Wednesday, December 19, 2012

ஒரு கேள்வியும் பதிலும்

 


Q: உங்கள் இளையராஜா கட்டுரையில் தமிழ் சினிமாவில் இசையில் மட்டுமே உயர்தரமான திறமை வெளிப்பட்டது என்று எழுதியிருக்கிறீர்கள். அதை விளக்க முடியுமா? ஏன் அப்படி நினைக்கிறீர்கள்?


A:  சினிமா நமக்கு ஒரு புதிய கலை. மானுடத்துக்கும் அது ஒரு புதிய கலைதான். அது ஒரு கூட்டுக்கலை. ஓவியம் புகைப்படம் நாடகம் இசை என பலகலைகளின் கலவை அது. உலகில் வெவ்வேறு பண்பாடுகளில் சினிமா உருவானபோது அப்பண்பாடுகளில் ஏற்கனவே இருந்த கலைகளை எடுத்துக் கலந்துகொண்டு தன் கலைவடிவத்தை, தனித்தன்மைகளை உருவாக்கிக்கொண்டது.

தமிழில் சினிமா உருவானபோது எழுத்து, அரங்க அமைப்பு, நடிப்பு ஆகிய மூன்றையும் நாம் மேடைநாடகத்தில் இருந்து பெற்றுக்கொண்டோம். நமது மேடைநாடகமே அதிகம் வளர்ச்சியடையாத ஒன்றுதான். நமக்கு நெடுங்காலமாக இருந்து வந்தது கூத்துமரபுதான். உயர்தளத்திலான கூத்துக்கலை பதின்மூன்றாம் நூற்றாண்டில் தமிழக மன்னர்களின் அழிவுடன் தேக்கமடைந்து படிப்படியாக அழிந்திருக்கலாம். அவற்றின் நாட்டார் வடிவங்கள் மட்டுமே நம்மிடம் மிஞ்சியிருந்தன – தெருக்கூத்து போல.
நீண்ட காலம் கழித்து பதினெட்டாம் நூற்றாண்டில் பார்ஸிநாடகக் குழுக்கள் தென்னிந்தியாவில் பயணம் செய்து ஊர் ஊராக நாடகம் நடத்தியபோதுதான் நமக்கு நாடகம் என்ற கலை அறிமுகமாயிற்று. அவற்றை முன்மாதிரியாகக் கொண்டு நாம் நம்முடைய மேடைநாடகங்களை உருவாக்கிக் கொண்டோம். தொழில்முறை நாடகக் குழுக்கள் உருவாயின. சென்னையில் பயில்முறை நாடகக்குழுக்கள் பிறந்தன. பாய்ஸ் கம்பெனிகள் என்ற பேரில் அறியப்பட்ட இரண்டும் கலந்த குழுக்களும் வந்தன. இவையே நம்முடைய நாடகத்தை கொஞ்சம் கொஞ்சமாக உருவாக்கின.. ஆனால் அவை உருவாகி ஓரளவேனும் முழுமைபெறுவதற்குள்ளாகவே இங்கே சினிமா வந்துவிட்டது. நம்முடைய மேடைநாடகம் என்ற வணிகக்கலைவடிவத்தின் தோற்றத்துக்கும் முடிவுக்குமான கால இடைவெளி ஒரு தலைமுறைக்காலம் மட்டும்தான்.
இந்தச் சிறிய கால அளவில் நாம் நம்முடைய நாடக ஆக்கத்தையும் நாடக ரசனையையும் பெரிதாக வளர்த்தெடுக்கவில்லை. நம் மேடைநாடகம் வணிகநோக்கம் கொண்டதாகையால் மக்களின் ரசனையுடன் சமரசம் செய்துகொள்வதில் கவனமாக இருந்தது. மக்களின் ரசனையோ தெருக்கூத்துக்குப் பழகியதாக இருந்தது. ஆகவே நம் நாடகங்கள் தெருக்கூத்துக்கும் நாடகத்துக்கும் நடுவே இருந்த வடிவங்களாக இருந்தன. சமீபத்தில் சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகங்களை வாசித்துப் பார்க்கையில் அவற்றில் தெருக்கூத்தின் அம்சங்களே அதிகம் என்ற எண்ணம் ஏற்பட்டது. இன்றுகூட தென்தமிழகத்தில் அவற்றை கூத்து என்றே சொல்கிறார்கள். ஸ்ரீவள்ளி கூத்து, அல்லிஅர்ஜுனா கூத்து என்றெல்லாம்.


ஐரோப்பாவின் நாடகமேடை இருநூறாண்டுக்கால வளர்ச்சி உடையது. பல்வேறு இயக்கமுறைகள் நடிப்புமுறைகள் அரங்க அமைப்புமுறைகள் அவற்றில் சோதித்துப் பார்க்கப்பட்டிருந்தன. பல்வேறு கலைப்பாணிகள் இருந்தன. இங்கே நாடகத்தில் நாற்பது பாடல்களை கத்திப்பாடுவதும் வசனங்களை ஒரு குறிப்பிட்ட வகையில் கூவுவதும் மட்டுமே நடிப்பு என கருதப்பட்ட 1920-களில் ஸ்டனிஸ்லாவ்ஸ்கியின் [Constantin Stanislavski] யதார்த்தபாணி நடிப்புமுறையும் இயக்கமுறையும் ஐரோப்பாவில் வேரூன்றிவிட்டன என்பதை நினைவில் கொள்ளவேண்டும். அந்த முழுவளர்ச்சியடைந்த மேடைநாடக மரபிலிருந்து ஐரோப்பிய சினிமா உதயமானது.


நேர்மாறாக நம்முடைய சினிமா நம்முடைய வளராத நாடகத்தில் இருந்து உருவானதாக இருந்தது. அந்த நாடகமேடை தெருக்கூத்துக்கு பக்கமாக இருந்தமையால் நம்முடைய சினிமாவும் தெருக்கூத்துக்கு நெருக்கமானதாகவே இருந்தது. சமீபத்தில் டி.ஆர்.மகாலிங்கம் நடித்த ஸ்ரீவள்ளி சினிமாவைப் பார்த்தேன். அப்படியே செல்லுலாய்டில் தெருக்கூத்து பார்ப்பது போலிருந்தது. வேலன் விருத்தன் கூத்து என்ற பேரில் ஆடப்பட்ட கூத்து சங்கரதாஸ் சுவாமிகளால் ஸ்ரீவள்ளி அல்லது வள்ளிதிருமணம் என்ற பேரில் நாடகமாக ஆக்கப்பட்டு பின்னர் சினிமாவாக மாறியிருந்தது. ஆம், இரண்டு முறை வெவ்வேறு கலைவடிவங்களுக்குள் அது புகுந்து வந்திருந்தது. ஆனால் பெரிதாக உருமாற்றம் அடையவேயில்லை.


ஆகவே நம்முடைய சினிமாவில் எல்லாமே தெருக்கூத்துக்கு நெருக்கமாக இருந்தன. திரைக்கதை அமைப்பு, காட்சிகளை அமைக்கும் முறை, நடிப்பு , ஒப்பனை எல்லாமே. சிவாஜிகணேசன் வரை நடிப்பில் தெருக்கூத்தின் பாணியையே அதிகம் நாம் காண்கிறோம். அரங்க அமைப்பு பார்சி நாடகத்தில் இருந்து வந்த படுதா வரையும்முறை. அதிலிருந்து விடுபட்டு நாம் சினிமா என்ற கலைவடிவை புரிந்துகொள்ள அரைநூற்றாண்டாகியது. ஆகவே இந்தத் தளங்களில் பெரிதான திறமைகள் ஏதும் வெளிப்படவில்லை என்றே நான் நினைக்கிறேன். ஏற்கனவே கூத்து முதல் நமக்குப் பழக்கமாகி இருந்தவற்றை மீண்டும் நிகழ்த்தும் கலைஞர்களையே நாம் காண நேர்ந்தது.
ஐரோப்பிய சினிமாவில் இருந்துதான் நாம் சினிமாக்கலையை தொடர்ந்து கற்றுவருகிறோம். திரைத்தொழில்நுட்பத்தை வேகமாக உடனுக்குடன் கொண்டுவந்தோம். அது வணிகரீதியாக பலனளிப்பது. ஆனால் மிகமிகக் குறைவாக, மிகுந்த தயக்கத்துடன் மட்டுமே நாம் அங்கிருந்து கலைநுட்பங்களைக் கொண்டுவந்திருக்கிறோம். காரணம் நம் ரசிகர்களை அதற்குப் பழக்கப்படுத்துவது கடினம். ஆகவே வணிகரீதியாக அது அபாயமான முயற்சி. எது ரசிகர்களுக்கு பழக்கமோ, எது அவர்களுக்குப் பிடிக்குமென ஏற்கனவே உறுதிசெய்யப்பட்டிருக்கிறதோ அதைமட்டுமே கொண்டு வந்தோம். சினிமாவின் எல்லா கலைத்துறைகளிலும் இதுவே யதார்த்தம். இசை மட்டுமே விதிவிலக்கு.


தமிழ் சினிமா ஆரம்பமான காலம் முதலே சினிமாவின் நகர்வுக்கு சம்பந்தமில்லாத வேகத்தில் இசை நவீனமாகிக் கொண்டிருப்பதைக் காணலாம். தமிழில் சினிமா வந்த சிலவருடங்களிலேயே முற்றிலும் நவீனமான ஐரோப்பியப் பின்னணி இசை வர ஆரம்பித்துவிட்டது. பாடல்கள் தென்னிந்திய மரபிசைப்பாணியில் இருக்கையில் பின்னணி இசை ஐரோப்பிய பாணியில் இருந்தது. பின்பு பாடல்களிலேயே அந்தக் கலப்பு வெற்றிகரமாகச் சாத்தியமானது.


விளைவாக மிகவிரைவில் திரையிசை என்ற தனித்துவம் மிக்க ஒரு இசைமரபு தமிழில் ஆழமாக வேரூன்றியது. தமிழ்ப்பண்பாட்டில் இவ்வளவு வேகமாக உருவாகி நிலைபெற்ற ஒரு தனிக்கலைவடிவம் வேறு உண்டா என்றே ஆச்சரியமாக இருக்கிறது. தமிழ்சினிமாவில் இசையில் இருந்த தரம் படங்களின் பிற அம்சங்களில் பெரும்பாலும் இல்லாமலிருப்பதன் காரணம் இதுவே.


இதற்குக் காரணம் நடிப்பு, ஓவியம் போன்ற கலைகளைப்போல அல்லாமல் நமக்கு இசை நெடுங்காலமாகவே தொடர்பு அறுபடாமல் இருந்து வந்தது. பல்வேறு புறப்பாதிப்புகளை உள்வாங்கி தன்னை புதுப்பித்துக்கொண்டே அது நீடித்தது. கர்நாடக சங்கீதம் என்ற பேரில் பதினேழாம் நூற்றாண்டில் மறுபிறப்படைந்து கோயில்விழாக்கள் போன்ற வெகுஜன நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடையே ஆழமாக வேர்விட்டிருந்தது. நுட்பமான செவ்வியல் இசைக்கு இங்கே பொதுமக்களிடையே அறிமுகம் இருந்தது.


அதாவது நமக்கு தரமான நடிப்பை, தரமான நாடக இலக்கியத்தை, தரமான காட்சியமைப்பை ரசிக்கும் பயிற்சி நம் மரபில் இருந்து கிடைக்கவில்லை. ஆனால் தரமான இசையை ரசிக்கும் நுண்ணுணர்வு நம் சூழலில் இருந்து நம்மையறியாமலேயே கிடைத்தது. இசையில் மட்டுமே நமக்கு செயலூக்கம் கொண்ட ஒரு செவ்வியல்மரபு இருந்தது.


சமீபத்தில் பழைய நாடக இசை சம்பந்தமான சில இசைத்தட்டுக்களை கேட்டபோது கர்நாடக இசையானது இங்கிலீஷ் நோட்டு எனப்படும் மேலை இசையுடனும் இந்துஸ்தானி இசையுடனும் எப்படி படைப்பூக்கத்துடன் முயங்கியிருக்கிறது என்று கண்டு ஆச்சரியப்பட்டேன். அந்தப் பரிணாமப்போக்கில் இயல்பாக அது திரையிசையாக மலர்ந்தது. அதன் அடித்தளம் கர்நாடக இசையாக இருக்க மேலே பல்வேறு புறப்பாதிப்புகளை ஏற்றுக்கொண்டு தன்னை உருவாக்கிக் கொண்டது. பார்ஸி நாடகங்கள் வந்தபோது இந்துஸ்தானி இசைக்கூறுகளை உள்வாங்கி அது புதுவடிவம் பெற்றது. பின் ஆங்கில இசைக்கூறுகளை உள்வாங்கி மேலும் வளர்ந்தது.
இந்தத் தொடர்ச்சி காரணமாக திரையிசையில் தொடர்ந்து அசலான படைப்பூக்கம் வெளிப்பட்டது. அதைக் கேட்கும் ருசியும் நம் சாதாரண மக்களிடம் இருந்தது. இந்த வகையான படைப்பூக்கமும் சரி, இந்த வகையான ரசனையும் சரி, திரைப்படத்தின் பிற கலையம்சங்களில் சாத்தியமாகவில்லை.


நான் கேட்டவரை இந்தியத் திரையிசை பற்றியும் இதைத்தான் சொல்வேன். சமீபகாலமாக அதிகமாக பழைய தெலுங்கு சினிமாப்பாடல்களை அதிகம் கேட்கிறேன். அவற்றில் தெரியும் படைப்பூக்கம் பிரமிப்பூட்டுவது. உண்மையில் தெலுங்கு திரையிசை என்பது கடல் அலை. அதன் மேலேறி மிதந்தெழுந்த இரு நெற்றுகள்தான் என்.டி.ராமாராவும் நாகேஸ்வர ராவும். தெலுங்குப்பாடல்களைக் கேட்டுக்கேட்டு இவர்களை நானும் விரும்ப ஆரம்பித்துவிட்டேன்.


சினிமாவில் நாம் எடுத்தாண்ட நடிப்பு, நாடக இலக்கியம் அரங்க அமைப்பு போன்ற பிற கலைமரபுகள் வளர்ச்சியடையாமல் தேங்கி நின்றிருந்தவை. நம் ரசிகர்களும் அவற்றுக்குப் பழகி அவற்றையே எதிர்பார்த்திருந்தார்கள். ஆகவே அந்த சராசரிக்கோட்டில் இருந்து மேலெழுவது நமக்கு மிகக் கடினமானதாக நெடுங்கால வளர்ச்சி தேவைப்படக்கூடியதாக இருந்தது. இசையில் அப்படி அல்ல. நாம் செவ்வியலின் உச்சியில் இருந்து புதியவானங்களை நோக்கிப் பறக்க முடிந்தது.

Thanks: Jeyamohan

Tuesday, December 18, 2012

பால் தாக்கரேவுக்கு அஞ்சலி செலுத்தமுடியாததற்கு வருந்துகிறேன்.



(தி ஹிந்துவில் (நவம்பர் 19, 2012) வெளியான ஜஸ்டிஸ் மார்கண்டேய கட்ஜுவின் கட்டுரை  Why I can’t pay tribute to Thackarey, அவர் அனுமதியுடன் இங்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
தமிழில் : மருதன்.)

ரசியல்வாதிகள், சினிமா நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள் என்று பலரும் முண்டியடித்து மறைந்த பால் தாக்கரேவுக்கு அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்கிறார்கள். பிரபலங்களிடம் இருந்து புகழஞ்சலிகளும் நினைவஞ்சலிகளும் குவிந்துகொண்டிருக்கின்றன. இந்தப் பின்னணியில் எனது மாறுபட்ட கருத்தை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.
இறந்தவர்களைப் பற்றி நல்லவிதமாக மட்டுமே பேசவேண்டும் என்று சொல்வார்கள்.

ஆனால் இத்தகைய விதிகளைக் காட்டிலும் என் நாட்டின் நலன் எனக்கு முக்கியம்.


பால் தாக்கரேவின் பண்பு என்று எதைச் சொல்லலாம்? எனக்குத் தெரிந்து மண்ணின் மைந்தன் (பூமிபுத்ரா) என்னும் அவருடைய தேச விரோதக் கோட்பாடுதான்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பகுதி 1(1) இவ்வாறு கூறுகிறது. ‘இந்தியா, அதாவது பாரத் மாநிலங்களின் யூனியனாக இருக்கும்.’ அதாவது, இந்தியா என்பது கூட்டுக்குழு அல்ல, யூனியன்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பகுதி 19(1)(e) இவ்வாறு கூறுகிறது. ‘இந்தியாவில் எந்தப் பகுதியிலும் தங்கவும், குடியமரவும் அனைத்து குடிமக்களுக்கும் உரிமை இருக்கிறது.’
ஒரு குஜராத்தியோ, தென் இந்தியனோ, பிகாரியோ, உத்தரப் பிரதேசத்துக்காரரோ அல்லது இந்தியாவில் எந்தப் பகுதியில் இருப்பவராக இருந்தாலும் சரி, மகாராஷ்டிராவுக்குக் குடிபெயரலாம். இது அனைவருக்குமான அடிப்படை உரிமை. (சில வரலாற்றுக் காரணங்களுக்காக ஜம்மு காஷ்மிர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் அவ்வாறு குடியேறுவதில் சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன.)

ஆனால், பூமிபுத்ரா கோட்பாட்டின்படி, மகாராஷ்டிரா மராத்தியர்களுக்கு மட்டுமே உரியது. குஜராத்திகள், தென் இந்தியர்கள், வட இந்தியர்கள் ஆகியோர் ‘வெளியில் இருப்பவர்கள்’. நாம் மேலே கண்ட அரசியலமைப்புச் சட்ட விதிகளுக்கு நேர் எதிரான கோட்பாடு அல்லவா இது! இந்தியா என்பது ஒரு தேசம். மராத்தியர் அல்லாதாரை அயல்நாட்டினரைப் போல் மகாராஷ்டிராவில் நடத்தமுடியாது.

தாக்கரே தோற்றுவித்த சிவ சேனா, அறுபதுகள் மற்றும் எழுபதுகளில் தென் இந்தியர்களைத் தாக்கி, அவர்களுடைய வீடுகளையும் உணவிடங்களையும் அழித்தொழித்தது. மும்பையில் செய்தித்தாள்கள் விற்பவர்களாகவும் டாக்ஸி ஓட்டுநர்களாகவும் இருந்த பிகாரிகளையும் உத்தரப் பிரசேத்துக்காரர்களையும் 2008ல் தாக்கினார்கள். அவர்களுடைய வாகனங்கள் நொறுக்கப்பட்டன. ஊடுருவல்காரர்கள் என்று அழைக்கப்பட்டு அவர்கள் தாக்கப்பட்டார்கள். இஸ்லாமியர்கள் வில்லன்களாகச் சித்திரிக்கப்பட்டார்கள்.

இவையனைத்தும் ஓட்டு வங்கிகள் உருவாக தாக்கரேவுக்கு உதவி செய்தன. வெறுப்புணர்வின் அடிப்படையில் திரண்ட வங்கிகள் இவை. ஹிட்லரும் இப்படித்தான் செய்தார் என்பதையும் தாக்கரே ஹிட்லரை நேசித்தவர் என்பதையும் இங்கே நினைவுபடுததிக்கொள்ளவேண்டும்.
தாக்கரோவை நான் விமரிசிப்பதற்குக் அவருடைய தேச விரோத மற்றும் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரான கோட்பாடு மட்டும் காரணமல்ல. இன்னொரு முக்கியமான காரணமும் இருக்கிறது.

What is India? என்னும் என்னுடைய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளபடி, இந்தியா என்பது வட அமெரிக்காவைப் போல குடியேறிகளால் உருவான ஒரு நாடு. இன்று இங்கு வசிக்கும் 92 முதல் 93 சதவிகித மக்கள் இந்தியாவின் பூர்வக்குடிகள் அல்லர். அவர்கள் குடியேறிகளின் வழிவந்தவர்கள். நல்ல வாழ்வு தேடி வட மேற்குப் பகுதியில் இருந்து இந்தியத் துணைக் கண்டத்துக்கு வந்தவர்கள் அவர்கள். இதுபற்றி மேலும் விரிவாக அறிய என் வலைப்பதிவுக்குச் செல்லுங்கள். இந்தியாவின் அசலான பூர்வகுடிகள் (பூமிபுத்ராக்கள்) ஆதிவாசிகள் என்று அழைக்கப்பட்ட திராவிட பழங்குடிகளுக்கு முந்தையவர்கள். (கோண்டுகள், சாந்தல்கள், தோடாக்கள் போன்றவர்கள்.) இப்போது அவர்களுடைய மக்கள்தொகை 7 அல்லது 8 சதவிகிதம் மட்டுமே.

