Tuesday, July 22, 2014

ஃபீதாயின் ரச்சேல்



மெரிக்க இராணுவம் வானத்திலிருந்து ஈராக் மக்களைப் படுகொலை செய்யத் தொடங்குவதற்கு நான்கு நாட்கள் முன், அந்தக் கோழைத் தனத்தை நிராகரிக்கும் வீரமாக, அந்த ஆக்கிரமிப்புக்கு எதிரான தோழமையாக, பாலஸ்தீன மண்ணில் ரத்தம் சிந்தினாள் ஒரு கல்லூரி மாணவி.

மார்ச் 16. பாலஸ்தீன மக்களின் தாயகத்தை ஆக்கிரமிக்கும் யூதவெறி பிடித்த இசுரேல் இராணுவத்தின் புல்டோசர், ரச்சேல் கோரி என்ற அந்த வீராங்கனையின் மீது ஏறி இறங்கியது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க  அவற்றின் மீது சொடுக்கவும்]
ரச்சேல், சர்வதேச ஒற்றுமை இயக்கம் என்ற அமைப்பின் உறுப்பினர். பாலஸ்தீனத்தை ஆக்கிரமிக்கும் இசுரேல் அரசையும் அதற்குத் துணை நிற்கும் அமெரிக்காவையும் எதிர்த்துப் போராடும் இந்த அமைப்பின் பெரும்பாலான உறுப்பினர்கள் அமெரிக்க பிரிட்டிஷ் இளைஞர்கள்.


ரச்சேல் கோரி


ரச்சேல், சர்வதேச ஒற்றுமை இயக்கம் என்ற அமைப்பின் உறுப்பினர் ரச்சேல் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவி. “பயங்கரவாதத்துக்கெதிரான போர்” என்ற பெயரில் அமெரிக்கா நடத்தி வரும் இராணுவ வெறியாட்டங்களை எதிர்த்துப் போராடுவதில் அவள் முன்னணியில் நின்றதாக ரச்சேலை நினைவு கூர்கிறார்கள் அவளது ஆசிரியர்கள்.

குறிப்பாக பாலஸ்தீன மக்களின் துயரத்தைத் தன் சொந்தத் துயரமாகவே கருதினாள் ரச்சேல். ஈராக்கை அமெரிக்கா ஆக்கிரமிக்கும் தருணத்தில் உலகின் கவனம் அங்கே திரும்பியிருக்கும் போது, பாலஸ்தீனத்தை இசுரேல் விழுங்கி விடும் என்று அவள் அஞ்சினாள்.


ரச்சேல் கோரி


ரச்சேலும் அமெரிக்க பிரிட்டிஷ் இளைஞர்கள் ஏழு பேரும் பாலஸ்தீனத்திற்கு வந்து விட்டனர்.
அதைத் தடுப்பது தம் கடமை என்று கருதிய ரச்சேலும் அமெரிக்க பிரிட்டிஷ் இளைஞர்கள் ஏழு பேரும் இரண்டு மாதங்களுக்கு முன்பே பாலஸ்தீனத்திற்கு வந்து விட்டனர். பாலஸ்தீனத்தில் இசுரேல் அன்றாடம் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் காசா பகுதியில், ரஃபா எனும் சிறு நகரில் பாலஸ்தீன ஏழை மக்களின் குடும்பங்களுடன் சேர்ந்து வாழ்ந்தது அந்த இளைஞர் குழு.
திடீர் திடீரென இசுரேலிய இராணுவத்தின் புல்டோசர்கள் வருவதும் அவற்றை மறித்து நின்று போராடுவதும் ரச்சேல் குழுவினரின் அன்றாட நடவடிக்கையாகி விட்டது. அத்தகைய சம்பவம் ஒன்றினைத் தனது பெற்றோருக்கு எழுதிய கடிதத்தில் விவரிக்கிறாள் ரச்சேல்.


“நாங்கள் புல்டோசரை மறித்து நின்றோம். மண்வாரியில் எங்களை அள்ளி வீசினான் ஓட்டுனர். நாங்கள் வீட்டின் ஒரு முனையில் கிடந்தோம். மறுபாதியை இடித்துத் தள்ளியது புல்டோசர்.”

மார்ச் 16-ம் தேதி நடந்ததும் அதுதான். வெறியுடன் வந்து கொண்டிருந்தது இராணுவத்தின் புல்டோசர். அதன் பாதையில் மண்டியிட்டு அமர்ந்திருந்தாள் ரச்சேல். “நிறுத்து…நிறுத்து” என்று ரச்சேலின் தோழர்கள் கத்தினார்கள். பயனில்லை. ரச்சேலின் தலையைப் பிளந்தபின்தான் அது நின்றது.

“நிராயுதபாணிகளான பாலஸ்தீன மக்களைச் சுட்டுத் தள்ளுகிறது இசுரேல் இராணுவம். ஆனால் நிராயுதபாணியான ஒரு அமெரிக்கக் குடிமகனைச் சுட்டுத் தள்ளும் தைரியம் அவர்களுக்கு இருக்குமா?” என்று தன் பெற்றோருக்கு எழுதிய கடிதமொன்றில் குறிப்பிடுகிறாள் ரச்சேல்.


ரச்சேல் கோரி தெரு

ரச்சேல் கோரி தெரு (பாலஸ்தீனத்தின் ரமலா நகரில் ரச்சேல் பெயரில் தெரு)


பாசிஸ்டுகளை எடை போடத் தெரியாத அந்தப் பெண்ணின் வெகுளித்தனம் நம்மைக் கண்கலங்கச் செய்கிறது. வெள்ளைத் தோலானாலும், அமெரிக்கக் குடிமகனானாலும் தனது ஆதிக்கத்தை எதிர்த்து நிற்போர் யாரையும் பாசிஸ்டுகள் விட்டு வைப்பதில்லை என்ற உண்மை புரியும் தருணத்தில், புல்டோசரின் கொலைக்கரங்கள் அவளை நெருங்கிய அந்தத் தருணத்தில் ரச்சேல் ஓடவில்லை. மரணத்தின் தறுவாயில் தான் உணர்ந்து கொண்ட உண்மையை அமெரிக்க மக்கள் அனைவரும் உணர்ந்து கொள்ளட்டும் என்பதற்காக அவள் உயிர் விட்டாள்.


ரச்சேல் ஒரு மனிதாபிமானியா, வீராங்கனையா, தியாகியா, அல்லது போராளியா? அவள் ஒரு போராளி. ஃபிதாயீன்!


