Thursday, December 8, 2011

வீதிகள்+வாகனங்கள்= உயிர்கள்!



நேற்றைய தினம் (2011.12.06)  காலை 7.30 மணியளவில் திருகோணமலை அபயபுர பகுதியில் ஓர் வீதிவிபத்து நிகழ்ந்தது.இவ்விபத்தில் திருகோணமலை புனித மரியாள் கல்லூரியின் ஆசிரியர்களில் ஒருவரான வகாப் மொகமட் எனும் இளைஞர் பலியாகியுள்ளார்.

அன்றைய தினம் பாடசாலையில் நிகழவிருந்த ஒளிவிழாவில் கலந்து கொள்ளும் முனைப்புடன் தனது பிறப்பிடமான மூதூரிலிருந்து அதிகாலையில் புறப்பட்டு விரைந்து வந்தவர், அனுராதபுரச் சந்தியைத் தாண்டி அபயபுர பகுதியிலுள்ள சுற்றுவட்டத்தை நோக்கி இறங்கிச் செல்லும் சரிவான வீதியில் வைத்து தனக்கு முன்னாகப் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியை முந்துவதற்கு முயற்சித்திருக்கிறார்.


அவ்வேளையில் சிறுமழை காரணமாக நனைந்திருந்த தார் வீதி, மற்றும் கால்நடைச் சாணி காரணமாக வழுக்கி, எதிர்ப்புறமாக வந்த கொண்டிருந்த பயணிகள் பஸ்ஸின் சில்லுக்குள் மாட்டியதன் காரணமாக தலைப்பகுதியில் படுகாயமுற்றதாக பார்த்தவர்கள் கூறியுள்ளார்கள்.


உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு  செல்லப்பட்ட போதும் தலையிலும் மூளைப்பகுதியிலும் குருதிப்பெருக்குக் காரணமாக சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்திருக்கின்றார் எனவும்தெரிவிக்கப்பட்டது.


மிக இளம் வயதிலேயே தனது வாழ்வைப் பறிகொடுத்த இந்த ஆசிரியரின் அகால மரணத்தினால் அவரது குடும்பத்தினர் உறவினர்கள் நண்பர்கள் ஊரிலுள்ளவர்கள் மட்டுமல்லாது அவரது பாடசாலை சக ஆசிரியர்கள் மாணவிகள் அனைவருமே சோகத்திலாழ்ந்திருக்கின்றார்கள்.


வீதி விபத்துகள் என்பது இப்போதெல்லாம் வெகு சாதாரணமாக ஆகிவிட்டிருக்கின்றன. விபத்துகள் நிகழ்வதற்கு பல காரணங்களுள்ளன.  வாகன ஓட்டிகளின் கவனக்குறைவு, அலட்சியம், தவறான செலுத்துகை, மிதமிஞ்சிய வேகம், சாமர்த்தியமின்மை, மோசமான வாகனப் பராமரிப்பு, வீதிகளின் குறைபாடுகள்... என்று கூறிக்கொண்டு செல்லமுடியும்.


இவற்றிலே, அண்மைக்காலமாக திருகோணமலைப் பகுதியில் நிகழ்ந்துவரும் வீதி விபத்துகளுக்கு வாகனங்கள் பயணிக்கும் பாதைகளின் சீரற்ற நிலைமையே காரணமாக அமைந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.


அதிலும் குறிப்பாக 4ம் கட்டை -அனுராதபுரச் சந்தி-அபயபுர- மட்கோ சந்தி ஊடாக நகரை நோக்கிச் வரும் கண்டி வீதியே மிகவும் மோசமான நிலையில் தொடர்ந்து இருந்து வருகின்றது.

இதில் வேடிக்கை என்னவென்றால் ஆரம்ப காலங்களில் மிகவும் மோசமாக இருந்த நிலாவெளி ஊடாக புல்மோட்டை செல்லும் வீதி சீனக்குடா- கிண்ணியா- மூதூர் ஊடாக மட்டக்களப்பு வரை செல்லும் A-15 வீதி ஆகியவை எல்லாம் இப்போது அழகாகச் செப்பனிடப்பட்டுள்ள நிலையில் இருக்கின்றது. திருகோணமலை -அனுராதபுர வீதியும் ஓரளவு நல்ல நிலையில்தான் இருக்கின்றது.ஆனால், திருகோணமலை நகருக்கு அதிகமான வாகனப் போக்குவரத்து நிகழும் கண்டி வீதி மட்டும் குன்றும் குழியுமாகவே இருந்து வருகின்றது.


- 'Mutur' Mohammed Rafi


(தொடரும்)

Tuesday, December 6, 2011

ஆழ்ந்த அனுதாபங்கள்!



ன்று 2011.12.06 செவ்வாய் தினம் காலை திருகோணமலை அபயபுர பகுதியில் நிகழ்ந்த மோட்டார் சைக்கிள் வீதி விபத்தில் அகால மரணமடைந்த திருகோணமலை புனித மரியாள் கல்லூரியின்  ஆங்கில ஆசிரியர் ஜனாப். வகாப் மொகமட் (24 வயது ) அவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்கள்  மற்றும்  நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்!





வேகத்தால் வந்த வேகம்!



புயலாக மாறாத வரை
வாழ்க்கை ஒரு தென்றல்தான்
தென்றலாகச் சுற்றித்திரிந்து 
எல்லோரையும் ஈரத்துவிட்டு கடைசியில்
எம்மனதினை ஓயவைத்தது அப்புயல்!
0
வேகம் நிறைந்த வாழ்க்கையின்
வேகத்தையே முந்தும் உன்செயல்கள்- இன்றோ
வேகம் கூட கேள்விக்குறியாய் மாறி
உன்னை மீண்டும் எதிர்பார்க்கச் செய்கின்றது!
0
வாழ்க்கை எனும் வரைபடத்தை
வேகமாய் வரைந்து திரிந்த நீ 
அந்தக் கொடூர டிசம்பர் ஆறையும்
வேகமாய் கடந்துவிட நினைத்ததாலா 
அதைமட்டும் முன்னேவிட்டு
உன் உயிரின் வேகத்தை ஓயவைத்தாய்?
0
இன்றோ உன் புன்னகை பூத்த வேகத்தையும்
கண்ணீருடன் தொடர்கின்றோம் நாம்
அதுவேகமா வேதனையா
சொல்வதற்குத்தான் நீ இல்லை!


-பிரிவால் துயருறும்

11A மாணவிகள் 

 

Wednesday, November 23, 2011

தனிமனித ஆளுமை


அப்ரிடி:  அதிரடிப் போராட்டம்!






கிரிக்கட், இன்றைய நவீன முதலாளித்துவ உலகில் தாம் ஏகாதிபத்திய சக்திகளாலும் பல்தேசியக் கம்பனிகளின் தரகர்களாலும் சுரண்டலுக்குள்ளாவதை மறைத்து மக்களை ஒருவித லாகிரியில் ஆழ்த்தி வைத்திருப்பதற்கு பயன்படுகின்ற ஒரு விளையாட்டாக மாறிப்போய் விட்டிருக்கின்றது.


இதை சிந்திக்கக்கூடியவர்கள் நன்கறிவர்.


இதனாலேயே அவ்விளையாட்டினுள் ஊழல், சர்வதேச பேரம், சூது, திறமையான வீரர்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுதல் போன்ற இன்னோரன்ன பிறழ்வுகள் மலிந்து வருகின்றன.


ஆயினும், விளையாட்டு என்ற வகையில் கிரிக்கட்டை இரசிப்பதற்குத் தடையேதும் கிடையாது. அந்த வகையில் இன்றைய கிரிக்கட் அணிகள் பலவற்றில் திறமையான வீரர்கள் ஒதுக்கப்படுவதும் அதிலே பலர் காணாமற்போவதும் சிலர் மீண்டும் முயன்று போராடித் தம்மை வெளிப்படுத்தி வெற்றி பெறுவதும் நடந்து காலாகாலமாக கொண்டுதானிருக்கிறது.


மேற்கிந்தியாவின் கிறிஸ்கெயில் பாகிஸ்தானின் சகிட் அப்ரிடி ஆகிய இருவரையும் இதிலே குறிப்பிடலாம். கிறிஸ் கெயில் சிறந்த சகலதுறை அதிரடி வீரர். இவர் சிறந்த அதிரடித் தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தால் மேற்கிந்திய அணி வெற்றிபெறும் சாத்தியமாகும் என்ற நிலை இன்னும் இருந்து வருகின்றது. தனது கிரிக்கட் நாட்டின் கிரிக்கட்சபையுடன் ஊதியம் தொடர்பான முறுகல் ஏற்பட்டதன் காரணமாக விலக்கப்பட்டிருந்தார்.


பாகிஸ்தானின் சகிட் அப்ரிடி கடந்த உலகக் கிண்ணப் போட்டியில் அதுவரையில் உள்முரண்பாடுகளால் பிளவடைந்து பின்தங்கியிருந்த தனது அணியை ஒன்றிணைத்து உற்சாகமூட்டி தனது சிறந்த பந்து வீச்சு சகலதுறை ஆட்டத்தின் மூலம் அரையிறுதியாட்டம் வரை சிறப்பாக வழிநடத்தியிருந்தார். தனிப்பட்ட வகையிலும் உலகக்கிண்ணத் தொடரில் 21 விக்கட்டுக்களை வீழ்த்தி புகழ் பெற்றிருந்தார். இத்தனையையும் நிகழ்த்திக் காட்டிய அந்தத் திறமைசாலிக்கு அந்நாட்டின் கிரிக்கட் சபை வழங்கிய பரிசு என்ன தெரியுமா? காரணத்தைக்கூட அறிவிக்காமல் அவரை அணித்தலைவர் பதவியிலிருந்து விலக்கியதுதான்.

'ஒரு அணிக்குரிய வீரர்களைத் தெரிவு செய்வதிலே அவ்வணித் தலைவருக்குரிய பங்களிப்பே  மிகவும் முக்கியமானது. பயிற்றுவிப்பாளர்களின் பிரதான பணி தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு பயிற்சியளிப்பதுதான்' என்றார் அப்ரிடி. இயல்பிலேயே எதையும் வெளிப்படையாகவும் துணிச்சலாகவும் பேசும் அப்ரிடியின் இந்தப் போக்கு கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபையிலிருந்த பழழ்பெருச்சாளிகளுக்கு ஒத்து வரவில்லை.

இதனால் ஏதோ சாக்குப்போக்குகளைக் கூறி அப்ரிடியை ஒரேயடியாக ஒதுக்குவதற்கு முனைந்தனர். அப்ரிடியின் நேர்மை, திறமை, இரசிகர்களின் ஆதரவு ஆகிய விடயங்களால் நேரடியாக ஓரங்கட்ட முடியாமல் போனதால் திரைமறைவு சித்துவேலைகள் நடக்கலாயின.


ஆனால், இதனை உணர்ந்த சுயமரியாதையுள்ளவரான அப்ரிடி, தன்னை மதிக்காத கிரிக்கட் நிர்வாகத்தின் கீழ் விளையாட விரும்பவில்லை என்றும் குறித்த தலைமையின் பதவிக்காலம் முடிவடைந்து அது கலைக்கப்படும் வரை நிபந்தனையுடனான தனது ஓய்வை அறிவித்திருந்தார். "மீண்டும் நான் சகல மரியாதைகளுடனும் அணிக்குத் திரும்புவேன்" என்றும் பேட்டியளித்திருந்தார்.


அப்ரிடியின் பங்களிப்பும் பிரபல்யமும் அணிக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை அனைவரும் உணர்ந்து கொள்வதற்கு இந்த இடைவெளி பயன்பட்டது. அப்ரிடி இல்லாத அணி கவர்ச்சியற்றது என்றும் கற்றுக்குட்டித்தனமானது என்றும் விமர்சனங்கள் எழுந்தன. அப்ரிடியை மீண்டும் இணைக்கக்கோரி இரசிகர்களின் ஏகோபித்த ஆதரவு அலையும் வெகுண்டெழுந்தது.


இதற்கிடையில் இஜாஸ் பட் தலைமையிலான கிரிக்கட்சபை கலைக்கப்பட்டது.


இதனால்  சில மாதங்கள் ஓய்வின் பின்பு மீண்டும் அப்ரிடி தனது ஓய்வை இடைநிறுத்திக் கொண்டு விளையாடத் தயாரானார். ஐக்கிய அரபு இராஜ்யத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் இணைக்கப்பட்டுள்ளார்.


தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் தொடரில் பாகிஸ்தான் இரு ஆட்டங்களிலும் இலங்கை அணி ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெற்றிருக்கும் நிலையில் தொடரை பாகிஸ்தானுக்கு வென்று தரவேண்டிய நான்காவது ஆட்டம் கடந்த 20ம் திகதி சார்ஜாவில் ஆரம்பமானது.


