Monday, June 4, 2012

Shahid Afridi : வீணடிக்கப்படும் திறமை!










"திறமையானவர்களை வீணடிப்பதிலே  திறமை வாய்ந்தவர்கள் யார்?"

என்று ஒரு பந்தயம் நடாத்தினால் அதிலே ஆயுளுக்கும் முதல் பரிசைத் தட்டிச்செல்லுபவர்கள் பாகிஸ்தான் கிரிக்கட் தேர்வுக்குழுவாகத்தான் இருக்கும்.

இலங்கைக்கு சுற்றுலா வந்திருக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்குமிடையில் ஹம்பாந்தோட்டை மகிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானத்திலே இன்று நடந்து முடிந்திருக்கும் T20 தொடரைப் பார்க்கும்போது இவ்வாறான எண்ணம் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.

புதிய அணித்தலைவராக முகம்மட் ஹபீஸ் மற்றும் புதிய பயிற்றுவிப்பாளராக வட்மோர் ஆகியோருடன் வந்திருக்கும் பாகிஸ்தான் அணி முதலாவது T20 போட்டியிலே தோல்வியைத் தழுவியது.
பந்து வீச்சிலே போதிய திறமையைக் காண்பித்த போதிலும் குறைபாடுள்ள களத்தடுப்புகளாலும் மோசமான துடுப்பாட்டத்தினாலும் 133 என்ற ஓட்ட இலக்கை எட்ட முடியாது வெற்றி வாய்ப்பை இழந்தனர்.


ஆயினும் இரண்டாவது போட்டியிலே வெறும் 123 ஒட்டங்களை இலங்கை அணிக்கு இலக்கு நிர்ணயித்து 99 க்குள் சகலரையும் வீழ்த்தி வெற்றிபெற்று இரண்டு போட்டிகள் கொண்ட தொடரைச் சமநிலையிலே முடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் அணித்தலைவரும் நட்சத்திர சகலதுறை ஆட்டக்காரருமான சஹீட் அப்ரிடி தனது சகலதுறை ஆட்டத்தினை சிறப்பாக வெளிப்படுத்தி அணியின் கூட்டு முயற்சியுடன் வெற்றியைத் தேடிக் கொடுத்திருக்கின்றார்.

அத்துடன் இன்றைய தனது 50 வது போட்டியிலே ஆட்டமிழக்காது 52 ஓட்டங்களைப் பெற்றதோடு இரண்டு முக்கிய விக்கட்டுகளை வீழ்த்தி ஒரு பிடியெடுப்புடன் ஆட்டத்தின் போக்கையே மாற்றியதற்காக ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டுள்ளது.


இது அப்ரிடி  T20 போட்டிகளிலே பெற்றுக்கொண்ட 7 வது ஆட்டநாயகன் விருது என்பதுடன்  ஓர்  உலக சாதனை  யுமாகும்.

 (இதற்கு முன்பு சனத் ஜயசூரிய கெவின் பீட்டர்ஸன் ஆகியோர் தலா 6 தடவை)

கடந்த 2011 ஆண்டு உலகக்கிண்ணப்போட்டிகள் ஆரம்பிக்கும் வரை எத்தனையோ பல சர்ச்சைகளிலே சிக்கி நம்பிக்கையிழந்து கிடந்தது, பாகிஸ்தான் அணி.  சர்ச்சைகள் ஏற்படுத்திய மன அழுத்தங்கள் தீர்வதற்கிடையிலே உலகக்கிண்ணத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை. 
ஏனைய அணிகள் தமது அணித்தலைவரையும் அணியையும் முன்கூட்டியே அறிவித்து பயிற்சிகளில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தன.


ஆனால் பாகிஸ்தான் கிரிக்கட் நிர்வாகம் மட்டும்  அணியை  அறிவித்து விட்டு அணித்தலைவரை அறிவிக்காமல் கோமாளித்தனம் செய்து கொண்டிருந்தது. இறுதியில்,  கடைசிநேரத்திலே சஹீட் அப்ரிடியை அழைத்து அணித்தலைவர் பதவியை அதுவும் அரைமனதோடுதான் வழங்கினார்கள், பாகிஸ்தான் கிரிக்கட் நிர்வாக கோமாளிகள்.


அத்தனை முட்டாள்தனங்களையும் தனது நாட்டு அணிக்காகப் பொறுத்துக் கொண்டு,  தனது அபிப்பிராயங்களுக்கோ தெரிவுகளுக்கோ இடமளிக்காமல் முன்கூட்டியே தெரிவுசெய்து வழங்கப்பட்ட அணியை ஏற்றுக்கொண்டார் சஹீட் அப்ரிடி. 


உறுதியான நம்பிக்கையுடன் சக வீரர்களை உற்சாகப்படுத்தி (தன் பங்குக்கு 26 விக்கட்டுக்களையும் வீழ்த்தி) உலகக்கிண்ண அரையிறுதிப்போட்டிவரை பாகிஸ்தான் அணியை வெற்றிகரமாக முன்னின்று வழிநடாத்தியவர் சஹீட் அப்ரிடி.



இத்தனை அசாத்தியத் திறமை வாய்ந்த சஹீட் அப்ரிடி தற்போது கப்டன் பதவியில் இல்லை என்பதுதான் பாகிஸ்தான் அணியின் தொடரும் துரதிஷ்டம்.

சஹீட் அப்ரிடி போன்ற ஒரு திறமைவாய்ந்த துடிப்பான வீரர் பாகிஸ்தான் அணி தவிர்ந்த வேறு எந்த அணியில் இருந்தாலும் அவர்கள் நிச்சயமாக  இதைவிடவும் எத்தனையோ மடங்கு திறமையாக அவரைப் பயன்படுத்திக்கொண்டிருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.


பாகிஸ்தான் எப்பொழுதுமே திறமை வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்களுக்குப் பஞ்சமில்லாத ஓர் அணி. அவ்வாறே நெருக்கடியான வேளையிலே அதிரடியாகத் துடுப்பெடுத்தாடுவதிலே புகழ்பெற்ற பல சகலதுறை வீரர்களையும் கொண்டிருப்பதும் வழமை.


ஆனால் அவர்களின் துரதிஷ்டங்களிலே ஒன்று எப்பொழுதெல்லாம் ஒரு திறமையான வீரர் முன்னேறிக்கொண்டு வருகின்றாரோ அப்போதெல்லாம் அவர் ஏதாவது ஒரு சர்ச்சையிலே மாட்டிக்கொண்டு விடுவார். பின்பு அணியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு விடுவார். இதற்கு உதாரணங்களாக ஏராளமான முன்னாள் வீரர்களும் தற்போதைய வீரர்களும் உள்ளனர்.


அதுவுமில்லையென்றால் கிரிக்கட் உலகமே ஆச்சரியத்தால் உறைந்து போகுமளவுக்கு  அதிரடியாக அணித்தலைவராக நியமிக்கப்படுவார்.




அவர் தனது தலைமைத்துவத் திறமையை படிப்படியாக வளர்த்துக் கொண்டு வருகையிலே அணி வீரர்களுக்கிடையிலோ அல்லது கிரிக்கட் தேர்வுக்குழுவினருடனோ கருத்து வேறுபாடு வந்துவிடும்... பின்பு அணித்தலைவர் பதவியிலிருந்து விலகுவதும் பின்பு அணியிலிருந்தே காணாமல் போவதுமாக...

இது ஒரு வாழ்க்கை வட்டம் போன்று நடந்து கொண்டேயிருக்கும் அணிதான் பாகிஸ்தான் அணி.


-Mutur' Mohd.Rafi

Sunday, June 3, 2012

கோணேசர்பூமியில் ஒரு வெற்றுவேட்டு!




'எப்படியிருந்த    நான்,   இப்படியாயிட்டேன்!'








வர் இன்னும் ஓய்வுபெறாத ஒரு முன்னாள் பாடசாலை அதிபர். முன்னாள் அதிபர் என்றால் 'இன்னாளிலே என்ன செய்து கொண்டிக்கின்றார்...?' என்ற வினா எழுமல்லவா...?


அதற்குரிய பதிலைக்கூறு முன்னர் இந்த விடயத்தை முழுமையாகப்படியுங்கள். சுவாரசியமாக இருக்கும்.

இது நமது பாடல்பெற்ற திருத்தலமான கோணேசர் பூமியில் நிகழ்ந்த /  நிகழும் கதை.

அவர் தலைமையாசிரியராக கடமையாற்றிய பாடசாலை  நகரிலிருந்து கூடிப்போனால் 4 கிலோமீற்றர் சுற்றளவுக்குள்ளே புகையிரதப்பாதையை ஒட்டிய பல்லின மக்களும் ஒன்றாக வாழும் ஒருபிரதேசத்தில் இருக்கின்றது.


எனினும் அந்தப்பாடசாலை ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த மாணவ மாணவியர்கள் பெரும்பான்மையாக கற்கும் ஒரு தமிழ் மொழிமூலப்பாடசாலை என்பதால் அந்த இனத்தைச் சேர்ந்த பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பாக அறிந்துகொள்ளவும் பிற தேவைகளுக்குமாக அடிக்கடி பாடசாலைக்குச் சென்று வரவேண்டியிருந்தது.  பொதுவாக பெற்றோர்கள் ஆசிரியர்களைச் சந்திக்க விரும்புவது என்பது இயல்பான ஒன்றுதானே?

அவ்வாறு பாடசாலைக்குள் வருகின்ற அப்பாவிப் பெற்றோர்களின் மீது நமது அதிபர் எவ்வாறு நடந்து கொள்வார் தெரியுமா?

'இஞ்சவா? எங்க வந்தா...? இப்ப சந்திக்கேலாது போ..! போ...!' 


இப்படித்தான் 'மரியாதையாக' இருக்கும் நமது தலைமையாசிரியரின் பெற்றோருக்குரிய பொதுவான அணுகுமுறை.

இவர் தனது ஆசிரியர்களையும் கூட இவ்வாறுதான் நடாத்துவார் என்று சில தகவல்கள் உண்டு. வெளிப்படையாகப் பார்க்கும் யாருக்கும் இவர் ஒரு கண்டிப்பும் நிர்வாக இறுக்கமுமுள்ள திறமையான அதிபர் என்ற ஒரு மாயத்தோற்றம் முதலில் ஏற்படுவது இயல்பானதுதானே. ஆனால் உள்ளே புகுந்து உற்றுக்கவனித்தால்தான் இவர் ஒரு வெறும் வெற்றுவேட்டு என்பது புலனாகும்.

இவர் தன்னைச்சுற்றிலும் வைத்திருந்தது யாரைத் தெரியுமா?


கற்பித்தலைவிட மாணவர்களை ஏய்த்துச் சமாளிக்கவும் சலுகைகளுக்காக மேலதிகாரிகளை வருடிப் பிழைக்கவும் கூடிய பெண் ஆசிரியர் குழாம் ஒன்றைத்தான் வைத்திருந்தார். அதேவேளை தனக்கு ஒத்துவராத திறமையான ஆசிரியைகளை  வருத்தி உழைப்பை உறிஞ்சிக் கொள்வாராம்.  ஆனால் அதனால் விளையும் பலாபலன்களை தானும் தன்னைச்சுற்றி வருடிக்கொண்டிருக்கும் ஏமாற்றுக்காரிகளான ஆசிரியைகளும் பெறுமாறு பார்த்துக் கொள்வாராம்.


எங்கு செல்வதென்றாலும் ஒரு துருப்பிடித்த பழைய துவிச்சக்கர (சைக்கிள்) வண்டியில்தான் அவரது பயணமிருக்கும். அந்தச் சைக்கிளைப்போலவேதான் அவரது சிந்தனையுமிருக்கும்


இவரது நோக்கம் பாடசாலை மாணவர்களின் கல்வியோ அல்லது சமூக அபிவிருத்தியோ அன்றி  தனது மேலதிகாரிகளைத் திருப்திப் படுத்திக்கொண்டு தனது சுய முன்னேற்றங்களைப் பெற்றுக் கொள்வதாக மட்டுமே இருந்து வந்தது.

அத்துடன் பாடசாலைக்கு ஆண் ஆசிரியர்களை நியமிக்காமல் பார்த்துக் கொள்வாராம். தவறிப்போய் நியமிக்கப்பட்டாலும் அவர்களோடு அநாவசிய முரண்பாடுகளை ஏற்படுத்தி அவர்களாகவே இடமாற்றம் பெற்று ஓடிவிடச் செய்து விடுவாராம்.


அப்படியும் விடாப்பிடியாக அவர்கள் இருந்துவிட்டால் போதும். சினிமா தாதாவைப்போல  தனது அல்லக்கைகளான அடிவருடிப் பெண் ஆசிரியர்களை வைத்து குறிப்பிட்ட ஆசிரியர் மீது ஏதாவது பாலியல் குற்றச்சாட்டுக்களைத் திணித்துத்  தொடுத்து ஓட்டம் காட்டி விடுவாராம். இவ்வாறு அவர் தனது காலத்திலே அப்பாடசாலைக்குக்கு கிடைத்த எத்தனையோ திறமை வாய்ந்த ஆண் ஆசிரியர்களையெல்லாம் மாணவர்களின் கல்வி அபிவிருத்திக்குப் பயன்படுத்தாமல் விரட்டி வீணடித்துள்ளாராம்.

ஒர் அதிபராக,  தனது பாடசாலையின் வீழ்ச்சியைப் பற்றி அக்கறை கொண்டதில்லை. தனது அடிவருடி ஆசிரியைகளின் மோசடிக் கற்பித்தல்களால்   மாணவர்களின் ஆளுமை விருத்தி தேர்ச்சிகள், அடைவுகள் வீழ்ச்சியடைந்து வந்தது பற்றிய உண்மையான கவலைகளெல்லாம் அவருக்கு இருக்கவில்லை. ஆனால்  எல்லாமே சரியாக நிகழ்ந்து கொண்டிருப்பதாக புள்ளிவிபரங்களை  வெறும் வெள்ளைக் காகிதங்களிலும் பைல்களிலும் மட்டும் டிப்டொப்பாக வைத்திருந்து கல்வி அதிகாரிகள் வரும்போது எடுத்துப் போடுவாராம்.

கல்வியில் ஏற்கனவே பின்தங்கிக்கிடக்கும் தமிழ்பேசும் சிறுபான்மைச் சமூகத்தை சிறிதளவு கூட முன்னேறிவிடாமல் எவ்வாறு மேலும் மோசமாக்கலாம் என்று மண்டைகளைக் குடைந்து திட்டங்கள் தீட்டித் தந்திரமாகச் செயல்படுத்துவதிலே கில்லாடிகள்தான் நமது கோணேசர் பூமியின் கல்வி அலுவலக அதிகாரிகள். அவர்களுக்கு இப்படி ஒருவர் கிடைத்தால் எப்படியிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். இவரது ஏமாற்றுகளால் உள்ளுர மகிழ்ந்து, வெளிப்படையாக ஓஹோவெனப்  பாராட்டிவிட்டுச் சென்றுவிடுவார்களாம்.

ஆனால்...


 இந்த உலகில் அனைத்துச் சர்வாதிகாரங்களும் ஏமாற்றுகளும் ஒருநாள் முடிவுக்கு வந்துதானே ஆகவேண்டும். இவரது இப்படியான நடவடிக்கைகள் மெல்லமெல்ல ஊருக்குள்ளே தெரிய வரத்தொடங்கியதும் பெற்றோர்கள் கொதித்தெழுந்தார்கள். மக்களை மதிக்காத அதிபருக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்களை நிகழ்த்தினார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தை சமாளித்து அதிபரைக் காப்பாற்றுவதற்கு கல்வி அதிகாரிகளும் அடிவருடி ஆசிரியைகளும் பகீரதப்பிரயத்தனம் செய்தார்கள். ஆனால் பெற்றோர்கள் ஒரேயடியா வேண்டாமென்று பிடிவாதமாக அதிபரைத் துரத்தியடித்து அனுப்பிவிட்டார்கள். தனத அடிவருடிகளையும் சேர்த்துக்கொண்டு வெருண்டோடிய சர்வாதிகார அதிபருக்கு அடைக்கலம் எங்கு தெரியுமா? வேறு எங்கே...?


