத்தும் குழுவில், பிரபாகரனும், பொட்டு அம்மானும் இருப்பதாக தகவல் கிடைத்தது. அவர்கள், அங்கிருந்த ராணுவ அம்புலன்ஸ் ஒன்றை கைப்பற்றியிருப்பதாக புலிகளின் ரேடியோ ட்ராக்ஸ்மிஷனில் இருந்து தெரிகிறது” என்றார் உளவுப்பிரிவு அதிகாரி.
இதையடுத்து ஜீப்பில் இருந்தபடியே தனது படைப்பிரிவுக்கு உத்தரவிட்டார் சவிந்திர சில்வா, “அனைத்து வாகன நடமாட்டங்களையும் உடனே நிறுத்தவும். காயமடைந்தவர்களை ஏற்றிச் செல்லும் அம்புலன்ஸ் உட்பட, எந்த வாகனமும் அசையக்கூடாது.
இந்த நேரத்தில், 53-வது படைப்பிரிவின் முற்றுகை லைனை தாக்கிய விடுதலைப்புலிகள் அணி, 58-வது படைப்பிரிவின் முற்றுகை லைனை நோக்கி வந்துவிட்டது. மீண்டும் வாக்கி-டாக்கியில் ஒரு தகவல் வந்தது. “ராணுவ அம்புலன்ஸ் ஒன்று அந்த பகுதியில் நகர்கிறது. என்ன செய்வது?”
ஜீப்பில் பயணித்தபடியே பயரிங் ஆர்டர் கொடுத்தார் சவிந்திர சில்வா. அப்போது நேரம், அதிகாலை 3 மணி.
அம்புலன்ஸை நோக்கி 58-வது படைப்பிரிவினர் ராக்கெட் தாக்குதல் நடத்த, அது தீப்பிடித்தது. “அம்புலன்ஸூக்குள் இருந்தது யார் என பார்த்துவிட்டு உடனே எனக்கு தகவல் தாருங்கள்” என்றார், சவிந்திர சில்வா.
சில நிமிடங்களில் அந்த தகவல் வந்தது. “அம்புலன்ஸூக்குள் கருகிய நிலையில் இரு உடல்கள் உள்ளன. ஒன்று குள்ளமான பருத்த நபர். மற்றையவர் உயரமான நபர். முகங்கள் அடையாளம் தெரியாதபடி கருகியுள்ளன”
இதையடுத்து, அந்த இருவரும், பிரபாகரனும், பொட்டு அம்மானும் என நினைத்தார் சவிந்திர சில்வா. (ஆனால், அந்த உடல்களுக்கு உரியவர்கள், பிரபாகரனும், பொட்டு அம்மானும் அல்ல)
பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார் என நினைத்த சவிந்திர சில்வா, முள்ளிவாய்க்கால் செல்லும் திட்டத்தை கைவிட்டு, புதுக்குடியிருப்பு சந்தியில் அமைந்திருந்த 53-வது டிவிஷன் தலைமையகத்தை சென்றடைந்தபோது, நேரம் அதிகாலை 5 மணி.
அங்கே அவருக்கு மற்றொரு செய்தி காத்திருந்தது. 53-வது படைப்பிரிவு முற்றுகை லைனை உடைக்க வந்த விடுதலைப் புலிகளின் ஒரு பிரிவினர், முற்றுகை லைனை உடைத்துக்கொண்டு, ஏற்கனவே 58-வது படைப்பிரிவால் கிளியர் செய்யப்பட்ட யாருமற்ற பகுதிக்குள் (No man’s land) சுமார் 1 கி.மீ. வரை இருளில் சென்று விட்டது தெரியவந்தது.
உடனடியாக, ராணுவ வாகனங்களில் துரத்திச் சென்று அவர்களை தாக்கினர், ராணுவத்தினர். சிலர் கொல்லப்பட்டனர், சிலர் காயமடைந்து வீழ்ந்த நிலையில் கைப்பற்றப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் ஒருவர், பிரபாகரனின் மகன் சார்ள்ஸ் ஆன்டனி.
சார்ள்ஸ் ஆன்டனி கொல்லப்பட்டபோது, கையில் ஒரு துப்பாக்கியுடன் இருளில் ஓடிக்கொண்டு இருந்தார்.
 
ltte.prabakaran-dead-21

மீண்டும் சற்று பின்நோக்கி போகலாம். 2009-ம் ஆண்டு மே, 17-ம் தேதி. மாலை 6 மணி.

விடுதலைப் புலிகள் இருந்த சிறிய பகுதியை சுற்றி முற்றுகையிட்டிருந்த இலங்கை ராணுவ படைப்பரிவுகளில், 58-வது, 59-வது படைப்பிரிவுகளின் முற்றுகை லைன் பாதுகாப்பு ஏற்பாடுகளை செக் பண்ணிக்கொண்டு இருந்த தளபதி லெப். கர்னல் செனக விஜேசூர்யவுக்கு போன் அழைப்பு வந்தது.
பேசியவர், வன்னி ஆபரேஷன் கமான்டர், மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூர்ய.
“விடுதலைப் புலிகளின் ரேடியோ தொடர்புகளை ஒட்டுக் கேட்டதில் இருந்து, இன்றிரவு அவர்கள் முற்றுகை லைனை உடைத்துக் கொண்டு வெளியேறும் திட்டம் ஒன்று வைத்திருப்பது தெரிகிறது. அவர்கள் தமது ரேடியோ உரையாடலில் படகுகள் பற்றி பேசினர். எனவே, இந்த தாக்குதல் நந்திக்கடல் பக்கம் இருந்து வரலாம். உங்களது டிவிஷன் பாதுகாப்பு லைனை பலமாக வைத்திருங்கள். இன்றிரவு தாக்குதல் நடக்கலாம் என சொல்கிறது எம்.ஐ. (மிலிட்டரி இன்டெலிஜென்ஸ்)” என்றார்.
செனக விஜேசூர்யாதான், 59-வது படைப்பிரிவு, நந்திக்கடல் கரையில் முற்றுகை லைன் அமைத்திருந்த செக்டருக்கு கமாண்டர்.
மாலை 6 மணிக்கு இருட்ட தொடங்கியிருந்த நேரத்தில், நந்திக்கடல் பகுதியில் எந்த நடமாட்டமும் இல்லை என்பதை அவர் கவனித்தார்.
இந்த நந்திக்கடல் என்பது கடல் ஏரி. சுமார் 5 கி.மீ. அகலமானது. சில இடங்களில் இடுப்பளவு தண்ணீர் (மேலே போட்டோ பார்க்கவும்) சில இடங்களில் ஆழம் அதிகம். கரையில் சில இடங்களில் மாங்குரோவ் புதர்கள் உள்ளன.

இரவு 7 மணி.

நந்திக்கடலில் தொலைவில் இரு படகுகள் வருவது முழுமையாக இருள் சூழாததால் சாதாரண கண்களுக்கே தெரிந்தன. இரு படகுகளும் கடல்புலிகளின் படகுகள் என்பதை அவற்றின் ஷேப்பை வைத்தே தெரிந்து கொள்ள முடிந்தது. 59-வது படைப்பிரிவு முற்றுகை லைன் இருந்த இடத்தை நோக்கி வந்த இரு படகுகளும் கரையில் இருந்து 2 கி.மீ. தொலைவில் நின்று விட்டன.
கரையில் முற்றுகை லைனில் இருந்த தனது சிப்பாய்களுக்கு, படகுகளை நோக்கி சுட வேண்டாம் என கடுமையாக உத்தரவு கொடுத்திருந்தார், செனக விஜேசூர்ய. “படகில் இருந்து சுட்டால்கூட திருப்பி சுட வேண்டாம்”
இதற்கு காரணம் என்னவென்றால், கரையில் இருந்து இவர்கள் சுட்டால், எந்தெந்த இடங்களில் இவர்களது சக்தி வாய்ந்த துப்பாக்கிகள் உள்ளன என்பதை கடல்புலி படகில் உள்ளவர்கள் தெரிந்து கொள்வார்கள் என்பதே!
கடல்புலி படகுகள் இரண்டும் அந்த காரணத்துக்காகதான் வந்து நின்றன போலிருக்கிறது. சுமார் அரை மணி நேரம் நின்று விட்டு, திரும்பி சென்றுவிட்டன.

இரவு 8 மணி.

மீண்டும் இரு படகுகள் வந்து அதே இடத்தில் நின்றன என்பதை military night google equipments மூலம் பார்க்க முடிந்தது. இம்முறை அந்த படகுகள் அரை மணி நேரத்தில் திரும்பி செல்லவில்லை. தொடர்ந்து அங்கேயே நின்றிருந்தன.

இரவு 11 மணி.

இரண்டு படகுகள் தெரிந்த இடத்தில் இப்போது 4 படகுகள் தெரிந்தன. 4 படகுகளில் ஒரேயொரு படகு கரையை நோக்கி வரத் தொடங்கியது. கரையில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் வந்துவிட்ட அந்தப் படகில் இருந்து கரையை நோக்கி சுட தொடங்கினார்கள். அந்த நேரத்தில் பின்னணியில் கரையில் இருந்து 2 கி.மீ. தொலைவில் பல படகுகள் தெரியத் தொடங்கின. அவை கரையை நோக்கி வேகமெடுப்பது தெரிந்தது.
விடுதலைப் புலிகள் 59-வது படைப்பிரிவு முற்றுகை லைனை உடைப்பதற்காக வந்து கொண்டு இருக்கிறார்கள் என்பது கரையில் இருந்த ராணுவத்துக்கு புரிந்தது.
அந்த இருளில், சுமார் எத்தனை படகுகள் வருகின்றன என்பதை கரையில் இருந்தவர்களால் ஜட்ஜ் பண்ண முடியவில்லை.
முதலில் கரைக்கு அருகே வந்த படகை நோக்கி சுடும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சில ரவுண்ட் மோட்டார் தாக்குதல்கள் அந்த படகை நோக்கி மேற்கொண்டதில், அந்தப் படகு மூழ்கியது.
இதற்குள் ஏராளமான எண்ணிக்கையில் படகுகள் கரையை நெருங்கி வரத் தொடங்கி விட்டன.
ராணுவம் கரையில் இருந்து சுடத் தொடங்கியது. சில படகுகள் மூழ்கின. சில படகுகள் தப்பி கரையை அடைந்தன. அதிலிருந்து விடுதலைப் புலிகள் சுட்டபடி கரையில் குதித்தார்கள்.
அடுத்த சில நிமிடங்களில் பெரிய வெடிச் சத்தங்கள் இரண்டை கேட்டார் செனக விஜேசூர்ய. 59-வது படைப்பிரிவின் முற்றுகை லைனில் இருந்த காவலரண்கள் வெடிப்பது தெரிந்தது.
விடுதலைப் புலிகளின் தற்கொலை படையினர், உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு, 59-வது படைப்பிரிவின் முற்றுகை லைனில் இருந்த காவலரண் பங்கர்களுக்குள் குதித்து வெடிகுண்டுகளை வெடிக்க வைத்ததால் ஏற்பட்ட வெடிப்பு அது.
அந்த இரு பங்கர்களுக்குள் இருந்த அனைத்து ராணுவத்தினரும், கொல்லப்பட்டனர்.
இப்போது, 59-வது படைப்பிரிவின் முற்றுகை லைனில் உடைப்பு ஏற்பட்டு விட்டது. அந்த இரு பங்கர்கள் இருந்த இடத்தில் யாரும் இல்லை.
படகுகளில் வந்த விடுதலைப் புலிகள், அந்த இடத்தின் ஊடாக ஊடுருவி செல்ல தொடர்ந்து சுட்டபடி ஓடிவந்தார்கள்.
முன்னால் வந்தவர்கள் தற்கொலை படையினர்.  இவர்கள்தான் நிஜ தாக்குதல் படை.
ராணுவம், தாம் இழந்த இரு பங்கர்களையும் மீண்டும் கைப்பற்றும் முயற்சியில் இறங்கவே இல்லை. அதற்கு என்ன காரணம் என்பதை அடுத்த சில நிமிடங்களில் விடுதலைப் புலிகள் தெரிந்து கொண்டார்கள்.
அந்த காரணம் என்ன தெரியுமா?
புலிகளின் தற்கொலை தாக்குதல்களால் இரு பங்கர்கள் அழிக்கப்பட்டு, பாதுகாப்பு லைன் உடைக்கப்பட்ட இடத்தை நோக்கி, ராணுவம் 12.7mm எந்திர துப்பாக்கிகளை இரு திசையில் இருந்தும் திருப்பி விட்டிருந்தது.
அந்த துப்பாக்கிகள் சடசடவென வெடிக்க தொடங்கின. முற்றுகை லைனை ஊடுருவி செல்ல ஓடிவந்த விடுதலைப் புலிகள், நேரே வந்து, 12.7mm எந்திர துப்பாக்கி குண்டு மழையில் சிக்கிக் கொண்டார்கள்.
சுமார் 15 நிமிட குண்டுமழைதான். தாக்குதலுக்கு வந்த அனைவரது துப்பாக்கிகளும் ஓய்ந்து விட்டிருந்தன. நேரமும் நள்ளிரவை கடந்து விட்டிருந்தது.
மறுநாள் காலைதான் (18-ம் தேதி), இந்த முற்றுகை உடைப்பு தாக்குதலுக்கு வந்த புலிகள் பற்றிய விபரத்தை ராணுவம் தெரிந்து கொண்டது.
நந்திக்கடல் கரையில், சுமார் 120 விடுதலைப் புலிகளின் உடல்கள் கிடந்தன. வந்த அனைவருமே, வாட்டசாட்டமான ஆட்கள். நன்கு ஆயுதம் தரித்திருந்தனர். ஒவ்வொருவரிடமும் இரவில் பார்க்கும் உபகரணங்கள், ஒவ்வொரு லைட் மெஷின் துப்பாக்கி, ஒவ்வொரு ஜெனரல் பர்ப்பஸ் மெஷின் துப்பாக்கி இருந்தன. ஒவ்வொருவரின் உடலிலும், தற்கொலை அங்கிகள் காணப்பட்டன.
அவர்களின் அடையாள பட்டிகளில் (dog tags) உள்ள இலக்கங்களை பார்த்தபோது, அவர்கள் புலிகளின் மிகவும் சீனியர் படையணி என்று தெரிந்தது.
இந்த தாக்குதலில் இருந்து ராணுவம் ஒரு விஷயத்தை புரிந்து கொண்டது.
புலிகளின் மிக சீனியர் அணி ஒன்றை, அதுவும் நூற்றுக்கு மேற்பட்டவர்களை, நன்கு ஆயுதம் தரித்து, அனைவருக்கும் தற்கொலை அங்கி கொடுத்து அனுப்புகிறார்கள் என்றால், அந்த வழியாக மிகமிக முக்கியமான ஒருவர் தப்பித்துச் செல்ல திட்டமிட்டு இருந்திருக்கின்றனர்.
அது அநேகமாக பிரபாகரனாக இருக்கலாம்.
ஆனால், தாக்குதல் தோல்வியில் முடிந்தது. 59-வது படைப்பிரிவின் பாதுகாப்பு லைனை உடைத்து ஊடுருவி செல்ல முடிந்திருக்கவில்லை.
இவர்களுக்கு பின்னால் வந்திருந்த பிரபாகரன், திரும்பி சென்றிருக்க முடியாது, அதே நேரத்தில் 12.7mm எந்திர துப்பாக்கி குண்டு மழையை கடந்து சென்றிருக்கவும் முடியாது என்பதை புரிந்து கொண்ட ராணுவம், மற்றொரு விஷயத்தையும் ஊகித்துக் கொண்டது.
அது என்னவென்றால், பிரபாகரனும், நந்திக்கடலை அண்மித்த பகுதியில் எங்கோதான் இருக்க வேண்டும்.
பெரும்பாலும் நந்திக்கடல் கரையில் மாங்குரோவ் புதர்கள் அடர்ந்த பகுதிகளில் மறைந்திருக்கலாம். அந்தப் பகுதியை அதுவரை ராணுவம் கிளியர் செய்திருக்கவில்லை.
 
