Friday, July 20, 2012

Myanmar (Burma) : ஒரு அதிர்ச்சி வரலாறு!






ர்மா என அறியப்படும் மியன்மார் நாடு மிக அண்மையில் தான் மக்களாட்சி முறைக்குத் திரும்பியுள்ளது. சுமார் 50 ஆண்டுகளுக்கும் அதிகமாக இராணுவ ஆட்சியில் சிக்கித் தவித்த மியன்மார் கொஞ்சம் கொஞ்சமாக மக்களாட்சிக்கு திரும்பி வந்தது. இதற்காகப் பெரிதும் போராடியவர் ஆங்க் சாங்க் சூ கி ஆவார். உலக நாடுகளில் எழுந்துள்ள சர்வாதிகார ஆட்சிகளுக்கு எதிரான ஒரு சூழலும், அழுத்தமும் கூட இதற்கு ஒரு காரணமாகும். இந்த நிலையில் உலகமே கூர்மையாக மியன்மாரை அவதானித்து வந்த நிலையில் ஏற்பட்ட சோகமே ரொகிங்கியா கலவரம்.

ரொகிங்கியா : ரொகிங்கியா எனப்படும் இஸ்லாமிய வங்காளி மொழி பேசும் மக்கள் சுமார் 800, 000 பேர் வரை மியன்மாரின் மேற்கு மாநிலமான அரக்கான் மாநிலத்தில் வாழ்ந்து வருகின்றார்கள். ரொகிங்கியாக்கள் ஏனைய நாட்டில் வாழும் பிற முஸ்லிம்களிடம் இருந்து தனித்துவமானவர்கள். பல நிலைகளில் ரொகிங்கியாக்கள் காலம் காலமாக வாழ்ந்து வருவதாகக் கூறினாலும். 1950-களுக்கு முன்னர் ரொகிங்கியாக்கள் மிகவும் சிறிய இனமாகவே இருந்தனர். பெரும்பாலானோர் வங்கதேசத்தில் இருந்து கூலிகளாக மியன்மாரில் வேலை செய்தவர்களே ஆவார்கள்.

மியன்மாரின் இதரப் பகுதிகளில் இந்திய முஸ்லிம்கள், மலாய் முஸ்லிம்கள், சீன முஸ்லிம்கள் ரங்கூன் போன்ற நகரத்தில் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார்கள். இவர்கள் யாவரும் ஆங்கிலேயேர் காலத்தில் இங்குக் குடியேறியவர்கள். அத்தோடு மட்டுமில்லாமல் ரங்கூன், மண்டலாய் போன்ற பகுதிகளில் சில பர்மிய முஸ்லிம்கள் சில நூறு ஆண்டுகளாக வாழ்ந்து வந்தனர். இவர்களையும் ரொகிங்கியாக்களையும் பெரிதும் குழப்பிக் கொள்பவர்களும் உண்டு. ரங்கூன் பகுதிகளில் முஸ்லிம்களைப் போலவே தமிழர்களும் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தவர்களே. ஆனால் பெரும்பாலானோர் மியன்மாரிய விடுதலைக்குப் பின்னர் வெளியேற்றப் பட்டு விட்டார்கள். ஒரு சிலர் மட்டுமே மியன்மார் குடியுரிமை வழங்கப்பட்டு வாழ்ந்து வருகின்றார்கள்.

ரொகிங்கியாக்கள் பெரிதும் வியாபாரம் போன்ற தொழில்களில் ஈடுபடுவதில்லை. பலர் நினைப்பது போல முகாலய மன்னர் காலத்தில் குடியேறிய வியாபாரிகளின் வழி வந்தவர்களும் அல்ல இவர்கள். வங்கதேசத்தின் சித்தங்காங்க எல்லைப் பிரதேச வழியாகக் கூலி வேலைக்குச் சென்றவர்களே ரொகிங்கியாக்கள். 1950-களுக்குப் பின் பல ஆயிரம் வங்காளி முஸ்லிம்கள் கள்ளத் தனமாக மியன்மாரில் குடியேறத் தொடங்கினார்கள். வங்கதேச விடுதலைப் போர் காலங்களில் மேலும் ஆயிரம் ஆயிரம் வங்காளி முஸ்லிம்கள் மியன்மாருக்குள் நுழைந்து அங்கேயே குடியேறி விட்டனர்.

