Friday, December 16, 2011

புதிய தொடர்


 மூதூர் : அன்றும் இன்றும்!





மூதூர், இலங்கை வரலாற்றில் பல விடயங்களுக்காக எப்போதும் பிரபல்யமாகவே இருந்து வந்துள்ளது. போத்துக்கேயரின் ஆட்சியினைத் தொடர்ந்து ஒல்லாந்தர்கள் இலங்கைத் தீவின் கரையோரங்களைக் கைப்பற்றியிருந்த காலத்தில் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆன் (Ann) எனும்  கப்பலின் மாலுமி ரொபர்ட் நொக்சும் (Robert Knox ) அவனது சகாக்களும் அப்போது கொட்டியாரம் என்று அழைக்கப்பட்ட இன்றைய மூதூரில் வந்திறங்கினார்கள். அன்றைய கண்டி இராச்சியத்தை ஆண்ட மன்னனால் அவர்கள் அனைவரும்   சிறைப்பிடிக்கப்பட்டதும் அங்கு 19 ஆண்டுகள் திறந்தவெளிக் கைதிகளாய் அலைந்து திரிந்தபின் அந்த ஆங்கிலேய மாலுமியின் மகன் இங்கிலாந்துக்குத் தப்பிச் சென்று தனது அனுபவங்களை ஓர் நூலாக வெளியிட்டதும் தனிக்கதை.


பின்னர் ஆங்கிலேயர் இலங்கைத் தீவைக் கைப்பற்றியவுடன் தமது வருகைக்கு ஒரு வகையில் முன்னோடியாகவிருந்த அந்த மாலுமி Robert Knox  நினைவாக அவர் கைதுசெய்யப்பட்ட இடத்திலிருந்த புளியமரத்தை ஓர் வரலாற்று நினைவுச்சின்னமாய் ஆக்கினார்கள்.
'Whiteman's Tree' என அழைக்கப்பட்ட அந்தப் பழம்பெரும் புளிய விருட்சம் பின்னர் 1964ல் வீசிய புயலில் வீழ்ந்த போதிலும் மீண்டும் அதே இடத்தில் புதிய புளியம் கன்று நடப்பட்டு வளர்த்து அது இன்றும் நினைவுச்சின்னமாய் காட்சி தந்து கொண்டிருக்கின்றது. அதுமட்டுமன்றி  அந்த மரமிருக்கும் இடத்திலிருந்து மூதூர் நகரின் மையப்பகுதியினுடே செல்லும் முக்கியமான வீதியொன்று Knox-Road என்ற சிறப்புப் பெயரால் வழங்கப்பட்டு வருகின்றது.
அதன் பிறகு நடந்தவற்றையெல்லாம் ஒன்றும் விடாமல் கூறப்போனால்
இப்போதைக்குத் திரும்பி வர முடியாது.

அதெல்லாம் பழைய கதை!
இன்றைய புதிய கதை எது தெரியுமா? மூதூரை அதன் ஆரம்ப காலம் தொட்டே கிழக்கு மாகாணத்தின் இரு பெரும் நகரங்களான திருகோணமலை-மட்டக்களப்பு ஆகியவற்றை இதுவரைகாலமும் நிலத்தொடர்பின்றி பிரித்து வைத்திருந்த மகாவலி  மங்கையின் கிளையாறுகளுக்கெல்லாம்  பாலங்களிட்டு அவற்றை ஒன்றிணைத்திருப்பதுதான்.
ஆம் நண்பர்களே! இன்று A-15 வீதியில் இரவு பகலாக் இடைவிடாது நிகழும் போக்குவரத்தைப் பார்க்கும் போது சிலசமயம் கனவு போலத் தோன்றுகின்றது. இத்தனை காலமும் கடல்வழிப் போக்குவரத்து நமது சமகால மற்றும் பழைய தலைமுறையினருக்கும் எத்தனை விரயங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. லோஞ்சுக்கும் கப்பலுக்கும் காத்திருந்தே வயதுகளைத் தொலைத்தவர்கள் நாம்.