பூமிபுத்ரா கோட்பாட்டை நிர்தாட்சண்யமாக அமல்படுத்தவேண்டுமானால், 92 முதல் 93 சதவிகிதி மகாராஷ்டிரியர்களை நாம் அந்நியர்களாக மதிப்பிடவேண்டியிருக்கும். இவர்களுள் தாக்கரே குடும்பத்தினரும் அடக்கம். மகாராஷ்டிராவைப் பொருத்தவரை உண்மையான பூமிபுத்ராக்கள் எனப்படுவோர் பழங்குடிகள் (Bhils போன்றவர்கள்). இவர்கள் தற்போது 7 முதல் சதவிகிதம் வரையிலேயே இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட பல பிரிவினைவாத சக்திகள் இன்று இந்தியாவில் இருக்கிறார்கள். இந்தியாவைத் துண்டுகளாக உடைப்பதே இவர்கள் குறிக்கோள். நாட்டுப்பற்று உள்ள அனைவரும் இவர்களுக்கு எதிராகப் போராடவேண்டும்.
Justice M. Kadju
நாம் எதற்காக ஒன்றாக இருக்கவேண்டும்? ஏனென்றால், மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவேண்டும். வாழ்க்கைத் தரம் உயரவேண்டுமானால் மிகப் பெரிய அளவில் செல்வம் சேர்த்தாகவேண்டும். விவசாயத்தால் மட்டும் இதனை நம்மால் சாதிக்கமுடியாது. நமக்கு நவீனத் தொழிற்சாலைகள் தேவை. நவீனத் தொழிற்சாலைகளுக்கு மிகப் பெரிய சந்தை தேவைப்படுகிறது. ஒன்றுபட்ட இந்தியாவால்தான் இப்படிப்பட்ட மிகப் பெரிய சந்தையை அளிக்கமுடியும்.

வறுமையை ஒழிக்கவேண்டுமானால், வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்கவேண்டுமானால், பிற சமூக அவலங்களை ஒழிக்கவேண்டுமானால் நவீன தொழிற்சாலைகள் தேவை. நவீன கல்விமுறையையும், நல்ல மருத்துவ வசதிகளையும் நாம் உருவாக்கவேண்டும். அதற்கு நாம் ஒன்றாக இருக்கவேண்டியது அவசியம். உலகின் முன்னேறிய நவீன நாடுகளில் ஒன்றாக இந்தியா வளரவேண்டும்.
எனவே, திரு பால் தாக்கரேவுக்கு அஞ்சலி செலுத்தமுடியாததற்கு நான் வருந்துகிறேன்.

Thanks: Tamilpaper.com

Monday, December 3, 2012

சிறுகதை: கூண்டுக்கிளி





 


'ஆன்ரி இது உங்கடதுதானே...?'


தோளிலே டியுஷன் பையுடன் சைக்கிளை நிறுத்தி மேலே அண்ணாந்து பார்த்துக் கேட்டவனின் கையில் இருந்த பொருளைப் பார்த்ததும் ஓர் உயிர்ப்பான மின்சாரக்கம்பியை மிதித்ததைபோலிருந்தது எனக்கு.  இந்த நேரம் பார்த்து பொதுநூலகத்துக்குச் சென்றிருக்கும் எனது கணவரோ டியூஷன் போயிருக்கும் சுஜன்யாவோ வந்துவிடாமலிருக்க வேண்டுமே என்று மனம் பதைபதைத்தது.

'இரு தம்பி கொஞ்சம், கீழே இறங்கி வாறேன்'
'இது எப்படி இவன்ட கையில் வந்தது' என்று யோசித்தவாறு, என்று அவசர அவசரமாய் படியிறங்கத் தொடங்கினேன். எனது இளைய மகள் தனுஷாவுடன் கனகம் அக்காவின் டியூட்டரியில் படிக்கும் அடுத்த தெருப்பையன் துவாரகன்தான் அவன். அவனைப் 'புறா துவாரகன்' என்றால்தான் எல்லோருக்கும் தெரியும். இரண்டு கிழமையாக எனது வீட்டிலே வீசிக்கொண்டிருக்கும் புயல்காற்றின் மையமாக இருக்கும் இந்தச் சனியன் எப்படிக் கீழே காத்திருக்கும் துவாரகனின் கைக்கு வந்தது?

மூன்று நாளைக்கு முன்புதான் நடுச்சாமத்திலே ஓசைப்படாமல் எழுந்து யாருக்கும் தெரியாமல் அதை நான் முன்பு ஒளித்து வைத்திருந்த இடத்திலிருந்து திரும்பவும் கையிலெடுத்தேன். பேய் பற்றி எனக்குள்ள மெலிதான பயத்தையெல்லாம் சிறிதுநேரம் ஒத்திவைத்துவிட்டு நாங்கள் வசித்த மாடிக்குடியிருப்பின் நாலாவது மாடிக்கு படியேறி மொட்டை மாடிக்கு வந்து வீசும் குளிர்காற்றிலே நின்று நிதானித்தேன்.

நான் செய்யப்போகும் காரியத்தை நினைத்து அன்றிரவு ஒரு மெலிதான குற்றவுணர்வு இருக்கத்தான் செய்தது. இருந்தாலும் என்னைப் புரிந்து கொள்ளாத கணவரையும் மகளையும் நினைத்த மாத்திரத்திலே மனதிலே மண்டிக்கொண்டு வந்த கோபத்தையெல்லாம் ஒன்று திரட்டி பலத்தைக் கூட்டி, இருட்டிலே ஏதோ ஒரு திசையிலே அதை வீசியெறிந்துவிட்டு ஓசைப்படாமல் வந்து ஒன்றுமே நடவாததுபோல மீண்டும் படுத்துக்கொண்டேன். அத்தனை உயரத்தில் இருந்து வீசியதால் நிச்சயம் வெகுதூரத்தில் எங்காவது விழுந்து நொறுங்கிச் சிதறியிருக்கும் என்று நம்பினேன். அப்படித் தலைமுழுகிய இந்தப் பீடை எப்படி இவனின் கையிலே முழுதாக வந்து சேர்ந்தது...?

'ம்மா.. அம்மா!'

படியிறங்கிக் கொண்டிருந்த எனக்கு மேலே வீட்டுக்குள்ளிருந்து அலறும் என் கடைக்குட்டிப் பையன் யதுவின் குரல் கேட்டது. 'இப்போதுதானே தூங்க வைத்தேன் அதற்குள்ளே எழும்பி விட்hனே..  அவனைப்போய்த் தூக்கிக் கொண்டு வருவதற்குள் கீழே நிற்பவன் போய் விடுவானே?' என்று யோசித்தபடியே திரும்பவும் அவசர அவசரமாக மேல் நோக்கி ஏறத் தொடங்கினேன். மின்னலாய் வீட்டிற்குள் நுழைந்து தொட்டிலினுள் கிடந்தவனைத் தூக்கித் தோளிலே போட்டபடி மீண்டும் படிகளில் தடதடவென இறங்கினேன்.

நான், கணவர், தோளுக்கு மேல் வளர்ந்த இரு மகள்கள், கடைசியாயப் பிறந்தவனான ஒன்பது மாத யதுஷன் இவர்கள்தான் எனது குடும்பம். எனது கணவர் சேவையிலிருந்து சுய விருப்பத்துடன் ஓய்வுபெற்ற ஓரு விமானப்படை உயரதிகாரி. அவருக்கு எல்லாமே நேர்த்தியாக இருக்க வேண்டும். இப்படித்தான் வாழவேண்டும் என்ற இலட்சியமுள்ளவர். ஆனால் நானோ அவரது குணங்களுக்கு எதிரிடையாக எப்படியும் வாழ்ந்தால் போதும் என்ற இயல்புள்ளவள். எதைச் செய்வதானாலும் முன்கூட்டியே திட்டமிட்டு ஆயத்தம் செய்பவர் அவர். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எதையாவது செய்துவிட்டு அதை நியாயப்படுத்துவதிலே கெட்டிக்காரி நான்.
எனது கணவரது நேர்மை, தேசப்பற்று, நேரந்தவறாமை, அதீதசுத்தம், பரவலான உலக அறிவு,இவை எல்லாமே எனது மகள்களுக்கும் மற்றவர்களுக்கும் மிகவும் பிடிக்கும். அக்கம் பக்கத்திலுள்ளவர்களிலிருந்து அவருடன் வேலைபுரிந்தவர்கள் வரை இன்றுவரை அவற்றுக்காகவே அவரைப் பெரிதும் மதிப்பார்கள். ஆனால் அத்தனைபேருக்கும் உதாரண மனிதரான அவரிடம் எனக்குப் பிரச்சினையாக இருப்பதே அவரது மேற்படி குணங்கள்தான் என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்காது.

அவரைத் திருமணம் புரிந்த ஆரம்ப காலத்திலிருந்தே அவரது குணங்களை நானும் பெருமையாக நினைத்தவள்தான் என்றாலும் என்னால் அவற்றுக்கு ஈடுகொடுக்க முடியாதிருந்தது. அவருக்கு வீடு எப்போதுமே பளிச்சென்று சுத்தமாக இருக்க வேண்டும். அவருக்குரிய விருந்தினர்கள் வெகுகுறைவுதான் என்ற போதிலும் ஒரு விருந்தாளி வீட்டுக்கு வந்த பிறகு முன்னறையை ஒழுங்குபடுத்திக் கொண்டிருப்பதெல்லாம் அவருக்குப் பிடிக்கவே பிடிக்காது. ஆரம்பகாலத்திலே திருமணக் கவர்ச்சியினால் சிறிதுகாலம் நானும் ஒழுங்கானவள்தான் என்று அவரிடம் காட்டிக்கொள்ளப் பகீரதப் பிரயத்தனமெல்லாம் செய்து நடித்துப் பார்த்தேன். ஆனால் என் சாயம் வெளுத்துப்போக அதிக நாட்கள் தேவைப்படவில்லை.

தன்னைப்போலவே தன்னைச் சார்ந்தவர்களும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்தான் அவர். ஆனால் அதற்காக மற்றவர்களை வருத்துவதில்லை. மாறாக பிறர் செய்யத்தவறும் வேலைகளையும் தானே இழுத்துப்போட்டுச் செய்து கொண்டிருப்பார். அதைத்தான் இன்றுவரை என்னால் தாங்கமுடிவதில்லை. அப்படிச் செய்வது அவருக்கு வெகுஇயல்பானதாகத் தோன்றினாலும் அது ஏனோ என்னைக் குத்திக்காட்டுவதற்கென்றே அவர் செய்வது போலிருப்பதுண்டு. 'சே! அடித்தால் கூடத் தாங்க முடியுமே' எனும் ஆற்றாமை மனதிற்குள் ஆத்திரம் மாய்த் திரளும்.  அதை வெளிப்படையாகக் காட்டவும் வழியில்லாமல் மறைக்கவும் முடியாமல் சமையலறைப் பாத்திரங்களில் மீதுதான் காட்டுவேன்.

'ஹேய், என்ன எவ்லின்.. இன்டைக்கு கிச்சன் சத்தமெல்லாம் கூடுதலாக் கேக்குது..? ஓ! என்ட காதில இருந்த அடைப்பு சரியாயிட்டுது போல' என்பார். அதிலும் கூட எத்தனை நையாண்டி பார்த்தீர்களா? இதைக்கேட்டு அடுத்த அறையிலே படித்துக் கொண்டிருக்கும் மூத்தவள் சுஜன்யா உடனே வாய்விட்டுச் சிரிப்பது இன்னும் என்னைக் கோபப்படுத்தும்.

ஒரு சராசரிக் கணவனைப்போல இந்த ஆள் இருந்திருந்தால் கூட ஒரு சண்டைபோட்டு மனதினுள்ளே மண்டிக்கிடக்கும் ஆற்றாமையையெல்லாம் தீர்த்துவிடலாம். ஆனால் எல்லாவற்றிலும் நேர்த்தியான அந்த மனிதரின் செயல்களிலே இருக்கும் ஒழுங்கும் நேர்த்தியும்தான் வார்த்தை வெளிப்பாட்டிலும் இருக்கும். எனக்கு அவரைப்போல வெளிப்படையாகவும் திறமையாகவும் பேசும் குணம் கிடையாது என்பதனால் அவருடன் விவாதம் செய்யப்போனாலும் வீணே மூக்குடைபட்டுத் திரும்புவதைத்தவிர வேறுபலனேதும் கிட்டுவதில்லை எனக்கு.

திருமணமான புதிதில் அவரது உத்தியோகம் காரணமாக குடும்பத்தைப் பிரிந்து நானும்  தலைநகருக்கு வரவேண்டியதாக இருந்தது. அரசு அவருக்கு வழங்கியிருந்த சகல வசதிகளும் கொண்ட குவார்ட்டர்ஸ் ஒன்றில்தான் இருவரும் குடித்தனத்தை ஆரம்பித்தோம். குழந்தைகள் பிறக்கும் வரையிலே எங்களது வேறுபட்ட இயல்புகளால் இருவருக்குமிடையிலே பெரிய முரண்பாடுகள் ஏதும் தலையெடுத்திருக்கவில்லை. அதற்காக நாங்கள் மிகவும் அந்நியோன்னியமாக இருந்தோம் என்றும் சொல்லிவிட முடியாது. ஆரம்பத்திலே இனிமையாக இருந்த திருமணவாழ்க்கை, சிறிதுகாலம் போனதும் அது பெண்ணின் சுதந்திரங்களைப் பூட்டிவைக்கும் ஓர் அலங்காரச் சிறைதானோ என்று எண்ணத் தோன்றியது எனக்கு.

பிறந்து வளர்ந்த ஊரைவிட்டு வெகுதொலைவிலே அதுவரை ஒன்றாய்க் கிடந்த உறவுகளைப் பிரிந்து பெரும்பகுதி நேரத்தை தனிமையில் கழிப்பது வேதனை தந்தது. எப்போதாவது ஒரு தடவை யாராவது உறவினர்கள் தலைநகருக்கு ஏதாவது வேலையாக வந்தால் என்னையும் அவரையும் வந்து பார்த்துவிட்டுச் செல்வதுண்டு. அவ்வாறு வருபவர்களோடு புறப்பட்டு ஊருக்கே போய்விட்டாலென்ன என்று கூட சிலசமயங்களிலே நினைக்கத் தோன்றியிருக்கின்றது.

அடிக்கடி ஊருக்குச் சென்று எல்லோரையும் பார்த்துவிட்டு வரவேண்டும் போலிருக்கும். ஆனால் அதை உரிமையோடு நேரடியாக அவரிடம் கேட்டிருந்தால் அவரே, 'சரி போய் வா' என்று அனுமதி தந்திருக்கூடியவர்தான். ஏனென்றால் அவர் தனக்குத் தேவையானவற்றை சுற்றிவளைக்காமல் நெற்றிக்கு நேரே கேட்டுப் பெறுகின்ற பழக்கமுடையவர். நானோ எனக்கு விருப்பமான எதையுமே முரண்பட்டுப் பெறுபவள். சிறுவயதிலிருந்தே எதையாவது ஒன்றை ஆசைப்பட்டுக் கேட்டுவிட்டால் அது எனக்கு கிடைத்தே ஆகவேண்டும். 'கிடைக்காது' என்று ஒரு தெரிவும் வாழ்க்கையில் நிறைய உண்டு என்பதை அப்போதெல்லாம் நான் நினைத்துக்கூடப் பார்ப்பதில்லை. இதனால் எதையும் சண்டை போட்டு அடைவதுதான் நான் பழகிய பழக்கம்.
ஊருக்குப் போய்வர அனுமதி கேட்டால் எங்கே ஒருவேளை மறுத்து விடுவாரோ என்ற அங்கலாய்ப்பிலே அவர் வேலைக்குச் சென்ற பின்பு அவரிடம் சொல்லாமலே ஊருக்கு பஸ்ஸேறிச் சென்றுவிடும் பழக்கத்தை ஆரம்பித்தேன். யாராவது உறவினர்கள் தலைநகருக்கு வந்திருப்பதாக அறிந்தால் போதும் உடனே ஏதாவது ஒரு காரணத்தை உருவாக்கி அவர்களோடு சேர்ந்து, அவர் வேலைவிட்டு விமானப்படை முகாம் அலுவலகத்திலிருந்து வருவதற்கிடையில் ஊரைப்பார்த்து பாதி தூரத்தைக் கடந்திருப்பேன்.

இப்படி சொல்லாமல் புறப்படுவதிலே இன்னுமொரு வசதியும் உண்டு. அதாவது அவரிடம் சொல்லிவிட்டுச் செல்வதென்றால், 'நானும் வருகிறேன்' என்று சிலவேளை அவரும் கிளம்பி வந்துவிடுவார் அல்லது அவருக்கு வசதியான தினத்தில்தான் பயணத்தை வைத்துவிட்டு என்னையும் காத்திருக்கச் சொல்வார். அப்படி அவரும் ஊருக்கு வந்துவிட்டால் நான் அங்கு சென்று எப்படி சுதந்திரமாக இருக்க முடியும்?  எனவே இப்படித் தடாலடியாய்க் கிளம்பினால் இந்தப் பிரச்சினைகளெல்லாம் கிடையாது அல்லவா?
திடீரெனப் புறப்பட்டுப் போவதற்காக அசத்தலான பல பொய்க்காரணங்களைச் சோடித்து அவருக்குக் கூறவும் ஆரம்பித்தேன். ஊரிலுள்ள எனது உறவினர்களில் பலரை எனது கணவருக்குத் தெரியாது என்பதனால் அவர்களில் பலரைத் திடீர் சுகவீனர்களாக்கினேன். சாகும் வயதிலிருந்த சிலருக்கு முன்கூட்டிய மரணச் சடங்குகள்  கூட வைத்தேன். ஆனால் ஒன்று பொய்களின் சுவாரசியமே அவை என்றாவது ஒருநாள் பிடிபட்டுவிடுவதில்தானே இருக்கின்றது. எனது பொய்களும் காலக்கிரமத்திலே ஒவ்வொன்றாக அவரிடம் வெளுத்துப்போயின. ஆயினும் புதுமனைவியான என்னை பலமுறை லேசான கண்டிப்புடன் மன்னித்திருக்கின்றார்.

ஆனாலும் விளையாட்டுப்போல நினைத்து  ஆரம்பித்த சொல்லாமல் ஊர்கிளம்பும் படலம் அவரது புத்திமதி, ஆலோசனை, எச்சரிக்கை, கட்டளை எல்லாவற்றையும் மீறித் தொடர்ந்து நிகழவே எங்கள் வாழ்விலே பல குழப்பங்கள் உருவாகின. இதனால் ஒருகட்டத்தில் நல்ல மனிதராக அனைவராலும் அறியப்பட்டிருந்த எனது கணவருக்குள்ளே ஒளிந்து கிடந்த சில நிழலான பக்கங்களும் வெளிப்படலாயின. என்னைத் தனியாக விட்டு வேலைக்குச் செல்வதற்கே யோசிக்க ஆரம்பித்தார். இயல்பாக வீட்டிற்கு வரும் எனது உறவினர்களையெல்லாம் சந்தேகக்கண் கொண்டு பார்க்கத் தொடங்கினார்.

'உன்னுடைய தேவைக்காக எந்தவொரு பொய்யையும் தயங்காமல் சொல்லக்கூடியவள்தான் நீ!' என்று ஒருநாள் என் முகத்துக்கு நேரே கூறினார். அன்றுதான் ஆரம்பித்தது தொல்லை. அதற்காகவே காத்திருந்ததைப் போல வலியச் சண்டைபிடித்து மீண்டும் ஊருக்குப் படையெடுத்தேன். இந்தத் தடவை கோபித்துக் கொண்டு வந்ததனால் அதையே சாக்காக வைத்து ஊரிலேயுள்ள உறவுகளோடு நீண்ட காலம் தங்கினேன். முறைப்படியெல்லாம் சொல்லிக்கொண்டு வந்தால் இப்படியெல்லாம் இஷ்டத்திற்கு இருக்க முடியுமா?