ரொகிங்கியாவின் வரலாறு : ரொகிங்கியா என்ற வார்த்தை பெரும்பாலும் 1990-களிலேயே பத்திரிக்கைகளில் இடம் பெறத் தொடங்கின. ரொகிங்கியாக்களைப் பற்றி ஆய்வில் ஈடுபடத் தொடங்கிய கின் மாங்க சா என்பவர் பல அதிர்ச்சித் தகவல்களையும், ஆச்சர்யமான விடயங்களையும் கண்டறிந்தார். ரொகிங்கியா என்ற வார்த்தை மியன்மாரின் அராக்கன் மொழி வார்த்தையே அல்ல. அராக்கன் மாநிலத்தில் பேசப்படும் எந்தவொரு மொழியிலும் ரொகிங்கியா என்ற வார்த்தை இடம்பெற்றதே இல்லை. அதனால் வங்காள மொழியில் இந்தச் சொல்லை தேடிய போதும் அப்படி ஒரு சொல் இடம்பெறவே இல்லை. ஆகவே அவர் பல இலக்கியங்கள், ஆவணங்களில் தேடிய போதும் ஏமாற்றமே மிஞ்சியது. பிரித்தானிய ஆட்சியின் போது மியன்மார் குறித்துப் பல நூல்களை எழுதிய மோரிஸ் காலிஸ் ரொகிங்கியா என்ற சொல்லை எங்கும் குறிப்பிடவே இல்லை.

பர்மாவில் 1921-ம் ஆண்டு எடுக்கப் பட்ட மக்கள் தொகைக் கணிப்பின் போது பர்மாவில் வாழ்ந்த இனங்கள் அனைத்தும் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் அவற்றில் கூட ரொகிங்கியா என்ற சொல் இடம்பெறவே இல்லை. ஆர்.பி. ஸ்மார்ட் என்பவரால் கொகுக்கப் பட்ட பர்மா கெஸ்ட்டிலும் இவர்கள் பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை.

முஜாஹித்கள் :

1950களில் வங்கதேச எல்லைப் புறக் காடுகளில் முஜாஹித்கள் எனப்படும் தீவிரவாத இயக்கம் செயல்பட்டு வந்தது. இவர்களின் தலைவனாக மிர் காசிம் என்னும் வங்காள மொழி பேசுபவன் செயல்பட்டு வந்தான். அராக்கான் மாநிலத்தின் வடப் பகுதிகளைக் கைப்பற்றிக் கிழக்குப் பாகிஸ்தானில் இணைக்க வேண்டும் எனச் செயல் பட்டு வந்தான். இந்த இயக்கத்தில் இருந்த உறுப்பினர்கள் அனைவருமே வங்காளத்தில் இருந்து சட்ட விரோதமாக அராக்கான் மாநிலத்தில் இடம் பெயர்ந்து வந்தவர்களே. காஸிமின் குழுவில் இருந்தவர்கள் பலர் பாகிஸ்தானில் சென்று பயிற்சியும் பெற்று வந்தார்கள். இந்த நிலையில் காஸிமை பிடிக்க மியன்மாரிய அரசு பரிசு அறிவித்தது. இருந்த போதும் அவன் பிடிப்படவில்லை. இந்த நிலையில் மியன்மாரிய இராணுவம் முஜாஹிதுகளைத் தோற்கடித்தது. இதனால் காஸிம் கிழக்கு பாகிஸ்தானாக அறியப்பட்ட வங்கதேசத்துக்கு ஓடிப் போனான். அங்கு அவன் ஆள் தெரியாத நபரால் காக்ஸ் பஜாரில் வைத்துக் கொல்லப்பட்டான். பல முஜாஹித்கள் அரசுப் படையால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தங்களை ரொகிங்கியாக்கள் என அறிவித்துக் கொண்டனர்.
1960-களில் யு நூ அதிபராகத் தேர்தலில் வெற்றிப் பெற்றதும் மியன்மாரிய இனங்களுக்குத் தனிமாநிலங்களை உருவாக்கத் திட்டமிட்டார். இதன் அடிப்படையில் மியன்மாரின் ராக்கின் இன மக்கள் வாழும் அராக்கன் மாநிலம் உருவானது. இந்த நிலையில் அராக்கனில் வாழ்ந்த வங்காளிகள் தமக்கும் தனி மாநிலம் தர வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர். ஆனால் அவர்கள் யாவரும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என்பதால் அக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.



