Wednesday, September 12, 2012

சிறுகதை: மூதூர் மொகமட் ராபி





மியூறியன் க்ரேட்டர்
 
 
 
 


ய்வுகூடத்திலிருந்து வெளியேறி கல்லூரியின் பிரதான மண்டபத்திற்கு நான் வந்து சேர்ந்தபோது எதிர்பார்த்தது போலவே அது 'ஹோ'வென வெறிச்சோடிக் கிடந்தது.

எங்கள் சிறுவர்களும் சிறுமிகளும் நூற்றுக்கணக்கில் இரைச்சலோடு ஓடியாடித்திரிந்த மண்டபம் இன்று வெறும் மின்குளிரூட்டிகளின் ரீங்காரத்தோடு மனித சஞ்சாரமேயின்றி இருப்பதைப் பார்த்ததும் உணர்ச்சிமிகுதியால் மார்பில் லேசாய் வலித்தது. புதிதாகப் பொருத்தப்பட்டிருந்த பேஸ்மேக்கர் சிறிது இடையூறு செய்வது போலிருக்கவே சிறிது நேரம் அழுது பார்க்கலாமா என்றுகூடத் தோன்றியது எனக்கு.
'ஹலோ Dad! நான் மைக்..'  ஜியோபோனில் கரகரத்தான் எனது இளைய மகன். எங்கள் விண்ணியல் ஆய்வு மையத்தின் முப்பத்தியெட்டு வயது நிரம்பிய துடிப்பான உதவிக் கட்டுப்பாட்டு அதிகாரி மைக் எனப்படும் மைக்கேல் பஸ்டன் ட்ரென்வர்.

இந்தப் புதிய கிரகத்தில் மனிதக்குடியிருப்புகளுக்கு வழிகாட்டிய எங்கள் மரியாதைக்குரிய ப்ரொபஸர் பெஞ்சமின் ட்ரென்வர் குடும்பத்தில் எனக்குப் பின்பு எஞ்சியிருக்கும் ஒரே வாரிசு. சரியாக முப்பத்து மூன்று மணிநேரத்திற்கு முன்புதான் எனது திட்டத்தை நிறைவேற்றுவதற்காக தனது நண்பர்கள் மற்றும் பொறியியலாளர்கள் சகிதம்  ளுpயஉந Pடயநெவ முயடி ஒன்றில் பூமியை நோக்கி மத்திய அரசாங்க ஒப்புதலின்றிய தனது இரகசிய பயணத்தை மேற்கொண்டிருந்தான்

அவர்களுக்கு முன்னரே என்னையும் சில விஞ்ஞானிகiளையும் தவிர இங்கிருந்தவர்கள் அனைவரையும் பூமிக்கு அருகாமையில் விண்வெளியிலே சஞ்சரித்துக் கொண்டிருக்கும் எங்களது வானியல் ஆய்வுகூடமான 'மியூறியன் மிதக்கும் மாளிகைக்கு' அனுப்பி விட்டிருந்தோம். எங்களது இரகசியத் தாக்குதல் திட்டம் ஒருவேளை அம்பலமானால் வடக்குவாசிகளின் அரசாங்க நெருக்கடிகளுக்கு எங்களது அப்பாவி மக்களும் குழந்தைகளும் உள்ளாகிவிடக்கூடாது எனும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுதான் அது.

'ஹலோ மைக்.. சொல்லு! சொன்னபடியே போய் சேர்ந்திட்டீங்களா என்ன? இப்ப என்ன நடக்கின்றது அங்கே..?' பரபரப்புடன் கேட்டேன்.

 ' ஆம்! ஆனால் எனக்குச் சிறிது பயமாயிருக்கு டாட்... நீங்க சொன்னபடி எங்களால அவுஸ்திரேலியாவுக்கு போய் இறங்க முடியல்ல.. அங்க இருந்து தாக்கினா ஜப்பானிலுள்ள ஜிவீயோ டெர்மினல் வேவ்ஸ்கள் மூலமாக டெர்மிட்ஸ்க்கு தெரிஞ்சுடுமாம் என்று ப்ரொபஸர் காப்ரியோவும் டாக்டர் சில்வியா அண்டர்ஸனும் சொல்லிட்டிருந்தாங்க.. என்னால மறுக்க முடியல்ல அதனாலதான் இப்ப எல்லாருமே அண்டாட்டிக்காவிலதான் இறங்கிக் கொண்டிருக்கிறோம்.. ஆனா...' என்பதோடு மைக்கின் தொடர்பு விட்டுப்போனது.

அடச்சே! சிறிது நேரமான பின்புதான் இனிமேல் தொடர்பு கிடைக்கும்.


இரண்டு நாட்களுக்கு முன்பு தென்துருவப்பகுதியிலே தாக்கிய ஓர் பாரிய எரிகல் மோதலினால் தொலைத்தொடர்பு வலையமைப்பில் பாதிப்பேற்பட்டிருந்தது. அதனால் சமிக்ஞை வாங்கிகள் அவ்வப்போது செயலிழப்பதும் பின்பு இயங்குவதுமாகப் போக்குக் காட்டிக் கொண்டிருந்தன.

'சே! ஏன்தான் நான் சொன்னபடி செய்யாமல் தங்களிஷ்டத்துக்கு குழப்பியடிக்கின்றார்களோ.. அண்டாட்டிக்காவில் இருந்து தாக்கினால் அது கொக்ரோச்சுகளுக்கு பெரிய சேதத்தையும் கோபத்தையும் உண்டுபண்ணாதே... இந்தச் சின்னப் பையன்களையும் பெண்களையும் நம்பி இத்தனை பெரிய காரியத்தை ஒப்படைத்ததுதான் எனது தவறோ?' என்று ஒருபுறம் மனசாட்சி வாட்டி வதைத்தது.

ஜியோ போனை மீண்டும் முயன்று பார்த்தேன். ம்ஹும். அது அமைதியாயிருந்தது. அவர்கள் தொடர்பு கொண்டால்தான் உண்டு.
வேறுவழியில்லை.. எனது திட்டம் நிறைவேறாது போனால் மனித இனம் இன்னும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நசிந்து போய்த்தான் வாழ்ந்தாக வேண்டும். அதைவிட இந்த வாழ்வா சாவா முயற்சியிலே மோதிப்பார்த்து விடுவதுதான் சரியாக இருக்கும்.

ஆம், நான் செய்ததுதான் சரி. அவ்வளவு தூரம் போனவர்களை இனிமேல் திருப்பியழைக்கவும் முடியாது.. யோசனையோடு மெல்ல நகர்ந்து மண்டபத்தின் இடதுபுறத்திலிருந்த மிசைட்லக் பந்தாட்டத் தளத்தினைக் கடந்துசென்று மின்தூக்கி உலோகப் புழையினுள் நுழைந்ததும் அதன் தானியங்கிக் கதவுகள் சட்டென மூடிக்கொண்டன. அதன் உலோகச் சுவரிலிருந்த டிஜிட்டல் பட்டையில் பழக்கப்பட்ட எனது விரல்கள் இரகசிய எண்களை  ஒற்றியதும் பரிசோதனைக் குழாய் போன்ற பிரமாண்டமான கண்ணாடிக்கூண்டு ஒன்று என்மீது கவிந்தது. மறுகணம் அந்த கட்டிடத்தின் 176 தளங்களும் சில வினாடிகளில் கால்களின் கீழே நழுவிச் சட்டென நின்றது. மெல்ல இறங்கி ஓர் பிரமாண்டமான கண்ணாடி உருண்டையொன்றினால் கவசமிடப்பட்டிருந்த மொட்டைமாடிபோன்ற மேல்தளத்திற்கு வந்தேன்.
உச்சியில் நின்றபடி சுற்றிலும் ஒருதடவை பார்த்தேன்.

மெலிதான செம்மஞ்சள் நிற வானம் எங்கும் பரந்து விரிந்து கிடந்தது. உச்சியிலிருந்து சரிந்திருந்த சிறுபொட்டுச் சூரியன் வெகுதூரத்திலிருந்த ஷார்ப் மலைமுகட்டை நோக்கி இறங்கிக் கொண்டிருந்தான்.

எப்போதாவது மனசு கனத்திருக்கும்போது இந்த இடத்திற்கு வந்து வெகுநேரம் நின்று கொண்டிருப்பதுண்டு. இங்கிருந்து பார்த்தால் தெரியும் பள்ளத்தாக்கையும் தொடுவானத்தையும் என்னால் மறக்கவே முடிவதில்லை. இங்கு இப்போதுள்ள கட்டிடங்களையும் பிரமாண்டமான காற்றாடிகளையும் விண்ணியல் ஆய்வுகூடங்களையும் பார்க்கும்போது, 160 வருடங்களுக்கு முன்பு கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் சிறியதும் பெரியதுமாய் இரும்புத்துருவேறிய பாறைக்கற்கள் மட்டுமே பரவிக்கிடந்த புழுதிமணல் பொட்டல் வெளியா இது என்று ஒவ்வொருமுறையும் எனக்கு வியப்பாகவே இருப்பதுண்டு.

தொடுவானக் கீறலையும் ஆங்காங்கே அதை மறைக்கும் மணல்மேடுகள் தவிர எதுவுமே இல்லாதிருந்த இடத்தில் ஓர் அறிவியல் சொர்க்கத்தையே உருவாக்கிய எங்கள் முன்னோர்களின் உழைப்பின் வலிமையை இப்போதுள்ள ஒவ்வொரு சென்ரிமீற்றரும் பேசிக் கொண்டிருந்தன. அந்த உழைப்...

மீண்டும் ஒளிர்ந்தது ஜியோபோன்.
'ஆங்.. சொல்லுங்க, உதவி கட்டுப்பாட்டு அதிகாரி திரு. மைக் பஸ்டன் அவர்களே!'
' டாட், நீங்க கோபமா இருக்கறீங்க. சரிதானே?'
'ம்..! அதெல்லாம் இருக்கட்டும் நீ இப்ப அங்க நடக்கிறதைச் சொல்லு மைக்.. அது போதும்!'
'அவுஸ்திரேலியாவில் இறங்காதது தவிர நீங்க சொன்னபடியேதான் எல்லாம் செய்திட்டிருக்கிறோம்.. தூரம்தான் ஒரு பிரச்சினை. ஆனால் BMA அளவை 29734GF லிருந்து 30286GF வரைக்கும்  கூட்டி வச்சிட்டா அட்டாக்கிங் பவர் உங்க அவுஸ்திரேலியக் கணிப்புக்கு சரியாயிடும் என்று ப்ரொபஸர் காப்ரியோ போல்ட் சொல்லிட்டிருக்கிறார்.'
'ஆமா... கிழிச்சான் அந்தச் செம்பட்டைத்தலையன்!  அந்த ரேஞ்ச் எல்லாம் அதுகளுக்குப் போதாது. குறைஞ்சது BMA ரேஞ்சை 43570 GF க்கு மாற்றச் சொல்லு. க்ளைமேட் எப்படியிருக்கு?.'
 'அது ஓரளவு சாதகமாத்தான் இருக்கு.. ஆனால் வானம் தெளிவா இருந்தா அதுகள் மீது பயோ மிசைல் அட்டாக்  தாக்குதல் நடத்திறது எங்களுக்கே ஆபத்தாயிடாதா டாடி..'
'அப்படி ஒண்ணும் ஆகாது என்றுதான் நம்புறேன். ஆனால் ஒன்று..  இன்னும் சரியாக நூற்றி எண்பத்திநாலு மணிநேரம்தான் உங்களால அங்கே தங்கியிருக்க முடியும். மைக், ஒண்ணு சொல்லட்டுமா உங்களுக்கு?'
'சொல்லுங்க'
'நீங்களெல்லாம் பூமிக்குப் போயிருக்கிறது ஒன்றும் பிக்னிக்குக்காக அல்ல. அத்தோட இப்ப இருக்கிறது நம்ம தாத்தாவும் அவரோட ஆட்களும் எத்தனையோ வருஷங்களுக்கு முன்பு கைவிட்டு வந்தபோது இருந்த பழைய பூமியும் கிடையாது. அதை ஞாபகத்துல வச்சிருங்க.. ஓகே?
'................'
 'அதுசரி இதுவரைக்கும் எத்தனை தடவை பீஎம்ஏ தாக்குதல்களை நடத்தியிருக்கிறீங்க?'
' ஒருநிமிஷம் இருங்க டாட், ட்ரயல் அட்டாக் ஒன்றிரண்டு பழைய ரேஞ்ச் 29734 GF ல இரண்டு அனுப்பினோம்.. ஆனா அதுக்கு இதுவரை பதில் எதுவும் தெரியல்ல.. அப்படியிருந்தா கூட அதை கிலான்கிட்டதான் கேட்க வேணும். கிலான் இங்கிருந்து 40 கிலோமீற்றர் தள்ளியிருக்கிறான். இங்க ஜியோபோனைத் தவிர வேற போன் எதையும் யூஸ் பண்ண முடியல்ல. அப்படிச் செய்தா இந்தோனேஷியன் தீவுகள்ல இருக்கிற டேர்மிட்ஸ்களுக்கு நாங்க இருக்கிற இடம் தெரிஞ்சுடுமாம். அதனாலதான்.. அவனைத் தொடர்பு கொள்ளவே முடியல்ல.'
'சரி, அவன் நேரடியாக என்னோட பேசினால் பார்ப்போம்... நீங்க அங்க இறங்கின ஸ்பேஸ் ப்ளனட்  கேப்பை என்ன செஞ்சீங்க.. பத்திரமா மறைச்சு வச்சிருக்கீங்கதானே..?'
'ஆங் அது.. இருக்கு டாட்!  பனிப்பாளங்களாலதான் மூடி வைச்சிருக்கிறோம். அதோட டெர்மினல் பெனல் பற்றரியெல்லாம் கூட கழற்றித்தான் வச்சிருக்கோம்..டோண்ட் வொரி'
'ஓகே! மிகக் கவனமாயிருங்க.. அவங்களுக்கிடையில சண்டை தொடங்கியதும் நீங்க உடனே தயாராகி வெளியேறிடணும். திரும்பி வரும்போது வட துருவத்தை விலக்கியே வந்திடுங்க... லேண்ட் டேர்மிட்ஸ் கொக்ரோச்சைவிட பயங்கரமானதுகள்.. அதுகள் அபார மூளைவளர்ச்சியும் சேர்ந்துதான் விகாரமடைஞ்சிருக்கு.. கவனம்.. எனிவே உன்னோட டீமுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் மைக்!'
'தேங்க்யூ டாடி, அங்க எப்படியிருக்கு..?'
'இங்க ஏறத்தாழ ஒரு வீட்டுச்சிறைவைக்கப்பட்ட கைதிபோலத்தான். கொஞ்சம் பெரிய வீடு அவ்வளவுதான்.. ரொம்பத் தனிமையாயிருக்கு மைக். சாப்பாடு மெடிசின் எல்லாம் வழக்கம்போல... இந்த புதிய பேஸ்மேக்கர்தான் கொஞ்சம்.. உங்களை நினைச்சு சிறிய உணர்ச்சிகள் காட்டினா உடனே மக்கர் பண்ணுது. பார்க்கலாம்.. ஒருதடவை மனசுவிட்டு அழுதிட்டா சரியாயிடும்...'
'டோண்ட் வொறி டாட்,  உங்க பெஞ்சமின் தாத்தாவோட காதலியின் கதையை  எழுத ஆரம்பிக்கப்போறதா சொல்லிட்டிருந்தீங்கதானே? எப்படி ஆரம்பிக்கலாம் என்று யோசிச்சிட்டே இருங்க.  இன்னும் ஒரே வாரத்தில திரும்பி வந்து நானும் ஏதாவது ஐடியா தாறேன் என்ன?..'  என்றான் மைக் உற்சாகமாக. 
ஆனால் அதுதான் நானும் எனது மகனும் பேசிக்கொள்ளும் கடைசி வார்த்தைகள் என்று புரியாமல், 'அடி வாங்குவேடா நீ..!  திரும்பி இங்க வருவாய்தானே அப்போ உனக்கு..வச்சுக்கிறேன்டா'  என்றேன்.