கிராமத்திலே ஏறத்தாழ ஒரு கோயில் பசுவாய் அலைந்தேன். அதற்கு வசதியாக என்னைப் பெற்று வளர்த்த குடும்பத்தினரும் சம்பிரதாயங்கள் அறியாதவர்களாக அல்லது அதைப்பற்றி அலட்டிக்கொள்ளாதவர்களாக இருந்தார்கள். உறவினர்களில் சிலர் நான் எனது கணவரைப் பிரிந்திருப்பதைப்பற்றி பேசினால் போதும். உடனே எனக்குள்ள கற்பனைவளம் மற்றும் சமயோசித சாகசக்குணங்களை பயன்படுத்தி அவர்களிடம் எனது கணவரை ஒரு  பெண்ணை வதைக்கும் கொடுமைக்காரராகச் சித்தரித்து விடுவேன். எனது புனைவுகளையெல்லாம் அவர்கள் நம்பினார்களோ அல்லது நம்பியதுபோல நடித்தார்களோ தெரியவில்லை. ஆனால் அதற்குமேல் என்னைக் கேள்வி கேட்காமல் அனுதாபம் காண்பித்து வாளாவிருந்தார்கள். இதனால் என்பாடு கொண்டாட்டமாகியது.

ஒரு விமானப்படை அதிகாரியின் வசதியான வீட்டில் கூண்டுக்கிளியாக இருப்பதைவிட சொந்த மண்ணின் புழுதியிலே புரளும் சிட்டுக்குருவியாக இருப்பது சுவாரசியமாகத் தோன்றியது  எனக்கு. ஆனாலும் இவ்வாறான முதிர்ச்சியற்ற போக்குகளால் எனது வாழ்க்கையிலே ஏற்படவிருந்த நீண்டகாலப் பாதிப்பைப் பற்றி அந்த இருபத்து மூன்று வயதிலே புரியாமல் போய்விட்டது.

குழந்தைகள் பிறந்த பிறகு வாழ்க்கை எனக்கு தந்த சிக்கல்களையும் வாழ்க்கைக்கு நான் ஏற்படுத்திய சிக்கல்களையும் சொல்வதற்கு இந்தக் கதையின் களம் போதாது. ஒவ்வொரு குழந்தையைச் சுமக்கும்போதும் குறைந்தபட்சம் இரண்டு தடவையாவது அவரிடம் வலிந்து கோபித்துக் கொண்டு ஊருக்கு வந்து விடுவதும் பின்பு உறவினர்கள் தலையிட்டு புத்திமதிகூறி திரும்பக்கொண்டு சேர்த்து விடுவதும் வழமையாகிப்போனது. அவருக்கும் அது பழகிப்போனது.

கணவரை விட்டு ஊருக்கு ஓடிவரும் ஒவ்வொரு தடவையும் கையிலிருக்கும் காசும் கழுத்திலிருக்கும் ஆபரணங்களும் கரையும். நான் விட்டெறியும் சில்லறைக்கு ஏவல்களை நிறைவேற்றும் உறவுகளும் ஏனைய காலங்களிலே சோற்றுக்கில்லாமல் அலையும் சிறுவர் பட்டாளமும்தான் என்னோடு திரிவார்கள். என் கையிலே பசையுள்ளபோது இளநீர், மாங்காய் புளியங்காய் பறித்துத் தருவது, சாப்பாட்டுக் கடைகளுக்குச் சென்று கொத்துரொட்டி மற்றும் தின்பண்டங்கள் வாங்கிக்கொண்டு வருவது, ஆற்றிலே தோணியில் வைத்து வலிப்பது என்று எனது பின்னால் அடியாட்கள் போல அலையும் அவர்களுக்கு நிறைய வேலை இருக்கும் .

ஆனால் கையிலே காசில்லாமல் ஊரிலிருப்பது தற்கொலைக்கு ஒப்பானது. ஏனென்றால் அதை வைத்துத்தான் தலைநகரிலும் கிராமத்திலுமாக  மாறிமாறியோடும் எனது வாழ்க்கையின் சாரமே இருந்தது. காசு பணம் தீர்ந்து நகைகளும் அடவுக்குப்போய் விட்டால் என் பின்னே அலையும் தொண்டர் கூட்டமும் இயல்பாகவே குறைந்துவிடும். அதன்பின்பு அடுத்திருக்கும் சில்லறைக் கடைக்குச் சென்று  ஒரு தலைவலி மாத்திரை வாங்கித்தரக்கூட ஆளிருக்காது.

அதுவரையில் எனது சாகசப்புளுகுகளை நம்பியவர்களும் நம்புவதுபோல நடித்தவர்களும் திடீரென பல்டியடித்து தர்க்கரீதியாகப் பேசவும் புத்திமதி கூறவும் ஆரம்பித்துவிடுவார்கள். நாட்டுக்கோழியறுத்து புரியாணி சமைத்துத்தந்த உறவுகள் ஒருவாய் தேனீர் தருவதற்கே அலுத்துக்கொள்வார்கள். சின்னச் சின்ன மனத்தாபங்கள் கூட வர தொடங்கும். நான் விட்டெறிந்த எலும்புகளுக்காக கால்களைச் சுற்றிய வந்தவையெல்லாம் ஒன்றுசேர்ந்து உறுமிக்குரைக்கத் தலைப்படுவதை எண்ணி மனம் வெம்பும்.

எனது கணவருடன் எனக்கிருந்த சீர்மையான வாழ்க்கையின் மேன்மை அப்போதுதான் மண்டையிலே உறைக்க ஆரம்பிக்கும். திடீரென ஒருநாள் ஊரிலிருந்து யாருமறியாமல் மாயமாவேன். அதற்கு அடுத்த காட்சியிலே தலைநகரிலேயுள்ள கணவரின் குவாட்டர்சில் இருப்பேன். வேலைக்குச் சென்று மாலையில் திரும்பும் கணவர் வீடு திறந்திருப்பதைப்பார்த்து நான் திரும்பி வந்திருப்பதைப் புரிந்து கொள்வார். சில நாட்கள் ஒரே வீட்டிற்குள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ளாமல் நடமாடியபிறகு தவிர்க்க முடியாத உடல் தேவைகளின் நிமித்தம் உறவாகிவிடுவோம். சில வாரங்களுக்கு கடைத்தெரு புதிய ஆடைகள் தங்க நகைகள் கொள்வனவு மற்றும் தமிழ் சினிமா என்று சில மாதங்கள் தாக்குப் பிடிப்பேன். அதன் பிறகு முருங்கைமரம் வேதாளக்கதையாய் ஊருக்கு ஓடிவந்து விடுவேன்.

இப்படி நான் ஓடுகாலியாய் அலைந்ததற்கு காரணமாய் ஊரிலே பலரும் எனது கணவரைத்தான் நினைத்திருந்தார்கள். ஆனால் எனது கணவரின் ஒழுங்கு மற்றும் நேரம் தவறாமைக்கு ஈடுகொடுக்கமுடியாத எனது இயலாமைதான் இதெற்கெல்லாம் அடிப்படைக் காரணம் என்பது ஒரு கட்டத்தில் எல்லோருக்கும் தெரிந்து போனது. இன்று நடுத்தரவயதையும் தாண்டி நிற்கும் என்னை எனது உறவுகள் மட்டுமல்ல இப்போது தோளுக்கு மேல் வளர்ந்து நிற்கும் எங்களது இரு பெண் பிள்ளைகளும் கூட அறிந்து விட்டார்கள்.
எனது பெண்கள் குணத்திலும் நடத்தையிலும் என்னைப் போலல்லாமல் அவரைப்போலத்தான் வந்திருக்கின்றார்கள். நியாயப்படி பார்த்தால் அதற்காக நான் மகிழ்ச்சியடைந்திருக்க வேண்டும். எந்தத் தாய்தான் தனது பெண்கள் ஒழுங்கின்றி இருப்பதை விரும்புவாள்? ஆனால் நான் எனது பெண்கள் ஒவ்வொரு விடயத்திலும் அவரைப்போலவே கண்டிப்பாகவும் நேர்த்தியாகவும் இருப்பதைக்கூட என்மீது யாரோ விடுக்கும் சவாலாகத்தான் பார்க்கமுடிகின்றதே தவிர அவர்களை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாதிருக்கின்றது.

அன்று படை அதிகாரியின் நேர்த்திக்கு ஈடுகொடுக்க முடியாதிருந்தது போலவே இன்று அவரின் வாரிசுகளிடமும் தடுமாறிக் கொண்டிருக்கின்றேன். அவராவது அவ்வப்போது ஓரளவு என்னைச் சகித்து விட்டுக்கொடுத்துச் சென்றிருக்கின்றார். ஆனால் ஏஎல் வகுப்பிலும் பத்தாம் ஆண்டிலும் கற்கும் எனது இரு ராட்சசிகளும் ஒரு சின்ன விடயத்தில் கூட விட்டுத்தரமாட்டார்கள்.
'அம்மா, இதென்ன இப்படிக் குப்பையா அயன் பண்ணி வச்சிருக்கீங்க. ஸ்கூல் யுனிபோமை இப்படியா அயன் பண்றது? அயன் பண்ணத் தெரியாட்டி தெரியாதென்று நேரடியாச் சொல்ல வேண்டியதுதானே' என்பாள் மூத்தவள் சுஜன்யா.

'அம்மா தலையைக்கட்டி நீங்க ஸ்கூலுக்குப் போனதேயில்லையா? ஏன் இப்படி ஏனோதானோன்று இழுத்துக் கட்டி வச்சிருக்கீங்க. ப்ரெண்ட்ஸ் எல்லாம் சிரிக்கப்போறாங்க!' என்று தனபங்குக்கு நையாண்டி செய்வாள் இளையவள் தனுஷா.

எனக்கு பொறுமை எல்லை மீறும்.

'அடியேய் எனக்கு இவ்வளவுதான் செய்யத் தெரியும்.. நான் குப்பைதான்.. இது பிடிக்கலண்டா இந்தா சுஜன்யா நீயே உன்ட உடுப்பை அயன் பண்ணு. தனுஷா நீ எல்லாத்தையும் ஒழுங்காச் செய்யுற உன்ட அப்பாவைக் கூப்பிட்டு அவரையே உனக்குத் அழகாக தலைகட்டச் சொல்லு சரியா?' என்று ஆத்திரத்தில் வெடிப்பேன்.

'உங்களுக்கு அப்பாவை இழுக்காட்டி சோறு செமிக்காதே! அப்பாவுக்குத் தலைகட்டத் தெரியாதுதான். ஆனா அதுக்கென்று அப்பா வந்தாரெண்டால் அதையும் அழகாகத்தான் செய்வார் தெரியுமா? சும்மா போம்மா!'
எனக்குச் சுருக்கென்று தைக்கும். அந்த நேரம் பார்த்து வோக்கிங் போய்விட்டு உள்ளே வரும் அவர் நிலைமை புரியாமல், ' இதென்ன கிச்சன் இப்படிக் கிடக்கு..?' என்று முணுமுணுத்தபடி சமையலறையைத் துப்பரவு செய்ய ஆரம்பித்து விடுவார்.
'இஞ்ச, தாங்க பாப்பம் அந்தத் தும்புத்தடியை விளையாடாம!' என்று வெடுக்கென்று அவர் கையிலிருந்து பிடுங்கி கோபம் உச்சிக்கேற கிச்சனைக் கூட்டிப்பெருக்க ஆரம்பிப்பேன்.

'இதை எப்பவோ செய்திருக்கலாம்' என்று முனகியபடி வெளியேறி வீட்டின் முன்புற  வாசலைக் கூட்டிப் பெருக்குவதற்கு ஆரம்பித்து விடுவார். வீட்டிலிருந்தால் கொஞ்ச நேரம்கூட சும்மாவே இருக்காத ஜென்மம்தான் அவர்.

'அது எப்படிம்மா அப்பாவுக்கு மட்டும் சமையல் தொடங்கி எல்லா வீட்டு வேலைகளுமே செய்யத் தெரிந்திருக்குது?' என்று அப்பாவி போல பேச்சை ஆரம்பிப்பாள் இளையவள்.

'அது அவர் என்னைக் கலியாணஞ் செய்ய முந்தி இருந்தே கொழும்புல தனியா இருந்தவர்தானே.. அதனால சமைச்சுப் பழகி இருப்பார்.' என்பேன் நான்.

'அப்படியா..? ஆனா நாங்க அப்படிக் கேள்விப் படல்லியே..' 
'அப்ப எப்பிடிடீ கேள்விப் பட்டீங்க?'
'அப்பா கொழும்புல பேச்சுலரா இருந்த காலம் முழுக்க ஸ்லேவ் ஐலண்ட் கேம்ப் மெஸ்லதானே சாப்பிட்டவராம்.. உங்களைக் கட்டினாப் பிறகுதான் வீட்டுல சமைக்கவே பழகினாராமே..'
'டீயேய் உனக்கு இதை யாருடி சொன்னது? இவள் சுஜன்யாதானே.. அவள்தாண்டி சொல்லியிருப்பாள் உனக்கு. அவள்தாண்டி அப்பா திறம் இந்த அம்மா குப்பையெண்டு அப்பாவுக்கு காவடி தூக்கிறவள்.. சனியன்'
'அம்மா, இப்ப எதுக்கு அக்காவை ஏசுறீங்க. எனக்கு அக்கா சொல்லவேயில்ல சொர்ணா மாமிதான் சொன்னவ.'
'நான் நம்ப மாட்டேன்டி. சொர்ணா கடைசி வரையும் சொல்லியிருக்க மாட்டா? அவவுக்கு இதெல்லாம் தெரியவே தெரியாது.'
'சரிம்மா.. அக்காதான் சொன்னவ. ஆனால் அவவுக்கு சொர்ணா மாமிதான் சொல்லித்தான் தெரியும்'
'அப்பிடி என்னவெல்லாம்டி அந்தத் திமிர் புடிச்ச சொர்ணா சொல்லித் தந்தவள். இப்ப சொல்லப்போறியா இல்லையா?' என்று நான் பத்ரகாளியாய் மாறியதால் பயந்து போன தனுஷா, இந்த உரையாடலுக்கு முன்புள்ள அத்தனை பராக்களிலும் நான் உங்களுக்கு மாய்ந்து மாய்ந்து கூறியவற்றையெல்லாம்  பயந்தபடியே சொல்லி முடித்தாள்.
அதற்குப்பிறகு என்னால் வாய்திறக்கவே முடியாமல் போனது. பெற்ற பிள்ளைகளிடமே ஒரு தாய் தலைகுனியும்படி ஆவது எத்தனை சங்கடமானது என்பதை யோசித்துப் பாருங்கள். சங்கடமும் லேசான அவமானமும் ஒன்று சேர்ந்து மெல்லிய பழியுணர்வாக உள்ளுர உருவெடுத்திருந்ததை நானே முதலில் அறிந்திருக்கவில்லை என்று கூறினால் உங்களால் நம்ப முடிகின்றதா?
'ஏனம்மா அந்த நேரம் அப்பாவை இப்படிக் கஸ்டப்படுத்தின நீங்க? ஒழுங்கா மரியாதையா அப்பாவோட கொழும்பிலயே இருந்திருந்தா இப்ப இங்க திருகோணமலைக்கு வந்திருக்கவும் தேவையில்ல .. தேவையில்லாத கதைகேட்கவும் வேண்டியதில்லையே.' என்றாள்.
எனக்குக் கோபம் வந்தாலும் அவள் கூறியதிலிருந்த நியாயம் வாயை அடைத்துவிட்டிருந்தது. ஆனால் என்னுடைய கோபமெல்லாம் மூத்தவள் சுஜன்யா மீதுதான் திரும்பியது. அவளை எனக்குச் சும்மாவே அவ்வளவாகப் பிடிப்பதில்லை.  போதாததற்கு அவள் மனதில் தனது தகப்பனிலிருக்கும் மரியாதையில் துளியளவு கூட என்னிடம் இல்லாதவளாக இருந்து கொண்டிருந்தாள். அதுதான் அவள் மீது பாசத்தையும் மீறிய பழியுணர்வுக்குக் கூட காரணமாக இருந்துவந்தது.
சுஜன்யா மட்டுமென்றில்லை எனது கணவரோடு ஓரளவுக்கு மேல் நெருங்கிப் பழகும் யாரையுமே எனக்குப் பிடிப்பதில்லை. குறிப்பாக அவரைத்தேடிவந்து அவருக்கு நிகராக அமர்ந்து அரசியல், சினிமா, கிரிக்கட், விஞ்ஞானம் இலக்கியம் என்று சுவாரசியமாகப் பேசிக்கொண்டிருக்கும் பேர்வழிகளை எனக்கு ஆகவே ஆகாது. ஆனாலும் எனது வெறுப்பை அவர்கள் மீது வெளிப்படையாகக் காண்பிக்க மாட்டேன்.
அந்த விருந்தினருக்கு உபசரிப்புகளில் குறையெல்லாம் வைக்க மாட்டேன். அவர்களோடு தேனாய் இனிக்கப்பேசி, 'இத்தனை இனிமையான மனைவியா இவருக்கு?' என்று அவர்கள் எனது கணவரைப் பார்த்துப் பொறாமைப்படுமளவுக்குப் பேசிப்பேசி உபசரிப்பேன். ஆனால் நெஞ்சுக்குள்ளே ஆற்றாமையெனும் உமி அடுப்பு உள்ளுரத் தணல்பூத்துக் கனன்று கொண்டிருக்கும். அவர்களது நட்பைப் பிரித்து விடுவதற்கு என்னவெல்லாம் செய்யலாம் என்று யோசித்து யோசித்தே எனக்குத் தூக்கம் வராது. கூடிய விரைவிலே எதையாவது செய்து அந்த சகவாசம் அதிக நாட்களுக்குத் தொடராதளவுக்கு முற்றுப்புள்ளியை வைத்துவிடுவேன். அவரது நண்பர்கள் மட்டுமல்ல கணவருடன் நெருங்கி உறவாடிய எனது உறவினர்களைக்கூட அவரிடமே திருட்டுப்பட்டம் பெற்று உறவு துண்டிக்கப்படுமளவுக்கு மாட்டிவிடும் எனது கைங்கரியங்களை விபரித்தால் அதுவே ஒரு தனிக்கதையாகி விடும் அபாயமுண்டு.

என்னைப் பற்றி நானே இப்படிச் சொல்வதை வைத்து தொலைக்காட்சி நெடுந்தொடர்களிலே வருகின்ற அத்தைகள் மாமிகள் போன்ற எதிர்மறைப் பாத்திரமாக என்னை நினைத்து விடாதீர்கள். நிஜ வாழ்க்கையில் நாயகிகள் என்றும் வில்லிகள் என்றும் தனித்தனியான குணாம்சங்களோடு யாரும் இருப்பதில்லையல்லவா? எனது சில இயல்புகளுக்கு எனக்கே காரணம் தெரிவதில்லை. சில சமயம் என்னையே எனக்குப் பிடிக்காமல் போகும் ஒரு சிக்கலான ஜென்மம்தான் நான்.
ஒருவிதத்திலே எல்லோரையும் திருப்திப்படுத்தி எல்லோருக்கும் வேண்டியவளாக இருக்க வேண்டுமென்று நினைப்பவள்தான் நான். எனது நலன்கள் பாதிக்கப்படும்போது மட்டும் எனது கணவரையோ பிள்ளைகளையோ பற்றி எனது உறவினர் யாரிடமாவது குறை சொல்லிக் கொண்டிருப்பேன். அவர்களும் எனது முகத்துக்காக அவற்றைக் கேட்டுக்கொண்டிருப்பதுண்டு. சிலவேளை பேச்சுவாக்கில் தங்கள்  பங்குக்கு எனது கணவரையோ பிள்ளைகளையோ ஏதாவது குறை சொல்ல ஆரம்பிக்கின்றார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதை என்னால் தாங்க முடியாது என்பதால் சட்டென அந்தர் பல்டியடித்து அதுவரை எனது பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தவரையே வாரிவிட்டு ஆளை விட்டால் போதும் என்று ஓடவைத்துவிடுவேன்.
இவ்வாறு அவரது நெருங்கிய சகாக்களைக்கூட எனது பாணியில் வேட்டையாடி விரட்டிய பின்பு அவர் பேச்சுத் துணைக்குக்கூட ஆளில்லாமல் தனியாக உட்கார்ந்திருப்பதைப் பார்க்கும்போது உள்ளுர கவலையாகவும் குற்றவுணர்வாகவும் இருக்கும். முன்பு நான் வெட்டி விட்டவர்களை எங்காவது சந்திக்கும்போது மீண்டும் வீட்டுக்கு வரவழைப்பதற்காக முடியுமான முயற்சிகளைக்கூட செய்து பார்ப்பேன். ஆனால் அவர்களே பழையபடி மீண்டும் கணவரோடு மிகவும் நெருங்கிவிட்டால் போதும். உடனடியாக வெட்டிவிடும் படலத்தை ஆரம்பித்து விடுவேன். அவர்கள் எங்களுக்கு எவ்வளவு வேண்டியவர்களாகவும் உறவாகவும் இருந்தாலும் சரியே.
இப்படி என்னிடம் மாட்டியவர்களின் பட்டியலிலே கடைசியாக இடம்பிடித்தது யார் தெரியுமா?