இலங்கையின் பந்துவீச்சில் முன்னணி துடுப்பாட்ட வீரர்களைப் பறிகொடுத்திருந்த பாகிஸ்தான் அணி 71-5 என்ற நிலையில் தடுமாறித் தத்தளித்துக் கொண்டிருக்கையில் 6வது வீரராக களமிறங்கிய அப்ரிடி, தனது வழமையான அதிரடிப் பாணியை ஆரம்பத்தில் தேவைக்கேற்ப சாதுரியமாக நெகிழ்த்திப் பொறுமையுடனும் பின்பு விரைவாகவும் குவித்தார். பெறுமதியான அந்த 75 ஓட்டங்களின் உதவியுடன் அணியின் மொத்த ஓட்ட எண்ணிக்கை ஓரளவு மரியாதைக்குரிய 200 ஓட்டங்கள் என்றானது.


201 என்ற வெற்றி இலக்கைத் துரத்திய இலங்கை அணி, ஆரம்பத்தில் சிறிது தடுமாறிய போதிலும் சங்கக்கார, ஜயவர்த்தன எனும் இரு வல்லவர்களின் 102 ஓட்ட இணைப்பாட்டத்தின் மூலம் வெற்றி பெறும் வலுவான நிலையை அடைந்தது.


ஏறக்குறைய அனைத்து பாகிஸ்தான் வீரர்களும் இலங்கையின் வெற்றியைத் தடுத்துவிட முடியாது என்று நினைத்துச் சோர்ந்து விட்ட நிலையில் ஒரே ஒரு வீரர், அப்ரிடி, மட்டும் தனது வலது முழங்காலின் உபாதையையும் பொறுத்துக் கொண்டு சளைக்காமல் பந்து வீசிக் கொண்டேயிருந்தார். அவரது இடைவிடாத முயற்சியின் பலன் 37.5 வது ஓவரிலே சங்கக்காரவின் விக்கட் தகர்ப்புடன் ஆரம்பமாகி மகேல ஜயவர்த்தன மெண்டிஸ் பெரேரா ப்ரஸன்ன என்று தொடர்ந்து 5-35 என்ற பந்து வீச்சுப் பெறுதியுடன் அணிக்கு 3-1 என்ற தொடர் வெற்றியாகவும் கனிந்தது.


ஒரு நிலையில் திட்டமிட்டு ஒதுக்கப்பட்ட நிலையிலும் சோர்ந்து விடாது போராடி மீண்டெழுந்து தனது அவசியத்தை நிருபித்து... தன்னந் தனியாளாய் தொடர் வெற்றியை ஈட்டிக்கொடுத்து... தன்னை ஒதுக்கியவர்களையெல்லாம் ஆட்டத் திறமையால் வெட்கப்படச் செய்து நிமிர்ந்து நிற்கும் அப்ரிடியின் ஆளுமை போற்றத் தக்கதே.

-மூதூர் மொகமட்ராபி

Tuesday, November 15, 2011

எப்படி இருந்தது...இப்படியாச்சே!?




கடவுளேயானாலும்...!


ந்தப் படங்களைச் சிறிது பாருங்கள் நண்பர்களே...

பெரிதாக ஒன்றுமில்லை... ஒரு காலத்தில் மிகவும் அவசியமாகவும் போற்றத்தக்கதாகவுமிருந்த பல்வேறு  அம்சங்கள்தான் இவை. அவற்றின் இன்றைய நிலைமையைப் பாருங்கள்....



முதலில், திருகோணமலை -மூதூர் தரைவழி திறக்கப்பட்டதன் காரணத்தால் கடந்த பல தசாப்தங்களாக மூதூர்ப் பிரதேச மக்களின் போக்குவரத்துக்காக இறுமாப்புடன் உழைத்த படகுகளின் இன்றைய அவலத்தைக் காணுங்கள்....




படகுகள் மட்டுமல்ல, தூர்ந்துபோய் காணப்படும் கொங்கிரீட் கடல்பாலம்... துருப்பிடித்துக் கிடக்கும் படகு பிணைக்கும் இரும்புக் கிராதிகள்...மக்களை மிரட்டி மகிழ்ந்த காவலரண்கள் ...காக்கிச்சட்டைக் கெடுபிடிகள்... கடலைச் சரமணிந்த வியாபாரிகள்..
 உல்லாசப்பயணிகள்...  வரிசையில் காத்திருந்து வியர்வைப் பிசுபிசுப்பும் பரபரப்பும் தாளாமல்  முண்டியடித்து முன்பின்னாக அசையும் மனிதப்பாம்பு... என்று ஜேஜே என்றிருந்த திருகோணமலைத் துறைமுக இறங்குதுறை இன்று சனசந்தடியின்றி....... எப்படிக் களையிழந்து வெறிச்சோடிக் கிடக்கிறது பார்த்தீர்களா?


 

இது போலவே பழைய பெருமையும் இன்றைய உதாசீனத்தையும் பெற்ற பல விடயங்களைப் படங்கள் வாயிலாகவே வழங்கியிருக்கின்றோம். பாருங்கள்.!




 
 ஒரு காலத்தில் பரபரப்பான சேவையாக இருந்துவந்த தபால்சேவை நவீன தொடர்பு சாதனங்களின் வருகையின் பின்பு எவ்வாறு கவனிப்பாரற்றுப் போய்க்கொண்டிருக்கின்றது என்பதற்கு நகரசபை கட்டிடத்துக்கு எதிரேயுள்ள இந்த தபால் பெட்டியே மவுனச் சாட்சி!

இப்படி எத்தனையோ சொல்லிக் கொண்டே போகலாம்.

அதெல்லாம் சரி, மனிதனுக்கும் அவன் கண்டுபிடித்த பொருட்கள் மற்றும் சேவைகளுக்கும்தான் இந்த நிலைமை என்றால்.... திருகோணமலை பொதுநூலகத்தில் நாம் கண்ட காட்சியை நீங்களும் பாருங்கள்...


திருகோணமலை பொதுநூலகம் நகரசபை வளாகத்தினுள் அமைந்துள்ளது .


அந்தப் பொதுநூலக முன்றலில் எத்தனையோ காலமாக வீற்றிருந்த கல்விக்குப் பொறுப்பான கடவுளின் சிலையின் கதியைப் பார்த்தீர்களா?


அரசமரத்தின் கீழ் அமர்ந்து ஞானம் பெற்ற போதிமாதவனுக்குப் போட்டியாக புளியமரத்துக்குக் கீழே தவமிருக்கிறாளோ சரஸ்வதி என்றெல்லாம் நினைக்கத் தோன்றுகிறதல்லவா?


காரணம் இதுதான்.. ..



இந்த ஆண்டு நிகழ்ந்த சரஸ்வதி பூஜைக்காக பிரபல தனியார் கட்டிட நிர்மாண  நிறுவனம் ஒன்று, பொதுநூலகத்துக்கு  புதிய சிலை ஒன்றை அன்பளிப்புச் செய்திருந்தது.



புதிய சிலையை நிறுவுவதற்காக பழைய சிலையை அப்படியே பெயர்த்தெடுத்து பொதுநூலக வளாகத்தின் ஒரு ஒதுக்குப்புறமாக புளியமரமொன்றின் கீழே பழைய வாகன டயர் ஒன்றின் மீது ஏற்றிவைத்துள்ளனர்.




எதுவுமே பழையதாகி விட்டால் இதுதான் நிலைமை என்பதற்கு கடவுளர்களும் விதிவிலக்கில்லை போலிருக்கின்றது.








-'Mutur' Mohammed Rafi


Sunday, November 6, 2011

பெற்றோல் VS ரத்தம்



ஸீரோக்களாகும் ஹீரோக்கள்!




1970 களில்...
 'ஆம்புளப்புள்ள பொறந்திக்கே...என்ன பேர் வெய்க்கப்போறிங்க'
'வேறென்ன........கடாபி தான்'

1980களில்...
பொம்புளப் புள்ளயெண்டா என்ன பேர் வெச்சாலுஞ் சரிதான். ஆம்புளப் புள்ள பொறந்தா.....யாசிர் அரபாத் தான்'

1990 களில்.....
ஆம்புளப் புள்ளயோளு பொறக்குமென்டா.....சதாம் ஹூஸைன் தான்'
கொடுப்புக்குள் சிரிப்பை வரவழைத்தாலும் அவ்வக்காலத்தில் இவை சீரியசானவை. மதிப்புக்குரியவை. அபிமானப் பெறுமானம் கொண்டவை. காரணம்...


கடாபி , யாசிர் அரபாத், சதாம் ஹூஸைன். இவர்கள் வௌவேறு நாடுகளைச்சேர்ந்த வௌ;வேறு கலாசாரங்களைக் கொண்ட வௌ;வேறு காலகட்ட ஆட்சியாளர்கள்.எனினும் குறிப்பாக உலக முஸ்லிம் களின் மனங்களைக் கவர்ந்த கதாநாயகர்களாக இருந்திருக்கின்றார்கள். இந்த அபிமானமானது மக்கள் தங்களில் ஒருவராக இத்தலைவர்களை எண்ணச் செய்திருக்கிறது.
மேற்குறித்த காலப்பகுதியில் பிறந்த  ஆண்குழந்தைகளுக்கு பெற்றோர் மேற்படி பெயர்களை சூட்டி மகிழ்ந்தனர். இன்றும் இப்பெயர்களோடு பலர் இருப்பதை காணலாம்.


மேற்கு நாடுகளின் இஸ்லாத்திற் கெதிரான நிலைப்பாட்டை எதிர்த்தல். அமெரிக்கக் கூட்டாளிகளின் பெற்றோலியக் கொள்ளையை எதிர்த்தல். பல்தேசியக்கம்பனிகளின் அரபு- முஸ்லிம் நாட்டு வளச்சுரண்டலை தடுத்தல். போன்ற தடாலடி நடவடிக்கைகளால் ஒரு இரவுக்குள் இவர்களால் உலகின் கவனத்தை ஈர்க்கமுடிந்தது.


உலகில் ஜனநாயகம், சர்வாதிகாரம் என எந்தவிதமான ஆட்சியும் இருக்கலாம. இதில் எது நல்லது எது கெட்டது என்பதெல்லாம் அவ்வாட்சிக்குட்பட்ட மக்களது தீர்ப்பே மகேசன் தீர்ப்பாக இருக்கும். ஆனால் இன்றைய உலகில் தேர்தலில் தேர்வான ஆட்சியாகவோஇ கவிழ்ப்பு மூலம் உருவான ஆட்சியாகவோ இருக்கலாம்.ஆனால் இதில் எந்த நாடு தன்நாட்டு மக்களது செல்வத்தை, சொத்துக்களை அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகள் கொள்ளையடிக்க அனுமதிக்கிறதோ, மேற்கு நாடுகளின் நிர்வாண கலாசாரத்தை ஏற்றுறக் கொள்கின்றதோ அதுவே பாருக்குள் உண்ணத நாடு. மாறாக எந்த நாடு தனது செல்வங்களை மேற்கு நாடுகள் கொள்ளையடிக்கும் போது எதிர்க்கிறதோ அது கெட்டநாடு.


இந்த அயோக்கியத்தனத்தை உலகம் எப்படி ஏற்று;க்; கொள்ளும்? எப்படி நம்பும்? என்றெல்லாம் யாரும் பெரிதாக அலட்டிக் கொள்ளத்தேவையில்லை. அத்தனை விசக்கருத்துக்களையும் தேன் தடவி, உண்மை முலாமிட்டு நம்பவைக்க யூதர்களின் ஊடகங்கள் நூற்றாண்டு அனுபவத்தோடு இருக்கின்றன. அதே நேரம் அந்த அரக்கத்தனங்களை நம்ப அப்பாவி மக்களும் தயார். கண்விற்று காட்சிவாங்கத்தடிக்கும் அந்தந்த நாட்டு எதிர்க்கட்சிகளும் தயார்.


ஆட்சியில் இருக்கும் கட்சியோ நபரோ  அமெரிக்கா உட்பட மேற்குநாடுகளின் ரௌடித்தனங்களையும் பகல் கொள்ளையையும் அனுமதிக்கும் பட்சத்தில் அதனை எத்தனை வருடங்களுக்கேனும் நீடிக்கத்தயார். .அல்லவெனில், அது எவ்வளவு பெரிய ஜனநாயக மக்கள் நலன் சார்ந்த ஆட்சியாக இருப்பினும் அதனைக் கவிழ்த்து விடவும் அவ்வாட்சியாளனை தெருவில் போட்டு சுட்டுக் கொல்லவும்  தயார்.