போலி வரலாறு :

இந்த நிலையில் அராக்கனில் வாழ்ந்த வங்காளி முஸ்லிம்கள் போலி வரலாற்றுத் தகவல்களை வெளியிடத் தொடங்கினார்கள். அதன் படி அரபு வணிகர்கள் வந்த கப்பல் அராக்கனில் மூழ்கிவிட அங்கிருந்து தப்பி வந்து அவர்கள் அராக்கானில் குடியேறி பர்மிய பெண்களை மணந்தத்தாகவும், அவர்களே ரொகிங்கியாக்கள் எனக் கதைக் கட்டி விட ஆரம்பித்தார்கள். பல வரலாற்று ஆய்வாளர்கள் முஸ்லிம்களின் இந்தக் கூற்றை மறுத்தும் வந்தனர்.

ஆனால் ம்ராக் யூ அரசர்களின் படையில் சில முஸ்லிம் போர்வீரர்கள் இருந்தார்கள். அவர்கள் பர்மிய பெண்களை மணந்து வாழ்ந்தார்கள். அவர்களின் வாரிசுகள் சிலர் இன்றளவும் அராக்கன் மாநிலத்தில் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களின் எண்ணிக்கை சில நூறே ஆகும். இவர்களின் தோற்றமும், மொழியும் அராக்கானில் வாழும் ரக்கீங்களை ஒத்து இருக்கும். ஆனால் மியன்மாருக்கு வெளியே இருப்பவர்கள் இவர்களையும் ரொகிங்கியாக்களையும் குழப்பிக் கொள்பவர்கள் மிக அதிகம்.

வங்காளிகளின் வருகை :

இரண்டாம் உலக யுத்த காலங்களில் ஜப்பானை படைகள் பொழிந்த குண்டு மழைகளுக்கு அஞ்சிய பர்மிய ராக்கீன் இன மக்கள் வங்கதேசத்துக்கு அருகே உள்ள கிராமங்களில் இருந்து வெளியேறி அராக்கான் மாநிலத்தில் உள்ள நகரப் பகுதிகளுக்குச் சென்றுவிட்டனர். பின்னர் ஆள் அரவமற்ற பகுதிகளாக இக்கிராமங்கள் மாறிப் போனது. இதனால் இப்பகுதிகள் ருவாகாங்க் என்றழைக்கப்பட்டன. ருவாகாங்க் என்றால் பழைய கிராமங்கள் அல்லது ஆள் இல்லாத கிராமங்கள் என்று அர்த்தப்படும். இந்த நிலையில் வங்காளத்தில் இருந்து குடியேறிய கூலித் தொழிலாளர்களும், சட்ட விரோத குடியேறிகளும் இந்தக் கிராமங்களில் குடியேறி வாழத் தொடங்கினார்கள். இந்த நிலையில் அராக்கான் பகுதிகளில் உள்ள நகரங்களுக்குக் கூலி வேலை செய்யப் போகும் வங்காளிகள் தாம் எங்கிருந்து வருகின்றனர் எனக் கேட்கும் கேள்விகளுக்குத் தாம் ருவாகாங்க காஜா எனச் சொல்வார்களாம். அதாவது ருவாகாங்கில் இருந்து வருகின்றோம் என, அவர்களுக்குத் தெரியாது ருவாகாங்க் என்றாலே பழைய கிராமங்கள் என்று அர்த்தமாகும். இதுவே காலப் போக்கில் ரொகிங்கியாக்கள் என்ற சொல்லாக மருவியது.

ஆனால் 1960-களில் தமக்கான வரலாறுகளாகப் பொய்களைப் புனைய தொடங்கிய பல இஸ்லாமியர்கள் தாம் 9-ம் நூற்றாண்டில் இருந்தே வாழ்ந்து வருவதாகக் கதைக் கட்ட ஆரம்பித்தனர்.

முகாலயர்களின் வாரிசுகள் :


