Saturday, August 27, 2011

இப்தார் எனும்...


 இந்த வீணடிப்பு ஏன்?

மழான்  மாதம் எனப்படும் நோன்பு காலம்  உலகம் முழுவதிலுமுள்ள முஸ்லிம் மக்களால்  ஒரு புனிதமான காலமாக  கருதப்பட்டு வருகின்றது. நோன்பு எனும் விரதத்தின் நோக்கங்கள் பலவாறாக இருப்பினும் புலன்களை ஒருமுகப்படுத்தி இறைவன் காட்டிய வழியில் நமது கவனத்தையும் வாழ்க்கை முறையையும் எடுத்துச் செல்வதுதான் அதன் முக்கியமான நோக்கம் என்பதை மறுப்பேதுமின்றி யாவரும் ஏற்றுக் கொள்வார்கள். 

இது தவிர, சமூகத்தின் பல்வேறு பொருளாதார மட்டங்களில் இருக்கும் மக்கள் அன்றாட உணவுக்குக் கூட அல்லலுறும் ஏழைகள் பற்றி நினைத்துப் பார்பபதற்கும் அவர்களது வயிற்றுப்பசியின் கொடுமைகளை அறிந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்புத் தருவதும்  ரமழானின் மற்றொரு உப நோக்கம். அவ்வாறு உணரும் போது வசதி படைத்தவர்கள் மட்டுமல்லாது ஓரளவு இயலுமானவர்களும் தம்மால் முடிந்தளவுக்கு அவ்வாறான அல்லலுறும் மக்களுக்கு உணவை வழங்குவார்கள், அவர்களது வயிற்றுப் பசியைத் தீர்ப்பதற்கு வேண்டிய உதவி ஒத்தாசை நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என்பதுதான் அதன் உள்ளார்ந்த நல்லெண்ண எதிர்பார்ப்பு.  சரி, இருக்கட்டும்..





இன்று நமது சமூகத்தில் நடக்கும் இப்தார் எனும் நோன்பு திறக்கும் சடங்கு பற்றி சற்று பார்ப்போமா? இப்தார் என்பது நல்ல விடயம்தான். ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்தும் இஸ்லாமிய மதத்தில் ஒன்று கூடி நோன்பு திறப்பது சிறந்த விடயம்தான். ஆனால் தற்போது நமது நாட்டிலும் பல ஊர்களிலே ஒழுங்குபடுத்தி நடாத்தப்படும்  இப்தார் விருந்துகளுக்கு நீங்கள் சென்றிந்தால் இப்தாரை முடித்து விட்டு எழுந்து வரும் போது நோன்பு திறந்தவர்களுக்காக வழங்கப்பட்டிருந்த உணவுப் பண்டங்களிலே பாதி அல்லது சிறுபகுதி சாப்பிடப்பட்டு விட்ட நிலையிலே மீந்து போய் கிடக்கும் அல்லது வீணாகிக் கிடக்கும் உணவுப் பண்டங்களின் அளவை நிச்சயம் கண்ணுற்று இருப்பீர்கள். இந்த மிஞ்சிய உணவுகள் நமக்குப் போதிக்கும் ரமழானின் நோக்கம்தான் என்ன?


நமது ஊரிலும் நாட்டிலும் அண்டை நாடுகளிலும் ஆபிரிக்க நாடுகளிலும் ஒருபிடி உணவுக்கு வழியின்றி அல்லலுறும் இலட்சக்கணக்கான சிறுவர்களின் பெண்களின் ஆண்களின் தோற்றங்களை ஒரு நிமிடம் உங்கள் கண்முன் கொண்டு வந்து பாருங்கள். அல்லது இதே வலைத்தளத்தில் பின்தொடரும் பிணந்தின்னிக் கழுகினால் சாவதற்கு காத்திருக்கப்படும் ஆபிரிக்கச் சிறுமியின்  இந்தப் புகைப்படத்தையும் ஆக்கத்தையும் சிறிது பாருங்கள்.




இதன் பிறகு உங்கள் நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள் இஸ்லாமியத் தூண்களே... இஸ்லாமிய கூரைகளே... இஸ்லாமியப் படிக்கட்டுகளே.. நீங்கள் செய்து கொண்டிருப்பது எதை?

இஸ்லாத்தின் பெயரால் வற்புறுத்தித் திருமணம் செய்யப்பட்ட வயோதிபக் கணவனுக்கு பணிவிடை செய்ய மறுத்ததற்காய் ஆப்கானில் இளம் மனைவியின் மூக்கை அறுத்ததைக் கூட நியாயப்படுத்தும்  இஸ்லாமியத் தூண்களே...

