Friday, February 17, 2012

"வரப்புயர!"






              தலைப்பைப் பார்த்ததும் சட்டென நமது சங்க காலத்துப் தமிழ் பெண் புலவர் அவ்வை மூதாட்டியின உருவம் அல்லது நடிகை கே.பி. சுந்தராம்பாளின் நினைவு உங்களுக்கு வரவில்லையென்றால் நீங்கள் நிவாரணத்துக்குக்கூட பாடசாலைப் பக்கம் அல்லது கறுப்பு-வெள்ளைப்படம் ஓடிய காலத்தில் தியேட்டர் பக்கம் ஒதுங்காத பேர்வழியாகத்தான் இருக்க வேண்டும்.

அந்தக் காலத்தில் அரசவையில் புலவர்களும் வீற்றிருப்பார்கள். தமிழ்ப்படங்களில் காண்பிப்தைப்போல அரசர்கள் ஈட்டியுடன் அசையாது காவலுக்கு நின்றிருக்கும் சேவகனை 'யாரங்கே!' என்றெல்லாம் உண்மையில் அதட்டினார்களா என்பதெல்லாம் தெரியவில்லை. ஆனால் தம்மை அளவுக்கு மீறிப் புகழ்ந்து தள்ளிய புலவர்களுக்கெல்லாம் நிச்சயம் பரிசுகள் கொடுத்துப் பழக்கியிருப்பார்கள் என்பது மட்டும் உண்மை.

சரி, விடயத்திற்கு வருவோம். ஒருமுறை அதியமானின் அரசவையில் புலவர்களெல்லாம் மன்னனை நீட்டி முழக்கிப் புகழ்ந்து பாடிக்கொண்டிருந்தார்களாம். அப்போது அவ்வை மூதாட்டியின் முறை வந்ததும் சட்டென ரெடிமேட் புகழாரங்கள்  எதுவும் மனுஷிக்கு ஞாபகம் வரவில்லையோ என்னவோ மன்னனைப் பார்த்து 'வரப்புயர!' என்று சிம்பிளாகச் சொல்லிவிட்டு நடையைக் கட்டிவிட்டதாம் கிழவி. இதென்னடா பெரிசு சம்பந்தமில்லாமல் ஏதோ சொல்லிவிட்டுப் போகுதே என்று அதியமான் திகைத்து பிறகு விளக்கம் கேட்க,

'வரப்புயர நீர் உயரும் - நீர் உயர நெல் உயரும் - நெல் உயர குடி உயரும்- குடி உயர கோன் (அரசன்) உயர்வான்'

என்றொரு விளக்கம் கொடுத்து அசத்தியதாம் மனுஷி.

இதை ஏன் இப்போது ஞாபகப்படுத்துகின்றேன் தெரியுமா? கடந்த ஒருவார காலமாக  நாடு முழுவதும் நிகழ்ந்து வரும் மக்கள் ஆர்ப்பாட்டத்தின் மையப்பிரச்சினையாக எரிபொருள் விலையேற்றங்கள் இருந்துவருகின்றது. 

அரசு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளை ஒவ்வொன்றாய் அதிகரிக்காமல் எரிபொருளின் விலையை மட்டும் அதிகரித்தது. ஆனால் அதனை அடுத்து இப்போது அன்றாடம்  தொடர்ச்சியாய் இடம்பெற்றுவரும் போக்குவரத்துக்கட்டணங்கள், மின்சாரக்கட்டணங்கள், நீர்வழங்கல் கட்டணங்கள், சீமந்து உட்பட கட்டிடப் பொருட்களின் விலையேற்றங்களை பார்க்கும் போது...


அவ்வையாரின்  அந்த 'வரப்புயர' தான் நினைவுக்கு வருகின்றது.


-மூதூர் மொகமட் ராபி