Monday, June 4, 2012

Shahid Afridi : வீணடிக்கப்படும் திறமை!










"திறமையானவர்களை வீணடிப்பதிலே  திறமை வாய்ந்தவர்கள் யார்?"

என்று ஒரு பந்தயம் நடாத்தினால் அதிலே ஆயுளுக்கும் முதல் பரிசைத் தட்டிச்செல்லுபவர்கள் பாகிஸ்தான் கிரிக்கட் தேர்வுக்குழுவாகத்தான் இருக்கும்.

இலங்கைக்கு சுற்றுலா வந்திருக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்குமிடையில் ஹம்பாந்தோட்டை மகிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானத்திலே இன்று நடந்து முடிந்திருக்கும் T20 தொடரைப் பார்க்கும்போது இவ்வாறான எண்ணம் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.

புதிய அணித்தலைவராக முகம்மட் ஹபீஸ் மற்றும் புதிய பயிற்றுவிப்பாளராக வட்மோர் ஆகியோருடன் வந்திருக்கும் பாகிஸ்தான் அணி முதலாவது T20 போட்டியிலே தோல்வியைத் தழுவியது.
பந்து வீச்சிலே போதிய திறமையைக் காண்பித்த போதிலும் குறைபாடுள்ள களத்தடுப்புகளாலும் மோசமான துடுப்பாட்டத்தினாலும் 133 என்ற ஓட்ட இலக்கை எட்ட முடியாது வெற்றி வாய்ப்பை இழந்தனர்.


ஆயினும் இரண்டாவது போட்டியிலே வெறும் 123 ஒட்டங்களை இலங்கை அணிக்கு இலக்கு நிர்ணயித்து 99 க்குள் சகலரையும் வீழ்த்தி வெற்றிபெற்று இரண்டு போட்டிகள் கொண்ட தொடரைச் சமநிலையிலே முடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் அணித்தலைவரும் நட்சத்திர சகலதுறை ஆட்டக்காரருமான சஹீட் அப்ரிடி தனது சகலதுறை ஆட்டத்தினை சிறப்பாக வெளிப்படுத்தி அணியின் கூட்டு முயற்சியுடன் வெற்றியைத் தேடிக் கொடுத்திருக்கின்றார்.

அத்துடன் இன்றைய தனது 50 வது போட்டியிலே ஆட்டமிழக்காது 52 ஓட்டங்களைப் பெற்றதோடு இரண்டு முக்கிய விக்கட்டுகளை வீழ்த்தி ஒரு பிடியெடுப்புடன் ஆட்டத்தின் போக்கையே மாற்றியதற்காக ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டுள்ளது.


இது அப்ரிடி  T20 போட்டிகளிலே பெற்றுக்கொண்ட 7 வது ஆட்டநாயகன் விருது என்பதுடன்  ஓர்  உலக சாதனை  யுமாகும்.

 (இதற்கு முன்பு சனத் ஜயசூரிய கெவின் பீட்டர்ஸன் ஆகியோர் தலா 6 தடவை)

கடந்த 2011 ஆண்டு உலகக்கிண்ணப்போட்டிகள் ஆரம்பிக்கும் வரை எத்தனையோ பல சர்ச்சைகளிலே சிக்கி நம்பிக்கையிழந்து கிடந்தது, பாகிஸ்தான் அணி.  சர்ச்சைகள் ஏற்படுத்திய மன அழுத்தங்கள் தீர்வதற்கிடையிலே உலகக்கிண்ணத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை. 
ஏனைய அணிகள் தமது அணித்தலைவரையும் அணியையும் முன்கூட்டியே அறிவித்து பயிற்சிகளில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தன.


ஆனால் பாகிஸ்தான் கிரிக்கட் நிர்வாகம் மட்டும்  அணியை  அறிவித்து விட்டு அணித்தலைவரை அறிவிக்காமல் கோமாளித்தனம் செய்து கொண்டிருந்தது. இறுதியில்,  கடைசிநேரத்திலே சஹீட் அப்ரிடியை அழைத்து அணித்தலைவர் பதவியை அதுவும் அரைமனதோடுதான் வழங்கினார்கள், பாகிஸ்தான் கிரிக்கட் நிர்வாக கோமாளிகள்.