ஊராரின் பெண்கள் அதிகம் படிக்கக் கூடாது என்ற நியாயமில்லாத தடையை மீறி இரகசியமாய் கல்விகற்று முதுமாணிப் பட்டம் பெற்றதற்காக பாகிஸ்தானில் மகளையும் அவளது தாயையும் அடைத்து வைத்து மானபங்கபடுத்தியதைக் கண்டிக்க மனமில்லாமல்,  குருரமாய் ரசித்துக் கூறும் இஸ்லாத்தின் கூரைகளே..

 எஜமானியின் கைக்குழந்தைக்கு அனுபவமின்றிப் பாலூட்டியதனால் நேர்ந்த கைமோசச் சாவுக்காக  இலங்கை மூதூரின் றிசானா நபீக் எனும்  சிறுமிப் பணிப்பெண்ணுக்கு மரண தண்டனை விதித்து சவூதியில் சிறைவைத்திருக்கும் அவலம் பற்றி பொழுதுபோக்காய் வம்பளக்கும்  இஸ்லாமியப் படிக்கட்டுகளே...


நன்றாக யோசித்துப் பாருங்கள். உலகம் முழுவதும் பட்டினிச் சாவில் நமது முஸ்லீம் மக்களும் கூட இறந்து கொண்டிருக்கும் போது பசியே இல்லாத ருசிக்கு மட்டும் சாப்பிடும் தனவந்தர்களுக்கு விருந்து போட்டு உணவை டன் கணக்கிலே வீணடிக்கும் செயல்தான் நமது ரழழானின் நோக்கமா?

- Jesslya Jessly

"வயிறு நிறைந்த பின்பும் உண்பதை நிறுத்தாதவன் தன் பற்களால் தனது புதைகுழியைத் தோண்டுகின்றான்."

Tuesday, August 23, 2011

மிகப்பெரும் சமூக ஆபத்தை நோக்கி...



ஏன் இந்த மர்ம மனிதர்கள்?











ன்ன தலைப்பு குழப்புகின்றதா? உண்மைதான்! 'யார் இந்த...' என்றுதான் தலைப்பிட்டிருக்க வேண்டும். ஆனால்  'ஏன் இந்த...' என்பதுதான் பொருத்தம் என்பதை இக்கட்டுரையை முழுமையாக வாசித்தால் புரியும்.

அண்மைக்காலமாக மர்மமனிதர்களைப் பற்றி யாராவது ஏதாவது பேசாதிருந்தால் ஒன்றில் அவர்கள் ஊமைகளாகவோ அல்லது சுய உணர்வு இல்லாதவர்களாகவோதான் இருக்க முடியும். அந்தளவுக்கு நமது மக்கள் அனைவரினதும் குறிப்பாக தமிழ், மற்றும் தமிழ்பேசும் மக்கள் வாழுமிடங்களில் பேசு பொருளாக மாறிவிட்டார்கள்  இந்த மர்ம மனிதர்கள்.

இவர்கள் யார்....? என்பதுதான் இன்று பலரின் கேள்வியாக இருந்து வருகின்றது. இதைப்பற்றி எழுதாத பத்திரிகைகளோ ஊடகங்களோ கிடையாது எனலாம். அந்தளவுக்கு எல்லோரும் உண்மைகளையும் அவற்றோடு சேர்த்து தங்கள் கற்பனைகளையும் கலந்து நிறையவே எழுதி விட்டார்கள்.

இவர்கள் யார் என்ற கேள்விக்கு தற்போது நாட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து வரும் சம்பவங்களும் அந்தச் சம்பவங்கள் அனைத்திலும்  தெளிவாகத் தோன்றும்  பொதுவான தன்மைகளும்  பதிலை யூகிப்பதற்கு உதவி வருகின்றன. அந்தச் சம்பவங்களின் இடமும் ஆட்களும்தான் வேறுபடுகின்றார்களே தவிர மற்றப்படி இந்த மர்ம மனிதர்களின் தாக்குதல் சம்பவங்களில் பொதுவான நான்கு அல்லது ஐந்து அம்சங்கள்தான் சாரமாக உள்ளது.

1. பாதுகாப்பற்ற வீடுகளில் உள்ள அல்லது சுலபமாக அணுகக்கூடிய பெண்களை இலக்கு வைத்து மறைந்திருந்து தாக்குதல்.