வேறுயாருமல்ல. எனது மூத்த மகள் சுஜன்யாவேதான். அவள் உயர்தரவகுப்பு படிக்கும் பெண்ணாக வளர்ந்து விட்டது மட்டுமன்றி அப்படியே தகப்பனைப்போல பரந்த அறிவுள்ளவளாகவும் தர்க்க ரீதியாகச் சிந்திக்குமாற்றல் உள்ளவளாகவும் இருந்ததால் எனது கணவருக்குச் சமதையாக அமர்ந்து பேசிக்கொள்ள ஆரம்பித்திருந்தாள். தகப்பனோடு உட்கார்ந்து அரசியல், அரபுவசந்தம், செவ்வாய் கிரக ஆய்வுகள், எல்நினோ-லாநினா காலநிலை, இலக்கியம், கிரிக்கட் என்று உரையாடிக் கொண்டிருக்கத் தொடங்கியிருந்தாள். சுஜன்யா என்னுடைய பெண்தான். இருந்தாலும் இது பொறுக்குமா எனக்கு..? இவளுக்கு ஏதாவது செய்தாக வேண்டுமே.. செய்தாக வேண்டுமே என்று பரபரத்தது மனது.
அவளுக்கு வெளியில் நிறைய நண்பர்களுண்டு. அவர்களோடு அடிக்கடி கைத்தொலைபேசித் தொடர்பில் இருப்பாள். அவர்களோடு நிறைய அறிவுபூர்வமான விடயங்களைப் பேசிக்கொண்டிருப்பாள். அவளது விலையுயர்ந்த போனில் ஜீபீஆர்எஸ் வசதியையும் வைத்துக் கொண்டு இணையத்தில் உலாவுவது அவளது பொழுதுபோக்காகவும் இருந்ததால்தான் அவளுக்கு இந்தளவு அறிவும் திமிரும்..
000

'ஆன்ரி கிரிக்கட் ப்ரக்டிசுக்கு நேரமாகுது..நான் போகணும் கெதியா வாங்க' என்று கீழேயிருந்து அவசரப்பட்டுக் கொண்டிருந்தான் துவாரகன். மனம் திக்திக்கென்று அடித்துக்கொள்ள தினேஷைத் தோளிலே கிடத்தியபடி கீழே இறங்கி அவனை நோக்கி வாசலுக்கு நடந்து வந்தேன். தெருவை ஒரு தடவை சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு

'இது எப்பிடி உனக்கு..'

'இது வந்து.. கனகம் அக்காட டியூசன்ல சுஜன்யாட வகுப்புதான் நானும். நான் புறா வளர்க்கிறன்தானே அதுக்காக எங்கட வீட்டு மேல்மாடியில கட்டியிருந்த வலையை காலையில துப்புரவாக்க ஏறக்குள்ள விழுந்து கிடந்திச்சு ஆன்ரி. எடுத்துப் பார்த்தா..இது! சுஜன்யா இதை வகுப்புக்குக் கொண்டு வாறவ எங்களுக்கெல்லாம் காட்டியிருக்கிறதால டக்கெண்டு நினைவுக்கு வந்தது. 2012 ஆகஸ்ட்டில செவ்வாயில க்யுரியோசிட்டி விண்கலம் இறங்கப்போறதைக்கூட எல்லாருக்கும் சுஜன்யா இதுலதான் ஆன்ரி காட்டினவ. அவ இன்டைக்கு க்ளாசுக்கு வரல்ல. அதான் தர்றதுக்கு கொண்டு வந்தேன்' என்று அவன்  என்னிடம் நீட்டிய அந்த அழகான விலையுயர்ந்த வெளிநாட்டு செல்போனை கைநீட்டி வாங்கிக் கொண்டு நான் திரும்பியபோது..

என்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு நின்றிருந்தார் முன்னாள் விமானப்படை அதிகாரியான என் கணவர்.


-மூதூர் மொகமட் ராபி
 

 

Tuesday, November 27, 2012

மழலையர் திறமை & குதூகலம்

 






சிறுமி அனாமிகா தான் வரைந்து வர்ணம் தீட்டிய சித்திரத்துடன் இங்கே காட்சி தருகின்றாள்.



இவள் ஆசிரியர் திரு. நந்தன் - சாந்தி ஆசிரியை தம்பதியின்புதல்வி ஆவாள்.


இங்கே சிறுமி அனாமிகா தனது அம்மம்மா மற்றும் சிறகுகள் இணையாசிரியருடனும் காட்சி தருகின்றாள்.

சிறுமி லைலா ஷிமோனி கடற்கரையிலே பட்டம் விடுகின்றாள்.




இவள் அல்- இம்ரான் பாலர் பாடசாலை விழாவிலே ரேபோடா பாடலுக்குத் திறமையாக ஆடி கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் பரிசு பெற்ற புனித மரியாள் கல்லூரி மாணவியும் ஆவாள் என்பது குறிப்பிடத்தக்கது.
 


குளக்கோட்டன் சிறுவர் பூங்காவிலே சிறுமி லைலா விளையாடும் காட்சி இது.

Monday, November 26, 2012

அறிவியல் : பயணங்கள் முடிவதில்லை!

ண்பர்களே!

மாலை வந்தனங்கள்!

சில எளிமையான வினாக்கள் மூலம் அறிவியல் பற்றிய புரிதல்களை விளக்கியிருப்பதை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று ஆசைப்படுகின்றேன். படித்துப் பாருங்கள் நண்பர்களே!
 
-Jesslya Jessly
 
 
 




1. அறிவியல் என்றால் என்ன?


ளிமையாகச் சொன்னால், மனிதனுக்குள் எழும் கேள்விகளுக்கு விடை காணும் முயற்சியிலான தேடல்.


மனிதன் இதுவரை கண்டடைந்த அனைத்தும் அறிவியலாலேயே சாத்தியமாகியிருக்கின்றன. மனிதன் உழைப்பில் ஈடுபடும் போது இயற்கையை எதிர்கொண்டாக வேண்டியதிருக்கிறது. அப்படி எதிர்கொள்ளும் வழிகளில் இயற்கை வழங்கும் ஏராளமான புதிர்களை, தனக்கு ஏற்கனவே இருக்கும் அறிவைக் கொண்டும், புதிய பரிசோதனைகளைக் கொண்டும் விளக்கி புதிய உண்மைகளைக் கண்டடைவதும், அந்த புதிய உண்மைகளை மீண்டும் மீண்டும் சோதனைகளுக்கு உட்படுத்தி அவைகளைச் சமன்பாடாக்குவதும், அந்தச் சமன்பாடுகளை சமூகத்தில் பயன்படுத்திப் பார்த்து விளைவுகளைக் கண்காணிப்பதும், அதன் அடிப்படையில் புதிய புதிர்களைத் தேடிப் போவதுமே அறிவியல்.


அறிவியல் முழுமையடையாத ஒன்றல்ல, அனைத்துக்கும் காரணிகளைக் கண்டறிந்து முழுமைப்படுத்துவதே அறிவியலின் பணி. சாராம்சத்தில் அறிவியல் என்பது ஒரு நீண்ட பயணம். அடுத்தடுத்த இலக்குகளைத் தேடி அது பயணித்துக் கொண்டே இருக்கும்.


அதன் பயணம் முடிவடைவதே இல்லை. அறிவியலுக்கு என்றேனும் முற்றுப் புள்ளி விழுமாயின் அறிவியலை முன்னெடுத்துச் செல்ல ஒற்றை ஒரு மனிதன் கூட உயிருடன் இல்லை என்பதே பொருள்.


2. கடவுள் என்றால் என்ன?


டவுள் என்றால் என்ன?

இந்த  கேள்விக்கு யாராலும் விடை சொல்ல முடியாது. ஏனென்றால் இது பொருளாகவோ கருத்தாகவோ, அல்லது இரண்டுமல்லாத வேறொன்றாகவோ இதுவரை அடையாளம் காணப்படவில்லை. மட்டுமல்லாது அடையாளம் காண முடியாது என்பதே கடவுளின் தகுதிகளில் ஒன்று என்கிறார்கள் ஆத்திகர்கள்.


இதுவரை மனித இனம் கண்டறிந்த, இன்னும் கண்டறியப் போகும் அனைத்து வித நுட்பங்களாலும், எந்தக் காலத்திலும் கண்டறியப் படமுடியாததும், அதேநேரம், மனிதனின் செயல்களில் அற்பமான ஒன்றைக்கூட விட்டுவிடாமல் அனைத்தையும் இயக்குவதும் கடவுள் என்ற ஒன்றே.


3. மனிதனின் அறிதல் என்றால் என்ன?


னிதன் ஒரு பொருளை அல்லது கருத்தை எப்படி அறிந்து கொள்கிறான்? தன்னுடைய ஐம்புலன்களின் வழியே பெற்ற அனுபவங்களைக் கொண்டும், அந்த அனுபவங்களை மூளை எனும் பொருளில் நினைவுகளாக சேகரித்து வைத்துக் கொண்டு அவற்றை தேவையான பொழுதுகளில் தேவைப்படும் விதத்தில் பயன்படுத்திக் கொள்ளுவதே மனிதனின் அறிவு அல்லது அறிதல் எனப்படுவது.


பகுத்தறிவு என்பதும் மூளை தன்னிடமிருக்கும் அனுபவங்களை அலசி பொருத்தமான முடிவை எடுக்க உதவும் ஒரு பயன்பாட்டுமுறைதான். இதுவரை மனிதன் கண்டடைந்த அனைத்தும் புலன்களின் மூலமும், அவற்றை ஒருங்கிணைப்பதன் மூலமும் பெற்றவைகளே தவிர வேறெந்த வழியிலும் அல்ல.


அதேவேளை மனிதன் ஐயமுற்றிருக்கும் ஒன்றில் தெளிவடைவதற்கு தகுந்த உரைகல் அறிவியலைத் தவிர வேறு ஒன்றில்லை. அறிவியலைத் தவிர வேறு உரைகல் இருக்கக் கூடும் என்றுகூட இதுவரை யாரும் கண்டறிந்ததில்லை.


4. கடவுள் பற்றிய அறிதல் மனிதனுக்கு எப்படி ஏற்பட்டது?


னிதன் உயிர் வாழ வேண்டுமென்றால் அவன் உற்பத்தியில் அதாவது உழைப்பில் ஈடுபட்டே ஆக வேண்டும். மனிதன் உழைப்பில் ஈடுபடுகிறான் என்றால் அவன் தன் வழியில் இயற்கையை எதிர்கொள்கிறான் என்பதே அதன் பொருள். அவ்வாறு இயற்கையை எதிர்கொள்ளும் போது அறியாத, தெளிவில்லாத, தீவிரம் புரியாத பல இன்னல்களுக்கு அவன் ஆளாகிறான்.


எடுத்துக்காட்டு நெருப்பு, மழை, இடி, மின்னல், இருள், கடும் பனி, கொடுங்கோடை, வெள்ளம், வறட்சி.. .. .. இவைகளைக் கண்டு அவன் அஞ்சுகிறான். ஏனென்றால் உயிர் என்பதன் பயன்மதிப்பு மட்டுமே தெரிந்திருந்தாலும் அதன் இழப்பு அவனை அஞ்சச் செய்கிறது. அடுத்து, மரணம். தன்னுடன் உண்டு, களைத்து, களித்துக், கழித்துக் கொண்டிருந்த தன் கூட்டத்தில்...

1.ஒருவன் திடீரென தன் செயல்களை நிறுத்திக் கொள்வது ஏன்?

2. மீண்டும் என்றாவது ஒரு நாள் அவனின் நீள் தூக்கத்திலிருந்து எழும்பக் கூடுமோ ?

எனும்  2 கேள்வி. இந்த இரண்டும் சேர்ந்து தான் அதாவது இயற்கை குறித்த பயம், மரணம் குறித்த கேள்வி ஆகிய இரண்டும் சேர்ந்து தான் கடவுள் எனும் உருவகத்தை மனிதனிடம் கொண்டு வந்திருக்கின்றன. கடவுள் எனும் கருத்து உருவகம் மனிதன் தோன்றி பல ஆயிரம் ஆண்டுகள் கடந்த பின்னரே ஏற்பட்டிருக்கிறது. அதன் பிறகு அதற்கும் சில ஆயிரம் ஆண்டுகள் கழிந்த பின்னரே மதங்கள் தோன்றத் தொடங்கின. இவைகள் வெறும் யூகங்கள் அல்ல. பண்டைக்கால குகை ஓவியங்கள் சுட்டும் வரலாறு இப்படித்தான் இருக்கிறது.

Thanks: Senkodi

Saturday, November 24, 2012

பாலுமகேந்திராவும் சினிமாவும்

 

 

 

சினிமாவும் பால் வியாபரமும் ...


  
ன்றுக் குட்டிக்கான பாலைக் கறந்து விற்பனை செய்து பணம் சம்பாதிக்கலாம் என்று ஒருவன் நினைத்த மாத்திரத்திலேயே அவன்
வியாபாரியாகிறான். இதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை.

அதுபோல, தன் குடும்பத்துக்கு செலவு செய்ய வேண்டிய பணத்தை
சினிமாவில் போட்டு லாபம் பார்க்கலாம் என்று நினைத்த மாத்திரத்திலேயே
ஒருவன் வியாபாரியாகிறான். அந்த வகையில் சினிமாத் தயாரிப்பாளர்கள்
அனைவருமே வியாபாரிகள் தான். இதில் விதிவிலக்கெல்லாம் கிடையாது.

தான் விற்பனை செய்யும் பாலில், ஒரு சொட்டுத் தண்ணீர் கூடக் கலப்பதில்லை என்ற திடசங்கல்பத்தில் ஒரு பால் வியாபாரி.
லிட்டருக்கு 250 மில்லி தண்ணீர் என்ற எண்ணத்தில் இன்னுமொரு பால் வியாபாரி. லிட்டருக்குப் பாதிக்குப் பாதி தண்ணீர் என்ற முடிவில்
மூன்றாவது வியாபாரி.

அவனவன் மனனிலைக்கு - attitude -க்கு ஏற்ப அல்லது பணம் பண்ணும் ஆசைக்கு ஏற்ப பால் சுத்தமாக அல்லது கலப்படமாக நமக்குக்
கிடைக்கிறது.

சினிமா வியாபாரமும் அப்படித்தான்.

தயாரிப்பாளரும் இயக்குனர்களும் அவரவர் மனனிலைக்கேற்ப சமரசங்கள்- compromises செய்துகொள்கிறார்கள். தரமான தூய சினிமா
மட்டுமே தருவேன் என்று ஒரு தயாரிப்பாளர், அல்லது இயக்குனர். நல்ல படம் தருவேன் ஆனால் வியாபாரம் கருதி அதில் கொஞ்சம் " ஐட்டங்களும் " வைப்பேன் என்ற மனநிலையில் இன்னுமொரு தயாரிப்பாளர் அல்லது இயக்குனர்.

படம் எடுப்பேன், ஆனால் அது வியாபார நோக்கத்தில் மட்டுமே! எனவே எனது படத்தில் " விலைபோகக்கூடிய " அம்சங்கள் நிறைய இருக்கும் என்ற முடிவுடன் மூன்றாவது தயாரிப்பாளர்.

இப்படியாக பால் வியாபாரம் செய்ய வருபவரின் நோக்கத்தைப் பொறுத்து, பாலின் தரம் அமைவதைப் போல, படம் எடுக்க வருபவரின்
நோக்கத்தைப் பொறுத்தே படத்தின் தரம் அமையும். தரமான -கலப்படமில்லாத பாலை மட்டும் தான் வாங்குவோம் என்று பால் வாங்குபவர்கள் முடிவு செய்தால், கலப்படம் செய்து பால் விற்கும் வியாபாரிகள் காலக் கிரமத்தில் குறையத் தொடங்குவார்கள். இது எனது நப்பாசை - wishful thinking!

இது நடக்கிற காரியமில்லை என்பது எனக்குத் தெரியும்.....!

சினிமா கற்றுக் கொள்ள பூனே திரைப்படக் கல்லூரியில் சேர்ந்த 1966 முதல் இன்று வரை, கிட்டத்தட்ட 46- ஆண்டுகளில் எந்த வித வணிக சமரசங்களும் இல்லாமல் இரண்டே இரண்டு படங்களை மட்டும் தான் என்னால் கொடுக்க முடிந்தது. "வீடு", "சந்தியாராகம்" என்ற இரண்டு படங்கள் தான் அவை. எனது மற்ற படங்கள் எல்லாமே பாடல் காட்சிகள் போன்ற சில வணிக சமரசங்களுடன் பண்ணப்பட்ட படங்கள் தான். ஆனால் அவற்றில் பல படங்கள் நல்ல படங்கள் என்று இன்று வரை மக்களால் கொண்டாடப்படும் படங்களாகவும், அதே சமயம் 200 நாட்களுக்குமேல் ஓடி வசூல் சாதனை புரிந்த படங்களாகவும் அமைந்து போனது என் அதிர்ஷ்டம்!

பெரிய திரையை விட சின்னத்திரையில் தான் "படைப்புச் சுதந்திரம்"- creativity freedom எனக்கு அதிகம் கிடைத்தது. 1999 செப்டம்பர் முதல் 2000 செப்டம்பர் வரை சன் தொலைக்காட்சிக்காக நான் செய்த "கதை நேரம்" குறும்படங்கள் படைப்பாளி என்ற வகையில் எனக்கு மிகவும் திருப்தியான அனுபவமாக இருந்தது. ஒவ்வொரு புதன் கிழமையும் ஒரு குறும்படம் என்ற வகையில் 52 குறும்படங்கள் செய்தேன். இந்த 52-ல் ஒரு 20-25 குறும்படங்கள் உலகத்தரம் வாய்ந்தவை என்பது எனது கணிப்பு. ஆங்கில அடியெழுத்துக்களுடன் (with subtitles) இவற்றை எந்த நாட்டிலும் திரையிடலாம். அப்படியொரு உலகளாவிய தன்மை அமைந்து போன குறும்படங்கள் அவை. தொலைக்காட்சியில் அவை காண்பிக்கப்பட்டும் 12-15 வருடங்களாகின்றன. இன்னும் மக்கள் அந்தக் குறும்படங்கள் பற்றிச் சிலாகிக்கின்றனர். "கதை நேரம்" குறும்படங்கள், பல கல்லூரிகளிலும் திரைப்படப் பள்ளிகளிலும் பாடமாக வைக்கப்பட்டுள்ளன என்று அறிகிறேன். ரொம்ப சந்தோஷம்.

-பாலுமகேந்திரா

Thanks : 'Moontrampirai'

Thursday, November 22, 2012

சிறுகதை: ஒரு கதையின் கதை







'ஸேர் வரச் சொல்லியிருந்தீங்களா?'


கையெழுத்துக்காக வந்திருந்த பைல்களைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்த நான் நிமிர்ந்தபோது அலுவலகக் கதவை நீக்கியபடி உள்ளே நுழைந்தான் மக்பூல்.  என்னுடைய கோணேசர்பூமி வலயத்திற்குட்பட்ட புறநகர்ப் பாடசாலைகளில் ஒன்றான இலுப்பஞ்சோலை முஸ்லீம் மகாவித்தியாலயத்தின் அதிபர் அவன். 