அத்தனை முட்டாள்தனங்களையும் தனது நாட்டு அணிக்காகப் பொறுத்துக் கொண்டு,  தனது அபிப்பிராயங்களுக்கோ தெரிவுகளுக்கோ இடமளிக்காமல் முன்கூட்டியே தெரிவுசெய்து வழங்கப்பட்ட அணியை ஏற்றுக்கொண்டார் சஹீட் அப்ரிடி. 


உறுதியான நம்பிக்கையுடன் சக வீரர்களை உற்சாகப்படுத்தி (தன் பங்குக்கு 26 விக்கட்டுக்களையும் வீழ்த்தி) உலகக்கிண்ண அரையிறுதிப்போட்டிவரை பாகிஸ்தான் அணியை வெற்றிகரமாக முன்னின்று வழிநடாத்தியவர் சஹீட் அப்ரிடி.



இத்தனை அசாத்தியத் திறமை வாய்ந்த சஹீட் அப்ரிடி தற்போது கப்டன் பதவியில் இல்லை என்பதுதான் பாகிஸ்தான் அணியின் தொடரும் துரதிஷ்டம்.

சஹீட் அப்ரிடி போன்ற ஒரு திறமைவாய்ந்த துடிப்பான வீரர் பாகிஸ்தான் அணி தவிர்ந்த வேறு எந்த அணியில் இருந்தாலும் அவர்கள் நிச்சயமாக  இதைவிடவும் எத்தனையோ மடங்கு திறமையாக அவரைப் பயன்படுத்திக்கொண்டிருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.


பாகிஸ்தான் எப்பொழுதுமே திறமை வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்களுக்குப் பஞ்சமில்லாத ஓர் அணி. அவ்வாறே நெருக்கடியான வேளையிலே அதிரடியாகத் துடுப்பெடுத்தாடுவதிலே புகழ்பெற்ற பல சகலதுறை வீரர்களையும் கொண்டிருப்பதும் வழமை.


ஆனால் அவர்களின் துரதிஷ்டங்களிலே ஒன்று எப்பொழுதெல்லாம் ஒரு திறமையான வீரர் முன்னேறிக்கொண்டு வருகின்றாரோ அப்போதெல்லாம் அவர் ஏதாவது ஒரு சர்ச்சையிலே மாட்டிக்கொண்டு விடுவார். பின்பு அணியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு விடுவார். இதற்கு உதாரணங்களாக ஏராளமான முன்னாள் வீரர்களும் தற்போதைய வீரர்களும் உள்ளனர்.


அதுவுமில்லையென்றால் கிரிக்கட் உலகமே ஆச்சரியத்தால் உறைந்து போகுமளவுக்கு  அதிரடியாக அணித்தலைவராக நியமிக்கப்படுவார்.




அவர் தனது தலைமைத்துவத் திறமையை படிப்படியாக வளர்த்துக் கொண்டு வருகையிலே அணி வீரர்களுக்கிடையிலோ அல்லது கிரிக்கட் தேர்வுக்குழுவினருடனோ கருத்து வேறுபாடு வந்துவிடும்... பின்பு அணித்தலைவர் பதவியிலிருந்து விலகுவதும் பின்பு அணியிலிருந்தே காணாமல் போவதுமாக...

இது ஒரு வாழ்க்கை வட்டம் போன்று நடந்து கொண்டேயிருக்கும் அணிதான் பாகிஸ்தான் அணி.


-Mutur' Mohd.Rafi

Sunday, June 3, 2012

கோணேசர்பூமியில் ஒரு வெற்றுவேட்டு!




'எப்படியிருந்த    நான்,   இப்படியாயிட்டேன்!'








வர் இன்னும் ஓய்வுபெறாத ஒரு முன்னாள் பாடசாலை அதிபர். முன்னாள் அதிபர் என்றால் 'இன்னாளிலே என்ன செய்து கொண்டிக்கின்றார்...?' என்ற வினா எழுமல்லவா...?


அதற்குரிய பதிலைக்கூறு முன்னர் இந்த விடயத்தை முழுமையாகப்படியுங்கள். சுவாரசியமாக இருக்கும்.

இது நமது பாடல்பெற்ற திருத்தலமான கோணேசர் பூமியில் நிகழ்ந்த /  நிகழும் கதை.

அவர் தலைமையாசிரியராக கடமையாற்றிய பாடசாலை  நகரிலிருந்து கூடிப்போனால் 4 கிலோமீற்றர் சுற்றளவுக்குள்ளே புகையிரதப்பாதையை ஒட்டிய பல்லின மக்களும் ஒன்றாக வாழும் ஒருபிரதேசத்தில் இருக்கின்றது.