ஒரு காலத்தில் மூதூருக்குச் செல்வதும் மூதூரை விட்டுச் செல்வதும் ஏதோ கடல்கடந்து வேறு நாட்டுக்குள் புகும் யாத்திரை போலத்தான் இருந்தது. எத்தனை காத்திருப்பு கெடுபிடிகள் பீதிகள். இன்று நினைத்த நேரம் அங்கு சென்று வரலாம் எனும்போதுதான் இத்தனைகாலமும் அனுபவித்த அந்த மெகா விரயத்தின் கனம் சரிவர உணரப்படுகின்றது.
முதலில் கிண்ணியாவுக்கான பாலம்தான் ஆரம்பிக்கப்பட்டது. முன்பெல்லாம் கிண்ணியாவுக்கு வாக்குச் சேகரிக்கத் துறைகடந்து வரும் அத்தனை அதிகாரத்திலிருந்த அரசியல் தலைவர்களும் தவறாமல் சொல்லி விட்டு மறந்து போகும் வாக்குறுதி: 'வெகுவிரைவில் பாலம் கட்டித் தருவோம்!' என்பதுதான்.
உங்கள் பாலம் கூட வேண்டாம் (அப்போது) இருந்த இரண்டு துருப்பிடித்த  பாதைப்படகுகளையாவது தொடர்ந்து இயங்கும்படி பார்த்தால் போதும் என்ற அங்கலாய்ப்பில் இருந்தார்கள் மக்கள்.  பின்னர் மகிந்த ராஜபக்ச அவர்கள் சந்திரிகா அம்மையாரின் அரசில் நெடுஞ்சாலைகள்  அமைச்சராக இருந்தபோது ஒரே தடவையில் பல வாகனங்களை ஏற்றிச் செல்லக்கூடிய அதிக குதிரைவலுக்கொண்ட படகுப்பாதையை கிண்ணியாத் துறைக்கு வழங்கியிருந்தார். அதனைச் சேவைக்குத் திறந்து வைத்த நிகழ்ச்சியில் விரைவில் பாலம் அமைக்கப் போவதாகவும் கூறியிருந்தார்.
பின்னர் ராஜபக்ச அவர்கள் நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றதும் அந்த வாக்குறுதியை நினைவில் வைத்துச் செயற்பட்டார். பாலத்திற்கான முயற்சிகளில்  ஏனைய பலரோடு சேர்ந்து அவரும் இறங்கியிருந்தார். அப்பொழுது கூட பாலம் நிர்மாணிக்கப்படும் என்று யாரும் பொதுவாக நம்பவில்லை. 'வழமை போலத்தான் இதுவும்' என்று அலட்டிக் கொள்ளாமல் இருந்து விட்டார்கள். கிண்ணியாவாசிகள். ஆனால் பாலத்தின் நிர்மாண  ஆரம்பக்கட்ட வேலைகள் தொடங்கியபோதுதான் 'ஓகோ ஏதோ செய்யத்தான் போகிறார்கள் போல' என்ற சிறு நம்பிக்கைக் கீற்று அவர்கள் மனங்களில் தோன்றியது.
உண்மையில் கிண்ணியாப் பாலத்துக்கு அந்தப் பெயர் பொருத்தமில்லை என்றுதான் சொல்ல வேண்டும். (அட! கிண்ணியாவின் தவப்புதல்வர்களே அவசரப்படாதீர்கள்! விசயத்துக்கு வருகின்றேன்.) அதாவது 'மூதூருக்கான முன்னோடிப் பாலம்' என்று வைத்திருந்தால் கூட மிகச்சரியாகவே இருந்திருக்கும். ஏனெனில் கிண்ணியா மக்களுக்கு துறைகடத்தல் என்பது மூதூர் மக்களின் கடல் கடத்தலுடன் ஒப்பிடும்போது நடிகர் சிவாஜிராவ் (ரஜினிகாந்த்) பாணியில் சொன்னால் ஜுஜுபி!
ஆம்! மிக அவசரமான அத்தியாவசியத் தேவைகளுக்காக விரையும் வெகு சில பயணிகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் பொதுவாக கிண்ணியா மக்களுக்கு திருகோணமலைக்குச் செல்லும் பயணம் அப்படி ஒன்றும் பெரும் தாமதத்தையும் சிரமத்தையும் எற்படுத்தியதாகக் கூற முடியாது. பயணம் ஆரம்பிக்கும் போதும் பயணத்தை முடித்து விட்டுத்திரும்பி வரும்போதும் ஒரு செக்போஸ்ட் போலத்தான் அந்தத் துறையடி அவர்களுக்கு.

படகுப் பாதைப் பயணம், துறையடியில் இறங்கி நடந்து ஊர்வாசிகளுடன் ஒன்றாகச் சில நிமிடங்கள் காற்றோட்டமாய் அன்றைய ஊர்ப்புதினங்களை விசாரித்துக் கொண்டு வரும் சிறு ஆசுவாசமாகவும் இருந்து வந்திருக்கிறது. தவிர தம்பலகாமப் பகுதிகளை ஊடறுத்துச் செல்லும்  தரைமார்க்கப் போக்குவரத்து வழி இருந்ததனாலும் கிண்ணியாத்துறை என்பது பழகிப்போன சிறு தொந்தரவுகளில் ஒன்றாகவே இருந்தது.
ஆனால் மூதூர்வாசிகளின் நிலைமை முற்றிலும் வேறுபட்டிருந்தது.