ஓர் ஆசிரியராக இருந்த காலத்தில் நல்ல வாட்டசாட்டமாகவும் உற்சாகமாகவும் இருந்தவன் அதிபராக நியமிக்கப்பட்ட இந்த ஒன்றரை வருடத்துக்குள் பாவம் இப்படி மெலிந்து தேய்ந்து தாடியெல்லாம் நரைத்து முகமெல்லாம் கவலையேறி.. பாவம் அவன். வயது என்னவோ அவனுக்கு மிஞ்சிப்போனால் நாற்பது அல்லது நாற்பத்தி இரண்டுக்குள்தான் இருக்கும். ஆனால் அறுபதை நெருங்கிக் கொண்டிருக்கும் என்னைவிட முதியவன்போலத் தோற்றமளித்தான். படிக்கின்ற காலத்திலும் படிப்பிக்கின்ற காலத்திலும் கிரிக்கட், புட்போல், கரப்பந்தாட்டம்,  உயரம் பாய்தல் ஓட்டம்  என்று சகல விளையாட்டுகளிலும் கலக்கியவனா இப்போது இப்படியாகிவிட்டான்?

'ஸேர்!'

'ஓமோம். நான்தான் வரச்சொன்ன நான். இப்பிடி இருடாப்பா மக்பூல்.!' என்று எதிரேயிருந்த இருக்கையிலே அவனை அமர்த்திவிட்டு கண்ணாடியைக் கழற்றிவிட்டு பைலை மூடிவைத்தேன்.

'பிறகு.. உங்கட ஹஜ் பெருநாளெல்லாம் எப்பிடி விசேஷமா?' அவனை வரச்சொல்லியனுப்பிய காரணத்தை சொல்ல ஆரம்பிப்பதற்கு முன்பு என்னைச் சிறிது ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்காக கேட்டு வைத்தேன்.
'எங்க ஸேர்? காலையில விடியக்குள்ளேயே மழை. பெருநாள் தொழுகைக்கே நனைஞ்சுதான் பள்ளிக்குள்ள போய்ச் சேர்ந்தோம்.'

'ஓம் என்ன? எங்கட தீபாவளியும் இனி வர இருக்கு. அதுக்கும் மழைதானோ தெரியாது. அதுசரி, அன்டைக்கு நான் வந்து போன பிறகு இப்ப ஸ்கூல் எப்பிடிப்போகுது. வேற பிரச்சினையேதுமில்லையே?' என்று சம்பிரதாயத்துக்கு கேட்டுவிட்டு மக்பூலின் முகத்தை சிறிது நேரம் மௌனமாக நோட்டமிட்டேன்.

மக்பூலிடம் விசயத்தை எப்படி ஆரம்பிப்பது என்று ஒரே குழப்பமாக இருந்தது.
இப்பொழுது வலயக் கல்விப்பணிப்பாளர் பதவியிலிருக்கும் நான், ஒருகாலத்தில் இதே வலயத்தில் கணிதபாடத்திற்குரிய ஓர் ஆசிரிய ஆலோசகராக இருந்தவன்தான். அந்தக் காலத்திலே அவனது ஊரான நிலாவெளி பாடசாலை ஒன்றில் சாதாரண பயிற்றப்பட்ட ஆசிரியராக இருந்த இளைஞன்தான் மக்பூல். அந்த நாட்களிலே அங்கு சென்றால் போதும் மக்பூலின் உபசாரத்தால் நான் திக்கு முக்காடிப் போய்விடுவதுண்டு. பஸ்ஸேறி நாங்கள் போகும் வழியெல்லாம் பாதுகாப்புக் கடமையிலே ஈடுபட்டிருக்கும் சீருடையினரின் விசாரணைகளும் கெடுபிடிகளும் தொல்லை தந்த காலம் அது. அதையெல்லாம் தாண்டி மக்பூலிடம் வந்து சேரும் என்னைப் போன்றவர்களுக்கு இவனது உபசரிப்பிலும் உற்சாகமான பேச்சிலும் களைப்பு முழுவதும் பறந்தோடிவிடும்.

'இருங்க சேர், இந்தா ஒரு நிமிஷத்தில வாறேன்' என்று அவன் போனால் சிறிது நேரத்தில் தட்டு நிறையச்சுடச்சுட கிழங்கு ரொட்டிகள், பற்றீசுகள், கட்லட்டுகள் என்று வகை வகையான  தின்பண்டங்களுடன்தான் வருவான். பெரிய கண்ணாடி க்ளாசுகளிலே பால் வெண்மை நிறத்திலே தென்னங்குரும்பை வழுக்கைகள் இடைநடுவிலும் அடியிலும் மிதக்க தேசிப்புளியும் சீனியும் அளவாய் விட்டுக் கரைத்த சுவையான இளநீர் பாடசாலையின் பின்புறமுள்ள அவனுடைய தென்னந்தோப்பு வீட்டிலிருந்து  வரும்.

இத்தனை உபசாரப்பிரியனான  மக்பூலிடம் ஒரு அலாதியான தனிப்பிரியம் எப்போதும் எனக்குண்டு. உபசாரத்திலே மட்டுமல்ல கற்பித்தலிலும் மக்பூல் திறமையானவன்தான். அவனைப் பார்க்க ஒருவகையிலே பாவமாகவும் இருந்தது. நான் சொல்லப்போகும் விடயத்தை எப்படி எடுத்துக் கொள்வானோ என்று என்னால் யூகிக்க முடியவில்லை.

எனது வலயத்தில் இருக்கும் விரல்விட்டு எண்ணக்கூடிய முஸ்லீம் பாடசாலைகளில்  புறநகர்ப்பகுதியில் அமைந்திருக்கும் அவனது இலுப்பஞ்சோலைப் பாடசாலைதான் இப்போது எனது தன்மானத்துக்கே சவால்விடும் பிரச்சினையாய் மாறியிருப்பதால் நான் கேட்கப்போவதை அவன் ஒத்துக்கொண்டு விட்டால் பிரச்சினையேதுமில்லை. மாறாக, அவன் முடியாது என்று மறுத்து விட்டால்தான் சிக்கலே.

எனது வலது கை விரல்கள் மேசை மீதிருந்த கண்ணாடியாலான பேப்பர் வெயிட்டை உருட்டி கொண்டேயிருக்க அது எனது இரு கைகளுக்குள்ளே நின்று சுழன்று கொண்டிருந்தது.

இலுப்பஞ்சோலை முஸ்லீம் வித்தியாலயத்திற்கு மக்பூலை நான் அதிபராக நியமிப்பதற்கு முன்பு அங்கு நீண்டகாலமாய் அதிபராக இருந்தவன் வேறுயாருமல்ல. என்னுடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவனும் தற்போது என்னை ஒரு கௌரவச் சிக்கலிலே மாட்டிவைத்து விட்டவனுமாகிய தனபால் என்பவன்தான். அவன் இயல்பிலேயே ஒரு முசுடுட்டுப் பேர்வழி. அதுமட்டுமல்ல, சாதாரண ஆசிரியராக அவன் வேறு பாடசாலைகளில் கடமையாற்றிய காலங்களிலே பாடசாலைக்கு நேரத்துக்கு போய்கூட அறியாதவன். அப்படியே போனாலும் நோட்ஸ் ஒவ் லெஸ்ஸன் ப்ளான்கள்; எழுதாமலும் ஒழுங்காக வகுப்புகளிலே படிப்பிக்காமலும் கிடந்தவன். ஆனால் சிறு அதிகாரம் கிடைத்தாலும் போதும் உடனே அடுத்தவர்களை வருத்திப் பார்ப்பதிலே மட்டும் அலாதியான சுகம் காண்பவன்.

இத்தகைய குணாம்சமுள்ள தனபாலும் நானும் ஏறத்தாழ ஒரே உத்தியோகத் தரத்திலுள்ளவர்கள். பத்து வருடங்களுக்கு முன்பு இருவரும் அதிபர் தேர்வுப் பரீட்சையிலும் ஒன்றாகத்தான் சித்தியெய்தியிருந்தோம். அப்போதிருந்த மாகாணக் கல்வியமைச்சு எங்கள் இருவருக்கும் மூதூரிலிருந்த  இரு தமிழ்ப்பாடசாலைகளுக்கு தனித்தனியாக அதிபர் நியமனங்களை வழங்கியது. நியமனக் கடிதம் கிடைத்ததும் நான் உடனடியாக அங்கு சென்று பொறுப்புகளை எடுத்துக் கொண்டேன். ஆனால் சோம்பேறியான தனபாலோ திருகோணமலை நகரைவிட்டுப் போக விரும்பவில்லை. அதனால் புறநகரிலிருந்த பின்தங்கிய பாடசாலையான இதே இலுப்பஞ்சோலை பாடசாலை மீது  ஒரு கண்வைத்திருந்தான். அது ஒரு முஸ்லீம் பாடசாலையாக இருந்த போதிலும் அங்கு கணிசமான தமிழ் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களும் கற்பதைக் காரணம் காட்டியதோடு கல்வி அதிகாரிகளையெல்லாம் கைக்குள்ளே போட்டு  அதிபர் நியமனத்தை எப்படியோ அங்கு மாற்றி  எடுத்து விட்டான்.

அதிபராக நியமனம் கிடைத்த பின்பு தனபால் அங்கு நடாத்தியதற்குப் பெயர் பாடசாலை நிர்வாகம் அல்ல: காட்டுத் தர்பார். கல்வியலுவலகத்திலே உள்ள சில அதிகாரிகளை கைக்குள் போட்டுக்கொண்டு தனக்குக் கீழே வேலை செய்த ஆசிரியர்களையெல்லாம் இரக்கமின்றி வதைத்தான். அவர்களையெல்லாம் படாதபாடு படுத்தி அலுவலக உயரதிகாரிகளைத் திருப்திப்படுத்துவதை குறிக்கோளாகக் கொண்டு வெறும் வைத்து கடதாசி நிர்வாகம் நடத்தியவன்தான் தனபால். கற்பித்தல் திறமையில்லாத முகஸ்துதி செய்து வால்பிடித்துப் பிழைக்கும் சில ஆசிரியைகளை சலுகைகொடுத்து தனக்கு  நெருக்கமாக வைத்துக்கொண்டு நியாயம் கேட்பவர்களையெல்லாம் வருத்தும் போக்கிலே நிர்வாகம் நடாத்தி வந்திருக்கின்றான் அவன். ஆனாலும் காலப்போக்கில் இவனுடைய அடுத்தவரை மதிக்காத அதிகார மமதை பெற்றோர்களையும் நோக்கித் திரும்பியதனால் ஊருக்குள்ளிருந்து படிப்படியாக எதிர்ப்பலைகள் உருவாகி ஒன்று திரண்டெழுந்தது. கடைசியில் அந்தப் பிரதேச மக்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம் செய்து தனபாலை ஒருவெறிபிடித்த நாயைத் துரத்துவதுபோல விரட்டியடித்து விட்டார்கள். இப்படி துரத்தப்பட்டவர்களின் தஞ்சம் கோருமிடம் வலயக்கல்வி அலுவலகத்தை விட்டால் வேறு எங்குள்ளது?

இதற்கிடையில் நான் பதவி உயர்வுகள் பல பெற்று கடைசியில் இப்போது இந்த வலயக்கல்விப் பணிப்பாளர் பதவியை ஏற்பதற்காக மீண்டும் கோணேசர்பூமி வலயத்துக்கு வந்துசேர்ந்தேன்.  அவ்வேளையில் சகபாடியான தனபால் மனமுடைந்துபோய் இந்த அலுவலகத்தில் தஞ்சம் கிடந்து கொண்டிருந்ததைக் கண்டேன். அவன் எனது நண்பன் என்பதாலும் அதிபர் பதவியிலிருந்து துரத்தியடிக்கப்பட்டதை அறிந்திருந்ததாலும் அவன் மீது சிறிது அனுதாபத்துடன் நடந்து கொண்டேன். ஒருகாலத்திலே என்னுடைய தரத்திலிருந்தவன் இப்போது என்னுடைய அலுவலகத்திலே நாதியற்று கிடப்பதைப் பார்த்து மனம் கேட்காமல் போனால் போகிறது என்று சில பொறுப்புக்களை அவனுக்கு வழங்கி வைத்து என்னுடனேயே வைத்துக் கொண்டேன்.

ஆனால் அதுதான் நான் எனக்கே வைத்துக்கொண்ட பொறி என்பதை அப்போது அறிந்திருக்கவில்லை.

நானும் பதவிக்கு வந்த புதிது. தவிர, முஸ்லீம் பாடசாலை தொடர்பான விடயங்களைக் கையாளும்போது அதிலே தனபாலுக்கு நிறைய அனுபவம் இருக்குமென்று நம்பி சில விடயங்களில் அவனது ஆலோசனையையும் கேட்டு வந்தேன். ஆனால் நெருங்கிய நண்பன்தானே என்று நான் வழங்கிய சலுகைகளை அவன் தனது நலனுக்காகவும் முன்பு தான் அதிபராக இருந்த காலத்தில் இலுப்பஞ்சோலை பாடசாலையிலிருந்த தனக்கு வேண்டாத ஆசிரியர்களை பழிதீர்ப்பதற்காகவுமே அவன் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றான் என்பதை எனக்கிருந்த வேலைப்பளுவினால்  ஆரம்பத்தில் நான் கவனிக்கத் தவறிவிட்டேன். ஒருகட்டத்திலே தனபாலின் ஆலோசனையைக் கேட்டு மக்பூலின் பாடசாலையில் சற்றுத் துணிச்சலாகப்பேசும் இயல்புள்ள ஆசிரியர் ஒருவனை சிறிது அச்சுறுத்தி வைப்பதற்கு தீர்மானித்தேன். அவனை ஏதாவது குற்றம்பிடித்து வெருட்டி வைப்பதற்காக எனது அலுவலகத்திலிருந்த நிர்வாக அலுவலர் ஒருவரையும் கோட்டக் கல்விப்பணிப்பாளர் ஒருவரையும் அனுப்பிவைத்திருந்தேன்.

அதுவே நான் செய்த அடுத்த தவறு.

ஆம், இரை பிடிக்கச்சென்ற பாம்பின் தலை ஒரு தவளையின் வாய்க்குள்ளேயே இறுக மாட்டியது போலாயிற்று நான் அனுப்பிவைத்த அந்த அலுவலர்களின் நிலைமையும். அவர்களால் அந்த ஆசிரியர் பக்கமிருந்து எந்தவொரு உருப்படியான தவறுகளையும் பிடிக்க முடியவில்லை. மாறாக விசாரிக்க வந்தவர்களது தகுதிகள் பற்றி அவன் விசாரிக்கத் தொடங்கி விட்டானாம். இதனால் என்னை நம்பிச் சென்ற இருவரும் ஆளைவிட்டால் போதும் என்று ஒரே ஓட்டமாக ஓடியே வந்து விட்டார்கள். அவர்களை சிதறடித்து அனுப்பிய அந்த ஆசிரியன் ஏற்கனவே பிரபல பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் எழுதிவரும் ஒருவனாம். அவனுக்கு இப்படி வித்தியாசமாக ஒரு ஏதாவதொரு சிறிய விடயம் கிடைத்தாலும் போதுமாம். உடனே அதை ஒரு சிறுகதையாகவோ கவிதையாகவோ எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பிவிடுவானாம். அப்படிப்பட்டவன் இதைவிடுவானா?

அன்றைய தினம் விசாரணை என்ற பெயரில் நடந்த கோமாளிக்கூத்தையெல்லாம் அந்த விஞ்ஞான ஆசிரியன் 'இலுப்பஞ் சருகுகள்' என்ற தலைப்பிலே ஒரு அருமையான சிறுகதையாக எழுதியனுப்பிவிட அதை நமது நாட்டின் பிரபலமான சஞ்சிகையொன்று தனது அடுத்த பதிப்பிலே உடனடியாக பிரசுரித்தும் விட்டது.
அன்று ஆரம்பித்ததுதான் இந்த இலுப்பஞ்சோலை பாடசாலைத் தலையிடி.
'இலுப்பஞ் சருகுகள்'  வெளியானதிலிருந்து நான் எங்கே சென்றாலும் என்னிடம் அதைப் பற்றியே கேட்கத் தொடங்கி விட்டார்கள்.  ஓய்வுபெற்றுச் சென்ற எனது மேலதிகாரிகள் முதல் நேற்றுவரை என்முன்னால் வாய்திறந்திராத கற்றுக்குட்டி அதிபர்கள் வரை ஏதோ துக்கம் விசாரிப்பது போல விசாரித்து எரிச்சலூட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.  இப்போதெல்லாம்  எனக்கு  வரும் தொலைபேசி அழைப்புகளை எடுப்பதற்குக்கூட நான் இரண்டுமுறை யோசிக்க வேண்டியவனாக இருக்கின்றேன்.

எங்கள் அலுவலகத்தின் அசிங்கமான ஒருமுகத்தை அம்பலமாக்கிய அந்த விஞ்ஞான ஆசிரியனைக் கோபிப்பதா அல்லது பிழையான தகவல் தந்து என்னை ஒரு ஆப்பிழுத்த வானரமாக மாற்றி விட்ட தனபாலைக் கோபிப்பதா என்று குமைந்து கொண்டிருப்பதுதான் இப்போதெல்லாம் என்வேலையாக இருக்கின்றது. இந்த விவகாரத்தை இப்படியே விட்டுக் வைத்துக் கொண்டிருப்பது அவ்வளவு நல்லதில்லை என்று தோன்றியதால்தான் மக்பூலை அழைத்திருக்கின்றேன்.



'என்ன விஷயமா ஸேர் வரச் சொன்னீங்க?'

'ஒன்றுமில்லை மக்பூல். உங்கட ஸ்கூல்ல மல்டிமீடியா ப்ரொஜெக்டர் ஏதுமிருக்குதா?' கண்ணாடியாலான பேப்பர் வெயிட்டை விரல்களால் சுழற்றிச்சுழற்றி அதன் மேசை நடனத்தை ரசித்தவாறே கேட்டேன்.

'இல்லை. ஏன் ஸேர் கேட்கிறீங்க?'

'இல்ல உங்கட ஸ்டாஃப்ல யாராவது ஸ்கூலுக்கு லேப்டொப் கொம்ப்யூட்டர் கொண்டு வந்து பாவிக்கிறாங்களா?'

'........'

'என்ன சத்தத்தையே காணல்ல. ஒருவேளை நீதான் பாவிக்கிறியோ?' என்று கேட்டுவிட்டுச் சிரித்தேன்.

'எனக்கிட்ட அதெல்லாம் கிடையாது ஸேர். ஆனா யாரும் கொண்டு வாறாங்களோ தெரியல்ல...'

'இஞ்ச பாரு மக்பூல், பொய் சொல்லாத. உங்கட ஸ்கூல்ல மட்டும் என்ன நடந்தாலும் அதை அப்பிடியே எனக்கு வந்து சொல்றதுக்கு ஆளிருக்குது தெரியுமா? கேட்டதுக்கு மழுப்பாம பதில் சொல்லு மக்பூல்'

'அப்ப அதையும் அந்த ஆளுக்கிட்டயே கேட்டிருக்கலாமே ஸேர். எங்கட ஸ்கூல் இலுப்பை மரத்திலருந்து ஒரு இலை விழுந்தாலும் அதை உங்கட ஒபிசுக்கு ஓடி வந்து சொல்லுற சில டீச்சர்மாராலயும் அதைக் கேட்டுட்டு உங்களுக்கிட்ட இஷ்டத்துக்கு வத்தி வைக்கிற ஆளாலயுந்தான் ஸேர் என்ட ஸ்கூல்ல இவ்வளவு பிரச்சினையும்..'

இதை அவனிடமிருந்து நான் சிறிதும் எதிர்பார்க்கவேயில்லை. முகமெல்லாம் இறுக மக்பூல் என்னோடு இப்படிப் பேசுவது இதுதான் முதல் தடவை.

 '....என்ட நிருவாகத்துக்குள்ள எல்லாரும் மறைமுகமாக கையடிச்சிக்கிட்டு ஒருத்தரும் என்னை ஸ்கூல் நடத்துறதுக்கு விடுறீங்க இல்ல ஸேர்..! எத்தனை பிரச்சினையை ஸேர் நான் சமாளிக்கிறது? ' என்றான் மக்பூல் கோபத்துடன். அவன் மறைமுகமாக எதைச்சொல்கின்றான் என்பது புரிந்தது.

