Friday, November 15, 2013

சிறுகதை : சூது கவ்வும்








நைட் டியூட்டி முடிவடைந்து அறைக்குத் திரும்பியதும் இடுப்பிலிருந்த கைத்துப்பாக்கியை எடுத்து லொக்கரினுள் பத்திரமாகப் பூட்டிவைத்தான் சப் இன்ஸ்பெக்டர் ஜிஹான். பொலீஸ் யூனிபோமை களைந்து உடைமாற்றி கெண்டீன் பையன் வைத்து விட்டுச் சென்ற தேனீரைக்கூட அருந்தாமல் கட்டிலில் தொப்பென விழுந்ததுதான் அவனுக்குத் தெரியும். அடித்துப்போட்டதுபோல அப்படியொரு தூக்கம். எவ்வளவு நேரம் உறங்கினானோ தெரியவில்லை.


மீண்டும் அவன் கண்விழித்தபோது மேசையில் மதியச் சாப்பாட்டுப் பார்சல் தயாராய் இருந்தது.


மெத்தைக் கட்டிலில் இருந்து உடனே எழுவதற்கு மனமில்லாமல் தயைணைகளை முதுகுக்கு கொடுத்து சுவரோடு சாய்ந்து உட்கார்ந்தான். கண்ணாடி யன்னலினூடாக வெகுதூரத்தில் தனவந்திரி மருத்துவமனையும் அதன் பின்னணியில் அலையில்லாத மட்டிக்களிக்கடலும் தெரிந்தது. அதன் ஓரத்தில் மௌன எறும்புகளாய் ஊர்ந்து கொண்டிருக்கும் வாகனப் போக்குவரத்தை சில நிமிடங்கள் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். இனி எழுந்திருக்கலாம் என்று நிiனைத்தபோது செல்போன் சிணுங்கியது.


'ஹலோ கவுத?' என்று கேட்டான்.


'எஸ் ஐ ஜிகான் மஹத்தயா இன்னவாத?'


'ஒவ் கதாகரனவா.. கவுத ஒயா?' எங்கேயோ கேட்ட குரல் போலிருக்கவே அப்போதுதான் சட்டென செல்போன் திரையைப் பார்த்தான். அதில் 'பங்ஸ ஜாயா' என்று ஒளிர்ந்தது.


பங்ஸ ஜாயா ஜிஹானுடைய நண்பன். ஜிஹான் இங்கு வருவதற்கு முன்பு இதே பொலீஸ் நிலையத்தில் ஒரு சார்ஜனாக இருந்தவன். அவனிலும் பத்து அல்லது பன்னிரண்டு வயது பெரியவனாக இருந்தாலும் அவனும் பங்ஸாவும் வவுனியாவில் சிலவருடங்கள் பொலீஸ் கடமையில் ஒன்றாக இருந்தபோது ஒருவரையொருவர் ஒருமையில் அழைத்துக்கொள்ளும் அளவுக்கு நெருக்கமாகி விட்டவர்கள். இங்கு கன்னியாவில் நடந்த ஒரு துப்பாக்கிச் சண்டையில் முழங்காலில் குண்டடிபட்டதும் பொலீஸ் சேவையில் இருந்து ஓய்வுபெற்று விட்டான் பங்ஸா. தற்போது சீனக்குடா ப்றீமா ஆலையில் கணணி உதவியாளராக வேலைபுரியும் தன் மனைவி அமராவோடு தானியகம குவாட்டர்ஸ் ஒன்றில் வசிக்கின்றான்.


'ஹேய் பங்ஸா நீயாடா? நான் வேற யாரோன்டு நெனைச்சேன்..'


'என்னடா அவ்வளவுக்கு குரல மதிக்கல்லயா நீ? அதுசரி, இன்டைக்கு பின்னேரம் ஏதும் வேலை இருக்கா உனக்கு..?'


'இல்லை.. ஏன் என்ன விசயம்?'


'ஒண்ணுமில்லடா.. பின்னேரம் சர்தாபுர வளவு பக்கம் வாறியா நீ? நாளைக்கு காலையில தோட்டத்தில புதுவீட்டுக்கு அத்திவாரம் தோண்டப்போறோம். அதனால நாங்க எல்லாரும் இன்டைக்குப் பின்னேரம் அங்க இருக்கிற எங்க கொட்டேஜ்ல நைட் அவுட் சமையல் ஒண்டு போடறதா ஐடியா.. மரை இறைச்சி கொஞ்சம் கிடைச்சிருக்கு.. அதோட அதுவும் இருக்கு! நீயும் வந்தா நல்லாருக்குமே என்றுதான் எடுத்தன்.. என்னடா வாறியா?'


'ஆங் வரலாம்.. ஆனா நைட்ல நான் ஸ்டேசனுக்கு திரும்பி வர லேட்டாகுமே..?'


'ஆனா நீ திரும்பி போனால்தானே..?'


'என்னடா சொல்ற..?'


'இல்ல.. நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை உனக்கு ஓவ்ஃதானே.. அதால இங்கேயே எங்களோட நைட் தங்கிடு.. அதுதான் சொன்னேன்'


அவ்வளவுதான். ஜிஹானின் மண்டைக்குள் எங்கோ ஒரு மின்குமிழ் பளிச்சென எரிந்தது.


