Friday, March 8, 2013

இலங்கை குறித்து அமரிக்காவின் 2013 திட்டங்கள் என்ன? :






லகத்தின் பேட்டை ரவுடி அமரிக்காவின் முடிவு தான் முடிந்த முடிவு.


வாசிங்டனிலோ நியூயோர்கிலோ உலகத்தின் மூலையில் இருக்கும் நாடு எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று தீர்மானிப்பார்கள். அரசுகள் கூட இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தீர்மானித்து அதை நடைமுறைப்படுத்த உள்ளூர் முகவர்களை தந்திரமாகத் தயார்படுத்திக்கொள்வார்கள். அவர்களுக்கு ஐரோப்பிய நாடுகளில் உள்ள அரசுகள், அமரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, நோர்வே போன்ற நாடுகளோ இல்லை உலகில் வாழும் பன்நாட்டு நிறுவனங்களோ பணக் கொடுப்பனவுகளைச் செய்யும். பணத்தைப் பெறுபவர்கள் சிறிய கிராமிய அமைப்புக்களிலிருந்து பெரும் கட்சிகள் வரை யாராகவும் இருக்கலாம். சில சிக்கலான நாடுகளுக்கு அமரிக்க அரசு நேரடியாகவே பணக் கொடுப்பனவுகளை செய்யும்.
 
 
உலகம் முழுவதும் தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக ஆயிரக்கணக்கான தன்னார்வ நிறுவனங்களை விச வித்துக்கள் போல் விதைத்து வைத்திருக்கிறார்கள். இவற்றில் சில உளவு வேலைகள் கூட செய்கின்றன.
 
இலங்கையில் ஜனநாயகத்திற்கானதும், நல்லாட்சிக்கானதும்(Democracy and Governance ) என்ற திட்டத்தை முன்வைத்து அமரிக்க அரசு இயங்கிவருகிறது. யூஎஸ் எயிட்ஸ் (United States Agency for International Development (USAID)) என்ற அமரிக்க அரசின் சரவதேசப் பிரிவின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் USAID நிறுவனம் பல நாடுகளின் ஆட்சியைக் கவிழ்க்கவும் புதிய ஆட்சிகளை உருவாக்கவும் முக்கிய பங்கு வகித்திருக்கிறது.
 
 
ஆப்கானிஸ்தான், கிழக்கு தீமோர், பங்களாதேஷ், கம்போடியா, ஈராக், நேபாளம், யெமன் உட்பட இலங்கையும் இந்த நிறுவனம் தீவிரமாக இயங்கும் நாடுகளில் ஒன்று.
 
 
இந்த நிறுவனம் ஊடகங்களுக்கும், தனிநபர்களுக்கும், கட்சிகளுக்கும், தொழிற்சங்கங்களுக்கும், அடையாளம் சார்ந்த இயக்கங்களுக்கும் பணக் கொடுப்பனவுகளை மேற்கொள்ளும். சில சந்தர்பங்களில் அமரிக்க அரசுக்கு சார்பாக ஒரு அரசு முழுமையாக மாறும் வரை எதிர்க்கட்சிகளை வளர்த்து பின்னதாக அழித்து சிதைத்துவிடும் என்று செவேஸ் கோட் என்ற நூலை எழுதிய எவா கோலிக்கர் என்பவர் கூறுகிறார்.
 
 
ஜனநாயகமும் நல்லாட்சியும் என்ற தலையங்கத்தில் இலங்கையில் என்ன செய்யப்போகிறார்கள் என்பதை அந்த நிறுவனத்தின் (USAID) அடிப்படைத் திட்டமே கூறிவிடுகிறது.
 
 
-ஒரு நாட்டில் கட்சி அதிக பலமுடையதாக இருத்தல் ஆபத்தானது.
 
 
-ஒரு நாட்டில் கட்சி என்பது குடிசார் அமைப்புக்களை விட பலமானதாக அமைந்திருந்தால் அல்லது ஒரு கட்சி ஆட்சி அமைந்திருந்தால் தமது வேலை இலகுவானது.
 
 
-நாம் புதிய அமைப்புக்களை உருவாக்குவது இலகுவானது.
 
இவ்வாறு ஒரு கட்சி பலமான நிலையிலிருக்கும் நாட்டில் எதிர்க்கட்சியைப் பலப்படுத்தி ஆளும் கட்சியை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதே அமரிக்காவின் நோக்கம்.
 
 
இதற்காக அமரிக்காவின் நேரடி நிதி உதவியில் செயற்பட்டு வெற்றிகண்ட மாணவர் அமைப்பை தமது திட்டத்திலேயே உதாரணமாக முன்வைக்கிறார்கள். சேர்பியாவில் சில்படொன் மிலோசவிச்சை ஆட்சி அதிகாரத்திலிருந்து அகற்றுவதற்கு அங்கே மாணவர் அமைபுக்களுக்கு அமரிக்கா நேரடியாகவே நிதி உதவி வழங்கியது
 
 
சேர்பியாவில் அன்றிருந்த மாணவர் ஒன்றிய இயக்கம் எனப்படும் ஒட்போர்  (OTPOR) என்ற அமைப்பு ஊக்கப்படுத்திய அமரிக்கா தமக்கு முழுமையாகச் சார்பான அரசு ஒன்று அமையும் வரை நாட்டை 'ஜனநாயகப்படுத்துவதாக' அமரிக்க அரசின் வெவ்வேறு உப - உறுப்புக்கள் ஊடாக நிதி உதவி வழங்கியது.
 
சேர்பியாவின் நிலையிலிருந்து இலங்கை சிறிதளவு வேறுபடுகிறது. இலங்கையில் அதிகாரத்திலிருக்கும் குடும்பம் அமரிக்க அரசின் நலன்களுக்கு முழுமையாக முரண்பட்டதல்ல. ஆயினும் உலகின் அதிகார மையங்கள் முகாம்களாகப் பிளவுபடும் நிலையில் இலங்கை அரசு தனது நலன்களின் அடிப்படையில் எதிர்கால நகர்வுகளை அமரிக்கா தவிர்ந்த அரசுகளோடும் மேற்கொள்ளும். இதனால் இலங்கையில் ஆட்சி மாற்றத்தையோ அன்றி பலமான எதிர்க்கட்சியையோ தோற்றுவிப்பதே அமரிக்காவின் நலன்களுக்குப் பொருத்தமானது.
 
 
இதனை அடிப்படையாகக் கொண்டே அமரிக்க அரசின் ‘ஜனநாயகமும் நல்லாட்சியும்’ என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதுவரைக்கும் 20 மில்லியன் அமரிக்க டொலர்களை இலங்கையில் இத்திட்டத்திற்காக செலவு செய்துள்ளதாக அமரிக்க அரசு கூறுகின்றது.
 
 
ஆக, இலங்கையில் தோற்றுவிக்கப்படும் எழுச்சிகளும் மொட்டையான சுலோகங்களும் அரசின் அடிப்படைக் கட்டமைவினைச் சிதைக்கின்றனவா என்ற கேள்வி இன்று முதன்மையானது. வட-கிழக்கிலிருந்து இராணுவத்தை வெளியேறுமாறு போராட்டம் நடைபெறுகிறதா? ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை கோரிப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றனவா? போராட்டங்கள் எந்த வர்க்கத்தின் நலனை முன்னிலைப்படுத்துகின்றன? போராடுவதாகக் கூறும் அமைப்புக்களின் பண மூலம் என்ன? சமூக மாற்றத்திற்கான அடிப்படை அமைப்புக்கள் உருவாக்கப்படுகின்றனவா? இலங்கையில் பிரதான முரண்பாடு மற்றும் அடிப்படை முரண்பாடுகள் குறித்த கட்சிகளின் நிலை என்ன? போன்ற அடிப்படையான அடிப்படையான ஆய்வுகளிலிருந்தே ஏகாதிபத்தியங்கள் முன்மொழியும் நாச வேலைகளிலிருந்து தப்பித்துகொள்ள இயலும்.
 
2013 ஆம் ஆண்டு உணர்ச்சிவயப்பட்ட நடவடிக்கைகளைவிட அறிவுபூர்வமான அவதானமான நகர்வுகளையே வேண்டி நிற்கிறது.
 
-நிவேதா நேசன்
 
Thanks: innoru.com

Thursday, March 7, 2013

விண்வெளிக்கு பயணம்புரிந்த முதல் மனிதன் உண்மையில் யார்?




Dear Feiends,

ஒமர் முக்தார் என்பவர், 'இதனைப் பிரசுரிக்கும் தைரியமுள்ளதா?' என்று கேட்டு  இன்று அனுப்பி வைத்திருக்கும் ஒரு தகவல் ஒன்றைக் கீழே உங்கள் பார்வைக்கு இடுகின்றேன்.

படித்துப் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கலாம்.
 
 

விண்வெளியைக் கடந்த முதல் மனிதர் உண்மையில் யார்?