நாவலடி, கங்கை,  உப்பாறு, கிண்ணியா ஊடான தரைவழிப்பாதை முற்றாக கைவிடப்பட்டிருந்த நிலையில் அலிஓலுவ, கல்லாறு மற்றும் அல்லை     ஊடான தரைமார்க்கப்பாதை மிக அதிக நேரத்தை விழுங்கும் சுற்றுப்பயணமாக இருந்தது. அதுமட்டுமன்றி அந்த வீதியின் தரக்கேடு மற்றும் மாரிகால வெள்ளத்தினால் தடைப்படும் நிலையிலும் கடல் வழிப்பயணம் மட்டுமே ஒரே தெரிவாக இருந்து வந்துள்ளது.
கடல்வழிப் பயணம் என்றால்,  ஒன்று முதல் ஒன்றரை மணி நேரத்திற்கும் அதிகமான நேரத்தை எடுக்கும். அதுவும் மிகவும் தரம் தாழ்ந்த வசதிகள் கொண்ட லோஞ்ச்கள் எனப்படும் சற்றுப் பெரிய படகுகளில்தான் ஆபத்தான கடல்பகுதியை தாண்டியாக வேண்டியிருந்தது. இருக்கும் அந்த லோஞ்ச் சேவையைக்கூட அடிக்கடி குழப்புவதற்கென்றே காலநிலை, கடல் கொந்தளிப்பு, இயந்திரக் கோளாறுகள் என்றே  ஒரு காரணங்களின் பட்டியல் காத்துக் கிடக்கும். இதனால் பயணம் என்பது மூதூர் பயணிகள் அனைவருக்கும் ஓர் அன்றாட சாகசமாகவே இருந்து வந்திருக்கின்றது.
இந்நிலையில்தான் 1993 ஜனவரி 25ம் நாளில் கொட்டியாரக் குடாக்கடலில் நிகழ்ந்தது ஒரு கோர விபத்து. எறத்தாழ 140 பயணிகளுடன் சென்ற லோஞ்ச் படகு ஒன்று மூழ்கிய அந்த அனர்த்தத்தை மூதூர் மக்களால் மறக்கத்தான் முடியுமா என்ன? நூறு எனும் எண்ணிக்கையைத் தாண்டிய அந்த மனிதப் பலியின் பின்னர்தான் அன்றைய ஆட்சியாளர்களுக்கு லேசாய் கண்திறந்தது. இதனால் அதன் பின்னர் இ.போ.ச வினால் மேலும் சற்றுப் பெரிய படகுகள் சேவைக்கிடப்பட்டன. 
இப்படகுகள் சிறிது சௌகரியமாகவும் பாதுகாப்பானதாகவும் இருந்தன. ஆயினும்   இப்படகுகளால் தினமொன்றுக்கு  இரண்டு சேவைகள் மட்டுமே நடாத்தப்பட்டன. அதுவும் ஒரு தடவைக்குரிய பயணிகளின் எண்ணிக்கை நூறுபேர் மட்டுமே என்று மட்டுப்படுத்தப்பட்டு அது மிகவும் இறுக்கமாகவும் கடைப்பிடிக்கப்பட்டது.  அந்த நாட்களிலே நூறுபேருக்குள் அடங்குவதற்காக நிகழ்ந்த முண்டியடிப்புகளை விபரிக்க வாரத்தைகள் போதாது.
அதுமட்டுமல்ல மதியம் 2.30 மணி என்பது திருகோணமலையில் இருந்தும் வெளியூர்களிலிருந்தும் ஊர் திரும்புவோருக்கெல்லாம்   மூதூருக்குரிய கடல்கதவுகள் அடைக்கப்படும் நேரமாய் ஆகிப் போனது. இந்தச் சேவைகளும் படகுகளின்  பழுதுகள் திருத்தம் என அவ்வப்போது வாரக்கணக்கில் தடைப்படும் ஒன்றாகவே இருந்து வந்தது.

இங்கு ஒரு விடயத்தைக் கவனித்தாக வேண்டும். படகு விபத்தினால் பாதிக்கப்பட்டு பாதுகாப்பான கடல்பயணம் வேண்டும் என்ற மூதூர்வாசிகளின் போராட்டம் சிறந்த இரு படகுகளைப் பெற்றுத்தந்த அதேவேளை முன்பு லோஞ்ச் காலத்தில் இருந்து வந்த 'ஒருநாளில் பலசேவைகள்' என்ற வசதி பறிபோனது.
இதை வேறுவிதமாகக் கூறினால், மூன்று வேளையும் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒருவனிடம், அவன் சாப்பாட்டின் தரம் சரியில்லை என்று சொல்லிவிட்டான் என்பதற்காக தினமும் பிரியாணிப் பொட்டலமொன்றைக் கொடுத்து, 'இந்தா பிடி! ஒருவேளை மட்டும் சாப்பிட்டுக் கொள் போதும்!' என்று கூறியதைப் போலானது நிலைமை.


அதன் பின்னர் நாட்டில் அடுத்தடுத்து தேர்தல்கள் பல வந்தன. விளைவாக மூதூர் பயணிகள் மீது அரசியல்வாதிகளுக்கு திடீர் கரிசனைகள் முளைக்கலாயின. அதன் பயனாக துறைமுக அதிகாரசபைக்குச் சொந்தமான கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டது. சேருவில-II என்ற அந்தக் கப்பல் ஒரே நேரத்தில் அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றது. பயண நேரமும் பாதியாகக் குறைந்தது.
ஆனால் குறிப்பிட்ட எண்ணிக்கையான பயணிகள்,மோட்டார் சைக்கிள்கள் என்ற கட்டுப்பாடுகள், போலீசாரின் பரிசோதனைக் கெடுபிடிகள் காரணமாக பாரமான மோட்டார் சைக்கிளைக் கூட ஏறத்தாழ 200 மீற்றர் நீளமான இறங்குதுறைக் கடல்பாலம் வழியாகத் தள்ளிக் கொண்டு செல்ல வேண்டிய நிலைமை, சமூகத்தில் எத்தனை கௌரவமானவராக இருந்த போதிலும் கப்பல் பயணி என்று வந்து விட்டால் தள்ளுமுள்ளுகளில் மாட்டி கௌரவம் குறைய வேண்டியதும்  காயமடைய வேண்டியதுமான அவலம், என்றெல்லாம் மூதூர் மக்களுக்குரிய இம்சைகள் அதிகரித்தன.

