Thursday, May 24, 2012

www.kinniya.net ஆன்மீகம் : ஒரு கருத்துரை!








ஆன்மீகச்சூழல் Vs தொலைக்காட்சி





அன்புள்ள நண்பர்களே,


கிண்ணியா நெற் www.kinniya.net இணையத்தளத்திலே கடந்த May 20ம் திகதி ஆன்மீகம் எனும் பகுதியில் 'ஆன்மீகச் சூழல் அற்றுப்போகும் முஸ்லீம் வீடுகள்' எனும் ஒரு சிறு கட்டுரை வெளியாகி இருந்தது.  மௌலவி எம்.எஸ். எம். இம்தியாஸ் ஸலஃபி என்பவர் அதனை எழுதியிருந்தார். அவர் தனது ஆக்கத்தில் இன்றுள்ள நமது முஸ்லீம் இல்லங்களிலே பொழுதுபோக்குச் சாதனங்களின் குறிப்பாக தொலைக்காட்சியின் பாவனையால் ஆன்மீகச்சூழல் அற்றுப்போய்க்கொண்டிருப்பதைப் பற்றிய தனது விசனத்தையும் தெரிவித்திருந்தார்.

இது ஒரு முக்கியமான விடயம் என்பதால் இதுபற்றிய எனது பார்வையையும் சில கருத்துரைகளையும் அவரது ஆக்கத்தின் கீழேயுள்ள கருத்துரைப் பெட்டியிலே தெரிவிக்க முயன்றேன். ஆனால் அது கைகூடவில்லை. பலமுறை முயன்றும் தொழினுட்பக் காரணங்களாலோ அல்லது வேறு காரணங்களாலோ கருத்துரை அதிலே வெளியாக மறுப்புத் தெரிவித்துக் கொண்டிருந்தது.

வழமையாக கிண்ணியாநெற் தளத்திலே வெளியாகும் என்னைக் கவர்ந்த ஆக்கங்கள் மற்றும் செய்திகளுக்கு விமர்சனம் எழுதிவருகின்றவள் நான். இதுவரை அதற்கு எதுவித மறுப்பும் ஏற்பட்டதில்லை என்பதானால் உடனடியாக வேறுவித காரணங்களை நினைக்க என்னால் முடியவில்லை. சரி, தொழினுட்ப 'கோளாறு' மட்டுமே காரணமாக இருக்கவேண்டும் என்று நம்பத்தான் நானும் விரும்புகின்றேன்.


அதனால் அந்தக் கட்டுரைக்குரிய எனது கருத்துரையை சிறகுகளில் இடுகின்றேன். இரண்டையும் படிப்பவர்களுக்கு உண்மை மிக அழகாகப் புரியும்.


இதோ...

-Jesslya Jessly


Opinion: www.kinniya.net



ன்புள்ள மௌலவி அவர்களே,


அஸ்ஸலாமு அலைக்கும்!

ஒரு மௌலவி என்ற வகையிலே நல்ல பல கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறீர்கள். மிகவும் சந்தோசம். ஒருவீட்டிலே ஆன்மீகச்சூழல் நிலவ வேண்டும் எனும் தங்களுடைய நோக்கத்தையும் அதற்குத் தொலைக்காட்சி உட்பட இன்றைய பொழுதுபோக்குச் சாதனங்கள் அனைத்தும் இடையூறாக இருக்கின்றன என்ற ஆதங்கத்தையும் வரவேற்கின்றேன். ஆனால்.... அதைச் சொல்வதற்கு நீங்கள் பயன்படுத்தியிருக்கும் சில உதாரணங்களில்தான் எனக்குச் சில முரண்பாடுகள் உண்டு.

ஒரு வீட்டிலே இஸ்லாமியச் சூழல் நிலவாமைக்கு அந்த வீட்டில் வாழும் தனித்தனி மனிதர்கள் மட்டுமே பொறுப்பாக முடியுமா மௌலவி அவர்களே? நீங்கள் குறிப்பிட்டிருப்பதுபோல குடும்பத்தலைவி மட்டுமோ அல்லது பிள்ளைகள் மட்டுமோ தனியே காரணமாக இருக்க முடியாது. அந்த மொத்தக் குடும்பமும் மட்டுமன்றி சுற்றயல் சமூகமும்தான் காரணமாக இருக்க வேண்டும்.

முதலில் குடும்பத்தைப் பார்ப்போமே....


