Sunday, June 17, 2012

மூதூர் : மலையும் வெறியும்





உயர மலையேறும் மதவெறிகள்...!

&
துயர நிலைவீழும்   மதநெறிகள்..!





போருக்குப்பிந்திய இலங்கையில் உள்நாட்டு மக்களிடமும்,வெளிநாட்டு மக்களிடமும் சில பொதுவான  நம்பிக்கைகளும் எதிர்பார்ப்புக்களும் காணப்பட்டன. கோடிக்கணக்கில் பணத்தையும் ஆயிரக்கணக்கிலே உயிர்களையும் விழுங்கிய யுத்தம் ஓய்ந்தது. இனிமேல் விலைவாசி குறையப்போகின்றது. எவரும் எங்கும் எப்போதும் செல்லலாம். எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லாமல் சமய கலாசாரங்களைப்பேணி நி;ம்தியாக வாழலாம் என்று அனைத்து இலங்கைமக்களும் நம்பியிருந்ததெல்லாம் முற்றிலும் நியாயமானவையே.


ஏனெனில் வெள்ளைமுள்ளிவாய்க்காலோடு யுத்தம் முடிவுக்கு வந்தகையோடு 'இது இலங்கை மக்களின் நாடு. இங்கு சிறுபான்மை பெரும்பான்மை என்ற பேதம்கிடையாது. உங்கள் அனைவருக்கும் சமத்துவமான வாழ்வு நிச்சயமாக உண்டு.' என அன்றுமுதல் கூறத்தொடங்கிய ஜனாதிபதி இன்றளவும் சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் கூறிக்கொண்டுதான் இருக்கின்றார். மக்களும் ஜனாதிபதியின் தூய்மையான இந்த வாரத்தைகளை நம்பி அது நடைமுறையிலும் நிறைவேற வேண்டுமே என்ற எதிர்பார்ப்புடன் மனதுக்குள் பிரார்த்தித்த வண்ணமுள்ளனர்.


இதே பிரார்த்தனை நாட்டின் அனைத்துப் பிரதேசத்திலும் பரந்து வாழும் முஸ்லிம்களுக்கு இருந்தது போன்றே மூதூர் பிரதேச முஸ்லிம்களுக்கும் பலமாக இருந்ததுண்டு. மூதூரின் வளத்தையும்  வாழ்வையும் மக்களையும் காக்கவென மூதூருக்கு உள்ளும் புறமும் இப்பிரார்த்தனைகள் ஒலிப்பதுண்டு.
2002  பெப்ரவரி மாதம் 2ம் திகதியன்று அரசு- விடுதலைப்புலிகளிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தான போது 'இனியெல்லாம் சுகமே...' என எதிர்பார்த்திருந்த மூதூர் முஸ்லிம்களுக்கு பிரச்சினை, சிலுவை வடிவில் வந்தது.


மூதூர் - மட்டக்களப்பு பிரதான வீதியின்  64வது மைல்கல்லில் உள்ள ஜபல் நகரில் மூதூர் பிரதேசத்துக்கே தனியழகு சேர்ப்பதுதான் நில அடையாளமான இயற்கையின் கொடையாகிய மூணாங்கட்ட மலை என அழைக்கப்படும் குன்றுத்தொடராகும். அந்த 'சமாதான' காலத்தில் எல்லா மக்களுக்கும் பயன்பட்டுக்கொண்டிருந்த எல்லோருக்கும் பொதுவான இயற்கை வளமான மலையின் மீது திடீரென ஒருநாள் கொங்றீட் சிலுவைகள் முளைத்தன.


ஊருக்கே பொதுவான இயற்கைவளமொன்றின் மீது மத அடையாளத்தை இட்டுவைப்பது குறித்த மதத்துக்கும் அதனை விசுவாசத்துடன் பின்பற்றும் மக்களுக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்துவதோடல்லாமல் மக்களுக்கு மத்தியில் வீண் பதட்டத்தையும் தோற்றுவிக்கலாம் என அவ்வேளையிலே சமூக ஆர்வலர்கள் கருத்து வெளியிட்டனர்.