இலங்கைத்தீவில் இனமுறுகல் நிலைமைகள் ஆரம்பித்து வன்முறைப் போராட்டமாக மாறி உச்சகட்டத்தை அடைந்த காலத்திலே அடிக்கடி பாதிப்புக்குள்ளான பிரதேசங்களுள் மூதூர் முக்கியமான இடத்தை வகித்துள்ளது. இயற்கையிலேயே புவியியல் காரணிகளால் போக்குவரத்து தொடர்புகளில் கணிசமானளவு பின்தங்கியிருந்த இப்பிரதேசம் இனமுறுகல் வன்முறைகளினால் மேலும் பின்தங்கிப்போயிருந்தது. மிகச்சரியாகக் கூறப்போனால், மூதூர் பட்டினத்திற்குள் மக்கள் நடமாடக்கூடிய பரப்பளவு சில சதுர கிலோமீற்றர்களுக்குள்யே அடங்கிப்போயிருந்தது.
ஒரு காலகட்டத்தில் இவ்வெல்லைக்குள்ளிருந்து பயணம்போகும் ஒருவர் பாதுகாப்பாகத் திரும்பி வந்தாலே பெரும்பேறு என அவரது குடும்பத்தினர் கருதுமளவுக்கு நிலைமைகள் இருந்தன. தவிர பயணப்பாதைகளின் பராமரிப்பு மற்றும் திருத்தவேலைகள் நீண்ட காலமாக சரிவர நிகழாததால் தரைவழிப் போக்குவரத்தின் தரமோ படுமோசமாக இருந்து வந்தது.


ஆனால் இவையெல்லாம்  முடிவுக்கு வரக்கூடிய நிலைமை தோன்றியது என்னவோ ஒரு சடுதியான அரசியல் நிகழ்வு ஒன்றினால்தான். ஆம், 2001ம் ஆண்டு இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் இடையே கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையானது பல தடவைகள் இரு தரப்பினராலும் பலமுறை மீறப்பட்ட பின்னர் உச்சகட்டமாக, விடுதலைப் புலிகள் மூதூரில் மாவிலாறு  அணையின் துருசைக் கைப்பற்றித் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். சர்ச்சைக்குரிய பல நியாயங்களையும் நிபந்தனைகளையும் அரசுக்கு முன்வைத்து வயல்நிலங்களுக்குரிய நீரைப் பாயவிடாமல் தடுத்து வைத்திருந்தனர். பலநாள் இழுபறியின் பின்னர் அடுத்த கட்ட நகர்வாக மூதூர் நகரைக் கைப்பற்றினார்கள்.



இதுவே அவர்கள் செய்த தற்கொலைக்கு ஒப்பான மிகப்பெரும் தவறாகவும் அமைந்துவிட்டது.  சந்தர்ப்பம் பார்த்துக் காத்திருந்த அரசு மக்களை மீட்கவென நடவடிக்கையில் இறங்கியது. அதன்பின்னர்  வெள்ளி முள்ளிவாய்க்கால் வரை நிகழ்ந்ததெல்லாம் யாவரும் அறிந்த வரலாறு.
கிழக்கு மாகாணம் முற்றாக விடுவிக்கப்பட்டதும் A-15வீதியினூடாக திருகோணமலைக்குச் செல்லும் கனவு நனவாகுமா என்ற நப்பாசை மூதூர் மக்களுக்குத் தோன்றியதில் வியப்பில்லைதானே. முன்பு ஒருகாலத்தில் பாதை இருந்த இடமே  தெரியாதளவுக்கு உருக்குலைந்து போயிருந்த வழியால் பலர் போய்வர ஆரம்பித்து பின்னர் மெல்ல மெல்ல அதிகமான மக்கள் துறையினூடாக தோணிகள் படகுகள் மூலம் பயணத்தில் ஈடுபடலானார்கள்.
கிழக்கின் நகரங்களை கரையோரத்தினூடாக இணைக்கும் அரசின் முயற்சி ஆரம்பித்தவுடன் கிண்ணியாப் பாலம் நிர்மாண வேலைகள் ஆரம்பித்து முடிவடைந்தது. அதன்பின் A-15 வீதியிலுள்ள ஏனைய பாலங்களான உப்பாறு, கங்கை, இறால்குழி...என்று தொடர்ந்து அன்று மணித்தியாலங்களை விழுங்கிய மூதூர்- திருகோணமலை பயணம் இன்று சில நிமிடங்களில் என்றாகிப் போயிருக்கின்றது. 