நமது முஸ்லீம் சமூக அமைப்பிலே குடும்பத் தலைவனாகிய ஆணுக்கு மனைவியைக் கட்டுப்படுத்தி வழி நடாத்தக்கூடிய அபரிமிதமான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதை நீங்கள் அறியாதவரல்ல. அவ்வாறிருக்கும்போது ஒரு மனைவியும் அவரது பிள்ளைகளும் தனியே தங்களது சொந்த விருப்பத்தின் பெயரிலே மட்டும் தொலைக்காட்சி வானொலி நிகழ்ச்சிகளை நுகர்ந்து வழிகெட்டுப்போக முடியுமா? அதற்கு ஏதோ ஒருவிதத்தில் குடும்பத் தலைவனான ஆண்களும்தானே காரணமாகவும் ஊக்குவிப்பாளர்களாகவும் இருக்கின்றார்கள்..?


 eg: கேபிளுக்கு இணைப்பு எடுத்துத் தருவதிலிருந்து...அதைத் தொடர்ந்து பேணுவது வரை யார் மறைமுகக் காரணிகளாக இருக்கின்றார்கள்?


பெண்களையும் பிள்ளைகளையும் குறித்து  தொலைக்காட்சி நாடகங்கள், சினிமாப் படங்கள், பாடல்கள் மட்டும் குறிப்பிட்டுள்ள நீங்கள் வீட்டுத் தலைவராகிய ஆண்கள் நாளெல்லாம் விழுந்து கிடக்கும் கிரிக்கட் விளையாட்டு நிகழ்ச்சிகளையும் இலட்சாதிபதி சூது நிகழ்ச்சிகளையும் சொல்லியிருக்கலாமே..?


அதை மட்டும் எப்படி மிகவும் கவனமாகத் தவிர்த்து விட்டீர்கள்... மௌலவி அவர்களே?

வரவேற்பறையில் அமர்ந்தவாறு கீழே விழுந்து கிடக்கும் பத்திரிகையை எடுப்பதற்குக்கூட சமையலறைக்குள் வேலையாக இருக்கும் பெண்களைக் கூப்பிடுவதுதானே நமது ஆண்கள் பெரும்பாலோனோரின் இயல்பே. இவ்வாறான ஆண்களினால்தான் வீட்டிலிருக்கும் பெண்கள் அல்லும் பகலும் உழைத்துக் களைத்துப் போகின்றார்கள் .


இதிலே அன்றாடம் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கோ இரட்டை வேலை. சமைப்பது, வீட்டை ஒழுங்கு செய்வது, பிள்ளைகளைக் கவனிப்பது என்று விட்டிற்குள்ளேயே உழைத்து... உடலாலும் மனதாலும் களைத்துப்போகும் அவர்களுக்கு ஓய்வும் பொழுதுபோக்கும் தேவைப்படுவது இயல்பானது. (ஒரு வண்டில் மாட்டுக்குக்கூட கட்டாயம் ஓய்வு தேவை)


இந்தத் தேவையைப் பூர்த்தி செய்துவருவது யார்? பெரும்பாலும் நீங்கள் ஷைத்தான் என்று விளிக்கும் அந்த முட்டாள் பெட்டியான தொலைக்காட்சிதான். இப்போது சொல்லுங்கள் பெண்களை இந்த நிலைமைக்கு மறைமுகமாக உள்ளாக்குவதிலே.. மனைவிக்கும்...தாயாருக்கும்.. சகோதரிகளுக்கும் சிறு உதவிகூடப் புரியாமல் வரவேற்பறையி.லே பழிகிடக்கும் அல்லது ஊரை வெட்டியாகச் சுற்றும் உங்களுடைய ஆண்களுக்குப் பங்கில்லையா மௌலவி அவர்களே?


மனைவியின் உழைப்பை உறிஞ்சி வாழுகின்ற ஆண்களுக்கு உள்ளுர ஒருவகையான குற்றவுணர்ச்சி இருக்கும்.  அவளுடைய நியாயமான பொழுதுபோக்குக்கு இடம்கொடுக்காது விட்டால் என்னவாகும் தங்கள் "நிலைமை" என்பதை அவர்கள் நன்கு புரிந்தே வைத்திருக்கின்றார்கள். இதனால்தான் நீங்களெல்லாம் எத்தனை ஆன்மீகச் சிந்தனைகளை மேற்கோள்களுடன் எடுத்துரைத்தாலும் கேட்பதோடு அவை நீர்த்துப் போகின்றன.

இனி சமூகத்தைப் பார்த்தால்...

இன்றுள்ள சகலருமே சகல வாகன சாதனங்களுடனும் வசதியாக வாழ்பவர்களைத்தானே மதிக்கின்றார்கள்...?  இபாதத்தாளிகளான ஏழைகளையும் பசையுள்ள ஏமாற்றுப்பேர்வழிகளையும் ஒன்றாக வைத்தால் யாரை இந்த சமூகம் உயர்வாகப் பார்க்கின்றது..? இதற்கு ஆன்மீகவாதிகள் நீங்கள் கூட விதிவிலக்கு கிடையாது.