இத்தாலியின் காலனித்துவ நாடாக விளங்கிய லிபியாவை மீட்பதில் உமர்முக்தாரின் சுதந்திரப்போராட்டம் லிபியாவை லிபியரின் கையில் கொடுத்தது. எனினும் 1960ல் அங்கு பெற்றோலியம் கண்டுபிடிக்கப்பட்டதும் மறுகணம் அது அமெரிக்காவின் மூக்கில் மணத்தது. பின் என்ன அவசர அவசரமாக லிபியாவில் ஒரு ராணுவத்தளத்தை உருவாக்கியது. ஏவுகணை எரிகுண்டுகள் போன்ற புதியரக ஆயதங்களை பரீட்சித்துப்பார்க்கும் இடமாக லிபியப் பாலைவனம் மாறியது..

1969 வரை மன்னர் இத்ரியாசி லிபியாவின் பெற்றோலியத்தை மேற்கு நாடுகளின் கொள்ளையடிப்புக்கு திறந்துவிட்டபடியால் எல்லாம் சுகமே! சுபமே.! உலகின் உயர்தரமான லிபியப் பெற்றோலை மேற்கு நாடுகள் நீ, நான் என கண்மூடி சுகமாக உறிஞ்சியிழுத்துக் கொண்டிருந்த வேளையில் கேணல் முஅம்மர் கடாபி ஆட்சியைப்பிடித்ததும் மேற்கு நாடுகள் திடுக்கிட்டு விழித்தன. உறிஞ்சுவது இடையில் நின்று போனது. லிபியாவின் பெற்றோல் உயர்தரமானது. சுத்திகரிப்பு செலவு குறைந்தது. உலகப் பெற்றோலியத்தில் 2% லிபியப்பாலைவனத்தரையின் கீழ்  உள்ளது. அவ்வரிய செல்வம் கடாபியால் நாட்டுடமையாக்கப்பட்டது. பேற்றோலிவருமானம் நாட்டு நலனைநோக்கித்திருப்பப்பட்டது. இது மேற்கு நாடுகளின் வயிற்றில் புளியைக்கரைத்தது. அவற்றுக்கு இது அநியாயமாகப்பட்டது. அக்கிரமமாகப்பட்டது.


உடனே உத்தரவுகள் பறந்தன. உலகவங்கி, சர்வதேச நாணய நிதியம் என்பன லிபியாவுக்கான கடனை நிறுத்தல் அல்லது நிபந்தனையுடன கடன் வழங்கல். ஜ.நா.வின் பாதுகாப்புச்சபை நேட்டோ தாக்குதலுக்கு அனுமதியளிக்க காரணம் கண்டுபிடித்து சோடித்தல். என்.ஜி.ஓ.க்கள் உள்நுழைந்து மனித உரிமைஇ ஜனநாயகம் என்ற பேரில் மக்களது மனநிலையை கடாபிக்கு எதிராகத் தருப்பிவிடுவது  போன்ற கைங்கரியங்கள் தயார் செய்யப்பட்டது.


இவ்வாறு லிபியாவை கபளீகரம் செய்வதற்கான சதித்திட்டங்கள் ஒருபுறம் தயாராகிக் கொண்டிருக்க லிபியாவின் இயற்கை வளம் லிபியாவை சகலதுறையிலு;ம்  முன்னேற்றப் போதுமானது என்ற உண்மையை லிபிய மக்களுக்கு புரிய வைக்கும் வேலையை கடாபி செய்து கொண்டிருந்தார். மட்டுமல்லாது ஆபிரிக்க நாடுகளுக்கும் அரேபிய மக்களுக்கும் பல்வேறு செய்திகளை அவர்  விடுத்தார்.


* எண்ணை உற்பத்தி நாடுகள் பெற்றோலியத்தை ஒரு ஆயதமாகப் பாவிக்கவேண்டும் என்றார்.
*. ஜ.நா.சபை போல ஆபிரிக்க நாடுகளுக்கெண்று ஒரு சபை வேண்டும்.
*. ஜ.எம்.எப்.க்கு இணையாக ஆபிரிக்க நாணய நிதியம் உருவாக வேண்டும்.

போன்ற அறைகூவல்கள் உலகைத் திரும்பிப்பார்க்க வைத்தன. குறிப்பாக ஆபிரிக்க நாடுகளைக் கவர்ந்தன. கடாபியை உமர் முக்தாரின் மறு அவதாரமாகப்பார்த்தனர். நாளாவட்டத்தில் ஆபிரிக்காவின் கதாநாயகனாகிக் கொண்டு வந்தார். தொடர்ந்தும் மேற்கை நோக்கி பல சவால்களை வெளியிட்டார்.


'அப்துல் நாஸர் என் வழிகாட்டி. .ஸ்டாலினும் ஹிட்லரும் என் நண்பர்கள்' என்றார். சீனா, ரஸ்யா, பிறேசில் போன்ற நாடுகளுடன் எண்ணை வர்த்தகத்தைப் பேணினார். இது போதாதா மேற்கு நாடுகள் கடாபியை பயங்கரவாதியாக சித்திரிக்க?

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ரீகன், 'கடாபி ஒரு பைத்தியம் பிடித்த நாய்' என்றபோது. 'அமெரிக்கர்கள் என்னைப்பாராட்டினால் தான் நான் வெட்கப்பட வேண்டும்' என்று பதிலளித்தார்.


தென்னாபிரிக்க சுதந்திர தின வைபவம் ஒன்றில் பில் கிளின்டன் 'ஆபிரிக்காவில் இருந்து கடாபியின் அதிகாரம் ஒழிய வேண்டும்' என்று பேசிய போது நெல்சன் மண்டேலா உடனே எழுந்து 'எமது இருண்டகாலத்தில் உறுதுணையாக இருந்த கடாபி குறித்து பில் கூறிய கருத்துடன் என்னால் உடன்பட முடியாது' என்றார்.



உலக வங்கியின் கிடுக்கிப்பிடிக்குள் சிக்கவிருந்த கென்யா, சாட், மாலி, எதியோப்பியா போன்ற ஆபிரிக்க நாடுகளுக்கு பொருளாதார உதவிகளை வழங்கினார். பலஸ்தீன விடுதலை முதல் ஜ.ஆர்.ஏ வரையிலான சுதந்திரப்போராட்டங்களுக்கு ஆதரவு வழங்கினார். இதனால் 'ஆபிரிக்காவின் சேகுவேரா' என கடாபி அழைக்கப்பட்டார்.


ஓரு கட்டத்தில், "நான் அரபு ஆட்சியாளர்களின் முதல்வன்! ஆபிரிக்காவின் அரசன்! முஸ்லிம்களின் அரசன்!" என்றெல்லாம் அறிவிப்புச் செய்ததோடல்லாமல் நவீன காலத்திற்கேற்ப அல்குர்ஆனில் திருத்தம் செய்ய வேண்டும் என்றார்.


நாற்பத்து நான்கு ஆண்டுகளாக ஆட்சி செய்த கடாபி லிபியாவை ஒரு மதச்சார்பு நாடாகவோ மதச்சார்பற்ற நாடாகவோ ஒரு போதும் பிரகடணம் செய்திருக்க வில்லை. மாறாக அவர் இறைவனது கண்டுபிடிப்பபையும், மனிதக்கண்டுபிடிப்பையும் இணைத்துப்பார்க்க முற்பட்டார். அதாவது மாணவராக இருந்த காலத்தில் கொம்யூனிசத்தால் கவரப்பட்ட கடாபி வாய்ப்புக் கிடைத்ததும் இஸ்லாத்தையும் கொம்யூனிசத்தையும் ஒரு கோட்டில் இணைக்க முற்பட்டார்.

அந்த வகையில் பசுமை நூல் (Green Book) என்று ஒரு நூலை எழுதினார். அதுவே நாட்டின் யாப்பும், லிபிய மக்களது வாழ்க்கைப் போக்கும் எனப் பிரகடனம் செய்தார். ஏறக்குறைய மாற்றுக் கருத்தடைய எந்த வொரு ஊடகமும் அங்கில்லாமல் பார்த்துக் கொண்டார். கட்சியரசியலோ எதிர்க்கட்சி அரசியலோ எதுவுமே அங்கில்லாமல் பார்த்துக் கொண்டார்.ஆட்சியையோ கடாபியையோ விமர்சிப்பவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர். இஸ்லாமிய ஆட்சிகோரியவர்கள் சிறையில் தள்ளப்பட்டனர். பலர் சிறையில் வைத்தே கொல்லப்பட்டனர். இது இவ்வாறிருக்க  மக்களது நலனோம்பு விடயங்களில் கரிசனை காட்டத் தவறவில்லை.

-லிபியர்கள் அனைவர்க்கும் வசிக்க வீடும் மானியமும்.
-லிபிய மக்கள் யாரும் மின்கட்டணம் செலுத்துவதில்லை.
-சிறியரக தொழில் துறைகளை பொதுமக்கள் மேற் கொள்ள பாரிய தொழில் துறைகளை அரசு மேற் கொண்டது.
-லிபியா கல்வி சுகாதாரம் போன்ற துறைகளில் ஆபிரிக்காவில் முன்னணிக்கு வந்தது.
-கடாபி ஆட்சிக்கு வந்து 15 ஆண்டுகளில் 1000பேருக்கு 01 வைத்தியர் என்ற அளவில் வாழ்க்கைத் தரம் உயர்ந்தது.
-மது தவறனைகள் கிடையாது.
-பெண்கள் மஹ்றம் இல்லாமல் வெளியில் செல்லத்தடை.
-களியாட்ட நிலையங்கள், தியேட்டர்கள் கிடையாது.
-இவை எல்லாவற்றிற்கும் மேலாக கடந்த 42 ஆண்டுகளில் லிபியா சர்வதச நாணய நிதியத்திடம் கடன் பெறாத நாடாக திகழ்ந்தது. அந்நாட்டு மக்களது வாழ்க்கைத்தரம் சிங்கப்பூர் மக்களின் வாழ்க்கைத்தரத்துக்கு இணையானது. என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.


கடன் கொடுத்து அடிமையாக்குதல், உள்நாட்டுக்குள் ஆயுதக்குழுக்களை உருவாக்கிவிடுதல், அணுவாயுதம் இருப்பதாக கதைகட்டிவிடுதல் போன்ற மிரட்டல்கள் எதற்கும் மசியாது கடாபி தன்வழி தனிவழி எனப்போய்க் கொண்டிருக்கும் போது தான் இரட்டைக் கோபுரத்தாக்குதல் என்றும் காரணம் அல்-கைதா எனறும் புதியதோர் கண்பிடிப்பை அமெரிக்கா வெளியிட்டது. இந்த சந்தர்ப்பத்தில் தான் உலகின் மிகப் பெரிய பயங்கரவாத அச்சுறுத்தல் ஒன்றை முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி George W.Bush  வெளியிட்டார். அதாவது, "யாரெல்லாம் அமெரிக்காவை பொறுத்துக் கொண்டு ஏற்றுக் கொள்கின்றார்களோ அவர்களே ஜனநாயகவாதிகள். மாறாக, அமெரிக்காவின் பக்கத்தில் இல்லாதோர் அனைவரும் பயங்கரவாதிகள்" என்ற மனிதகுலம் வெட்கித்தலைகுனியும் செய்தியே அது.



புதையல் கிடைத்தது போல இரட்டைக் கோபுரத் தாக்குதல் அமெரிக்காவுக்குக் கிடைத்தது. உடனே ஈராக்கில் பேரழிவு ஆயதம் இருப்பதாக ஒரு உலகப் பொய்யை டொனிப்பிளேயர் எடுத்துவிட சொல்லி வைத்தது போல் ஜ.நா.சபை தாக்குதலுக்கு அனுமதி கொடுக்க அமெரிக்கா பேரழிவு ஆயதங்களைக் கொண்டு ஈராக்கை சல்லடைபோட்டு சதாம் ஹூஸைனைப்பிடித்து உலகம் பாத்திருக்க தூக்கில் இட்டுக் கொன்றது. இப்பயங்கரவாதச் செயற்பாட்டின் மூலம் 'மேற்கு நாடுகளின் பெற்றோலியக் கொள்ளைக்கு இடம் கொடாவிடில் இது தான் கதி' என அமெரிக்கா வெளியிட்ட மிரட்டலுக்கு கடாபி சற்று ஆடித்தான் போனார். எனினும் எளிதில் மசிய வில்லை.


உடனேயூத லொபிகள் காரியத்தில் இறங்கின. லிபியாவில் அணுஆயுத தயாரிப்புக்கான முஸ்தீபு இடம்பெறுகிறது . கடாபி 200 பில்லியன் டொலருக்கும் அதிகமாக பணத்தை தன்னுடமையாக்கியுள்ளார். போன்ற கதையாடல்களை யூத ஊடகங்கள் திரும்பத்திரும்பக் கூறியே உண்மையாக்கிக் கொண்டிருந்தன. நாளுக்க நாள் கடாபிக்கெதிரான நெருக்குதல்கள் உள்நாட்டிலும் தலை காட்டத் தொடங்கியது. இதனால் மெல்லக் கடாபி மசியத்தெடங்கினார்.