இப்பொழுது கூறுங்கள். கிண்ணியாப்பாலம் என்பது மூதூருக்கான முன்னோடிப் பாலம்தானே?

(Contd...)

-'Mutur' Mohammed Rafi

Tuesday, December 13, 2011

சுதந்திரம் 27 & டைட்டானிக் 1




வயது வித்தியாசம் 100 ஆண்டுகள்!


2011












1911










மேலேயுள்ள இரு புகைப்படங்களையும் பாருங்கள்.


இவை இரண்டிற்குமிடையில் ஒரு ஒற்றுமையும் 100 வித்தியாசமும் (வித்தியாசங்களல்ல!) உண்டு. ஒற்றுமை என்ன தெரியுமா? இவை இரண்டும் எடுக்கப்பட்டது ஒரே இடத்தில்தான்.


ஆம்!  திருகோணமலை நகரின்  நகரசபை (Urban Council), வாடிவீடு (Rest Hose), புனித மரியாள் கல்லூரி (St. Mary's College) ஆகிய இருக்கும் முச்சந்தியில் வைத்து வாடிவீடு புனித மரியாள் கல்லூரி ஆகியவை தெரியும் கோணத்தில் எடுக்கப்பட்டுள்ள படங்கள் ஆகும்.  இவை இரண்டிற்கும் இடையேயான காலவித்தியாசம் ஒன்றும் அதிகமில்லை நண்பர்களே.


வெறும் 100 வருடங்கள்தான்!


இடது புறமாக இருக்கும் படம் 1911ம் ஆண்டில் அதாவது நமது இலங்கைத் தீவிற்கு சுதந்திரம் வழங்கப்படுவதற்குச் சரியாக 27 வருடங்களுக்கு முன்பு இன்னும் சொல்லப்போனால் பிரபல டைட்டானிக் கப்பல் மூழ்குவதற்கு ஏறத்தாழ ஓராண்டுக்கு முன்பு எடுக்கப்பட்டுள்ளது. அக்காலத்தில் திருகோணமலையில் மிகவும் செல்வாக்குடன் இருந்தவராகக் கூறப்படும் அப்துல் ரசூல் எனும் பிரமுகரால் எடுக்கப்பட்டுள்ளதாக இந்தப் புகைப்படத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது பாருங்கள்.

வலது புறமிருக்கும் புகைப்படம் இந்த வருடம் அதாவது 2011ம் ஆண்டு,  1911 புகைப்படம் எந்தக் கோணத்தில் எடுக்கப்பட்டுள்ளதோ கிட்டத்தட்ட அதே இடத்தில் அதே விதமாகவே எடுக்கப்பட்டுள்ளது.

இதை எடுத்தது இன்னும் சரிவரப் பிரபலமாகாதவரும் ஒருவேளை தப்பித்தவறிப் பிரபலமாகி விட்டால் அதனால் தனது தனிப்பட்ட சுதந்திரம் பாதிக்கப்படுமே என்று கவலைப்படும் ஒருவருமாகும்.


அவர் வேறு யாருமல்ல அடியேன்தான்!

 -மூதூர் மொகமட் ராபி

Monday, December 12, 2011

தெரிந்திருக்க வேண்டாமா?




ஒரு பவுர்ணமிச் சறுக்கல்!









"நேற்றிரவு இந்த வருடத்தின் கடைசி சந்திர கிரகணத்தை இலங்கையிலுள்ள மக்களில் பலர் கண்டு களித்தனர்..." என்றுதான் நமது நாட்டின் சக்தி வாய்ந்த தொலைக்காட்சி சேவையின் தமிழ் செய்தி அறிக்கையில் கிரகணம் பற்றிய செய்தியை அறிவிப்பாளர் கூற ஆரம்பித்தார். இதிலே என்ன இருக்கிறது என்று கேட்பவர்களுக்குத்தான் இதைச் சொல்லப் போகின்றேன்.

2011.12.10ம் திகதி மாலை முதல் நள்ளிரவு வரை நீடித்த சந்திர கிரகணம் பற்றிய செய்தியினை மறுநாள் இரவுச் செய்திக்காக வாசித்த கடமை நேரச் செய்தி அறிவிப்பாளர், " நேற்று ஓர் போயா (பவுர்ணமி அல்லது முழுமதி) தினமாக இருந்தமையினாலும் சந்திர கிரகணத்தை அதிகமானோர் கண்டுகளிக்கக் கூடியதாக இருந்தது குறிப்பிடத்தக்கது" என்றும் கூறினாரே பார்க்கலாம்.

இதைக் கேட்டவுடன் தூக்கிவாரிப்போட்டது. "எந்தக் காலத்திடா அம்மன் பேசியிருக்கிறாள்?" என்று கலைஞரின் வசனங்களை நக்கல் தொனியில் பேசுவாரே நமது நடிகர்திலகம், ஞாபகமிருக்கிறதா? அந்தப்பாணியில், "எந்தக்காலத்திலடா சந்திர கிரகணம் பௌர்ணமி தினத்தில் வராமல் வேறுதினத்தில் வந்திருக்கிறது?"


