Saturday, March 31, 2012

கவிதை




விழித்திரு பெண்ணே !





விழித்திரு பெண்ணே!
விசித்திரமான காலம் இது
விழித்திரு பெண்ணே!


காதலெனும்
வலையில் விழுந்திடுவாய்
கவனமாய் இருந்திடு!
காதல் புனிதமானதுதான்
எப்போதெனில்
மனிதாபிமான உள்ளங்கள்
காதலிக்கும் வரையும்...


காதலை கவனத்துடன் 
பார்த்திடும்போது
அது என்றும் சுகமானதே
அதனை சபலத்துடன்
பார்த்திடும்போது
அது சுமையானதே!


மனப்பரிமாறலுள்
செய்வதுதான் காதல்
மானப்பரிமாற்றம் செய்வதல்ல..
மனசாட்சியுடன் நடந்துகொள்!


ஐந்து நிமிட சுகத்திற்கு
ஆயுளையே அடமானம் வைக்கும்
பொய்மைபூத்த காதலைப்
பொருந்திக் கொள்ளாதே பெண்ணே!


பெண்ணே..!
உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்து
உண்மைக் காதலை உள்வாங்கு
சந்தைப் பொருளாக மாறும்
சாயம் பூசிய காதலைத் தூரமாக்கு.!


சமூகத்தை வெற்றிகொள்
ஆனாலும் நீ
காதலித்துப் பார்... நிஜமான காதல்
என்றென்றும் சுகமானதே...!

-எஸ். முபீனா, திருகோணமலை

மௌனகுரு : யதார்த்தமோ யதார்த்தம்!






'மௌனகுரு என்று படம் வந்திருக்கு. பொலீஸ் கதை ஒன்று. ஒருக்காப் பாரேன்!'

எனது உறவினர் ஒருவர் போகிற போக்கிலே சொல்லிவிட்டுப் போனார். இருபத்து நான்கு மணிநேரமே போதாதிருக்கும் இன்றைய இயந்திர வாழக்கைச்சுழலில் தமிழ் திரைப்படமொன்றுக்காக இரண்டரை மணிநேரத்தை செலவிடுவதற்கு சட்டென்று உடன்பட முடிவதில்லை. அபூர்வமாக வெளிவரும் ஒரு நல்ல திரைப்படத்திற்காக மட்டுமே நேரமொதுக்கும் பழக்கமுண்டு. அதுவும் ஒரு முதற்தடவையாக பார்க்கும்போது ஒரு முழுப்படத்தை விட்டு விட்டுப் பார்த்து இரசிப்பது எனக்கு ஒத்தவராத ஒன்று.


மௌனகுரு பற்றி வேறு எதுவுமே தெரியாத நிலையில்தான் பார்க்கத் தொடங்கினேன். ஆனால் இப்போது சில வாரங்களாக அதைத் தவிர வேறு எதையும் பார்க்க முடியாமல் அதையே திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டிருக்கின்றேன். குறைந்த பட்சம் ஒரு ஆறு தடவையாவது முழுமையாகப் பாரத்திருக்கின்றேன். மிகவும் பிடித்த காட்சிகளைத் திரும்பத் திரும்ப ஓட்டிப் பாரத்ததற்கு கணக்கே கிடையாது. அப்படியென்ன அது? என்று கேட்பவர்களுக்காக இதை எழுதுகின்றேன்.


ஒன்றும் பிரமாதமான கதையோ பிரண்டமானமான காட்சியமைப்புகளோ நட்சத்திரப் பட்டாளங்களோ அசத்தும் தொழினுட்பக் கிறங்கடிப்புகளோ கிடையாது. அப்படி இருந்தும் மனதிலே பச்சக்கென படம் ஒட்டிக்கொள்வதற்கு இருக்கும் காரணம் என்ன தெரியுமா?    யதார்த்தம்..!


யதார்த்தமென்றால் யதார்த்தம், யதார்த்தமோ யதார்த்தம்!


ஆம். இதுவரைக்கும் தமிழ் சினிமா எத்தனையோ யதார்த்த சினிமாக்களைக் கண்டிருக்கின்றது.  அண்மைக் காலத்திலே காதல், வெய்யில்...தொடங்கி ரேனிகுண்டா என்று பட்டியல் நீள்கின்றது.


வசூலைப் பற்றிய கவலை குறைவான ஒரு தயாரிப்பாளரும் கொஞ்சம் உலக சினிமாக்களில் பரிச்சயமுள்ள இயக்குனரும் சேர்ந்து விட்டால் ஒரு குடும்பக் கதையையோ சமூகக்கதையையோ யதார்த்தமாகச் சொல்வதற்கு நிறைய வாய்ப்புகளுள்ளது.  ஆனால் ஒரு போலீஸ் கதையை யதார்த்தமாக சொல்வதற்கு நிச்சயம் இன்னும் ஆழமான திறமையும் துறைசார்ந்த அறிவும் தேவை.


தங்கப்பதக்கம் முதல் இப்போது மௌனகுரு வரை வந்த போலீஸ் படங்களில் குருதிப்புனல் ஓரளவு யதார்த்தமாகப் படம்பிடிக்கப்பட்டிருந்தது எனலாம்.  அதன் பிறகு வந்த படங்களில் பொதுவாக தொழினுட்ப ஆதிக்கமும் பிரமாண்ட அகங்காரமும் இருந்தளவுக்கு யதார்த்தம் இருக்கவில்லை.


சரி, இப்போது மௌனகுருவைப் பார்ப்போம்....


உள்ளுரில் படிக்கும் எதையும் முகத்துக்கு நேரே பேசும் சற்று மூடி டைப்பான கல்லூரி மாணவன் கருணா சிறு கைகலப்பு ஒன்றின் காரணமாக சென்னையிலே திருமணமாகிக் குடியிருக்கும் அண்ணனின் சிபாரிசோடு அங்கிருக்கும் அருள்தாஸ் கல்லூரியில் சேர்கின்றான். அண்ணனின் மாடிக்குடியிருப்பிலே ஏற்கனவே அண்ணியின் தங்கையும் மருத்துவக் கல்லூரி மாணவியுமான ஆர்த்தி தங்கியிருப்பதால் கல்லூரி விடுதியில் தங்க வேண்டியவனாகின்றான் கருணா.


அருள்தாஸ் கல்லூரி விடுதியில் தங்கியிருப்பவர்களின் கைத்தெலைபேசிகள் மணிக்கூடுகள் போன்ற சிறுசிறு பொருட்கள் மர்மமான முறையில் தொடர்ச்சியாக திருடுபோய்க் கொண்டிருக்கின்றன. அவ்வாறு திருடுபவன் என்றாவது ஒருநாள் அகப்படும்போது வசூலிப்பதற்காக காணாமல் போகும் பொருட்களின் விபரம் விடுதிப் பொறுப்பாளரினால் தேதிவாரியாக ஒரு புத்தகத்திலே குறித்த வைக்கப்படுகின்றது.



இதேவேளை சென்னை புறநகர்ப் பகுதியில் ஆள்அரவமற்ற வீதியில் கோடிக்கணக்கான கறுப்புப் பணத்துடன் செல்லும் கார் ஒன்று விபத்திலே சிக்குகின்றது. அந்த இடத்தில் எதேச்சையாக நின்றிருக்கும்  உதவி கமிஷனர் மாரிமுத்து உட்பட போலீஸ் அதிகாரிகள் நான்குபேர் பணத்துக்கு ஆசைப்பட்டு குற்றுயிராய்க்கிடக்கும் கார்ச் சாரதியை அடித்துக் கொன்றுவிட்டு நழுவிவிடுகின்றார்கள்.



உதவி கமிஷனர் மாரிமுத்துவடன் வாடிக்கையாக உறவு வைத்திருக்கும் ஒரு விபசாரிப் பெண் மாயா மேற்படி கார் விபத்து மற்றும் கறுப்புப்பண அபகரிப்புப் பற்றி தனது சக அதிகாரியடன் அவர் பேசும் ஒரு தொலைபேசி உரையாடலை தந்திரமாக கமெரா ஒன்றில் பதிவுசெய்து விடுகின்றாள். அதனை வைத்து கமிஷனரை மிரட்டிப் பணத்தைப் பறிக்கும் உத்தேசத்துடன் தனது கூட்டாளிகள் இருவரை ஒரு தேனீர்விடுதிக்கு வரவழைத்து வீடியோவைக் காண்பிக்க அவர்களோ அது போலீஸ் விவகாரம் என்பதால் மறுத்துவிட்டுப் பின்வாங்கிச் சென்று விடுகின்றார்கள். அதேவேளை அவளது கைப்பையிலிருந்த வீடியோ கெமரா அதே தேனீர் விடுதிக்கு வந்திருந்த அருள்தாஸ் கல்லூரி மாணவர்களில் ஒருவரால் திருடப்பட்டுகின்றது. இதனால் குழப்பமடைந்த மாயா தலைமறைவாகி விடுகின்றாள்.



திருடப்பட்ட கமெராவில் பதிவுசெய்யப்பட்டிருந்த உரையாடல் உதவி போலீஸ் கமிஷனர் மாரிமுத்துவுக்கு அநாமதேயத் தொலைபேசி மூலமாக தெரிவிக்கப்பட திகிலடையும் மாரிமுத்து கோபவெறியுடன் விபச்சாரி மாயாவைத தேடுகின்றார்;. இறுதியில் மாயா அகப்பட்டுவிடுகின்றாள். மாரிமுத்துவிடம் அடிபட்டு உயிரைவிடும் மாயாவினால் அருள்தாஸ் கல்லூரி விடுதி விவகாரம் தெரியவருகின்றது.



இதனால் அருள்தாஸ் கல்லூரி விடுதியை இரகசியமாக கண்காணிக்கின்றனர் உதவி கமிஷனர் மாரிமுத்து குழுவினர். இதேவேளை மாயாவின் கமெரா உட்பட  திருடப்பட்ட பொருட்கள் அனைத்தும் ஒரு பையில் இடப்பட்டு விடுமுறை நாளிலும் கூட விடுதியில் தங்கியிருக்கும் கருணாவின் அறைவாசலில் அவனுக்குத் தெரியாமல் வைக்கப்படுகின்றது. சரியாக கருணா அதை எடுத்து ஆராய்ந்து கொண்டிருக்கும்போது உள்ளே வரும் போலீஸ்காரர்கள் இருவரும் கருணாதான் தங்களை மிரட்டிய சூத்திரதாரி என்று தப்பாக நினைத்து அவனைக் கடத்திச் சென்று விடுகின்றனர். கருணாவையும் மாயாவின் கூட்டாளிகள் இருவரையும் ஒன்றாக காட்டுப்பகுதி ஒன்றுக்குக் கொண்டு சென்று சுட்டுக்கொல்ல முனையும்போது ஏற்படும் குழப்பத்தில் கருணா மட்டும் எதேச்சையாக உயிர்தப்பி இரவோடு இரவாக கல்லூரி விடுதிக்கு மீண்டும் வந்து அதிபரிடம் மட்டும் நடந்ததைக் கூறுகின்றார்.



அதிபரும் தனது நெருங்கிய பொலீஸ் நண்பர் ஒருவர் மூலமாக சிக்கலைத் தீர்க்கலாம் என்று கூறி கருணாவை மறுநாள் காலையில் சந்திக்குமாறு அனுப்பி வைக்கிறார். ஆனால் அன்றிரவே மாரிமுத்து குழுவினரிடம் அகப்பட்டுக் கொள்ளும் கருணா ஒரு மனநோய் வைத்தியசாலையில் வலுக்கட்டாயமாக அனுமதிக்கப்படுகின்றார். அங்கு அவரது குடும்பத்தினர் மற்றும் கல்லூரி அதிபர் வரவழைக்கப்பட்டு போலீசுக்கு வேண்டிய மனநோய் வைத்தியசாலை வைத்தியர் உதவியுடன்  திட்டமிடப்பட்டு ஓர் மனநோயாளி எனச் சித்தரிக்கப்படுகின்றார். குடும்பத்தினரும் விவரம் அறியாது நம்பி அங்கேயே சிகிச்சை பெற ஒப்புதல் தருகின்றனர்.



அதேவேளை மூடிய வீட்டினுள் தூக்கில் தொங்கிக் கிடக்கும் மாயாவின் சாவை விசாரிக்க வரும் கர்ப்பிணியான போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனியம்மாளின் நேர்மையான நடவடிக்கைகள் மாரிமுத்து குழுவினருக்கு வயிற்றில் புளியைக் கரைக்கின்றது. ஆனாலும் அதனைக் குழப்புவதற்கு முயன்றால் சிக்கலாகி விடும் என்பதால் தள்ளியிருந்து கண்காணித்துக் கொண்டிருக்கின்றனர்.




இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் மாயா பற்றி விசாரித்துத் துப்புத் துலக்கிக் கொண்டிருக்கும்போது படிப்படியாக தனது மேலதிகாரிகளில் ஒருவரான மாரிமுத்து அடங்கிய நால்வர் குழுவினரின் தகிடுதத்தங்களும் கருணா அதிலே தேவையில்லாமல் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரிய வருகின்றது. இதனால் அவர்கள் நால்வரையும் கைதுசெய்வதற்கு அவசியமான ஆதாரங்களைத் திரட்டிக் கொண்டிருக்கின்றார் பழனியம்மாள்.




மறுபுறம் மனநோய் வைத்தியசாலையில் இருந்து இன்னொரு நோயாளியின் உதவியுடன் தப்பியோடிவரும் கருணா தன்னைக் கொல்வதற்காகப் பிடித்துச் சென்ற நால்வரில் ஒருவரான போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனைத் தந்திரமாகக் கடத்திவந்து தான் மனநோயாளி அல்ல என்ற  உண்மையை பகிரங்கமாகக் கூறுமாறு தனது கல்லூரி வளாகத்தினுள்ளிருக்கும் பாழடைந்த கட்டிடத்தினுள்ளே கைத்துப்பாக்கி முனையிலே பணயக்கைதியாகப் பிடித்து வைத்திருக்கின்றான்.




இதை எப்படியோ மோப்பம் பிடிக்கும் மற்றைய மூவரும் கருணாவைப் பிடித்து விடுகின்றனர். இதன்போது அவர்களுக்கிடையில் நிகழும் வாக்குவாதத்தில் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மாரிமுத்துவின் துப்பாக்கிக்குப் பலியாகின்றார். அடுத்து கருணாவைத் தீர்த்துக்கட்டத் தயாராகும்போது அங்கு வரும் பழனியம்மாள் தலைமையிலான போலீஸ் குழுவிடம் மாட்டிக் கொள்கின்றனர்.




அவர்களிடமிருந்து கருணாவைக் காப்பாற்றி மாரிமுத்துவையும் மீதமிருக்கும் இரு போலீஸ் குற்றவாளிகளையும் கைதுசெய்ய முயலும்போது பழனியம்மாளுக்கு அவரது உயரதிகாரியிடமிருந்து வேறுவிதமான ஆணை வருகின்றது. அதன்படி பழனியம்மாள் பொறுப்பை மாரிமுத்துவிடம் ஒப்படைத்துவிட்டு வெளியேறவேண்டிய சூழல் உருவாகின்றது. மாரிமுத்து பழையபடி கருணாவை மனநல காப்பகத்துக்கு கொண்டு செல்ல முயல்கின்றார். இதை எதிர்பாராத கருணா வெகுண்டெழுந்து நிகழும் கைகலப்பில் உதவி போலீஸ் கமிஷனர் மாரிமுத்துவும் போலீஸ் அதிகாரிகள் மூவரும் கத்திக்குத்துக்குள்ளாகிக் கொல்லப்படுகின்றார்கள்.




நடந்ததை அறிந்து மீண்டும் திரும்பி வரும் இன்ஸ்பெக்டர் பழனியம்மாள், கைகலப்பினால் சோர்ந்து இரத்தம் வழியும் கத்தியுடன் நிற்கும் கருணாவை மனநலக்காப்பகத்திற்குக் கொண்டு செல்வதாக உச்சகட்டக் காட்சி நிறைவு பெறுகின்றது.