 
கி.பி. 2352 டிசம்பர் மாதம் 26ம் தினம்...

பூமிக் கிரகத்திலிருந்து பெஞ்சமின்; ட்ரென்வர் என்ற விண்வெளி அகதி இந்த ஆளரவமற்ற கிரகத்திற்கு தன்னந்தனியாக வந்திறங்கிய நாள்.

அன்று எங்கே செல்வது அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் வரும்போது கொண்டு வந்த அற்ப சொற்ப நவீன கருவிகளை (இப்போது அவையெல்லாம் எங்கள் அருங்காட்சியகத்தில் இருக்கும் அதரப் பழசுகள்) வைத்துக்கொண்டு ட்ரென்வர் திணறியபோது எப்படியும் உயிர் வாழ்ந்தே ஆகவேண்டும் என்று மானசீகமாக அவரை உந்தியது பூமியிலே அவரோடு வாழ்ந்து இறந்துபோன அவரது காதலியின் நினைவு ஒன்றுதானாம். 

பெஞ்சமின் ட்ரென்வர் இந்தக் கிரகத்தில் வந்திறங்கியபோது கிடைத்த அனுபவங்களையெல்லாம் தனது எதிர்கால வாரிசுகளான எங்களை நினைத்து காட்சிப் பதிவுகளாகத் தொகுத்துத் தந்து விட்டுத்தான் இறந்திருந்தார். நிலக் கறையான்களின் ஆரம்பகாலத் தாக்குதல் ஒன்றிலே அவரது காதலியாகிய மியூறியன் மரியா படுகாயமுற்று செத்துப்போகும் தறுவாயிலே கூட எனது தாத்தா பெஞ்சமினைத்தான் காப்பாற்ற நினைத்தாவாம். ஆம் தாத்தாவைப் பார்த்து பாட்டி உச்சரித்த கடைசி வார்த்தைகள் : 'நீங்களாவது உயிர் வாழவேண்டும்.. பெஞ்சமின் நீங்களாவது உயிர் வாழ்ந்தாக வேண்டும்' என்பதுதானாம்.

அன்று என் தாத்தா பெஞ்சமின் ட்ரென்வர் விரக்தியடைந்து உயிர்வாழும் போராட்டத்தைக் கைவிட்டிருந்தால் இன்று இந்தக் கிரகமே மனித சஞ்சாரத்திற்கு வழியின்றி பாழடைந்து போயிருக்கும். உயிரைக் கருவிகளில் பிடித்து வைத்துக் கொண்டு அவர் பூமியிலிருந்த தனது சகாக்களுக்கு அனுப்பிய தகவல்களால்தான் பின்னாளிலே அவரைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கானவர்கள்; பூமியிலிருந்து வெளியேறி இங்கு வந்தார்களாம்.. அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்து போராடி அயராது உழைத்து உருவாக்கிய இடம்தான் இந்தப் புதிய கிரகத்தின் மியூறியன் க்ரேட்டர் குடியிருப்புகள் வளாகம் விண்ணியல் ஆய்வுமையம் எல்லாமே.

'ஹலோ! டாக்டர் ஜாக் ட்ரென்வர்! ஐ'ம் கிலான் ஹியர்!'
' ஆங்! நான் கேட்கிறேன் சொல்லு கிலான்..'
'டாக்டர் சக்ஸஸ்! நாம எதிர்பார்த்தபடியே ஆப்ரிக்காவிலேருந்து இப்போ கொக்ரோச்சுகள் டேர்மிட்ஸ்ஸை நோக்கி தாக்குதல்களை ஆரம்பித்தாயிற்று.  கிட்டத்தட்ட ஒரு மணிநேரமாக அது நடந்து கொண்டிருக்கின்றது.. நாங்க எங்க தாக்குதல்களை நிறுத்திட்டோம்.  ஆனா இன்னும் டேர்மிட்சுங்களுக்கிட்ட இருந்து கொக்ரோச்சுகள் மீது பதில் தாக்குதல் ஆரம்பிக்கவேயில்ல.. அதுதான் புரியல்ல..' கிலானின் குரலில் கலவரம் தெரிந்தது.
'அப்படியா ஆச்சரியமாருக்கே..? பதில் தாக்குதல் இல்லையா..? அதுவும்  ஒரு மணிநேரமாகவா? அப்படியானால் ஒன்றில் அவை எல்லாமே ஏற்கனவே அழிந்து போயிருக்க வேணும்.. அல்லது.. அல்லது.. மை காட்! கிலான் ஹரியப்.. ஹரியப்! உடனே போய் எல்லாரும் பீஎஸ்கேயில ஏறுங்க கமான் யாரும் தாமதிக்க வேணாம்..புறப்படுங்க!'

'ஏன் டாக்டர்?' 'ஐயோ கிலான் புரியல்லயா உங்களுக்கு? அவை டேர்மிட்ஸ் உங்களோட இடத்தை ஸ்மெல் பண்ணிட்டுது.. உங்க இடத்தை நோக்கித் தாக்குதல் நடாத்தப் போகுது! நிற்க வேண்டாம் மைக் எங்கே?'
'சரி, டாக்டர் நாங்க கிளம்புறோம்..மைக் இங்கதானே இருந்தான்..

அடக்கடவுளே! இது என்ன கஷ்டம்டா'
'ஏன்.. மைக்குக்கு என்னாச்சு?'
'ஒண்ணுமில்ல.. திரும்பவும் தாக்...பீய்ய்ய்ய்ய்ய்யங்!' 

மீண்டும் அறுந்தது தொடர்பு!
'இது ஒரு சனியன் சே!' கோபத்தில் ஜியோ போனைத் தூக்கியடிக்க ஓங்கினேன். ஆனால் அடிக்கவில்லை.

எங்கள் முன்னோர்களுக்குப் பின்னர் பல வருடங்கள் கழித்து பூமிக்கிரகத்திலிருந்து இங்கே வந்த வடவரைக்கோளத்திலே குடியேறியவர்கள்தான் எங்களது நிம்மதியைக் குலைத்தவர்கள்.  அவர்கள் இந்தக் கிரகத்திலே வந்திறங்கும் வரை இன்று இவ்வளவு பிரச்சினையாகிப் போய்விட்டிருக்கும் தொலைத்தொடர்புகளைக்கூட நாங்கள் சீராகத்தான் வைத்திருந்தோம்.

தென்பகுதியில் நாங்கள் குடியிருக்கும் இந்த ம்யூறியன் பெரும்பள்ளத்தைத் தவிர இந்தக் கோளின் முழுப்பகுதியையும் வடக்குவாசிகள் கைப்பற்றினார்கள்.  அவர்கள் நினைத்திருந்தால் தங்களது அதிநவீன ஆயுதங்களையும் கருவிகளையும் கொண்டு தெற்குவாசிகளாகிய எங்களை வெகுசுலபமாக வெற்றிகொண்டிருக்க முடியும். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் எங்கள் மீது இதுவரையிலே எதுவித தாக்குதல்களும் புரியாமல் விட்டு வைத்திருக்கின்றார்கள். ஒருவேளை அவர்களைவிட முன்னோர்களான எங்களிடம் தகராறு வைத்துக்கொண்டால் உரிமைப் பிரச்சினைகள் ஏதும் வந்து விடக்கூடும் என அவர்கள் நினைத்தது கூட அதற்குக் காரணமாக இருக்கலாம்.

அதற்காக எங்களோடு இணக்கமான போக்கையும் அவர்கள் கொண்டிருக்கவில்லை. மாறாக ஒருவித நட்புமின்றிய விரோதமுமின்றிய இடைநிலைப் போக்கையே கடைப்பிடித்து வருகின்றார்கள். எப்போதாவது ஓரிரு தடவை இந்த ம்யூறியன் பெரும்பள்ளத்தைக் கடந்து செல்லும் அவர்களது விண்கலங்களிலிருந்து எங்கள் விண்ணியல் ஆய்வுமையங்களையும் அறிவியல் கல்லூரி வளாகங்களையும் அலட்சியமாக பார்த்தபடி செல்லும் அவர்களது விஞ்ஞானிகளையும் அரச பிரமுகர்களையும் தவிர வேறு தொல்லைகள் எதுவும் இருந்ததில்லை. நாங்களும் அவர்களோடு முட்டிக்கொள்வதில்லை. ஆகமொத்தத்தில் எங்களை அவர்கள் ஒரு பொருட்டாகவே கருதியதில்லை.

எனது முன்னோர்கள் இந்தக் கிரகத்திற்கு வந்திறங்கிய காலத்திலே அன்றைய காலத்துக்குரிய கவச உடைகள் ஒக்ஸிஜன் உறைகள் போன்றவற்றை அணிந்திருந்தாலும் நீண்டகாலத்திற்கு அவற்றின் பாதுகாப்பை அவர்களால் பெறமுடியாதிருந்தாம். காலப்போக்கிலே அவர்களது சில கருவிகள் பழுதுபடலாயின. பின்பு வேறுவழியின்றி மெல்ல மெல்ல இந்தக் கிரகத்தின் புதிய சூழலுக்குத் தம்மைப் பழக்கப்படுத்திக் கொள்ளுவதைத் தவிர வேறுவழியிருக்கவில்லை அவர்களுக்கு. ஆரம்பகாலத்தில் சிலர் இறந்தனர் நோய்வய்ப்பட்டனராயினும் அதிஷ்டவசமாக அன்றிருந்த தட்பவெட்ப நிலையிலே சில சாதகமான விளைவுகள் ஏற்பட்டதாம். இதனால் அவர்களது உடல் உள்ளுறுப்புகளிலும் ஆயுட்காலத்திலும் பல நம்பமுடியாத மாற்றங்கள் உருவாகியிருந்தன என்று எங்கள் முன்னோர்கள் தெளிவாகக்  குறிப்பெழுதி வைத்துள்ளனர்.

பூமியைவிடக் குறைவான ஈர்ப்புவிசை மற்றும் காற்றழுத்தம், அடர்த்தி குறைவான வளிமண்டலம், வேறுபட்ட வாயுச்சேர்மானம்,  போன்றவற்றிற்கு ஏற்ற வகையிலே உடல் இசைவாக்கங்களைக் கொண்டிருந்ததால் அவ்வப்போது வந்து விழும் விண்கற்களின் தாக்குதல்கள் தவிர அவர்களால் சுதந்திரமாக நடமாடவும் இயன்றதாம். ஆனால் புதிதாக வந்திருந்த வடக்குவாசிகளால் அப்படியிருக்க முடியவில்லை. எப்போதும் தலையைச்சூழ ஓர் கண்ணாடிக் கூண்டும் கவசஉறையும் வைத்திருந்தார்கள். அவர்களால் எங்களைப்போல சரியாக நடக்கத்தானும் முடியாதிருந்தது.
எத்தனை காலத்துக்குத்தான் அவர்களால் கண்ணாடிக் கூண்டுகளுடனும் உடலைச்சுற்றியுள்ள குழாய்களுடனும் அலையமுடியும்..? அதனால் பூமியிலிருந்து கொண்டு  வந்து சேர்த்த நவீன கருவிகள் மூலம் இங்குள்ள மொத்த வளிமண்டலத்திலிருந்த வாயுக்களின் சேர்மான விகிதங்களை தமக்கு வசதியானபடி மாற்றியமைக்கத் தொடங்கினார்கள்.


வளிமண்டலத்தின் அடர்த்தியை செயற்கையாக அதிகரித்தார்கள். துருவப்பகுதியிலே உறைந்து கிடந்த பனிக்கட்டிகளை உருகச்செய்து வடவரைக்கோளம் முழுவதும் உள்ள பெரும் பள்ளங்களையெல்லாம் படிப்படியாக நிரப்பி சிறிய கடல்களை உருவாக்கினார்கள்.
இதனால் கோளின் மொத்த தட்பவெட்பமும் படிப்படியே மாறத்தொடங்கியது. ம்யூறியன் க்ரேட்டர்ஸில் மட்டுமே வாழ்ந்து வந்த தெற்குவாசிகள் எங்களது நிலைமை கவலைக்கிடமானது. காலக்கிரமத்தில் சுவாசிக்கவே சிரமப்பட ஆரம்பித்தோம்.  ஒருகட்டத்திலே அவர்களுக்கு எமது எதிர்ப்பைத் தெரிவிக்க ஆரம்பித்தோம். அவர்களோடு பேச்சு நடாத்தினோம். ஆனால் குடித்தொகையிலும் அறிவியல் அபிவிருத்தியிலும் வலுவான நிலையிலே இருந்த அவர்கள் எங்களது வேண்டுகோள்களைச் சுலபமாக நிராகரித்து விட்டார்கள்.

இறுதியில் அவர்கள் ஏற்படுத்திய புதிய வளிமண்டத்திற்கேற்ப நாம்தான் மாறவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளானோம். நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மண்ணிலே சுதந்திரமாக வாழ்ந்து இந்த ம்யூறியன் க்ரேட்டர் பள்ளத்தாக்கை கடின உழைப்பாலும் அர்ப்பணிப்பினாலும் மாற்றியமைத்த அறிவியல் முன்னோடிகளாகிய நாங்கள்  அனைவரும் ஏறத்தாழ அவர்களின் அடிமைகளானோம். வெளியுலகத்திற்கு வர இயலாமல் முற்றிலும் வளியடைப்புச் செய்யப்பட்ட கட்டிடங்களுக்குள் மட்டுமேதான் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டோம்.

 அவசியமான வெளிப்புற நடமாட்டங்கள் கூட ம்யுறியன் க்ரேட்டர் பெரும்பள்ளத்தினுள்ளேயே கட்டுப்படுத்தப்பட்டது. வாழ்நாள் முழுவதும் தலைக் கவசங்களுடனும் சுவாசக்குழல் இணைப்புகளுடனும் வாழவேண்டிய மக்களாக நாங்கள் அனைவரும் மாற்றப்பட்டோம் என்பதுதான் வேதனை. எங்களுடைய புதிய கட்டிடங்களையும் வாகனங்களையும் முற்றிலும் வளியடைப்புச் செய்ய வேண்டிய நிலை.

அவர்களின் அனுமதியின்றி கோளைவிட்டு வெளியேறவோ விண்ணியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவோ தடைவிதித்திருந்தார்கள். சுருக்கமாகச் சொன்னால் இந்தக் கோளின் சகலவற்றையும் கட்டுப்படுத்தும் அரசாங்கமாக அவர்கள்தான் இருந்து வந்தார்கள்.

எத்தனை காலம்தான் இதனைப் பொறுத்துக்கொள்ள முடியும்.
இப்படி அடிமைகளாக  வாழ்வதைவிட வடக்குவாசிகளின் அரசை எதிர்த்து போராடி அழிந்து விடுவதே மேல் என்று எங்களது அரசியல் தலைவர்கள் முடிவெடுத்தனர். அந்த முடிவினைச் செயற்படத்துவதற்காக எமது விண்ணியல் குழு கூடி பல திட்டங்களை முன்வைத்து ஆராய்ந்தது. எம்மை ஆக்கிரமிக்கும் வடக்கு வாசிகளை எதிர்த்துப் போராடுவது அல்லது மீண்டும் எமது முன்னோர்கள் வாழ்ந்த பூமிக்கே சென்றுவிடுவது என்பதுவும் அவற்றிலே ஒன்று. இப்போதுள்ள பூமியின் வளிமண்டலம் எங்களுக்கு உகந்த வகையிலே இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து எமது விண்ணியல் ஆய்வாளர்கள் குழுவின் பெரும்பாலானவர்கள் பின்னைய முடிவினையே பரிந்துரைத்தனர்.