 
lanka-20140518-2
 
(உயிரிழந்த போது, பிரபாகரனிடம் இருந்தவை)
 
இந்த முடிவுக்கு ராணுவம் வந்து, நந்திக்கடல் கரையோரமாக சில பகுதிகளில் தேடியதில் யாருமில்லை. இதற்குள் இருள் சூழ்ந்துவிட்டது.
 
இந்தக் கட்டத்தில், அவர்களது தேடுதல் வேட்டை நடைபெறாத பகுதி, சுமார் 800 மீட்டர் நீளமும், 20 மீட்டர் அகலமும் உள்ள மாங்குரோவ் புதர்கள் இருந்த பகுதிதான்.
மறுநாள் காலையில், அதிரடிப்படை-8ன் பிரிவாக இருந்த 4-வது விஜயபா படையினர், அந்த புதர்களில் தேடுதலை தொடங்கினார்கள். இவர்கள் புதர்களை நோக்கி சுட்டபடி நகர்ந்து செல்ல, ஒரு இடத்தில் புதர்களுக்கு உள்ளேயிருந்து எந்திரத் துப்பாக்கிகள் வெடிக்க தொடங்கின.
இந்த தகவல், அதிரடிப்படை-8 தளபதி கர்னல் ஜி.வி.ரவிப்பிரியவுக்கு உடனே தெரிவிக்கப்பட்டது.
“கேட்கும் ஓசைகளை வைத்து கணிப்பிட்டால், சுமார் 20 துப்பாக்கிகள் அங்கிருந்து சுடுகின்றன” என்ற விபரமும் கூறப்பட்டது.
அந்த புதர்களுக்குள் சிலர் மறைந்திருப்பது, உறுதியானவுடன், மேலும் இரு தேடுதல் அணிகளை அனுப்பினார், ரவிப்பிரிய.
மூன்று அணிகளும் சுட்டபடி நகர, நந்திக்கடல் கரை தண்ணீரில் உள்ள அந்த புதர்களில் இருந்த மூவர் இவர்களிடம் உயிருடன் பிடிபட்டனர்.
அவர்களை விசாரித்ததில், அவர்கள் பிரபாகரனின் பாடிகார்டுகள் எனவும், பிரபாகரனும் மேலும் 30 பேரும் நந்திக்கடல் கரை தண்ணீரில் உள்ள அந்த மாங்குரோவ் புதர்களில் மறைந்திருக்கும் விஷயம் தெரியவந்தது.
இதையடுத்து, மூன்று தேடுதல் அணியை சேர்ந்தவர்கள் அனைவரும் அந்த புதர்களை நோக்கி சராமாரியாக சுட்டுத்தள்ள தொடங்கினார்கள்.
சிறிது நேரத்தில், புதர்களுக்கு உள்ளேயிருந்து ஒலித்த துப்பாக்கி ஓசைகள் நின்று போயின. அதன் பின்னரே, ராணுவம் புதர்களை நோக்கி சுடுவதை நிறுத்தியது.
சிறிது நேரத்தின்பின், தண்ணீரில் இறங்கி புதர்களில் உடல்களை தேடும் நடவடிக்கை தொடங்கியது. உடல்கள் ஒவ்வொன்றாக வெளியே வந்தன.
அதிரடிப்படை-8ஐ சேர்ந்த சார்ஜென்ட் முத்து பண்டா என்பவர், “இங்குள்ள உடல் ஒன்று பிரபாகரனின் போல உள்ளது” என தெரிவித்தார்.
கர்னல் ஜி.வி.ரவிப்பிரிய, அந்த உடல், பிரபாகரனின் உடல்தான் என்பதை உறுதி செய்தார்.
இவர்கள் உடலை கண்டெடுத்த போது, உடல் சூடு மீதமிருந்தது. அதிலிருந்து, சில நிமிடங்களுக்கு முன்புதான் அவர் இறந்திருப்பார் என ஊகித்தார்கள்.
அந்த உடலில், த.வி.பு. 001 (தமிழீழ விடுதலைப்புலிகள் 001) என்ற இலக்கமுடைய அடையாளப் பட்டி (dog tag) இருந்தது.
அது தவிர, இரு பிஸ்டல்கள், ஒரு T-56 எந்திரத் துப்பாக்கி (டெலஸ்கோப் பொருத்தப்பட்டது), ஒரு சாட்டலைட் போன், பிரபாகரனின் பெயர் பொறிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் அடையாள அட்டை, ஒரு மருந்து சீசாவுக்குள் டயாபடிக் மருந்துகள் ஆகியவை இருந்தன.
நாம் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல, இதுதான் இலங்கை ராணுவத் தரப்பில் சொல்லப்பட்ட விபரங்கள். அவர்களது கூற்றுப்படி பிரபாகரன் இறந்தது, 5 ஆண்டுகளுக்கு முன், சரியாக இதே நாள் (19-ம் தேதி, மே 2009), காலையில்…!!!!
–விறுவிறுப்பு–
 
 
Thanks : Viruviruppu
 

Monday, June 9, 2014

"இனியொரு” சபா.நாவலன் நேர்காணல்:







இனியொரு” தளத்தை நடத்தும் குழுவைச் சேர்ந்த தோழர் சபா.நாவலன் ஈழத்தை சேர்ந்தவர், தற்போது இங்கிலாந்தில் வாழ்கிறார். ஜூலை, 2009 சமயத்தில் சென்னை வந்திருந்த போது அவரிடம் இந்த நேர்காணல் எடுக்கப்பட்டது. வினவிற்காக இந்த நேர்காணலை எடுத்தவர் தோழர் இராவணன். தனது சென்னைப் பயணத்தின் நினைவுகளினூடாக தனது நேர்காணலைத் துவங்கினார் தோழர் சபா. நாவலன். 



"நான் சென்னைக்கு பலமுறை வந்திருக்கிறேன். எண்பதுகளில் அரசியல் காரணங்களுக்காக எல்லா விடுதலை இயக்கங்களும் தமிழகத்தை தங்கு தளமாக பயன்படுத்திய காலத்தில் டெலோவில் இயங்கிய நானும் அரசியல் நடவடிக்கைகளுக்காக சென்னைக்கு வந்திருக்கிறேன். நான் எண்பதுகளில் பார்த்த சென்னைக்கும் இன்றைக்கு பார்க்கும் சென்னைக்கும் ஏராளமான வித்தியாசங்கள் இருக்கிறது. இந்தியாவின் நிலபுரபுத்துவ தன்மைகள் குறைந்து மூலதனங்கள் நகரங்களை நோக்கி குவிக்கப்பட்டதன் அடையாளமாக சென்னை உருமாறியிருக்கிறது. சென்னையில் இன்றைய உருமாற்றத்தை வளர்ச்சியாக காண முடியுமா? என்று தெரியவில்லை. ஏனென்றால் ஐய்ரோப்பாவின் மூலதனக் குவியலும் முதலாளித்துவத்தின் உருவாக்கத்தோடும் இதை ஒப்பிட முடியாது. உலகமயமாக்கலின் ஒரு விளைவை இங்கு காண முடிகிறது. மேல் மத்திய தரவர்க்கம்  செல்வாக்குச் செலுத்தும் சென்னையில் நிலமற்றவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கிறது. சென்னையில் அழகிற்காக இங்கிருக்கும் பூர்வகுடி உழைக்கும் மக்களை அன்றாடம் அள்ளி எடுத்து வெளியில் வீசிக் கொண்டிருப்பதும் தெரிகிறது. இந்த  முரண்களூடாக இடது சாரிகள் தேசிய மூலதனத்தைப் அன்னிய மூலதனத்திற்கு எதிராக நிறுத்தும் செயற்பாட்டையும்  முன்னெடுக்க வேண்டும் என்றே கருதுகிறேன்"


வினவுநாவலன் என்பதன் அடையாளம் என்ன?