எறியப்படும் எலும்புத்துண்டுக்கே வாலாட்டுபவர்கள் தொடைக்கறி கிடைத்தால் விடுவார்களா என்ன?


எனவே, முதலிலே இதற்குரிய சமூகப் பொருளாதாரக் காரணிகளைக் கண்டறியுங்கள். அவற்றுக்கு ஏதாவது மாற்றுவழி உண்டா என்று பார்த்து அவற்றை நடைமுறைப்படுத்துவது பற்றி உருப்படியாகச் சிந்தியுங்கள்!

அல்லது உண்மையை பட்டை உரியச் சொல்லும் என்னைப் போன்றவர்களைச் சபியுங்கள்!

Tuesday, May 22, 2012

விதியின் விதி...?






கடவுளையே

காப்பாற்றும்

விதி!





ன்றாட வாழ்விலே நாம் அதிகமாகப் பயன்படுத்தும் வார்த்தைகளின் பட்டியலில் விரும்பியோ விரும்பாமலோ 'விதி' யும் உள்ளது. நமது தனிமனித வாழ்க்கை முதல் பொதுவிடயங்கள் வரை தீர்மானிப்பது விதி என்கிறார்கள். அதாவது அடுக்களை முதல் அரசியல் மாற்றங்கள் வரை அணுவின் அசைவுமுதல் அண்டங்களின் நகர்வு வரை சகல விடயங்களும் இவ்வாறுதான் நிகழ வேண்டும் எங்கோ ஏற்கனவே தீர்மானித்த வைக்கப்பட்டுள்ளதாகச் சொல்வதுதானே விதி என்றால் அதுபற்றி ஒருமுறை பார்த்து விடலாம். பின்வரும் கட்டுரை ஒரு தமிழ் இணையத்தளத்தில் வெளியானது. வாசித்துவிட்டு விதிபற்றிய உங்கள் சொந்தக் கருத்துக்களோடு உரசிப்பார்த்துக்கொள்ளுங்கள்

-Jesslya Jessly


The essay:







முதலில், ஒன்றை தெளிவுபடுத்தி விடலாம்.


விதி என்பது இழப்புகளிலிருந்து மனிதனை ஆற்றுப்படுத்தும் கருவி என்று ஆத்திகர்களும், சுய தேடல்களை மறுத்து மனிதனை முடக்குகிறது என்று நாத்திகர்களும் கூறுகிறார்கள். இதுவரை விதி குறித்து செய்யப்பட்ட விவாதங்கள் இந்த வகைப்பட்டதாக மட்டுமே இருக்கின்றன. விதி என்பது சாராம்சத்தில் மனிதனுக்கு சிந்தனை இருப்பதையே மறுக்கிறது. பதிலெழுதும் யாரும், ஆய்வுக்(!) கட்டுரைத் தொடர் எழுதும் யாரும் இந்த அம்சத்தைக் கணக்கிலெடுக்கவே இல்லை.



தொடக்கத்திலிருந்து நாம் எழுதிக் கொண்டிருப்பது இதையேதான். விதி இருப்பதை நம்புகிறீர்களா? அது முழுமையாக, ஒரே மாதிரியாக நம்புவதாக இருந்தாலும், இரண்டாகப் பிரித்து தனித்தனியாக நம்புவதாக இருந்தாலும் அதன் பொருள் மனிதன் சிந்திக்கும் திறனுடையவன் என்பதை மறுப்பது தான். ஆனால் எந்த மதவாதியாலும் மனிதன் சிந்திக்கிறான் என்பதை மறுக்க முடியாது.


அன்று  அவர்கள் விதி குறித்து விவாதிக்காதீர்கள் என்று பின்வாங்கியதற்கும், இன்று விதி குறித்த தெளிவான அறிவை இறைவன் மனிதனுக்கு வழங்கவில்லை என்று மதவாதிகள் பசப்புவதற்கும் இதுவே காரணம். இதற்காகத்தான் அறிவியல் தொடங்கி தர்க்கவியல் ஈறாக அனைத்தையும் இழுத்து போர்த்திக் கொள்ள துடிக்கிறார்கள்.



அறிவு என்பது என்ன?