 
“விண்வெளியில் பயணம் செய்த முதல் மனிதன் யார்?” என்று படிக்கும் குழந்தைகள் யாரிடம் கேட்டாலும் சொல்லும் பதில் ‘யூரி காக்ரின்’ என்பதாகத்தான் இருக்கும். முஸ்லீகளிடம் கேட்டாலும் இதுதான் பதில், ஆனால் அவர்கள் நம்புவது வேறு. தோராயமாக 1400 ஆண்டுகளுக்கு முன் ஒரு நாளின் இரவில் முகம்மது விண்வெளியில் பயணம் செய்து தான் பிறப்பதற்கு முன்னரே இறந்துபோன மனிதர்களிடம் பேசி ஆலோசனை செய்து அல்லாவிடம் பேரம் நடத்தி ஐவேளைத் தொழுகையை வாங்கிவந்தார் என்பது அவர்களின் நம்பிக்கை. கல்விக்கு(மெய்யாக) ஒன்று, நம்பிக்கைக்கு(கற்பனையாக) வேறொன்று.
 
 
ஓரிரு ஆண்டுகளுக்கு முன் ‘விடுதலை’ இதழில் புஷ்பக விமானமும் புராக் விமானமும் ஒன்றுதான், இரண்டுக்கும் அறிவியல் நிரூபணங்கள் இல்லை என்று ஒரு கட்டுரை வெளிவந்தது.அதை எதிர்த்து ‘உணர்வு’ இதழ் தொடற்சியாக பத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை வரைந்து தள்ளியது, ஆனால் முகம்மது விண்ணில் பறந்ததற்கு என்ன நிரூபணம் என்பதை மட்டும் தொடவே இல்லை. இதன் தொடர்ச்சியாக சென்னையில் நாத்திகர்களுடன் நேரடி(!) விவாதமும் நடந்தது. என்ன காரணமோ தெரியவில்லை அவர்களும்கூட ஏதேதோ பேசினார்களே தவிர மிகக்கவனமாக அந்தக் கேள்வியை மட்டும் தவிர்த்து விட்டார்கள். பின்னர் தனியாக “முகம்மது பூமியில் மட்டுமே புராக்கில் பயணம் செய்தார், விண்வெளிக்கு புராக்கில் செல்லவில்லை” என்றொரு விளக்கம் வைத்தார்கள். அப்போதும் கூட விண்ணில் சென்றது எப்படி என்று விளக்கும் நோக்கில் எதையும் கூறவில்லை.
 
 
இந்த விண்வெளி பயணம் குறித்து குரான் இப்படி கூறுகிறது
 
 
மிகப் பரிசுத்தமானவன். அவன் தன் அடியாரை பைத்துல் ஹரமிலிருந்து மஸ்ஜிதுல் அக்ஸாவுக்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்…… குரான் 17:1
 
 
ஆனாலும் ஹதீஸ்களில் இன்னும் விரிவாக இந்தப்பயணம் பற்றிய செய்திகள் கூறப்பட்டிருக்கின்றன.
 
 
நான் இறையில்லத்தில் தூக்கமாகவும் விழிப்பாகவும் இருந்தபோது …. தங்கத்தட்டு கொண்டுவரப்பட்டது ….. என்னுடைய நெஞ்சில் காரையெலும்பிலிருந்து அடிவயிறு வரை பிளக்கப்பட்டது …. புராக் எனும் வாகனம் என்னிடம் கொண்டு வரப்பட்டது …. முதல் வானம் ஆதம் …. இரண்டாம் வானம் ஈசா, யஹ்யா …. மூன்றாம் வானம் யூஸுஃப் …. நான்காம் வானம் இத்ரீஸ் …. ஐந்தாம் வானம் ஹாரூன் …. ஆறாம் வானம் மூஸா …. ஏழாம் வானம் இப்ராஹிம் …. அதன் பின்னர் சித்ரத்துல் முந்தஹா …. வேர்ப்பகுதியில் நான்கு ஆறும் யானையில் காதளவு பெரிய இலைகளும் கொண்ட இலந்தை மரம் …. அல்லாவின் வஹீ, ஒரு நாளுக்கு ஐம்பது வேளைத் தொழுகை …. மூஸாவின் ஆட்சேபம் …. அல்லாவோடு பேரம் …. இதற்குமேலும் குறைக்கவா எனும் முகம்மதின் வெட்கமும் ஐவேளைத் தொழுகை இறுதியாதலும். புஹாரி 3207
 
 
குரான் இந்தப் பயணத்தை வெகுசுருக்கமாக‌ முடித்துக்கொள்கிறது. ஆனால் ஹதீஸ்கள் தான் அந்தப் பயணத்தை பேரண்டங்களைக் கடந்து விரித்துச் செல்கிறது. அதுவும் கிரிக்கெட் விளையாட்டில் ‘ரன்’ எடுப்பது போல பேரண்டங்களைக் கடந்த ‘சித்ரத்துல் முந்தஹா’ எனும் இடத்திற்கும் மூசாவின் வானமாகிய ஆறாம் பேரண்டத்திற்கும் மாறி மாறி ஓடுகிறார். அதுமட்டுமா? விண்வெளிப் பயணத்திற்கு முகம்மதை ஆயத்தப்ப‌டுத்த செய்யப்படும் அறுவைச்சிகிச்சை, புராக்கின் உருவம், எந்தெந்த அண்டங்களில் யாவர் என திரைக்கதையையே அமைத்துக் காட்டுகிறது.
 
 
முதலில் வான‌ம் என்பது என்ன? இங்கு ஏழு வானம் ஏழு கதவு என வருகிறது கதவு என்பதை குறியீடாகக் கொண்டாலும் ஒரு தடுப்பு அல்லது ஒவ்வொரு வானமும் தனித்தனி என பொருள் வருகிறது. ஆனால் வானம் என்பது தடுக்கப்பட்டதாகவோ தனித்தனியாகவோ இல்லை. எனவேதான் மதவாதிகள் வானம் என்பதற்கு பேரண்டம் என பொருள் தருகிறார்கள். அதாவது ஏழு தனித்தனியான பேரண்டங்கள். இந்த ஏழு பேரண்டங்களையும் கடந்து சென்றுவிட்டு ஒரிரவுக்குள் திரும்பியும் வந்திருக்கிறார் முகம்மது.
 
 
நாம் வாழும் இந்த பேரண்டம் எவ்வளவு பரந்து விரிந்தது என்பது துல்லியமாக இன்னும் மனிதர்களால் கண்டுபிடிக்கப்படவில்லை, மட்டுமல்லாது அது விரிந்து கொண்டும் இருக்கிறது. பூமி, சூரியக் குடும்பம், அதை உள்ளடக்கிய ஆகாய கங்கை எனும் பால்வீதி, இன்னும் இதுபோன்ற பல்லாயிரக்கணக்கான பால்வீதிகள், பலகோடிக்கணக்கான விண்மீன்கள், கருந்துளைகள், நெபுலாக்கள் இன்னும் பலவான விண்வெளி பருப்பொருட்களை உள்ளடக்கிய இந்தப் பேரண்டத்தின் அளவு தற்கால கணக்கீடுகளின்படி தோராயமாக 2500 கோடி ஒளியாண்டுகள். ஒரு ஒளியாண்டு என்பது ஒளித்துகளொன்று தடையாமல் தொடர்ந்து ஓராண்டுகாலம் பயணம் செய்தால் எவ்வளவு தூரத்தைக் கடந்திருக்குமோ அது தான் ஓர் ஒளியாண்டு தூரம். ஒளியின் வேகம் நொடிக்கு மூன்று லட்சம் கிலோ மீட்டர். அதாவது நொடிக்கு மூன்று லட்சம் கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்யக்கூடிய ஒரு பொருள் தொடர்ந்து நிற்காமல் பயணம் செய்தால் நாம் வாழும் இந்த பேரண்டத்தின் மறுஎல்லையைச் சென்றடைய 2500 கோடி ஆண்டுகள் தேவைப்படும். இது ஒரு பேரண்டத்தைக் கடப்பதற்கு தேவைப்படும் காலம், இதையும், இதுபோல் இன்னும் ஆறு பேரண்டங்களையும் கடந்து சென்று மீண்டு வந்திருக்கிறார் முகம்மது அதுவும் ஓர் இரவுக்குள்.

 
 இந்த பேரண்டத்தின் உச்சகட்ட வேகம் ஒளியின் வேகம் தான். ஒளியைவிட மிகைத்த‌ வேகத்திற்கு ஒரு பொருளை முடுக்கமுடியாது என்கிறது சார்பியல் கோட்பாடு. ஒரு வாதத்திற்காக இந்த உச்ச வேகத்தில் பயணம்
 
 
நிகழ்ந்திருக்கிறது என்று கொண்டாலும், ஓர் இரவு என்பது அதிகபட்சமாக 12 மணி நேரம். இந்த நேரத்தில் உச்சகட்ட வேகத்தில் சென்றாலும் ஒருவரால் அதிகபட்சம் 1296 கோடி கிலோமீட்டர்கள் தான் பயணிக்க முடியும். அதாவது 648 கோடி கிமீ தூரத்திற்கு சென்று வரலாம். ஆனால் முகம்மது சென்று வந்திருக்கும் தூரமும், அப்படி செல்வதற்கு கைக்கொண்ட வேகமும் கற்பனைக்குக் கூட எட்டாததாயிருக்கிறது.
 