சாட்சாத் நமது கோணேசர்பூமி கல்வி அலுவலகம்தான்...!

அங்கே ஒரு ப்ளாஸ்டிக் கதிரையிலே குந்திக்கொண்டு எடுபிடி வேலைசெய்து கொண்டிருக்கின்றாராம்.


-Jesslya Jessly






பிற்குறிப்பு:

முன்பு அதிபர் கதிரையில் குந்தியிருந்து பாடசாலையையும் சீரழித்த நமது அதிபர் தற்போது கோணேசர்பூமி  கல்வி அலுவலகத்தில் ஒரு ப்ளாஸ்டிக் கதிரையிலே குந்தியிருந்து கொண்டு தான் துரத்தியடிக்கப்பட்டதை நினைத்து உள்ளுக்குள் புலம்பித் தீர்க்கின்றாராம். அத்துடன் தனது முன்னாள் பாடசாலையை, அங்கே மிஞ்சிக்கிடக்கும் அடிவருடியொன்றை பினாமியாக வைத்து  மறைமுகமாக நடாத்திக் கொண்டிருக்கின்றாராம். 

Wednesday, May 30, 2012

MGR vs Radha: 1967ல் உண்மையில் நடந்தது என்ன?







"சுட்டான் ; சுட்டேன்!"






தையும் சுவைபடச் சொன்னாலே போதும் அது எவ்வளவுதான் பழைய விடயமானாலும் அதற்கு ஒரு தனிக் கம்பீரம் வந்து விடும் என்பதை இதன் கீழுள்ள ஒரு கட்டுரையைப் படித்போது உணரக் கூடியதாக இருந்தது.   அதிலும் அது நடுநிலை தவறாமல் அநாவசிய புகழ்பாடல்கள் இல்லாமல் சமநிலையாக எழுதப்பட்டிருந்தால் கேட்கவும் வேண்டுமா? அதன் அழகே தனி அல்லவா?

தமிழகத்தின் மக்கள் திலகம் என்று அன்றும் இன்றும் போற்றப்படும் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜியார் அவர்கள் DMK திமுகவின் உறுப்பினராக இருந்தவேளை தனது சக நடிகரும் ஈ.வே.ரா. பெரியாரின் திகவின் விசுவாசியுமான நடிகவேள் ராதா வினால் ('சித்தி' தொலைக்காட்சி நாடகம் புகழ் ராதிகாவின் தந்தை) சுடப்பட்ட செய்தி யாவரும் அறிந்த விடயம்தான்.


இது நடந்தது 1967ம் ஆண்டில்...


தமிழ்பேப்பர் இணையத்தில் எஸ்.பி.சொக்கலிங்கம் என்பவர் எழுதியிருக்கின்றார்.வாசித்துப் பாருங்கள்!


-'Mutur' Mohd. Rafi



Here you're:




எம்ஜியார் கொலைமுயற்சி வழக்கு








1967ம் ஆண்டு பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நேரம். எம்.ஜி.ஆர் தொண்டையில் குண்டடிப்பட்டு, ராயப்பேட்டை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஸ்ட்ரெச்சரில் வைத்து கொண்டு வரப்பட்டார். சிறிது நேரத்துக்கெல்லாம் எம்.ஆர். ராதாவும் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு நெற்றிப்பொட்டிலும், கழுத்திலும் குண்டடிப்பட்டு ஸ்ட்ரெச்சரில் வைத்து கொண்டு வரப்பட்டார். இருவருடைய ஸ்ட்ரெச்சர்களுக்கும் இடையே ஒரு மீட்டர் இடைவெளி தான். குண்டடிப்பட்ட இருவரிடமும் எந்த சலனமும் இல்லை.



இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. எம்.ஜி.ஆரிடம் விசாரித்ததில், திரைப்பட நடிகர் எம்.ஆர்.ராதா தன்னை காதருகே சுட்டதாகத் தெரிவித்தார். குண்டு எம்.ஜி.ஆரின் காதை உரசிக்கொண்டு அவரது தொண்டையில் போய் பாய்ந்தது. எம்.ஆர். ராதா அங்கு தனக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்த மருத்துவர்களிடம், “நான்தான் எம்.ஜி.ஆரை சுட்டேன்” என்று தெரிவித்தார். காவல்துறைக்கு தனது வாக்குமூலத்தை அளித்துவிட்டேன் என்றார்.
செய்தி கேட்டு, எம்.ஜி.ஆரைக் காண மருத்துமனையில் கூட்டம் திரண்டது. சுமார் 50,000 பேர் மருத்துவமனையில் கூடிவிட்டதாக ஒரு செய்தி உண்டு.




எம்.ஆர்.ராதா ஆதரவாளர்களும், அவருடைய நலனை விசாரிக்க மருத்துவமனைக்கு வந்தனர். சினிமாக்காரர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் குழுமினர். திமுகவின் அண்ணாதுரை, கருணாநிதி, நடிகர் அசோகன் என்று அனைவரும் எம்.ஜி.ஆருக்கு சிகிச்சை நடந்த ஆபரேஷன் தியேட்டரின் வாசலில் நின்று கொண்டிருந்தார்கள்.



எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் குண்டடிப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டபோது, ஏதோ சினிமா படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்து என்றுதான் அனைவரும் நினைத்தனர். ஆனால் நடந்தது ஒரு விபத்தல்ல. பெற்றால்தான் பிள்ளையா என்ற படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு எம்.ஜி.ஆர், தி.மு.கவுக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அவரும் சட்டமன்றத் தேர்தலில் பரங்கிமலைத் தொகுதியில் போட்டியிட்டார்.
அப்போது எம்.ஜி.ஆரைச் சந்திக்க அவரது ராமாபுரம் இல்லத்துக்கு எம்.ஆர். ராதாவும், பெற்றால்தான் பிள்ளையா என்ற படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர் கே.கே.என்.வாசுவும் சென்றிருக்கிறார்கள்.



எம்.ஜி.ஆரை, எம்.ஆர். ராதா சந்தித்தற்கான காரணம் என்ன என்பதை ஊடகங்கள் பின்வருமாறு தெரிவித்தன. ‘பெற்றால்தான் பிள்ளையா படத்தைத் தயாரிக்க, தயாரிப்பாளர் வாசுவுக்கு ஒரு லட்சம் ரூபாய் பணம் தேவைப்பட்டது. அதை எம்.ஆர்.ராதா, வாசுவுக்கு கொடுத்து உதவினார். பின்னர் தனக்கு அந்தப் பணம் வேண்டுமென்று ராதா வாசுவிடம் கேட்டார். படப்பிடிப்பு முடிந்து படம் வெளியில் வரட்டும், அந்த பணத்தை எம்.ஆர்.ராதாவுக்குத் தருகிறேன் என்று கூறியிருந்தார் எம்.ஜி.ஆர். பெற்றால்தான் பிள்ளையா படம் திரையிடப்பட்டு பிரமாதமாக ஓடிக்கொண்டிருந்தது. எம்.ஆர்.ராதா தன்னுடைய பணத்தை வாங்க வாசுவுடன் எம்.ஜி.ஆர் வீட்டிற்கு சென்றிருக்கிறார். எம்.ஜி.ஆருக்கும், எம்.ஆர்.ராதாவிற்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதில் கோபம் அடைந்த எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆரை துப்பாக்கியினால் சுட்டார். பின்னர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டார்.’

ஆனால் 'பெற்றத்தால்தான் பிள்ளையா' என்ற படத்தின் தயாரிப்பாளர் வாசு காவல்துறையினரிடம் தான் கொடுத்த வாக்குமூலத்தில் பின்வருமாறு தெரிவித்தார்.

‘எம்.ஜி.ஆரை கதாநாயகனாக வைத்துப் படம் தயாரிக்க வேண்டும் என்று கோயம்புத்தூரிலிருந்து ஒரு பார்ட்டி விருப்பம் தெரிவித்தது. அந்த பார்ட்டி சென்னையில் உள்ள அசோகா ஹோட்டலில் தங்கியிருந்தது. அந்த பார்ட்டிக்காகத்தான் நானும் எம்.ஆர்.ராதாவும் எம்.ஜி.ஆரை அவரது இல்லத்தில் சந்தித்தோம்.’ (இந்தத் தகவல் பொய் என்பது விசாரணையின் போது தெரியவந்தது. காரணம் காவல்துறையினர் அசோகா ஹோட்டலுக்கு சென்று விசாரித்ததில் கோயம்புத்தூரைச் சேர்ந்த எந்த சினிமாக்காரரும், வாசு குறிப்பிட்ட சமயத்தில் ஹோட்டலில் தங்கவில்லை என்று தெரியவந்தது).
மேலும், வாசு தன்னுடைய வாக்குமூலத்தில், சம்பவம் நடந்த அன்றைய தினத்தில் எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆரை மேற்சொன்ன காரணத்துக்காக அவரைச் சந்திக்கவேண்டுமென்று பலமுறை கேட்டிருந்ததாகவும், எம்.ஜி.ஆர் தேர்தல் பிரசாரத்துக்குச் சென்று காலம் தாழ்த்தி திரும்பியதால், ராதா மிகுந்த எரிச்சலும் கோபமும் கொண்ட மனநிலை கொண்டிருந்ததாகவும் தெரிவித்தார்.




மேலும் வாசு தெரிவித்ததாவது, ‘எம்.ஜி.ஆர் எங்கள் இருவரையும் வரவேற்றார். பின்னர் எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் சினிமா சம்பந்தமான விஷயங்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்தனர். பேசிக் கொண்டிருந்தவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. என்னுடைய தொழிலை எம்.ஜி.ஆர் நாசம் செய்துவிட்டார் என்று கூறியபடியே கோபத்துடன் எழுந்து எம்.ஆர்.ராதா வெளியே செல்ல முற்பட்டார். பின்னர் எம்.ஆர்.ராதா தன்னுடைய வேட்டியில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் அருகில் இருந்த எம்.ஜி.ஆரைச் சுட்டார். துப்பாக்கியிலிருந்து வெளிப்பட்ட குண்டு எம்.ஜி.ஆரின் இடது காதை உரசிக்கொண்டு போய் அவருடைய தொண்டையில் பாய்ந்தது. சம்பவத்தை நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்த நான் எம்.ஆர்.ராதாவின் மீது பாய்ந்து, எம்.ஆர்.ராதா மேலும் துப்பாக்கியால் சுடாமல் தடுக்க முயற்சி செய்தேன். ஆனால் அதற்குள்ளாக எம்.ஆர்.ராதா தன்னைத் தானே கழுத்திலும், நெற்றிப்பொட்டிலும் சுட்டுக்கொண்டார்.’
எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா சுட்டதற்கு இரு காரணங்கள் சொல்லப்படுகின்றன.


1. எம்.ஜி.ஆருக்கும், எம்.ஆர்.ராதாவுக்கும் இடையே நிகழ்ந்த தொழில்முறை போட்டி. எம்.ஆர்.ராதாவுக்குத் திரைப்பட வாய்ப்புகள் குறைந்து போயின. அதற்கு காரணம் எம்.ஜி.ஆர் தான் என்று ராதா நினைத்தது.


2. பெரியார் தன்னுடைய 72 வது வயதில், தன்னுடன் பல மடங்கு வயதில் சிறியவரான மணியம்மையை திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணத்துக்கு யோசனை கூறியவர் ராஜாஜி. பிராமணரான ராஜாஜியின் யோசனையைக் கேட்டு பெரியார் மணியம்மையை திருமணம் செய்து கொண்டார் என்ற காரணத்தை முன்வைத்து, அண்ணாதுரை மற்றும் ஈ.வி.கே சம்பத் ஆகியோர் பெரியாரின் திராவிட கழகத்தை விட்டுப் பிரிந்து தனியே திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தனர். கருணாநிதி, எம்.ஜி.ஆர் ஆகியோரும் அண்ணாவை பின்பற்றி, பெரியாரை விட்டு விட்டு திராவிட முன்னேற்ற கழகத்தில் சேர்ந்தனர். ஆனால் எம்.ஆர்.ராதா தொடர்ந்து பெரியாரின் விசுவாசியாகவே இருந்தார். திராவிட முன்னேற்ற கழகம், திராவிடர் கழகத்தைப் போல் இல்லாமல் தேர்தல் அரசியலில் இறங்கியது.
1957 ஆம் ஆண்டிலிருந்து, காங்கிரசை எதிர்த்து நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க போட்டியிட்டது. சுமார் 10 ஆண்டுகளுக்குத் தேர்தலை சந்தித்தபோதும் திமுகவால் தமிழ்நாட்டில் காங்கிரசை பதவியிலிருந்து இறக்க முடியவில்லை.



1967 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட தேர்தல்களில் தி.மு.க, காங்கிரசை வழக்கம்போல் எதிர்த்தது. ஆனால் பெரியாரின் திராவிடர் கழகம் காங்கிரசை ஆதரித்தது. எம்.ஆர்.ராதாவும் காங்கிரஸ் தலைவர் காமராஜரும் நெருங்கிய நண்பர்கள். எம்.ஆர்.ராதா காங்கிரஸ் ஜெயிக்கவேண்டும் என்று நினைத்தார். தி.மு.கவுக்கு எதிராக பிரசாரம் செய்தார். தி.மு.க சார்பாக பரங்கிமலைத் தொகுதியில் போட்டியிட்ட எம்.ஜி.ஆரால் காமராஜருக்கு ஆபத்து ஏற்படும் என்று நினைத்தார். அரசியலில் எம்.ஜி.ஆருக்கும் எம்.ஆர்.ராதாவுக்கும் இடையே காழ்ப்புணர்ச்சி இருந்ததன் காரணமாகத்தான் எம்.ஜி.ஆரை, எம்,ஆர்.ராதா சுட்டார் என்ற கருத்தும் சொல்லப்பட்டது.

 எது எப்படியோ, எம்.ஜிஆரை அவருடைய இல்லத்தில் வைத்தே கைத்துப்பாக்கியால் சுட்டார் எம்.ஆர். ராதா. பின்னர் தன்னை தானே சுட்டுக் கொண்டார். எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆரை சுட்ட பிறகு சுட்டாச்சு சுட்டாச்சு என்ற பிரபலமான வசனத்தையும் பேசியிருக்கிறார். குண்டு காயங்களுடன் இருந்த இருவரும் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். முதல் உதவி அளிக்கப்பட்ட பிறகு இருவரும் அரசுப் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இருவரும் உயிர் பிழைத்துக்கொண்டனர்.



 எம்.ஜி.ஆரின் மீது துப்பாக்கிச் சூடு நடந்ததை அறிந்து மக்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். எம்.ஜி.ஆர் சார்ந்திருந்த தி.மு.கவினருக்கும், எம்.ஆர்.ராதா ஆதரவு திராவிடர் கழகத்தினருக்கும் இடையே மோதல் வெடிக்கும் என்று அறிந்த அரசு, சென்னையில் 15 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. அப்படியிருந்தும் காவல் நிலையங்கள் மீது கற்கள் வீசப்பட்டன. பரங்கிமலையில் இருந்த எம்.ஆர்.ராதாவின் தோட்டம் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. வன்முறையில் ஈடுபட்ட கும்பலை, காவல்துறை கண்ணீர் புகை வீசியும் லத்தித் தாக்குதல் நடத்தியும் கலைத்தது.



துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றதையடுத்து, காவல்துறை வழக்கு பதிவு செய்தது. எம்.ஆர்.ராதாவைக் கைது செய்து விசாரணை நடத்தியது. எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆரை கொலை செய்ய முயன்றதாகவும், பின்னர் எம்.ஆர்.ராதா தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றதாகவும் காவல்துறை எம்.ஆர்.ராதா மீது சைதாப்பேட்டை மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. பெரிய வழக்குகளை விசாரிக்க மாஜிஸ்டிரேட்டுக்கு அதிகாரம் இல்லாத காரணத்தால், அவர் வழக்கை செங்கல்பட்டு அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்தார். வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், தமிழகத்தில் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் தி.மு.க அமோக வெற்றிபெற்றது. இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. ஏன் தி.மு.கவே கூட எதிர்பார்க்கவில்லை. அண்ணாதுரை கூட நடந்து முடிந்த தேர்தல்களில் சட்டசபைக்காகப் போட்டியிடவில்லை, நாடாளுமன்றத்துக்குத்தான் போட்டியிட்டார்.



தமிழகத்தில் மூன்று முறை (சுமார் 10 ஆண்டுகள்) முதலமைச்சராக இருந்த காமராஜர், 1967ம் ஆண்டு நடக்கவிருந்த தேர்தல் சமயத்தில், ஒரு கார் விபத்தில் காயம் அடைந்து திருநெல்வேலி மருத்துவமனையில் அனுமதி பெற்று சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார்.



அங்கு பத்திரிக்கையாளர்கள் அவரைப் பேட்டி எடுத்தபோது, தான் மருத்துவமனையில் படுத்துக் கொண்டே தேர்தலில் வெற்றி பெறுவேன் என்று பேட்டி கொடுத்தார். ஆனால் நடந்தது வேறு. காமராஜர், தான் போட்டியிட்ட விருதுநகர் தொகுதியில், தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.கவைச் சேர்ந்த பி.சீனிவாசன் என்ற இளைஞரிடம் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார். தேர்தலுக்கு முன்னர் தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருந்த பக்தவச்சலமும் கூட தோல்வியைத் தழுவினார். தமிழகத்தில் காங்கிரசின் ஆட்சி, ஒரளவுக்கு ஊழல் இல்லாமல் நல்ல முறையில்தான் நடந்தது. இருப்பினும் 1967 தேர்தலில் காங்கிரஸின் தோல்விக்குக் காரணம், ஆட்சி செய்தவர்களுக்கும் மக்களுக்கும் இடையேயான இடைவெளிதான்.
புதிய ஆட்சி அமையவிருந்த தருணத்திலேயே, மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையேயான இடைவெளி குறையத் தொடங்கியது. 1967 தேர்தலில் வெற்றி பெற்று தி.மு.கவினர் பதிவியேற்கும் தருவாயில், சென்னையில் கோட்டையில் மக்கள் பெரும் திரளாகத் திரண்டனர். அண்ணாதுரை முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். கருணாநிதி பொதுப்பணித் துறை அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். எம்.ஜி.ஆரும், தான் போட்டியிட்ட பரங்கிமலைத் தொகுதியில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். (எம்.ஜி.ஆரை, எம்.ஆர்.ராதா சுடுவதற்கு முன்னர், எம்.ஜி.ஆரின் செல்வாக்கு மக்களிடையே சரிந்திருந்தது என்றும், துப்பாக்கியால் சுடப்பட்ட பிறகு அவருக்கு மக்களிடையே பெரிய அனுதாபமும், ஆதரவும் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது).



தேர்தலில் எம்.ஜி.ஆர் வெற்றி பெற்றாலும், அண்ணாதுரையின் ஆட்சியில் எம்.ஜி.ஆர் எந்தவித மந்திரிப் பதவியையும் வகிக்கவில்லை.இந்திய சுந்தரத்துக்குப் பிறகு, தமிழகத்தில் காங்கிரஸ் அல்லாத புதிய கட்சியின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த அதே சமயத்தில் செங்கல்பட்டு அமர்வு நீதிமன்றத்தில் எம்.ஜி.ஆரை, எம்.ஆர்.ராதா சுட்ட வழக்கு விசாரிக்கப்பட்டுவந்தது. அவ்வழக்கை விசாரித்தவர் நீதிபதி திரு. லட்சுமணன். அரசுத் தரப்பில் ஆஜரானவர்கள் அரசு குற்றவியல் வழக்கறிஞர்கள், பி.ஆர். கோகுலகிருஷ்ணன் (இவர் பின்னாளில் குஜராத் தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்தார்) மற்றும் பி.இராஜமாணிக்கம். எம்.ஆர்.ராதா தரப்பில் ஆஜரானவர்கள் பிரபல வழக்கறிஞர் மோகன் குமாரமங்களம். (இவர் இந்திரா காந்தி பிரதமராக இருந்த சமயத்தில் மத்திய அமைச்சரவையில் பங்கு வகித்திருந்தார்), மூத்த வழக்கறிஞர்கள் என்.டி.வானமாமலை மற்றும் என்.நடராஜன்.



எம்.ஆர்.ராதாவின் மீது அரசு தரப்பில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் இவை.


1) எம்.ஜி.ஆரை கொலை செய்ய முயன்றது (இ.பி.கோ – பிரிவு 307);


 2) தற்கொலை முயற்சி (இ.பி.கோ – பிரிவு 309);


 3) உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்தது (ஆயுதச் சட்டம் – பிரிவு 25) மற்றும் ;


4) உரிமம் இல்லாத துப்பாக்கியை வைத்து சட்டவிரோதமான காரியத்தில் ஈடுபட்டது (ஆயுதச் சட்டம் – பிரிவு 27).



96 நாள்கள் விசாரணை நடைபெற்றது. 69 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். வழக்கு விசாரணையின் போது அரசுத் தரப்பில் பின்வரும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.


எம்.ஜி.ஆர், எம்.ஆர்.ராதா இருவரும் வெப்லி ஸ்காட் .420 காலிபர் (ஒரு குழல் துப்பாக்கியின் உட்புற குறுக்களவு விட்டம்) வைத்திருந்தனர். இருவரும் தத்தம் துப்பாக்கிகளை பி.ஆர் அண்டு சன்ஸ் (P.ORR & Sons) நிறுவனத்திலிருந்து, 1950 ஆம் ஆண்டு வாங்கியிருக்கின்றனர். அதுவும் ஒரே நாளில். இருவரின் துப்பாக்கி உருளைகளும் (Cylinders) ஒரே மாதிரியானவை. எம்.ஜி.ஆர் தன்னுடைய துப்பாக்கியை பயன்படுத்த தேவையான உரிமத்தை, அரசிடம் பெற்று புதுப்பித்து வந்திருக்கிறார். ஆனால் ராதா தன் துப்பாக்கியை பயன்படுத்த வழங்கப்பட்ட உரிமத்தை புதுப்பிக்கவில்லை.


துப்பாக்கியை பயன்படுத்தும் உரிமைக்காலம் முடிந்தபிறகு துப்பாக்கியை வைத்திருக்கக்கூடாது, அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால் எம்.ஆர்.ராதா அதைச் செய்யவில்லை. மேலும் உரிமம் இல்லாத துப்பாக்கியை குற்றத்துக்காக பயன்படுத்தியிருக்கிறார். எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆரை கொலை செய்யவேண்டும் என்ற நோக்கத்துடன் அவரது இல்லத்தில் சந்தித்திருக்கிறார். தன்னுடைய துப்பாக்கியால் சுட்டிருக்கிறார். பின்னர் எம்.ஆர்.ராதா தற்கொலை செய்து கொள்ளும் பொருட்டு தன்னைத் தானே சுட்டுக்கொண்டுள்ளார்.



எம்.ஜி.ஆரை கொலை செய்ய முயற்சி செய்ததற்குத் தூண்டுதலாக (Motive) இருந்தது, எம்.ஜி.ஆர் மீதிருந்த அரசியல் காழ்ப்புணர்ச்சி. மேலும் துப்பாக்கிச் சூடு நடந்த சமயத்தில் எம்.ஆர்.ராதாவுக்கு நிறைய பணமுடை இருந்தது (சுமார் 7 லட்சம் ருபாய் வரை கடன் இருந்தது என்பதற்கான ஆதாரங்கள் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டன).அதே சமயத்தில், எம்.ஜி.ஆர் நடிப்புத் தொழிலில் உச்சத்தில் இருந்தார். எம்.அர்.ராதாவுக்கு, எம்.ஜி.ஆரின் மீது தொழில்முறைப் போட்டி, பொறாமை இருந்தது. மேலும் எம்.ஆர்.ராதா தற்கொலை செய்து கொண்டதற்குக் காரணம் தியாகி பட்டம்தான் என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது.



எம்.ஆர்.ராதா தரப்பில் கீழ்கண்ட வாதங்கள் முன்வைக்கப்பட்டன.




1. எம்.ஜி.ஆருக்கும் எம்.ஆர்.ராதாவுக்கும் தீவிர அரசியல் கருத்து வேறுபாடுகள் நடைபெறும் அளவுக்கு எம்.ஜி.ஆருக்கு தி.மு.க-வில் கொள்கைப்பிடிப்போ, செல்வாக்கோ இல்லை.



2. எம்.ஜி.ஆர் தான் எம்.ஆர்.ராதாவை சுட்டார் . சம்பவ இடத்துக்கு எம்.ஆர்.ராதா கொண்டு வந்திருந்த மஞ்சள் பையில் எம்.ஜி.ஆரின் ஆள்கள் தான் வெடிக்காத இரண்டு தோட்டாக்களைப் போட்டிருக்கவேண்டும்.



3. எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் ஒருவரிடமிருந்து ஒருவர் துப்பாக்கியை பிடுங்குவதற்காக சண்டையிட்டனர். அந்த சண்டையில்தான் எம்.ஜி.ஆருக்கு குண்டடிப்பட்டது. எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆரை வேண்டுமென்றே சுடவில்லை.



4. சம்பவத்தின் போது எம்.ஜி.ஆருக்கும் எம்.ஆர்.ராதாவுக்கும் இடையே நடந்த மோதலில் எம்.ஆர்.ராதாவுக்குக் காயம் ஏற்பட்டது. அந்த காயத்தின் காரணமாக எம்.ஆர்.ராதாவின் ரத்தம் எம்.ஜி.ஆரின் சட்டையில் படிந்தது. ஆனால் சம்பந்தப்பட்ட எம்.ஜி.ஆரின் சட்டை துவைக்கப்பட்டு, அதிலிருந்த ரத்தக்கறை யாருடையது என்று கண்டுபிடிக்க முடியாமல் அழிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக எம்.ஜி.ஆரிடம் குறுக்கு விசாரணை செய்யப்பட்டபோது, எம்.ஜி.ஆருக்கு ரத்த வகைகளைப் பற்றித் தெரியுமா என்று கேள்வி கேட்கப்பட்டது. அந்த கேள்விக்கு எம்.ஜி.ஆர் தெரியாது என்று பதிலளித்தார். உடனே வழக்கறிஞர் எம்.ஜி.ஆர் நடித்து வெளிவந்திருந்த நாடோடி திரைப்படத்தின் ஒரு காட்சியில் ரத்த வகைகளைக் கொண்டு திரைக்கதையில் திருப்பம் கொண்டுவந்திருந்ததை சுட்டிக்காட்டினார்.



5. சம்பவத்துக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி வாசுவிடம் இருந்தது. அதை அவர் வழக்கறிஞரின் ஆலோசனையை கேட்டுவிட்டுதான் காவல்துறையிடம் ஒப்படைத்திருக்கிறார். இதில் ஏதோ உள் நோக்கம் இருக்கிறது.



6. எம்.ஆர்.ராதா பிரபல நாடக நடிகர். அவர் நாடகங்களில் நடிப்பதால் மாதந்தோறும் அவருக்கு 50,000 ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது. அதனால் அவர் கடன்பட்டார் என்று அரசு தரப்பில் சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாது.


7. எம்.ஆர்.ராதா சம்பவத்துக்குப் பிறகு காவல்துறைக்கு தான் கைப்பட எழுதிக் கொடுத்ததாகச் சொல்லப்படும் ‘எனது முடிவு’ என்ற தலைப்பு கொண்ட அறிக்கை உண்மையாக எம்.ஆர்.ராதாவால் எழுதப்படவில்லை. (எம்.ஆர்.ராதா அந்த அறிக்கையில், கொள்கைக்காகவும் கட்சி நலனுக்காகவும் தற்கொலை தாக்குதல் நடத்தினாலும் தகும் என்று குறிப்பிட்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது). எம்.ஆர்.ராதா கையெழுத்து அடங்கிய வெற்று காகிதத்தில், காவல்துறை தங்களுக்குத் தேவையான விவரங்களை பதிவு செய்து அதை எம்.ஆர்.ராதா கொடுத்த வாக்குமூலமாக ஜோடித்திருக்கிறார்கள்.

 எம்.ஆர்.ராதா வழக்கறிஞர்கள் முன் வைத்த வாதத்துக்கு அரசு தரப்பில் மறுவாதம் வைக்கப்பட்டது.



1. ஒரு குற்றம் நடைபெறும்போது, அதைப் பார்த்த நேரடி சாட்சிகள் இல்லாத சமயத்தில், சந்தர்ப்ப சூழ்நிலை சாட்சிகளை வைத்து குற்றத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில்தான், குற்றமிழைத்தவருக்கு குற்றம்புரிவதற்கு தூண்டுதல்கள்/காரணங்கள் என்ன என்பதைப்பற்றி அலசிஆராயவேண்டும். எம்.ஆர்.ராதாதான் எம்.ஜி.ஆரை சுட்டிருக்கிறார் என்று நிரூபிக்கப்பட்டதால், எம்.ஆர்.ராதா என்ன காரணத்திற்காக எம்.ஜி.ஆரை சுட்டார் என்பது அவசியமற்றதாகிவிடுகிறது.



2. துப்பாக்கி மற்றும் வெடிக்கும் போர்க்கருவிகளில் நிபுணர் (Fire-arms expert), தன்னுடைய சாட்சியத்தில் எம்.ஜி.ஆரின் தொண்டையில் பாய்ந்த குண்டு எம்.ஆர்.ராதாவின் துப்பாக்கியிலிருந்து வெளிவந்தது என்று தெரிவித்திருக்கிறார். மேலும் மாநிலத் தடயவியல் ஆய்வுக்கூடத்தின் இயக்குனர் தன்னுடைய ஆய்வறிக்கையில், எம்.ஆர்.ராதாவின் தலையிலிருந்தும் கழுத்திலிருந்தும் எடுக்கப்பட்ட குண்டுகள் எம்.ஆர்.ராதாவின் துப்பாக்கியிலிருந்து சுடப்பட்டவை என்று தெரிவித்திருக்கிறார். நீதிமன்றத்தில் சாட்சி கூறிய மேற்படி நிபுணர், சம்பவத்துக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை வேட்டி கட்டிக்கொண்டு வரும் ஒருவரால் தன்னுடைய இடுப்பில் வைத்து மறைத்து எடுத்து வர முடியும் என்று தெரிவித்தார்.



3. குற்றம் விளைந்த சமயத்தில் எம்.ஜி.ஆருக்கும் எம்.ஆர்.ராதாவுக்கும் துப்பாக்கியை பிடுங்குவதில் சண்டை ஏற்பட்டிருந்தால், அந்த துப்பாக்கியை எம்.ஆர்.ராதா பிடுங்கியவுடன் எம்.ஜி.ஆர் குனிந்திருப்பார். தன்னை காப்பாற்றிக்கொள்ள முயற்சித்திருப்பார். இது நடக்கவில்லை. மாறாக எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்ட காயத்தை வைத்து பார்க்கும் பொழுது, துப்பாக்கி மிக அருகாமையிலிருந்து எந்த போராட்டமும் நடைபெறாத சமயத்தில் வெடித்திருப்பது தெரிகிறது.