2. தாக்கிவிட்டுத் சடுதியாகத் தப்பியோடுதல் அல்லது பிரதேசவாசிகளிடம் அகப்படுதல்

3. தாக்கி விட்டுத் தப்பியோடினால் குறிப்பிட்ட 'சில இடங்களை' நோக்கி ஓடிச்சென்று மறைதல் அல்லது பிரதேசவாசிகளிடம் மாட்டிக்கொண்டால் சட்டத்தின் கைகளில் ஒப்படைக்கப்படல்.

4. அவ்வாறு  ஒப்படைக்கப்பட்ட  பின்பு தடுத்து வைத்தலோ அல்லது நீதிமன்ற விசாரணையோ இன்றி விடுவிக்கப்படல்.

5. மர்ம மனிதர்கள் வெறும் வதந்திதான். பொதுமக்கள் யாரும் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று  மக்களுக்குத் தெரிவித்தல்.

இப்போது யோசித்துப் பாருங்கள்... இவற்றைச் செய்பவர்கள் யார் என்பது இலேசாகப் புரிந்திருக்கும். 'ஓ! அதுதான் எங்களுக்கு எப்பவோ தெரியுமே' என்பவர்கள் முதலில் ஒன்றைப் புரிந்து கொண்டால் நல்லது. யார் என்பதை யூகிப்பது ஒன்றும் சிரமமில்லைதான். ஆனால் இதை ஏன் அவர்கள் செய்கின்றார்கள்..? என்பதற்கு விடை காண்பதற்கு நாம் இந்த விடயத்தை சற்று ஆழமாக நோக்கியாக வேண்டும்.

முதலில் ஒன்றைப் தெரிந்து கொள்ளுங்கள். இந்தத் தாக்குதல்களைச் செய்பவர்கள் நமது சமூகத்திலே சாதாரணமாக காணப்படும் தொழில்ரீதியான திருடர்களோ பகுதி நேரத் திருடர்களோ கிடையாது. இவை எதுவுமே திருட்டுக்கான தாக்குதல்கள் அல்ல. ஏனெனில் இதுவரை அறியப்பட்ட தாக்குதல்களில் திருட்டுக்கான எந்த ஆதாரமும் இதுவரை அகப்படவில்லை. சிறுசிறு குற்றச் செயல்களிலே ஈடுபடுகின்ற சமூகவிரோதிகளோ அல்லது மனப்பிறழ்வு ஆசாமிகளோ கூடக் கிடையாது. ஏனெனில் சிறிதும் பயமின்றி குறுகிய நேரத்துக்குள் தாக்குதலைத் திட்டமிட்டுச் செய்யும் பாணியே அதைக் கூறுகின்றது.

வழமையான நமது மாண்புமிகு ஊர்த் திருடர்கள் சமூகவிரோதிகளிடம் ஒரு பழக்கமுள்ளது. 'எங்கே மாட்டிக் கொண்டுவிடுவோமோ'  என உள்ளுர்வாசிகளுக்கு பயந்து பயந்துதான் எதையாவது செய்வது வழமை. அப்படிச் செய்யும்போது பரபரப்புக் காரணமாக நிறைய விடயங்களைச் சொதப்பலாகச் செய்து மாட்டிக் கொள்வார்கள். அல்லது தடயங்களை விட்டுச் செல்வார்கள்.

இந்த மர்ம மனிதர்கள் யாரும் எதிர்பாராத நேரத்திலே  திடீரெனத் தாக்குவது, எவ்வளவு உயரமான இடங்களுக்கும் சட்டெனத் தாவிக்குதித்தேறிச் செல்வது, விரைவாக ஓடுவது, சட்டென மறைந்து கொள்வது தங்களை மறைத்துக் கொள்ள சில திரவியங்களைப் பூசிக்கொள்வது ஆகிய நேரில் பாரத்த பொதுமக்களின் வர்ணனைகளை வைத்துப் பார்க்கும் போது நிச்சயமாக இவர்கள் திறமையாகப் பயிற்சி பெற்ற ஆட்களாகத்தான் இருக்க வேண்டும்.