 
குரானின் சொற்களுக்கும், எழுத்துகளுக்கும் இடையில் இண்டு இடுக்களிலெல்லாம் புகுந்து அறிவியலை அள்ளிக்கொண்டுவரும் மதவாதிகள் இந்த விண்வெளிப் பயணத்திற்கு என்ன அறிவியலைக் கொண்டுவருவார்கள்? இதில் வெளிப்படையான சிக்கல் இருக்கிறது எனத் தெரிந்ததால் சில மதவாதிகள், மக்காவிலிருந்து ஜெருசலம் வரையில் தான் பயணம் அதன்பிறகு உள்ளதெல்லாம் கனவு போல ஒரு காட்சி வெளிப்பாடு என நூல் விட்டுப்பார்க்கிறார்கள். ஆனால் குரானின் அது மெய்யான பயணம் தான் என்பதை உறுதிப்படுத்துகிறது.
 
 
 
…..அவரைச் சந்தித்ததில் நீர் சந்தேகம் கொள்ளாதீர்……. குரான் 32:23.
 
 
ஆக நம்புவதற்குக் கூட துளியும் வாய்ப்பளிக்காத இதுபோன்ற கட்டுக் கதைகளைத்தான் எக்காலத்திற்கும் பொருந்தும் ஒரே வேதம் என முழம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
 
 
மனிதர்களால் முடியாததெல்லாம் கடவுளால் முடியும் என்றெல்லாம் இதை எளிதாக குறுக்கிவிட முடியாது. அறிவியலை திணிக்க எங்கெல்லாம் வாய்ப்பிருக்கிறதோ அங்கெல்லாம் குரான் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே இன்றைய அறிவியலை கூறிவிட்டது என ஜல்லியடிப்பதும், வெளிப்படையாக‌ பல்லிளிக்கும் இடங்களில் அல்லாவின் அருள் என பதுங்குவதும் அப்பட்டமான மோசடி. என்ன மோசடியாக இருந்தாலும் எங்கள் மதம் என்பர்கள் விலகிச் செல்லுங்கள், சிந்திக்கும் திறனுள்ளவர்கள் சிந்திக்கலாம்.
 
- Omar Muktar

Wednesday, March 6, 2013

விஸ்வரூபம் : ஒரு கலாட்டாக் கல்யாணம்






ரு கல்யாண வீட்டுக்கு நாம் தனியாகச் சென்று வந்தால் திரும்பி வந்ததும் வீட்டிலுள்ளவர்கள் முதலிலே என்ன கேட்பார்கள். கல்யாணம் எப்படி நல்லபடியாக நடந்ததா பெண் மாப்பிள்ளை பொருத்தமெல்லாம் எப்படி என்றுதானே?


இயல்பாக நிகழும் கல்யாணத்தில் வழமையான சம்பிரதாயங்களை விட்டுவிட்டு மணமக்களின் அழகையும் பொருத்தங்களையும் பற்றிக் கூறி அசத்தலாம். ஆனால் கடைசிவரை நடக்குமா அல்லது கலைந்துவிடுமா என்று கலாட்டாவாக நடந்து முடிந்த கல்யாணத்திலே பெண் மாப்பிள்ளை பொருத்தம் பற்றிச் சொல்வதற்கு முன்பு நாம் எதைப்பற்றியெல்லாம் சொல்ல வேண்டியிருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.


விஸ்வரூபம் திரைப்படத்தை விமர்சிப்பதற்கு ஆரம்பிக்கும்போது என்னுடைய உணர்வும் அப்படித்தான் இருக்கின்றது. இயல்பாக படம் வெளியிடப்பட்டிருந்தால் அதன் கதையையும் அது சொல்லப்பட்டிருக்கும் பாங்கையும் பற்றி நெருடலின்றி விமர்சித்துக் கொண்டு சென்றிருக்க முடியும்.


ஆனால் இத்தனை சர்ச்சைகளும் இழுபறியும் ஆனபின்பு படத்தை நினைத்தாலே அதுபற்றிய நினைவுகள்தான் வந்து குறுக்கிடுகின்றன.
இருந்தாலும் கூடியவரை விஸ்வரூபத்தை இயல்பாக வெளிவந்த ஒரு திரைப்படத்தைப் போலவே கருதி விமர்சிப்பதற்கு முயல்கின்றேன். (அப்பாடா!)




முதலிலே கதையைச் சுருக்கமாகச் சொல்லிவிடலாம்.


அமெரிக்க வாழ் இந்திய நடன ஆசானாகிய கமல் சற்று பெண்மை கலந்த நடுத்தர வயது ஆசாமி.  அணு இரசாயனவியலிலே கலாநிதிப் பட்டம் பெறும் நோக்கத்திற்காக கமலை வயது வேறுபாடு கூடப் பார்க்காமல் திருமணம் செய்து மனைவியாகின்றார்  தமிழ்ப் பெண்ணான இளம் பூஜா. ஆனாலும் தன்னை மிகவும் நேசிக்கும் கமலுடன் ஒட்டுறவோ தாம்பத்திய உறவோ வைத்துக்கொள்ளாமல் வாழ்ந்து வருகின்றார்.


பூஜாவும் அவர் வேலைபார்க்கும் இரசாயனவியல் கம்பனியின் உரிமையாளரான தீபக் எனும் இளைஞனும் காதல் கொள்கின்றனர். கமலிடம் இருந்து பிரிந்து தீபக்குடன் சேர்ந்துவாழ்வதற்காக கமல் பக்கம் ஏதாவது தவறு இருந்தால் தமக்கு வசதியாக இருக்கும் என்று எண்ணி அவரை இரகசியமாகக் கண்காணிக்க ஒரு பீட்டர் எனும் துப்பறிவாளரை அமர்த்துகின்றார்கள் பூஜாவும் தீபக்கும்.


கமலைப் பின்தொடரும் பீட்டர் மூலமாக கமல் ஒரு இந்து அல்ல என்பதும் அவர் விஸ்வநாதன் எனும் பெயரிலே தன்னை மறைத்துக்கொண்டு வாழ்ந்து வரும் முஸ்லீம் என்பது தெரியவருகின்றது.  அதேவேளை கமலை பின்தொடரும்போது  நியுயோர்க் நகரத்தை நிர்மூலமாக்கும் இரகசியத் திட்டத்தடன் புறநகர்ப்பகுதியில் மறைவாகச் செயற்பட்டுவரும் தீவிரவாதக்குழுவினரின் இடத்திற்கு தவறுதலாக சென்று விடும் பீட்டர் அங்கு கொல்லப்படுகின்றார்.



பீட்டரின் டயறியிலிருக்கும் குறிப்பில் பூஜா மற்றும் தீபக் ஆகியோரின் விபரங்கள் தீவிரவாதிகளுக்கு கிடைக்கின்றன. தீபக் ஏற்கனவே அதே தீவிரவாதிகளுடன் இரகசியத் தொடர்பிலிருந்து வருபவன். அவன் அவர்களது நியூயோர்க் நகரத்தை அழிக்கும் இரகசியத்திட்டத்திற்கு பணத்துக்காக உதவி வரும் ஒருவன் என்பதால் அவன் மீதும் பூஜாவின் அவர்களுக்குச் சந்தேகம் உண்டாகின்றது. இதனால் இருவரையும் விசாரிப்பதற்காக பூஜாவின் இடத்திற்குச் செல்லும் தீவிரவாதிகள் அங்கிருக்கும் கமலையும் சேர்த்துக் கடத்திக் கொண்டு தங்கள் இரகசிய இடத்திற்கு வருகின்றது.




அங்கு நிகழும் விசாரணையின் போது இந்து பெயரிலே வாழும் முஸ்லீமாகிய கமலின் தோற்றம் நியூயோர்க்கில் வேறு ஒரு இடத்திலே மறைந்து வாழும் தீவிரவாதத் தலைவனான ராகுல் போசுக்கு (ஒமர் முல்லா) மின்னஞ்சல்  செய்யப்படுகின்றது. அந்தப்படத்தைப் பார்க்கும் போஸ் அதிர்ச்சியடைகின்றான்.


