Sunday, March 23, 2014

யுவன் சங்கர் ராஜா மதமாற்றம் : களிப்பும் வெறுப்பும் ஏன்?





யுவன் சங்கர் ராஜா


தம் சார்ந்த உலகில் சில நாட்களாகவே கசிந்து வந்த செய்தி இப்போது உறுதிபடுத்தப்பட்டிருக்கிறது. தான் இசுலாத்தை ஏற்றுக் கொண்டது, தனது வீட்டார், தந்தை அனைவரும் அதை ஆதரிப்பதையெல்லாம் யுவன் சங்கர் ராஜா டிவிட்டரில் அறிவித்திருக்கிறார். கூடவே இந்த மத மாற்றத்தின் மூலம் மூன்றாவது திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுவது புரளி எனவும் யுவன் ஒரு சினிமா நட்சத்திரம் என்பதாலும் இந்த சாதாரண செய்தி கொஞ்சம் அதிர்ச்சி கலந்த பரபரப்பாய் ஊடகங்களில் முன்வைக்கப்பட்டதுதெரிவித்திருக்கிறார்.


பொதுவில் இசுலாம் மற்றும் இசுலாமியர்கள் குறித்து கட்டமைக்கப்பட்டிருக்கும் வெறுப்புணர்வாலும், யுவன் ஒரு சினிமா நட்சத்திரம் என்பதாலும் இந்த சாதாரண செய்தி கொஞ்சம் அதிர்ச்சி கலந்த பரபரப்பாய் ஊடகங்களில் முன்வைக்கப்பட்டது. சென்னையைக் கலக்கிய மோடி எனும் செட்டப் செய்தியின் வீச்சையும் ஜோடனை வெற்றியையும் இந்த செய்தி குறைத்து விடுமோ எனும் கவலையும் இதில் அடங்கியிருக்கிறது.


சமூக வலைத்தளங்களில் இருமதங்களிலும் இருக்கும் ஜனநாயக உணர்வு கொண்டோர் அவர்கள் சிறுபான்மை என்றாலும் இந்த மதமாற்றம் ஒரு தனிநபரது அந்தரங்க விசயம், அதை விவாதிப்பது சரியல்ல எனவும், முற்போக்கு மற்றும் இடதுசாரி கருத்துக்கள் கொண்டவர்கள் கூடுதலாக இதை பார்ப்பனியத்தை அம்பலப்படுத்துவதற்காக விவாதிக்கின்றனர். எனினும் இருதரப்பு மதவாதிகளின் விவாதம்தான் இவற்றில் முன்னணி வகிக்கிறது.


முதலில் பார்ப்பனியத்தை அரசியலிலும், மதத்திலும் ஏற்றுக் கொண்டோரை பார்க்கலாம். இந்தியாவைப் பொறுத்தவரை ஒருவர் இந்துமதவெறி அரசியலை அதற்குரிய இயக்கங்களில் சேர்ந்துதான் பெற வேண்டும் என்பதல்ல. பொதுவான சாதிய படிநிலை அமைப்பும், சடங்கு-சம்பரதாயங்களும், ஊடகங்கள் – கலாச்சார – அரசு அமைப்புக்களின் பார்ப்பனிய சார்பும் கூட ஒரு ‘இந்து’ குடிமகனது சிந்தனையை வடிவமைப்பதில் பங்காற்றுகின்றன.


“முசுலீம்கள் மதவெறியர்கள், எதற்கும் தம் மதத்தை விட்டுக் கொடுக்கமாட்டார்கள், பாகிஸ்தானை ஆதரிப்பவர்கள், ஏட்டிக்கு போட்டியாக தாடி, குல்லா, கைலி என்று அடையாளத்தை பின்பற்றுபவர்கள், மாட்டுக்கறியை விரும்பி உண்பவர்கள், அதனால் வரும் துர்நாற்றத்தை தடுக்க ஃபாரின் செண்டை அடிக்கடி போடுபவர்கள், சளைக்காமல் குண்டு வைக்கும் தீவிரவாதிகள்” என்பதிலிருந்து விதவிதமாக இந்த வெறுப்புணர்வு மக்கள் மனதில் படிய வைக்கப்பட்டிருக்கிறது.


ஆகவே ஒருவர் முசுலீம் மதத்திற்கு மாறுகிறார் என்றால் இத்தகைய மனநிலையிலிருப்போருக்கு இயல்பாகவே அதிர்ச்சியும், வெறுப்பும், கசப்பும் வருகிறது. அதுவே இந்துமதவெறி இயக்கத்தவர் என்றால் கூடுதல் வன்மத்துடன் அந்த வெறுப்புணர்வு பீறிட்டு வருகிறது.


தினமலர் மறுமொழிகளில் துவங்கி சமூக வலைத்தளங்கள் வரை இத்தகைய வெறுப்புணர்வு விதவிதமாய் வெளிப்படுகிறது. “ஜனனி ஜகம் நீ, ரமணர் மாலை, திருவாசகம் என ஆன்மீகத்தில் இசையோடு திளைத்தவரின் பிள்ளை செய்யக்கூடிய செயலா இது”, “இனி யுவன் எத்தனை மனைவி வேண்டுமானாலும் கட்டலாம்”, “அவர் குண்டு வைக்காமல் இருந்தால் சரி”, “தாய்நாடு, தாய்மதம், தாய்-தந்தை அனைத்தையும் இழிவுபடுத்தி விட்டார்”, “சொந்த வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு மதத்தை விற்று விட்டார்”, “இசையை மறுக்கும் இசுலாத்தில் எப்படி காலம் தள்ளுவார்” என தினுசு தினுசாக இந்த எரிச்சல்கள் கொட்டப்படுகின்றது.