ஃபிதாயீன் என்ற அரபிச் சொல்லின் பொருள் தற்கொலைப்படை வீரன். பாலஸ்தீனத்தின் மீசை அரும்பாத இளைஞர்களும் இளம் பெண்களும் தம் உடலையே வெடிமருந்து கிடங்காக்கி வெடிக்கச் செய்து இசுரேலை நிலைகுலையச் செய்கிறார்கள். அவர்களுடைய இலக்கு யூதவெறி அரசு.
ரச்சேலின் இலக்கோ அமெரிக்க சமூகத்தின் அலட்சியம்; உலக மக்களின் மவுனம். வெடிமருந்துகளால் தகர்க்க முடியாத இந்த ‘எதிரியை’ முறியடிக்க அந்த அமெரிக்க மாணவி கண்டுபிடித்த அதி நவீன ஆயுதம் ரத்தம்.

“நாம் வாழும் வாழ்க்கை இந்தக் குழந்தைகளுக்குத் தெரிந்தால்…” -  ரச்சேலின் கடிதம்.

இசுரேல் இராணுவத்தால் கொல்லப்படுவதற்குச் சில நாட்கள் முன்னால் ரச்சேல் தன் பெற்றோர்களுக்கு எழுதிய கடிதத்திலிருந்து சில பகுதிகள் :


சிண்டி, கிரெய்க் கோரி


2007-ம் ஆண்டு நடந்த “ஆக்கிரமிப்பை முடிவுக்கு கொண்டு வா” ஆர்ப்பாட்டத்தில் ரச்சேலின் பெற்றோர். சிண்டி, கிரெய்க் கோரி


நான் பாலஸ்தீனத்துக்கு வந்து சரியாக இரண்டு வாரங்களும் ஒரு மணி நேரமும் ஆகி விட்டது. ஆனால் இங்கே நான் காண்பதை உங்களுக்கு விவரிக்க, அதாவது அமெரிக்காவுக்குப் புரிய வைக்க வார்த்தைகள் கிடைக்காமல் தவிக்கிறேன்.

குண்டுகளால் துளைக்கப்பட்ட வீட்டுச் சுவர்கள், கழுகுப் பார்வையால் கண்காணிக்கும் இராணுவம் – இவையிரண்டும் இல்லாத ஒரு வாழ்க்கையை இங்குள்ள குழந்தைகள் வாழ்ந்ததேயில்லை. இருப்பினும் “வாழ்க்கை என்பது எல்லா இடங்களிலும் இந்த மாதிரி இல்லை” என்பதை இங்குள்ள சின்னஞ்சிறு பிள்ளைகள் கூடப் புரிந்து வைத்திருக்கிறார்கள்.

நான் இங்கே வந்து இறங்குவதற்கு இரண்டு நாட்கள் முன் ஒரு 8 வயதுச் சிறுவனை இசுரேலிய இராணுவம் சுட்டுக் கொன்று விட்டது. “அவன் பெயர் அலி” என்று என்னிடம் கிசுகிசுக்கிறார்கள் இங்குள்ள குழந்தைகள். “ஷரோன் யாரு – புஷ் யாரு” என்று அரபியில் அவர்கள் கேட்க, “ஷரோன் கிறுக்கன் – புஷ் கிறுக்கன்” என்று நானும் எனக்குத் தெரிந்த அரபு மொழியில் பதில் சொல்கிறேன். அரபு மொழியை இப்படித்தான் எனக்குக் கற்றுத் தருகிறார்கள் இந்தச் சிறுவர்கள். உலக அரசியலின் அதிகாரம் எப்படி இயங்குகிறது என்பதைப் பற்றி நான் முன்னர் புரிந்து வைத்திருந்ததைக் காட்டிலும் இங்கே இருக்கும் 8 வயது வாண்டுகள் தெளிவாக அறிந்திருக்கிறார்கள்.


புத்தகங்கள், கருத்தரங்குகள், விவாதங்கள், செய்திப் படங்கள் போன்ற பல வழிகளில் பாலஸ்தீனத்தைப் பற்றி நான் சேகரித்த அறிவு அனைத்தையும் விஞ்சுகிறது இங்குள்ள எதார்த்தம். நேரில் பார்த்தாலொழிய நீங்கள் இதைப் புரிந்து கொள்ளவே முடியாது; ஒருவேளை நேரில் வந்து அனுபவித்தாலும் முழுமையாகப் புரிந்து விட்டதாக நான் சொல்லிக் கொள்ள முடியாது.
என்னையே எடுத்துக் கொள்ளுங்கள். இங்குள்ள கிணறுகளை இடித்தாலும் தண்ணீர் வாங்கிக் குடிக்க என்னிடம் பணம் இருக்கிறது; நினைத்தால் நான் உடனே அமெரிக்காவுக்குத் திரும்பி விடலாம்; என் குடும்பத்தினர் யாரையும் இராணுவம் ராக்கெட் வீசிக் கொன்றதில்லை; எனக்கொரு வீடு இருக்கிறது; நான் ஆற அமரக் கடலைக் கண்டு ரசித்திருக்கிறேன்; பள்ளிக் கூடத்திலிருந்து திரும்பும் வழியில் இராணுவத்தால் கொல்லப்படுவேனோ என்ற பயமின்றி சந்தோஷமாக நான் வீடு திரும்பியிருக்கிறேன்.

ஒலிம்பியா ஆர்ப்பாட்டம்


அமெரிக்காவின் ஒலிம்பியா நகரில் அமைதி ஆர்ப்பாட்டம்


எனவேதான் இக்குழந்தைகள் வாழும் உலகத்திற்குள் கால் வைத்த மறுகணமே இந்தக் கொடூரங்களைக் கண்ணால் கண்ட மறுகணமே என் ரத்தம் கொதிக்கிறது. “ஒருவேளை ஒரு பாலஸ்தீனச் சிறுவன் அமெரிக்கா எனும் என்னுடைய உலகத்தை நேரில் வந்து பார்த்தால் அந்தப் பிஞ்சு மனம் எப்படித் துடிக்கும்” என்ற கேள்வி என்னை வாட்டுகிறது.

