Saturday, January 19, 2013

ரிஸானா நபீக்?



 
 
அல் த்வாத்மி சிறைச்சாலை,
அல் தவாத்மி, சவுதி அரேபியா.

எனது உண்மையான வயது 19. நான் பிறந்த தேதி 02-02-1988. எனது வயது ஏஜெண்ட் அஜிர்தீன் என்பவரால் 02-02-1982 என மாற்றப்பட்டு எனக்காக கடவுச்சீட்டு வழங்கப்பட்டது. 01-04-2005-ல் நான் சவுதி அரேபியாவுக்கு வீட்டு வேலைக்காக வந்தேன். சுமார் ஒன்றரை மாதங்கள் ஒரு செல்வந்தரின் வீட்டில் வீட்டு வேலை செய்தேன்.


இந்த வீட்டில் சமைத்தல், பாத்திரங்களை கழுவுதல், நான்கு மாதக் குழந்தையைக் கவனித்துக் கொள்ளுதல் உள்ளிட்ட வேலைகளை நான் பார்த்து வந்தேன்.


குறித்த சம்பவம் நடந்த தினம் எனக்கு நினைவில் இல்லை. அது ஒரு ஞாயிற்றுக் கிழமை பகல் 12-30 மணியிருக்கும். அப்போது யாரும் வீட்டில் இருக்கவில்லை. நான் மட்டுமே இருந்தேன். அங்குள்ள நான்கு மாதக் குழந்தைக்கு நானே பால் கொடுப்பேன்.


அன்றைக்கும் வழமை போல பால் கொடுத்த போது குழந்தையின் மூக்கிலிருந்து பால் கொட்டியது. அப்போது நான் குழந்தையின் தொண்டையை தடவிக் கொடுத்தேன். குழந்தை கண் மூடியிருந்த படியால் நான் அது அயர்ந்து உறங்குகிறது என நினைத்துக் கொண்டேன்.


குழந்தையின் தாய் எஜமானி சுமார் 1-30 மணியளவில் வந்து சாப்பிட்டு விட்டு குழந்தையைப் பார்த்தார். பின்னர் என்னை செருப்பால் அடித்து விட்டு குழந்தையைத் தூக்கிச் சென்றார்.அப்போது அவர் அடித்ததில் என் மூக்கில் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. பின்னர் என்னை போலீசில் ஒப்படைத்தார்கள்.


அவர்கள் என்னை ஒரு பட்டியில் அடைத்து அடித்தார்கள் குழந்தையின் கழுத்தை நெறித்ததாக எழுதிக் கொடுக்குமாறும், கையொப்பமிடுமாறும் மிரட்டினார்கள். கையெழுத்திடவில்லை என்றால் மின்சார வதை கொடுக்கப் போவதாக மிரட்டிய போது நான் பயந்து போய் அவர்களுக்கு கையொப்பமிட்டுக் கொடுத்தேன். அப்போதுதான் நான் பயங்கரமாக உணர்ந்தேன்.சரியான நினைவு எனக்கில்லை குழம்பிய மன நிலையில் கையொப்பமிட்டேன்.


அல்லாஹ் மீது ஆணையாகச் சொல்கிறேன் நான் அக்குழந்தையின் கழுத்தை நெரிக்கவில்லை.

ரிஸானா நபீக்.
அல் த்வாத்மி சிறைச்சாலை,
அல் தவாத்மி, சவுதி அரேபியா.


1501_398946436855582_928849973_n


இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் மூதூர் பகுதி கிராமமொன்றில் ஏழைக் குடும்பத்தில் பிறந்த குழந்தை ரிஸானாவை 17 -வயதில் வீட்டு வேலைக்காக அனுப்புகிறார்கள். தங்களுடைய வறுமையைப் போக இக்குழந்தையை வீட்டு வேலைக்கு அனுப்ப சட்ட ரீதியான சாத்தியங்கள் இல்லாத போது 1998-ல் பிறந்த ரிஸானாவில் பிறந்த நாளை 1982 என மாற்றி வயதை அதிகமாக்கி பாஸ்போர்ட் எடுத்து அனுப்புகிறார்கள்.