'டேய் பங்ஸ், யாரெல்லாம் இன்னைக்கு நைட் அங்க தங்கிறோம்..?' என்று கேட்டான் வெகுஆவலாக.


'அதுவா.. நானும் வைப்ஃ அமராவும் மகளும்தான் வாறோம். ஏண்டா?'


'இல்ல மச்சான் நம்ம தண்ணியடிக்கிற நேரம் அதுகள் இருந்தா பரவாயில்லையா..? அதுதான் பார்த்தேன்..' என்றேன் உள்ளுர பொங்கிப் பிரவகித்த மகிழ்ச்சியை மறைத்துக்கொண்டு.


'இல்லடா.. காலையில அத்திவாரம் தோண்டுற கூலி ஆக்களுக்கு டீ சாப்பாடு செய்யிறதுக்கு பொம்பிளைகள் வேணும்தானே.. அதால அதுகளையும் கூட்டிக்கிட்டுத்தான் மச்சான் வரணும். அது பிரச்சினையில்லடா மச்சான்.. நம்ம தனியா தோட்டத்துக்குள்ள போய் லைட்டா பியர் ஸ்டவுட் மட்டும் எடுப்பம்..என்ன?'


'சரிடா பங்ஸ்!'


'நாங்க இதோ இப்பவே அங்கே போகிறோம்.. நீ இருட்டுறதுக்கு முதல் ஆறரை மணிக்கெல்லாம் வந்திடு. வழியில பாத்து வா.. புதுசா க்றவல் ரோடு டோசர் போட்டு வழிச்சு வச்சிருக்கான்.. மழையும் பெய்திருக்கு'


'சரி மச்சான்.. வாற வழியில ஒசின்ல இறங்கி நானே சாமான்லாம் வாங்கிட்டு வாறேன்.. நீ மனிசிட்ட சொல்லி பைற்ஸ் ட்வெல் ரெடி பண்ணி வை கலக்கிடுவோம் ஓக்கே ஸீயூடா!'


செல்போனை அணைத்ததும் உற்சாகம் தாங்க முடியாமல் 'Yes..Yes!' என்று கை முட்டியால் காற்றில் மாறி மாறிக் குத்தினான். கட்டில் மெத்தையில் எழுந்து நின்று துள்ளிக் குதித்தான்.


ஜிஹானின் அதீத உற்சாகத்திற்குக் காரணம் அவனுக்குள் இருக்கும் ஓர் இரகசியத் திட்டம். எத்தனையோ மாதங்களாய் தன் மனதுக்குள்ளேயே ஒத்திகை பார்த்து பார்த்துக் காத்திருந்த அவனுடைய கனவுத்திட்டம் நிறைவேறும் நாள் இன்றுதான் என்று பட்சி கூறியது. அதை நினைக்கும் போது அவனுக்கே பரபரப்பாக இருந்தது. இருங்கள்.. அதை முழுமையாகக் கூறினால்தான் உங்களுக்குப் புரியும்.


பங்ஸ ஜாயாவுக்கு பிள்ளைகளென்றால் ஒரே ஒரு மகள் மட்டுமே. அவளும் வெளியூர் பாடசாலை விடுதி ஒன்றில் தங்கி கல்வி கற்பதாக அவன் சொல்லியிருந்தான். அதனால் அவனும் மனைவி அமரா அக்காவும் மட்டுமே தானியகம குவார்ட்டஸிலே வசித்து வந்தார்கள். அமரா வேலைக்குச் சென்றுவிடும் நாட்களிலே அவன் தனியாகத்தான் இருந்தான். கட்டாய ஓய்வின் பின்பு தனிமை அவனை வெகுவாக வாட்டியிருக்க வேண்டும். அதனால் ஜிஹான் தன்னுடைய ஊரான அவிசாவளையிலிருந்து பதவி உயர்வு பெற்று திருகோணமலைக்கு வந்தபோது பங்ஸ ஜாயா மிகவும் மகிழ்ந்து போனான். ஜிஹானைப் பலமுறை குவாட்டசுக்கு அழைத்துச் சென்று விருந்தெல்லாம் போட்டு உபசரித்திருக்கின்றான். நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவனை அங்கு வருமாறு அழைப்பான். ஜிஹானும் பைக்கில் அவனைத்தேடிச்சென்று பழைய கதையெல்லாம் பேசிக்கொண்டிருந்துவிட்டு வருவதுண்டு. வவுனியாவில் பிரிந்த நண்பர்கள் மீண்டும் அடிக்கடி சந்திக்கும்படியாக திருகோணமலைக்கு வந்ததிலே பங்ஸாவைப் போலவே ஜிஹானுக்கும் மிகவும் மகிழ்ச்சியாகவே இருந்தது. ஆனால் அவனுடைய அந்த மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிக காலம் நீடிக்கவில்லை.