ஆனால் அதிலும் சில சிக்கல்கள் இருந்தன. நீண்ட காலத்திற்கு முன்பு பூமியில் ஏற்பட்ட திடீர் மாற்றங்களால் ஒருகாலத்தில் அங்கு சின்னஞ்சிறு பூச்சிகளாக இருந்துவந்த நிலக்கறையான்களும் கரப்பான்களும் விகாரமடைந்து படிப்படியாக மனிதனையே எதிர்க்கக்கூடிய பெரும் ஆற்றல்வாய்ந்த உயிரினங்களாக மாறிவிட்டிருந்தன. அவற்றின் தாக்குதல்களைச் சமாளிக்க முடியாமல் இலட்சக்கணக்கிலே அழிந்தவர்கள் போக மீதிப்பேர் அகதிகளாகி இங்கு வந்து விட்டனர். பூமியிலே தற்போது இருக்கும் மனிதர்களும் கூட அங்குள்ள அறியப்படாத சின்னஞ்சிறு தீவுகளில் மட்டுமே மறைந்து வாழ்ந்து வருகின்றனராம் என்ற தகவலும் கிடைத்தது.
அமெரிக்க கண்டங்களிலும் ஆபிரிக்காவிலும் விகாரமடைந் கரப்பான்கள் உடலமைப்பிலும் எண்ணிக்கையிலும் நம்பமுடியாத வளர்ச்சி கண்டுள்ளனவாம். மனிதர்கள் கண்டுபிடித்த நவீன ஆயதங்களைக்கூட இயக்கக்கூடியளவு தமது திறன்களை வளர்த்துக் கொண்டுள்ளதாம். அதேபோல ஆசிய ஐரோப்பிய நாடுகளிலே கறையான்கள் உடல்வலிமையுடன் கூடிய மூளைவளர்ச்சியையும் பெற்று மிகுந்த பலத்தோடு உள்ளனவாம். தொலைத்தொடர்புகள் போன்ற நுணுக்கமான விடயங்களைக்கூட திறம்படக் கையாள்கின்றனவாம்.

எங்களது ஆய்வின்படி  அவுஸ்திரேலியா மற்றும் அண்டாட்டிக்கா துருவப்பகுதியில் மட்டுமே அவற்றின் ஆதிக்கம் இல்லாதிருப்பது தெரிய வந்தது. பூமிக்கிரகத்தின் இருவௌ;வேறு பாகங்களில் தீவிரமாகப் பெருகிவரும் கரப்பான்கள் மற்றும் கறையான்கள் நிச்சயம் ஒருநாள் ஒன்றோடொன்று மோதிக் கொண்டு முற்றாக அழியவேண்டிய நிலை உருவாகும் என்பது எமது கணிப்பு. ஆனால் அதுவரை காத்துக் கொண்டிருக்க முடியாது. எனவேதான் நாங்களே அங்கு சென்று மோதலை ஆரம்பித்து வைக்கத் தீர்மானித்தோம்.

இறுதியாக ESOஎனும் (பூமி மீட்பு நடவடிக்கை) இரகசியத் தாக்குதல் திட்டம் தீட்டப்பட்டு உடனடியாக முன்னெடுக்கப்பட்டது.


 

000
 
 






'சியர்ஸ்! போய்ஸ் அண்ட் கேள்ஸ்!'

பளபளக்கும் சென்ட்லியோன் விளக்குகளின் பளிச்சீடுகளிலே இசைவெள்ளம் வழிந்தோட பூமிக்கிரகத்தை கறையான் மற்றும் கரப்பான்களிடமிருந்து மீட்டெடுத்த முதலாவது ஆண்டு நிறைவு வெற்றி விழாக் கொண்டாட்டம் களைகட்டியது. வெளிர் ஆரஞ்சு நிறத்தில் ரொலேட்ஸ் பானம் எல்லோருடைய கைகளிலும் நுரைதும்பித் தள்ளாடிக் கொண்டிருந்தது.
திடீரென்று இசை வலுக்குறைந்து ஒலித்தது.

'நண்பர்களே! உங்கள் மகிழ்ச்சிக் களிப்பிலே குறுக்கிடுவதற்கு மன்னிக்க வேண்டும்!...' என்றபடி மேடையேறினான் எனது பேரன் மைக்கின் நண்பன் கிலான். கருநீலநிற கோட் சூட்டில் படு கம்பீரமாக இருந்தான்.

' முதலில் பூமி மீட்பு நடவடிக்கையின் போது தனது இன்னுயிரைத் தியாகம் செய்த மியூறியன் விண்வெளி ஆய்வு மையத்தின் உதவிக் கட்டுப்பாட்டு அதிகாரி நமது அன்புக்குரிய மைக் பஸ்டன் அவர்களது தியாகத்தினை நினைவுகூரும் விதமாக 120 வினாடிகள் மௌனம் காண்பிப்போம்..' என்று விட்டு அமைதியானான்.

சன்னமான ஒரு நிசப்தம் நிலவ மைக்கை நினைத்து என் மனம் தேம்பியது.


'மைக்! ஓ..மை ஸன்! ஐ ரியலி மிஸ் யூ!'

'ஏன் தாத்தா அழுறீங்க.. அழாதீங்க ப்ளீஸ்!' என்று என்னை உலுப்பினான் என்னருகே நின்றிருந்த மைக் பஸ்டனின் 16 வயது மகன் மைக் ஜுனியர். துக்கம் தாளாமல் அவனது தலையை வருடிக்கொடுத்தபடி அணைத்துக் கொண்டேன்.

'மௌனம் காண்பித்தமைக்கு நன்றி நண்பர்களே! இந்த வெற்றியை நாம் கொண்டாடுவதற்குக் காரணமாக இருந்த நமது மியூறியன் க்ரேட்டர்ஸ் விண்வெளி ஆய்வுக்குழுவினருக்கும் எல்லாவற்றுக்கும் மேலாக இந்தத் தாக்குதல் திட்டத்தை வடிவமைத்துதவிய டாக்டர் ஜாக் ட்ரென்வர் ஜுனியருக்கு நமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
பூமியை ஆக்கிரமித்த கரப்பான்களையும் நிலக்கறையான்களையும் வெற்றிகொண்ட முதலாவது ஆண்டு விழாவை இந்தக் கிரகத்தில்தான் கொண்டாட வேணடும் என்றும் அவ்வாறு கொண்டாடிய பின்புதான் பூமிக்கே செல்வோம் என்று அடம்பிடித்து இன்னும் இங்கேயே தங்கியிருக்கும் எமது விஞ்ஞானிகளாகிய உங்களது உறுதியான எண்ணத்தைப் பாராட்டுகின்றேன்.
அத்துடன் பூமியை மீட்டெடுத்ததன் காரணமாக வெகுநாட்கள் வரை ஒருவருக்கொருவர் எதிரிகள்போல நாம் கருதி வந்த நமது கோளின் வடக்குவாசிகளும் நம்முடன் ஒன்றிணைந்திருப்பது பெரு மகிழ்ச்சியையும் ஆறுதலையும் ஏற்படுத்தியுள்ளது. இதோ... வடக்கு வாசிகளின் சார்பிலே நமது வெற்றிவிழாவிலே கலந்து கொள்ள வந்திருக்கும் டாக்டர் க்ரேலண்ட் மார்ஷ் அவர்கள்..' என்று கிலான் விலகிக்கொள்ள.. அவர் தொண்டையைச் செருமிக்கொண்டு,

'நண்பர்களே!
நான் க்ரேலண்ட் மார்ஷ், சீனியர் செகரட்டரி ஜெனரல் ஒவ் நொதர்ன் கவர்ண்மண்ட்.  எத்தனை காலம் ஆனாலும் தெற்குவாசிகளாகிய உங்களது அபார துணிச்சலையும் திறமையையும் நிச்சயம் நான் பாராட்டியே ஆகவேண்டும். நீண்டகாலமாக பூமியைக் கலவரப்படுத்தியதும் நாமெல்லாம் இங்கு வந்து குடியேறுவதற்கு காரணமாக இருந்தவையுமான நமது பொது எதிரிகளை  பூமிக்குச் சென்று தந்திரமாக அழித்தொழித்த உங்கள் வீரதீரத்தை மிகுந்த மகிழ்ச்சியுடன் நான் நினைவு கூர்ந்து வரவேற்கின்றேன்.. மிகவும் போற்றுகின்றேன்.
அதனால்தான் உங்களைப் போலவே எமது வடக்குவாசிகளும் பூமியிலே மீண்டும் குடியேறுவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கும் இவ்வேளையிலே பல வேலைகளைக் கூட ஒத்திவைத்துவிட்டு உங்களது வெற்றிவிழாவில் கலந்து கொள்வதற்காக வந்திருக்கின்றேன்...
(பலத்த கரகோஷம்)
அதேசமயம் நீண்ட காலமாக நாம் ஒருவரையொருவர் மறைமுக எதிரிகளாகக் கருதி ஒதுங்கியிருந்த பழைய நாட்களை எண்ணி நான் இப்போதும் கூட வருந்துகின்றேன்.. வெட்கமடைகின்றேன்.. நம்மிடையே வடக்கு வாசிகள் தெற்குவாசிகள் என்ற வேறுபாடுகள் இருந்தாலும் நாம் அனைவரும் பூமிக்கிரகத்திலிருந்து வந்து குடியேறியவர்கள் என்ற வகையிலே சகோதரர்களே.. பூமியிலும் சரி இந்த விண்வெளியிலும் சரி இனிமேல் எங்கு சென்றாலும் சரி நாம் பிரிந்து வாழ வேண்டியதில்லை..!'

இதை அவர் கூறியதும் 'ஹோ!' எனும் இரைச்சல் ஒலி பின்னணி இசையோடு எழுந்தது.

'பூமியிலே நமது கூட்டு முயற்சியுடன் நிகழ்ந்து வரும் புனர்நிர்மாணப் பணிகள் அனைத்தும் ஏறத்தாழ இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டன. ஏற்கனவே இங்கிருந்து 98 வீதமானவர்கள் பூமிக்குச் சென்றுவிட்டனர். மற்றும் சிலர் நமது 'மிதக்கும் மாளிகை' யில் இடைத்தங்கலாகவுள்ளனர். ஆனால் அனைவரும் அங்கே பாதுகாப்பாக வாழ்ந்து வருகின்றனர் என்பதால் எஞ்சியுள்ள விஞ்ஞானிகளாகிய நாமும் வெகுவிரைவிலே அங்கு சென்று குடியேறவேண்டிய நாள் நெருங்கிவிட்டது...'

'தாத்தா அவர் சொல்வது எல்லாமே உண்மைதானா?' என்று கேட்டான் அருகே அமர்ந்திருந்த மைக்கின் பையன்.

'ஆமாம்டா என் குட்டிப்பையா!'

'நீங்களும்; பூமிக்குப் போகப் போறீங்களா?'

'நிச்சயமாக! நமது முன்னோர்கள் வாழ்ந்த அந்த மண்ணைப் பார்த்தாக வேண்டும் எனக்கு.. ஆனால் இப்போதே அங்கு போகும்படி எவரும் உன்னை வற்புறுத்த மாட்டார்கள் என்றுதான் நம்புகின்றேன்'

'ஒருவேளை நம்மையெல்லாம் அங்கே அனுப்பிவிட்டு வடக்குவாசி விஞ்ஞானிகள் மட்டும் இங்கே முழுமையாக இருந்துவிடும் திட்டமோ என்னவோ..'

'சே! நீயும் உன் குறுக்குப் புத்தியும்..பேசாமல் அவர் சொல்வதைக் கேள்!'

'...எனவே முழுக்க நாம் அனைவரும் அங்கு சென்று குடியமர்ந்ததும் இந்தக் கிரகத்தை நமது சுற்றுலாவுக்குரிய வாசஸ்தலமாகவோ அல்லது விண்வெளி ஆராயச்சிக்குரிய மையமாகவோ மாற்றிவிடலாம் என்று நமது இணைந்த விண்ணியல் ஆய்வுக்குழுவினர் ஆலோசித்துள்ளனர்.. இதற்கான தீர்மானம் நாளை நடைபெறும் அரசாங்கத் தலைவர்களின் மாநாட்டிலே எடுக்கப்படும்'
விழா முடிவடைந்து டாக்டர் க்ரேலண்ட் மார்ஷ் அவர்கள் வடமுனைக்குச் செல்ல புறப்படலானார். வெளியில் நின்றிருந்த அவருடைய விமானம் வரைக்கும் நானும் மைக் ஜுனியரும் சென்றோம்.

'டாக்டர் ட்ரென்வர், சாப்பிடும்போதுஇந்தக் குட்டிப் பையன் என் பக்கத்திலிருந்து உங்க பாட்டியை மியூறியன் மெரீனாவைப்பற்றி நிறையப் சொல்லிட்டிருந்தான்... அவவை உங்களுக்கு நிறையப்பிடிக்குமோ..?'

'ஆமாம்.. அவங்க என்னோட  தாத்தா பெஞ்சமின் ட்ரென்வரோட பூமிக் காதலி'

'அவங்களோட நினைவாதான் என்னோட தாத்தாவின் தாத்தா இந்தப் பெரும்பள்ளத்துக்கு 'மியூறியன் க்ரேட்டர்' என்று பெயர் வச்சார் டாக்டர்?' என்றான் மைக்.
'ரியலி..?'

'ஆமாம்.. ஹீ இஸ் வெரி க்ரேஸி என்ட் ஸென்டிமென்டல் எபௌட் ஹேர்..'
'ஆனா...இந்த இடத்துக்கு 400 அல்லது 500 வருஷங்களுக்கு  முன்னால பூமியிலிருந்து வெறும் ஒற்றை டெலஸ்கோப்பில் பார்த்துக் கொண்டிருந்த நமது முன்னோர்கள் வச்சிருந்த பேர் வேறு ஒன்று என்று தெரியுமா உங்களுக்கு?'

'அப்படியா டாக்டர்..? என்ன பெயர் அது?' என்று மைக் கேட்டதற்கு அவர் கூறிய பதில் எனது காதில் விழுவதற்குள் திடீரென ஒரு புழுதிப்புயல் வேகமாய் வீசத்தொடங்கிவிட்டது. உடனடியாகப் புறப்பட்டால்தான் புழுதிப்புயலின் வேகம் அதிகரிப்பதற்கு முன்பு வடபகுதிக்கு  செல்லமுடியும் என்று டாக்டர் மார்ஷின் விமானி கூறவே அவர் அவசரமாக கிளம்பிவிட்டார்.
அவரது விமானம் சென்ற பின்பு ஏறத்தாழ அன்றைய இரவு முழுவதும் புயல் பயங்கரமாக வீசிக் கொண்டேயிருந்தது. அப்படியொரு மணற் புயலை வாழ்நாளில் நான் அங்கு கண்டதேயில்லை. ஆனாலும் அத்தகைய ஒன்றை தாங்கக்கூடியதாகவே எங்களது சகல கட்டிடங்களும் விண்ணியல் கோபுரங்களும் நிர்மாணிக்கப்பட்டிருப்பதால் அதுபற்றி நான் பெரிதாகக் கவலை கொள்ளவில்லை.
000

டைசி மனிதனும் கூடப் பூமிக்குத் திரும்பிச் செல்ல வேண்டிய நாள் அன்று.