அரசாங்கத்தின் கைகளில் இருந்த பெருந் தொழில்துறைகள் கடாபி குடும்பம் ராணுவத்தளபதிகள் குடும்பம் உட்பட தனியார் மயப் படுத்தப் பட்டது. லிபியாவின் சூழ்நிலையின் பிரகாரம், சொல்லப்போனால் செல்வம் ஒரு சிலரின் கைகளில் குவிய பலர் பராரிகளாக மாறுவதற்கான அடி எடுத்து வைக்கப்பட்டது. மறுவார்த்தையில் சொல்வதானால் லிபியாவிற்குள் உலகமயமாதல் என்ற மாபெரும் பகற்கொள்ளை, சீர்திருத்தம் என்ற முலாம்பூசப்பட்டு அனுமதிக்கப்பட்டது. ஒரு வரியில் சொல்வதானால் 'மேற்கு நாடுகளை வினியோகஸ்தர்களாகவும் ஏனையோரை நுகர்வோர்களாகவும் கட்டமைப்பதே உலகமயமாக்கம்' ஆகும்.


அதாவது பகிர்ந்துண்டு மகிழ்ந்து வாழ்ந்த லிபிய மக்கள் தங்களுக்குள் அடித்துக்கொள்ள அத்திவாரமிடப்பட்டது. மேலும் மிரட்டல் கலந்த அலுத்தங்களின் காரணமாக சர்வதேச என்.ஜி.ஓ க்கள் செயற்பட அனுமதிக்கப்பட்டன.
அவை மனிதஉரிமையை வளர்த்தல், கருத்துச் சுதந்திரத்தை வலுப்படுத்தல், ஜனநாயகத்தை உறுதிப்படுத்தல் போன்ற கோதாவில் கடாபிக் கெதிரான மனநிலையை மக்கள் மனதில் படிப்படியாக ஊன்றியது. அது மெல்ல வேலை செய்ய ஆரம்பித்தது. உளவறிதல், கலாசார மாற்றத்தை ஏற்படுத்தல், அமெரிக்க சார்புநிலையை உருவாக்குதல் போன்ற செயற்பாடுகள் திரைமறைவில் அரங்கேறத் தொடங்கியது. ஆமெரிக்கன் எய்ட்ஸ், கிறிஸ்டியன், எய்ட், போன்ற என்.ஜி.ஓ க்கள் இதில் முன்னணியில் நின்று செயற்படடன.


ஓப்பீட்டு ரீதியில் கடாபியின் அரசு ஏற்படுத்தித் தந்திருக்கும் பொருளாதார ஏற்பாடுகளை நிச்சயமாக எண்ணை உறிஞ்ச வரும் மேற்கு நாடுகள் ஏற்படுத்தித் தரப் போவதில்லை என்பதை அறியாத மக்கள் மெல்ல வீதிக்கிறங்கலானார்கள். விசயம் கைமீறிப் போகு முன் விளித்துக்கொண்ட கடாபி, உள்துறை, வெளியுறவு, உட்கட்டமைப்பு போன்ற துறைகளுக்கு தேர்தல்களை நடாத்த முன்வந்தார். மேலும் எண்ணை வருமானத்தை மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் யோசனையையும் வெளியிட்டார். கடாபியின் இந்தத் திட்டங்கள் நடைமுறைக்கு வருமெனில் முயற்சிகள் யாவும் வீணாகி விடும் என்பதை உணர்ந்த மேற்கு நாடுகள் சுறுசுறுப்பாகின. தயார்படுத்தி வைத்திருந்த திடடங்களை ஒன்றன் பின் ஒன்றாக விரிவாக எடுத்து விட்டன.


ஏற்கனவே மக்கள் மத்தியில் கடாபிக்கெதிரான மனநிலையை என்.ஜி.ஓ மூலம் கொழுந்து விட்டு எரிய விட்டாயிற்று. அது அணைவதற்கு முன் அடுத்தடுத்து காரியங்கள் அரங்கேறின. ஏற்கனவே கடாபியினால் வெளியேற்றப்பட்டு கடுப்பில் இருந்த இங்கிலாந்தின்  veedol எண்ணை நிறுவனம் ஏற்கனவே தயார் செய்து வைக்கப்பட்ட புரட்சிப்படைக்கு 5000கோடி  பெறுமதியான ஆயதங்களை வழங்கியது. மெல்ல மெல்ல கட்டமைக்கப்பட்ட கடாபிக்கு எதிரான புரட்சி பரவிக்கெண்டிருந்தது.  இவ்வேளையில்  இது தான் சமயம் என கடாபியிடம் இருந்து மக்களை மீட்டல் என்றபோர்வையில் (முன்பு சதாம் ஹூஸைனிடம் இருந்து ஈராக் மக்களை காப்பாற்றியது போல?) உலகில் சமாதானத்தை உருவாக்க உருவாக்கப்பட்ட ஜ.நா.  பாதுகாப்பு சபை லிபியாவைத்தாக்குமாறு நேட்டோவுக்கு உத்தரவு பிறப்பித்தது.

2011 மார்ச் 31ல் மாலைப் பொழுதொன்றில் லிபியாவின் வான் பரப்பை நேட்டொ போர்விமானங்கள் ஆக்கிரமித்தன. மீட்பர்கள் வந்துவிட்ட மகிழ்ச்சியில் புரட்சிப்பபடை ஆரவாரித்துக் கொண்டிருக்கும் போது முதலாவது குண்டு குடியிருப்புப் பிரதேசத்துக்குள் வந்து விழுந்து குடியிருந்ததற்கான அடையாளமே தெரியாதளவுக்கு அப்பிரதேசத்தைத் தூக்கித்தூர எறிந்தது. இடைவிடாது வான்தாக்குதல் தொடர்ந்தது. 14.10.2011 போதும் கேம்ஓவர் நிறுத்திக் கொள்க! என ஜ.நா.சபை அறிவிக்கும் வரை 9600 தாக்குதல்கள் மேற் கொள்ளப்படடன.


மேற்கின் எண்ணைக் கொள்ளைக்கு இடம் கொடாத லிபியா என்ஜி.ஓ. க்கள்மூலமும் உலகமயமாதல் சித்தாந்தம் மூலமும் மனித உரிமை, கருத்துச்சுதந்திரம், ஜனநாயகம் போன்ற பளபளப்புக்கள் மூலமும் பதப்படுத்தப்பட்ட லிபியா, வான் தாக்குதலின் ஒரேயடியில் சல்லடைத்தேசமானது. அதன் தலைவனை அந்நாட்டின் குடிமக்களே தெருவில் போட்டு சுட்டுக் கொல்லுமளவுக்கு யூத ஊடகங்களும் என்.ஜி.ஓ.க்களும் சக்தி வாய்ந்தவை. நேட்டோ படைகளின் பொதுச்செயலாளர் அண்டர்சன் பாக் ரஸ்மூசென் 'வரலாற்றின் வெற்றிகரமான தாக்குதல்' என இதனை வர்ணிக்கிறார்.

ஈராக், ஆப்கானிஸ்தான் போன்று புதிய ஜனநாயகத்தலைமை என்ற பெயரில் லிபியாவுக்கும் அமெரிக்க பொம்மை ஒன்றை அரியணையில் தூக்கி வைக்கப்பட்டாயிற்று.


லிபியாவில் கடாபி கொலை செய்யப்பட்டு ஒரு வாரம் கூட ஆகவில்லை. புதிய ஊடுருவல் படை திரிபோலியின் கரைகளில் இறங்க திட்டமிட்டுக்கொண்டிருக்கிறது. ஈராக், ஆப்கன் பிரதேசங்களில் வேலை முடிந்த பன்னாட்டு கட்டுமான நிறுவனங்கள் லிபியா பக்கம் பார்வையை திருப்பி உள்ளன. லிபியாவின் புனரமைப்பு வேலைத் தேவைகளையும் அதற்கு மாற்றாக அமெரிக்க-நேட்டோ படைகளின் செயல்நன்றியோடு பெறப்போகும் எண்ணெய் வளத்தையும் கணக்கிட்டு சர்வதேச கம்பெனித் தரகர்கள் சுறுசுறுப்படைந்துள்ளனர்.


கடாபியின் படுகொலைக்கு முன்பாக 20.10.2011 அன்று 80 பிரெஞ்சு கம்பெனிகள் லிபியாவின் தேசிய இடைநிலை அரசின் தலைவர்களை திரிபோலியில் சந்தித்துள்ளன. சென்ற வாரம் பிரிட்டனின் ராணுவ அமைச்சர்பிலிப்ஹம்மண்ட், பிரிட்டன் கம்பெனிகளை சூட்கேசுகளுடன் திரிபோ லிக்குச்செல்ல தயார் செய்யும்படி சொல்லிவிட்டாராம். கடாபியின் உடல் அடக்கம் செய்வதற்கு முன்பே பிரிட்டிஷ் கம்பெனியான ட்ராங்கோ புnராnஜக்ட்ஸ் தனது இணையதளத்தில் லிபியாவில் தொழில் துவங்குவதற்கு விளம்பரம் செய்யத் துவங்கிவிட்டது.


பிரான்ஸ மற்றும் பிரிட்டனைப் போலவே லிபிய போரில் நேட்டோவின் வான்தாக்குதலுக்காக அமெரிக்காவும் பலனடையப்போகிறது. அமெரிக்க-அரபு வணிக தேசிய குழுவின் தலைவர் மற்றும் தலைமை செயல் அலுவலகர் டேவிட் ஹமோட்  ஆயுதங்களையும் வேலையற்ற இளைஞர்களையும் கொண்ட நகரங்கள் இன்னமும் உள்ளதாகவும் கூறுகிறார். இதனால் பாதுகாப்பு கூலிப் பணிகளை செய்யக்கூடிய சர்வதேச நிறுவனங்களான எஸ்என், ஸ்பெல் க்ரூப்ஸ் லிட் மற்றும் எஸ்.,.என். ரிNசர்ஸ் க்ரூப் தங்கள் அலுவலகங்களை திரிபோலியில் திறந்துவிட்டன.


லிபியாவில் குண்டுவீச்சில் நொறுங்கிய கட்டுமானங்களை புதுப்பிக்கவும், வங்கி மற்றும் நிதிநிறுவனங்கள், மருத்துவமனைகள், பாலங்கள், வீதிகள், எரிபொருள் மற்றும் எண்ணெய் நிறுவனங்களின் புனரமைப்புக்கு வேலைகள் தேவைப்படுகின்றன. மேலும் பலமாத போருக்கு பின்னர் இன்னமும் லிபியாவில் பாதுகாப்பு அச்சமூட்டுவதாகவே உள்ளதாகவும் எனவே புதியதாக ராணுவ பயிற்சி மற்றும் ஆயுதங்கள் வழங்கப்பட வேண்டியுள்ளதாகவும் லிபியாவில் தங்க வேட்டைக்கான ஓட்டம் இப்போதே துவங்கிவிட்டன என்றும் அமெரிக்க-அரபு வணிக தேசிய குழுத் தலைவர் மற்றும் தலைமை செயல் அலுவலகர் டேவிட் ஹமோட் தெரிவிக்கன்றார். நியூ யோக் டைம்ஸ் (29.10.2011) கடாபி மீதான குற்றச்சாட்டுகளுக்கப்பால் தற்பொழுது அமைக்கப்பட்டிருக்கும் பொம்மையரசு கடாபி ஏற்பத்தியிருந்த பொருளாதார வளமுள்ள வாழ்வை இனி எப்போதும் லிபியர்களக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படமாட்டாது என்பது நிச்சயம்.

மொத்தத்தில் லிபியா சட்டிக்குள் இருந்து அடுப்புக்குள் விழுந்திருக்கிறது. அது மீண்டெழக் காத்திருக்க வேண்டும். இன்னுமொரு உமர்முக்தாரை அது வலிசுமந்து பிரசவிக்கும் வரை.

-மூதூர் முகம்மதலி ஜின்னா

Tuesday, November 1, 2011

திரைப்படம்:



ஏழாம் அறிவா?
அல்லது
ஏய்க்கும் அறிவா?




ன்றைய பொழுதுகளில் ஒரு திரைப்படத்தின் முதன்மையான கணம், அதற்கு செலவு செய்யப்படும் தொகையும், அது மடைமாற்றித் தரப்போகும் தொகையும் தான். கலை, சமூக விழிப்புணர்வு, பொழுதுபோக்கு உள்ளிட்ட ஏனைய பிறவெல்லாம் பின்னர் தான். இந்த வகையில் எல்லாவற்றையும் விட ஒரு திரைப்படத்திற்கு பார்வையாளர்களை ஈர்ப்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. இதற்கு பலவாறான உத்திகள் ஒவ்வொரு திரைப்படத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஏழாம் அறிவில் இதற்கு பயன்படுத்தப்பட்டிருக்கும் உத்தி தமிழர் பெருமை, தமிழ் தேசியம்.