இவர்களைப் போலன்றி நான் வேறொரு வாழ்க்கையை வாழ்ந்து பார்த்திருக்கிறேன். அமைதியான இடத்தில் வசித்திருக்கிறேன். கிணற்றை இடித்து குடிக்கும் தண்ணீரை இராணுவம் பறித்து விடும் என்று நான் கற்பனையில் கூட அஞ்சியதில்லை; இரவு தூங்கிக் கொண்டிருக்கும் போது வீட்டின் சுவர்கள் உட்புறமாக இடித்துத் தள்ளப்பட்டு நான் பதறி விழித்ததில்லை; தனது சொந்தங்களை இராணுவத்திற்கு காவு கொடுத்த யாரையும் நான் அமெரிக்காவில் சந்தித்ததில்லை; என்னுடைய வீட்டை நாற்புறமும் இராணுவக் கோபுரங்கள் கொலைவெறியுடன் குறிபார்க்கவில்லை.

ஆனால், இந்த பாலஸ்தீனச் சிறுவர்களோ நாம் வாழும் அமைதியான வாழ்க்கையை அறிந்ததே இல்லை. நினைத்துப் பாருங்கள். உங்கள் குழந்தைப் பருவம் முழுவதும் உயிர் வாழ்வதற்காக மட்டுமே நீங்கள் போராடிக் கொண்டிருந்தால் எப்படி இருக்குமென்று ! உலக வல்லரசின் ஆதரவுடன், உலகின் நான்காவது பெரிய இராணுவம் உங்களையும் உங்கள் வீட்டையும் துடைத்தெறிவதற்கு மூர்க்கத்தனமாக முனைந்து கொண்டேயிருக்க, அதையெதிர்த்து நீங்கள் போராடிக் கொண்டேயிருக்க… வாழ்க்கை என்பதே இதுதான் என்றால்…


அதனால்தான் எனக்கு இப்படித் தோன்றுகிறது. இந்த பாலஸ்தீனக் குழந்தைகள் அமெரிக்கா எனும் என்னுடைய உலகத்தை உண்மையிலேயே நேரில் பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்ற கேள்வி என்னை வாட்டுகிறது.


நன்றி : ஃபிரண்ட்லைன் 11.04.2003

கோவிலுக்கு வெளியே இருப்பவர்களுக்குத்தான் பக்தி அதிகம் !



kamal_400
மலின் 'உன்னை போல் ஒருவன்' படத்தை சமீபத்தில் தான் டிவியில் பார்க்க நேர்ந்தது, இந்தப் படத்தை பார்க்கும் வரை கமலின் மீது ஓரளவாவது அபிமானம் வைத்து  இருந்தேன், அது சுக்குநூறாக சிதறிப்போனது இப்போது. அந்த படத்தை பார்த்த உடன் ஏற்பட்ட உள்ள குமுறலை எங்காவது கொட்டித் தீர்க்க வேண்டும் என்று தோன்றியது. பின்னர், அந்தப் படம் வெளி வந்து வெகு நாளாகிவிட்டது; இத்தனை காலம் கழித்து இந்த விமர்சனம் தேவையா? என்ற எண்ணம் எழுந்தது. ஆனாலும் இன்னொரு எண்ணம் எழுந்து இதை எழுத வைத்துவிட்டது. இந்த ஒரு படத்தில் மட்டும் அல்ல, இதற்கு முன்னர் வந்த படங்களிலும் (உதாரணம்: ஹேராம்) இஸ்லாமியர்களின் மீது அவர் குற்றச்சாட்டுகளை அடுக்கி இருக்கிறார். இனிமேலும் அடுக்குவார் (விஸ்வரூபம்). அவரைப் பொறுத்தவரை சினிமா என்பது ஒரு பதிவு செய்யப்பட்ட ஆவணம். இதை இனி எத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும் அது சொல்ல வந்த காரணத்தை முழுமையாக சொல்லிக்கொண்டே இருக்கும். ஆதலால் அதே அடிப்படையில், கண்டனம் காலம் கடந்த கண்டனம் என்றாலும், பதிவு செய்வது முக்கியமாகப் பட்டது.
 
 
சரி இந்த படம் அப்படி என்னதான் சொல்லவருகிறது? தீவிரவாதத்தை யார் செய்ய வேண்டும் என்பதை இந்தப்படம் சொல்ல வருகிறது. அதாவது யார் வன்முறையை கையில் எடுத்தால் அது தீவிரவாதம், யார் வன்முறையை கையில் எடுத்தால் அது வதம் என்பதையே இப்படம் கயமைத்தனத்துடன் அழுத்தமாகச் சொல்கிறது.
 
 
இந்தப் படத்தைப் பற்றி பேசுமுன் கமலின் நியாயம் எந்த கொள்கையை அடிப்படையாகக் கொண்டது என்பதைப் பார்க்க கீற்று இணைய இதழில் திரு.சுப வீரபாண்டியன் எழுதிய சிவனின் அருளும், ராமனின் வாளும் என்ற கட்டுரையைப் படிக்க வேண்டும்.
 
அதற்காக கட்டுரையின் முக்கிய பகுதியை இங்கே கொடுத்துள்ளேன்.
 
 
"திருவிளையாடல் புராணத்தில் காணப்படும் தருமிக்குப் பொற்கிழி வழங்கிய கதை, பிட்டுக்கு மண் சுமந்த கதை, ஒரு ஏழைப் பாணனுக்காக விறகு சுமந்த கதை முதலான பல கதைகளைத் தமிழ்ப் புலவர்கள் மேடைகளிலும், ஏடுகளிலும் எடுத்துக் காட்டுவர். ஆனால் மகா பாதகம் தீர்த்த கதை என்று ஒரு கதை அதே திருவிளையாடல் புராணத்தின் 12 ஆவது படலமாக இடம்பெற்றுள்ளது. அதனைப் புலவர்களும், ஆன்மீகவாதிகளும் பல நேரங்களில் வெளிப்படுத்துவதில்லை. காரணம் அந்தக் கதை அவ்வளவு மோசமானது.
 
 
குலோத்துங்க பாண்டியன் ஆட்சிக் காலத்தில், அவந்தி நகரத்தில் வாழ்ந்த ஒரு பார்ப்பனரின் மனைவி மிகவும் அழகானவள். அந்தப் பெண்ணுக்கும், அவள் கணவனுக்கும் பிறந்த மகன் தாயின் மீதே விருப்பம் கொள்கிறான். தாயும் அதற்கு இணங்குகிறாள். இருவரும் உறவு கொள்கின்றனர். அதனை அறிந்த தந்தை எதிர்க்கின்றார். அவரை அவர் மகனே வெட்டிக் கொன்றுவிடுகிறான். அதனால் அவனுக்குப் பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டுவிடுகிறது. தந்தையைக் கொன்றதால் அந்தப் பாவம் ஏற்படவில்லை. பார்ப்பனராகிய ஒருவரைக் கொன்றதே பாவத்திற்குக் காரணம் என்கிறது திருவிளையாடல் புராணம். பிறகு அவன் தாயோடு வேற்றூருக்குச் செல்கின்றான். வழியில் அவன் தாயையும், அவனுடைய பொருள்களையும் கள்வர்கள் கவர்ந்து கொள்கின்றனர். இறுதியில், அவன் ஒரு பார்ப்பனன் என்பதால், அவன் செய்த பாவங்களை எல்லாம் மன்னித்து இறைவன் அவனுக்கு அருள் பாலிக்கின்றார்.
 