பூமிக்குச் செல்லும் கடைசியாகச் செல்லும் ப்ளனட் ஸ்பேஸ் கேப் வாகனம் வெளியே காத்திருந்தது. நாங்கள் புறப்பட்டுச் சென்றதும் இந்தக் கிரகம் மனிதனில்லாத ஒன்றாக மாறிவிடும் என்று நினைக்கும்போதே மனதை ஏதோ பிசைவது போலிருந்தது. ஏறக்குறைய அனைவரும் உள்ளே ஏறி அமர்ந்து விட்டிருந்தனர். நானும் மைக்கும் மட்டுமே இன்னும் ம்யுறியன் வளாகத்தினுள்ளேயே நின்று கொண்டிருந்தோம். என்னால் அத்தனை சுலபமாக அங்கிருந்து புறப்பட்டுவிட முடியவில்லை. வளாகத்தின் வெளியிலிருக்கும் அந்த மண்மேடுகளின் மீது ஓடியாடித் திரிய வேண்டும் போலிருந்தது. ஓடுவதற்கு இயலவில்லை. நடந்தேன்.. நடந்தேன் நடந்து கொண்டேயிருந்தேன். இத்தனை காலமும் எத்தனை கற்பனைகளுடன் வாழ்ந்த இந்த மண்ணைவிட்டு அத்தனை சுலபமாகப் பிரிந்து செல்ல முடியவில்லை.

'தாத்தா, இத்தோடு எத்தனை கடைசித் தடவைகள்.. இன்னுமா கடைசியாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றீர்கள்.. வாங்க போகலாம்.' பொறுழையிழந்து கூவினான் மைக் ஜுனியர்.

'மைக், உண்மையைச் சொல்! நாம் இத்தனை காலம் வாழ்ந்த இந்தக் கிரகத்தை விட்டுச் செல்வதிலே உனக்கு வருத்தமே இல்லையா?'

'என்ன கேள்வி தாத்தா இது? இல்லாமலிருக்குமா.. ஆனால் இதைவிட மனிதன் வாழ்வதற்கு வசதியான கிரகமாக பூமி இருப்பதால் இதுபற்றி என்னால் ஓரளவுதான் கவலைப்பட முடிகின்றது.'

'ஒருவேளை நீ இங்கு மீண்டும் வர நேர்ந்தால் இந்த ம்யுறியன் க்ரேட்டர்ஸ் பள்ளத்தாக்கு இப்படியே இருக்கப்போவதில்லை தெரியுமா?'

'ஆமாம் தாத்தா, முந்திய நாளிரவு வீசிய மணல்புயலின் அகோரத்தைப் பார்த்த பின்பு எனக்கும் அப்படித்தான் தோன்றுகின்றது..'

'எல்லாமே மாறிவிடும் இடங்களின் பெயர்கள் கூட...! அதுசரி, நம்ம இடத்திற்கு முன்னைய பூமிவாசிகள் ஏதோ பெயர் வைத்திருந்ததாக டாக்டர் மார்ஷ் அன்றிரவு உன்னிடம் சொன்னாரல்லவா?

'ஆமாம். ஏதோ 'கேல் க்ரேட்டர்' என்று சொன்னதாகத்தான்தான் ஞாபகம்'

'நோ..! இது என்றைக்குமே மியூறியன் க்ரேட்டர்தான். முன்னைய பூமிவாசிகள் முட்டாள்கள்!'

 'ஓகே, டேக் இட் ஈஸி தாத்தா. இந்த பள்ளத்தாக்கு முழுவதையும் நடந்தே பார்க்கப்போறீங்களா என்ன? போதும் வாங்க திரும்பவும் மணல் புயல் வந்துவிடும் சாத்தியமிருக்கிறதாம்..'

'சரி போகலாம்  போய் ஏறு. நான் பின்னால் வருகின்றேன்!' என்றேன் மனமில்லாமல்.

'இனி போக வேண்டியதுதான்' என்று முணுமுணுத்தபடி நான் நின்றுகொண்டிருந்த மணல் மேட்டிலிருந்து இறங்கி வந்தேன். அப்போது காலிலே ஏதோ ஒன்று இடறவே நின்று குனிந்து பார்த்தேன். முதலில் அது ஒரு நீண்ட உலோகத்தாலான தட்டுப்போலத்தான் இருந்தது. காலால் சற்றுக் கிளறியதும் அதன் பெரும்பகுத மணலில் புதையுண்டு கிடக்க மேற்புறம் சூரியக்கிரணங்களில் பளபளத்தது.

'ஹேய் மைக்! இங்கே வா ஒருநிமிஷம்!' அதனருகே முழங்காலில்
மண்டியிட்டு அமர்ந்து நன்கு உற்றுப் பார்த்தேன்.

'ஏன் தாத்தா? உங்க மியூறியன் பாட்டியோட பெரும்பள்ளத்தின் மண்ணைப் பூமிக்குக் கொண்டு போய் வணங்கப்போகிறீங்களா?' கேலி பேசியபடி திரும்பி வந்தவன் என்னருகே நின்று குனிந்து பார்த்தான். அவன் விழிகளும் ஆச்சரியத்தில் அகல இருவரும் புதையுண்டு கிடந்த அந்த உலோகத்தட்டின் மீதிருந்த மணலைக் கைகளால் வேக வேகமாக விலக்கிப் பார்த்தபோது அதிலே...

'க்-யூ-ரி-யோ-சி-ட்-டி ரோவர் கி.பி. 2012 ' என்று ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டிருந்தது.


 
-மூதூர் மொகமட் ராபி
(2012.09.09)

வடிவேலு : திராவிட அரசியலின் உரைகல்

 

 

 

 



‘கிழவன்இன்னும் குமரனாகலையா’ என்று எம்.ஜி.ஆரைப் பற்றி நாகேஷ் கேட்டதாகச் சொல்வார்கள். ‘நினைவின் தாழ்வாரங்கள்’ தொடரில் கலாப்ரியாவும் இதனைக் குறிப்பிட்டிருக்கிறார்.


‘தேர்த் திருவிழா’ திரைப்படத்தின் மேக்கப்பில் இருக்கும்போது இப்படி நாகேஷ் கேட்டது எம்.ஜி.ஆரின் காதுக்குப் போகவும், அதற்குப் பிறகு சில காலங்களுக்கு எம்.ஜி.ஆரின் படங்களில் நாகேஷ் நடிக்கவே இல்லை. பின்னர் சமாதானமானார்கள். 1968ல் நடந்தது இது. இதற்கு முன்னரே சந்திரபாபு என்ற ஒரு நடிகரைக் காலி செய்தது எம்.ஜி.ஆரே என்ற பேச்சும் உள்ளது. இப்போது 2012. நாற்பது ஆண்டுகள் கழிந்திருக்கிறது. திராவிட இயக்கம் தந்த இந்தப் பழக்கம் இன்னும் ‘மெருகேறியிருக்கிறது.’


தமிழ்த் திரையுலகின் மிக முக்கியமான கலைஞர்களில் ஒருவராகப் பரிமளித்தவர் வடிவேலு. அவரது கலைப்பயணம் முடிந்துவிட்டது என்ற அர்த்தம் தொனிக்க, ‘பரிமளித்தவர்’ என்று சொல்வதே கொஞ்சம் வருத்தமாகத்தான் உள்ளது. 2011ல் அவர் நடித்து வெளிவந்த படங்கள் மூன்று மட்டுமே என நினைக்கிறேன். 2011ல் காமெடியின் உச்ச நடிகர் இவரே. ஓர் உச்ச நடிகருக்கு நேர்ந்த கதி இது. தமிழில் இதுவரை வந்த காமெடி நடிகர்களில் உச்ச நடிகர் வடிவேலுவே என்பது என் தனிப்பட்ட கருத்து. பெரும்பாலானவர்கள் இத்துடன் ஒத்துப் போவார்கள் என்றே நினைக்கிறேன். ஓர் உச்ச நடிகரை ஒரே தினத்தில் அதள பாதாளத்தில் வீழ்த்தி வைக்க நம் அரசியலால் முடியும் என்ற கேடுக்கெட்ட ஒரு காலத்தில் நாம் வாழ்கிறோம்.


விஜய்காந்த் அரசியலுக்கு வந்ததிலிருந்தே வடிவேலுவுக்கு வினை ஆரம்பித்தது. ஏதோ ஒரு திரைப்படத்தில் விஜய்காந்தின் அரசியல் வருகையைப் பாராட்டிப் பேசவேண்டும் என்பது போன்ற ஒரு வசனத்தை (எங்கள் அண்ணா திரைப்படமாக இருக்கலாம்) பேச மறுத்துவிட்டார் வடிவேலு. இதற்கு முன்னர் பல படங்களில் வடிவேலுவும் விஜய்காந்தும் இணைந்து நடித்திருக்கிறார்கள். அதிலெல்லாம் வடிவேலு தான் ஏற்ற கதாபாத்திரத்தின் வழியே விஜய்காந்தைப் பாராட்டிப் பல தடவை பேசியிருக்கிறார். ஏனோ இந்தப் படத்தில் மறுத்துவிட்டார். அது அவரது உரிமை. தொடங்கியது பிரச்சினை. எப்படித் தன்னைப் பாராட்டிப் பேசுவதை போயும் போயும் ஒரு காமெடி நடிகன் மறுப்பது என்று கதாநாயகனுக்கு வந்துவிட்டது கோபம்.


ஆனால் நாகேஷ் போல வடிவேலு அமைதியாக இல்லை. தன்னை எதிர்ப்பது எம்.ஜி.ஆர் இல்லை என்னும் தைரியமாக இருந்திருக்கலாம். விஜய்காந்தின் மிரட்டல் அரசியலுக்கு இணையான அரசியலில் இறங்கினார் வடிவேலுவும். இரண்டு பக்கமும் பற்றிக்கொண்டது. இதற்கிடையில் வடிவேலுவின் மேனேஜர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். இன்றளவும் வடிவேலுக்குப் பிரச்சினையாக இருப்பது இந்தத் தற்கொலை. தொடர்ந்து நிகழ்ந்த மனவேறுபாடுகளின் உச்சத்தில், விஜய்காந்த் எந்தத் தொகுதியில் நின்றாலும் தான் எதிர்த்துப் போட்டிப் போடப்போவதாக அறிவித்தார் வடிவேலு.


2011ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கும் தேமுதிகவுக்கும் கூட்டணி ஏற்பட்டது. 67க்குப் பிறகு கழகங்கள் உருவாக்கி வைத்திருந்த அரசியல் நாகரிகக் கணக்கின்படி, தேமுதிகவுக்கு வேண்டாதவர்கள் எல்லாருமே அதிமுகவுக்கும் வேண்டாதவர்களே என்று அதுவாகவே ஆகிப்போனது. இதனை வடிவேலுவும் நம்பினார். எப்படியும் விஜய்காந்தை வீழ்த்தியே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்ட வடிவேலு அழகிரியின் கரத்தை வலுப்படுத்தி திமுகவுக்குப் பிரசாரத்துக்குப் போனார். பிடித்துக்கொண்டது சன்னும் சனியும்.


சன் டிவி இதனை பயன்படுத்திக்கொண்டது. விஜய்காந்தின் தனிப்பட்ட பிம்ப அழிப்பில் வடிவேலுவும் சன் டிவியும் திமுகவும் போட்டி போட்டுக்கொண்டு ஈடுபட்டார்கள். இது மக்களிடையே எடுபடவும் செய்தது. தன் பேச்சுக்கு வரும் கூட்டத்தைக் கண்டு மதி மயங்கிப் போன வடிவேலு தான் என்ன பேசுகிறோம் என்ற விவஸ்தையின்றி வாய்க்கு வந்தது எல்லாவற்றையும் பேசினார். ஜெயலலிதாவை நேரடியாகத் தாக்கி எதுவும் பேசவில்லை என்றாலும், கருணாநிதியை வானளாவப் புகழ்ந்ததையும், கருணாநிதி ஆட்சியின் சாதனைகளாக அவர் பட்டியலிட்டதையும், தனக்கு எதிரானதாகவே அதிமுக தலைமை பார்த்திருக்கும். ஏனென்றால் அதிமுகவும் திமுகவும் இதுபோன்ற விஷயங்களிலெல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே.


ஒருவகையில் ஜெயலலிதா தன்னைத் தாக்குவதைக் கூடப் பொறுத்துக்கொள்வார். ஆனால் தன்னை ஒப்பிட்டுக் கருணாநிதியைப் புகழ்வதைப் பொறுத்துக்கொள்ளவே மாட்டார்.


இதற்கிடையில், தேர்தல் முடிவுகள் வடிவேலுவுக்கு எதிராக அமைந்தன. தேர்தல் முடிவுகள் வெளிவரும் நாளன்றே வடிவேலுவின் வீடு, தோட்டம் ஆகியவை தேமுதிக குண்டர்களால் தாக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. தான் விரித்துக்கொண்டு தானே விழுந்த வலை மெல்ல இறுகுவதை அவர் அன்றுதான் உணர்ந்திருக்கவேண்டும்.


வடிவேலு செய்த தவறுகள் என்ன?


பெருச்சாளிக்குப் பயந்து பாம்பிடம் அடைக்கலம் சென்றது. அரசியல் என்பது வேறு, திராவிட அரசியல் வேறு என்பதைப் புரிந்துகொள்ளாதது. ஆனால் இவையெல்லாம் மிகச் சிறிய தவறுகளே. ஓர் அரசியல் தலைவரைக் குடிகாரர் என்று சொல்வது, நாகரிகக் குறைவே என்றாலும், அதில் உண்மை இருக்குமானால் அது மாபெரும் தவறல்ல. வடிவேலுவும் அவர் பிரசாரம் செய்யும் கட்சித் தலைவர்களும் உத்தமர்களா என்ற கேள்வியும் கூடவே எழுகிறது. இந்தக் கேள்வியுடன் சேர்த்துப் பார்த்தால், வடிவேலு சொல்வதெல்லாம் தனிப்பட்ட வெறுப்பின் உச்சத்தால் மட்டுமே என்பதைக் கண்டுபிடித்துவிடமுடியும். உண்மையில் இதனை எல்லாரும் அறிந்தே இருந்தார்கள்.


ஆனால் அதற்குப் பின்பு நடப்பதுதான் அராஜகத்தின் உச்சமாக இருக்கிறது.
ஒருவர் அதிமுகவுக்கு எதிராக – இல்லை, திமுகவுக்கு ஆதரவாக – பேசினார் என்ற ஒரே காரணத்தினாலாயே அவருக்கு நடிக்க வாய்ப்பு வழங்கப்படாது என்பது எப்பேற்பட்ட அராஜகம்? இதனை ஜெயலலிதா முன்னின்று நடத்தியிருப்பார் என்று நான் நம்பவில்லை. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடனேயே, எதற்கு நமக்கு வம்பு என்றுதான் பலரும் ஒதுங்கியிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.


உண்மையில் ஜெயலலிதாவே வடிவேலுவைத் தங்கள் படங்களில் நடிக்க வைக்க உள்வட்டங்களின் வழியே இயக்குநர்களுக்குக் கட்டளை இட்டிருக்கவேண்டும். வடிவேலுவின் பிரசாரம் வேறு, அவரது நடிப்பு வேறு என்று தெளிவாகச் சொல்லியிருக்கவேண்டும். ஆனால் ஜெயலலிதா ரஜினி அல்ல என்பதுதான் உண்மை. ஜெயலலிதா இதனை வெகுவாக ரசித்திருப்பார் என்றே தோன்றுகிறது. முன்னின்று நடத்துவதற்கும், ரசிப்பதற்கும் அதிக வேறுபாடு இல்லை என்பதுவும் உண்மையே.