'அட! நீயும் இப்ப நல்லாப் பேசப் பழகிட்ட போல. முந்தியெல்லாம் நான் பேசுனா ஒரு வார்த்தை பேச மாட்டாய். சரி கோபப்படாத மக்பூல். நீ எனக்கு முந்தி இருந்தே நல்லாத் தெரிஞ்ச ஆள் என்டதாலதான் இதையெல்லாம் நான் கேட்டுக்கிட்டு இருக்கிறன். ஆனா நீ மட்டுமா எனக்கு வேண்டியவன் சொல்லு பார்ப்பம்? உன்னைப்போல வேண்டியவன், தெரிஞ்சவன் என்று பலரையும் சமாளிச்சுத்தான் நானும் எல்லாத்தையும் செய்யணும். இந்தக் கதிரையில இருந்து பார்த்தாத்தான் இந்தப் பதவியிலுள்ள கஷ்டங்கள் தெரியும்'

'எனக்கும் அப்பிடித்தான் ஸேர் இருக்கு. பேசாம ஒரு டீச்சராகவே நான் இருந்திருக்கலாம் போல இருக்கு. ஏந்தான் இந்தப் பாழாய்ப்போன ப்ரின்ஸிப்பல் எக்ஸாம் எடுத்துப் பாஸ் பண்ணினோம் என்று இப்பதான் கவலையாக்கிடக்கு. இப்படிக் கிடந்து நிம்மதியில்லாம அலையுறதுக்கு ஊர்ல கிடக்கிற பட்டி மாடுகளைக் கட்டி மேய்ச்சுக்கிட்டிருந்தாலும் இதைவிட கூடக் காசு வந்திருக்கும். மனிசனுக்கு நிம்மதியும் கெடைச்சிருக்கும் ஸேர். என்ன நாய்ப் பொழைப்பு ஸேர் இது!'

'மக்பூல் என்னடா இப்படியெல்லாம் பேசுறா நீ? நீ கேட்டுத்தானே உன்ன அந்த ஸ்கூலுக்குப் போட்டோம்'

'யா அல்லாஹ்! அப்ப கேட்டது நான்தான் ஸேர். ஆனா யாருக்குத் தெரியும் இப்பிடி ஆக்களெல்லாம் இருக்குதெண்டு?'
மேசை அழைப்பு மணியை அடித்து உள்ளே வந்தவனிடம், 'நாகராசா! ரெண்டு கூல் ட்ரிங்க்ஸ் கொண்டுவா' என்றேன்.

'எனக்கு வேணாம் ஸேர்! சுகர் இருக்குது. வெறும் தண்ணிபோதும்' என்றபடி மேசையிலிருந்து மினரல் வாட்டர் போத்தலை எனது அனுமதியுடன் எடுத்து மூடியைத் திறந்தான் மக்பூல்.

'என்ன மக்பூல் இப்பதானே நாப்பது வயசைத் தாண்டியிருப்பாய் நீ. அதுக்குள்ள உனக்கு சுகர் ப்ரஷரெல்லாம்  வந்திட்டுதா?' என்று வியந்துபோய் கேட்டேன் எனக்கு ஹைப்ரஷர் மட்டும் இருக்கின்ற தைரியத்தில்.

'நாப்பத்தி மூணு வயசுதான் ஸேர். ஆனா மூணு வருசத்துக்கு முதல்ல நான் நிலாவெளி ஸ்கூல்ல ஒரு நல்ல மெட்ஸ் மாஸ்டரா இருந்திட்டு விடியக் காலையில வயலையும் ஸ்கூல்விட்டு பின்னேரத்தில  மாடு கன்றுகளையும் பாத்துக்கிட்டு கிரிக்கட் புட்போல் விளையாடிட்டிக்கிட்டிருந்த காலத்தில சுகருமில்ல ஒரு ப்ரஷருமில்ல..'


'இப்ப அதிபரா வந்த இந்தக் கொஞ்சக் காலத்துக்குள்ள எல்லாத்தையும் எடுத்திட்டாய் என்றுதானே சொல்ல வாறாய் நீ. அது ஒண்ணுஞ் செய்யயேலாடா மக்பூல். நாம எல்லாரும் பதவியென்ட புலிவாலத் தெரியாமப் புடிச்சிட்டம்டா. இனி அதை விடவும் ஏலாது. அது இழுக்கிற இழுப்புக்கெல்லாம் ஓடிட்டுத்தான் திரிய வேண்டியிருக்குப் பாரு.. உன்ட அதிகாரியா நான் இதைச் சொல்ல வரயில்ல.  நீ கவலைப்படாத மக்பூல் எல்லாஞ் சரியா வரும்'

நான் அவனைத் தேற்றுவது போலக் கதைத்தாலும் மக்பூலின் முகத்திலிருந்த வாட்டம் நீங்கவில்லை. ஒரு விதத்திலே அவனை நினைத்தால் பாவமாகவும் இருந்தது. நிலாவெளியிலே கன்றுக்குட்டிபோல துள்ளித்திரிந்த ஒரு கெட்டிக்கார கிராமத்து இளைஞனை பதவியைக் கொடுத்து அடிமாடாக மாற்றிவிட்டேனோ என்ற குற்றவுணர்வு முதன்முதலாக என் நெஞ்சைத் தாக்கியது. ஆனால் இவன் மட்டுமா? இவனைப்போல ஆக்கபூர்வச் சிந்தனைகளையும் இயல்பான திறமைகளையும் பதவிக்காகத் தொலைத்துவிட்ட எத்தனை பொலிகாளைகள் இன்று எங்கள் கல்வித் திணைக்களத்திலே வெறும் செக்குமாடுகளாகச் சுற்றிவந்து கொண்டிருக்கின்றன. அப்படிப் பார்க்கும்போது என்னைப்போன்ற உயரதிகாரிகளின் அதிகாரத் தோரணைகளுக்கு அடங்க மறுத்துப் போராடிப் போராடி குழப்படிக்காரர்கள் என்று பெயர் வாங்கினாலும்கூட அந்த கதையெழுதும் விஞ்ஞான ஆசிரியனைப் போன்றவர்கள் உண்மையிலே கொடுத்து வைத்தவர்கள்.

 'சரி, மக்பூல். இப்ப அந்த பழைய மனுஷி லோகிதராசா டீச்சரின் பிரச்சினைகள் என்ன மாதிரி? வாற மார்ச் மாசத்தோட பென்சனுக்குப் போயிடுவாதானே? அவன்  விஞ்ஞான வாத்தி என்ன சொல்றான். இப்ப அவனால ஏதும் பிரச்சினையா?'

'இவ அவனோட தனவுறதாலதான் ஸேர் பிரச்சினையே. அவன் பிள்ளைகளை அனுப்பி எதையாவது கேட்டு விட்டாக்கூட கெட்ட வார்த்தையால அவனுக்கு ஏசி விடுறா மனுஷி. இவன் அந்தந்த இடத்திலேயே நல்லா குடுத்து விடுறவன். உங்களுக்கு தெரியுந்தானே?'

'ஓமோம். கேள்விப்பட்ட நான்தான்'

'அவ படுத்திற பாடுதான் பெரும்பாடா இருக்குதே ஸேர். அவக்கு ஒரு டீச்சருக்கு இருக்கு அடிப்படை மரியாதைகூடத் தெரியுதில்ல. யாராவது எதையாவது கேட்டுவிட்டாலும் கெட்ட வார்த்தையால ஏசி விடுது அந்த மனுஷி. இதை எல்லாரும் பொறுத்திட்டு இருப்பாங்களா?'

'ஆ! அதுதான் உனக்கு ஒருத்தன் இருக்கிறானே.. சயன்ஸ் மாஸ்டர். என்ன பேர் அவனுக்கு..? அந்த மனுஷிய யாரு பொறுத்தாலும் அவன் பொறுக்க மாட்டானே. ஆனா அந்த மனுஷி லோகிதராசா என்னடான்டா அந்த விஞ்ஞான மாஸ்டர்தான் தன்னைப்போட்டுக் கரைச்சல் படுத்திறதா அண்டைக்கு ஒருநாள் வந்து இஞ்ச வந்து அழுது ஒப்பாரி வச்சிட்டுப் போகுதே மக்பூல்..?'

'அவன் விஞ்ஞான மாஸ்டர் வந்து ஸேர் எதிலயும் போல்டாகத்தான் ஸேர் நடப்பான். தனக்குச் சரியென்டு பட்டதை பொட்டிலறைஞ்ச மாதிரிக் கதைக்கிற ஆள். வீணாகப் பயப்படுறதும் கிடையாது ஸேர். அதால பார்க்கிறதுக்கு கொஞ்சம் குழப்படிக்காரன் போலத் தெரிவான்.  மற்றப்படி படிப்பிக்கிறதுலயெல்லாம் ஆள் பிரச்சினை இல்லை. அதுமட்டுமில்ல ஸேர் அவன் மற்றவங்களைப்போல கோள் சொல்றது வால்பிடிக்கிறது மாதிரி ஜாதியுமில்ல. அப்படியிருக்கிறவன் இவவோட அட்டகாசத்தை பொறுப்பானா?'

'அதுக்காக ஒரு பொம்பிளை அதுவும் ஒரு வயசுபோனவைய இஞ்ச வந்து மனவருத்தப்பட்டு அழுகிற அளவுக்கு அவன் என்ன செய்தான் என்டு நாங்களும் யோசிச்சுப் பாக்கத்தானே வேணும் மக்பூல்?'

'ஸேர், நான் ஒரு பக்கம் ஸப்போர்ட் பண்றனென்டு நீங்க நினைக்கப்படாது. அவ வயசாளிதான். ஆனால் வாய் சரியில்ல ஸேர். அவ ஒரு தமிழ் டீச்சர். அவன் என்னைப்போல ஒரு முஸ்லீம். ஒருநாள் அவனுக்கும் எனக்கும் ஸ்கூல்ல வச்சு சின்ன வாக்குவாதம் ஏற்பட்டு பிறகு உடனே அதை நாங்க இரண்டுபேரும் ஆறுதலாகப் பேசி நாங்க தீர்த்திட்டோம். ஆனா இவ உடனே என்ன செய்தா தெரியுமா?'

'சொல் மக்பூல் கேட்போம்'

'இவ உடனே சந்தோசப்பட்டு, 'பாரு ரெண்டு சோனியும் கொளுவிட்டுது!' என்டு யாருக்கிட்டயோ சந்தோசப்பட்டு கதைச்சிருக்கிறா. இதை நானும் கேள்விப்பட்டேன். நான் அதிபராயிட்டதால ரோசம் மானமெல்லாம் இல்லாம நிருவாகத்துக்காக பொறுத்துக்கிட்டேன். அவன் அப்படிப் பொறுப்பானா ஸேர்? நல்ல வடிவாத் திருப்பிக் குடுத்திருக்கிறான்டு நினைக்கிறேன்.. அதுதான் எனக்குந் தெரியாம உங்களுக்கிட்ட ஓடிவந்திருக்கா போல'

'மக்பூல், முஸ்லீம்களை பொதுவா எல்லாரும் சோனி என்று செல்லமாக் கூப்பிடுறதுதானே? அதில ஏதும் தப்பில்லையே'

இதை நான் கேட்டதும் மக்பூலின் முகம் ஏனோ சட்டெனக் கறுத்து விட்டது. அவன் எதுவும் பேசாமல் கண்ணாடித் தடுப்புச் சுவரினூடாகத் தெரியும் எனது அலுவலகத்தின் அடுத்த  அறையைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் பயங்கரக் கடுப்பிலே இருந்தும் மேலதிகாரியான என்னைப் பகைத்துக் கொள்ளக்கூடாது என்பதற்காகத்தான் பேசாமலிருக்கின்றான்என்பது நன்றாகப்புரிந்தது. அந்தக் கேள்வியை நான் மக்பூலிடம் கேட்டிருக்கக் கூடாது என்று நினைத்து சிறிது வருந்தினாலும் அதுபற்றி எனக்குள் ஏனோ ஒரு குரூர மகிழ்ச்சியிருக்கத்தான் செய்தது.

சிறிது நேரம் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. இடையிலே எனக்கு வந்த ஒரு செல்போன் அழைப்பை பேசிமுடித்து விட்டு,

'ஏன் மக்பூல் அவன் இந்த புத்தகம் பேப்பருக்கெல்லாம் கதை, கவிதை, கட்டுரை செய்தியெல்லாம் எழுதுற ஆள்தானே..? ஆள் கொஞ்சம் கெட்டிக்காரந்தான் போல. கடைசியா உன்ட ஸ்கூலுக்கு நான் வந்த நேரமும் மத்த டீச்சர்மாரெல்லாம் பேசாம இருக்க இவன் மட்டும் எழும்பி எனக்கிட்டேயே கனக்க கதைச்சிட்டுக் கிடந்தானே..?'

'ஓம் ஸேர், நாந்தான் சொன்னனே அவன் தனக்குச் சரியென்டு பட்டது எதையும் நேரே கதைக்கிற ஆள். நேர்மையா நடப்பான். நல்லா எழுதுவான், நியாயமா பேசுவான். போனவருசம் நீங்க வலயத்தால நடத்துன  டீச்சர்ஸ் டே போட்டியிலயும் சிறுகதையில வலயத்தில முதல்பரிசு வாங்கியிருக்கான்'

'அப்பிடியா? அப்படி ஒருவன் இருக்கிறது நல்ல விசயந்தான். ஆனா இவன் கற்பனையில எழுதாம நடக்கிற விசயத்தையல்லவா அப்பிடியே எழுதிப்போடுறான். முந்தி ஒருநாள்  நான் இவனைப்பற்றி சரியாத் தெரியாம நம்மட டீடீ பெரிய நாயகத்தையும் ஏஓ ரனீஸையும் அனுப்பி வச்சேன் ஞாபகமிருக்கா மக்பூல்?'

'ஓமோம். நாங்கூட அண்டைக்கு மையத்து வீடொன்றுக்குப் போயிருந்த நேரம். பிறகுதான் எனக்கும் விசயம் தெரியும்;'

'ஆங் அன்டைக்குத்தான். அதுபாத்தா விசாரிக்க வந்தவங்க ரெண்டுபேரையும் றூல்ஸ் கதைச்சு பேச்சாலேயே மடக்கி அனுப்பிட்டான் பாரு. அது மட்டுமா  விசாரிக்க வந்து ரெண்டுபேரும் மூக்குடைபட்டதை ஒரு கதையா எழுதி ஒரு பேப்பருக்கோ மாதப் புத்தகத்துக்கோ போட்டிருக்கான் போல. அதைப் படிச்சிட்டு நம்ம பழைய ஸட்டீ அருமைப்பிள்ளை கூட நேற்று எடுத்துக் கேட்கிறாரு. நான் நடத்துற மீட்டிங்லயெல்லாம் அதிபர்மார் அதைப்பத்தி கிசுகிசுத்துச் சிரிக்கிறானுகள்.'

'ஸேர், அவன் எல்லாருடைய உண்மையான பேரையெல்லாம் போட்டா ஸேர் எழுதிறான்?'

'அப்பிடி எழுதினாத்தான் இந்நேரம் அவனைப்புடிச்சு ஏதாவது செஞ்சிருக்கலாமே. சரி, இப்ப சொல்லு அவன்தானே ஸ்கூலுக்கு லேப்டொப் கொண்டு வாறவன்?'

'...........'

' என்ன பதிலைக் காணல்ல. சொல்லு மக்பூல், அவன் கொண்டு வாறானா இல்லையா?'

'உங்களுக்கு ஓடி வந்து தகவல் சொல்ற ஆக்கள் லேப்டொப்பை யார் கொண்டு வாறது தகவலையும் உங்களுக்கு சொல்லித்தானே இருப்பாங்க. பிறகு ஏன் ஸேர் எனக்கிட்ட கேட்கிறீங்க?'

'ஆனா நீதானே அங்க அதிபர். உனக்கிட்டத்தானே நான் கேட்பேன்'

 'ஸேர், இப்பெல்லாம் எல்லா டீச்சர்மாருக்கும் எழுத்து வேலைகள் கூடிப்போயிட்டுது. அதால ஆளுக்கொரு பெரிய பேக்கைச் சுமந்திட்டுத்தான் வாறாங்க. அதுக்குள்ள லேப்டொப் இருக்கா இல்லையா என்டெல்லாம் தேட ஏலுமா? ஆனா வகுப்பில யாரும் வச்சிருக்கிறதில்ல.'

'அப்படியென்டா வேற இடங்கள்ல பாவிக்கிறாங்கதானே?'

'இருக்கலாம் ஸேர். அதோட லேப்டொப் என்கிறது இந்தக் காலத்தில எல்லாருக்கும் ஒரு எலக்ரொனிக் டயறி மாதிரி ஆகிட்டுது. அதை அவங்க கொண்டு வந்து ப்ரீ பீறியட்டுல பாவிச்சா நம்ம ஒண்ணும் சொல்லேலாதே ஸேர்.'

'ஓஹோ! எனக்கே பாடம் நடத்துறியா நீ...? உனக்குத் தெரியுமா சட்டப்படி செல்போனைக்கூட ஸ்கூலுக்குள்ள கொண்டு போகேலாது'
இப்படி நான் கூறியதும் மக்பூல் என்னை ஒருமாதிரியாகப் பார்த்தான். அவன் தனக்குள் என்னைப்பற்றி ஏதோ நக்கலாக நினைப்பதைப்போலத் தோன்றியது எனக்கு. இவனெல்லாம் அப்படிப் பார்க்கிற அளவுக்குப் போய்விட்டதா எனது நிலை என்ற கோபம் மனதுக்குள் மண்டிக்கொண்டு வந்தது.  மேசை இழுப்பறையைத் திறந்து அவசர அவசரமாக ஒரு ப்ரஷர் வில்லையை நாக்கின் கீழ் விரல்களால் அழுத்தி வைத்துக்கொண்டு சிறிது மூச்சை இழுத்து விட்டுக் கொண்டேன்.

'சரி, சட்டத்தில அப்பிடி இருந்தாலும் அவசரத்துக்கு பயன்படுத்திறதுக்காக நாங்க அதைப்பற்றி கண்டுக கொள்ளாமத்தானே விட்டு வச்சிருக்கிறம். அதுக்காக வகுப்புல பிள்ளைகளுக்கு படிப்பிக்காம செல்போனில பேசிட்டிருக்கிறது சரியில்லதானே மக்பூல். அதுமாதிரித்தான் இந்த லேப்டொப் விசயமும்'

'கடமை நேரத்தில அதுகளை பாவிச்சா பிழைதான் ஸேர். நீங்க சொல்றது விளங்குது. ஆனா என்ட ஸ்கூல்ல யாரும் அப்பிடி வகுப்புல லேப்டொப் பாவிக்கிறதில்ல. சிலவேளை ப்ரீ பாடத்துக்கு ஸ்டாஃப் றூமில செய்றாங்களோ தெரியாது. அதை நம்ம தடுக்கேலாதே ஸேர்?'

அவன் கூறியதிலிருந்த நியாயம் புரிந்தாலும் மேலதிகாரி எனும் பதவியில் ஒட்டியிருக்கும் நான் எனும் மமதை அதை ஏற்றுக்கொள்வதற்கு இடம் தரவில்லை. அது ஏனோ தெரியவில்லை இந்தக் கதிரைக்கு வந்து சேர்ந்த பின்பு சரியோ பிழையோ யாராவது என்னுடைய கருத்துக்கு மாறுதலாகப் பேசுவதை என்னால் முன்பு போல ரசிக்க முடியவில்லை. அதனால் வேறு என்ன விதத்தில் மக்பூலை மடக்கலாம் என்பதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

எனது கைகள் மேசை மீதிருந்த பேப்பர் வெயிட்டை மீண்டும் உருட்டத் தொடங்கியது. அது சுழன்று சுழன்று மேசையின் மத்தியிலிருந்து மெல்ல விலகிச் சென்று விளிம்பில் நின்று ஆடிக்கொண்டிருந்தது.

'அதிருக்கட்டும் மக்பூல், பிள்ளைநேயப் பாடசாலைத் திட்டமெல்லாம் என்ன ஸ்கூல்ல பருவத்தில இருக்கு.. எதுவும் செய்து முடிச்ச மாதிரிக் காணல்லயே'
'அது ஓரளவு செய்து முடிச்சுக் கொண்டுதான் இருக்கிறம். இடையில் இந்த சூறாவளி மழையால ஒருகிழமையா பிள்ளைகள் வரவு குறைவு. அதால கெச்மெண்ட் ஏரியாவுல விபரங்களை எடுக்க முடியாம இருந்தது. கொஞ்சம் டைம் தந்தீங்கண்டா செய்துரலாம் ஸேர்'

சற்று முன்பு சிறிது விறைப்பான தொனியிலே பேசிக்கொண்டிருந்த மக்பூலை இப்போது இறங்கி வந்து பேச ஆரம்பித்தது எனக்குப் பிடித்திருந்தது. 'பாம்புகள் கொத்துவதற்குத் தெரியாது போனாலும் சீறுவதற்காவது தெரிந்திருக்க வேண்டும்' என்று எங்கோ நான் வாசித்த வாசகம் ஒன்று சட்டென என் நினைவுக்கு வந்தது.