 
இதுதான் திருவிளையாடல் புராணம் கூறும் கதை. இக்கதை 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பரஞ்சோதி முனிவர் எழுதியுள்ள திருவிளையாடல் புராணத்தில் இடம் பெற்றுள்ளது. அவருக்கு மூன்று நூற்றாண்டுகள் முன்னால் வாழ்ந்த பெரும்பற்றப் புலியூர் நம்பி எழுதியுள்ள திருவிளையாடல்
புராணத்திலும் இதே கதை இதே வடிவில் இடம் பெற்றுள்ளது.
 
 
இப்புராணக் கதை இப்படி இருக்க, நாம் அனைவரும் அறிந்த ராமாயணக் கிளைக்கதை ஒன்றை இங்கு நினைவுகூர்ந்து, இதனுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும். வால்மீகி எழுதிய
ராமாயணத்தில் உத்தரகாண்டம் என ஒரு காண்டம் உள்ளது. அக்காண்டத்தின் 73 ‡ 76ஆம் சருக்கங்களில் சம்பூகன் பற்றிய ஒரு செய்தி உள்ளது.
 
 
ராமர் அரண்மனையில் மன்னராக வீற்றிருக்கும் போது, வயதான பார்ப்பனர் ஒருவர் உயிரிழந்த தன் மகனின் உடலைத் தூக்கிக் கொண்டு அங்கு வருகின்றார். 14 வயது கூட ஆகாத தன் மகன் இறந்துவிட்டான் என்று கூறி கதறி அழுகின்றார். அதுகண்ட ராமரும், மற்றவர்களும் பதறுகின்றனர். ' ராமா, உன் ஆட்சியில் ஏதோ மகாபாதகம் நடந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த தேசத்தில் குழந்தைகளுக்கு மிருத்யுபயம் உண்டாகுமா? ' என்று அந்தப் பார்ப்பனர் குரல் எழுப்புகின்றார். அப்போது அங்கிருந்த நாரதர், ' உன் ராச்சியத்தில் யாரோ ஒரு சூத்திரன் தவம் செய்கிறான். இந்தப் பிராமணனின் மகன் அகால மரணமடைந்ததற்கு அதுவே காரணம் ' என்று தன் ஞான திருஷ்டியால் கண்டுபிடித்துச் சொல்கிறார்.
 
 
உடனே தன் புஷ்பக விமானத்தை வரவழைத்து, அதில் ஏறி ஆயுத பாணியாக ராமர் புறப்படுகின்றார். விந்திய பர்வதத்திற்கு அடுத்த சைவலம் என்ற மலைச்சாரலில், ஒரு ஏரிக்கு அருகில், சம்பூகன் என்னும் ஒரு தபஸ்வி ஒரு மரத்தின் கிளையில் தலைகீழாய்த் தொங்கியபடி கடுந்தவம் புரிந்து கொண்டிருக்கிறார். அவன் அருகில் சென்ற ராமர், ' நீ பிராமணனா, சத்ரியனா அல்லது நான்காம் வருணத்தைச் சேர்ந்தவனா? நிஜத்தைச் சொல்' என்று கேட்க, அவன், 'மகாராஜா, நான் நான்காம் வருணத்தைச் சேர்ந்தவன். சம்பூகன் என்று எனக்குப் பெயர்' என விடையளிக்கிறான். உடனே ராமர் வேறு எது குறித்தும் கேட்காமல், மின்னல் வேகத்தில் உறையிலிருந்து தன் வாளை உருவிச் சம்பூகனின் தலையை வெட்டி விடுகிறார். உடனே தேவர்கள் அனைவரும் 'நல்லது நல்லது ' என்று ஆர்ப்பரித்து மகிழ்கின்றனர்.
உத்தரகாண்டச் செய்திகளும், அதில் இடம் பெற்றுள்ள சில வடமொழிச்  சொற்களும், சங்கீத பீஷ்ம, சங்கீத விமர்சகாச்சாரிய, அபிநவ த்யாகப்ரஹ்ம, ஸ்ரீ உ.வே.சி.ஆர். ஸ்ரீனிவாச அய்யங்கார், பி.ஏ., அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டுள்ள உத்தரகாண்டம் தமிழ் வசனம் என்னும் நூலில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.
 
 
இப்போது இரு கதைகளிலும் இடம் பெற்றுள்ள மகாபாவங்களை நாம் ஒப்பிட்டுப் பார்க்கலாம். தாயை மணந்து, தந்தையைக் கொன்ற மகாபாதகம் இறைவனால் மன்னிக்கப் படுவதோடு, அவனுக்கு இறைவன் அருளும் கிடைக்கிறது. ஆனால் எந்தக் குற்றமும் புரியாமல் தவம் புரிந்த சம்பூகனைக் கடவுளின் அவதாரமான ராமரோ வாளினால் வெட்டி வீழ்த்துகிறார். எத்தனை பெரிய கயமைத்தனங்களைச் செய்தாலும், அவன் பார்ப்பனனாக இருந்தால் இறைவன் அருள் பாலிப்பார்; எந்தக் குற்றமும் செய்யவில்லை என்றாலும், ஒரு சூத்திரன் தவம் செய்தால் இறைவன் அவன் தலையைக் கொய்து விடுவார் என்பதுதானே இவ்விரு கதைகளும் நமக்குக் கூறும் நீதி?
இவற்றை எல்லாம் கடந்த எழுபது, எண்பது ஆண்டுகளாகத் திராவிட இயக்கம் மக்களிடம் விரிவாக எடுத்துச் சொல்லி வருகிறது. இன்னும் தொடர்ந்து சொல்ல வேண்டிய கடமையும், தேவையும் நமக்கு இருக்கின்றன."
 
இதுதான் கட்டுரையின் கரு...
 