தீபக்கை உடனடியாகச் சுட்டுக் கொன்று விட்டு தான் அங்கு வரும் வரை கமலை எங்கும் நகராதபடி முழங்காலிலே சுட்டு உயிரோடு வைத்திருக்குமாறு தொலைபேசியில் கட்டளையிடுகின்றான்.
அதன்படி தீபக் கொல்லப்பட்டதும் கமல் தான் ஒரு முஸ்லிம் என்பதால் சாவதற்கிடையில் பிரார்த்தனை புரிய விடுமாறு கெஞ்சிக் கேட்டுக் கொள்கின்றார். அதன்படி அவரது கைக்கட்டுகள் அவிழ்க்கப்பட்டதும் தீவிரவாதிகள் கவனக்குறைவாக இருக்கும் ஒரு தருணத்திலே உயிரைப்பணயம் வைத்து வெகுநுட்பமான அதிரடித்தாக்குதல் ஒன்றை நடாத்தி அங்கிருந்து பூஜாவுடன் தப்பித்து விடுகின்றார். அப்பாவிக் கணவனின் இந்தத் திடீர் மாற்றமும் அதிரடியும் பூஜாவுக்கும் அதிர்ச்சியளிக்கின்றது.



கமல் உண்மையிலே யார்... அவரது தோற்றத்தை புகைப்படத்தில் பார்த்ததும் தீவிரவாதத் தலைவன் அதிர்ச்சியடைந்தது ஏன்... என்பதையெல்லாம் முடிச்சவிழ்ப்பதுதான் படத்தின் தொடரும் கதை.





கமல்ஹாசனை ஒரு நடிகர் என்று சொல்வது ஆல்பர்ட் ஐன்ஸ்டைனை வெறும் விஞ்ஞானி என்று அறிமுகப்படுத்துவதற்கு ஒப்பானது.


குழந்தை நட்சத்திரமாக களத்தூர் கண்ணம்மாவிலே அறிமுகமானதிலிருந்தே தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் அந்தந்த காலகட்டத்திற்குரிய வழமையான  பாணியிலிருந்து ஏதாவது ஒரு வித்தியாச முயற்சியில் ஈடுபட்டு வருபவர் என்று கூறினால் அது மிகையாகாது.


ஆம், தமிழ் சினிமா உருவாக்கம் அவரது ஆளுமைக்குட்படாத ஆரம்ப காலத்தில் அவர் நடித்த படங்களில் கூட குறைந்தபட்சம் தனது பாத்திரத்தை நடிப்பால் முன்னிறுத்துவதிலாவது ஏதாவது வித்தியாசத்தைக் காண்பித்திருப்பார். இதனை ஆரம்ப காலம் முதல் அவரது படங்களைத் தொடர்ந்து பார்த்து வருபவர்கள் நிச்சயம் உணர்வார்கள்.


மூடநம்பிக்கைகளுக்கும் போலியான சம்பிரதாயங்களுக்கும் பேர்போன தென்னிந்திய சினிமாவில் அதையெல்லாம் ஒருபுறம் தள்ளி வைத்துவிட்டு தனது திறமையையும் உயர்ந்த ரசனையையும் மட்டும் நம்பி இன்றுவரை சினிமாவின் ஏறத்தாழ அனைத்துத் துறையிலும் வெற்றிகரமாக இயங்கி வருபவர்.


அவர் நினைத்திருந்தால் அவரிடமிருக்கும் பன்முக திறமைகளை வைத்து தனது சமகால கதா நாயகர்களைப்போல ஆயிரம் மசாலாப் படங்களை நடித்து பெரும் காசு பார்த்திருக்க முடியும்.  ஆனால் அவ்வாறில்லாமல் வசூல் வெற்றிக்காக அரைத்த மாவையே மாறிமாறி அரைத்துக் கொண்டிருக்கும் மசாலா கதாநாயகர்களிலிருந்து வேறுபட்டு, தான் சம்பந்தப்பட்ட படைப்புகள் பொருளாதார ரீதியில் மட்டுமல்லாது உயர்ந்த தரத்திலும் உலகத் தரத்திலும் பேசப்பட வேண்டும் என்பதை இலட்சியமாகக் கொண்டு உழைத்து வருபவர் கமல்ஹாஸன். இதற்காக அவர் கொடுத்துவரும் விலைகள் மிக அதிகம் என்றே கூறவேண்டும்.


விஸ்வரூபம் அடிப்படையில் இன்றைய உலகம் எதிர்நோக்கிவரும் தீவிரவாத அச்சுறுத்தல்களை அடிப்படையாகக்கொண்ட சாகசக்கதை என்பதை முதலிலே நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதன் கதைக்களம் ஆப்கானிஸ்தான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ஆகும். எனவே இந்தக் கதைக்கு இயல்பாகவே ஒரு சர்வதேசத்தன்மை வந்துவிடுகின்றது. எனவே  சர்வதேச முகம் கொண்ட கதையை அதே தரத்தில் காட்சிப்படுத்தியாக வேண்டும் எனும் அக்கறை படத்தின் ஒவ்வொரு சட்டகத்திலும் புலப்படுகின்றது.






இந்தப்படத்திலே இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா, நடிகர், தயாரிப்பாளர் என்று கமலின் பல அவதாரங்கள் உள்ளன. இதிலே இயக்குனர் கமல்தான் மற்றைய எல்லோரையும் மிஞ்சுகின்றார். கதைக்கு அவசியமான படப்பிடிப்புத்தளம், தேவையான பாத்திரங்கள், பொருத்தமான நடிகர்தேர்வு, தொழினுட்பக் கலைஞர்களின் தேர்வு என்று எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து இழைத்திருப்பதிலே அவரது அசாத்தியமான உழைப்பு மிளிர்கின்றது.


ஒரு திரைப்படத்தின் மையக்கதைக்கு அவசியமில்லாத அற்ப விடயங்களுக்கும் பாடல் காட்சிகளுக்கும் வீணாகச் செலவழிப்பதைத்தான் இதுவரை தமிழ் சினிமாவிலே பிரமாண்டமான படைப்பு என்று  பல பிரபல இயக்குனர்கள் நமது தமிழ்பட ரசிகர்களை ஏமாற்றிக் கொண்டு வந்திருக்கின்றார்கள்.  அவர்களுக்கெல்லாம் பிரமாண்டம் என்றால் என்ன என்பதையும் அதற்காக எப்படிச் செலவழிக்க வேண்டும் என்பதையெல்லாம் தனது இயக்கத்தின் மூலமாக பாடம் நடாத்தியிருக்கின்றார் நமது சகலகலாவல்லவன்.


அத்துடன் நடிகர்களை அவரவர் பாத்திரங்களுக்குள்ளே -கமலின் வார்த்தைகளிலே கூறினால் - அடிப்பிடித்து விடாமலும் அதேவேளை பொங்கி வழிந்துவிடாமலும்  கன கச்சிதமாக பொருந்திப்போகச் செய்திருக்கின்றார். அதுமட்டுமல்ல இந்தியத் திரையுலகின் திறமையும் புகழுமிக்க தேர்ந்த கலைஞர்களிலே ஒருவராகிய தன்னையே கூட (அதாவது நடிகன் கமலையே) அவரது வழக்கமான சில சேட்டைகளிலிருந்து விடுபட்டு பாத்திரத்துக்குள் மட்டும் சுற்றிவர அனுமதித்து அடக்கி வாசிக்கச் செய்திருக்கின்றார் இயக்குனர் கமல்.






வழமையாக கமல் படங்களிலே இருக்கும் மதங்கள் பற்றிய கிண்டலைக்கூட இதிலே பெரிதாக காண்பிக்காமல் விட்டிருப்பதை இதற்கு உதாரணமாகக் கூறலாம். அந்த அளவுக்கு கதையின் போக்கு அறிந்து இயக்குனரின் ஆளுமை மற்றைய துறைகளை கட்டியாண்டுள்ளது.


இயக்குனருக்கு அடுத்ததாக விஸ்வரூபத்திலே கொடிகட்டிப் பறப்பவர் வசனகர்த்தா கமல் என்பதை படத்தின் உரையாடலை கூர்ந்து செவிமடுத்தவர்களுக்கு நன்கு புரியும்.


திரைப்படம் என்பது அடிப்படையில் ஒரு காட்சி ஊடகமே என்பதை நன்கு மனதிற்கொண்டு பாத்திரங்களின் முகபாவனைகளின் மூலமாக கதைகூறுவதை ரசிகன்  புரியாமல் போகலாம் என்று அவர் கருதிய இடங்களில் மட்டுமே அவசியமான உரையாடலை வைத்திருக்கின்றார் வசனகர்த்தா கமல் . ஒவ்வொரு காட்சியிலும் கதையை நகர்த்துவதற்கு உரையாடல்களை இயல்பாகவும் இரத்தினச் சுருக்கமாகவும் இரசிக்கத் தக்கதாகவும் எழுதியிருக்கின்றார். பல இடங்களில் உரையாடல்களை ரசிப்பதற்கு உலக அறிவும் புத்திசாலித்தனமும் அவசியமாகவுள்ளது.


