Wednesday, June 20, 2012

மலையடியில் மரணிக்கும் மதநெறிகள்!







மூதூர்   'மூணாங்கட்டைமலை'

விவகாரம்:





னுராதபுரம் - பொலநறுவை - யாப்பஹுவ - குருநாகல்  - கண்டி - கம்பளை...       
                       என்று நமது இலங்கைத்தீவிலுள்ள சில நகரங்களின் பெயர்களை வரிசைக்கிரமமாகக்கூறிக் கொண்டு வந்தால் உங்களைப்போன்ற சிறகுகளின் நீண்டகால  வாசகர்களுக்கு உடனடியாக மனதிலே தோன்றுவது என்னவாக இருக்கும்?

இதுவும் ஒரு புதிதாக உருவான நீண்டதூர பேருந்து தடமோ என்று நினைக்க மாட்டீர்கள் என்பது எனது நம்பிக்கை. இலங்கையின் வரலாறுபற்றி சிறிதளவு அறிந்திருந்தாலே போதும் பண்டைய இலங்கையின் தலைநகரங்களின் இடம்பெயர்வு ஒழுங்கு என்பதை இலகுவாகக் கண்டுபிடித்து விடுவீர்கள்.
இதேபோல அதே அனுராதபுரத்திலிருந்து ஆரம்பமாகும் மற்றுமொரு ஊர்களின் வரிசைக்கிரமத்தைக் கீழே தருகின்றேன். இதனைப்பற்றி ஏதாவது புரிகின்றதா என்று முயன்று பாருங்கள்..

அனுராதபுரம் - தம்புள்ள - மூதூர் - தெகிவளை- காலி...

என்ன ஏதாவது புரிந்ததா நண்பர்களே? இருங்கள் விளக்கமாகக் கூறுகின்றேன்.

        மூன்று தசாப்தங்களையும் பல்லாயிரம் உயிர்களையும் கோடிக்கணக்கான பணத்தையும் மனித உழைப்பையும் ஏப்பம்விட்டதன் மூலம் நமது அழகிய இலங்கைத்தீவின் எதிர்காலத்தையே நாசமாக்கியது  உள்நாட்டு யுத்தம்.  அந்த பேரழிவு யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர், அண்மைக்காலமாக சிங்களப் பௌத்த பேரினவாதத்தின் அசிங்கம்பிடித்த ஆக்கிரமிப்புக்கும் அடாவடித்தனத்துக்கும் இலக்காகிவரும் முஸ்லீம் மக்களின் இருப்பிடங்களின் அல்லது வணக்கஸ்தலங்களின் ஊர்களின் ஒழுங்கு வரிசைதான் அது.


ஆம் நண்பர்களே, ஆட்டைக்கடித்து மாட்டைக்கடித்து ஆளைக்கடிக்கும் ஓநாய்கள்போல கடந்த வருடம் அனுராதபுரத்தில் ஒட்டுப்பள்ளம் எனும் பிரதேசத்திலே அமைந்திருந்த முஸ்லீம்களில் ஒருசாரார் புனிதமாக மதித்துப்போற்றும் கல்லறை ஒன்று அந்தப்பிரதேச பௌத்த மதகுருக்கள் சிலரின் தலைமையிலான உள்ளுர் காடையர்களினால் பொலீசார் வேடிக்கை பார்த்திருக்க உடைத்துத் தரைமட்டமாக்கப்பட்டதை யாவரும் அறிவோம்.



அதனையடுத்து இலங்கையின் தூங்கா நகரமான தம்புள்ளையில் பௌத்த மதகுருக்கள் சிலரின் தூண்டுதல் வழிகாட்டலுடன்  60 வருடங்களுக்கும் மேலான காலப்பழமைவாய்ந்த பள்ளிவாசலைத் தகர்ப்பதற்கும் அங்கிருந்து அகற்றுவதற்கும் ஆர்ப்பாட்டக்குழு ஒன்று முயன்றனர். இதன்போது ஓரளவு பள்ளிவாசல் சேதத்திற்குள்ளானது.