கி.பி ஆறாம் நூற்றாண்டில் காஞ்சியில் பல்லவ மன்னர் வழிமுறையில் தோன்றிய போதிதர்மர் சீனாவுக்குச் சென்று மருத்துவ நுணுக்கங்களையும், தற்காப்புக் கலையையும் போதித்தார். அதுவே குங்ஃபூ வுக்கும், ஜென் தத்துவத்திற்கும் தொடக்கமாக இருந்தது. ஆனால் தமிழர்கள் இன்று அவைகளை மறந்துவிட சீனர்கள் தமிழரிடம் பெற்ற கலையை தமிழர்களுக்கு எதிராகவே பயன்படுத்துகிறர்கள். இதுதான் ஏழாம் அறிவு திரைப்படத்தின் மையக் கரு.


சர்கஸில் வேலை செய்துயும் கதாநாயகன் இடையிடையே காதாநாயகியை காதலித்து பலநாடுகளின் கடற்கரைகளில் பாட்டுப்பாடி கடைசியில் வில்லனை அடித்து நொறுக்கி வெற்றிக் கொடிகட்டும் ஒரு சராசரி திரைப்படத்தினை பார்த்துவிட்டு வெளியில் வரும் ரசிகன் தமிழன் என்பதால் பெருமித உணர்வு கொள்கிறான். இதற்கு திரைப்படக் குழுவினருக்கு கை கொடுத்திருப்பது, வரலாற்றிலிருந்து உருவப்பட்ட ஒரு வரியும்,

"தமிழன் மலேசியாவில் அடிபட்டான், இலங்கையில் அடிபட்டான், இப்போது தமிழ்நாட்டுக்குள்லேயே வந்து அடிக்கிறான்”
"ஒன்பது நாடுகள் சேர்ந்து தமிழன அடிச்சா அதுக்குப் பேரு வீரமில்லை, துரோகம்"

"மஞ்சளை விளைவிக்காத நாடுகளெல்லாம் மஞ்சளுக்கு காப்புரிமை வாங்கியிருக்கிறது, ஆண்டாண்டு காலமாக விளைவித்து பயன்படுத்திக் கொண்டிருக்கும் நாமோ ஏமாந்து நிற்கிறோம்"

என்பது போன்ற சில வசனங்களும். ஒருவேளை திமுகவும் கருணாநிதியும் இலங்கைப் பிரச்சனையில் தமிழர்களுக்கு தூரோகமிழைத்து விட்டதாக எண்ணப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த வேளையில் தமிழர்களிடம் தன்னுடைய படத்தின் மூலம் இப்படி தமிழுணர்வை ஏற்படுத்துவது அரசியல் ரீதியாக உதவும் என்று கூட இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் எண்ணியிருக்கக் கூடும்.


சீனா இந்தியா மீது நுண்ணுயிர் போர் (bio-war) நடத்துவதாக சித்தரிக்கப்பட்டிருப்பதற்கு முக்கிய காரணம் தமிழர்கள் சீனா மீது கொண்டிருக்கும் கோபம். அதாவது ஈழத் தமிழர்கள் மீதான சிங்கள இனவழிப்புப் போரில் இலங்கை ராணுவத்திற்கு சீன செய்த உதவிகளால் சீனா மீது தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்கும் கோபத்தை திரைப்படத்திற்கான ஆதரவாக திருப்பிக் கொள்ளும் நோக்கத்துடனேயே சீனா அவ்வாறு சித்தரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த விசயத்தில் இந்தியா குறித்து திரைப்படம் கொண்டிருக்கும் கருத்து என்ன? இந்தியாவின் போரையே நான் நடத்துகிறேன் என்று ராஜபக்சே கூறியிருந்தது குறித்து, போரில் இந்தியாவின் பங்களிப்பின் ஆதாரங்கள் குறித்து திரைப்படம் மவுனம் சாதிப்பது ஏன்?


தெளிவாகக் கூறினால் இந்தியாவின் பங்களிப்பு குறித்து திரைப்படம் மவுனம் சாதிக்கவில்லை, மறைக்கிறது. மறைப்பதோடு மட்டுமின்றி ஆதரவாக திரிக்கிறது. போதிதர்மரின் அறிவை இன்றைய தமிழர்கள் மீளப் பெறவேண்டும் என்று திரைப்படத்தில் போதிக்கப்படுவது எதற்காக? சீனா இந்தியா மீது தொடுத்திருக்கும் நுண்ணுயிர் போரை எதிர்கொள்வதற்காக, சீனாவின் திட்டத்தை இந்தியா முறியடிக்க வேண்டும் என்பதற்காக. ஆக, ஈழத்தமிழர்களை கொன்றழித்த போருக்கு திட்டமிட்டு உதவிய இரண்டு நாடுகளில் பாதிக்கப்பட்டவர்களின் உணர்வைத் தூண்டிவிட்டு அதை ஒரு நாட்டுக்கு ஆதரவாகவும் இன்னொரு நாட்டுக்கு எதிராகவும் திருப்புவதைத்தான் திரைப்படம் தமிழர்களிடம் கோருகிறது. இது அப்பட்டமான மோசடித்தனம் என்பதில் ஐயமொன்றுமில்லை.


பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்டு எடுக்கப்படும் திரைப்படங்களை, அதுவும் திரைப்படத்தின் சிறிய பகுதியாக வருவதை மட்டும் முழுமையாக எடுத்துக் கொண்டு இது போன்று அரசியல் நோக்கில் விமர்சிப்பது தேவையற்றது என்று கருதப்படலாம். ஆனால் திரைப்படம் தொடங்கப்பட்டதிலிருந்து இன்றுவரை அந்த சிறிய பகுதியை மட்டுமே முதன்மைப்படுத்தி விளம்பரங்களும், செவ்விகளும் செய்யப்பட்டன என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். மட்டுமல்லாது படத்தின் மையக் கருவே இது தான். படத்தைப் பார்த்துத் திரும்பும் ரசிகனிடம் அந்தப் படத்தின் அதிகான பகுதியாக வரும் பொழுதுபோக்கு மசலாத்தன காட்சிகள் ஏற்படுத்தும் தாக்கத்தைவிட பழந்தமிழர் பெருமை தான் பெரும் தாக்கம் ஏற்படுத்துகிறது. ஒரு திரைப்படத்தின் விமர்சனம் என்பது அந்த திரைப்படம் பார்வையாளரிடம் என்ன சொல்கிறது என்பதைத்தான் முதன்மையாக எடுத்துக் கொள்ள வேண்டும். நேர்த்தியான படத்தொகுப்பு, திறமையான ஒளிப்பதிவு, அழகான இடங்கள், பாத்திரங்களின் நடிப்புத்திறன், உணர்வுபூர்வமான இசை போன்றவைகளை முதன்மைப்படுத்துவது, சொல்லவரும் செய்தியை தெளிவாக புரியவைக்க உதவும் அம்சங்களை எடுத்துக் கொண்டு, செய்தியை கண்டு கொள்ளாமல் விடுவது போன்றது.


அறிவியல் புனைவை கதைக் களமாக கொண்டிருக்கும் ஒரு கதையில் நோக்கத்திற்கு உதவியாக இணைந்து வரும் தொழில்நுட்ப அம்சங்கள் எவ்வளவு உயர்வானதாகவும் நேர்த்தியுடன் பயன்படுத்தபட்டிருந்தாலும் புரட்டுத்தனமான நோக்கத்தைக் கொண்டிருந்தால் அவைகளைப் பொருட்படுத்த வேண்டியதில்லை. அறிவியல் புனைவு என்றாலே தர்க்க மீறல்களை கண்டு கொள்ளக் கூடாது என்பது எழுதப்படாத விதியாக இருக்கும். என்றாலும் வெறும் நுண்ணோக்கியை வைத்துக் கொண்டு மரபணு ஏணியை பார்வையிடலாம் என்பதும், தனிப்பட்ட ஒருவர் பெற்றிருக்கும் அறிவு மரபணு வழியாக கடத்தப்படும் என்பதும், ஓரிரு நொடிகள் ஒருவரை பார்ப்பதாலேயே ஒருவரின் மூளையிலிருக்கும் சிந்தனைத் தூண்டுதல்கள் இன்னொருவர் மூளைக்குள் புகுந்து கொள்ளும் என்பதும் 'டூ மச்'சாக மட்டுமில்லை, 'ஃபோர் மச்' சையும் தாண்டியிருக்கிறது.


இறுதியாக இயக்குனர் பார்வையாளர்களுக்கு ஒரு வேண்டுகோளையும் விடுக்கிறார். மஞ்சள் பூசுவதை ஒரு சடங்காக, கலாச்சாரமாக பரப்பாதீர்கள் அதை நச்சுக் கொல்லி எனும் அறிவியாலாக கற்றுக் கொடுங்கள் என்கிறார். அதாவது மெய்யானதை சொல்லாமல் சடங்காக, மரபாக செய்தால் காலப்போக்கில் அது மறைந்து விடும். மெய்யான பயன்பாட்டை புரியவைத்தால் மட்டுமே அது நீடித்து நிற்கும் என்று நமக்கு வகுப்பெடுக்கிறார். 

ஆனால் இதை அவர் பின்பற்றியிருக்கிறாரா?


தற்காப்புக் கலைகளிலும் வீரத்திலும் சிறந்து விளங்கிய தமிழன் இன்று எல்லா இடங்களிலும் அடி வாங்குகிறான் என்பது மெய்யான அரசியலா? மேலெழுந்தவாரியான உணர்ச்சியைத் தூண்டிவிடும் செயலா? ஈழத் தமிழர்களின் தற்போதைய நிலைக்கு ஏகாதிபத்தியங்களின் அரசியல், பொருளியல் நலன், விடுதலைப்புலிகளின் அரசியல் தவறுகள் உள்ளிட்டு பல மெய்யான காரணங்கள் இருக்கும்போது, அவைகளைப் பற்றி மறந்தும் பேசிவிடாமல், பண்டைய தமிழனின் வீரத்தையும் கலைகளையும் மறந்ததுதான் காரணம். அவற்றை தமிழன் மீண்டும் கைக்கொண்டால் திருப்பி அடிப்பதோடு மட்டுமன்றி தமிழன் என்றால் உலகிற்கு ஒருவித பயம் எழும் என்று கூறுவது மெய்யான அரசியலை மறைப்பதோடு மட்டுமன்றி, அதை அறிந்து எழுச்சி பெறவிடாமல் தடுக்கும் செயலாகவும் இருக்கிறது.

நன்றி : செங்கொடி

Monday, October 31, 2011

கவிதை:


எழுதிவைத்துக் கொள்ளுங்கள்!







சூரியன் ஒருநாள்
மேற்கிலே உதித்தெழும்
சுற்றுகின்ற பூமியோ
சத்தியமாய் சறுக்கிடும்!


வீசுகின்ற காற்றிலே
வெப்பநிலை உயர்ந்திடும்
விடுமுறைநாளைக்கூட
விஞ்ஞானமே தீர்மானிக்கும்!


ஆலயங்கள் அத்தனையும்
அருங்காட்சிக் கூடமாகும்
அன்று பிறந்த சிசு கூட
அடுத்தநாள் டியூசன்போகும்!


வீடுதோறும்
தொலைக்காட்சி தெய்வமாகும்
விடிந்தபின்பும் மின்சார விளக்கெரியும்

பள்ளியிலே வன்முறைகள் பாடமாகும்
பாடசாலைச் சீருடையில் வண்ணமேறும்!


கூடிவாழும்
எண்ணமெல்லாம் குறைந்து போகும்
குழந்தைகளைக் கொல்வதெல்லாம் வீரமாகும்

தரமில்லாப் பொருள் கூட
விற்றுத்தீரும்
தகுதியில்லா மனிதர்க்கெல்லாம்
தலைமைசேரும்


சக்கரைவியாதி இனி
சகலருக்கும் வந்துசேரும்
மனப்பிறழ்வு இல்லாதோர்
மனிதரில்லை என்றாகும்


வேலிகள் ஒன்றுகூடிப் பயிரைமேயும்
வளர்த்தகடா மார்பிலேறிக் குதித்து ஆடும்

காவலுக்கு வளர்த்த நாயே
காலைக் கடிக்கும்
விடுதலைக்கு உயர்ந்த கையே
வயிற்றலடிக்கும்!

-மூதூர் மொகமட்ராபி

Thursday, October 27, 2011

தீபாவளி வாழ்த்துக்கள்!



நண்பர்கள்
அனைவருக்கும்
இனிய
தீபாவளித் 
திருநாள்
வாழ்த்துக்கள்!

- Jesslya Jessly

அதெல்லாம் சரி, பேனா எழுதுமா?








'நல்ல பேனா இருந்தா ஒன்று தாங்க!' என்று கடைக்காரியிடம் காசை நீட்டினார் ஒருவர்.

'எப்படிப் பேனா வேணும்..?'

'விலையுயர்ந்த அழகான நல்ல பேனாவாகவே  தாருங்க!'