அவ்வாறிருக்கையில் மலையில் நிர்மாணிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய சிலுவைகள் திடீரென அகற்றப்பட்டன. அவ்வாறு மர்மமான முறையிலே அகற்றியமை தெரியவந்த போது அவை மூதூர் முஸ்லிம்களால்தான் அகற்றப்பட்டதாக  ஆதாரமற்ற வீண்பழி ஒன்றை  அன்றைய புலிப்பயங்கரவாதிகள்  முன்வைத்தனர்.



அதுமட்டுமல்லாமல் அதனைச்சாட்டாக வைத்து மூதூர் முஸ்லீம்கள் மீது ஓர்  திட்டமிட்ட பெரியளவிலான தாக்குதலை புலிகளின் மறவர்படை மேற்கொண்டது. மல்லிகைத்தீவு ராசு, நாவலடி ரஞ்சன்(மூலப்பொட்டி) என அழைக்கப்படும் புலிகளின் மறவர்படை பிரதேசத்தலைவர்களால் பட்டப்பகலில் மூதூர் முஸ்லிம்களின் உயிர் உடமை மீது குறிவைத்துத் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன.


இதன்போது நான்கு முஸ்லிம்கள் கடத்திச் செல்லப்பட்டுக் கொல்லப்பட்டனர். அத்துடன் அது முஸ்லீம்களின் புனித ரமழான் நோன்பு காலமாதலால் அதற்குத் தேவையான பேரீச்சம்பழம், அரிசி மற்றும் பலசரக்குப்பொருட்களை ஏற்றிவந்த முஸ்லிம் வர்த்தகர் காஸிம் ஹாஜியாரின் லொறி பச்சனூர் எனுமிடத்தில் மறித்து தீயிட்டுக்; கொளுத்தப்பட்டது.
மேலும் அந்த சமயத்திலே அறுவடைக்குத் தயாராகவிருந்த முஸ்லிம்களின் வயல்களுக்குள் நீரைத் திறந்து விட்டதுடன் கால்நடைகளையும் வயலுக்குள் சாய்த்துவிட்டு மகிழ்ந்தனர்.


ஏன் இந்த கடந்தகால ஞாபகங்கள் என்றால்,நியாயமற்ற வீம்புத்தனமான சமய அடையாள வெளிப்படுத்தல்கள்,திணிப்புகள் என்பன சாதாரண மக்களது வாழ்வில் எவ்வாறு பாரிய தாக்கங்களுக்கு வழிசமைத்துக் கொடுக்கின்றது என்பதை நாம் இரைமீட்கத்தான்.


ஆக, ஏற்கனவே எல்லோருக்கும் பொதுவான மூணாங்கட்டை மலைக்குன்று  தூரநோக்கற்ற மதசார்புள்ள விஷமிகளின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கியதனால் ஏற்பட்ட பாரதூரமான விளைவுகள் முன் அனுபவமாக இருக்க, இப்பொழுது மீண்டும் மூணாங்கட்டைமலை விவகாரம் விகாரமாய் உருவெடுத்து மூதூர் மக்களை அச்சத்துக்கும் பதட்டத்துக்கும் உள்ளாக்கியுள்ளது.


அன்று சிலுவைகள், இம்முறை பௌத்த சமய அடையாளப்படுத்தல்கள்... இதனால் மூதூர் மக்களின் அச்சமும் பீதியும் பன்மடங்காகியிருக்கின்றது.  அண்மைக்காலமாக தீவிரப்போக்குடைய சில பௌத்த பிக்குகள் குண்டர்கள் புடைசூழ அநுராதபுர ஒட்டுப்பள்ளம் சியாரம் உடைப்பு, தம்புள்ள புனிதப்பிரதேச பிரகடனம் மற்றும் மஸ்ஜிதுல் ஹைரியா பள்ளிமீதான தாக்குதல், ஆரிய சிங்கள மாவத்தை மத்ரசாவுக்கு விடப்படும் அச்சுறுத்தல், தெகிவளை பள்ளிவாசல் மீதான பிக்குகளின் தாக்குதல் போன்ற தாக்குதல்கள் இலங்கை முஸ்லிம்களின் சமய அடையாளங்கள் மீதும், மதவிழுமிய நடவடிக்கைகள் மீதும் மதப் பின்பற்றல் குறித்த உரிமையின் மீதும் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. ஆகவே இதன்பின்னணியாக அல்லது இத்தாக்குதல்களின் தொடர்ச்சியாகவே மூதூர் ஜபல்நகர்மூணாங்கட்ட விவகாரத்தைப்பர்க்கவேண்டியிருக்கிறது.