இதுதான் கதை. கதையைச் சொல்லும்போதே இதில் புதுமையாக ஒன்றுமில்லை என்பது புரிந்திருக்கும். கதாநாயகன் சதிக்குள்ளாவதும் குற்றம் சுமத்தப்படுவதும் அதிலிருந்து விடுபடுவதற்காக நீதியையும் சட்டத்தையும் நம்பாமல் தப்பித்து வந்து சில சாகசங்களின் இறுதியில் காரணமானவர்களை ஒழித்துக்கட்டிவிட்டு சுபம் போடுவதும் தமிழ் சினிமாக்களின் அரைத்தமாவுகளில் ஒன்றுதானே. ஆனால் இதையெல்லாம் ஒரு சிறிய சினிமாத்தனமும் இல்லாமல் ஏதோ நாம் நேரிலே பார்த்திருக்க நடைபெறும் சம்பவங்கள் போல இருப்பதுதான் மௌனகுருவின் விசேடம். உரையாடலாகட்டும் பாத்திரப்படைப்புகள் மற்றும் அவற்றின் நடிப்பு வெளிப்பாடுகளாகட்டும் எல்லாமே வெகு இயல்பாகவுள்ளது.

எடுத்துக்காட்டாக ஒரு காட்சியைப் பாருங்கள்...

ஆளில்லா வீதியிலே கார் விபத்துக்குள்ளானதும் அதனைப் பார்த்து அங்கு ஓடிச் செல்லும் போலீஸ் உதவி கமிஷனர் மற்றும் அதிகாரிகள் உட்பட நால்வரும் சாரதி இறந்துவிட்டதாக நினைத்து விடுகின்றார்கள். அந்தப் பகுதிக்குரிய பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் நாராயணமூர்த்தி என்பவருக்கு விபத்தைப் பற்றி அறிவிப்பதற்காக உதவி கமிஷனர் மாரிமுத்து கைத்தொலைபேசியில் முயன்று கொண்டிருக்கின்றார். அப்போது காரின் பின் ஆசனத்தை ஆராயும் ஒரு போலீஸ்காரர் ஒரு பெட்டி முழுவதும் பெருந்தொகையான கரண்ஸி நோட்டுக்கள் இருப்பதைப் பார்த்து விடுகின்றார். அதன் பிறகு அவர்களுக்கிடையே நடைபெறும் உரையாடலை அப்படியே தருகின்றேன். வாசியுங்கள்...

'சார் ஒரு நிமிஷம்!'
(நால்வரும் பெட்டியைப் பார்க்கின்றார்கள்)

'ஃபுல்லா இருக்கா என்ன?'

'ஆமா சார்'

'ஒரு ஏழெட்டு சீ (கோடி) இருக்கும் போலிருக்கே?'

'தாராளாமா இருக்கும்..சார்!'

'இப்ப என்ன பண்ணணும் ஆங்?' என்று உதவி கமிஷனர் மாரிமுத்து கேட்க,
மற்ற மூவரும் ஆளையாள் பார்த்துக் கொள்கின்றார்கள்.

'நீங்கதான் சார் சொல்லணும்' -இன்ஸ்பெக்டர் செல்வம்.

'நாராயண மூர்த்திக்கு இன்னிக்குப் பெரிய கேஸ்!' என்கிறார் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், முகத்தில் ஏக்கம் தொனிக்க.

'இப்பிடி ஆளே இல்லாத எடத்தில இவ்வளவு பணத்தை உட்டுட்டு அநியாயமாப் போயிட்டானே' -இது செல்வம்.

'ஒரு வண்டியையும் காணோம்..ஒரு ஈ காக்கா கூட இல்ல!' -இது ஹெட் போலீஸ் பெருமாள்

யோசித்தபடி கைத்தொலைபேசியை நெருடிக் கொண்டிருக்கும் உதவி கமிஷனர் மாரிமுத்துவிடம்,

'லைன் கெடைக்கல்லயா சார்?'  எனக் கேட்கிறார் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன்.

'ம்ம்...! அப்பிடியே வெலகி ஓடுறீங்களே ராஜேந்திரன்?'

'சார்! அது..'

'பயமா?'

'ப..யோ..ம்...அது வந்து'

'பேசாம நாமளே டீல் பண்ணலாம்..என்ன சொல்றீங்க?'  -மாரிமுத்து.

'மாட்டிக்கிட்டா சார்?'

'மாட்ட மாட்டோம் ராஜேந்திரன்! க்ளியர் ஷொட்! செற்லாயிரலாம்!'



இந்த உரையாடலைப் பார்த்தால் இதிலே சம்பந்தப்பட்ட அனைவருக்கும் விபத்துக்குள்ளான காரிலேயுள்ள பணத்தை அபகரிக்கும் எண்ணம் இருப்பது தெளிவாகப் புலனாகின்றது. ஆனாலும்  தமது மேலதிகாரி மாரிமுத்துவிடம் அதை நேரடியாகத் தெரிவிக்க முடியாமல் அதற்குரிய சாதகங்களை எவ்வளவு இயல்பாக வெளிப்படுத்துகின்றார்கள் என்பதைப் பார்க்கலாம்.



இதுபோன்று எல்லாக் காட்சிகளிலும் இயல்பு இழையோடுகின்றது.
கதை சொல்லப்பட்ட விதமும் சிறுகிளைக் கதைகள் பிரதான கதையுடன் இயல்பாக இணைக்கப்பட்டுள்ள விதமும் நேர்த்தியாகவுள்ளன.


நடக்கவே சிரமப்படும் கர்ப்பிணியான இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் வெகு இயல்பாகவும் அழுத்தமாகவும் குற்றப் புலனாய்வில் ஈடுபட்டுத் துப்புத் துலக்குவது தமிழுக்கு ஓரளவு புதுசு. அத்துடன் துப்பாக்கியை ஸ்டைலாகப் பிடித்தபடி அலையும் தமிழ் சினிமாவின் ஜேம்ஸ்பொண்ட் பாணி துப்புத்துலக்கர்களுக்கெல்லாம் நக்கலும் கூட.



போலீஸ்காரர்கள், விபச்சாரி மாயா, கல்லூரி அதிபர், அவரது மகன்,  மாணவர்கள், விடுதிப் பொறுப்பாளர், காவலாளி,  கருணாவின் தாய் , அண்ணன், அண்ணி, காதலி ஆர்த்தி, மனநல வைத்தியர் என்று ஒவ்வொரு பாத்திரமும் மனதிலே அழுத்தமாய் பதியும் வண்ணம் கதையோட்டத்திலே இயல்பாக  பொருந்திப் போகின்றார்கள்.



நட்சத்திரங்கள் மறைந்து பாத்திரங்கள் மட்டும் மனதில் நிற்பது புதிய இயக்குனரின் திறமைக்குச் சான்று. படத்தின் போக்குக்கு ஏற்ற விதத்தில் உறுத்தாத ஒளிப்பதிவும் இசையமைப்பும் படத்தொகுப்பும் இருப்பது ஆறுதலளிக்கின்றது.



மொத்தத்தில் தமிழ் சினிமாவில் ஆரோக்கியமான மாற்றங்கள் நிகழ்வதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.

(தொடரும்)


- Jesslya Jessly


Thursday, March 29, 2012

கவிதை





வாழ்க்கை 





ழகுதான் வாழ்க்கை என்றால்
பூக்கள் மட்டும் போதும் இங்கு



அன்புதான்
வாழ்க்கை என்றால்
தாய்மட்டும்
தாராளமாய்ப் போதும்



கல்விதான்
வாழ்க்கை என்றால்
நல்ல புத்தகங்களில்
நனைந்தாலே போதும்



காசுதான்
வாழ்க்கை என்றால்
வரவுமிக்க
வழிமுறை ஒன்றைத்
தெரிந்தாலே போதும்



நட்புதான்
வாழ்க்கை என்றால்
நம்மைப்புரிந்த
நல்ல நண்பர்கள் நம்மோடு
இருந்தாலே போதும்



இன்னும்
அரசியல்தான்
வாழ்க்கை என்றால்
வாக்குப்போடும்
வல்லமை மிக்க
கூட்டம் ஒன்று
இருந்தால் போதும்



ஆனால்...
வாழ்க்கை என்பது
ஏக்கத்துடன் நின்று
நாட்களை எண்ணி
தூரம் அறிந்து
துயரம் அறிந்து
வாங்கிக்கொடுத்து
முரண்பட்டு
பின் உடன்பட்டு
தர்க்கித்து
தகவல் அறிந்து
நொந்து நூலாகி
பின் அமிழ்ந்து போகிறோமே!


-எஸ். முபீனா,  திருகோணமலை

(நன்றி:மல்லிகை மார்ச் 2012)

Tuesday, March 27, 2012

கவிதை:


பிரிவுகள் Vs சந்திப்புகள்



பிரிவுகளை நான்
அதிகம் நேசிக்கின்றேன்!


ஆம்!
நேரில் வந்து உன்னைக் காணும்
சந்திப்புகளை விட
நினைவுகளில் நிறுத்தி வைத்து 
உணர்வுகளால் உறவாடும்
பிரிவுகளைத்தான் பிடித்திருக்கின்றது!


இன்று நாளையென்று
நாட்களைக் நகர்த்தி
வாட்டியெடுக்கும் வாரங்களையெல்லாம்
விரட்டியடித்து
உயிரே உனைக்காண ஓடோடி வந்தால்..


இளமை வேகம்
இயல்பான துணிவு அத்தனையுமிருந்தும்
'யாராவது பாரத்து விடுவார்களோ'
என்ற பயத்தில்
இதயம் எகிறிக்குதிக்கும்


அதுவரையில்
ஒரு நிறைமாதப் பெண்ணின்
நிதானத்தோடு நடைபயிலும்
என் கடிகார முட்கள்
உன்னைக் கண்டதும்
ஓர் அவசரகால ஆம்புலன்ஸாகி
அலறியடித்து ஓடுவதேன்?


உன்னோடு பேச
ஓராயிரம் முறை ஒத்திகை பார்த்து
இரவிரவாய் நெட்டுருப்போட்டு வைத்த
என் வார்த்தைத் தோரணங்களெல்லாம்
ஒரு நொடியில் உதிர்ந்துவிழ..


எதையோ பேசவந்து
எதையெதையோ பேசிவைத்து
ஏதோகேட்க வந்து எதையோ கேட்டு வைத்திட
சடுதியாய் சாகும் நம் சந்திப்புவிழா!


ஓ!
ஏக்கங்கங்கள்
என்னைத் தத்தெடுக்க
மீண்டும் வந்து கொல்லும்
உன்பிரிவு


ஆனாலும்
சந்திப்புக்களை விட பிரிவுகளைத்தான்
நான் அதிகம் நேசிக்கின்றேன்


ஆம்!
சந்திப்புகள்
சடுதியாய் வந்து போகும் தபால்காரன்
ஆனால் பிரிவுகளோ
நமது காதலின் வலிமையை
இரகசியமாய் பரீட்சிக்கும்
இலவச வைத்தியன்!

-மூதூர் மொகமட் ராபி

Thursday, March 22, 2012

கவிதை:




ஆற்றங்கரை!



காயக் கன்னியின்
அந்திநேர அலங்காரங்களில்
மனதைப் பறிகொடுத்த மஞ்சள் சூரியன்
அடங்காத சபலங்களோடு
அடிவானமெனும் அந்தப்புரத்திற்குள்
இறங்கிக் கொண்டிருக்கும்
ஓர் இனிய மாலைப்பொழுது!

***

ஓ!
அந்தத் தென்றல்
ஓர் நெடுநாள் நண்பன்போல
என்தோள்மீது கைபோட்டு
நேசமாய் கேசம் அளைந்து
குசலம் விசாரித்துச் செல்லும்!

***


என் கால்களின் கீழே..
துள்ளியோடும் பள்ளிச் சிறுவர்போல
ஒன்றையொன்று துரத்தி
ஓடிப்பிடித்து விளையாடும் கரையோர நீரலைகள்
என்பாதங்களிலே ஈரமுத்தங்கள் பதித்து
இரக்கத்தைக் கூறும்!


***



அடடா!
ஆற்றுநீர்ப்பரப்பிலே காற்றுத்தூரிகை வரையும்
கைரேகைகளைப் படித்து
மௌனச்சோதிடம் சொல்லத்தான்
காத்திருக்கின்றதோ
மரக்கிளையில் தவம்புரியும் மீன்கொத்தி?


***


அதோ!
கொடுக்குத் துப்பாக்கியுடன்
துடுக்கு நடைபோடும்
சின்னச்சின்ன சிவப்பு நண்டுச் சிப்பாய்கள்
எந்த நாட்டின் 'அமைதிகாக்க'
ஆற்றுமணல்மீது அணிவகுப்பு நடாத்துகின்றன?


-மூதூர் மொகமட் ராபி

Monday, March 5, 2012

சிறுகதை:






ஆறுகால்
விமானங்கள்!




நேற்று மாலையில் இருந்தே பசி தாங்காமல் சுற்றியலைந்து கொண்டிருக்கின்றேன். சரியாக ஒரு முழுநாளும் கடந்து விட்டது. இன்னமும் நான் கொலைப்பட்டினி என்றால் நம்புவீர்களா? அங்குமிங்கும் அலைந்து திரிந்தாலும் யாரும் வசமாக மாட்டுகிறார்களில்லை. வயிறு ஒட்டிப்போய் கால்களெல்லாம் பலமிழந்தது போய் தொய்ந்து கிடக்கின்றது. இருந்தாலும் நம்பிக்கையிழக்கவில்லை நான்.

'உணவு கிடைக்காத காலங்களிலே மெல்ல அலைச்சலைக் குறைத்து ஓய்வெடுத்துக்கொள்வதே உத்தமம்' என்பதுதான்  என்னைப் போன்றவர்களின் மூளையின் ஒவ்வொரு உயிரணுவுக்குள்ளுமிருக்கும்  செய்தி. எங்கள் உடல் மொழிகளே அதை நினைவூட்டி  விடும். ஆனாலும் யாராவது ஒரு ஏமாந்த சோணகிரி வந்து மாட்டாமலா போய் விடுவான்? அப்படி ஒருவன் வந்துசேரும் வரைகூட காத்திருக்கப் பொறுமையில்லை எனக்கு. எதையும் தேடியலைந்து உண்ணும் வேட்டையில்தான்  எனக்கு எப்போதுமே ஒரு அலாதி இன்பம். இருந்தாலும் இன்றைக்கு என் நிலைமை கொஞ்சம் மோசம்தான்.
கடைசி முயற்சியாக அயலிலிருந்த ஒரு தகரக்கூரை வீட்டினுள்ளே  மெல்ல எட்டிப் பார்த்தேன். அதற்குள் சிறு மண்ணெண்ணெய் விளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்தது. அந்த விளக்கைச் சுற்றியிருந்து இரண்டு மூன்று பையன்கள் புத்தகங்களை வைத்துப் படித்துக் கொண்டிருந்தான்கள். 'ஆகா! இதுதான் எனக்குப் பொருத்தமான வெளிச்சம்..புகுந்து விளையாடிட வேண்டியதுதான்' என்று வாயைச் சப்புக்கொட்டி உள்ளே நுழையப் தயாரான போதுதான்  சே!அந்தச் சண்டாளி- அந்தப் பையன்களின் தாய்- சட்டென வந்து, 'கரண்ட் வந்திட்டுது பிள்ளைகள்..சரி இனி லாம்பை ஊதி நூத்து விடுங்க' என்று மின்குமிழை எரியச்செய்து காரியத்தையே கெடுத்து விட்டாள், பாவி!

கண்ணெல்லாம் கூசிப்போய் துண்டைப்பிடி துணியைப்பிடியென்று ஒரே பாய்ச்சலில் பறந்து வந்துவிட்டேன். ஆம், இப்போது கொஞ்ச காலமாக வெளிச்சம் பிரகாசமாக இருந்தால் போதும். அத்தனை கண்களும் வலிக்கின்றன. அவற்றிலும் நிறையவே பழுதடைந்து பார்க்கும் உருவமெல்லாம் ஓட்டைகள் விழுந்து நெய்யரி வடிவத்தில்தான்  தெரிகின்றது. 

ஆம்! எனக்குப் புரிந்துவிட்டது.

