Thursday, October 31, 2013

இஸ்லாம் : சில புரிதல்களை நோக்கி





ஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் 1989 அக்டோபரில் வெளியிட்டுள்ள திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் ‘குர்ஆனை அணுகும் முறை’ குறித்து எழுதியுள்ள சில வாசகங்கள்: “சித்தாந்தங்களையும் கருத்தோட்டங்களையும் எடுத்துக் கூறும் ஒரு நூலல்ல இது. சாய்வு நாற்காலியில் அமர்ந்துகொண்டு சாவகாசமாகப் படித்து அறிந்துகொள்ளக்கூடிய வேதமல்ல இது. பொதுவாக மதத்தைப் பற்றி இன்று உலகம் கொண்டுள்ள கருத்தின்படியுள்ள ஒரு மதநூலன்று இது . . . மாறாக ஓர் இயக்கத்தை உருவாக்க வந்த வேதமாகும் இது. ஒரு புரட்சியைத் தோற்றுவிக்க வந்த நூலாகும் இது.” மேலும் அது கூறுகிறது: “எல்லாவித அசத்தியங்களுக்கும் எதிராகப் போர்க்குரல் எழுப்புமாறு அவரைத் தூண்டிற்று.” (பக். 33-34) ‘அவர்’ என்று சுட்டப்படுவது ஒரு முஸ்லிமைத்தான்.

இறைபக்தி என்பது என்ன? குர்ஆனின் வழியில் சொல்வதென்றால் சமூகத்தின் பல அம்சங்களுடன் இணைந்திருக்கிற ஒரு கருத்தியல் அல்லது ஓர் ஆன்மீக நிலை. வெறுமனே இறைபக்தி என்றால் மனமுருகி நிற்கின்ற ஒருநிலை போதும். ஆனால் இங்கே ஒரு போர்க்குரல் தேவை என்ற நிலையில் அது இறை பக்திக்கு அப்பாலும் சென்றாக வேண்டிய நிர்ப்பந்தத்தை ஒரு முஸ்லிமுக்கு ஏற்படுத்துகிறது.

முஸ்லிம் சமூகம் இன்று உலகளாவிய நெருக்கடிக்குள் வந்து நிற்கின்றது. அமெரிக்க இரட்டைக் கோபுரத் தகர்ப்பிற்குப் பின் ‘இஸ்லாமியப் பயங்கரவாதம்’ என்ற கருத்தாடல் அமெரிக்காவின் அடுத்தக்கட்டப் பொருளாதார மேய்ச்சலுக்கு நன்றாக உதவியது. இதுபோன்ற சூழ்நிலைகளில் இளைஞர்கள்தான் பலிகடாக்களாக வேண்டும். வெவ்வேறு நிகழ்ச்சி நிரல்கள், நாடகக்கதைகள் மூலம் உலகின் பல்வேறு நாடுகளிலும் முஸ்லிம் இளைஞர்கள் வேட்டையாடப்பட்டார்கள். இதற்கு இந்தியாவும் விதி விலக்கல்ல; மிகத் தோதான முறையில் அப்போதைய வாஜ்பேயியின் பா.ஜ.க. ஆட்சி நடந்துகொண்டிருந்தது. முஸ்லிம் இளைஞர்களும் தம் கொம்புகளைச் சீவிக்கொண்டு களத்திற்குள் நுழைய வேண்டியதானது.


சரியாகப் பத்தாண்டுகள் கடந்த நிலையில் முஸ்லிம் இளைஞர்கள், பெண்கள் முன்னணியில் நின்று எகிப்தின் தஹ்ரீர் திடலில் அஹிம்சை எனும் காந்தீய வழியில் இடைவிடாது போராடினார்கள். தகவல் தொடர்பில் ஏற்பட்ட நவீனப் புரட்சியைப் பயன்படுத்திக் கொண்டு மத்தியக் கிழக்கு நாடுகளில் சர்வாதிகார ஆட்சியாளர் களைப் பந்தாடத் தொடங்கினார்கள். (ஆனால் அதன் பலன்கள் யாரைப் போய்ச் சேருகின்றன என்பது வேறு விஷயம்.) சிரியாவில் இன்றுவரை அந்த அலை ஓயவில்லை.

அப்படியானால், இதோ ஓர் ‘இஸ்லாமிய ஜனநாயகப் புரட்சி’ என்று எவருமே அதனை மனம்குளிர அழைக்கவில்லையே, அது ஏன்? இஸ்லாமியப் பயங்கரவாதப் பீதிக்கு அது ஒரு மாற்றுச் சொல்லாடலாக இருந்திருக்கும். இஸ்லாமிய அறிவு ஜீவிகளும் இதழ்களும் இதில் கவனம் செலுத்தவில்லை.
முஸ்லிம் சமூகத்தின் உளவியலை ஆதிக்கசக்திகளே தீர்மானித்து வருகின்றன. அதன் காரணமாகச் சமூகத்தின் நெருக்கடிகள் குறையாமல் நீடிக்கின்றன. முஸ்லிம் சமூகம் இறுக்கமானது என்ற கருத்தும் நிலைபெற்றிருக்கின்றது. காலத்தால் வெகு பின்னராகத் தோன்றுகின்ற இஸ்லாம், விரிவான சமூகப் புரிதலோடுதான் இருந்திருக்க வேண்டும். ஆனால் இஸ்லாமிய அணுகுமுறையை முஸ்லிம்களே புரிந்துகொள்ள முடியாத நிலையில் அதன் உளவியல் அமைந்துள்ளது.

குர்ஆன் என்பது எல்லோருக்கும் ஓரே பார்வையில், புரிதலில் இல்லை. எல்லாவற்றிலுமே உலக நடைமுறை அப்படியானதுதான். ஒருவரின் மனநிலை, அவருடைய கல்வியறிவு, அரசியல், பொருளாதாரம், சமூகப் பற்று, இனம், கலாச்சாரம் போன்ற பல்வேறு அடுக்குகளிலும் உள்ள அவருடைய சாய்மானத்தை வைத்துத்தான் எல்லாமே அவரால் புரிந்துகொள்ளப்படுகிறது. குர்ஆனுக்கும் அதுவே நிலை. சமயங்களில் முஸ்லிமல்லாத ஒருவர் குர்ஆனின் அணுகுமுறை, கருத்துகளுக்கு ஒத்து வருகிறார். ஒரு முஸ்லிமானவர் குர்ஆனின் அணுகுமுறை, கருத்துகளுக்கு வெளியேயும் போய் விடுகின்றார்.

ரயில் பயணத்தில் ஒரு கிறித்தவர் தூங்கியெழுந்த கையோடு பைபிளை வாசிக்கிறார். மாபெரும் பிரசங்கங்களில், சர்ச் பிரார்த்தனைகளில் பைபிள்கள் விரிக்கப்படுகின்றன. இன்று குர்ஆனை வாழ்வில் பலமுறை ஓதியவர்கள் சில இலட்சங்கள்தான் இருப்பார்கள். ஆனால் குர்ஆனை வாழ்வில் ஒருமுறையேனும் முழுதாய் வாசித்தறியாத முஸ்லிம்கள் பலகோடிப் பேர் தேறுவார்கள். குர்ஆனின் மீதான மரியாதைக்கும் அதனைத் தொட்டுத் திருப்புவதற்குமான இடைவெளி அளவிட முடியாதது. பலகோடி முஸ்லிம்களும் தங்கள் வேதநூலை அறிந்துகொண்டது, வெள்ளிக்கிழமை மதிய வேளைகளில் நிகழ்த்தப்படுகின்ற “பயான்”களின் மூலமே. பயான் எனும் பிரச்சாரத்தை நிகழ்த்துகின்ற ஆலிம் (தொழுகையை முன்நின்று நடத்துபவர்) மேலே ஏற்கெனவே சொல்லப்பட்டுள்ள மனநிலை, கல்வியறிவு, சமூகப் பற்று, அரசியல் ரீதியிலான புரிதலின் அடிப்படையிலேயே தன் பிரசங்கத்தையும் நிகழ்த்துவார். துண்டு துண்டான குர்ஆன் வசனங்கள்; இதன் விளைவாய்ப் பகுதி பகுதியான இஸ்லாமியப் புரிதல்கள்: முழுமைபெறத் தவறிவிட்டது குர்ஆனிய வாசிப்பு.




இப்போது உலகெங்கும் நிகழ்த்தப்படும் பயான்கள் குர்ஆனை ஓர் ஆன்மீக எழுச்சியாக மாத்திரமே சித்திரிக்கின்றன. குர்ஆனியக் கருத்துக்கள் பேசப்படும் அதேநிலையில் இருந்தபடியேதான் நபிகள் நாயகத்தின் இறைபக்தி, நல்லொழுக்கங்கள் பேசப்பட்டு வருகின்றன. வட்டி வாங்குதல், புறம்பேசுதல், களவு புரிதல், குடிபோதை, காம உணர்ச்சிகள், இறை மறுப்பு என்பது மாதிரியான விசயங்கள் ஒருங்கிணைப்பு செய்யப்பட்டு, மிகக் குறைவான அம்சங்களோடு இஸ்லாம் வடிகட்டப்பட்டுள்ளது. நபிகள் நாயகத்தின் ஈகை, தனி மனித உறவுகள், அறச்செயல்கள் போன்றவை நபிகள் நாயகத்தின் இரக்க உணர்வு என்பதாகக் குறுக்கப்பட்டுள்ளன. நபிகள் நாயகம் அழகிய முன் மாதிரி, இஸ்லாம் ஓர் அற்புதம் என்று பல்லாயிரமானோர் நிகழ்த்திவரும் விளக்கப் பிரச்சாரங்கள் இன்னமும் அதன் தொடக்க நிலையிலேயே நிற்கின்றன; இவ்வாறான சமயப் போதனைகள், நடைமுறையில் நம் மனதுக்குள் எழும் சித்திரம் ‘இஸ்லாம் - ஓர் ஆன்மீகத் தூய்மை’ என்பதாம். ஆனால் இதுவல்ல இஸ்லாம்!

இஸ்லாம் இவ்விதமான ஆமை ஓட்டுத் தன்மையைப் பெற்றிருக்கவில்லை. இன்று இஸ்லாமியப் புரிதல்களில் புதிய ஒளியும் விரிவுகளும் இல்லை; அனுபவச் செழுமைகள் ஏறவில்லை. இஸ்லாமியச் சிந்தனையாளர்களின் கால்கள் இந்நேரம் சிறகுகளாக மாறியிருக்கவேண்டும். எண்ணெய்ச் செக்குகளைச் சுற்றிக்கொண்டே இருக்கும் நடைப் பயணத்தால், இஸ்லாத்தின் ஆன்மீகத் தன்மைக்கு அப்பாலும் நீண்டு செல்லும் சமூக வாழ்வுக்கான தேடல்களில் முஸ்லிம்கள் தேக்கநிலை பெற்றுள்ளனர். ஆனால் இறைமையும் நபித்துவமும் கலந்தெடுக்கப்பட்ட திரட்சியில் இஸ்லாமியச் சமூக ஒளி பல இருட்டுகளை உடைக்கின்றது.

நபிகள் நாயகம் தொழுகையை மட்டுமே முறைப்படுத்தித் தரவில்லை. நாயகம் ஒரு சமூகப் போராளியாகப் பரிணமித்தவர். நபித்துவ நிலையை அடைவதற்கு முன்பு முஹம்மது முஸ்தபாவாக அறியப்பட்ட அவர் ஹில்ஃபுல் ஃபுதூல் என்ற அமைப்பில் இடம் பெற்றிருந்தார். அரேபியப் பொருளாதாரம் நாடோடிப் பொருளாதாரத்தில் இருந்து வர்த்தகப் பொருளாதாரமாக மாறிக்கொண்டிருந்த நேரம். அதன் இயல்புக்கேற்றபடி ஒருபுறம் செல்வம் குவிந்தது, மறுபுறம் ஏழ்மை பெருகியது. சமூகத்தில் இதனால் அதிருப்தி அலைகள் உண்டாயின. நகரத்தில் வன்முறைகளும் ஏழைகளின் மீதான தாக்குதல்களும் நடந்துவந்தன. இதுபோன்ற சமயங்களில் ஒடுக்கப்படுவோருக்கு ஆதரவாகவும் அவர்களுக்கு உதவி அளிக்கவும் ஹில்ஃபுல் ஃபுதூல் அமைப்பிலிருந்த இளைஞர்கள் விரைந்தோடிச் சென்றனர். அவ்வாறு சென்றவர்களில் முஹம்மது முஸ்தபா (பின்னாளில் அவரே நபிகள் நாயகம்)வும் முக்கியமானவர். அது ஒரு வீரர் குழாமாகவே அறியப்பட்டது. அப்படியானால் அது ஒரு சமூகச் சேவை அமைப்பாக மட்டுமே இருக்கமுடியாது என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். நபிகள் நாயகமாக ஆன பின்னரும் அவருடைய மலரும் நினைவுகளில் அதன் உறுதி இருந்தது. “ஹில்ஃபுல் ஃபுதூல் தொடங்கப்பட்ட காலத்தில் நான் அதில் கலந்துகொண்டேன். இந்தப் பெருமையை விட்டுக் கொடுப்பதற்கு ஈடாகச் செந்நிற ஒட்டகங்களின் மந்தை ஒன்றைக் கொடுத்தால்கூட நான் இணங்க மாட்டேன். இன்றும்கூட யாரேனும் அந்தக் குழாமின் பெயரால் என்னை உதவிக்கு அழைத்தால் நான் ஓடோடிச் சென்று உதவுவேன்.” தமது இளம் வயதிலேயே மக்கா நகரச் சமூகத்தில் மண்டியிருந்த கேடுகளைப் போக்க நபிகள் நாயகம் ஏதாவது செய்ய விரும்பினார் என்று அஸ்கர் அலி என்ஜீனியர் குறிப்பிடுவது இதனால்தான். மக்கா நகர ஏகபோக வர்த்தகர்களின் அஹ்லாஃப் என்ற அமைப்பின் சவால்களை எதிர்த்து நின்றதன் மூலம், நபிகள் நாயகத்தின் சமூக அக்கறை என்றும் ஏழைகளுக்குரியதாகவே இருந்தது. பணத்தைச் சேர்த்து வைக்காதீர்கள், செல்வத்தால் அகம்பாவம் கொள்ளாதீர்கள் என்று நபிகள் நாயகம் முஸ்லிம் செல்வந்தர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதையும் இதனோடு இணைத்துப் பார்க்க வேண்டும்.

நபிகள் நாயகம் எந்த அளவிற்குத் தொழுகையையும் இறைபக்தியையும் வலியுறுத்தினார்களோ, அதே அளவில் சமூகத்தில் ஏற்பட்டு வந்த செல்வக் குவிப்பு, அதனால் உண்டான வறுமை, அது மக்களிடையே அதிருப்தியாகப் பரவி பின் சமூகக் கொந்தளிப்பாக வீச்சு பெறப் போவதையெல்லாம் நுட்பமாகக் கவனித்தபடியே இருந்தார்கள்.
அந்த மாதிரியான சமயங்களில் அவர் தன் நடை, உடை, பாவனைகள் அனைத்திலும் ஏழைகளின் பக்கமே தன் சாய்வு என்று வெளிப்படுத்தி வந்தார். இதற்கான மாற்று இறைபக்தியும் அதனோடு சேர்ந்த தொழுகையும்தான் என்று வாளாவிருந்து விடவில்லை. சமூகச் சேவைகளின்பால் ஒவ்வொரு முறையும் அழைப்பு விடுத்தபடியே இருக்கிறார். விதவைகள், ஏழைகள், அநாதைகள் ஆகியோரைப் போஷிக்கும்படி மக்காநகரச் செல்வந் தர்களுக்கு தொடர்ந்து அறிவுரை வழங்குகிறார்.




இறை நம்பிக்கையாளர்களைச் சமூக நீதியின் பக்கம் நிறுத்துகிறது குர்ஆன். அவர் ஒரு முஜாஹித் (போராளி). “நம்பிக்கையாளர் என்பவர் இறைவனின் பூமியில் சமூக நீதியை நிலைநாட்டும் திட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் ஒரு புதியவகை மானுடரே ஆவார்; எந்தச் சூழ்நிலைகளின் கீழும் எந்தவிதமான அநீதிக்கும் அவர் அடிபணிய மாட்டார். ஒரு நீதியான சமூகத்தை நிறுவுவதற்காக இறுதிவரை அவர் போராடுவார்.”

இஸ்லாத்தின் உன்னதங்களை தொழுகையின் வாயிலாக மட்டுமே எட்டுவது சாத்தியமில்லாதது. தொழுகை ஒரு நுழைவாயில்தான். ஆனால் இப்போதுள்ள நடைமுறைகளின்படியும் ஒருவர் சாதாரணமான அளவில் புரிந்துகொள்வதன்படியும் தொழுகைதான் இஸ்லாத்தின் உச்ச நிலை; அதைத் தொழுது முடித்துவிட்டால், ஒருவேளை வசதியிருந்து அதையே ஹஜ் பயணமாக நீட்டித்து மக்கா - மதீனாவிலும் தொழுதுவிட்டால், உயர்ந்த இறையச்சத்தைத் தான் கொண்டிருப்பதாகக் கருதிக்கொள்ளும் மனநிலையே ஒவ்வொருவரிடமும் காணப்படுகின்றது. தொழுகை இறையச்சம் மிக்க உறுதியேற்பு நிகழ்வு. அந்த உறுதியேற்பின் வழியே அவர் ஜிஹாதி (புனிதப் போராளி) ஆகிறார்; அதாவது சமூக - அரசியல் - பொருளாதாரம், அன்பு, மனிதநேயம் ஆகியவற்றைச் சமூக நீதி அடிப்படையில் நிறைவேற்றித் தரவேண்டிய போராளியாக ஆகிறார். தொழுகைக்காக ஒரு முஸ்லிமைப் பள்ளிவாசலுக்கு அழைப்பதற்கான முழக்கத்தில் “தொழுகையின் பக்கம் வாருங்கள்; (மனித) நலத்தின் பக்கம் வாருங்கள்” என்கிற அறைகூவல் இருக்கின்றது. ஒருவரை மனிதகுல முன்னேற்றத்தின் செயல்பாடுகளுக்குச் சார்புநிலை இல்லாமல் அழைப்பதைவிட, ஆன்மீகத்தின் வழியே இறைவனைச் சுட்டிக்காட்டி அழைப்பது பயன்தரக்கூடும். நபிகள் நாயகம் பிறப்பிலேயே நபிகளாய்த் தோன்றவில்லை. 40ஆவது வயதில்தான் நபித்துவம் இறங்குகின்றது. அன்னாருடைய சமூகநோக்கங்கள், செயல்பாடுகள் ஆகியனவற்றைத் தன் ஆன்மீகத் தேடலின் மூலமாக அவர் நிகழ்த்தி வந்ததனாலேயே நபித்துவம் அவருக்குச் சாதகப்பட்டது. நபிகளாரின் வாழ்வைப் புரிந்துகொள்வதில் இருக்கவேண்டியது இறைபக்தி மட்டுமல்ல; சமூகப் பற்றும் சமூகப் புரிதல் அவசியம். இதன்படி நாம் முதன்மையாகப் புரிந்துகொள்ள வேண்டியது (இஸ்லாமிய) சமூக வாழ்க்கையை அமைக்கும் முதல் அம்சமான அதன் பொருளாதாரம் பற்றியாகும்.




இஸ்லாமியப் பொருளாதாரம் எத்தகையது? இஸ்லாமிய இயக்கத்துக்கு முதன்மையான எதிர்ப்பு மக்காவைச் சேர்ந்த பணக்காரர்களிடம் இருந்தே எழுந்தது. குர்ஆனின் ஏராளமான வசனங்கள் செல்வக் குவிப்பைக் கண்டனம் செய்கின்றன. குர்ஆனின் வசனங்கள் மக்காவில் இறங்கியபோது அவை கடுமையான சொற்களாக இருந்தன. செல்வமே எல்லாவற்றுக்கும் தீர்வு என்று இஸ்லாம் நம்பவில்லை. அப்படி இருந்திருந்தால் செல்வர்களுக்கு அறிவுரை கூறவேண்டிய அவசியமோ, ஹில்ஃபுல் ஃபுதூல் இயக்கத்தில் சேரவேண்டிய அவசியமோ நபி நாயகத்திற்கு இருந்திருக்காது. இஸ்லாமியச் செல்வம் சமூகத்திற்குள்ளே சுழன்றோடிய படியே இருக்கவேண்டும் (59:7). அதாவது, குவிப்பு அல்லது தேக்கம் கூடாது. அதனால்தான் பணத்தை ஈட்டும்போதே அதைச் செலவு செய்வதையும் உடனே பேசிவிடுகின்றது இஸ்லாம். “முஸ்லிமுக்குச் சொந்தமான பொருள்தான் எத்துணைச் சிறப்பானது! அவன் அதனைச் சத்தியத்துடன் ஈட்டுகிறான். பிறகு அதை இறைவழியிலும் அநாதைகள், ஏழைகள், பயணிகள் போன்றோர்க்கும் செலவிடுகின்றான். அவனுக்கு நேர் மாறாக எவர் அதனைச் சத்தியத்துடன் ஈட்டுவதில்லையோ அவருடைய நிலை எத்தகையதெனில், எந்தக் காலத்திலும் முழுமையான மனநிறைவு அடையாத நிலையில் சாப்பிட்டுக்கொண்டே இருக்கின்ற மனிதனைப் போன்றதாகும்.” என்று நபிகள் நாயகம் கூறுகிறார். (அறிவிப்பு: அபூ ஸயீத் குத்ரி (ரலி). நூல்: புகாரி.)

பொதுவாகவே நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை எழுதுவோர், மக்காவிலுள்ள குறைஷி இனத்தார், நபிகளின் இஸ்லாமியப் பிரச்சாரத்தின் மீது கோபப்பட்டுப் பலவிதமான இடையூறுகளை ஏற்படுத்தி வந்தனர் என்று எழுதுவார்கள். குறைஷி இனத்தாரின் கையில்தான் மக்காவின் செல்வாதாரங்கள் குவிந்து கிடந்தன. நபிகள் நாயகத்தின் இஸ்லாமியப் பிரச்சாரம் தங்களின் செல்வாக்கையும் பொருளாதாரத்தையும் சீர்குலைத்துவிடும் என்பதுதான் அவர்களின் அச்சம். அப்படியானால் அந்த உண்மையைப் பொருளாதார அநீதியாகக் குறிப்பிடும் வகையில் மக்காவின் பணக்காரர்கள் என்று வெளிப்படையாக எழுதாமல், இனத்தின் மீதான தன்மையைக் காட்டும் வகையில் குறைஷி குலத்தார் என்றே குறிப்பிடுகிறார்கள். இதில் இனம் பற்றிக் குறிப்பிட வேண்டிய அவசியம் ஏதும் இல்லை. ஏனெனில் நாயகமும் குறைஷி இனத்தவர்தான். நாயகத்தை எதிர்த்தவர்கள் அவருடைய உறவினர்களும் ஆவர். எனவே அதை ஒரு பொருளாதாரப் போராட்டமாக வர்ணிப்பதில் முஸ்லிம் அறிவு ஜீவிகளுக்கு இருக்கின்ற மனச்சிக்கலை நாம் கண்டுகொள்ள வேண்டும். இஸ்லாமிய எழுச்சியையும் நபிகள் நாயகத்தின் அறப்போராட்டங்களையும் இவ்விதமான ஏற்றத்தாழ்வுகளின் மீது நின்று எழுதினால், அது ஒருவகையான வர்க்கப் பிளவை அல்லது வர்க்கப்போரைத் தோற்றுவித்துவிடும் என்ற அச்சம் இதற்குக் காரணமாக இருக்கக்கூடும்.

உலகின் பல நாடுகளில் இஸ்லாமிய ஆட்சி இருப்பதாகச் சொல்லப்படுகின்றது; அதாவது அப்படிக் கருதிக் கொள்கிறார்கள். முஸ்லிம்களை முஸ்லிம்கள் கலாச்சார ரீதியான ஆதிக்கக் கூறுகளின் தன்மையோடு ஆண்டுகொண்டிருக்கிறார்கள் என்பதைத்தான் அப்படி எண்ணி வருகிறார்கள். இஸ்லாமியப் பொருளாதாரத்தை அடையாளம் காட்டும் ஒரே சின்னம் இஸ்லாமிய வங்கியியல்தான். இஸ்லாமிய வங்கியியலை முஸ்லிம் நாடுகளில் ஏற்படுத்திவிட்டால் அங்கே இஸ்லாமிய ஆட்சி பரிபூரணமாகிவிடும் என்று ஒரு நம்பிக்கை நிலவுகின்றது. இந்த இஸ்லாமிய வங்கியியலின் முக்கியத்தன்மை வட்டி ஒழிப்பு. வட்டியை ஒழித்துவிட்டால் சுரண்டலின் ஒரு பகுதி மட்டுமே முடிவுபெறும்; மற்றைய சுரண்டல்களையும் ஒழித்துக்கட்டும் இஸ்லாமிய மந்திரத்தை இங்கே எவரும் பேசவில்லை. முதலாளித்துவப் பொருளாதாரத்தின் மீது இஸ்லாமிய வங்கியியலை ஊடுருவ விட்டால் இஸ்லாமியப் பொருளாதாரம் துளிர்த்துவிடும் என்று நம்புகிறார்கள்!