மேலே விவரிக்கப்பட்ட சம்பவமும் அதற்கு வழங்கப்பட்ட நீதியும் போதும். படத்தில் கமல் எந்த நீதியின் அடிப்படையில் வதம் செய்கிறார் என்று புரிந்துகொள்ள.இந்த படத்தில் தன் கண்முனே பாலியல் பலாத்காரத்தால் ஒரு பெண் பாதிக்கபட்ட காட்சியை பற்றி கமல் உருக உருக விவரித்து பின்னர் அந்த நிகழ்ச்சியை நேரில் பார்த்த ஒருவன், அதைப் பார்த்து பொறுத்துக் கொண்டு எவ்வாறு சும்மா இருக்க முடியும் என்று கேள்வி வேறு கேட்டு தீவிரவாதிகளை தான் வேட்டையாட வந்தற்கான முக்கிய காரணமாக அதைச் சொல்லுவார்! ஆனால் இதில் கூத்து என்னவென்றால், அதே சம்பவம் ஒருவனின் மனைவிக்கு நேர்ந்து அதுவும் கமலால் விவரிக்கப்பட்ட அதே முறையில் கொல்லபடுகிறாள்; அதைப் பார்த்த கணவன் அவளை மானபங்கப்படுத்தி கொன்றவர்களை பழி வாங்கவே அவன் தீவிரவாதியாகிப் போனதாக சொல்லுகிறான். அவனை கொல்லத்தான் கமல் அந்தக் கதையை சொல்லுகிறார். மேலும் அவனின் பக்கம் உள்ள நியாயத்தை அசிங்கப்படுத்தும் விதமாக அந்த படத்தில் வரும் ஓர் இந்து ஆயுத வியாபாரி வக்கிரமாக "அதுதான் அவ போனா என்ன? மற்ற ரெண்டு பேர் இருக்காள்கள்ல" என்று சொல்லி அவனின் அத்தனை உணர்வுகளையும், கேலிக்குரியதாக ஆக்கி, இறந்து போனது ஒரு பெண், அதுவும் அவள் பாலியல் வல்லுறவு ஆளாகி  கொல்லப்பட்டிருக்கிறாள் என்பதை எல்லாம் தாண்டி, 'அவள் வெறும் ஒரு போகப்பொருள்; அவளுக்குப் பதிலாக, வேறு ஒருத்தி இருந்தால் அதாவது அவனின் 'உடல் பசியைத் தீர்க்க' அப்போது அவள் மரணத்தால் அவனுக்கு எந்த இழப்பும் இல்லை' என்பதைப் போல் ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி, அவனுடைய மற்ற மனைவிகள் இருக்கும்போது அவன் தீவிரவாதியான செயல் தேவையற்றது என்று சொல்ல வருகிறார்.
 
 
அது மட்டும் அல்ல; இஸ்லாமியர்கள் ஒரு மனைவி போனால் எளிதாக வேறு ஒரு பெண்ணை மணந்து கொள்வார்கள். அவர்களைப் பொறுத்தவரை பெண் ஒரு பொருட்டே அல்ல என்று மற்ற மதத்தினர் முன் தவறான கண்ணோட்டத்தை உண்டாக்கவே (ஏற்கனவே அப்படி ஒரு கண்ணோட்டம் ஊடகங்களால் உண்டாக்கப்பட்டுவிட்டது வேறு விஷயம்) இப்படி ஒரு காட்சி.
 
 
மேலும் இதில் கமல் சொல்லவரும் நீதி என்ன? இப்படி மதவெறியும், காமவெறியும், கொலைவெறியும் பிடித்தவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் நீதி கிடைக்காத காரணத்தாலும் நீதி தாமதமாக கிடைக்கின்ற காரணத்தாலும் உணர்ச்சிவசப்பட்டு பதிலுக்கு பழி வாங்கப் புறப்படுவதினாலேயே சட்டம் ஒழுங்கு கெடுகிறது, அதிலும் அவன் இஸ்லாமியனாக இருந்தால் அது தீவிரவாதமாகிவிடுகிறது என்றுதான் சொல்லவருகிறார், சரி இதிலும் ஒரு பகுதி நியாயம் இருப்பதாகவே வைத்துக் கொள்வோம்! அதாவது ஒருவன் பாதிக்கப்பட்டாலும் அவன் சட்டத்தின் மூலமே அவனுக்கான நீதியைப் பெறவேண்டும் என்பதை வலியுறுத்தி இருந்தாலும் சரி!  இங்கு அதுவும் இல்லை.. நேரிடையாக பாதிக்கப்பட்ட  ஒருவனே பதிலுக்கு பழி வாங்குவது தவறு எனும்போது, எவனோ ஒருவன் திடீர் என்று தோன்றி, பாதிக்கப்பட்டவர்களையே (பின்னால் இப்படிப்பட்ட கருத்துக்கள் எழும் என்று தெரிந்தே ஒரு இஸ்லாமிய போலீஸ் அதிகாரியை வைத்து கொலை செய்ய வைத்தாலும், கொலைக்கான சூத்திரதாரி என்னவோ கமலாகவே இருக்கிறார். அவர்களை அழித்து தான் அவதாரம் என்பதை உறுதிப்படுத்த, அழித்து முடித்தவுடன், பின்னணி இசையில் சம்பவாமி யுகே யுகே என்று ஒலிக்கிறது) கொலை செய்ய வைப்பது எந்த விதத்தில் நியாயம்?
 