என்று கேட்க வேண்டும் போலிருந்தது.


 சரி பாவம், அந்த அறிவிப்பாளர் விடுங்கள். அவர் என்ன செய்வார் யாரோ எழுதிக் கொடுத்ததை காமிரா லென்ஸைப்பாரத்து வாசிப்பவரைக் குறைசொல்லிப் பயனில்லை.   ஆனால் ஒரு பொறுப்புள்ள தொலைக்காட்சி சேவையின் செய்திகள் தயாரிப்பாளர்களுக்கு ஓர் எட்டாம் தரத்தில் படிக்கும் மாணவிக்குத் தெரிந்த விஞ்ஞானப் பொது விடயங்கள் தெரிந்திருக்க வேண்டாமா?


நீரில் வாழும் பாலூட்டி வகை விலங்கான திமிங்கிலத்தை ஒரு மீன் என்றும் தனது நீ....ண்ட கைவிரல்களுக்கிடையிலே அமைந்திருக்கும் மென்சவ்வின் உதவியுடன் பறந்து திரியும் முலையூட்டியான வவ்வாலை ஒரு பறவை என்றும் யாராவது கூறினால் இந்தக்காலத்தில்  இரண்டாம் தரத்தில் கற்கும் குழந்தை கூட கேலிசெய்யும்.

இதைச் சொல்லும்போது ஒரு ஆசிரியரின் ஜோக் ஒன்று ஞாபகத்திற்கு வருகின்றது. அவருக்கு தமிழ் கொஞ்சம் தகராறு. ஒருநாள் அவர் கரும்பலகையில் 'அ-னி-ல்' என்று எழுதினாராம். ஒரு மாணவன் எழுந்து நின்று, 'அணிலுக்கு மூன்று சுழியுள்ள 'ணி' வந்து அ-ணி-ல் என்று அல்லவா வரும். நீங்கள் என்ன சேர் இரண்டு சுழியுள்ள 'னி' யைப் போட்டுள்ளீர்களே' என்று கேட்டானாம். "அது வந்து இதுவும் அணில்தான்...ஆனால் பாவம், கொஞ்சம் சின்ன அணில், அவ்வளவுதான்!" என்றாராம்.

-மூதூர் மொகமட் ராபி

பரீட்சை!





ன்று (2011.12.12)  கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் -G.C.E.(O/L)- பரீட்சைக்குத் தோற்றும்  சகல பாடசாலை மாணவர்களுக்கும் எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இந்தப் பரீட்சையை முதற்தடவையாகத் தோற்றும் மாணவர்களுக்கு ஒரு வார்த்தை உங்கள் பாடசாலை வாழ்விலே ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைக்குப் பிறகு நீங்கள் சந்திக்கும் முதலாவது அரசாங்கப் பரீட்சை இது.

  உங்கள்  சொந்த இடங்களிலும் பழகிய பாடசாலையிலுமே நடைபெறுவதால் எதுவித பதற்றமுமின்றி நம்பிக்கையுடன் எழுதுங்கள். இதுவரை காலமும் பாடசாலைகளில் நீங்கள் சந்தித்த பரீட்சைகளில் போலன்றி சில வேறுபாடுகளைச் சந்திப்பீர்கள்.

1. அடையாள அட்டை பரிசீலிப்பு
2. அனுமதி அட்டைகளில் கையெழுத்திடுதல்


ஆகிய விடயங்களை முன்கூட்டியே ஆசிரியர்கள் அல்லது பரீட்சை அனுபவமுள்ளவர்களிடம் கேட்டுத் தெரிந்து வைத்திருத்தல் நல்லது. 


முதல்நாள் பரீட்சையின் போது தவிர பின்பு இவையெல்லாம் பழகிவிடும். இம்முறை பரீட்சைத் திணைக்களம் மிகச்சரியாக முதல்நாளில் கடினமான பாடங்கள் இல்லாமல் நன்கு பரிச்சயமான சமயப்பாடங்களை வைத்திருப்பது  ஒரு சிறந்த முடிவு.


இந்தப் பரீட்சை தொடர்பாக ஆசிரியர்கள் வழிகாட்டியிருப்பார்கள். அவற்றோடு இவற்றையும் தெரிந்த கொள்ளுங்கள்- தேவையெனில்.


• வீட்டிலிருந்து அல்லது தங்குமிடத்திலிருந்து புறப்படுவதற்கு முன்பே அடையாள அட்டை அனுமதி அட்டை உங்கள் வசம் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.


• குறைந்தது தேர்வு ஆரம்பிக்கும் நேரத்திற்கு அரைமணி முன்கூட்டியே பரீட்சை மண்டபத்துக்குச் சென்று விடுங்கள்.


• பரீட்சைக்குத் தேவையான உபகரணங்கள் அனைத்தையும் நீங்களே உங்கள் வசம் வைத்திருங்கள்.