நீண்ட காலம் வாழ்ந்து புணர்ந்து கணக்கில்லாமல் வாரிசுகள் ஈன்று அடுத்த சந்ததியை வளப்படுத்தியவள் நான். வயதாகி விட்டது. இனி எனக்கு இயற்கை மரணம்தான். சின்ன வயசிலே எவ்வளவு சுறுசுறுப்பான பெண் நான் தெரியுமா? எவ்வளவு வெளிச்சமிருந்தாலும் கும்மிருட்டானாலும் சும்மா அதிரடியாய் வேட்டையாடுவேன். வேட்டையிலே துடிக்கத் துடிக்கக் கடித்துச் சுவைத்து விட்டு கணப்பொழுதில் கம்பி நீட்டுவேன். என் அழகையும் இளமையையும் பார்த்து எத்தனை பயல்கள்தான் சுற்றித் திரிந்திருக்கிறான்கள்.  வேட்டைக்கு வந்த இடத்திலே என்னைப் பார்த்து கவனம் பிசகி அடிவாங்கியே உயிரை விட்டவன்கள் எத்தனைபேர். குறிதவறி விபத்தில் மாட்டியவனும் நெருப்பில் விழுந்தவனும் இராட்சதக் காற்றாடிக்குள்ளே அகப்பட்டு கால்களை உடைத்துக் கொண்டவனும்தான் எத்தனை எத்தனை?

எவ்வளவு சுவாரசியமான காலங்கள் அவை.  சுதந்திரம், சந்தோசம், காதல், காமம், சோகம், ஏமாற்றம், துணிவு...என்று கலவையான அனுபவங்கள். எத்தனை வீரதீரச்செயல்கள்,.. வேடிக்கை நிகழ்வுகள், அனுபவங்கள்...அவற்றில் எதைச் சொல்வது எதை விடுவது? ஆங்! இருங்கள்! ஒரு அனுபவம் உள்ளது. அதை நிச்சயம் நீங்கள்  கேட்கத்தான் வேண்டும்.  அதைச் சாகும்போது நினைத்தாலும் ஒருதடவை சிரித்துவிட்டுத்தான் சாவேன் என்றால் பாரத்துக் கொள்ளுங்களேன்.

அது ஒரு புதன்கிழமையின் காலைநேரம். திருகோணமலை  நீதிமன்ற வீதி வழியாக மனையாவெளியிலுள்ள வண்ணான் குளத்தை நோக்கிப்போய்க் கொண்டிருந்தேன்.  அப்போது திடீரென அடித்த பலமான காற்றிலே எப்படியோ வழிதவறி ஒரு பெரிய கட்டிடத்திற்குள் வந்துவிட்டேன்.
அது ஒரு பெரிய மண்டபம். சிறு மேடை போலிருந்த ஒரு முனையிலே நீளமான மேசைகளும் பெரிய நாற்காலிகளும் போடப்பட்டிருக்க மண்டபம் முழுவதும் குறிப்பெழுதுவதற்கு வசதியாக ஒருபுறம் சற்று அகலக் கைப்பிடி வைத்த நாற்காலிகளால் நிறைந்திருந்தது. மண்டபத்தின் ஒரு முனையிலிருந்த சுவரிலே ஒரு பெரிய  வெள்ளை நிறப்பலகை மாட்டியிருந்தது. அதிலே ஒரு பெண்ணை ஓவியமாய் வரைந்து வைத்திருந்தார்கள். அதை உற்றுப் பார்த்தேன். அட! என்ன ஆச்சரியம்?  அது ஏறத்தாழ என்னைப் போலவே இருந்தது.  தூரத்தில் இருந்து அது நான்தான் என்று சொன்னால் கேள்வி கேட்காமல் நம்பி விடுவீர்கள். நீண்ட கால்களையெல்லாம் எடுப்பாக நீட்டியபடி ஒய்யாரமாக நான் நின்றிருந்தேன், படத்தில். அதன் கீழே என்னவெல்லாமோ எழுதி வேறு வைத்திருந்தார்கள்.

சரி, வந்ததுதான் வந்தோம் இங்கே என்னதான் நடக்கிறது என்று பார்த்திட்விட்டுத்தான் போவோமே என்று ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டேன். சிறிது நேரத்தில் வாகனங்கள் சில வந்து நிற்கும் சத்தங்கள் கேட்டன. மூக்குக் கண்ணாடிகள், கழுத்துப்பட்டிகள் , தொந்தியில் வழுகும் நீளக்கால்சட்டைகள் அணிந்த வழுக்கைத்தலை மனிதர்கள் நிறையப்பேர் பைல்களை அள்ளிக் கொண்டு உள்ளே நுழைய அவர்களின் பின்னே மெலிந்த சில வற்றல் உருவங்கள் ஏதேதோ கம்பிகள் நீண்ட குழாய்கள் போன்றவற்றையெல்லாம் சுமந்து கொண்டு வந்தன. மெல்ல மெல்லக்கூட்டம் அதிகரித்து நாற்காலிகள் நிரம்பின.  சற்று நேரத்தில் மண்டபம் முக்கால்வாசி நிறைந்து விட்டது. மின்விளக்குகள் அத்தனையும் எரிந்து மின்விசிறிகள் சுழல மண்டபமே பளிச்சென்றிருந்தது.

மேடையில் அமர்ந்திருந்த ஓர் உயரமான வழுக்கைத்தலை ஆசாமி தொண்டையைச் செருமிக் கொண்டு ஏதோ பேசத் தொடங்கினார். எனக்கு எதுவுமே புரியவில்லை. அல்லது புரிந்து கொள்ள விரும்பவில்லையென்றும் கூறலாம். அவர் என்னவெல்லாமோ நிறையப் பேசினாலும் எனது கவனமெல்லாம் சுவரில் வரையப்பட்டிருந்த என்னையொத்த அந்த உருவத்திலேதான்  இருந்தது. அதைப் பற்றி ஏதாவது பேசுகிறார்களா என்றுதான் பார்த்துக் கொண்டிருந்தேன். இலேசாகக் கொட்டாவி வர ஆரம்பித்து விட்டது. பகல் தூக்கமில்லாத நேரங்களில் இப்படித்தான் கண்ணைக்கட்டுவது வழக்கம். போதாதற்கு வரும் வழியில் ஒரு நல்ல வேட்டை வேறு மாட்டியிருந்தது. அதிலே வயிறுமுட்ட ஒரு பிடிபிடித்து விட்டு வந்ததால் தூக்கம்  சுற்றியடித்தது. அப்படியே கண்ணயர்ந்து விட்டேன்.

எனக்கொரு பழக்கம் கண்ணயர்ந்தால் போதும், கனவு வந்து விடும்.

அப்படித்தான் அன்றும் வந்தது. சினிமாவில் படம் ஆரம்பித்ததும் தணிக்கைக்குழுச் சான்றிதழ் காட்டுவார்களே அதுபோல  நான்  கனவு காண ஆரம்பித்தால் ஒவ்வொரு முறையும் நான் பிறந்து வளர்ந்த கிராமத்திலிருக்கும்  ஆலமரத்தடிக் கோயில்குளம்தான் முதலில் வரும். அதன் பிறகு அக்கம் பக்கத்தில் வளவுக்குள்ளேயும் குடிசைகளுக்குள்ளேயும் போய் நின்று ரகசிய வேட்டையை ஏதோ பெரிய உலகசாதனை போல பேசிக்கொண்டிருக்கும் என் சிறுவயது நண்பர்கள் வருவார்கள். அதன் பிறகுதான் புதிய கனவின் காட்சிகள் ஆரம்பமாகும். அன்றும் அப்படித்தான் வந்தது. பின்பு ஏதேதோ காட்சியெல்லாம் காலப்பிரமாண ஒழுங்கின்றி வந்து கொண்டிருந்தது.

தம்பலகாமம் ரயில் நிலையத்தில் எதேச்சையாகச் சந்தித்து  ஆசைகாட்டி என்னை இங்கே நகரத்துக்குக்  கூட்டி வந்தவளான கொழும்பு நண்பி சரோஜி வந்தாள். கனவில் கூட ஆதவன் பட சரோஜாதேவி போல மிகை ஒப்பனையுடன்தான்; இருப்பாள் அவள். அதன் பிறகு இங்கே டவுனுக்கு வந்த புதிதில் என்னைக் காதல் வலையில் வீழ்த்தி ஏமாற்றிய அந்தப் படுபாவி வந்தான். கிராமத்திலிருந்து வந்தவளை என்னமாய் நைச்சியமாய்ப் பேசிக் கிறங்கடித்தான். முன்னும் பின்னும் சுற்றியலைந்து பாட்டுப்பாடி இந்த உலகத்தில் என்னைக் கவனிப்பதைவிட தனக்கு வேறுவேலையே கிடையாததைப் போல பாசாங்கு செய்து பின்னாலேயே திரிந்தான் அந்த நயவஞ்சகன்.  பின்பு தனக்குத் தேவையானதை அனுபவித்து முடித்து என்னைக் கர்ப்பமாக்கியதும் கழன்று கொண்டான் படுபாவி.

அவனது வாரிசுகளைச் சுமந்து கொண்டு தன்னந்தனியாகக் கஷ்டப்பட்டுத் திரிந்தவளை மறந்து விட்டு ஏதோ இந்த உலகத்திலேயே பிஸியானவன் போல கொஞ்ச நாள் போக்குக் காட்டியவன் பின்பு வேறு ஒருத்தியுடன் அலைந்தான். எனது முதல் பிரசவத்துக்கே கூட அவன் வரவில்லையென்றால் நம்புவீர்களா? கண்ணீரிலும் தண்ணீரிலுமாக  பிரசவித்த  வாரிசுகளையெல்லாம் அவமானந்தாங்காமல் நான் இரகசியமாய் கைவிட்டோடிய அந்த சோக நாளை என்னால் மறக்கத்தான் முடியுமா? பாவிமகன்! இவன் ஏன்தான் இன்னும் எனது கனவில் வந்து கொண்டிருக்கிறானோ...? அவனுக்குப் பிறகு இந்த பரபரப்பான நகர வாழ்வில்தான் எத்தனை காதல்கள்.. எத்தனை கூடல்கள்? எண்ணிக்கையே மறந்து போன பிரசவங்கள்தான் எத்தனை...ம்ம்! எல்லாம் பழகிப்போய்..பழசாகிப்போ...'

'படபடபடபடபடபட' வென்று திடிரெனக்கிளம்பிய கைதட்டல் ஒலியில் கனவு கலைந்து துள்ளியெழுந்தேன்.

மேடையில் முதலில் பேசியவர் அமர, மற்றுமொரு வழுக்கைத் தலையர்  வந்தார். கையிலே குச்சி ஒன்றை வைத்துக் கொண்டு சுவரிலிருந்த எனது படத்தில் தொட்டுத் தொட்டு ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். முதலில் இருந்த எனது படத்தோடு வேறு சிலவற்றையும் காட்சிப்படுத்தியிருந்தார்கள். நாங்கள் ஓய்வெடுக்கும் இடங்கள், குளியலறைகள், நீச்சல் குளங்கள் ஆகியவற்றின் படங்கள் கூட அங்கு இருந்தன. இதைல்லாம் இவர்களுக்கு எதற்குச் சொல்லித் தருகின்றார்கள்...?

அடச்சீ! இதென்ன கூத்து? எங்களது பிரசவங்கள் சம்பந்தமான படங்களையெல்லாம் வைத்திருக்கிறார்களே. ஓ! இது அநியாயம்! அப்பட்டமான உரிமைமீறல் இது! ஐயோ! போதாதற்கு அதையெல்லாம்  தொட்டுத் தொட்டுக்காட்டி வேறு கொச்சைப் படுத்துகின்றார்களே! அதுமட்டுமல்ல, அதோ எங்களது குழந்தை வாரிசுகளின் வளர்ச்சிப் பருவங்களைக் கூட விட்டு வைக்கவில்லை. அதுசரி, எங்களது அந்தரங்கமெல்லாம் இவர்களுக்கு எதற்கு?

சரி, என்னதான் சொல்லுகிறார் என்று கொஞ்சம் காது கொடுத்தேன். 'நண்பர்களே! இது நமது உயிர்களுக்கெல்லாம் விடுக்கப்பட்டுள்ள பலத்த சவால். எனவே கடந்த காலங்களைப் போல இதைச்  சாதாரணமான ஒன்றாக நினைத்து விட்டு விடக்கூடாது. எங்கேயெல்லாம் இருக்கிறார்களோ வளர்கின்றார்களோ அந்த இடங்களுக்கெல்லாம் சென்று அவற்றையெல்லாம் அழித்தொழித்தாக வேண்டிய அவசியம் வந்துவிட்டது. நமது தலைமுறையினரைப் பாதுகாப்பதற்காக இந்த அழித்தொழிப்பை நாம் உடனடியாக இன்று முதல் புதிய வேகத்துடன் செய்வோம்!'

'அட! படுபாவிகளா! இப்போதுதானே விளங்குகின்றது உங்கள் இனஒழிப்புத் திட்டம்? எங்களைப் பூண்டோடு அழித்து விட்டு நீங்கள் மட்டும் நன்றாக வாழத்திட்டமா?'

எனக்கு வெறியே பிடித்து விட்டது. 'அடேய்! இருங்கடா இதோ வாறேன்'  என்று  பிரகாஷ்ராஜ் கணக்காய் கத்திக் கொண்டு அந்தக் கூட்டத்துக்குள் புகுந்து புறப்பட்டேன். மேடையில் வீற்றிருந்த தொந்தி கணபதிகள், வழுக்கைத் தலையர்கள், படம் போட்டவன்கள் கூட்டத்துக்கு வந்தவன்கள், கேட்டுக் குறிப்பெடுத்தவன்கள்.... என்று அவர்களிலே எந்தத்தரப்பையும் விட்டு வைக்காது கண்ணில் பட்டவன்களையெல்லாம் தாக்கித் துவம்சம் செய்தேன். என்னுடைய தாக்குதலின் வலிதாங்காமல்  திருப்பித் தாக்கத் தேடியவர்களை  வெட்டுப்போட்டுக் கோபமூட்டி ரசித்தேன்.
ஆனாலும் அந்த இராட்சசன்கள் என்னையும் எனது தாக்குதலையும் ஒரு பொருட்டாகவே கணக்கெடுக்காமல் தங்களது நிகழ்வை நடாத்திக் கொண்டிருந்தான்கள். அதைத்தான் என்னால் இப்போதும் ஏற்றுக்கொள்ள முடியாமலுள்ளது. இறுதியில் மண்டபத்தை இருட்டாக்கி விட்டு பிரமாண்டமான திரையில் அசைந்து திரியும் எங்களது சகல பருவங்கனின் தோற்றங்களையும் படம் போட்டுக் காட்டினான்கள்.  அதிலே எங்களை எப்படியெல்லாம் முற்றாக அழித்து முடிக்கலாம் என்பதை செய்கைமுறை விளக்கங்களாகச் சொல்லிக் கொண்டிருந்தான்கள் அந்த இரக்கமற்ற பாவிகள். அதைப் பார்த்ததும் உடம்பே வெலவெலத்துப் போனது எனக்கு.

இதை எப்படியாவது நண்பர்கள் தெரிந்தவர்களுக்கெல்லாம் சொல்லி அவர்களை எச்சரித்தாக வேண்டும் என்று பரபரத்தது மனது. உடனடியாக அங்கிருந்து வெளியேறி கண்ணில்பட்ட  எனது சகாக்களையெல்லாம் நிறுத்தினேன். ஒவ்வொரு மரத்தின் கீழும் சில பையன்கள் தனது காதலிகள் சகிதம் ஸ்டைலாக நின்றிருந்தான்கள். மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க ஓடியோடி அவன்களிடம் விசயத்தைச் சொல்லிப் பார்த்தேன். ஆனால் என் வாய் நொந்ததுதான் கிடைத்த பலன். ஒருவனாவது எனது கதையை ஒரு பொருட்டாக எடுக்க வேண்டுமே..... 'ஆ! அப்படியா சேதி?' என்று ஏதோ, 'இன்றைக்கு நிலாவெளியில மழையாமே' என்பது போல கேட்டு விட்டு அவனவன் வேலையைப் பார்க்கப் போய்க் கொண்டிருந்தான்கள்.
 'சே! காமக் கிறுக்கன்கள்'
எனக்கு வாழ்க்கையே வெறுத்து விட்டது. எவ்வளவு பெரிய சீரியஸான விசயத்தைத் தற்செயலாகக் கண்டு அங்கேயே கிடந்து துப்பறிந்து கண்டுபிடித்துச் சொல்கிறோம். இவன்கள் என்னடா என்றால்  குடிபோதையிலும் பெண்களோடு சுற்றுவதிலுமே பொழுதைப் போக்கிக் கொண்டு கவனிக்காமலல்லவா இருக்கிறான்கள். இந்தப் பையன்களே இப்படித்தான். பக்கத்தில் பெண்கள் இருந்து விட்டால் போதும்.  'காலுக்குள் பாம்பு' என்பதும் 'கடிதம் வந்திருக்கிறது' என்பதும் ஒரே செய்திதான். கவனிக்கவே மாட்டான்கள்.