 
இந்திய தண்டனை சட்டத்தைப் பொறுத்தவரை ஒருவன் குற்றம் செய்திருந்தாலும் அவன் எந்த காரணத்தால் எந்த சூழ்நிலையில், அந்த குற்றத்தைச் செய்தான் என்பதைப் பொறுத்தே அவனுக்கான தண்டனை தீர்மானிக்கபடுகிறது. பல வேளைகளில் அதை தீர்மானிக்க காலதாமதமும் ஆகிறது. அதனாலேயே அதை ஒப்புக்கு சப்பாக ஆகிவிட்டு அவரவர்களுக்கு மனதில் தோன்றிய முறையில் அல்லது தன்னுடைய மத நம்பிக்கையின் அடிப்படையில், தான்தோன்றித்தனமாக தனக்கு சரியென பட்ட காரணத்தை மட்டும் முன்னெடுத்து வைத்துவிட்டு தண்டனை கொடுத்து விட முடியுமா என்ன? அரசு இயந்திரம் அப்படித்தான் கால தாமதம் செய்கிறது. ஆனால் அப்படி ஆகும் காலதாமதத்தால் எத்தனை இஸ்லாமிய மற்றும் இஸ்லாமியரல்லாத இளைஞர்கள் தீவிரவாதிகள், தேசவிரோதிகள், இந்திய இறையாண்மைக்கு எதிரானவர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு சிறையில் வாடிக்கொண்டு இருக்கிறார்கள் தெரியுமா? உங்களுடைய Point of View (விருமாண்டி) யுக்திப்படி, அவர்களுடைய வாழ்வின் இழந்த பகுதியை யார் தருவார்கள்? இதே உங்களுடைய விருமாண்டி படத்தில் Point of View யுக்தியை பயன்படுத்தி இந்த பக்கம் இருந்து, அந்த பக்கம், அந்த பக்கம் இருந்து இந்த பக்கம் என்று சூழ்நிலைகளை விளக்கிக் கூறி, மரணதண்டனையே கூடாது என்று அழுத்தமாகக் கூறினீர்கள். அதன்பிறகு அது படத்தில் மட்டுமே பதியப்பட்ட கருத்தாக மட்டும் இல்லாமல் உங்களுடைய சொந்த கருத்தாகவே பல இடங்களில் பதிவு செய்தீர்கள்.
 
அதே போல (அன்பே சிவம், தசாவதாரம், குருதிபுனல்) பல படங்களில் நீங்கள் சொன்ன பல கருத்துக்கள் உங்கள் தனிப்பட்ட சித்தாந்த நிலைப்பாடாகவும், உங்கள் கருத்தாகவுமே நினைத்து வரவேற்கப்பட்ட போது, அதை ஆமோதித்தீர்கள். இதை நான் ஏன் சொல்லவருகிறேன் என்றால், இதற்குப் பின்னால் பல அறிவுஜீவிகள் படத்தை படமாக மட்டுமே பார்க்கவேண்டும் என்று வாதிட வரலாம். அதற்காகவே இதை இங்கே தெளிவுபடுத்த விரும்புகிறேன். எந்த ஒரு படத்திலும் நீங்கள் விரும்பாத ஒரு கருவை வைத்துவிட முடியாது. அதே அடிப்படையில் இது ஒரு ஹிந்தி படத்தின் தழுவல் என்றாலும், இதுவும் நீங்கள் விரும்பிய ஒரு கரு தான்.
 
மற்ற எல்லோருக்கும் நீங்கள் மெல்ல இயங்கும் அரசு இயந்திரத்தின் மெத்தனப்போக்கையும், மெல்ல நடைபெறும் விசாரணைகளால் மக்களின் வரிப்பணம் வீணாவதை கண்டிப்பதைபோல தோன்றினாலும் உண்மை அதுவல்ல. எல்லா பஜ்ஜியும் கடலைமாவுதான். ஆனாலும் வாழைக்காய், வெங்காயம் என்று உள்ளே உள்ளதுதான் முக்கியம். ஹிந்துத்துவா அமைப்புகள் மற்றும் சங்பரிவார் அமைப்பு போன்றவை இஸ்லாமியர்கள் நாட்டிற்கு எதிரானவர்கள்; தீவிரவாதிகள் என்றாலே அது அவர்கள்தான்; காங்கிரஸ், திமுக மற்றும் பாரதிய ஜனதா அல்லாத அரசுகள் இஸ்லாமியர்களின் மேல் பரிவு கொண்டு எந்த ஒரு விரைவான நடவடிக்கையையும் அவர்களின் மேல் எடுப்பதில்லை என்று குற்றம்சாட்டி வருகின்றன. அந்த போலி குற்றச்சாட்டை உறுதிபடுத்தவும், பதிவு செய்யவுமே இந்த படம்.
 
மேலும் நாடே அறிந்த குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட எத்தனைபேர் தீவிரவாதிகளாக மாறியுள்ளனர்? இதைச் சொல்ல உங்களுக்கு மனம் கூசவில்லையா? பெஸ்ட் பேக்கரி  சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் முழுமையான நீதி கிடைக்காமல் நொந்து போயும் மறைந்தும் வாழ்ந்துகொண்டிருகிறார்கள். உண்மைநிலைகள் அப்படியிருக்க எப்படி உங்களால் அவர்கள் தீவிரவாதிகளாக மாறியுள்ளதைப்போல சித்தரிக்கமுடிகிறது? தெரியவில்லை. ஆனால் இதே குஜராத் கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்டு குற்றவாளிகள் என்று நாடே அறிந்திருந்தும், பரிவார் அமைப்புகள் மற்றும் குஜராத் முதல்வர் மோடி ஆகியோர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதைபோல பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அத்வானி, உமா பாரதி இன்னும் பல பாரதீய ஜனதா தலைவர்கள் மீது சாட்டப்பட்ட குற்றங்களிலும் வழக்கு எப்படி உள்ளது என்பதை இந்த நாடே அறியும். அவர்களின் வழக்கு விசாரணையிலும்தானே பணம் வாரி இறைக்கப்படுகிறது. இதை மையமாக வைத்து படம் எடுக்க வேண்டியதுதானே?.
 
பார்ப்பனர்கள் எல்லோரையும் நான் குற்றம் சொல்லவரவில்லை. எல்லா மதங்களிலும் மதவெறியர்கள் உண்டு. மதவெறியை பலர் வெளியே துப்பி விடுகிறார்கள். சிலர் அதை விழுங்கி அது செரித்து ரத்தத்தில் கலந்து விடுகிறார்கள். ஆனால் உங்களைப் போன்றோர் வியாபார தந்திரத்தால் விழுங்கியவர்களாகவும் காட்டமாட்டீர்கள்; அதன்மேல் உள்ள பாசத்தால் அதைத் துப்பவும் மாட்டீர்கள். தொண்டையில் நஞ்சாக அதை வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். 
 
 
ஆனால் ஒன்றை மட்டும் நிச்சயம் உணரமுடிகிறது, பெரியாரின் சீடன் என்று சொல்லிக்கொள்ளும் உங்களின் உண்மையான ரூபம் இப்போதுதான் மெல்ல வெளிவரத் தொடங்கியிருக்கிறது. உங்கள் மனதின் உள்ளே மறைந்திருந்த பூணூல், மெல்ல நாகமாகி, உங்கள் தோள் மேல் ஏறி கழுத்தை சுற்றிக்கொண்டு படம் எடுக்கத் தொடங்கியிருக்கிறது. உங்களின் கருஞ்சட்டை கிழிந்து புலித்தோலாக மாறிவருகிறது. கம்யூனிசத்தையும் நாத்திகத்தையும் எழுதிய உங்கள் பேனா சூலமாகி, பழைய நூலக வாசம் மறைந்து விபூதி மண‌ம் கமழ நீங்கள் ஓர் அழிவு சக்தியாக விரைவில் விஸ்வரூபம் எடுக்கப் போவதைத்தான் இது காட்டுகிறது.
 