நாவலன்: 7 ஆம் வகுப்புவரை நான் மலையகத்தில் படித்துக்கொண்டிருந்தேன், ஆறாம் வகுப்பில் எனது வகுப்பாசிரியராக இருந்தவர் திரு.பி.ஏ.காதர் அவர்கள். அவர் சண்முகதாசனின் மாவோயிசக் கட்சியின் ஆதரவு உறுப்பினராக இருந்தார். அவர்தான் எங்களுக்கு மார்க்சியம் சொல்லித்தந்தார். ஏழாவது வகுப்பின் இறுதியில் எங்கள் வகுப்பில் யாருக்கும் கடவுள் நம்பிக்கை இருந்திருக்கவில்லை. அப்போது காதரின் வழிநடத்தலில் “நாளை நமதே” என்ற கையெழுத்துச் சஞ்சிகையை நடாத்தினோம். இப்போது காதரும்  பிரித்தானியாவில் தான் வாழ்கிறார். 7ம் வகுப்புப் படித்துக்கொண்டிருக்கும் போது எனது பிறந்த நாள் பரிசை வாங்குவதற்காக அப்பா 10 ரூபா பணம் கொடுத்தார். அதை வைத்து நான் மாவோவின் படத்தை வாங்கிக்கொண்டு வீட்டுக்குச் சென்றதும் என்னை மலையகத்திலிருந்து  யாழ்ப்பாணத்திற்கு இடம்மாற்றிவிட்டார்கள்.  அப்போது எனது உறவினர்கள் வீட்டிலும், கல்லூரி விடுதியிலும் தங்கிக் கல்வி கற்றேன்.
யாழ்பாணத்தில் 8 வது வகுப்பில் படித்துக்கொண்டிருந்த போது விடுதலை இயக்கங்களின் தலை மறைவுச் செயற்பாடுகள் ஆரம்ப நிலையில் இருந்தன. பின்னாளில் ஈ.பி.டி.பி கட்சியிலிருந்து கொலைசெய்யப்பட்ட அற்புதராசா (ரமேஷ்) என்னுடைய பள்ளி நண்பன். அவருடைய பெற்றோர் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆதரவாளர்கள். இவர் வீட்டுக்குச் செல்லும் போதெல்லாம் நான் காதரிடம் கற்ற சோசலிசம் குறித்துப் பேச அவர்கள் தமிழீழம் குறித்துப் பேசுவார்கள்.
இவர்களூடாக மேலும் என்னைப் போல சில சிறுவர்களதும் உயர்தர வகுப்பு இளைஞர்களதும் தொடர்பு கிடைக்கவே நாங்கள் பள்ளிக்கூட மதிலேறிக் குதித்து கூட்டம் நடத்துவோம், விவாதிப்போம். சில நாட்களில் எனது சோசலிசமும் அவர்களது தமிழீழமும் இணைந்து சோசலிசத் தமிழீழம் என்ற முடிபில் இனிமேல் போராடுவதாகத் தீர்மானித்தோம்.
இதை நானும் இன்னும் சிலரும் சேர்ந்து போய் ஈழநாடு பத்திரிகை அலுவலகத்தில் ஆசிரியரிடம் தெரிவித்தோம்.அப்போது ஈழ நாடு பேப்பரின் சோசலிசத் தமிழீழத்திற்காக சிறுவர்கள் கூட்டம் போட்டுள்ளனர். என்று முதல் பக்கத்திலேயே செய்தி வெளியாகியிருந்தது.
அது எங்கள் பள்ளியில் பிரச்சனையாகி எங்கள் பிரின்சிபால் என்னை ரத்தம் வருகிறபடி அடித்து விட்டார். எண்பதுகளில் போலீஸ், இராணுவ அடக்குமுறைகளை மீறி விடுதலை இயக்கங்களில் இணைவதென்பது ஒரு சமூக அங்கீகாராமாக இருந்தது.
ஈழப் போராட்டத்தைத் பாய்ச்சல் நிலையான வளர்ச்சிக்கு இட்டுச் சென்றது இந்திய உளவு நிறுவனமான “ரா”. திட்டமிட்டுப் போராட்டத்தை அழிப்பதற்கான அத்திவாரததை இந்திய அரசுதான் மேற்கொண்டது.
இந்தியாவிடம் பயிர்ச்சிக்குச் செல்வது பற்றிய ஒரு விதமான மயக்கமான எண்ணங்கள் எல்லா இளைஞர்களுக்குமே இருந்தது.
அந்த வேளையில் மனோ மாஸ்டர் என்பவரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இவர் புலிகள் இயக்கத்தைக் கலைத்துவிட்டு பிரபாகரனும் இன்னும் சிலரும் குட்டிமணி மற்றும் தங்கத்துரை தலைமையிலான குழுவில் இணைந்து கொண்ட காலப்பகுதியில் புலிகள் இயக்கத்தைத் தலைமை தாங்கியவர் மனோமாஸ்டர். தமிழ் புதிய புலிகள் என்று இருந்த பெயரை தமிழீழ விடுதலைப் புலிகள் என்று மாற்றியவரும் இவர்தான். மார்க்சிய சிந்தனைகளில் தேடல் ஆர்வம் கொண்ட மனோ மாஸ்டர், பின்னதாக கம்யூனிச இயக்கத்தின் தலைமையிலேயே தேசிய விடுதலைப் போராட்டம் நடத்தப்பட வேண்டும் என்ற கோட்பட்டின் அடிப்படையில் புலிகள் இயக்கத்தைக் கலைத்துவிட்டு, வேறு சிலரோடும் சேர்ந்து தத்துவார்த்த ஆய்வுகளில் ஈடுபட்டதோடு மக்களோடு மக்களாகக் கிராமங்களில் வாழ்ந்தார். 1983 வரை இவ்வாறான சிந்தனையைக் கொண்டிருந்த மனோமாஸ்டரை 83 ஜூலைக் கலவரங்களின் பின்னர் நான் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.
அந்த வேளையில் அவர் ரெலோ இயக்கத்தின் அரசியல் பொறுப்பாளராக இணைந்திருந்தார்.இந்திய அரசு வழங்கிய இராணுவப் பயிற்சிகாக ஆயிரக் கணக்கில் இளைஞர்கள் திரட்ட்ப் பட்டுக்கொண்டிருந்தனர்.
எனது மார்க்சிய ஈடுபாடு குறித்து அறிந்துகொண்ட மனோ மாஸ்டர், புதிய கருத்து ஒன்றை என்னிடம் சொன்னார். இந்தியா பயிற்சிவழங்கும் இளைஞர்கள் இலங்கைக்கு வந்து தமக்குள் மோதிக்கொள்ளப் போகிறார்கள். மக்கள் நலனுக்கு எதிராகச் செயற்படப்போகிறார்கள். இந்தியா தமிழீழத்தை எந்தக் காரணம் கொண்டும் பெற்றுக்கொடுக்கப் போவதில்லை. இறுதியில் போராட்டமும் பெரும் தொகைப் போராளிகளும் மக்களும் அழிவதிலேயே இந்த புதிய நகர்வுகள் முடிவடையப் போகின்றன என்றார். இந்த நிலையில் நாம் இவ்வியக்கங்களைச் சுற்றி பலமான மக்கள் திரளமைப்புக்களை கட்டியமைப்பதன்  ஊடாக அழிவுகளை மட்டுப்ப்படுத்த முடியும் என்ற கருத்தை முன்வைத்தார். இவ்வாறான ஒரு கருத்தியல் தளத்தில் இந்தியாவிற்கு எதிரான போராட்டத்தையும் முன்னெடுக்க முடியும் என்றும், இந்த வகையில் ரெலோ இயக்கத்தின் பலவீனமான தலைமையின் கவனத்திற்கு உட்படாமல் அவ்வியக்கத்தின் பலத்துடனேயே மக்கள் வேலைகளை முன்னெடுக்கலாம் என்றும் கூறினார்.
84 ஆரம்பத்தில் மனோமாஸ்டரின் அடுத்த கட்ட வேலைத்திட்டமாக ரெலோ இயக்கத்தின் மத்திய குழுவை  முற்போக்கு சிந்தனை கொண்டவர்களை திரட்ட அமைப்பதாகத் திட்டமிட்டார். அதற்கான உட்கட்சிப் போராட்டம் இந்தியாவில் ஆரம்பித்திருந்தது. இதனை ஆரம்பத்திலிருந்தே ரேலோ இயக்கத் தலைவர் சிறீ சபாரத்தினம் மறுத்திருந்தார். மத்திய குழு அமைத்து ரெலோ இயக்கத்தை ஜனநாயக மயப்படுத்துவதை இந்தியா விரும்பவில்லை என்பதே அவர் முன்வைத்த காரணமாகும். 84 இல் ரெலோ இயக்கத்தை கருணாநிதி ஊடாகவும் புலிகளை எம்.ஜீ.ஆர் ஊடாகவும் இந்திய உளவுப்படை கையாண்டது. மத்திய குழு அமைப்பதை கருணாநிதியும் நிராகரித்து விட்டதாக சிறீ சபாரத்தினம் கூறியிருந்தார். ஆனால் உட்கட்சிப் போராட்டம் தொடர்ந்தது. அவ்வேளையில் சுதன், ரமேஷ் என்ற இரு முக்கிய தலைவர்கள் சிறீ சபாரத்தினத்தால் கைது செய்யப்பட்டு சிறைவக்கப்பட, மனோமாஸ்டர் இந்தியாவிற்க்ச் செல்ல அவரைத் தொடர்ந்து நானும் இன்னும் 8 முக்கிய தள உறுப்பினர்களும் இந்தியா சென்றோம். அப்போது எனக்கு 19 வயது கூட நிரம்பவில்லை.
84 இல் கைது செய்யப்பட்ட சுதன் ரமேசை விடுதலை செய்யக் கோரி மரீனா பீச்சில் காந்தி சிலைக்குக் கீழ் காலவரையறையின்றி  உண்ணாவிரத்மிருந்தோம்.
இதே வேளை நாமெல்லாம் இயக்கத்திலிருந்து பிரிந்து இலங்கை சென்ற வேளை மனோமாஸ்டரைப் புலிகள் இயக்கம் சுட்டுக் கொலைசெய்துவிட்டது. ஆளுமை மிக்க தலைவராகவும் சமூக உணர்வுள்ள புரட்சிக்காரனாகவும், பிரபாகரன் நன்கு அறிந்த அவர் நண்பனாககவும் இருந்ததால் இக்கொலை நிகழ்ந்திருக்க வேண்டும். ஈழப் போராட்டத்தில் மார்க்சிய சிந்தனைகளைப் பிரயோகித்த மிகச்சிலருள் ஒருவரான மனோமாஸ்டரின் இழப்பு மிகப் பெரிய பின்னடைவு.


வினவுஇடது சாரி அமைப்புகளின் தலைமை பின்பற்றும் மத்தியக் குழு மாதிரியான அமைப்புக்கு இந்தியா ஏன் சம்மதிக்கவில்லை?


நாவலன் – ஒரு தேசீய இனவிடுதலை இயக்கத்தில் பல் வேறு சக்திகள் இருக்கின்றன. ஒவ்வொரு வர்க்கத்தட்டும் அவரவர் நலன்களை உறுதிப்படுத்திக் கொள்ளத் தலைப்படும். இந்தியாவுக்கோ தங்களின் சொல்படிக் கேட்டு நடக்கும் அடியாட் படைகளே ஈழத்தில் போராளிகளாக தோற்றம் பெற வேண்டும்.மற்றபடி அடிமட்டத்திலிருந்து அமைப்புக் கட்டி இடதுசாரி அமைப்புகளுக்கே உள்ள தத்துவார்த்தத் தளத்தில் எந்த அமைப்பும் உருவாகி விடக் கூடாது என்பதில் இந்தியா கவனமாக இருந்தது. இலங்கையில் பின்காலனியப் பகுதியின் நடைபெற்ற பல போராட்டங்கள் தீர்க்கமான சோசலிசப் புரட்சியை நோக்கிய வளர்ச்சியைக் கொண்டிருந்தது. ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற இயக்கங்கள் புரட்சிகரக் கட்சிக்கான அமைப்புமுறைகளையும் வேலைத் திட்டங்களையும் ஆரம்பத்திலிருந்தே கொண்டிருந்தன.


வினவுஎல்லா போராளி அமைப்புகளுமே இப்படித்தான் இந்தியாவை நம்பி இருந்ததா? ஈழ விடுதலை என்னும் அரசியல் கேரிக்கையில் எந்த போராளிக் குழுக்களுக்குமே புரிதல் இல்லையா? அப்புறம் சீறி சபாரத்தினம் அவருடைய கொள்கை என்ன? அவர் எப்படி எல்லோருக்கும் தலைவர் ஆனார்?