அதே போன்று இனவாத சக்திகளால் தூண்டப்பட்ட இளைஞர் குழு தெகிவளையிலே காலம்காலமாக வசித்துவரும் ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்கள் தொழுகைபுரியும் பள்ளிவாசலொன்றின் பாதுகாப்பையும் இருப்பையும் கேள்விக்குறியாக்கிவிட இப்போதும் முயன்று கொண்டிருக்கின்றனர்.




புத்தளம் - சிலாபம் வீதியிலுள்ள ஆரியசிங்களவத்தை கிராமத்திலே வசித்துவரும் முஸ்லீம் குடும்பங்கள் தமது சொந்த காணியிலே தொழுகைக்காக நிர்மாணம் செய்த தற்காலிக பள்ளிவாசலின் இருப்பை எதிர்த்து அமைதியின்மையையும் நெருக்கடியையும் ஏற்படுத்திய ஆர்ப்பாட்டக்குழு ஒன்று அங்குள்ள முஸ்லீம்களை வற்புறுத்தி அந்த இடத்தை வெறும் குர்-ஆன் ஓதலுக்குரிய மதரஸாவாக மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்று ஒரு சட்டத்தரணி ஆவணத்திலே கையெழுத்தும் பெற்றுள்ளனர்.


காலியிலே ஒன்றாக வாழ்ந்துவருகின்ற சிங்கள-முஸ்லீம் மக்களிடையே பிரிவினையையும் குரோதத்தையும் உருவாகிவிடும் விதமாக இனவாதசக்திகள் முஸ்லீம்களின் வியாபாரத்தலங்களின் மீது கதவுகளிலும் பூட்டுகளிலும் மனிதமலத்தை விசிறியும் பன்றியின் இரத்தத்தைப் தெளித்தும் காட்டுமிராண்டித்தனம் புரிந்திருக்கின்றார்கள். அதுமட்டுமன்றி அந்த முஸ்லீம் வர்த்தக நிலையங்களின் நீண்டகால வாடிக்கையாளர்களையும் அச்சுறுத்தியுள்ளனர்.


இவ்வாறு அங்கொன்றும் இங்கொன்றுமாக முஸ்லீம்களின் மீது திட்டமிட்டதும் எழுந்தமானதுமான தாக்குதல்கள் நிகழ்ந்தவாறுள்ள நிலையிலே, தற்போது உள்நாட்டு இனமுறுகல் யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலே ஒன்றான கிழக்குமாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்திலுள்ள மூதூர் பிரதேசத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் முக்கியத்துவம் பெறுகின்றது.





மூதூர் நகரிலிருந்து தென்புறமாக ஏறத்தாழ நான்கு கிலோமீற்றர் தொலைவிலே திருகோணமலை – மட்டக்களப்பு ஏ-14 வீதியை அண்மித்துள்ள கிராமம்தான் ஜபல்நகர். இங்கு முஸ்லீம்களும் தமிழர்களும் நீண்டகாலமாக ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். நெடுஞ்சாலைகளை முன்பு மைல் அளவுத்திட்டத்தில் வைத்திருந்த காலத்தில் 64ம் மைல்கல்லிலே அமைந்திருந்த காரணத்தால், 'அறுபத்தி நாலு' என்று இந்தப்பகுதி அழைக்கப்பட்டது. இங்கு அமைந்துள்ள ஓர் மிகமுக்கியமான நில அடையாளம்தான் 'மூணாங்கட்டை மலை' என அழைக்கப்படும் சராசரியாக 200 அடி உயரமுள்ள இந்தத் தொடர்குன்றுகள். இக்குன்றுகளைச்சூழ ஒருபுறம் மக்கள் குடியிருப்புகளும் மறுபுறம் மூதூர்வாழ் முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களின் நெல்வயல்களும் காணப்படுகின்றன.