இப்போது உலகம் முழுவதும் முதலாளித்துவமே நிலவுகிறது. அதன் உக்கிரம் உலகமயமாக்கலாக நம் தலையில் விழுந்துள்ளது. முதலாளித்துவமோ அல்லது உலகமயமாக்கலோ இஸ்லாமியப் பொருளாதார அறிஞர்களிடம் கலந்துபேசி உருவாக்கப்பட்டதல்ல! முதலாளித்துவமும் உலகமயமாக்கலும் இஸ்லாமியக் கூறுகளுக்கு இடமளித்திருக்கவில்லை. ஏற்கெனவே உலகம் முழுமைக்கும் முதலாளித்துவம்தான் கலாச்சாரச் சீரழிவை ஏற்றுமதி செய்தது. உலகமயமோ எல்லா நாடுகளின் - எல்லா இனங்களின் - எல்லா மதங்களின் கலாச்சாரங்களையும் ஒழித்துக்கட்டி ஏகமயமான ஒற்றைக் கலாச்சாரத்திற்கு வித்திட்டுள்ளது. முஸ்லிம் சமூகம் எப்போதுமே இந்தக் கலாச்சாரச் சீரழிவைக் கண்டனம் செய்து வருகிறது. ஆனால் உலகமயமாக்கலை இருகரம் நீட்டி வரவேற்கிறது. முஸ்லிம் அறிவுஜீவிகளில் பலர் இஸ்லாமியப் பொருளாதாரம் என்று சமூகத்தின் கண்களை முதலாளித்துவத்தையும் உலகமயமாக்கலையும் நோக்கியே திருப்புகிறார்கள்.




சில ஆண்டுகளுக்கு முன் மதுரையிலிருந்து வெளியாகும் ‘சிந்தனைச் சரம்’ இதழில் இஸ்லாமிய அறிஞர் அ. முஹம்மது கான் பாகவி, மன்மோகன்சிங்கின் வாக்கினை நம்பி ஒன்பது சதவீதப் பொருளாதார வளர்ச்சிக்கு ஆனந்தக் கண்ணீர் வடித்திருந்தார். ‘முஸ்லிம் முரசு’ இதழில் எழுதிவரும் ரசூல் மைதீன் உலகமயம் நசுக்கியெறிந்த சென்னையின் நகர வீதிகளில் குப்பையாகக் கொட்டப்பட்டிருக்கிற கிராமத்து விவசாயிகளின் மீது சோம்பேறிகள், திருடர்கள் என்று வசைமாரி பொழிந்து அவர்களை சென்னையை விட்டே துரத்தியடியுங்கள் என்று உத்தரவும் போடுகிறார். கலாச்சாரத்தையும் பொருளாதாரத்தையும் ஏழைகளின் அவலத்தையும் வேறுவேறாகப் பிரித்துப் பார்த்துச் சினமுறும் இஸ்லாமியச் சிந்தனையாளர்கள் திசையெங்கும் பரவித்தான் கிடக்கிறார்கள். இது நபிகள் நாயகத்தின் வாழ்வுக்கும் இஸ்லாமியத் தோற்றுவாய்க்கும் மாறான சிந்தனை. தங்களின் பரிசீலனைக்கு வருகின்ற எல்லா விஷயங்களின் மீதும் இஸ்லாமியக் கூறுகளைத் தோண்டித் துருவிப் பார்ப்பவர்கள், இன்றைய மனித வளங்களின் மீதும் இயற்கை வளங்களின் மீதும் நடத்தப்படும் உலகமயச் சூறையாடல்களை எப்படி மறுகேள்வி இல்லாமலே ஒப்புக் கொள்கிறார்கள்?

இன்றைய உலகப் பொருளாதார நடவடிக்கைகளில் முக்கியப்பங்கு வகிக்கும் இயற்கை வளங்களில் பெட்ரோலியம் முதன்மையானது. அந்தப் பெட்ரோலிய வளங்களைக் கவர்ந்து செல்லவே நடந்து முடிந்த இராக் மீதான போரும் நடக்கப் போவதாக அஞ்சப்படுகிற ஈரான் மீதான போரும் இருந்தது; இருக்கின்றது. மற்ற அரபுலக நாடுகள் அமெரிக்காவின் காலடியில் கிடப்பவை. அமெரிக்க யானைக்கு மிஞ்சியதுபோக, சிந்திப்போன கவளங்களில் அரபுலக மன்னர்கள், சர்வாதிகாரிகள் ஷேக்குகள் போன்றோர் தங்களின் ஆடம்பர வாழ்வை வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இவர்கள் வாழும் வாழ்வும் இவர்கள் ஏற்படுத்திக்கொண்ட மன்னராட்சி முறைமையும் இஸ்லாத்திற்குப் புறம்பானவை; இந்த ஆட்சி முறைகளால் இஸ்லாமும் உலகளாவிய முஸ்லிம் சமூகமும் தீவிரமாகவே களங்கப்பட்டுள்ளன. முஸ்லிம் சமூகத்தின் துயரங்களுக்கு இந்த அரபுலகே மூலகாரணமாய் உள்ளது.

அந்த அரபுலகத்தின் மூலமே உலகெங்கும் கொண்டு செல்லப்படும் இஸ்லாம் எப்படி சமூக நீதிக்கான - சமத்துவத்திற்கான - கோதரத்துவத்திற்கான தத்துவமாக இருக்கமுடியும்? அரபுலகின் மசூதிகளில், வெள்ளிக்கிழமை பிரசங்கங்களில், பெருநாள் தொழுகைகளில் நிகழ்த்தப்படும் உரைகளில் எப்படி இஸ்லாம் காணக் கிடைக்கும்? அந்த உரைகள் மன்னர்களின் தர்பார்களில் உருவாக்கப்படுபவை; அல்லது மன்னர்களின் கேளிக்கை மண்டபங்களின் அங்கீகாரம் பெற்றவை! சுயசிந்தனைக்கும் இஸ்லாமியத் தேடலுக்கும் வழியேயில்லாத உரைதான் ஓர் அரேபிய மௌலவியின் உரை. அமெரிக்க ஏகாதிபத்திய நுகத்தடிகளின் கீழே பூட்டப்பட்ட அரேபிய மன்னர்களின் சுயநலங்களை வர்ணம் பூசி மறைக்கின்ற இந்த இஸ்லாம் ஏழை எளியவர்களை எப்படி மீட்கும்? 1970 - 80களில் அணியணியாக அரபுலகம் சென்று தங்களின் பிழைப்புக்கான வழிதேடிய இலட்சக்கணக்கான முஸ்லிம்கள், ஒருவகையான தவ்ஹீத்வாதம் என்ற நச்சரவத்தால் தீண்டப்பட்டு அதில் மதிமயங்கிய நிலையில், தத்தம் நாடுகளுக்கும் சென்று அங்கேயும் தவ்ஹீத்வாதத்தைக் கொட்டிவிட்டார்கள். எப்போதுமே இளைஞர்களின் மனம் துறுதுறுப்பானது; புதிய புதிய மாற்றங்களை விரும்புவது. உலகநாடுகளின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் “தூய்மையற்ற இஸ்லாத்தோடு” அரபுலகம் சென்ற அந்த இளைஞர்கட்கு அரபுலகின் பழங்குடிக் கலாச்சாரங்களும் பாலைவனத்து ஆடை மரபுகளும் புதிய இஸ்லாமாகத் தோற்றம் தந்தன. தர்காக்கள் தகர்க்கப்பட்ட நிலையே ஒரு மாபெரும் புரட்சியாக அவர்களின் சிந்தனைகளில் பதிந்தன. சுரண்டல் ஏற்பாடுகளுக்காய்த் தந்திரமாகச் சுருக்கப்பட்ட தொழுகை முறைகளின் நுட்பம் அறியாமலேயே அதன் கீழே வசப்பட்டனர். அதாவது அந்த மாபெரும் வேலையற்றோர் கூட்டத்துக்கு எதிரான கருத்துக்களை - செயல்பாடுகளை “தூய்மையான இஸ்லாம்” என்கின்ற அறியாமையின் பேரில் தங்கள் தலையிலேயே சுமந்து வந்தனர். இன்று தவ்ஹீத்வாதப் பள்ளிவாசல்களில் நிகழும் பிரசங்கங்கள் தங்களின் வாழ்வமைப்புக்கு எதிரானது என்பது புரியாமலேயே ஓர் ஏழை ஆலிம் செயல்படுகின்றார்! பிரசங்கம் புரிகின்றார்!

பொருளாதார ஏற்றத் தாழ்வுகளைப் பற்றிய விவாதங்கள் வரும்போது பிற சமயத்தார் எந்தக் காரணங்களை முன்வைத்துத் தங்கள் தரப்புகளை நியாயம் செய்வார்களோ, அதனையே முஸ்லிம் பொருளாதார ஆர்வலர்களும் பின்பற்றிப் பேசுவது மரபு. அந்தச் சமயத்தில் இஸ்லாத்தின் நோக்கை அப்பட்டமாகக் கைகழுவி விடுவார்கள். ஐந்து விரல்களும் ஒன்றாகவா இருக்கின்றன, மேடு இருந்தால் பள்ளமும் உள்ளதல்லவா என்பன போன்ற காரணங்களை முன் வைக்கிறார்கள். சோவியத் யூனியன் படைகள் ஆப்கானிஸ்தானில் முகாம் இட்டபோது தலிபான்கள் சோவியத் ராணுவத்தை எதிர்த்துப் போரிட்டார்கள். அன்று தலிபான்களுக்கு ஆயுத உதவி செய்தது அமெரிக்கா, தலிபான்களின் போராட்டத்தை நியாயப்படுத்தி அவர்களை வலுப் படுத்துவதற்காகக் களமிறங்கிய அமெரிக்கா தந்திரமாகப் புனைந்துரைத்த வாசகம் இவ்வாறு அமைந்தது, “இஸ்லாம் இயல்பாகவே பொதுவுடைமைக் கருத்துகளுக்கு எதிரி என்பதால் தலிபான்கள் சோவியத் யூனியனை எதிர்த்துப் போர் புரிகிறார்கள்.” பின்னர் இது பொது வழக்காகியது. முஸ்லிம் சமூகத்துப் பொருளாதார மேதைகளுக்கும் அமெரிக்கா இறக்குமதி செய்த இஸ்லாமியக் கருத்துக்களே கைவிளக்காயிற்று. ஆனால் அல்லாஹ்வை முஸ்லிம்கள் குறிப்பிடும்போதெல்லாம் ‘எல்லாம் வல்ல அல்லாஹ்’ என்றே குறிப்பிடுவார்கள். ‘எல்லாம் வல்ல அல்லாஹ்’ பொருளாதார ரீதியான ஏற்றத்தாழ்வுகளை மட்டும் எப்படி ‘இயற்கை’யாகவே இருக்க விட்டுவிடுவான்? அல்லாஹ்வின் வல்லமையையே கேள்விக்கு உட்படுத்துகிறோம் என்கிற எண்ணம் இந்நாள் வரையிலும் இஸ்லாமியப் பொருளாதார வாதிகளுக்குத் தோன்றாமல் இருக்கின்றது! இவ்வகைக் கருத்துக்கள், சொற்பிரயோகங்கள் அடிக்கடிப் பயன்படுத்தப் பட்டமையாலேயே இஸ்லாமிய அறக்கோட்பாடுகள் ஜீவனற்றுப் போய்க்கிடக்கின்றன. இதன் நீட்சியாகவே முஸ்லிம் சமூகம் காலவெள்ளத்தில் எதிர்நீச்சலைப் போட முடியாமல் கரையொதுங்கிக் கிடக்கின்றது.

உலக அரசியல் அரங்கில் இஸ்லாத்தின் எழுச்சிக்கு இடமில்லை. எதைப் பேசுவதாக இருந்தாலும் முஸ்லிம் சமூகத்தின் பழம் பெருமைகளையே பேசித் தீர்க்க வேண்டியதாக உள்ளது. முஸ்லிம் விஞ்ஞானிகள், முஸ்லிம் கல்வியாளர்கள், முஸ்லிம் மனித உரிமைப் போராளிகள், முஸ்லிம் அரசியல் தலைவர்கள், முஸ்லிம் ஊடகவாதிகள் - கலாச்சாரவாதிகள் என அடையாளம் சுட்டுவதற்கு ஆளுமைகள் கணிசமாக இல்லை. உலக அரங்குகளில் முஸ்லிம்களின் குரல்கள் போதிய அளவு ஓலிப்பதில்லை. ஆனால் ஐம்பதுக்கும் மேற்பட்ட முஸ்லிம் நாடுகள் தங்கள் கைவசம் இருப்பதாகப் பூரித்துப் புளகாங்கிதம் அடைகிறார்கள். உலகின் மக்கள் தொகையில் நால்வரில் ஒருவர் முஸ்லிம் என்று விகிதாச்சாரக் கணக்கைக் காட்டுகிறார்கள். சோவியத் யூனியன் உடைந்தபோது தங்கள் அணிக்கு மேலும் ஆறுநாடுகள் வந்து சேர்ந்ததாக இறும்பூதெய்தினார்கள்.

என்ன சொல்லி என்ன பயன்? மேலைநாடுகள் முஸ்லிம் நாடுகளிலேயே முகாம் அமைத்து முஸ்லிம் நாடுகளிலிருந்தே விமானங்களை, ஏவுகணைகளை அனுப்பி முஸ்லிம்களையே அழித்தொழிக்க முடியும். உலக முஸ்லிம் சமுதாயத்திற்கு மிகப்பெரும் முட்டுக்கட்டையாக இருப்பது எகிப்து, சவூதிஅரேபியா, குவைத், ஜோர்டான் உள்ளிட்ட நாடுகள். மேலைநாட்டு முதலாளித்துவம் கூட தன் வளர்ச்சிக்கு மூலதனம் இடுகின்றது. ஆனால் அரபு மன்னர்கள் எவ்வித மூலதனமும் இல்லாமல் இயற்கையாய்க் கிடைத்த பெட்ரோலிய வளத்தை வாரிச்சுருட்டித் தமதுடைமையாக்கிக் கொண்டார்கள். எனவே கல்வி - விஞ்ஞான வளர்ச்சிக்கும் வாய்ப்புகள் இல்லை. இஸ்லாமியச் செல்வம் சுழலவேண்டும் என்பது இஸ்லாமிய விதி. ஆனால் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் வங்கிகளுக்குள் அவை பாதுகாக்கப்படுகின்றன. இந்தச் செல்வம் அரபுலகத்திலேயே முதலீடு செய்யப்பட்டிருந்தால் கல்வியறிவின்றி வறுமையிலும் நோய்களிலும் வாடிவதங்குகிற அரேபியர்களும் ஆப்பிரிக்க
கறுப்பின மக்களும் வீறுகொண்டு எழுந்திருப்பார்கள். இஸ்லாமியத் தீவிரவாதத்தின் மூல ஊற்று அடைபட் டிருக்கும். அந்தப் பெட்ரோ டாலரை ஏனைய நாடுகளில் முதலீடு செய்திருந்தாலும் அரபுகளும் ஏனைய நாட்டவரும் தோழமை பூண்டிருப்பார்கள். கலாச்சார உறவுகளை வளர்த்திருப்பார்கள்.

இன்று அரேபியக் கலாச்சாரம் கலை இலக்கியங்கள் இல்லாமல், வளர்ச்சி காணாமல் அந்த உலகத்தின் நிலவியலுக்கு ஏற்றபடி எல்லாமே பாழ்பட்டுக் கிடக்கின்றன. அரேபியர்களின் மனஎழுச்சியைத் தூண்டி அதனைச் செயலாக்கத்திற்குக் கொண்டுவர வேண்டிய கலை - இலக்கியம் - கல்வி - தொழில்நுட்பம் - விஞ்ஞானம் என எல்லாவற்றின் முடக்கத்திற்கும் இந்தச் செயல்படா மூலதனம் காரணமாகின்றது. வெளிப்படையாக மேலைய முதலாளித்துவ நாடுகள் அறிவிக்கவில்லையே தவிர, அவை அந்தரங்கத்தில் இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுக்கவும் முஸ்லிம்களைப் பல்வேறு காரணங்களால் அப்படியே தங்கள் அடிமைகளாக முடக்கி வைக்கவுமே விரும்புகின்றன. இந்த நிலைக்கு ‘இஸ்லாமியச் செல்வம்’ அந்த மேலை நாடுகளிலேயே முடங்கிக்கிடப்பது இன்னும் அவர்களுக்குத் தோதாக ஆயிற்று. அத்துடன் அந்தப் பெட்ரோ டாலர்களையும் தங்களின் ‘நாடு பிடிக்கும் ஆசை’களுக்கும் வணிக முதலீட்டுக்கும் பயன்படுத்திக் கொள்கின்றன. இஸ்லாம் வட்டியைத் தடை செய்திருப்பதால் கோடிக்கணக்கான பெட்ரோ டாலர் களுக்கான வட்டியைக்கூட அரபு நாடுகள் பெற்றுக்கொள்வதில்லை. இஸ்லாமியச் செல்வம் அவர்களின் முன்னேற்றத்திற்கும் ஆகாமல், அவர்களை அடக்கியாளத் துடிப்போரின் எதிர்ப்பு ஆயுதமாகவே ஆகிவிடுகின்றது. இதனால் அரபு நாடுகள் தங்கள் சுயமுன்னேற்றத்தை இழக்கின்றன. தங்களின் நுகர்பொருள் தேவைகளுக்கும் தங்கள் நாட்டுப் பாதுகாப்பான ஆயுதங்களுக்கும் ஏனைய தொழில் நுட்பங்களுக்கும் அவர்கள் மேலைநாடுகளை யாசிக்க வேண்டியிருக்கின்றது. அவர்களின் பெட்ரோ டாலர்களும் பெட்ரோ டாலர்களின் வட்டியுமே தங்களிடம் நுகர்பொருள்களாகவும் ஆயுதங்களாகவும் பரிமாணம் பெற்று மாறிவருகின்றன என்பதை அவர்கள் அறியவில்லை. ஒரு கல்லுக்கு இரண்டு மாங்காய்கள் என்றால் பெரிய ஆதாயம்தான். ஆனால் இங்கு ஒரு கல்லுக்கு ஒரு மரமே விழுந்து விடுகின்றது.

இது போன்ற அவலங்களையெல்லாம் உலக முஸ்லிம் சமுதாயத்தின் கண்களில் இருந்து மறைப்பதற்கு தவ்ஹீத்வாதம் அல்லது வஹாபியிசம் நல்லபடியாக அரபுநாடுகளுக்கு, குறிப்பாக சவூதி அரேபியாவுக்கு உதவுகின்றது. சமூக நோக்கில்லாத, அர்ப்பணிப்பு உணர்வில்லாத வெறும் ஆன்மீகத்தை உணர்ச்சிமயமான முறையில் முன்வைத்து தம்முடைய ஆதாயங்களைப் பேணிக்கொள்கின்றது அரபுலகம். முஸ்லிம்களின் பொற்காலம் என்றால் அது நபிகள் நாயகத்தின் காலத்தில் துவங்கி அபூ பக்கர்(ரலி) காலம் வழியே நடந்து உமர்(ரலி) ஆட்சிக்காலம் வரைக்குமே! இவர்களின் காலங்களில்தான் செல்வப் பங்கீடும் செல்வச் சுழற்சியும் நடந்தன. அதிலும் உமர் (ரலி) அவர்களின் ஆட்சியோ ஒப்புவமை கூறமுடியாத மேன்மையான ஆட்சி. நபிகள் நாயகத்தின் மருமகனார் அலி, உமர் (ரலி)யின் உற்ற துணையாகவும் இருந்ததால் அவர்களிருவரும் ஏழைகளின் நலனுக்காகவே தங்களை அர்ப்பணம் செய்தார்கள். வரலாற்றில் முதன்முதலாகச் சாகுபடி நிலங்கள் அரசுடைமை ஆக்கப்பட்டது உமர் ரலியின்
காலத்தில்தான். சாகுபடியின் பலன்களை அளிப்பதிலும் முஸ்லிம், முஸ்லிம் அல்லாதார் என்ற பேதங்கள் இருக்க வில்லை. செல்வம் ஓரிடத்திலேயே குவிகின்ற நிலையைத் தடுக்க அவர் கடும் முயற்சிகளை எடுத்தார். அவருடைய ஆட்சியின் கடைசிக் கட்டத்தில் நபிகளின் மருமகன் அலியுடன் இணைந்து ஏழைகளின் நல்வாழ்வுக்கான மேலும் சில நடவடிக்கைகளை அமுல் செய்தார். “நான் பிற்காலத்தில் செய்ததை முதலிலேயே செய்திருந்தால் பணக்காரர்களிடமிருந்து உபரிச் செல்வத்தை எடுத்து ஏழை எளியவர்களுக்குக் கொடுத்திருப்பேன்.” என்று உமர் (ரலி) சொன்னதாக ஒரு குறிப்பு இருப்பதை அஸ்கர் அலி எஞ்சீனியர் எடுத்துக் காட்டுகிறார். மூன்றாவது கலீஃபாவாக வந்த உஸ்மான் (ரலி) ஆட்சி, உமர் (ரலி) செய்த எல்லாவற்றையுமே தலைகீழாகப் புரட்டிப்போட்டு ஓர் அபத்த நிலைக்குக் கொண்டு வந்தது. அந்த அபத்த நிலையே இந்த நூற்றாண்டிலும் தொடர்கின்றது.

இஸ்லாமியப் பொருளாதாரத்தின் ஆதாரநிலை அதன் சுழற்சிதான். ஒரு முஸ்லிம் எவ்வளவானாலும் சம்பாதிக்கலாம்; அதற்கு வரம்பு முறை கட்டவில்லை. ஆனால் ஒரு முஸ்லிம் சம்பாதிக்கிற பொருள், அது அப்படியே உடனடியாக இஸ்லாமியச் சமூகத்துக்குரிய பொருளாகின்றது. நபிகள் நாயகம் கூறியதாக நபிகளாரின் தோழர் அபூஸயீத் குத்ரி (ரலி) அறிவித்ததாக புகாரி நூலில் காணக்கிடைக்கிற வாசகம் இது: “முஸ்லிமுக்குச் சொந்தமான பொருள் தான் எத்துணைச் சிறப்பானது! அவன் அதனைச் சத்தியத்துடன் ஈட்டுகிறான். பிறகு அதனை இறை வழியிலும் - அநாதைகள், ஏழைகள், பயணிகள் போன்றோர்க்கும் செலவிடுகின்றான்.”

நபிகள் நாயகத்தின் வாழ்வைக் கூர்ந்து அவதானிக்கும்போது ஒரு முக்கியமான விஷயம் புலப்படுகின்றது. இறைத் தூதர்களாக அறியப்பட்டவர்கள் அல்லது ஞானத்தைத் தேடிச்செல்லும் ஆன்மீகவாதிகள் பெரும்பாலும் தங்களைத் துறவு நிலையில்தான் தக்கவைத்துள்ளார்கள். உலகின் மிகப்பெரிய மதங்களின் முன்னோடிகள் அல்லது அதன் நிறுவனர்களாய் அறியப்படுகிறவர்களின் வழியில்தான் இன்றைய எழுநூறுகோடி மக்களும் வழிநடக்கிறார்கள். மத வேறுபாடுகள் இல்லாமல் துறவு நிலையைப் பௌத்தம், கிறித்தவம், இந்துத்துவம் ஆகியன ஆதரிக்கின்றன. இதில் இஸ்லாம் மட்டுமே துறவறத்தைத் தடுக்கின்றது. சித்தார்த்தன் அரச வாழ்வைத் துறந்தே புத்தர் ஆகிறார். ஜீசஸ் அரசுக்கு எதிரான கலக மனப்பான்மையை உருவாக்குகிறார். ஆனால் முகம்மது நபியோ இவர்களுக்கு மாற்றமான முறையில் ஓர் அரசை அமைக்கிறார். இது ஒரு விசித்திரமான சூழல். வெறுமனே இறைபக்தி, ஞானம், தொழுகை, நல்லொழுக்கம் என்பனவற்றை முன்னெடுத்துச் செல்ல உலக வரலாற்றின் எந்த மூலையிலும் ஓர் அரசு அமைக்கப்பட்டதில்லை.

ஆன்மீகப் பரப்பலுக்கு வலிமையான பிரச்சாரங்களும் முன்னோடி யாய் இருப்பவரின் குணாம்சங்களும் நல்லொழுக்கங்களும் போதுமானவை. அவர் சமூகத்துடன் கொள்ளும் உறவு இன்னும் சிறப்பு. அப்படியானால் ஓர் அரசின் தேவைதான் என்ன? சமூகப் பரிணாம வளர்ச்சியில் ஓர் அரசு என்பது அரசியல் ரீதியான பொருளா தார இயக்கத்தின் அங்கமாகவே தோன்றியது. பொருளாதாரம் இல்லையேல் அரசு இல்லை. நபிகள் நாயகத்தின் அரசும் அந்தப் பொருளாதாரத் திட்டங்களையே கையில் எடுத்துக்கொண்டது. ஏழை மக்களின் வாழ்க்கையை உயர்த்தவும் அவர்கள் நல்லதொரு வாழ்வைக் கைவரப் பெறவும் தன்னுடைய அரசால் மட்டுமே முடியும் என நாயகம் நம்பிக்கை கொண்டிருந்தார். வெறும் போதனைகளாலும் இறை நம்பிக்கையாலும் சமூகத்தேவையை நிறைவேற்றிக்கொண்டிருக்க முடியாது என்பதை நபிகள் உணர்ந்ததால்தான், அரசின் நிர்வாகத்தைச் செழுமைப் படுத்தினார். அதன் மூலமாக ஆன்மிக மறுமலர்ச்சியைச் செம்மைப்படுத்த முடியும் என நம்பினார். மகான்களும் தீர்க்கதரிசிகளும் ஏழைகளின் பசியின் மீதாகத் தங்களின் சமூகக் கண்ணோட்டத்தைத் தொடர்ந்து செலுத்தினார்கள். நபிகள் நாயகம் அதில் முதன்மையானவர்; மாறுபட்ட நடைமுறையாளர். இஸ்லாமியக் கொள்கைகளை வெறும் போதனை யாகவே செய்தால் அது காற்றில் கரைந்தோடிவிடும். அதனை ஆக்கப் பூர்வமான ஒரு செயல்திட்டமாக நிறைவேற்றினால்தான் இறைவ னுடைய லட்சியத்தை ஊன்றி நிலைபெறச் செய்ய முடியும் என்று கருதினார். அதனாலேயே ஓர் அரசின் நிறுவனர் ஆனார். ஆனால் இஸ்லாமியக் கொள்கைகளைக் கொண்டே அரசை நிறுவியபோதும் அது ஓர் இஸ்லாமிய அரசு என்று எப்போதும் சொல்லப்படவில்லை; நாயகம் அந்த உச்சரிப்பைச் செய்தது மில்லை!