இப்படி நடப்பது ஏதோ ஒரு சாதாரண நடிகருக்கல்ல. ஓர் உன்னதக் கலைஞனுக்கு இது நேர்ந்திருக்கிறது. தேர்தல் முடிவு ஓர் நடிகனைக் காணாமல் ஆக்கிவிட்டதைப் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். வடிவேலுவை தன் படங்களில் நடிக்க வைக்க இயக்குநர்கள் அஞ்சி நடுங்குகிறார்கள்.
எந்த அளவுக்கு என்றால் – கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓர் அறிவிப்பு வெளியானது. சுந்தர் சி திரைப்படத்தில் வடிவேலு நடிக்கப் போவதாக. நான் அன்று மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். என்னதான் வடிவேலு நாகரிகக் குறைவாகப் பேசியிருந்தாலும், நடிப்பு என்ற வகையில் வடிவேலு ஒப்பற்ற கலைஞன். இன்றும் நகைச்சுவை சானல்களில் வரும் வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகள் வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கின்றன என்பதை மறுக்கவே முடியாது. எனவே அவர் நடிக்க வரவேண்டியதுதான் தர்மம். அந்த வகையில் சுந்தர் சி பாராட்டுக்குரியவர் என நினைத்துக்கொண்டேன். மறுநாளே மறுப்பு வந்தது. அப்படி ஓர் எண்ணம் தனக்கில்லை என்று சுந்தர் சி சொன்னதாக அறிந்தேன். அதேபோல் ரஜினி படத்தில் வடிவேலு நடிக்க இருப்பதாக ஒரு செய்தியும், அதனை கே.எஸ். ரவிகுமார் மறுத்ததாகவும் அறிந்தேன். இதெல்லாம் உண்மையா என்று தெரியாது. ஆனால் இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில்தான் நாம் வாழ்கிறோம். 2011 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு இன்றுவரை வடிவேலு நடித்து ஒரு படம்கூட வெளியாகவில்லை என்பது, இதெல்லாம் உண்மையாகத்தான் இருக்கும் என்றுதான் சொல்லவைக்கிறது.


திராவிட இயக்கக் கட்சிகளான அதிமுகவும் திமுகவும் இந்த வகையான அரசியலுக்குக் காரணம். தனக்கு எதிராகக் கருத்துச் சொல்பவர்கள் எவருமே தங்களுடைய தனிப்பட்ட எதிரிகள் என்ற கருத்து தமிழ்நாட்டில் வேரூன்றியதற்கு கருணாநிதியும் ஜெயலலிதாவுமே காரணம். ஏதேனும் ஒரு நடிகரோ எழுத்தாளரோ தன்னைப் பற்றி எதிராக எழுதினால், அவரை எதிரியாக நினைப்பதும், தேவைப்படும்போது ‘அரவணைப்பது’ போல பேசி அவரை அடிமையாக்குவதும் இவர்களுக்குக் கைவந்த கலையே. அதைக்கூட தானே பார்த்துச் செய்ததாகச் சொல்வார்கள். இழவு வீட்டில் பிணமாகக்கூடத் தாங்களே இருக்க நினைக்கும் மனநிலை.


யாருக்கு வேண்டும் உங்கள் அரவணைப்பு என்று எதிர்த்துப் பேசி உண்மை நெஞ்சுரத்துடன் ஒருவர் இங்கே குப்பை கொட்டிவிடமுடியாது. மேடையில் பகிரங்கமாக, தைரியமாகப் பேசிய அஜித், மறுநாளே கூழைக் கும்பிடு போட்டுக்கொண்டு கருணாநிதிக்கு பொன்னாடை போர்த்துவதைப் பார்த்திருக்கிறோம். ஜெயலலிதாவின் முன்னிலையில் கண்டித்துப் பேசிய ரஜினி பட்ட தொல்லைகளுக்கு அளவே இல்லை. அஜித்தும் ரஜினியும் மீண்டும் சமரசம் ஆகியிருக்கலாம். அதற்கான கேவலம்கூட நம்மை இப்படி வைத்திருக்கும் கட்சிகளுக்கு உரியதே அன்றி, அவர்களுக்கு உரியன அல்ல. இப்படி நடக்கும் என்று தெரிந்தும் அவர்கள் அப்படிப் பேசியதே சாதனைதான்.


வடிவேலு போன்ற ஒரு நடிகருக்கு வாய்ப்பில்லாமல் இருப்பது இப்படியான நம் அரசியல் கேவலத்தின் உரைகல்லாகவே விளங்குகிறது. அதே கேவலத்தின் வழியாகவே வடிவேலு வெளிவரவேண்டியிருக்கும். இன்று விஜய்காந்தும் ஜெயலலிதாவும் மோதியுள்ள நிலையில், ஒரே ஒரு பொன்னாடையை வடிவேலு ஜெயலலிதாவுக்குப் போர்த்தினால் போதும். மீண்டும் வடிவேலு என்ற கலைஞனின் பல வெற்றிகளை நம்மால் திரையில் காணமுடியும். கேவலங்களைப் பட்டியலிட்டுவிட்டு, அதே கேவலத்தின் வழியேதான் நாம் வெளியேற வேண்டுமா என்றால், இன்றைய அரசியல் சூழலில் வேறு வழியில்லை என்றே சொல்லவேண்டியிருக்கிறது. நல்ல நடிகன் என்ற பெரிய அந்தஸ்தின் முன்பு, இந்த சமரசம் பொறுத்துக்கொள்ளக் கூடியதாகவே தெரிகிறது. கொஞ்சம் அசிங்கத்துடன் பொறுத்துக்கொள்ள வேண்டியதுதான்.


சந்திரபாபு, என்.எஸ்.கே, எம்.ஆர்.ராதா போன்ற நடிகர்களுக்கு வாழ்க்கையில் ஓர் பெரிய அடி விழுந்து, அதிலிருந்து வெளியே வந்து மீண்டும் நடித்தபோது அவர்களால் முன்பு போல வெற்றி பெற முடியவில்லை. வடிவேலுவுக்கும் இது நிகழ்ந்துவிடக்கூடாது என்றுதான் மனம் வேண்டிக்கொள்கிறது. இனி மீண்டும் நடிக்கவந்தால், தான் எப்படி அரசியல் கட்சிகளாலும் டிவிக்களாலும் பகடைக்காயாகப் பயன்படுத்தப்பட்டோம் என்பதை மனத்தில் வைத்துக்கொள்வது வடிவேலுவுக்கு நல்லது. இங்கே நிலவுவது அரசியல் விஷச் சூழல். அதை மெல்ல மெல்லத்தான் மாற்றமுடியும். அந்த மாற்றத்துக்கு வடிவேலு பலியாகவேண்டியதில்லை.


Thanks: Tamilpaper.com

Tuesday, September 11, 2012

Cinema : உறக்கமற்றவன் 2

 
 
 
 
 
 
 
அத்தியாயம்  2
 

ரு நல்ல உதவி இயக்குனரின் அடையாளம் என்ன?
 
 
படப்பிடிப்பில் யாருடைய பெயரை ஒரு இயக்குனர் பலமுறை உச்சரிக்கிறாரோ, அவர்தான் சிறந்த உதவி இயக்குனர். இப்படிச் சொல்பவர், தமிழ் சினிமாவுக்கு உலக அரங்கில் ஒரு பார்வையை ஏற்படுத்திக்கொடுத்திருக்கும் இயக்குனர் ஷங்கர்.
 
 
இவரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய மதி என்பவரை படப்பிடிப்பில் அடிக்கடி அழைத்துக்கொண்டே இருப்பாராம். இந்த மதி, இவரிடமிருந்து விலகி அரிது அரிது என்ற படத்தை இயக்கப் போய்விட்டார். அப்போதும் வாய் தவறி சில நேரங்களில் மதி என்று அழைத்து, அவர்தான் இப்போ நம்மிடம் இல்லையே என்று நாக்கைக் கடித்துக்கொண்டிருக்கிறாராம் பலமுறை.


அதோடு விட்டிருந்தால் கூட இது வழக்கத்தால் வந்தது என்று நினைத்திருக்கலாம். தனது எந்திரன் படத்தில் ஒரு முக்கியமான வேலை இருந்தது. அதைச் சரியாகச் செய்யக்கூடியவர் மதி மட்டும்தான் என்பது ஷங்கரின் எண்ணம். அரிது அரிது படத்தை இயக்கிக்கொண்டிருந்த மதியை அழைத்து, எனக்கு இந்த வேலையைச் செய்து தரணும். உன்னால் முடியுமா என்றார்.
 
 
தனது படப்பிடிப்பைத் தள்ளிவைத்துவிட்டு குருநாதருக்காகச் செய்துகொடுத்தார் மதி.
 
 
அவரை விட்டுப் போனபிறகும் நம்பிக்கையோடு ஒரு இயக்குனரை, தன்னைத் திரும்ப அழைக்க வைப்பதுதான் ஒரு நல்ல உதவி இயக்குனருக்கு அடையாளம்.
0
 
 
 
குருகுலம் என்பார்கள் அந்தக் காலத்தில். கிட்டத்தட்ட அதுபோலத்தான் உதவி இயக்குனர்களின் பயிற்சிக் காலமும். பாரதிராஜாவிலிருந்து பாக்யராஜ். பாக்யராஜிலிருந்து பார்த்திபன். பார்த்திபனிலிருந்து விக்ரமன், விக்ரமனிலிருந்து கே.எஸ்.ரவிக்குமார். ரவிக்குமாரிடமிருந்து சேரன். சேரனிடமிருந்து சிம்பு தேவன். இப்படித் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது படைப்பாளிகளின் பயணம். இது முடியவே முடியாத தொலைதூரப் பயணம்தான்.
 
 
இன்று ஒரே மேடையில் அத்தனை பேரும் கம்பீரமாக உட்கார்ந்திருக்கிற காட்சிகளைக்கூடப் பார்க்க முடிகிறது. ஆனால் பயிற்சிக் காலங்களில் எப்படி இருந்திருப்பார்கள் இவர்கள்? தனக்கு அடுத்த நிலையில் இருப்பவருக்குப் பிரம்படி கொடுக்காத குறையாகக் கண்டிப்பு காட்டியிருப்பார்கள். மற்றபடி சகல அர்ச்சனைகளும் நடந்திருக்கும். அதுவும் வேலை நேரத்தில் ராட்சசக் கோபமெல்லாம்கூட வந்திருக்கும்.
 
 
 
பாரதிராஜாவுக்குப் பின்னால் எப்படி ஒரு கலைக் குடும்பமோ, அப்படி ஒவ்வொரு புகழ்பெற்ற இயக்குனருக்கும் ஒரு குடும்பம் இருக்கும். அப்படி யாரும் விரும்பாவிட்டாலும் தானே உருவாகிக் கிளை பரப்பும் என்பதுதான் அதிசயம்!
சரி, ஒரு படத்திற்கு எத்தனை இணை இயக்குனர்கள், துணை இயக்குனர்கள் தேவைப்படுவார்கள்?
 
 
 
அது நாம் எடுக்கப் போகிற கதையைப் பொருத்த விஷயம். பொன்னியின் செல்வன் மாதிரி ஒரு கதையைப் படமாக்குகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அதற்கு எத்தனை பேர் தேவைப்படுவார்கள்? அதே லோ-பட்ஜெட்டில் எடுக்கப்படும் ஒரு படத்தை எடுத்துக்கொள்ளுங்கள். நான்கு சுவரைத் தாண்டி வெளியே வராத கதைக்கு எத்தனை பேர் தேவைப்படுவார்கள்?
 
 
சொல்லாமலே புரிந்திருக்கும். ஆனால் ஒவ்வொரு படத்துக்கும் குறைந்தது இத்தனை பேர் தேவை என்ற கணக்கு இருக்கிறது. சராசாரியாக யார் யார் தேவை, அவர்களுக்கு என்னென்ன பணிகள் என்பதை இப்போது பார்க்கலாம்.
 
 
இணை இயக்குனர்:
 
 
இயக்குனர் மனத்தில் உருவான கதை, முதலில் இவருக்குத்தான் சொல்லப்படும். அதற்கு முன்பே இந்தக் கதை, வாய்ப்புக்காக ஓராயிரம் முறை கோடம்பாக்கத்தையே சுற்றி வந்திருக்கும். அது வேறு விஷயம். ஆனால் நாம் எடுக்கப் போவது என்ன என்பதை முழுமையாக இவரிடம் சொல்லியிருப்பார் இயக்குனர். இந்தக் கதை எந்த ஏரியாவில் நடக்கவேண்டும். என்னென்ன பேக்ரவுண்ட் வேண்டும் என்பதெல்லாம் இவருக்குத் தெரியும். அதனால் லொக்கேஷன் ஹன்ட்டிங் என்று சொல்லப்படும் வேலையை ஒளிப்பதிவாளருடன் செய்வது இந்த இணை இயக்குனர்தான். சமயங்களில் இயக்குனரும் வருவார். இல்லையென்றால் இணை இயக்குனரும், ஒளிப்பதிவாளரும், புரடக்‌ஷன் மேனேஜரும் கிளம்புவார்கள் லொகேஷன் பார்க்க.
 
 
கதைக்குத் தேவையான இடங்களை வீடியோவில் பதிவு செய்துவிட்டு வருவது இவர்களின் முதல் வேலை.
 
 
கதாநாயகன், கதாநாயகி இருவருக்கும் டைரக்டரே கதை சொல்லிவிடுவார். ஆனால் படத்தில் நடிக்கும் மற்றவர்களுக்குக் கதை சொல்வது அநேகமாக இவர்களாகத்தான் இருக்கும். படத்தில் வரப்போகும் சின்னச் சின்ன கேரக்டர்களுக்கு நடிகர் நடிகைகளைத் தேர்வு செய்வதும் இணை இயக்குனர்தான்.
 
 
 
இந்த இடத்தில் ஒரு சம்பவத்தைச் சொன்னால் உங்களுக்கு நன்றாகப் புரியும். கிழக்கே போகும் ரயில் படத்தில் பாரதிராஜாவுடன் இணை இயக்குனராகப் பணியாற்றினார் பாக்யராஜ். அதோடு வசனம் எழுதுகிற பொறுப்பும் இவருக்குத்தான்.
 
 
அந்த நேரத்தில் வாய்ப்பு கேட்டு தினந்தோறும் இவரை நச்சரிப்பாராம் நடிகர் விஜயன். அப்போது ஒரு சீனில் எப்படியாவது தலைகாட்ட வைக்கிறேன் என்று உத்தரவாதம் கொடுத்திருந்தார் பாக்யராஜ். ஒவ்வொரு நாளும் விஜயன் இவரைச் சந்திக்க வருவதும், சார் என்னை மறந்திராதீங்க என்று கெஞ்சுவதும் தொடர்ந்து கொண்டேயிருந்தது.
 
 
விஜயனுக்கு நேரம் நல்ல நேரம் போலும். தன்னையறியாமல் அந்த கேரக்டரை கொஞ்சம் கொஞ்சமாக அதிகப்படுத்திக்கொண்டே வந்த பாக்யராஜ், ஒரு கட்டத்தில் க்ளைமாக்சையே விஜயனின் கேரக்டர் தீர்மானிக்கிற மாதிரி கதையை அமைத்துவிட்டார். அது மட்டுமல்ல, இவரது தியாகத்தைத் தொடர்ந்து காதலர்கள் இணைகிற மாதிரியும் காட்சியை அமைத்துவிட்டார். ஒரு காட்சியில் தலை காட்டலாம் என்று வந்த விஜயன் அப்படத்தின் செகண்ட் ஹீரோ அளவுக்கு வளர்ந்தார்.
 
 
காரணம் பாக்யராஜ் என்ற இணை இயக்குனர் உருவாக்கிய ஸ்கிரிப்ட். என்னய்யா, இந்த கேரக்டரை இவ்வளவு பெரிசா கொண்டாந்துட்டே என்று பாரதிராஜாவே அலுத்துக்கொள்கிற மாதிரி அமைந்தது சூழ்நிலை. அப்படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜயன் பெரிய நடிகராக வளர்ந்ததும், ஏராளமான படங்களில் கதாநாயகனாகவே நடித்தார் என்பதும் எத்தனை சுவாரஸ்யமான வரலாறு!
 