ஆம் ஒருநாள் கடமை நிமித்தம் சீனக்குடாவில் இருக்கும் பாலர் பாடசாலை ஒன்றுக்கு சென்றிருந்தான் ஜிஹான். அந்தப் பாடசாலையில் தன் வாழ்நாளிலே கனவிலும் கூட அவன் காணக்கிடைக்காத ஓர் அழகிய இளம்பெண் ஜிஹானின் கண்ணில் பட்டாள். அங்கு கற்பிக்கும் ஓர் ஆசிரியையுடன் அவள் ஏதோ சிரித்துப் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டவன், 'உன்னழகைக் கண்டு கொண்டால் பெண்களுக்கே ஆசைவரும்' என்று கண்ணதாசனோ வாலியோ எழுதிய பாடல் எத்தனை உண்மையானது என்பதை அப்போதுதான் புரிந்து கொண்டான். அப்படிப்பட்ட அந்தப் பேரழகியிடம் அவன் மயங்கியதிலே ஆச்சரியமில்லைதானே. அந்த நிமிடம் தன்னுடைய கடமையையும் மறந்து அவளது கவனத்தை எப்படி தன் பக்கம் திருப்பலாம்.. அவளிடம் தனது விருப்பத்தை எப்படிக் கூறலாம் என்றுதான் யோசித்துக் கொண்டிருந்தான். ஆனால் மேலதிகாரியிடமிருந்து வந்த அவசர அழைப்பின் காரணமாக அவன் உடனடியாக தன்னுடைய ஸ்டேசனுக்குத் திரும்பவேண்டியிருந்தது. அதனால் அன்றைய தினம் அந்த அழகு தேவதையின் பெயரைக்கூடக் கேட்டுக்கொள்ள முடியாமல் வந்துவிட்டான்.


அவளைப் பார்த்துவிட்டு வந்ததிலிருந்து பல நாட்களாக ஸ்டேசனில் ஜிஹானுக்கு வேலையே ஓடவில்லை. அந்த அழகியை எப்படி மீண்டும் சந்திப்பது அவளை எப்படி அடைவது என்பது பற்றியே இரவும் பகலும் எண்ணி எண்ணிப் பைத்தியமாய் உலாவினான். அவளைப் பற்றி பங்ஸ ஜாயாவிடம் கூறினால் அவன் மூலமாக அவளைத் தேடிக் கண்டுபிடித்து தான் நினைத்ததை அடையலாம் என்ற நம்பிக்கையோடு ஒருநாள் பைக்கில் பங்ஸ ஜாயாவின் வீட்டிற்குச் சென்றிருந்தான். ஆனால் அங்கு அவன் சென்றபோது ஓர் அதிர்ச்சி கலந்த ஆச்சரியம் காத்திருந்தது. ஆம், பாலர் பாடசாலையிலே அவன் கண்ட அந்தப் பேரழகி அவன் வீட்டு வெளிமுற்றத்தில் ஈரம் சொட்டச் சொட்ட நின்று கழுவிய ஆடைகளைப் பிழிந்து உலர்த்திக் கொண்டிருந்தாள்.


ஜிஹான் உடனடியாக எதுவும் புரியாமல் குழப்பத்துடன் பைக்கை நிறுத்திவிட்டு அவளையே மலங்க மலங்கப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.


'மச்சான் ஜிகான், வாடா..வா! என்னடா அப்பிடிப் பாக்கிற? இதுதான்டா என்ட மகள் மல்காந்தி. நான் சொன்னேனே ஹொஸ்டல்ல படிக்கிறாள் என்டு. ஏஎல் எக்ஸாம் எழுதிட்டு போன கிழமைதான் ஊருக்கு வந்திருக்கிறா. மல், இதுதான் வாப்பாட ப்ரெண்ட் ஜிகான் எஸ்ஐ. டவுன்ல பெரிய பொலிஸ் ஸ்டேசன்ல இருக்கார்..' என்று அறிமுகப்படுத்தினான் பங்ஸா.


'ஹலோ அங்கிள்!' என்று அவனைப் பார்த்து வசீகரமாய் புன்னகைத்துக் கொன்று விட்டு உள்ளே சென்றாள் அந்த அழகிய ராட்சசி.


அவ்வளவுதான். ஜிஹான் நின்றிருந்த நிலப்பகுதியே உடைந்து அவனை உள்வாங்குவது போலிருந்தது அவனுக்கு. தேளிடம் கடிவாங்கிய திருடன் போல மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் அவன் அன்று தவித்த தவிப்பை யாருமறிய மாட்டார்கள்.


'என்னடா இப்படி பேயறைந்த மாதிரி யோசிக்கிறாய்..?' என்று கேட்டான் பங்ஸா.


'இல்ல.. உனக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கா.. நான் ஏதோ சின்ன பிள்ளை என்று நினைச்சண்டா'


அன்றைய தினம் ஜிஹான் உள்ளுர உடைந்து நொறுங்கிப்போனாலும் எப்படியோ சமாளித்து பங்சா குடும்பத்தினரிடம் விடைபெற்று வந்து விட்டான். ஆனால் அன்றிலிருந்து இதோ இந்த நிமிடம் வரை அவனுடைய நிம்மதி தொலைந்தே போனது. அவனால் மல்காந்தியை மறக்கவும் முடியவில்லை. தன் வேலைகளில் முன்புபோல கவனம் செலுத்தவும் முடியவில்லை.