'சரி, தந்த ப்ரொஜெக்ட் எல்லாம் கெதியா முடிச்சு வாற புதன்கிழமை காலையில ஒன்பது மணிக்குள்ள டீவிடீ என்ட மேசையில இருக்கணும்.'

' யா அல்லாஹ்! புதன் கிழமையா..? இன்னும் ரெண்டே ரெண்டு நாள்தானே ஸேர் இருக்கு. அதுக்குள்ள எப்பிடி ஸேர் முடிக்கிறது. ராப்பகலா வேலை செய்தாலும் முடிக்கேலாதே ஸேர்'

'அதெல்லாம் எனக்குத் தெரியாது மக்பூல். இதை இப்ப நான் உனக்கு மேலதிகாரியாத்தான் சொல்றேன். புதன் கிழமைக்குள்ள வேலை முடியலண்டா நான் உன்மேல எக்ஷன் எடுக்க வேண்டித்தான் வரும். சும்மா உன்ட எதிர்காலத்தைக் கெடுத்துக் கொள்ளாதே. அதுக்குப் பிறகு நீ என்னைக் கோவிக்கக்கூடாது. சரி நீ போய்ட்டு வா!'  அவனை நீ நிமிர்ந்து பார்க்காமலே முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டு மூடிவைத்த பைலைத் திறந்து கையெழுத்திடத் தொடங்கியபோது,

'சரி ஸேர் நான் பிறகு வாறேன்'

அவன் தனது அலுவலகப் பையைத் தூக்கியபடி கதவை நீக்கிக் கொண்டு மிகவும் சோர்வாக வெளியேறிச் சென்றான்.

அவன் போன சிறிது நேரத்திலே அவ்வளவு நேரமும் வெளியே நின்றிருந்த தனபால் கதவைத் திறந்து உள்ளே எட்டிப் பார்த்து, 'மக்பூல் போயிட்டானா? என்று கேட்டுக்கொண்டே உள்ளே வந்தான்.

'வா தனபால்! எல்லாத்தையும் குழப்பியடிச்சுப்போட்டு இப்ப பூனை மாதிரி வந்து எட்டிப்பாரு!  உன்னால நான் யாராரையெல்லாம் கூப்பிட்டுக் கெஞ்ச வேண்டியிருக்குப் பாத்தியாடா?' என்றேன் சலிப்புடன்.

'என்னவாம் ரவீந்திரன், அந்த சயன்ஸ்; மாஸ்டர் லேப்டொப்பைக் கொண்டு வந்து ஸ்கூல் பிள்ளைகளையெல்லாம்  வழிகெடுக்கிறானென்டு கடிதம் எழுதித்தர மக்பூல் ஒத்துக்கிட்டானா?' என்று தனபால் ஆர்வமாய் என்னிடம் கேட்டான்.

மேசையின் விளிம்பிலே நின்று சுழன்று கொண்டிருந்த பேப்பர்வெயிட் மெல்ல நகர்ந்து சென்று கீழே விழுவதற்காகச் சென்று கொண்டிருந்தது. சட்டென்று அதைக் கைகளால் பிடித்து ஆட்டத்தை நிறுத்திவிட்டு,

'இல்ல தனபால், இன்டைக்கு அவனிருந்த நிலைமையில நான் அவனுக்கிட்ட நேரடியா கேட்க இல்ல.. ஆனா புதன்கிழமை காலையில நான் கேட்டதும்  அநேகமா ஒத்துக்குவானென்றுதான் நினைக்கிறேன்' என்றேன்.


-மூதூர் மொகமட்ராபி
 

Friday, November 16, 2012

சிறுகதை: கரைகள் தேடும் படகுகள்



 




 




டத்தடிச் சந்தியிலிருக்கும் சமாதிப் பிள்ளையார் கோயிலில், 'இன்றைய எங்கள் பயணம் எந்வொரு பிரச்சினையுமில்லாமல் முடியணும்டா சாமி' என்று மானசீகமாக வேண்டிவிட்டு அருகிலிருக்கும் பழக்கடைகள்  மலர்ச்சாலைகளையெல்லாம் தாண்டிச் சற்றுத்தள்ளியிருந்த பஸ்தரிப்பில் போய் நான் நின்றபோது என்னை உரசுவதுபோல வந்து க்ரீச்சிட்டு நின்றது அந்தப் புத்தம்புதுக் கருநீலநிற சொகுசுக் கார்.

'ஹேய் தனுஷ்! ஏறுடா கார்ல!'


ட்ரைவர் ஸீட்டில் இருந்து என்னை உரிமையோடு அழைத்தவனைப்  பார்த்ததும் மறுப்பேதுமின்றி கதவைத்திறந்து முன்புற ஆசனத்தில் ஏறிக்கொண்டேன். பஸ்தரிப்பில் நின்றிருந்த பலரின் பார்வை முதுகிலே ஊசியாய்க் குத்தியது. அந்த ஏஸிக் காரினுள்ளே அமர்ந்ததும் வேறோர் உலகத்திற்கு வந்துவிட்டது போலிருந்தது எனக்கு. வருடக்கணக்காகப் பழகிய தூசுபடிந்த சுற்றுவட்டத்து வீதிகளெல்லாம் கனவில் வரும் காட்சிபோல பளிச்சென்று தோன்றியது.

'என்ன புதுக்காராயிருக்கு...? காரை மாத்திட்டீங்களா இல்ல உங்க ஆளையே மாத்திட்டீங்களா?'


'கேள்வியைப் பாரு! அந்தப் பழைய காரை வித்தாச்சு. இது போன புதன்கிழமைதான் கஸ்டம்ஸ்லருந்து எடுத்தது. எப்பிடி நல்லாருக்கா?' என்று ஆவலுடன் கேட்டான் அவன்.


'நல்லாருக்கு. அதுசரி, காரை எடுத்திட்டு வந்திருக்கீங்களே கார்லயே அங்க போகப்போறமா என்ன?'


'ஓமோம், கடலுக்குள்ளால ரோட் ஒன்டு கண்டு பிடிச்சிருக்காங்களாம். அதாலேயே ஓட்டிக்கிட்டே போனா நேராய்ப் போய்ச்சேர்ந்திருவோம். ஆளைப்பாரு! இன்டைக்கு சனிக்கிழமை. பொஸ்ஸும் வெளிநாட்ல. இன்டைக்கு இரவுதானே நம்ம பிரயாணம்.. அதுதான் சும்மா காரை எடுத்துட்டு வந்தேன். அதிருக்கட்டும் பாவாடை, தாவணி, தலையில பூ, கையில கூடை.. சும்மா சொல்லக்கூடாதுடா எதை  உடுத்தினாலும் உனக்கு அழகாவே இருக்குடா ராஸ்கல். இன்னும் நீ கோயிலுக்கெல்லாம் வாறியா?'


'அதெல்லாம் இருக்கட்டும். உண்மையில நாம இன்றைக்கு இரவு போறமா இல்ல போனமுறை மாதிரி இழுபறிதானா? காரை வேற கொண்டு வந்திருக்கீங்க. நம்ம சாமானெல்லாம் எங்க?'


'அதெல்லாம் நிலாவெளியில ஒரு வீட்டுல நேற்றே ரெடி பண்ணி வச்சிட்டேன். காரை பீச் ஹோட்டல்ல பார்க்பண்ணி லொக்செய்துட்டு கீயைக் கொடுத்திட்டுப்போய் போட்ல ஏறவேண்டியதுதான். ரஞ்சித் காலைல பஸ்பிடிச்சு வந்து எடுத்திட்டுப் போவான்.?'


'ஐயோ! அந்த ரஞ்சித்துக்கும் விஷயத்தைச் சொல்லிட்டீங்களா? பொஸ்ஸுக்கு மட்டுந்தான் சொல்லப்போறதா எனக்கிட்ட சொன்னீங்க?'


' ரஞ்சித்துக்கு நான் மட்டும் போறதாத்தான் சொன்னேன். நான் போனா என்னோட வேலை அவனுக்குத்தானே? அதனால நிச்சயம் யாருகிட்டயும் சொல்ல மாட்டான். பொஸ் நேற்றுத்தான் மக்காவுக்குப் போனாரு. ஏயாபோர்ட்ல வச்சு அவருகிட்ட நம்ம விசயத்தை விளக்கமாகச் சொன்னேன். முதல்ல அதிர்ச்சியாகிப் பிறகு மிச்சம் கவலைப்பட்டாரு. என்னை விஷ் பண்ணிக் காசும் கொஞ்சம் தந்தாரு. எல்லாத்தையும் ரஞ்சித்துக்கிட்ட ஹேண்ட் ஓவர் பண்ணிட்டுப் போ என்றாரு.'


'நீங்க இவ்வளவு றிஸ்க் எடுத்து நாம இப்படிப் போகத்தானா வேணும் மார்க்? இதெல்லாம் என்னாலதானே கஷ்டம். நான் வரல்ல மார்க்!' 


'சரி, வரலண்டா இறங்கிப் போ!' என்றான் முகத்தைக் கோபமாக வைத்துக்கொண்டு.  அதை உண்மையாகச் சொன்னானா இல்லை நடிக்கிறானா என்று தெரியாதபடி இருந்தது அவனது முகபாவம். ஆனாலும் எனக்குள்ள ரோசத்தை உடனடியாக நிரூபிக்க விரும்பி இறங்கிச் செல்வதற்காக கதவின் திருகியைக் கோபத்தோடு திருப்பினேன்.  ஆனால் எவ்வளவு முயன்றும் திறக்கவே முடியவில்லை.


' ஏய், சும்மா பகிடிக்குடா! நான் சொன்னா உடனே நம்பிடுவியா நீ? ஓகே ஷேல்வீ கோ டு நிலாவெளி பீச் றைட் நவ்?' என்று என்னிடம் கேட்டுக்கொண்டே செல்போனில் யாருக்கோ கோல் செய்தான் அந்தக்  குறும்புக்காரன் மார்க் ஆன்டனி கெமிலஸ்.


அதுதான் அவனது முழுப்பெயர்.  அவனுடைய பெயரைப் போலவே அவனும் படு ஸ்டைலாகவும் ஸ்மார்ட்டாகவும் இருப்பவன்தான். மூன்று அல்லது நான்கு வருடங்களுக்கு முன்பு திருகோணமலை அனுராதபுரச் சந்தியிலுள்ள நித்தியானந்தா கல்லூரியில் நான் பதினோராம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தவேளை எனது பாடசாலை ஆசிரியனாக அதுவும் என்னுடைய வகுப்பாசிரியனாக இருந்தவன்தான் இவன் என்று சொன்னால் நம்புவீர்களா?


ஒரு ஆசிரியரைப் போய் மரியாதையில்லாமல் அவன் இவன் என்று சொல்லிக்கொண்டிருக்கின்றேனே என்று நீங்கள் யோசிப்பது புரிகின்றது. அது ஒன்றுமில்லை. பிற்காலத்திலே எங்கள் இருவருக்குள்ளேயும் உண்டான நெருக்கத்தின் விளைவுதான் இந்த மாற்றம். இதையெல்லாம் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டுமானால் இந்தக் கதையை குறைந்தபட்சம் இன்னும் மூன்று நான்கு பராவாவது தொடர்ந்து படித்தாக வேண்டும்.


மார்க் ஆன்டனி கெமிலஸ் எங்கள் பாடசாலையின் பழைய மாணவனும் கூட.  பாலையூற்றைச் சேர்ந்த பழைய ஏற்பாடுகளை மிகவிசுவாசமாக நம்பும் ஒரு கிறிஸ்தவக் குடும்பத்தின் கடைசிப்பிள்ளை அவன். அவனது பெற்றோர்கள் சகோதரங்கள் மற்றும் குடும்பத்திலுள்ள அனைவரும் வெளிநாடுகளில்தான் உள்ளனர். இவன் மட்டும் வெளிநாடு போவதிலே நாட்டமின்றி தனது வயதான பாட்டியுடன் ஊரிலே இருக்கின்றான். ஏஎல் பரீட்சையில் முதல் தடவையிலேயே பாஸாகி மூன்று வருடங்களில் கல்வியியல் கல்லூரியை வெற்றிகரமாக முடித்ததிலே இருபத்தியொரு வயது பூர்த்தியாவதற்கிடையிலே நியமனம் பெற்று நான் படித்துக்கொண்டிருந்த நித்தியானந்தா கல்லூரிக்கே உடற்கல்வி ஆசிரியராக வந்துவிட்டான். 


அவன் எங்கள் பாடசாலையின் முன்னாள் மாணவன் என்பதாலும் முன்பு எங்களோடு ஒன்றாகப்பழகி கிரிக்கட், புட்போல் விளையாடித் திரிந்தவன் என்பதாலும் அவனை ஏனோ ஒரு ஆசிரியருக்குரிய இடத்திலே வைத்துப் பார்க்க எங்களால் முடியவில்லை. அவனும் எங்களை மாணவர்களாக மட்டும் கருதாமல் ஏறத்தாழ நண்பர்கள் போலத்தான் நடாத்தினான். இருந்தாலும் ஒரு மரியாதைக்காக அவனை நாங்கள் எல்லோரும் பாடசாலையில் வைத்து மட்டும் 'ஆன்டனி ஸேர்' என்று அழைப்பதுண்டு.


அவன் வருவதற்கு முன்பு வரை எங்கள் நித்தியானந்தா கல்லூரி ஏறத்தாழ ஒரு வயோதிபர் மடம்போலத்தான் காட்சியளித்துக் கொண்டிருந்தது. பின்பு அடுத்தடுத்த வருடங்களில் பழைய ஆசிரியர்களெல்லாம் ஓய்வுபெற்று பல இளம் ஆசிரியர்கள் வந்து ஒன்று சேர்ந்து இயங்கத் தொடங்கிய பின்புதான் எங்களைப்போன்ற மாணவர்களுக்கெல்லாம் படிப்பிலும் ஸ்போர்ட்சிலும் அலாதியான உற்சாகம் தொற்றிக்கொண்டது. அவனது மாணவர்களிலே


படிப்பில் எப்போதுமே கெட்டித்தனமாக இருந்து வந்தவனான எனக்கு ஸ்போர்ட்ஸிலே இருக்கும் ஆர்வத்தை பார்த்து மார்க் கெமிலஸுக்கு ஆச்சரியமாக இருந்திருக்கும் போல. அதன் காரணமாகத்தான் பின்பு அவனுக்குள் என்மீது ஒரு ஈடுபாடு ஏற்பட்டிருக்க வேண்டும். அது பின்பு எனது தனிப்பட்ட வாழ்க்கையிலே அக்கறை செலுத்துமளவு நெருக்கமாகி ஒருகட்டத்திலே ஆசிரியர்-மாணவ உறவுக்கும் அப்பாலும் சென்று இன்று எனது குடும்பப் பிரச்சினைகளைக்கூட அவனிடம் மனம்விட்டுப்பேசித் தீர்மானிக்குமளவுக்கு இறுக்கமான நட்பாகிப்போயிருக்கின்றது.


'ஹேய்! என்ன இவ்வளவு யோசனை? பிரயாணத்துக்கு இரவு வரைக்கும் நேரமிருக்கு. லெட்ஸ் என்ஜோய் நவ்! நிலாவெளி பீச் உனக்கு ஓக்கேவா?' என்ற அவனது குரல் கேட்டு நினைவுக்கு வந்தபோது வெளியே லேசாக மழை தூறிக் கொண்டிருந்தது.

நான் சிறிது யோசித்துவிட்டு, 'யெஸ்!'  என்றதுதான் தாமதம்.
விர்ரெனக் கிளம்பிய கார் திருகோணமலை புகையிரத நிலையச் சந்தியைத்தாண்டி குவாடலூப் சேர்ச் முன்னாலிருந்த பொலீஸ் பாதுகாப்பு வீதித்தடையில்தான் போய் நின்றது. கரும்பச்சை நிற மழைக்கோட் அணிந்த வயதான ஒரு பொலீஸ்காரர் காரையும் எங்களையும் சில மில்லிகிராம் சந்தேகமாய் உற்றுப்பார்த்துவிட்டுத் தலையசைத்தார். அடுத்த நிமிடம் குளியலறையில் கைதவறிய சவர்க்காரம்போல கார்ப்பெட் வீதியில் வழுக்கிப் பாய்ந்தது கார். காதை உறுத்தாத மெல்லிய மேற்கத்திய சங்கீதத்தில் நனைந்தபடி கண்ணாடியூடாகத் தெரிந்த வெளியுலகம் வெகுநிசப்தமாய் இயங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டே வந்தேன்.

வீதியோரம் இடதுபுறமாய் ரயில்வே குவார்ட்டர்ஸ், நெருப்புவாகை மரங்கள்.. சித்திவிநாயகர்கோயில்.. பழக்கடை.. இரும்புக்கடை.. தேனீர்க்கடை.. சில்லறைக்கடைகள்.. வீடியோக்கிளப்.. கொம்யூனிக்கேஷன்கள், தரிசு நிலம், காத்திருக்கும் முச்சக்கரவண்டிகள்.. மஞ்சள் பெயிண்ட் அடித்த புல்டோசர்.. வாழைக்குலையேற்றிச் செல்லும் சைக்கிள்காரர்.. டியூஷன் செல்லும் பிள்ளைகள், சீமெந்து விளம்பரம்.. மெக்கானிக் ஷொப்.. குட்டிச்சுவர்கள்.. சினிமா போஸ்டர்களை அசைபோடும் மாடுகள், மீன்விற்கும் பெண்.. என்று எல்லோரும் வேகமாகப் பின்வாங்கிக்கொண்டிருந்தார்கள்.



'என்னடா கோபமா? சரி, ஸீட் பெல்ட்டைப் போட்டுக்கோ.. ட்ரஃபிக்காரன் நிக்கிறான்!'

'என்னை ஏன் இன்னும் நீங்க வாடா போடா என்றீங்க..?' என்றேன் உண்மையான கோபத்தோடு.

'சரி மகாராணி, தங்களது ஆசனப்பட்டியை அணிந்து கொள்ளுங்கள். எதிரே நமது போக்குவரத்துக் காவலர்கள் பாதையோரங்களிலே வசூலுக்காகக் காத்துக் கிடக்கின்றார்கள்!'  என்றான் வாய்க்குள் சிரித்தபடி.

'சீ! நேத்திரா டீவில வாறவங்க பேசுற தமிழ் மாதிரியிருக்கு.. வாந்தி வருது!' 

'அதுக்குள்ளேவா.. இப்பதானே பழகினோம்.. ஏம் ஐ டூ ஃபாஸ்ட்?'

'ச்சீ! யூ ஆர் எ பேட் போய்!'

ஸீட்பெல்ட்டை அணிந்த மறுகணம் நான் அடிக்க கை ஓங்கி சட்டென்று அவன்  விலகமுயன்றதிலே காரின் பவர் ஸ்டியரிங் லேசாய்த் திரும்பி விட்டது. 120 கிலோமீற்றர் வேகத்தில் பறந்து கொண்டிருந்த கார் தடுமாறி கார்ப்பட் சாலையிலே சிறிது தூரம் சறுக்கிச் சென்று க்ரீச்சிட்டு மறுபுறம் திரும்பி நின்றது. சக்கரங்களின் உராய்வினால் லேசான டயர்நாற்றத்துடன் கூடிய புகைகிளம்ப பயத்திலே எனக்கு  இரத்தம் உறைந்துவிட்டது.   வெகுநிச்சயமாய் ஏற்படவிருந்த விபத்திலிருந்து மயிரிழையில் தப்பியதில் என்னை நான் ஆசுவாசப்படுத்திக்கொள்வதற்குச் பல நிமிடங்கள் தேவைப்பட்டன. மார்க் கெமிலஸ் ஒரு கைதேர்ந்த சாரதி என்பதால் சட்டெனச் சுதாரித்து நடுவீதியில் நின்றுவிட்ட காரை ஒரு வட்டமடித்து சரியான பாதையில் திருப்பியெடுத்து விட்டான். அந்த வேளையிலே ட்ரபிக் பொலீஸ் யாருமில்லாதிருந்தது எங்கள் அதிர்ஷ்டமே.