நாவலன் - அவருக்கு அரசியல் ரீதியாகவோ கோட்பாட்டு ரீதியாகவோ எதுவிதமான அறிவோ படிப்பினைகளோ இல்லாமல் இருந்தது. இந்தியா எல்லாமே இந்தியா இந்தியா எங்களுக்கு எல்லாவற்றையும் பெற்றுக் கொடுக்கும் என்னும் எண்ணத்துடனேதான் அவர் இருந்தார்.   மற்றபடி  ஆயுதப் போராட்டத்தின் துவக்கத்திற்கு வல்வெட்டித்துறை ஒரு மிக முக்கியமான பங்கு வகித்தது.
தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் வல்வெட்டித் துறைக்கும் ஒரு “தொப்புள்கொடி” உறவு இருந்தது. கூட்டணியின் பிரதான பண வழங்கல் வல்வெட்டித் துறையின் கடத்தல் தொழிலூடாகவே திரட்டப்பட்டது. இது தான் பிரபாகரனின் சொந்த இடமும் கூட.
இவர்களுக்கு இந்தியாவின் தென் பகுதி கடலோர நகரங்களோடு பெரும் கடத்தல் வணிகத் தொடர்பு இருந்தது. அந்தவகையில் பண மூலதனம் வட பகுதியில் முதன் முதலாக உருவான இடமும் வல்வெட்டித்துறைதான். ஒரு கட்டத்தில் சிங்களக் கட்சிகளின் தேர்தல் செலவுக்கும் தமிழ் தலைவர்களின் தேர்தல் செலவுகளுக்கும் நிதி ஆதாரமாக இருந்ததும் இந்தக் கடத்தல் காரர்கள்தான். வரலாற்று ரீதியாக இந்தக் கடத்தல்காரர்கள் போராளி இயக்கங்கள் மீது செலுத்திய செல்வாக்கும் எமது போராட்டம் சீரழிய ஒரு காரணமாக அமைந்தது.
எழுபதுகளில் ஜெகன், குட்டிமணி, தங்கதுறை போன்றவர்கள் கடத்தல் தொழிலில் செல்வாக்குச் செலுத்தியவர்கள். கடத்தல் தொழில் வரும் பெருமளவான நிதியை தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு நிதியாக இவர்கள் வழங்கி வந்தார்கள். தமிழர் விடுதலைக் கூட்டணியோ இதற்குப் பதிலாக சட்டரீதியான பாதுகாப்பையும் அதிகார பீடங்களோடு தங்களுக்கு இருந்த உறவைப் பயன்படுத்தியும் இவர்களுக்கு உதவி வந்தார்கள். இது ஒரு பரஸ்பர பரிவர்த்தனை மாதிரி அந்தக் காலத்தில் நடந்து வந்தது.
அப்படி குட்டிமணி, தங்கதுறை குழுவின் கள்ளக் கடத்தலில் இணைந்த 16 வயது சிறுவன்தான் பிரபாகரன். சிங்களர்களுக்கு எதிரான பிரபாகரனின் எதிர்ப்பரசியலின் துவக்கம் என்பது இதுதான். அவர் குறி பார்த்துச் சுடுவதில் திறமை பெற்றவர்.தமிழரசுக் கட்சி தங்களின் அரசியல் எதிரிகளைக் கொல்வதற்கும் இவர்க்ளை பயன்படுத்திக் கொண்டார்கள். யாழ்பாண மேயர் துரையப்பா கொல்லப்பட்டது கூட  தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியல் படுகொலைதான்.
அப்போது எழுபதுகளில் சிறிமாவோ பண்டாரநாயகே பதவிக்கு வந்த போது அந்நிய உற்பத்திகள் தடை செய்யப்பட்டது. அப்போது நிதி அமைச்சராக இருந்தவர் என். எம்.பெரேரா.
அதே சமையம் யாழ்பாண உள்ளூர் உற்பத்தி அளவு அதிகரிக்கவும் செய்கிறது. அரிசி உற்பத்தில் யாழ்பாணம் பெரும் பாய்ச்சலைச் சந்தித்த காலமாகவும் அது இருந்தது. பல யாழ்பாண விவசாயிகளே வட பகுதிகளாக முத்தையன் கட்டு, வட்டக்கச்சி போன்ற பகுதிகளுக்குச் சென்று விவசாயத் தொழில் செய்த காலங்கள் கூட உண்டு. ஒரு பக்கம் உள்நாட்டு உறபத்தியின் அதிகரிப்பு, இன்னொரு பக்கம் கடத்தல் காரர்களுக்கு எதிரான கடும் நடவடிக்கை. அதே காலக் கட்டத்தில்தான் இலங்கை அரசு தரப்படுத்தல் என்னும் சட்டத்தையும் கொண்டு வருகிறது. ஆரம்பத்தில் அது இன ரீதியான படு பிற்போக்கு அம்சங்களோடு அறிமுகமானாலும் பிற்பாடு அது பிரதேசவாரியான தரப்படுத்தலாக மாற்றப்பட்ட போது அதில் முற்போக்குக் கூறுகள் இருந்தது. அதாவது பின் தங்கிய பகுதி மாணவர்கள் ஓரளவுக்கு வளர்ச்சி பெறும் வாய்ப்புகள் இருந்தது. இங்கே தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு இருக்கிறதல்லவா? அது மாதிரி ஒரு முற்போக்கு ஏற்பாடு. ஆனால் இந்த பிரதேசவாரியான தரப்படுத்தலால் பாதிக்கப்பட்டவர்கள் யாழ்பாண வெள்ளாளர்கள்தான். அவர்கள் கூட வெவ்வேறு பெயர்களின் முகவரிகளில் கிழக்கு மாகாணத்திற்கும் வன்னிக்கும் வந்து தேர்வு எழுதி விட்டுச் செல்லும் சூழல் கூட இருந்தது. பிரித்தானிய காலனியாதிக்க மனோபாவத்தைக் கொண்ட யாழ்பாணத்தவர்களின் கல்வி பாதிக்கப்பட்டதும் அவர்கள் தரப்படுத்தலுக்கு எதிராக தமீழக் கோரிக்கையை முன் வைக்கிறார்கள். இந்தக் காலக்கட்டத்தில்தான் தமிழீழ கோரிக்கை முன் வைக்கப்படுகிறது. தமிழீழக் கோரிக்கை முன் வைக்கப்பட்ட போது அதை தடித்தனமாக ஒடுக்கிய போலீஸ் ஒரு பக்கம் அரசின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக திரண்ட கடத்தல்காரர்கள் ஒரு பக்கம் என மாணவர்கள், கடத்தல்காரர்கள் என இரு சக்திகளும் இணைகிறார்கள். ஆரம்பத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி,  உமா மகேஸ்வரன், குட்டி மணி, தங்கதுறை, பிரபாகரன் எல்லோரும் இணைந்தே ஈழப் போராட்டத்தை துவக்குகிறார்கள். இந்த இணைதலின் வரலாற்றுப் பின்னணி என்பது இதுதான்.


வினவுகடத்தல்காரர்கள், தமிழர் விடுதலைக் கூட்டணி, இன்னொரு பக்கம் இலங்கை அரசாங்கம் என இவர்களுக்கிடையிலான முரண்பாடே தமீழீழப் போராட்டத்தின் துவக்கமாக இருந்தது என்கிறீர்கள்? அப்படி என்றால் இலங்கையில் சிங்களர்களுக்கும் தமிழ் மக்களுக்குமிடையிலான இன முரண் இல்லை என்கிறீர்களா?


நாவலன் – அப்படிச் சொல்லவில்லை. சிங்கள் பௌத்த மேலாதிக்கவாதம் என்பது தமிழர்களுக்கு எதிரானது மட்டுமல்ல, ஒட்டுமொத்த சிறுபான்மை இனங்களுக்கு எதிரானதாகவும் சிங்கள இனவாதம் இலங்கையில் இருந்தது, இன்றும் இருக்கிறது.
ஆக தமிழ்ப் பேசும் மக்களிற்கு எதிரான சோவனிச வடிவிலான பெருந்தேசிய அடக்குமுறை என்பதே இனப்பிரச்சனையின் ஊற்றுக்கண்.  பண்டாரநாயகா காலத்தில் 58 வது ஆண்டில் இருந்தே அது வெளிப்படையான கலவரங்களாக உருவாகி விட்டது. இலங்கையில் இருந்து பிரித்தானியா வெளியேறிய போது இலங்கைத் தீவினுள் இன முரண்பாட்டை உருவாக்கி விட்டுத்தான் வெளியேறியது. அனகாரிக தர்மபால என்கிற சிங்கள பெருந்தேசியவாதி இப்போதும் சிங்களர்களின் கதாநாயகனாக உருவகப்படுத்தப்படுகிறார். ” தமிழ் மக்களை கடலுக்குள் தள்ளி கொல்ல வேண்டும் ” என்று சொன்னவர் தர்மபால.இலங்கைப் பாடப்புத்தகங்களில் தேசத்தின் கதாநாயகனாகவும், இலங்கை தேச நிர்மாணத்தின் சிற்பியாகவும் சித்தரிக்கப்படுகிறார்.
மகாவம்சம் என்னும் சிங்களர்களின் புனித நூல் பாலி மொழியில் மட்டுமே இருந்தது சிங்களத்தில் இல்லை. பிரித்தானிய கவர்னருடைய நிதி உதவியிலும் அவர்களில் திட்டத்திலும்தான் மகாவம்சம் சிங்கள மொழிக்கு மாற்றப்படுகிறது. பாலி மொழியில் இருந்து சிங்கள மொழிக்கு மாற்றம் செய்யப்பட்ட மகாவம்சத்தை மூன்று லட்சம் பிரதிகளாக எடுத்து கிராமங்கள் வரை பரவியிருந்த எல்லா விகாரைகளுக்கும் கொடுத்தார்கள். மகாவம்சத்தில் எல்லாளனுக்கும் துட்டகைமுனுவுக்குமான போர் என்பதை தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்குமான போர் என்று பொயான புனைவுகளை ஏற்படுத்தினார்கள். இனவாதத்தை தத்துவார்த்தத் தளத்தில் நிறுவனமயப்படுத்தியவர்தான் தர்ம்பாலா. பின்னர் சிறுபான்மை மக்களுக்கு எதிரான முதல் தாக்குதல் இன முரணைத் தூண்டும் விஷயத்தை முன் வைக்கிறார் அவரது சகோதரர் 1915 ல் முதல் சிறுபான்மையினருக்கு (தமிழ் முஸ்லீம்களுக்கு) எதிரான தாக்குதல் டி.எஸ். சேனநாயகா காலத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டது. அது சிறுபான்மை வணிகர்களுக்கு எதிரானத் தாக்குதல்.
பிரித்தானிய ஆதிக்கத்திற்கு முன்னைய காலத்திலேயே தேரவாத தமிழ் நாட்டு ஆதிக்கத்திற்கு எதிராகத் தேரவாத பௌத்தத்தைப் பாதுகாப்பது என்ற செயற்பாட்டுத் தளத்தில் இந்தியாவிற்கு எதிரான உணர்வு சிங்கள மக்கள் மத்தியில் வளர ஆரம்பித்துவிட்டது. இதைத்தான் கேம்பிரிட்ஜ்  பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஹொப்ஸ்பவும் போன்ற ஆய்வாளர்கள் தேரவாத பௌத்தம் இயல்பிலேயே தேசியவாதக் கூறுகளைக் கொண்டுள்ளதாக இலங்கையை உதாரணம் காட்டுகிறார்கள். இதை தேசிய வாதம் குறித்த மார்க்சிய தியரிக்கு எதிராகக் கூட அவர்கள் பிரயோகித்து விவாதிக்கிறார்கள். இது அடிப்படையில் தவறான கருத்து என்றாலும், இலங்கையில் சிங்கள மக்கள் மத்தியில்  இந்தியாவிற்கு எதிரான ஒருங்கமைப்பு ஒன்று காணப்பட்டதை பலரும் குறித்துக் காட்டுகிறார்கள். இது ஒரு தேசிய இணைவையும் கொண்டிருந்தது. ஆக, இந்திய மன்னர்களுக்கு எதிரான பௌத்தர்களின் போராட்டங்கள் தமிழ் மக்களுக்கு எதிரான போராட்டங்களாகக் புனையப்படது. இதனையே சோவனிச இனவாதத்தை விதைப்பதற்கான மகாவம்ச ஆதாரங்களாகப் பயன்படுத்திக்கொண்டார்கள்.


வினவுஅப்ப்போது ஒன்று பட்ட இந்தியா என்பதே இல்லையே…. சிறு சிறு நிலப் பகுதிகளை ஆண்ட குறு நில மன்னவர்கள் அவர்களை கட்டுப்படுத்திய பெரு நில மன்னர்கள் என்ற ஆட்சிமுறைதான் இங்கே இருந்தது.