தன் புலன்களின் மூலம் பெறும் அனுபவங்களை தொகுத்து தேவைப்படும் இடங்களில் பயன்படுத்திக் கொள்வது தான். சிந்தனை என்பது அறிவின் வலிமையால் கற்பனையான முன்முயற்சிகளை சோதனை செய்து பார்ப்பது. மனிதன் இன்று பெற்றிருக்கும் அனைத்து வகை முன்னேற்றங்களும் அறிவின் வலிமையாலும் சிந்தனையின் வீரியத்தாலும் தான். இந்த வலிமையும், வீரியமும் எந்த எல்லையையும் எட்டிவிடும் சாத்தியக் கூறுகளை உள்ளடக்கியதா? இந்த பேரண்டத்தின் விரிவுடன் மனிதனை ஒப்பு நோக்கினால் எந்த எல்லையையும் அடைவது சாத்தியமா? எனும் கேள்விக்கு சாத்தியமில்லை என்றே பதில் கூற முடியும். அதேநேரம் இது மனிதனின் பலவீனம் அல்ல.

இதையே இன்னொரு கோணத்தில் பார்க்கலாம். மனிதனின் அறிவு என்பது அவனுடைய தேவைகளோடு பிணைந்தது. எது குறித்த தேவை மனிதனுக்கு இல்லையோ அது குறித்த அறிதல் மனிதனுக்கு அவசியமில்லை. இதுவரை மனிதன் சென்று எய்திய எல்லைகளெல்லாம் அவனுடைய தேவையின் உந்துதல்களாலேயே நிகழ்ந்திருக்கின்றன.  இன்று மனிதன் முயன்று கொண்டிருக்கும் புதிய எல்லைகளுக்கும் தேவையே அடிப்படை. எது மனிதனுக்கு தேவையாக இருக்கிறதோ அதையே மனிதன் அறிந்திருக்கிறான். எது மனிதனுக்கு தேவையாக இருக்கிறதோ அதை அறிய முயன்று கொண்டிருக்கிறான். எனவே அவன் அறியாத ஒன்று இருக்குமானால் அதை அறியாதது அவனுடைய பலவீனமல்ல. மாறாக, அவனுக்கும் அவன் தேவைக்கும் இடையிலான இடைவெளி.


மனிதன் எதை நோக்கி பயணப்படுகிறான்? எதை அடைய முயல்கிறான்? என்பது தேவையிலிருந்தே கிளைக்க முடியும். ஆனால் தேவை என்பது மனித குலம் முழுமைக்குமான தேவையா? இல்லை. வர்க்கங்களாக பிரிந்து கிடக்கும் உலகம், தனிமனித சிந்தனையினூடாக வர்க்க சிந்தனையையே வெளிப்படுத்துகிறது. ஒரு வர்க்கத்தின் சிந்தனை இன்னொரு வர்க்கத்திற்கு எதிராகவும் இருக்கிறது.  ஆளும் வர்க்கத்தின் சிந்தனை ஒருபோதும் உழைக்கும் வர்க்கத்திற்கு பலனளிப்பதாய் இருக்க முடியாது. அதன் வடிவம் நீதி முறைமையாக இருந்தாலும், சீர்திருத்தங்களாக இருந்தாலும் உழைக்கும் வர்க்கத்தின் மீதான மேலாண்மையையே கோருகிறது. இந்த அடிப்படையில் தான் கடவுள், மதம், விதி போன்றவைகளும் வருகின்றன.

மதவாதிகள்  பொதுவாக வேதத்தில் கூறப்பட்டிருக்கும் விதி நீங்கலாக ஏனைய அனைத்தும் அறிவியல் உண்மைகளாக, காலம் கடந்து நிற்பவைகளாக, மனித அறிவுடன் முரண்படாதவைகளாக இருப்பதால்; முரண்பாடு போல் தோன்றினாலும் விதியை ஏற்றுக் கொள்வது அறிவுடைய செயல்தான் என சாதிக்கின்றனர்.

ஆனால் வேத வசனங்களுக்கு அவர்கள் ஏற்றும் அறிவியலும், காலம் கடந்து நிற்கும் தன்மையும் அவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை கற்பிதங்களேயன்றி உண்மைகளல்ல. விதியின் மீது எப்படி கேள்விகள் எழுப்பப்படுகிறதோ அது போன்றே அனைத்தின் மீதும் கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கின்றன. எனவே, 99% நிரூபிக்கப்பட்டு விட்ட ஒன்றில் ஒரு நூற்றுமேனியை ஐயுறுவது அறிவுடமையன்று என வாதிப்பது அடிப்படையற்ற அபத்தம்.