தவிர இரவு பகலாகக் காவலிருக்கும் உள்ளுர்வாசிகளின் கண்காணிப்பையும் தாண்டி எந்த வேளையிலும் தங்களது தாக்குதல் இலக்குக்கு வந்து சேருவதும் தாக்குதல் முடிவடைந்ததும் உடனடியாக இடத்தை விட்டு அப்புறப்படுவதும் சந்தேகத்துக்குரியதாகவுள்ளது. பொதுமக்கள் பலரின் அபிப்பிராயப்படி 'சில வாகனங்கள்' ஊருக்குள் வந்து சென்ற பின்புதான் இவர்கள் வருவதும் அதேபோல மறைவதும் இடம்பெறுகின்றது. எனவே இந்த மர்ம மனிதர்களின் நடவடிக்கைகளின் பின்னணியில் சமூகத்தில் அங்கீகாரம் பெற்ற சில வலுவான சக்திகள் இருந்து வருகின்றன என்பதை நாம் அனுமானிக்கலாம்.

அதுமட்டுமன்றி வழமையாக பசிக்குத் தேங்காய் திருடும் ஓர் ஏழைத் தொழிலாளியைக் கூட ஆர்ப்பட்டமாய் 'கண்டுபிடிக்கும்'  அத்துடன் நையப்புடைத்து வீரத்தைக் காட்டும் நமது சட்டத்தின் காவலர்கள் இந்த மர்ம மனிதர்கள் விடயத்தில் மட்டும் ஏன் இவ்வளவு கருணாமூர்த்திகளாக இருக்கின்றார்கள்?

தொழிலுக்கும் செல்லாமல் இரவு முழுவதும் தூக்கமின்றி கூட்டமாகக் கண்விழித்திருந்துக் காவலிருந்து, பலர் முன்னிலையில் கையும் களவுமாகப் பிடித்துக் கொடுக்கப்படும் சந்தேக மர்ம நபர்களை ஒரு மரியாதைக்காவது தடுப்புக்காவலுக்குட்படுத்தாமல் விடுவித்து விடுமளவுக்கு அகிம்சா மூர்த்திகளாக அதுவும் ஒரே சமயத்தில் ஆகிப்போனதன் மர்மம்தான் என்ன?

இதனை திட்டமிட்டு நடாத்துபவர்களை பொதுமக்களின் கோபாவேசமான தாக்குதல்கிளிலிருந்து காப்பாற்றுவது ஒன்றுதான் ஏதோ தங்களது தலையாய கடமை என்பது போலவும் மற்றதெல்லாம் வதந்தி என்பது போலவும்தான் நடந்து கொள்கின்றார்கள்,  நமது வரிப்பணத்திலே நம்மைப் 'பாதுகாக்கும்' நமது சட்டத்தின் காவலர்கள்! என்ன வேடிக்கை இது.

வீதி விபத்தில் பாதசாரியை மோதிவிட்டுத் காவல் நிலையத்தை நோக்கித் தப்பியோடும் பஸ் சாரதியையும் இந்த மர்ம மனிதர்களையும் ஒன்றுபோலவே பார்க்கும் நமது காவல் தெய்வங்களின் கருணைதான் என்னே. ஆகா..ஆகா..அற்புதம்!

எது எவ்வாறான போதிலும் இந்த மர்மங்களுக்கு ஒரு வலுவான பின்னணி இருக்கத்தான் செய்கின்றது. இந்த திட்டமிட்டு வரவழைத்துக் கொண்ட பயங்கர நிலைமையை வைத்து எதைச் சாதிக்க விரும்புகின்றார்களோ அதற்கு எதிர்மாறான நிலைமையையே சம்பந்தப்பட்டவர்கள் எதிர்கொள்ள நேரிடும் என்பது மட்டும் உறுதி.

இதற்காகச் செய்யப்படும் தகிடுதத்தங்களை எத்தனை சாதுரியமாக மறைத்தாலும் கூட உண்மை எனும் சூரியன் ஒருநாள் எதிர்பாரத திசையில்; உதிக்கவே செய்வான். அன்று, இதற்கு முன்பு இவ்வுலகில் இறுமாந்து வாழ்ந்த எத்தனையோ ஆதிக்க சக்திகளின் இரும்புக் கோட்டைகள் தவிடுபொடியானதைப் போல இந்த மக்கள் விரோத சக்திகளும் மண்ணோடு மண்ணாகியே ஆகவேண்டும் என்பது மட்டும் நிஜம்.

இறுதியாக....