இதனால்தான் “இளையராஜாவுக்கு நெஞ்சுவலி வந்தது”, “அவரது தந்தை டேனியல் ராமசாமி கிறித்தவ மதத்திலிருந்து தாய்மதமாம் இந்து மதத்திற்கு மாறியதை யுவன் அசிங்கப்படுத்தி விட்டார்” என்றெல்லாம் கூட இவர்கள் அடுக்குகிறார்கள்.


ஒரு மதத்தை ஒருவர் பின்பற்றுவது, மாற்றிக் கொள்வது என்பது சட்டப்படியும், தார்மீக நெறிப்படியும் அவரது தனிப்பட்ட உரிமை, தேர்வு. இதில் சரி தவறு என்று வாதிடுவதற்கு மற்றவர்களுக்கு உரிமையும் இல்லை, அது ஜனநாயகமும் இல்லை. மின்னணுவியல் எந்திரங்களின் கடைக்குச் சென்று ஒருவர் தனக்குப் பிடித்த நிறுவனத்தின் சலவை எந்திரத்தை வாங்குவதை எவரும் விமரிசிப்பதில்லை. சரக்குத் தேர்வு அவர் உரிமையென மற்றவர்கள் ஏற்கிறார்கள். நுகர்வு கலாச்சாரத்தில் இருக்கும் இந்த ‘நாகரீகம்’ மதம் குறித்த விவகாரங்களில் இல்லை.


இகலோக பொருட்களோடு பரலோக ஆன்மீகத்தையும் இணைத்துப் பார்க்கலாமா என்று பக்தர்கள் கேட்கலாம். பரலோக ஆன்மீகத்தில் கூட எங்கே தள்ளுபடி அதிகம், வசதிகள் இருக்கும் என்று ஒரு பக்தன் முடிவு செய்வதில் தவறென்ன? இல்லையென்றால், இல்லாமல் கருத்தளவில் மட்டும் நம்பப்படும் பரலோகத்தில் எது உண்மை, பொய், நல்லது என்ற விவாதங்கள் எழும். ஆகவேதான் மதத்தை எற்பதோ, பின்பற்றுவதோ, மாற்றுவதோ ஒருவரது தனிப்பட்ட உரிமை. அவர் எந்தக் காரணத்திற்காக செய்தார், அந்தக் காரணங்கள் சரியா, தீர்வுக்கு அந்த மதம் உகந்ததா என்று கேட்பதும், விவாதிப்பதும் அடிப்படை ஜனநாயகமற்ற செயல்.



அப்பர்


ஆனானப்பட்ட அப்பரே கூட அல்சர் பிரச்சினைக்காக சமணத்திலிருந்து சைவத்திற்கு மாறியவர்தானே! அல்சருக்கு மருத்துவரைப் பார்க்காமல் மதத்தை ஏன் மாற்றினார் என்று இந்து அபிமானிகள் கேட்க மாட்டார்கள் அல்லவா? அப்பருக்கு அளிக்கப்பட்ட அந்த உரிமை குப்பனுக்கும், சுப்பனுக்கும் மட்டும் இல்லையா? ஆனால் குப்பன் சுப்பன்கள் பால் பவுடருக்காகவும், ரொட்டிக்காவும் மதம் மாறுகிறார்கள் என்று அப்பரை வியந்தோதும் அன்பர்கள் இழிவுபடுத்துவார்கள். தனது வயிற்றுப்பசிக்கு ஒரு மதம் வாழ்வளிப்பதை ஏழையொருவர் ஏற்றுக் கொண்டு மாறுவதில் இவர்களுக்கு என்ன பிரச்சினை?
ஒரு ஏழையின் ஏழ்மையை விதியென்றும், பாவமென்றும் ஏற்று நடக்க கோரும் மதம்தான் அதிலிருந்து விடுதலை பெறுவதையும் எதிர்க்கிறது. ஏழ்மை எனப்படும் இகலோக வறுமையை போக்குவதற்கு வக்கற்றவர்கள் ஆன்மீக வறுமை குறித்து எகத்தாளம் பேசுவது மேட்டிமைத்தனமானது. ஆகவே ஒரு மனிதன் ஆன்மீகவாதிகளால் பட்டியலிடப்படும் எந்த ஒரு ‘அற்ப’ காரணங்களுக்காகவும் கூட மதம் மாறலாம், அதில் தவறில்லை என்கிறோம். இப்படி இருக்க யுவன் இந்த ‘காரணங்களுக்காகத்தான்’ மதம் மாறினார் என்று பேசுவது பொருளற்றது.


வெள்ளையர்கள் வந்து சர்வே எடுத்தபின் உருவான இந்து மதம் வரலாற்றில் இன்றிருப்பதைப் போல ஒருங்கிணைக்கப்பட்ட மதமாக இல்லை. ஆறு வகை மதங்கள். அதில் சைவம், வைணவத்தின் கொலைச்சண்டையெல்லாம் வரலாறு பதிந்து வைத்திருக்கிறது. அம்பேத்கர் கூறியதைப் போல இந்து மதம் என்பது ஒரு மதத்திற்குரிய ஆன்மீக அம்சங்களை அடிப்படையாக கொண்டிருக்கவில்லை; அது சமூக வாழ்வில் சாதிப் பிரிவினைகளோடு வாழ்வதற்கும், மீறுபவர்களை தண்டிப்பதற்குமான ஒரு குற்றவியல் சட்ட தொகுப்புத்தான்.


இத்தகைய வருணாசிரம, சாதியக் கொடுங்கோன்மையிலிருந்துதான் மதமாற்றத்தின் தேவை பிறக்கிறது. இந்தியாவில் கிறித்தவமும், இசுலாமும் அப்படித்தான் தமது அடித்தளத்தை உருவாக்கிக் கொண்டன. அதே நேரம் பார்ப்பனியத்தை வெல்ல முடியாமல் அவை தமது நோக்கத்தில் தோல்வியடைந்தாலும் தோன்றியதின் காரணங்களை மறுக்க முடியாது. காலனியாதிக்கத்தின் கிறித்தவம், முகலாய மன்னர்களின் ஆட்சி மதம் என்ற அந்தஸ்தில் இருந்த இசுலாம் போன்றவையால் ஏற்பட்ட மதமாற்றத்தை விட சமூக கொடுங்கோன்மையால் நடந்த மாற்றமே அதிகம். 1980 களில் நடந்த மீனாட்சிபுரம் மதமாற்றம் வரை இதற்கு சான்றுகள் ஏராளம்.