இது போன்றது தான், அறிவியலைக் கொண்டு முழுமையையும் மனிதன் அறிந்து கொள்ள முடியாது என்பதும்.  இப்பேரண்டத்தில் மனிதன் தன் வல்லமையை விரித்திருப்பது சொற்ப அளவு தான். அவன் அறியாதவைகள் இருக்கின்றனவா என்றால் ஏராளம். இந்த அறியாதவைகளின் பட்டியலில் விதியையும் வைத்துக் கொண்டு அதை ஏற்றுக் கொள் என்பது அறிவியல் ரீதியாக மட்டுமல்ல, தர்க்க ரீதியாகவும் பெரும் ஓட்டையாக இருக்கிறது. விதி பற்றிய அறிவு மனிதனுக்கு வழங்கப்படவில்லை என்றால் மனித வாழ்வில் விதிக்கு என்ன பங்களிப்பு இருக்க முடியும்?

எங்கோ பல லட்சம் ஒளியாண்டு தூரத்தில் பூமியைப் போன்று ஒரு கோள் இருக்கிறது என்றால் சாத்தியம், இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் அந்தக் கோளில் இருந்து தான் மனிதன் புவியில் பரவினான் என்றால் அதற்கு சான்றுகள் வேண்டும். மனிதன் அனைத்தையும் அறித்து விட்டானா? அவன் அறியாதவைகள் எவ்வளவோ இருக்கின்றன. எனவே அந்தக் கோளில் இருந்துதான் புவிக்கு மனிதன் வந்தான் என்பதை நம்புவது அறிவுக்கு ஏற்புடையதுதான் என்று வாதிட்டால் அதில் உண்மைக்கு இடமில்லை.


 
விதி என்பது மனிதனோடு வேறெதையும் விட அதிக நெருக்கம் கொண்டிருக்கிறது. அனைத்தையும் தீர்மானிக்கிறது.  அப்படியான ஒன்றை, அன்றிலிருந்து இன்றுவரை விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒன்றை, கேள்விகள் கேட்கப்பட்டு வந்திருக்கும் ஒன்றை, இல்லை என்று மறுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒன்றை வெறுமனே நம்பு என்பது எப்படி அறிவுடமையாகும்? எனவே மனிதன் அறியாதவைகளும் இருக்கின்றன என நீட்டி முழக்குவது கடவுளின் இருப்பை தக்கவைப்பதற்கு தேவையானதாக இருக்கிறதேயன்றி, மனிதனின் அறிவை விளக்குவதற்கு தேவையானதாக இல்லை.


மனிதன் பலவீனமானவன் என்று மதவாதிகள் கூறுவது அறிவியல் ரீதியில் பொருளற்ற சொல். பலம் பவீனம் என்பது பொருளுடையதாக வேண்டுமென்றால் அது பிரிதொன்றுடன் ஒப்பு நோக்கப்பட்டிருக்க வேண்டும். மனிதன் பலத்தில் புலியை விட பலவீனமானவன். மனிதன் புத்திசாலித்தனத்தில் குரங்கைவிட பலமானவன். மனிதன் இடம்பெயர்வதில் குதிரைவிட பலவீனமானவன், ஆமையைவிட மிக பலமானவன். 


பலமானவன் - பலவீனமானவன் என்பதை இந்த அடிப்படையில் தான் கூறமுடியும். இப்போது மதவாதிகள் கூறும் மனிதன் பலவீனமானவன் என்பதை இதனுடன் இணைத்துப் பாருங்கள். எதனுடன் ஒப்பிட்டு மனிதன் பலவீனமானவன் என்கிறார்கள்? கடவுளுடனா? கடவுள் இருக்கிறதா? இல்லையா? என்பதே முதன்மையான விவாதமாக இருக்கும் போது, கடவுளுடன் மனிதனை ஒப்பிடுவது அறிவுடமையா?


மனிதனின் மிகப் பெரிய பலவீனங்களான மறதி, அசதி, தூக்கம் பைத்தியம், பசி, தாகம், காமம், தேவை, முகஸ்துதி, அவசரம், துக்கம், பொறாமை, தடுமாற்றம், குழப்பம், நோய், முதுமை, மரணம் போன்ற ஏராளமான விஷயங்கள் எப்போதும் மனிதனுடன் ஒட்டிக் கொண்டே இருக்கின்றன. இவை அனைத்துமே மனிதனின் அறிவுக்கு எதிரான ஆயுதங்கள். மேலும் அன்பு, கருணை, நன்றி, கோபம் போன்ற ஏராளமான நல்ல பண்புகள் கூட சில நேரங்களில் அவனைப் பலவீனப்படுத்தி விடும். இவைகளெல்லாம் மனிதனின் பலவீனங்கள் என்றால் மனிதனின் பலம் தான் என்ன? அல்லது இந்த பலவீனங்கள் இல்லையென்றால் அது மனிதனாக இருக்க முடியுமா? ஆக மனிதன் பலவீனமானவன் என மதவாதிகள் கூறுவது மிகப் பெரிய மோசடி. கடவுளை பிரமாண்டப்படுத்திக் காட்ட செய்யப்படும் செப்படி வித்தை.