அடுத்து கமலின் நடிப்புப்பற்றி அவசியம் சொல்லியே ஆகவேண்டும். ஆரம்பத்தில் வரும் நடனக்கலைஞர் வேடத்தை அவரது அளவுக்கு வேறுயாராலும் ரசித்துச் செய்ய முடியாது என்றே நினைக்கத் தோன்றுகின்றது. இதுவரையிலான தமிழ் சினிமாவில் பெண்மை கலந்த ஒரு ஆண் பாத்திரம் என்றால் வழமையாக அனைவரும் பெண்போன்றே அங்க அசைவுகளைக் காட்டி மிகையாகத்தான் நடிப்பார்கள். ஆனால் கமலோ தனது பாத்திரத்திற்கான ஒவ்வொரு அசைவிலும் தான் பெண்மையின் நளினம் கலந்த ஆண்தானே தவிர தான் ஒரு பெண்ணல்ல என்பதை ஞாபகம் வைத்திருக்கத்தவறவில்லை. அந்தளவுக்கு அவரது உடல்மொழி கச்சிதமாகவுள்ளது.





அதேவேளை தீவிரவாதிகளின் முகாமில் வெகுளியான நடனக்கலைஞர் எனும் பாத்திரத்திலிருந்து திடீரென்று தனது உண்மையான சுயரூபத்தை வெளிப்படுத்தி உளவுத்துறை அதிகாரியாக இயங்கத் தொடங்கியதும் அவரது முகபாவமும் உடல்மொழியும் அப்படியே முழுமையாக மாற்றமடைந்து விடுவதை மிக நேர்த்தியாகச் செய்திருக்கின்றார். இப்படி மாற்றிக்கொள்வதற்கு அவரது கற்பனைத்திறனும் அர்ப்பணிப்பும் பரந்த அனுபவமும் கைகொடுத்திருக்கின்றன.



அதேபோல ஆப்கானிஸ்தான் காட்சிகளிலே தீவிரவாதியாக நடித்திருப்பார் கமல். வேறு ஒருவராக இருந்தால் அதற்குரிய ஆடைகளை அணிந்து தோளில் துப்பாக்கியோடு வீரவசனங்கள் பேசி, முடிந்தால் சக தீவிரவாதிகளோடு சேர்ந்து ஒரு குழுப்பாடல் பாடியாடிவிட்டு காரியத்தை முடித்திருப்பார். ஆனால் தனது தீவிரவாதி பாத்திரத்தினூடாக ஆப்கானிஸ்தானில் நடைபெறும் தீவிரவாதிகளையும் அங்குள்ள முகாம்களிலே நிகழும் ஆயுதப் பயிற்சிகள், பணயக் கைதிகளைக் கையாளும் முறைகள், தற்கொலைத் தாக்குதல்கள், துரோகிகள் மற்றும் எதிரிகள் மீதான தண்டனை முறைகள் உட்பட தீவிரவாதிகளின் மனோபாவம் என்பவற்றையெல்லாம் மிகுந்த பிரயத்தனத்துடன் காண்பித்திருக்கின்றார் என்றுதான் சொல்ல வேண்டும்.


ஆப்கன் தலிபான்கள் புரியும் தீவிரவாதம் அவர்கள் மீது திணிக்கப்பட்ட ஒன்று எனவும் வல்லரசு நாடுகள் தமது நலன்களை பேணுவதற்காக தொடுத்த தாக்குதல்களின் எதிர்வினையே தவிர தலிபான்களாகவே தேர்ந்தெடுத்துக்கொண்டது அல்ல என்பது மிகச்சரியாக சில காட்சிகளினூடாகவும் பின்னணியில் இசைக்கப்படும் பாடல் வரிகளினாலும் புலப்படுத்தப்பட்டுள்ளது.


இன்னொரு காட்சியிலே நேட்டோப் படையினரின் ஹெலிகொப்டர் தாக்குதல் நிகழ்கின்றது.  அந்தக் காட்சியிலே நிகழும் கடுமையான சண்டைக்கிடையிலே மாட்டிக்கொள்ளும் தீவிரவாதத்தலைவர், 'அமெரிக்கர்கள் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதில்லை.. அவர்களுக்கு வேண்டியதெல்லாம் ஆண்(தீவிரவாதி)களாகிய நமது உயிர்கள்தான்!' என்று சகபாடிகளிடம் கூறுவதாக ஒரு காட்சி வருகின்றது.


இந்தக் காட்சியையும் உரையாடலையும் மேம்போக்காகப் பார்க்கும் யாருக்கும்  அமெரிக்க இராணுவத்தினரை  மனிதாபிமானிகளாக வலிந்து காண்பிப்பதற்காக எழுதப்பட்டது போலவே தோன்றும். ஆனால் தீவிரவாதத் தலைவர் அதை சொல்லி முடித்த அடுத்த நிமிடமே அமெரிக்க ஹெலிகொப்டர் ஒன்று பெண்களும் பிள்ளைகளும் ஒதுங்கியிருக்கும் ஒரு கட்டிடத்தை அவர்கள் கதறக் கதறக் குண்டுவீசி நிர்மூலமாக்கி விட்டுச் செல்கின்றது. இப்போது கூறுங்கள்... இது அமரிக்கர்களுக்கு வழங்கப்படும் நற்சான்றிதழா என்ன?





இவ்வாறான முரண்நகை காட்சிகளைப் புரிந்து கொள்வதற்கு உலக சினிமா பற்றியும் உலகளாவிய அரசியல் விடயங்கள் பற்றியும் நிறைய அறிவு வேண்டும். சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக கேள்வியுற்றதால் வெகுண்டு அன்றுதான் திரைப்படத்தைப் பார்க்கும் ஒருவருக்கு அல்லது குழுவினருக்கு இவ்வாறான காட்சி உத்திகளை புரிந்துகொள்ள முடியுமா? இதனால்தான் படத்தின் preview காட்சிகளைப் பார்த்த பின்பும் குறித்த மதக்குழுவினர் ஒட்டுமொத்தமாக இந்தத்திரைப்படம் அமெரிக்கர்களுக்குச் சார்பாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்று வாதிட்டுக் கொண்டிருந்தனர்.


ஆனாலும் படத்திலே காண்பிக்கப்பட்ட மக்கள் குடியிருப்புகள் மீதான அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளின் தாக்குதல்களை இன்னும் தாக்கமாக காண்பித்திருக்கலாம் என்று தோன்றுகின்றது. அவ்வாறு காண்பித்திருந்தால் விஸ்வரூபம் திரைப்படத்தின் மீது இஸ்லாமிய அமைப்புகள் முன்வைத்த அமெரிக்க சார்பு நிலை என்ற குற்றச்சாட்டினை இன்னும் வலுவாக மறுத்திருக்கலாம்.


ஆக, ஒசாமா பின்லாடனைக் கொன்று வெற்றிக்களிப்பில் பராக் ஒபாமா உரையாற்றிக் கொண்டிருந்த நேரத்தில் அமெரிக்காவிலே ஆரம்பித்து, ஜோர்ஜ் டபிள்யூ புஷ் ஜனாதிபதியாக ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் மீதும் பொதுமக்கள் மீதும் தாக்குதல் நிகழ்த்திக் கொண்டிருந்த ஆப்கானிஸ்தானுக்கு பின்னோக்கிச் சென்று, மீண்டும் ஆரம்பித்த அதேகாலத்திற்கு வந்து நியூயோர்க்கை நிர்மூலமாக்குவதற்காக தாலிபன்களின் வெகு நேர்த்தியாக திட்டமிட்டிருந்த தற்கொலைத் தாக்குதலை முறியடித்து நிமிர்வதுதான் விஸ்வரூபத்தின் கதை.

ஒரு  Action thriller film  என்ற வகையில் படம் ஆரம்பித்தபோது இருந்த பிரமாண்டமும் நேர்த்தியும் இறுதிக்காட்சிவரை சிறிதும் குறையாமல் தொடர்ந்து வருகின்றது. ஆனால் படத்தொகுப்பிலுள்ள சிறுசிறு குறைபாடுகள் காரணமாகவோ அல்லது சகல அம்சங்களையும் படத்திலே சொல்லிவிட வேண்டும் என்ற முனைப்பினாலோ என்னவோ கதை ஆப்கானிஸ்தானுக்குள்ளே இறங்கி சிறிது நேரத்தில் சுவாரஸ்யம் சற்று குறைந்து விடுகின்றது. ஆனால் காட்சியமைப்பின் நேர்த்தியுடன் திறமையான உரையாடலும் அதை ஒரேயடியாகத் தொய்ந்து போய் விடாமல் ஓரளவு காப்பாற்றி விட்டிருக்கின்றது.


ஆக மொத்தத்தில், உலகத்தரத்தில் ஒரு சாகசத் திரைப்படத்தை எப்படி உருவாக்க வேண்டும் என்று தமிழ்த்திரையுலகினருக்கு கமல் காண்பித்திருக்கும்  ஒரு விலையுயர்ந்த பாடம் இந்த விஸ்வரூபம்.