ஆண்களையெல்லாம் ஈவிரக்கமின்றி அடித்துப்போடும் அவள் பேரெழிலும் அவளை அடைவது பற்றி அவன் தனக்குள் வளர்த்து வைத்திருந்த கற்பனைகளும் ஒருபுறம் ஜிஹானைப் பாடாய்ப்படுத்திப் பைத்தியமாக்கினால் மறுபுறம் மல்காந்தி தன் நண்பனின் மகள் என்ற உண்மையோ அவனை அதிர்ச்சிக்கும் ஏமாற்றத்துக்கும் உள்ளாக்கிச் சித்திரவதை செய்து கொண்டிருந்தது.


'மல்காந்தியை திருமணம் செய்வதற்கு பங்ஸாவிடம் கேட்டாலென்ன?' என்று ஓர் அசட்டுத் துணிச்சல் கூட அவனுக்கு வந்தது. ஆனால் தான் முப்பத்து ஐந்து வயதைத் தாண்டியவன். அவளோ வளர்த்தியாக இருந்தாலும் இப்போதுதான் ஏஎல் பரீட்சை எழுதியிருக்கும் ஒரு மாணவி. இருவருக்குமிடையில் வயது வேறுபாடு மிகப்பெரியதாக இருந்தது. வேறு யாரிடமாவது என்றால் தன்னுடைய வயதை அவன் குறைத்துககூடச் சொல்லலாம். ஆனால் ஜிஹானைப் பற்றி எல்லாம் தெரிந்த பங்ஸ ஜாயாவிடம் அது முடியுமா? மல்காந்தி படிப்பில் படுகெட்டிக்காரியாகவும் இருந்து நிறைய கனவுகளோடு வேறு இருப்பவளாம். தொடர்ந்து படித்து கெம்பஸ் அது இது என்று இப்போதைக்குத் தன் திருமணத்தை நிச்சயம் நினைக்கவே மாட்டாள்.


தவிர, 'அங்கிள்' என்று தன்னால் அழைக்கப்படும் ஒருவரை எந்த இளம்பெண்தான் திருமணம் செய்யச் சம்மதிப்பாள்? அதற்காக அப்படி ஓர் அழகுதேவதையின் அங்கங்களை அள்ளிப்பருகாமல் விட்டுவிடவும் ஜிஹானுக்கு மனது வரவில்லை. அவளை தமிழ் சினிமாவில் போல முகமூடி அணிந்து வாகனத்தில் கடத்திச் சென்று கட்டாயத் திருமணம் செய்வது என்றெல்லாம் அவன் குரங்கு மனம் தாவியது உண்மையே. ஆனால், அவையெல்லாம் தன் எதிர்கால வாழ்வையே சூனியமாக்கிவிடும் முட்டாள்தனமான செயல்கள் என்று புரிந்து சுதாரித்துக் கொண்டான்.


இறுதியில் ஒரு பெரும் மனப்போராட்டத்திற்குப் பிறகு மல்காந்தியை பிறர் அறியா வண்ணம் எப்படியாவது மடக்கி ஆசைதீர முழுமையாக ஒருதடவை அனுபவித்துவிடுவது எனும் 'இலகுவான' தீர்மானத்துக்கு வந்தான் ஜிஹான். அப்படி ஏதாவது செய்தாலொழிய தன்னுடைய அலைபாயும் மனதை ஒருநிலைப்படுத்த முடியும் என்று அவனுக்குத் தோன்றவில்லை. அதனால் அதற்கு சாத்தியமான வழிகளைப் பற்றி யோசித்து யோசித்து 'ஒபரேஷன் மல்காந்தி' திட்டத்தை மனதுக்குள் தீட்டினான்.


ஆனால் அந்தத் திட்டம் நிறைவேறும் நாள் இத்தனை விரைவாக - அதுவும் இன்றிரவே வந்து சேரும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அதுதான் இறைவன் சித்தம் போலும். இல்லையென்றால் ஏன் இப்படி பழம் நழுவிப் பாலில் விழ வேண்டும்?



000






'ஆங் எஸ் ஐ மஹத்தயா.. தாம கேஃவ நெத்த..?'



என்று கேட்டபடி அறையைக்கடந்து சென்ற ஒரு பொலீஸ் இளைஞனின் குரல் ஜிஹானை பழைய நினைவுகளிலிருந்து விடுவித்தது. எழுந்து குளித்துவிட்டு வந்து பார்சலைப்பிரித்துச் சாப்பிட்டான். அவன் கைகள் சோற்றைப் பிசைந்து கொண்டிருந்தாலும் மனமெல்லாம் இன்றிரவு நடக்கப்போவதைப் பற்றியே சுழன்று கொண்டிருந்தது.

மாலையில் நன்றாகக் குளித்து மிகச்சிறந்த ஆடைகளை அணிந்து கொண்டான். தன்னுடைய 'ஒபரேஷன் மல்காந்தி'க்கு தேவையான சில பொருட்களை சோல்டர் பேக்கில் திணித்தபடி அறையைவிட்டு வெளியே வந்தான். இரவுக்கடமைக்குச் செல்லும் பொலீஸ் உத்தியோகத்தர்களின் சல்யூட்களை கடந்து வாகனத்தரிப்பிடத்திலிருந்த தன்னுடைய பைக்கை உதைத்தான். ஸ்டேசனை விட்டு பிரதான வீதிக்கு இறங்கி வந்து கண்டி வீதியில் பத்து கிலோமீற்றர் தூரத்தில் இருக்கும் சர்தாபுர நோக்கிப் விரைந்தான்.