எனவே தாய்மதமாம் இந்துமதத்திலிருந்து மதம் மாறலாமா என்று பொறுமும் இந்து பக்தர்கள் முதலில் தாய் மதத்தின் அநீதியை புரிந்து கொள்வது அவசியம். இல்லையென்றால் ஏட்டிக்குப் போட்டியாக கிறித்தவம், இசுலாம் போல இந்துமதமும் மதமாற்றத்தை செய்ய நினைத்தாலும் முடியாது, ஏன்? இந்து மதத்தின் சகல அடையாளங்களையும், உரிமைகளையும் அல்லது உரிமை மறுப்புகளையும் வழங்குவது சாதி என்பதால் வெளி மதங்களிலிருந்து வருபவரை இங்கு என்ன சாதியில் வைக்க முடியும்? விரும்பினாலும், விரும்பா விட்டாலும் பிறிப்பிலிருந்தே ஒட்டிக்கொள்ளும் சாதியை நடுவழியில் வேறொன்றுடன் இணைக்கவோ, மாற்றிக் கொள்ளவோ முடியாது.


ஆக மத மாற்றம் குறித்து கசப்புணர்வு கொள்ளும் இந்துக்கள் தமது மதத்திற்கு யாரையும் வரவேற்க முடியாமல் கதவை இறுக மூடியிருக்கிறோமே என்பது குறித்து பரிசீலித்து பார்க்கட்டும். சாதிகளோடு மட்டும் மணமும், உறவும் கொண்டிருக்கும் ‘இந்துக்கள்’ அதையே பிற சாதி இந்துக்களோடு ஏன் கொண்டிருக்கவில்லை என்பதை யோசிக்க வேண்டும். இது புரிந்தால் யுவனது மதமாற்றம் குறித்து எந்த எரிச்சலும் இருக்காது.


மேலும் என்னதான் இந்துமதவெறியர்கள் பத்வா பிறப்பித்து விதிமுறைகளை உருவாக்கினாலும் ஒரு படித்தான இந்து மதம், பண்பாடு, வாழ்க்கை முறை என்பது இங்கே இல்லை. சாதி, வர்க்கம், மொழி, பிரதேசம், இனம் என்ற பிரிவுகளோடே இங்கு இந்து மதம் இருக்கிறது. இது எல்லா மதங்களுக்கும் பொருந்தும் என்றாலும் இந்து மதத்தின் வேறுபாடுகள் தன்மையிலும் அளவிலும் அதிகம்.


காலை எழுந்து, நீராடி, துளசி மாடத்தை சுற்றி வந்து, கோலம் போட்டு, பூஜையறையில் பூஜை செய்து, நைவேத்தியம் படைத்து என்று பட்டயலிட்டு இதை செய்யாதவன் இந்து இல்லை என்றால் 99% மக்கள் இந்துக்கள் இல்லை என்றாகி விடும். கோனார் வீட்டின் முன் ஆட்டுப் புழுக்கைகளும், தேவர் வீட்டில் உப்புக் கண்டமும், மீனவர்கள் வீட்டில் கருவாடும், அலங்கரிக்கும் போது சுத்த பத்தமான துளசி மாடத்திற்கு எங்கே போவது? முதலில் சொந்த வீடு இருந்தால் அல்லவா துளசி மாடத்தை பற்றி யோசிக்க முடியும்.
துளசிமாடம் எனும் சிறு விசயத்திலயே இந்து மதம் அடிபடும் போது இவர்கள் சொல்லும் இந்துக்கள் யார்? பார்ப்பன மற்றும் ‘உயர்சாதி’ இந்துக்களின் பண்பாட்டைத்தான் அனைத்து இந்துக்களின் பண்பாடாக திணிக்கிறார்கள். அப்படித் திணித்தாலும் அது நடக்காது, நடக்கவில்லை என்பதை ஒத்துக் கொண்டால் யுவனது மதமாற்றம் எந்த அதிர்ச்சியையும் அளிக்காது.
தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் சமூகங்களில் மதங்களுக்குரிய தனித்தன்மையும், சடங்குகளும் வெகு அபூர்வம். அங்கே ஒரே வீட்டில் இருவேறுபட்ட மதங்கள் இருக்கலாம். ஒரு திருமணத்தில் இரு மதங்கள் இருக்கலாம். என்றாலும் பிறப்பிலிருந்து, இறப்பு வரை மதங்களின் சண்டைகளும், பிரிவினைகளும், விதிமுறைகளும் அங்கே இருப்பதில்லை. சொல்லப் போனால் எளிய மக்களின் வாழ்க்கைக்கு கட்டுப்பட்டுத்தான் அங்கே மதங்கள் உயிர்வாழ முடியும். நாகூரூக்கும், வேளாங்கண்ணிக்கும், மாரியம்மன் கோவில்களுக்கும் மூன்று மத மக்களும் வேறுபாடின்றி அப்படித்தான் சென்று வருகின்றனர். ஏழை இசுலாமிய மக்கள் சென்னையின் குடிசைப் பகுதிகளில் உழைக்கும் ‘இந்துக்களோடு’ பிரச்சினைகளின்றி சமத்துவத்துடனும் தோழமையுடனும் வாழும் போது வசதி படைத்த இசுலாமியர்களுக்கு வசதி படைத்த இந்துக்கள் சுலபத்தில் வாடகை வீடுகள் தருவதில்லை என்பதையும் இங்கே பார்க்க வேண்டும்.