கடைக்காரி ஒரு பேனாவை எடுத்து வைத்தாள்.

'இது நல்லதா!'

'ஆமாம். இதில நிறைய வசதிகள் இருக்கு தெரியுமா.. இதுல மணிக்கூடு இருக்கு...அலாரம் இருக்கு..திசைகாட்டி இருக்கு!'

'அப்படியா! ஆச்சரியமாயிருக்கே' என்றார் வாடிக்கையாளர்

'அது மட்டுமில்ல...  இதில இன்னும் நிறைய இருக்கு!'

'ஐயோ!  வேற என்னவெல்லாம் இருக்கு...?'

'கல்குலேட்டர் இருக்கு..ஸ்டெப்லர் இருக்கு..வெப்பமானி இருக்கு..கெமரா இருக்கு..கீழே விழுந்தா உடையாது.. இவ்வளவு ஏன் நெருப்பில கூட எரியாது தெரியுமா?'

என்று மூச்சு விடாமல் ஒப்பித்துக் கொண்டிருந்த கடைக்காரியை நிறுத்தி, வெகு அமைதியாகக் கேட்டார் அந்த வாடிக்கையாளர்.

'அதெல்லாம் சரியம்மா, இந்தப் பேனா எழுதுமா?'


***


ந்த உரையாடலை வாசித்தால் என்ன தோன்றுகின்றது உங்களுக்கு?

அதே உணர்வோடு பாடசாலை ஒன்றில் நடைபெறும் கற்பித்தல் செயற்பாடுகள் தொடர்பான இந்த கல்வியதிகாரி-ஆசிரியர் உரையாடலையும் பாருங்கள்.

'பாடத்திட்டம் இருக்கா?'

'ஆம் ஸேர்!'

' நல்லது.. பாடக்குறிப்புகள் இருக்கா?'

'ஆம், தினசரி எழுதி வைத்திருக்கிறேன் ஸேர்!'

'வெரிகுட்! கற்பித்தல் உபகரணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளனவா?'

'ஆம் எல்லாம் ஒன்றும் விடாமல் செய்யப்பட்டுள்ளது ஸேர்!'

'பாடப்பதிவுக் கொப்பிகள் சரியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளனவா?'

'ஆமாம்!  இந்தாருக்கு பாருங்க, ஸேர்!'

'அப்படியா?! வரவு இடாப்பு வேலைகள் முழுமையாகப் பூரணப்படுத்தப்பட்டுள்ளதா?'

'ஆம், ஸேர்!'

' ஆச்சரிமாயிருக்கே... இந்தப்... புறக்கிருத்திய வேலைகளெல்லாம்..?'

'அதெல்லாம் டிப்டொப்பாக  செய்யப்பட்டிருக்கு ஸேர்! அதுமட்டுமில்ல...'

'........@#...*^+#....! '    (தடால்!)

'ஆ! ஐயோ...ஸேரைப் புடிங்க! டேய் யாராவது ஓடிப்போய் தண்ணி எடுத்திட்டு வாங்க... ! ஸேர் தலைசுத்தி மயங்கி விழுந்திட்டாருடா'


முகத்தில் தண்ணீர் விசிறியடிக்கப்பட்டு மயக்கம் தெளிவிக்கப்பட்டது. 

மயக்கம் தெளிந்து கண்ணை விழித்ததும் அந்தக் கல்வியதிகாரி கேட்ட முதல் கேள்வி:

'அதெல்லாம் சரி, பிள்ளைகளுக்குப் படிப்பிக்கிறீங்களா?'

-மூதூர் மொகமட் ராபி

சிந்தனைக்கு....



நம்மையே சிறையிடும் நமது வட்டங்கள்!





மது காலடியிலே வளரும் எதிர்காலப் பெருவிருட்சங்களான நமது சின்னஞ் சிறுவர்களை பற்றியும் அவர்களது மனப்பாங்குகளைப் பற்றியும் எப்போதாவது எண்ணிப் பார்த்திருக்கிறீர்களா?

அவர்களது பிஞ்சு மனங்களில் இயல்பாகவே எழும்  வினாக்களையும் அந்த வினாக்கள் நமது  பழமைவாத துருப்பிடித்த சிந்தனைகளுக்கு அடிக்கின்ற சாவுமணிச் சங்கடங்களையும் பற்றிச் சிறிது யோசித்துப் பார்ப்போமா?


'அப்பா டைனோசர் உண்மையிலேயே உலகத்துல இருந்துச்சா?'
என்று  ஆரம்பக்கல்வி படிக்கும் ஒரு சிறுவன் கேட்க,

'இதென்ன கேள்வி...இருந்துச்சுதானே?!' என்பார் தந்தை.

'அப்படியென்டா ஏன் அது இப்ப இல்ல?' 
'அது..அது  வந்து.. அது எல்லாம் செத்துப் போயிட்டுது'

'எப்படிச் செத்திச்சு?'

'ஆ..அது அந்தக் காலத்துல..பெரிய அழிவு வந்து செத்துட்டுதுகள்'

'அழிவு என்டா..எப்படி? சுனாமி மாதிரியா?'

'ஆங்...  ஆமா....ம்! சுனாமி வந்து எல்லாம் ஒரேயடியா தொலைஞ்சிட்டுது!' என்றார் அப்பா உற்சாகத்துடன்! அழிவு என்ற சொல்லை சிறுவனுக்கு எப்படி விளக்குவது என்று முழித்தவருக்கு அவனே எடுத்துக் கூறியதிலே கொண்டாட்டம்! ஆனால் அவரது மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை.

'சுனாமில பூனைநாய் எல்லாம்தானே  செத்துச்சு...அதெல்லாம் ஒண்ணும் விடாம இல்லாமப் போக இல்லையே அப்பா?'

' அது வந்து...வந்து..டேய்! இதெல்லாம் உனக்கேண்டா...? உன்ட பாடத்தை மட்டும் படித்தால் போதாதா கண்ணா?' என்று சமாளிக்கத்தானே நம்மில் பல பேர் நினைக்கின்றோம்.

தவிர, அவனுக்கு/அவளுக்கு சிறு வயதிலேயே இருக்கும் ஆர்வத்தைப் புரிந்து கொண்டு அதன் வழியில் சிந்தனைத் திறனை வளர்த்துச் செல்வதற்கு முயல்பவர்கள் வெகு குறைவாகவே இருப்பார்கள்.


சிந்தித்துப் பார்த்தால் நாம், இளம் அரும்புகளான நமது  பிள்ளைகளின் இயல்பான அறியும் ஆற்றலை  வளர்த்துக் கூர்மையாக்குவதற்குப் பதிலாக அதனை நமது வசதிகளுக்கு ஏற்றவாறு மழுப்புகின்றோம் என்பதுதான் உண்மை. இதனை நாம் விரும்பியோ விரும்பாமலோ செய்து கொண்டுனிருக்கின்றோம்.

மேலே  உரையாடலில் சில பெற்றோர்களால் பிள்ளையின் கேள்விகளுடன் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் செல்ல முடியாத இயலாமை புலப்படுவதைப் பாரத்திருப்பீர்கள். இத்தகைய பெற்றோரால் ஆர்வமும் தேடல் முனைப்பும் நிரம்பிய தமது வாரிசுகளின் அறிவுப்பசிக்குத் தீனியிட முடிவதில்லை. இதன் காரணம் நமக்குள்ள அறிவெல்லாம் வெறுமனே நாம் ஈடுபடும் தொழில்சார்பான அல்லது துறைசார்பான  சில வட்டங்களுக்குள் சிக்கி இருப்பதுதான்.

அந்த வட்டச் சிறைகளுக்குள்ளிருந்து நம்மை விடுவித்துக் கொள்ள நாமே விரும்புவதில்லை. இதற்கு இயல்பான சோம்பேறித்தனமும் ஒரு காரணம்.  வேறு சிலருக்கோ சும்மா இருப்பதிலே கூட ஒரு சுகம்  இருக்கின்றது.
இதனைப் புரிந்து கொண்டு பெற்றோராகிய நாம் வாசித்தல், கேட்டல், தேடுதல் மூலமாக நிறைய விடயங்களை அறிந்து கொண்டிருப்பது மிகவும் அவசியமானது அல்லவா?

சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்!


 
- Jesslya Jessly

Wednesday, October 19, 2011

இது எப்படி இருக்கு?



உள்ளத்தைத் திறப்போமா?




பொதுவாக எல்லா மதங்களும் அவற்றின்  அதன் விதிமுறைகளும், சட்ட திட்டங்களும் ஆணாதிக்கத்தை  தக்கவைக்கும் விதத்திலேயே வடிவமைக்கப் பட்டிருக்கின்றன. பெண்களை கண்ணியப்படுத்துவதாக கூறியவாறு ஆணாதிக்கத்தின் குறியீடாக பயன்படுத்தப்படும் உடலை முற்றாக மறைத்து மூடும் ஆடைக் கலாச்சாரத்தை கொண்டே இதை பார்க்கலாம்.


பெண்களுக்கான உடலை முற்றாக மறைத்து மூடும் ஆடை நமது சூழலில் 80 களுக்கு முன்பு வெகு சில ஊர்களில் மட்டும் மரபாக இருந்தது. கடுங்கோட்பாட்டுவாத இயக்கங்கள் செயல்படத் தொடங்கியதன் பின்னர் தற்போது அனைத்து இடங்களிலும் இந்த ஆடைமுறை பெண்களின் மீது ஒரு உறுப்பாகவே படிந்து விட்டது.


எந்த அளவுக்கு இந்த ஆடை பெண்களுக்கான கண்ணியமாக திணிக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு விமர்சனத்திற்கும் உள்ளாகியிருக்கிறது. இதை அவர்கள்  இரண்டு விதங்களில் எதிர்கொள்கிறார்கள்.



உடலை முற்றாக மறைத்து மூடும் ஆடைக் கலாச்சாரத்தை மறுப்பவர்கள்.
அதாவது மேற்குலகின் ஆகக் குறைந்த ஆடை அணிவதையே சுதந்திரமாக நினைத்துக் கொண்டிருக்கும் தவறான போக்கிற்கு ஆதரவாக இருக்கின்றவர்கள் ஒருவகை.


பெண்களுக்கு வேறு என்ன அளவில் ஆடை அணிய வேண்டும் என்பது பற்றிய குழப்பம் உள்ளவர்கள் மற்றொரு வகை.


பெண்களுக்கான இந்த மேலதிக ஆடை அணியச் செய்வதற்கு கூறப்படும் காரணம், ஆண்களின் காமப் பார்வையிலிருந்து பெண்களை அவை காக்கும் என்பது தான்.


பெண்ணுக்கு எதிரான பாலியல் மீறல் என்பது ஆணின் குற்றம்.


ஆண் செய்யும் இந்த குற்றம் நிகழாமல் இருக்க வேண்டுமென்றால் பெண் மேலதிக கருவிகளுடன் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இதன் சாரம்சத்தில் பெண்ணை சக மனிதப் பிறவியாக கருதாதிருக்கும் குறைபாட்டின் வெளிப்பாடுதான் உள்ளது. எவ்வாறெனின், குற்றத்தால் பாதிக்கப்படுபவர்களிடமே அதிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் பொறுப்பையும் வழங்கியிருக்கிறது.


உடலுறுப்புகள் வெளித்தெரியும்படி ஆடையணிவது ஒரு ஆணை பாலியல் குற்றத்திற்கு தூண்டும் எனக் கூறி குற்றத்தின் பங்களிப்பை பாதிக்கப்படும் பெண்களிடமும் பகிர்வது.

பொதுவாக பாலியல் உறவு என்பது இருபாலாரும் விரும்பி ஈடுபடுவது. மனைவியாயினும், வேறு பெண்களாயினும் முழுவதுமாக மறைத்துக் கொண்டிருந்தாலும், நிர்வாணமாக இருந்தாலும் அவளை வற்புறுத்துவது ஆணுக்கு உரிமையல்ல.


ஒரு ஆண் மேலாடையின்றி இருந்தான் என்பதால் அவன் முதுகில் சுவரொட்டியை ஒட்டிவிட்டு சுவரொட்டி ஒட்டப்படாமல் இருக்க வேண்டுமென்றால் நீ முதுகை மறைத்திருப்பது உன்னுடைய கடமை என்றால், அது எவ்வளவு அபத்தமாக இருக்குமோ, அவ்வளவு அபத்தம் பெண் பாலியல் வல்லுறவு செய்யப்படாமலிருக்க வேண்டுமென்றால் அவர்கள் தங்களை கவசமிட்டு மறைத்துக் கொள்ள வேண்டுமென்பது.


