Thursday, January 12, 2012

உடைவது சிலை - ஓயாத நிலை!





தொடரும் சிலை உடைப்புகள்!








ண்மையில் ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் கொழும்பிலே நடாத்திய ஆரப்பாட்ட ஊர்வலத்தையும் அதனைத் தொடர்ந்து நிகழ்ந்து வரும் இழுபறிகள் பற்றிய செய்திகளையும் தொலைக்காட்சி, பத்திரிகைகள், வானொலி மற்றும் பிற ஊடகங்களிலும் அறிந்திருக்கலாம்.

இந்த ஆர்ப்பாட்டம் மற்றும் எதிர்ப்பு ஊர்வலத்தின்போது மாணவர்கள் எழுப்பிய கோஷங்களையும் கையில் ஏந்தியிருந்த சுலோகங்களையும் அவதானித்தபோது அவர்களுக்கும் பல்கலைக்கழக உபவேந்தர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கும் இடையே நீண்டகால முறுகல்நிலை இருந்து வருவது அப்பட்டமாகத் தெரிந்தது. ஆனாலும் மாணவர்களின் போராட்டம் ஓர் ஆர்ப்பாட்டமாக வெடித்துக்  கிளம்புவதற்கு உடனடிக் காரணமாக அமைந்தது பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவப்பட்டிருந்த ஒரு சிலையின் உடைப்பு!


பல்கலைக்கழக மாணவர்களின் முன்னைய போராட்டங்களை நினைவூட்டும் வகையில் நிறுவிப் போற்றப்பட்டிருந்த ஒரு விடுதலைச்சிலை அன்றைய தினம் அதிகாலையில் குண்டுவைத்துத் தகர்க்கப்பட்டிருந்தது. இந்த விஷமவேலைக்கு யார் காரணம் என்று தெரியாத போதிலும் உபவேந்தர்தான் பின்னணி என்று மாணவர்களும் மாணவர்களின் உள்சதிவேலை என்று உபவேந்தரும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். பிரச்சினை இன்னும் சுமுக நிலையை எட்டப்படாத நிலையில் வழமைபோலவே பல்கலைக்கழகம் காலவரையறையின்றி...


சரி, அது  இருக்கட்டும் ஒருபுறம்!



 






இப்போது அறியப்படும் மற்றொரு செய்தியும் ஒரு சிலை உடைப்புத்தான்.
இது நிகழ்ந்திருப்பது தீவின் கிழக்கில் மட்டக்களப்புக்கும் காத்தான்குடிக்கும் இடைப்பட்ட பிரதேசமான ஆரையம்பதியில். மட்டக்களப்பு என்றதும் சட்டென யாருக்கும் நினைவுக்கு வருவது பாடும் மீன்களும் சுவாமி விபுலானந்தரும்தான்.


சுவாமி விபுலானந்தரைப் போன்றே தமிழ்கூறும் நல்லுலகம் போற்றும் மற்றுமொரு மேதையான  சுவாமி விவேகானந்தரின் உருவச்சிலைதான் விஷமிகளால் உடைக்கப்பட்டிருக்கின்றது. அதுவும் அந்தச் சிலை நிறுவப்பட்ட தினத்திலேயே சேதப்படுத்தப்பட்டுள்ளதுதான் வேதனை. இதனை யார் செய்திருப்பார்கள் என்ற தேடலில் நேரமும் உழைப்பும்தான் விரயமாகுமே தவிர வேறுபயன்கள் கிடைக்கப்போவதில்லை.







இதேபோல ஒரு சம்பவம் சில மாதங்களுக்கு முன்பு திருகோணமலை நகரிலும் நடந்தேறியதை பலர் மறந்திருப்பீர்கள். அதிலே பாதிக்கப்பட்டவர் தமிழ் பேசும் மக்களால் பெரிதும் போற்றப்படும் தந்தை செல்வநாயகத்தின்  உருவச்சிலை. தற்போது அவரது வேறு ஒரு சிலை அதேயிடத்தில் நிறுவப்பட்டுள்ள போதிலும் மீண்டும் அதே போல ஒரு விஷமச்செயல் நிகழாது என்பதற்கு ஒரு உத்தரவாதமும் கிடையாது.