 
ஷூட்டிங்குக்குத் தேவையான பிரேக் டவுன் போடுவதும் இந்த இணை இயக்குனரின் பணிகளில் ஒன்று. அதென்ன பிரேக் டவுன்?
நடிகர் நடிகைகள் படத்துக்குக் கொடுத்திருக்கும் தேதிகளை எப்படிச் சரியாகப் பயன்படுத்துவது என்பதுதான் இந்த பிரேக் டவுன். ஒவ்வொரு ஷெட்யூலுக்கும் எந்தக் காட்சிகளை எடுக்கப்போகிறோம் என்பதை முடிவு செய்யும் சின்னக் கணக்கீடுதான் இது. முதலில் க்ளைமாக்ஸ்கூட எடுக்கப்படலாம். அல்லது க்ளைமாக்சில் வரும் கடைசி ஷாட்டைக்கூட முதலில் எடுக்கலாம். தனித்தனியாகப் பிரித்துக்கொள்வதுதான் இந்த முறை.
இத்தனை பொறுப்புகளைச் சுமக்கும் இணை இயக்குனருக்கு யூனிட்டில் எந்தளவுக்கு மரியாதை கிடைக்கும்?
 
 
ஒரு இயக்குனருக்கு எந்தளவுக்கு மரியாதை தரப்படுமோ, அந்தளவுக்கு! சில நேரங்களில் தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் கருத்து வேறுபாடுகள் எழலாம். அதென்ன …லாம்? கண்டிப்பாக எழும். அப்போதெல்லாம் இடையில் நுழைந்து சமாதானக் கொடியைப் பறக்க விடுவதும் இவரது தலையாயப் பணிதான்!
 
Thanks: Tamilpaper.com
 
-தொடரும்-

Monday, September 10, 2012

Cinema : உறக்கமற்றவன் 1

 
 
 
 
 
 
 
 
சினிமாவில் உதவி இயக்குநர்கள் என்பவர்கள் ஒரு முக்கியமான இனம். தம் சுயத்தை மறைத்துக்கொண்டு இயக்குநரின் படைப்புக்கு வடிவமும் வனப்பும் கொடுக்கிறவர்கள். ஒரு நாளைக்கு 25 மணிநேரத்துக்கும் மேல் உழைக்கிற வர்க்கம். ஆயினும் பெரிய பலன் இருக்காது. என்றாவது ஒருநாள் இயக்குநராகிவிடுவோம் என்னும் கனவு கலந்த நம்பிக்கையைத் தின்று ஜீவிக்கும் உதவி இயக்குநர்களைப் பற்றியது இந்தத் தொடர். உதவி இயக்குநர் ஆக விரும்புகிறவர்களுக்கும் உதவி இயக்குநர்களாக இருப்பவர்களுக்கும் இது உதவும். மற்றவர்களுக்கு ஒரு புதிய உலகின் பழைய மனிதர்களைப் புரிந்துகொள்ள வழி செய்யும்.
 
 
 
அத்தியாயம் 1
 
 
 
தவி இயக்குனர்களே இல்லாமல் ஒரு திரைப்படத்தை எடுத்துவிட முடியுமா?
 
 
வேண்டுமானால் ஒரு புகைப்படத்தை எடுக்கலாம். திரைப்படத்தை முடியாது. இவர்கள் இல்லாமல் சினிமாவே இல்லை. குண்டூசி தேவைப்படுகிறதா? எங்கய்யா அவரு… என்று இயக்குனர்களின் பார்வை இவர்கள் பக்கம்தான் திரும்பும். பீரங்கி தேவைப்படுகிறதா? ஏம்ப்பா நெட்ல தேடி அதுக்கு பர்மிஷன் வாங்குறது எப்படின்னு பாரு… என்று கட்டளையிடுவதும் இவர்களிடம்தான்.
தமிழ்சினிமாவில் 24 சங்கங்கள் இருக்கின்றன. இந்த சங்கத்தினர்களின் உழைப்பில்தான் ஒரு திரைப்படம் உருவாகிறது.
 
 
இத்தனை சங்கத்தையும் தனது திறமையால் ஒருங்கிணைப்பவர்தான் உதவி இயக்குனர். இத்தனை குதிரைகள் பூட்டிய ரதத்தை ஓட்டுகிற அசாத்தியமான சாரதி நாம்தான் என்று இவர்கள் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். அதற்காக கடிவாளத்தைப் பிடித்திருக்கிற வேலைதானே என்று அலட்சியம் காட்டினால் குதிரைகள் அத்தனையும் சேர்ந்து குப்புறத் தள்ளிவிடுகிற அபாயமும் உண்டு.
எந்நேரமும் விழிப்போடு இருப்பவரே உதவி இயக்குனர். இரண்டு உதாரணங்களுடன் இதை ஆரம்பிக்கலாம்.
 
 
பாலசந்தரிடம் உதவி இயக்குனராக இருந்தவர்தான் இன்றைய பிரபல இயக்குனர் சுரேஷ்கிருஷ்ணா. இவர் தொழில் கற்றுக் கொண்டிருக்கும்போது நடந்த சம்பவம் இது.
 
 
படத்தின் ஹீரோ, ஹீரோயின் இருவரும் வெவ்வேறு படங்களில் நடிக்கப் போய்விட்டார்கள். அது கடைசி நாள் படப்பிடிப்பு. விட்டுப் போனவற்றுள் ஒரு முக்கியமான காட்சியை எடுக்க வேண்டி, முதல் நாளே சுரேஷ் கிருஷ்ணாவுக்கு ஒரு கட்டளையிட்டிருந்தார், கேபி.
‘ஒரு க்ளோஸ்-அப் எடுக்க வேண்டியிருக்கு. ஹீரோ, ஹீரோயினுக்கு டூப் போட்டுக்கலாம். யாராவது ஒரு பெண்ணை அழைச்சிட்டு வந்திரு. கால் அழகா இருந்தா போதும். கால் விரலில் ஹீரோ மெட்டியை மாட்டுவது மாதிரி காட்சி. எடுத்துட்டா பூசணிக்காய் உடைச்சிடலாம்’ என்றார்.
 
 
இந்த பூசணிக்காய் உடைப்பது என்பது தமிழ் சினிமாவில் முக்கியமான சம்பிரதாயம். படப்பிடிப்பு முடிவடைந்த கடைசி நாளில் ‘உஸ், அப்பாடா…’ என்று அத்தனை நாள் டென்ஷனையும் போட்டு உடைக்கிற சென்ட்டிமென்ட்தான் பூசணிக்காய் உடைப்பு!
 
 
 

இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா
 
 
குருநாதர் சொன்னபடி மறுநாளே ஒரு துணை நடிகையை செட்டுக்கு வரவழைத்து விட்டார் சுரேஷ் கிருஷ்ணா. மெட்டியை மாட்டி விடுகிற டூப்ளிகேட் ஹீரோவும் ரெடி.
 
 
பாலசந்தருக்கு ஒரு வழக்கம். அன்றைய படப்பிடிப்புக்குத் தேவையான எல்லா ஐட்டமும் உள்ளே நுழையும்போதே தயாராக இருக்க வேண்டும். எப்போது எது மனதில் தோன்றுகிறதோ, அதைப் படமாக்குவார்.
காலுக்குத்தான் ஷாட் என்பது தெரியாமல் ஃபுல் மேக்கப்போடு காலையில் இருந்தே காத்திருந்தார் துணை நடிகை. நேரம் போக வேண்டுமே? போகிற வருகிற தொழிலாளிகள் எல்லாம் இவரிடம் வழிந்து நெளிந்து கொண்டிருக்க, வேறொரு பக்கம் படப்பிடிப்பு துரிதமாக நடந்துகொண்டிருந்தது. எல்லா காட்சிகளையும் எடுத்து முடித்தபிறகு இறுதியாக இதற்கு வந்த டைரக்டர், “எங்கய்யா அந்த பொண்ணையும் பையனையும் வரச்சொல்லு” என்றார்.
முந்தைய காட்சிகளில் ஹீரோயின் கட்டியிருந்த புடைவையைத் தழையத் தழைய கட்டிக்கொண்டு வந்து நின்றார் டூப்ளிகேட் நாயகி. கையில் மெட்டியுடன் கீழே உட்கார்ந்தார் டூப்ளிகேட் நாயகன். “ஒரு மானிட்டர் போயிடலாம்ப்பா” என்று உதவியாளர்களுக்கு உத்தரவு போட்டுவிட்டு, “தம்பி அந்த மெட்டிய மாட்டு பார்க்கலாம்” என்றார் பாலசந்தர்.
 
 
அங்குதான் அதிர்ச்சி. புடைவையை லேசாக உயர்த்தி மெட்டியைக் கொண்டுபோன பையன் பேந்தப் பேந்த விழிக்க, அதைவிட மிரட்சியாக விழித்தார் சுரேஷ்கிருஷ்ணா.
 
 
அந்த பெண்ணுக்கு மெட்டி அணிகிற விரல் மட்டும் இல்லை!
கோபத்தில் முகம் சிவந்தது பாலசந்தருக்கு. வேறொரு பெண்ணை அழைத்து வந்து படப்பிடிப்பை நடத்தலாம் என்றால், அதற்கான அவகாசம் சுத்தமாக இல்லை. மறுநாள் படப்பிடிப்பைத் தள்ளிப்போடவும் முடியாது. இந்த ஒரு க்ளோஸ்-அப்புக்காக ஒரு லட்ச ரூபாய் எப்படி செலவு செய்ய முடியும்? அதுமட்டுமல்ல, அன்றைய தினம் பூசணிக்காய் உடைத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம். வேறு வழியில்லாமல் அந்தக் காட்சியை எடுக்காமலேயே படத்தை வெளியிட்டார் பாலசந்தர்.
 
 
உதவி இயக்குனர் செய்த தவறென்ன? முதல்நாளே டைரக்டர் தெளிவாகச் சொல்லிவிட்டார், இதுதான் காட்சியென்று. பெண்ணை அழைத்து வந்தவர், அவளது கால்களையும் விரல்களையும் கவனித்திருக்க வேண்டுமல்லவா? இதுதான் காட்சி என்று அந்தப் பெண்ணிடம் கூறியிருந்தாலாவது பிரச்னையை வெளிப்படையாகச் சொல்லியிருப்பாள். அதையும் செய்யவில்லை. ஒரு மிகப்பெரிய இயக்குனர், தான் எடுக்க நினைத்த ஒரு காட்சியை எடுக்க முடியாமலே போனது யாருடைய தவறு?
 
 
அதே சுரேஷ்கிருஷ்ணாதான் பின்னாளில் ரஜினி, கமல் என்ற இருபெரும் நட்சத்திரங்களை வைத்து வெற்றிப்படங்களையும் கொடுத்தார். அனுபவங்கள் ஒவ்வொன்றுமே பாடம் அல்லவா?
 
 
எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு அந்த உதாரணத்தைப் பார்த்தோம். ஓர் உதவி இயக்குனர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும் ஒரு சாம்பிள் பார்த்துவிடலாம். .
 
 

’சத்யம்’ திரைப்படத்தில் விஷால்
விஷால், நயன்தாரா நடித்து, ராஜசேகர் இயக்கிய படம் சத்யம். படப்பிடிப்பில் நடந்த வேடிக்கையான சம்பவம் இது. நேப்பியர் பாலம் அருகே விடியற்காலையில் கூடியது யூனிட். சன் ரைஸ் ஷாட். சூரியன் மேலெழும்பி வருவதற்குள் ஒரு சண்டைக்கான முன்னோட்டத்தை எடுத்து முடித்திருந்தார்கள். அதற்குள் வெளிச்சம் தனது அடர்த்தியை அதிகப்படுத்த, மீதிக் காட்சியை சூரியன் அடங்குகிற நேரத்தில் எடுத்து, விடியற்காலைக் காட்சியாக மேட்ச் செய்து கொள்ளலாம் என்பது ஒளிப்பதிவாளர் ஆர்.டி. ராஜசேகரின் ஐடியா.
 
 
மாலை நேரம். திட்டமிட்டபடி சுமார் எண்பது பேர் கொண்ட படப்பிடிப்புக்குழு கோவளம் பீச்சில் கூடியது. கதைப்படி வில்லன் தனது துப்பாக்கியை விஷால் நெற்றியில் வைக்க வேண்டும். ஸ்கிரிப்ட் பேப்பரில் எழுதியிருப்பது போல கரையிலிருந்து சில அடி துரத்தில் கடல் நீருக்கு நடுவே அமைந்துள்ள குட்டிப்பாறை ஒன்றில் நின்று கொண்டார் விஷால். அவரது நெற்றியில் துப்பாக்கியை வைக்க வேண்டிய வில்லனும் தயார். மணி ஐந்தரைக்கு வந்ததும் கேமிராவை ஓடவிடலாம் என்பது ஒளிப்பதிவாளரின் முடிவு.
சரியாக ஐந்தரை. ஓ.கே என்பது போல டைரக்டரும் சைகை காட்ட, துப்பாக்கிய கொடுங்க சார் என்றார் வில்லன். அப்போதுதான் தெரிந்தது. முக்கிய பிராப்பர்ட்டியான துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வரவேயில்லை யாரும்! ஆர்ட் டிபார்ட்மென்ட் பொறுப்பை கவனிக்கும் உதவி இயக்குனர், அங்கிருந்தால் அடி விழும் என்று நினைத்தாரோ என்னவோ, கண்ணிமைக்கும் நேரத்தில் எஸ்கேப். (இது போன்ற இக்கட்டான நேரத்தில் சம்பந்தப்பட்ட பொறுப்பை கவனிக்கும் உதவி இயக்குனர் ஓடிவிடுவது சினிமா வழக்கம். கோபம் அடங்கிய பின் குட்டிப்பூனை மாதிரி நைசாக வந்து யூனிட்டில் இணைந்து கொள்வார்கள்)
 
 
படத்தின் ஹீரோ மட்டுமல்ல, தயாரிப்பாளரும் விஷால் என்பதால் அவரது கண்களில் பொறி பறக்கிறது. “என்ன சார் வேலை பார்க்கிறீங்க” என்று அத்தனை பேரையும் காய்ச்ச, மின்னலாக ஒரு வேலை செய்தார் ஒரு அசோசியேட் இயக்குனர்.
 
 
சூரியன் மறையும் இந்த அரை மணி நேரத்திற்குள் இந்தக் காட்சியை எடுக்கவில்லை என்றால், இதற்காக மறுநாளும் இதே யூனிட், இதே இடத்தில் கூட வேண்டும். செலவு நிச்சயம் ஒரு லட்சத்திற்குக் குறையாமல் ஆகும். தேவையா அது? கொஞ்சம் கூட கூச்சமோ, பயமோ இல்லாமல் அங்கே பாராவுக்கு வந்திருந்த காவல் துறை அதிகாரியிடம், “சார் உங்க துப்பாக்கியை கொடுத்திங்கன்னா…” என்று தயக்கத்தோடு தலை சொறிந்தார்.
 
 
அவ்வளவுதான். கடும் கோபம் வந்தது அந்த அதிகாரிக்கு. “ஏன்யா, நீ என்ன லூசா?” என்றார் ஆத்திரம் அடங்காமல்.
 
 
“மேலதிகாரிகளுக்குத் தெரிஞ்சா என் வேலை போயிடும் தெரியுமா. நான் தர மாட்டேன்” என்று அந்த இடத்திலிருந்தே அகல முற்பட்டார். அவர் மீது பாய்ந்தாவது துப்பாக்கியைப் பிடுங்கிவிட வேண்டும் என்கிற அளவுக்கு பரபரப்பான அசோசியேட், “அண்ணே, ப்ளீஸ். அதில இருக்கிற குண்டையெல்லாம் எடுத்துட்டு கொடுங்கண்ணே. ஒரு அஞ்சே நிமிஷம். உங்க கையில பத்திரமா சேர்த்திர்றேன்” என்று கெஞ்ச, விஷாலும் தனது பங்குக்கு ஓடிவந்தார் அதிகாரியிடம்.
 