இளையராஜாவின் தந்தை டேனியல் ராமசாமி கிறித்தவர் என்று கூறுவது உண்மையில்லை. வெள்ளையர்கள் ஆட்சியில் கோவில்பட்டியில் இருந்து கேரளாவின் எஸ்டேட் வேலைக்கு கங்காணி பதவியில் பணிபுரிவதற்காக செல்லும் ராமசாமி ஆங்கிலேயர்களின் பெயர் சூட்டும் வழக்கப்படி டேனியல் என்ற பெயரை பெறுகிறார். தமிழ்நாட்டு பெயர்கள் வாயில் நுழையாததால் தமது பணியாளர்களுக்கு அப்படி கிறித்தவப் பெயர்களை ஆங்கிலேயர்கள் சூட்டிக் கொள்கிறார்கள். இது தெரியாமல் பண்ணைபுரத்தில் சின்னத்தாயை மணம் புரிந்து வாழ்ந்த டேனியல் ராமசாமிக்கு இப்படி ஒரு கட்டுக்கதையை கூட உருவாக்கியிருக்கிறார்கள்.



இன்றும் பண்ணைப்புரத்தில் கிறித்தவ, இந்து என்ற மதவேறுபாடு இன்றி மக்கள் வாழ்வதை பார்க்கலாம். பாவலர் வரதராசன் இறந்த போது இளையராஜாவும், கங்கை அமரனும் சினிமாவில் ஆளாயிருக்கவில்லை என்பதால் ஊரில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களே இறுதி அடக்க செலவை ஏற்றிருந்தார்கள். எனவே பண்ணைபுரத்தில் மட்டுமல்ல, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள வாழும் பகுதிகளில் இல்லாதவன் என்ற யதார்த்தத்தில் நிலவும் வர்க்கம் எனும் கூட்டுத்துவத்தை எந்த மதமும் பிரிக்க முடியாது.
ஆனால் பண்ணைபுரத்தில் இருந்து சென்னையில் குடியேறி நாடறிந்த இசையமைப்பாளராக வாழும் இளையராஜாவின் நிலை வேறு. இப்போது பண்ணைபுரத்தின் வாழ்க்கை மதிப்பீடுகள் அவரிடமோ, குடும்பத்திடமோ இல்லை. தனது இசையில் கலைக்கு உண்மையாக இருத்தல் என்ற முறையிலும், ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கர்வத்திலும் பார்ப்பனியத்தை கிண்டலடித்திருக்கும் இளையராஜா, கருத்தளவில் பார்ப்பனியத்தை மனதார ஏற்றுக் கொண்டு ஒரு ‘கருப்பு’ பார்ப்பனராகவே வாழ்ந்தார். இசையைத் தாண்டி அவரது பேச்சிலும், வீட்டிலும், இசைப்பதிவு கூடத்திலும், பொருட்கள் முதல் முறைகள் வரை பார்ப்பனியத்தின் தடங்கள் ஏராளம்.


இளையராஜா




இசையைத் தாண்டி இளையராஜாவின் பேச்சிலும், வீட்டிலும், இசைப்பதிவு கூடத்திலும், பொருட்கள் முதல் முறைகள் வரை பார்ப்பனியத்தின் தடங்கள் ஏராளம்ரமணருக்கும், அரங்கநாதனின் கோபுரத்திற்கும், திருவாசகத்திற்கும் மனமுருகிய இளையராஜா சமகால வாழ்வில் ஒடுக்கப்பட்ட மக்களின் இரத்த சுவடுகள் குறித்து அமைதி காத்தார். ஆகவே யுவனின் மதமாற்றம் அவருக்கு நிச்சயம் அதிர்ச்சி அளித்திருக்க வேண்டும். அதனால்தான் அவருக்கு நெஞ்சு வலி வந்ததா, நமக்குத் தெரியாது. ஒருக்கால் பண்ணைப்புரத்தின் சூழலிருந்தால் ராசையா இதை வெறுமனே கடந்து போயிருப்பார். தனது வாரிசுகள் மூன்று பேரும் மூன்று மதத்தில் இருந்தாலும் அவருக்கு பிரச்சினை இருக்காது. ஆனால் அக்கிரகாரம் கோலேச்சும் சென்னையிலும் – தமிழ் சினிமாவிலும் வாழும் இளையராஜாவுக்கு இது நிச்சயம் வலிதான். ஒரு வகையில் இது கூட அவரை ஏதேனும் ஒரு அளவுக்கு பண்படுத்தும் நல்ல சிகிச்சையும் கூட.



இதுவரை தான் பேசி வந்தது மதங்கள் கடந்த ஆன்மீகமா இல்லை இந்துத்வம் கட்டுப்படுத்திய ரணமா என்பதையெல்லாம் இளையராஜா யோசித்தல் நலம். அவரது வாழ்க்கை இசைதான் எனும் போது இத்தகைய அரசியல் பார்வை கொண்ட குறுக்கு விசாரணையை அந்த மகத்தான கலைஞன் மீது திணிக்கலாமா என்று ராசையா ரசிகர்கள் கேட்கலாம். அவரது இசையை நாங்களும் ரசிக்கிறோம். அதை எழுதியுமிருக்கிறோம். ஆனால் இங்கே எதை அவர் மீது விமரிசனமாக வைக்கிறோமோ அந்த பார்வையின் அடிப்படையில்தான் அவர் மீதான மரியாதையும் வியப்பும் ஏற்பட்டது. இதை இளையராஜா ஏற்காமல் போனாலும் அவரது இசைய ரசிக்கும் அரசியல் முன்னணியாளர்கள் பரிசீலிக்க வேண்டும்.