ரொகிங்கியாக்களில் சிலர் தாம் முகாலயர்களின் வாரிசு என அறிவித்துக் கொண்டார்கள். ஆனாலும் அதுவும் உண்மை இல்லை என்பதைப் பர்மிய வரலாற்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். 16-ம் நூற்றாண்டில் ஷா சுஜா என்னும் இளவரசன் இருந்தான். ஔரங்கசீப்பின் இளைய தம்பியான இவன் அரசராக முயன்றான், ஆனால் அம்முயற்சி தோல்வி காணவே உயிருக்கு அஞ்சி அராக்கானில் ஆட்சி செய்த சண்ட துத்தம்மா என்னும் மன்னனிடம் அடைக்கலம் புகுந்தான். 1660-களில் அவனுக்கு அடைக்கலம் கொடுத்த மன்னன், பின்னர் அவனின் மகளை மனைவியாக்கிக் கொள்ள ஆசைப்பட்டுப் பெண் கேட்க போனான். ஆனால் இதனைச் சம்மதிக்க மறுத்துவிட்டான் ஷா சுஜா. இதனால் கோபமுற்ற மன்னன் சண்ட துத்தம்மா அனைத்து முகாலயர்களிலும் வெட்டிப் போடும் படி உத்தரவிட்டான். அதன் படி அனைவரும் கொல்லப்பட்டனர். இதனைக் கேள்வியுற்ற முகாலய மன்னர்கள் சண்ட துத்தம்மாவிடம் போர் தொடுத்து வந்தனர். இதனால் அராக்கான் மன்னனின் கட்டுப்பாட்டில் இருந்த சித்தாங்கோங்க் பகுதியை முகாலயரிடம் இழந்துவிட்டான். இன்றளவும் சித்தாங்கோங்க் வங்கதேசத்தின் ஒரு பகுதியாகவே இருக்கின்றது. ஆனால் அங்கு வாழும் பெரும்பான்மையினர் பர்மிய மொழி பேசும் பௌத்தர்களாகவே இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆகவே பாரசீக மொழி பேசிய முகாலயர்களின் வாரிசுகள் தான் ரொகிங்கியாக்கள் என விடப்பட்ட கதையும் ஒரு புனைவே என்பது உண்மையாகிவிட்டது. ஏனெனில் ரொகிங்கியாக்கள் உருவத்தால் கருப்பானவர்கள், வங்காள மொழி பேசக் கூடியவர்கள். ஆனால் முகாலயர்களோ துருக்கிய இனத்தைச் சார்ந்தவர்கள் வெள்ளை நிறமானவர்கள், பாரசீக மொழி பேசக் கூடியவர்கள். அத்தோடு அவர்கள் யாவரும் அராக்கான் மன்னனால் கொலை செய்யப்பட்டு விட்டதாகவே வரலாறு கூறுகின்றது.

பர்மிய மொழிய தெரியாத ரொகிங்கியாக்கள் :



பர்மாவில் குடியேறிய இந்திய வம்சாவளி முஸ்லிம்கள் பலர் ரங்கூனில் வாழ்கின்றார்கள். இவர்கள் சரளமாகப் பர்மிய மொழி பேசக் கூடியவர்கள். பர்மிய அரசவையில் போர் வீரர்களாக இருந்த சில முஸ்லிம்கள் பர்மியர்களோடு கலப்புற்று பர்மிய மொழி பேசி அராக்கன் உட்படச் சில பகுதிகளில் வாழ்ந்து வருகின்றார்கள். ஆங்கிலேயே ஆட்சிக் காலத்தில் நூறு ஆண்டுகளுக்கு முன் குடியேறிய தமிழர்கள், தெலுங்கர்கள், தமிழ் முஸ்லிம்கள், மலாய் முஸ்லிம்கள் போன்றோரும் பர்மிய மொழியே பேசி வருகின்றார்கள். 17-ம் நூற்றாண்டில் பர்மாவில் குடியேறிய போர்த்துகேசிய கத்தோலிக்கர்களும் சிரியம் என்ற நகரில் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களும் பர்மிய மொழியே பேசி வருகின்றார்கள். ஆனால் பல நூறு ஆண்டுகளாக வாழ்ந்து வருபவர்களாகக் கூறிக் கொள்ளும் ரொகிங்கியாக்கள் பலருக்கு சுத்தமாகப் பர்மிய மொழியோ, அராக்கனிய மொழியோ பேசத் தெரியாது. உடை, நடை, பாவனைகள், உணவு பழக்க வழக்கம், உருவ ஒற்றுமை எனப் பலவற்றிலும் ரொகிங்கியாக்கள் பர்மியர்களோடு ஒத்துப் போவதே இல்லை. சில நூறு ஆண்டுகளுக்கு முன் வந்த தமிழர்களே பர்மிய மொழி சரளமாகப் பேசும் போது ஏன் இவர்களால் பேச முடியவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும் ?