• வினாத்தாள்களை நன்கு வாசித்து அறிவுறுத்தல்களை தெளிவாக விளங்கிக் கொண்ட பின்னரே விடைகளை எழுதத் தயாராகுங்கள்.


• பொருத்தமில்லாத மேசைகள் நாற்காலிகள் குறைவான ஒளிச்செறிவு மழை காரணமாக வரும் தூவானச் சாரல் ஆகிய இடையூறுகள் இருந்தால் உங்கள் மேற்பார்வையாளர்களிடம் தயக்கமின்றித் தெரிவித்து மாற்று ஏற்பாடுகளைப் பெற்றுக் கொள்ளுங்கள். அதிலும் கணிதம் போன்ற பாடங்களுக்கு நேரம் மிகவும் முதன்மையானது என்பதால் இவ்விடயத்தில் அவதானமாக இருங்கள்.


இனியென்ன இளம் கன்றுகளே பயமறியாமல் ஜமாயுங்கள்!

-Jesslya Jessly

Sunday, December 11, 2011

ஒரு கடிதம் இரு நண்பர்கள்!









ன்புள்ள வாசகர்களே!


எனது நண்பர்களிலே ஒருவர் லண்டனிலே இருக்கிறார். முன்பு இங்கே இலங்கையில் ஓர் ஆசிரியராகக் கடமையாற்றியவர்.   மேல் படிப்புப் படித்துக் கொண்டே உழைத்து வாழ்க்கையில் முன்னுக்கு வரலாம் என்ற நம்பிக்கையில் அங்கு சென்றிருக்கிறார்.


அவர் மிகவும் நேர்மையானவர். அத்துடன்  தான் நம்பும் இறைவனுக்கு உண்மையாகவே பயந்து வாழ்பவர்.

இந்த இரண்டு குணங்களும் போதாதா அவரால் பிழைக்க முடியாதிருப்பதற்கு?


ஆம், அவருக்கு லண்டன் போகும் போது ஓர் ஆசை இருந்தது. அது ஒன்றும் பெரிய ஆசையெல்லாம் கிடையாது. அதாவது  இலங்கையில் தனது ஊரிலே முழுமையாகக் கட்டி முடிக்கப்படாதுள்ள  இறையில்லம் ஒன்றுக்கு 10 பக்கட் சீமந்து வாங்கி அன்பளிப்புச் செய்ய வேண்டுமென்பததான் அந்த ஆசை. ஆனால் லண்டன் போய் பல வருடங்களாகியும் கூட அவரால் தனது ஆசையை நிறைவேற்றிக் கொள்ள இயலாமல் போனது ஏன் தெரியுமா?


வேறொன்றுமில்லை மேலே கூறிய இரு இயல்புகள்தான்.


நேர்மையாய் சம்பாதித்த பணத்தை மட்டும் வைத்து வாழ்வதற்கே போதாதிருக்கும் போது எங்கனம் தான தருமம் செய்வது? நேர்மைக்கும் சுபீட்சத்துக்கும் உள்ள தொடர்பை நீங்கள் இன்னம் விளக்கமாக அறிய வேண்டுமா....?

அப்படியானால்   மேலே நான் குறிப்பிட்ட லண்டன் நண்பருக்கு இலங்கையில் அவரது ஊரிலிருந்து  நெருங்கிய நண்பர் ஒருவர் வரைந்திருக்கும் கடிதமொன்றைப் பாருங்கள்!


இதோ அந்தக் கடிதம்:


மச்சான் சுலைமான்,

அஸ்ஸலாமு அலைக்கும்டா!


எப்படிச் சுகமா இருக்கியாடா? இந்தக்கடிதத்தை எழுதிறதை நினைச்சால் கவலையாகவும் சங்கடமாகவும் இருக்குடா. ஆனாலும் வேறு வழியில்லாததால்தான் அனுப்புறன். உண்மையான விசயத்தைச் சொல்றதுக்கு சொந்த மொழி அதுவும் பேச்சு மொழிநடைதான் நல்லது என்டதால அப்படியே எழுதுறன். சரிதானே?


மச்சான், இந்த உலகத்தில நேர்மையா வாழ்றதுக்கு வழியே இல்லடா. அப்படி நேர்மையா வாழ்ந்தா இந்த உலகமே நம்மள பைத்தியக்காரன் அல்லது பொழைக்கத் தெரியாதவன் என்றுதான் கணக்கெடுக்குதுடா. சின்னவியாபாரம் முதல் கொண்டு பெரிய அரசாங்கத் தொழில் வரைக்கும் பொய்யும் புரட்டும் லஞ்சமும் மோசடி களவும்தான்டா நடக்குது. இதில எதையாவது ஒரு பாவத்தையாவது செய்யாதவனால இன்றைய வாழ்க்கைக்குரிய மாதிரி சம்பாதிக்க இயலாது. அப்படிச் சம்பாதிக்க முடியல்லண்டா அப்படியானவன அவனைப்பெத்த தாய் முதல் கொண்டு அவனுக்குப் பிறந்த பிள்ளைகளும் கூட மதிக்காத நிலைமைதான்டா இப்ப இருக்கு



சிறு வட்டியைக்கூட பெறாதே என்று சொல்லியிருக்கிற சமூகத்திலதாண்டா கொள்ளை லாபம் வச்சு விக்கிறானுகள். போலியாக பொருளைத் தயாரிச்சு வித்து ஏமாத்துகிறான்கள். இலட்சக்கணக்கில லஞ்சம் வாங்கிட்டு கடமையைச் செய்யாம விடுறான்கள். பாடசாலையில கடமையைச் செய்யாம டியுசனுக்கு வரவைக்கிறான்கள்.