நாவலன் – ஆமாம் இலங்கைக்கு வெளியே இருந்த சமாஸ்தானங்கள். அல்லது சேர, சோழ, பாண்டிய, பராக்கிரமாபாகு போன்ற இன்றைய தென்னிந்தியாவின் அன்றைய சமஸ்தானங்களின் செல்வாக்கு இலங்கையின் மீது அதிகமாக படிந்திருந்தது. இவர்கள் படையெடுத்துப் போய் வெற்றி கொண்ட வரலாறுகளும் கிடைக்கிறது. ஆனால் இவர்கள் வெற்றி கொண்ட இடங்களில் இவர்கள் இருந்து ஆட்சி செய்ததில்லை அங்கே தனக்கான பினாமி ஒருவரை நியமித்து வருகிறார்கள். இத்தகைய போக்குகள் தென்னிந்திய மன்னர்களுக்கு எதிராக மனோபாவத்தை சிங்களர்களிடமும் பௌத்த பிக்குகளிடமும் உருவாக்கியது. தென்னிந்திய மன்னர்கள் மீதான அச்சம் இலங்கையில் அல்லது சிங்கள ஆட்சி பீடத்தில் வித்தியாசமான சமூக அமைப்பை உருவாக்கியது. சிங்கள மன்னனான துட்டகைமுனுவுக்கு எல்லாளன் மீதிருந்த கோபம் கூட தென்னக மன்னர்களுக்கு எதிரான கோபம்தான். துட்டகைமுனு, எல்லாளன் யுத்தம் கூட தமிழர் சிங்களர் போராக உணரப்பட்டதும் இதனால்தான். இலங்கையில் பௌத்தத்தின் துவக்கம் கூட இந்தியாவுக்கு எதிரான உணர்வலைகளில் இருந்து உருவானதுதான். அந்த அடிப்படையில்தான் பௌத்த எதிர்ப்புணர்வும் முக்கோண சமூக அமைப்பாக உருவாக்கியது. முக்கோணம் என்றால் மூன்று மூலைகள்…. ஒரு மூலையில் மன்னர்கள், இன்னொரு மூலையில் பௌத்த பிக்குகள், இன்னொரு மூலையில் மக்கள். மன்னனுக்கு படைகள் தேவைப்பட்டால் பௌத்த பிக்குகளிடம் கேட்பார்கள் பிக்குகள் மக்களிடம் கேட்பார்கள்.மக்கள் மன்னனுக்கு சேவை செய்வார்கள்.  17 அம் நூற்றாண்டில் நொக்ஸ் என்ற பிரித்தானிய மாலுமி இலங்கைக்குச் செல்கிறார். அப்படிச் செல்லும் போது கண்டிய  தமிழ் மன்னன் ராஜசிங்கன் என்பவனால் அவர் சிறைப்படுத்தப்பட்டார்., அவர் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் அவர் சிறையில் இருக்கும் போது சிங்களம் படிக்கிறார்.பின்னர் அவர் வெளியில் வந்து பயணம் செய்யும் போது மீண்டும் அனுராதபுரத்தில் வைத்து கைது செய்யப்பட்ட போது அங்கே எவருக்கும் சிங்களம் தெரியாது. எல்லோரும் தமிழ் மட்டுமே பேசுகிறார்கள். அவரை விகாரைக்கு அழைத்துச் செல்கிறார்கள். அப்புறம் பொலநருவ செல்கிறார். ஆக தமிழர் சிங்கள முரண் என்பது அப்போது மக்களிடம் இல்லை.
தமிழர்களும் பௌத்தர்களாக இருந்திருக்கிறார்கள். அனுராதபுரம் இப்போது தூய சிங்களப் பகுதி. இங்குள்ள தமிழர்கள் சிங்களவர்களாக மாற்றமடைந்திருக்கிறார்கள். ஆக, மொழி என்பது ஒரு பிரச்சனையாகவே இருந்ததில்லை.
அதி அதிகார பீடங்களிடம் இருந்திருக்கிறது. தமிழ் மக்கள் மீதான இன முரண் என்பது தென்னிந்திய தமிழ் மன்னர்களுக்கு எதிரான முரணாகத்தான் துவக்கத்தில் இருந்திருக்கிறது. அது தமிழ் மக்களுக்கு எதிரான் இன முரணாக பின் காலனீயச் சூழலில் தான் உருமாற்றம் அடைகிறது. இன்னொரு பக்கத்தில் பார்த்தால் மூன்றாம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் இருந்துதான் பௌத்தம் இலங்கைக்குச் சென்றது. தமிழ் நாட்டில் பௌத்தம் கோலோச்சிய காலத்தில் இலங்கையில் இரண்டு விகாரைகள் இருந்தது. ஒரு விகாரையில் தமிழில் பௌத்த வழிபாடும் இன்னொரு விகாரையில் பாலி மொழியிலும் நடக்கிறது. எங்குமே சிங்கள மொழி இல்லை. இங்கே பௌத்தத்தை புத்தரை கிருஷ்ணரின் அவதாரமாக வைணவம் கட்டமைத்த அதே நேரம் இந்திய எதிர்ப்புணர்வு அங்கே எழுகிறது. அந்த விகாரைகள் கிராமங்கள் முழுக்க பிரித் நூல் ஓதுவதாக இருந்தால் பாலி மொழியில் ஓதுவார்கள். சைவ மதத்தின் கூறுகள் பௌத்தத்திலும் இருந்தது. ஆனால் இந்தியாவின் ஆதிக்கத்திற்கு எதிராகத்தான் தேரவாத பௌத்த மரபு உருவாகிறது.


வினவுஇன்றும் கூட இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் இந்தியாவுடன் தங்களை இணைத்துப் பார்க்கிறார்கள். தமிழ் மக்களை தங்களை இந்தியாவோடு இணைத்துப் பார்க்கிறார்களா? அதாவது இந்திய அபிமானம் என்பது இலங்கைத் தமிழ் மக்களிடம் இருக்கிறதா?



நாவலன் – யாழ்பாணத் தமிழர்கள் மலையகத் தமிழர்களை எப்படி இழிவான பார்வையோடு பார்த்தார்கள் என்பது தெரியும்தானே? இந்தியாவில் உள்ள தமிழகத் தமிழர்களைக் கூட அவர்கள் வடக்கத்தியான் என்றுதான் அழைப்பார்கள். உண்மையில் ஈழத் தமிழர்கள் இந்தியாவோடு தங்களை அபிமானாபடுத்திப் பார்த்ததாக நான் நினைக்கவில்லை.  ஆனால் இந்தியா குறித்த கற்பனை தமிழ் தேசிய வாதிகளால் உருவாக்கப்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் இந்தியத் தொடர்புகளும் , வல்வெட்டித்துறை ஊடான தொடர்பாடல்களும் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்திய முற்போக்குப் போராட்ட இயக்கங்களுடனோ போராட்ட  இயக்கங்களுடனோ தொடர்பு வைத்துக்கொண்டு இந்தியாவைக் கோபப்படுத்தக் கூடாது என்பதில் புலிகள் உட்பட்ட போராளிக் குழுக்கள் அவதானமாக இருந்தார்கள்.


வினவுவிடுதலைப் புலிகளால் முன்னெடுக்கப்பட்ட முப்பதாண்டுகால ஆயுதப் போராட்டம் ஏன் தோற்றுப் போனது?


நாவலன் - தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் முப்பதாண்டுகளுக்குப் பிறகு இப்போது தோல்வியடைந்து விட்டதாக நான் நினைக்கவில்லை. நாங்கள் நடத்த வேண்டிய போராட்டத்தை நாங்கள் தீர்மானிக்க வேண்டிய போராட்டத்தை இந்தியா எப்போது தீர்மானிக்கத் துவங்கியதோ எங்கள் குழுக்களுக்கு எப்போது இந்தியா ஆயுதம் கொடுக்கத் துவங்கியதோ அப்போதே நாங்கள் தோற்றுப் போனோம். விடுதலைப்புலிகள் எதிர்ப்பியக்கம் என்பது மாறி அரசாங்கத்தின். பிராந்திய அதிகார வர்க்கங்களின் கையாட்களாகவும் அடியாட்களாகவும் மாறிப் போகும் சூழல் உருவானது. இத்தகைய போக்குகளினூடேதான் முப்பதாண்டுகாலம் நீண்டு சென்றிருக்கிறது எமது ஆயுத போராட்ட வரலாறு.  இப்போது வன்னிப் போரின் முடிவை தமிழ் மக்களின் அல்லது எதிர்ப்பியங்களின் தோல்வியாக நான் பார்க்கவில்லை. ஒடுக்கப்படும் ஆசிய மக்களின் தோல்வியாக நான் பார்க்கிறேன். உலக மயமாக்கத்தில் மூலமாக எழும் ஆதிக்கத்தை நிலை நிறுத்துக் கொள்வதற்கான ஒரு பரிசோதனைக் கூடமாக இலங்கையை ஏகாதிபத்தியங்கள் பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதுதான் என் கருத்து, இந்த எகாதிபத்தியங்களின் விளையாட்டில் பங்கெடுத்தும் இழுபட்டும் கடந்து வந்த முப்பதாண்டுகால வரலாறுதான் புலிகள் கதை.


வினவுஉலக முதலாளித்துவத்திற்கு உதவக் கூடிய மூலதனங்கள் எதுவும் இலங்கையில் இல்லையே? மத்திய கிழக்கிலோ ஆப்ரிக்கா, செர்பியா, போஸ்னியா போன்ற நாடுகளில் இருக்கும் வளங்கள் போன்று இலங்கையில் இல்லாத போது. உலக முதலாளியம் ஏன் இலங்கையை சூறையாட வேண்டும் என நினைக்கிறீர்கள்?


நாவலன் – கிரீஸ்சில் ஒரு இனப்படுகொலை நடந்தது. இதே மாதிரியாக மக்களையும் போராளிகளையும் ஒரே இடத்தில் அடைத்து வைத்து உணவைத் தடுத்து கூட்டாக படுகொலை செய்தார்கள்.இந்தோனேஷியாவில் நடந்ததை விட கொடூரமான இனப்படுகொலை அப்போது யுத்தப் பகுதிக்குள் சிக்கியிருக்கும் குழந்தைகளை மட்டும் விடச் சொல்லி கேட்டார்கள். ஆயிரக்கணக்கான சிறுவர்கள் வெளியில் வந்தார்கள். அப்படி வந்தக் குழந்தைகளை அமெரிக்கர்கள் தத்தெடுத்தார்கள். அப்படி தத்தெடுத்த எலனி என்றொரு சிறுமி வளர்ந்த பிறகு நூல் ஒன்றை எழுதினார். அது பின்னர் சினிமாவாகக் கூட வந்தது . கிரீஸ்சில் பெட்ரோல் கிடையாது. ஏகாதிபத்தியங்களுக்கு நேரடியாக எந்த நலனும் அங்கு இல்லை. ஆனால் இன ரீதியாகவோ, வர்க்க ரீதியாகவோ, சமூக ரீதியாகவோ ஒடுக்கப்படுகிற மக்கள் எதிர்ப்பியங்களை நடத்தும் போது முற்றிலுமாக அழிக்கப்படுவார்கள் என்பதுதான் க்ரீஸ் படுகொலைகள் நமக்கு சொல்லும் செய்தி.
அது போன்ற முயற்ச்சிதான் வன்னியில் நடந்தது. வன்னிக் கொலைகள் அதற்கு மேற்குலகின் மௌனமான சம்மதங்கள் என இந்தியாவின் ஆதரவோடு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது. இப்போது வன்னிப் போரின் உத்தியைத்தான் இந்தியா லால்கரில் தொடங்கி அதை வடகிழக்கு மாநிலங்களுக்கும் விரிவு படுத்துகிறது. அங்கே மட்டும் பெட்ரோல் இருக்கிறதா? என்ன? ஒரு பக்கம் பன்னாட்டு நிறுவனங்களுடன் வடகிழக்கு தொடர்பாக இந்தியா செய்து கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள். இன்னொரு பக்கம் உலக முதலாளிகளுக்கிடையில் இருக்கும் உள் முரண்பாடுகள் இருக்கின்றன. உலக முதலாளிகளின் ஆதிக்கம் இருந்தாலும் கூட உள் முரண்பாடுகள் என்பதை தேசீய முதலாளியமாக கொள்ள முடியாது என்றாலும் கூட அந்த உள் முரண்பாட்டிற்கு பிராந்திய தன்மை இருக்கிறது . அதை இலங்கைப் போரில் காண முடிகிறது. இலங்கை தீவிரமாக மேற்குலகிற்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன் வைக்கிறது. ஐநாவை துச்சமென மதிக்கிறது இலங்கை. ஐநாவின் சட்ட வல்லுநர் ஒருவரிடம் சமீபத்தில் பேசிய போது அவர் சொன்னார். இன்றைக்கு இருக்கிற உலக பொருளாதார சூழலில் இந்தியாவையும், சீனாவையும் எதிர்த்து மேற்குலகம் இலங்கையில் எதையுமே செய்ய முடியாது என்றார். முரண் இந்தியாவுக்கும் சீனாவுக்கிமிடையிலானதாக இருந்தால் மேற்குலகம் ஒரு நிலை எடுத்திருக்கும். இங்கே இந்தியாவும் சீனாவும் ஒன்றை ஒன்று சார்ந்தே இருக்கிறது. இந்தியாவின் சார்ந்திருத்தல் என்பது சுயாதீனமானது. பனிப்போர் காலத்தில் இந்தியா ரஷ்யாவைச் சார்ந்திருக்கும். ரஷ்யா ஏதேனும் அழுத்தம் கொடுத்தால் அமெரிக்காவைச் சார்ந்திருக்கும் அந்த சார்பு நிலையில் சுயாதீனம் இருக்கிறது.சுயநலம் சார்ந்த இந்த சுயாதீனம் இப்போது சீனா சார்ந்தும் அமெரிக்கா சார்ந்தும் இந்தியா இருக்கிறது. ஆசியப் பொருளாதாரம் என்பது முற்போக்கானதா? பிற்போக்கானதா? என்பதற்கு அப்பால் ஆசியாவின் பொருளாதார உருவாக்கத்தின் பரிசோதனைக் கூடம்தான் இலங்கை.  இந்த பிராந்திய பொருளாதார உருவாக்கத்திற்கு இலங்கையில் பலியானவ்ர்கள்தான் வன்னி மக்களும் புலிகளும். இத்தகைய இனப்படுகொலை இன்னொரு பத்தாண்டுகளுக்கு ஆசியாவில் தொடர வாய்ப்புண்டு.


வினவுநீங்கள் சொல்வதைப் பார்த்தால் ஈழத் தமிழ் மக்களை ஆசியப் பொருளாதாரத்தின் சூழ் நிலைக் கைதிகள் என்கிறீர்கள். இது சிங்கள இனவாதத்தையும் அவர்கள் நடத்திய இனப்படுகொலையின் கோரத்தையும் திசை திருப்புவதாக அமைந்து விடாதா?