பணமோ, பொருளோ திருடப்படாமல் தடுக்க வேண்டுமென்றால் அதை பெட்டியில் பூட்டிவைத்து பாதுகாக்க வேண்டும் என்பதைப் போல் பெண்களையும் பார்த்தால் பணத்தின், பொருளின் மதிப்பு அதன் பரிமாற்ற பயன்பாட்டில் இருப்பதைப் போல் பெண்களின் மதிப்பு அவர்களின் பாலியல் பயன்பாட்டில் இருக்கிறது என்பதை ஒப்புக் கொண்டவர்களாவார்கள். பெண்கள் சக பிறவிகள் இல்லை, பாலியல் பண்டம் தான் எனக் கூறுவதற்கு ஆண்களுக்கு மட்டுமல்ல, கடவுளோ, மதமோ, வேதமோ எதற்கும் உரிமையில்லை.


ஆண்களுக்கு ஆடைவரம்பு விதித்திருப்பதைப் போல், பெண்களுக்கும் விதித்திருக்கிறது இதில் அடிமைத்தனம் ஒன்றுமில்லை என்பது சிலரின் பிரபலமான வாதம். இது உண்மையா?


அவர்கள் கூறுவது போல் ஆண்களுக்கான ஆடை பெண்களுக்கான ஆடை என்று வரையறை செய்வதாக இல்லாமல் அவர்கள் அணிந்திருக்கும் ஆடைகளுடன் குறிப்பிட்ட சில ஆண்களை தவிர ஏனைய ஆண்களுக்கு முன் வரக்கூடாது என்பதுதான் அவர்களது விதியாக உள்ளது. அதாவது, பெண்கள் தங்கள் உடலுறுப்புகளை மறைத்து என்ன ஆடை உடுத்தியிருந்தாலும் அந்த ஆடை அலங்காரங்களுடன் அவற்றை மறைத்துக் கொண்டே வெளிப்பட வேண்டும்.


இது ஆடை சார்ந்த விடயமா? அடிமைத்தனம் சார்ந்த விடயமா?
தற்போதைய நிலைமைகளுக்கு ஏற்ப, உடலை முழுவதும் மறைக்கக் கூடிய சுடிதார் போன்ற ஆடைகளும் உடலை முற்றாக மறைத்து மூடும் ஆடை போன்றது தான் என்று சிலர் வைக்கும் வாதத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆக உடலை முழுவதும் மறைக்கக் கூடிய எந்த ஆடையாக இருந்தாலும் அது அலங்காரமாகவும் இருப்பதால் அதை மறைக்கும் படியாக மேலதிக ஆடையுடன் தான் பொது இடங்களுக்கோ, அந்நியர்களுக்கு முன்போ வரவேண்டும் என்பது தான் பெண்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடு. இது ஆண்களுக்கு இல்லை.


முகத்தையும் முன்கைகளையும் தவிர ஏனைய பகுதிகளை மறைத்துக் கொள்ளுங்கள் எனும் நிபந்தனையை பெண்களின் ஆடைகளுக்கான வரம்பாக காட்டினாலும், முகத்தையும் மறைத்துக் கொள்ள வேண்டும் என்பதையும்  ஏனைய விதிமுறைகள் வலியுறுத்துகின்றன.


ஆக பெண்கள் தங்கள் பாலியல் அங்கங்களை மறைக்கும் வழமையான ஆடைகளால் உடுத்திக் கொள்வது போதாது. ஆடைக்கு மேலாக முகம் உட்பட அனைத்தையும் மறைத்துக் கொண்டுதான் வெளியில் வரவேண்டும் என்பது தான் இவற்றின் முடிவு. இதை தற்போதைய நடைமுறை சிக்கல்களை மனதில் கொண்டு முகத்தை மறைப்பது முக்கியமில்லை என்றும் சமரசம் செய்து கொள்கிறார்கள்.


உடலை முற்றாக மறைத்து மூடும் ஆடை பற்றிய பிரச்சனை எழுப்பப்பட்டால், ஆண்களின் அளவைவிட பெண்கள் அதிகமாக ஆடை அணிய வேண்டும் என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வார்கள், இதற்கு ஒரு அளவு நிர்ணயிக்கப் பட்டிருக்கின்றது. இதை ஏன் விமர்சிக்க வேண்டும் என்பது போல் திசை திருப்புவார்கள். இங்கு பிரச்சனை ஆடையின் அளவு அல்ல


போதுமான அளவு ஆடை அணிந்திருந்தாலும் அதையும் மறைத்துக் கொண்டு தான் அந்நியருக்கு முன் அல்லது வெளியில் வரவேண்டும் என்பது தான்.


இதுமட்டுமன்றி, உடலை முற்றாக மறைத்து மூடும் ஆடை அணிந்து கொண்டு வாழும் பெண்களின் மூலம் அது தங்களுக்கு படிப்பதற்கோ, வேலை செய்வதற்கோ, பொது இடங்களுக்கு சென்று வருவதற்கோ எந்தவித இடையூறும் இல்லை என்றும், அதை ஆணாதிக்கமாக நாங்கள் கருதவில்லை என்றும் பதில் கூறச் செய்து அதனைக் கொண்டும் இதை எதிர் கொள்கிறார்கள்.


இதை ஏற்றுக் கொண்டு உடலை முற்றாக மறைத்து மூடும் ஆடை அணியும் பெண்களுக்கு அது இடையூறாக இருக்குமா? அவர்கள் அதை ஆணாதிக்கமாக கருதுகிறார்களா என்பதெல்லாம் இங்கு பிரச்சனை இல்லை.


இதை நாங்கள் மதச் சடங்காக அணிகிறோம் என்றால் அதில் விமர்சனத்திற்கு இடம் ஒன்றுமில்லை. ஆனால் அது பெண்களுக்கு கண்ணியம் தரும் ஆடை, பாலியல் தொல்லைகளிலிருந்து பெண்களுக்கு அது பாதுகாப்பை அளிக்கிறது என்று கூறுவது தான் பிரச்சனை.

பாலியல் வரம்புமீறல்கள் ஒரு குற்ற நடவடிக்கை. ஆண்களின் அந்த குற்ற நடவடிக்கைக்கு தனியுடமையே காரணமாக இருக்கிறது. ஆணாதிக்கமும் தனியுடமையும் இணையும் புள்ளியிலிருந்து தான் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடக்கம் பெறுகிறது. ஆனால் மத அடிப்படைவாதிகள் இந்த அடிப்படைகளை காண மறுக்கிறனர்.


பாலியல் குற்றங்களை தனிப்பட்ட குற்ற நடவடிக்கையாக காணும் அதேநேரம் அந்தக் குற்றத்தில் பெண்களையும் இணைக்கிறது. இந்த குற்றங்களுக்கு தீர்வாக உடலை முற்றாக மறைத்து மூடும் ஆடையை முன் நிறுத்துகின்றது, அதுவும் ஆணின் பலதார வேட்கையை சட்டமாக அங்கீகரித்துக் கொண்டு. அதாவது ஆணின் காமப்பசிக்கு பல மனைவிகள் கூடுதலாக வேண்டிய அளவுக்கு அடிமைகள் என்று அனுமதியளித்துவிட்டு அதற்கு எதிராக பெண்களை உடலை முற்றாக மறைத்து மூடும் ஆடைக்குள் மறைந்து கொள்ள உத்தரவிடுகிறது. இதை ஆணாதிக்கம் என்று அழைக்காமல் வேறு எப்படி அழைப்பது?


ஆண்களின் பாலியல் குற்றங்களுக்கு எதிராக உடலை முற்றாக மறைத்து மூடும் ஆடை பெண்களுக்கு பாதுகாப்பை வழங்குகிறதா?  ஒரு பாலியல் குற்றத்தை நிகழ்த்தும் துணிவுடனும், சமூகப் பாதுகாப்புடனும் ஆண் இருக்கும்போது அதற்கு எதிராக பெண்ணின் கவச ஆடை என்ன சலனத்தை நிகழ்த்திவிட முடியும்? 


சுட்டுவிரல் நகம் தெரிந்தாலும் அதையும் பாலியல் நுகர்வோடு அணுக சமூகம் ஆணை அனுமதிக்கும் போது ஒரு ஆடை அதற்கு எதிராக என்ன செய்துவிட முடியும்? தன்னின் எந்தப்பகுதி வெளிப்பட்டு ஆணின் பார்வையில் கிளர்ச்சியை தூண்டுமோ என்னும் பதைப்பையே இந்த ஆடைகள் பெண்களுக்கு வழங்குகிறது. அது மேலும் மேலும் ஆணின் காமப் பதுமையாக பெண்ணை மனதளவில் இருத்தி வைக்கிறது.

பாலியல் குற்றமென்பது பார்வையோடு மட்டும் தொடர்புடையதல்ல. பார்வை இருக்கட்டும் கேட்கக் கூசும் வார்த்தைகளால் அர்ச்சிக்கிறார்களே பெண்கள் வெளியில் வரும்போது காதுகளை பஞ்சால் அடைத்துக் கொண்டுதான் வரவேண்டும் என்று சட்டம் செய்யலாமா?


பொது இடங்களுக்கு வந்தால் உரசுவதற்காகவே கடந்துபோகிறார்களே என்னசெய்யலாம்? உடலை முற்றாக மறைத்து மூடும் ஆடையை இரும்பால் நெய்து கொள்ளவேண்டும் அதுவும் உடலைவிட்டு அரை அடி தள்ளியிருப்பது போல் தைத்துக் கொள்ள வேண்டும் எனத் திருத்தம் கொண்டு வரலாமா?

பெண்களுக்கு சமவுரிமையுள்ளது எனப் பழக்கத்தில் பிதற்றுபவர்களின் பார்வை பெண்களின் விசயத்தில் இவ்வளவு மட்டமாக இருக்க முடியுமா? ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆணாதிக்கம் மிகுந்த  சராசரி மனிதர்களின் பார்வையைத் தாண்டி இவர்களிடம் ஒன்றுமில்லை என்பதற்கு இந்த உடலை முற்றாக மறைத்து மூடும் ஆடையை விட வேறு சான்று ஒன்றும் தேவையில்லை!

 
(இக்கட்டுரை செங்கொடி இணைய தளத்தில் 'அல்லாவின் பார்வையில் புர்கா' என்ற தலைப்பில் அண்மையில் வெளியானது. அதன் மையக்கருத்து சிதையாதவாறு சில குறிப்பிடத்தக்க மாற்றங்களுடன் தந்திருக்கின்றோம்- Jesslya Jessly)

Friday, October 7, 2011

ஆசிரியர் தினம் (கவிதைகள்)




சிவப்புக்கோடு!






ழகு மிகுந்தசேலைகட்டி

அதற்கு ஏற்ற பொட்டும் வைத்து

அரைநொடியில் முகம் திருத்தி

அவசரமாய்ப் பள்ளிசெல்லும்

உயிருள்ள இயந்திரம் நான்!

** 
திகாலை கண்விழித்து

அரையிருட்டில் அடுப்பெரித்து

விடியும்வரை வாசல்கூட்டி

வெளிச்சம்வர கடைக்கு ஒடி

கட்டிலருகே தேனீர் வைத்து

கணவனைத் துயிலெழுப்பும்

கலியுகத்து நளாயினி நான்!

** 

ரவிரவாய்க் குறிப்பெழுதி

இடதுகையால் தொட்டிலாட்டி

குழாய்நீரில் துணிதுவைத்து

குளிக்கும்போது அழுதுதீர்த்து

படியேறித்துணி உலர்த்தி

பாதம்நோக மடித்துவைக்கும்

பற்றரியில்லா ரோபோ நான்!

** 

குழந்தைகளை வெளிக்கிடுத்தி

குழப்படிக்குப் பதில்கொடுத்து

அவசரத்தில் பவுடர் அப்பி

ஆட்டோவுக்குள் தலைசீவி

கடிகார முள்ளோடு

சதிராடிப் போராடும்

சாட்டையில்லாப் பம்பரம் நான்!

** 

சிவந்து வயிறுகிள்ள

பாணோடு பன்னும் வாங்கி

பாதியிலே கடித்து விழுங்கி

கதவோரம் செருப்புத்தேடி

தெருமுனையில் பஸ்பிடித்து

பந்தயத்துக் குதிரைபோலே

பாய்ந்துநானும் ஓடிவந்தால்.....



ருகைதரும் பதிவேட்டில்

இரக்கமின்றிச் சிரித்திருக்கும்- அந்த

இதயமில்லாச் சிவப்புக்கோடு!

-மூதூர் மொகமட் ராபி


II


இதுதான் கௌரவமா?





ற்றிவைத்த ஏணிகளுக்கு

தூசுதட்டும் நாளின்று

எரிந்து கரையும் தீபங்களுக்கு

ஓர் அவசரத் திருநாளின்று!

&&

நாட்கள் தோறும் மாறுசெய்து

வாரந்தோறும் வாட்டியெடுப்பீர்

தவணைமுறையில் தன்மானந்தீண்டி

ஆண்டு முழுவதும் மனம் சிதைப்பீர்

&&

ற்றிவைத்த ஏணிகளுக்கு

தூசுதட்டும் நாளின்று

எரிந்து கரையும் தீபங்களுக்கு

ஓர் அவசரத் திருநாளின்று!