ஒரு முஸ்லிம் தன் சம்பாத்தியத்தின் மூலம் அடைந்த பொருள் அனைத்தையுமே இறைவனின் அருட்கொடையாகத்தான் பார்க்க முடியும். அந்தப் பார்வை இருந்தால்தான் தான் பெற்ற வளங்கள் தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் மட்டுமானதல்ல என்று ஒரு முஸ்லிம் உணரமுடியும். அந்த உணர்வு வந்துவிட்டால் போதும், அவருடைய செல்வம் சமூகத்தின் பயன்பாட்டுச் சுழற்சிக்கு வந்துவிடும். இந்த வகையில் நோக்க ஒருவனின் சொத்துக் குவிப்பு கண்டனத்திற்கு உரியதாகும். அளவுக்கு மிஞ்சிய செல்வக் குவிப்பும் அதன் வழியே கிடைக்கப் பெறுகிற அதிகாரமும் இறை நிராகரிப்பு வடிவங்களாகும். ஆனாலும் உலகளாவிய முறையில் இதுதான் நடந்துகொண்டிருக்கிறது. அரேபிய அரசுகள், முஸ்லிம் நாடுகளின் அரசுகள் என்பன இஸ்லாத்திற்கு வெளியேதான் இருக்கின்றன. தம்முடைய வணக்க வழிபாடுகளின் மூலமாக மட்டுமே அவை இஸ்லாத்துடன் இணைவு கொண்டுள்ளன. ‘அரேபியா வசந்தம்’ ஏற்பட்டபோது துனீஸியாவின் அதிபர் பென்அலி தன்னிடமுள்ள பணத்தையெல்லாம் தூக்கிக் கொண்டுதான் ஓடினாரே தவிர, இறை நம்பிக்கை போதும் என்ற எண்ணத்தில் ஓடவில்லை.

இஸ்லாமியப் பொருளாதாரம் என்று தனியாக வரையறுக்கப்பட்ட பகுதியென ஒன்று இல்லை. குர்ஆனின் வசனங்களில் இருந்தும் நபிகள் நாயகத்தின் வாழ்வை விவரிக்கும் ஹதீஸ்களில் இருந்தும் பின்னர் கலீஃபாக்களின் முறைப்படி ஆளப்பட்ட அரச நடைமுறைகளில் இருந்துமே இஸ்லாமியப் பொருளாதாரக் கருத்துக்களைச் சேகரம் செய்யவேண்டும். கலீஃபாக்களின் ஆட்சி முறையைப் பரிசீல னைக்கு எடுக்கும்போதும் அதனை உமர்(ரலி) ஆட்சிக் காலத்தோடு நிறுத்திக்கொள்வதே சிறப்பு. உமர் (ரலி)க்குப் பின்வந்த உஸ்மான் (ரலி)யின் ஆட்சிக்காலம் இன்றைய ஆட்சி முறைகளின் மூலப்பதிப்பு. அவருடைய ஆட்சியை எதிர்த்து அப்போதே கிளர்ச்சிகள் தோன்றிவிட்டன. எனவே, அது இஸ்லாமிய மூலக்கூறுகளைக் கொண்டதல்ல. பொருளாதாரம் குறித்த பொது விவாதங்களில் சமூக நோக்கினை முன்னிறுத்துவதுதான் நல்லது. தங்கள் திறமையை, அறிவை வளர்த்துக்கொண்ட தனி மனிதர் களின் பங்களிப்பு ஒரு விஞ்ஞானியாக இருந்தால், ஒரு மருத்துவராக இருந்தால், ஒரு கலைஞராக இருந்தால் அது சமூகப் பொதுவில் தானாகவே வந்து சேர்ந்து விடுகின்றது. அது ஒரு தடையற்ற வெள்ளம் போன்றது. அது தவிர்த்த பெரும்பாலான துறைகளில் தனி நபர்களின் ஆளுமை அல்லது ஊக்கங்கள் வெறும் செல்வக் குவிப்பாகவே மாறுகின்றது. அது சமூகத்தின் வளர்ச்சிக்கு உதவுவதில்லை.

ஒரு கருத்து நம் புரிதலுக்கு வந்தபின் அதை மென்மேலும் செழுமை செய்து இன்னமும் அதிக விரிவும் வலுவும் உள்ளதாக்கிப் பேசுவதே மானுட மேன்மைக்கு உகந்ததாகும். வரலாறு பல அனுபவங்களை நமக்குத் தருகின்றது. மானுட இனம் அன்பும் கருணையும் மிக்க ஒளியுடன் இவ்வுலகை மலரச் செய்யவேண்டும். அதை விட்டுவிட்டுப் பழங்காலத்தில் இப்படித்தான் இருந்தது என்று குறுகிக்கொண்டு போவதில் சுயநலம்தான் இருக்கும்; அல்லது வறட்டுத்தனம் மேலோங்கும். என்னதான் வணக்க வழிபாடுகளும் வழிபாட்டு இடங்களும் மங்காமல் இருந்தாலும், மானுட நெறிகள் மாய்ந்து போய்க்கிடப்பது ஏன் என்கிற கேள்வியே இன்றையத் தேவை! ஒவ்வோர் இறை நம்பிக்கையாளரும் இந்தக் கேள்வியைத் தங்கள் மனத்தினில் எழுப்பி அதற்கான விடை என்னவென்று தேடிச் செல்லவேண்டும்.

-களந்தை பீர்முகம்மது
Thanks :  Kalachuvadu

Wednesday, October 30, 2013

வன்னியில் என்ன நடந்தது? : ஓர் அனுபவப் பதிவு



"உண்மைகள் சொல்லப்படாதவரையில் பொய்களின் ஊர்வலமே நடக்கும்" என்பார்கள். இந்தப் பொய்கள் எப்போதும் எல்லோரையும் எல்லாவற்றையும் மயானத்துக்கே அழைத்துச் செல்லும். 


வன்னியுத்தமும் ஈழத்தமிழர் போராட்டமும் ஏறக்குறைய இத்தகையதொரு நிலையையே இன்று எட்டியுள்ளன. விடுதலைப் புலிகள் பற்றியும் அவர்களால் முன்னெடுக்கப்பட்டுவந்த போராட்டம் பற்றியும் உற்பத்தி செய்யப்பட்ட புனைவுகள் ஒருபுறமும், சிறிலங்கா அரசினதும் சிங்களத் தரப்பினதுமான புனைவுகள் மறுபுறமுமாகப் பெரும் புனைவுகள் நம்மைச் சுற்றி உருவாக்கப்பட்டுள்ளன. இந்தப் புனைவுகளுக்கெதிரான மறுப்புக் குரல்களோ எதிர்க் குரல்களோ கலகக் குரல்களோ உரியமுறையில் வெகுசனத்திரளால் கவனத்திற்கொள்ளப் படவில்லை. எனவே இன்று வன்னி யுத்தம் பற்றியோ புலிகளின் இறுதி நாட்களைப் பற்றியோ அங்கே இருந்த மக்களின் நிலை பற்றியோ கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை குறித்தோ எதுவும் தெரியாதவாறு இந்தப் புனைவு மண்டலம் நீள்கிறது. இது மிகத் துயரமான ஒரு நிலை; அது மட்டுமல்ல ஆபத்தான நிலையும்கூட.


வன்னியில் என்ன நடந்தது? புலிகள் எவ்வாறு தோற்கடிக்கப்பட்டனர்? அல்லது எப்படித் தோற்றனர்? உண்மையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை எவ்வளவு? இது போன்ற ஏராளமான கேள்விகள் நம் முன் விரிந்து கிடக்கின்றன. ஐ.நா. உட்படப் பல்வேறு தரப்பினரும் இந்த நிலைமைகள் மற்றும் விவரங்கள் தொடர்பாகப் பலவகையான அபிப்பிராயங்களைத் தெரிவித்து வருகின்ற போதும் உண்மை நிலவரத்தை எந்தத் தரப்பும் இன்னும் முழுமையாகக் கண்டறியவில்லை. உண்மை நிலவரத்தை அறிந்தவர்கள் வன்னி மக்கள் மட்டுமே. ஆனால் அவர்களோ இப்போது வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் நலன்புரி நிலையங்கள் என்ற தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த மக்கள் வெளியுலகத்துடன் தொடர்புகொண்டு பேசக்கூடிய நிலைமை உருவாகுமானால் எல்லாவற்றினதும் மெய்விவரங்களும் வெளித்தெரிய வரும். ஆச்சரியமளிக்கூடிய அதிர்ச்சியளிக்கூடிய உண்மைகள் அப்போது வெளியாகும்.


முதலில் இந்தப் பத்தியாளர் இன்னும் எல்லா உண்மைகளையும் சொல்ல முடியாத அச்சத்துடனேயே உள்ளார் என்பதை நீங்கள் உணர வேண்டும். இதுதான் இலங்கை நிலவரம். ஆனால் எல்லா உண்மைகளையும் இங்கே சொல்ல முடியாவிட்டாலும் பொய்யுரைப்பதைத் தவிர்த்திருக்கிறார். விடுதலைப் புலிகளும் இலங்கை அரசும் உருவாக்கிய அச்சப் பிராந்தியமும் அபாய வெளிகளும் இன்னும் முற்றாக நீங்கவில்லை. புலிகள் தோற்கடிக்கப்பட்டாலும் சிறிலங்கா அரசால் தொடரப்படும் நெருக்குவாரங்களும் ஜனநாயக மறுப்பும் ஊடகச் சுதந்திரத்திற்கு விடப்பட்டிருக்கும் சவால்களும் அகலவில்லை. எனவே வன்னியில் புலிகளின் தடைகள், ஜனநாயக மறுப்பு, கருத்து சுதந்திரமின்மைக்குள் எல்லாவற்றையும் வெளிப்படையாகப் பேச முடியாமை என்னும் நிலைமை இருந்ததைப் போலவே இப்போது அங்கிருந்து தப்பிவந்து இடைத்தங்கல் முகாம், (நலன்புரி நிலையம்) என்ற தடுப்பு முகாம்களில் இருந்துகொண்டும் எல்லாவற்றையும் பேச முடியவில்லை.


இங்கும் தொடர்பு வசதி இல்லை. அது மட்டுமல்ல, வன்னியிலிருந்து வெளியேறப் புலிகள் விதித்திருந்த பயணத் தடையைப் போன்றே இந்த முகாமிலிருந்தும் யாரும் வெளியே செல்ல முடியாது. ஒரு கைதி நிலையே (தடுப்பு நிலையே) தொடர்கிறது. அதனால் இந்தப் பத்திகூட மிக ரகசியமாகவே எழுதப்படுகிறது. வெளியுலகில் என்ன நடக்கிறது என்பது எங்களுக்குத் தெரியாது. இந்தத் தகவல் யுகத்தில் எந்தத் தொடர்பாடலுமில்லாமல் எல்லாவற்றிலிருந்தும் எல்லோருடனுமான தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் இருக்கிறோம். ஒரு பத்திரிகை வாசிப்பதற்குக்கூட ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. இப்படியே இன்று மூன்று லட்சம் வரையான சனங்கள் தடுப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். இவற்றைப் பின்னர் வேறொரு சந்தர்ப்பத்தில் பேசுவோம். இப்போது வன்னியில் என்ன நடந்தது என்று பார்ப்போம். ஏனெனில் வன்னி நிலையே, புலிகளின் அரசியலே, ஈழத் தமிழரின் இந்த வீழ்ச்சிக்கு முழுக் காரணம்.
 
 

2




2006 ஆகஸ்ட் 11இல் விடுதலைப் புலிகள் யுத்தத்தை ஆரம்பித்ததுடன் வன்னிக்கான கதவுகள் பெரும்பாலும் மூடப்பட்டுவிட்டன. ஒரு பக்கத்தில் சிறிலங்கா ராணுவம் பாதைகளை மூடியது என்றால் மறுபுறத்தில் புலிகள் சனங்களுக்கான தொலைத்தொடர்புகள், போக்குவரத்து, பயண அனுமதி எல்லாவற்றையும் மூடினார்கள். வன்னி மக்கள் இரண்டு தரப்பினருடைய நெருக்கடிகளுக்கும் முற்றுகைக்கும் உள்ளாக வேண்டியதாகியது. யுத்தம் ஓய்வற்று நடந்த இரண்டரை ஆண்டுகளிலும் வன்னி மக்கள் பட்ட துயரங்களும் கொடுமைகளும் அழிவுகளும் அவமானங்களும் சாதாரணமானவையல்ல.


போர் தொடங்கியவுடன் புலிகள் முதலில் செய்த வேலை கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபட்டதுதான். பால், வயது வேறுபாடு இல்லாமல் எல்லாக் குடும்பங்களில் இருந்தும் போருக்கு வர வேண்டும் என்று கட்டாயப்படுத்திப் பிள்ளைகளைப் பிடித்துச் சென்றனர். அப்போது இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு வன்னியில் இருந்தது. ஐ.நா. உள்ளிட்ட தொண்டு நிறுவனங்கள் பலவும் வன்னியிலிருந்தன. புலிகளின் ஊடகங்கள் கட்டாய ஆள் சேர்ப்பை வலியுறுத்தியும் அதை நியாயப்படுத்தியும் பரப்புரை செய்தன. இவை எதைப்பற்றியும் இந்தச் சர்வ தேச அமைப்புகளும் பிரதிநிதிகளும் எந்தவகையான அபிப்பிராயமும் சொல்லவில்லை. அவை இதில் தலையிடாக் கொள்கையைக் கடைப்பிடித்தன. புலிகள் இதைத் தமக்கான வசதியாகக் கருதி மெல்லமெல்ல தமது பிடியை இறுக்கி நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தினர். சிறிலங்கா ராணுவம் மன்னார் மாவட்டத்திலிருந்து போரைத் தீவிரப்படுத்தி மெல்லமெல்ல வன்னி மையத்தை நோக்கி நகரத் தொடங்க, புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பு மிகத் தீவிரமடையத் தொடங்கியது. ஏற்கனவே கிழக்கையும் அதன் தலைமைக்குரிய கருணாவையும் புலிகள் இழந்ததையும் நினைவிற் கொள்க.


புலிகள் எதிர்பார்த்திராத அளவுக்கு சிறிலங்கா இராணுவத்தின் நடவடிக்கைகள் அமைந்தன. மரபு வழியில் படைக் கட்டமைப்பையும் அதே வகையிலான தாக்குதல் மற்றும் படை நடவடிக்கைகளையும் குலையவிடக் கூடாது என்ற கவனத்தோடு புலிகள் செயல்பட்டனர். ஆனால் சிறிலங்கா ராணுவமோ மரபுவழி ராணுவமாக நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதும் அதன் ஒரு பிரதான அம்சமாக ஒரு முக்கிய அலகு கெரில்லா போர்முறையைப் பின்பற்றிப் புலிகளின் மீது நடவடிக்கைகளில் ஈடுபட்டது. புலிகளை நிலைகுலைய வைக்கும் தாக்குதல்களை சிறிலங்கா ராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணிகள் மிகக் கச்சிதமாக நடத்தின. இந்தத் தாக்குதல்களில் புலிகளின் முக்கியத் தளபதிகள் பலரும் கொல்லப்பட்டனர். இவ்வாறான ஒரு தாக்குதலின்போது புலிகளின் கொழும்பு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான சார்ள்ஸ் என்பவர் (கேனல் சார்ள்ஸ்) மூன்று உதவியாளர்களுடன் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. வன்னியின் புவியியல் அமைப்பு (காடும் ஆறுகளும் பெருங்குளங்களும்) இராணுவத்துக்கு வாய்ப்பாகியது. புலிகள் தமது திறன் வாய்ந்த கெரில்லாப் போர்முறையை முழுதாகக் கைவிட்டு முற்று முழுதாக மரபுவழிப் போர்முறையைக் கையாண்டனர். இதே வேளை புலிகளின் கடல்வழி ஆயுத வருகையை-விநியோகத்தை, சிறிலங்கா விமானப் படையும் கடற்படையும் இணைந்து முழுமையாகத் தடுத்திருந்தன. புலிகளின் நான்கு ஆயுதக் கப்பல்கள் கடலில் தாக்கி அழிக்கப்பட்டிருந்தமை இங்கு நினைவுகொள்ளத்தக்கது. இதன் பின்னணியில் இந்தியாவும் அமெரிக்காவும் இருந்ததாக நம்பப்படுகிறது.


முக்கியமாக நான்காம் கட்ட ஈழப்போர் என்று வர்ணிக்கப்படும் இந்தக் காலகட்டப் போரில் புலிகளின் கடற்படை அல்லது கடற்புலிகளின் பலம் முற்றாகச் சிதைக்கப்பட்டது. அத்துடன் புலனாய்வுத் துறையும் அவர்களின் கரும்புலிகளின் அணியும் செயலற்ற நிலமைக்குத் தள்ளப்பட்டன. கொழும்பு நடவடிக்கைகளுக்கு இடமளிக்காமல் சிறிலங்கா அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகள் வடிவமைக்கப்பட்டன. தவிர வன்னிக்கு வெளியே யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், திருகோணமலை, மட்டக்கிளப்பு, அம்பாறை மாவட்டங்களின் சிறு அளவிலான ராணுவ நடவடிக்கைகளையோ அரசியல் செயல்பாடுகளையோ மேற்கொள்ள முடியாதவாறு சிறிலங்கா அரசின் புலனாய்வு நடவடிக்கைகளும் இறுக்கமும் இருந்தன. அத்துடன் கேனல் கருணா என்ற விநாயக மூர்த்தி முரளிதரனின் பிரிவோடு கிழக்கில் புலிகளின் ஆதிக்கமும் அதன் வழியான எல்லா வளங்களும் பாதிக்கப்பட்டன. குறிப்பாகப் புலிகளின் போருக்குக் கிழக்கு இளைஞர்கள் பெரும் பலமாக இருந்தனர். கருணாவின் பிரிவோடு இது தடைப்பட்டது.


இதேவேளை கடலையும் காட்டுப்பகுதியையும் மெல்லமெல்ல தமது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் சிறிலங்கா ராணுவம் கொண்டுவந்தது. படைத்தரப்பு மன்னாரிலிருந்து நடவடிக்கையை மேற்கொண்டு வன்னி மேற்கின் காட்டுப் பகுதிகளையும் சிறுபட்டணங்களையும் முதலில் கைப்பற்றியது. ராணுவரீதியில் புலிகளின் ஆயுதமும் கவசமும் கடலும் காடுமே. மறுபுறத்தில் மக்கள். படைத்தரப்பின் போர் உத்தியாகக் காட்டையும் கடலையும் தமது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்ததன் மூலம் புலிகளைப் பாதுகாப்பற்ற வெளிக்குள் தள்ளிவிட்டனர். இதனால் புலிகள் சனங்களை அரணாகப் பயன்படுத்தத் தொடங்கினர். புலிகளின் அழிவு என்பது இது போன்ற ஏனைய பல தவறான நடவடிக்கைகள் மூலம் ஏற்கனவே நிகழ்ந்திருந்தாலும் சனங்களைக் கட்டாயப்படுத்திப் போருக்கு இழுத்ததன் மூலம் மேலும் பாதகமான நிலைக்குத் தள்ளப்பட்டனர். சனங்களுக்கும் புலிகளுக்குமான முரண் ஒரு கட்டத்தில் உச்சநிலைக்குப் போய்விட்டது.


கட்டாய ஆள்சேர்ப்பை வலியுறுத்திய புலிகளின் ஊடகங்கள் மறுபக்கத்தில் மக்கள் தாமாக முன்வந்தே போரில் இணைகின்றனர் என்று ஒன்றுக்கொன்று முரணான செய்திகளை வெளியிட்டன. சிறிலங்கா அரசு சர்வதேசத் தொண்டு நிறுவனங்களை வெளியேற்றியதைப் புலிகள் இன்னும் வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டனர். வெளியே எந்தச் செய்திகளும் வர மாட்டாது என்பது உறுதியானவுடன் முழு அட்டகாசமாகத் தமது நடவடிக்கையை அவர்கள் மேற்கொண்டனர். புலிகளின் மூத்த உறுப்பினர்கள் கட்டாய ஆள் பிடிப்பை வலியுறுத்திப் பேசியும் எழுதியும் வந்தனர். இந்த ஆள் சேர்ப்புக்கு (இதை வன்னி மக்கள் ‘லபக்’, ‘ஆள்பிடி’, ‘கொள்ளை’ என்ற சங்கேதப் பெயர்களில் குறிப்பிட்டனர்) எதிராகச் செயல்படுவோருக்கு மரண தண்டனை வழங்கலாம் என்பதையும் அவர்கள் வலியுறுத்தினர். வன்னியிலிருந்து வெளிவந்த புலிகளின் ‘ஈழநாதம்’ பத்திரிகையும் ‘புலிகளின் குரல்’ வானொலியும் விடுதலைப் புலிகள் என்ற கொள்கை விளக்க ஏடும் இது தொடர்பான கட்டுரைகளையும் நிகழ்ச்சிகளையும் வெளிப்படுத்தின.



ஆக மிக மோசமான ஒரு நிலை உருவானது. இதே வேளை படையினரின் முன்னேற்றம் தீவிரமடைந்து கொண்டேயிருந்தது. புலிகள் சேர்த்த பிள்ளைகள் (போராளிகள்) தொகை தொகையாகக் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தனர். ஊர்கள், தெருக்கள் எல்லாம் சாவை அறிவிக்கும் தோரணங்களாலும் சவ ஊர்வலங்களாலும் திணறின. மாவீரர் துயிலும் இல்லம் என்ற கல்லறை மயானங்கள் எல்லை கடந்து பெருத்தபடியே இருந்தன. சாவு ஒன்றுதான் நிச்சயமானதாக இருந்தது. சனங்கள் திகிலடைந்தனர். யுத்தம் மெல்ல மெல்லத் தீவிரமடைய இயல்பு வாழ்க்கை சிதைவடைந்தது. அகதிப் பெருக்கம், இடப்பெயர்வின் அவலம், சாவின் பெருக்கம் என நிலைமை மோசமான கட்டத்துள் வீழ்ந்தது. தினமும் இடப்பெயர்வு, கிராமங்கள் பறிபோதல், சிறு பட்டிணங்கள் வீழ்ச்சியடைதல் என்பதே செய்தியாயிற்று. ஆனால் புலிகளின் ஊடகங்கள் இதற்கு எதிரான செய்திகளையே சொல்லிக்கொண்டிருந்தன. ராணுவம் பொறியில் சிக்கப் போகிறது என்று அவை சொல்லிக் கொண்டிருந்தன. இடப் பெயர்வும் உயிரிழப்பும் மக்களை மிக மோசமாகத் தாக்கியது. மிகவும் பின்தங்கிய நிலையில் வாழ்ந்த இந்தச் சனங்கள் இடம்பெயர்ந்தபோது மிக மோசமான அவலத்திற்குள்ளானார்கள். இடம் பெயர்ந்திருந்த இந்த மக்களிடமிருந்து புலிகள் கட்டாய ஆள் சேர்ப்புக்காகவும் போர்ப்பணி என்ற பெயரிலும் ஏராளமானவர்களைப் பிடித்துச் சென்றனர். தவிர போர் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டிருந்ததால் இவர்கள் ஒவ்வொரு இடமாக இடம்பெயர்ந்துகொண்டேயிருந்தனர். இவர்கள் போகும் ஒவ்வொரு ஊரைத் தேடியும் படையினர் விரட்டத் தொடங்கினர். புலிகளின் இறுதி வீழ்ச்சி நடந்த இடமான புதுமாத்தளன்-முள்ளி வாய்க்கால் பகுதிவரையில் ஏறக்குறைய 20 தடவைவரை மன்னார் மக்கள் இடம் பெயர்ந்திருக்கின்றனர். இறுதிக் காலத்தில் ஒரு இடத்தில் ஐந்து நாட்கள் மூன்று நாட்கள் என்ற அளவிலேயே இருக்கக்கூடிய நிலை உருவானது. அந்த அளவுக்குப் படைத்தரப்பின் தாக்குதலும் படை நகர்வும் வேகமாக இருந்தன.


படையினரின் தாக்குதல்கள் அதிகரிக்க அதிகரிக்கக் கொல்லப்படும் புலிகளின் தொகையும் அதிகரித்தது. கட்டாய ஆள் சேர்ப்பின் மூலம் பலவந்தப்படுத்தித் துப்பாக்கி முனையில் புதியவர்கள் பிடித்துச் செல்லப்பட்டவர்கள் எப்படி மூர்க்கத்தனமாக முன்னேறிவரும் படையினருடன் போரில் ஈடுபட முடியும்? அதிலும் புலிகள் தரப்பில் மிக இள வயதினர், குறிப்பாக மாணவப் பருவத்தினர். 15-22 வரையானவர்களே அதிகம். ஒரு வாரம் பயிற்சி, பின்னர் மூன்று நாள் பயிற்சி, இறுதியில் ஆயுதங்களை இயக்குவதற்கான பயிற்சி மட்டும் என்ற அளவிலேயே புலிகள் இவர்களைக் கள முனைக்கு அனுப்பினர். ஏற்கனவே முன்னேறிவரும் படையினர் வெற்றிபெற்றுவரும் சூழலில் அதற்கான உளவியலைப் பெற்றிருந்தனர். புலிகள் தரப்பில் பின்னடைவு நிலையில் மூத்த புலிகளின் உறுப்பினர்களுக்கு அவநம்பிக்கையும் உளச்சோர்வும் ஏற்பட்டிருந்தன. ஆனாலும் தலைமையின் கட்டளைக்கும் வற்புறுத்தலுக்கும் பணிந்து நடவடிக் கையை மேற்கொண்டாலும் படைத்தரப்பைச் சிதைக்கக் கூடிய மாதிரியோ அல்லது படைநகர்வை கட்டுப்படுத்தவோ தாமதப்படுத்தவோ கூடிய அளவுக்கு அவர்களின் தாக்குதல்கள் அமையவில்லை. இதன் காரணமாகக் கள முனையிலிருந்து கட்டாய ஆட்சேர்ப்பின் மூலமாகப் பிடித்துச் செல்லப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் தப்பி ஓடிக்கொண்டிருந்தார்கள். பிள்ளைகள் களமுனையிலிருந்தோ பயிற்சி முகாமிலிருந்தோ ஓடினால் அதற்குப் பதிலாக அந்தந்தக் குடும்பங்களில் இருந்து தாய் அல்லது தந்தை அல்லது குடும்பத்தின் வேறு உறுப்பினர்கள் எவரையாவது அவர்கள் பிடித்துச்சென்று கட்டாயத் தண்டனைக்குட்படுத்தினார்கள். இதன் காரணமாகச் சில பிள்ளைகள் போர்க்களத்தில் தப்புவதற்கு வழியற்று நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.