அதாவது இதுவரையிலான முஸ்லிம் சமய அடையாளங்கள் மீதான தாக்குதல்கள் அனைத்தம் பெரும்பாலும் சமய அனுஷ்டானத்துக்கு விடப்பட்ட சவாலாக இருக்க, மூணாங்கட்ட மலைப்பிரச்சினை சமய அனுஷ்டானத்துக்கும், வாழ்வாதாரத்துக்கும் சவால் விடுவதாக இருக்கிறது.
கடந்த 2008 ம் ஆண்டு சேருவிலை விகாரையைச் சேர்ந்த பிதம பிக்குவான சரணகீர்த்தி தேரோ அவர்கள், இம்மலையின் மீது பௌத்த சின்னங்கள் இருக்கின்றது எனக்கூறி சர்ச்சையை உண்டு பண்ணிய போது, அது பற்றி நேரில் கண்டு அறிவதற்காக மூதூர் சர்வமதக்குழுவினர் குறித்த பிக்குவுடன் சேர்ந்து மலையுச்சிக்கு ஏறினர். அங்கு பௌத்த புறாவஸ்த்து என்று பிக்கு சுட்டிக்காட்டிய அம்சத்தை அக்குழுவினர் ஆராய்ந்த போது அது 1989ல் இந்திய அமைதிகாக்கும் படையினர்(IPKF) மலை மீது தொலைத்தொடர்புக்கோபுரம் அமைத்து  அதனை அகற்றியபின் பழைமையடைந்து போயிருந்த சீமெந்துக்கட்டுத்தான் அது என அவ்விடத்திலேயே அது நீருபிக்கப்பட்டது.



அதே நேரம் அம்மலையுச்சியில் இருக்கும் கிறேவல் பாங்கான இடத்தில் கல்லில் வடிக்கப்பட்ட மிசான் கட்டைகள் நடப்பட்டடிருப்பது தெரிய வந்தது. அவ்விடயம் அப்போது பி.பி.சி.செய்தியிலும் ஒலிபரப்பானது குறிப்பிடத்தக்கது.


விடயம் இவ்வாறு மாறியதால், அத்தோடு அவ்விடயம் குறித்த பௌத்த பிக்குவால் தற்காலிகமாக கைவிடப்பட்டது. ஆனால் இப்போது மீண்டும் மூணாங்கட்டைமலையில் புத்தர் சிலை வைக்கும் சர்ச்சை அதிகார சக்திகளின் பக்கதுணையுடன் பூதாகரமாக எழுந்துள்ளது.


மூதூரைப் பொறுத்தவரையில் 1965ம் ஆண்டிற்குப்பின்பே சிங்கள மக்கள் இங்கு குடியேறி வாழ்ந்து வருகின்றனர். இதற்கிடையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர்களுள் பல குடும்பத்தினர் தம் ஊரான கந்தளாய்க்கு திரும்பிச்சென்றிருக்கின்றனர். தற்போது மூதூர் பிரதேச செயலகத்துக்குள் 293 அங்கத்தவர்கள் கொண்ட 94 சிங்களக்குடும்பங்களே வாழ்ந்து வருகின்றனர்.இவர்களது மார்க்க அனுஷ்டானத்துக்கென தபாலகத்தக்கருகில் ஒரு பெரிய விகாரையும் உண்டு.


