Thursday, April 12, 2012

பம்..பம்..பம்...பூகம்பம்!





ஜீன்ஸ் மந்திரவாதிகளும்

SMS

சாமியாடலும்!




நேற்று புதன்கிழமையன்று சுமாத்திரா கடல் பகுதியிலே புவியதிர்வுகள் பற்றிய செய்திகள் குறிப்பிடத்தக்களவில் வரத்தொடங்கியதுதான் தாமதம் நமது கைத்தொலைபேசிகளின் உள்பெட்டிகளெல்லாம் (அதுதான் inbox) குறுஞ்செய்திகளால்  நிறையத் தொடங்கி விட்டன. 


அவற்றில் இரண்டு  மூன்று தவிர மற்றவை அனைத்தும்,  'ஆபத்துகளின்போது பின்வரும் சுலோகங்களை ஜெபியுங்கள்' அல்லது
 'இயற்கை அழிவு ஏற்படும்போது காப்பாற்றக் கடவுளை வேண்டி இதனை ஓதுங்கள்!' போன்றவைதான்.


வழமையாக ஏதாவது ஒர் உப்புச்சப்பில்லாத விடயத்தைக் கூட வைத்துக்கொண்டு Breaking News போட்டு இழுத்து இழுத்து எரிச்சலூட்டுவதையெல்லாம் முன்பு நமது 'சக்தி வாய்ந்த' தொலைக்காட்சிகளும் 'சுட்டெரிக்கும்' பண்பலை வானொலிகளும்தான் செய்து கொண்டிருந்தார்கள். இப்போது கைத்தொலைபேசிகளிலும் கிட்டத்தட்ட அதுதான் நடக்கின்றது.


இது ஒருவகையான உத்தி. ஏதாவது ஒரு முக்கியமான நிகழ்வு ஏற்பட்டுவிட்டால் மக்கள் இலத்திரனியல் ஊடகங்களைத்தான் உடனடியாக நாடுவார்கள் என்பதைத் தெரிந்து வைத்துக்கொண்டு சரியான நியூஸ் கிடைக்கிறதோ இல்லையோ TVவாலாக்கள்  டையைக் கட்டிக்கொண்டு கற்பனைச் சட்டியோடு ஒவ்வொரு வீட்டின் வரவேற்பறைக்கும் வந்திறங்கி விடுவார்கள். கிடைத்த சிறுகடுகு போன்ற துணுக்குச் செய்தியை வைத்துக்கொண்டே கிராபிக்ஸ் அடுப்பு மூட்டி வார்த்தைஜாலக் கரண்டி கொண்டு வதக்கித் தாளித்துப் பரிமாறுவார்கள்.


பூகம்பம் போன்ற இயற்கை அனர்த்தங்களை இன்றிருக்கும் அறிவியல் வளர்ச்சியைக் கொண்டு மட்டும் எதிர்வுகூற முடியாது. ஆனால் கடலில் பூகம்பங்கள் நிகழும் போது அவை ஏற்பட்டுள்ள பிரதேசம், தரைக்கீழ் ஆழம், அதிர்வின் அளவு ஆகியவற்றைக் கணித்து கரையோரங்களுக்கு சுனாமித் தாக்கங்கச் சாத்தியங்களையும் எச்சரிக்கைகளையும் தெரிவிக்க முடியும். அதுவும் 2004ல் தெற்காசியாவிலும்  2011ல் ஜப்பானிலும் கையைச் சுட்டுக்கொண்ட அனுபவங்களால் இந்தத் துறையிலே இப்போது நிறைய தொழினுட்பத் துல்லியங்கள் ஏற்பட்டுள்ளன.