(தொடரும்)
 
- Jesslya Jessly


 

Tuesday, March 5, 2013



அன்புள்ள நண்பர்களே!


 


எதிர்பார்த்திருங்கள்!

 



சர்ச்சைக்குரிய விஸ்வரூபம் திரைப்படத்திற்கான எனது விமர்சனம் வெகு விரைவில்!

- Jesslya Jessy

Sunday, March 3, 2013

சிறுகதை : விஸ்வரூபம்






யாரித்து முடித்த நாள் முதலாய் திரையிடப்பட முடியாமல் சர்ச்சைக்குள்ளாகி இழுபறிப்பட்டுக் கொண்டிருந்தது ஒரு பிரபல்யமான தென்னிந்தியத் தமிழ் திரைப்படம்.  பின்பு அது தடைகளையெல்லாம் மீறி ஒருவழியாக தலைநகரின் திரைகளுக்கு வந்திருந்தபோது அதனைப் பார்ப்பதற்காக தலைநகருக்குச் சென்றுவரத் தீர்மானித்தேன்.


விஷம்போல ஏறிச்செல்லும் விலைவாசிக்கும் இன்றிருக்கும் வாழ்க்கைச் செலவுக்கும் மத்தியில் என்னைப் போன்ற ஓர் அரசஊழியன் தலைநகருக்குச் சென்றுவருவது என்பது அதுவும் ஒரு திரைப்படத்தைப் பார்த்து ரசிப்பதற்காக பணம் செலவழித்து ஏறத்தாழ இருநூற்று ஐம்பது கிலோமீற்றர் தூரம் பயணம் செய்து திரும்புவது என்பதெல்லாம் நிச்சயம் மிகை முயற்சிதான்.


ஆனாலும் குறித்த திரைப்படம், பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி செய்திகளிலே ஏற்படுத்திய பரபரப்புகளாலும் இணையத்தளங்களிலே அது தொடர்பாக நீண்டு கொண்டே போன இழுபறி விவாதங்களாலும் உருவாகிய 'அப்படி என்னதான் அதிலே இருக்கின்றது..?' என்ற சுவாரசியம் என்னைத் தின்று துளைத்தது. அந்த சுவாரசியம்தான் அடுத்தமாத பட்ஜட் பற்றிய அபாய உணர்வுகளையெல்லாம் தற்காலிகமாக ஒத்திப்போட்டு கொழும்புக்குச் சென்று உயர்ந்த தொழினுட்பத்தரத்துடன் அந்த படத்தைப் பார்த்தே ஆகவேண்டும் என்று என்னைத் தூண்டியிருக்க வேண்டும்.


 'படம் பார்க்க கொழும்பு செல்கின்றேன்' என்று யாராவது கேட்டால் சொல்ல முடியுமா? அப்படிக் கூறினால் எனது அலுவலகத்திலும் அயலிலும் வாழும் மத்தியதர வர்க்க சகமனிதர்களால் அதைத்தாங்கிக் கொள்வதற்குத்தான் முடியுமா என்ன? குறைந்தபட்சம் ஆதர்ச நாயகர்களுக்கு ஆளுயர கட்-அவுட் வைத்து பாலாபிஷேகம் புரிகின்ற தமிழ்நாட்டு சினிமாப் பைத்தியங்களோடு என்னையும்  இணைத்து கிசுகிசுத்துப் பழிவாங்கி விடுவார்கள். அதற்காகவே வேறு ஏதாவது ஒரு பொருத்தமான காரணம் தேடினேன்.  என்ன செய்யலாம் என்று மூளையைக் கசக்கியபோதுதான் சட்டென அது ஞாபகம் வந்து என் வயிற்றில் மைலோ வார்த்தது.


இப்போது மனதை உறுத்திக்கொண்டிருந்த குற்றவுணர்வு ஓரளவு தணிந்திருந்தது. அன்றைய தினம் கொழும்பு புறப்படும் இரவுத்தபால் ரயில்வண்டிக்குரிய ஒருசோடி புகையிரத ஆணைச்சீட்டுக்களை அலுவலகத்தில் எழுதிப் பெற்றுக்கொண்டு மாலையில் வீடு திரும்பினேன்.


000




'என்ன திடீரென்று... சொல்லவேயில்லையே நீங்க?'
கையிலே சமையல் கரண்டியுடன் அதிர்ச்சி காண்பித்த மனைவிக்கு காரணத்தை எப்படிச் சொல்வதென்று புரியாமல் விழித்தேன்.

'அது வந்து.. இந்த ஈடீசிஎஸ் ஊழியர் சேமலாப நிதி தெரியுமா... அது விஷயமா...'

 'சரி, அந்தப்படத்தைப்போய்  பார்த்திட்டு வாங்க! ஆனா நிறையச் செலவழிச்சிராதீங்க.. கரண்டுக்கும் ரெட் பில் வந்திருக்குது... உங்க உடுப்பு ஏதும் கழுவுறதெண்டால் ப்ளாஸ்டிக் பக்கட்டில எடுத்துப்போடுங்க?' என்றுவிட்டு சமையலறைக்குள் புகுந்துவிட்டாள் அவள்.

அவளுக்கு ஈடீசீஎஸ் பற்றித் தெரியாது போனாலும் சர்ச்சைக்குரிய திரைப்படம் பற்றிய செய்திகளை விடாமல் நான் வாசிப்பதையும் அலுவலக நண்பர்களுடன் நேரிலும் போனிலும் முழுமூச்சாக விவாதிப்பதையும் நன்கறிந்திருந்தாள்.

'என்ன யோசிக்கிறீங்க... ட்ரெயின்ல வோரண்ட்லதானே போறீங்க..?'

'ஓமோம்.. நாளைக்கு காலையில லிலானியை என்ன செய்யிறது?'

'அவளை நான் பஸ்ல கூட்டிக் கொண்டு போய் டியூஷனுக்கு விடுறன். நீங்க ஞாயிற்றுக்கிழமை விடிய வந்திடுவீங்கதானே..?'

'பின்னே..? அங்கேயே குடியிருக்கிறதுக்கா போறேன்.. திங்கள் ஒபிஸ்ல ஓடிட் வேற இருக்கு'


000 






திருகோணமலை ரயில் நிலையத்தில் போய் நான் இறங்கியபோது ரயில் புறப்படுவதற்கு இன்னும் முக்கால் மணி நேரமிருந்தது. நான் எதிலுமே சற்று முன்ஜாக்கிரதை முத்தண்ணாதான். கடைசிநேரத்தில் அல்லாடுவதெல்லாம் அறவே பிடிப்பதில்லை.


இரண்டாம் வகுப்பு டிக்கட் கவுண்டரில் இருந்தவரிடம் ஆணைச்சீட்டை நீட்டினேன்.

'இதுல சைனா பேயிலிருந்து புறப்படுறதா எழுதுப்பட்டிருக்கே.. மறந்துபோய் இங்க வந்திட்டீங்களோ..?' என்று சிரித்தபடி அதைத் திருப்பித் தந்தார் அந்த கவுண்டர் க்ளார்க். திருகோணமலை நகருக்கு அடுத்த ரயில் நிலையமான சீனக்குடாவிலிருந்து புறப்படும் விதமாக ஆணைச்சீட்டை எழுதி வந்தது அப்போதுதான் நினைவுக்கு வந்தது.

'பரவாயில்லை, ஒரு டிக்கட் எடுத்து இதே ட்ரெயின்ல சைனாபே போங்க. அங்க ஒரு பத்து நிமிஷம் நிக்கும். அங்கிருந்து உங்க வொறண்டை பாவியுங்க..' என்றபடி தந்தார் அவர் புன்னகை மாறாமல்.

புகையிரத மேடைக்கு நான் இறங்கியபோது தண்டவாள ஸ்லீப்பர் கட்டைகளுக்குப் புதிதாக அடித்திருந்த ஒயில் நாற்றம் நாசியைத் தாக்கியது. மேடையின் இடதுபுறமாக சற்றுத்தூரத்திலே இருளான இடத்தில் ரயில் எஞ்சின் இரைந்தபடி நின்றிருக்க பயணிகள் பெட்டிகள் கூட்டமின்றி வெறிச்சோடிக்கிடந்தது. ஒருசோடி உடுப்பு ஒரு டயறியுடன் முதுகிலே தொங்கிய நூல்பை மற்றும் ஒரு கையில் மனைவி கட்டித்தந்த இரவுச்சாப்பாட்டுப் பார்சல்; சகிதம் பயணிகள் பெட்டி ஒன்றிற்குள் ஏறி இரண்டாம் வகுப்பு இருக்கைகளைத் தேடி ரயில் பெட்டிகளுக்கேயுரிய நாற்பது வோட் மங்கலான வெளிச்சத்தில் நடந்தேன்.