இவ்வாறு இக்கட்டான நிலையில் போர்க்களத்தில் நின்று உயிரிழந்த இளைஞர்களும் பெண்களும் ஆயிரக் கணக்கில் அடங்கும். சனங்கள் எதுவுமே செய்ய முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர். இடப் பெயர்வைச் சமாளிப்பதா? இராணுவத்தின் தாக்குதல்களில் இருந்து தப்பித்துக்கொளவதா? பிள்ளைகளைக் காப்பாற்றுவதா என்று தெரியாத பேரவலம் ஒரு பெரும் சுமையாகச் சனங்களின் தலையில் இறங்கியது. சனங்களுக்கும் புலிகளுக்குமிடையில் மோதல்கள் உருவாகின. இறந்த பிள்ளைகளின் உடலை பெற்றோரிடம் காட்டுவதற்கே புலிகள் அஞ்சும் நிலை ஏற்பட்டது. பல பெற்றோர் இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் புலிகளைத் தாக்கியிருக்கின்றனர்.
இப்படிப் போரின் தீவிர நிலை சனங்களை இறுக்கிக் கழுத்தை நெரித்துக்கொண்டிருந்தபோதுதான் புலிகளின் கெடுபிடிகளும் மிக உச்ச நிலையில் அதிகரித்தன. படையினர் நெருங்க நெருங்க அதைத் தமது பரப்புரைக்கு வாய்ப்பான ஆயுதமாக்கி ‘எதிரி வருகிறான்; நீங்கள் அவனிடம் மண்டியிடப் போகிறீர்களா?’, ‘உயிரினும் மேலானது தாய்நாடு’, 'சிங்கள வெறியனின் கைகளில் சிக்கிச் சாவதைவிட அதற்கெதிராகப் போரிட்டுச் சாவது மேல்', 'எங்கள் குலத்தமிழ்ப் பெண்களே உங்கள் கற்பு சிங்கள வெறியனுக்கென்ன பரிசா?' என்று சனங்களின் மனதில் கலவரத்தையும் அச்சத்தையும் ஊட்டினார்கள். படைத் தரப்பின் தாக்குதல்களும் சனங்களை அச்சமடையவே வைத்தன. இதனால் கடந்த காலங்களில் சிங்கள இராணுவத்தின் தாக்குதல்களால் மிகவும் கசப்பான அனுபவத்தைப் பெற்றிருந்த சனங்கள் இன்னும் இன்னும் அச்சமடையத் தொடங்கினார்கள். இது ஒருவகையில் புலிகளுக்குச் சாதக நிலையைத் தோற்றுவித்தது. மன்னாரிலிருந்து சிறிலங்கா படையினர் தமது நடவடிக்கையை ஆரம்பித்து ஒன்றரை வருடமாக நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஏறக்குறைய இரண்டரை லட்சம் மக்கள் இடம்பெயர்ந்திருந்தனர். இந்தக் காலத்தில் மிக மூர்க்கமாக விமானத்தாக்குதல்கள் நடந்தன. இதன்போது பல நூற்றுக்கணக்கான சனங்கள் கொல்லப்பட்டிருந்தனர். செஞ்சோலைப் படுகொலை, தமிழ்ச்செல்வன் கொலை என்பவை பலருக்கும் நினைவுக்கு வரலாம். கிளிநொச்சியில் நடந்த பிறிதொரு தாக்குதலில் 26.11.2007 அன்று பிரபாகரன் மயிரிழையில் உயிர் தப்பியிருந்தார்.


இக்காலகட்டத்தில் சிறிலங்கா இராணுவம் சனங்களின் மீது தாக்குதல் நடத்துவதைத் தவிர்த்ததாக யாரும் சொல்ல முடியாது. ஆனால் படைத்தரப்பின் தாக்குதல் வலயத்திற்கு அப்பால் மக்கள் ஓடிக்கொண்டிருந்தார்கள். அப்படி ஓடிப் பாதுகாப்புத் தேடிக்கொள்வ தற்கான இடம் சனங்களுக்கிருந்தது. ஆனால், இப்படி ஓடிக்கொண்டிருந்தபோது அவர்களுக்கான உழைப்பு, வருமானம், இருப்பிடம், பொருட்கள் என்பன இல்லாத நிலை உருவாகியது. பொருட்களைக் கொழும்பில் இருந்து வன்னிக்குள் எடுத்துவருவதற்கான தடையும், கட்டுப்பாடுகளும் உணவுப்பொருட்களைப் பெறுவதற்கே பெரும் நெருக்கடியை உருவாக்கியது. பஞ்சம் பட்டினியும் தலைவிரித்தாடின. ‘வன்னி’ இலங்கையின் நெற்களஞ்சியம் என்று வர்ணிக்கப்படுவதுண்டு. சனங்கள் தங்களின் சேமிப்பிலும் சேகரிப்பிலுமிருந்த பொருட்களையே எடுத்துச்செல்ல முடியாத நிலையில் படை நடவடிக்கைகள் தீவிரமடைந்ததால் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. இந்தச் சந்தர்ப்பத்தில் கட்டாய ஆட்சேர்ப்பைத் தவிர்க்கும்படியும், போருத்திகளை மாற்றி அமைக்குமாறும், அமைதிப் பேச்சுக்குத் திரும்பும்படியும் இந்தியாவோடு இணக்கத்துக்குப் போகுமாறும் சிலர் புலிகளை வலியுறுத்தினர். ஆனால் புலிகளின் தலைமையோ பிடிவாதமாக மரபுவழி இராணுவ நடவடிக்கையிலேயே குறியாக இருந்தது. வேறு எவருடைய எந்தவிதமான அபிப்பிராயங்களையும் அது பொருட்படுத்தத் தயாராக இருக்கவில்லை. சனங்கள் படுகின்ற அவலத்தையோ அவர்களின் துயரத்தையோ புலிகள் பொருட்படுத்தவில்லை. சிங்களத் தரப்பை மிகக் கொடூரமான வரலாற்று எதிரி என்று வர்ணித்து அதற்குத் தக்க பாடம் படிப்பிக்க வேண்டும் என்று தமது நடவடிக்கையை மேற்கொண்டனர். கிளிநொச்சியைப் படைத்தரப்பு கைப்பற்றும் வரையில் புலிகள் ஏதாவது உத்திகளைக் கையாண்டு படைத் தரப்பைச் சிதைத்து வெல்வார்கள் என்ற நம்பிக்கை சனங்களுக்கிருந்தது உண்மையே. அந்த நம்பிக்கையோடு தான் அவர்கள் இடம்பெயர்ந்து கொண்டிருந்தனர். தமது ஆட்சி, அதிகாரம் அரசுக் கட்டுமானம் என்ற கனவு குலைந்துபோகும் எனப் புலிகள் அஞ்சினார்கள். அதனாலேயே அவர்கள் மரபுவழியான நடவடிக்கையைத் தொடர்ந்தனர்.


கிளிநொச்சியைக் கைப்பற்றிய படையினர் ஆனையிறவினூடாக யாழ்ப்பாணத்துடன் இணைந்தனர். இந்த இணைவோடு யாழ்ப்பாணத்திற்குள் முடக்கப்பட்டிருந்த 40 ஆயிரம் இராணுவத்தினரும் படை நடவடிக்கையில் ஈடுபடும் நிலை உருவானது. உடனேயே தொடர்நடவடிக்கையைப் படைத்தரப்பு மேற்கொண்டு புலிகளை மேலும் விரட்டத் தொடங்கியது. ஜனவரி 15ஆம் திகதிக்குப் பின்னரான நிலைமைகள் இதனுடன்தான் ஆரம்பிக்கின்றன. உலகைக் குலுக்கும் நிலைமைகள் 2009 ஜனவரி 15க்குப் பின்னரான நடவடிக்கை வன்னி கிழக்கை நோக்கியது. ஏற்கனவே மணலாற்றில் இருந்து முல்லைத்தீவுப் பட்டிணம் வரையான பகுதியைப் படைத்தரப்புக் கைப்பற்றியிருந்தது. இதற்குள் புலிகளின் முக்கியமான தளபதிகள் பலரும் கொல்லப்பட்டிருந்தனர். அடுத்தது புலிகளின் உறுப்பினர்களிடமும் சனங்களிடமும் பெருமதிப்பைப் பெற்றிருந்த தாக்குதல் தளபதி பிரிகேடியர் பால்ராஜின் மரணம். (இவர் மாரடைப்பால் உயிரிழந்திருந்தார்.) இவை புலிகளைக் கடுமையாகப் பாதித்திருந்தன. அதிலும் கருணா அரசுடன் இணைந்திருந்ததனால் புலிகளின் போருத்திகள், படைவலு, பிரபாகரனின் சிந்தனைப் போக்கு, கள அமைவு எனச் சகலவற்றையும் கருணா படைத்தரப்புக்கு வழங்கியிருப்பார் என்ற அபிப்பிராயமும் உண்டு.


இவ்வாறு நிலைமைகள் பாதகமாக அமைந்திருந்த போதும் புலிகளின் ஊடகங்களும் உறுப்பினர்களில் பெரும்பகுதியினரும் ‘தலைமையின் மீது நம்பிக்கை வையுங்கள். எந்தச் சூழலிலும் நாம் தோற்றுப்போக மாட்டோம்’ என்று மக்களுக்குச் சொல்லிக்கொண்டே இருந்தனர். எந்த வகையான தருக்கமுமில்லாமல் வெறும் வாய்ப்பேச்சாகவே இந்தச் சொற்கள் இருந்தன. எவ்வளவுதான் புலிகளின் நம்பிக்கையூட்டல்கள் அமைந்தாலும் அதை நம்புவதற்குச் சனங்கள் தயாராக இல்லை. யுத்தமோ மிக மூர்க்கத்தனமாகச் சனங்களைத் தாக்கிக்கொண்டிருந்தது. இப்போது சனங்களின் சாவு வீதம் சடுதியாக அதிகரிக்கத்தொடங்கியது. கட்டாய ஆட்சேர்ப்பு எல்லா வகையான வரம்புகளையும் மீறிக் குடும்பத்தில் எத்தனைபேரையும் எங்குவைத்தும் எப்படியும் பிடித்துக்கொள்ளலாம் என்றாகியது. முன்னர் போராளிக் குடும்பங்களும் மாவீரர் குடும்பங்களும் ஆட்சேர்ப்பில் விலக்களிக்கப்பட்டிருந்தன. இறுதியில் இந்த வேறுபாடுகள் எதுவும் கடைப்பிடிக்கப்படாமல் கண்டபடி ஆட்சேர்ப்பு நடக்க ஆரம்பித்தவுடன் சனங்களுக்கும் புலிகளுக்குமிடையில் முரண்பாடுகள் அதிகரித்தன. சனங்கள் புலிகளைப் பகிரங்கமாகவே எதிர்க்கவும் தாக்கவும் தொடங்கினர். அவர்களுடைய உடைமைகளுக்கும் வாகனங்களுக்கும் தீவைத்துக் கொளுத்தினர். இந்தக் கட்டத்தில் புலிகளின் கடந்தகால முஸ்லிம் விரோத நடவடிக்கைகளையும் பிற இயக்கங்கள் மீது புலிகள் விதித்த தடைகளையும் மேற்கொண்டிருந்த தாக்குதல்கள்; படுகொலைகளையும் புத்திஜீவிகள் மீதான கொலை அச்சுறுத்தலையும் சிலர் வெளிப்படையாகவே கண்டித்தனர். பிரபாகரனை வெளிப்படையாகவும் பகிரங்கமாகவும் சனங்கள் திட்டினர்.
இதேவேளை ஜனவரி 15க்குப் பின்னர் வன்னி கிழக்கில் விசுவமடு தொடக்கம் மக்கள் கொல்லப்படத் தொடங்கினர். போர் மிகவும் உக்கிரமாக நடக்கையில் சனங்கள் இனி ஓடுவதற்கு இடமில்லை என்ற நிலை உருவானது. முல்லைத்தீவுக்கு அண்மையில் இருந்த ஓட்டுசுட்டான் புதுக்குடியிருப்புப் பகுதிகளையும் படைத்தரப்பு கைப்பற்றியதுடன் சனங்களின் கதி மிகவும் ஆபத்தாகியது. இங்கிருந்து புலிகள் சனங்களைக் கவசமாகப் பயன்படுத்தத் தொடங்கினர். ஏற்கனவே சனங்கள் வெளியேறுவதற்கு இறுக்கமான தடையை விதித்திருந்த புலிகள் மேலும் பாதுகாப்பு நிலையை உயர்த்திச் சனங்கள் எங்கும் தப்பிச் செல்லாதிருக்கும்படி பார்த்துக்கொண்டனர். சனங்களின் செறிவு அதிகரிக்கும் போது யுத்தமும் சனங்களுக்குக் கிட்டவாக, நெருங்கிய சூழலில் தாக்குதல்களில் சனங்கள் கொல்லப்படத் தொடங்கினர். இந்த நாட்களின் நிகழ்ச்சிகளை விவரிக்கவே முடியாது.


குறிப்பாகப் படையினர் விசுவமடு என்ற இடத்தை நெருங்கியபோது நடத்திய தாக்குதல்களில் நூற்றுக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். உடையார்கட்டுப் பகுதியில் இருந்து இந்தப் படுகொலை நாடகம் மிக உக்கிரமான நிலையில் ஆரம்பித்தது. தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டார்கள். ஏற்கனவே கைப்பற்றிய சில பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான சனங்கள் மட்டும் படையினரிடம் அகப்பட்டிருந்தனர். ஆனால் உடையார்கட்டு, சுதந்திரபுரம் பகுதிமீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் சனங்களை நிலைகுலைய வைத்தன. முன்னர் நடந்த படை நடவடிக்கைகளின் காரணமாக இடம்பெயர்ந்திருந்த மருத்துவமனைகள் வெவ்வேறு இடங்களில் மட்டுப்பட்ட அளவில் இயங்கினாலும் அவற்றால் முழு அளவிலான சேவைகளை வழங்க முடியவில்லை. ஆனால் இரவு பகல் என்றில்லாமல் அங்கிருந்த மருத்துவர்கள் - இப்போது சிறிலங்கா அரசால் தடுத்து வைக்கப்பட்டுக் குற்றஞ்சாட்டப்பட்டு விசாரிக்கப்பட்டுவரும் டொக்ரர் சத்தியமூர்த்தி, டொக்ரர் வரதராஜன், டொக்ரர் சண்முகராஜா உட்படப் பல மருத்துவர்கள் - பெரும் சேவையாற்றினர். மனித குலம் தன் வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத அளவுக்கான பெரும் சேவையை இவர்கள் செய்தனர். ஆனால் இவர்களுடைய அரசியல் பார்வை குறித்த விமர்சனங்கள் உண்டு என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மருந்துத்தடை அதனால் ஏற்பட்ட தட்டுப்பாடுகளின் மத்தியிலும் தாக்குதல்களில் காயப்படும் மக்களைக் காப்பாற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளில் மிகவும் உயிராபத்துகள் நிறைந்த சூழலில் இந்த மருத்துவர்களும் பணியாளர்களும் தொண்டாற்றினார்கள். அதேவேளை புலிகள் இந்த மருத்துவமனைகளைத் தமது நிழல் நடவடிக்கை மூலம் கட்டுப்படுத்தி வந்தனர். மருந்துப்பொருட்களையும் எடுத்துச் சென்றனர்.



உடையார்கட்டுப் பகுதியில் படைத்தரப்பு நடத்திய தாக்குதல்கள் மிகக் கொடியவை. சனங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி நிலைகுலைய வைத்து அவர்களைப் புலிகளின் பிடியிலிருந்து மீட்கும் உபாயத்தைப் படைத்தரப்புக் கைக்கொள்ளத் தொடங்கியது. இது மிகக் கேவலமானது. மனிதாபிமானத்துக்கு முற்றிலும் எதிரான செயல் இது. எந்த வகையான நியாயப்படுத்தல்களையும் செய்ய முடியாத நடவடிக்கை இது.
மிகச் செறிவாக அடர்ந்திருந்த சனங்களை இலக்கு வைத்து ஆட்லறி மற்றும் எரிகணைத் தாக்குதல்கள் - றொக்கற் தாக்குதல்களைப் படைத்தரப்பு நடத்தியது. இதன்போது ஐ.நாவின் உலக உணவுத்திட்ட அதிகாரியும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதியும் வன்னியிலிருந்தனர். இந்தத் தாக்குதல்களை அடுத்து இவர்கள் வன்னியை விட்டு வெளியேறினர். அந்தளவுக்கு அவர்களுக்கே பாதுகாப்பற்ற நிலைமை என்றானது. சனங்கள் என்ன செய்வது, எங்கே செல்வது, எப்படித் தப்புவது என்று தெரியாமல் திணறினர். கண்முன்னே சிதறிப் பலியாகும் உடல்கள். இரத்தமும் சிதிலமுமான சூழல். சாவோலம். தீயும் புகையுமாக எரியும் காட்சி. சடங்குகள் சம்பிரதாயங்கள் இல்லாமல் கொல்லப்படும் இடங்களிலேயே சடலங்களைப் புதைக்க வேண்டிய நிலை. சவப்பெட்டிகளே இல்லை. சடங்குகளுக்கு அவகாசமில்லை. ஆனால் சாவுகள் மட்டும் தொடர்ந்து கொண்டேயிருந்தன. குடும்பம் குடும்பமாகக் கொலைகள் நடந்தன.


கடந்த ஐம்பது ஆண்டுகளாகப் பல நூற்றுக்கணக்கான படுகொலைகளைச் சந்தித்திருந்த ஈழத் தமிழ்ச் சமூகம் இப்போது நடந்த படுகொலைகளை ஜீரணிக்க முடியாமல் திணறியது. அந்தளவுக்கு அதன் அனுபவப்பரப்புக்கு அப்பால் முன்னெப்போதையும்விட மிக மோசமாக இந்தக் கொலைகள் நடந்தன. வீதிகள், காலனிகள், குடிசைகள் எங்கும் எங்கும் பிணக்குவியல்களே.
தாக்குதல்களும் சாவுகளும் இப்படித் தொடர்ந்து கொண்டிருக்கும்போது, அவலம் உச்சநிலையைக் கடந்துவிட்டபோதும் புலிகள் தமது நடவடிக்கைகளை மாற்றவில்லை. பதிலாகத் தமது நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்காதவர்களுக்கு எதிராகத் தாம் கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானித்திருப்பதாக அறிவித்துப் பகிரங்கத் தண்டனை வழங்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர். இந்த அறிவிப்புடன் அவர்களின் துண்டுப் பிரசுரங்கள் வெளியிடப்பட்டன. எதிர்ப்பைக் காட்டுகின்றவர்கள் தேசத்துரோகிகள், இனத்துரோகிகள் என்று குறிப்பிடப்பட்டுத் தண்டனை வழங்கப்பட்டது. இந்தத் தண்டனை சுட்டுக் கொல்லுதல் என்பது வரையில் சென்றது. சனங்கள் என்னதான் வந்தாலும் பரவாயில்லை என்று தீர்மானித்துப் படையினரிடமே தப்பிச் செல்லத் தொடங்கினார்கள். சிலர் கடல் வழியாகத் தப்பிச் சென்றனர். மிகச் சிலர் இந்தியாவுக்குத் தப்பி ஓடினர். இவ்வாறு தப்பிச் செல்லும் மக்களைத் தடுக்கும் நடவடிக்கையை அரசியல் துறையின் துணைப் பொறுப்பாளர் சோ. தங்கன் தலைமையிலான புலிகளின் அணிகள் மேற்கொண்டன. புலிகளின் தடையை மீறிச் சென்ற மக்களின் மீது அவர்கள் ஈவு இரக்கமின்றித் தாக்குதல்களை நடத்தினர். சில சந்தப்பங்களில் மக்களின் மீது எரிகணைத் தாக்குதல்களைக்கூட மேற்கொண்டனர். புலிகளின் இவ்வாறான தாக்குதல்களில் நூற்றுக்கும் மேற்பட்ட சனங்கள் கொல்லப்பட்டனர். படையினரின் கொலைவெறித் தாக்குதல்களில் இரண்டாயிரம் வரையான மக்கள் உடையார்கட்டு, சுதந்திரபுரம், வன்னிபுனம், தேவிபுரம், புதுக்குடியிருப்புப் பகுதிகளில் கொல்லப்பட்டனர்.


எனினும் புலிகளின் தடைகள், தாக்குதல்களையும் மீறிப் பதினைந்தாயிரம் வரையான சனங்கள் இராணுவத்தின் பக்கம் சென்றனர். சனங்கள் தொடர்ந்து தம்மிடம் வருவதை ஊக்கப்படுத்தும் நோக்கில் படைத்தரப்பு மேலும் மேலும் சனங்களின் மீதே தனது இலக்கை நிர்ணயித்தது. இது மிகக் கேவலமானதும் கொடூரமானதும் மன்னிக்க முடியாததுமான நடவடிக்கை. ஆனால், இதை மறைத்துக் கொண்டு வெற்றிகரமாகப் படையினர் புதிய பிரதேசங்களைக் கைப்பற்றிக் கொண்டதாகவும் சனங்களை மனிதாபிமான நடவடிக்கை மூலம் மீட்டதாகவும் படைத்தரப்பும் அரசும் பிரச்சாரம் செய்தன. இதில் இன்னும் கொடுமையானது பாடசாலைகளிலும் தற்காலிகமாக அவசர நிலையில் இயங்கிய மருத்துவமனைகள் மீதும் படையினர் நடத்திய தாக்குதல்கள். காயப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டவர்களையும் காப்பாற்றுவதற்கு முடியாது என்ற நிலை பயங்கரமாகியது. புலிகளின் ஆட்பிடி மற்றும் பலவகையான பலவந்த நடவடிக்கைகள் ஒரு பக்கமும் படையினரின் படுகொலைத் தாக்குதல்கள் மறுபுறமுமாக இரண்டு தரப்புக்குமிடையில் சிக்கித் திணறினர் மக்கள். ஆனால், இந்த நிலை குறித்து வெளியுலகத்துக்கு எந்தச் செய்தியும் வெளியே செல்ல முடியாதவாறு இரண்டு தரப்புகளும் இறுக்கமான நடவடிக்கைகள் மூலம் பார்த்துக்கொண்டன.


இதேவேளை புலிகளின் பரப்புரைப் பகுதிகள் வன்னி நிலைபற்றி ஏற்கனவே மேற்கொண்டு வந்த புனைவை மேலும் விரிவுபடுத்தி திரிவுபடுத்தி மேலும் பொய்ப்பரப்புரைகளில் ஈடுபட்டன. படையினரின் தாக்குதல்களில் கொல்லப்படும் மக்கள் பற்றிய உண்மைச் செய்திகளுடன் மேலும் பல பொய்களையும் இணைத்துத் தமது பரப்புரையை இவை மேற்கொண்டன. கொல்லப் படும் மக்களின் எண்ணிக்கையை மெல்ல மெல்ல புலிகள் கூட்டிச் சொல்லவும் தொடங்கினர். அதேவேளை அரசுக்கெதிரான கண்டனப் பரப்புரையை யும் அவை தீவிரப்படுத்தின. ஏற்கனவே சமூக அமைப்புகள், சக்திகளைக் குலைத்து தமக்கிசைவான சமூகக் கட்டமைப்புகளை உருவாக்கியிருந்த புலிகள் அந்த அமைப்புகளைக்கூட இயக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். புலிகளின் ஆட்சி, நிர்வாகக் கட்ட மைப்புகள் சகலதும் தகர்ந்து ஆட்டம் கண்டது. போர் தொடங்கிய போதே தமது நிர்வாகக் கட்டமைப்புகள் சகலதையும் போருக்கும் ஆட்சேர்ப்புக்கும் ஏற்ற வகையில் பயன்படுத்தி வந்ததையும் இங்கே குறிப்பிட வேண்டும். புலிகள் அடிப்படையில் ஒரு இராணுவ அமைப்பு என்பதை நாம் முதலில் புரிந்துகொள்வது அவசியம்.