அதேவேளை இதே திருகோணமலை நகரிலே சில வருடங்களுக்கு முன்னர் ஒரு உருவச்சிலை தொடர்பாக நிகழ்ந்த அமைதியின்மையும் அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த வன்செயல்களும் ஏனோ ஞாபக அரங்கேறுகின்றன. பல இரத்தக்களறிகள்.. சில உயிர்ப்பலிகள்.. நீதிமன்றத் தலையீடுகள் என்றெல்லாம் இழுபட்டு கடைசியில் பிரதான பஸ்தரிப்பு நிலையத்தின் இடது முனையிலே மிகவும் பாதுகாப்பாகி, முன்னிலும் பெரிதாகி, மேலும் சாந்தமாகி  பீடம் அமர்ந்தார் கொல்லாமையைப் போதித்த போதி-மாதவன்!

- Jesslya Jessly


குறிப்பு:   தினக்குரல் (2009.05.03 ஞாயிறு)  பத்திரிகையில் வெளியான  நண்பர் மூதூர் மொகமட் ராபி யின் இந்தக் கவிதை இன்றைய எனது பத்திக்கும் பொருத்தமாக இருக்கின்றதல்லவா?



இன்றைய

திருகோணமலை!



வீதிக்கு வீதி சிறுகோயில்
தெருவுக்கு ஒரு பள்ளிவாசல்
சந்திகள் தோறும் மாதாசிலை
உச்சிமலையிலே புத்தபகவான்!


மூன்று புறமும் வங்கக்கடல்
நான்குதிசையும் காவல் அரண்
நெடிதுயர்ந்த நீதிமன்றம்
நின்றுபோகும் மணிக்கோபுரம்!


அலறியோடும் ஆம்பலன்சுகள்
அகதிகள் வழியும் ஆஸ்பத்திரி
காற்றும் வராத வாடகை வீடு
கனவிலும் ஓடும் கேபிள் டீவி!


ஓய்வே இல்லாத மனிதர்கள்
டியூஷன் குறையாத குழந்தைகள்
செல்போன் தின்னும் இளைஞர்கள்
செத்துப்போன லைப்ரரிகள்!


வயதுமீறிய ஆசைகள்
வசதிகள் பார்த்திடும் வேகங்கள்
மனசு முழுவதும் கொடூரங்கள்
குப்பைகளிலே குழந்தைப் பிணங்கள்!


-மூதூர் மொகமட் ராபி-

அங்கேயும் இப்படியா?





இதுவும் ஓர் அனுபவம்தான்!






ன்று ஒரு புதன்கிழமை.  ஒரு அலுவலாக மாகாணக் கல்வித் திணைக்களத்திற்குச் சென்றிருந்தேன். அண்மையில் நிகழ்ந்த ஆசிரியர் இடமாற்றங்கள் காரணமாக ஒர் பெரும் கூட்டமே காத்திருந்தது. மாகாணக் கல்விப் பணிப்பாளரைச் சந்திப்பதற்குரிய படிவத்தைப் பெற்று நிரப்பி நிர்வாக அலுவலரின் ஒப்புதலைப் பெற்றுக்கொண்டு காத்திருந்தேன். நான் அமர்ந்திருந்த ஆசனத்தின் அருகே இரு நடுத்தர வயதைத்தாண்டிய பெண்மணிகள் காத்திருந்தனர். அவர்களின் உரையாடலை எதேச்சையாக அவதானித்ததிலே அவர்களிருவரும் மட்டக்களப்பிலிருந்து வந்திருக்கின்றனர் என்று தெரிந்து கொண்டேன்.


'உங்களது இலக்கம் எத்தனை தம்பி?' என்று அவர்களில் ஒருவர் கேட்டார். 'இல. 12' என்று நான் பதில் கூறியதும் அவர்களிருவரது முகத்திலும் ஏமாற்றம் கலந்த ஆச்சரிய மின்னல்கள்!
 'இதென்னது..நாங்க இருவரும் விடியல் காலையிலேயே வந்து காத்துக்கிடக்கிறோம். எங்களுக்கு 44! இப்ப வந்த உங்களுக்கு 12 தந்திருக்கிறாங்களே?' என்றார்கள்.


 'அப்படியா!' என்று வியந்துகேட்ட எனக்கு அவர்களது ஆதங்கம் புரிந்தது.  அவர்களது நிலையைப் பார்க்கப் பாவமாகத்தானிருந்தது. ஆனால் படிவத்திலேயே இலக்கங்கள் குறிப்பிடப்பட்டிருந்ததால் மாற்றிக் கொடுக்கவும் முடியாது.