 
கோபத்தைக் கொஞ்சம் கட்டுப்படுத்திக்கொண்ட போலீஸ் அதிகாரி, “சார். நீங்க தண்ணிக்கு மேல எடுக்கிறீங்க. தவறி தண்ணியில விழுந்திச்சின்னா என் வாழ்க்கையே போயிடும். வேணாம்” என்றார் கெஞ்சாத குறையாக. “இல்ல சார். படப்பிடிப்பு நடக்கிற இடத்துக்குப் பக்கத்திலேயே நீங்களும் வந்து நின்னுக்கலாம். கடல் பகுதி என்பதால் ஏற்கெனவே சில மீனவர்களையும் செக்யூரிடிக்கு வச்சிருக்கோம். துப்பாக்கி கீழே விழவே விழாது. விழுந்தாலும் எடுத்துக் கொடுக்கதான் இவங்க” என்றெல்லாம் மந்திரம் போட்டு துப்பாக்கியைக் கைப்பற்றினார்கள்.
 
 
நினைத்த மாதிரியே பத்தே நிமிடத்தில் ஷாட்டை முடித்துவிட்டு பத்திரமாக துப்பாக்கியைத் திருப்பிக் கொடுத்தார்கள்.
 
 
அந்த அசோசியேட் இயக்குனர் காவல் துறை அதிகாரியை அணுகி அவரது துப்பாக்கியைக் கேட்காமல் போயிருந்தால், மறுநாள் ஒரு லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் கூடியிருக்கும். நினைத்த மாதிரி காட்சி அமைந்திருக்குமா என்பதும் சந்தேகம்.
 
 
இம்சை அரசன் 23 ம் புலிகேசி படத்தை இயக்கிக் கொண்டிருந்த போது அப்படத்தின் இயக்குனர் சிம்புதேவனுக்கும் ஒரு மோசமான அனுபவம் நேர்ந்தது.
 
 
‘பஞ்சு மெத்தைக் கிளியே’ என்றொரு பாடல் அப்படத்தில் உண்டு. இதை செஞ்சி அருகே படமாக்க நினைத்திருந்தார் சிம்புதேவன். அதிகாலையில் சென்னையில் இருந்து கிளம்பி ஏழு மணிக்கெல்லாம் ஸ்பாட்டுக்குப் போய்விட்டார்கள். நடிக்க வேண்டிய நடிகர் நடிகைகளும் வந்தாயிற்று. காலை டிபனை முடித்துவிட்டு லொகேஷனில் கேமிராவையும் வைத்துவிட்டார். ஷாட் வைக்கப் போகும்போதுதான் தெரிந்தது. பாடலைப் பதிவு செய்து வைத்திருக்கிற நாகராவை எடுத்துக் கொண்டு வரவில்லை என்பது. இந்த வேலையை கவனிக்க வேண்டிய உதவி இயக்குனர் பதறிப் போய் நிற்க, யாரைக் கடிந்து கொள்வது?
 
 
திரும்பி சென்னைக்கு வந்தால் அன்றைய படப்பிடிப்புக்கான செலவுகளை நஷ்டக்கணக்கில்தான் சேர்க்க முடியும். தயாரிப்பாளரிடம் படப்பிடிப்பு கேன்சல் ஆனதற்கு இப்படி ஒரு காரணத்தைச் சொல்வது நாகரிகமாகவும் இருக்காது. என்ன செய்வது என்று விரல் நகத்தைக் கடித்துத் துப்பிய சிம்பு தேவனுக்கு ஒரு யோசனை வந்தது. தான் போட்டுக் கேட்பதற்காக அந்தப் பாடலை அவர் ஒரு கேசட்டில் தனியே பதிவு செய்து வைத்திருந்தார். அதை ஒரு மைக் முன் வைத்து பாட வைத்தார். ஒவ்வொரு வரியையையும் ரிவைண்ட் செய்து செய்து படமாக்கினார்.
 
 
கருத்துக்குத் தெரிந்தே இதில் ஒரு தவறு நிகழும். அதாவது நாகராவுக்கும் இந்த டேப் பதிவுக்கும் இரண்டு வினாடி வித்தியாசம் வரும். அதனால் எடிட்டிங்கில் பிரச்னை ஆகும். ஆனாலும் வேறு வழியில்லாமல் அந்தப் படப்பிடிப்பை நடத்தி முடித்தார் அவர்.
 
 
உதவி இயக்குநராக இருந்த காலத்தில் சமாளித்த அனுபவங்கள் சொல்லிக்கொடுத்த பாடம்!
 
Thanks: Tamilpaper.com
 
 
-தொடரும்-

Sunday, September 9, 2012

இது எப்படியிருக்கு?






வார்த்தைகள் கவனம்!






 

திட்டமிட்டுச் செய்யப்படாத சில விடயங்கள் எதேச்சையாக சுவாரசியமானதாக அமைந்து விடுவதுண்டு. அவற்றில் வாய்விட்டுச் சிரிக்க வைக்கும் விடயங்களுமுண்டு மாறாக தர்ம - அடி வாங்கித் தரும் விடயங்களுமுண்டு.


எடுத்துக் காட்டாக அமிர்தலிங்கம் என்பவர் தனது மகனுக்கு எதேச்சையாக யோக்கியன் என்றும் குகதாசன் எனும் ஒருவர் தனது மகனுக்கு ரங்கன் என்றும் பெயர் வைத்திருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். மகன்களின் பெயர்கள் தமிழில் இனிஷயலுடன் எழுதப்பட்டால் எப்படி அமையும் என்று சற்று நினைத்துப் பாருங்கள்.


அதுபோல ஒரு நகரின் மத்தியில் மரணச் சடங்குகள் சேவை புரியும் மலர்ச்சாலை ஒன்றுள்ளது. அதன் முகப்பிலே 'அமில மலர்ச்சாலை' என்றுள்ளது. அமில என்பது அதன் உரிமையாளரது பெயர்தான். பாருங்கள், எப்படியான அர்த்தம் தருகின்றது என்பதை.
'சதுரங்க விளையாட்டு மைதானம்' என்பது செஸ் விளையாடும் இடமல்ல என்பதுதான் வேடிக்கை. சதுரங்க எனும் ஊர்ப் பெரியவரின் நினைவாக அமைக்கப்பட்ட மைதானம்தான்.
 
 
-'Mutur' Mohd. Rafi

சிறுகதை : மூதூர் மொகமட் ராபி

சம்பள நிலுவை!



மோட்டார் சைக்கிளின் பின்புற ஆசனத்தில், 2ம் வகுப்பில் படிக்கும் எனது மகன் நிரோசனை ஏற்றிக்கொண்டு வலயக்கல்வி அலுவலக வாசலில்  போய் நான் இறங்கியபோது நேரம் பிற்பகல் இரண்டு மணியைத் தாண்டியிருந்தது.


'ம்ம்..என்னப்பா இது....? இங்கேயாப்பா..வந்திருக்கீங்க... ம்ம்.. எனக்கேலா பசிக்கும்' என்று பழைய அனுபவத்தினாலோ என்னவோ அழத் தொடங்கினான் நிரோசன்.

'இல்லடா கண்ணா...! என்ட செல்லம் கொஞ்ச நேரத்தில வந்திடுவேன்டா..முந்தி மாதிரி சுணங்க மாட்டன் அப்பா. கடிதத்தைக் காட்டினதும் செக்கத் தருவாங்க. அதை வேண்டினதும் உடனே வாறதுதான் இப்படிக் கதிரையில இருடா, ராஜால்ல!' என்று அவனை ஒரு வழியாகச் சமாதானப்படுத்தி அழைத்தச் சென்றேன். அலுவலக வராந்தாவில் கையில் தோல் பையும் தொப்பையுமாக சிலர் பேசிக்கொண்டே எங்களைக் கடந்து சென்றார்கள்.

 வரவேற்பறையில் இருந்த பிளாஸ்டிக் கதிரையில் நிரோசனை இருத்தி அவனது புத்தகப்பையையும் தண்ணீர்ப் போத்தலையும் அருகே வைத்துவிட்டு உள்ளே நுழைந்தேன். வரவேற்பு மேசையின் பின்னே ஒருவர் குறும்பார்வைக் கண்ணாடி மூக்கில் நழுவ  பத்திரிகை ஒன்றை கையில் பிடித்தவாறு ஏறத்தாழக் கவிழ்ந்தபடி லேசாக குறட்டை விட்டுக்கொண்டிருந்தார் .

'எக்ஸ்க்யூஸ்மி!'

'வே..ஏஏ! என்ன தம்பி?!'    தூக்கம் திடீரெனக் கலைந்த அதிர்ச்சியில் எழுந்து நின்றவரிடம் சட்டைப்பையிலிருந்த கடிதத்தை எடுத்து நீட்டி 'இந்த அஸிஸ்டெண்ட் எக்கவுண்டெண்ட் க்ளார்க் என்றது யார்? எங்க இருக்கிறாங்க?' என்றேன்.

ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த அந்தக் கடிதத்தை வாசிப்பது போல பாவனை செய்துவிட்டு, 'உங்களை வரச்சொல்லி இருக்காங்க போல..ஆனா இப்ப அவ இல்லியே..எல்லோரும் லஞ்சுக்குப் போயிருக்கிறாங்களே..திரும்பி வரச் சுணங்கும்..' என்றார்.

மணிக்கட்டைத் திருப்பி நேரத்தைப் பார்த்து விட்டு 'லஞ்ச் 12 மணிக்கல்லவாண்ணே..இப்ப 2.30 ஆகுதே...ஒண்ட ஒண்டரைக்கெல்லாம் இருப்பாங்க என்றுதான் ஸ்கூல் விட்ட பிறகு வந்தனான்' என்று ஆச்சரியமாய் கூறிய என்னை சற்றுப் பரிதாபமாகப் பார்த்தார் அவர்.


இந்த உரையாடலைக் கேட்டதும் என்னருகே ஓடிவந்து, 'வாங்கப்பா ..வீட்ட போவோம்!' என்று சிணுங்க ஆரம்பித்தான் நிரோசன்.

'அது வந்து.. இண்டைக்குக் கொஞ்சம் வேலை கூட...அதுதான் எல்லோரும் லஞ்சுக்கு சுணங்கிப் போயிருக்கிறாங்க....இருங்க, இப்ப வாற நேரம்தான்'

எனக்கு இருப்புக் கொள்ளவில்லை. வெளியே இலேசாக மழை தூறத் தொடங்கியிருந்தது.

'இந்நேரம் மூத்தவள் நர்மதாவின் ஸ்கூல் விட்டிருக்கும்..கேற் வாசலில் மழையில் நனைந்து காத்துக் கொண்டிருப்பாள்..என்ன செய்வது? மூன்று மணிக்கு பேங்க் மூடிடுவான்....இன்றைக்குள் எப்படியாவது செக்கை மாற்றி காசு கட்டாவிட்டால் கரண்டை சீஈபிக்(CEB) காரன் வெட்டிவிட்டுப் போய்விடுவான். பிறகு இருட்டில் தடுமாறிக் கொண்டிருக்க வேண்டும்..என்ன செய்வது? ..நர்மதாவை போய் எற்றிக் கொண்டு வருவோமா அல்லது இன்னும் கொஞ்சம் காத்திருப்பதா?'

'ஹேய் மச்சான் கார்த்தீ! என்னடா..,  பெரிய யோசனை போல?!'

குரல் வந்த திசையில், கையில் ஹெல்மெட்டுடன் ரெயின் கோட் அணிந்து மழைநீர் சொட்டச்சொட்ட நின்றிருந்தான் முனாஸ். எனது ட்ரெயினிங் கொலிஜ் நண்பன். கலகலப்பான பேர்வழி. இருவரும் சிறிது காலம் இங்குள்ள பாடசாலை ஒன்றில் ஒன்றாக கற்பித்துவிட்டு பின்பு ஆளுக்கொரு திசையாகப் பிரிந்தவர்கள். இப்போதும் அவ்வப்போது சந்தித்து நட்பு பாராட்டிக் கொள்வதுண்டு.

'ஓமடா முனாஸ், பாருடா என் நிலைமையை என்ன செய்யுறதெண்டு விளங்குதில்லடா' என்றேன் உணர்ச்சியில்லாமலே.

'ம்ம்..? அப்பிடி என்னடா தலை போற பிரச்சினை உனக்கு? அதுவும் இங்க வந்து..ஏதும் தூர இடத்துக்கு ட்ரான்ஸ்பராட உனக்கு?'

'சேச்சே! அதெல்லாம் இல்லடா, அது யாராவது பெரிய ஆட்களுக்குசெல்வாக்கான ஆசிரியர்களை டவுனுக்குள்ள போடணுமென்டாத்தான் எங்கள் மேல கை வைப்பாங்க... இப்ப ஏதோ கொஞ்ச காலம் விட்டு வச்சிருக்காங்க!'

'சரி, அப்ப வேற என்னதான் உன் பிரச்சினை?'

'சம்பள அரியர்ஸ் செக் ஒன்று வந்திருக்கு.....அதுவும் எத்தனையோ வருசத்துக்குப் பிறகு. அந்தச் செக்கை இங்க வந்து எடுக்கச் சொல்லி கடிதம் அனுப்பியிருக்காங்கடா மச்சான் எனக்கு!'

' அடப்பாவி! இதுக்காடா கவலை உனக்கு?! ஓ எப்படிச் செலவு செய்யுறது என்ட கவலையோ..அப்படியெண்டா தாவன் எனக்கு..?'

'போடா, உனக்கு எல்லாமே பகிடிதான்.! கடிதம் அனுப்பியிருக்கிறாங்க ..ஆனா இங்க வந்து பார்த்தா ஸீட்டில யாருமில்ல.. சம்பந்தப்பட்ட க்ளார்க்கும் லஞ்சுக்குப் போயிட்டாவாம்டா!'

'இன்டைக்கு நியை வேலை இருந்ததால அதுதான் எல்லோரும் லஞ்சுக்கு சுணங்கிப் போயிருக்கிறாங்க..இப்ப வாற நேரம்தான் இருங்க என்றிருப்பானே அந்த ஒல்லிப்பிச்சான்' என்று கேட்டான், வரவேற்பு மேசையில் கண்ணயர்ந்து கொண்டிருந்தவரைக்காட்டி.

'அட! ஓ..ஓம்டா!' என்றேன் ஆச்சரியம் தாங்காமல்.

'இருங்க... இப்ப வந்திடுவாங்க... என்றும் சொல்லியிருப்பானே?'

'ஓ ..ஓம்டா ..முனாஸ், எப்பிடிடா  உனக்கு இதெல்லாம் தெரியும்? யேய்..! எங்கேயாவது  பின்னால நின்று கேட்டிட்டிருந்தியா..உண்மையைச் சொல்லு!'

'ப்போடா இவனே! இவ்வளவு வருசம் இந்த ஸோனுக்குள்ள  வாத்திவேலை செய்திட்டிருக்கிறம், எவ்வளவு பார்த்திருப்பம்...? இதெல்லாம்  தெரியாதா மச்சான், உனக்கு?'


அவன் சொன்னதைக் கேட்க  சிறிது வெட்கமாகத்தான் இருந்தது.

'டேய் கார்த்தி, இங்க ஒபிஸில வேலை செய்யிறவங்களெல்லாம் ஏன் சரியா 1.30 க்குப்பிறகு லஞ்சுக்கு வீட்டுக்குப் போறாங்க தெரியுமா? கொஞ்சம் யோசிச்சுப் பார். அப்பிடி ஒன்றும் பெரிய வேலைகள் கிடையாது இங்க. ஹேண்ட் பேக்குல ஆனந்த விகடனும் குமுதமும் ரமணி சந்திரண்ட குப்பை நாவல்களையும் கொண்ட வந்து பார்த்திட்டு இருப்பாங்க. பெக்கேஜ் போன்ல சாறி ப்ளவுஸ் வாங்கின கதைகளையும் இரவு பார்த்த மெகா சீரியல் மாமி-மருமகள் சண்டைக் கதைகளையும்  யாருக்காவது மணிக்கணக்கா சொல்லிட்டிருப்பாங்க...'

'அப்படியா  அப்ப இவங்க வேலையே செய்யிறதில்லையா மச்சான்?'