இறுதியாக இந்துமதவாதிகள் யுவனை மீட்பதற்கு விடும் அஸ்திரம் என்ன? இந்து மதம்தான் நெகிழ்ச்சியான மதம், இங்கே இருக்கும் சுதந்திரம் எங்கும் இல்லை, இசுலாத்தில் இசையமைப்பதற்கு கூட அனுமதி இல்லை என்று மன்றாடுகிறார்கள். இதிலும் ஒரு காப்பிரைட் திருட்டு இருக்கிறது. இந்து மதத்தின் ‘சுதந்திரத்திற்கு’ காரணம் பார்ப்பனியத்தின் இந்து ஞான மரபு அல்ல. சொல்லப் போனால் அத்தகைய சுதந்திர மறுப்பே பார்ப்பனியத்தின் ஆன்மா.
புத்தர், சமணர், சித்தர் முதல் பெரியார், அம்பேத்கார், பொதுவுடைமையாளர் வரை பார்ப்பனியத்தை மறுத்து வந்த மரபே இந்து மதத்தை அடித்து திருத்தி ஒரளவுக்கு வழிக்கு கொண்டு வந்தது. வைக்கம் போராட்டமா, தில்லை கோவில் மீட்பு போராட்டமா என்று சமீப கால வரலாற்றை பார்த்தாலும் அது பார்ப்பனியத்தை எதிர்க்கும் பெரியார், புரட்சிகர கம்யூனிஸ்டுகளின் பங்களிப்பாக இருக்கிறது. எனவே கோவில்களில் அனைவரும் நுழைந்து கும்பிடுவதற்கோ, தமிழ் நுழைவதற்கோ ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்துமதத்திற்கு காப்பிரைட் கோரும் கூட்டம் எதுவும் எதையும் கிழித்ததில்லை என்பதோடு எதிராகவும் இருந்திருக்கிறார்கள்.
ஒருக்கால் இசையமைப்பது கூடாது என்று இசுலாமியவாதிகள் அச்சுறுத்தினாலும் அதற்கும் இதே முற்போக்கு கூட்டத்தினர்தான் போராட முடியுமே அன்றி இந்துமதவாதிகள் அல்ல. இனி இசுலாமியவாதிகளின் பக்கம் போகலாம்.




பெரியார்தாசன்

 
இசுலாமியவாதிகள் கேட்கும் கேள்வி “எனில் பெரியார்தாசனது மதமாற்றம் குறித்து ஏன் விமரிசித்தீர்கள்?”


மதமாற்றம் ஒரு தனிநபரது அடிப்படை ஜனநாயக உரிமை என்பதை விமரிசிப்பவர்கள் மட்டுமல்ல, அதை கொண்டாடுபவர்களும் புரிந்து கொள்ள வேண்டும். உடனே இசுலாமிய வாதிகள் கேட்கும் கேள்வி, “எனில் பெரியார்தாசனது மதமாற்றம் குறித்து ஏன் விமரிசித்தீர்கள்?”. பெரியார்தாசன் இறை மறுப்பு, நாத்திகம், பார்ப்பனிய எதிர்ப்பு, தமிழின உரிமை என்று பல ஆண்டுகளாக முற்போக்கு மேடைகளில் பேசி வந்தார். அதனால் இந்த விமரிசனமும் கேள்விகளும் வருவது இயல்பு. இதையும் இந்துமதவாதிகளின் எரிச்சலையும் ஒன்றாக காண்பது அபத்தம். இப்படித்தான் தோழர் ஒருவர் பெரியார் தாசனிடம் கேட்டு அதற்கு அவர் ‘ஏன்’ மதம் மாறினேன் என்றே தெரியவில்லை என்று சொன்ன பதிலை ஆடியோவாக வினவிலும் வெளியிட்டிருக்கிறோம்.



தா.பாண்டியன் கட்சியில் இயக்கவியல் பொருள்முதல்வாதம் வகுப்பை திறமையாக எடுக்கக் கூடியவரும், இந்திய கம்யூனிசக் கட்சியின் மாநில துணைத் தலைவருமாகவும் இருந்த சீனிவாசன் என்பவர் சேலத்தில் இல.கணேசன் முன்னிலையில் பாஜகவில் சேர்ந்தார். இதை ஏதோ ஒரு ஓட்டுக்கட்சி மாற்றம் என்று எடுக்காமல் ஏதோ கம்யூனிசம் என்று பேசிவிட்டு இப்படி பாசிஸ்டுக் கட்சியில் சேர்ந்தாயே என்று கூடுதலாக விமரிசன அடி கொடுக்க வேண்டியிருக்கிறது, அம்பலப்படுத்த வேண்டியிருக்கிறது. இது சரி என்றால் அதுவும் சரிதான்.


ஆனால் மதமாற்றம், மதத் தெரிவு என்பதை ஒரு ஜனநாயக உரிமையாக இந்துமதவாதிகள் மட்டுமல்ல இசுலாமிய மதவாதிகளும் ஏற்கமாட்டார்கள். துருக்கி, துனிஷியா போன்ற இசுலாமிய மக்கள் அதிகம் வாழும் நாடுகளில் இந்த ஜனநாயகம் சட்டத்திலும், மக்கள் பண்பாட்டிலும் நிலைபெற்றிருந்தாலும் ஷரியத் கொடுங்கோன்மை நிலவும் வளைகுடா நாடுகளில் ஜனநாயக வாசனையை அதுவும் கனவில் கூட முகர முடியாது. இந்தியாவின் இசுலாமியர்களில் ஏழைகளாய் இருப்போருக்கு வர்க்கம் என்ற அளவிலேயே இந்த ஜனநாயகம் இயல்பாக இருப்பதால் பிரச்சினை அல்லை. அவர்களைத் தவிர்த்து வணிகர்கள், நடுத்தர வர்க்க முசுலீம்கள்தான் அதிகமும் வளைகுடா வகாபியிச அடிப்படைவாதத்தில் விழுகிறார்கள். வகாபியிச இயக்கங்களும் அப்படித்தான் வளருகின்றன. மக்களையும் மாற்றுகின்றன.