இவ்வாறிருக்கையில் கடந்த 01.06.2012 அன்று வெள்ளிக்கிழைமை சுமார் மதியம் 12.25 அணியளவில் சேருவில பிரதம பிக்குவான சரண கிர்த்தி தேரோ அவர்கள் இருபது சிங்கள இளைஞர்களுடன் ஜபல் நகர்மலையடிக்கு வந்து மலையுச்சியில் புத்தர் சிலை வைப்பதற்கான முன்னாயத்தங்களை மேற்கொண்டிருக்கின்றார். ஜபல் நகர் மலையானது,மூதூர் பிரதேசசiயின் ஆளுகைக்கும், பராமரிப்புக்கும் உட்ப்ட்ட ஒரு இயற்கைவளமாகும்.எனவே சேருவில தேர்தல் தொகுதியைச்சேர்ந்த பிக்குவும் குழுவினரும் பிரதேசசபையின் அனுமதி எதனையும் பெறாது மலையை அணுகுவதும்,இயற்கை வளமொன்றை மத ஆளுகைக்கு உட்படுத்துவதும் சட்டவிரோதமானது என பொதுமக்கள் அப்பிக்குவிடம் தம் ஆட்சேபனையை தெரிவித்தபோது தான் உரிய ஏற்பாடுகளோடு வந்து வேலையைக் காட்டகிறேன் என அபப்pக்கு கூறிச் சென்றுள்ளார்.


அவ்வாறு அவர் கூறிச் சென்றதன் பின்னர் சர்வமதக்குழுவினரோ,மக்கள் பிரதிநிதிகளோ குறித்த பிக்குவை அல்லது பௌத்தமதீpடத்தை அணுகி விடயங்களை விளக்கியிருக்கலாம் ஆனால் மக்கள்  அப்பாவித்தனமாக அரசியல் தலைமைகள் அனைத்தையும் வென்று வருவார்கள் என வாளாவிருந்தனர்.


ஏற்கனவே அநுராதபுர சியாரம் உடைப்புக்கு எதிராக வழக்குத்தொடர்வேன் நீதி பெற்று வருவேன். அது நான் செய்தாக வேண்டிய என் கடமை என அரசியல் தரப்பில் இருந்து மக்களை சூடாக்க விடுக்கப்பட்ட வழக்கமான வாய்ச்சவடால் அது என்பதை இனங்காணாமல் இன்னமும் தம் வாக்குப்பலம் வென்று வரும் என மக்கள் நம்பினர்.


இந்நம்பிக்கையின் விளைவு 12.06.2012அன்று தெளிவாகியது. அன்றைய தினம் சேருவில தேரோ, குழுவினருடன் வந்து மலையுச்சிக்கு செல்வதற்கான படிகள் அமைக்கும் கட்டுமானப்பண்களை ஆரம்பித்து வைக்கும் ஸ்தல பூஜா என்று சொல்லிக் கொண்டு சமய அனுஸ்டானத்துடன் பணிகளை ஆரம்பித்து வைத்தார். அதன் போது மூதூர் பிரதேச சபை தவிசாளரும் மாகாணசபை உறுப்பினரும் ஜபல்நகருக்குச் சென்று தேரோவை அனுகிய போது,தகாத வதார்த்தைப்பியோகங்களுடாக தான் தொல்பொருள் தினைக்களத்தின் அனுமதி பெற்றிருப்பதாகவும் நாங்கள் இந்த நாட்டுக்கு 2500 வருடங்களுக்கு முன் வந்தவர்கள். நீங்கள் 500 வருடங்களுக்கு முன் வந்தவர்கள். என்னை தடுத்தால் அனைவரையும் ஊரைவிட்டே விரட்டியடித்துவிடுவேன் என்றும் அச்சுறுத்தியிருக்கின்றார்.


