Wednesday, April 11, 2012

கவிதை:





காதல் எரிமலை






ன் நினைவு வெளியில்
உன் உறவுப்பறவை
உல்லாசமாய்ச் சிறகடித்திருக்கும்
ஓர் ஓய்வு நாளில்
ஓசைப்படாமல் வந்தது
ஒருகடிதம்!



அட!
தனித்தனி எழுத்துக்களாய்
தட்டச்சில்
என் பெயரும் முகவரியும்
ஆங்கிலத்தில்..
ஓ! சந்தேகமே வேண்டாம்
எழுதியிருப்பது நீ
நீயேதான்!



எனது விழிகளின் தவிப்பை
விரல்கள் மொழிபெயர்க்க
கடிதவுறை திறக்கும் கணங்கள் கூட
காத்திருக்கப் பொறுமையில்லை
எகிறிக்குதிக்கிறது என் இதயம்!



" ஓ! போதும்
உன் சாக்குப்போக்குகளும்
சமாதான வார்த்தைகளும்
சலித்தே போயின எனக்கு
இனியும் எழுதாதே நிறுத்து!"




ஆரம்ப வரிகளே
அபாயகரமாய் தாக்கிட
கடிதமென்ன
உன் காகித ஓரங்கள் கூட
கத்திகளாய்த் தோன்றுகின்றதே!



"நீ எழுதும் வரிகள்தானே
இளையவள்
என் இதயத்துடிப்பு
நீயும் அதை நிறுத்திவிட்டால்

நின்றிடாதோ
இவள் உயிர்த்துடிப்பு!
ஆண்மகனாய் நீயும்
இருப்பதால்தான் காதலிலே
கவலையில்லை உனக்கு
பெண்ணாய் நானும் பிறந்துவிட்டேன்
என் வேதனைக்குத்தானுண்டோ
ஓர் கணக்கு?"




"கனவுச்சிறகு விரித்து
காதல்வானிலே
களித்திருந்த கன்னிமகள் இதயம்
வேதனைத் தீயில்
வெந்து மடிகின்றதே இப்போது.
கவலைகள் போக்கிடவும்
என் கண்ணீரைத் துடைத்திடவும்
யாருமில்லை இங்கே
தோழியும் தூரதேசம்! "




"இந்த நிலை நீடித்தால்
இடைவிடாது
தொடர்ந்திட்டால்
மனப்பிரமை
நிச்சயம் ங்கைக்கு
மாற்றுவழியில்லை"



ஓ!
அன்பே
ஓங்கி மிதிக்கின்றாய்  ஒருவரியில்
ஒத்தடமும் தருகின்றாய் சிலவரியில்
சினிமாவின் வில்லனாய் மிரட்டுகின்றாய்
கோபத்தில் சீறுகின்றாய்
குழம்பாகக் கொதிக்கின்றாய்...



ஓ!
அன்பே நீ
எழுதியிருப்பது கடிதமல்ல;
காதல் எரிமலையின்
ஒரு கையடக்கப் பதிப்பு!


-மூதூர் மொகமட் ராபி

No comments:

Post a Comment