நாவலன்:  நான் சிங்கள அரசு பயங்கரவாதிகளின் இனகொலைகளையோ, அவர்கள் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட வன்னி மக்களையும் போராளிகளையும் கொன்றொழித்ததையும் இல்லை என்று மறுக்கவில்லை. மாறாக சரத்பொன்சேகா என்றாலும் ராஜபட்சே சகோதரர்கள் என்றாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எனக்கு மாறுபட்ட கருத்து இல்லை. ஆனால் ஆசியாவில் உருவாகிக் கொண்டிருக்கும் பொருளாதார உருவாக்கமும் ஏகாதிபத்தியங்களின் பயங்கவராத கதையாடலையும் சிங்கள பேரினவாதிகள் பயன்படுத்திக் கொண்டார்கள் என்று சொல்ல வருகிறேன். இலங்கையைப் பொறுத்த வரை இனவாதம் நிறுவனமயப்படுத்தப்பட்டிருக்கிறது. அதுதான் இலங்கையின் சிங்கள பௌத்த மேன்மையை கட்டி வைத்திருக்கிறது. இந்தியாவில் இறையாண்மை என்னும் போலித் தேசீயவாதம் கட்டமைக்கப்படுகிறதோ அது போலதான் இதுவும். இதை எல்லாம் விட சிங்கள இனவாதத்திற்கு எதிராக சாத்வீக போராட்டங்கள் சாத்தியப்படாது. இனவாதத்திலிருந்து சிறுபான்மை மக்களின் விடுதலை என்பது வன்முறை போரட்டமாகவே இருக்க முடியும். ஆனால் அதிகார பீடங்களோடு இணைந்து செய்ல்படும் புலிகள் மாதிரியான வலதுசாரிக் குழுக்களால் முன்னெடுக்கப்படும் தேசியவாதப் போராட்டங்களால் இனவாதத்தை எப்போதுமே வெற்றிக் கொள்ள முடியாது. இலங்கையில் இனவாதம் வெற்றி கொள்ளப்பட்டால் மட்டுமே சிங்கள பௌத்த இனத்திற்குள் இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் கூட தங்கள் மீதான ஒடுக்குமுறைகளை உணரும் சூழல் உருவாகும்.


வினவுஇப்போது சிங்கள உழைக்கும் மக்களுக்கும் சிங்கள முதலாளிகளுக்குமிடையிலான முரண்பாடு இப்போது இல்லை என்று சொல்கிறீர்களா? அல்லது பலவீனமாக இருக்கிறது என்கிறீர்களா? அல்லது இவர்கள் இரண்டு பேரையுமே சிங்கள இனவாதம் இணைகிறது என்று சொல்கிறீர்களா?


நாவலன் – முப்பதுகளில் ஏற்பட்ட உலக பொருளாதார நெருக்கடியை உலகம் கிரேட் டிப்பிரஷன் என்று பதிவு செய்கிறது. அந்த கிரேட் டிப்பிரஷனின் பாதிப்பு இலங்கையில் தேயிலைத் ஏற்றுமதியில் கடும் வீழ்ச்சியைக் கொண்டு வந்தது. சிங்களத் தொழிலாளிகள் வேலை இழக்கிறார்கள். ஆனால் ஐக்கிய தேசீயக் கட்சி இந்த வேலை இழப்பிற்கு காரணமாக அப்போது சுட்டிக் காட்டியது மலையாளிகளை கிட்டத்தட்ட முப்பதாயிரம் மலையாளிகளை இலங்கையை விட்டுத் துரத்தினார்கள். இலங்கையில் தொழிற்சங்கம் கட்டும் முயற்ச்சி துவங்கியதும் அந்தக் காலக்கட்டத்தில்தான் அன்றைக்கு ஏகாதிபத்தியங்களின் நலனை சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பாக கட்டமைத்தார்கள். ஆக, சிங்கள  மக்கள் மத்தியிலிருக்கும் வர்க்க முரணைத் தணிக்கும் கருவியாகவே சோவனிசம் பயன்படுகிறது. ஆனால் இன்று உலக முதலாளித்துவம் என்பது முழுக்க முழுக்க அமெரிக்க நலன் சார்ந்தது மட்டுமல்ல. ஜி 20 மாநாட்டில் ஆசியப் பொருளாதாரத்தின் உருவாக்கத்தை சொல்லி நிற்கிறது.மக்களின் இடப்பெயர்வு பிற்போக்கான ஒன்றாக நடக்கிறது. உலக முதலாளித்துவத்தின் முரண்பாடு என்பது ரஷ்ய, சீனா நலன் சார்ந்ததாகவும் இருக்கிறது. அது அமெரிக்காவிற்கு எதிரானதாகவும் இருக்கிறது. உருவாகிவரும் இந்த புதிய பொருளாதார கட்டமைப்பு எங்கே தங்களின் சுரண்டல் நலனை பாதித்து விடுமோ என்று அமெரிக்காவும் இந்த நாடுகளை கையாளத் துவங்குகிறது. அதனால்தான் புவி வெப்பமடைதல் தொடர்பாக அமெரிக்கா எழுப்பும் கேள்விகள் நெருக்கடிகள் எல்லாமே இந்த நாடுகளின் வளர்ச்சியைக் குறைவைத்துதான் செய்யப்படுகிறது.


வினவுதமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் புலிகளின் போராட்டங்கள், தியாகங்களுக்கு உணர்வு பூர்வமான ஆதரவு இருக்கு. முப்பதாண்டுகாலமாக தனி ஈழக் கோரிக்கையில் உறுதியாக இருந்தார்கள் என்கிற அளவில் தனிப்பெரும் அமைப்பாக அவர்கள் இங்கே செல்வாக்குச் செலுத்துகிறார்கள். கடைசியாக நடந்த தீக்குளிப்புகள் கூட உதாசீனம் செய்ய முடியாத ஆதரவு நிலையில் வெளிப்படுதான். முத்துக்குமாரின் மரண சாசனம் முற்போக்குக் கூறுகளைக் கொண்டது. இந்த ஆதரவை அவர்கள் எப்படி பயப்படுத்திக் கொண்டார்கள்?


நாவலன் – இதில் இரண்டு விதமான பிரச்சனை இருக்கிறது. அவர்கள் அதிகாரவர்க்கங்கங்களோடு மட்டுமே தங்களை அடையாளப்படுத்திக் கொண்டார்கள். தமிழகத்தில் நெடுமாறன். வைகோ போன்றவர்களிடம் நெருங்கினார்கள். இன்னொரு பக்கம் சரவ்தேச அதிகார வர்க்கங்களின் வலைப்பின்னலை தங்களின் ஆயுத பரிவர்த்தனைக்காகவும் பயன்படுத்தியிருக்கிறார்கள். சமீபத்தில் போர் நிறுத்தம் கோரி உணர்வு பூர்வமாகவும் உண்மையாகவும் போராடிய தமிழக மக்களின் உணர்வு என்பது இங்குள்ள சந்தர்ப்பவாத அரசியல் தலைமைகளுக்கு எதிராக இருந்தது. முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்திலும் இது வெளிப்பட்டது. அது போல வழக்கறிஞர்கள், மாணவர் போராட்டங்களிலும் இது வெளிப்பட்டது. ஆனால் புலிகள் இந்த மக்கள் எந்த சந்தர்ப்பவாத தலைமைகளிடம் அதிருப்தியுற்றிருந்தார்களோ அவர்களுடனே தொடர்பு வைத்திருந்தார்கள். இந்தியாவிடம் கடைசி வரை கெஞ்சிக் கொண்டிருந்தார்கள். தமிழக மக்களின் எழுச்சியை புலிகள் பயன்படுத்திக் கொள்ளவே இல்லை. அவர்கள் அதிகார வர்க்கங்களை நம்பினார்களே தவிற தமிழக மக்களின் எழுச்சியை நம்பவில்லை.
இந்தியாவில் மட்டுமல்ல மேற்கிலும் புலிகளின் அதிகாரவார்க்கத்துடனான சமரசம் அவர்களை அழித்துக்கொள்வதிலேயே முடிந்திருக்கிறது. அதற்கு நல்ல உதாரணம் ஒன்றை நான் சொல்ல முடியும். பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் குண்டு வீசிய போது ஐந்து நாட்கள் இரண்டு லட்சம் மக்கள் பிரித்தானிய மக்கள் தெருவுக்கு வந்து பாலஸ்தீனியர்களுக்காக போராடினார்கள். ஆனால் இலங்கை இனப்படுகொலை தொடர்பாக எந்தப் போராட்டங்களிலும் பிரித்தானியா மக்களோ ஏனைய மக்கள் விடுதலை ஆதரவுக் குழுக்களோ துளி அளவு கூட கலந்து கொள்ள வில்லை. அதற்கு காரணம் என்னவென்றால் புலிகளோடு நெருக்கமாக இருந்தவர்கள்  அதிகாரவர்க்கமும் அங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுமே அவர்களோடுதான் இவர்கள் நெருக்கம் பேணினார்களே தவிற அங்குள்ள முற்போக்கு சக்திகளையும் ஏனைய எதிர்ப்பியங்கங்களையும் புலிகள் கண்டு கொள்ளவில்லை. இவர்களோடு நட்பாக இருந்த மேற்குலக நாடாளுமன்ற உறுப்பினர்களோ தங்களின் கட்சி நலன்களுக்காக, தங்களின் அரசு நலனுக்காக, தங்களின் தேச நலனுக்காகத்தான் இப் போராட்டங்களுக்கு வந்து போஸ் கொடுத்தார்களே தவிற அவர்களுக்கு மக்கள் நலன்களோ, மனிதாபிமான நலன்களோ கூட அவர்களுக்கு இல்லை. இதுவரை ஈழப் போருக்கு எதிராக உணர்வு பூர்வமாகவும் உண்மையாகவும் இருந்தவர்கள் தமிழக மக்களே. ஆனால் அம்மக்களின் எதிர்ப்புணர்வை புலிகள் அல்லது புலி ஆதரவாளர்கள் நீர்த்துப் போகச் செய்திருக்கிறார்கள் என்பதே உண்மை.


வினவுஇனப்படுகொலையே ஈழத்தில் நடக்கவில்லை என்று ஜெர்மன் சுசீந்திரன் புதுவிசை இதழில் சொல்லியிருக்கிறார். இன்னொரு சாரார் இனப்படுகொலை பற்றி பேசாமல் புலிகள் செய்த தவறுகளைப் பற்றி மட்டுமே மீண்டும் மீண்டும் பேசுகிறார்களே?


நாவலன் – புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பல்வேறு சக்திகள் இருக்கிறார்கள். போருக்குப் பின்னர் இலங்கை அரசாங்கம் தனது பட்ஜெட்டில் மூன்று லட்சம் டாலர்களை புலிகளுக்கு எதிரான ராஜதந்திர நடவடிக்கைக்காக செலவிடுகிறது. ராஜதந்திரம் என்பது புலிகளுக்கு நிலவும் ஆதரவைக் குலைப்பதும் அவர்களின் சர்வதேச வலையமைப்பைச் சிதைப்பதும்தான் இலங்கை அரசின் நோக்கம். இன்று இலங்கை அரசின் பண உதவி  கிடைக்கிறது. மற்றபடி சுசீந்திரன் ஒரு தன்னார்வக் குழு  நிதி உதவிகளைப் பெறும் போது சில கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொண்டால் மட்டுமே நிதி கிடைக்கும் அந்தக் கட்டுப்பாடு என்பது இனப்படுகொலை நடக்கவில்லை என்று சொல்வதாகக் கூட இருக்கலாம். இன்னுமொரு பகுதியினர் புலிகள் மீதான விமர்சங்களை மட்டுமே முன் வைப்பதன் மூலமும் எதிர்ப்பியங்களின் நோக்கங்களை சிதைப்பதன் மூலமும் இலங்கை அரசோடு சேர்ந்தியங்கும் சூழல் வெளிப்படையாகவே தெரிகிறது. இலங்கை அரசாங்கத்திற்கு 83 &ஆம் ஆண்டு இனப்படுகொலைக்கு எதிராக நெடுங்குருதி என்றொரு நிகழ்வை பிரான்சில் நடத்தினார்கள்.
இலங்கை அரசு விழாவாகவே அது நடந்தது. மேற்கில் உள்ள தலித் அமைப்புகளும் கூட இப்போது இலங்கை அரசோடு சேர்ந்தியங்குகின்றது. அவர்கள் இப்போது இலங்கை அரசிற்கு எதிராக பேசுவதில்லை. போர் முடிந்ததும் இவர்கள் இலங்கையில் கட்சியாகப் பதிவு செய்துகொண்டனர். ஆனால் இவர்களின் கருத்துக்களுக்கு மக்களிடம் எவ்விதமான மதிப்பும் கிடையாது. இவர்கள் எதிரிக்கு எதிரி நண்பன் என்கிற பாணியில் இலங்கை அரசோடு இணைகிறார்கள். என்னைப் பொறுத்தவரையில் முதலாவது எதிரி யார்? இரண்டாவது எதிரி யார்? என்பதை எல்லாம் நிராகரிக்கிறேன். காரணம் இது ஒரு தத்துவார்த்த பிரச்சனை அல்லாமலும் இலங்கையின் இனப் பிரச்சனைக்கு காரணம் புலிகள் அல்ல. சிங்கள பௌத்த ஆளும் வர்க்கமே இந்த இனவாதத்தின் காரணகர்த்தாக்க்கள். 1958 ஆம் ஆண்டுகளில் தொடங்கி காலம் தோறும் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. புலிகளின் ஆயுதப் போராட்டம் சரி தவறு என்ற விவாதங்களுக்கு அப்பால் ஐம்பதாம் ஆண்டு இருந்த தேவையை விட, எழுபதுகளில், எண்பதுகளில், தொண்ணூறுகளில் இருந்த தேவையை விட இன்று மிக அதிகமான அரசியல் தேவைகள் தமிழ் மக்களுக்கு இப்போது உருவாகியிருக்கிறது. இன அழிப்புக்கு எதிரான போராட்டத்திற்கு மிகத் தீவீரமான போராட்டத்திற்கான தேவை ஒன்று உருவாகியிருக்கிறது.    மனிதர்கள் கொசுக்களைப் போல கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். உலகமே வேடிக்கை பார்க்க மக்கள் ஈவிரக்கமற்ற முறையில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கொலைகளின் ஈடுபட்டவர்கள் மட்டுமல்ல அவர்களை பாதுகாக்க எத்தனிக்கிற எவருமே போர்க்குற்றவாளிகள்தான்.