மூதூர் பிரதேசசபையின் நிருவாக ஆளுகைக்குட்பட்ட இந்த மூணாங்கட்டைமலைக் குன்றானது மூதூர் மக்கள் அனைவருக்கும் பொதுவான ஒர் இயற்கை வளமாகும். இதனால்; அப்பிரதேசத்திலுள்ள மக்கள் தமது  கட்டிட நிர்மாணம், வீதியபிவிருத்திப் பணிகள் போன்ற தேவைகளுக்கு அவசியமான பாறாங்கற்களை இக்குன்றிலிருந்தே உடைத்துப்பெற்று வருகின்றனர். இந்த பாறாங்கல்லுடைத்தல் தொழில் இப்பிரதேசத்தில் மீளக்குடியமர்ந்து வாழும் எத்தனையோ ஏழைக்குடும்பங்களின் அன்றாட ஜீவனோபாயமாக இருந்து வருகின்றது.




இந்த நிலையில்தான் கடந்த 08.06.2012  வெள்ளிக்கிழமையன்று சேருவிலை விகாராதிபதி வண. சரணகீர்த்தி தேரோ வின் தலைமையிலே திடீரென பல வாகனங்களில் 20க்கும் அதிகமான பணியாட்கள் மூணாங்கட்டை மலைப்பகுதிக்கு வந்திறங்கினார்கள். அதனைத் தொடர்ந்து குன்றின் உச்சிக்குச் செல்வதற்குரிய படிக்கட்டுத் தொகுதியொன்றை அமைப்பதற்குரிய உபகரணங்களும் இரும்பு மரக்கிராதிகளும் வந்திறங்கின. அத்துடன் அதே 'மூணாங்கட்டை மலை'  குன்றின் அடிவாரத்திலே  சிறியதொரு வணக்கத்தல வடிவிலமைந்த கொட்டில் ஒன்றையும் நிறுவும் முயற்சிகளையும் ஆரம்பித்தனர்.


இதனால் அப்பிரதேசவாசிகள் குழப்பத்திற்கும் பீதிக்குமுள்ளானார்கள். இதனையடுத்து இந்த விடயம் ஊருக்குள் வேகமாகப்பரவியது. விளைவாக ஊர்ப்பிரமுகர்கள் ஒன்றுகூடி சர்வமதக்குழுவின் தவிசாளரின் தலைமையில் மலையடிவாரத்தில் ஆலய நிர்மாணத்திலே ஈடுபட்டுக்கொண்டிருந்த  பௌத்த விகாராதிபதியைச் சந்தித்துப்பேச முடிவு செய்தனர்.


விகாராதிபதிக்கும் அவரது குழுவினருக்கும் அவர்களது மேற்படி நடவடிக்கைகளின் தீய விளைவுகளை எடுத்துக்கூறி சுமுகமான ஒரு இணக்கத்துக்கு வருவதற்காக குறிப்பிட்ட இடத்திற்கு 12.06.2012 செவ்வாயன்று அவர்கள் சென்று பேசியபோது வெகுண்டெழுந்த சேருவில விகாராதிபதி,  தவிசாளரையும் ஊர்மக்களையும் நோக்கி கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டுள்ளார். குறிப்பாக, 'நாங்கள் 2500 வருடங்களுக்கு முன்பிருந்தே இந்தநாட்டில் வாழ்பவர்கள். நீங்களோ 500 வருடங்களாகத்தான் இங்கே குடியேறியிருப்பவர்கள். நாங்கள் உரிய மேலிடத்தின் முறையான அனுமதியைப் பெற்றுத்தான் இதனைச் செய்து கொண்டிருக்கின்றோம். எங்களைத் தடுக்க உங்களுக்கு உரிமையில்லை. நாங்கள் நினைத்தால் இந்த நாட்டை விட்டே உங்களைத் துரத்துவோம்' என்றெல்லாம் சத்தமிட்டுள்ளார். இதிலிருந்தே அவர்களது உத்தேச பௌத்த ஆலய நிர்மாணிப்பின் நோக்கத்தினை  தெளிவாக அறியக்கூடியதாகவுள்ளது.