ஏழாம் நூற்றாண்டில் கப்பலில் வந்த கதை :


ஏழாம் நூற்றாண்டில் கப்பலில் வந்த அரபு வாணிகர்களின் கப்பல் உடைந்து, அவர்கள் தப்பி வந்து அராக்கானில் இருந்த ம்ராக் யூ மன்னராட்சிக் காலத்தில் குடியேறியவர்களே இந்த ரொகிங்கியாக்கள் எனக் கூறப்படுகின்றது. ஆனால் இதுவும் உண்மையல்ல ! ஏழாம் நூற்றாண்டில் ம்ராக் யூ மன்னர்களே ஆட்சி செய்யவில்லை ! மாறாகத் தன்யாவட்டி மன்னர்களே அப்போது ஆட்சியில் இருந்தனர். தன்யாவட்டி மன்னர் காலத்தில் பர்மாவில் முஸ்லிம்கள் இருந்தமைக்கான ஆதாரங்களோ, எந்தவிதக் குறிப்புகளுமோ இல்லவே இல்லை. அக்காலத்தில் வேறு மதம் இருந்தது எனில் அது இந்து மதம் மட்டுமே எனப் பர்மிய வரலாறுகள் கூறுகின்றன.

கம்யூனிஸ்ட்களின் சதி வேலை :



1950-களில் முஜாஹித்களோடு தொடர்பு வைத்திருந்த செஞ்சட்டை கம்யூனிஸ்ட் போராளிகளே ரொகிங்கியா என்ற வார்த்தையை முஜாஹித்களைக் குறிப்பிட பயன்படுத்தியதாக யு தாங்க் என்ற வரலாற்று ஆய்வாளர் கூறுகின்றார். ஆனால் அதன் சரியான அர்த்தம் என்னவெனத் தெரியாது என அவர் கூறுகின்றார். செஞ்சட்டை கம்யூனிஸ்ட்கள் முஜாஹித்களுக்குப் பர்மிய குடியுரிமையைக் கள்ளத் தனமாகப் பெற்றுக் கொடுக்கவும் முயன்றுள்ளனர் என அவர் கூறுகின்றார்.

ரொகிங்கியாக்களின் எதிர்காலம் :

இது போன்ற இனக்கலவரங்கள் பல முறை கடந்த பதினைந்து ஆண்டுகளில் நடந்துள்ளன. ஆனால் அப்போது எல்லாம் இவற்றை இவ்வளவு பெரிதாக ஊடகங்கள் கூறவில்லை. ஆனால் தற்போது ஜனநாயக ஆட்சியைத் தழுவ நினைக்கும் மியன்மாரில் பிரச்சனைகளை உண்டுப் பண்ணவும், சீனச் சார்பு நிலையில் இருந்து அமெரிக்கச் சார்பு நிலைக்கு மாறி வரும் மியன்மார் மீது அழுத்தங்களைக் கொடுக்கவே இப்படியான கலவரங்கள் தூண்டப்பட்டு, அவற்றைப் பற்றிய பல அவதூறு செய்திகளைப் பரப்பி வருகின்றனர். குறிப்பாகப் பாகிஸ்தானை மையமாக வைத்துச் செயல்படும் இணையத் தளங்கள், செய்தி ஊடகங்கள் பல தான் இந்தச் செய்திகள் பலவற்றை வெளியிட்டு பரப்பி வருகின்றனர். இதே போன்ற கலவரங்கள் நைஜீரியாவிலும் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. ஆனால் ஊடகங்கள் அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஏனெனில் அங்குப் பாதிக்கப்படுவது கறுப்பின கிருத்தவர்கள் என்பதால்.

அதே போல ரொகிங்கியாக்களைப் பர்மிய முஸ்லிம்களோடு குழப்பிக் கொள்வதும், சட்ட விரோதமாகக் குடியேறி ரொகிங்கியாக்களுக்குக் குடியுரிமை மறுக்கப்பட்டதை ஒட்டு மொத்த முஸ்லிம்களும் பர்மாவில் புறக்கணிக்கப்படுவதாகச் செய்திப் பரப்பி வருவதும், அண்மையில் ஏற்பட்ட இனக்கலவரங்களில் பர்மிய ராணுவம் 20,000 முஸ்லிம்களைக் கொன்று விட்டதாகவும் போலிச் செய்திகள் பலவற்றை இணையத் தளங்களில் உலவ விட்டுள்ளனர். இவை யாவும் மிகைப்படுத்த பட்ட செய்திகளே ஆகும்.
அண்மையக் கலவரம் ஏற்படப் புத்த பிக்குகள் கேக் சாப்பிட்ட கதையும் இப்படியான ஒரு மிகைப்படுத்தலே. உண்மையில் பர்மிய இளம் பெண்ணை சில ரொகிங்கியாக்கள் கடத்தி கற்பழித்துக் கொன்று விட்டனர். இதனால் எழுந்த பிரச்சனையே இந்தக் கலவரம். முதலில் அராக்கனிய மக்களின் வீடுகளுக்குத் தீ வைத்தவர்களும் ரொகிங்கியாக்கள் தான். இவற்றில் 20 ,000 பேர் இறந்ததாகக் கூறப்படுவதும் மிகைப்படுத்த பட்டவையே. இந்தக் கலவரத்தில் இறந்தவர்கள் 50 பேர் ஆவார்கள். இவற்றில் இருசாராரும் அடங்குவார்கள். அதே போலக் கலவரங்களைப் பெரிதுப் படுத்தியதில் பாகிஸ்தானிய உளவுத் துறைக்கும் சம்பந்தம் இருப்பதாகவும், கலவரங்களை ஏற்படுத்திய 20 பேரை மியன்மார் அரசு கைது செய்துள்ளது. தற்போது கலவரங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