மனிதனின் அறிவு குறைபாடுடையது எனும் குழப்பம், மனிதன் பலவீனமானவன் எனும் மயக்கம் இவற்றின் மீதுதான் விதிக் கோட்பாடு எனும் மாயத்தை கட்டி எழுப்பியிருக்கிறார்கள் மதவாதிகள். விதி என்பதை நேரடியாக விளக்க முடியாது. விளக்க முடியாது என்பதை விட விளக்கினால் கடவுள் மாட்டிக் கொள்வார். அதாவது கடவுள் மீதான பற்று மனிதனுக்கு இற்று விடும். அதனால் தான் விதியை விளக்கமுடியாது என்று கூறிவிட்டு மனிதனை தாழ்வு மனப்பான்மைக்குள் தள்ளிவிட்டு கடவுளை காப்பாற்றிக் கொள்கிறார்கள்.
  
நடந்து முடிந்துவிட்டால் அது விதி, நடக்க இருப்பது என்றால் நீயாக சிந்தித்து செயல்படு என்று விதியை இரண்டாக பிரிக்க முடியாது. ஏனென்றால் மனிதனுக்குத்தான் கடந்த காலம் எதிர்காலம் என்ற பேதமுண்டு. விதிக்கு எதிர்காலமில்லை, இறந்த காலம் மட்டும் தான். எதிர்காலம் இருக்கிறது என்றாலே அது விதி இல்லை என்றாகிவிடும்.



விதி என்றால் ஏற்கனவே எழுதி முடிக்கப்பட்டு விட்டது என்பதுதானே பொருள். ஏற்கனவே எழுதப்பட்டுவிட்ட ஒன்றை மனிதன் நிகழ் காலத்தில் நின்று கொண்டு சிந்திக்க முடியுமா? இதற்கு நேரடியாக பதில் கூற முடியாமல் தான் விதி பற்றிய விளக்கம் மனிதனுக்கு தரப்படவில்லை என்று தப்பித்துக் கொள்கிறார்கள்.
 



Thanks: Senkodi






Monday, May 21, 2012

'தங்க விதி'




Stones from Glass houses!

கண்ணாடி வீட்டிலிருந்து 

வீசப்படும் கற்கள்!








'தங்க விதி' என்று ஒரு தமிழ்ப்பதத்தை அறிவீர்களா நீங்கள்?

வேறு ஒன்றுமில்லை..."நம்மை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று நாம் நினைக்கிறோமோ அப்படி நாமும் மற்றவர்களை நடத்துவதே" தங்க விதியின் அடிப்படைக்கொள்கை.

இதையேதான், 'மரியாதை கொடுத்து மரியாதை வாங்குவது' என்று கிராமங்களிலே எளிமையாக கூறுவார்கள்.

'இதிலே பெரிதாக என்ன உள்ளது?' என்று சாதாரணமாக கேட்கத் தோன்றுகின்றதல்லவா? ஆனால் அடுக்களை  முதல்  அரசியல் பூசல்கள் வரை எவ்வளவோ விடயங்கள் இதற்குள் அடங்கியிருப்பதை அறிந்தால் உண்மையில் பிரமித்துப் போவீர்கள்.
A campaign held in Colombo


சற்று யோசித்துப்பாருங்கள்..

நமது குடும்பத்திலேயுள்ள உறவுகளிடம் நாம் எதனையெல்லாம் எதிர்பார்ப்போம்...? அன்பு, பாசம், அங்கீகாரம், விசுவாசம், நம்பிக்கை, ஒத்துழைப்பு, கூட்டுப்பொறுப்பு என்று சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் இவற்றையெல்லாம் அவர்களிடமிருந்து நாம் எதிர்பார்க்கும் போது அவற்றை நாமும் அவர்களுக்கு வழங்கும் நிலையில் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். அதுதானே பொதுவான நியாயம்?

இந்த விதியை நாம் நமது உறவினர், நண்பர்கள், சகபாடிகள், பிறசமூகத்தவர்கள் என்று அனைவருக்கும் நாம் பிரயோகித்து வந்தால்தான்; அவர்களும் நம்மீது மரியாதை வைத்து நடப்பார்கள்.
அவ்வாறின்றி, ' நான் எதிர்பார்க்கும் எல்லாவற்றையும் நீங்கள் எனக்குத் தடையில்லாமல் தரவேண்டும். ஆனால் அவற்றை என்னிடமிருந்து எதிர்பார்க்கக்கூடாது' என்பதுதான் உங்களது எண்ணமென்றால் எப்படியிருக்கும்...?