சரி, அவன்கள் கிடக்கட்டும். என் போன்ற பெண்கள்தான் இனப்பற்றுள்ளவர்கள். பொறுப்பானவர்கள். புத்திசாலிகள். ஓகே! யாராவது நண்பிகளிடம் சொல்லிப் பார்க்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே என்னைக் குறுக்கறுத்து விரைந்து கொண்டிருந்தாள்   நம்ம ஆதவன் 'மேக்கப் சரோஜாதேவி'.
'ஏய், சரோஜி..சரோஜி நில்லுடி!' அவளைப் பின்னாலேயே துரத்திப் போய் க்றீன் ரோட் சந்தி தாண்டியதும் நடுவழியில் மடக்கி விசயத்தை விபரமாய் சொல்லி முடித்தேன்.
'அடிப்போடி இவளே! இதுக்காடி அவசரமாய்ப் போய்க் கொண்டிருந்த என்னை சடன் பிரேக் போட வைத்தாய்?' என்றாள் சரோஜியும் அந்த பொறுப்பில்லாத பையன்களைப் போலவே.
' யேய்! என்ன மாதிரி பொம்பளைடி நீ? அங்க என்னடான்டா நம்மளைக் கொல்றதுக்கு மண்டபம் போட்டுத் திட்டநதீட்டிப் படம் காட்டிட்டு இருக்கிறான்கள். அதை வந்து சொன்னால் நீங்களெல்லாம் கண்டுக்கவே மாட்டேன்றீங்களேடி?' என்று கோபத்தில் காச்சு மூச்சென்று காதுகிழியக் கத்தினேன்.
'சரி, சரி வாடி, என் பின்னால ஏறிக்கோ. இடத்தைச் சொல்லு. போய்ப் பார்ப்போம். என்னதான் அப்படிச் செய்றான்களென்று..?'
ஆதார வைத்தியசாலைக்கு அருகிலுள்ள அந்த இடத்தைச் சொன்னேன். முதலில் க்றீன் வீதியும் டொக்யாட் வீதியும் சந்திக்கும் நெல்சன் தியேட்டர் சந்திக்கு வந்து சேர்ந்தோம். அப்போது மக்கெய்சர் பொதுமைதானத்திலே பெரும் கூட்டம் ஒன்று காணப்பட்டது. போக்குவரத்துப் போலீசாரின் காவலோடு நூற்றுக் கணக்கிலே பாடசாலை மாணவர்களும் மாணவிகளும் வெள்ளைச் சீருடையில் கையிலே பல சுலோகங்கள் கொடிகள் மற்றும் பதாகைகளோடு 'ஒழிக! ஒழிக!' என்று கத்திக் கொண்டு வரிசையாக எங்கோ சென்று கொண்டிருந்தார்கள். எங்கும் ஒரே இரைச்சலாக இருந்தது.
'யாரையடி ஒழிக.. ஒழிக என்றான்கள்?' என்று கேட்டாள் சரோஜி.
'தெரியல்லியே.. வா முன்னுக்குப் போய்ப் பார்க்கலாம்;;!' என்று ஒரு முழுச்சுற்றுச் சுற்றித்திரும்பினோம்.
'ஒழிப்போம்! ஒழிப்போம்!'
'சுத்தமாக வைத்திருப்போம்' 'கைது செய்! கைது செய்!  மீறுவோரைக் கைது செய்!'
'அடியேய், இது ஏதோ அரசியல் மீட்டிங் போல இருக்குடி' என்றாள் சரோஜி.

'போடி!  அதுக்கு ஏண்டி ஸ்கூல் பிள்ளைகள் வந்திருக்குதுகள்?' என்று விட்டு அந்தப் பிள்ளைகள் கையில் வைத்திருந்த பதாகைகளிலுள்ள படத்தைப் பார்த்தேன். அவ்வளவுதான் எனக்கு மயக்கமே வந்து விட்டது.
அதிலும் என்னுடைய படங்கள்;தான் நிறைய இருந்தது!
'அங்க பார்டி! நம்ம படம்! போச்சுடி! எல்லோரும் ஒண்ணாக் கிளம்பிட்டாய்ங்கடி! இங்க பார்டீ! இந்தா நடந்து வாறான்களே தொந்தி மாமாவெல்லாம்! இவன்கள்தாண்டி அங்க மண்டபத்தில படங்காட்டி என்னைப் பயங்காட்டியவன்கள். அவன்களுக்குப் பின்னாலே பாரு... நிறைய பிக்- அப் வாகனங்களிலே நம்ம உருவங்களைத்தான் பெரிசா கட் அவுட்டெல்லாம் வச்சுக் கொண்டு வாறான்கள்றீ! என்ன கொடுமைடீ இது?' என்று கத்திக் கொண்டே இருந்தேன் நான்..
'சரி, கத்ததாதே காது நோகுது! விடு, ஏதாவது செய்து தொலையட்டும்'
'இந்தப் பக்கம் பார்! ஐஸ்கிறீம் கடைக்கு முன்னுக்கு! நம்மள மாதிரி வேஷம் கட்டி, ஸ்கூல் பிள்ளைகள் வீதி நாடகம் போடுதுகள்றீ.. வாடி போய்ப் பார்ப்போம்.. எனக்கு நாடகம்டா உயிர் தெரியுமா?'  சட்டெனச் சூழ்நிலையை மறந்து குதூகலித்தேன்.
'வேணாம்டீ! நம்மளையெல்லாம் சீரியல்ல வாற மாமிகள் போல கொடுமைக்காரிகளா சித்தரிப்பாங்களடி! அதைப் பார்த்தாக் கவலையாயிருக்கும் விடு!' என்று என்னைத் தடுத்தாள் சரோஜி.
'அ..ஆமால்ல? அதுவும் சரிதான்! இதைப்பாரேன்,  நம்ம கட்-அவுட்களை!  அதையெல்லாம் எங்கடி கொண்டு போறான்கள்? அங்கப் பாருடீ நடுவுல இருக்கிற கட்-அவுட்டை பார்த்தாக்கா..  நம்ம ரஜினி படத்துல நடிச்சானே...யாருடீ அவன்? சே! பேர் வருதில்ல.. அவன் மாதிரி இல்ல?' என்று ஜொள்ளு விட்ட சரோவுக்கு விட்டேன் நடுமண்டையிலே ஒரு குட்டு.
'ஓம்டீ, இப்ப அது ரொம்ப முக்கியம்! என்னடி இது? எல்லாத்தையும் ஊர்வலமா நடு க்றவுண்டுக்குக் கொண்டு போறானுகள்...? ஓ! அது என்னது புகை வருது?'
 'பு...புகையா? என்ன மடத்தனமிது..? கட்-அவுட்டுக்குப் போய் யாராவது புகைப் போடுவாங்களா? என்னடி பிரயோசனம்? உயிரோட இருக்கிற நாங்களே இப்ப புகைக்குப் பயப்படுறதில்ல..மடையன்கள்? '
'நீதாண்டி மடைச்சி சரோ! புகையில்லடி அது! நம்மைப் பத்தவைக்கிறான்கள்றீ! விளங்கல்லயா உனக்கு? நமக்கெல்லாம் கொடும்பாவி எரிக்கிறான்கள்றீ... நாசமாப் போனவன்கள்... சே! நம்மளோட எவ்வளவு கோபமிருந்தா இந்தளவுக்கு போயிருப்பான்கள்?
இருவரும் சிறிது நேரம் தேம்பியழுதோம்.
'அடியேய்..! நான் ஒண்ணு சொல்லுவேன் நீ..' பம்மினாள் சரோஜி.
' என்ன? கோபிக்கக் கூடாது! அதானே? சரி சொல்லித் தொலை?'
'அவனுகள் நம்மள வெறுக்கிறதிலேயும் கொஞ்சம் நியாயம் இருக்குடி.! நாம இதுவரைக்கும் அவனுகள்ல எவ்வளவு பேரைத்தான் சாகடிச்சிருக்கோம்? யோசிச்சுப் பாரு! எத்தனை சின்னப் பாலகன்களை ஸ்கூல் புள்ளைகளை...'
' என்னடி இப்படிப் பல்டியடிக்கிறாய் நீ...? அதுக்கு நாம என்னடி செய்யுறது..? நம்ம என்ன வேணும்டாடீ செய்யுறோம். வேட்டையாடுறது நம்ம ஜீவனோபாயம்?'
'நீ சொல்றது உண்மைதான்.  வயிற்றுக்காகத்தான் போராடி நாம வாழுறோம். அதுக்குள்ள  இடையில சில சனியன்கள் வந்து நமக்கே தெரியாம நமக்குள்ளே வந்து சேருதுகளே. அதுகளாலதான் நமக்கு எவ்வளவு கெட்ட பெயர், எதிர்ப்புகள் பாரு'
'சரி, அதுக்கு நம்ம என்னதான் செய்யலாம்? நாமே உயிரைப் பணயம் வச்சு வேட்டையாடுறோம்.  ஒருதுளி சாப்பாட்டுக்கே தினமும் எவ்வளவு ரிஸ்க் எடுக்கிறோம்?  
'அதாவது வித்தை பிழைச்சா வீரமரணம்!'
'நல்லாச் சொன்னாயடி! ஆனா இவனுகள் நம்மளைக் கோபிக்காம  இடையில வந்து சேருற அந்தச் சனியன்களைப் புடிச்சி ஏதாவது செய்யட்டுமே. அதை விட்டுட்டு நம்ம சாதியைத்தானே அழிக்கத் திரிகின்றான்கள்!'
'சரிடி. அழாத.! வா இப்ப நாம நீ சொன்ன இடத்துக்குப் போவோம்.'
நாங்கள் போன இடம்; ஆஸ்பத்திரிக்கு அருகிலிருந்த ஒரு உயரமான கூரை கொண்ட நவீன பெரிய கட்டிடம். அதன் வாசலிலே புதிய  பெயர்ப்பலகை ஒன்று நீல நிறப் பட்டுத்துணியால் திரையிடப்பட்டு யாரோ திறந்து வைப்பதற்கு வசதியாக  இழுகயிறு நாடாக்கள் எல்லாம் பொருத்தித் தயாராக இருந்தது. அதனால் அது என்ன இடம் என்பதை எங்களால்  படித்துப்பார்க்க முடியாமல் போனது. ஆனாலும் கட்டிடத்தின் ஒரு மூலையிலே சிவப்புச் சிலுவைக்குறி ஒன்று இருந்தது. அதனால் அது ஏதோ ஆஸ்பத்திரியோடு சம்பந்தப்பட்ட இடமாகத்தான் இருக்க வேண்டும் என்று ஓரளவு யூகித்தோம்.
 அந்தக்கட்டிடத்தின் கதவுகள் யாவும் இப்போது அடைக்கப்பட்டுக் கிடந்தது.  அதுமட்டுமல்ல அந்த வளாகமே யாருமின்றி வெகுஅமைதியாய் இருந்தது.

'இதுதானே நீ வந்த இடம்? எங்கடி ஒருத்தனையும் காணேல்ல'
'ஓமோம். இங்கதான் நம்மள அழிக்கிறதுக்குப் பெரிய மாஸ்டர் ப்ளான்கள் எல்லாம் போட்டுக் கொண்டிருந்தான்கள். இப்ப அதுகளச் செய்யத்தான்  எல்லோரும் போயிருக்கிறான்கள் போல'

இருவரும் அங்கிருந்த ஜேம் மரமொன்றின் கிளை மீது அமர்ந்தோம்.
'சரி, என்னென்ன ப்ளான்கள் எல்லாம் போட்டான்கள்? ஒருதடவை சொல்லு பார்ப்போம்' என்றாள் சரோஜி. நான் ஒவ்வொன்றாய் ஞாபகப்படுத்திச் சொல்லிக் கொண்டிருந்தபோது திடீரெனப் பாய்ந்து 'கொஞ்சமிரு..இரு!' என்று இடைமறித்தாள் சரோஜி.
'ஏண்டி நிப்பாட்டிறாய்?'
'இல்லடி, முதல்ல  நீ சொன்னியே, இந்த நகரத்தைச் சுத்தமாக வச்சிருக்கிறது குப்பைகளை கண்டபடி போடாமப்  பாத்துக்கிறது..என்று. அந்தத் திட்டமெல்லாம் பிரச்சினையில்ல.. அதெல்லாம் இவனுகள் வழமையாக் கத்துறதுதான். இந்த ஊர்ல யாரும் அதுகளைக் கணக்கே எடுக்கிறதில்ல.. அதனால நாம தப்பிடலாம்...ஆனா இந்தக் கடைசியில சொன்னீயே ஒண்ணு...அதுதான்டி கொஞ்சம் யோசனையாயிருக்குடீ'
'எதுடீ?  டவுண் முழுக்க ஒரு இடம் விடாமத்தேடி நம்ம வாரிசுகளையெல்லாம் கண்டு பிடிச்சி அழிக்கப்போறதாச் சொன்னதா?
'அதுவும்தான்! அதுகூடப் பரவாயில்லடீ, அடுத்ததாச் சொன்னீயே அப்படி நம்ம வாரிசுகள் வளர்கிறதுக்கு இடம்கொடுக்கிற காணிச் சொந்தக்காரங்களுக்கு தண்டப்பணம் அறவிடப்போறதாச் சொன்னியே... அதுதாண்டி எனக்கு வயித்துல நெருப்பைக் கொட்டுது..'
'போடி சும்மா! அந்தக் கவலையே உனக்கு வேணாம்! அதெல்லாம் நம்ம ஊரிலிருக்கும் ரெண்டு வகை காக்கிச் சட்டைகளும் சேர்ந்து லஞ்சம் வாங்கியே இந்தத் திட்டத்தைக் குட்டிச்சுவராக்கிடுவாங்க! நீ பயப்பிடாதடி!'
' அட! அப்பிடியெல்லாம் கெடுத்திடக் கூடாது என்றுதானாம்  இந்த முறை  இதுக்கென்றே பெரிய இடத்திலிருந்தே  நேரடியா ஒரு அதிரடிக் குழு இறங்கியிருக்குதாம். அது என்னமோ ஒழிப்புக் குழுவாமே? அது  இங்கதான் எங்கேயோ ஒரு பில்டிங்ல இருக்காமே. ஆயிரக் கணக்குல தண்டப்பணம் அறவிடப் போறாங்களாம்.'
'ஐயய்யோ! காசுபோயிருமென்று தெரிஞ்சா போதும். இந்த ஊர்ச் சனங்கள்லாம். உடனே உசாராகிடுவாங்க தெரியுமா உனக்கு? அப்பிடி மட்டும் ஆகிவிட்டால் இங்கே ஒரு சிரட்டை, இளநீர்க்கோம்பை,  யோகட்கப் எதுவுமே இல்லாம ஊரே சுத்தமாகிடும் தெரியுமா?'
'அப்ப இந்த முறை நாம தப்பவே முடியாது என்கிறியா' என்றேன் சோகத்துடன்.
' ஓம்டீ! அவனுகள் இண்டைக்கே இந்தத் திட்டத்தைத் தொடங்கிட்டானுகளாம்.  என்னதான் செய்யலாம் இனி? இருக்கப்போகும் கொஞ்ச காலத்துக்கு சந்தோசமா  இருந்திட்டுச் சாகலாம்' என்று சலித்துப்போய்  அந்தக் கட்டிடத்தினை ஒரு சற்றுச்சுற்றி வரலாமென்று எழுந்தேன். நானும் எழுந்திருக்க சரியாக பலமான காற்றும்  வீசத் தொடங்கியது.  சுழன்றடித்த காற்றின் வேகத்தில் நான் சற்று உயரே போக... மேலே ஏதோ ஒன்று வித்தியாசமாய் தென்பட்டது.
'அது என்ன கட்டிடத்தின்  மேல் கூரையில் ஏதோ தெரிகிறதே?' என்று காற்றின் உதவியோடு சற்று உயர்ந்து எழுந்து போய்ப் பார்த்தேன்.
அட! இது என்ன கூத்து? ஆகா! என் கண்களையே நம்ப முடியவில்லை.
'சரோஜி! இங்க வந்து பார்டீ! கவலையை விடு! நம்ம சந்ததி ஒருநாளும் அழியவே அழியாதுடி.!'
இரண்டு கூரையின் விளிம்புகள் சந்திக்கும் இடத்தில் பெரிய வாய்க்கால் போல ஒரு நீளமான பிளாஸ்டிக் பீலி ஒன்று இருந்தது!  அதற்குள் தேங்கிக் கிடந்த நீருக்குள்ளே பல கோடிக்கணக்கிலே நீச்சலடித்து சந்தோஷமாக துள்ளி விளையாடிக் கொண்டிருந்தார்கள் எங்களது வாரிசுகளான  நுளம்புக் குடம்பிகள்!
அப்போது சுழன்றடித்த காற்றிலே நீலப்பட்டுத்திரை கழற்றி வீசப்பட கட்டிடத்தின் பெயர்ப்பலகையில், 'டெங்கு மற்றும் மலேரியா நோய் நுளம்பு  ஒழிப்பு மத்திய நிலையம்' என்று எழுதப்பட்டிருந்ததைக் கண்டேன்.
***

-மூதூர் மொகமட் ராபி

Monday, February 20, 2012

சிறுகதை:




வேடிக்கை மனிதர்கள்!    