தலையில் தொப்பியும் தொழுகையுமாக மீற்றர்ல மோசடி செய்து கள்ள கரண்ட் எடுக்கிறான்கள். இதையெல்லாம் ஆண்டவனுக்குப் பயப்படாமல் செய்துவிட்டு ஹஜ்ஜுக்கும் போறானுகள். பள்ளிவாசல் தலைவராகிறான்கள். அரசியல்வாதிகளோடு சேர்ந்து இரவுப் பார்ட்டி போட்டுக் குடிச்சிட்டு சுபஹுக்கும் வாறான்கள். வாப்பாமார் சுனாமி நிவாரணத்தில சுருட்டிச் சேர்த்த ஹறாமான பணத்தை முதலாக வைத்து மகன்மாரெல்லாம் ஹாட்வெயார் துணிக்கடை போட்டு  ஹலாலா வாழறானுகள் மச்சான்.



இதையெல்லாம் ஏன் சொல்றேன் தெரியுமாடா. உன்னையும் என்னையும் போல இரண்டொரு மடையன்கள் லண்டன்லயும் நம்மட ஊர்களிலயும்  இருந்துக்கிட்டு நேர்மையாச் சம்பாதிச்சு முன்னுக்கு வரலாம் என்டு நம்பிக்கொண்டு வாழுறோமே...அந்த மடத்தனத்தை சொல்றதுக்குத்தான் இதை எழுதிறன்டா சுலைமான். மனிசன மனிசன் அடிச்சுத்திங்கிற நெலமை வந்திட்டுதுடா. இனியும் நம்ம நேர்மை அது இது என்டு சொல்லிக்கிட்டிருந்தா சரி வராது போல இருக்குதுடா.



நான் இஞ்ச இந்த நிலைமையை அனுபவிச்சிட்டிருக்கிறேன். இந்த பொழைக்கத் தெரியாத வாழ்க்கை வாழ்ந்ததெல்லாம் போதும்டா என்று தோணுதுடா.



உனக்கு நினைவிருக்காடா என்ட ஒரு மாமி தலையில ஒரு ஓப்பரேசனுக்கு காசு இல்லாம இருநதா என்டு சொன்னேனே. அந்த மாமியிட புருசன்ட தொழில் என்ன தெரியுமா? ப்ரைஸ் கொன்ட்ரோல் இன்ஸ்பெக்டர்! லஞ்சம் புழுத்து வழியுற வேலை. ஆனா எங்க மாமா அல்லாஹ்வுக்கு உண்மையாகவே பயப்படுறவரு. அவரோடு ஒத்த இன்ஸ்பெக்டர்மார்களிலே ஒரு காரோ பைக்கோ இல்லாத ஒரே ஒருவர் என்டா அது இவர்தான்.



மாமிக்கு உயிராபத்தான நோய் வந்து ஒப்பரேசனுக்குக் காசு இல்லாத நெருக்கடியான நிலமையிலும் மனிசன் நேர்மையாக இருந்தாரு. கடைசியில என்ன ஆச்சு தெரியுமா? மாமி குணமடைஞ்சிட்டா. ஆனா இவரு மருந்துக்குச் செலவழிச்சுக் கடனாளியாகி  யோசனை பிடிச்சு மென்டலாகிவிடும் நிலைமைக்கு இருக்கிறாரு. இப்ப சொல்றா சுலைமான். தேவையா மச்சான் இந்த நேர்மை? பதில் சொல்றா சுலைமான்?



நீ ஆண்டவனைத் தொழுதிட்டேயிரு. அவனுக்கு உண்மையாப் பயந்து வாழு. அப்பதான் உன்ட ஊர்ல இருக்கிற பள்ளிக்குக் கூட சீமந்து 10 பக்கட் வாங்கிக் குடுக்கேலாம இருப்பாய். அதையெல்லாம் விட்டுப்போட்டு பொழைக்கிற வழியப்பாரு மச்சான். இனி நானும் அதைத்தாண்டா செய்யப்போறன். நல்லது கெட்டா நாயிலும் கேடுன்டுவாங்க. ஏதோ உனக்கிட்டச் சொல்லணும் போல இருந்திச்சுடா. அதுதான்டா இந்த சாமத்துல ஈமெயில் பண்றன். உன்ட எண்ணத்தைச் சொல்லு மச்சான்.

இப்படிக்கு

இர்பான்


 ( குறிப்பு: பெயர்கள் மட்டும் மாற்றப்பட்டுள்ளன)



- Jesslya Jessly