சரி அப்படி ஒரு எண்ணத்தடன் நீங்கள் இருப்பதை மற்றவர்கள் அறிந்தால் உங்களைப்பற்றி எப்படி நினைப்பார்கள்..? மற்றவர்கள் நினைப்பதிருக்கட்டும் முதலில் அது உங்களுக்கே நியாயமாக இருக்குமா?
A campaign held in Europe


இப்போது மீண்டும் தங்க விதிக்கு வருவோம்...

'நம்மை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று நாம் நினைக்கிறோமோ அவ்வாறே நாமும் மற்றவர்களை நடத்துவது'

இதை நாம் சரிவரச் செய்கின்றோமா?

முதலில் ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
நாமெல்லாம் வாழ்ந்து கொண்டிருப்பது ஒரு பல்லின மக்கள் ஒன்றாகக் கலந்து வாழும்  ஒரு நாட்டில்தானே தவிர தனியே முஸ்லீம் நாட்டில் அல்ல. இந்த நாட்டில் வாழும் ஏனைய இனங்களைப்போல மொழியினாலோ வாழும் பிரதேசத்தினாலோ அல்லாமல் முஸ்லிம்களாகிய நாம் பின்பற்றுகின்ற மதத்தினால் ஒன்றுபட்டவர்கள்.

இலங்கையைப் போலவே உலகின் பல்வேறு கண்டங்களிலும் உள்ள நாடுகள் பலவற்றிலே முஸ்லிம்களாகிய நாம் ஏனைய இனத்தவர்களோடு சேர்ந்து சிறுபான்மை சமூகமாக வாழ்ந்து வருகின்றோம். அதேவேளை பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளில் பெரும்பான்மை சமூகமாக வாழ்ந்து வருகின்றோம்.

in London...
இலங்கை, இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வாழும் முஸ்லிம்கள் அந்தந்த நாடுகளிலே வாழும் அரசுகளினாலோ அல்லது அங்குள்ள பெரும்பான்மை மக்களினாலோ தமது உரிமைகள் சிறிதளவேனும் பாதிக்கப்படுவதைக் கண்டால் உடனே துடிதுடித்துப்போய்.. நம்மை ஏதோ உலகமே முற்றாக ஒன்று திரண்டு நசுக்கியழிக்கப்போவதைப் போன்ற பாவனையுடன் ஊடகங்களின் முன்னே நின்று எத்தனை போராட்டங்களை நடாத்துகின்றோம்...  அவற்றை மிகைப்படுத்தி காட்டி உலகத்தின் கவனத்தையெல்லாம் ஈர்த்தெடுக்கின்றோம்.


கொழும்புகளிலும் புதுடில்லிகளிலும் லண்டன்களிலும் நியூயோர்க்களிலும் பாரிஸ்களிலும் நம்மால் உரிமைப் போராட்டங்களையும் எதிர்ப்புப் போராட்டங்களையும் நடாத்த முடியும். அந்த நாடுகளிலுள்ள நீதிமன்றங்களிலே அந்த நாட்டுச் சட்டங்களையே பயன்படுத்தி குற்றமிழைத்தவர்களுக்குக் குறைந்தபட்சத் தண்டனையையேனும் பெற்றுக் கொடுக்க முடியும்.

ஆனால் நாம் பெரும்பான்மையாக வாழும் மத்திய கிழக்கு இஸ்லாமிய நாடுகளிலோ அல்லது இந்தோனேஷியா மலேஷியாவிலோ வாழும் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த மக்கள் யாராவது மேற்கூறியவாறு நமது இஸ்லாமிய அரசுகளால் பாதிக்கப்படும்போது அவர்களால் ஒரு சிறு போராட்டத்தைத்தானும் நடாத்த முடியுமா? நடாத்துவது என்ன அதுபற்றி நினைக்கத்தானும் இயலுமா?

A campaign held in London
நமது இஸ்லாமாபாத்திலும் தெஹ்ரானிலும் ஜித்தாவிலும் கோலாலம்பூரிலும் குவைத்திலும் அவ்வாறான போராட்டம் ஒன்றை  நடாத்தினால்  அவர்களுக்கு என்ன கதியேற்படும் என்று யோசித்துப் பாருங்கள். குறைந்தபட்சம் 'மனிதாபிமானமிக்க' நமது சாம்ராஜ்யங்கள் அவர்களை உயிருடனாவது விட்டு வைக்குமா?


இது என்ன வகையிலான நியாயம்?