மூதூர் பட்டினத்திலே வாழ்ந்துவரும் ஏறத்தாழ 90 சிங்களக் குடும்பங்களைச் சேர்ந்த 300 அங்கத்தவர்களும் தமது ஆன்மீக பேணுதல்களை நிறைவேற்றுவதற்காக பௌத்த விகாரையொன்று ஏற்கனவே இருந்து வருகின்ற நிலைமையில் ஒரு சிங்களவர்தானும் குடியிருக்காத ஜபல்நகரிலே ஓர் பௌத்த ஆலயம் அமைப்பதற்கான தார்மீக நியாயம் எதுவுமே கிடையாது என்பதால் மூதூரிலுள்ள பல சிங்கள மக்களே ஆச்சரியப்படுமளவுக்கு சேருவிலை விகாராதிபதியின் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. இத்தனைக்கும் இந்த மலையடிவார பௌத்த ஆலயத்தின் நிர்மாணிப்பு வேலைகள் பற்றி மூதூரில் வாழும் சிங்களமக்களிடமோ மூதூர் பட்டின விகாராதிபதிக்கோ தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை.


அதேவேளை, இந்த 'மூணாங்கட்டை மலை' குன்றுகளின் ஆக்கிரமிப்புக்கு வெறும் ஆலய நிர்மாணம் மட்டுமல்ல வேறு சில நோக்கங்களும் இருப்பதாக பொதுமக்கள் கருத்துத் தெரிவித்துள்ளதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அதாவது  சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் இந்தக்குன்றுகளில் பழங்காலப் புதையல்கள் இருப்பதாக இப்பிரதேச மக்களிடையே நீண்டகாலமாக ஓர் நம்பிக்கை நிலவி வந்திருக்கின்றது.


இதை உறுதிப்படுத்தும் விதமாக 1970 களிலே பௌத்த பிக்கு ஒருவர் புதையலை எடுப்பதற்காக உயிர்ப்பலி கொடுக்கும் நோக்கத்திலே இந்தக்குன்றின் உச்சிக்கு  குழந்தையொன்றைக் கடத்திச் சென்றுள்ள சம்பவத்தை பிரதேசமக்கள் கூறுகின்றனர். எவ்வாறாயினும் தகவலொன்றை அடுத்து குன்றின் உச்சிக்கு விரைந்து ஏறிய அன்றைய மூதூர் பொலீசார் பிக்குவின் பலிபூஜையின் இறுதிநேரத்தில் அதிரடியாகப்புகுந்து அந்தக்குழந்தையைக் காப்பாற்றியதையும் குற்றவாளியான பௌத்த பிக்குவைக் கைதுசெய்து கொண்டுசென்றதையும் இன்றும் பல முதியவர்கள்  நினைவு கூருகின்றனர்.





எவ்வாறாயினும் இந்த மலையடிவார ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் நிச்சயமாக வேறு உள்நோக்கங்கள் கொண்டது என்பதை யூகிப்பதற்கு பெரிய புத்திசாலித்தனம் ஒன்றும் தேவையில்லை. இவர்கள் ஆலயம் அமைப்பதும் பின்பு அந்த இடத்திலே மெல்ல மெல்ல அத்துமீறிய குடியேற்றங்களைச் செய்வதும் அதன்பின்னர் அந்தப் பிரதேசங்களிலே காலங்காலமாக வாழ்ந்துவரும் சிறுபான்மையின மக்களின் இருப்பையே கேள்விக்குறியாக்குவதும் இலங்கையின் பிந்தியகால வரலாற்றுப் பாடங்கள். ஆனால், இவ்வாறான தூரநோக்கற்ற பல நடவடிக்கைளினால்தான் வளம்நிறைந்த நமது அழகிய தீவுதேசம் ஏறத்தாழ கடந்த கால்நூற்றாண்டு காலத்தில் இயல்பாக அடைந்திருக்கவேண்டிய பொருளாதார அபிவிருத்தியையும் செழிப்பையும் இழந்து நின்றது என்பதை இவர்கள் இன்னும் புரிந்து கொள்ளாதிருப்பதுதான் வியப்பைத் தருகின்றது.