மேலும் மதம் என்பது வளர்ந்த பிறகு, பகுத்தறிவின் துணை கொண்டு ஒட்டிக் கொள்ளும் ஒன்றல்ல. யார் பெற்றோர்கள் என்பதே பிள்ளைகளின் மதத்தை தீர்மானிப்பதாக இருக்கிறது. இப்போது யுவன் எடுத்த முடிவைப் போலத்தான் இசுலாத்தை வளர்ந்து ஆளான பிறகு கடைபிடிக்க வேண்டுமென்றால் அதை மதவாதிகள் ஏற்கமாட்டார்கள். இதிலிருந்தே தெரிகிறது, மதமும், மதத்தெரிவும் வலிந்து திணிக்கப்படுகிறதா, தெளிந்து எடுக்கப்படுகிறதா என்று!



இசுலாமியர்
 

 
யுவனின் மதமாற்றம் ஒரு இசுலாமியரை மகிழ்ச்சிக்குள்ளாக்குவதற்கு வேறு ஒரு சமூக காரணம் இருப்பதையும் நாம் அங்கீகரிக்க வேண்டும்
இருப்பினும் யுவனின் மதமாற்றம் ஒரு இசுலாமியரை மகிழ்ச்சிக்குள்ளாக்குவதற்கு வேறு ஒரு சமூக காரணம் இருப்பதையும் நாம் அங்கீகரிக்க வேண்டும். இந்தியாவில் இந்துமதவெறி இயக்கங்கள் மற்றும் அதற்கு பொருத்தமான அரசு, சமூக, ஊடக அமைப்பால் இங்கே இசுலாமியர்கள் என்றாலே அடக்குமுறையும், கைதும், அச்சுறுத்தலும் இயல்பாக இருக்கின்றன. வாடகைக்கு வீடு கிடைக்காது, வேலை கிடைக்காது, பொது இடத்தில் சந்தேகப் பார்வை என்று அவர்களை அன்றாடம் ரணமாக்கும் நடைமுறைகள் ஏராளம். ஒருவகையில் இசுலாமிய கடுங்கோட்பாட்டுவாதத்தை முன்வைக்கும் வகாபியச இயக்கங்கள் இங்கே எடுபடுவதற்கு கூட இந்த அநீதிதான் காரணமே அன்றி அல்லாவின் அருளோ, இல்லை இசுலாத்தின் தனிச்சிறப்போ அல்ல.
ஆதலால் யுவனின் மதமாற்றம் குறித்து ஒரு சாதாரண முசுலீம் மகிழ்ச்சி கொள்வதை இந்தப் பின்னணியில் புரிந்து கொள்ள வேண்டும். இது தண்டிக்க முடியாத இந்துமதவெறியர்களை ஏதோ கொஞ்சம் வெறுப்பேற்றவாவது முடிகிறதே என்ற இயலாமை கலந்த திருப்திதான். இந்தியாவில் இந்துமதவெறி அமைப்புகள் என்றைக்கு முடக்கப்படுகிறதோ அன்றுதான் இசுலாமிய மக்களை கருத்திலும், களத்திலும் ஜனநாயகப் படுத்துவது அவர்களது சொந்த விருப்பத்தின் பெயரில் நடக்கும்.



அதே நேரம் இந்த முயற்சியை பின்னுக்கிழுக்கும் வேலையை இசுலாமிய மதவாதிகள் செய்கிறார்கள். அப்படித்தான் யுவனின் மதமாற்றத்தை அவர்கள் மிகைப்படுத்துவதும் கொண்டாடுவதும். முக்கியமாக யுவனின் மதமாற்றம் இசுலாத்தின் வெற்றியாக அவர்கள் நம்புகிறார்கள். ஒரு தனிநபர் இசுலாத்திற்கு மாறுவது இசுலாத்தின் வெற்றி என்றால் அதே தனிநபர்கள் செய்யும் குற்றங்களுக்கும் இசுலாம்தானே பொறுப்பேற்க வேண்டும்?
காரைக்கால் கூட்டு வன்புணர்ச்சியில் சில முசுலீம் இளைஞர்களும் கைது செய்யப்பட்டார்கள். அப்போதெல்லாம் இது இசுலாத்தின் தோல்வி, மானக்கேடு, மதத்தின் போதாமை என்ற குரல்களை நாம் கேட்கவில்லை. இப்படிக் கேட்டால் தனிநபர்களை விமரிசியுங்கள், இசுலாத்தை குறை சொல்லாதீர்கள் என்பார்கள். என்றால் யுவனின் மாற்றத்தை வெற்றியாக சொல்வதும் உங்கள் கருத்துப்படியும் தவறுதானே? இசுலாமிய மக்கள் இன்றி இசுலாம் இல்லை. ஆனால் அந்த இசுலாமிய மதத்தை யதார்த்தமாக பார்க்காமல் வகாபியசத்தின் கண் கொண்டு செயற்கையாக பார்ப்பதுதான் பிரச்சினை.


தவ்கீத் ஜமாஅத்தின் கோவை ரஹ்மத்துல்லா சென்னை மண்ணடியில் பேசிய கூட்டம் குறித்து வினவில் விரிவாக எழுதியிருக்கிறோம். அதில் மதுரை ஆதினம் அருணகிரி வாயாலேயே புர்காதான் பெண்களுக்கு சிறந்த பாதுகாப்பை அளிக்கிறது என்று அல்லா சொல்ல வைத்திருக்கிறான் என்று அவர் சொன்னதும் கூட்டத்தினர் அல்லா ஹூ அக்பர் சொன்னதும் இப்போதும் சிரிப்போடு  நினைவுக்கு வருகிறது. மதுரை ஆதீனம் போன்ற நாடறிந்த பொறுக்கி சாமியார்களின் வாய்களில் வரும் பாராட்டைக் கூட இவர்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கிறார்கள்? இது ஓட்டுப் பொறுக்கி அரசியலின் மேடை பாராட்டுகள், கண்டனங்களின் தரத்தை விட இழிவல்லவா?