இது இலங்கையில் மட்டுமல்ல அரபு நாடுகளுக்கு இப்படியாக பல ஏழைக் குழந்தைகள் ஏஜெண்டுகள் மூலம் அனுப்பப்படுகிறார்கள். ஏழ்மையைத் தவிற வேறு எந்த காராணங்களையும் சொல்ல முடியாது. ஆனால் தேயிலைப் பயிற் செய்கைக்கு கங்காணிகள் என்ற பெயரில் ஏஜெண்டுகள் எப்படி ஏழைகளை 19-ஆம் நூற்றாண்டில் கடத்திச் சென்று மலைக்காடுகளில் விட்டார்களோ, அப்படியே ஏஜெண்டுகள் இந்த ஏழைகளை கடவுச்சீடுகள் மூலம் அரபு நாடுகளுக்குக் கடத்துகிறார்கள்.


10 பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு 16 வயது ரிஸானா நபீக் சமைக்கிறாள், துணி துவைக்கிறாள், வீட்டைச் சுத்தம் செய்கிறாள், தன் எஜமானியின் நன்கு மாத குழந்தைக்கு ஊட்டுகிறார். கடைசியில் குழந்தையின் கழுத்தை நெறித்துக் கொன்றதாக 17 வயதில் கைது செய்யப்பட்டு இப்போது 24 வயதில் தலை வெட்டப்பட்டு சவூதி மன்னராட்சி அரசால் கொல்லப்பட்டிருக்கிறார்.
தமிழைத் தவிற வேறு மொழியறியாத ஒரு குழந்தை தன்னை விட 17 வயது குறைவான நான்கு மாதக் குழந்தையை கவனித்துக் கொள்கிறது. இடம் புதிது, மொழி தெரியாது. சம்பவம் நடந்த போது வீட்டிலும் எவரும் இல்லை. ஒரு சின்னக் குழந்தையிடம் ஒரு பெரிய குழந்தை துரதிருஷ்டமான ஒரு நேரத்தில் எப்படி நடந்து கொள்ளுமோ அப்படித்தான் ரிஸானாவும் நடந்தாள்.


ஏனெனில் ஒரு துரதிருஷ்டவசமான சம்பவம் குழந்தைக்கு நடக்கிறது, அதற்கு புரை ஏறி மூச்சுக்குழாய்க்குள் பால் அடைக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் பிராயமோ, புரையேறிய குழந்தையை சரிந்த வாக்கில் படுக்க வைத்து முதுகைத் தட்டிக் கொடுத்தால் ஒரு வேளை சரியாகும் வாய்ப்பு உள்ளது என்பதோ இந்தப் பெரிய குழந்தைக்கு எப்படித் தெரியும் என எதிர்ப்பார்க்க முடியும்?


ஆக மொத்தம் ரிஸானா வறுமையின் நிமித்தம் சவுதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட சில மாதங்களிலேயே சிறைக்குச் சென்று விடுகிறார். சிறையில் கழிந்த இந்த ஏழு ஆண்டுகளில் அவருக்காக ஒரு வழக்கறிஞர் கூட நியமிக்கப்பட்டு வாதாடியதாகத் தெரியவில்லை. நிலப்பிரவுத்துவம் வீழ்ந்து முதலாளித்தும் நமக்கு இந்த நவீன உலகையும் சிந்தனைப் போக்கையும் கொடுத்த பின்னரும் இன்னமும் மன்னராட்சி முறையை சவுதி அரேபியா வைத்திருக்கிறது.


வஹாபிசம் எனப்படும் படு பிற்போக்கான சிறிதும் ஜனநாயகமற்ற கடும் ஒழுக்க தேசியவாதப் போக்கைக் கொண்ட சவுதி, அரபுத் தேசியத்தின் அடையாளமாக தன்னை நிறுத்திக் கொள்கிறது.
இம்மாதிரியான தண்டனை முறைகளால் மக்களை நிரந்தரமான அச்சத்துள் வாழ வைப்பதே அதன் ஆன்மா.


இஸ்லாத்தின் மேன்மை மிக்கவனாக தன்னை காட்டிக் கொள்ளும் மன்னராட்சி சவுதியில் மூன்றாம் உலக நாடுகளைச் சார்ந்த தொழிலாளார்களில் நிலை மிக பரிதாபம், வறுமையாக இருந்தாலும் ஒப்பீட்டளவில் இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகள் சுதந்திரமானவைதான் இங்கிருந்து செல்லும் தொழிலாளர்கள் கொத்தடிமைகளைப் போல நடத்தப்படும் நிலையில் இதிலிருந்து முஸ்லீம் தொழிலாளர்களும் விதிவிலக்கில்லை.