வினவு – 2004 – ஆம் ஆண்டு தென்கிழக்கு கடலோரங்களைத் தாக்கி மாபெரும் மக்கள் பேரழிவையும் இயர்க்கை அனர்த்தனத்தையும் தோற்று வித்த சுனாமிக்குப் பின் புற்றீசல் போல தன்னார்வக்குழுக்கள் இந்த நாடுகளுக்குள் படையெடுத்தார்கள். இப்போது துயரமான முறையில் வன்னிப் போர் முடிவுக்கு வந்த பின்னால் தன்னார்வக்குழுக்களுக்கு இது பெரும் கொண்டாட்டமாக மாறியிருக்கிறது? இல்லையா? ஒவ்வொரு பேரழிவுமே தன்னார்வக்குழுக்களுக்கு கொண்டாட்டம்தான் இல்லையா?



நாவலன்- தன்னார்வ நிறுவனங்கள் என்பதன் பிரதான நோக்கமே, அவர்களது வார்த்தைகளில் சொல்வதானால் ” சமூகக் கோபத்தைத் “  தணிப்பது என்பதே. இதற்காகக் குடிமைச் சமூகங்கம், அடையாள அரசியல் போன்ற கருத்துக்களை முன்வைக்கின்றனர். மனித உரிமை, ஏகாதிபத்திய எதிர்ப்பு, தலித்தியம் போன்ற சுலோகங்களில் வர்க்க அரசியலை நீக்கிவிட்டு வெறும் சமூகப் பிரச்சனையாக முன்வைக்கின்றனர். இவற்றை நோக்கி ஒருபுறத்தில் அடிமட்ட மக்களையும் இன்னொரு புறத்தில் சமூக உணர்வுள்ள படித்த மத்தியதர வர்க்கத்தையும் இதன் பணியாளர்களாக உள்வாங்கிக் கொள்கின்றனர்.  இலங்கையில் 80 களில் இறுதியில் மனித உரிமை குறித்துப் பேச பல தன்னார்வ நிறுவனங்கள் முன்வந்தன. இருப்பினும் ஜே.வீ.பி போராட்டத்தில் ஒரு லட்சம் இளைஞர்கள் தெருத் தெருவாகக்  கொலைசெய்யப்பட்ட போது யாரும் அங்கில்லை. சர்வதேச மன்னிப்புச் சபை ஒரு கொலையைக் கூட பதிவுசெய்யவில்லை. ஜே.வி.பி இடது சாரிக் கோசங்களுடன் நடத்திய போராட்டம் தெற்காசியாவில் புரட்சியாக மாறக்கூடும் என்ற தன்னார்வ நிறுவனங்களை இயக்கும் வல்லரசு நாடுகளதும்  அவற்றின் துணை அமைப்புக்களதும் பயவுணர்வுக்குக் காரணம்.
புலிகளின் பிற்பகுதி  தன்னார்வ நிறுவனங்களின் பொற்காலம். அவர்கள் அரசியல் பேசுகிறார்கள். மனித உரிமை பேசுகிறார்கள். கூட்டங்களையும் கருத்தரங்கங்களையும் ஒழுங்கமைக்கிறார்கள். மனித் உரிமை மீறல் என்று கூக்குரல் போடுகின்ற எதாவது ஒரு தன்னார்வ  நிறுவனம் நடந்ததும் நடப்பதும் இனப்படுகொலை என அங்கீகரிக்கிறதா?  மார்கா என்ற கொழும்பு தன்னார்வ ஆய்வு நிறுவனம் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக சேரன், ஜெயதேவெ உயாங்கொட, குமாரி ஜெயவர்தன, நுஹ்மான்  போன்றோரின் பல நூல்களை வெளியிட்டிருக்கிறது. தேசிய இனப்பிரச்சனை குறித்த நூல்களும் வெளிவந்தன. ஆனால் இனப்படுகொலை நிகழும் போது இவர்கள் மூச்சுக்கூட விடவில்லை. இது மட்டுமல இலங்கை தன்னார்வ நிறுவனங்களின் மைக்ரோ எக்கானமி புரெஜக்டுகளின் பிரதான மையங்களில் ஒன்று. மக்களை இவர்களின் பிச்சைக்காரர்களாக மாற்றுவதே இவர்களின் பணி. பிலிப்பைன்ன்ஸ் போராட்டமே இவர்கள் சீரழிக்கப்பட்டது. பங்களாதேஷ் இன்று இவர்களாலேயே பிரஞ்சைஸ்ட் நாடு என அழிக்கப்படுகிறது. பங்களாதேஷில் உற்பத்தி அழிக்கப்பட்டு, பல்தேசியக் கம்பனிகள் தேசத்தைச் சின்னாபின்னமாக்கிவிட்டன.


வினவு – ”ஈழம் செத்து விட்டதுஎன்கிறார் இந்து ராம். ”ஈழம் சாத்தியமில்லைஎன்கிறார் ஷோபா சக்தி. பேராசிரியர் .மார்க்ஸ் போன்றவர்கள் எதிர்ப்பியங்களோ மக்கள் இயக்கங்களோ சாத்தியமில்லை என்பதை ஈழம் காட்டுகிறது என்கிறார். உங்கள் கருத்து என்ன?



நாவலன்- கோரிக்கைகள் தொடர்பாக பார்த்தால். அக்கோரிக்கைகள் ஐம்பதாம் ஆண்டு தொடங்கி வைக்கப்படுகிறது. பண்டா செல்வா ஒப்பந்தம் என்பதே தமிழ் மக்களுக்கான சம உரிமை கோரும் ஒப்பந்தம்தான் எழுதப்பட்ட நாளிலேயே அது கிழித்தெறியப்பட்டது. ஓரளவுக்கு ஜனநாயகத்தைப் பேணிய அரசாங்கங்கள் இருந்த காலத்திலேயே தமிழர்களுக்கு இதுதான் நடந்தது. ஆனால் இன்று இருப்பவர்களோ இனப்படுகொலை செய்த மோசமான போர்க் குற்றவாளிகள். கிரிமினல்கள், இந்த கிரிமினல்களுக்கு எதிராக அன்றைக்கு போராட்டங்களுக்கு ஆதரவளித்த கோரிக்கைகளை முன்வைத்துப் சமாதான வழியில் ஆயுதப் போராட்டம் மூலமே பெற்றுக் கொள்ள முடியும். சிங்களர்களின் சிறுபான்மை இனங்களுக்கு எதிரான அடக்குமுறை, தமிழ மக்களுக்கு எதிரான இனவாதம். என்கிற அளவில் இனவாதத்தை வீழ்த்த ஆயுதப் போராட்டமே தீர்வு. ஆனால் இது சரியான திசைகளின் முன்னெடுக்கப்பட்டாக வேண்டும். இன முரண் கூர்மையடைந்து ஆயுதப் போராட்டம் வேர் விட்ட காலத்தில் சிங்கள மக்களிடம் தமிழ் மக்களின் போராட்டங்களுக்கு ஆதரவு இருந்தது. தமிழ் மக்களுக்கு உரிமை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது, ஆனால் புலிகளின் தற்கொலைத் தாக்குதல், விகாரைகளில் பௌத்த அப்பாவிகளைக் கொன்று குவித்தமைதான் தமிழ் மக்களின் போராட்டம் சிங்கள மக்களுக்கு எதிரான போராட்டம் என்ற எண்ணம் தோன்ற காரண்மாகிவிட்டது. சரியான திசை வழிகளின் எமது ஆயுத போராட்டம் பயணித்திருக்கும் என்றால் ஒடுக்கப்பட்ட சிங்கள மக்களே எங்களோடு இணைந்து போராடியிருப்பார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் தனி ஈழம் என்கிற கோரிக்கை கூட அதனூடாக காலாவதியாகும் சூழல் ஏற்பட்டிருக்கும். இன்று இரு தரப்பிடமுமே அந்தச் சூழல் இல்லை. இன அடக்குமுறை பிரிந்து போகும் சுய நிர்ண போராட்டம் எனபது அவசியமானது. ஆனால் தந்திராபாய ரீதியில் தனி ஈழப் போராட்டம் வெற்றியளிகுமா? என்று தெரியவில்லை. எப்போது இலங்கை மக்கள் ஏகாதிபத்தியங்களிடம் இருந்தும் பிராந்திய விஸ்த்ரிப்பு நோக்கங்கள் கொண்ட அரசுகளிடம் இருந்தும் விடுதலை பெறுகிறார்களோ அதுவே உண்மையான விடுதலையின் பாதையாக அமையும். தவிர இன்று எதிர்ப்பரசியல் சாத்தியமில்லை என்ற கருத்துக்களும், ஆயுதப் போராட்டங்கள் பலமான எதிரியின் முன்னால் அழிவிற்கே வழிவகுக்கும் என்பதும், மார்க்சியத்திற்கு எதிராக இன்று மேற்கு வழியாகப் பரப்பப்படும் கருத்துக்கள்.



வினவு – குறுகிய நிலப்பகுதிக்குள் மக்களையும் போராளிகளையும் குவித்து வைத்து சிங்களப் பேரினவாத இராணுவம் கொன்று குவித்த போது புலத்து மக்களும் தமிழக மக்களும் கூட போருக்கு எதிராகப் போராடினார்கள். ஆனால் இந்தப் போருக்கு எதிராக ஏன் வடக்கு, கிழக்கு மாகாண தமிழ் மக்கள் போராட வில்லை?


வட கிழக்கில்  இயல்பாகவே உருவாகக் கூடிய  எல்லா மக்கள்திரள் அமைப்புக்களும் தமிழ் தேசிய இயக்கங்களால்  சிதைக்கப்பட்டிருந்தன. மக்கள்  போராட்டங்களின்  ஆதார சக்தியே க்கள் திரள் அமைப்புக்கள் தான். மாணவர் அமைப்புக்கள், விவசாய அமைப்புக்கள், பெண்கள் அமைப்புக்கள், ஆசிரியர் சங்கங்கள், கலாச்சார அமைப்புக்கள், கலை அமைப்புக்கள் என்று எல்லாமே 80 களில் ஒவ்வொரு தேசியவிடுதலை அமைப்புக்களின் வால்கள் போல மாற்றப்பட்டிருந்தன. பின்னதாக புலிகளின்  கட்டுப்பாட்டுக்குள் அவை உட்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டன. 90 களின் பின்னர் புலிகளைச் சாரத அமைப்புக்கள் அனைத்தும் அழிக்கப்பட்டன. சில தந்திரோபாய நடைமுறைகளூடாக புதிய ஜனநாயக் கட்சி புத்தூர், நிச்சாமம், கன்பொல்லை, சங்கானை  போன்ற இடங்களில் தமது வறிய கூலிவிவசாய அமைப்புக்களைப் பேணிவந்த சூழல் காணப்பட்டாலும், 90 களின் பின்னர் இவர்களும் வெளியேற்றப்பட்டு விட்டனர்.
புலிகள் யாழ்ப்பாணத்திலிருந்தும் கிழக்கிலிருந்தும் வெளியேற்றப்பட்ட பின்னர், இந்தச் சூழல் இலங்கை அரசின் பேரினவாத ஒடுக்குமுறைக்கு மிகவும் துணைபோனது.
இலங்கை அரசும் அதன் துணைக்குழுக்களும் கிராமங்களில் உருவாகும் சிறிய சங்கங்களைக் கூட புலிகள் என முத்திரையிட்டு அழித்தனர். கிழக்கில் பிள்ளையான் மற்றும் கருணா தலைமையிலும் வடக்கில் டக்ளஸ் குழு தலைமையிலும் தான் வெகுஜன அமைப்புக்கள் உருவாகும் சூழல் காணப்பட்டது. ஆக, வட  கிழக்கு என்பது புலிகளுக்கும் அரசிற்கும் உரித்தான திறந்வெளிச் சிறைச்சாலைகளாகவே காணப்பட்டன. இரண்டிற்கு மேற்பட்டோர் ஒரு இடத்தில் கூடி சமூக விடயங்களைப் பற்றிப் பேசக் கூட முடியாத நிலையே காணப்பட்டது. இன்றும் சோவனிச இலங்கை அரசாங்கம் அப்படி ஒரு அடக்குமுறைக்குள் தான் மக்களை வைத்திருக்கிறது. இன்று அரசின் துணைக்குழுக்களின் அடக்குமுறை அபிவிருத்தி என்ற பெயரில் நியாயம் கற்பிக்கப்படுகிறது.