 
அதைத்தான் உங்கள் சமீபத்திய பேட்டியில் கோவிலுக்கு வெளியே இருப்பவர்களுக்குத்தான் பக்தி அதிகம் என்று கூறியிருக்கிறீர்கள். பக்தியுடன் இருங்கள்; ஆனால் இரட்டைவேடம் போடாதீர்கள். மோடியைப் போல் ஆர்.எஸ்.எஸ். போல் நேரிடையாக எதிர்த்துப் பேசிவிடுங்கள். ரஜினியைப்போல் மதநம்பிக்கையுடன் இருந்துவிட்டுப் போங்கள். நீங்கள் மற்றும் மணிரத்தினம் போன்றவர்கள் எப்போதுமே சமுதாயத்திற்குள் அறிவுஜீவிகளைப் போல் இருந்து கொண்டு மதம் சார்ந்த கொரில்லா தாக்குதலை கலைத்துறையின் துணைகொண்டு செய்துகொண்டிருக்கிறீர்கள். இது நல்லதல்ல. மேலும் இந்த விமர்சனத்தை உங்களின் விஸ்வரூபம் உண்மை என்று நிச்சயம் நிரூபிக்கும்.
 
Thanks: Keetru

“இது ஆண்களுக்கான பெண்களின் படம்”

mathavidai


"எந்நாடு போனாலும்
தென்னாடுடைய சிவனுக்கு
மாதவிலக்கான பெண்கள் மட்டும்
ஆவதே இல்லை"
         
          - கவிஞர் கனிமொழி
 
 
 
மாதவிலக்கு எனப்படும் மாதவிடாய் குறித்து ஓர் ஆவணப்படம் வெளிவந்திருக்கிறது. கீதா இளங்கோவன் அந்த ஆவணப்படத்தை இயக்கி வெளியிட்டுள்ளார்.
 
புனிதங்களும், தீண்டாமைகளும் உடைத்து நொறுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற சூழலில், பெண்ணின் மீது இந்தச் சமூகம் ஏற்றி வைத்தி ருக்கின்ற தீண்டாமையான மாதவிடாய் பற்றிய கருத்தாக்கங் களையும், மருத்துவர்களின் அறிவியல் சார்ந்த ஆலோசனை களையும் இப்படத்தில் பதிவு செய்திருக்கிறார். இதில் இடம் பெற்றுள்ள, “இது ஆண்களுக்கான பெண்களின் படம்” என்னும் தொடர், நோக்கத்தைத் தெளிவுபடுத்துகிறது.
 
 
பெண்ணின் உடலில் இயற்கையாக ஏற்படும் ஒரு மாதாந்திர நிகழ்வைக் குறித்து, 21ஆம் நூற்றாண்டிலும் மக்களிடையே நிலவும் மூடநம்பிக்கைகளையும், அறியாமையையும் வேதனையுடன் கீதா பதிவு செய்திருக்கிறார். சமூகத்திற்குச் சொல்ல வேண்டிய, பெரும்பான்மையும் சொல்லத் தயங்குகின்ற செய்தியைச் சிறப்பாகச் சொன்ன மாதவிடாய் படத்தின் இயக்குனர் மற்றும் அவருடைய குழுவினருக்கு நம்முடைய பாராட்டுகளும், வாழ்த்துகளும்.
 
 
ஓர் உயர் நிலைப்பள்ளி மாணவியிடம், ‘மாதவிடாய்னா என்னம்மா?’ என்று கேட்கப்படுகிறது. அந்த மாணவியிடம், வெட்கமும், தயக்கமும்தான் விடையாக வெளிப்படுகின்றன. பள்ளி இறுதி ஆண்டுகளில் நிற்கின்ற அந்தப் பெண் குழந்தை, படித்து முடித்ததும், மேற்படிப்புக்குப் போகலாம் அல்லது மணவாழ்க்கைக்குள்ளும் தள்ளப்படலாம். ஒரு வேளை அந்தப் பெண் திருமணம் செய்து கொடுக்கப்பட்டால், தன் உடலைப் பற்றிய அடிப்படை மாற்றங்கள் கூடத் தெரியாத நிலையில், எப்படி அந்த வாழ்க்கையை எதிர்கொள்வாள்? இத்தனை ஆண்டுகள் அவளுக்குக் கற்பிக்கப்பட்ட கல்வி வேறு என்னதான் அவளுக்குச் சொல்லிக் கொடுத்தது?
 
 
மற்றொரு மாணவியிடம், “வயசுக்கு வந்தப்போ உங்கம்மா, என்ன சொல்லிக் கொடுத்தாங்க?” என்று கேட்கப்படுகிறது. ‘வெளியில போக்கூடாது, பூஜ ரூம் பக்கமா வரக்கூடாது, குங்குமம் வச்சிக்கக்கூடாது, வெறும் பொட்டுதான் வச்சிக்கணும், ஆடாம, ஓடாம, பொம்பளப் புள்ளயா அடக்க ஒடுக்கமா இருக்கணும். அந்த மாதிரி நாள்ல பள்ளிக்கூடம் வரும்போது, கையில இரும்புத் துண்டு, இல்லன்னா துடைப் பத்தை மடிச்சிக் கையில கொடுத்தனுப்புவாங்க’ என்று பதில் வருகிறது. ஆக, பள்ளிக் கூடத்திலும், மாதவிடாய் பற்றி அறிவியல் சார்ந்த விழிப்புணர்வு கிடைப்பதில்லை, வீடுகளிலும் மூடநம்பிக்கை சார்ந்த கருத்துகளே திணிக்கப்படு கின்றன.
 