வீட்டிலிருந்து அவசரமாய் வெளியேறி,  வீதியில் வந்த முச்சக்கரவண்டியை நிறுத்தி, திருகோணமலை  பஸ் நிலையத்திற்கு பதற்றமாய் வந்து சேர்ந்தான் இம்தியாஸ். பதறியடித்து இறங்கியவன் நின்று பார்த்தபோது கண்டிக்குச் செல்லும் முதலாவது பஸ்வண்டி புறப்படுவதற்குரிய எந்தவொரு அறிகுறியுமின்றி   அமைதியாக  நின்றிருந்தது.

முச்சக்கரிக்கு காசைத்தந்துவிட்டு பஸ்ஸை நோக்கியபடி யோசனையுடன்  நின்றிருந்தான். இறங்கிய இடத்திலிருந்து நின்று பார்க்கும்போதே பஸ்ஸினுள் அதிக ஆட்கள் இல்லாதிருப்பது தெளிவாகத் தெரிந்தது.  தூங்கியெழுந்த தெருநாயொன்று தலையைச் சிலுப்பிச் சோம்பல் முறித்தபடி எழுந்துசெல்ல  அருகிலிருந்த தேனீர்க்கடையின் வானொலி,  'நீ போகும் வழி தேடி வருவேனே பின்னாலே' என்று சத்தமாய்ப் பாடிக் கொண்டிருந்தது.

'ஒருவேளை முதல் பஸ் போய் இப்போது நிற்பது கண்டிக்குப்போகும் அடுத்த பஸ்ஸோ? இல்லையே... முதல் பஸ் 6.30க்குத்தானே?' கைத்தொலைபேசியில் நேரத்தைப் பார்த்துக் கொண்டான். இன்னும் 10 நிமிடங்கள் இருந்தன. அப்படியும் சந்தேகம் தீராமல் பொதுச்சந்தைக்கு எதிரேயிருந்த  மணிக்கூட்டுக்கோபுரத்தின் உச்சியைப் பார்த்தான்.  அது வழக்கம்போல வேறொரு நாட்டின் நேரமொன்றைச் சரியாகக் காட்டிக் கொண்டிருந்தது.

பஸ்ஸினுள்ளே அவன் ஏறிப்பார்த்தபோது அங்கொன்றும் இங்கொன்றுமாக இரண்டொருவர் மட்டும் அமர்ந்திருக்க ஏனைய இருக்கைகள் எல்லாம் ஆட்களின்றி வெறுமையாகக் கிடப்பது தெரிந்தது.   யன்னலோரமாக ஓர் வசதியான இருக்கையைத் தேர்ந்தெடுத்து அவன் அமர்ந்து கொள்ள சற்றுமுன் உதித்த செம்மஞ்சள் நிறச்சூரியன் பஸ் கண்ணாடிகளில் துண்டுதுண்டாய் ஒளிர்ந்து கொண்டிருந்தான்.

ஆட்கள் போதாது என்பதால் எப்படியும் இப்போதைக்கு பஸ்ஸை எடுக்கப்போவதில்லை என்பதைப் புரிந்து கொண்டவன்.  'சே! இப்படித் தெரிந்திருந்தால் அழகாய்ச் சாப்பிட்டு விட்டே வந்திருக்கலாம். பாவம் மதிவதனி,' அதிகாலையில் எழுந்து அழுகின்ற மூன்றுமாதக் கைக்குழந்தையுடன் போராடிக் கொண்டே  பரபரக்கச் சமைத்துத் தந்திருந்தாள். அந்தச் சாப்பாட்டைக் கூட  நேரமாகிவிட்டது என்று சாப்பிடாமல் வைத்துவிட்டு  வந்ததை நொந்து கொண்டான்.


செல்போன் சிணுங்கியது. அவள்தான் எடுத்தாள்.

'ஹலோ! மதி! ஆங்.. கேட்குது சொல்லு! ஓகே 6.30 பஸ் கிடைச்சுட்டுது! ஆனா எப்ப போகுமோ தெரியல்ல. ஸ்டாண்டுலதான் நிக்கிறேன். ஓமோம். சாப்பிட்டுட்டே வந்திருக்கலாம். அதைத்தான் இப்ப நினைச்சிட்டு...  யாரு வந்தது? பள்ளித் தலைவரா? ம்ம்! இப்ப அங்க நிக்கிறாரா? இல்லையா? நீ என் நம்பரைக் குடுத்திருக்கலாமே.. சரி, அவரே எடுக்கிறாராமா? ஓகே..ஓகே! இப்ப வெளிக்கிட்டா நான் 12மணிக்கெல்லாம் கண்டிக்குப் போயிடுவேன் ஆ? சரிசரி, போனதும் எடுக்கிறேன்.. யசோ எப்பிடியிருக்கு? தூக்கமா ஓ! சரிசரி பை!'  என்று போனை அணைத்துவிட்டு நிமிர்ந்தான்.

பஸ்ஸின் வெளியே சில இளைஞர்கள் நின்றிருந்தனர்.

' பஸ் எத்தனைக்குப் போகும், தம்பி?'  பஸ்ஸின் முன்புற நுழைவாயில் வழியாக இறங்கிச் சென்று  கண்டக்டர் போலிருந்த ஒரு இளைஞனிடம் சென்று கேட்டான், இம்தியாஸ்.

'கொஹாட்டத ஐயே? நீங்க நுவரதானே போறது? அதிங்... எந்த நாளும்..ஆறு அரைக்குப் போறதுதானே ஐயா! ...இன்டைக்கு ஆக்கள் கொஞ்சங் வர இருக்குது! ஏறி ஸீட்ல ஒக்காந்து இருங்க! இன்னம் ரெண்டு மூணு சீட் மட்டுந்தான் இருக்கிறதி... ஆ! நுவர..!நுவர..! மாத்தளே..மாத்தளே..!'

'ரெண்டு மூணு  சீட் மட்டுமா? பஸ்ஸே போறதுக்கு ஆக்களில்லாமப் பேயடிச்சுக் கிடக்கு.. கதையப்பாரு...இவனுகளுக்கு ஆக்கள் இல்லையென்றாலும் இந்தப் பந்தா மட்டும் போகாது' என்று மனதுக்குள் சிரித்துக் கொண்டான். பஸ்ஸின் பின்னிருக்கையிலிருந்த யாரோ ஒருவர் யன்னல் வழியாக வெற்றிலைச் சாறைப் புளிச்சென்று துப்பினார்.

'ஆ! கடலை! கடலை!! தண்ணிப் போத்தல்...பெப்பர்மின்ட்!'
பஸ்நிலையத்தின் முன்புறமிருக்கும் முஸ்லீம் ஹோட்டலில் இருந்து கடகடவென்ற காதைப்பிளக்கும் ஒலியுடன் கொத்து ரொட்டி வாசனை வந்தது.
'தம்பி, நான் போய் டீ ஒன்டு குடிச்சிட்டு வாரேன்..இப்ப போக மாட்டீங்கதானே?' என்று  முன்கடையை நோக்கி நடந்தவனை, 'ஐயா..போக வேணாம்! இந்தா இப்ப பஸ் போறது ஒங்களுக்கு சாப்புட ...ஹபரணைக்கு பஸ் நிப்பாட்டுறான்.. இப்ப வாங்க ஐயா!' என்று கூப்பிட்ட கண்டக்டர் பையனை அவன் பொருட்படுத்தவில்லை.
 

'இவன்கள் இப்படித்தான் சொல்லுவான்கள். பஸ் எடுக்க எப்படியும் ஏழு மணியாகிடும்!' 

தேனீர்க்கடையை நோக்கி ஒரு பத்து மீற்றர் கூட நடந்திருக்கமாட்டான். திடீரென்று ஓர் இயந்திர உறுமல் கேட்டது. ஆச்சரியமாய் திரும்பிப் பார்த்தபோது கண்டி பஸ்ஸின் சாரதி  இருக்கையிலே ஒருவன் அமர்ந்திருந்து பஸ்ஸின் ஸ்டியரிங் சில்லை வட்டமாய்த் தொட்டுத் தொட்டு கும்பிட்டுக் கொண்டிருந்ததைக் கண்டான்.

' ஆ! நுவர.. நுவர..மாத்தளே..'

இரண்டொரு தடவை சத்தமாய் ஹோன் அடித்துக் குலுங்கிவிட்டு நகரத் தொடங்கியது பஸ்வண்டி. முதலில் நம்பவே முடியாமல் திகைத்து பின் சுதாரித்து ஓடிச்சென்று பஸ்ஸின் முன்புற நுழைவாயிலில் தொங்கிக் கொண்டிருந்த அந்த கண்டக்டர் பையனுடன் ஒட்டிக் கொண்டான். பஸ்நிலையப் பிரதான வாயிலைக் கடந்து மெல்லத் திரும்பி அது நின்றபோது இன்னும் சில பயணிகள் ஓடிவந்து பின்புறக் கதவு வழியாக ஏறிக் கொண்டார்கள். பஸ்ஸைத் தொடர்ந்து, 'ஆ! கடலை..கடலை..கச்சான்.. தண்ணிப்போத்தல்!' களும் சிறு ஓட்டத்தில் கூடவே வந்தன.

'தண்ணிப்போத்தல்! தண்ணீ! ஒண்ணு?'


'ச்சே! சில்லறை தாங்க நானா! விடிய வெள்ளனையோட ஆயிரத்தை நீட்டினா..?  கடலைப் பக்கட் கொஞ்சம் தரவா?'


' கந்தளே போற ஆக்கள்..முன்னுக்கு வாங்க! நுவர மாத்தளே மட்டும் அந்த ரெண்டு ஸீட்ல இருங்க..அம்மா எங்க போர? ஆ? சரி, இருங்க..முன்னுக்கு வாங்க... சந்திக்கா.. ஏறவாணாம்.. வாணாம்! சந்தில நிக்காது..! ரைட்! ரைட்!'
பஸ் புறப்பட்டு வேகம் பிடித்தது.


'என்ன புதினமிது?  அரைவாசி இருக்கைகள் கூட நிறைந்திராத வெறும் பஸ்ஸை எப்படி இன்றைக்கு மட்டும் நேரத்துக்கே எடுத்தான்கள்?'  ஆச்சரியம் நீங்காமலே ஓடிக்கொண்டிருந்த பஸ்ஸின்  பின்புறமிருக்கும் தனது இருக்கையை நோக்கி நகர்ந்தான், இம்தியாஸ்.


பசி வயிற்றை கிள்ளியது.


மக்கெய்ஸர் மைதானத்தைத்தாண்டிய பஸ்  நகரசபைச் சுற்றுவட்டத்தில் திரும்பிக்கொண்டிருந்தபோது, 'ஆ! எப்படி இப்ப? நான் சொன்னதிங்தானே? டீ குடிக்கப் போக வேணாம் என்டு...'  நடுவழியில் நின்று கலாய்த்தான் கண்டக்டர் பையன்.


' அட! இல்லடாப்பா....! உன்ட பஸ்..ஆக்களேயில்லாம வெறும் சீட்டாக் கிடக்குது..இப்ப போக மாட்டீங்களென்டு நினைச்சன்' என்றான் இம்தியாஸ் அசடு வழிய.

'இல்லே ஐயா! அதிக்கு எல்லாம் ஆக்கள் இருக்கு! அந்தா தாடி வச்சிட்டு  இருக்கிறதுதானே மூணுபேர் பின்னால! அவங்கட ஆக்கள் எல்லாம் ஒரு இருவது பேர் நுவரக்கு வாறது. பாருங்க..போஸ்ட் ஒபிஸ் சந்தியில கொஞ்சம் தாடி ஆக்கள் இப்ப ஏறுது. மத்த அவங்கட ஆக்கள் எல்லாம் கந்தளே வரைக்கும் ஒவ்வொரு இடத்திலே நிக்குற நேரத்துக்கு வந்து ஏறுறது.'


அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே வேகம் குறைந்து தபால்நிலைய பஸ்தரிப்பிலே நின்றது பஸ். அங்கு வெண்ணிறத் தொப்பி மற்றும் முழங்கால்வரை நீண்டிருக்கும் வெண்ணிற அங்கிகள் அணிந்த  நீண்ட தாடி  ஆண்கள்  பலர் தோளிலே பெரிய பயணப்பொதிகளைச் சுமந்தவாறு சிறுகூட்டமாக நின்று கொண்டிருந்தார்கள்.   

பஸ் நின்று கண்டக்டர் பையன் வெளியில் இறங்கியதும் அந்தத் தாடி மனிதர்கள் அனைவரும் அவனைச் சூழ்ந்து கொண்டார்கள். ஓரிரு நிமிடங்கள் நீடித்த சிங்களமொழி உரையாடலின் பின்பு பஸ்ஸினுள்ளே எல்லோரும் ஏறிவந்தார்கள்.  ஆட்களில்லாத வெற்று இருக்கைகள் அனைத்திலும்  தோளிலே சுமந்துவந்த பயணப்பைகளைப் போட்டு இடம்பிடித்தார்கள். பின்பு இம்தியாசுக்கு முன்னாலும் பின்னாலுமிருந்த மீதி இருக்கைகளில் அமர்ந்து கொண்டார்கள்.
'
அஸ்ஸலாமு அலைக்கும் ஹாஜி'

'அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி....'

'அப்படி உக்காருங்க ஹாஜி!' 'பரவாயில்ல சீதேவி நான் இங்கினக்கயே இருக்கிறேன்..அல்ஹம்துலில்லாஹ்' ' சுபஹானல்லாஹ்' 'மாஷா அல்லாஹ்' என்பது போன்ற உரையாடலும்  அத்தர் நறுமண வாசனையும்  பரவிச்செல்ல


மீண்டும் கிளம்பி  வேகம் பிடித்தது பஸ்.


ஜெற்றிப் பொலீஸ் சுற்றுவட்டத்தில் திரும்பி உள்துறைமுக வீதிக்கு வந்ததும் மீண்டும் சிணுங்கியது இம்தியாசின் செல்போன். அதிலே புதிய இலக்கம் ஒளிர்ந்திட இயர்போனை பொருத்திக் கொண்டு, 'ஹலோ! யாரு' என்றான்.

' ஆ! தம்பி நாந்தான் பள்ளித்தலைவர் பேசுறேன். அஸ்ஸலாமு அலைக்கும்...!'


'ஆங்..அலைக்கும் ஸலாம்! சொல்லுங்க தலைவர்!'


'தம்பீ, உங்களுக்கிட்டக் கொஞ்சம் பேசலாம் என்டுதான் வீட்டுக்கு வந்தேன். அந்தப் புள்ள மதிவதனி நீங்க இப்பதான் கண்டிக்குப் பயணம் போறதாச் சொல்லிச்சு. அந்தப் புள்ளயிட விசயமாத்தான் கண்டிக்குப் போறீங்கபோல..'


'ஓமோம்.. இப்ப பஸ்லதான் இருக்கிறேன். ஏதும் அவசரமா கதைக்கணுமா..அப்படியென்டா இறங்கி ஆட்டோ பிடிச்சி வாறேன். இப்பதான் பஸ் இன்னர் ஹாபர் ரோட்டுக்கு வந்திருக்கு..? இறங்கவா?'

' இல்ல.. இல்ல! அல்லாட காவல், நீங்க போற பயணத்தை நல்லபடியா செய்து முடிங்க தம்பீ.! நா இஞ்ச உங்கட விசயமா பள்ளி மற்ற ஆக்களோட கதைச்சுப் பார்த்தேன். அவங்கட கதையப் பாத்தா...?'

'பார்த்தா? என்ன சொல்லுங்க நானா?'