இது அவர்கள் பற்றிய விமர்சனம் அல்ல. முழு உண்மை. சகல வளங்களையும் தமது இராணுவ நடவடிக்கைகளுக்கும் வெற்றிக்குமாகவே பயன்படுத்திவரும் இயல்பு புலிகளினுடையது. தமது இராணுவ நடவடிக்கைகளுக்கான ஆதாரத் தளமாகவே அவர்கள் அவற்றைப் பயன்படுத்தினர். பிரபாகரன் எப்போதும் இராணுவ நடவடிக்கைகளிலும் இதற்கான தயார்படுத்தல்களிலும் வளங்களிலுமே கூடிய கவனத்தைச் செலுத்திவந்தார். அவருடைய அணுகு முறையே அரசியலில் இராணுவ மேலாதிக்கத்துக்கு முன்னுரிமை அளிப்பதாக இருந்தது. அதாவது புலிகளின் இராணுவ பலத்தின் மூலம் எதிரியையும் மக்களையும் வெல்ல முடியும் என்று நம்பிக்கை வைத்திருந்தார். தமது படையணிகளைக் கட்டமைப்பதிலும் தளபதி களைப் பெருக்குவதிலும் அவர் காட்டிய ஈடுபாட்டுக்கும் முன்னுரிமைக்கும் சமமாக அவர் பிற துறைகளில் எந்த ஆற்றலாளர்களையும் உருவாக்கவில்லை. எனவே எல்லா நிர்வாகத் துறைகளும் துணை அலகுகளும் அவர்களின் போர் நடவடிக்கைகளுக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் அளிப்பவையாகவே இருந்தன. அப்படியே அவற்றைப் பிரபாகரன் உருவாக்கியிருந்தார். எனவே சிதைந்த அந்த நிர்வாகக் கட்டமைப்புகள் சனங்களைப் போரை
நோக்கித் திருப்புவதில் மும்முரமாகின. சனங்களோ அதுவரையிலும் நிபந்தனையற்ற முறையில் எல்லா வகையான தவறுகளுக்கும் அப்பால் அளிந்துவந்த தமது ஆதரவுத் தளத்தை மாற்றித் ‘தப்பினால் போதும்’ என்ற கட்டத்துக்கு வந்தனர். புலிகளால் சிறிலங்கா இராணுவத்தை வெல்லவும் முடியாது. தங்களையோ சனங்களையோ காப்பாற்றவும் முடியாது என்று அவர்கள் புரிந்துகொண்டனர். எனவே அவர்கள் எப்படியும் வன்னியை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர். ஆனால் புலிகளின் ஊடகங்கள், இணையதளங்கள் எல்லாம் வேறு கதைகளையே பேசின. தமிழகம் உட்படப் புலம்பெயர் நாடுகள் வரையில் இந்தப் பொய்ப்பரப்புரையின் மண்டலம் நீண்டது, புலம் பெயர் மக்களுக்கு வன்னியில் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. இந்த அறியா நிலையைப் பிரபாகரன் தனக்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டார். இதேவேளை புலிகளும் அவர்களின் தீவிர ஆதரவாளர்களும் ‘புலிக் குடும்பங்கள்’ என்ற உயர்மட்டத் தலைவர்களின் குடும்பங்களும் எப்படியும் படைத்தரப்பை எதிர்ப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று வாதிட்டனர். ‘சிங்களப் படைகளிடம் மண்டியிடுவதை விடவும் இறுதிவரைப் போராடிச் சாவது மேலானது’ என்று அவர்கள் சொன்னார்கள். ‘போராட்டம் என்பது விடுதலையுடனான வாழ்வைப் பெறுவதற்கே’ என்று சிலர் வலியுறுத்தியபோது அதைப் பொருட்படுத்தாது, பிரபாகரன் 300 போர் வீரர்கள் (The Three Hundred) என்ற ஆங்கிலப் படத்தின் தமிழாக்கத்தைத் தனது இயக்கத்தின் உறுப்பினர்களுக்குக் காண்பித்து தனது இறுதி முடிவு இப்படி இருக்கும் என்றார். அதுவே உயர்ந்த வீரம் என்றும் தாய்நாட்டுக்கான தியாகம் என்று சொன்னார்.


ஆனால் வன்னியில் இருந்த புத்திஜீவிகள் சிலர் இதை மறுத்தனர். இந்த முடிவு மிக மோசமானது என்றும் வரலாற்றை மிகவும் பிழையான இடத்திற்கு அழைத்துச்செல்லும் செயல் இது என்றும் அவர்கள் வலியுறுத்தினர். சனங்களைப் பாதுகாக்கும் பொறுப்பைப் பற்றிச் சிந்திக்க வேண்டுமே தவிர இவ்வாறு உணர்ச்சிவயப்பட்ட தீர்மானங்களுக்குப் போகக் கூடாது என அவர்கள் வாதிட்டனர். ஆனால், பிரபாகனிடம் யாரும் இதற்கான உரையாடலைச் செய்ய முடியவில்லை. அவர் எல்லாவற்றுக்கும் அப்பால் தன்னை நிறுத்திக்கொண்டார். சனங்களுடன் என்றுமே தொடர்புகளையோ உறவுகளையோ கொண்டிராத அவர் சனங்கள் குறித்து எவர் என்ன சொன்னாலும் எதையும் பொருட்படுத்தும் நிலையில் இருக்கவில்லை. தவிரவும் தனது இயக்க உறுப்பினர்களைத் தவிர அவர் வேறு எவரையும் - மக்கள் பிரதிநிதிகளைக்கூட - சந்தித்தவரல்ல. அவ்வாறு பிறரைச் சந்திப்பதாக இருந்தால் அவருடைய இயக்கத்தலைவர்களோ பொறுப்பாளர்களோ சிபாரிசு செய்யும் ஆதரவாளர்களையே சந்திப்பார். அவர்களோ புலிகளின் அனைத்து வகையான நடவடிக்கைகளையும் நியாயப்படுத்தும் இயல்பும் குணமுமுடையவர்கள். அவர்களால் ஒரு போதுமே மக்கள் குறித்து நீதியாகவும் நியாயமாகவும் சிந்திக்கவும் முடியாது; செயல்படவும் முடியாது. அப்படியான செயல்வழமையை அவர்கள் கொண்டதுமில்லை. அப்படியொரு பழக்கமும் அவர்களுக்கில்லை. எனவே அவர்களால் புலிகளின் தீர்மானங்களைப் பற்றிய எந்த விமர்சனங்களையும் முன்வைக்க முடியவில்லை.


கிறிஸ்தவ மத குருமார் அமைப்பு இவ்வாறு எடுத்த முயற்சியும் பலனளிக்கவில்லை. நலன் விரும்பிகள் எடுத்த எந்த முயற்சிகளுக்கும் அவர் செவி சாய்க்கவும் இல்லை. இதேவேளை புலிகள் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகளை- போர் முறையை மாற்றி- அமைக்க வேண்டும் எனச் சிலர் வலியுறுத்தி வந்தனர். களத்தை மாற்றுங்கள் யுத்திகளை மாற்றுங்கள், என அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். இதில் ஒரு சில புலம்பெயர் தமிழரும் அடங்குவர். ஆனால் இந்தப் புலம்பெயர் தமிழர்கள் புலிகளை விமர்சன பூர்வமாக ஆதரித்ததால் இவர்களின் கருத்தை ஏற்கப் புலிகள் தயாராக இருக்கவில்லை. இதே வேளை புலிகளின் ஊடகங்களோ மிக மூர்க்கமான விதத்தில் பொய்ப் பரப்புரைகளைச் செய்துவந்தன.
சிறிலங்கா அரசுக்கு எதிரான கண்டனத்தையும் விமர்சனத்தையுமே அவை தீவிரப்படுத்தின. அத்துடன் மாற்றுச் சிந்தனையாளர்களைக் கடுமையாக விமர்சித்தன. எந்தவிதமான அபிப்பிராயங்களையும் புறக்கணித்து விட்டுத் தனது அதிகாரத்தின் மூலம் தான் விரும்பிய மாதிரி பிரபாகரன் நடந்துகொண்டார். விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களே ஒரு கட்டத்தில் புலிகளின் நடவடிக்கைகள் குறித்துத் திகைப்படைந்து விட்டனர். அவர்கள் அளித்துவந்த ஆதரவை வைத்துக்கொண்டு அவர்களையே சிறைபிடித்தனர் புலிகள். எவராலும் எதுவும் செய்ய முடியாது என்ற நிலையில் எல்லோரும் சிக்கியிருந்தோம். ஜார்ஜ் ஆர்வெலின் ‘1984’ நாவல் நினைவுக்கு வந்தால் அதையும்விடப் பலமடங்கு இறுக்கமான நிலைமையும் அதிகார வெறியும் வன்னியில் நிலவியது என்று நீங்கள் மதிப்பிட்டுக் கொள்ளலாம்.
இதேவேளை படைத்தரப்பின் தாக்குதல்கள் மேலும் மேலும் மோசமடைந்தன. தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பல நூற்றுக் கணக்கிலானோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை மருத்துவ சிகிச்சைக்காக வெளியே கப்பல் மூலம் எடுக்கும் நடவடிக்கையைச் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் ஆரம்பித்தது. இதற்கு முன்னர் புதுக்குடியிருப்பு மருத்துவமனை அங்கே இயங்கியபோது சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் பாதுகாப்பு உத்தரவாதத்துடன் அங்கே நிலைகொண்டிருந்தது. சிறிலங்கா அரசும் விடுதலைப்புலிகளும் ஏற்றுக்கொண்ட விதிகளின் பிரகாரம் செஞ்சிலுவைச் சங்கக் குழு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
ஆனால், ஒரு கட்டத்தில் மருத்துவமனைப் பகுதியை அண்மித்து நின்று விடுதலைப்புலிகள் கனரக ஆயுதம் மூலமாகப் படையினர் மீதும் விமானப் படையின் மீதும் தாக்குதல்களைத் தொடுத்தனர். இதை சிறிலங்கா அரசின் வேவு விமானம் (இது அமெரிக்கத் தயாரிப்பு, ஆளில்லா வேவு விமானம். அமெரிக்கா இந்த விமானத்தை இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியிருந்தது) வட்டமிட்டு நோட்டமிட்டது. (இந்த விமானம் எப்போதும் வானத்தில் பறந்து கொண்டேயிருக்கும். இந்த வேவுக் கண்ணை வைத்தே சிறிலங்கா அரசு போரில் பெரும் வெற்றியைப் பெற்றது.) வேவு விமானத்தின் தரவுகளின் படி புதுக்குடியிருப்பு மருத்துவமனையின் மீது படைத்தரப்பு தாக்குதல் நடத்தி அதைத் தரைமட்டமாக்கியது. பின்னர் புதுமாத்தளன் பகுதி கடற்கரையிலிருந்த மருத்துவமனையில் சிகிச்சையும் மேலதிக மருத்துவத்துக்காகக் கப்பல் மூலம் திருகோண மலைக்கும் காயமடைந்தவர்களும் நோயாளிகளும் எடுத்துச் செல்லப்பட்டனர். ஒவ்வொரு கப்பலிலும் 400க்கு மேற்பட்டவர்கள் இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டனர். கை கால் இழந்தவர்கள், கண் பறிபோனவர்கள் உறவுகளை இழந்தவர்கள் என்றே இவர்கள் இருந்தனர். தினமும் தெருவிலும், ஆஸ்பத்திரியிலும், தார்ப்பாலின் கூடாரங்களின் மத்தியிலும் சாவடைந்த பிணங்கள் தொகை தொகையாகக் கிடந்தன. மரணம் எல்லோருடனும் குதித்து விளையாடியது. தாம் உயிர் பிழைப்போம் என்று அந்த நாட்களில் எவரும் நம்பியிருக்கவில்லை. சாவு அந்தக் கணம்வரைத் தங்களை நெருங்கவில்லை என்பது மட்டுமே உண்மை. மற்றபடி கொலை வலயத்தினுள்ளேதான் எல்லோரும் இருந்தனர்.


ஒரு சிறு அமைதியோ இடைவெளியோ வராதா; இந்தியாவோ தமிழகமோ ஐ.நாவோ பிற சர்வதேசச் சமூகமோ சிறியதொரு அமைதிச் சூழலை உருவாக்கித் தரமாட்டாதா என்ற ஏக்கம் எல்லோர் மனதிலுமிருந்தது. இதேவேளை புலிகளின் கடுமையான கண்காணிப்பையும் மீறிப் பொதுமக்கள் எப்படியோ வன்னியைவிட்டு வெளியேறிக்கொண்டேயிருந்தனர். ஆனால் அந்தத் தொகை பெரியதல்ல. புதிய புதிய காட்டுவழிகள், கடல்வழிகள், சதுப்பு நிலப்பாதைகளினூடாக மிக உச்சமான அபாயங்களின் மத்தியில் சனங்கள் ஓடி ஒளிந்துகொண்டிருந்தனர்.


வன்னியிலிருந்தால் மரணத்தைத் தவிர வேறு மார்க்கமே இல்லை என்ற நிலை. ஆனால் வன்னியை விட்டு எளிதில் வெளியேற முடியாது. அப்படிச் சுழித்துக்கொண்டு வெளியேறும்போது புலிகளின் கண்களில் சிக்கினால் அவ்வளவுதான். நெற்றிப்பொட்டுச் சிதறும். சுட்டுக் கொன்றுவிடுவார்கள் கொல்லப்படுவோர் தவிர இளவயதுடைய பெண்களையும் ஆண்களையும் பிடித்துச் செல்வார்கள். குழந்தைகளும் சிறுவர்களும் மட்டும் விடுவிக்கப்படுவார்கள். இளவயதினர் போருக்காகப் பிடித்துச் செல்லப்படுவர். இதைவிடப் பெரும் எண்ணிக்கையில் மக்கள் ஏதாவது வழியில் செல்லத் தொடங்கினால் கண்டமேனிக்குத் துப்பாக்கியால் சுட்டுத் தள்ளிவிடுவார்கள். இப்படிக் கொல்லப்பட்டவர்களும் காயப்படுத்தப்பட்டவர்களும் அதிகம். என்றாலும் சனங்கள் தப்பியோடுவதை அவர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை. சில சந்தர்ப்பங்களில் புலிகள் சுடச்சுடப் பலர் தப்பியோடி இராணுவத்தினரிடம் சரணடந்தார்கள். சிலர் தப்பியோடும்போது அவர்களுடைய குடும்பத்தில் ஏனைய உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். சிலர் கைதுசெய்யப்பட்டனர். சிலர் காயமடைந்தனர். புலிகள் தடுக்கத் தடுக்கப் பொதுமக்கள்மீதான இராணுவத்தின் தாக்குதல்களும் அதிகரித்தன. மருந்துத் தடை, உணவுப்பொருட் தடை என்பனவும் தீவிரமடைந்தன. சனங்களின் கையில் பணமில்லை, உற்பத்திகளில்லை வருமானமில்லை, சேமிப்பில்லை. வங்கிகள், பாட சாலைகள் எதுவுமில்லை. தூங்குவதற்கோ சமைப்பதற்கோ குளிப்பதற்கோ அவகாசமில்லாமல் எரிகணைகள் வீழ்ந்து வெடித்தன. சனங்களை இலக்குவைத்து இரண்டு தரப்புகளும் தாக்குதல்களை நடத்தின. புலிகளைப் பொறுத்தவரையில் அவர்களுக்குக் கொல்லப்படும் சனங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும் என்பதே இலக்கு. அப்படி என்றால்தான் இந்தப் படுகொலைகளை முன்னிட்டு ஐ.நாவோ இந்தியாவோ சர்வதேசச் சமூகமோ தலையிடக்கூடிய வாய்ப்பு உண்டாகும் என்று அவர்கள் நம்பினார்கள். அதை அவர்கள் முழுதாகவே எதிர்பார்த்தார்கள். எனவே கொலைப்பட்டியலை நீட்டிக் காட்டுவதற்கேற்ற முறையில் இராணுவத்தைச் சீண்டும் விதமாகக் கோப மூட்டும் வகையில் தமது தாக்குதல்களைத் தொடுத்தனர். படைத்தரப்புக்குத் தப்பியோடித் தங்களிடம் வரும் எண்ணிக்கையை அதிகரித்துக் காட்ட வேண்டிய அவசியம். சனங்களைப் புலிகளிடமிருந்து பிரித்துவிட்டால் புலிகளால் ஒரு நாளைக்குக்கூடத் தாக்குப்பிடிக்க முடியாது என்று அவர்கள் சரியாக மதிப்பிட்டிருந்தனர். எனவே சனங்களை மையமாக வைத்து, சனங்களின் உயிரைப் பணயமாக வைத்து இரண்டு தரப்பும் தமது தாக்குதல்களைத் தொடுத்தன.


ஒரு கட்டத்தில் இதுதான் உண்மை நிலைமை என்று சர்வதேச அமைப்புகளும் சர்வதேச ஊடகங்களும் கண்டுபிடித்திருந்தன. படைத்தரப்பு முன்னேற முன்னேற நிலைமை மோசமடையவே தொடங்கியது. இப்போது பங்கர்களும் பாதுகாப்பாற்றவையாகின. வெளியே நடமாட முடியாத அளவுக்கு ஓய்வில்லாத தாக்குதல். பாதுகாப்பு வலயம் என்று அறிவிக்கப்பட்ட பகுதிக்குள்ளேயே தாக்குதல்கள். புலிகளும் இந்தப் பகுதிக்குள் இருந்தே தாக்குதல்களைத் தொடுத்தனர். எதிரியைச் சினமடைய வைக்கும் வகையிலான தாக்குதல்கள். புலிகளின் இந்த மாதிரியான பொறுப்பற்ற நடவடிக்கைகளைச் சனங்கள் கடுமையாக எதிர்த்தார்கள். ஏனெனில் தாக்குதல் எந்தப் பகுதியிலிருந்து வருகின்றதோ அந்தப் பகுதியை நோக்கி பதிலடியைப் படையினர் கொடுப்பார்கள். இதன்போது கொல்லப்படுவது சனங்களே.


முன்னரே குறிப்பிட்டுள்ளதைப் போலச் சனங்களின் சாவுப் பட்டியலில்தான் தமது எதிர்கால அரசியல் நலன் தங்கியிருக்கிறது எனப் புலிகள் நம்பினார்கள். இதற்கு ஏற்றமாதிரி அவர்கள் தம் வசமிருந்த இணைய தளங்களையும் செய்மதிற் தொலைபேசிகளையும் பயன்படுத்தினார்கள். அக்காலப் பகுதியில் வன்னியின் குரலாக வெளிப்பட்ட மருத்துவர்களின் வாக்கு மூலங்களில் பாதி உண்மைகள் மட்டுமே வெளிவந்தன. அதற்காக மற்றதெல்லாம் பொய் என்று பொருளல்ல. அவர்கள் மீதி உண்மையைச் சொல்லவில்லை. புலிகள் தரப்பு நடவடிக்கையைப் பற்றிப் பேசவில்லை. வெளி ஊடகங்கள் எதுவும் இல்லாத சூழலில் தாம் சொல்வதே வேத வாக்கு எனப் புலிகள் நிரூபிக்க முயன்றனர்.
புலிகளின் மரபின்படி எப்போதும் பிற தரப்பினரைக் குற்றம் சாட்டும் இயல்போடு தம்மைப் பற்றிய மீள் பரிசீலனை, சுய விசாரணை எதுவுமில்லாமல் அவர்கள் இயங்கினார்கள். இந்தக் குணாம்சத்துடனேயே அவர்களின் மீடியாக்களும் இயங்கின. புலிகள் களத்திலிருந்து கொடுக்கும் தகவல்களை எந்தவிதமான மறுவிசாரணைகளும் இல்லாமல் சுய சிந்தையே அற்றுப் புலம்பெயர் தேசங்களில் உள்ள - அவர்களின் ஏஜென்ஸிகளாக இயங்கும் - ஊடகங்கள் பரப்புரை செய்தன. இதுதான் அடுத்த பெரிய தவறாக அமைந்தது. முழுவதும் புனைவாகவே தமது கதையை அவர்கள் வளர்த்தனர். வன்னியில் என்ன நடக்கிறது? மக்கள் எப்படி இருக்கிறார்கள்? அவர்களின் உணர்வு நிலை என்ன? அவர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள்? போராளிகளின் மனநிலை என்ன? படைத்தரப்பு எப்படி நகர்கிறது? கள யதார்த்தம் என்ன? இவை எதைப் பற்றியும் வெளிப்படையான எந்த ஆய்வுக்கும் செய்திக்கும் புலிகள் இடமளிக்கவில்லை. பதிலாகப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் முற்றிலும் பொய்களையே சொல்லி வந்தார். மீள முடியாத தோல்வியை நோக்கி முழுதாக இருத்தப்பட்ட பின்னரும் அவர் வெற்றி குறித்த பிரமைகளிலும் எந்த முகாந்திரமுமில்லாத புனைவுகளிலுமே ஈடுபட்டார்.


இதைப் போன்றே சிறிலங்கா அரசு தரப்பிலும் இராணுவப் பேச்சாளர் சகலரும் முழுப் பொய்களையே சொல்லி வந்தனர். அதிலும் இந்தக் கொடூர யுத்தத்தை -போர் விதிமுறைகளை முற்றிலும் மீறிய கொடிய தாக்குதல்களை - இவர்கள் மனிதாபிமான நடவடிக்கை என்று அழைத்தனர். யுத்தத்தின்போது முதலில் பலியாவது உண்மை என்பார்கள். இந்த உண்மை முழுதாகவே பலியானது. இரண்டு தரப்பினரும் சனங்களைப் பாதுகாப்பதாகச் சொல்லிக்கொண்டு மக்களைக் கொன்று குவித்தனர். அப்போது இந்த நிலைமைகள் தொடர்பாகச் சில கிறிஸ்தவமதக் குருமார்கள் சொன்னார்கள்:

“உண்மையில் இரண்டு தரப்பினருமே போர்க் குற்றவாளிகள்தான். அதிலும் போராட்டம், விடுதலை என்று வந்த சக்தியான புலிகள் இப்படி மனிதகுல விரோதச் செயலுக்குப் போனதை வரலாறு மன்னிக்காது. பிரபாகரனைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கையையே இப்போது புலிகள் செய்கின்றனர். தனியொரு மனிதனுக்காக இத்தனை உயிரிழப்புகளா? இவ்வளவு கொடுமைகளா? இதைவிடக் கேவலமானது, ஜனநாயக அரசு என்று சொல்லிக்கொண்டு மக்களை மீட்பதற்கான மனிதாபிமான நடவடிக்கை என்ற பெயரில் இப்படிச் சனங்களை இலக்கு வைத்தே தாக்குவதை எப்படி அனுமதிப்பது”.


இது பற்றி இரண்டு தரப்பினரிடமும் தமது ஆட்சேபனைகளை அவர்கள் தெரிவித்துமிருந்தனர். ஆனால் இரண்டு தரப்புமே அவர்களின் குரலைப் பொருட்படுத்தவில்லை. வெறிகொண்ட இரண்டு மதயானைகளைப் போலத் தொடர்ந்து மோதிக் கொண்டேயிருந்தனர் அவர்கள்.
ஆனால் யாராலும் விளங்கிக் கொள்ள முடியாத விசயமாக இருப்பது புலிகளின் கரும்புலிகள் அணிகள் ஏன் செயற்பட முடியாமல் ஆகின என்பதே. படைத்தரப்பு புலிகளின் ஒவ்வொரு கோட்டையையும் கைப்பற்றி முன்னேறும்போது புலிகளின் உறுப்பினர்களின் மத்தியிலும் சனங்களின் மனதிலும் கரும்புலிகளின் தாக்குதல்கள் நடக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. தவிரவும் பிரபாகரன் அரசியல்ரீதியாகச் சாணக்கியமோ கெட்டிக்காரத்தனமோ அக்கறையோ இல்லாதவராக இருந்தாலும் இராணுவரீதியாக மிகவும் ஆற்றலுள்ளவராக மதிக்கப்பட்டவர். ஆனால், எவருக்கும் தெரியாத, விளங்காத ஒரு புதிராக அவர் அமைதி காத்தபடி பின்வாங்கிக்கொண்டிருந்தார். கண் முன்னே பல ஆயிரக்கணக்கான சனங்கள் செத்து மடிந்துகொண்டிருந்தனர். அப்போதும் அவர் தனது நடவடிக்கையைக் கைவிடவில்லை. முன்னேறும் படையினரைத் தடுக்கும் அதே மாதிரியான ஒரே வகையான தாக்குதலையே தொடர்ந்தார். இந்தத் தடுப்பு நடவடிக்கையை எப்படி எதிர்கொள்வது, எவ்வாறு முறியடிப்பது என்று படைத்தரப்பு மிக நன்றாகப் படித்திருந்தது. அதன்படி அது எல்லா எதிர்ப்புகளையும் மிக லாவகமாகவும் இலகுவாகவும் முறியடித்தது.


இதன்போது நூற்றுக்கணக்கில் கட்டாய ஆட்சேர்ப்பில் பிடிக்கப்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இந்தக் கொலைகளைப் பற்றிய எந்தக் கவலையும் புலிகளிடம் இருக்கவில்லை. அவர்கள் வெறிகொண்டலைந்து இன்னுமின்னும் ஆட்களைப் பிடித்தார்கள். ஆட்பிடிப்பில் எந்தவிதமான மனிதாபிமானத்தையும் நாகரிகத்தையும் அவர்கள் கடைப்பிடிக்கவில்லை. இறுதிக் கட்டம் நெருங்கிவிட்டது என்று தெரிந்த பின்னர் தங்களுக்கு மக்கள் அபிமானம் தேவையில்லை என்று புலிகள் சிந்திக்கின்றனர் எனப் புலிகளின் முக்கிய ஊடக வியலாளர் ஒருவரே சொன்னார். அந்தளவுக்கு அவர்களின் உளநிலை மாறியிருந்தது.