பணக்காரன் தன் சாதிக்காரனாக இருந்தாலுமே அவனை ஒரு வர்க்க அடிமையாக மட்டுமே எப்படி நடத்துவானோ அப்படித்தான் இந்த ஏழை முஸ்லீம்கள் மீது கூட வாஹாபிசம் எவ்வித கருணையும் காட்டுவதில்லை.
அது சவுதிக்குள் ஏழை பணக்காரன் என்ற வேறு பாடில்லாமல் இந்த தண்டனை முறையைக் கொண்டிருப்பதாக நான் வாசித்தேன். ஆனால் இதே வஹாபிசம் அமெரிக்க , ஐய்ரோப்பிய தேசியத்திடம் மண்டியிட்டுக் கிடக்கிறது. ஐய்ரோப்பாவைச் சார்ந்த எவர் ஒருவரும் இப்படியான தண்டனைகளுக்கு சவுதியில் உள்ளாக முடியாது என்பதெல்லாம் தனிக்கதை.
எண்ணெய் வளம் கண்டறியப்பட்டதையொட்டி சவுதி மன்னராட்சி மேற்குலகோடு செய்து கொண்ட தொழிலாளர், மற்றும் வணிக ஒப்பந்தங்கள் சவுதி அரேபியச் சட்டங்களின் படி ஐய்ரோப்பியர்களை தலை வெட்டித் தண்டிக்க முடியாத விலக்கை அளிக்கிறது. ரிஸானா வெள்ளை தேசத்தவராக இருந்தால் நிச்சயம் இந்த தண்டனை அவருக்குக் கிடைத்திருக்காது.
நீதிமன்றங்களோ, அவர்களின் போலீசாரும், அவர்களின் இஸ்லாமிய ஷரியத் சட்டங்களும் என்ன சொல்கிறதோ அதைக் கேட்டு தீர்ப்பு எழுதும். இவர்தான் குற்றவாளி என்பதை எளிதில் தீர்மானித்து விடுகிற நீதிமன்றம்.


குற்றம் சுமத்தப்பட்டவருக்கு தான் நிரபராதி என்பதை நிரூபிப்பதற்கான வாய்ப்புகளை வழங்குவதில்லை. சவுதியின் பணக்கார முஸ்லீம்களின் வீடுகளில் வீட்டு வேலை செய்ய, கார் ஓட்ட ஏழை முஸ்லீம்கள் தேவைப்படுகிறார்கள். ஏனெனில் முஸ்லீம் அல்லாதவர்களை தங்களின் வீட்டு வேலைகளில் இவர்கள் ஈடுபடுத்திக் கொள்வதில்லை என்று சொல்லப்படுகிறது.


ரிஸானா என்னும் சிறுமியைப் பொறுத்தவரை அவருக்கு மொழி பெயர்ப்பாளாராக இருந்தவர்கள் குறித்து அரிய முடியவில்லை. அவர் கைது செய்யப்பட்ட போதும் ஏழாண்டுகள் சிறையில் கழிந்த போதும் தலை துண்டிக்கப்படுவதற்கு சற்று முன்னரும் அந்தக் குழந்தையின் நினைவில் என்ன ஓடியிருக்கும் எனத் தெரியவில்லை. புரையேறி இறந்து போன நான்கு மாதக் குழந்தையின் பெற்றோர் மன்னிப்பளித்திருந்தால் ரிஸானா விடுவிக்கப்பட்டிருப்பார் என்னும் நிலையில் அவர்கள் அந்த மன்னிப்பை இன்னொரு குழந்தைக்கு வழங்க முன் வரவில்லை.


2004-ம் ஆண்டில் இயக்குநர் கமலின் ‘பெருமழக்காலம் ’படம் மலையாளத்தில் வந்தது. ரஸியா வின் கணவன் ஒரு விபத்தாக ரகுநாத அய்யர் என்பரைக் கொன்ற கொலைக்குற்றத்தின் பேரில் தலைவெட்டும் தண்டனைகுள்ளாகி வளைகுடா நாட்டில் இருக்க, கொல்லப்பட்ட ரகுநாத அய்யரின் மனைவியிடம் ரஸியா குற்றத்தை மன்னிக் கோருவதுதான் கதை.