 
அறிவியல் பயிற்சியாளர், ‘மாதவிடாய் பத்தி விளக்கமா சொல்லும்போது, பிள்ளைங்க வெக்கப்படுதுக. 10, 11, 12ஆம் வகுப்புலயே, அறிவியல் பாடத்துல, ஆண், பெண் இனப்பெருக்க உறுப்புகள், மண்டலங்கள் இதெல்லாம் படத்தோட வருது. ஆனா டீச்சருங்களே நடத்த அசிங்கப்பட்டுட்டு, நீங்களே வாசிச்சி தெரிஞ்சிக்குங்கன்னு சொல்லிட்டுப் போயிடுறாங்க அப்படீன்னு அந்தப் பிள்ளைக சொல்லுதுக’ என்கிறார். பிறகு எப்படி இது குறித்து விழிப்புணர்வு ஏற்படும்?
 
 
தொடக்கப்பள்ளி நிலையிலிருந்தே பாலியல் கல்வி பாடத்திட்டத்தில் இணைக்கப்பட வேண்டும். கலாச்சாரக் காவலர்கள் கூச்சலிடுவதுபோல், பாலியல் உறவுகளை வகைப்படுத்துகின்ற கல்வியன்று, பாலியல் கல்வி. மனித உடல் அமைப்பு, உடல் உறுப்புகள், உடலியல் மாற்றங்கள் குறித்து, ஆரோக்கியமான முறையில் கற்றுத் தரப்படும் அறிவியல் கல்வியே பாலியல் கல்வி. ஆண், பெண் இருபாலருக்கும் மிகவும் இன்றியமையாத கல்வி பாலியல் கல்வி.
 
 
 
இந்தப் படத்தில், பெண்கள், இளம்பெண்கள், ஆண்கள் சொல்லி யிருக்கின்ற மாதவிடாய் குறித்த கற்பிதங்கள், உடலியல் கல்வி பாலியல் கல்வியின் தேவைக்குச் சான்றுகளாக இருக்கின்றன.
கூவிலபுரம் என்னும் ஊரில், மாதவிலக்கின் போது பெண்கள் நடத்தப்படும் விதம், தீண்டாமைக் கொடுமையின் உச்சம். ஊருக்கு ஒதுக்குப்புறத்தில், மாதவிலக்கானவர்கள், பிள்ளை பெற்றவர்கள் தங்குவதற்காகத் தனி வீடே வைத்திருக்கிறார்கள். கைக்குழந்தை வைத்திருப்பவர்கள்கூட, மாதவிலக்கின் போது, பச்சைக் குழந்தையைப் பிரிந்து, தனியாக அந்த வீட்டில்தான் இருக்க வேண்டுமாம். ‘வீட்டிற் குள்ளேயே இருந்து விட்டால், யாருக்கும் தெரியாமல் போய்விடும். இப்படித் தனி வீட்டில் வைப்பதால், ஊருக்கே தெரிந்துவிடுகிறது. பசித்தாலும், தாகம் எடுத்தாலும், யாராவது அந்தப் பக்கமாக வந்தால்தான் சோறோ, தண்ணீரோ கிடைக்கும். பிச்சை எடுப்பதுபோல, கையேந்திச் சாப்பிட வேண்டியிருக்கிறது’ என்று அவமானத்தில் குமுறுகிறார் ஓர் இளம்பெண். அந்த நேரத்தில் பயன்படுத்தப்படும் பாத்திரங்களை மூட்டையில் கட்டி, ஒரு மரத்தில் தொங்கவிட்டிருக்கிறார்கள். அதைப் பார்க்கும் நமக்கு, பெண்களின் தன்மானத்தைத் தூக்கில் தொங்கவிட்டது போலத் தெரிகிறது.
 
மருத்துவ ரீதியான விளக்கங்களும், எளிமையான சொற்களில், துறை சார்ந்த மருத்துவர்களைக் கொண்டு பதிவு செய்யப்பட்டுள்ள விதமும் அருமை. பள்ளி ஆசிரியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோரின் கருத்துகளும் விழிப்புணர்வூட்டுபவையாக உள்ளன.
 
மாதவிடாயின் போது வெளிப்படும் ரத்தத்தில் உள்ள ஸ்டெம்செல்கள் 78 வகையான இரத்த சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தக் கூடியவை என்று கண்டறியப் பட்டுள்ளது. மாதவிடாய் ரத்தத்தைச் சேமிக்கும் வங்கிகளும் இருக்கின்றன என்ற செய்தியையும் தருகிறது இப்படம்.
 
மாதவிடாய் ரத்தத்தை உறிஞ்சுவதற்குத் துணிகளைப் பயன்படுத்திய நிலை மாறி, இன்று பஞ்சுப் பட்டைகள் கடை களில் கிடைக்கின்றன. ஆனாலும் சரியான கழிப்பறை வசதிகள் இல்லாத காரணத்தால், இச்சமயங்களில் பெண்களின் நிலை மிகவும் சிக்கலானதாக இருக்கிறது.
 
சமூகத்தில் ஆண்கள் பெண்கள், படித்தவர்கள் படிக்காதவர்கள் என அனைத்துத் தரப்பினரிடமும், மாதவிடாய் தொடர்பான மூடநம்பிக்கைகளும், அறியாமையும் மண்டிக் கிடப்பதை இப்படம் ஆழமாகப் பதிவு செய்திருக்கிறது. தலைவலி, காய்ச்சல் வந்தால் சொல்வது போன்று, மாதவிடாயின் போது ஏற்படும் வலிகளைப் பெண்கள் வெளிப்படையாகச் சொல்வ தில்லை.
மருந்துக்கடைகளில் ஆணுறையை எந்தத் தாளிலும் மறைக்காமல் எடுத்துக்கொடுக்கும் கடைக்காரர், பெண்கள் மாத விடாய்ப் பஞ்சுப் பட்டைகளை வாங்கும்போது, செய்தித்தாளில் வைத்துச் சுருட்டி, கருப்புப் பாலித்தீன் பையில் போட்டு ரகசியமாகத்தான் கொடுக்கிறார். இரண்டையுமே மறைக்க வேண்டியதில்லை. உடம்பிலிருந்து வெளியேறுகின்ற ரத்தக் கழிவுகள் சம்பந்தப்பட்டவைதானே இவைகள்.
 
நம் சமூகத்தில், பலவற்றை மதங்கள் மறைத்து வைத்துப் புனிதம் என்கின்றன அல்லது ஒதுக்கி வைத்துத் தீட்டு என்கின்றன. இரண்டுமே இல்லை என்கிறது அறிவியல். மாதவிடாயின் மீது கட்டப்பட்டுள்ள கற்பிதங்களை உடைக்கின்ற சிற்றுளியாக இப்படம் இருக்கிறது. 
 
Thanks: கருஞ்சட்டைத் தமிழர்  ஜனவரி 2014