&&

த்தனையும் அழகாய்ச் செய்து

ஆண்டிலொரு நாளில் மட்டும்

தோள்வலிக்க மாலையிட்டு

தொடர்ந்து வந்து வாழ்த்துச் சொன்னால்

ஆசானுக்கு அதுதான் கௌரவமா? 

&&

ற்றிவைத்த ஏணிகளுக்கு

தூசுதட்டும் நாளின்று

எரிந்து கரையும் தீபங்களுக்கு

ஓர் அவசரத் திருநாளின்று!

- Jesslya Jessly

Monday, October 3, 2011

இது தேவையா?



பாடாய்ப் படுத்தும் "தினங்கள்"


I






'தம்பி, இன்று உங்கள் பள்ளியில் என்ன தினம் கொண்டாடுகின்றீர்கள்?'


விடுமுறை நாள் தவிர்ந்த வேறு ஏதாவது ஒருநாளில் காலையிலே எழுந்து வீதியில் எங்காவது ஒரு மூலையில் நின்று கொண்டிருங்கள். உங்களைக் கடந்து மலையேறும் சிறுமனிதர்களைப் போல முதுகை வில்லாக வளைக்கும் புத்தகப்பைகள் சகிதம் காலில் சக்கரம் கட்டாத குறையாக அலறியடித்து ஓடும் பள்ளிக்கூட மாணவர்களைப் பார்க்கலாம்.


அவர்களில்  ஒருவனை நிறுத்தி இந்தப் பத்தியின் ஆரம்பத்திலுள்ள வினாவைக் கேட்டுப்பாருங்கள். 'இன்று ஒரு தினமும் கிடையாது!' என்று அவன் பதில் கூறினால் அன்றைய தினம் நிச்சயம் உங்களுக்கு சுரண்டல் அதிஷடலாபச் சீட்டில் ஒருகோடி ருபாய் பரிசு விழும் அல்லது திருட்டுப் போன உங்கள் வெளிநாட்டுக் கைத்தொலைபேசி திரும்பக் கிடைக்கும். அதுவுமில்லையென்றால், அன்று மாலை இருட்டுவதற்குள் இலஞ்சம் வாங்காத போக்குவரத்துப் பொலீஸ்காரர் ஒருவரைச் சந்திப்பீர்கள்...!


ஒரு வருடத்தில் 365 அல்லது 366 நாட்களுள்ளதோ இல்லையோ ஆனால் ஏதாவது ஒரு விசேட தினம் மட்டும் இருந்து கொண்டேதான் இருக்கின்றது. சிறுவர் தினம், முதியோர் தினம், குடிநீர் தினம்.. மகளிர் தினம்... எயிட்ஸ் தினம்.. சயரோக தினம்... புகைபிடிப்போர் தினம்... என்று ஏதாவது வந்து கொண்டேதான் இருக்கின்றது. ஒன்றுமே இல்லாத தினம் என்று ஏதாவது நாட்கள் விட்டு வைத்திருக்கின்றார்களா என்ன?


மனித சமுதாயத்திற்கு உதவக்கூடிய ஏதாவது ஒரு நற்பணியை மக்களிடையே முன்னெடுப்பதற்காகவும் அதுவிடயமாக நினைவூட்டி விழிப்புணர்ச்சியைத் தூண்டுவதற்காகவும் இப்படியான விசேட தினங்கள் சர்வதேச மட்டத்தில் பிரகடனப்படுத்தப்பட்டன. எடுத்துக் காட்டாக எயிட்ஸ் தினம். அந்த உயிர்கொல்லி நோய் ஏற்படக்கூடிய விதம் பற்றியும் அதிலிருந்து எவ்வாறு நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பது பற்றியும் உலக மக்களின் கவனத்தை ஈர்த்து அறிவூட்டும் செயல்திட்டங்களை முன்னெடுப்பதற்காகப் பயன்படுகின்றது. இதுபோலவே சூழல் தினம்.. குடிநீர் தினம்..போன்றவற்றைக் கூறலாம்.


ஆனால் காதலர் தினம்.. முட்டாள்கள் தினம்... பெற்றோர் தினம்.. ஆசிரியர் தினம் என்று கொண்டாடப்படும் தினங்களுக்கு என்ன அர்த்தம் இருக்கின்றது என்று எனக்குப் புரியவில்லை.


பெற்றோர் தினம் என்று கூறி நாம் கீழைத்தேய மக்கள் ஒரு குறிப்பிட் தினத்தைக் கொண்டாடத்தான் வேண்டுமா? மேற்கத்தைய நாடுகளில் வாழும் மக்களின் குடும்பக் கட்டமைப்பின் தன்மை வேறு நமது மக்களின் குடும்பக் கட்டமைப்பின் தன்மை வேறு.

அவர்கள் தங்கள் பிள்ளைகளை ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்ததும் சுயமாக வாழ அனுமதித்து விடுகின்றனர். இதனால் பெற்றவர்களின் மீதான பிள்ளைகளின்  பொருளாதாரத் தங்கியிருத்தல் வெகு குறைவு. தமது படிப்பை முடித்ததும் தாமாகவே வேலைதேடிக் கொள்வார்கள், அவர்கள். அதுபோலவே, எதுவித நெருடலுமின்றித் தாமாகவே வாழ்க்கைத் துணையையும் தேடிக் கொண்டு விடுகின்றார்கள்.


முக்கியமாக பெற்றோருடன் இணைந்து வாழ்வது கிடையாது. தனியே தனிக்குடித்தனம்தான்.

இதனால்  வருடத்தில்  குறிப்பிட்ட நாளைத் தனியே ஒதுக்கி Parent's Day கொண்டாடுகின்றார்கள். எங்கோ தொலைவில் கிராமத்தில்  cottage களில் ஓய்வைக் கழிக்கும்  வயது முதிர்ந்த பெற்றோரை  பிள்ளைகள் சகிதம் போய்ப்பார்த்து அன்றைய நாள் முழுவதும் சலிக்கச்சலிக்கக் கொண்டாடிவிட்டு மறுதினம் வீடு திரும்பி மீண்டும் தமது தினசரி வேலைகளில் மூழ்கிவிடுவார்கள்.

மறுதலையாக, பிறந்ததிலிருந்தே பெற்றோரின் அரவணைப்பில் கிடந்து திருமணமான பின்பும் கூட மாமி-மருமகள் சண்டைகளையெல்லாம் தாண்டி  ஏதோ ஒருவிதத்தில் விரும்பியோ இன்றியோ தாய் தந்தையருடன் பின்னிப் பிணைந்தே வாழும் வாழ்க்கை முறையைக் கொண்ட நமக்கு இந்தப் பெற்றோர் தினம் தேவைதானா?


II





 
பெற்றோர் தினம் போலவே நம்மை நாமே பரிசீலிக்க வேண்டிய மற்றுமொரு தினமும் உண்டு. அதுதான் அக்டோபரில் கொண்டாடப்படும் ஆசிரியர் தினம்.

ஆசிரியர்களும் அவர்களது அளப்பரிய சேவைகளும் போற்றப்படவேண்டியவை என்பதிலே மாற்றுக் கருத்துகளுக்கு இடமில்லை. ஆனால் பாடசாலைகளிலே  அந்தத் தினம் அர்த்தமுள்ள விதத்தில் கொண்டாடப்படுகின்றதா?

ஆசிரியர்களோடு நேரடித் தொடர்புடையவர்களான மாணவர்கள், பெற்றோர்கள், அதிபர்கள் மற்றும் மேலதிகாரிகள் எவ்வாறு ஆசிரியர்களை நடாத்துகின்றார்கள் என்று பார்ப்போம்.


தற்போது பெருகிவரும் விஞ்ஞான தொழினுட்ப முன்னேற்றங்களுடனான இலத்திரனியல் காட்சி ஊடகங்கள் மற்றும் கைத்தொலைபேசிகள் பாவனை காரணமாக மாணவர்களின் நடத்தைக் கோலங்களில் பிறழ்வுகள் அதிகரித்து வருவது யாவரும் அறிந்த ஒன்று. இதனால் பாடசாலைகளின் உள்ளும் புறமும் இளம் தலைமுறையினரைக் கையாளுதல்  ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பெரும் சவாலாக இருந்து வருகின்றது. 


பாடசாலைகளிலே சீருடை அணிதல், தலைமுடி திருத்தல் முதற்கொண்டு   எதிர்ப்பாலாருடன் பழகுதல் வரை  ஒழுங்குவிதிகளுக்குள் மாணவர்களை  கட்டுப்படுவது  பிறழ்வான போக்குகளை நெறிப்படுத்துவது போன்ற சவால்கள் நேரடியாக  ஆசிரியர்களுக்கே விடப்படுகின்றன. இதனால் ஆசிரியர்-மாணவர் உறவுகளில் விரிசலும் முரண்பாடுகளும் எழுவதோடு அவை சிலவேளைகளில் பெரும் சர்ச்சைக்குரிய விடயங்களாகவும் மாறிவிடும் அபாயமும் இருந்து வருகின்றது. 

இவற்றின் விளைவாக ஆசிரியர்கள் மாணவர்களால் மதிக்கப்படும் போக்கு மெல்ல மாற்றமடைந்து வருகின்றது. பல பாடசாலைகளில் குறிப்பாக வளர்ந்த மாணவர்கள் தமது ஆசிரியர்களை கண்ணியப்படுத்துவதை ஏதோ புராதன விடயம் என்பது போல நினைக்கின்றார்கள்.

பொதுவாகக் கூறினால், ஒருகாலத்தில் மாணவர்களின் போற்றுதலுக்குரியவர்களாக கருதப்பட்ட ஆசிரியர்கள் இன்று தமக்குரிய அந்த இடத்தை இழந்து வருகின்றார்கள் என்றுதான் கருதவேண்டியுள்ளது. (இதற்கு வேறு பல சமூகப் பொருளாதார காரணிகளும் துணையாகவுள்ளன.)

பல பாடசாலைகளில் ஆசிரியர்களை அதிபர்களே மதிப்பதில்லை. தாங்களும் ஒருகாலத்தில் ஆசிரியர்களாக இருந்தவர்கள் எனும் உணர்வின்றி அதிகாரமாக நடந்து கொள்கின்றனர். அற்ப காரணங்களுக்காக ஆசிரியர்களை  அவமானப்படுத்துவதும் தமது நிர்வாக பலத்தை பிறரிடம் காட்சிப்படுத்தும் விதமாக கெடுபிடிகள் வதைகள் புரிய முயற்சிப்பதும்   கூட நடப்பதுண்டு.


பெற்றோர்கள் இன்னும் ஆசிரியர்களை உயர்வாகவே நடாத்தினாலும் அவர்களில்  சிறு தொகையினராவது  கண்ணியக் குறைவாக நடந்து கொள்ளாமலில்லை.

தங்கள் பிள்ளைகளின் அறிவுக்கும் ஆளுமைக்கும் வழிகாட்டும் ஆசிரியர்கள் எப்போதாவது சிறிது அதிகமாக மாணவர்களைக் கண்டித்து அல்லது தண்டித்து விட்டால் போதும் (ஆனால்  அற்ப காரணங்களுக்காக மாணவர்களை மிருகத்தனமாக வதைத்த விதிவிலக்கான சில சம்பவங்களும் இல்லாமலில்லை). உடனே வெகுண்டெழுந்து அளவுக்கு மீறி ஆர்ப்பாட்டம் புரிந்து  அவமானப்படுத்தும் பெற்றோர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.
இந்த சூழ்நிலையில் ஆசிரியர் தினம் எவ்வாறு பாடசாலைகளில் கொண்டாடப்படுகின்றது?

பெற்றோர்களும் மாணவர்களும் தாங்களாக முன்வந்து பாராட்ட வேண்டிய இந்த நிகழ்வைக் கூட ஆசிரியர்கள்தான் வழிநடாத்த வேண்டியுள்ளது. பல இடங்களில் ஆசிரியர்கள் ஏறத்தாழ தமக்குத் தாமே பாராட்டுதல் நடத்திக் கொள்கின்றனர்.

வருடத்தின் மீதி நாட்கள் முழுவதும் ஆசிரியர்களின் வழிகாட்டுதலைப் புறக்கணித்து நடக்கும் மாணவர்களும் ஆசானின் மனங்களை நோகடித்து அதிர்ச்சி மதிப்புப் பெறும் பெற்றோர்களும் குறைகூறியே கொல்லும் அதிபர் மற்றும் மேலதிகாரிகளும் ஒன்றுசேர்ந்து ஒருநாளைத் தேர்ந்தெடுத்து மாலையிட்டுப் பாராட்டுவதை எப்படி மனதார  ஏற்றுக் கொள்ள முடியும்.

(தொடரும்)

- Jesslya Jessly