'இல்ல.. போன்ல எல்லாம் கதைக்க ஏலுமோ தெரியல்ல..இப்ப நீங்களும் நம்மட மார்க்கத்துக்கு மாறிவந்து ஒரு வருசந்தானே ஆகுது. அதுவுமில்லாம நீங்க  இந்த ஊர்லயே நம்மட புள்ளைகளோடேயே ஒரே ஸ்கூல்ல படிச்சு ஒண்ணா விளையாடி ஒண்ணுக்குள்ள ஒண்ணாக் கிடந்த ஆள். அ தம்பி.  அதால  எங்களுக்கு உங்கள்ல சந்தேகம் எதுவுமில்ல. ஆனா அந்தப் புள்ள மதிவதனிட விசயந்தான் கொஞ்சம் பிரச்சினையாயிருக்கு...' பஸ் மட்கோ சந்திப் புகையிரதக் கடவையில் நின்றிருக்க ரயிலின்  இரைச்சலில் அவரது பேச்சு தெளிவின்றி இடறியது.

' ஹலோ! அதுதான் அந்தப்புள்ளயும் நம்ம மார்க்கத்துக்கே மாறி வர்றதுக்குச் சம்மதிச்சுட்டுதானே தலைவர்? நான் முந்தா நாளிரவு அந்தப்பி;ள்ளை மதியையும் முன்னுக்கு வச்சுத்தானே உங்களிட்ட..ஹலோ..! ஹலோ!' 

'தம்பி, சிக்னல் கிளியரில்லாம இருக்கு. நீங்க கட் பண்ணுங்க.. நான் பிறகு எடுக்கிறேன் என்று சட்டென போனை வைத்து விட்டார்.

'சே!' என்று அலுத்துக் கொண்டான். அவரிடம் முழுமையாக சொல்லி முடிக்காதது சிறிது ஏமாற்றம் தந்தது.  மதிவதனி, கடைசித் தங்கை சஹானாவுடன் ஒன்றாகப் படித்தவள். அவனது பயோலொஜி டியூட்டரி இருந்த அதே மரியாள் வீதியில்தான் மதிவதனியின் அண்ணன் பாலா மாஸ்டரின் கணிதபாட டியூட்டரியும் இருந்தது. ஏஎல் படித்து விட்டு ரிசல்ட்ஸ் வரும்வரை காத்திருந்த காலத்தில் பின்னேரங்களில் எல்லோரையும் போல சைக்கிளை எடுத்துக் கொண்டு வீதியுலா வருவது இம்தியாசின் வாடிக்கை. அந்தக் காலங்களில் மதிவதனி அவனுக்கு மட்டுமல்ல அவன் போன்ற இளைஞர்கள் பலருக்கும் கனவு மங்கையாக இருந்தவள். 

 அதற்கு அவளது அமைதியான சுபாவம் பகட்டில்லாத அழகு மட்டுமல்ல அவளது இனிமையான குரலும்தான் காரணம். அப்போதெல்லாம் பாடசாலை விழாக்கள், ஊர்க் கொண்டாட்டங்கள், கோயில் திருவிழாக்கள், இசை நிகழ்ச்சிகளிலெல்லாம் மதிவதனியின் இனிய பாடல்கள் ஒலிக்காதிருந்தது கிடையாது. 'மாணிக்க வீணையேந்தும் மாதே நீ கலைவாணி' என்று அவள் பாடுவது இன்று நினைத்தாலும் காதுகளில் தேன் பாய்ச்சுமே. அது மட்டுமா...?
பஸ் கண்ணாடி யன்னலினூடாக வீசிய காற்று முகத்தில் கவிதைபாட எப்போது தூங்கிப்போனான்?


மீண்டும் அவன் கண்விழித்தபோது  பஸ் ஏதோ ஒரு தரிப்பில் நின்று புறப்பட்டது. 

புறப்படும்போது இருந்ததைப் போலன்றி ஆசனங்கள் ஏறக்குறைய நிரம்பியிருந்தன. இரண்டொரு இருக்கைகள் மட்டும் எங்கோ வழியில் நின்று இனிமேல் ஏறப்போகும் தாடிமனிதர்களின் சகபாடிகளுக்காகக் காத்திருந்தன.  

 'அஸ்ஸலாமு அலைக்கும் அமீர் சாப்!' 

கோரஸாக எழுந்த குரலால் சற்றுத் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான். ஒரு 70 வயது மதிக்கத்தக்க வயோதிபரும் அவரைப் போலவே தோளிலே பயணப்பையுடன் இன்னும் சிலரும் பின்கதவு வழியாக ஏறிவந்து கொண்டிருந்தார். ஆசுவாசப் பெருமூச்சுடன் அந்த மனிதர் அமர்ந்த பின்பே மற்றவர்களும் மரியாதையுடன் உட்கார்ந்தார்கள்.

'ஹாஷிம் ஹாஜி சாப், எல்லாரும்  ஏறிட்டாங்களா?'

'ஓ! கந்தளாய் பேராத்துப் பள்ளியில மட்டும் ஒரு நாலு பேர் நிக்கிறாங்க சாப்! அவங்களும் ஏறிட்டா சரியாயிரும்... இன்ஷால்லாஹ்!'
'அல்ஹம்துலில்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்!' என்றார் திருப்தியுடன்.


அந்த மனிதரை இதற்கு முன்பு இம்தியாசுக்கு எங்கோ சந்தித்ததைப் போலவும் அவரது முகம் நன்கு பரிச்சயமான முகம்போலவும் தோன்றியது. அவரது பயணப்பையை  பவ்யமாக வாங்கி அவரைக் கைத்தாங்கலாகப் பிடித்து யன்னலோரமாக இருந்த வேறு இருக்கையொன்றிலே மெதுவாக அமர்த்தினார்கள், அந்தத் தாடிமனிதர்கள்.  அவர்களில் பலர் இளைஞர்களாகவும் சிலர் நடுத்தர வயதினராகவும் இருக்க மீதிப்பேர் வயோதிபர்களாக இருந்தார்கள். அவர்கள் பெரும்பாலும் அருகருகேயுள்ள  இருக்கைகளிலே ஒன்றாக அமர்ந்திருந்து தங்களுக்கிடையே பல பாஷைகளிலும் பேசிக் கொள்ளலானார்கள். சிலர் ஏனைய பயணிகளுக்கு இடையிலே அமர்ந்து இருந்த போதிலும் மற்றவர்களைக் கண்டு கொள்ளாமல் பொதுவாகத் தங்களுக்கிடையிலே மட்டுமே பேசிக் கொண்டிருந்தார்கள். 

இப்போது அந்த பஸ் ஏறத்தாழ அவர்களின் பிரத்தியேக வண்டி போலவே தோற்றமளித்தது.  'அவர்களின் தயவில்தான் நாங்கள் சிலர் அதிலே ஏறிக்கொண்டு பயணிக்கிறோம்' என்று கூறினால் யாரும் கேள்வி கேட்காமல் நம்பிவிடுவார்கள் போலிருந்தது பஸ்ஸின் நிலைமை.

 இம்தியாசின் அருகாமையிலும் அவர்களில் ஒருவர் அமர்ந்திருந்தார். அவர் புதிதாய் ஏறிய ஒருவர். அவரது கையிலே  பிளாஸ்டிக் மணிகளாலான ஓர் சிறிய மாலை  ஒன்று இருந்தது.   அதைக் கையில் வைத்து வாய்க்குள் எதையோ முணுமுணுத்தவாறு  உருட்டிக்கொண்டேயிருந்தார். அவரது விழிகள் இரண்டும் அரைத்தூக்கத்தில் மூடியிருந்தது. அவரது மேலங்கியிலிருந்து வந்து கொண்டிருந்த கடுமையான அத்தர் வாசனை முதலில் சுகந்தமாக இருந்த போதிலும் போகப்போக அவனுக்குத் தலையை வலிப்பது போலிருந்தது.

பஸ் இடையிடையே நின்று ஹபரணைச் சந்தி, தம்புள்ள சந்தை போன்ற இடங்களுக்குச் செல்லும் பயணிகளை ஏற்றிக் கொண்டது. அப்படி ஏறிக் கொண்டவர்கள் கம்பியைப் பிடித்தபடி நின்று கொண்டு பயணம் செய்தார்கள்.  இருக்கைகளில் அமர்ந்திருக்கும்  பிரயாணிகளை ஒருவித ஏக்கத்துடன் பார்த்தவாறு நின்றிருந்த அவர்களின் உடல்கள் வெறிபிடித்து விரையும் பஸ்ஸின் வேகத்திற்கேற்ப முன்னும் பின்னும் ஆடிக் கொண்டிருந்தன.

பஸ் கப்பல் துறையை ஆயுர்வேத ஆஸ்பத்திரியைத் தாண்டிக் கொண்டிருந்தது.

'எக்ஸ்க்யூஸ்மீ தொர! கொஞ்சம் தள்ளி இருக்கிறீங்களா? நான் ஏன்ட பேக்கை ஓசக்க போடணும்' என்றபடி எழுந்தார் பக்கத்திலிருந்தவர். அதற்கு அவருக்கு இடத்தைக் கொடுத்துவிட்டு மீண்டும் அமர்ந்தபோது, இம்தியாசைப் பார்த்து முதன் முதலாக சிநேகமாகப் புன்னகைத்து, 'ஜஸாக்கல்லாஹு ஹைராஹ்' என்றார் அவர்.


அவன் புரியாமல் விழித்தான்!

'இல்ல.. தேங்ஸ் சொன்னேன்' என்றார் சிரித்தபடி. அவரது பற்கள் வெகுசுத்தமாக பளிச்சென்றிருந்தன. வெளித்தோற்றத்தை வைத்து அந்தத் தாடி மனிதரை 'அவர்' என்று கூறினாலும் அவரது அடர்த்தியான மார்புவரை நீண்டிருந்த தாடியை நீக்கிவிட்டுப் பார்த்தால்   இம்தியாசை விட கூடிப்போனால் நான்கு அல்லது ஐந்து வயதுமட்டுமே அதிகமான ஓர் இளைஞன்தான் தெரிவான். 

'ஏன் நானா, 'நன்றி' என்று தமிழிலேயெல்லாம் சொல்ல மாட்டீங்களா?'

'அப்படியில்ல தொர, உங்களப் பாத்திட்டு முஸ்லீம் என்று நெனைச்சுட்டேன்!'

' அட! நான் முஸ்லீம் இல்லையென்று இப்ப யார் சொன்னது?'

அவர் அவனை ஒருமுறை மேலிருந்து கீழ்வரை உற்றுப் பார்த்துவிட்டு அமைதியாகி யோசனையிலாழ்ந்து விட்டார்.

' என்ன நானா, ஏதும் பிழையாச் சொல்லிட்டனா?'

' இல்லல்ல....உங்கட கதையைப் பார்த்திட்டு...?' என்று இழுத்தார் அவர். வேறு எதையோ சொல்ல வந்துவிட்டுச் சமாளிப்பது போலிருந்தது அவரது பார்வை.

'என்ன யோசிக்கிறீங்க... சொல்ல வந்ததைச் சொல்லிடுங்க!' அவன் விடவில்லை.

'இல்ல தொர ஏன்ட பேர் பாசில். நாங்க எல்லாரும் கம்பளைக்கு மஹல்லா வேலையாப் போயிட்டிருக்கிறோம். தம்பீ உங்கட பேரென்ன.. என்ன செய்யிறீங்க?'

இம்தியாஸ் சொன்னான். 

' அல்ஹம்துலில்லாஹ்! தம்பீ, நான் சொல்றனென்டு பிழையா நீங்க நினைக்கப்படாது. நம்ம முஸ்லீமென்டு மத்தவங்களுக்குத் தெரியிறதுக்கு தனியா அடையாளம் வேணும். உங்களைப் பார்த்த சீருக்கு நான் குறிப்பில்லாமத்தான் இருந்தேன். முகத்தை வச்சுத்தான் முஸ்லீமென்டு..ஓரளவு வெளங்கிச்சு..ஆனா கதையைப் பார்த்துத்தான் பொறகு கொஞ்சம் சக்காயிருச்சு... '

'சரி, முஸ்லீமென்டு தெரியிறதுக்கு நான் எப்படியிருக்கணும் பாசில் நானா? இப்படி டெனிம் ஜீன்ஸ் டீ சேர்ட்லாம் போடக்கூடாதா...இல்ல தமிழ்லதான் ஒழுங்கா பேசக்கூடாதா... ஹாஹா!?'

அவரும் லேசாய் சிரித்துக் கொண்டார்.

'சேச்சே! அப்பிடிச் சொல்ல வரல்ல தொர, ஒரு ஆம்புளைய பாத்தாக்கா தோற்றத்துலயே இவரு இஸ்லாத்தை நம்புறவரு...பின்பற்றுவரு அப்பிடியெண்டு தெரியிற மாதிரி இருக்கணுமென்றுதான் நம்ம ரஸுருல்லாஹ்...'

'அப்படியென்டால் நீங்க போட்டிருக்கிற இந்த நீளமான உடுப்புத்தான் முஸ்லீம்களுக்குரிய அடையாளமா என்ன?'

அவருக்கு எனது கேள்வி ரசிக்கவில்லை. வாய்க்குள் எதையோ முணுமுணுத்தவாறு வெளியே பார்த்து யோசித்துக் கொண்டிருந்தார். பஸ்ஸின் யன்னலை ஊடறுத்து வீசிய தம்பலகாமத்தின் வயல்வெளிக் காற்று எனது தலைமுடியை அலைக்கழித்துக் கொண்டிருக்க அவர் திரும்பும் வரை காத்திருந்தேன்.

'தம்பி, ஒங்களுக்குச் சொல்லத் தேவையில்லை.. நம்ம மார்க்கத்துல ஆம்பளைகளுக்கு வேறயா பொம்பளைகளுக்கு இன்னன்ன மாதிரின்னு உடுத்திக்கொள்ளணும் என்று தெளிவாச்  சொல்லியிருக்குத்தானே? அதைச் செய்தா சரிதான்.'

'ஓம் நானா, அதன்படிதான் நானும் உடுத்திருக்கிறேன் என்றுதான் நெனைக்கிறேன். ஆனா நான் போட்டிருக்கிறது நீங்களெல்லாம் போட்டிருக்கிற மாதிரி பாகி;ஸ்தான் ஆப்கானிஸ்தான் மக்கள் போடுகின்ற ஜுப்பா கிடையாது. பாருங்க,  நம்மட ஆக்கள்ல சிலபேர் சாரம் சேட் போடுறாங்க, டீ சேட் ஜீன்ஸ் போடுறாங்க, சிலபேர் உங்கள மாதிரியும் போடுறாங்க.. அரபு நாடுகளில வேறொருவிதமா...  இதில இதுதான் முஸ்லீம்களுக்குரிய ஆடை என்று எதை எடுத்துக் கொள்றது...?'

பாசில் நானாவால் பதில் சொல்ல முடியவில்லை.

'இங்க பாருங்க நானா, பேசுகிற மொழியும் உடுத்துகின்ற ஆடைகளும்  மனிதர்கள் நமது வசதிக்குத் தக்கபடிதான். நான் தமிழன் அதனால் தமிழை மட்;டுந்தான் பேசுவேன் என்றோ நான் சிங்களவன் சிங்களத்தை மட்டுந்தான் பயன்படுத்துவேன் என்றெல்லாம் சொல்லிட்டு இந்தக்காலத்தில வாழமுடியுமா?'

' பேசிக்கிற பாஷைக்கு வேணுமென்டா நீங்க சொல்றது சரி தம்பி, ஆனா இது உடுப்புக்குச் சரிவருமா? நமக்கென்று ஒரு கலாச்சாரம்  பாரம்பரியம் இல்லியா என்ன?'

' சரி, ஒரு பேச்சுக்கு நீங்க காலைல வாக்கிங் போக வேண்டியிருக்கு என்று வைச்சுக் கொள்வோமா... இப்ப நீங்க போட்டிருக்கிற இந்த உடுப்பு அதுக்குச் சரிவருமா? டீ-சேட் பொட்டம் போட்டுத்தானே ஆகணும்? நம்ம பிள்ளைகள் ஸ்கூல்ல புட்போல், கிரிக்கட், நீச்சல் பயிற்சிக்கு போனா அந்தந்த விளையாட்டுக்கு அவசியமான உடுப்புகளை அணியத்தானே வேணும்?'