'ஏன் செய்யாம..? இதெல்லாம் செய்தது போக எப்பவாவது போரடிச்சா ஒரு மாறுதலுக்காக வேலை செய்வாங்க. இப்படி அரசாங்க வேலைகளைப் "பொறுப்பாக"    செய்யிறதாலதான் இன்னமும் எந்த ஸ்கூல்ல யார் இருக்கிறாங்க.... என்னென்ன நடக்குது.... என்ற சரியான எந்த விபரமும் தெரியாமy, என்ட கடிதங்களை உனக்கும் உன்ட கடிதங்களை என்ட ஸ்கூலுக்கும் அனுப்பிட்டிருக்கிறாங்க..ஹா.. ..ஹா..ஹ..ஹா!.'

'அது சரி, 1.30க்கு இவங்க லஞ்சுக்குப் போறது எதுக்கு என்று இன்னும் நீ சொல்லவே இல்லையே...?'

'மடையா! நம்ம ஸ்கூலெல்லாம் 1.30 க்குத்தானே விடுது. அப்படி ஸ்கூல் விட்டதும் வீட்டுக்குப் போகிற வழியிலேயே தேவைகளை முடிச்சிட்டுப் போகலாமென்று டீச்சர்மாரெல்லாம் ஒபிசுக்கு வருவாங்கள் என்று இவங்களுக்கெல்லாம் நல்லாத் தெரியும். அந்த நேரத்தில இங்கே குந்திட்டிருந்தா வேலைகளுக்கள்ள மாட்டுப்படுவம் என்றுதான் வீட்டுக்கு ஓடுறவங்க..  அதுவும் புதன் கிழமையள்ள தப்பித்தவறியும் இருக்க மாட்டாங்க.. இல்லையென்றால் கூட அன்றைக்குப் பார்த்து ஏதாவது மீட்டிங் அது இது என்று போட்டு இழுத்தடிப்பாங்க!'

'ஓ! இதுவா சேதி..? நான் ஒவ்வொரு தடவையும் இங்க வந்து மணிக்கணக்கா காத்துக் கிடக்கிறதுக்கு இதுதானா காரணம்?'

'அப்பா...பசிக்குதப்பா ... வீட்ட போவோம்!' என்று என்னைப் பிடித்துக் கொண்டு சிணுங்கிய நிரோசனை அப்போதுதான் கண்டான், முனாஸ்.

'அடேய் கார்த்தி!  நீ இவ்வளவு நேரமும் இந்தச் சின்னப் பொடியனை பசிக்க வைத்துக் கொண்டாடா இந்தக் கிளார்க்குகளை காத்துக் கொண்டிருக்கிறாய்?'

'வேற என்னடா செய்யிறது..? திரும்பத் திரும்ப வந்து மெனக்கெட்டுக் கொண்டிரக்கேலாது. அப்பிடி வந்து போக பெற்றோல் செலவு வேற, இவள் மூத்தவளையும் போய் ஏத்திட்ட வரவேணும். கொஞ்ச நேரம் பார்ப்.....'

' மச்சான் இதுகள் இப்போதைக்கு வர மாட்டாதுகள்றா! நீ இந்தப் பச்சை மண்ணை சும்மா வீணாப் பசியில காய வைக்கப் போகிறா...! போய் உன்ட பிள்ளைகளை வீட்டில இறக்கிச்  சாப்பிட்டுட்டு  பின்னேரம் ஆறுதலா வாடா! இப்ப மரியாதையா போ!போ!' என்று துரத்தாத குறையாக என்னையும் நிரோசனையும் உரிமையுடன் வாசல்புறமாக நெம்பித் தள்ளிக் கொண்டு சென்றான் முனாஸ்.

'இல்லடா...முனாஸ், இன்னும் ஒரு கொஞ்ச நேரம் பார்த்திட்டு...' என்று  நான் தயங்கி இழுத்ததும், சட்டென தன் பிடியை விட்டு விட்டு அப்படியே என்னைச் ஒரு நிமிடம் எதுவும் பேசாமல் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தவன் விருட்டென திரும்பி நகர்ந்து விட்டான். வேகமான நடையில் அவனது கோபம் தெளிவாகத் தெரிந்தது.

'டேய்! முனாஸ்...!முனாஸ்! நில்றா, கொஞ்சம்!' என்று நான் கூப்பிட்டும் அவன் திரும்பாமல் பைக்கை உதைத்துக் கிளப்பிக் கொண்டு செல்லும் போது, 'அனுபவி ராஜா!' என்று லேசாய் அவன் முணுமுணுத்தது  மட்டும் காதில் விழுந்தது.

சிறிது கழிந்த பின்பு வேறு வழியின்றி மீண்டும் முனாஸின் 'ஒல்லிப்பிச்சா'னிடமே சென்றேன். அவர் இப்போதும் அரைத்தூக்கத்தில்தானிருந்தார். ஆனால்,  அருகில் சென்றதும் சட்டென விழித்துக்கொண்டு, 'அ... ..நீங்கதானே கொஞ்சம் முதல் வந்தனீங்க?' என்றார், வெகுஞாபகமாக, 'போங்க உள்ள! அவங்கள் வந்திருக்கிறாங்க...அந்தப் பச்சை சுடிதார் போட்டிருக்கிறவதான் நீங்க தேடிவந்த க்ளார்க்..போங்க' என்றார்.

எனக்கு மிகவும் நிம்மதியாக இருந்தது.

'நிரோஸ்! இரு அப்பிடியே! செக்கை வாங்கிட்டு வாறேன்' என்றதும் பசிக்களைப்பையும் மீறி சந்தோசமாய்ப் புன்னகைத்தான், அவன். பாவம் அவன் முரளி சொன்னது சரிதான் .இனி இவனை இந்த ஒபிஸ் அலுவல்களுக்கெல்லாம் கூட்டித்திரியக் கூடாது என்று நினைத்துக்கொண்டே பச்சை சுடிதார் அணிந்த க்ளார்க் இருந்த அறைக்குள் நுழைந்தேன். நான் உள்ளே நுழையவும் அந்த பெண் வெளியே வரவும் சரியாக இருந்தது. இருவரும் மோதிக் கொள்ளாத குறையாக சந்தித்துக் கொண்டோம் என்றுதான் சொல்ல வேண்டும்.

' எக்ஸ்க்யூஸ்மி, உங்களுக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கின்றேன் மிஸ்' என்று கடிதத்தை நீட்டினேன். நாய்  கொண்டு வந்துபோட்ட தேங்காய்ச் சிரட்டையைப் பார்ப்பது போல கடிதத்தையும் என்னையும் வெகு அலட்சியமாக பார்த்தாள் அந்தப் பெண். அவளுக்கு இருபத்தியைந்து வயதுக்கு மேலிருக்காது.

'இந்தக் கடிதம் எப்ப கிடைச்சது உமக்கு?'

'இன்றைக்குக் காலைலதான்! ஏன்?'

'அப்ப இவ்வளவு நாளும் என்ன செய்து கொண்டிருந்த நீங்கள? இதை உங்களுக்கு அனுப்பி ஒன்றரை மாதமாகுதே..எந்த ஸ்கூல் நீங்க?'
சொன்னேன்.

' அட!  இந்த ஒபிஸிலிருந்த முக்கியமான கடிதம் அனுப்பினா இப்படித்தான் ஒருமாதம் லேட் பண்ணி வருவீங்களா?' என்றாள்,  ஏதொ ஒரு பெரிய தவறைக் கண்டுபிடித்தவிட்ட உற்சாகத்தோடு.

' உங்க கடிதத்தை, நான் ஒரு வருசத்துக்கு முதல் வேலை செய்த பழைய  ஸ்கூலுக்கு அல்லவா அனுப்பியிருக்கிறீங்க.? இன்றைக்குத்தான் அங்கிருந்து இப்ப நானிருக்கும் ஸ்கூலுக்கு கொடுத்தனுப்பினாங்க!' என்றதும் சட்டென வாடிச் சுருங்கியது அவளின் முகம்.

'ஓ! அப்பிடியா? கொஞசம் இருங்க வருகிறேன்' என்று விட்டு வெளியேறிச் சென்றாள் அந்த க்ளார்க் பெண்.

'ஐயோ! எங்கே போகிறாள் செக்கை எடுத்துத் தராமல்' என்று சலிப்புடன் காத்திருக்கலானேன். 'ஒருவேளை என்னுடைய செக்கைத்தான் எடுத்து வரத்தான் போகிறாளோ...'

சரியாகப் பதினைந்து நிமிடம் கடந்ததும் மிகவும் சாவகாசமாக உள்ளே வந்து தனது இருக்கையில் அமர்ந்தாள் அந்தப் பச்சைசுடிதார் பெண். தனது மேசையில் இறைந்து கிடந்த காகிதங்களையெல்லாம் ஒழுங்குபடுத்தி விட்டு நிமிர்ந்து என்னைப் பார்த்தாள்.

'என்ன விசயம் சொல்லுங்கோ!' என்றாள்.

'...........'

'ஆ! ஏதோ அரியர்ஸ் செக்கென்றுதானே சொன்னனீங்க?' என்றபடி எழுந்த அருகிலிருந்த உருக்கிலான அலுமாரியைத் திறந்து நீளமான சில  புத்தகங்களை மேசையில் போட்டாள். மீண்டும் இருக்கையில் அமர்ந்து அந்த புத்தகங்களைத் திறக்கும்போது செல்போன் மணி ஒலித்தது. உடனே சட்டைன மூடிவிட்டு,

' ஆ! ஹலோ சொல்லுங்க!' என்றாள்.

'..........' என்றது எதிர்முனை.

'இல்ல..இப்பத்தானப்பா சாப்பிடனான்'

'...................'

'ம் அதெங்க! எப்படியும் ஒரு கழுத்தறுப்பு வந்து சேர்ந்திடுமப்பா...?' என்றபோது  சரியாக என்மீது விழுந்தது அவளது பார்வை. சட்டென நாக்கைக் கடித்துக் கொண்டு,  'இல்ல இஞ்ச ஒருவர் செக் எடுக்க வந்திருக்கிறார்..அவர்ர வேலைய முடிச்சிட்டு பிறகு எடுக்கிறனே...'

'...........'
' அ.!. அந்த ப்ளவ்ஸா..? அது மெச்சில்லடாப்பா...! மத்த பிங்க் கலர் இருக்குத்தானே?'

'...........'

'மிஸ், நான் கொஞ்சம்...' என்று நான் பொறுக்கமுடியாமல் ஆரம்பிக்க,

'சரியப்பா...பிறகு எடுக்கிறன்..பை!'  சொல்லி போனை வைத்து விட்டு,

'இருங்க பார்ப்போம்...உங்க பேர் என்ன சொன்னீங்க? ப்ரதீபனா?'

'இல்ல ...காரத்திகேயன்'

'ஆ! இந்தா இருக்கு! இதில சைன் பண்ணுங்க செக்கைத் தாறன்' என்று  புத்தகத்திலே சில இடங்களைக் காட்டினாள். நான் கையெழுத்திட்டதும் செக்கைக் கிழித்து நீட்டியவள் சட்டென நெருப்பை மிதித்தவள் போலப் பதற்றமாகி, 'ஐயோ இந் செக்கின்ட வெலிட் டேட் (valid date) முடிஞ்சு போயிட்டுதே!' என்று மீண்டும்  கையிலிருந்து பறித்து விட்டாள்.

'சரி, வேறு புதிதாக எழுதித் தரலாம்தானே?' என்றேன், ஏமாற்றத்துடன்.

'புதுசா எழுதத் தேவையில்ல..திகதி மாற்றி எழுதினாப் போதும் ஆனா வெட்டிச் சைன் பண்றதுக்கு எக்கவுண்டனும் சீப் க்ளார்க்  ரதியக்காவும் வேணுமே...' என்றாள், வரவழைத்துக் கொண்ட கவலையுடன்.

அதற்குள் அருகிலிருந்த க்ளார்க் என்ன நினைத்தாரோ தெரியவில்லை.  என்னைப் பரிதாபமாகப் பார்த்து, 'எக்கவுண்டன் மேல மாடியிலதான் நிக்கிறார். இனித்தான் லஞ்சுக்குப் போவார்..இப்ப உடனே போனால் சைன் எடுக்கலாம்' என்று தகவல் சொன்னார்.

'இல்ல மணியண்ண, எக்கவுண்டன் சைன் பண்ணினால் மட்டும் போதாது... சீப் க்ளார்க் ரதியக்காவுமல்லவா செகண்ட் சைன் பண்ணவேணும்...அவ லஞ்சுக்குப் போனவ இன்னும் வர இல்லயே... அது சரி இண்டைக்கு வருவாவா?' என்று அவரிடம் கேட்டாள்.

'ஏன் பிள்ள, ரதியக்கா டிப்பாச்சர் பண்ணாமத்தானே போயிருக்கிறா? ஏன் உங்களிட்ட ஏதும் சொன்னவவா?' -இது மணியண்ணன்.

'ஓமண்ணன். இன்டைக்குச் சூரன்போர்தானே...? அதுதான் கோயிலுக்கு ஒருக்காப் போனாலும் போவேன் என்று சொன்னவ அதாலதான்...கேட்டனான்..!'

'அப்ப  அவ இண்டைக்கு வாற சந்தேகம்தான். எதற்கும் எக்கவுண்டனிட்டயாவது சைன் வாங்கி வையும். பிறகு ரதியக்கா வர, அவர் போயிட்டாரெண்டால்...?' என்றார் மணியண்ணன், என்னைப் பார்த்தவாறு.


'ம்ம்..எனக்கென்ன.. அவ வந்தா யார் மாட்டி விட்டதென்டு தெரியட்டும்...' என்று தனக்குள் லேசாய் எதையோ முணுமுணுத்தவாறு மாடியேறிப்போனாள் அந்தப் பெண்.


மீண்டும் காத்திருப்பு! பத்து நிமிடங்கள் கழிந்தது.


பசி வேறு உயிரை வாட்டியது. அப்போதுதான் பசி பசியென்று வீட்டுக்குப் போக அழுதபடியிருந்த மகன் நிரோசனின் ஞாபகம் வந்தது. வெகுநேரமாக அவனது குரலைக் காணவில்லையே என்ற யோசனையும் வர, சென்று பார்க்கலாம் என்று எழுந்தபோது எக்கவுண்டனைப் பார்க்க மாடிக்குச் சென்ற அந்தக் க்ளார்க் பெண் மீண்டும் வந்துவிட்டாள்.


வந்ததும் என்னை நேரே பாரக்காமல், ' இன்றைக்கு உங்களுக்குச் செக் தர இயலாதாம். நாளைக்கு இதே நேரம் வரட்டாம்!' என்று விட்டு சட்டென வெளியேறிச் சென்றாள்.


சட்டெனக் கோபம் தலைக்கேற அவளோடு சேர்ந்து நானும் வெளியேறி வந்தபோது வராந்தாவில் இருந்த ப்ளாஸ்டிக் கதிரையைச் சுற்றி சிறு கூட்டம் கூடியிருந்தது தெரிந்தது.

'கொஞ்சம் ..தண்ணீர் தெளிங்க முகத்துல! பாவம்!'

'சே! சின்னப் பொடியண்டாப்பா!'

'பசி மயக்கம் போல..! யார்ராப்பா இதுகள இஞ்ச கூட்டிவந்து அலைக்கழிக்கிறது?'

என்ற குரல்கள் கேட்டு..சில வினாடிகள் திகைத்து நின்றவன் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து  அலறியடித்து ஓடிச்செல்வதற்குள் எனது மகன் நிரோசனை யாரோ சிலர் ஒரு நீளமான மேசையில் கிடத்தி உடைகளைத் தளர்த்தி செய்திப் பத்திரிகைகளால் காற்று வீசிக் கொண்டிருந்தார்கள்.

*
-மூதூர் மொகமட் ராபி
(2011.11.16)