மூதூர் ஜபல் நகர்மலையைப்பொறுத்தவரை அது மூதூரின் மையப்பகுதியில்  எழில் கொஞ்சும் ஒரு இயற்கை வளமாகும். மனித நாகரிகம் தோன்றியது முதல் மக்களது கருங்கற் தேவையை நிறைவேற்றிக் கொண்டு வருகிறது. அம்மலையைச் சூழவுள்ள பல்லாயிக்கணக்கான வயல்நிலங்கள் அனைத்தும் முஸ்லிம்களுக்கும், தமிழருக்கும் உரித்தானவை. மலைக்குச் செல்லும் வழியில் ஜபல்நகர் மஸ்ஜிதுன்னூர் என்ற பள்ளிவாசலும், மலையடிவாரத்தில் கல்லுடைக்கும் தொழிலாளர்கள் வணங்குவதற்கென ஒரு சிறு முருகன் கோவிலும் பன்னெடுங்காலமாகக் காணப்படுகிறது. இச்சமயத்தலங்கள் எக்காலத்திலும் மலையின் மீது ஆதிக்கம் செலுத்தியது கிடையாது. மாறாக, மiயைச் சூழவுள்ள தம் விளை நிலங்களில் விவசாயத்தில் ஈடுபடும் மக்கள் தம் வணக்கவழிபாட்டை மேற்கொள்ளவே பயன்பட்டுக் கொண்டிருக்கின்றன.

யதார்த்தம் இவ்வாறிருக்க வரலாற்றில் என்றுமே பௌத்த சமய அடையாளம் இல்லாத பூர்வீகமாக குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் (குடியேற்றினாலன்றி)பௌத்தர்கள் இல்லாத ஜபல்நகர் மலையின் மீது, இப்போது புத்தர் சிலை நிறுவும் பணி அதிகார பக்கபலத்துடன் 12.06.2012 முதல் நடை பெறுகின்றது. அதேவேளை ஏனைய சமய அடையாளம் இருப்பது போல அங்கு பௌத்த சமள அடையாளமும் இருந்து விட்டுப் போகட்டும் என ஒர் அபிப்பிராயமும்  இங்கு முன்வைக்கப்படலாம். ஆனால் இங்கு மக்களது நியாயமான அச்சம் என்னவென்றால் , வரலாற்றில் சிறுபான்மை மக்கள் செறிவாக சுமுகமாக வாழும் பிரதேசங்களில் புத்தர் சிலை நிறுவிடும் போதெல்லாம் நடைபெற்றுவருவதை அனைவரும் அறிவர். ஏனெனில் ஒரு இந்து வழிபாட்டிடம் அமையப்பெற்று அல்லது இஸ்லாமிய வழிபாட்டிடம் அமையப்பெற்று அதுநாளடைவில் அங்கிருக்கும் இயற்கைவளத்தில் ஆதிக்கம் செலுத்தி வரிகட்டச்செய்து புனிதப்பிரதேச பிரகடணம் செய்து பூர்வீகமாக வாழும் மக்களையும் அவர் தம் வழிபாட்டிடத்தையும் அசிங்கமானது எனக்குறி அனைத்தையும் வன்முறை மூலம் அகற்றுமாறு தாக்குதல் தொடுத்ததில்லை.


ஆனால் அறுபதுவருடப்பழமைவாய்ந்த தம்புள்ளைப் பள்ளிவாசலும்,காளிகோவிலும் இன்று பௌத்த தேரோக்களின் பார்வையில் அகற்றப்படவேண்டிய அசிங்கங்களாகத்தெரிகின்றன. இவ்வாறு ஒவ்வொரு சிறுபான்மைப்பிரதேசத்திலும் சுத்திகரிப்புத் தாக்குதல்கள் சட்டத்தால் கட்டுப்படுத்தமுடியாதளவுக்கு நடைபெற்றுவருவதை நாளாந்தம் கண்கூடாகக் கண்டு கொண்டுதானிருக்கின்றோம்.