 இதை எழுதிக் கொண்டிருக்கும்போது கடைசியாகக் கிடைக்கும் செய்திகளின்படி தற்போது அடுத்தடுத்து நடந்து வரும் சம்பவங்களால் விரக்தியுற்ற பொதுமக்கள் தங்கள் எஜமானர்களின் சம்பிரதாயமான ஆலோசனைகளையும் பசப்புரைகளையும் தூக்கி வீசிவிட்டு சட்டத்தை தங்களது சொந்தக் கைகளிலே எடுத்து விட்டிருக்கின்றார்கள் என்று தெரியவருகின்றது.


இது மட்டும் தொடரும் உண்மையானால், நமது நாட்டில்  இதுவரை நடந்த எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிட்டுவிடக்கூடிய மிகப்பெரிய சமூக ஆபத்து இது ஒன்றுதான்! 


-Jesslya Jessly



இரத்தத்தில் கையை நனைப்பவன் கண்ணீரால்தான்
அதைக் கழுவியாக வேண்டும்!

Monday, August 22, 2011

ஒப்பிட்டுப் பாருங்கள்:



பட்டினிச் சிறுமியும் பார்த்திருக்கும் கழுகும்





மேலேயுள்ள படத்தைப் பாருங்கள்! நன்றாக உற்றுப் பாருங்கள். இதைப் பார்த்தால் என்ன தோன்றுகின்றது? இது நாம் வாழும் இன்றைய ஏற்றத்தாழ்வு மிகுந்த உலகின் பரிதாப நிலையின் அப்பட்டமான உண்மைகளில் ஒன்று. ஆபிரிக்க நாடொன்றில் தலைவிரித்தாடும் பஞ்சத்தினால் ஏற்பட்ட அவலக் காட்சி இது.

பசி பட்டினியினால் மெலிந்து வலுவிழந்து கைவிடப்பட்ட ஒரு சிறுமி நடக்கவும் வழியின்றி தன் உடலைத் தானே இழுத்தவாறு  ஏறத்தாழ ஒரு கிலோமீற்றர் தூரத்திற்கப்பால் ஐக்கிய நாடுகள் தாபனத்தினால் அமைக்கப்பட்டுள்ள உணவு முகாமை நோக்கி ஊர்ந்து செல்வதையும்  அவள் எப்போது சாவாள் எப்போது கொத்தி அவளை தின்னலாம் என்ற நோக்கத்தோடு பின்  நடந்தவாறே பின் தொடரும் ஒரு பிணந்தின்னிக் கழுகையும்தான் இந்த அற்புதமான புகைப்படத்தில் காண்கின்றீர்கள்.

இந்தச் சிறுமியின் அவல வாழ்க்கையை ஒருநிமிடம் யோசித்துப் பாருங்கள். பின்பு, வேளாவேளைக்கு உணவு மற்றும் நொறுக்குத் தீனி. ஆடைகள் ஆடம்பர வசதிகள் பொழுதுபோக்குகள் இவையெல்லாம் இருந்தும் கூட போதவில்லையே என்று கவலை கொள்வதும்...

சீரியல் நாடகங்கள், கிரிக்கட் போட்டிகள் போன்ற அற்ப விடயங்களைத்  தவற விட்டு விட்டாலே ஏதோ குடியே முழுகிப்போய் விட்டது போல அலட்டிக் கொள்வதும்.....

பிறந்த நாள் விழாக்கள், நண்பர்களின் விருந்துகள், இப்தார் விருந்து கேளிக்கைகள் என்று பசியே அறியாத மனிதர்களுக்கொல்லாம்  உணவை வழங்கி அவற்றைக் கூட முழுமையாகச் சாப்பிடாமல் வீணடித்து அவ்வாறு வீணடிப்பதையே பெருமையாகப் பீற்றிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருப்பதுமான நம்மில் பலரின் வழ்க்கையையும் சிறிது நினைத்துப் பாருங்கள்.

இந்தப் படத்தைப் பார்த்தபிறகும் ஒரு சொட்டுக் கண்ணீர்  உங்கள் விழிகளிலிருந்து உதிரவில்லையென்றால்... இதற்குப் பிறகும்  உணவை வீண் விரயமாக்குவதற்கு உங்களுக்கு மனம் வருமென்றால் நீங்களெல்லாம் மனிதர்களாக இருக்கத் தகுதியில்லாதவர்கள் என்றுதான் சொல்வேன்.  




-Jesslya Jessly

"எவராவது தாம் தவறே செய்ததில்லை என்று நினைத்தால் அவர்கள் தம் வாழ்நாளில் எதையுமே புதிதாய் முயன்று பார்த்ததில்லை என்றுதான் அர்த்தம்"
- ஐன்ஸ்டைன்