4. எம்.ஆர்.ராதாவையும் வாசுவையும், எம்.ஜி.ஆர் தன் வீட்டுக்கு வந்த போது இரு கைகளையும் கூப்பி வரவேற்றிருக்கிறார். அவர் பாலியஸ்டரால் ஆன உடையை உடுத்தியிருந்தார். எம்.ஆர்.ராதாவைப்போல் ஷால் எதுவும் அணியவில்லை. உடம்பில் துப்பாக்கியை ஒளித்து வைத்திருந்தால், பாலியஸ்டர் துணி மெலிதாக இருப்பதால் அதன் வழியாகத் தெரிந்துவிடும்.



5. தான் எந்த துப்பாக்கியால் சுடப்பட்டோம் என்று எம்.ஆர்.ராதாவால் சொல்லமுடியவில்லை. அதாவது எம்.ஜி.ஆர் தன்னை முதலில் சுட்டார் என்று எம்.ஆர்.ராதா சொல்லியிருந்தார். ஆனால் எம்.ஜி.ஆர் வைத்திருந்ததாகச் சொல்லப்படும் துப்பாக்கியால் தன்னை சுட்டாரா அல்லது தன்னிடமிருந்த துப்பாக்கியைப் பிடுங்கி சுட்டாரா என்று எம்.ஆர்.ராதாவால் சொல்லமுடியவில்லை.



6. எம்.ஜி.ஆரும் வாசுவும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்தச் சந்தர்ப்பத்தில்தான் எம்.ஆர்.ராதா, தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து எம்.ஜி.ஆரை சுட்டிருக்கிறார்.



7. எம்.ஆர்.ராதாவுக்கு ஏற்பட்ட காயத்தைப் பார்க்கும்போது, அவர் தனக்குத்தானே அதை ஏற்படுத்திக்கொண்டார் என்பது தெரிகிறது.
8. எம்.ஜி.ஆருக்கும் எம்.ஆர்.ராதாவுக்கும் சண்டை நடந்தது என்று நிரூபிக்கப்படாததால், எம்.ஆர்.ராதாவுக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது என்று சொல்வதும், மேலும் அந்த காயத்தினால் ஏற்பட்ட ரத்தம் எம்.ஜி.ஆரின் சட்டையில் படிந்தது என்று சொல்வதும் ஏற்கத்தக்கது அல்ல. சட்டை துவைக்கப்பட்டது, அதனால் முக்கிய ஆதாரம் அழிந்துவிட்டது என்று சொல்வது ஏற்கத்தக்கது அல்ல.



9. வாசு முக்கிய சாட்சி. ஒரே சாட்சி. அவர்தான் குற்றம் நடந்த இடத்தில் இருந்திருக்கிறார். குற்றத்தைப் பார்த்திருக்கிறார். குற்றத்துக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியும் அவர் கைக்கு கிடைத்திருக்கிறது. எம்.ஜி.ஆர் மற்றும் எம்.ஆர்.ராதா இரண்டு பேரும் குண்டடிப்பட்டு காயத்துடன் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டனர். அவர்களுக்கு என்னவாகும் என்று யாரும் சொல்ல முடியாத நிலை. இந்தச் சந்தர்ப்பத்தில், எங்கே போலீஸ் தன்னை குற்றவாளியாக கருதிவிடுமோ என்ற எண்ணம், எந்த சராசரி மனிதனுக்கும் ஏற்படுவது சகஜம்தான். தனக்கு ஏற்பட்ட பயத்தின் காரணமாகத்தான், வாசு துப்பாக்கியை காவல் துறையினருக்கு ஒப்படைக்காமல், வழக்கறிஞரின் ஆலோசனையைக் கேட்டு நடக்க முடிவெடுத்திருக்கிறார். இதில் ஏதும் தவறில்லை.



10. எம்.ஆர்.ராதா நாடகத்தில் நடித்து மாதம் 50,000 ரூபாய் சம்பாதித்திருந்தால், அவருக்கு சுமார் 7 லட்சம் ரூபாய்க்கு கடன் எப்படி ஏற்பட்டிருக்கமுடியும்? கிடைத்த ஆதாரங்களை வைத்துப் பார்க்கும்போது, எம்.ஆர்.ராதாவுக்கு பணத்தட்டுப்பாடு இருந்தது உறுதியாகிறது.



11. எம்.ஆர்.ராதாவுக்கு எம்.ஜி.ஆரின் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி இருந்திருக்கிறது, அதனால் எம்.ஜி.ஆரைப் பற்றி நாத்திகம் என்ற பத்திரிகையில் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். எம்.ஜி.ஆர் இரண்டு லட்சம் ரூபாய் செலவு செய்து, குண்டர்களை வைத்து காமராஜரைக் கொலை செய்ய முயற்சி செய்ததாக எம்.ஆர்.ராதா தவறாக நினைத்திருக்கிறார்.



ஆனால் எம்.ஜி.ஆருக்கு அப்படிப்பட்ட எண்ணங்களெல்லாம் இல்லை. இன்னும் சொல்லப்போனால் காமராஜரின் பிறந்தநாள் விழாவுக்குச் சென்ற எம்.ஜி.ஆர், காமராஜரைப் பாராட்டியிருக்கிறார். அதையறிந்த எம்.ஜி.ஆரின் கட்சிக்காரர்கள், எதிர் கட்சி பிரமுகரை எம்.ஜி.ஆர் பாராட்டியது தவறு என்றும் கூறியிருக்கிறார்கள்.



அரசுத் தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, எம்.ஆர்.ராதா தான் குற்றவாளி என்று முடிவு செய்து அவருக்குத் தண்டனை வழங்கினார். 262 பக்கங்கள் கொண்ட தன்னுடைய தீர்ப்பில், எம்.ஆர்.ராதாவுக்கு பின்வருமாறு தண்டனைகளை வழங்கினார்.


1. எம்.ஜி.ஆரைக் கொலை செய்ய முயற்சித்ததற்காக ஏழு ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை;

2. தற்கொலை முயற்சி செய்ததற்காக 6 மாத சிறை தண்டனை;

3. உரிமம் இல்லாத துப்பாக்கி வைத்திருந்ததால் 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை;

4. துப்பாக்கியை வைத்து சட்ட விரோதமான நடவடிக்கையில் ஈடுபட்டதால் 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை.


அனைத்து தண்டனைகளையும் எம்.ஆர்.ராதா ஒரே சமயத்தில் அனுபவிக்கவேண்டும் என்றும் தீர்ப்பில் வெளியிடப்பட்டிருந்தது. மேலும் நீதிபதி தன்னுடைய தீர்ப்பில், எம்.ஆர்.ராதாவின் வயதை கருத்தில் கொண்டுதான் அவருக்கு குறைந்த பட்ச தண்டனை வழங்கப்படுகிறது என்றும் தெரிவித்தார். எம்.ஆர்.ராதாவுக்கு அப்போது வயது 56.


தீர்ப்பைக் கேட்க நீதிமன்றத்தில் பெரும் கூட்டம் கூடியிருந்தது. தீர்ப்பு வெளியிடப்பட்ட பிறகு எம்.ஆர்.ராதாவைக் காவல் துறையினர் கைது செய்து கூட்டிச்சென்றனர். குற்றம் நடந்த தினத்திலிருந்து தீர்ப்பு வழங்கப்படும் தினம் வரை எம்.ஆர்.ராதா ஜாமீனில் வெளிவரவில்லை.

செங்கல்பட்டு அமர்வு நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, எம்.ஆர்.ராதா சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால் சென்னை உயர் நீதிமன்றம் வழக்கத்துக்கு மாறாக, முன் அறிவிப்பின்றி வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு எம்.ஆர்.ராதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை உறுதி செய்தது. இதையடுத்து எம்.ஆர்.ராதா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம், எம்.ஆர்.ராதாவுக்கு வழங்கப்பட்ட தண்டனை காலத்தை, 7 ஆண்டுகளிலிருந்து 3 1/2 ஆண்டுகளாக குறைத்தது.



இந்த வழக்கில் அனைவரும் வியந்த விஷயம் என்னவென்றால், எம்.ஆர்.ராதா தன்னுடைய துப்பாக்கியால் எம்.ஜி.ஆரை அருகிலிருந்து சுட்டிருக்கிறார், பின்னர் தன்னையும் நெற்றிப்பொட்டில் சுட்டுக்கொண்டிருக்கிறார். ஆனால் ஆச்சர்யம்! இருவர் உயிருக்கும் ஒன்றும் ஆகவில்லை. இது எப்படி என்று எம்.ஜி.ஆர் உள்பட அனைவரும் வியந்தனர்.
காரணம் இதுதான். எம்.ஆர்.ராதாதாவின் துப்பாக்கியிலிருந்து வெளிவந்த குண்டுகள் தன்னுடைய வீரியத்தை (Muscle Velocity) இழந்திருந்தன. குறிப்பிட்ட இலக்கை வேகமாகச் சென்று தாக்கும் திறனை குண்டுகள் இழந்திருந்தன. அதனாலதான் உயிர் போகும் அளவுக்கு பெருத்த சேதம் எதையும் ஏற்படுத்தமுடியவில்லை.



எம்.ஆர்.ராதா குற்றத்துக்குப் பயன்படுத்திய துப்பாக்கியையும் தோட்டாக்களையும் 1950ம் ஆண்டு வாங்கியிருக்கிறார். குற்றம் நடந்த ஆண்டு 1967ல். இந்த இடைப்பட்ட 17 ஆண்டுகளில் எம்.ஆர்.ராதா தன்னுடைய துப்பாக்கியையும் தோட்டாக்களையும் தன்னுடைய மேஜையின் டிராவில் வைத்திருந்தார். எம்.ஆர்.ராதாவின் டிரா ஒவ்வொரு முறை திறக்கப்படும்போதும், தோட்டாக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்கின்றன. எனவேதான் தோட்டாக்கள் தன்னுடைய வீரியத் தன்மையை இழந்துவிட்டன. தடயவியல் நிபுணர் டாக்டர் சந்திரசேகர் இவ்வாறு ஒரு புத்தகத்தில் தெரிவித்திருக்கிறார்.



தண்டனைக் காலம் முடிந்த பிறகு, எம்.ஆர்.ராதா நிறைய நாடகங்களில் நடித்தார், சில திரைப்படங்களிலும் நடித்தார். எம்.ஜி.ஆரின் தொண்டையில் பாய்ந்த குண்டை மருத்துவர்கள் ஆரம்ப காலத்தில் அகற்ற விரும்பவில்லை. குண்டை தொண்டையிலிருந்து அகற்றுவதை விட, அகற்றாமல் விட்டு விடுவதே உசித்தம் என்று மருத்துவர்கள் எண்ணினார்கள். (மாவீரன் நெப்போலியனுக்கு போர்க்களத்தில் சண்டை இடும்போது குண்டடிபட்டு உடலில் குண்டு தைத்தது. அதை அவருடைய மருத்துவர்கள் அகற்றவில்லை. நாளடைவில் அந்தக் குண்டு நெப்போலியனின் உடலில் கரைந்து விட்டது).
எம்.ஜி.ஆர் ஒருமுறை தும்மியபோது, கழுத்தில் நரம்புகளுக்கு இடையே பதுங்கியிருந்த குண்டு நகர்ந்து தொண்டைக்கு வந்துவிட்டது. பின்னர் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் எம்.ஜி.ஆரின் தொண்டையிலிருந்து குண்டை அகற்றினார்கள். இந்த அறுவை சிகிச்சையால் எம்.ஜி.ஆரின் குரல் பாதிக்கப்பட்டது.



1973 ஆம் ஆண்டு பெரியார் மறைந்த இறுதிச் சடங்கில் எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் கலந்து கொண்டனர். ஒருவரை ஒருவர் பார்த்து பேசினர். நட்பு பாராட்டினர். எம்.ஆர்.ராதா தான் செய்த குற்றத்திற்காக, எம்.ஜி.ஆரிடம் மன்னிப்பு கேட்டதாக ஒரு செய்தியும் உண்டு.


1979 ஆம் ஆண்டு எம்.ஆர்.ராதா மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டு, தன்னுடைய 72 வது வயதில் மரணமடைந்தார்.



1972 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர், தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்டார். பின்னர் அவர் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியைத் தோற்றுவித்தார். 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அ.இ.அ.தி.மு.க அமோக வெற்றிபெற்று தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்தது. எம்.ஜி.ஆர், தமிழகத்தின் முதல்வரானார். அவர் அடுத்தடுத்து நடந்த தேர்தல்களிலும் வெற்றி பெற்று, தொடர்ந்து பத்து ஆண்டுகள் முதல்வராக இருந்தார். 1987 ஆம் ஆண்டு சிறுநீரகம் பாதிக்கப்பட்டு உயிர் துறந்தார்.



Thanks : tamilpaper.net


S.P. சொக்கலிங்கம்

Tuesday, May 29, 2012

வலிசுமந்து ஒரு வரம்:









மாரி:

நீ ஒரு நிஜ ஹீரோ!







சில நாட்களுக்கு முன் தமிழகத்தில் பள்ளி இறுதி வகுப்புத் தேர்வு (SSLC) முடிவுகள் பரபரப்பாக வெளியாகிக்கொண்டிருந்த நேரம். தேர்வு எழுதிய மாணவர்கள் எல்லாம் தங்களது மதிப்பெண்களை அறிந்துகொள்ள இணையத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போது, தன் தாயார் சண்முகத்துடன் முதல் நாள் மூட்டிவைத்த கரிமூட்டதில் இருந்து கரி அள்ளிக்கொண்டிருந்தான் மாரி. அவனும் இந்த முறை SSLC தேர்வு எழுதியவன்தான். ஆனால் முடிவுகளைத் தெரிந்துகொள்ள அவன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.



“மாரி… யாரோ உன்னத் தேடி வந்திருக்காங்க…” என்று அவனுடைய மூன்றாவது அக்கா பானுப்ரியா சொல்ல, அள்ளிப்போட்டுக்கொண்டிருந்த கரியை அப்படியே வைத்துவிட்டு வந்தவனை, அவனுடைய பள்ளி நண்பர்கள் வாரி அணைத்துத் தூக்கிக்கொண்டனர். “மாரி! நீ 490 மார்க் எடுத்திருக்கடா! District First டா…” என்று கூறி அவனைத் தூக்கிக் கொண்டாடியபோது, எதுவும் புரியாவிட்டாலும் தன் மகன் ஏதோ சாதித்துவிட்டான் என்று உணர்ந்து கண்கள் கலங்கி நின்றார் மாரியின் தாய் சண்முகம்.



மாரி என்கின்ற மாரிச்செல்வம், இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட மூக்கையூர் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவன். அந்த மாவட்டத்து மக்கள் பலருமே கூடக் கேள்விப்பட்டிருக்காத ஒரு குக்கிராமத்தில் இருந்து படித்துக்கொண்டே, அந்த மாவட்டத்தின் முதல் மாணவனாக மதிப்பெண் பெற்ற அவனை, அடுத்த நாள் வந்த பத்திரிகைகள் அனைத்தும் மாவட்டச் செய்திகளில் பட்டியல் இட்டன. ஆனால் அவன் பரீட்சை எழுதியபோது அவனது குடும்பச் சூழ்நிலையை அறிந்தவர்கள் கொஞ்சம் வியந்துதான் போனார்கள். சோதனை மேல் சோதனையைத் தாங்கிக்கொண்டு, ஓர் ஏழைச் சிறுவனால் இவ்வளவு மதிப்பெண்கள் வாங்கமுடியுமா என தங்களுக்குள் கேள்வி கேட்டுக்கொண்டவர்கள் பலர்.