இலிங்கநகர் பெற்றோல் ஷெட் ஃபுட் சிட்டியில் இறங்கி தன் கனவுக்கன்னிக்கு சொக்லேட்கள், ஐஸ்க்ரீம், பழங்கள் மற்றும் குளிர்பானக் கேன்கள் போன்றவற்றை வாங்கியபின் ஆண்டாங்குளம் ஒசின் ஹோட்டலில் பியர் ஸ்டவுட் கேன்களையும் சேகரித்துக்கொண்டு சர்தாபுரவிலுள்ள பங்ஸ ஜாயாவின் தோட்டத்தை ஜிஹான் அடைந்தபோது லேசாக இருட்டிவிட்டிருந்தது.


அவன் உள்ளே நுழைந்தபோது பங்ஸ ஜாயா, அவன் மனiவி அமரா மற்றும் அழகு தேவதை மல்காந்தி மூவரும் தங்கள் தோட்டத்துக் களிமண் குடிசைக்கு வெளியே மெல்லிய இருளில் பிளாஸ்டிக் கதிரைகளைப்போட்டு அமர்ந்து ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். ஜிஹானைக் கண்டதும் பங்ஸ ஜாயா எழுந்து வந்து உற்சாகமாக வரவேற்று ஒரு கதிரையில் அமர்த்தினான். பங்சாவிடம் தான் கொண்டு வந்த ஷோல்டர் பேக்கை திறந்து குடிபானங்களைக் காண்பித்தான் ஜிஹான்.


'ஓக்கே.. இது போதும்.. எங்கே நீ வராம இருந்திடுவியோ என்று நினைச்சன்டா'


வழமையாக ஜிஹானைக் கண்டதும் உற்சாகமாகப் பேசும் அமரா அக்காவும் மல்காந்தியும் சற்று டல்லாக இருந்தார்கள். அமரா அக்கா சம்பிரதாயத்துக்கு ஏதோ இரண்டு வார்த்தை அவனோடு பேசிவிட்டு சமையல் கட்டுப்பக்கம் நகர்ந்துவிட மல்காந்தியும் பின்தொடர்ந்தது அவனுக்கு ஒருமாதிரியாக இருந்தது. அவர்கள் இருவரின் நடத்தையும் ஏதோ தப்பு என்று அவனை உணரச் செய்தது.


'என்ன பங்ஸ் ஏதும் பிரச்சினையாடா?' என்று உரிமையோடு கேட்டான் ஜிஹான்;.


பங்ஸா எதுவும் பேசாமல் சிறிது நேரம் அமைதியாக இருந்தான். அது ஜிஹானுக்கு இன்னும் சங்கடத்தைத் தந்தது.


'பங்ஸ்.. ஏன் நான் வந்தது அவங்க இரண்டுபேருக்கும் பிடிக்கல்லையா.. நீ வரச் சொல்லித்தானே மச்சான் வந்தேன்..'


'ச்சீ.. அதெல்லாம் ஒண்ணுமில்லைடா.. இது வேற பிரச்சினை' என்றான் பங்ஸா.


'என்னடா அது..? சொல்லக் கூடியதாயிருந்தா.. சொல்லேன்!'


'அது வந்து.. இன்டைக்கு ஏஎல் ரிசல்ட் இன்டநெற்ல வந்திருக்கு. உனக்கு தெரியுந்தானே..? அதை இன்டைக்கு மத்தியானம் நெற்கபே ஒண்டுக்குப் போய் மல்காந்தி பார்த்திருக்கா.. அதுதான் அழுகிறா!'


'ஏன் மச்சான் மல்லின் ரிசல்ட் என்னவாம்.. அவள் ஃபெயிலாடா?'


'சேச்சே.. அதெல்லாம் அவள் பாஸ்;தான்.. ஆனா இவ எக்ஸாம் மிச்சம் நல்லா செய்தவவாம்.. பெரீசா எதிர்பார்த்திருக்கா போல. தான் எதிர்பார்த்தளவு ரிசல்ட் வரல்லயாம்.. மெடிக்கல் பெகல்டி கிடைக்காதாம்.. தனக்குப் பெருத்த அவமானமாம் என்று என்னவெல்லாமோ சொல்லிட்டிருக்காள் பாரேன்!'


'சரி, இது ஃபெஸ்ட் டைம்தானே..? இதுக்குப் போய் அலட்ட வேணாம்.. மல் படிப்புல கெட்டிக்காரிதானே.. அடுத்த ஷையில் இன்னும் நல்ல ரிசல்ட் எடுத்தாப் போச்சு என்று சொல்லுடா!' என்றான் ஜிஹான் அவனிடம்.


'நானும் அமராவும் எவ்வளவோ சொல்லிப் பாத்துட்டோம்.. நீ கொஞ்சம் போய் எடுத்துச் சொல்லு மச்சான்' என்று என்னை அவளிடம் அழைத்துப் போனான். உள்ளே மல்காந்தியும் தாயும் கவலையோடு அமர்ந்திருந்தார்கள்.