'இப்ப நீங்க சொல்றதப் பார்த்தாக்கா.... டீவில காட்டுறாங்களே... நீச்சல் போட்டி,  பீச்-வொலிபோல்! அப்ப அதுக்கெல்லாம் போறதென்டா பிகினி உடுப்புலதான் போகணுமா?' என்று கேட்டார் பாசில், அதிரடியாக.

'ஆ! நல்லாக் கேட்டீங்க நானா?' என்று அவரையே சிறிது நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான் இம்தியாஸ். அவனுடைய யோசனையைப் பார்த்து  மடக்கிவிட்ட திருப்தியில் அவர் உள்ளுக்குள் சிரிப்பது நன்றாகப் புரிந்தது.

அதற்குள் பஸ் ஓரிடத்தில் நின்றது. 'அனுஹய பகின்ட முள்ளிப் பொத்தானை இறங்குங்க! ஆ.. நுவர.. மாத்தளே நுவர மாத்தளே!' சிலர் ஏறி இறங்கிக்கொள்ள மீண்டும் இரைச்சலுடன் புறப்பட்டது.

'என்ன தம்பி, பதிலையே காணல்ல...?'

'ம்ம்! அதுமாதிரி விளையாட்டுக்கெல்லாம் நாம போகணுமா இல்லையான்னு தீர்மானிக்கிற விஷயம் இன்னும் நம்ம கையிலதானே இருக்கு? ஆனா, நீச்சல் மாதிரிப் போட்டியில கலந்து கொள்றது என்று முடிவெடுத்திட்டோமென்றால் சேட், சாரம், ஜுப்பாவெல்லாம் உடுத்திக்கொண்டு நிச்சயமா நீந்த முடியாது!'

 'சரி தம்பி, உடுத்துறத வுடுங்க! இன்னும் எத்தனையோ விசயம் இருக்கே! ரஸுலுல்லாஹ் சொன்ன சுன்னத்தான விசயங்கள்... ஆண்கள் தாடி வச்சுக் கொள்வது, தொப்பிகள் அணிந்து கொள்வது..இதெல்லாம் செய்யக்கூடியதுதானே?'

'ஓம். அதெல்லாம் செய்யக் கூடியதுதான். ஆனால் அதை மட்டுமே செய்து கொண்டிருந்தால் போதுமா நானா? ஒரு முஸ்லீம் முதலில் தனது நற்செயல்களால் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதிலே அக்கறை செலுத்தக் கூடாதா? உதாரணமா பாருங்க, நம்ம மார்க்கத்திலதான் சுத்தம் பற்றி அதிகமாகச் வலியுறுத்திச் சொல்லியிருக்கு இல்லையா?

'நெசம்தான்.. 'சுத்தம் ஈமானின் (இறை நம்பிக்கையின்) பாதி' என்று சொல்லியிருக்கிறாங்க நம்ம ரஸுலுல்லாஹ்..'

 'ம்ம்! ஆனால் சுத்தம் என்றால் தங்களோட உடம்பை மட்டும் கழுவிக்கழுவி வைச்சுக்கொள்றாங்களே தவிர, நம்மில் எத்தனை பேர் தெருவில் காறி எச்சில் துப்புகின்றோம் ...வீட்டுக்குப்பையை வீதியில் கொட்டுகின்றோம் தெரியுமா? பொலித்தீன்களை ஷொப்பிங் பேக்குகளை பிளாஸ்டிக் போத்தல்களையெல்லாம் ஓடைக்குள்ளேயும் கழிவுநீர்க் கான்களுக்குள்ளேயும் கொஞ்சமும் யோசிக்காமல் போடுகின்றோம்..பார்த்தீங்களா?

அவர் எதுவும் பேசாமல் நான் சொல்வதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.

'நம்ம மட்டுமா அப்படிப் போடுறம்? எல்லா ஜாதிச் சனங்களும்தானே போடுதுங்க.. சுத்தமில்லாம பொறுப்பில்லாம நடந்துக்குதுங்க... நீங்க ஏதோ நம்ம சனங்கள் மட்டும்தான் என்ட மாதிரிச் சொல்றீங்களே?'

'உண்மைதான்! நம்மட நாட்டுல எல்லாரும் செய்றதைத்தான் நாங்களும் செய்யுறோம். அதுலயும் நாம ஒருபடி மேலதான்!  எல்லா இனமக்களும் குடியிருக்கிற ஒரு டவுனை எடுத்துப் பாருங்க.. மற்ற வீதிகளை விட நம்மட சனங்கள் குடியிருக்கிற வீதிகளும் சந்துகளும்தான் அதிகமான கழிவுக்குப்பைகளால நிரம்பியிருக்கும். இந்தக் கசப்பான உண்மையை ஒத்துக்கொள்ளத்தான் வேணும்'

அவர் அதை ஏற்றுக்கொள்வதைப்போல தலையாட்டினார்.

'ஆனா, மத்தவங்ளோட மார்க்கங்களில சுத்தம் இறைநம்பிக்கையின் பாதி என்றளவுக்கெல்லாம் சொல்லல்லையே நானா? நம்மட மார்க்கத்துலதானே சுத்தத்தை ஆதாரமான நம்பிக்கையின் அரைவாசியோட சம்பந்தப்படுத்தியிருக்காங்க. அப்படியென்றால் நாமதானே மத்தவங்களை விட முன்மாதிரியாக சுத்தம் பேணணும்?'

'நீங்க சொல்றதெல்லாம் உண்மைதான் தம்பி. இருந்தாலும் இந்த அற்ப துனியாவோட விசயங்கள திருத்திறதுக்கு அதிகமா ஈடுபடப்போனா நாளைக்கு மறுமை நாள்ல நாம நஷ்டவாளி ஆகிவிடுவோம். அதால..'

'என்ன..? எனக்கு விளங்கயில்ல?'

'இல்ல பாருங்க, இந்த உலகம் வந்து மறுமைக்கான விளைநிலமென்டு கண்மணி ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் சொல்லியிருக்கிறாங்க. நாம தனித்தனியா ஒவ்வொருவரும் நம்மளை மறுமையில கிடைக்கப்போற ஜன்னத்துல் பிர்தவ்சுக்காக தயார் செய்துக்கிட்டு வந்தாலே எல்லாம் சரியாகிடும்...இதைத்தான் அல்லா.. ஜெல்ல..சுபஹானல்... தம்பி! என்ன தம்பி, திரும்பிட்டீங்க..இதென்ன காதில இயர்போனைப் போடுறீங்க..?

அவருக்கு பதில் சொல்ல அவகாசமில்லாமல் மீண்டும் பள்ளித் தலைவர் போனில் வந்திருந்தார்.

' ஆ! சொல்லுங்க தலைவர் ! இப்ப தெளிவா கேக்குது! எக்ஸ்க்யூஸ்மீ..! ஒண்ணுமில்ல அது இங்க பஸ்ல பக்கத்துல ஒருவர்.. சரி, நீங்க சொல்லுங்க! மதிவதனியும் என்னைப்போலவே நம்ம மார்க்கத்துக்கு வாறதில நம்ம பள்ளி ஆக்களுக்கு என்ன பிரச்சினை? '
'.................'

' சரி, பிழையா நினைக்கல்ல.. பரவாயில்ல சொல்லுங்க!'
'.....................?'


நான் சிறிது நேரம் எதுவும் பேசவில்லை. அருகிலிருந்த தாடிக்காரர்,  போனில் பதில் சொல்லிக் கொண்டிருக்கும் என்னையே இமை மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.

'சரி தலைவர், நீங்க எல்லாரும் இப்ப எதைச் சந்தேகப்படுறீங்க? மதியும் அந்தப் பிஞ்சுப் புள்ளையும் என்னைத் திருப்பியும் பழையபடி ஆக்கிடுவாங்க என்றுதானே? நானா, நீங்க சொல்ற மாதிரி நம்மட அயலுக்குள்ளேயே நம்மட ஒரு பிள்ளையை நான் கட்டியிருக்கலாம்தான்.. ஏன் இப்ப கூட  நீங்க காட்டுற பிள்ளைய நான் கட்டுறேன். ஆனா..'
'.........'
'நான் சொல்றதைக் கொஞ்சம் கேளுங்க! நான் கட்டுறேன். ஆனா.. வன்னி அடிபாட்டுல சிக்கி புருசனையும் அவன்ட தாய் தகப்பனையும் குடும்பத்தையும் பறி கொடுத்திட்டு கைப்பிள்ளையோட யாருமே இல்லாம வந்து நிக்கிறவ மதிவதனி. அவளை உங்கட அயலுக்குள்ள யாராவது ஒரு நல்ல தொழிலோடு இருக்கிற பொடியன்கள்ல ஒருத்தனைக் கட்டச்  சொல்லுங்களேன் பார்ப்போம்..!'
'...........'
' என்ன நானா சத்தமேயில்ல? பார்த்தீங்களா? மாட்டாங்கதானே? இப்படி இளம் வயதில வாழக்கையை பறிகொடுத்தவளை நாமே கைவிட்டா அவள் எங்கதான் போவாள் சொல்லுங்க? நீங்க கேட்டபடி மதி இருந்த கட்டுகஸ்தோட்டை பள்ளிவாசல் முகாம்ல இருந்து கடிதம் எடுத்திட்டு வாறேன். அதன் பிறகு நாங்க சேர்ந்து இருக்கிறதில பிரச்சினை இல்லதானே?'
'............................'
'ஆங்! அதுக்குத்தானே நானா, இப்ப நான் அங்கே போயிட்டிருக்கிறேன். அது வந்து..பெரிய கதை!  கடைசிச் சண்டை நடந்ததுதானே...அதுல   உயிர்தப்பி பிள்ளையோட ஓடி  வவுனியாவுக்கு வந்து சேர்ந்திருக்கிறா.  அங்க மதியிட அப்பாவோட முதல் சேர்வையரா வேலை செய்த முஸ்லீம் பெரியவர் கண்டு  கண்டிக்கு கூட்டி வந்திருக்கார். அங்க அவர்ர குடும்பத்தோட வீட்டுல தங்க வச்சி உதவியெல்லாம் செஞ்சிருக்காரு. அந்த மனிசன்ட குடும்பத்தாக்கள்ட உதவியையும் நல்ல குணத்தையும் பார்த்திட்டு அங்க இருக்கும் போதே நம்ம மார்க்கத்துக்கு வாற ஐடியாவுலதான் இருந்திருக்கா மதி.'
'...................'
 'ஓமோம் நானா! அங்க உள்ள பள்ளிவாசல்ல அதுக்குரிய எல்லா ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருந்தபோதுதான் பொலீஸ் பிரச்சினையாகி இங்க டரிங்கோவுக்கு வர வேண்டியதாகிட்டுது அவளுக்கு! இங்க அதுகள்ற குடும்பமே அவளைச் சேர்க்காம துரத்தி விட்டதெல்லாம் உங்களுக்கும் தெரியும்தானே? அப்படிப் பரிதவிச்சு நின்று கொண்டிருந்தவளைத்தான் நான் கட்டிக் கொள்றதுக்கு இப்ப உங்களுக்கிட்ட கேக்கிறேன்...'

'........................' 

' ஓகே..அதுக்கு என்ன செய்யுறது நானா? ஏதோ படிக்கிற காலத்துல வயசக்கோளாறுல படிப்பிச்ச ஸ்கூல் மாஸ்டரை விரும்பி வன்னிக்குப் போயிட்டாள். இப்ப அவள்ற புருசனும் இல்ல.. கடைசிச் சண்டையில மாட்டி எல்லாத்தையும் பறிகொடுத்திட்டு வந்திருக்கிறாள். இங்க, நாங்களும் சந்தேகப்பட்டுச் சேர்க்காம இருந்தா பாவம் அவள் என்னதான் செய்வாள் சொல்லுங்க, தலைவர்?'

'............................'

' சரி சரி, நான் விசயத்தை முடிச்சிட்டு இன்றைக்கு நைட் பஸ்ல திரும்புறன். நீங்கதான் யோசிச்சு ஒரு நல்ல முடிவெடுக்கணும். ஆ...! சரிசரி வைங்க' என்று செல்போனை அணைத்தபோது அவனையே திகைத்துப் போய் பார்த்துக் கொண்டிருந்தார் தாடிக்காரர்.

'யாரு..அது? ஏதும் ஊர்ப் பிரச்சினையா?'

'சேச்சே! இது வேற ஒரு பிரச்சினை!'

' தமிழ் புள்ளயக் கலியாணஞ் செய்யப் போறீங்களா? நான் நீங்க  பேசுனதைக் கேட்டுட்டுத்தான் இருந்தன் தம்பீ.. யாரு அது தெரிஞ்ச ஆக்களா?'

'ம்ம்! அந்தப்புள்ள என்ட  தங்கச்சிட  க்ளாஸ்மேட்!'

'உங்கட வீட்டுல சம்மதமா அதுக்கு? அந்தக் குட்டியை உங்க வீட்ல சேர்ப்பாங்களா? '

'சே! என்ன நானா பேசுறீங்க? ஒரு பொம்பிளைப் பிள்ளைய குட்டி கிட்டி அது என்டுட்டு? முதல்ல என்னையே சேர்ப்பாங்களோ தெரியாது!'

'இல்ல அது வந்து...'

அதன் பிறகு இருவரும் சிறிது நேரம் பேசிக் கொள்ளவில்லை. இம்தியாஸ் வெகுநேரமாய் யோசனையிலாழ்ந்திருந்தான்.

'என்ன தம்பீ, கவலைப்படாதீங்க! எல்லாம் அல்லாஹ்ட ஒதவியால சரியா வரும். ரஸுலுல்லாஹ் கூட யுத்தத்துல ஸகீதான தோழர்களோட விதைவைகளைத் திருமணஞ் செய்திருக்கிறாங்க..'

'அதெல்லாஞ் சரிதான், ஆனா இதே போல ஒரு பொம்புளையச் செய்ய விடுவீங்களா நானா?'

' ஆ! என்ன தம்பீ சொன்னீங்க?' என்றார் பதறியடித்து.

'இல்ல ஒண்ணுமில்ல, எனக்கு போன் கோல்; வர முந்தி நீங்க என்னமோ சொல்லிட்டிருந்தீங்களே? அதைப்பத்திப் பேசுவோமே, பாசில் நானா' என்று பேச்சை மாற்றினான், இம்தியாஸ்.

' ஓ அதுவா? அதான் தம்பி, இந்த அற்ப உலகத்தினுடைய சீரழிவுகள்ல சிக்கிடாம நாம நிறைய அமல்களை செய்து நம்மட கப்றுக்குத் தேவையானதை சம்பாதிச்சுக்கணும்'

'நீங்க சொல்றது சரிதான் நானா. ஆனா நீங்க அமல்கள் என்று சொல்றது எதை?'

' என்ன தம்பி, புரியாத ஆளாயிருக்கிறீங்க? இரவிலும் பகலிலும் பர்ளான சுன்னத்தான தொழுகைகள்ல அதிகமாக ஈடுபடுறது, நோன்புகள் நோற்கிறது, ஏழைகளுக்கு ஸகாத் கொடுக்கிறது, தீன் மார்க்கத்தை அடுத்தவருக்கும் எத்திவைக்கிறது...'

'ஓகே..ஓகே! அப்படியென்டா இந்த உலகம் எப்படியாவது போகட்டும். நம்ம மட்டும்  தனித்தனியா சொர்க்கத்துக்குப் போக வழி தேடுனாப் போதும் அதுதானே நீங்க சொல்ல வாறது?'

' இல்ல அப்பிடியில்ல!'

'வேற எப்பிடி? இங்க பாருங்க நானா, இந்த உலகத்துல மனுசனாய்ப் பிறந்த ஒவ்வொருத்தனுக்கும் சில கடமைகள் இருக்கு! முதல்ல சமூகத்தில உள்ள சீர்கேடுகளைப்பற்றி அறிஞ்சு கொள்ள வேணும் பிறகு அதில இருந்து தன்னையும் மற்றவர்களையும் எப்படி மீட்கலாம்  என்று யோசிக்கணும். அதுக்குத்தான் நமக்கெல்லாம் இறைவன் அறிவை தந்திருக்கின்றானே தவிர சீர்கேடுகளையெல்லாம் கண்டும் காணாம ஓதுங்கிப்போய் தப்பிக்கிறதுக்கில்ல?'