எனினும் அந்தப்பாடசாலை ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த மாணவ மாணவியர்கள் பெரும்பான்மையாக கற்கும் ஒரு தமிழ் மொழிமூலப்பாடசாலை என்பதால் அந்த இனத்தைச் சேர்ந்த பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பாக அறிந்துகொள்ளவும் பிற தேவைகளுக்குமாக அடிக்கடி பாடசாலைக்குச் சென்று வரவேண்டியிருந்தது.  பொதுவாக பெற்றோர்கள் ஆசிரியர்களைச் சந்திக்க விரும்புவது என்பது இயல்பான ஒன்றுதானே?

அவ்வாறு பாடசாலைக்குள் வருகின்ற அப்பாவிப் பெற்றோர்களின் மீது நமது அதிபர் எவ்வாறு நடந்து கொள்வார் தெரியுமா?

'இஞ்சவா? எங்க வந்தா...? இப்ப சந்திக்கேலாது போ..! போ...!' 


இப்படித்தான் 'மரியாதையாக' இருக்கும் நமது தலைமையாசிரியரின் பெற்றோருக்குரிய பொதுவான அணுகுமுறை.

இவர் தனது ஆசிரியர்களையும் கூட இவ்வாறுதான் நடாத்துவார் என்று சில தகவல்கள் உண்டு. வெளிப்படையாகப் பார்க்கும் யாருக்கும் இவர் ஒரு கண்டிப்பும் நிர்வாக இறுக்கமுமுள்ள திறமையான அதிபர் என்ற ஒரு மாயத்தோற்றம் முதலில் ஏற்படுவது இயல்பானதுதானே. ஆனால் உள்ளே புகுந்து உற்றுக்கவனித்தால்தான் இவர் ஒரு வெறும் வெற்றுவேட்டு என்பது புலனாகும்.

இவர் தன்னைச்சுற்றிலும் வைத்திருந்தது யாரைத் தெரியுமா?


கற்பித்தலைவிட மாணவர்களை ஏய்த்துச் சமாளிக்கவும் சலுகைகளுக்காக மேலதிகாரிகளை வருடிப் பிழைக்கவும் கூடிய பெண் ஆசிரியர் குழாம் ஒன்றைத்தான் வைத்திருந்தார். அதேவேளை தனக்கு ஒத்துவராத திறமையான ஆசிரியைகளை  வருத்தி உழைப்பை உறிஞ்சிக் கொள்வாராம்.  ஆனால் அதனால் விளையும் பலாபலன்களை தானும் தன்னைச்சுற்றி வருடிக்கொண்டிருக்கும் ஏமாற்றுக்காரிகளான ஆசிரியைகளும் பெறுமாறு பார்த்துக் கொள்வாராம்.


எங்கு செல்வதென்றாலும் ஒரு துருப்பிடித்த பழைய துவிச்சக்கர (சைக்கிள்) வண்டியில்தான் அவரது பயணமிருக்கும். அந்தச் சைக்கிளைப்போலவேதான் அவரது சிந்தனையுமிருக்கும்


இவரது நோக்கம் பாடசாலை மாணவர்களின் கல்வியோ அல்லது சமூக அபிவிருத்தியோ அன்றி  தனது மேலதிகாரிகளைத் திருப்திப் படுத்திக்கொண்டு தனது சுய முன்னேற்றங்களைப் பெற்றுக் கொள்வதாக மட்டுமே இருந்து வந்தது.

அத்துடன் பாடசாலைக்கு ஆண் ஆசிரியர்களை நியமிக்காமல் பார்த்துக் கொள்வாராம். தவறிப்போய் நியமிக்கப்பட்டாலும் அவர்களோடு அநாவசிய முரண்பாடுகளை ஏற்படுத்தி அவர்களாகவே இடமாற்றம் பெற்று ஓடிவிடச் செய்து விடுவாராம்.


அப்படியும் விடாப்பிடியாக அவர்கள் இருந்துவிட்டால் போதும். சினிமா தாதாவைப்போல  தனது அல்லக்கைகளான அடிவருடிப் பெண் ஆசிரியர்களை வைத்து குறிப்பிட்ட ஆசிரியர் மீது ஏதாவது பாலியல் குற்றச்சாட்டுக்களைத் திணித்துத்  தொடுத்து ஓட்டம் காட்டி விடுவாராம். இவ்வாறு அவர் தனது காலத்திலே அப்பாடசாலைக்குக்கு கிடைத்த எத்தனையோ திறமை வாய்ந்த ஆண் ஆசிரியர்களையெல்லாம் மாணவர்களின் கல்வி அபிவிருத்திக்குப் பயன்படுத்தாமல் விரட்டி வீணடித்துள்ளாராம்.