மாத்தளன் தொடக்கம் வட்டுவாகல் வரையிலான முன்னூறு மீற்றர் அகலமும் 10 கிலோ மீற்றர் நீளமும் உள்ள கடற்கரையில் ஏறக்குறைய மூன்று லட்சம் மக்கள் செறிந்திருந்தனர். சாப்பாடு, குடிநீர், தங்குமிடம், பாதுகாப்பு, மருத்துவம், கழிப்பறை எனச் சகலத்துக்கும் பிரச்சினை. ஏற்கனவே இந்தப் பகுதி மிகவும் பின்தங்கிய பகுதி. இரண்டு கிராம அலுவலர்கள் பிரிவிலுமாக சுமார் முன்னூறு குடும்பங்கள் மட்டுமே வாழ்ந்த இடத்தில் இப்போது மூன்று லட்சத்துக்கும் அதிகமானவர்கள் என்றால் நிலைமை எப்படி இருக்கும்? அதுவும் எந்த அடிப்படை வசதிகளையும் செய்ய முடியாத சூழலில்!
சனங்கள் இந்தப் பகுதியில் தஞ்சமடைந்தபோது படையினர் புதுக்குடியிருப்பு, இரணைப்பாலை, ஆனந்தபுரம் பகுதிகளில் மட்டும் முற்றுகைச் சமரில் ஈடுபட்டனர். புலிகளின் இறுதி எதிர் நடவடிக்கை இங்கேதான் நடந்தது. இந்த நடவடிக்கையை அவர்கள் மிகத் தீவிரமான முறையில் நடத்தத் திட்டமிட்டிருந்தனர். மக்களுக்கு ஏற்பட்டிருந்த உளச்சோர்வு, பேரவலம் எல்லாவற்றையும் இந்த நடவடிக்கை மூலம் போக்கிவிடலாம் என்று இறுதி நம்பிக்கையோடு புலிகளின் சில மூத்த தலைவர்கள் சொன்னார்கள். இந்தத் தாக்குதலில் அவர்களுடைய மூத்த முன்னணித் தளபதிகள் பலரும் கலந்துகொண்டனர். பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் ஆதவன், பிரிகேடியர் விதுசா, பிரிகேடியர் துர்க்கா, பிரிகேடியர் மணிவண்ணன், கேனல் சேரலாதன், கேனல் ராகேஸ் உட்படப் பல தளபதிகள் இதன்போதே கொல்லப்பட்டனர். முழு நம்பிக்கையுடன் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் புலிகளின் வரலாற்றிலேயே பெரும் தோல்வியாகவும் மாபெரும் ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் முடிந்தது. இது பிரபாகனை நிலைகுலைய வைத்தது. கொல்லப்பட்ட தளபதிகளின் சடலங்களைக்கூட அவர்களால் எடுக்க முடியவில்லை. ஏற்கனவே இன்னும் பல தளபதிகள் கள முனைகளில் கொல்லப்பட்டிருந்தனர்.


சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி, மாலதி படையணி போன்றவையும் முன்னரே பெருமளவுக்குச் சிதைந்துவிட்டன. இந்த நிலையிலும் அவர்கள் வெளியுலகுக்குத் தவறான தகவல்களையே சொல்லிக்கொண்டிருந்தனர். பதிலாக சிறிலங்கா அரசு இன்னும் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியது. இப்போது இறுதிக்கட்ட நடவடிக்கைக்குப் படைத்தரப்பு தன்னைத் தயார்படுத்தியது. அதுதான் புதுமாத்தளன் மற்றும் அம்பலவன் பொக்களையில் படைத்தரப்பு நுழைந்து ஒருலட்சத்திற்கும் அதிகமான சனங்களை மீட்ட நடவடிக்கை. உண்மையில் புலிகளின் பிடியிலிருக்கும்போது தம்மை முழுதாகப் பணயக் கைதிகளாகவே அந்த மக்கள் எண்ணியிருந்தனர். அந்த நிலையிலேயே அவர்களைப் புலிகள் நடத்தினார்கள். உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான பணயக்கைதிகள். இந்தப் பணயக் கைதிகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஆயிரத்துக்கும் அதிகமான சனங்கள் கொல்லப்பட்டனர்.


இதேவேளை இன்னும் ஒரு தொகுதிச் சனங்களைப் புலிகள் முள்ளிவாய்க்கால் என்ற இடத்தை நோக்கிக் கட்டாயப்படுத்தி அடித்து விரட்டினர். அதுவும் பல வந்தமாகவே விரட்டினர். ஏற்கனவே உணவுப்பொருட்களைப் பெறுவதற்கே வசதியற்றிருந்த மக்கள் சாப்பாடு இல்லாமல் சாவதைவிடப் படையினரிடம் போய்ச்சாவது மேல் என்று மறுத்தார்கள். எனினும் புலிகள் அவர்களைவிடவில்லை. கட்டாயப்படுத்தி முள்ளிவாய்க்காலுக்கு அழைத்துச் சென்றனர். இந்த முள்ளிவாய்க்கால் பகுதிதான் புலிகளின் களமாகியது. இறுதிநாட்கள் என்று சொல்லப்படும் ஏப்ரல் 18க்குப் பிந்திய மே 18 வரையிலான நாட்களில் நிலைமை இன்னும் மோசமாகியது. சனங்கள் ஏற்கனவே இரகசிய வழிகளைத் தேடித் தேடி மிகவும் ஆபத்தான வழிகளில் படைத் தரப்பிடம் தப்பிச்செல்ல முற்பட்டனர். சிலர் கடல் வழியாகப் படகுகளிலும் புறப்பட்டனர். ஆனால் புலிகள் உருவாக்கிய ஒரு படையணியினர் ‘பச்சை மட்டை’யுடன் நின்று சனங்களுக்கு அடிபோட்டுக் கலைத்தார்கள். சனங்கள் எதிர்ப்பைக் காட்டியபோது துப்பாக்கியால் சுட்டார்கள். இவ்வாறு சுடப்படும்போது இறந்தவர்கள் போக ஏனையோர் தப்பினோம் பிழைத்தோம் என்று ஓடிப்போனார்கள். சிலர் பயந்து பின்வாங்கினார்கள். சிலர் செத்து மடிந்தார்கள். சிலர் காயப்பட்டு மருத்துவமனையில் கிடந்தார்கள். இவ்வாறு தம்மால் சுடப்பட்டு மருத்துவமனையில் காயமடைந்து சேர்க்கப்பட்டவர்களை மேலதிகச் சிகிச்சைக்காகக் கப்பலில் எடுத்துச் செல்வதற்கு அவர்கள் அனுமதிக்கவில்லை. காயப்பட்டவர்கள் புதுமாத்தளன், முள்ளி வாய்க்கால் மருத்துவமனைகளில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர்.


இதுபோலப் பல நிகழ்ச்சிகள் ஏற்கனவே நிகழ்ந்தன. இந்த நடவடிக்கைகளுக்கு முழுப்பொறுப்பாக முதலில் தங்கனும் அவருடன் இணைந்து புலிகளின் யாழ் மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த இளம்பரிதி, விளையாட்டுத் துறைப் பொறுப்பாளராக இருந்த வரும் பின்னர் புலனாய்வுத் துறையைச் சேர்ந்தவருமான மாதவன் மாஸ்டர், திருமலை, சூட்டி உள்ளிட்ட பலரும் இருந்தனர். சனங்கள் தமது முழுமையான எதிர்ப்பையும் இந்தச் சந்தர்ப்பங்களில் காட்டத் தொடங்கினர். குறிப்பாக மாத்தளன் பகுதியிலுள்ள கப்பல் துறையில் மக்களுக்கும் புலிகளுக்குமிடையில் ஏற்பட்ட மோதல்கள் முக்கியமானவை.


கட்டாய ஆட்சேர்ப்பின் போது ஏற்பட்ட தகராறில் ஒரு காலை மூன்று பேரைப் புலிகள் சுட்டுக்கொன்றனர். இதனால் ஆத்திரமடைந்த சனங்கள் கொல்லப்பட்டவர்களின் சடலங்களைத் தூக்கிக்கொண்டு கப்பலுக்கு வழித்துணையாக வரும் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தினரிடம் சென்றனர். அங்கே புலிகளின் கொடுமையை அவர்கள் அந்தப் பிரதிநிதிகளுக்கு விவரித்தனர். அப்போது கூட்டம் கூட்ட வேண்டாம் என்று சனங்களை விரட்டியடிக்க வந்த புலிகளையும் அவர்களின் காவல் துறையினரையும் மக்கள் கலைத்துக் கலைத்து அடித்தனர். அவர்களுடைய வாகனங்கள் பலவும் எரியூட்டப்பட்டன. எதிர்பாராத இந்த நிகழ்ச்சியால் புலிகள் ஆடிப்போனார்கள். ஆனால் மறுநாள் அந்தப் பகுதியில் 1500க்கு மேற்பட்ட புலிகளின் உறுப்பினர்களும் காவல் துறையினரும் சுற்றிவளைப்பை மேற்கொண்டு கண்டபடி ஆண்களைப் பிடித்துத் தாக்கி எல்லோரையும் தமது வாகனங்களில் ஏற்றிச் சென்றனர். மேலும் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். முதல் நாள் கலவரத்தையடுத்து மக்கள் 30 படகுகளில் அந்தப் பகுதிகளிலிருந்து தப்பிச் சென்றனர். இவர்களில் பெரும்பாலானோர் யாழ்ப்பாணத்துக்குச் சென்று சேர்ந்தனர். இதுபோலப் பல சம்பவங்கள் உண்டு. வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த கொந்தளிப்பான நிகழ்ச்சிகள் அவை.


ஏப்ரல் 18, 19, 20, 21 ஆகிய நாட்கள் கடற்கரைப் பகுதியான புதுமாத்தளன், அம்பலவன், பொக்களை என்ற இடங்கள் படையினர் வசமாயின. சனங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் படையினரிடம் தப்பிச் செல்லப் புலிகளுக்கு என்ன செய்வது என்று தெரியாத நிலை ஏற்பட்டுவிட்டது. கடலிலும் உச்ச பாதுகாப்பை சிறிலங்கா கடற்படை மேற்கொண்டிருந்தது.
இந்தக் காலப்பகுதியிலும் இதன் முன்னரும் புலம்பெயர் தமிழர்கள் தங்களுடைய நாடுகளில் தொடர் போராட்டங்களை நடத்தினர். உண்மையில் உயிர்த்துடிப் போடும் உணர்வெழுச்சியோடும் அவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். பிரித்தானியா, நோர்வே, சுவிஸ், அவுஸ்ரேலியா, பிரான்ஸ் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் நடத்திய போராட்டங்கள் முக்கியமானவை. ஆனால் இந்தப் போராட்டங்களை வன்னி மக்களில் பெரும்பான்மையானோர் விரும்பவில்லை.


காரணம் இந்தப் போராட்டங்கள் தங்களைப் பாதுகாக்கும் வகையில் இவற்றைச் சுருக்கி புலிகள் தமக்கு வாய்ப்பை உருவாக்கும் முறையில் மாற்றிக்கொண்டனர். போராட்டங்களை நடத்திய முறையும் புலிகள் புலம்பெயர் தமிழர்களையும் அமைப்புகளையும் பயன்படுத்திய முறையும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்துக்கு வலுசேர்ப்பதாக அமையவில்லை. மக்கள் கொல்லப்படுவதைத் தடுப்பதற்குப் புலம்பெயர் மக்களால் முடியாமல் போனதையிட்டு இதை யாரும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.


இன்னும் சற்று விளக்கமாகச் சொன்னால் புலிகளின் ஜனநாயக மறுப்பைப் பற்றிப் புலம்பெயர் தமிழர்கள் போதுமான அளவு பேசியதில்லை. புலிகளின் பகுதியில் அல்லது இலங்கைத் தீவில் புலிகளின் மீது விமர்சனங்களை யாரும் வைக்க முடியாது. அதற்கான வெளியை புலிகள் விட்டுவைக்கவில்லை. ராஜினி திரணகம செல்வி, ‘புதியதோர் உலகம்’ நாவலை எழுதிய கோவிந்தன் உட்பட ஏராளமானவர்களின் படுகொலைகள் இதற்கு உதாரணம். எனவே புலம்பெயர் மக்களால் மட்டும்தான் ஓரளவுக்குப் புலிகளின் ஜனநாயக மறுப்பையும் அரசியல் பார்வையற்ற தன்மையை யும் சர்வதேச மற்றும் போராடும் மக்களின் மனநிலை சூழ்நிலை என்பவற்றைக் கணக்கில் கொள்ளாத போர்முனைப்பையும் இன்னும் பலவாறான எதிர்மறை அம்சங்களைப் பற்றியும் பேசியிருக்க முடியும். அவர்களுக்குத்தான் இந்தப் பொறுப்பு அதிகமுண்டு.


ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் எந்தவிதமான விமர்சனங்களுமற்று பிரபாகரனை வழிபட்டனர். புலிகளை நிபந்தனைகளற்ற முறையில் ஆதரித்தனர். இதற்கான பிரதான காரணம் இவர்கள் தமது தாய்நாட்டை விட்டுப் புலம்பெயர்ந்து தூர இடங்களில் இருக்கும்போது ஏற்படும் சொந்த நிலத்தின் மீதான தாகம். அடுத்தது தாம் பாதுகாப்பாக இருக்கும்போது தமது உறவினர்கள் போரால் வதைபடுவதும் கொல்லப்படுவதும். மூன்றாவது காரணம், சிறிலங்கா அரசு மீதான காழ்ப்புணர்ச்சியும் வெறுப்பும். இந்தக் காரணங்கள் அவர்களை விசுவாசமாகப் போராடத் தூண்டின. ஆனால் இதைப் புலிகள் தமக்கு வாய்ப்பாகப் பயன்படுத்தியதும் புலம்பெயர் தமிழர்கள் இதற்குப் பலியானதும் ஒன்றாகவே நடந்தன. புலிகள்மீதான விமர்சனத்தை வைத்து ஈழப் போராட்டத்தை விரிந்த தளத்தில் ஜனநாயக உள்ளடக்கத்துடன் முன்னெடுக்க வேண்டும் என்ற புலம்பெயர் தமிழர்களும் புத்திஜீவி களும் ஏற்கனவே புலிகளின் ஆதரவுச் சக்திகளால் ஓரங்கட்டப்பட்டு மௌனிக்கப்படுத்தப்பட்டிருந்தனர். ஒரு நண்பர் சொல்வதைப் போலப் பிரபாகரன் எல்லாவற்றையும் தியாகம் - துரோகம் என்ற பிரிகோட்டைப் போட்டுப் பிரித்து வைத்திருந்தார். புலிகளின் சிந்தனை முறைக்கு எதிராகச் சிந்திப்பவர்களும் செயல்படுபவர்களும் துரோகிகளாகவும் எதிர்நிலை யாளர்களாகவும் பார்க்கப்பட்டனர். வெகுஜனத் தளத்தில் இலகுவில் பதிந்துவிடக்கூடிய இன உணர்வு, மொழி உணர்வு போன்றவற்றை ஆதாரமாகக்கொண்டு பிரபாகரன் இதை வெற்றிகரமாகச் செய்துகொண்டார்.
எனவே ஜனநாயக உள்ளடக்கமற்ற புலிகளின் போராட்டத்தை - இந்தப் போராட்டங்களை நடத்திய மக்கள் தங்களின் கைகளில் பிரபாகரனின் படத்தையும் தமிழ் ஈழப் படத்தையும் வைத்திருந்ததை நினைவில் கொள்க -மேற்குலகம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் எப்படியும் யுத்தத்தை நிறுத்திவிட வேண்டும், மக்களைக் காப்பாற்ற வேண்டும், ஈழத்தில் ஒரு அமைதிச் சூழலை கொண்டுவரத் தாம் பாடுபட வேண்டும் என்று இந்த மக்களில் பெரும்பான்மையானவர்கள் விசுவாசமாகவே முயன்றனர். அதற்காக அவர்கள் இரவு பகலாகத் தொடர்ந்து போராடினர்.
புலம்பெயர் மக்களின் போராட்டம் நிச்சயமாக ஏதாவது நல்விளைவுகளைத் தரும் என்று பிரபாகரன் நம்பினார். முதல் தடவையாக அவர் துப்பாக்கிகளிலும் பீரங்கிகளிலும் நம்பிக்கை இழந்த நிகழ்ச்சி இது. அதுவரையும் எப்படியும் இராணுவத்தை ஏதாவது ஒரு புள்ளியில் வைத்து முறியடித்துத் தோல்வியைத் தழுவச் செய்யலாம் என்று இருந்த நம்பிக்கையைப் பிரபாகரன் மெல்ல மெல்ல இழந்திருந்தார்.
பிரபாகரன் எத்தகைய இராணுவத் தாக்குதல்களைத் தொடுப்பார் என்று தெரியாத ஒரு அச்சம் நிறைந்த புதிர் சிறிலங்கா அரசுக்கும், படைத் தரப்புக்கும் இருந்தது உண்மை. அதனால் அவர்கள் தமது நடவடிக்கையை முதலில் மந்தகதியிலேயே நடத்தினர். ஆனால் புலிகளின் பலவீனமான அம்சங்களை அடையாளம் கண்ட பின்னர் படை நகர்வின் வேகம் யாரும் எதிர்பார்த்திராத அளவிற்கு வளர்ச்சியடைந்திருந்தது. ஆனாலும் தமது இறுதிக் கணம் வரையிலும் புலிகளின் தாக்குதல்கள் நடந்துகொண்டே இருந்தன என்பதையும் இங்கே நாம் கவனிக்க வேண்டும். இருந்தபோதும் பிரபாகரன் தன்னுடைய போரின் மூலம்-யுத்தத்தின் மூலம்-இனிமேல் எதையும் சாதிக்க முடியாது என்ற உண்மையை வந்தடைந்தார். பிரபாகரனைப் போலவே ஏனைய புலிகளின் உறுப்பினர்களும் இந்த உண்மைக்கு வந்து சேர்ந்திருந்தனர். குறிப்பாக மேற்குலகம் இந்தச் சந்தர்ப்பத்தில் சிறிலங்கா அரசுக்கு ஏதாவது அழுத்தங்களைக் கொடுக்கும்; யுத்த நிறுத்தமோ நிபந்தனையுடன் கூடிய பேச்சுவார்த்தைச் சூழலோ உருவாக்கப்படலாம் என்று அவர்கள் நம்பினர்.


இதற்கு முன்னர் கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் தமிழகத்தில் நடந்த போராட்டங்களும், கட்சிகளால் முன்னெடுக்கப்பட்ட தீர்மானங்களும் குறிப்பாகத் தமிழக முதல்வர் மு. கருணாநிதியின் தமிழ்நாடு அரசு எடுத்த முயற்சிகளும் இந்திய மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த எதிர்பார்ப்பு தனியே புலிகளுக்கு மட்டும் இருக்கவில்லை. சகல தமிழ் மக்களுக்கும் தமிழ்க் கட்சிகளுக்கும் இருந்தது. இந்திய மத்திய அரசு தன்னுடைய தீர்மானங்களில் அல்லது நிலைப்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தினால் நிலைமை சாதகமாக மாறும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால் இந்த எதிர்பார்ப்புக்கு எதிராகவே நிகழ்ச்சிகள் நடந்தன. ராஜீவின் படுகொலையைப் புலிகள் சாதாரணமாகக் கருதினார்கள். இந்தியா அப்படி அதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்திய யதார்த்தத்தின்படி இந்தியாவால் அந்தக் கொலையைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்பதும் பிரபாகரனுக்குத் தெரியாமல் இல்லை. ஆனால், அவ்வாறு அவர் நம்ப விரும்பினார். தமிழக எழுச்சி நிச்சயம் மாற்றங்களை ஏற்படுத்தும் என்று அரசியல் துறைப் பொறுப்பாளர் நடேசன் பிரபாகரனுக்கு நம்பிக்கையூட்டினார். இந்தியாவின் தேசியக் கட்சிகளான இடதுசாரிகளும் பாரதீய ஜனதாவும் ஈழத்தமிழர் ஆதரவு நிலைப்பாட்டையும் சிறிலங்கா அரசுக்கெதிர் போக்கையும் வெளிப்படுத்தியிருந்தமை பிரபாகரனுக்கும் நடேசனுக்கும் அதிக நம்பிக்கையளித்தது. ஆனால், இந்திய மத்திய அரசின் போக்கில் எந்த மாற்றத்தையும் காண முடியவில்லை. மாற்றம் ஏற்பட வாய்ப்புமில்லை. தமிழக அரசுக்கும் இந்திய அரசுக்கும் இடையிலான உறவும் அவற்றின் இணைந்த நிலைப்பாடுகளும் எவ்வாறு இருக்கும் என்பதெல்லாம் பிந்தியே புலிகளுக்கு விளங்கியது. நீண்டகால ஈழப்போராட்ட ஆதரவாளர்களாக இருக்கும் நெடுமாறன் போன்றோர், மக்கள் திரட்சியை ஓரளவுக்குக் கொண்ட ராமதாஸ், திருமாவளவன் போன்றோரின் செல்வாக்குகளுக்கும் ஒரு எல்லையுண்டு. அதிகாரத்திலிருக்கும் தரப்பைத் தவிர பிற சக்திகளின் ஆதரவுகளுக்கு ஒரு வரையறை உண்டு என்ற விசயங்களையெல்லாம் பிரபாகரன் பிந்தியே புரிந்துகொண்டார். இதேவேளை மாற்று நடவடிக்கைக்கான அவகாசமே இல்லாமல் மகிந்த அரசு அரசியல் நடவடிக்கைகளையும் இராணுவத் தாக்குதல்களையும் தீவிரப்படுத்தியது.
சர்வதேசத் தரப்பை ஒரே முகப்படுத்திய சிங்கள இராசதந்திரம் பாகிஸ்தான், அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இந்தியா, இஸ்ரேல், பிரித்தானியா எனச் சகல நாடுகளில் இருந்தும் ஆயுத உதவிகளையும் போர்த்தொழில் நுட்பத்தையும் அரசியல் ஆதரவையும் பெற்றுக்கொண்டது. மகிந்த ராஜபக்சே எந்த விளைவுகளுக்கும் முகம் கொடுக்கத் தயார் என்ற நிலையில் தீர்மானங்களை எடுத்தார். ஏற்கனவே பெற்றிருந்த வெற்றிகள் சிங்களத் தரப்புகள் அத்தனையையும் போருக்கு ஆதரவாகத் திரட்டின. பிரபாகரன் எல்லோருடைய வெறுப்புக்கும் கோபத்துக்கும் ஆளானவர் என்ற அடிப்படையில் தமக்குள் முரண்கொண்ட சக்திகளும் இந்த விவகாரத்தில் ஒன்றுபட்டன. தமிழர்களோ - புலிகளோ நெருக்கடியில் இருந்து தம்மைக் காத்துக்கொள்ள எந்த நண்பர்களும் இல்லாத நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர்.


இதேவேளை இந்த இராணுவத் தாக்குதல்களால் புலிகளின் நிர்வாகக் கட்டமைப்புகள் மட்டுமல்லாமல் இராணுவக் கட்டமைப்பும் ஆட்டம் கண்டது. குறிப்பாகப் புலிகளின் வெடிபொருட் தொழிற்சாலைகள் இடப்பெயர்வுக்கும் குண்டுவீச்சுக்கும் இலக்காகின. என்றபோதும் அவர்களின் உற்பத்திகள் நடந்துகொண்டேயிருந்தன. ஆனால் வரையறுக்கப்பட்ட அளவில் இறுதிவரை தாக்குதலை நடத்தும் திறனை இதன் மூலம் பிரபாகரன் தக்கவைத்திருந்தார்.
புது மாத்தளன், அம்பலவன் பொக்களையில் ஏப்ரல் 19, 20ஆம் திகதிகளில் இராணுவமும் உள்நுழைந்தவுடன் மாறிய நிலைமைகள் புலிகளுக்கு மேலும் நெருக்கடிகளைக் கொடுத்தன. கடலில் தீவிரக் கண்காணிப்பு, சிறிய நிலப்பகுதி, வெளிச்செல்ல முடியாத அளவுக்குச் சுற்றிவளைப்பு-இராணுவ வளையத்தின் இறுக்கம், தளர்வடைந்த தளபதிகள், எந்தப் போருபாயத்தாலும் இனி வெற்றி கொள்ள முடியாது என்ற நிலை நிச்சயமாகிவிட்டது. ஆனால், அப்போதும் தங்களால் போரில் வெற்றிபெற முடியும் என அவர்கள் சனங்களுக்குச் சொல்லிக்கொண்டேயிருந்தார்கள். புலிகளின் குரல் வானொலி போர் வெற்றி குறித்த நம்பிக்கையூட்டும் நிகழ்ச்சிகளையும் அறிவிப்புகளையும் செய்துகொண்டேயிருந்தது. ஆட்பிடிப்பும் குறைவில்லை. அதேவேளை புலிகள் தாக்குதல்களை நடத்திக் கொண்டேயிருந்தனர்.
இப்பகுதிகளில் இருந்து சனங்கள் புலிகளின் தடைகளையும் மீறி யாழ்ப்பாணத்துக்கும் வவுனியாவுக்கும் சென்றனர். கடலில் பயணம் செய்தோரை நோக்கிக் கடற்புலிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். ஆனால், தாக்குதல்களுக்கு இலக்கான படகுகளைத் தவிர ஏனையவை தப்பிச் சென்றுவிட்டன. இரவிரவாகப் படகுகள் புல்மோட்டைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் சென்றன.


மாத்தளன் பிரதேசம் படைக்கட்டுப்பாட்டுக்கு வந்தபோது அங்கே இயங்கிவந்த கப்பல்துறையை வன்னியில் இருந்த ஒரே அரசாங்க அதிகாரியான பார்த்தீபன் முள்ளிவாய்க்காலுக்கு மாற்றும்படி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார். புலிகளும் அதை விரும்பினர்.
புது மாத்தளன், அம்பலவன் பொக்களை, வலைஞர் மடம் பகுதிகளிலிருந்து வெளியேறிய மக்களைத் தவிர ஏனையோர் இரட்டை வாய்க்கால், முள்ளிவாய்க்கால் பகுதிகளில் இடம்பெயர்ந்து தங்கினர். இது முல்லைத் தீவு நகரத்தின் நுழைவாயிலில் உள்ள பகுதி. சிறு கிராமம். ஆனால் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இந்தச் சிறு கிராமங்கள் இரண்டிலும் நெரிசலாகத் தங்கினர். பலருக்குத் தார்ப்பாலின் கூடாரங்களே இல்லை குளிப்பில்லை. சாப்பாடில்லை. பதுங்கு குழியில்லை. போவதற்கு வழியில்லை. அங்கே தங்கவும் முடியாது. போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக இராணுவம் தொடர்ந்து தாக்குதல்களை நடத்திக் கொண்டேயிருந்தது. சனங்கள் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். புலிகளின் தலைமை இந்தப் பகுதியினுள்ளேயே சிக்கியிருக்கிறது என்பதை இராணுவத் தரப்பு உறுதி செய்திருக்க வேண்டும். எனவே முழு முனைப்போடு தாக்குதல் நடந்தது.