ரகுவின் மனைவி மன்னித்தால் தன் கணவன் விடுவிக்கப்படுவான் என்பதாகச் செல்லும் கதையில் நுட்பமாக ஒரு உயிரை இழந்த, இன்னொரு உயிரைக் காப்பற்றப் போராடும் இரண்டு பெண்களின் மன உணர்வுகளை மிக நுட்பமாகச் சொல்லியிருப்பார் கமல். இப்படியான வாய்ப்புகள் சினிமாக்களில் மட்டுமே சாத்தியம் என்னும் நிலையில் மன்னிக்கும் தேவையிருந்தும் கூட அந்த வாய்ப்பில்லாமல் வாளால் வீழ்த்தப்பட்டிருக்கிறார் இந்த சிறுமி.கொடூரமான இந்த வாள் வெட்டைத்தான் இந்துப் பாசிஸ்டுகள் இந்தியாவில் நடைமுறைப்படுத்தக் கோருவதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.


அளவற்ற கருணையையும், இரக்கத்தையும், மன்னிப்பையும் பேசும் குரானோ அல்லாவோ இந்த ரிஸான் பற்றி எதுவும் சொல்லப்போவதில்லை. குடும்ப வறுமையைப் போக்கிக் கொள்ள 17 வயதில் கடைசியாக தங்கள் மகளை வழியனுப்பியவர்கள் பிணமாகவேனும் ரிஸானாவைக் காண்பார்களா என்பது தெரியவில்லை. அவர்களின் வறிய வாழ்வும் மாறவில்லை பிள்ளையும் இல்லாமல் போய் விட்டது.


எல்லையற்ற அல்லாவின் கருணையில் ரிஸானாவின் இடம் எதுவெனத் தெரியவில்லை. ஏழாண்டுகள் சிறையில் கழிந்த போது அவள் என்ன நினைவுகளோடு வாழ்ந்திருப்பாள். மூதூரை, தன் உறவுகளை, கொஞ்சம் முந்தைய தன் பால்யத்தை, விளையாடிய விளையாட்டை, தன் சகாக்களோடு இட்ட சண்டையை, சிரிப்பின் துளிர்ப்பை, தன் தாய் பட்ட கஷ்டத்தை, தந்தையின் துயரத்தை, ஒரு காதல் கனவை, நடனத்தை, நாடு திரும்புவதை, மூதூரின் வீதிகளின் புதிய மனுஷியாக நடப்பதை, அரபு தேசத்திலிருந்து வாங்கி வந்த மிட்டாய்களை உறவுகளுக்கு கொடுப்பதை, புதுத்துணி எடுத்துக் கொடுப்பதை, குடிசை வீட்டை ஒரு சுவராக மாற்றுவதை, முற்றத்தில் சின்னதாய் ஒரு செம்பருத்தி வளருவதை….. ரிஸானா எதையெல்லாம் கனவு கண்டிருப்பாய்…. ஒரு தனித்த கனவு அல்ல அது ஒரு குடும்பத்தின், ஒரு சமூகத்தின் கனவல்லவா?


அத்தனையும் ஒரு வெட்டில் சிதறிப்போனக் கனவோ…. என் அன்பே…

-Jesslya Jessly

Friday, January 18, 2013

ஷரீஆ சட்டம் பேசுவோரின் லட்சணம் பாரீர்!

 

சவுதி அரேபியாவில் வேலை செய்த இலங்கை பெண்ணின் உடலில் ஆணிகள் அடித்து வேலைக்கார சித்ரவதை

Aug 27, 2010
 



கொழும்பு: சவுதி அரேபியாவில் வேலை செய்த இலங்கை பெண்ணின் உடலில், 24 ஆணிகள் அடித்து எஜமானர்கள் கொடுமைப்படுத்தி சித்ரவதை செய்துள்ளனர்.
இலங்கையைச் சேர்ந்த 20 லட்சம் பேர், வெளிநாடுகளில் வேலை செய்கின்றனர். இவர்களில், 14 லட்சம் பேர், வெளிநாடுகளில் வீட்டு வேலை செய்யும் பணியில் ஈடுபட்டு, எஜமானர்களால் பல்வேறு கொடுமைக்கு ஆளாகி வருகின்றனர்.
சவுதி அரேபியாவில் கடந்த ஐந்து மாதங்களாக அரியாவதி(49) என்ற பெண், நிலசுவான்தார் வீட்டில் வேலை செய்து வந்தார். “அதிக வேலை தருகிறீர்களே’ என, இந்த பெண் புகார் தெரிவித்துள்ளார். இதனால், கோபமடைந்த நிலசுவான்தாரும், அவரது மனைவியும், அரியாவதியின் நெற்றி, கை, கால்களில் இரண்டு அங்குல நீளமுள்ள 24 ஆணிகளை சூடாக நுழைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர். இந்த கொடுமைகளை பொறுக்க முடியாமல், கடந்த வாரம் அரியாவதி கொழும்பு திரும்பினார்.