இப்படித்தான் இசுலாத்தின் மகத்துவத்தை கடை விரிக்க வேண்டுமா என்றால் அவர்களிடத்தில் பதிலில்லை. சாதாராண முசுலீம்களிடத்தில் “எப்பேற்பட்ட பிரபலங்கள் அதுவும் ஒரு இந்து சாமியார் கூட இசுலாத்தை பாராட்டுகிறார், பார், எனவே நீ மார்க்கத்தை கறாராக கடைபிடிக்க வேண்டும்” என்று தமது மதவாத ஆதிக்கத்தை தக்கவைப்பதற்கு இதை பயன்படுத்துகிறார்கள். இந்த தந்திரம் இசுலாத்திற்கு வேண்டுமானால் ‘நற்பெயரை’க் கொண்டு வரலாமே அன்றி இசுலாமிய மக்களுக்கு எந்த விமோச்சனத்தையும் தந்து விடாது.
ஆகவே யுவன் எனும் ஒரு சினிமா பிரபலம் இசுலாத்திற்கு மாறியது இத்தகைய மதவாதிகளிடம் எத்தகைய புல்லரிப்பை ஏற்படுத்தியிருக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் சினிமாவின் பிரபலம் இங்கே அரசியல் முதல் பாமரன் வரை செல்வாக்கு செலுத்துவதால் யுவனது மதமாற்றத்தை வைத்து இசுலாத்தின் இமேஜ் பல மடங்கு உயரும் என்பது இவர்களது உட்கிடக்கை. ஆனால் மதுரை ஆதீனத்தை மட்டுமல்ல, யுவன் குறித்தும் இவர்களுக்கு தெரியவில்லை.



யுவன் சங்கர் ராஜா



இளையராஜாவுக்கு இருக்கும் ஒடுக்கப்பட்ட வாழ்க்கை பின்புலமோ, அனுபவமோ, இல்லை அதற்கான சூழ்நிலைகளோ யுவனுக்கு இல்லை..
இளையராஜாவுக்கு இருக்கும் ஒடுக்கப்பட்ட வாழ்க்கை பின்புலமோ, அனுபவமோ, இல்லை அதற்கான சூழ்நிலைகளோ அவருக்கில்லை. யுவன் மாநகரத்தை சேர்ந்த ஒரு மேட்டுக்குடி பீட்டர். அவரது பேச்சுக்களைப் பார்த்தால் தமிழை தட்டுத்தடுமாறி பேசுவார், ஆங்கிலத்தில் இயல்பாக இருப்பார். உடல் மொழியும் அப்படித்தான். ஒருக்கால் அவர் இசையமைத்த தமிழ் சினிமாதான் அவருக்குரிய சமூகப் பார்வையை அளித்திருக்கும் என்றாலும் தமிழ் சினிமாவின் தரம் தெரியுமென்பதால் அதையும் நிறைய நம்பிக்கையாக சொல்ல முடியவில்லை. இசைச்சூழல் மிகுந்த குடும்பத்தில் அவரது தனித்த திறமையாலும் யுவன் ஒரு நல்ல இசையமைப்பாளர் என்பதைத் தாண்டி வர்க்கம் என்ற முறையில் சராசரி தமிழ் மக்களின் வாழ்க்கையிலிருந்து அன்னியப்பட்டவர். அத்தகைய தமிழ் வாழ்க்கையும் அவருக்கு தெரியாது.


அந்த சராசரி தமிழ் மக்களில்தான் சராசரி முசுலீம் மக்களும் இருக்கிறார்கள் என்பதால் யுவன் அலைவரிசையில் இசுலாமிய மக்களும் ஒன்ற முடியாது. ஒருக்கால் மதவாதிகள் முயன்று பார்த்தால்? பிரியாணி படத்தில் மஞ்சள் சேலை குத்தாட்டத்திற்கு யுவன் இசையமைத்த பாடலை ரசிக்க வேண்டும். அருணகிரியை ஆமோதித்தவர்கள் இதை ரசிப்பதில் என்ன பிரச்சினை என்ற கேள்வியும் எழாமல் இல்லை.


யுவனது இசையை ரசிக்கும் ரசிகர்களுக்கு அவர் இந்துவாகவோ, இசுலாமியராகவோ இருப்பதில் பெரிய பிரச்சினை இல்லை. அவர்களுக்குத் தேவையான இசையை அளிக்கும் யுவன்தான் முக்கியமே அன்றி மதம் அல்ல. ஆனால் அந்த இசையின் மூலம் பிரபலமான யுவனையும் அவரது மதமாற்றத்தையும் தூக்கிபிடிக்கும் மதவாதிகளுக்கு அந்த இசை தேவையில்லை. இசையையோ, இல்லை சினிமாவையோ ரசிப்பதற்கு இன்னமும் இசுலாம் போதிய அனுமதி கொடுக்கவில்லை எனும் போது இவர்கள் யுவனது மதமாற்றம் குறித்து துக்கப்படுவதற்கு பதில் மகிழ்ச்சி அடைவது ஏன்? பிரபலமும் வேண்டும், ஹராமையம் பின்பற்ற வேண்டும் என்றால் இந்த முரண்பாட்டிற்கு விடையில்லை. ஆக இதன் பொருட்டாவது இசுலாமிய மதவாதிகள் யுவன் மதமாற்றம் குறித்து அடக்கத்துடன் இருக்க வேண்டும் என்பதை வெட்கத்துடன் பரிசீலிக்க வேண்டும்.