இரண்டாம் வகுப்புப்பெட்டி என்பதால் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் யன்னோலர இருக்கை தேடி அமர்ந்திருந்தார்கள். தெரிந்த முகமாக யாருமே தென்படவில்லை. இரவுநேரப் பயணமேயானாலும் எனக்கு ஓடும் ரயிலில் தூக்கம் வருவதில்லை. தெரிந்தவர்களும் இல்லையென்றால் இரவு முழுவதும் கொட்டக்கொட்ட விழித்தபடி சிந்தனைகளின் இறுக்கத்தில் உழன்று கொண்டுதான் இருக்கவேண்டும். 'சே! வாசிப்பதற்கு புத்தகம் ஏதாவது கொண்டு வந்திருக்கலாம்' என்று உள்ளுர நொந்து கொண்டிருந்தபோது யாரோ 'உஷ்ஷ்....ஷ்ஷ்!' என்று கூப்பிட்டார்கள்.


'என்னடா வாசுதேவா, யாரை ஏத்திவிட வந்த நீ...?'

பழகிய குரல் கேட்டு நிமிர்ந்தபோது வெளியே புகையிரத மேடையில் சிரித்தபடி நின்றிருந்தான் சலீம். அவன் என்னுடைய பழைய நண்பன். மிகவும் ஜாலியான பேர்வழி. ஒருகாலத்தில் இருவரும் திருகோணமலை தபால் அலுவலகத்தில் அமைய ஊழியர்களாக ஒன்றாக வேலைபார்த்தவர்கள். அதிலிருந்து கொண்டே இருவரும் ஆசிரியர்களையும் எழுதுவினைஞர்களையும் தெரிவு செய்வதற்குரிய ஒர் ஆங்கிலப் பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயின்றவர்கள். நான் பிரதேச அலுவலகத்தில் க்ளார்க் ஆகிவிட அவன் ஆங்கில ஆசிரியராகி இப்போது சுற்றயல் கிராமப் பாடசாலை ஒன்றிலே கற்பிக்கின்றான். அவன் மனைவி ரயில்வேயில் க்ளார்க்காக இருப்பதால் இந்தப் புகையிரத நிலையத்திற்கு மிக அருகிலுள்ள ரயில்வே விடுதி ஒன்றில்தான் இருக்கின்றான்.


'ஏண்டா என்னையெல்லாம் பார்த்தா பிரயாணஞ் செய்ய வந்தவன் மாதிரி தெரியாதோ..?' என்று மடக்கினேன் அவனைச் சந்தித்த குதூகலத்துடன்.


'அட! நீ கொழும்புக்குப் போறியா...? யா அல்லாஹ், வாசுதேவன் கொழும்புக்குப் போகிறானாம்யா அல்லாஹ்! மழைதான்டா வரப்போகுது இன்டைக்கு! டேய், உன்னைத் தெரியாதா...? நீ லேசில செலவழிச்சு பயணம் போக மாட்டியே?' என்று வானத்தைப் பார்த்து பிரார்த்திப்பது போல பாவனை செய்து  கலாய்த்தான் சலீம்.


இருவரும் ஒருவருரையொருவர் கட்டியணைத்துக் கொண்டோம்.

'சரி நீ எங்க..?' என்று கேட்டேன்.

'அது வந்து மச்சான், ஈடீசிஎஸ் ஒபிசுக்கு போறேண்டா! வாற மாதம் ஒரு பெரிய செலவொண்ணு இருக்கு. அதால ஒரு லோன் ஒண்டு எடுக்கலாமென்றுதான்'

'அட இவனும் அங்கேதான் போகிறானா?' எனக்கு ஆச்சரிமாக இருந்தது. இது என்ன பொருத்தம்? நானும் அங்கேதான் போக வேண்டும் என்பதை அவனிடம் சொல்லுவோமா வேண்டாமா என்று யோசித்தேன். அவனாக கேட்கட்டும் என்று ஒத்திப்போட்டேன்



குவார்ட்டசிலருந்து இடறிவிழுந்தா ஸ்டேஷன். நீ ஏண்டா சலீம் ஏழரைக்குப்போற ட்ரெயினுக்கு இவ்வளவு நேரத்தோட வந்து நிற்கிறா..?' என்றேன் ஆச்சரியத்துடன்.

'அதுவா? வெளிக்கிடும்போது கண்டால் என்ட சின்ன மகள் லைலா தானும் வர அழுது என்னை விடவே மாட்டாள்றா. அதான் நேரத்தோட வந்து இங்க நிக்கிறன்.'

'ம்ம்.. அன்புத் தொல்லையோ! பிறகு இப்ப ஸ்கூல் எங்க உனக்கு?'

அவன் பதில் கூறிவிட்டு இப்போதுள்ள பாடசாலைக் கல்வியின் நிலைமை பற்றி கவலையாக ஏதேதோ பேசிப் பெருமூச்சு விட்டான்.

'சரிசரி, அதையெல்லாம் விடு. இப்ப வா ட்றெயின் வெளிக்கிடும் வரையில வேற ஏதாவது பேசிட்டிருக்கலாம்'

இருவரும் அங்கிருந்த ஒரு பெஞ்சில் அமர்ந்தோம். இப்போது பயணிகள் கூட்டம் ஓரளவு கூடி ஒரு ரயில் நிலையத்திற்குரிய ஆரவாரங்கள் எல்லாம் ஆரம்பமாகியிருந்தன.

'அதுசரி, கமல்ற படம் பாத்தியா சலீம் ? அது என்னடா அதை ஓடவிடாம உங்கட ஆக்கள் பிரச்சினை பண்ணிட்டிருக்கிறாங்க?' என்று கேட்டேன் பேச்சைத் திருப்புவதற்காக.

அதுவரை அவனது முகத்திலிருந்த புன்னகை சட்டென மறைந்து போனது. சிறிது நேரம் எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்தான் அவன்.

'என்னடா இவ்வளவு யோசிக்கிறா நீ? இதுக்குப் பதில் சொன்னாலும் உன்ட அல்லா ஏதும் தண்டிப்பாராடா?'

உடனே அவன் சத்தமாய் சிரித்து விட்டான்.



''இல்லடா தேவா! ஆனா நீ இந்தா நினைக்கிறியே, எங்கட அல்லாஹ்வைப் பத்தி ஏதோ கொடுமையா. அதைத்தான்டா நினைச்சிக் கவலைப்படுறேன்!'
'என்னடா சொல்றாய் நீ?'
'உன்ன மாதிரி முஸ்லீம் இல்லாத ஒரு சராசரி மனிசன அப்பிடியெல்லாம் நினைக்க வச்ச எங்கட ஆக்கள்ற வேலைகளை நினைச்சித்தான்டா கோவம் வருது'


'..............'


'இதை விட வறுமை, உரிமைகளை மறுக்கிறது, சிறுபான்மை என்ற புறக்கணிப்பு என்று எத்தனையோ பிரச்சினைகள் எங்கட சமூகத்துக்கு இந்த நாட்டுலயும் உலகத்துலயும் இருக்கு. அதையெல்லாம் விட்டுட்டு ஒரு சினிமாப்படத்தைப் போய் இவ்வளவு பிரச்சினை பண்ணிட்டிருக்கிறதே முதல்ல தேவையில்லாத ஒண்ணு'



'நீதான்டா சலீம் இப்பிடிச் சொல்றா. ஆனா நான் செய்தியில பேப்பர்ல இன்டர்நெற்றில எல்லாம் பார்த்தேன். படம் பார்க்கிறவங்களையே தாக்க வேணும் என்கிற மாதிரி கொலைவெறியோட எழுதிறாங்களேடா உங்கட ஆக்கள் கனபேர்?'

'மச்சான் தேவா, உங்கட ஆக்கள் எங்கட ஆக்கள் என்டெல்லாம் இல்ல. எல்லா சமூகத்திலயும் மதவெறி புடிச்சவங்க இருக்கிறது வழமைதானே. அயோத்தியில பாபர் மசூதியை உடைச்சது யார்? குஜராத்தில அட்டூழியம் பண்ணது யாரு?'


'ஆனா அதை கடுமையாக எதிர்த்தவங்கள்ல எங்கட ஆக்களும் இருந்தாங்களே மறந்திட்டியா சலீம்?'

'மறக்கல்லடா! எல்லா மக்கள்லயும் மதவெறி பிடிச்சு அலையுறவங்க கொஞ்சப் பேரும் அந்த வெறியை விரும்பாம வெறுக்கிறவங்க நிறையப்பேரும் இருக்கத்தான் செய்யிறாங்க'

'ஆனா உங்கடவங்க இதுவரைக்கும் உங்கட ஆக்கள் செய்யிற தப்புகளை எப்பவாவது கண்டிச்சிருக்கிறாங்களா சலீம்?'


'தீவிரவாதிகளை அழிக்கிறதா சொல்லிக்கிட்டு ஆப்கானிஸ்தான்ல அமெரிக்காவும் நேட்டோ படைகளும் மக்களுக்குச் செய்யிற அநியாயங்களை தெரியுமா உனக்கு?'