மூன்று குழந்தைகளுக்கு தாயான அரியாவதி, நடந்த சம்பவங்களை இலங்கை தூதரக அதிகாரிகளிடம் தெரிவித்தார். இதையடுத்து இவரது உடலில் நுழைக்கப்பட்டுள்ள ஆணிகளை எடுப்பதற்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆணிகள் சூடாக்கப்பட்டு பாதம், கால்களில் நுழைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர். சில சமயங்களில் ஊசி வைத்தும் குத்தியிருக்கின்றனர். அதற்கான தழும்புகள் காணப்படுகின்றன. அதில் நெற்றிப் பகுதியில் ஒன்று இருக்கிறது. சவுதி அரேபிய நிலசுவான்தார் தம்பதியினர் செய்த இந்த கொடுமை குறித்து, அந்நாட்டு அரசிடம், இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
Rate This

23 ஆணிகளும் 1.8 மில்லியன் பெண்களும்- வெறோனிக்கா
(பெண்ணியத்திற்காக மூலக் கட்டுரையை சிங்களத்தில் அனுப்பியவர்
வெறோனிக்கா – தமிழில் என்.சரவணன்.)


pic207.jpg


இந்த வாரம் இலங்கை மக்களை மட்டுமல்ல உலகில் பலரையும் உலுக்கிய செய்தியாக இலங்கையை சேர்ந்த ஆரியவதியின் கதை அமைந்திருக்கிறது.
இயேசுநாதர் சிலுவையில் ஆணி அறையப்பட்டு கொல்லப்பட்டதை நாம் அறிந்திருக்கிறோம். உயிருடன் உள்ள பெண்ணை அதுவும் மனிதவுலகம் நாகரிகமடைந்தாக கூறப்படும் இந்த காலத்தில் ஒரு பெண் சுத்தியால் ஆணிகள் அடிக்கப்பட்டு சித்திரவதைசெய்யப்பட்டுள்ளார்.


உடலில் எட்டு ஆணிகள் உள்ளே ஏற்றப்பட்ட நிலையில் சவுதியில் இருந்து திரும்பியிருக்கிறார் ஆரியவதி என்கிற பெண்.
தனது வாழ்நாளுக்குள் தனது 3 பிள்ளைகளுடன் சந்தோசமாக வாழ சொந்தமாக ஒரு சிறு குடிசையை அமைத்துக்கொள்வதற்காக பிழைப்பு தேடி பணிப்பெண் வேலைக்காக சவுதி சென்றவர் ஆரியவதி (வயது 49).
இவர் இலங்கையின் தெற்குப் பகுதியில் உடதெனிய எனும் இடத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். வெளிநாட்டு வேலைவாய்ப்பு தரகர் ஒருவர் இலவசமாக அனுப்புகிறார் என்று கேள்வியுற்று அரசாங்கத்தின் வேலைவாய்ப்பு பணியகத்தின் 15 நாள் பயிற்சியை மேற்கொண்டார். அதன் பின்னர் கடந்த மார்ச் மாதம் 25ஆம் திகதி சவுதி புறப்பட்டார்.


1282776839989.jpeg


சவுதியில் ரியாத் நகரத்தில் இறங்கியதும் அவரை இருவர் காரொன்றில் அன்பாக வேலைக்காக அழைத்துச் சென்றனர். அந்த வீட்டின் உரிமையாளர் அவரது மனைவி மற்றும் 5 பிள்ளைகளுக்கும் பணிவிடைகள் செய்வதும் வீட்டை சுத்தமாக பராமரிப்பதும் அவருக்கு வழங்கப்பட்ட பிரதான வேலைகள். இதனைத் தவிர உடுதுணி துவைத்தல், அவற்றை ஸ்திரிசெய்து மடித்து வைத்தல், வாகனங்களை கழுவுதல் போன்ற வேலைகளும் அவருக்கு ஒதுக்கப்பட்டன.


ஒரே வாரத்தில் அந்த வீட்டினர் தமது சுயரூபத்தைக் காட்டத் தொடங்கினர். சிறு சிறு தற்செயல் பிழைகளுக்காக அவரை கட்டையைக் கொண்டு தாக்கியுள்ளனர்.