'அதைத்தானே நாங்களும் சொல்றோம். எல்லாரும் இறைவன்ட வழியில வந்து அமல்கள்ல ஈடுபட ஆரம்பிச்சா இந்த ஒலகத்தில பூரா பிரச்சினைகளும் மெல்ல மெல்லக் காணாமப் போயிடும.; துனியா வாழ்க்கையில யாருக்குத்தான் பிரச்சினைகள் இல்ல. ஆனா அல்லாஹ்ட பாதையில ஒருவன் கொஞ்சநாள் சரி இறங்கிட்டானென்டா மனசுக்கு ஒரு நிம்மதி உண்டாகும். அவர்ட பிரச்சினைகளெல்லாம் அவனோட கிருபையால ஸோல்வ் ஆகும் தெரியுமா? '

'அடடே அப்படியா? அப்ப இங்க பஸ் முழுக்க உங்களோட வந்திருக்கிறவங்க  எல்லாருமே அதுக்குத்தான்  வந்திருக்கிறாங்களா?'

' ஆங் ! இல்ல ..அதுவந்து..' விழித்தார் பாசில் நானா.


'சரி, நம்ம நாட்டில இப்ப திடீரென்று பெற்றோல் டீசல் விலையெல்லாம்
கூடிப்போய் இருக்கு! பஸ்கட்டணம், லைட்பில், பாண், மரக்கறி, மற்ற சாமான்கள்ற விலையும் கூடி வாழ்க்கைச் செலவு சமாளிக்கவே முடியாதளவுக்கு ஆகிட்டுது..இந்தப் பிரச்சினையால பாதிக்கப்படுகின்ற கூலிவேலை செய்து பிழைக்கிற ஒருவன் அல்லது மீன்பிடிக்கிற ஒருவன் சிறு அரசாங்க உத்தியோகத்தன் தன்ட பிள்ளை குட்டிகள்ற சாப்பாட்டு நெருக்கடியில இருந்து எப்படித் தப்புறது சொல்லுங்க நானா? அவன் தன்னைப்போல பாதிக்கப்பட்ட மற்றவங்களோட ஒண்ணு சேர்ந்து போராடுறதா அல்லது உங்களோட வந்து பஸ் ஏறுறதா?'

' சேச்சே! அதுகளுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? அரசியல் பிரச்சினைகளை நம்மட மார்க்கத்தோட கொண்டு சேர்க்கப்படாது, தெரியுமா?'

' அரசியலும் பொருளாதாரமும்தானே நானா நம்மளோட வாழ்க்கையைத் தீர்மானிக்குது. அப்படியிருக்க எப்படி..? சரி, நீங்க மூச்சுக்கு மூச்சு சொல்லிட்டிருக்கீங்களே நம்ம ரஸுலுல்லாஹ் ரஸுலுல்லாஹ் என்று அவங்க  எப்படியானவங்க தெரியுமா உங்களுக்கு?'

'சொல்லுங்களேன் தம்பி, கேப்பம்'

'ரஸுலுல்லாஹ் தனியே பள்ளிவாசலுக்குள்ளே அமர்ந்து இறைவணக்கத்தில் மட்டும் ஈடுபட்டுக் கொண்டு இருக்கவில்லையே.. அவர்கள் தாங்கள் வாழ்ந்த சமூக அவலங்களைச் சென்று பார்த்தார்கள்... தோழர்களோடு சேர்ந்து எதிரிகள்மீது யுத்தங்கள் செய்தார்கள்... பகைவர்களோடு பேச்சுவார்த்தை நடாத்தினார்கள், ஒப்பந்தங்கள் புரிந்தார்கள். இதெல்லாம் அரசியல் இல்லையா?' 

திடீரென எற்பட்ட ஒரு குலுக்கலுடன் நின்றது பஸ்.

பஸ் ஒரு புறமாய்ச் சரிந்து நின்றிருக்க, நடந்தது என்னவென்று பார்க்க பஸ்ஸின் அத்தனை யன்னல்களிலும் தலைகள் முளைத்தன.

'ஐயோ! டயரெக்க கியா மல்லி!' என்றபடி சாரதி இறங்கிப் பின்னே செல்ல,


'கட்டிய ஒக்கோம கருணாகரலா பகிண்டகோ! ஆக்கள்..எல்லாரும் எறங்குங்க...டயர் மாத்திறது' என்ற கண்டக்டரின் குரல் கேட்டது.

அது ஒரு குடியிருப்புகளில்லாத சனநடமாட்டம் குறைவான வயல் பிரதேசம். நெடுஞ்சாலை வெய்யிலில் கொதித்துக் கொண்டிருந்தது. வேறுவழியின்றி எல்லோரும் இறங்கி வீதியோரத்தில்  பச்சைக் குடை ஒன்றை விரித்து வைத்தது போல் நின்றிருந்த  நிழல்வாகை மரத்தினடியில் செல்ல சிலர் சற்றுத் தள்ளியிருந்த ஒரேயொரு சிறு தேனீர்க்கடையை நாடினார்கள்.

அதுவரை இம்தியாஸோடு பேசிக்கொண்டு வந்தவரான   பக்கத்து சீட் பாசில் நானா அவனைத் தனது சகாக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர்களில் பலர் நன்கு படித்தவர்களாகவும் உயர் பதவியில் இருப்போராகவும் காணப்பட்டார்கள். ஒருவரையொருவர்  விசாரித்தறிந்து அளாவளாவிக் கொண்டிருந்த போது பஸ்ஸின் பின்புறமிருந்து உலோகச் சாவிகளின் உராய்தல் ஒலிகள் கேட்க ஆரம்பித்தன.

அப்போது தாடிமனிதர்களின் தலைவர் போன்றிருந்தவர் திடீரென எழுந்து நின்று, 'இறுக்கமான ஆன்மீகப் பின்பற்றுதலின் அவசியம்' பற்றிய போதனையொன்றைச் செய்ய ஆரம்பித்தார். மரத்தினடியில் அது நிகழ்ந்து கொண்டிருக்கும் போது பஸ்ஸின் சாரதியும் கண்டக்டரும் மிகவும் சிரமத்துடன் பஸ்ஸின் உதிரிச் சக்கரத்தை தனியாக மாற்றிக் கொண்டிருந்தார்கள். அது ஒரு சனநடமாட்டம் குறைவான இடமென்பதாலும் பஸ்ஸில் சாதாரண பயணிகள் குறைவு என்பதாலும் போதிய உதவியின்றி அவர்கள் இருவரும்  கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பது தெளிவாகத் தெரிந்தது.

'எக்ஸ்க்யூஸ்மீ, பாசில் நானா!'

' ஷ்ஷ்! எங்க தம்பீ! போறீங்க? இருங்க, இது முடிய ஒரு கூட்டுத் துஆ ஒன்று இருக்கு.. கலந்துக்குவோம்' என்றார் எனது பக்கத்துசீட்!

'என்ன? ஏன் திடீரென்று துஆ?'

'அது வந்து...இதே போல இனி வழியில எந்தக் கரைச்சலும் வராம இருக்கிறதுக்கு அல்லாஹ்வுக்கிட்ட..'

'ஓ! அப்படியா? இருங்க நானா, அந்தா அவங்க ரெண்டு பேரும் பாவம் டயரை மாத்திறதுக்கு தனியாக் கஷ்டப்படுறாங்க. வேற ஆக்களும் இல்லப் போலிருக்கு..கொஞ்சம் ஹெல்ப் ஒன்று கொடுப்போம்!' என்றபடி அவர்களிடமிருந்து விலகி வீதியில் நின்ற பஸ்ஸை நோக்கி நடந்தான் இம்தியாஸ். அருகிலிருந்த சிறுமரக்கிளையில் டீ சேர்ட்டைக் கழற்றிக் கொழுவி ஜீன்ஸை மடித்துக் கொண்டு   சாரதியுடன் நின்று டயரை மாற்றுவதற்கு உதவ ஆரம்பித்தான். அவனைப் பார்த்துவிட்டு வேறு சிலரும் உதவிக்கு வந்தனர்.

அவர்கள் எல்லோருமாகச் சேர்ந்து வெய்யிலில் நின்று வியர்வை வழிய டயரை மாற்றிக் கொண்டிருக்கும் போது நிழல்வாகையின் கீழ் நின்று இனி வரப்போகும் இடையூறுகளுக்காக துஆச் செய்து கொண்டிருந்தார்கள், அந்தத் தாடி மனிதர்கள்.

ஒருவழியாக முக்கால் மணிநேரத்தில் பஸ் பயணத்திற்குத் தயாராகி விட்டது.
வேலைமுடிந்த களைப்பிலே சாரதி கண்டக்டர் உட்பட அனைவரும் சாலையோரமிருந்த ஓர் இளநீர் கடையை நோக்கிச் சென்றனர். இளநீரைக்குடித்துக் கொண்டிருக்கும்போது பஸ்ஸின் சாரதியும் கண்டக்டரும் இம்தியாசின் மீது மிகவும் மதிப்புடன் நடந்து கொண்டார்கள். அவனது கண்டிக்குச் செல்லும் பயணத்தின் அவசரத்தை விசாரித்து வீணாகிய நேரத்தை எப்படியும் இனிவரும் ஓட்டத்தில் பிடித்துவிடலாம் என்று உறுதியளித்தார்கள்.
பஸ் மீண்டும் புறப்பட்டது.

'என்ன தம்பி, கையெல்லாம் க்ரீஸ் போல? நல்லாக் கழுவியிருக்கலாமே' என்றார் பாசில்.

'ஓமோம்! சோப் எதுவுமில்ல! பரவாயில்ல உங்கட கையெல்லாம் நல்ல சுத்தமா இருக்குத்தானே?'

அப்போது இரண்டு வயதான மனிதர்கள் தள்ளாடியபடி நின்றபடி  பயணம் செய்து கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர் சுகவீனமுற்றிருந்தவர் போலத் தோன்றியது இம்தியாசுக்கு. அவர்  நிற்கவே சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். அவர் தடுமாறுவதை பஸ்ஸில் இருந்த தாடி மனிதர்கள் உட்பட அத்தனை பேரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். யன்னலோரமாக இருந்ததால் இம்தியாசினால் சட்டென எழுந்திருக்க முடியவில்லை. அப்படியும் அருகிலிருந்த பாசில் நானாவிடம்  கூறிவிட்டு அவன் இடம்தர முனைந்த போது சட்டென பின்புறமிருந்த ஒரு வயதான பெண்மணி எழுந்து அந்த வயோதிபரின் கையைப் பிடித்து தனது இடத்தில் அமரச் செய்து விட்டு எழுந்து நின்று கொண்டார். அந்தப் பெண்மணியும் வயதான ஒருத்தி என்பதால் பஸ்ஸின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாது தள்ளாடினார்.

அப்போதுதான் அந்தச் சம்பவம் நடந்தது.
 

அந்தப் பெண்மணியிடம் தாடிமனிதர்கள் தமது சகாக்களுக்காக பிரயாணப்பைளை வைத்து இடம் போட்டு வைத்திருந்த  இருந்த இரண்டு சீட்களைக்காட்டி, அதிலே தற்காலிகமாக அமர்ந்து கொள்ளுமாறு சைகை காட்டினான் இம்தியாஸ். அதற்குத் தயங்கிய அந்தப் பெண்மணி, 'அணே எப்பா மகத்தயோ! மங் அலுத்ஓய லங்க பகிணவா நே! ஓண நெஹ மாத்தயா!' என்றாள், அந்தத்தாடி மனிதர்களைப் பார்த்தபடி. ஆனால் அவர்களோ ஒன்றுமே அறியாதவர்களாய்  யன்னலுக்கு வெளியே பார்த்தபடி இருந்தார்கள்.

'கமக் நெஹ!  உட்காருங்க. அவங்க ஏறுறதுக்கு இன்னும்
தூரமிருக்குக்குத்தானே? சீட்டகெ வாடிவென்ன அம்மே!' என்று  வற்புறுத்தியும் கூட அந்தப் பெண்மணி அவற்றில் இருக்க ஏனோ தயங்கினாள். இம்தியாஸ் தனது இருக்கையை விட்டு வெளியேறி வயதான அந்தப் பெண்ணை அதில் அமரவைத்துவிட்டு நின்று கொண்டே வந்தன்.

வயல்வெளிகளினூடாக வீசிய காற்று பஸ்ஸினுள்ளிருந்த அனைவரையும் கிறங்கடித்துக் கொண்டிருக்க சரியாக இருபது நிமிடங்களில் பஸ் கந்தளாய் மணிக்கூட்டுக்கோபுரச் சந்திக்கு வந்து சேர்ந்தது. இம்தியாசின் கால்கள் லேசாக வலி கண்டன.

'இறுங்கு! உண உண இறுங்கு!'

'கந்தளே ஹந்திய ஒக்கோம பகிண்ட!'  என்ற கண்டக்டரின் அதட்டலின் பின்பு பஸ் மீண்டும் விரைந்தது. கந்தளாய் ரயில் நிலையத்தைக் கடந்து போட்டங்காட்டுச் சந்தியில் திரும்பி பேராற்றுப் பள்ளிவாசலின் முன் நின்றது. அதிலே ஒரே ஒரு தாடிக்காரர் மட்டும் ஏறி உள்ளே வந்தார்.

' என்ன இது? நீங்க மட்டும் ஏறியிருக்கீங்க? மத்தவர் ரகீம் சாப் எங்க?' என்று கேட்டார் அவர்களின் தலைவர்.

'அதுவா? அவருக்குக் விடிய சுபஹோட கடுமையான வீசிங் மாதிரி வந்திட்டுது. நிலைமை கொஞ்சம் மோசமா இருந்திச்சு. ஒடனே பள்ளியில நைட்அவுட் நிண்டிருந்த குருநாகல் வேன் ஒண்டுல ஆள ஊருக்கு அனுப்பியாச்சு அமீர் சாப்! ஆள ஹொஸ்பிட்டல்ல சேர்த்திருக்காம். இப்ப கொஞ்சம் நல்லமாம் அவர்ர மகன் கோல் எடுத்தாரு இப்ப கொஞ்ச முந்தி!'

'யால்லாஹ்!... அல்ஹம்துலில்லாஹ்!' என்றார் தலையை ஆட்டிக்கொண்டு அமீர் சாப்.

மீண்டும் பஸ் கிளம்பிய போது இருவருக்காக இடம் போடப்பட்டு வைத்திருந்த இருக்கைகளில் கடைசியாக ஏறிய தாடிக்காரர் மட்டுமே அமர்ந்ததனால்  மற்றைய இருக்கை வெறுமையாக இருந்தது. 

இப்போது அவனுடன் அருகேயிருந்து பேசிக்கொண்டு வந்த மனிதரான பாசில் நானா பஸ்ஸில்  நின்று கொண்டிருக்கும் பயணித்த இம்தியாசையும் அந்த வெறும் இருக்கையையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டேயிருந்தார். அவனோ அவரைக் கவனிக்காமல் பஸ்ஸுக்கு வெளியே எதிர்த்திசையில் வேகமாய் ஊர்வலம்போகும் மரங்களையே பார்த்துக் கொண்டிருந்தான். ஆனாலும் அவனது கவனத்தைத் தன்பக்கம் திருப்புவதற்காக அவர் கையை அசைத்து சைகை செய்து கொண்டிருப்பது இம்தியாசின் ஓரக்கண்ணில் லேசாகத் தெரிந்தது. ஆனாலும் அந்தப்பக்கம் திரும்பாமலே நின்று கொண்டிருந்தான். நீண்ட நேரம் நின்று வந்ததால் கால்வலி உயிரை எடுத்தது.

சிறிது நேரத்தில் தனது முதுகில் வேறு யாரோ தொடுவதை உணர்ந்து அவன் திரும்பியபோது வயதான தாடிக்காரர் அமீர் சாப்  நின்றிருந்தார்.
' பரவாயில்ல, அந்த சீட்டில இருங்க தம்பீ..! எங்கட ஆள் ஒருவர் வரயில்ல சுகமில்லாம வீட்டுக்குப் போயிட்டாரு' என்று உற்சாகமாகக் கேட்டுக் கொண்டார்.

'  அடடா! எனக்காக எழும்பி வந்திருக்கீங்க போல இருக்கே..அமீர் சாப். மிச்சம் நன்றி! ஆனால் ஒன்று.  நான் நின்றுட்டு வரத்தான் விரும்புறேன்! தேங்ஸ்' என்று சற்றுத் தள்ளிப்போய் சாரதிக்குப் பக்கத்திலே நின்று கொண்டான், இம்தியாஸ் எனப்படும் முன்னாள் சரவணபவன்.

பஸ் இப்போது புதிய பாதையில் விரைந்து கொண்டிருந்தது.


-மூதூர் மொகமட் ராபி