பூகம்பம் ஏற்பட்டுள்ள பிரதேசம் மற்றும் மிக அண்டிய பகுதிகளைத் தவிர ஏனைய தூர நாடுகளில் கடலையண்டி வாழ்பவர்களுக்கு சில மணிநேரங்களாவது அவகாசமிருக்கின்றது. அதற்குள்ளாக குறைந்தபட்சம் அவரவர் உயிரையும் வெகுமுக்கியமான ஆவணங்களையும் காப்பாற்றிக் கொள்ளலாம். இதுதான் அனுபவ + அறிவியல் உண்மையாக இருக்கும்போது அநாவசிய பதற்றங்களை வேண்டுமென்றே ஏற்படுத்தி விட்டு அற்பசுகம் காணும் அல்லது அவற்றைக்  கோழைத்தனமாகப்  பயன்படுத்தும்  போக்குகள் ஏன் ஒவ்வொருமுறையும் நிகழ்கின்றது?


சிந்தித்துப் பாருங்கள் சில உண்மைகள் தெரியவரும்.


மேலே நான் குறிப்பிட்டுள்ள அற்பசுகம் காணும் போக்கு என்றால் உங்களுக்கு இலகுவாய் புரியும். அது ஒருவகை சொறிதல் சுகம் போன்றது. அடுத்தவர்களை எப்படியாவது கவருவதற்கென்றே சிலபேர் அலைவார்கள். இப்படி ஏதாவது ஒன்று கிடைத்து விட்டால் போதும் ஏதோ சுமாத்திரா பன்டா ஆஷே தீவுக்கே போய் பூகம்பத்தை நேரில் பார்த்துவிட்டு திரும்பியவர்கள் போல கதையளப்பார்கள். அறியாத மக்களை வெருளச்செய்து அதிலே  கிடைக்கும் மலிவான அதிர்ச்சி மதிப்பும் சிறு VIP அந்தஸ்தும் கிடைப்பதை உள்ளுர வசித்து மகிழும் அற்ப புத்தியுடையவர்கள் செய்வதுதான் இதெல்லாம்.



அடுத்து மக்களின் உயிர்ப்பயம் பற்றிய பதற்றத்தை பயன்படுத்துபவர்கள் பற்றிப் பார்க்கலாம்.  திருடுவதிலே உடமையைத் திருடுவது உழைப்பைத் திருடுவது என்று இருவகை இருப்பதுபோல இந்த பதற்றத்தைப் பயன்பத்துபவர்களிலும்  இருவகையினர் உள்ளனர்.


அதாவது இப்படியான அனர்த்த வேளைகளில் மக்கள் இயல்பாகவே வேறு கவனத்திலிருப்பதால் அந்தவேளை பார்த்து பொருட்களை அபகரிக்கும் சில்லறைத் திருடர்கள் ஒருவகையினர்.


மற்ற வகையினர் பதறித்திரியும் மக்களின் உயிர்ப்பயத்தைப் பயன்படுத்தி  அவர்களின் மூளையைத் திருடுபவர்கள்.(ஏனைய நேரங்களில் அவர்களது நம்பிக்கையை வென்றெடுக்க முடியாததாலோ என்னவோ)  இது புரிகிறதா உங்களுக்கு? இருங்கள் சொல்கின்றேன்.


இவர்கள் பார்ப்பதற்கு கனவான்கள் போலத்தான் இருப்பார்கள். ஆனால் அப்பாவி மக்களின் பதற்ற நேரத்திலே அவர்களது இயலாமைக்குள்ளேயும் உயிர்ப்பயத்துக்குள்ளேயும் புகுந்து எல்லாவற்றையும் மிகைப்படுத்திக் காட்டுவார்கள். இயற்கை அனர்த்தங்களுக்குரிய அறிவியல் காரணங்களை விலக்கி பழைய மந்திரவாதி ஸ்டைலில் 'சாமி குத்தம் ஆயிடுச்சிடா!' என்று கத்தாத குறையாக மக்களிடம்  கொண்டு செல்ல நினைக்கின்றார்கள். சுருங்கச் சொன்னால் தமது குறுகிய துருப்பிடித்த நம்பிக்கைகளை மக்களின் மூளைக்குள்ளே விதைக்க நினைக்கும் ஆசாமிகள்.