தற்செயலாக ஒரு கிளாஸ்’ கைதவறி விழுந்து உடைந்த சம்பவத்திலிருந்தே இந்த வன்முறைகள் தொடங்கின.

உரிமையாளரின் மனைவி (எஜமானி அம்மா) ஆரியவதியின் கைகளை இறுக்கிப் பிடித்திருக்க கணவர் சூடாக்கிய ஆணிகளை உடலில் சுத்தியலால் அடித்திருக்கிறார். அதே நாள் இரண்டரை இஞ்ச் உயர ஆணிகள் ஐந்து இவ்வாறு ஆரியவதியின் உடலில் ஏற்றப்பட்டுள்ளன.

அன்றைய தினம் ஆரியவதியின் ஓவென்ற அவலக்குரல் எவர் காதுகளிலும் விழவுமில்லை. அந்த வீட்டில் ஆரியவதியின் அன்புப் பணிவிடைகளை அதுவரை பெற்றுக்கொண்ட அந்த வீட்டின் பிள்ளைகள் கூட காப்பாற்ற முன்வரவில்லை.

தொடர்ந்து கத்தினால் கழுத்தை வெட்டி எறிவோம் என்று மிரட்டப்பட்டுள்ளார். தனது அன்புக்குரிய பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக ஆணிகள் ஏற்றப்பட்ட உடலுடன் தொடர்ந்தும் அங்கு பணிபுரிந்துள்ளார்.

ஆரியவதி தாய்மண்ணுக்கு திரும்பியதும் அவர் கண்களில் நீர்பெருக பகிர்ந்துகொண்ட விபரங்கள் அனைவரது நெஞ்சையும் உலுக்கச் செய்யும் கதைகள்.


saudi-women2.jpg


“ஒரு தடவை கோப்பை நழுவி விழுந்தது. இன்று தொலைந்தேன்.. என்று பதறிக்கெணடிருக்கையில் வீட்டு எஜமானி அம்மா “உன் கண்கள் என்ன குருடா.. இரு… குருடாக்கி விடுகிறேன் என்று கூறிக்கொண்டு ஆணியை எடுத்து கண்களில் சொருகுவதற்காக கிட்ட கொண்டு வந்தார். என் கண்களை இறுக மூடிக்கொண்டு இருந்தேன். எவ்வளவோ கதறியும் அந்த ஆணிகளை எனது புருவ இமைகளின் மேல் பகுதியில் இறுக்கிச் சொருகினார்…. “ என்று இன்னமும் நீக்கப்படாத நிலையில் உள்ள அந்த ஆணி சொருகப்பட்ட இடத்தைக் காண்பித்தார் ஆரியவதி..


அவரது கால் பாதங்களுக்குள் இரு ஆணிகளை ஏற்றியுள்ளனர். இவ்வாறு சிறுசிறு பிழைகளுக்கெல்லாம் உடலின் ஏதாவது ஒருபகுதியில் ஆணியை செருகினார்கள். வெளியில் இழுக்கக்கூடிய ஆணிகளை இழுத்துவிட்டேன். அகற்ற கடினமானவற்றை அப்படியே விட்டுவிட்டேன். காய்ச்சல் ஏற்ப்பட்டபோது என்னை சிகிச்சையளிக்க அனுமதிக்கவில்லை. இலங்கைக்கு திருப்பி அனுப்பிவிடுங்கள் என்று மன்றாடியபோது, அவர்கள் கிடைத்ததைக் கொண்டு என்னைத் தாக்கினர்.


இறுதியில் எனது உடலில் ஆணிகள் உள்ள பகுதிகளில் இருந்து புண் முற்றி சீழ் வடிய ஆரம்பித்தது. இருக்கின்ற உடு துணிகளைக் கொண்டு சுத்தப்படுத்தி கட்டு போட்டுக்கொண்டே இருந்தேன். கடந்த மாதம் அவர்கள் என்னைப் பார்த்து அசிங்கப்பட்டனர். ஆணி உள்ள இடங்களில் வேதனை அதிகமாகிக் கொண்டிருந்தது. மீண்டும் சித்திரவதை செய்வார்கள் என்று பயந்து வேலைகளை செய்து வந்தேன்…” எனறார்.