ஐரோப்பிய கல்லூரிகளிலும் விமானங்களிலும் ஹலால் இறைச்சி வேண்டும் என்கின்றோம். பொதுக் கழிப்பறைகளை இஸ்லாமிய கழிப்பறைகளாக மாற்ற வேண்டும் என்கின்றோம் (ஐரோப்பியர்களுக்கு ஈரமான கழிப்பறை என்பது அருவருப்பானது என்பதால் ஈரமில்லாமல் பார்த்துக்கொள்ளப்படுகின்றன)


Foreigners hanged in Iran for their worshipping
ஆனால் நாமோ ஐரோப்பிய கழிப்பறைகளில் தண்ணீர்க் குழாய் அமைக்க வேண்டும் என்று வற்புறுத்துகின்றோம். அங்குள்ள பொதுக் கட்டிடங்களிலும் பாடசாலைகளிலும் தொழுகை செய்யத் தனியறைகள் வேண்டும் என்று உரிமையுடன் நச்சரிக்கின்றோம். ஆனால், அதேசமயத்தில், இஸ்லாமிய நாடுகளில் மற்ற மதங்களைச் சேர்ந்த நபர்களை வழிபாட்டில் ஈடுபட்டதற்காக சிறையில் அடைக்கவும், மரண தண்டனை கொடுக்கவும் செய்கின்றோம்.

இது எந்த ஊர் நியாயம்?

நாம் சிறுபான்மையாக வாழும் நாடுகளிலே நமது மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் மட்டுமன்றி தொழிலுக்காக கூடியுள்ள சிறு நகரங்களிலும் கூட நம்மால் வணக்க ஸ்தலங்களை அமைத்துக்கொள்ள முடிந்திருக்கின்றது.. முடிகின்றது.
Regent's Park Mosque in London


ஆனால் மற்ற மதவழிபாட்டு நிலையங்களைக் கட்டவும், அவர்களது ஆன்மீக பேணுதல்களைப்புரியவும் அனுமதிக்கின்ற ஒரு இஸ்லாமிய நாட்டையேனும் காண்பிக்க முடியுமா? எனக்குத் தெரிந்தவரை ஒன்று கூட இல்லை!
நாம் சிறுபான்மையாக வாழும் நாடுகளிலே தொழில் புரிந்துகொண்டு அந்த நாட்டு பெரும்பான்மை மக்களின் மதநம்பிக்கைகளையெல்லாம் புண்படுத்துகின்ற விதத்திலே அவர்களை விமர்சித்து 'காபிர்கள்' என்பது போன்ற சொற்களையெல்லாம் பயன்படுத்தி வெறுப்பை உமிழ்கின்றோம்.


அதேவேளை நாம் பெரும்பான்மையாக வாழும் நாடுகளிலே நம்மையும் நமது நம்பிக்கைகளையும் பற்றி தவறிப்போய் சிறுபிழையாக ஏதாவது சொல்லிவிட்டாலும் போதும் உடனே அவர்களைக் கொன்றொழிக்கவும் மரணதண்டனை வழங்கவும் சித்திரவதை செய்யவும் புறப்பட்டு விடுகின்றோம்.

A Mosque in USA
அதாவது நம்மை பாதிக்கப்பட்டவர்களாக காட்டிக் கொண்டு நாம் மற்றவர்களுக்கு இழைக்கும் ஒவ்வொரு கொடூரக்குற்றத்தையும் நியாயப் படுத்திக் கொண்டிருக்கின்றோம்.

இது நியாயமா?





நாம் செய்து கொண்டிருக்கின்றோம் என்பதால், அநியாயங்கள் ஒருபோதும் நியாயங்களாகி விடாது.


தவறுகளை யார் புரிந்தாலும் அது தவறுதான்.


இவ்வாறு சொல்வதால், சிறுபான்மையினர் என்ற விதத்திலே உலகம் முழுவதும் நமக்கு நிகழும் புறக்கணிப்புகளையும் ஒதுக்கல்களையும் குறைத்து மதிப்பிடுவதாக யாரும் எண்ணிவிடக் கூடாது.


அதேவேளை...  நாம் செய்யும் தவறுகளையும் கொடூரங்களையும் உணர்ந்து நம்மை நாமே திருத்திக்கொள்ளாதவரை அதே தவறுகளையும் கொடூரங்களையும் தட்டிக்கேட்பதற்கு நமக்குள்ள தார்மீக உரிமை பிறரின் கேலிக்குள்ளாவதைத் தவிர்க்கவே முடியாது.
Could we allow this?


நண்பர்களே!


மனதைத் திறந்து சிந்தித்துப் பாருங்கள் .....!


நான் கூறும் கருத்துகளில் தவறுகள் இருப்பதாக அறிந்தால் அவற்றை மறுக்கும் வகையிலே தர்க்க ரீதியான உங்கள் மாற்றுக் கருத்துக்களை முன்வையுங்கள்!







- Jesslya Jessly