'பாருங்க ஜிகான் மல்லி, அங்க ஸ்கூல்ல மல்லுக்கு கட்டாயம் மெடிசின் கிடைக்கும் என்று நம்பியிருக்காங்களாம். ஆனா இந்த ரிசல்ட்டுக்கு பீ எஸ்ஸியே சந்தேகமாம்.. அதுதான் பெரிய கவலையாயிருக்கு இவளுக்கு.. மத்தியானமும் சாப்பிடல்ல' என்றார் அமரா அக்கா தானும் விசும்பியவாறு.


ஜிஹானும் தன்னால் முடிந்தளவு அவர்கள் இருவரையும் தேற்றுவதுபோல நிறையப்பேசினான். ஆனால், மல்காந்தியை அதெல்லாம் சமாதானப் படுத்துவதாகத் தெரியவில்லை. பின்பு சூழ்நிலையை திசை திருப்புவதற்காக, 'அதெல்லாம் சரி, உங்களையெல்லாம் நம்பி சாப்பிட வந்த என்னை இப்பிடிப் பட்டினி போடலாமா?' என்று கேட்டுவைத்தான் ஜிஹான்.


அதன் பிறகு அமரா அக்கா சுதாரித்துக் கொண்டு சட்டென சமையலில் இறங்கிவிட்டா.


'மல்.. உனக்குத்தான் நிறைய பழம் சொக்லேட் ஐஸ்க்ரீம் எல்லாம் வாங்கி வந்தேன். இப்படி நீ இப்பிடி சாப்பிடாம டல்லாக இருந்தா எப்பிடி? கொஞ்சம் ஐஸ்க்ரீமாவது சாப்பிடு..!' என்று அவற்றையெல்லாம் எடுத்துக் கொடுத்தான். ஐஸ்க்ரீமில் போதுமானளவு தூக்க மருந்தை வரும் வழியிலேயே அவன் கலந்து விட்டிருந்தான்.


'தேங்ஸ் அங்கிள்!' என்று அவற்றை வாங்கிக்கொண்டு தன் அறைக்குள் சென்றுவிட்டாள் ஜிஹானுடைய கனவுத் திட்டத்தின் கதாநாயகி மல்காந்தி. அவளின் கவலைதோய்ந்த முகத்தையும் கண்ணீரையும் பார்த்தபோது பேசாமல் 'ஒபரேஷன் மல்காந்தி'யை ஒத்திப்போடுவோமா என்று கூட ஒரு தடவை அவன் யோசித்தான். ஆனாலும் வாய்ப்புகள் எப்போதும் கிடைப்பதில்லை அல்லவா?


பங்ஸ ஜாயா சிறிது நேரம் ஜிஹானுடன் பேசிக்கொண்டிருந்து விட்டு சமையலுக்கு உதவுவதற்காக உள்ளே சென்றுவிட்டான். ஜிஹான் எழுந்து அந்த குடிசையைச் சுற்றிப் பார்த்தான். அது ஆங்கிலப் படங்களிலே வரும் பிக்னிக் கொட்டேஜையொத்த பெரிய விசாலமான ஒரு குடிசை. அதில் இரண்டு படுக்கை அறைகளும் ஒரு கூடமும் சமையலறையுமிருந்தது. மல்காந்தி தனது அறைக்குள்ளே சிமினி விளக்கு வெளிச்சத்தில் ஏதோ எழுதிக்கொண்டிருந்தது யன்னலினூடாத் தெரிந்தது. மறுபுறம் சமையலறைக்குள் பங்ஸ ஜாயாவும் மனைவி அமரா அக்காவும் பெற்றோ மெக்ஸ் விளக்கு வெளிச்சத்தில் இறைச்சிகளைப் பொரித்துக் கொண்டிருந்தார்கள்.


பின்பு ஜிஹானும் பங்ஸாவும் தோட்டத்தினுள்ளிருந்த நெருப்பு வாகை மரத்தின் கீழ் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். சிறிது நேரத்தில் அமரா அக்கா ஒரு கிண்ணத்தில் பொரித்த இறைச்சியும் சமைத்த கறியும் தந்துவிட்டுச் சென்றதும் இருவரும் குடிபானங்களை வெளியிலெடுத்து அருந்த ஆரம்பித்தார்கள்.


ஜிஹான் எதிர்பார்த்து போலவே சிறிது நேரத்தில் பங்ஸ ஜாயா நிறையக் குடித்துவிட்டு உளற ஆரம்பித்துவிட்டான். வவுனியாவில் ஒன்றாக வேலைசெய்த நாட்களிலும் அவன் இப்படித்தான். போதையேறிவிட்டால் போதும் கட்டுக்கடங்காமல் பேசத்தொடங்கி விடுவான். இப்போது நண்பர்கள் இருவரினதும் நட்பு, காலில் துப்பாக்கிக் குண்டடிபட்டது, மல்காந்தியின் ஏமாற்றம் உட்பட எதையோவெல்லாம் பற்றிப் புலம்புவதும் கண்ணீர் விடுவதுமாக இடைவிடாது பேசிக்கொண்டேயிருந்தான் பங்ஸா. ஜிஹான் மட்டும் மிகவும் அவதானமாக வெறும் பியரை மட்டுமே அதுவும் அளவு மீறாமல்தான் அருந்திக் கொண்டிருந்தான். நிதானமாக இருந்தால்தானே அவனுடைய இரவுத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றமுடியும்.