இதே வேளை புலம்பெயர் தமிழர்கள் ஐரோப்பிய நாடுகளில் தீவிரப் போராட்டங்களை நடத்திக்கொண்டிருந்தனர். இந்தப் போராட்டங்களின் மூலம் பிரிட்டனிலும் அமெரிக்க வெள்ளை மாளிகையிலும் சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கு என்று பிரபாகரன் நம்பினார். சில புலம்பெயர் தமிழ் முக்கியஸ்தர்கள் பிரபாகரனுக்கு இந்த வகையில் நம்பிக்கையூட்டியதாக தகவல்கள் உண்டு. வேறு வழியோ கதியோ இல்லாதபோது இவ்வாறு நம்புவதைத் தவிர அவருக்கு வேறு வழி எதுவும் இருக்கவில்லை. எனவே புலம்பெயர் தமிழர்களை அவர் முழு நம்பிக்கையோடு நம்பியிருந்தார். அவர்களின் அந்தப் போராட்ட இயந்திரத்தை அவர் முழு வேகத்தோடு இயக்கினார். இதற்கு நல்ல ஆதாரம் புலிகளின் புலம்பெயர் ஊடகங்கள். வன்னியிலிருந்து லண்டனில் இருந்து இயங்கும் மிஙிசி வானொலிக்குத் தகவல்களைத் தொலைபேசி மூலமாக வழங்கிய புலிகளின் சர்வதேசப் பரப்புரைப் பொறுப்பாளர் திலீபன் (இவர் தமிழ்ச் செல்வனின் மனைவியினுடைய உடன் பிறந்த சகோதரர்) விடுத்த கோரிக்கையும் தெரிவித்த கருத்துகளும் இதற்கு ஆதாரம். இவரே வெளிநாடுகளில் நடந்த போராட்டங்களை இணைந்து நடத்தினார்.


இந்தச் சந்தர்ப்பங்களில் பிரித்தானிய வெளியுறவு அமைச்சரும் பிரெஞ்சு வெளியுறவு அமைச்சரும் சிறிலங்காவுக்கு அவசரப் பயணத்தை மேற்கொண்டு அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்தியிருந்தனர். வவுனியா அகதி முகாம்களுக்கும் சென்றிருந்தனர். ஐ.நாவிலும் இலங்கை விவகாரம் உரத்த தொனியில் பேசப்படுவதான ஒரு தோற்றம் உருவாகியது. ஐ.நா செயலரின் சிறப்புத் தூதுவராக விஜய் நம்பியார் கொழும்புக்கு விரைந்தார். பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இலங்கை விவகாரம் விவாதிக்கப்பட்டது. இதற்கு அந்த நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த போராட்டங்களும் அழுத்தத்தை ஏற்படுத்தின. ஒபாமா நிர்வாகமும் இலங்கை நிலவரம் குறித்துக் கவனத்தைச் செலுத்தியது. இவையெல்லாம் யுத்தத்தை நிறுத்துவதற்கு அல்லது புலிகளின் தலைமையை ஏதோவொரு வகையில் காப்பாற்றுவதற்கு உதவும் என்ற நம்பிக்கை புலிகளுக்கும் ஆதரவாளர்களுக்கும் மக்களின் ஒரு சிறுபகுதியினருக்கும் இருந்தது. ஆனால், நிலைமைகளைச் சரியாக அவதானிப் போருக்கும் அரசியல் ஞானமுடை யோருக்கும் இவற்றில் சிறு நம்பிக்கையும் இருந்ததில்லை. ஏனெனில் யுத்தத்தை நடத்திய தரப்புகளே இவைதானே. சர்வதேச அரசியல் பகைப்புலத்தில் பயங்கரவாத அமைப்பாகப் பிரகடனப்படுத்திய இந்த நாடுகள் தமது நாடுகளில் தடைசெய்த புலிகளின் அழிவை எதிர்பார்த்துக் கொண்டேயிருந்தன என்ற யதார்த்தம் அரங்கேறியது.
பிரபாகரனுக்கு இராணுவரீதியிலும் மாற்று வழிகள் இல்லை என்றாகிவிட்டது. அரசியலிலும் வேறு தெரிவுகள் இல்லை. சர்வதேசப் பரபரப்பு இருந்ததே தவிர நிலைமைகளில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. எனவே சிறிலங்கா அரசு இந்தச் சந்தர்ப்பத்தைத் தனக்கு இன்னும் சாதகமாகப் பயன்படுத்தத் தொடங்கியது. அந்தப் பகுதிக்கு உணவு, மருந்துடன் கப்பலை அனுப்பிக் கொண்டு, அதே சமயத்தில் பீரங்கிக் குண்டுகளையும் அங்கே ஏவியது.


மிஞ்சிய புலிகளின் கதையும் கதியும் இங்கே தான் வரலாற்றில் தீவிரக் கவனத்தைப் பெறும்வகையில் அமைந்திருந்தது. பிரபாகரன், அவருடைய குடும்பம், பொட்டம்மான், கடற்புலிகளின் தளபதி சூசை, கேனல் பானு, கேனல் ஜெயம், கேனல் ரமேஷ், பா. நடேசன், புலித்தேவன் உள்ளிட்ட புலிகளின் முக்கியஸ்தர்கள் இங்கேதான் இருந்தனர். இப்போது பிரபாகரன் தான் அதிகம் நம்பிய துப்பாக்கியால் எதையும் செய்ய முடியாது என்பதை முழுதாக உணர்ந்திருந்தார். ஆனால் எதற்கு மாற்றீடாக எதையும் செய்ய முடியாது என்றும் அவருக்குத் தெரிந்தது. எல்லாவற்றுக்கும் காலம் கடந்த நிலை என்ற யதார்த்தம் முன்னின்றது.


இறுதி மூச்சை எப்படித் தக்கவைத்துக் கொள்வது என்று பிரபாகரனும் அந்த மூச்சை எப்படிப் பறிப்பது என்று அரசாங்கமும் இறுதிநிலையில் இருந்தன. மெல்ல மெல்லப் படைத்தரப்பு முன்னேறியது. மனித உரிமை மீறல்களைப் பற்றிய எந்தக் கவலையுமில்லாத அரசாங்கம் போரை ஈவிரக்கமில்லாமல் நடத்தியது. சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளின் கோரிக்கைகள், கண்டனங்களையெல்லாம் சிறிலங்கா அரசாங்கம் தூக்கித்தூர வீசிவிட்டது. ஏற்கனவே நவநீதம் பிள்ளையின் அறிக்கைகளும் இவ்வாறு தூக்கியெறியப்பட்டிருந்தன. வெற்றியை முழுதாகப் பறிக்கும் வெறியில் சரத்பொன்சேகாவும் மகிந்த ராஜபக்சேவும் இருந்தனர்.


அரசாங்கத்தின் திட்டப்படி மே 20ஆம் திகதி யுத்தம் முடிவுக்கு வந்தது.


பெரும் புகழோடும் தீராத கண்டனங்களோடும் எதிர்ப்பும் ஆதரவும் கலந்த வினோதமான கலவையாகவும் இருந்த பிரபாகரன் கொல்லப்பட்டார் என்ற செய்தியை சிறிலங்கா அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பை நம்புவதா விடுவதா என்ற தடுமாற்றத்தில் பல தரப்பினரும் இருந்தனர். அதற்கான காரணங்களும் உண்டு. பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்று முன்னரும் இந்திய அரசும், சிறிலங்கா அரசும் பல தடவைகள் செய்தி வெளியிட்டிருந்தன. ஆனால் அந்தச் செய்திகளுக்குப் பின்னரும் பிரபாகரன் உயிருடனேயிருந்தார். அடுத்துப் பிரபாகரனோ அவருடைய குடும்பமோ என்றைக்கும் மக்களுடன் வாழ்ந்ததும் இல்லை, வெளியரங்கில் நடமாடியதும் இல்லை. அவருடைய நடமாட்டம், நடவடிக்கைகள் குறித்துப் புலிகள் அமைப்பின் மூத்த தலைவர்கள், தளபதிகளுக்கே எதுவும் தெரியாது. எனவே அவருடைய பாதுகாப்பு அணியினரையும் பொட்டம்மான், சூசை ஆகியோரையும் தவிர வேறு எவருக்கும் எதுவும் தெரிந்திருக்கும் வாய்ப்பில்லை. பிரபாகரனின் பாதுகாப்புக்குப் பொறுப்பாக இருந்தவர் இரட்ணம் மாஸ்டர் எனப்படுபவர். இவரும் முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் கொல்லப்பட்டுவிட்டார் என்று சிறிலங்கா அரசு தெரிவித்திருந்தது.


மிஞ்சிய புலிகள் (நடேசன், புலித்தேவன் உள்ளிட்ட அணியினர் ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்டனர்) சனங்களோடு சனங்களாக இரட்டை வாய்க்காலிலும் வட்டுவாகலிலும் சரணடைந்தனர். சனங்கள், தாங்கள் உயிருடன் மீள்வோம் என்ற நம்பிக்கையே இல்லாமல், அதிர்ச்சியடைந்த முகத்தோடு - சவக்களை என்று சொல்வார்களே - இராணுவத்திடம் சரணடைந்தனர். 38 ஆண்டுகளாக நடந்த புலிகளின் போராட்டம் சரணடைவு நிகழ்ச்சியுடன் முடிவுக்கு வந்தது.


இப்போதுள்ள சில கேள்விகள் பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா இல்லையா? புலிகளின் எழுச்சி மீண்டும் நிகழுமா நிகழாதா? கொல்லப்பட்டு விட்டார் என்றால் தானே இறந்தாரா அல்லது படைத்தரப்பினால் கொல்லப்பட்டாரா என்பது. தானாக மரணித்தார் என்றால் எப்படி? படையினரால் கொல்லப்பட்டார் என்றால் அடித்துக்கொல்லப்பட்டாரா அல்லது சுட்டுக் கொல்லப்பட்டாரா? என்பது ஏனெனில் பிரபாகரனின் தலையில் அடிகாயமே காணப்படுகிறது என்று பலரும் கேட்கிறார்கள்.
உண்மையில் இந்தக் கேள்விகளையும்விட முக்கியமானவையும் தேவையான கேள்விகளும், பிரபாகரனால் தன்னைக் காப்பாற்ற முடியாமல் போனது எப்படி? அவரால் மக்களைக் காப்பாற்ற முடியாமல் போனது எவ்வாறு? அவருடைய போராட்டத்தை அவரால் இறுதியில் இந்த நிலைக்குக் கொண்டுபோக வேண்டி வந்த காரணம் என்ன? இதுபோல ஏராளம் உண்டு. இவற்றுக்கான பதில்கள் பிரபாகரனின் கடந்தகால செயற்பாடுகளிலும் அவருடைய மனவுலகத்திலுமே இருந்தன. இருக்கின்றன.


மக்கள் சட்டியில் இருந்து அடுப்புக்குள்ளே இடம் மாற்றப் பட்டிருக்கிறார்கள். அவ்வளவுதான். எல்லாவற்றையும் தானே எடுத்து தானே போட்டுடைத்த மனிதராக வரலாற்றில் மாறிவிட்டார் அவர்.


பிரபாகரனே சொல்வதைப் போல “வென்றால் சரித்திரம் தோற்றால் சம்பவம்” என்ற மாதிரியே இந்த நிகழ்ச்சிகளும் அமைந்துவிட்டன.

Thanks : Kalachchuvadu

Tuesday, October 29, 2013

சூது கவ்வும் : வரமா சாபமா?









டந்த மே மாதம் சூது கவ்வும் என்ற ஒரு திரைப்படம் வெளியாகியது. பெரிய நட்சத்திர அந்தஸ்துள்ள நடிகர்களோ தொழினுட்பக் கலைஞர்களோ இல்லாமல் குறைந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட அப்படம் வெளியான தினத்திலிருந்து இன்று அதை எழுதிக்கொண்டிருக்கும் நாள் வரையில் ரசிகர்களை வெகுவான ஆதரவைப் பெற்று இன்னும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது அத்திரைப்படம்.

கதையில் புதுமை என்று ஒன்றும் பெரிதாக இல்லை. ஆட் கடத்தல் முயற்சிகளும் அவற்றிலே நிகழும் எதிர்பாராத திருப்பங்களால் ஏற்படும் குழப்பங்களும்தான். பாத்திரங்கள் ஸீரியஸாக இயங்க, பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள் நகைச்சுவையாக உணரும் படம். முன்பு 2005 அளவில் கமல் இதே போன்று 'மும்பை எக்ஸ்பிரஸ்' எடுத்திருந்தார். அதுவரையிலே படு வில்லனாகப் பெயர் வாங்கியிருந்த பசுபதியை பார்த்து ரசிகர்கள் வயிறுகுலுங்கச் சிரிக்க வைத்திருந்தார் கமல். இத்தனைக்கும் பசுபதி அதிலும் கூட கடத்தி வந்த சிறுவனைக் கொன்றுவிட நினைக்கும் வில்லத்தனமான கிரிமினல்தான். ரசிகர்கள் சிரிக்கக் காரணம் படத்தின் திரைக்கதையும் அது சொல்லப்பட்ட விதமும்.

அதுபோலத்தான் சூது கவ்வும் படத்திலும் ஆட்கடத்தல் புரியும் கும்பலின் ரகளையை புதுமையானதும் வித்தியாசமானதுமான விதத்தில் நகைச்சுவையாக தந்திருக்கின்றார்கள். வெறும் பொழுதுபோக்கு என்றவகையில் ரசித்து விட்டுப் போகலாம் என்றால் விடயம் அத்தோடு மட்டுமில்லை. இவ்வாறான படங்களின் தொனி இன்றைய இளைய தலைமுறையினரின் போக்கை பிரதிபலிப்பதாகவும் இருக்கின்றது. அதாவது சத்தியத்தையும் நேர்மையையும் போற்றுவதை விட்டு அவற்றை நகைச்சுவையாக்கி கேலி செய்து மலினப்படுத்துகின்ற கைங்கரியத்தையும் செய்கின்றது.

இதன் கீழே இத்திரைப்படத்திற்கு வினவு,  காலச்சுவடு ஆகிய இணையத்தளங்கள் வெளியிட்டிருக்கும் விமர்சனத்தைப் படித்தால் மேலே கூறியதன் தாக்கம் நன்கு புரியும்.
 
- Jesslya Jessly
 
 
 
 
 
 

தையை விட கதை கூறும் முறையை அடிநாதமாகக் கொண்டிருக்கும் சூது கவ்வும் திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்படுவது ஆச்சரியமல்ல. அதே நேரம் ஆரோக்கியமும் அல்ல.


விஜய் சேதுபதியின் தலைமையில் மூன்று வேலையிழந்த இளைஞர்கள் சேர்ந்து சின்ன சின்ன ஆள் கடத்தல் செய்து இறுதியில் அமைச்சர் மகனை கடத்துகிறார்கள். அமைச்சர் சிபாரிசில் வரும் என்கவுண்டர் போலீஸ் இன்ஸ்பெக்டரை சமாளித்து வாழ்க்கையில் செட்டிலாவதை ‘நகைச்சுவை’ கலந்த விறுவிறுப்புடன் காட்டும் படம், காய்ந்திருக்கும் ரசிகர்களை குளிர வைக்கிறது. ஆனால் இந்த செயற்கை குளிரூட்டல் உடலுக்கு நல்லதா?


இந்தப் படத்தில் கவர்ச்சி இருப்பதாக கூறினால் அண்ணன் உண்மைத்தமிழனே சண்டைக்கு வந்துவிடுவார். அந்த அளவுக்கு நேற்றிருந்த ‘கவர்ச்சி’ குறித்த பார்வை இன்று மாறியிருக்கிறது. கொஞ்சம் லூசு போலத் தோற்றமளிக்கும் சேதுபதி கடவுளிடம் பேசும் இறைத்தூதர்கள் போல, இல்லாத காதலியுடன் எந்நேரமும் பேசுகிறார். அன்றைய கூத்தில், கதை மீதான எடுப்பு தொடுப்பு விமரிசனங்களை கட்டியங்காரன் செய்வதை இங்கு காதலி செய்கிறார். ரசிகர்கள் ஆடியோவில் சேதுபதியையும் விஷுவலில் காதலியையும் பின் தொடர்கிறார்கள். கட்டியங்காரன் ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பில் கதையில் குறுக்கிடுகிறான் என்றால் இங்கு சஞ்சிதா ஷெட்டி எனும் கவர்ச்சி நடிகை ஆண் ரசிகர்களை வயப்படுத்துவதற்கு குறுக்கிடுகிறார்.
அரை லூசு தமிழ் மற்றும் அமெச்சூர் கிரிமினலுக்கு மும்பை மாடல் நடிகை காம்பினேஷனே தாங்க முடியவில்லை எனும் போது ஷெட்டி “மாமா” என்று விளிக்கும் போது சகிக்க முடியவில்லை. காதலியின் பின்பாட்டு வசனங்களை பார்க்கும் ரசிகர்கள் அத்தோடு நின்றுவிடக்கூடாது என்று எப்போதும் அரை நிக்கர் அல்லது அதற்கும் கம்மியான உடையுடன் காதலியை நடமாட விட்டிருக்கிறார் இயக்குநர். ரசிகர்களின் ஆசையை ஏமாற்ற விரும்பாத காதலியும் தீடீரென்று நீச்சல் உடையுடன் தோன்றுகிறார். கவர்ச்சியையே வித்தியாசமாக காட்டியிருக்கிறார் அல்லவா என்று வெரைட்டி பிராண்ட் ரசிகர்கள் வாதாடக்கூடும். பழைய சோறு எனும் அற்புதத்திற்கு பிசா ஊறுகாய்தான் தொட்டுக் கொள்வேன் என்று வெரைட்டியான காம்பினேஷன்களுக்கு அடம் பிடிப்பவர்களை என்ன செய்ய முடியும்?


படத்தில் லஞ்சம் வாங்காமல் நேர்மையாக வாழும் அமைச்சராக எம்.எஸ். பாஸ்கர் வருகிறார். கட்சிக்காக ஒரு வருடம் 300 கோடி ரூபாய் வசூல் செய்ய ஆணையிடும் தலைவரின் விருப்பத்திற்கு இணைங்க, ஆடம்பர வாழ்க்கையை விரும்பும் மகன் அப்பாவை டம்மி பீசாக்கிவிட்டு அமைச்சராகிறான். சூரியனை கிழக்கே காண்பித்து விட்டு நிழலை ஒரே நேரத்தில் நான்கு திசைகளிலும் காண்பிப்பதாக லாஜிக் மீறலை கண்டுபிடிக்கும் விற்பன்னர்களுக்கு இந்த அமைச்சர் பாத்திரமே ஒரு அபாண்டம் என்று தோன்றவில்லை. கட்சிப் பணம் 2 கோடியை சுருட்ட நினைக்கும் மகனை எதிர்த்து போராடும் அப்பா அமைச்சர் 300 கோடியை வசூலிக்கச் சொல்லும் முதலமைச்சரை எதிர்த்து ஒன்றும் பேசவில்லை என்றாலும் அத்தகைய சுருட்டல் கட்சியில் சேர்ந்து எப்படி குப்பை கொட்டுகிறார்?


அதனால்தான் அப்பா பாத்திரத்தை லூசில் விடும் இரசிகர்கள் பிறகு மகன் அமைச்சராகி தேர்தல் பிரச்சாரம், வசூல் என்று பட்டையைக் கிளப்பும் போது மனம் ஒன்றி கைதட்டுகிறார்கள். நேர்மை யதார்த்தமில்லை, ஊழல் யதார்த்தமானது என்பதால் இங்கே இயக்குநரும் இரசிகர்களும் ஒன்றுகிறார்கள். நீதியும் நேர்மையும் விலகிச் செல்கின்றது.


இவையெல்லாம் காமடிக்குத்தானே சொல்லப்பட்டிருக்கின்றன என்று சிலர் கேட்கலாம். அவர்களுக்கு செண்டிமெண்டாக ஒரு கேள்வி. உங்கள் அம்மா வாழைப்பழத் தோலில் வழுக்கி விழுந்ததை தத்ரூபமாக நடித்து காண்பித்து காமடியாக பக்கத்து வீட்டு மாமியிடம் சொல்லி, சிரிப்பீர்களா? இதற்கு சற்றும் குறையாத பாத்திரம்தான் படத்தில் வரும் சைக்கோ இன்ஸ்பெக்டர் என்கவுண்டர் பிரம்மா.


தமிழக போலீஸ் போலி மோதலில் சுட்டுக்கொல்லும் சம்பவங்கள் மாதந்தோறும் நடக்கின்றன. இது அரசு எந்திரம் சட்டம், நீதிமன்றங்களை சட்டபூர்வமாக ஏமாற்றிவிட்டு பாசிசமாகி வருகிறது என்பதற்குச் சான்று. கிரிமினல்களோடு பங்காளிச் சண்டை வலுத்த போதும், சில குற்றங்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பதாக மக்களுக்கு காட்டிக் கொள்வதற்காகவும் நடக்கும் என்கவுண்டர் இங்கே பாதிப்படம் முழுக்க சிரிப்பதற்காக இழுத்து வரப்படுகிறது.


வாய் பேசாமல் துப்பாக்கியுடன் மட்டும் கொடூரமாக பேசும் பிரம்மாவைக் கண்டு இரசிகர்கள் ஆரவாரத்துடன் சிரிக்கிறார்கள். இறுதிக் காட்சியில் ஓட்டைத் திருட்டுத் துப்பாக்கியை பின்புறம் சொருகும் போது தவறுதலாக அவர் சுட்டுக் கொள்கிறார். சேதுபதி கும்பல் என்கவுண்டரிலிருந்து தப்பிக்கிறது. ஒரு வேளை என்கவுண்டர் போலிஸை இப்படி ஒரு காமரா காமடி கவித்துவ நீதியில் காட்டியிருக்கிறார்கள் என்று பின் நவீனத்துவவாதிகள் நியாயப்படுத்தலாம். ஆனால் படம் பார்க்கும் இரசிகர்கள் ஏற்கனவே போலிஸ் என்கவுண்டரை ஆதரிக்கும் பாசிச மனோபாவத்தின் செல்வாக்கு கொண்ட நடுத்தர வர்க்கத்தினர் என்பதால் இந்த கிச்சு கிச்சு அவர்களிடம் இருக்கும் கொஞ்ச நஞ்சம் குற்ற உணர்வையும் கொன்று விடுகிறது.


ஐ.டி துறையில் பிளாக் லிஸ்டில் சேர்க்கப்படும் இளைஞன் பின்னர் வேலை கிடைக்காமல் சேதுபதியிடம் சேருகிறான். இதற்கு காரணம் அவனை ஒரு தலையாக காதலிக்கும் ஒரு ஐ.டி பெண் நிர்வாகத்திடம் தவறாக போட்டுக் கொடுத்து வேலையை விட்டு நீக்க வைக்கிறாள். இது பெண்களை இழிவு படுத்தும் மலிவான ஆணாதிக்கம் என்பது போக சுயமரியாதை, பணிப் பாதுகாப்பு, தொழிற்சங்கம், இன்னபிற உரிமைகள் இல்லாத ஐ.டி துறை முதலாளிகளது ஆதிக்கத்தை மறைத்து விட்டு அங்கே ஒரு பெண்ணை வில்லனாக காட்டுகிறார் இயக்குநர். ஆண்டான் ஓரத்தில் மமதையுடன் ஒயின் பருக நடுவில் அடிமைகள் தமக்குள் அடித்துக் கொள்கிறார்கள். ரசிகர்கள் சிரிக்கிறார்கள்.


நயன்தாராவுக்கு கோவில் கட்டியவனும் சரி, ஜாகுவார் காரை ஓட்டி வேலையிழந்தவனும் சரி, இருவரும் நாள் முழுவதும் குடிப்பதும் சரி, எல்லாம் நகைச்சுவைக்காக சாகாவரம் பெறுகின்றன. இவற்றின் உட்கிடையான நுகர்வு கலாச்சாரம், சினிமா மோகம், ஆடம்பர வாழ்வு நாட்டம், பிறர் காசில் வாழும் ஒட்டுண்ணித்தனம், பொறுப்பற்ற தனம், விட்டேத்தித்தனம் அனைத்தும் நகைச்சுவையோடு என்றாலும் கடிந்துரைக்கப்பட வேண்டும். ஏனெனினல் சமூகத்தில் ஹாயாக உட்கார்ந்து டிவியோ, சினிமாவோ பார்க்கக்கூட நேரமற்று உழைத்தும் அதற்காக குடித்தும் தன்னை அழித்தும் வாழும் பாமரர்களை பார்த்து யாருக்கும் சிரிக்கத் தோன்றுமா? முடியுமெனில் அவர்கள் குடிக்காமலேயே தங்களை அழிக்கும் கருத்துக்களை ஏற்படுத்திக் கொள்கிறார்கள் என்றுதான் சொல்ல முடியும். இங்கே இயக்குநர் அதையே செய்கிறார்.


திருட்டையும் நகைச்சுவையையும் சேர்த்து புனையப்படும் ஒரு காட்சி ஒரு படத்தில், ஓரமாக வரும் வடிவேலு காமடியாக இருந்தால் பிரச்சினை இல்லை. அதுவே முழுநேரக் கதையாக இருந்தால்? மிகுந்த பொறுப்புணர்வோடு கையாளப்படவேண்டியதை இங்கே இப்படத்தின் படைப்பாளிகள் மிகுந்த அலட்சியத்தோடு கையாண்டிருக்கிறார்கள்.