இவர்கள்தான் இந்தப் பத்தியின் ஆரம்பத்தில் நான் குறிப்பிட்ட கைத்தொலைபேசிக் கனவான்கள். நேற்றைய பதற்ற நிலைமையிலே, அந்த மந்திரத்தை ஓதுங்கள்...இந்த சுலோகத்தை மனப்பாடம் செய்யுங்கள் என்று நியூஸ் அனுப்பிய அறிவாளிகள்.


அந்தக் காலங்களில் கிராமங்களிலே கடும்வரட்சியோ தொற்றுநோயோ ஏற்பட்டு மக்கள் வாடும்போது ஊர்ப் பூசாரிகள் அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வார்கள். அதுவரையிலும் தன்னைக் கண்டுக் கொள்ளாமல் இருந்த மக்களுக்குத் தன் மீது பயம் குறைந்து விடக் கூடாது என்பதற்காக (அப்போதுதானே ஏய்த்துப் பிழைக்கும் தன் வயிற்றுப் பிழைப்பு ஜோராக நடக்கும்) 'ஆத்தா கனவுல வந்தாடா! நோயால ஊரையே அழிச்சிடுவாடா!   கருங்கோழி வெட்டுங்கடா! ஆட்டைக் கொண்டு கட்டுங்கடா!' என்று சாமியாடுவார்கள்.


அதுபோலத்தான் நமது இந்த ஜீன்ஸ் போட்ட மந்திரவாதிகளும் மக்களின் சுனாமிப் பயத்தை தமது மூளைச்சலவை வேலைகளுக்குப் பயன்படுத்துகின்றார்கள். மந்திரவாதிகளுக்கும் இந்தக் கனவான்களுக்கும் உள்ள...

ஒற்றுமை:

மக்களை ஏய்ப்பதற்கும் அவர்களின் உழைப்பைச் சுரண்டுவதற்கும் வசதியாக அறிவியலிலிருந்து முடிந்தவரை விலக்கி மூடத்தனத்திலேயே அமிழ்த்தி வைத்திருப்பது.

வித்தியாசம்

இடுப்பு வேட்டி பதிலாக டீசேர்ட் ஜீன்ஸ் etc.  சாமியாடலுக்குப் பதிலாக SMS சேவைகள்


இப்படியெல்லாம் செய்வதற்குப் பதிலாக குறைந்தபட்சம் அனர்த்தங்களின் போது எப்படி விரைவாக வெளியேறுவது..என்னென்னவற்றை செய்யலாம் எவற்றையெல்லாம் செய்யக்கூடாது என்பது போன்ற தகவல்களைக் கொடுத்திருந்தாலாவது நடைமுறைக்கு உதவியாகவும் ஆக்கபூர்வமானதாகவும் இருந்திருக்கும்.


இனியாவது செய்வார்களா?

-'Mutur' Mohammed Rafi

2 comments:

  1. சிறந்த கருத்துக்கள்,

    நான் இதை பற்றி நிறைய நேரம் யோசித்திருக்கிறேன்
    சுனாமி வரலாம் என்று சொன்ன உடனே ப்ராஜெக்ட் ரெடி பண்ணும் எத்தனையோ கனவான்கள் நம்முள்ளே இருக்கிறார்கள்தானே.

    நன்றி

    ரியாட்
    கிண்ணியா

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ரியாட். உங்களுக்குள் இருந்த சிந்தனை எனது எழுத்தின் மூலம் வெளி வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது. நீங்கள் எனது ஆக்கங்களுக்கு நல்லதோர் வாசகராக இருப்பதற்குரிய சாத்தியக் கூறுகளை வரவேற்கிறேன். தொடர்ந்து கருத்துக்களைத் தெரிவித்தால் மகிழ்வேன். -Rafi

      Delete