சிறிது நேரத்தில் பங்ஸா நிறைபோதையாகி தள்ளாடத் தொடங்கிவிட்டான். அது போததாதற்கு அவனுடைய மதுபானத்தில் தூக்கமருந்தையும் ஜிஹான் கலந்து விட்டிருந்தான். எப்படியும் இன்னும் அரைமணித்தியாலத்தில் பங்ஸா உறங்க ஆரம்பித்து விடுவான். உறங்கினால் குறைந்த பட்சம் ஆறு மணிநேரத்திற்கு அடித்து எழுப்பினாலும் அவனால் எழுந்திருக்க முடியாது. அடுத்து அவனுடைய மனைவி அமரா அக்காவையும் தூக்கத்தில் ஆழ்த்த வேண்டியிருந்தது. அதற்காக ஜிஹான் தூக்க மருந்தை குளிர்பானத்தினுள் கலந்து வைத்திருந்தான். சிலவேளை அது சாத்தியமில்லாமல் போனால் கூட வேறு ஒரு ஏற்பாடும் அவனிடமிருந்தது.


இரவுச்சாப்பாட்டை எல்லோரும் ஒன்றாக அமர்ந்து உண்டு முடித்தார்கள். மல்காந்தியும் சபைக்கு வந்திருந்தது ஜிஹானுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவன் கொடுத்த குளிர்பானத்தை தாயும் மகளும் சாப்பிடும்போது அருந்தினார்கள். ஆக 'ஒபரேஷன் மல்காந்தி'க்கு தோதாக எல்லாமே சரியாக நடந்து கொண்டிருந்தது. சாப்பிட்டு முடிந்ததும் குளிர்பான கேன் ஒன்றை ஜிஹான் மல்காந்திக்கு கொடுத்து, 'இது ஒரு எனர்ஜி ட்ரிங்ஸ். இதை குடித்தால் மனம் ரிலாக்ஸாகி நல்ல நிம்மதியான தூக்கம் வரும். கொஞ்சம் தெம்பாகவும் இருக்கும்.' என்றான். அவள் அதை எடுத்துக்கொண்டு 'குட்நைட்' கூறிவிட்டு தன்னுடைய அறைக்குள் சென்றுவிட்டாள். பங்ஸா உட்கார்ந்தவாறு தூங்கிவிழ ஆரம்பித்துவிட்டான். எனவே வேறுவழியின்றி ஜிஹானும் உறங்குவதற்காக அவனுக்கு ஒதுக்கியிருந்த அறையினுள் சென்று கட்டிலிலே அமர்ந்திருந்தான். பங்ஸ ஜாயாவும் மனைவியும் முன் கூடத்தில் தரைவிரிப்பை விரித்து உறங்கி விட்டார்கள்.




நடுநிசி தாண்டும் வரையில் ஜிஹான் உறங்காமல் 'ஒ.ம.' க்காக காத்திருந்தான். தூரத்தில் எங்கோ ஒரு நாய் நீளமாய் ஊளையிட்டது. வெளியே காற்றுடன் மழைவருவதற்கான அறிகுறி தெரிந்தது.



ஜிஹான் தன்னுடைய ஷோல்டர் பேக்கினுள் இருந்த டோச் லைட்டையும் ஸ்ப்ரேயருடன் கூடிய மயக்கமருந்தையும் எடுத்துக்கொண்டு அறையை விட்டு வெளியே கூடத்திற்கு வந்தான். மெல்லிய வெளிச்சத்தில் பங்ஸ ஜாயாவும் அவன் மனைவியும் தம்மை மறந்து ஆழ்ந்த உறக்கத்திலிருப்பது தெரிந்தது. இருந்தாலும் அதை முழுவதுமாய் நம்பாமல் பூனைபோல மெல்ல அருகில் சென்று இருவரது பாதங்களிலும் லேசாய்த் தட்டிப் பார்த்தான். ம்ஹும் அசைவே கிடையாது. எதற்கும் இருக்கட்டும் இன்று அவர்கள் இருவரது மூக்கினருகே சிறிது குளோரபோர்மை ஸ்ப்ரே செய்துவிட்டு எழுந்து மல்காந்தியின் அறையை நோக்கிப் பூனைபோல நடந்தான்.


மல்காந்தியின் அறைக்கதவு சிறிது திறந்திருந்தது. உள்ளே சிறிய சிமினி விளக்கு ஒன்று புகைபிடித்து எரிந்து கொண்டிருந்தது. அந்த மெல்லிய வெளிச்சத்தில் மல்காந்தி கட்டிலில் மல்லாந்து உறங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது. மெல்ல அறைக்கதவைத் திறந்து வாசலில் நின்றபடி அவளது உடலில் டோர்ச் வெளிச்சத்தைப் பாய்ச்சினான்.