அந்த வகையில் தற்போது ஜபல் நகர் மலைமீதான புத்தர் சிலை நிறுவுதலானது,  எல்லாவற்றையும் போன்ற ஒரு சமய அடையாளம் என்பதற்கு அப்பால் எல்லோருக்கும் பொதுவான இயற்கைவளம் மீதான ஒர் ஆக்கிரமிப்பு என உள்ளுர் மக்கள்அச்சம் கொள்வதில் உண்மையும்,; நியாயமும் இருக்கிறது.
 


தற்போது தம் முதற்கட்ட இருப்பை தக்க வைத்துக்கொள்ளும் வேலைகள் சரண கீர்த்தி தேரோவின் தலைமையில் முடுக்கிவிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் குறித்த தேரோ, அல்லது அவரது சீடர்கள் மலையில் பாறாங்கல்லுடைப்பதற்கு தடை விதிக்கலாம்.(அப்போது 87 மைல்களுக்கு அப்பால் உள்ள கந்தளாயிலிருந்து பல்லாயிரம் ரூபாக்களைச் செலுத்தி பாறாங்கற்களை கொள்வனவு செய்யவேண்டிவரும்)அல்லது விகாரைக்கு வரிகட்டி உடைக்குமாறு கட்டளை பிறப்பித்து கல்லின் கொள்விலையை அதிகரித்துக்கொண்டு போகலாம். அல்லது இவை யாவற்றையும் வென்று அடுத்த சில ஆண்டுகளிலோ,எதிர்கால சந்ததியை நோக்கியோ புனிதப்பிரதேசப் பிரகடனம் புறப்பட்டு வரலாம். அப்போது  கல்லுடைத்தலுடன் தொடர்புடைய ஜீவனோபயத்தை நம்பிவாழும், வாழப்போகும் மக்கள் (தற்போது கல்லுடைத்தலுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஜீவனோபாயத்தை உடைய குடும்பங்களின் எண்ணிக்கை - 488) பாதிக்கப்படுவார்கள்.




மேலும், மலையைச்சூழவுள்ள பல்லாயிரக்கணக்கான விளைநிலங்களை புனிதப்பிரதேசம் விழுங்கிவிடலாம். அப்போது மக்களின் ஜீவனோபாயம் வீதிக்கு வந்தவிடலாம். மொத்தத்தில் உள்ளுர் மக்களது வாழ்வும் வளமும் கேள்விக்குறியாவதற்கான சூழலே கட்டமைக்கப்படுகிறது. என நாட்டுநடப்பை கருத்திற் கொள்ளும் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

 இக்கட்டுரையை வாசிக்கும் வாசகர் ஒருவர் உள்நாட்டு யுத்தத்துக்கு முன்பும், பின்பும் திருகோணமலை கன்னியாய் வெந்நீருற்றை தரிசித்தவராக இருப்பின், அங்கு உள்ளுர் மக்களது மத அடையாளத்திற்கு நிகழ்ந்துள்ள கதியை நன்கறிவார்.முன்பு அங்கு இஸ்லாமியப் பெரியாரின் அடக்கத்தலம், பள்ளிவாசல்,சிவன் கோவில் என்பனபோன்ற வற்றை மட்டுமே கண்டிருப்பார். அங்கு  பௌத்த சமய அடையாளத்தையும் கண்டிருக்க முடியாது. ஆனால், இன்று... யுத்தத்திற்குப்பிந்திய கன்னியாயில் பௌத்தசமய அடையாளத்தையன்றி வேறெதனையும் அங்குகாண முடியாதள்ளது. இது யுத்தத்துக்குப்பிந்திய இலங்கைவாழ் சிறுபான்மை மக்களது சமய, கலாசார, பண்பாட்டு அம்சங்களுக்கு நேர்ந்துவரும் கதியின் ஒரு சோறுபதம்.

-மூதூர் முகம்மதலி ஜின்னாஹ்.


Ethnic                        Muslim   Tamil        Sinhala
Families                    10,221       8,194           94
Population                 40,101      27,153        293
Male                          19,824      12,970        139
Female                       20,277      14,183        154
Percentage (%)           59.37         40.20        0.43
                                            



     (statistics-2011 D.S. Mutur)

No comments:

Post a Comment