வினவு- வடக்கு கிழக்கு மக்கள் போராடாமல் போனதற்கு இராணுவக் கண்காணிப்புதான் காரணம் என்கிறீர்கள். இது போன்ற ஒரு சூழலே காஷ்மீரிலும் இருக்கிறது. வீதிக்கு வீதி இராணுவத்தைக் குவித்திருக்கிறது இந்தியா. ஆனாலும் இந்த எதிர்ப்புகளையும் மீறி காஷ்மீர் மக்கள் போராடுகிறார்கள். அது போல மத்திய கிழக்கிலும் ஏகாதிபத்திய இராணுவங்களுக்கு எதிராக மக்கள் அஞ்சாமல் போராடும் போது ஈழத்தில் மட்டும் அது சாத்தியமில்லாமல் போனதற்கு தமிழ் மக்களின் அரசியல் வீழ்ச்சி காரணம் என்று சொல்லலாமா?



80 களில் இந்திய அரசு ஈழ விடுதலை இயக்கங்களுக்கு இராணுவ அரசியல் பயிற்சிகளை வழங்கிய போதே அனைத்து மக்கள் திரள் அமைப்புக்களும் சிதைக்ப்பட ஆரம்பித்துவிட்டன. கிராமியத் தொழிலாளர் சங்கம், ஈழ மாணவர் பொது மன்றம், ஈழப் பெண்கள் முன்னணி போன்றவை பெரிய அளவில் அமைப்பாக்கப் பட்ட மக்கள் திரள்களைக் கொண்ட அமைப்பாகும். 83 மூன்றாம் ஆண்டு இந்திய இராணுவப் பயிற்சிக்கான வாய்ப்பைப் பெற்றுகொள்வதற்காக இந்திய அரசு ஈழ அமைப்புக்களின் பலத்தை நிரூபிக்குமாறு கோரியது. இதனால் ஈ.பி.ஆர்.எல் என்ற இயக்கம் மேற்குறித்த அனைத்து அமைப்புக்களையும் தனது அங்கங்களாகப் பிரகடனம் செய்து வடகிழக்கு எங்கும் சுவரொட்டிகளை ஒட்டியது. துண்டுப்பிரசுரங்களூடாகவும், வெளியீடுகளூடாகவும் பிரச்சாரம் மேற்கொண்டது. இதனால், இந்த அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் எல்லாம் இலங்கை இராணுவத்தாலும் பொலீசாராலும் தேடித் தேடி அழிக்கப்பட்டனர். அவையெல்லாம் சட்டவிரோத அமைப்புக்களாக மாற்றமடைந்தன. இந்திய உளவு  அமைப்புக்களின் திட்டமிட்ட அரசியல் நடவடிக்கைகளாகவே இது கருதப்படுகிறது.
திடீரென சுனாமிபோல் உள்ளீடு செய்த இந்தியத் தலையீட்டிலிருந்து சுதாகரித்துக் கொள்ள நீண்ட நாட்கள் சென்றன.  85 களின் பின்னர் கிராமிய உழைப்பாளர் சங்கம், மாதர் மறுமலர்ச்சிப் பேரணி, தேசிய மாணவர் மன்றம் போன்ற அமைப்புக்கள் வளர்ச்சிபெற்றன. 1986 இல்  தேசிய மாணவர் மன்றம் 10 ஆயிரம் மாணவர்கள் கலந்து  கொண்ட பாதுகாப்பு வலையத்திற்கு எதிரான ஊர்வலம் ஒன்றை நடத்தியது. இதே வேளை புதிய ஜனநாயகக் கட்சி   வடபகுதிக் கூலிவிவசாயிகள் மத்தியில் வெகுஜன வேலைகளை முன்னெடுத்தது. 80 களின் இறுதியில்   இந்திய இராணுவம் வெளியேறிய பின்னர் வடக்கும் கிழக்கும் புலிகளின் பூரண கட்டுப்பாட்டுள் வரப்பட்டது. இந்த நிலையில் புலிகள் சாரா அனைத்து அமைப்புக்களும் தடைசெய்யப்பட்டன அல்லது அவர்களின் கட்டுப்பாட்டுள் கொண்டுவரப்பட்டது.தமிழ்ப் பேசும் மக்களின் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுய நிர்ணய உரிமையை  முதலில் அங்கீகரித்த அகில இலங்கை ஆசிரியர் சங்கம் கூட வட கிழக்கிலிருத்து அப்புறப் படுத்தப்பட்டுவிட்டது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் அமைப்பிலிருந்து, மினிபஸ் உரிமையாளர் சங்கம் ஈறாக, கிராமிய சன சமூக நிலையங்கள் வரை புலிகளின் நேரடியான கட்டுப்பாட்டுள் மட்டுமே  இயங்கின.  இந்தச் சூழலைப்  புரிந்துகொண்ட  சர்வதேசத் தன்னார்வ நிறுவனங்கள் சில  புலிகளோடு இணந்து தமது நடவடிக்கைகளை மேற்கொண்டன.
இன்று தமிழ்ப் பிரதேசங்கள் வடக்கு மற்றும் கிழக்கு என்ற இரண்டு திறந்வெளிச் சிறைகளாக மாற்றம் பெற்றுள்ளன. இரண்டு பகுதிகளிலுமே சாதாரண சாமானியனின் கொல்லைப்புறம் வரைக்கும் இரணுவமும் துணைக்குழுக்களும் சென்று வருகின்றன. வன்னி முகாம்கள் வெளிப்படையாக அங்க்கீகரிக்கப்பட்ட சிறைச்சாலை. இரண்டு போர்க்குற்றவாளிகளில் ஒருவரை, ஒரு பெரிய மக்கள் கூட்டத்தைத் துடிக்கத் துடிக்கக் கொன்றுபோட்டவர்களில் ஒருவரை தமது தலைவராகப் ஏற்றுக்கொள்ளும் நிலைக்குச் சிங்கள அரச பாசிசம் வளர்ந்துள்ளது. வடகிழக்குத் தவிர்ந்த ஏனைய இலங்கையின் பகுதிகளுக்குள் தமிழ் பேசும் மக்கள் ஒருவகையான பயத்துடனேயே வாழ்கிறார்கள். ஆக, இது ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது வேறுபட்ட சூழல்.



வினவு :  புலியெதிர்ப்பு அரசியல் குறித்து?


இலங்கை அரசின் பேனவாத ஒடுக்குமுறைக்கு எதிராகவும், இலங்கை அரசின் இனவழிப்பிற்கு எதிராகவும் போராடுவதற்கான உரிமையைக் கோரி புலிகளுக்கு எதிராகப் போராடியவர்களும்  போராடி மடிந்தவர்களும் முதலாம் வகையினர். மறுபுறத்தில் புலி எதிர்ப்பு என்பது அரச ஆதரவு என்ற நிலையை எடுத்துக்கொண்டவர்கள் இரண்டாவது வகையினர். புலிகளிற்கு எதிரான போராடும் உரிமையைக் கோரியவர்களுள் பலர் இன்றைய சூழலில் எதிர்ப்பியக்கங்களை ஆரம்ப்பிப்பதற்கான முன்நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள்.



வினவு: புலம் பெயர்ந்து வாழும்ஈழத் தமிழர்களின் வாழ்க்கைச் சூழல் என்ன? ஈழப் போராட்டத்தில் புலம் பெயர் மக்களின் நிலை என்ன?


இலங்கையிலிருந்து ஐரோப்பாவிற்குப் புலம்பெயரும் புலம்பெயர்ந்த பெரும்பாலனவர்கள் தமது மத்தியதர வர்க்க வாழ்னிலையை உறுதிப்படுத்திக்கொள்ள பெரும் போராட்டம் நடத்துகிறார்கள். சிலவேளைகளில் சட்டத்திலுள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி வாழ்வை நிலைப்படுத்திக்கொள்ள முற்பட்டாலும் பெரும்பாலும் 16 மணி நேரம் வரை வேலை செய்யவேண்டிய நிலை காணப்படுகிறது. இதனால் 40 வயதிற்கு உள்ளாகவே முதுமை அடையும் பரிதாபகரமான நிலையே காணப்படுகிறது. தவிர, ஐரோப்பிய நாடுகளுக்கு வருபவர்கள் இங்குள்ள கலாச்சாரத்துடன் இசைவடைய முடியாத மன அழுத்தங்களுடனேயே வாழ்கிறார்கள். இங்கும் இலங்கையின் சாதி அமைப்பு முறையை அப்படியே பேணுகின்ற ஒரு தொடர்பு நிலையே காணப்படுகிறது. தமிழ் சமூகத்தைத் தவிர ஏனைய சமூகங்களுடன் எந்தத் தொடர்பும் அவர்களுக்கு இருப்பதில்லை. அவர்களின் சந்ததியினர் ஐரோப்பியர்களுடன் இணைந்துகொள்ள முற்படுகின்ற வேளையில் ஒருவகையான கலாச்சாரப் போராட்டம் நடைபெறுகிறது. இந்தக் கலாச்சாரப் போராட்டத்தில் வெற்றிகொள்வதற்கான ஆயுதமாக புலிகளின் புலம்பெயர் அமைப்புக்கள் அமைகின்றன.
பெற்றோரே தமது பிள்ளைகளை புலிகளின் அமைப்புகளில் இணைந்து செயற்படுவதை ஊக்குவிக்கிறார்கள். இதனால் தமிழர்கள் தமிழர்களோடு இணைந்து செயற்படுவதை உறுதிப்படுத்திக் கொள்கிறார்கள்.
வன்னிப் படுகொலைகளின் போது புலம் பெயர் நாடுகளில் நிகழ்வுற்ற புலியெதிர்ப்புப் போராட்டங்களில் தமிழ் இளைஞர் அமைப்பு (TYO) என்ற புலி ஆதரவு இலைஞர் அணியின் பங்களிப்பே பிரதானமானதாக அமைந்தது. நடந்த ஊர்வலங்களில் ஐரோப்பாவில் பிறந்த இளைஞர்களே அதிக அளவில் பங்காற்றினர்.
தவிர, புலம் பெயர் நாடுகளில் வாழ்கின்ற தமிழர்கள் இலங்கை அரசின் இன்ப்படுகொலையிலிருந்தும் இன அடக்கு முறையில்லிருந்தும் தப்பிவந்தவர்கள். இவர்களின் இலங்கை அரசிற்கு எதிரான உணர்வுகளின் வடிகாலாக அமைந்தது புலிகள் மட்டுமே. இன்று புலிகளற்ற சூழலில் இவர்களின் தலைமைக்கான தேடல் புதிய சூழல். இச்சூழலை இலங்கை அரசும் இந்திய அர்சும் தமக்குச் சாதகமானதாக மாற்ற முற்படுகின்றன என்பது அபாயகரமானது. புலம் பெயர் நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகளெல்லாம் அதிகாரவர்க்கம் சார்பானதாகவே அமைந்துள்ளன. சில சிறிய குழுக்கள், ஏகாதிபத்திய எதிர்ப்பு அணிகள் என்று போராட்டங்களை நடத்துகின்ற போதும் அவர்களுடன் எந்தத் தொடர்பும் அற்ற நிலையிலேயே புலிசார் அமைப்புக்கள் காணப்படுகின்றன.
தமிழர்கள் புலிகளின் அமைப்புக்களூடாக நம்பியிருந்த எல்லா அதிகார வர்க்கம் சார்ந்த அமைப்புக்களாலும் கைவிடப்பட்டதை அவர்கள் உணரும் இன்றைய சூழலைப் புலம் பெயர் முற்போக்கு சக்திகள் பயம்படுத்திக் கொள்வார்கள் என்றே நம்புகிறேன்.

Thanks : 'Vinavu'