அந்த வெளிச்சத்தை அவள் பாதங்களில் ஆரம்பித்து மார்புவரை நகர்த்தி வந்தபோது மெல்லிய வெண்ணிற நைட்டியில் தங்கச்சிலை ஒன்றைக் கிடத்தியது போலிருந்தாள். அவனுடைய இதயம் துடிப்பது அவனுக்கே கேட்டது. வியர்வை பெருக்கெடுத்து காதோரம் கசகசத்தது.

தன்னுடைய நீண்ட நாள் திட்டம் தடையின்றி நிறைவேறப்போவதை எண்ணி மனம் துள்ளியது. மெல்ல நிமிர்ந்து புகைபிடித்த சிமினி விளக்கில் தெரியும் அவளது உடலை பார்த்தவாறிருந்தான். சிறிது நேரம் என்ன செய்வதென்று புரியவில்லை.. முழுமையான மயக்க நிலைக்கு அவள் வந்துவிட்டாளா என்பதை எப்படி உறுதிசெய்வது என்று யோசித்தபடி மெல்ல எழுந்து அவளது மேசையருகே கிடந்த நாற்காலியில் உட்கார்ந்தான். என்னதான் ஜிகான் ஒரு போலீஸ்காரனாக இருந்தாலும் உள்ளுர அவனுக்கு ஒரே நடுக்கமாக இருந்தது. தவறு செய்யப்போகும்போது பதற்றம் எல்லோருக்கும் இருப்பதுதானே.  பயத்திலே தொண்டை வரண்டு தாகம் அவன் உயிரை வாட்டியது. அப்போதுதான் மல்காந்தியின் மேசையிலே அவளுக்கு வாங்கித் தந்த குளிர்பான கேன் ஒன்று இருப்பதைக் கண்டான். அது உடைக்கப்பட்டு சிறிது அருந்தப்பட்டு இருந்தது தெரிந்தது. அவள்தான் பருகிவிட்டு வைத்திருக்கின்றாள்.

'ஆஹா.. மல்காந்தியின் அழகிய மிருதுவான இதழ்கள் பட்ட பானம்..!'

நினைக்கவே ஜிவ்வென்றிருந்தது ஜிகானுக்கு. ஆசையுடன் எடுத்து ஒரேமூச்சில் தொண்டையின் அடிவரையில் மிச்சம் மீதியின்றி கவிழ்த்தான். தாகத்திற்கு இதமாக இருந்தாலும் அது அடியில் மெல்லிய கசப்புச் சுவையாக இருந்தது ஏனென்பதுதான் புரியவில்லை. சிறிது நேரத்தில் அவனுக்கு தொண்டை கமறியது. நெஞ்சுக்குள் எதுவோ அரிப்பது போலிருந்து லேசாக தலைசுற்றலும் ஆரம்பித்திருந்தது.

 மணமும் கசப்பும் சந்தேகத்தைத் தரவே டோர்ச் லைட் அடித்து அதன் பாவனை முடிவுத் திகதியைப் பார்த்தான். எல்லாம் சரியாகத்தான் இருந்தது. 'அப்படியானால் ஏன் இப்படி நெஞ்சை கரிக்கின்றது..?' என்று யோசித்தவன் எதேச்சையாக மேசையைப் பார்த்தபோதுதான் அதைக் கண்டான். அது ஒரு நோட்புக். மூடி திறந்த பேனையொன்றுடன் விரிந்தபடி கிடந்து காற்றில் படபடத்தது. அதிலே தமிழில் ஏதோ எழுதியிருப்பது தெரியவே அதை எடுத்து மிகவும் சிரமத்துடன் படிக்க ஆரம்பித்தான்.

'அன்புள்ள வாப்பா உம்மா,

இரண்டு பேரும் என்னை மன்னிச்சுக் கொள்ளுங்க.. என்னைப் பெற்று வளர்த்த உங்களுக்கு நான் இப்படிச் செய்வது நிச்சயம் துரோகம்தான். நீங்களெல்லாம் எத்தனை சமாதானம் சொன்னாலும் என்னால இந்த அவமானத்தைத் தாங்கவே முடியல்ல. ஸ்கூல்ல என்னால தலைகாட்டவே முடியாது. பெருத்த வெட்கம் வாப்பா இது எனக்கு. அதனாலதான் வாப்பா நான் நீங்க வாங்கி வச்சிருக்கும் எலி மருந்தைக் கூல் ட்ரிங்கிலே கலந்து குடித்துச் சாகும் முடிவுக்கு வந்தேன். இரவு மறைந்த சூரியன் உதிக்கும்போது நான் உயிரோடு இருக்கக் கூடாது. கடைசியாக அதிகாலையில் தொழுதுவிட்டு நான் உங்களை விட்டுப் பிரிந்து போய்விடுவேன். என்னை மன்னிச்சுக் கொள்ளுங்க வாப்பா. என் சாவுக்கு நான்தான்....'

அதற்கு மேல் ஜிகானால் வாசிக்க முடியவில்லை. கண்கள் சொருகி கை கால்கள் யாவும் தளர்ந்துபோய் நிற்க முடியாமல் அப்படியே தரை..யி..ல் மயங்..கி அவன் சரிந்..து விழுந்தபோது தூரத்தில் எங்கோ ஒரு ரயில் கூவும் ஓசை மட்டும் கடைசியாய் கேட்டது.





-மூதூர் மொகமட்ராபி

(10.11.2013)