PAD நிறுவனத்தில் Christian Children Fund of Canada (CCFC) எனும் கிராமப்புறக் குழந்தைகளுக்கான உதவித்திட்டத்தில் உதவி பெற்றுவந்த மாரி, +1 சேர நிறுவன உதவி கேட்டு வந்தபோதுதான் PAD பணியாளர்களுக்கே, தேர்வெழுதிய சமயத்தில் மாரி சந்தித்த துயரங்கள் தெரியவந்தது.
மூக்கையூர் கிராமம்தான் மாரியின் சொந்த ஊர். எட்டாவது வரை அந்த ஊரில் உள்ள புனித யாக்கோபு நடுநிலைப் பள்ளியில் படிப்பை முடித்த மாரி, மேற்கொண்டு படிக்க அங்கிருந்து வேறு பள்ளிக்குச் செல்லவேண்டியிருந்ததால்,அதிலுள்ள கஷ்டங்களை உணர்ந்தவனாய்,



“அம்மா, நான் மேல படிக்கல. அப்பா கூடத் துணைக்குக் கடலுக்குப் போறேம்மா” என்று கூறினான். அதற்கு மேல் அவனைப் பேசவிடாமல் தடுத்த மாரியின் அப்பா முனியசாமி, “வேணாம் மாரி, நீ போய்ப் படி. அப்பா எல்லாத்தையும் பார்த்துகிறேன். நீ நல்லாப் படிக்கணுமென்னுதான் PAD-ல உனக்கு உதவி வாங்கித் தாராங்க… நல்லாப் படிக்கணும்யா. இப்படியெல்லாம் யோசிக்கக்கூடாது. உங்கக்கா பார்வதி நல்லாப் படிச்சாலும், எட்டாவதுக்கு மேல படிக்க உள்ளூர்ல ஸ்கூல் இல்லாததால படிக்க முடியாமப் போச்சுது. நீயாவது உன்னோட அக்கா வீட்டில போய் இருந்துகொண்டு மேல படிக்கப் பாரு. எப்படியாவது நம்ம வீட்டில நீயாவது படிச்சு நல்லாப் பிழைக்கணும். இதுதான் அப்பாவோட ஆசை” என்றார். அப்பாவின் வார்த்தைக்கு மறுப்பு ஏதும் கூறாமல் அவன் அக்காவின் வீடு இருக்கும் இராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டைக்கு அருகில் உள்ள வேலாயுதபுரம் என்னும் கிராமத்துக்குச் சென்று, அங்கிருந்த புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளியில் தனது படிப்பைத் தொடர்ந்தான் மாரி.



மாரியின் அப்பா முனியசாமி ஒரு கடல் கூலித் தொழிலாளி. யாரேனும் கடலுக்குப் போவதற்கு மேலதிகமாக ஆட்கள் தேவைப்பட்டால் முனியசாமியும் போவார். அது இல்லாத நாட்களில் சிறு வலையை எடுத்துக்கொண்டு கரையோர மீன்பிடித் தொழில் செய்வார். அவருக்கு மாரியைப் பற்றிப் பல கனவுகள் இருந்தன. தனது குடும்பத்தில் ஒருவராவது படித்து முன்னேறி வரவேண்டும் என்று அவர் கனவு கண்டார்.


ஐந்து பெண் குழந்தைகள், இரண்டு ஆண் குழந்தைககளைக் கொண்ட பெரிய குடும்பம் அவருடையது. கடின உழைப்பும் ஒழுக்கமான வாழ்க்கையுமே அதீத வறுமை அந்தக் குடும்பத்தை அண்டவிடாமல் காத்தது. நான்கு பெண்களுக்கும், ஒரு மகனுக்கும் திருமணம் முடித்துவிட்டார். எஞ்சியிருப்பது மாரியும், இன்னொரு அக்கா பானுப்ரியாவும்தான். மாரியைப் படிக்க வைக்கவேண்டும், சொந்தமாக ஒரு வள்ளம் வாங்கவேண்டும் என்று தன்னுடைய கனவுகளை அடைய இரவும் பகலுமாயக உழைத்துக்கொண்டிருந்த முனியசாமிக்கு மூளையில் கட்டி வந்து பல வருடங்களாக அவதிப்பட்டு வந்தார்.



இந்த நிலையில் முத்துப்பேட்டையில் அக்கா வீட்டில் படித்துக்கொண்டிருந்த மாரி படிப்பில் கவனம் செலுத்தியதோடு விடுமுறை நாட்களில் அவன் அம்மாவுடன் சேர்ந்து கரிமூட்டம் அள்ளும் வேலைக்கும், மாமாவுடன் (அக்காவின் கணவர்) கடல் தொழிலுக்கும் சென்று குடும்ப பாரத்தையும் விரும்பிச் சுமந்தான். “மாரி, இப்படிப் படிச்சா நல்ல மார்க் எடுக்கமாட்ட! இதெல்லாம் விட்டுட்டு ஒழுங்காப் படிக்க பாரு” என்று அவனுடைய அக்கா முருகேஸ்வரி அவனைக் கட்டுப்படுத்தி வந்தார். முருகேஸ்வரி மாரியின் மூத்த அக்கா. அவருக்கும் மூன்று பெண் குழந்தைகள், ஓர் ஆண் குழந்தை. மாரியையும் தனது மகன் போலவே வளர்த்து வந்தார். வீட்டுக்கு மூத்த பெண் என்பதால் தன் தந்தை வீட்டின் அனைத்து நலன்களிலும் பங்கெடுத்துவந்தார். முருகேஸ்வரியின் கணவர் முனியனும் பரந்த மனம் படைத்தவர். இருவரும் சேர்ந்துதான் முருகேஸ்வரியின் சகோதரிகளின் திருமணங்களை முடித்து வைத்தனர்.



தேர்வுகள் எழுத இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில் மாரியின் தந்தை மூளையில் இருந்த கட்டி காரணமாக, சிகிச்சை ஏதும் பலன் அளிக்காமல் இறந்துபோனார். துவண்டுபோன மாரியை மீண்டும் பள்ளிக்குப் படிக்க அனுப்பப் பெரும் பாடு பட்டார் தாய் சண்முகம். அதன்பின் குடும்பச் சுமை முழுதும் தாய் சண்முகம் தலையில் விழ, அவரும் மகள் வீட்டில் இருந்து விறகு வெட்டச் செல்வது, கூலி வேலைக்குச் செல்வது, கரிமூட்டம் எனப் பல வேலைகளைப் பார்க்கத் தொடங்கினார். வறுமையின் மத்தியில் தன் படிப்பைத் தொடர்ந்த மாரி தேர்வு எழுதத் தயாராகிக்கொண்டிருந்தான்.
தேர்வு நாளும் வந்தது. முதல் இரண்டு தேர்வுகளையும் எழுதி முடித்து வந்த மாரியிடம், “பரீட்சை நல்லா எழுதிருக்கியா மாரி?” என அக்கா கேட்டார்.



“ஆமாக்கா. இன்னிக்கு English II பேப்பர். இனிதான் மேத்ஸ் பேப்பர் வரும். அதை நாளை மறுநாள் எழுதணும்” என்று பதில் சொல்லிக்கொண்டே அக்காவின் முகத்தைப் பார்த்த மாரிக்கு ஏதோ சரியில்லை என்று பட்டது. “என்னக்கா! என்னாச்சு?” என்று அவன் பதற, “ஒண்ணுமில்ல மாரி, நெஞ்சு கரிச்சிக்கிட்டே இருக்கு. அசதியா இருக்கு. சித்த நேரம் தூங்குனா சரியாயிரும்” என்றார். “சரிக்கா, நீ போய் தூங்குக்கா” என்ற மாரி தானே சோறு போட்டுச் சாப்பிட்டுவிட்டு படிக்கச் சென்றுவிட்டான்.



அன்று இரவு அவன் அக்காவுக்குக் கடுமையான நெஞ்சுவலி. ஏற்கெனவே இருதய அறுவை சிகிச்சை செய்திருந்த முருகேஸ்வரி, ஆஸ்பத்திரிக்குக் கொண்டுசெல்லும் வழியிலேயே இறந்துவிட கதறி அழுத மாரியை, “நாளைக்குப் பரீட்சை எழுதணும்… நீ நல்லாப் படிக்கணுமென்னுதான் உங்கக்கா ஆசைப்பட்டா” என்று அனைவரும் தேற்றினர். “மாரி, நீ போய் பரீட்சை எழுதிட்டு வா. அதுக்குப் பிறகு இறுதிச் சடங்கு வச்சுக்கலாம்” என அவன் மாமா கூறவும், அவர் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு, தன்னைத் தாயாக இருந்து பார்த்துக்கொண்ட சகோதரியின் பிணத்தருகே அழுதுகொண்டே படித்த மாரியை நினைத்து இப்போதும் கண்ணீர் வடிக்கிறார் அவன் தாய் சண்முகம்.”என்ன சார் மார்க் எடுத்தேன்.அம்மா மாதிரியிருந்த அக்கா சாவுக்கு அழக்கூட முடியாமல் பரீட்சைக்குப் படித்த பாவி சார்” என்று மாரி உடைந்து அழும் போது, நாமும் சேர்ந்து உடைய வேண்டிவருகின்றது.


அடுத்தநாள் அவன் பரீட்சை எழுதி முடித்துவிட்டு வரும்வரை அவனுடைய உறவினர்கள் காத்திருந்தனர். அவன் வந்ததும், அவனைக் கொண்டு அக்காவின் இறுதிச்சடங்குகளை நடத்தி முடித்தனர். சடங்குகள் அனைத்தும் முடிந்து, அடுத்த இரண்டு பரீட்சைகளையும் கனத்த இதயத்துடன் எழுதி முடித்தான் மாரி. பரீட்சைகள் முடிந்ததும் அம்மாவுடன் சேர்ந்து கரிமூட்டம் அள்ளும் வேலையில் இறங்கிவிட்டான்.



இந்த நிலையில்தான் அவனது தேர்வு முடிவுகள் வெளிவந்ததன.
அவனுடைய ஆசிரியர்கள், சக மாணவர்கள், அந்த ஊர் மக்கள் என் அனைவருக்குமே அவன் தேர்வு எழுதும்போது இருந்த நிலை நன்கு தெரியும். அப்படிப்பட்ட நிலையிலும் அவன் எடுத்த மதிப்பெண்கள் என்ன தெரியுமா? தமிழ் 95, ஆங்கிலம் 98, கணிதம் 100, அறிவியல் 99, சமூக அறிவியல் 98. சாதாரண நிலையில் இருக்கும் மாணவர்கள் இந்த மதிப்பெண்களை எடுக்கும்போதே ஆச்சரியப்படும் நமக்கு மாரியின் நிலையில் இருந்து பார்த்தால் பரிட்சையில் தேறுவோமா என்பதே சந்தேகம். அதிலும் அவனுடைய அக்காவின் இறுதிச் சடங்கன்று கணிதப் பரீட்சை எழுதி 100-க்கு 100 மதிப்பெண் பெற்றிருப்பதை என்னவென்று சொல்வது? மாரியுடன் சேர்ந்து பரீட்சை எழுதிய அவனுடைய அக்கா மகள் நிர்மலாவும் 423 மதிப்பெண்கள் எடுத்து நல்ல முறையில் தேர்ச்சி பெற்றிருக்கிறாள்.



இத்தனை இடர்களுக்கும் மத்தியில் தனது 10-வது வகுப்பை முடித்துவிட்டு +1 சேர இருக்கும் மாரிக்கு இன்னும் பிரச்னைகளும் துன்பங்களும் முடிந்தபாடில்லை. கடந்த சில வருடங்களாக மாரிக்கு ஓயாத தலைவலி. வறுமையும் அடுத்தடுத்து வந்த சோகச் சம்பவங்களும் உளவியல்ரீதியாக மாரியை மிகவும் பாதித்துள்ளது. தாங்கமுடியாத தலைவலியால் அவதியுறும் அவனை உள்ளூர் வைத்தியர்களிடம் காட்டியபோது பிரச்னை ஏதும் இல்லை எனச் சொல்லிவிட்டனர் கோயம்புத்தூரில் ஒரு மருத்துவரை அணுகி விசாரித்தபோது மாரியின் இருதயத்தில் பிரச்னை இருப்பதாகவும் அதைச் சரிசெய்ய சிறிது காலம் தேவை எனவும், அறுவை சிகிச்சை மூலம் அதைச் சரி செய்ய 21 வயதுவரை பொருத்திருக்கவேண்டும் என்றும் கூறியுள்ளனர்.


சிகிச்சைக்கு உதவ PAD தொண்டு நிறுவனம் உறுதி அளித்துள்ளது. அடுத்து Biology, Maths குரூப்பில் சேர்ந்து படிக்க விரும்பும் மாரி, இன்னும் எந்தப் பள்ளியில் சேர்வது, மேற்கொண்டு படிப்புக்கு என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருக்கிறான். அத்துடன் அவனுடைய தாய் சண்முகத்துக்கும் உடல்நிலை சரியில்லை. குடும்ப பாரம் முழுவதையும் சுமந்துகொண்டிருக்கும் மாமா முனியன் பற்றிய கவலையும் மாரியை அரிக்கிறது.



இப்படிப் பல இடர்களுக்கு மத்தியிலும், தன் மனவலிகளையும் உடல்வலிகளையும் தாங்கிக்கொண்டு தனது அடுத்த சாதனைக்குத் தயாராகி விட்டான் மாரிச்செல்வம்…


-'Mutur' Mohd. Rafi


Note:

"மன்னார் வளைகுடா வாழ்க்கை " எனும் தளத்தில் வெளியான கட்டுரைக்குறிப்பு இது.  இக்கட்டுரையை சாத்தியமுள்ள அனைத்துத் தளங்களுக்கும் எடுத்துச் செல்வதன்பொருட்டு இங்கே நன்றியுடன் மறுபிரசுரம் செய்யப்பட்டிருக்கிறது. இக்கட்டுரையை உங்களுக்குத் தெரிந்த அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் படிக்கக் கொடுங்கள். அல்லது விஷயத்தை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்..

சச்சின் டெண்டுல்கர் & சாலமன் பாப்பையா ...!








 Just for a Change!






சச்சின் டெண்டுல்கர் பட்டிமன்ற நடுவராகித் தீர்ப்புக் கூற சாலமன் பாப்பையா  bat  பிடித்து கிரிக்கட் ஆடினால் எப்படியிருக்கும்? நினைக்கவே வேடிக்கையாக இருக்கின்றதல்லவா...?

பார்த்துப் பழகிய கண்களுக்கு சிறு மாறுதல்கள் கூடப் பெரிதாகத்தானே தோன்றும்.


ஒரு குறிப்பிட்ட துறையிலே மிகுபுகழோடும் வெகுபரபரப்பாகவும் இருப்பவர்கள் அதனுடன் சிறிதும் சம்பந்தமில்லாத இன்னொரு துறையிலே ஆர்வமும் ஞானமும் இருந்தால் என்ன செய்வார்கள்...?

வேறு என்ன செய்வார்கள்? கவிதை எழுதுவார்கள்!
Ok..ok!  புகழின் உச்சியிலிருக்கும் ஒருவர் எழுதிய கவிதை இது.


வாசித்துவிட்டுச் சொல்லுங்கள்....





-'Mutur' Mohd. Rafi


Here you are...










"முதல் தீண்டலுக்கு உடல் சிலிர்த்து

வெட்கத்தில் புன்னகைத்து..

கடற்கரையில் காற்றுவாங்கி..

கைபிடித்துப் பரவசமாய் நடந்து..

கன்னத்தில் லேசாய் முத்தமிட்டு..

கைபேசியில் குறுஞ்செய்தியனுப்பி...

கண்களால் பேசிச்சிரித்து...