ஒர் அதிபராக,  தனது பாடசாலையின் வீழ்ச்சியைப் பற்றி அக்கறை கொண்டதில்லை. தனது அடிவருடி ஆசிரியைகளின் மோசடிக் கற்பித்தல்களால்   மாணவர்களின் ஆளுமை விருத்தி தேர்ச்சிகள், அடைவுகள் வீழ்ச்சியடைந்து வந்தது பற்றிய உண்மையான கவலைகளெல்லாம் அவருக்கு இருக்கவில்லை. ஆனால்  எல்லாமே சரியாக நிகழ்ந்து கொண்டிருப்பதாக புள்ளிவிபரங்களை  வெறும் வெள்ளைக் காகிதங்களிலும் பைல்களிலும் மட்டும் டிப்டொப்பாக வைத்திருந்து கல்வி அதிகாரிகள் வரும்போது எடுத்துப் போடுவாராம்.

கல்வியில் ஏற்கனவே பின்தங்கிக்கிடக்கும் தமிழ்பேசும் சிறுபான்மைச் சமூகத்தை சிறிதளவு கூட முன்னேறிவிடாமல் எவ்வாறு மேலும் மோசமாக்கலாம் என்று மண்டைகளைக் குடைந்து திட்டங்கள் தீட்டித் தந்திரமாகச் செயல்படுத்துவதிலே கில்லாடிகள்தான் நமது கோணேசர் பூமியின் கல்வி அலுவலக அதிகாரிகள். அவர்களுக்கு இப்படி ஒருவர் கிடைத்தால் எப்படியிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். இவரது ஏமாற்றுகளால் உள்ளுர மகிழ்ந்து, வெளிப்படையாக ஓஹோவெனப்  பாராட்டிவிட்டுச் சென்றுவிடுவார்களாம்.

ஆனால்...


 இந்த உலகில் அனைத்துச் சர்வாதிகாரங்களும் ஏமாற்றுகளும் ஒருநாள் முடிவுக்கு வந்துதானே ஆகவேண்டும். இவரது இப்படியான நடவடிக்கைகள் மெல்லமெல்ல ஊருக்குள்ளே தெரிய வரத்தொடங்கியதும் பெற்றோர்கள் கொதித்தெழுந்தார்கள். மக்களை மதிக்காத அதிபருக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்களை நிகழ்த்தினார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தை சமாளித்து அதிபரைக் காப்பாற்றுவதற்கு கல்வி அதிகாரிகளும் அடிவருடி ஆசிரியைகளும் பகீரதப்பிரயத்தனம் செய்தார்கள். ஆனால் பெற்றோர்கள் ஒரேயடியா வேண்டாமென்று பிடிவாதமாக அதிபரைத் துரத்தியடித்து அனுப்பிவிட்டார்கள். தனத அடிவருடிகளையும் சேர்த்துக்கொண்டு வெருண்டோடிய சர்வாதிகார அதிபருக்கு அடைக்கலம் எங்கு தெரியுமா? வேறு எங்கே...?


சாட்சாத் நமது கோணேசர்பூமி கல்வி அலுவலகம்தான்...!

அங்கே ஒரு ப்ளாஸ்டிக் கதிரையிலே குந்திக்கொண்டு எடுபிடி வேலைசெய்து கொண்டிருக்கின்றாராம்.


-Jesslya Jessly






பிற்குறிப்பு:

முன்பு அதிபர் கதிரையில் குந்தியிருந்து பாடசாலையையும் சீரழித்த நமது அதிபர் தற்போது கோணேசர்பூமி  கல்வி அலுவலகத்தில் ஒரு ப்ளாஸ்டிக் கதிரையிலே குந்தியிருந்து கொண்டு தான் துரத்தியடிக்கப்பட்டதை நினைத்து உள்ளுக்குள் புலம்பித் தீர்க்கின்றாராம். அத்துடன் தனது முன்னாள் பாடசாலையை, அங்கே மிஞ்சிக்கிடக்கும் அடிவருடியொன்றை பினாமியாக வைத்து  மறைமுகமாக நடாத்திக் கொண்டிருக்கின்றாராம்.