சட்ட விரோதமாகக் குடியேறும் எந்தவொரு மக்களையும் எந்தவொரு அரசும் குடியுரிமை வழங்கிவிடாது. ஆனால் மனிதாபிமான அடிப்படையில் சில காரியங்களைச் செய்யலாம். சட்டத்துக்கு உட்பட்டு குடியேறிய மலையகத் தமிழர்கள் விடயத்தில் இந்தியஇலங்கை அரசு செய்தது போல ! மியன்மார் அரசும்வங்கதேச அரசும் ஒப்பந்தம் ஒன்று போட்டு ரொகிங்கியாக்களில் ஒரு பகுதியினருக்கு மியன்மார் குடியுரிமையும், ஒரு பகுதியினருக்கு வங்கதேச குடியுரிமையும் வழங்கலாம். இன்னும் ஒரு பகுதியினரை இதர முஸ்லிம் நாடுகள் அகதிகளாக ஏற்றுக் குடியுரிமை வழங்க முன்வரலாம்.

ரொகிங்கியாக்கள் சட்ட விரோத குடியேற்றவாசிகள் எனினும் அவர்களுக்கு எதிரான மனித உரிமைக் குற்றங்களை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். ரொகிங்கியாக்களின் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு மியன்மார், வங்கதேசம் மற்றும் சர்வதேச சமூகத்துக்கு முழுப் பொறுப்புகள் உள்ளன. இந்த இனக்கலவரங்களை முடிவுக்கு கொண்டு வர செயல்பட்ட மியன்மாரிய அரசும், பாதுகாப்பு படைகளும் பாராட்டப் படவேண்டியவையே. ரொகிங்கியாக்கள்ரக்கீன் மக்களுக்குள் இடையிலான பிணக்குகளுக்கு மதச் சாயல் பூசப்படுவதும், தீவிரவாதங்களை வளர்க்க முனைவரும் கண்டிக்கப்பட வேண்டியவையே.

பர்மிய வரலாறு, ரொகிங்கியா பற்றிய தகவல்களைத் தொகுத்து அளிப்பதில் உதவியாக இருந்த பர்மிய வலைப்பதிவர்களுக்கும், வங்கதேச தோழர்களுக்கும் எனது நன்றிகள் !

Thanks: Senkodi


உதவியவை :


  • விக்கிபீடியா
  • See Bertil Lintner, Chronology of the Events. In: du, Sonderbeilage, Heft 11, 1993; and compare also withMartin Smith, Burma’s Muslim Borderland: Sold Down the River. In: CS Quarterly, 13(4), p. 28
  • See Maurice Collis in collaboration with San Shwe Bu, Arakan’s Place in the Civilization of the Bay. In:Journal of Burma Research Society, vol. XXIII, p. 493
  • U Khaing Saw Htwan, A New History of Rakhaing (Arakan). (in Burmese), pp. 68-69
  • U Thaung is a famous journalist and author well known under his pseudonym name Aung Bala. He wasowner, publisher and chief editor of the then most modern newspaper in Burmese language, “The Kyemon(Mirror) Daily” until the newspaper was nationalized. He was arrested and detained for 4 years without anytrial and released in 1967. Now he lives in Florida, U.S.A. as an exiled opposition
  • அலர்ட் நியூஸ்
  • கார்டியன் நியுஸ்
  • மியன்மார் லைஃ ப்ளாக்
  • பாலிசி மைக்
  • பர்மா நெட்