கால்கடுக்கக் காத்திருந்து...

காதுபிடித்து மெல்லத்திருகி...

கண்ணீரோடு கட்டியணைத்து..

கண்பொத்தி விளையாடி..

இடிக்குப்பயந்து தோளில் சாய்ந்து..

செல்லமாய் நெஞ்சில் சாய்ந்து...

பேசாமல் இருந்து தவிக்கவிட்டு...

கோயில்சுற்றி குளம்சுற்றி...

மழைரசித்து நனைகையில்...

துப்பட்டாவில் குடைவிரித்து...

புத்தகத்தில் கடிதம் மறைத்து...

மணிக்கணக்கில் தொலைபேசி..

அப்பாவின் அதட்டலுக்கு அஞ்சி..

'அவர் ரொம்ப நல்லவர்மா' என

அழுதுபுலம்பி அம்மாவிடம் சொல்லி...

ஒருவழியாய் வெற்றிகொள்கின்ற

காதல் திருமணங்கள்போல

இனிப்பதில்லை-

இன்டர்நெட்டில் தேடியலைந்து

பத்துக்குப்பத்து பொருத்தம் பார்த்து

பண்ணுகின்ற திருமணங்கள்!


-கமல்ஹாஸன்

Sunday, May 27, 2012

சிறுகதை: மூதூர் மொகமட் ராபி








நிழலாக சில நிஜங்கள்









ராஜீஸுக்கு இருப்புக் கொள்ளவில்லை.

இன்று மாலை ஸனீராவிடம் எப்படியாவது விசயத்தைச் சொல்லிவிட வேண்டுமென்று அவன் மனம் துடித்தது. இனிமேலும் அதைச் சொல்லவில்லை என்றால் அவன் எதற்காக ஸனீராவுக்கு அதுவும் அவள் வீட்டுக்கே சென்று பாடம் சொல்லித் தரச் சம்மதித்தானோ அந்த நோக்கமே வீணாகிவிடும்.

படுக்கையை விட்டு எழுந்தவன் நேரத்தைப் பாரத்ததும் சுறுசுறுப்பானான். டவலை எடுத்துக்கொண்டு சமையலறையில் ஏதோ வேலையாக இருந்த தன் தாயைக் கூப்பிட்டு டீ தர நினைவுபடுத்தி விட்டு கிணற்றடிக்குச் சென்றான்.


ராஜீஸ் இருபத்து மூன்று வயதை கடந்த மார்ச் மாதத்தில் முடித்திருக்கும் திடகாத்திரமான கெட்டிக்கார இளைஞன். குடும்பத்தில் ஒரே பிள்ளை. தந்தை உள்ளுர் பாடசாலையொன்றில் ஆசிரியராக இருக்கின்றார். ராஜீஸ் கண்டியிலுள்ள பிரபல கல்லூரியொன்றில் படித்து பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகியிருக்கின்றான். உயர்தரப்பரீட்சை எழுதிய பின்பு சில மாதங்கள் வரை கண்டியில் தனியார் நிறுவனமொன்றில் வேலைபார்த்துக் கொண்டிருந்தவன் ஊருக்கு வந்து ஒருமாதத்துக்கு மேலாகின்றது.

'ஆகாய வெண்ணிலாவே..தரைமீது வந்ததேனோ...அழகான..'  ஜேசுதாஸின் பாடல் ஒன்றுடன் கிணற்றடியிலிருந்து ஈரமாய் வந்த ராஜீஸை தாயின் குரல் இடை மறித்தது.

'தம்பி, இன்னைக்கும் பாடமா?'

'ஏம்மா ஏதும் வேலையிருக்கா?' எங்கே இன்று ஸனீராவைச் சந்திக்க முடியாமல் போய்விடுமோ என்ற தவிப்போடு கேட்டான் ராஜீஸ். இன்றைக்குத் தவறினால் அந்த விசயத்தைச் சொல்லவே முடியாமலாகிவிடும் என்பது அவன் தாய்க்கு எப்படித் தெரியும்?

'வேற ஒண்ணுமில்ல, உனக்கிட்ட சொல்ல மறந்திட்டனே..நேத்துக் காலைல அவ வந்தா..' என்று நிறுத்திய தாயை 'யார்' என்பது போல திரும்பிப் பார்த்தான்.

'அதுதான் தம்பீ, நம்ம ஸனீராட உம்மா! எப்பிடி நல்லாப் படிப்பிக்கிறானான்னு கேட்டேன். ஓ! இப்பதான் மகள் விஞ்ஞானப் பாடத்தை விரும்பிப் படிக்குது என்றா...'

'............'

'அது சரி, நீ என்ன.. படிப்பிச்சு முடிஞ்சா ஒரு நிமிசம் அவங்க வீட்ல நிக்கிறதில்லியாமே.. ஏன் தம்பி, கொஞ்ச நேரம் இருந்துதான் வாயேன்...மாஸ்டர் வாப்பாக்கிட்ட குறைபட்டாராம்' என்றவாறு டீயை நீட்டிய தாயிடம் ஏதோ சொல்ல வந்தவனுக்கு ஸனீராவிடம் தான் சொல்லப்போகும் விடயம் நினைவுக்கு வந்தது. பேசாமல் டீயைக் குடித்து விட்டு 'ட்ரெஸ்' செய்து கொண்டு சைக்கிளை வெளியிலெடுத்தான் ராஜீஸ்.


தூரத்தில் எங்கேயோ ஒரு குயில் விடாமல் கூவிக்கொண்டிருந்தது.
***







மாலை 6.30

'தாக்கவீதத் தொடரில் மேலேயுள்ள மூலகங்கள் கீழேயுள்ள மூலகங்களை அவற்றின் உப்புக் கரைசலிலிருந்து இடம்பெயர்க்கும்..விளங்கிட்டுதானே? ஆகவே  நாகம், செப்புச்சல்பேற்றுக் கரைசலில் செப்பை இடம்பெயர்க்கும்...சமன்பாடு எழுதுங்க'

ஸனீராவுக்குப் படிப்பித்துக் கொண்டிருந்தான் ராஜீஸ். ஸனீரா, அவன் கொடுத்த இரசாயனச் சமன்பாடுகளை எழுதிக்கொண்டிருந்தாள்.  கையிலிருந்த சோக் பீஸை யன்னலினூடாக எறிந்து விட்டு ஸனீராவின் அருகில் கதிரை ஒன்றை இழுத்துப்போட்டு அமர்ந்து அவள் எழுதுவதையே பார்த்துக் கொண்டிருந்தான் ராஜீஸ்.

ஸனீரா!


ராஜீஸின் தந்தையின் பால்ய நண்பரும் ஊரிலே குறிப்பிடக்கூடிய பசையுள்ள புள்ளிகளில் ஒருவருமான ஜமால் ஆசிரியரின் ஒரே மகள். பதினோராம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கின்றாள். நிறம் சற்றுக்குறைவானாலும் வசீகரமானவள்.

சிறுவயதிலிருந்தே ராஜீவ் வெளியூரில் படித்ததால் நெருங்கிய உறவினர்களைத் தவிர ஊரில் பலரை அவனுக்குத் தெரியாமலே இருந்தது. ஆனால் இப்போது ஊருக்கு வந்த ஒன்றரை மாதத்தில் அவனது தந்தையை பாடசாலை வேலையாக வீட்டிற்குத் தேடிவருகின்ற சிலரையாவது தெரிந்திருந்தது என்றே சொல்ல வேண்டும். இவ்வாறுதான் ஸனீராவின் தந்தை ஜமால் ஆசிரியரையும் அறிந்து கொண்டான் ராஜீஸ்.

ஜமால் ஆசிரியர் அடிக்கடி வீட்டுக்கு வருவார். அப்போதெல்லாம் ராஜீஸுடன் அன்பாகப் பேசிக் கொண்டிருப்பார். அவனது படிப்பு, எதிர்கால நோக்கம் பற்றியெல்லாம் மிகுந்த அக்கறையோடு கேட்பார். ராஜீஸின் தந்தையுடனான தனது இளமைக்கால நட்பு நெருக்கங்களையெல்லாம் விபரித்து இன்றும் அது இனிதாகத் தொடர்வது பற்றிப் பெருமையாகச் சொல்லுவார்.   அவன் வந்த ஒரு வாரத்திற்குள்ளே இரண்டு தடவை அவனைத் தன் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்திருக்கின்றார். அவன் தயங்கிய போதெல்லாம்,


'ராஜீஸ்! ஒரு மனிதர் நம்மை மதித்து வீட்டுக்கு அழைத்தால் அதைச் சந்தோசமாக  ஏற்க வேண்டும். அதுதான் பண்பு' என்ற தந்தையின் விருப்பத்திற்காக மறுக்காமல் சென்று வருவான். அப்போதெல்லாம் தனது தந்தையுடனான நட்பின் காரணமாகவே ஜமால் ஆசிரியர் தன்மீது அதிக அக்கறை  காண்பிப்பதாக எண்ணியிருந்தவனுக்கு அந்த அக்கறையின் உண்மையான காரணம் ஒருநாள் தெரியவந்தும் அதிர்ச்சியடைந்தான் ராஜீஸ்.


அவனால் அதை நம்பவே முடியவில்லை. அதன்பிறகு ஜமால் ஆசிரியர் வீட்டுக்கு வந்த போதெல்லாம் ராஜீஸ் முன்புபோல முகம் கொடுத்துப்பேச முடியாமல் சங்கடப்பட்டான். அவர் தந்தையைச் சந்திப்பதற்கு வரும்போதெல்லாம் மெல்ல நழுவி விடுவான். அப்படியும் எதிர்பாராமல் ஒருநாள் அகப்பட்டுக்கொண்டான்.

'என்ன தம்பிய காணவே கிடைக்குதில்ல...'

'ஓ! அது..வந்து..சும்மா கொஞ்சம் வேலை' இழுத்துச் சமாளிக்க முயன்றான். உடனடியாக 'ரெடிமெட்' பொய் வராத தன் நேரத்தை நொந்து கொண்டான்.

'அப்படியா! இல்ல மகன் வீட்ல சும்மாதான் இருக்குன்னு  தம்பிட வாப்பா சொன்ன மாதிரி ஞாபகம்...'  அவர் விடுவதாக இல்லை.

ராஜீஸுக்குப் பற்றிக் கொண்டு வந்தது. காட்டிக் கொள்ளாமல், 'இன்னும் கொஞ்ச நாள்ல யுனிவசிட்டி தொடங்கிடுவாங்க...அதுவரைக்குமதான்... இப்பிடி...'

'ஆ! தம்பி ஸயன்ஸ்தானே? நம்மட மகளுக்கு...ஸனீராவைத் தம்பிக்குத் தெரியும்தானே? ஸயன்ஸ்தான் கொஞ்சம் பிரச்சினையாயிருக்கு. சும்மாயிருக்கிற நேரம் கொஞ்சம் வீட்ட வந்தா...'

அவனுக்குப் புரிந்தது.

'ஏன்தான் வாப்பா இப்படியெல்லாம் சொல்லி மாட்டி விடுறாங்களோ?' மனதிற்குள் தந்தையைக் கோபித்துக் கொண்டிருந்தவனுக்கு மின்னலடித்தது போல அந்த 'ஐடியா' மூளையில் பளிச்சிட்டது. தன் திறமையைத் தானே உள்ளுர மெச்சிக் கொண்டான். அவன் பதிலுக்காகக் காத்திருந்தவரிடம் மலர்ந்த முகத்துடன் சம்மதித்தான்.

அப்படித் தொடங்கியதுதான் இந்தத் தனி வகுப்பு.


'என்ன  ஸனீரா, உன்ட ஸேருக்கு யோசனை எங்கேயோ போயிட்டுது போல?'
திடுக்கிட்டு சுயநினைவுக்குத் திரும்பியவன் எதிரே ஸனீராவின் தாய் டீயுடன் சிரித்துக் கொண்டே நின்பதைக் கண்டான். சிரித்தவாறு டீயை வாங்கி மேசையில் வைத்தான்.

'ஆறிடப் போகுது குடிச்சிட்டு யோசிங்க.. ஸனீரா எடுத்துக் குடு!'  என்று அவர் திரும்பிப் போனதும் டீயைத் தானே எடுத்துக் குடித்து விட்டுக் கப்பை வைத்தான் ராஜீஸ். ஸனீரா தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தாள். வெளியே இலோசாக மழைதூறிக் கொண்டிருந்தது.

'ஸனீரா!'

எழுதிக் கொண்டிருந்தவள் தலையை நிமிர்த்தி, 'என்ன?' என்பதுபோல புருவங்களை உயர்த்தினாள். அவள் பெரிய விழிகளில் தெரிந்த பளபளப்பு அவனை ஒரு கணம் பேசவிடலாம் வசீகரித்தன. மேசையில் ஆறிக்கொண்டிருந்த அவளின் டீ கப்பைக் காட்டினான். அவள் புன்னகைத்தவாறே தனது டீயை எடுத்துக் கொண்டாள்.

'ஸனீரா, நான் ஏற்கனவே சொன்னபடி இன்னையோட இந்த க்ளாஸ்ஸை முடிப்போம். நான் படிப்பித்த பகுதிக்குள்ளே ஏதாவது விடுபட்டிருக்குமா? இருந்தா கேளுங்க.. ஏனென்னடா இனி எனக்கும் கெம்பஸ் தொடங்கிவிடும்....'

அவன் முடிக்கவில்லை.

'ஒரு நிமிசம் இருங்க!' என்றுவிட்டு தன் அறைக்குள் நுழைந்தவள் சற்று நேரத்தில் வெளியே வந்து ஒரு அழகான புத்தகமொன்றை நீட்டினாள்.

' அட! என்ன இது?' புரியாமல் பார்த்தவனிடம், 'இது வெளிநாட்டிலிருந்து கிடைத்த நோட்புக். உஙகளுக்கு என்ட சின்ன ஒரு கிப்ட்!' என்று தயங்கியவாறு சொன்னாள் ஸனீரா.

'ஓ! தேங்க்யூ! வெரிமச்' என்று அதை மேலோட்டமாகப் பார்த்துவிட்டு மேசையில் வைத்துவிட்டு, 'அதிருக்கட்டும் ஸனீரா, உங்களிடம் ஒரு முக்கியமான விசயம் பேசவேணும்.' என்று யாராவது வருகிறார்களா என்று சுற்றிலும் பதட்டமாகப் பார்த்தான் ராஜீஸ்..

ஸனீரா கெட்டிக்காரி மட்டுமல்ல, பழகுவதற்கும் இனிமையானவள். இத்தனை நாளும் விஞ்ஞானப்பாடம் சொல்லித்தர ஒத்துக்கொண்டதற்கு காரணமே இன்னும் சிறிது நேரத்தில் ராஜீஸ்  அவளிடம் சொல்லப்போகும் விடயம்தான். ஆனாலும் அதை அவன் முழு ஈடுபட்டுடன் செய்ய முடிந்ததே அவளது திறமையினால்தான்.

'எ.. என்ன விசயம்?' ராஜீஸின் பதட்டம் அவளையும் தொற்றிக் கொண்டது.

'ஸனீரா, நீங்க எனக்கு ஒரு பெரிய உதவி செய்யவேணும்...செய்வீங்களா?'

'உதவியா? என்ன உதவி..' அவள் விழிகள் ஆச்சரியத்தால் மலர்ந்தன.

'அது..வந்து..சொல்றேன்! ஆனா உங்க வாப்பா, உம்மா, வேற யாருக்கிட்டயும் இதைச் சொல்லக் கூடாது..முடியுமா?'

'ஆங்.. சரி! அது என்ன உதவி?'
'ஸனீரா, உங்க வாப்பா,  உங்களுக்கு என்னைச் சம்பந்தம் பேசியிருக்கும் விசயம் தெரியும்தானே?'