யாருக்கும் ஆபத்தில்லாத வகையில், ஆயுதம் இல்லாமல், துன்புறுத்தல் இல்லாமல் ஆட்களைக் கடத்தி சம்பாதிக்கலாம் என்று சேதுபதி மற்ற மூவருக்கும் எடுக்கும் வகுப்பே யதார்த்தத்தின் நினைவுகளோடு எரிச்சலூட்டுகிறது. இந்தப் படத்தைப் பார்த்து செலவுக்கு வழியில்லாக கல்லூரி இளைஞர்கள் காமடியாக ஆள்கடத்திலில் ஈடுபட்டு பின்னர் உண்மையான குற்றவாளிகளாக காலந்தள்ள நிறையவே வாய்ப்பிருக்கின்றது.
ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்படும் இளைஞர்கள்தான் முதலில் அமெச்சூர் திருடர்களாக ஆரம்பிக்கிறார்கள். பின்னர் ஈவு இரக்கமற்ற பக்கா கிரிமினல்களாக மாறுகிறார்கள். சமயத்தில் கொலையும் செய்கிறார்கள். சென்னையிலேயே மேட்டுக்குடி வாழ்க்கையை அனுபவிக்க வேண்டி முதல் முறையாக ஆள்கடத்தல் செய்த பல மாணவர்கள், இளைஞர்கள் கொலையே செய்திருக்கிறார்கள். அது குறித்து வினவிலும் நிறைய கட்டுரைகள் வந்திருக்கின்றன.


இத்தகைய சமூக விகாரங்களின் மத்தியில் காமடித் திருடர்கள் என்பது எச்சரிக்கையுடன் கையாள வேண்டிய விசயம் என்று இயக்குநருக்குத் தெரியவில்லை. அவர் தெரிந்து கொள்ள விரும்பினால் நூறாண்டுகளுக்கு முந்தைய சார்லி சாப்ளினது படங்களை “பார்க்க” வேண்டும்.
இந்தப் படத்தில் வரும் சுய எள்ளல்கள் வெறுமனே சலிப்பூட்டும் சந்தானம் பாணியிலிருந்து கொஞ்சம் மேம்பட்ட வார்த்தை அலங்கார நகைச்சுவையாக மட்டும் இருக்கின்றன. உண்மையில் ஒரு சுய எள்ளல் என்பது ஒருவர் தன்னைக் குறித்த சுயவிமரிசனத்தின் நேர்மையில் நடக்கும் நகைச்சுவையாகும். அதனால் இங்கே நகைச்சுவை என்பது குற்றத்திற்கான தண்டனையை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தோடு வருகிறது. படத்தில் அத்தகைய சுயமோ இல்லை சுய விமரிசனமோ இல்லை என்பதோடு இருக்குமளவு அந்தப் பாத்திரங்களும் மண்ணில் நடமாடவில்லை.
ஒரு திரில்லர் வகைப்படங்களின் ஆன்மாவை கூரிய சமூக பார்வையோடு புரிந்து கொண்டவர்கள் இயக்கினால் அது பல்வேறு கணக்குகளோடு சேர்ந்தும், பிரிந்தும், மறுத்தும், தொடுத்தும், தவிர்த்தும் இயங்கிக் கொண்டிருக்கும் சமூகப் பெருவெளியின் மர்மத்தை வியப்பூட்டும வகையில் இழுத்துக் கொண்டு வரும்.



ஸீக்ஃப்ரீட் லென்ஸ் எழுதிய “நிரபராதிகளின் காலம்” அத்தகையது. நாசிச ஜெர்மனியின் மக்கள் ஹிட்லரை கருத்து ரீதியாக ஆதரிக்கும் போக்கில் அனைத்தையும் இழந்து நிற்கிறார்கள். அதை ஒரு கற்பனைக் கதை மூலம் நிஜத்தின் விசாரணையோடு தம்மைத்தாமே மக்களை கேள்வி கேட்க வைக்கிறார் ஸீக்ஃப்ரீட். இதன் தமிழ் மொழிபெயர்ப்பை பல ஆண்டுகளுக்கு முன்னர் படித்திருந்தாலும் இந்த இலக்கியம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. யார் கொலை செய்தார்கள் என்ற கேள்வியுடன் அதை கண்டு பிடித்தோ இல்லாமலோ போவதற்கு எதை இழந்தோம் என்று பாத்திரங்களின் விசாரணையில் விறுவிறுப்புடன் செல்கிறது இந்த நாடகம். ஒரு நேர்த்தியான த்ரில்லர் என்ற வகையிலும் பரந்து விரிந்த மனித குலப் போராட்டத்தின் உந்து விசையை குறிபார்த்தும் எழுதப்பட்ட இத்தகைய இலக்கியங்களை நமது நாளைய இயக்குநர்கள் படித்தார்களா தெரியவில்லை. படித்திருந்தாலும் அதில் அவர்களை எது ஈர்த்திருக்கும் என்று யூகம் செய்தால் விரக்தியே மிஞ்சுகிறது.


ஏதோ ஒரு கதையை எடுத்துக் கொண்டு எள்ளலான வசனங்கள், எதிர்பாராத திருப்பங்கள், முடிச்சுக்கள், வித்தியாசமான பாத்திரச் சித்தரிப்புகள், காட்சிக்கொரு மர்மம் என்பன போன்ற சமாச்சாரங்கள்தான் ஒரு சினிமாவிற்கு போதுமானது என்று இந்த இயக்குநரும் இவரைப் போன்றவர்களும் இத்தகைய படங்களை ரசிப்பவர்களும் நினைக்கிறார்கள். ஆனால் வாழ்க்கைப் பெருவெளியில் மையம் கொள்ளாத இந்த அலங்காரங்கள் தோன்றும் போது வேண்டுமானால் கவரலாம். விரைவிலேயே இவையும் சலித்துப் போய்விடும். கதையை விட கதையை கூறும் முறை நேர்த்தியாக பின்னப்படுவதால் கிச்சு கிச்சு வேண்டுமானால் மூட்டலாமே தவிர சிந்திக்க வைக்க முடியாது. சிந்தனையில் தங்காத படைப்புகளால் ஒரு சமூகத்தை கிஞ்சித்தும் பண்படுத்த முடியாது.


எல்லாக் கதைகளும் சரியாகவோ தவறாகவோ சமூகக் களத்தை பிரதிபலிப்பதிலிருந்தே உதிக்கின்றன. காமடிக்கும் கவர்ச்சிக்கும் பாத்திரச் சித்தரிப்புக்கும் வேகத்திற்கும் எளிய முரண் உரையாடல்களுக்கும் அளவு கடந்து மெனக்கெட்டிருக்கும் இயக்குநர் அவை இயங்கிக் கொண்டிருக்கும் சமூகப்பாத்திரத்தை கிஞ்சித்தும் சட்டை செய்யவில்லை. இன்னொரு விதத்தில் சொன்னால் இது நமது நாளைய இயக்குநர்கள் அறியாதது, அறிய வேண்டியது.


Thanks : Vinavu



 




மிழ்த் திரைப்படங்கள்மீது நம்பிக்கை முற்றிலும் தூர்ந்து போகும்போது ஏதோவொரு படம் வெளியாகி நம்பிக்கையூட்டும். அந்த நிழலில் சில காலம் இளைப்பாற முடியும். சுப்ரமணியபுரம், ஆடுகளம் என்னும் அந்த வரிசையில் சூது கவ்வும் திரைப்படத்தை இருத்த முடிகிறது. நயன்தாராவுக்குக் கோயில் கட்டிய பகலவன், ஜாக்குவார் காரை ஓட்டிப்பார்க்கும் விருப்பத்தால் வேலையைப் பறிகொடுத்த சேகர், பெண்ணின் நயவஞ்சகத்திற்குப் பலியாகி வேலையிழந்த கேசவன், இல்லாத காதலியை இருப்பதாகப் பாவித்து இன்புறும் ஆள்கடத்தல்காரனான தாஸ் ஆகிய நால்வரும் சந்தித்துக்கொள்வதும் பின்னர் நிகழும் சுவாரசியமான சம்பவங்களும் தாம் சூது கவ்வும்.


நன்கு வாய்விட்டுச் சிரிக்கச்செய்யும் பல காட்சிகளைக் கொண்ட இத்திரைப்படத்தை வெறுமனே நகைச்சுவைப் படம் என்னும் கூண்டுக்குள் அடைக்க மனம் ஒப்பவில்லை. வன்முறைச் சம்பவங்களற்ற, பாலியல் சித்தரிப்புகளற்ற, ‘விளிம்புநிலை மனிதர்கள்’ இல்லாத புதிய முயற்சி இப்படம். சமகாலச் சமூக அபத்தங்களின் மீது கொண்ட கோபத்தை வெளிப்படுத்தும் விதத்தில் மற்ற படங்களில் இருந்து இது வித்தியாசப்படுகிறது. இந்தப் படத்தின் மைய உத்தி மும்பை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் கமல்ஹாசன் கையாண்டதுதான் என்றாலும் எக்ஸ்பிரஸைச் சூது கவ்வும் அநாயாசமாக முந்துகிறது. இயக்குநரை மீறிக் கமலிடம் துறுத்திக்கொண்டிருந்த அறிவுஜீவித்தனம் படத்தைப் புத்திசாலித்தனமாக்காமல் பார்த்துக்கொண்டது. ஆனால் இயக்குநர் நலன் குமரசாமியிடம் வெளிப்பட்டுள்ள குருட்டுத்தனமான முட்டாள்தனமும் முரட்டுத்தனமான புத்திசாலித்தனமும் இதை ஒரு மாறுபட்ட படமாக்குகிறது.


பெரு நகரில் வாழும் சராசரி இளைஞர்களின் உலகம் அப்படியே பதிவாகியுள்ளது. தாகமெடுக்கும்போதெல்லாம் பீர் குடிக்கும் இளைஞர்கள் ஆக்ஸிஜனைவிட அதிகமாக நிகோடினைச் சுவாசிக்கின்றனர். இவர்களுக்கு அறச் சிக்கல்கள் எழுவதேயில்லை. அந்தந்தக் கணத்தில் வாழ்ந்து வருகிறார்கள். வேலை குறித்து படத்தில் வெளிப்படும் தியரியைச் சதாசர்வகாலமும் மரபில் மூழ்கிக் கிடக்கும் பொதுமனம் புரிந்துகொள்வது துர்லபம். பொதுச்சமூகம் உயர்வாகக் கருதும் பல விஷயங்கள் இப்படத்தில் எள்ளலுக்கு ஆளாகியுள்ளன. நடிகர்கள் மட்டுமன்றி நடந்தது என்னன்னா அருமைப்பிரகாசம், துரும்பிலும் இருப்பவரில் வரும் நேர்மைக் குசும்பு என நலனின் குறும் படங்களில் இடம்பெற்ற சில விஷயங்கள் சூது கவ்வும் படத்தில் தலைகாட்டுகின்றன. சினிமா கிறுக்கைச் சித்தரித்த ஒரு படம் எடுக்கணும், சொதப்பலான படமெடுப்பைக் கூறும் உண்மையைச் சொன்னா, நெஞ்சுக்கு நிதி, என்கவுண்டர் பற்றிய தோட்டா விலை என்ன, ஒரு வீட்டில் பேய் இருந்துச்சாம் போன்ற பல குறும்படங்களில் தனித்தனியே கிடந்த பல உத்திகளை இயக்குநர் நலன் இப்படத்தில் ஒன்று சேர்த்துள்ளார். நேர்த்தியான திரைக்கதை ரசிகர்களை எந்தவகையிலும் குழப்பக் கூடாது என்பதற்கு உதாரணம் இப்படம். திரைக்கதையில் சீரான தொடர்பு உள்ளது. படத்தின் பிற்பகுதியில் வரும் கோடம்பாக்கம் தாதாவுக்கு முற்பகுதி யிலேயே குறிப்பு உண்டு. படத்தில் மிக இக்கட்டான சமயத்தில் விரைவாகக் காரைக் கடத்தும் போதும் அதை எங்கே விட்டுச்செல்வோம் என்பதை உரிமையாளரிடம் தெரிவித்துவிட்டே செல்கிறார்கள் தாஸ் அண்ட் கோ.


பல காட்சிகளில் தீவிரமான விஷயங்களை இயல்பாகத் தெரிவித்துவிட்டுக் காட்சி நகர்ந்துவிடுகிறது. அருமைப் பிரகாசம் அம்மா தந்த பணம் ஹெலிகாப்டரில் இருந்து கீழே விழும்போது அதைப் பிடிப்பதற்காக ஓர் எளியவரின் வேட்டியைப் பணம் கொடுத்துப் பெறும் காட்சி ஒட்டுமொத்தச் சமூகத்தின் இழிநிலையையும் மவுனமாகக் கேள்விக்குள்ளாக்குகிறது. பிரத்யேகக் கவனத்தை ஈர்க்கும் வகையில் படமாக்கப்படாத அந்தக் காட்சியை அலட்சியமான பார்வையாளன் எளிதில் தவறவிட்டுவிடுவான். ஆனால் அது ஆழமான சமூக விமர்சனம். இதைப் போன்ற சிறிய விஷயங்களில் வெளிப்பட்டிருக்கும் புரிதல்கள் படத்தின்மீது மரியாதைகொள்ளச் செய்கிறது. தாங்கள் கடத்த திட்டமிட்ட அருமைப்பிரகாசத்தை மற்றொரு குழுவினர் காரில் கடத்திச் செல்லும் காட்சியில், ‘அவங்க பின்னாடியே வர்றாங்க’ எனக் கூறப்படும்போது தாஸ், ‘நாம முன்னால போறோம்’ என்பார். ‘ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்’ எனக் கேட்கையில் ‘நிறைய வித்தியாசம்’ என்பார். அதே போல், தாஸ் நண்பர்களுடன் போலீஸ் வேனில் அமர்ந்திருக்கும் காட்சியில், “குற்றவாளிகளைத் தான் என்கவுண்டரில் போட முடியும் நிரபராதிகளை என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும்” என்பார். இத்தகையவை நகைச்சுவைப் படத்திற்கான வசனங்கள் அல்ல. வீரியமான சமூக விமர்சனத்தின் வெளிப்பாடு இவை.





அருமைப்பிரகாசத்தின் வாக்குமூலத்தைப் பதிவு செய்த பின்னர் அதைப் பிரதி எடுக்க ஆட்டோவில் செல்லும் காட்சியும் குறிப்பிடத்தக்க ஒன்று. தங்களது பிரச்சினைகளில் இருந்து தப்பித்துவிடலாம் என்ற மிதப்பின் கணத்தில் வீடியோ கேசட் தவறி விழுந்து சிதையும்போது பின்னணியில் ஒலிக்கும் டன்ட ணக்கா நாம் கொள்ளும் அபத்தமான நம்பிக்கைகளைக் கேலி செய்கிறது. நேர்மையான அமைச்சரின் இடத்தைக் கள்ளத் தனத்தைப் பிசிறு தட்டாமல் செயல்படுத்தும் அமைச்சரின் மகனே பறித்துக்கொள்ளும்போது அறம் குறித்த வரையறைகள் காலாவதியாகின்றன. அறம் குறித்த நிலைப்பாடு ஆளாளாளுக்கு வேறுபடுவதை மிகவும் நுட்பமாக இத்திரைப்படம் காட்சிப் படுத்தியுள்ளது. நேர்மை என்பது புகழுக்கான உத்தி என்பதை நாசூக்காக உணர்த் தும் இப்படம் ஊழலையும் நேர்மையையும் ஒரே தட்டில் வைக்கிறது. நலனின் ஒரு படம் எடுக்கணும் குறும்படத்தில் வரும் ஒரு வசனம்: “முடிந்தவரை இம்ப்ரூவ் பண்ணிட்டு பெர்பெக்ஷனை நோக்கி போயிட்டேயிருக்கணும்” என்பது. இந்தப் படத்தைப் பொறுத்தவரை நலனுக்கு அது முற்றிலும் பொருந்திப்போகிறது. இந்தப் படம் பல காட்சிகளில் லாஜிக்கை மீறியுள்ளது. லாஜிக்கை மீறாமல் எந்தத் திரைக்கதையையும் உருவாக்க முடியாது. எதற்காக, எதை உணர்த்துவதற்காக லாஜிக்கை மீறுகிறோம் என்பதுதான் முக்கியமானது. பாக்யராஜின் வெற்றிப்படமான அந்த 7 நாட்களில் மிகப் பெரிய லாஜிக் மீறல் இருக்கும். ஆனால் திரைக்கதையின் பலத்தின் முன்னே அது பலவீனமாகியிருக்கும். காதலனுடன் சேர்த்துவைப்பதாகத் தெரிவித்துத் தான் ராஜேஷ் அம்பிகாவை மரண வாசலில் இருந்து அழைத்துவருவார். ஆனால் இறுதிக்காட்சியில் அம்பிகாவை ராஜேஷ் காதலனுடன் அனுப்பிவைக்க மாட்டார். அங்கு லாஜிக்கை மீறிய திரைக்கதை தான் வெற்றிபெற்றது. சூது கவ்வும் திரைப்படத்தைப் பொறுத்தவரை லாஜிக் மீறல் குறித்து அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை. ஏனெனில் படத்தில் பெரும்பாலான வெளிப்படைக் காட்சிகள் உள்ளுறைக் காட்சிகளைக் கொண்டிருக்கின்றன. இப்படி ஓர் அமெச்சூர்தனமான ஆள்கடத்தல்காரனா என்று கேள்வி எழுந்தால், இதற்கே இப்படி ஆத்திரப்படுகிறீர்களே உங்கள் வாழ்க்கையில் எவ்வளவு அபத்தங்கள் என்னும் பதில் கேள்வி அங்கே தொக்கி நிற்கிறது. அத்தகைய கேள்விகளை உருவாக்குவதுதான் முக்கியம் எனும்போது லாஜிக்குகளை மீறுவது பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.


பெண்ணே இல்லாத திரைக் கதையில் வணிகத்திற்காகவும் சுவாரசியத்திற்காகவும் ஷாலு என்னும் கதாபாத்திரத்தைப் பயன்படுத்தியிருக்கும் விதம் புத்திசாலித்தனமான உத்தி. சின்னச் சின்ன குறும்பு நடிவடிக்கைகளால் பார்வையாளர்களை எளிதில் ஈர்த்துவிடுகிறார் ஷாலு. ஒரு கட்டத்தில் அதை ஓரங்கட்டிவிட்டு அப்படியே விட்டுவிடவுமில்லை இயக்குநர். இறுதியில் ஷாலு போன்ற ஒரு பெண்ணை தாஸ் கடத்துகிறார். அமைச்சரின் மகள் அவர். அத்துடன் படம் நிறைவுபெறுகிறது. ஆனால் பார்வையாளனிடம் படம் தொடர்கிறது. வழக்கமாகப் பணம் கொடுத்தால் தாஸ் ஆளை விட்டுவிடுவார். இப்போது அது நடக்குமா? ஏனெனில் தாஸின் ஷாலு அவள். ஒரு காலத்தில் தாஸுடன் ஷாலுவின் பிம்பம் இருந்தது. இப்போது அவரிடம் ஷாலுவே இருக்கிறார். ஆனால் பிம்பத்தில் தாஸைச் சந்தோஷப்படுத்திய ஷாலு நிஜத்தில் அவரைக் குஷிப்படுத்த முடியாது. ஏனெனில் அவருக்கு தாஸ் வெறும் கடத்தல்காரன். இந்தச் சிக்கல் தான் நமது வாழ்க்கை. இதை இப்படியும் உணர்த்தலாம் என்பதே மரபூறிய மண்டையில் உறைக்காது.






சினிமா, அரசியல், சோதிடம், செய்தி அலைவரிசை எனக் கிடைத்த எந்த இடத்தையும் இயக்குநர் விட்டுவைக்கவில்லை. சின்ன சின்ன இடங்களில் கூடத் தனது முத்திரை பதிக்கத் தவறவில்லை நலன். செய்தி அலைவரிசையின் அடிப்பகுதியில் வார்த்தைகளாக நகரும் ராஜ கம்பீரம் திடீர் மரணம், பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் தமிழில் படமெடுக்க ஆர்வம் போன்ற செய்திகளே அதற்கு எடுத்துக்காட்டுகள். நேர்மையாக இருப்பது தவறல்ல, ஆனால் அதற்கு ஓர் எல்லை உண்டு. ஒரு கட்டத்திற்கு மேல் அது உளவியல் சிக்கல் தான். ஞானோதயம் கதாபாத்திரம் லஞ்சம் வாங்க மறுப்பது சரி. ஆனால் மகனை மீட்க கட்சி தந்த நிதியைத் திரும்பக் கொண்டுபோய்க் கொடுப்பதைக் கட்சியாலேயே சகித்துக்கொள்ள முடியாது என்பதுதான் எதார்த்தம். நீதிமன்றக் காட்சி களில் வழக்கமாக வாய்மையே வெல்லும் எனக் காந்தி
படம் மாட்டப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் ஒரே ஒரு திருவள்ளுவர் படம் மட்டும்தான். அவர் உலகப் பொதுமறை எழுதியவர், திருக்குறளில் எல்லாச் சிக்கலுக்கும் தீர்வு உண்டு என்பதால் அது தீவிர எள்ளல்.


விறைப்புடன் வசனம் பேசிய டி. எஸ். பி. சௌத்ரி, அனல் பரப்பிய அலெக்ஸ் பாண்டியன், கழுத்து நரம்பு வெடிக்கப் பேசிய வால்டர் வெற்றிவேல் எனத் தமிழகத்து முன்னோடி போலீஸ் கதாபாத்திரங்கள் அனைத்திற்கும் பிரம்மா தந்தது ஊமை அடி. தாஸைப் பொறுத்தவரை ஆள்கடத்தல் என்பது ஆத்மார்த்தம் தரும் வேலை. ஆள்கடத்தலை எந்தக் குறுக்குப்புத்தியும் இல்லாமல் மிகவும் நேர்மையாகச் செயல்படுத்துகிறார் தாஸ். ஆனால் ஊழல் மிகுந்த அரசியல்வாதி சட்டத் திற்குட்பட்ட ஆட்சி நடத்துகிறார். இந்த முரணில் வெளிப்படும் புத்தி சாதுர்யம் திரைக்கதையை மெரு கேற்றியுள்ளது. படித்தவர்களின் திமிர், அறியாமை, பேராசை ஆகியவற்றைக் கேசவன் கதாபாத்திரம் மூலம் அம்பலப்படுத்துகிறார் இயக்குநர். அமைச்சர் மகன் அருமைப்பிரகாசத்தைக் கடத்தும் முடிவுக்கும், அது சொதப்புவதற்கும் மறைமுகக் காரணம் கேசவன் தான். திரைக்கதையில் கதாபாத்திரங்கள், வசனங்கள் ஆகியவை நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. நடிகர்கள் தங்களுக்கான கடமையைச் சரியாக நிறைவேற்றியுள்ளனர். விஜய் சேதுபதி தாஸ் கதாபாத்திரத்தை நூறு சதவிகிதம் உயிரோட்டமாக்கியுள்ளார். வங்கியில் மேலாளரிடம் பணம் பெற்றுக்கொண்டு பந்தாவாகத் திரும்பும் ஒரு காட்சி போதும், 'மாமா பின்ற மாமா' எனச் சொல்ல வைக்கிறார். நம்பிக்கையூட்டும் நடிகராக விஜய் சேதுபதி தென்படுகிறார்.


நம்பிக்கை கண்ணன் ஒரு காட்சியில் கூறுவார்: “நீங்க செய்யுறது தப்பு தான்; ஆனால் அதில் ஒரு நேர்மை இருக்கிறது. அமைச்சர் செய்தது சரிதான்; ஆனால் அதில் ஒரு துரோகம் உள்ளது” என்று. இந்த நகை முரணை அறக்கோட்பாடுகளால் எளிதில் விளக்க முடியுமா எனத் தெரியவில்லை. ஆனால் சூது கவ்வும் லாவகமாக விளக்குகிறது. அதுதான் இப்படத்தின் வெற்றி. திரையரங்கில் பார்வையாளர்களை ரசித்துச் சிரிக்கவைக்கும் பல வசனங்கள் கிரேஸி மோகன் கதாபாத்திரங்கள் தங்களுக்குள் நிகழ்த்தும் இயல்பான உரை யாடல் பார்வையாளனுக்கு உற்சாகத்தைத் தருகிறது. அலுவலகங்களுக்கு மட்டும்தான் ஞாயிறு விடுமுறையா? ஆள்கடத்தலுக்கும் விடுமுறைதான் என்பது தாஸுக்கு இயல்பானது. ஆனால் பார்வை யாளர்களுக்கு அது ரசனையான நகைச்சுவையாகிறது. இப்படத்தில் கதாபாத்திரங்கள் அனைத்தும் அவற்றின் அதிகாரம் களைந்த நிலையிலே பயன் படுத்தப்பட்டுள்ளன. அமைச்சர், காவல் துறை அதிகாரி போன்ற அனைவரும் மனிதர்களாக மட்டுமே வலம் வருகின்றனர்.
இசை, ஒளிப்பதிவு போன்றவை தேவைக்கேற்பப் பயன்பட்டுள்ளன. காசு, பணம், துட்டு, னீஸீமீஹ் பாடல் வண்ணமயமாக இருந்தாலும் படத்தில் வேகத்தடையே. தமிழ்த் திரையுலக மேதைகள் எல்லாம் வறட்டுத்தனமான படங்களைத் தொடர்ந்து உருவாக்கும் நேரத்தில் யாரோ ஓர் இளம் இயக்குநர் புத்துணர்ச்சியான படத்தைத் தரும் போது மனம் ஆசுவாசம் கொள்கிறது. முதல் படத்துடன் தனது முத்திரையை நிறுத்திக்கொள்ளாமல் இயக்குநர் நலன் தொடர்வது தமிழ்த் திரையுலகிற்கு நலம்பயக்கும்.

- Chellappa
 
 
Thanks : Kalachchuvadu