அவர்களைச் சமாதானப்படுத்தும் விதமாக, அரச அலுவலகங்களிலே நிகழும் இதுபோன்ற சிறியது முதல் பெரியது வரையிலான குளறுபடிகள் பற்றிய பேச்சை எடுத்தேன். அவ்வளவுதான் யாரிடம் இதுபற்றித் தங்களது உள்ளக் குமுறல்களையெல்லாம் கொட்டலாம் என்று காத்திருந்தவர்கள் போல் கொட்டித் தீரத்துவிட்டார்கள், ஆசிரியைகளான அந்தப் பெண்மணிகள் இருவரும்.

அப்போதுதான் புரிந்தது நம்மைப்போலவே ஒவ்வொரு ஆசிரியர்களுக்குள்ளும் பல உண்மைக் கதைகள் உள்ளன என்பது.


 ஆனால், துரதிஷ்டவசமாக அவர்களது அனுபவங்களை இங்கே அவற்றின் உள்ளடக்கம் காரணமாகவும் பிற காரணங்களுக்காகவும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாதுள்ளது.


எனினும் அவர்களது உரையாடலின் இறுதியில், தங்களது பிரதேசத்தில் அண்மையிலே விநியோகிக்கப்பட்ட ஒரு கவிதை வடிவிலான துண்டுப்பிரசுரம் ஒன்றைத் தந்தனர். அன்புச் செல்வன் என்பவரின் பெயர் பொறித்திருக்கும் அதனை  இங்கே தருகின்றேன். பாருங்கள்:


- மூதூர் மொகமட்ராபி



நிர்வாக சுதந்திரம்!


ன்புடையீர்!


இதுவோர் அரச திணைக்களம்
ஆதலால் நீங்கள்
வரலாம் போகலாம்
வராமலும் இருக்கலாம்
வந்தவுடன் போகலாம்
நாளையும் வரலாம்!

கேள்வியில்லை
கேட்பாரில்லை!



அமர்ந்திருக்கலாம்
நடந்து திரியலாம்
அமைதியாயிருக்கலாம்
உரத்தும் பேசலாம்

ஏனென்று எந்தக்
கேள்வியுமில்லை

வேலை செய்யலாம்
செய்யாது இருக்கலாம்!



காலையில் வந்து
காணாமல்போய்
மாலையில் வந்து
ஒப்பமும் போடலாம்!

யாரும்வந்து யாரோடும்
வந்தவரோடு வாசலில் நிற்கலாம்
வாசலில் நின்றே
வேடிக்கை பாரக்கலாம்!



முறுக்குக் கொறிக்கலாம்
முட்டாய் தின்னலாம்
கொறித்துக் கொண்டே
கோலும் பேசலாம்

கைத்தொலைபேசியைக்
காதில்வைத்து
நடக்கலாம் சிரிக்கலாம்
நடனமும் ஆடலாம்

வேட்டிகட்டலாம்
டையும் கட்டலாம்
வெள்ளிக்கிழமை வேலைநாள்
வேறுபாடின்றி
பொட்டும் வைக்கலாம்!


விடுமுறை எடுக்கலாம்
எடுக்காமலிருக்கலாம்
விடுமுறைக்கடிதம்
தரலாம் விடலாம்;
பொறுப்புகள் எதுவும்
ஏற்காதிருக்கலாம்
ஏற்றால் எதுவும்
செய்யாதிருக்கலாம்

கேள்வியுமில்லை
கேட்பாருமில்லை!


அன்புடையீர்!

இதுவோர் அரசதிணைக்களம்
இங்கே யாரும் யாருக்கும்
அரசனுமில்லை
ஆண்டியுமில்லை

யாரும் வரவும்
யாரும் போகவும்
எந்தத் தடையும்
எவருக்கும் இல்லை!


இத்தனையும் செய்து
எத்தனை மகிழ்ச்சி
மாத முடிவில் ஒப்பமிட்டதும்
ஊதியம் கிடைக்கின்றது!

என்னருமைத் தாய்நாட்டின்
அரசநிர்வாகத்திற்கும்
ஜனநாயக சோஸலிச
சுதந்திரக் குடியரசிற்கும்
ஓ போடு!


-அன்புச் செல்வன்-