இதற்கிடையில் தொடர்பு இல்லாத நிலையில் ஆரியவதியின் குடும்பத்தினர் பீதியடைந்த நிலையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து ஆரியவதியுடன் தொலைபேசி தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆரியவதியால் சுதந்திரமாக விபரமாக நிலைமைகளை எடுத்துரைக்க முடியவில்லை. “…எனக்கு இங்கு பிரச்சினை என்னை உடனடியாக இலங்கை திரும்ப ஏற்பாடு செய்யுங்கள்..” எனக்கூறி வைத்துவிட்டார்.


அதனைத் தொடர்ந்து ஆரியவதியின் கணவர் மீண்டும் இலங்கை வேலைவாய்ப்புப் பணியகத்தில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து அவர் திருப்பி அழைக்கப்பட்டார். இது குறித்து ஆரியவதி தெரிவிக்கையில்


main.jpg



“..கடந்த 20ஆம் திகதி வீட்டு எஜமானி அம்மா ஒரு பையைக் கொண்டுவந்து தந்து ஒரு காரில் என்னை ஏற்றிக்கொண்டுவந்து விமான நிலையத்தில் ஏஜென்சியிடம் ஒப்படைத்தார். அந்த ஏஜென்சி, நாடு திரும்புவதற்கு டிக்கெட் செலவுக்காக 3 மாத சம்பளத்தை எடுத்துக்கொண்டு எஞ்சிய இரு மாத சம்பளத்தை என் கைகளில் வைத்தார். ஏன் நடப்பதற்கு கஸ்டப்படுகிறாய் என்று அவர் என்னிடம் கேடடார். காலில் வருத்தமுள்ளது என்று மட்டும் கூறினேன். இருந்த பண்த்தில் எனது கணவருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு நான் நாடு திரும்புவதை அறிவித்தேன். 21ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் என்னை அழைத்துச் செல்ல எனது கணவர் வந்திருந்தார்.” என்றார்.


கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவர் நடந்து வந்த விதத்தை வைத்து ஒரு துன்புறுத்தப்பட்ட நிலையில் திரும்புகிற ஒரு பெண் என்பதை யாரும் புரிந்து கொள்வர். அது குறித்து விமான நிலைய அதிகாரிகள் பலர் ஆரியவதியிடம் விசாரித்த போதும், தனக்கு காலில் நோ உள்ளதாக மட்டுமே கூறியுள்ளார். தனத பாதங்களில் ஆணிகள் ஏற்றப்பட்டுள்ளன என்கிற உண்மையை வெளிப்படையாக பகிர்ந்துகொள்ளும் மனநிலையில் அவர் இருக்கவில்லை. ஒரு அதிகாரி 700 ரூபாவை வைத்தியச் செலவுக்காக பெற்றுக்கொடுத்துள்ளார்.
நான் நாடு திரும்பிய மகழ்ச்சி எனக்கு போதும். உடலில் உள்ள வலிகூட தெரியவில்லை. உண்மையை எங்காவது சொன்னால் என்னை பிடித்து வைத்துக்கொள்வார்களோ என்ற பயத்தில் நான் எங்கும் உண்மை கூறவில்லை..” என்று அப்பாவித்தனமாக பின்னர் அவர் ஊடகங்களுக்கு கூறினார். விமான நிலையங்களின் உலோகங்களைக் கண்டுபிடிக்கும் கருவிகள் எதுவுமே இவரது உடலின் ஆணிகளைக் கண்டு பிடிக்காதது பலருக்கும் வியப்பைத் தந்திருக்கிறது.


வீட்டுக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் கூட அவர் கணவருக்கோ பிள்ளைகளுக்கோ தான் பட்ட வேதனைகளை அவர் கூறவில்லை. சிறு ஊசியொன்று ஏறியிருப்பதால் தனக்கு கால் வலிப்பதாகக் கூறியியிருக்கிறார். அவரது 25 மகன் சமில் பிரியதர்சன தனது தாயை அழைத்துக்கொண்டு கும்புறுபிட்டி நகர வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போதுதான் முதற்தடவையாக வைத்தியரிடம் உண்மைகளைக் கூறியிருக்கிறார்.