யுவனைப் போன்ற மேட்டுக்குடி இளைஞர்கள் மற்றும் கலைஞர்களின் பிரச்சினைகளும், அவற்றை அவர்கள் பார்க்கும் விதமும் வேறு. மண வாழ்க்கை பிரச்சினைகள், வியாபாரத் தொல்லைகள், வசதி குறித்த போதாமைகள் என்று இவர்களுக்கு வரும் பிரச்சினைகளின் அடிப்படையும் எளிய மக்களின் யதார்த்தமும் ஒன்றல்ல. அதனால் பிரச்சினைகளுக்காக இவர்கள் நவீன கார்ப்பரேட் சாமியார் வசம் போவதற்கும் அதையே ஒரு மத மாற்றத்திற்கு முகாந்திரமாக வைப்பதற்கும், பிறகு விரும்பா விட்டால் மாற்றிக் கொள்வதற்கும் எல்லா வாய்ப்புகளும் இருக்கிறது. யுவனுக்காக கண்ணீர் வகுத்த மார்க்க சகோதரர்கள் இதன் பொருட்டாவது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உணர்ச்சிவசப்படுதல் தவறு.


ஏழைகளையும் சரி, பணக்காரர்களையும் சரி எந்த மதமும் பெரிய அளவுக்கு மாற்றி விடாது. கோயம்பேடு சந்தைக்கு சென்று சந்தித்த ஒரு முசுலீம் தொழிலாளியிடம் தொழுவீர்களா என்று கேட்ட போது அதற்கு ஏது நேரம் என்று அவர் தெரிவித்தார். இதனாலேயே அவர் முன்னுதாரமான இசுலாமியர் இல்லையா? வர்க்கத்தின் வரம்புகளுக்கு உட்பட்டுத்தான் மதம் இருக்கமுடியுமே அன்றி அனைவருக்கும் பொதுவான இசுலாம் என்று ஒன்று கிடையவே கிடையாது. இது வர்க்கத்திற்கு மட்டுமல்ல இனம், மொழி, சாதி, பண்பாடு என்று நாட்டுக்கு நாடு வேறுபடும் பல யதார்த்தங்களுக்கும் பொருந்தும். இவற்றையெல்லாம் அழித்து விட்டு தூய இசுலாம் ஒன்றைக் கொண்டு வருவதுதான் அமெரிக்க அடியாள் சவுதி முன்வைக்கும் வகாபியசம். ஆனால் என்னதான் தலைகீழாக நின்று கத்தினாலும் வகாபியிசத்தின் தூய இசுலாம் என்பது நடைமுறைச் சாத்தியமற்ற ஒன்று.



ஷியா கொலைகள்
 

அல்லா பாகிஸ்தானில் ஷியா பிரிவு முசுலீம் மக்களை அல்லும் பகலும் கொல்லும் சன்னி பிரிவு தீவிரவாதிகளை திருத்தாமல் வேடிக்கை பார்ப்பது ஏன்?


இன்னும் புரியும் விதத்தில் கேட்போம். யுவன் எனும் இளைஞனை நல்வழிப்படுத்தி ஆட்கொண்ட அல்லா, பாகிஸ்தானில் ஷியா பிரிவு முசுலீம் மக்களை அல்லும் பகலும் கொல்லும் சன்னி பிரிவு தீவிரவாதிகளை திருத்தாமல் வேடிக்கை பார்ப்பது ஏன்? யுவன் எனும் சினிமா பிரபலத்திற்கு நேரம் ஒதுக்கி பண்படுத்தும் வேலை பார்க்கும் இறைவனுக்கு ஷியா முசுலீம்களின் மரண ஓலத்தை நிறுத்துவதற்கு நேரம் இல்லையா?
ஈராக், ஆப்கான், சிரியா, பாலஸ்தீன் என்று பல நாடுகளில் இசுலாமிய மக்களைக் கொல்லும் அமெரிக்காவுக்கு அடியாளாக இருக்கும் சவுதி அரேபியாவை தண்டிக்காமல் அல்லா ஊக்குவிப்பது ஏன்? ஒரு இசுலாமிய மதவாதியின் மனதில் இத்தகைய கேள்விகள் ஏதும் குடையாமல் இருப்பதன் காரணம் என்ன? அதுதான் மதம் எனும் அபினின் மகிமை. வாழ்க்கை பிரச்சினைகளை எதிர்கொண்டு போராடுவதற்கு பதில் அதை சகித்துக் கொண்டு வாழ்வதையே எல்லா மதங்களும் சொல்லுகின்றன.
அதனால்தான் அனைத்து மதங்களும் ஆளும் வர்க்கங்களின் அடக்குமுறையை ஆன்மீகத்தின் பெயரால் மக்களிடம் கொண்டு செல்கின்றன.


எனவேதான் மதம் என்பது ஒரு தனிநபரது தனிப்பட்ட வழிபாட்டு உரிமையாக மட்டும் இருக்க வேண்டும். இதைத்தாண்டி அவரது சமூக, அரசியல், பொருளாதார விசயங்களில் கட்டுப்படுத்தும் உரிமையை மதங்களுக்கு தரக்கூடாது என்கிறோம். அப்படி கட்டுப்படுத்த வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ் மற்றும் இசுலாமிய வகாபியவாதிகளின் விருப்பம். இவர்கள்தான் யுவனது மதமாற்றத்தை களிப்பும், வெறுப்பும் கொண்டு பார்க்கிறார்கள்.



அந்த வகையில் ஒரு மனிதனுக்குரிய மதம் மாறும் ஜனநாயக உரிமையை மற்ற எவரையும் விட இந்த மதவாதிகள்தான் மறுக்கிறார்கள். அந்த மறுப்பை வேரறுக்கும் விதமாக மதங்களின் விஷப்பல்லை முறியடிக்கும் வேலையினை நாம் தொடர்வோம்.

Thanks : Vinavu