'நல்லாவே தெரியும். அதை ஒரு மோசமான பயங்கரவாதம் என்று உலகம் முழுக்கவுள்ள எல்லா இனமக்களும் கண்டிக்கிறாங்கதானே.. எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்யிறங்கதானே? ஆனா அதே ஆப்கானிஸ்தானில இருக்கிற தாலிபன்கள் மதச்சட்டங்கள் என்ற பேரால சொந்த மக்களுக்கே செய்யிற வன்முறைகளை நீங்க எப்பவாவது கண்டிச்சிருக்கிறீங்களா?'


'அது வந்து.. அவங்க நாட்டுல மதச்சட்டம் அப்பிடித்தான்..'

'சமாளிக்காதடா சலீம். எந்த மதமும் அடுத்தவரைத் துன்புறுத்தச் சொல்லியிருக்காது. கழுத்தை வெட்டிக் கொல்றது.. கல்லெறிஞ்சு கொல்றது.. பொம்பிளைகள்ற மூக்கை அறுக்கிறது... அசிட் வீசுறது என்று எவ்வளவு காட்டுமிராண்டித்தனம் செய்யிறாங்க.. கிட்டத்ததுல பாகிஸ்தான்ல மலாலா என்கிற பதினஞ்சு வயசு ஸ்கூல் பிள்ளைய அவள் பேஸ்புக்கில எழுதின பெண்கல்வி பத்தின கட்டுரைகளுக்காக சுட்டுக்காயப்படுத்தியிருக்கிறானுங்க தலிபான்கள். இதெல்லாம் அல்லா செய்யச் சொன்னாரா மச்சான்?'


'அதெல்லாம் பிழைதான். அதுக்காக எங்க எல்லாரையுமே பயங்கரவாதிகளா காண்பிக்கிறதும் கூடாதுதானே?'


'நீங்க சிலபேர் செய்யிற தவறுகளாலதான் அமெரிக்கா மாதிரி ஆட்களுக்கு தாங்கள் செய்யிற அட்டூழியங்களுக்கு நியாயஞ் சொல்லறதுக்கு வாய்ப்புகளை தாராளமாக குடுத்திட்டிருக்கிறீங்க தெரியுமா?'


'அமெரிக்கா முஸ்லீம்களை பயங்கரவாதிகள் என்று சொன்னா பரவாயில்ல. அவன் எப்பவுமே எங்களுக்கு எதிரிதான். ஆனா அதையே நீங்களுஞ் சொல்லலாமாடா தேவா?'

'ஓ! நீ கமல்ற படத்தைச் சொல்றியா?  நீ பாத்தியாடா சலீம், அந்தப் படத்தில அப்பிடி என்னதான்டா பிரச்சினை?'

'நானும் பார்க்கயில்ல.. வேறென்ன? அமெரிக்கன்களை நல்லவங்களாகவும் தாலிபான்களை கொடூரமானவங்களா காட்டியிருக்கிறாங்களாம் என்று கேள்விப்பட்டேன்'

'ஆனா அதுக்காக அந்தப்படத்தை மக்களைப் பார்க்க விடாம தடுக்கிறது சரியா?'
'இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகள்தான் என்று காட்டுற படத்தை தடுக்கிறது தப்பில்லையேடா தேவா?'

'அது படம் பார்த்தால்தானே தெரியவரும். யாரோ கொஞ்சப்பேர் பார்த்திட்டு தடுத்தா அது நியாயமா? முதல்ல படத்தை கொஞ்ச நாளாவது ஓடவிடணும். பொதுமக்கள் பார்க்க வேணும். படத்தோட மையக்கருத்து உண்மையில நீ சொல்றதுபோல இருந்தால் வா. அதுக்கு எதிரா நாங்களும் சேர்ந்து போராட வாறோம்'


'நீ சொல்றதும் சரிதான் தேவா. படைப்பு உரிமையை இப்பிடி எல்லாருமே ஏதாவது ஒரு காரணத்துக்காக கேள்விக்குள்ளாக்கினா பிறகு அம்புலிமாமா கதைகளை மட்டும்தான் படம் எடுக்க வேண்டியிருக்கும்.'


சிறிது நேரம் இருவரும் பேசிக்கொள்ளாமல் அவரவர் யோசனையில் ஆழ்ந்திருந்தோம். நேரம் 7:16 ஐக் காட்டியது. தூரத்து வானிலே சில மின்னல் கீற்றுகள் ஓசையின்றி வெடித்துச் சிதறுவது தெரிந்தது.


 'அதுசரி தேவா, கேட்க மறந்திட்டேனே... கொழும்புக்கு நீ எங்க போகிறா..?'
'நானா? நானும்  உன்ன மாதிரி ஈடீசீஎஸ் ஒபிசுக்குத்தாண்டா போறன். இப்பதான் நான் மெம்பரா சேரப்போறன். எனக்கும் பிறகு லோன் தேவைப்படும்தானே..?'

'அதுசரி, மெம்பரா சேர்றதுக்காக ஏண்டா கொழும்புக்குப் போகிறா..? அநியாயச் செலவேடா'

'போகாம எப்பிடிடா சேர்றது..? இங்க மெம்பர்ஷிப் அப்ளிகேஷன் போர்ம் கூட கிடையாது?' என்றேன், அப்பாவிபோல முகத்தை வைத்துக்கொண்டு.

'அடப்பாவி! நீ உன்ட ஒபிஸ்ல யாரிட்டயாவது கேட்டிருந்தா தந்திருப்பாங்களேடா..? அதிருக்கட்டும் நீ அதுக்காக மட்டுந்தான் கொழும்புக்குப் போறியா.. சொல்லு?' என்று கேட்டான் சலீம் தீர்க்கமாக.
'இல்ல படம் பார்க்கத்தான் முக்கியமாக போகின்றேன்' என்று எப்படி அவனிடம் சொல்ல முடியும்?

'ஓம்டா! ஏண்டா கேட்கிறாய்?'  என்றேன்.

'அப்படியெண்டா கொஞ்சம் பொறு!' என்றபடி தனது செல்போனில் இலக்கங்களை ஒற்றி காதுக்குள் வைத்தபடி ஒரு ஓரமாய் நடந்து சென்று யாருடனோ பேசிக் கொண்டிருந்தான் சலீம்.

அவன் என்ன செய்யகின்றான் என்று புரியவில்லை எனக்கு. மெல்ல மெல்ல பயணிகளும் வழியனுப்பிகளும் மேடைக்கு வந்து கொண்டிருந்தார்கள். புகையிரத நிலைய அதிபர் அலுவலகத்திலிருந்து வெளியே வந்துநின்று பொதிகளேற்றப்படும் பணிகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்.


அப்போது ஒரு சிறுவன் ஓடிவந்து, 'வாப்பா இந்தாங்க, உம்மா தந்தாங்க' என்று ஒரு பழுப்புநிற கவரைத் சலீமிடம் தந்து விட்டுப்போக அவனைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து அனுப்பி வைத்தான் தேவா.

'வாப்ப்ப்.....பா! நான் சொன்ன கன் வாங்கிட்டு வாங்க!'

'யாருடா அது? உன்ட மகனா.. முந்திப் பாத்ததுக்கு அப்பிடியே இருக்கான்?'

'அடேய், இவன் என்ட ரெண்டாவது பொடியண்டா! சரி, பிடி இதை!' என்று அந்த பழுப்பு நிற கவரை என்னிடம் நீட்டினான்.

'அப்பிடியா..? அதுசரி இது என்னடா கவர்ல..?

'சரி, இப்ப நான் சொல்றபடி கேளு தேவா! இது குவார்ட்டஸ்ல எனக்கிட்ட இருந்த ஈடிசிஎஸ் மெம்பர்ஷிப் அப்ளிக்கேஷன் போர்ம்.   இதை இங்கேயே நிரப்பித்தந்துட்டு நீ வீட்டுக்குப்போ! பெரிசா விபரம் ஒண்ணும் தேவையில்ல. நான் கொண்டுபோய் ஒப்படைக்கிறன். எனக்கு அங்க வேண்டிய ஆள் உதவியெல்லாமிருக்கு. உன்ட விபரமும் சைனும் இருந்தாலே போதும். மற்றதையெல்லாம் நான் பார்த்துக்கொள்றன்.. சரிதானே?' 


'சலீம், கொஞ்சமிரு!'

அவன் என்னைப் பேசவே விடவில்லை.

'டேய் நீ தனிச் சம்பளக்காரன். நீ ஏன்டா பாவம் சும்மா இதுக்காக கொழும்புக்கு வந்து  மெனக்கெடப்போறாய்...? கெதியாய் நிரப்பு இன்னும் பத்து நிமிஷம்தான் இருக்கு வா!' என்று உரிமையோடு பயணிகள் இளைப்பாறும் அறைக்கு என்னை அவன் இழுத்துக்கொண்டு சென்றபோது எனக்கு முகத்தில் ஈயாடவில்லை.


-மூதூர் மொகமட் ராபி