அவள் பதில் கூறாமல் தலையைக் குனிந்திருந்தாள். 'ஆனா ஸனீரா, நான் கண்டியில ஒரு கேளை விரும்பிட்டிருக்கிறேன்...'


தலைகுனிந்திருந்த ஸனீரா சட்டென நிமிர்ந்தாள்.

'அவளைத்தான் நான் மெரி பண்றதாகவும் முடிவும் பண்ணிருக்கிறேன்... ஆனா இங்க ஊருக்கு வந்த பிறகுதான் உங்களை எனக்கு முடிவு செய்ய நம்ம இருவர் வீட்டிலும் ஏற்பாடு நடந்திருப்பது தெரிய வந்தது. ஆனா..'

அவள் விழிகளில் கண்ணீர் குளமாய்த் ததும்பியது. அவளது உதடுகள்
எதையோ சொல்லத் துடித்துக் கொண்டிருக்க யாராவது வந்து விடப் போகின்றார்களே என்ற பயத்தில் தவித்துக் கொண்டிருந்தான் ராஜீஸ்.

'ஸனீரா, ஐம் ஸோ ஸொறி! அழாதிங்க! யாராவது வந்து பாத்தா ரெண்டு பேரையும் பிழையா நினைக்கப் போறாங்க! உங்களைப் பிடிக்காததாலதான் இப்படிச் சொல்றேனென்டு நினைக்காதீங்க..அங்க கண்டியில அந்த கேள் என்மேல உயிரையே வச்சிருக்கா..என்னால அவளுக்கு எதாவது ஏமாத்தம் வந்தா தாங்கவே மாட்டா...!'

'இந்த விசயத்தை எங்க வீட்ல சொன்னா என்னை இவ்வளவு படிக்க வச்சு ஆளாக்கின எங்க உம்மா வாப்பா தாங்க மாட்டாங்க. நான் இல்லையென்டா உடனே இன்னொரு நல்ல மாப்பிள்ளையைக் கூட பேசுகிற வசதி உங்க வாப்பாக்கிட்ட இருக்கு.! ஆனா என்ன நம்பியிருக்கிற அந்த ஏழைப் பிள்ளைக்கு அந்த வசதியில்லாமில்ல, ஸனீரா! அதனால நீங்களே என்னைப் பிடிக்கயில்ல என்று சொன்னால் பெரிய உதவியாக இருக்கும். எனக்காக இல்லாட்டாலும்  தகப்பனில்லாத ஒரு ஏழைப் பிள்ளைக்காகவாவது இந்த உதவியை..'

அதற்குள் யாரோ வருவது போலிருக்கவே அவசரஅவசரமாக கண்களைத் துடைத்துக் கொண்டு புத்தகத்தைப் புரட்டினாள் ஸனீரா.

'என்ன ஸனீரா? பாடமெல்லாம் முடிஞ்சுதா?' என்றவாறு வீட்டுக்குள்ளே வந்தார் ஸனீராவின் தந்தை ஜமால் ஆசிரியர். மகளின் வகுப்பு இன்றுடன் நிறைவடைவது அவருக்கும் தெரிந்திருந்தாலும் ஒரு சம்பிரதாயத்துக்காகக் கேட்டுவைத்தார்.

'ஓம், எல்லாமே முடிஞ்சுட்டு வாப்பா!'  ராஜீஸைப் பார்த்துக் கொண்டே பதில் கூறினாள் ஸனீரா.

சிறிது நேரம் அவரோடு பேசிக் கொண்டிருந்து விட்டு ராஜீஸ் விடைபெற்றுக் கொண்டான்.
 ***





 'உம்மா! உம்மா!'

கூப்பிட்டுக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்த ராஜீஸ் கையிலிருந்த விஞ்ஞானப்பயிற்சிப் புத்தகத்தையும் ஸனீரா தந்த நோட்புக்கையும் மேசையில் எறிந்தான். எறிந்த வேகத்தில் அந்த நோட்புக்கினுள்ளிருந்து ஒரு சிவப்புநிறக் கவர் ஒன்று எகிறி விழுந்தது. அதைச் சந்தேகமாகய் எடுத்துப் பார்த்தான்.


அது ஒரு கடிதவுறை. அதன்மேல் அவனது பெயர் எழுதப்பட்டிருந்தது. அவசர அவசரமாய் பிரித்துப் படித்தான்.

அன்புள்ள ராஜீஸ்,

என்னை மன்னிக்கவும். என் படிப்பில்  இத்தனை நாளாக உதவி புரிந்து வரும் உங்களிடம் நான் என் வாழ்க்கையிலும் ஒரு மாபெரும் உதவியை எதிர்பார்க்கின்றேன். தவறாக எண்ண வேண்டாம்.

எங்கள் வீட்டில் எனக்கு உங்களைத் திருமணம் பேசுவதற்கு ஆயத்தம் புரிகின்றார்கள். இது உங்களுக்கும் தெரிந்திருக்கலாம். ஆனால் நான் வேறு ஒருவரை விரும்புகின்றேன். அவர் இப்போது ஊரில் இல்லை. வெளிநாட்டிலிருக்கின்றார். ஒருவரை மனதார விரும்பி விட்டு இன்னொருவரை மணப்பது சரியா? உங்களைப் பிடிக்கவில்லை என்று நான் ஒரு பெண்பிள்ளை என்பதால் எங்கள் வீட்டில் சொல்ல முடியாது. சொன்னால் வாப்பா கொன்றே விடுவாங்க.. ஆனால் நிங்க நினைத்தால் சொல்ல முடியும்.

உங்களை மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்துப் பழகும் ஒரு சகோதரனாக எண்ணி இந்த உதவியைக் கேட்கின்றேன். எனக்காகச் செய்யுங்கள். இந்தக் கடிதத்தை நோட்புக்கினுள் வைத்திருக்கின்றேன். என்னைக் காட்டிக் கொடுத்துவிட வேண்டாம். உங்கள் உதவியை உயிருள்ளவரை மறக்க மாட்டேன்.

இப்படிக்கு

ஸனீரா.


ராஜீஸுக்கு சிரிப்பதா அழுவதா என்று புரியவில்லை.




-மூதூர் மொகமட் ராபி
(1990.12.18)

Note:

இதுதான் நான் எழுதி -முழுமையாக எழுதி முடித்து - வெளிவந்த முதல் சிறுகதை என்று நம்புகின்றேன். இப்போது வாசித்துப் பார்க்கும்போது கற்றுக்குட்டித்தனமாக இருக்கின்றது. இது 1991 அல்லது 1992 ல் இலங்கை வங்கி அலுவலர் திரு. பக்கீர்த்தம்பி  ஆசிரியராக இருந்து வெளியிட்ட 'முத்தொளி' சஞ்சிகையில் பிரசுரமானது - 'Mutur' Mohd.Rafi

Thursday, May 24, 2012

www.kinniya.net ஆன்மீகம் : ஒரு கருத்துரை!








ஆன்மீகச்சூழல் Vs தொலைக்காட்சி





அன்புள்ள நண்பர்களே,


கிண்ணியா நெற் www.kinniya.net இணையத்தளத்திலே கடந்த May 20ம் திகதி ஆன்மீகம் எனும் பகுதியில் 'ஆன்மீகச் சூழல் அற்றுப்போகும் முஸ்லீம் வீடுகள்' எனும் ஒரு சிறு கட்டுரை வெளியாகி இருந்தது.  மௌலவி எம்.எஸ். எம். இம்தியாஸ் ஸலஃபி என்பவர் அதனை எழுதியிருந்தார். அவர் தனது ஆக்கத்தில் இன்றுள்ள நமது முஸ்லீம் இல்லங்களிலே பொழுதுபோக்குச் சாதனங்களின் குறிப்பாக தொலைக்காட்சியின் பாவனையால் ஆன்மீகச்சூழல் அற்றுப்போய்க்கொண்டிருப்பதைப் பற்றிய தனது விசனத்தையும் தெரிவித்திருந்தார்.

இது ஒரு முக்கியமான விடயம் என்பதால் இதுபற்றிய எனது பார்வையையும் சில கருத்துரைகளையும் அவரது ஆக்கத்தின் கீழேயுள்ள கருத்துரைப் பெட்டியிலே தெரிவிக்க முயன்றேன். ஆனால் அது கைகூடவில்லை. பலமுறை முயன்றும் தொழினுட்பக் காரணங்களாலோ அல்லது வேறு காரணங்களாலோ கருத்துரை அதிலே வெளியாக மறுப்புத் தெரிவித்துக் கொண்டிருந்தது.

வழமையாக கிண்ணியாநெற் தளத்திலே வெளியாகும் என்னைக் கவர்ந்த ஆக்கங்கள் மற்றும் செய்திகளுக்கு விமர்சனம் எழுதிவருகின்றவள் நான். இதுவரை அதற்கு எதுவித மறுப்பும் ஏற்பட்டதில்லை என்பதானால் உடனடியாக வேறுவித காரணங்களை நினைக்க என்னால் முடியவில்லை. சரி, தொழினுட்ப 'கோளாறு' மட்டுமே காரணமாக இருக்கவேண்டும் என்று நம்பத்தான் நானும் விரும்புகின்றேன்.


அதனால் அந்தக் கட்டுரைக்குரிய எனது கருத்துரையை சிறகுகளில் இடுகின்றேன். இரண்டையும் படிப்பவர்களுக்கு உண்மை மிக அழகாகப் புரியும்.


இதோ...

-Jesslya Jessly


Opinion: www.kinniya.net



ன்புள்ள மௌலவி அவர்களே,


அஸ்ஸலாமு அலைக்கும்!

ஒரு மௌலவி என்ற வகையிலே நல்ல பல கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறீர்கள். மிகவும் சந்தோசம். ஒருவீட்டிலே ஆன்மீகச்சூழல் நிலவ வேண்டும் எனும் தங்களுடைய நோக்கத்தையும் அதற்குத் தொலைக்காட்சி உட்பட இன்றைய பொழுதுபோக்குச் சாதனங்கள் அனைத்தும் இடையூறாக இருக்கின்றன என்ற ஆதங்கத்தையும் வரவேற்கின்றேன். ஆனால்.... அதைச் சொல்வதற்கு நீங்கள் பயன்படுத்தியிருக்கும் சில உதாரணங்களில்தான் எனக்குச் சில முரண்பாடுகள் உண்டு.

ஒரு வீட்டிலே இஸ்லாமியச் சூழல் நிலவாமைக்கு அந்த வீட்டில் வாழும் தனித்தனி மனிதர்கள் மட்டுமே பொறுப்பாக முடியுமா மௌலவி அவர்களே? நீங்கள் குறிப்பிட்டிருப்பதுபோல குடும்பத்தலைவி மட்டுமோ அல்லது பிள்ளைகள் மட்டுமோ தனியே காரணமாக இருக்க முடியாது. அந்த மொத்தக் குடும்பமும் மட்டுமன்றி சுற்றயல் சமூகமும்தான் காரணமாக இருக்க வேண்டும்.

முதலில் குடும்பத்தைப் பார்ப்போமே....


நமது முஸ்லீம் சமூக அமைப்பிலே குடும்பத் தலைவனாகிய ஆணுக்கு மனைவியைக் கட்டுப்படுத்தி வழி நடாத்தக்கூடிய அபரிமிதமான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதை நீங்கள் அறியாதவரல்ல. அவ்வாறிருக்கும்போது ஒரு மனைவியும் அவரது பிள்ளைகளும் தனியே தங்களது சொந்த விருப்பத்தின் பெயரிலே மட்டும் தொலைக்காட்சி வானொலி நிகழ்ச்சிகளை நுகர்ந்து வழிகெட்டுப்போக முடியுமா? அதற்கு ஏதோ ஒருவிதத்தில் குடும்பத் தலைவனான ஆண்களும்தானே காரணமாகவும் ஊக்குவிப்பாளர்களாகவும் இருக்கின்றார்கள்..?


 eg: கேபிளுக்கு இணைப்பு எடுத்துத் தருவதிலிருந்து...அதைத் தொடர்ந்து பேணுவது வரை யார் மறைமுகக் காரணிகளாக இருக்கின்றார்கள்?


பெண்களையும் பிள்ளைகளையும் குறித்து  தொலைக்காட்சி நாடகங்கள், சினிமாப் படங்கள், பாடல்கள் மட்டும் குறிப்பிட்டுள்ள நீங்கள் வீட்டுத் தலைவராகிய ஆண்கள் நாளெல்லாம் விழுந்து கிடக்கும் கிரிக்கட் விளையாட்டு நிகழ்ச்சிகளையும் இலட்சாதிபதி சூது நிகழ்ச்சிகளையும் சொல்லியிருக்கலாமே..?


அதை மட்டும் எப்படி மிகவும் கவனமாகத் தவிர்த்து விட்டீர்கள்... மௌலவி அவர்களே?

வரவேற்பறையில் அமர்ந்தவாறு கீழே விழுந்து கிடக்கும் பத்திரிகையை எடுப்பதற்குக்கூட சமையலறைக்குள் வேலையாக இருக்கும் பெண்களைக் கூப்பிடுவதுதானே நமது ஆண்கள் பெரும்பாலோனோரின் இயல்பே. இவ்வாறான ஆண்களினால்தான் வீட்டிலிருக்கும் பெண்கள் அல்லும் பகலும் உழைத்துக் களைத்துப் போகின்றார்கள் .


இதிலே அன்றாடம் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கோ இரட்டை வேலை. சமைப்பது, வீட்டை ஒழுங்கு செய்வது, பிள்ளைகளைக் கவனிப்பது என்று விட்டிற்குள்ளேயே உழைத்து... உடலாலும் மனதாலும் களைத்துப்போகும் அவர்களுக்கு ஓய்வும் பொழுதுபோக்கும் தேவைப்படுவது இயல்பானது. (ஒரு வண்டில் மாட்டுக்குக்கூட கட்டாயம் ஓய்வு தேவை)


இந்தத் தேவையைப் பூர்த்தி செய்துவருவது யார்? பெரும்பாலும் நீங்கள் ஷைத்தான் என்று விளிக்கும் அந்த முட்டாள் பெட்டியான தொலைக்காட்சிதான். இப்போது சொல்லுங்கள் பெண்களை இந்த நிலைமைக்கு மறைமுகமாக உள்ளாக்குவதிலே.. மனைவிக்கும்...தாயாருக்கும்.. சகோதரிகளுக்கும் சிறு உதவிகூடப் புரியாமல் வரவேற்பறையி.லே பழிகிடக்கும் அல்லது ஊரை வெட்டியாகச் சுற்றும் உங்களுடைய ஆண்களுக்குப் பங்கில்லையா மௌலவி அவர்களே?


மனைவியின் உழைப்பை உறிஞ்சி வாழுகின்ற ஆண்களுக்கு உள்ளுர ஒருவகையான குற்றவுணர்ச்சி இருக்கும்.  அவளுடைய நியாயமான பொழுதுபோக்குக்கு இடம்கொடுக்காது விட்டால் என்னவாகும் தங்கள் "நிலைமை" என்பதை அவர்கள் நன்கு புரிந்தே வைத்திருக்கின்றார்கள். இதனால்தான் நீங்களெல்லாம் எத்தனை ஆன்மீகச் சிந்தனைகளை மேற்கோள்களுடன் எடுத்துரைத்தாலும் கேட்பதோடு அவை நீர்த்துப் போகின்றன.

இனி சமூகத்தைப் பார்த்தால்...

இன்றுள்ள சகலருமே சகல வாகன சாதனங்களுடனும் வசதியாக வாழ்பவர்களைத்தானே மதிக்கின்றார்கள்...?  இபாதத்தாளிகளான ஏழைகளையும் பசையுள்ள ஏமாற்றுப்பேர்வழிகளையும் ஒன்றாக வைத்தால் யாரை இந்த சமூகம் உயர்வாகப் பார்க்கின்றது..? இதற்கு ஆன்மீகவாதிகள் நீங்கள் கூட விதிவிலக்கு கிடையாது.