tortured-nails-495x278.jpg


வைத்தியர் நிமல் ஜயசிங்க உடனடியாகவே அவருக்கு ஏற்பு ஊசி ஏற்றியிருக்கிறார். பின்னர் அவரது உடலை முழுவதும் எக்ஸ்ரே எடுத்து மேலதிக அறிக்கைகளை சிரேஸ்ட வைத்தியர் ஒருவர் சமர்ப்பித்துள்ளார். அந்த அறிக்கை அங்குள்ள எல்லோரையும் திடுக்கிடச் செய்துள்ளது. மொத்தம் 23 ஆணிகள் உடல் முழுவதும் ஆங்காங்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இது போன்றதொரு சம்பவம் இதற்கு முதல் இடம்பெற்றதில்லை என ஆஸ்பத்திரிக்கு விஜயம் செய்த வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரி தெரிவித்தார். இது பற்றிய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், ஆரியவதிக்கு நியாயம் கிடைக்கச் செய்ய அனைத்தையும் மேறகொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
தனது குடிசையை சரிசெய்து குடும்பத்துடன் ஒன்றாக சந்தோசமாக வாழவென புறப்பட்டுச் சென்று 5 மாதங்களின் பின் தனது கிராமத்துக்குத் திரும்பியபோது ஆரியவதிக்கு எஞ்சியிருந்தது ஐந்து மாதங்களுக்கு முன்னர் இருந்த குடிசையும் கடும் மழையினால் உடைந்து உருக்குலைந்து இருந்தது. ஆணிகள் ஏற்றப்பட்ட போது கிடைத்த வலியை விட அது வேதனைமிக்கது என அவர் கண்ணீர்மல்க பலர் முன்னிலையில் தேம்பினார்.


27அன்று நடந்த ஒப்பரேசனில் 5 ஆணிகளை நீக்க முடியவில்லை.
ஆரியவதியின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய அந்த 23 ஆணிகளில் முக்கிய 18 ஆணிகளை இன்று (ஓகஸ்ட் 27) நீக்கப்பட்டுள்ளது. ஏழு சிரேஸ்ட வைத்தியர்கள் உள்ளிட்ட 15 பேரைக் கொண்ட குழு இரண்டரை மணித்தியாலங்களாக செய்த ஓப்பரேசனில் 13 இடங்களை வெட்டி ஆணிகளை நீக்கியுள்ளனர். எஞ்சிய 5இல் குண்டு ஊசிகளும் உண்டு என்றும் அவற்றை நீக்குவது ஆபத்து மிகுந்ததென்றும். அவற்றை நீக்கும் போது நரம்புகளுக்கு பாதிப்பை கொண்டுவரக்கூடும் என்றும். அதை விட அவற்றை நீக்காமல் விடுவது பாதுகாப்பானது எனது வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.


operation.jpg


நீக்கப்பட்ட ஆணிகள்:

கண் இமை நெற்றிக்கருகில் – 1 கம்பி
வலது கையில் – 5 ஆணிகள், 1 கம்பி
இடது கையில் – 3 ஆணிகள், 2 கம்பிகள்
வலது காலில் – 4 ஆணிகள்
இடது காலில் – 2 ஆணிகள்
ஆகக் கூடிய நீளமுள்ள ஆணி 6.6 சென்றிமீற்றர் கொண்டது என வைத்தியர்கள் அறிவித்தனர்.


குறிப்பு:


மத்தியகிழக்கு நாடுகளுக்கு வேலைக்காக சென்றவர்களின் சராசரி 20 சடலங்கள் மாதாந்தம் இலங்கை கொண்டுவரப்படுகின்றன. இயற்கை மரணங்கள், ஏனைய விபத்துக்களினால் மரணித்தவர்கள் அதில் அடக்கம்.
வெளிநாடுகளில் நாடுகளில் 1.8 மில்லியன் இலங்கையர்கள் பணிபுரிகின்றனர்.
இவர்களில் 70 வீதத்தினர் பெண்களாவர்.

சவுதியில் மட்டும் 5.5 மில்லியன் வெளிநாட்டவர்கள் பணிபுரிகின்றனர்.
இதில் 4 லட்சம் பேர் இலங்கையர்கள்.
இலங்கையின் சனத்தொகையில் 10 வீதத்தினர் இவ்வாறு வெளிநாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர்.
மாதாந்தம் 18 ஆயிரம் பெண்கள் மத்தியகிழக்கிற்கு வேலைக்காக பயணிக்கின்றனர்.

இலங்கையின் மொத்த தேசிய வருமானத்தை ஈட்டித் தருவதில் வெளிநாட்டு பணிப்பெண்கள் முக்கிய இடத்தில் உள்ளனர்.