அதேவேளை அரசுடன் இணைந்து செயற்படும் முஸ்லீம் அமைச்சர்களும் தலைவர்களும் மக்கள் பிரதிநிதிகளும் இதுகுறித்து காத்திரமான நடவடிக்கைகள் எதையும் மேற்கௌ;ளாமல் வாளாவிருப்பதையும் அறிய முடிகின்றது. பின்பு இந்த விடயம் குறித்து அண்மையில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த அமைச்சரொருவர் மூதூருக்கு வந்திருந்தார்.
மேற்குறிப்பிட்ட விடயம் சம்பந்தமாக மூதூரில் நிகழ்ந்த சர்வமதக்குழு பிரதிநிதிகளின் சந்திப்பிலே அவர் உரையாற்றியபோது, 'அரசாங்கம் மூணாங்கட்டைமலை குன்றிலே ஆலயம் எதனையும் அமைப்பதற்கான எந்த அனுமதியையும் எவருக்கும் வழங்கியிருக்கவில்லை' என்று கூறிச்சென்றார்.




ஆகவே இதிலிருந்து உரிய மேலிடத்தின் அனுமதி பெற்றிருப்பதாக சேருவில விகாராதிபதி சர்வமதக்குழுவின் தவிசாளரிடம் கூறியது பொய்யான கூற்று என்று தெரியவருகின்றது. அவ்வாறாயின் அரசின் அனுமதியின்றி சட்டவிரோதமாகச் செயற்பட்ட விகாராதியின்மீதும் மலைக்குன்றிலே பௌத்த கொடியை ஏற்றி தற்காலிகச் சிறுஆலயத்தையும் நிறுவிக்கொண்டிருக்கும் அவரது குழுவினர் மீதும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று விசனத்துடன் வினவுகின்றார்கள் மூதூர் மக்கள்.






எது எவ்வாறாயினும் மூதூர்ப்பிரதேசத்தில் வாழும் ஏறத்தாழ அனைத்து மக்களும் அமைதியான வாழ்க்கையையே விரும்புபவர்கள். ஆனால், ஆக்கிரமிப்புச் சம்பவத்தைத் தெடர்ந்து இங்கு வாழும் சகல இனமக்களின் மனதிலும் சந்தேகமும் நிம்மதியின்மையும் ஏற்பட்டுள்ளதை அறிய முடிகின்றது. இந்த நிலை இவ்வாறே நீடிக்கும்போது பல விரும்பத்தகாத நிகழ்வுகள், அமைதியின்மை ஏற்பட வாய்ப்புள்ளது. இனமுறுகல் யுத்தவடுக்கள் இன்னும் மாறாதநிலையிலும் அமைதியாகவே இருந்துவரும் இந்தப் பிரதேசம் மீண்டும் போர்க்களமாக மாறிவிடக்கூடிய நிலையொன்று ஏற்படுமாயின் அதன் விளைவுகள் படுமோசமாக இருக்கும் என்று அங்குள்ள சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் அஞ்சுகின்றனர்.


இந்தப்பிரதேசத்தின் மக்களைப் பிரதிநிதித்துவம்புரியும் பாராளுமன்ற உறுப்பினர்களும் மாகாணசபை உறுப்பினர்களும் தங்களது அரசியல் வேறுபாடுகளையும் தனிப்பட்ட நலன்களையும் ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு ஒன்றிணைந்து அரசாங்கத்துக்கு நிலைமையை எடுத்துக்கூறி, உடனடியாக இந்த இயற்கைவளம் மீதான மத ஆக்கிரமிப்பையும் அதனைத்தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும்; செயற்பாடுகளையும் நிறுத்தவேண்டும் என்பதே இந்த நாட்டில் சமாதானமும் சகஜவாழ்வும் நிலைபெறவேண்டும் எனவிரும்புவோர் அனைவரினதும் விருப்பமாகும்.

மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவார்களா பார்க்கலாம்!


- Jesslya Jessly 
(2012.06.20)

1 comment:

  1. உங்கள் ஆதங்கம் உண்மையானதுதான் . இலங்கையில் இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வு எங்கு செல்கிறதென்று சிந்திக்கவே வேண்டியுள்ளது.
    இங்கு வந்து பாருங்கள்
    http://varikudhirai.blogspot.com/2012/08/up-country-tamils-in-srilanka.html

    ReplyDelete