எறியப்படும் எலும்புத்துண்டுக்கே வாலாட்டுபவர்கள் தொடைக்கறி கிடைத்தால் விடுவார்களா என்ன?


எனவே, முதலிலே இதற்குரிய சமூகப் பொருளாதாரக் காரணிகளைக் கண்டறியுங்கள். அவற்றுக்கு ஏதாவது மாற்றுவழி உண்டா என்று பார்த்து அவற்றை நடைமுறைப்படுத்துவது பற்றி உருப்படியாகச் சிந்தியுங்கள்!

அல்லது உண்மையை பட்டை உரியச் சொல்லும் என்னைப் போன்றவர்களைச் சபியுங்கள்!

Tuesday, May 22, 2012

விதியின் விதி...?






கடவுளையே

காப்பாற்றும்

விதி!





ன்றாட வாழ்விலே நாம் அதிகமாகப் பயன்படுத்தும் வார்த்தைகளின் பட்டியலில் விரும்பியோ விரும்பாமலோ 'விதி' யும் உள்ளது. நமது தனிமனித வாழ்க்கை முதல் பொதுவிடயங்கள் வரை தீர்மானிப்பது விதி என்கிறார்கள். அதாவது அடுக்களை முதல் அரசியல் மாற்றங்கள் வரை அணுவின் அசைவுமுதல் அண்டங்களின் நகர்வு வரை சகல விடயங்களும் இவ்வாறுதான் நிகழ வேண்டும் எங்கோ ஏற்கனவே தீர்மானித்த வைக்கப்பட்டுள்ளதாகச் சொல்வதுதானே விதி என்றால் அதுபற்றி ஒருமுறை பார்த்து விடலாம். பின்வரும் கட்டுரை ஒரு தமிழ் இணையத்தளத்தில் வெளியானது. வாசித்துவிட்டு விதிபற்றிய உங்கள் சொந்தக் கருத்துக்களோடு உரசிப்பார்த்துக்கொள்ளுங்கள்

-Jesslya Jessly


The essay:







முதலில், ஒன்றை தெளிவுபடுத்தி விடலாம்.


விதி என்பது இழப்புகளிலிருந்து மனிதனை ஆற்றுப்படுத்தும் கருவி என்று ஆத்திகர்களும், சுய தேடல்களை மறுத்து மனிதனை முடக்குகிறது என்று நாத்திகர்களும் கூறுகிறார்கள். இதுவரை விதி குறித்து செய்யப்பட்ட விவாதங்கள் இந்த வகைப்பட்டதாக மட்டுமே இருக்கின்றன. விதி என்பது சாராம்சத்தில் மனிதனுக்கு சிந்தனை இருப்பதையே மறுக்கிறது. பதிலெழுதும் யாரும், ஆய்வுக்(!) கட்டுரைத் தொடர் எழுதும் யாரும் இந்த அம்சத்தைக் கணக்கிலெடுக்கவே இல்லை.



தொடக்கத்திலிருந்து நாம் எழுதிக் கொண்டிருப்பது இதையேதான். விதி இருப்பதை நம்புகிறீர்களா? அது முழுமையாக, ஒரே மாதிரியாக நம்புவதாக இருந்தாலும், இரண்டாகப் பிரித்து தனித்தனியாக நம்புவதாக இருந்தாலும் அதன் பொருள் மனிதன் சிந்திக்கும் திறனுடையவன் என்பதை மறுப்பது தான். ஆனால் எந்த மதவாதியாலும் மனிதன் சிந்திக்கிறான் என்பதை மறுக்க முடியாது.


அன்று  அவர்கள் விதி குறித்து விவாதிக்காதீர்கள் என்று பின்வாங்கியதற்கும், இன்று விதி குறித்த தெளிவான அறிவை இறைவன் மனிதனுக்கு வழங்கவில்லை என்று மதவாதிகள் பசப்புவதற்கும் இதுவே காரணம். இதற்காகத்தான் அறிவியல் தொடங்கி தர்க்கவியல் ஈறாக அனைத்தையும் இழுத்து போர்த்திக் கொள்ள துடிக்கிறார்கள்.



அறிவு என்பது என்ன?


தன் புலன்களின் மூலம் பெறும் அனுபவங்களை தொகுத்து தேவைப்படும் இடங்களில் பயன்படுத்திக் கொள்வது தான். சிந்தனை என்பது அறிவின் வலிமையால் கற்பனையான முன்முயற்சிகளை சோதனை செய்து பார்ப்பது. மனிதன் இன்று பெற்றிருக்கும் அனைத்து வகை முன்னேற்றங்களும் அறிவின் வலிமையாலும் சிந்தனையின் வீரியத்தாலும் தான். இந்த வலிமையும், வீரியமும் எந்த எல்லையையும் எட்டிவிடும் சாத்தியக் கூறுகளை உள்ளடக்கியதா? இந்த பேரண்டத்தின் விரிவுடன் மனிதனை ஒப்பு நோக்கினால் எந்த எல்லையையும் அடைவது சாத்தியமா? எனும் கேள்விக்கு சாத்தியமில்லை என்றே பதில் கூற முடியும். அதேநேரம் இது மனிதனின் பலவீனம் அல்ல.

இதையே இன்னொரு கோணத்தில் பார்க்கலாம். மனிதனின் அறிவு என்பது அவனுடைய தேவைகளோடு பிணைந்தது. எது குறித்த தேவை மனிதனுக்கு இல்லையோ அது குறித்த அறிதல் மனிதனுக்கு அவசியமில்லை. இதுவரை மனிதன் சென்று எய்திய எல்லைகளெல்லாம் அவனுடைய தேவையின் உந்துதல்களாலேயே நிகழ்ந்திருக்கின்றன.  இன்று மனிதன் முயன்று கொண்டிருக்கும் புதிய எல்லைகளுக்கும் தேவையே அடிப்படை. எது மனிதனுக்கு தேவையாக இருக்கிறதோ அதையே மனிதன் அறிந்திருக்கிறான். எது மனிதனுக்கு தேவையாக இருக்கிறதோ அதை அறிய முயன்று கொண்டிருக்கிறான். எனவே அவன் அறியாத ஒன்று இருக்குமானால் அதை அறியாதது அவனுடைய பலவீனமல்ல. மாறாக, அவனுக்கும் அவன் தேவைக்கும் இடையிலான இடைவெளி.


மனிதன் எதை நோக்கி பயணப்படுகிறான்? எதை அடைய முயல்கிறான்? என்பது தேவையிலிருந்தே கிளைக்க முடியும். ஆனால் தேவை என்பது மனித குலம் முழுமைக்குமான தேவையா? இல்லை. வர்க்கங்களாக பிரிந்து கிடக்கும் உலகம், தனிமனித சிந்தனையினூடாக வர்க்க சிந்தனையையே வெளிப்படுத்துகிறது. ஒரு வர்க்கத்தின் சிந்தனை இன்னொரு வர்க்கத்திற்கு எதிராகவும் இருக்கிறது.  ஆளும் வர்க்கத்தின் சிந்தனை ஒருபோதும் உழைக்கும் வர்க்கத்திற்கு பலனளிப்பதாய் இருக்க முடியாது. அதன் வடிவம் நீதி முறைமையாக இருந்தாலும், சீர்திருத்தங்களாக இருந்தாலும் உழைக்கும் வர்க்கத்தின் மீதான மேலாண்மையையே கோருகிறது. இந்த அடிப்படையில் தான் கடவுள், மதம், விதி போன்றவைகளும் வருகின்றன.

மதவாதிகள்  பொதுவாக வேதத்தில் கூறப்பட்டிருக்கும் விதி நீங்கலாக ஏனைய அனைத்தும் அறிவியல் உண்மைகளாக, காலம் கடந்து நிற்பவைகளாக, மனித அறிவுடன் முரண்படாதவைகளாக இருப்பதால்; முரண்பாடு போல் தோன்றினாலும் விதியை ஏற்றுக் கொள்வது அறிவுடைய செயல்தான் என சாதிக்கின்றனர்.

ஆனால் வேத வசனங்களுக்கு அவர்கள் ஏற்றும் அறிவியலும், காலம் கடந்து நிற்கும் தன்மையும் அவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை கற்பிதங்களேயன்றி உண்மைகளல்ல. விதியின் மீது எப்படி கேள்விகள் எழுப்பப்படுகிறதோ அது போன்றே அனைத்தின் மீதும் கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கின்றன. எனவே, 99% நிரூபிக்கப்பட்டு விட்ட ஒன்றில் ஒரு நூற்றுமேனியை ஐயுறுவது அறிவுடமையன்று என வாதிப்பது அடிப்படையற்ற அபத்தம்.

இது போன்றது தான், அறிவியலைக் கொண்டு முழுமையையும் மனிதன் அறிந்து கொள்ள முடியாது என்பதும்.  இப்பேரண்டத்தில் மனிதன் தன் வல்லமையை விரித்திருப்பது சொற்ப அளவு தான். அவன் அறியாதவைகள் இருக்கின்றனவா என்றால் ஏராளம். இந்த அறியாதவைகளின் பட்டியலில் விதியையும் வைத்துக் கொண்டு அதை ஏற்றுக் கொள் என்பது அறிவியல் ரீதியாக மட்டுமல்ல, தர்க்க ரீதியாகவும் பெரும் ஓட்டையாக இருக்கிறது. விதி பற்றிய அறிவு மனிதனுக்கு வழங்கப்படவில்லை என்றால் மனித வாழ்வில் விதிக்கு என்ன பங்களிப்பு இருக்க முடியும்?

எங்கோ பல லட்சம் ஒளியாண்டு தூரத்தில் பூமியைப் போன்று ஒரு கோள் இருக்கிறது என்றால் சாத்தியம், இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் அந்தக் கோளில் இருந்து தான் மனிதன் புவியில் பரவினான் என்றால் அதற்கு சான்றுகள் வேண்டும். மனிதன் அனைத்தையும் அறித்து விட்டானா? அவன் அறியாதவைகள் எவ்வளவோ இருக்கின்றன. எனவே அந்தக் கோளில் இருந்துதான் புவிக்கு மனிதன் வந்தான் என்பதை நம்புவது அறிவுக்கு ஏற்புடையதுதான் என்று வாதிட்டால் அதில் உண்மைக்கு இடமில்லை.


 
விதி என்பது மனிதனோடு வேறெதையும் விட அதிக நெருக்கம் கொண்டிருக்கிறது. அனைத்தையும் தீர்மானிக்கிறது.  அப்படியான ஒன்றை, அன்றிலிருந்து இன்றுவரை விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒன்றை, கேள்விகள் கேட்கப்பட்டு வந்திருக்கும் ஒன்றை, இல்லை என்று மறுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒன்றை வெறுமனே நம்பு என்பது எப்படி அறிவுடமையாகும்? எனவே மனிதன் அறியாதவைகளும் இருக்கின்றன என நீட்டி முழக்குவது கடவுளின் இருப்பை தக்கவைப்பதற்கு தேவையானதாக இருக்கிறதேயன்றி, மனிதனின் அறிவை விளக்குவதற்கு தேவையானதாக இல்லை.


மனிதன் பலவீனமானவன் என்று மதவாதிகள் கூறுவது அறிவியல் ரீதியில் பொருளற்ற சொல். பலம் பவீனம் என்பது பொருளுடையதாக வேண்டுமென்றால் அது பிரிதொன்றுடன் ஒப்பு நோக்கப்பட்டிருக்க வேண்டும். மனிதன் பலத்தில் புலியை விட பலவீனமானவன். மனிதன் புத்திசாலித்தனத்தில் குரங்கைவிட பலமானவன். மனிதன் இடம்பெயர்வதில் குதிரைவிட பலவீனமானவன், ஆமையைவிட மிக பலமானவன். 


பலமானவன் - பலவீனமானவன் என்பதை இந்த அடிப்படையில் தான் கூறமுடியும். இப்போது மதவாதிகள் கூறும் மனிதன் பலவீனமானவன் என்பதை இதனுடன் இணைத்துப் பாருங்கள். எதனுடன் ஒப்பிட்டு மனிதன் பலவீனமானவன் என்கிறார்கள்? கடவுளுடனா? கடவுள் இருக்கிறதா? இல்லையா? என்பதே முதன்மையான விவாதமாக இருக்கும் போது, கடவுளுடன் மனிதனை ஒப்பிடுவது அறிவுடமையா?


மனிதனின் மிகப் பெரிய பலவீனங்களான மறதி, அசதி, தூக்கம் பைத்தியம், பசி, தாகம், காமம், தேவை, முகஸ்துதி, அவசரம், துக்கம், பொறாமை, தடுமாற்றம், குழப்பம், நோய், முதுமை, மரணம் போன்ற ஏராளமான விஷயங்கள் எப்போதும் மனிதனுடன் ஒட்டிக் கொண்டே இருக்கின்றன. இவை அனைத்துமே மனிதனின் அறிவுக்கு எதிரான ஆயுதங்கள். மேலும் அன்பு, கருணை, நன்றி, கோபம் போன்ற ஏராளமான நல்ல பண்புகள் கூட சில நேரங்களில் அவனைப் பலவீனப்படுத்தி விடும். இவைகளெல்லாம் மனிதனின் பலவீனங்கள் என்றால் மனிதனின் பலம் தான் என்ன? அல்லது இந்த பலவீனங்கள் இல்லையென்றால் அது மனிதனாக இருக்க முடியுமா? ஆக மனிதன் பலவீனமானவன் என மதவாதிகள் கூறுவது மிகப் பெரிய மோசடி. கடவுளை பிரமாண்டப்படுத்திக் காட்ட செய்யப்படும் செப்படி வித்தை.


மனிதனின் அறிவு குறைபாடுடையது எனும் குழப்பம், மனிதன் பலவீனமானவன் எனும் மயக்கம் இவற்றின் மீதுதான் விதிக் கோட்பாடு எனும் மாயத்தை கட்டி எழுப்பியிருக்கிறார்கள் மதவாதிகள். விதி என்பதை நேரடியாக விளக்க முடியாது. விளக்க முடியாது என்பதை விட விளக்கினால் கடவுள் மாட்டிக் கொள்வார். அதாவது கடவுள் மீதான பற்று மனிதனுக்கு இற்று விடும். அதனால் தான் விதியை விளக்கமுடியாது என்று கூறிவிட்டு மனிதனை தாழ்வு மனப்பான்மைக்குள் தள்ளிவிட்டு கடவுளை காப்பாற்றிக் கொள்கிறார்கள்.
  
நடந்து முடிந்துவிட்டால் அது விதி, நடக்க இருப்பது என்றால் நீயாக சிந்தித்து செயல்படு என்று விதியை இரண்டாக பிரிக்க முடியாது. ஏனென்றால் மனிதனுக்குத்தான் கடந்த காலம் எதிர்காலம் என்ற பேதமுண்டு. விதிக்கு எதிர்காலமில்லை, இறந்த காலம் மட்டும் தான். எதிர்காலம் இருக்கிறது என்றாலே அது விதி இல்லை என்றாகிவிடும்.



விதி என்றால் ஏற்கனவே எழுதி முடிக்கப்பட்டு விட்டது என்பதுதானே பொருள். ஏற்கனவே எழுதப்பட்டுவிட்ட ஒன்றை மனிதன் நிகழ் காலத்தில் நின்று கொண்டு சிந்திக்க முடியுமா? இதற்கு நேரடியாக பதில் கூற முடியாமல் தான் விதி பற்றிய விளக்கம் மனிதனுக்கு தரப்படவில்லை என்று தப்பித்துக் கொள்கிறார்கள்.
 



Thanks: Senkodi