கார்  அலஸ்தோட்டத்தைத் தாண்டிக் கொண்டிருந்தபோதுதான் என்முகத்தில் இருந்த பயத்தையும் தவிப்பையும் அவன் தன்னெதிரேயிருந்த பின்பார்வைக் கண்ணாடியில் ரசித்தபடி வருவதைப் பார்த்தேன்.

நான் ஓஎல் பரீட்சைக்காகத் தயாராகிக் கொண்டிருக்கும் போதுதான் முதன்முதலாக எனக்குள் ஒரு உடல் வேறுபாட்டை உணர்ந்தேன். ஆயினும் பரீட்சை மும்முரத்தில் இருந்த காரணத்தால் அதைச் சரியாகக் கவனிக்காமலிருந்து விட்டேன். பின்பு ஏஎல் கணிதப் பிரிவிலே சேர்ந்து படித்த அந்த இரண்டு வருட காலத்திலே இடையிடையே சில உடற்கோளாறுகள் தோன்றியிருந்தது. சில மாற்றங்கள் என்னை யோசிக்க வைத்தாலும் அவை குறித்து அதிக கவலையில்லாமல்தான் இருந்து வந்தேன்.


நான் A/L பரீட்சைக்குத் தோற்றிக் கொண்டிருந்த பழைய நாட்களில் மார்க் கெமிலஸ் என் படிப்பிலே அதிக அக்கறையெடுத்து நிறைய உதவிகள் செய்து கொண்டிருந்தான். அவனுடைய இந்த அபரிமித ஆர்வத்தினால் அவனையும் என்னையும் வைத்து நண்பர்களுக்குள் ஒரு கேலிப்பேச்சுக் கூட வளர்ந்திருந்தது. பரீட்சையின் பின்னர் தனது நண்பனொருவனின் கம்ப்யூட்டர் நிறுவனமொன்றிலே இலவசமாகப் பயிற்சி பெறும் ஏற்பாட்டையும் ஆங்கிலம் படிப்பதற்குரிய ஒழுங்கையும் அவனாகவே முன்வந்து வழங்கினான். இப்படியாக இருவருக்குமிடையே ஒரு நன்றி கலந்த நட்புணர்வு வளர்ந்திருந்தது.


நான் ஏஎல் பரீட்சை எழுதவேண்டிய நேரத்தில்தான் மார்க் கெமிலஸுக்கு ஒரு நல்ல வாய்ப்பு ஒன்று கிடைத்தது. ஆம், கிழக்கிலே நடந்த மாகாணசபைத் தேர்தலையடுத்து விளையாட்டுத்துறை அமைச்சராகிய முஸ்லீம் அரசியல்வாதி ஒருவருக்கு அந்தரங்கச் செயலாளராக அவன் நியமிக்கப்பட்டு எங்கள் பாடசாலையிலிருந்து தற்காலிகமாக விலகிச் சென்றுவிட்டான். அதற்கிடையிலே ஒருவாறு உயர்தரப்பரீட்சையும் எழுதி முடிவும் வெளியாகியிருந்தது.


பிஸிகல் ஸயன்ஸ் கிடைக்கும் வாய்ப்புள்ள பெறுபேறு வந்திருந்த காரணத்தால் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கெம்பஸ் போவதா அல்லது வேலையொன்றுக்காக முயல்வதா என்பதைத் தீர்மானிப்பதற்காக் காத்திருந்த வேளையில்தான் மீண்டும் எனக்குள் மீண்டும் சில வேறுபாடுகள் தலைதூக்கின. இம்முறை அவற்றின் தாக்கம் உக்கிரமாக இருந்ததால் அலட்சியம் செய்யமுடியவில்லை. ஒருநிலையில் வேறு ஒருவரின் உடலில் நான் இருப்பதைப் போலவும் சிலவேளைகளிலே எனக்குள்ளேயே வேறு ஒருவர் இருப்பது போலவும் சிக்கலான உள்ளுணர்வுகள் என்னை வாட்டியது. ஆனால் அவற்றை யாரிடமும் கூறவும் முடியவில்லை. அதற்கு ஒரு காரணமும் இருந்தது.


எனக்கென்று நெருக்கமாகப் பழகக்கூடிய நட்புவட்டத்தை நான் பெற்றிருக்காத காரணத்தாலும் வெட்கத்தினாலும் எனக்குள் நடந்து கொண்டிருந்த உடல் மற்றும் உள்ளுணர்வு மாற்றங்களையும் யாரிடமும் கூறமுடியாது போய்விட்டது. முன்பு போல கடினமான விளையாட்டுகளிலே ஈடுபட முடியவில்லை. வீதிக்குப் போவதற்குக்கூட யாராவது துணைக்கு வரவேண்டும் போலிருந்தது. யாரைப் பார்த்தாலும் எனக்கு ஆபத்தை விளைவித்து விடுவார்களோ என்ற இனம்புரியாத அச்சமும் தோன்றியது. கடைவீதிகளுக்குப் போய் பொருட்களை வாங்கி வரும் வேலைகளுக்குப் பதிலாக வீட்டுவேலைகளை இழுத்துப்போட்டுக்கொண்டு செய்வதற்கே ஆர்வமாக இருந்தது. என்னைத் தேடி யாராவது வந்தால்கூட ஒளிய ஆரம்பிக்கலானேன். வீட்டின் வரவேற்பறையிலிருப்பதைவிட கூடிய நேரங்களிலே சமையலறையிலும் பின்கட்டுகளிலுமே இருக்கலானேன். புட்போல், கிரிக்கட், கார் பந்தயம் போன்ற உற்சாகமான விளையாட்டு நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்ததுபோய்  பெண்கள் அழுதுவடியும் தொலைக்காட்சி நெடுந்தொடர்களை இரசித்துப் பார்க்க ஆரம்பித்துவிட்டேன்.

 



 
கார் சாம்பல் தீவு பாலத்தை தாண்டிக் கொண்டிருந்தது.

சற்றுத் தூரத்தில் புதிதாகக் கட்டப்பட்டுக்கொண்டிருந்த விஷ்ணு கோயிலின் பிரமாண்டமான கோபுரம் நீலவானின் பின்னணியிலே மிகவும் எடுப்பாகத் தெரிந்துகொண்டிருந்தது.


'அதுசரி, உங்க வீட்ல என்னடா சொல்றாங்க? இப்ப உன்னோட எல்லாரும் எப்படி இருக்கிறாங்க? இல்ல முன்ன மாதிரித்தான் இப்பவும் நீ தனியாத்தான் திரியுறியா?'


எனக்குச் சட்டென கண்களிலே நீர் துளிர்த்தது. அவனிடம் மறைப்பதற்கு முயன்றபோதும் கண்டுவிட்டான். ஸ்டியரிங்கை ஒருகையில் பிடித்துக் கொண்டு டேஷ்போர்டிலிருந்த டிஷ்யூவைக் கிழித்து நீட்டினான்.


'சரி, பதில் சொல்லணுமென்று கட்டாயமில்லை. ஷேல் வீ சேன்ஜ் த டொப்பிக்?'


'இல்ல.. அதையே பேசலாம். அதுக்குத்தானே இப்பவே வந்தேன்..! மார்க், கொஞ்சம் நிப்பாட்டுங்க,  இந்த கோயிலை ஒருக்கா இறங்கிப் பார்த்திட்டுப் போகலாம்' 


அவன் என்னை வியப்பாய் பார்த்தபடியே காரின் வேகத்தைக் குறைத்து இடதுபுறமாய் ஓரங்கட்டினான். அது ஒரு புதிதாகக் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் பிரதிஷ்டை செய்யப்படாத கோயில் என்பதால்  பல ஏக்கர் பரப்பளவிலுள்ள அதன் வளாகம் ஆட்களேயில்லாமல் வெறிச்சோடிக்கிடந்தது. வாசலிலே நின்றபடியே செருப்பைக் கழற்றிவிட்டு கண்ணைமூடிக் கையெடுத்துக் கும்பிட்டேன்.


'உனக்கிருக்கிற பிரச்சினைக்கு இந்தக் தனிக்கோயில் ஒற்றைச்சாமியெல்லாம்  போதாது. மொத்த சாமியையும் க்ளஸ்டர் மீட்டிங் கொன்பரன்ஸ் போட்டுத்தான் கும்பிடணும்'


'இங்க, இந்த நக்கல்தானே கூடாது. வேணும்டா உங்க மேரி மாதாவையும் கும்பிடுறன் போதுமா?'

'ஐயோ, நானே கும்பிடுறது கிடையாது. ஆனா பாவம் மாதா. உன்னால அவ நிம்மதியும் கெட்டுறப்போகுது'

'சரி ஜோக்ஸ் இருக்கட்டும். பீ ஸீரியஸ் மார்க்! இப்ப என்னதான் நான் செய்ய?'


'இப்பவா? வா முதல்ல கோயிலைச் சுற்றிப்பார்ப்போம்!' என்றவாறு என்னைக் கையிலே பிடித்தபடி நடக்கத் தொடங்கினான்.
.



ரசியல்வாதிக்கு பீஏவாக ஆகிவிட்டதால் அந்த நாட்களிலே மார்க் கெமிலஸால் முன்பு போல அடிக்கடி என்னைக் காணவரமுடியாமலிருந்தது. எப்போது பார்த்தாலும் மீட்டிங்குகள், பயணங்கள், திறப்பு விழாக்கள் என்று அவன்  வீட்டுப்பக்கம் வருவதே கிடையாது. அப்படியே வந்தாலும் குறைந்தபட்சம் ஆறுபேராவது புடைசூழ ஒரு சிற்றரசன் போலத்தான் வருவான். எதிரேயுள்ள மனிதர்களோடு பேசுவதைவிட செல்போனுடன் அவன் பேசுவதுதான் அதிகம்.


அவனது செல்போனும் கூட, 'நீங்கள் அழைக்கும் நபர் தற்போது வேறு ஒரு அழைப்பிலிருக்கின்றார்' எனும் பதிவுசெய்யப்பட்ட வாசகத்தைச் சொல்லும் கிளிப்பிள்ளையாகிப்போனது. இதனால் எனது பிரச்சினைகளை அவனிடம் கூட உடனடியாகச் சொல்ல முடியாது போனது. மனதிற்குள்ளேயே குமைந்து குமைந்து தற்கொலை செய்துவிடலாமா என்றுகூட நினைத்தேன்.


ஆனால் மார்க் கெமிலஸ் என்னைப் படிப்பிலும் விளையாட்டிலும் உருவாக்கிப் பார்க்க வேண்டும் என்ற பேராவலுடன் இருந்த காரணத்தால் அதற்கும் கூட அவன்தான் ஒருவகையிலே தடையாக இருந்தான். ஆனாலும் ஒருகட்டத்திலே என்னால் தாங்கவே முடியவில்லை. எப்படியோ இடைவிடாமல் முயன்று மார்க் கெமிலஸை வரவழைத்து தனிமையிலே சந்தித்துவிட்டேன்.  என்னுடைய அத்தiனை பிரச்சினைகளையும் ஒன்றும் விடாமல் அவனிடம் சொல்லி அழுது தீர்த்துவிட்டேன். அதையெல்லாம் கேட்டவன் அப்படியே ஆடிப்போய் விட்டான். அன்று எதுவுமே பேசமுடியாமல் சில நிமிஷங்கள் கல்லாய்ச் சமைந்து நின்றது மட்டும்தான் அதன் பிறகு அவன் ஓய்விலிருந்து நான் பார்த்த ஒரே சந்தர்ப்பம்.


அதன்பிறகு நடந்தவற்றையெல்லாம் நான் உங்களுக்கு சொல்லிப் புரியவைப்பதென்றால்  தமிழ்மொழியிலுள்ள வார்த்தைகளெல்லாம் நிச்சயம் தமது சக்திக்கு மீறி உழைத்தாக வேண்டியிருக்கும்.
ஆம். எனது பிரச்சிiனையைத் தெரிந்த கொண்ட பிறகு மார்க் ஒரு மணிநேரம் கூட என்னைத் தனிமையில் விடவில்லை. தனது அரசியல்வாதியிடம் பொருத்தமான பொய்கூறி தனது பொறுப்புகளையெல்லாம் மிகப்பெரும் பிரயத்தனத்துக்கு மத்தியில் தற்காலிகமாக வேறுசிலரிடம் ஒப்படைத்துவிட்டு என்னுடனேயே இருந்தான். முதலில் என்மீது எனக்கு வெறுப்பு ஏற்பட்டுவிடாதபடி பார்த்துக் கொண்டான். இதற்காக அவன் மணிக்கணக்கில் தன் நேரத்தைச் செலவழிக்கவேண்டியிருந்தது. இதனால் எனது வீட்டாருக்குக் கூட அவனது என்னுடனான நடத்தை தொடர்பாக இலேசான சந்தேகம் உண்டானது. அதையெல்லாம் பொறுத்துக் கொண்டு பம்பரமாய் இயங்கினான். தனக்கு மிகவும் நம்பிக்கையானவரான திறமை வாய்ந்த ஒரு பெண் வைத்தியரிடம் என்னை அழைத்துச் சென்று காண்பித்து எனது நிலைமைகள் தொடர்பாகப் விரிவாகக்  கேட்டறிந்தான்.


பின்பு அந்த டாக்டரின் ஆலோசனைப்படி என் பெற்றோர்களிடமும் சகோதரிகளோடும் தனித்தனியாகப் பேசினான்.   அதிர்ச்சியடைந்த அவர்கள் அடுத்த கணமே என்னைத் தோஷம் கழிப்பது, தெய்வக்குற்றம் போக்குவது என்று பேசத் தொடங்கிவிட்டார்கள். தீவிரமான மூடநம்பிக்கைகளிலும் சிறுதெய்வ வழிபாடுகளிலும் ஊறிப்போனவர்களான எனது குடும்பத்தினருக்கு மார்க் கெமிலஸின் அக்கறை புரிந்த அளவுக்கு எனது பிரச்சினைக்குரிய மருத்துவத் தீர்வு புரியவில்லை. 



இனிமேல் எனது குடும்பத்தினரோடு போராடுவதிலே பலனில்லை என்று புரிந்துவிட்டதால் என்னுடைய உறுதியான முடிவுக்காக காத்திருந்து நான் சம்மதித்ததும் எனது உறவுகளின் விருப்பமின்மைக்கு மத்தியில் திடீர் நடவடிக்கையிலே இறங்கினான் அவன். இதனால் எங்கள் உறவுகளிடம் நிறைய வீண்பழி கேட்டான். வேறுவழியில்லாத நிலையிலே மிரட்டியும் பார்த்தான். எதுவுமே கைகொடுக்காத நிலையில் கடைசியில் தனது அரசியல்வாதியின் செல்வாக்கை மறைமுகமாகப் பயன்படுத்தி கொழும்புவரை என்னை ஏறத்தாழக் கடத்திச் சென்று மருத்துவ ரீதியாகக் கைகொடுத்தவன்தான் இந்த மார்க் கெமிலஸ் என்ற எனது முன்னாள் ஆசிரியன்.

இத்தனை களேபரங்கள் நடந்தும் கூட என்னுடைய பிரச்சினையை தங்களது குடும்பத்திற்கேற்பட்ட ஓர் அவமானச் சாபமாக எங்கள் வீட்டார்கள் கருதியதால்  எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் அவற்றையெல்லாம் அடுத்த வீட்டுக்குக்கூடத் தெரியாமல் இரகசியமாக வைத்திருக்கவே நினைத்தார்கள்.  நடுத்தர வர்க்கத்துக் குடும்பங்களுக்கேயுரிய அந்த எழுதாச்சட்டம் மட்டும் இல்லாதிருந்தால் நானும் மார்க் கமிலஸும் நடாத்திய மருத்துவப் போராட்டங்களெல்லாம் பாதிவழியிலேயே பிசுபிசுத்துப்போயிருக்கும்.

கடைசியில் சில இலட்சங்களை ஏப்பமிட்டதும் சிக்கல் வாய்ந்ததுமான சத்திரசிகிச்சைகளுக்கு நான் உள்ளாகினேன். அதன் பின்னர் வெகுவிரைவிலேயே என்னால் உடலளவிலே அதிக சிரமமின்றி புதிய ஒரு வாழ்வுக்கு மாறிவிட முடிந்தது பெரும் அதிஷ்டமே. இயல்பிலேயே அழகானதும் நளினமானதுமான தோற்றமுடையதாக எனது உடல் இருந்ததும் அதற்குரிய முக்கிய காரணங்களிலே ஒன்று. ஆயினும் உறவுகளின் கேள்விகளுக்கும் சமூகத்தின் ஏளனப்பார்வைகளுக்கும் முகம் கொடுப்பதுதான் எனக்கு மிகப்பெரும் சவாலாக இருந்தது. இன்னும் இருந்தும் வருகின்றது.

இன்றைய உலகிலே என்னைப் போன்றவர்களாலும் அதிக சிரமமின்றி வாழமுடியும் என்பதற்கு என்னையே எனக்கு உதாரணமாக்கிக் காட்டியவன் மார்க் கெமிலஸ். எனது இரத்த உறவுகளே என்னை ஒருவித அசூயையுடன் பார்த்து ஒதுங்கிப்போகும் நிலையிலே எனக்கென்று எதுவித வாழ்க்கை நோக்குகளுமின்றிய வெட்டவெளியான இன்றைய நிலையிலும் மார்க் கெமிலஸுடனான அந்த நட்புறவு இன்னும் தொடர்ந்து வருகின்றது.




'ம்,  சொல்லுங்க மார்க்ஸ். இப்ப நான் என்ன செய்யறது. பிறந்ததிலிருந்து நான் வைத்திருந்த என்னுடைய பேர் விபரமெல்லாம் இப்ப நான் மாத்தணுமா என்ன?'

'அதுதான்டா எனக்கும் விளங்குதில்ல. நான் எனக்குத் தெரிஞ்சவங்ககிட்டயெல்லாம் கேட்டுப் பாத்திட்டன். பெயரை தனூஷா என்று மாற்றி பேர்த் ஸேட்டிபிகேட்டில் விபரங்களை புதுசா எழுதி திரும்பவும் பதிவு செய்ய வேணும் என்ற ஒரு விசயத்தைத் தவிர இது சம்பந்தமா எதுவும் தெரியல்ல! ஆனாலும் உனக்காக சில விசயங்களை  கொடுக்க வேண்டியதைக் கொடுத்து ஏற்கனவே நான் மாற்றித்தான் வச்சிருக்கிறேன்டா'
'நம்ம நாட்டுல இதுவிசயமா எதுவும் கேட்கிறதுக்கே பயமாயிருக்கு.  அதுக்காக எல்லாவற்றைமே மறைச்சுக்கொண்டு  மனசுக்குள்ளேயே குமைஞ்சு கொண்டும் என்னால் வாழமுடியாது.'

'ஒண்ணு செய்வோமா? இந்தத் திருட்டுப் பயணத்தை இப்படியே நிப்பாட்டிடுவோம். ஒரு மாதத்தில முறைப்படி பாஸ்போட் வீசா எல்லாம் எடுத்துத் தாறேன். இந்த நாட்டைவிட்டு சுவிஸ் கனடா என்று எங்காவது வெளிநாட்டுக்கு நீ மட்டும் போயிட்டு உன்ட படிப்பைப் முடிச்சிட்டுத் திரும்பி வா.  அந்த நாடுகள்ல மெடிகல் வசதியும் நல்லாருக்கும் அங்கேயே உன்ட படிப்பையும் தொடரலாம்..  தனியாக உன்னை நீயே சமாளிச்சுக்கிறது அங்க சுலபம்.  இதெல்லாம் அங்க சகஜமாகிப் பலவருஷங்களாகிட்டுது'

'இதுக்காக ஒருமாதம் காத்திருக்கணுமா நான்? இங்க உள்ள உறவுகளைச் சகிக்க முடியாமத்தானே வந்தேன். தவிர, நான் மட்டும் வெளிநாட்டுக்குப்  போகணுமா? கொழும்புக்கு ஒபரேஷனுக்கு கூட்டிக் கொண்டு போனதுக்கே உங்களுக்கு அவ்வளவு பிரச்சினை போட்டவங்க என்னோட அக்காமார். என்னை நீங்க தனியாக வெளிநாட்டுக்கு அனுப்புறதைக் கேள்விப்பட்டா உங்களை என்ன பண்ணுவாங்க தெரியுமா? அப்படியெண்டாலும்  நீங்களும்தான் வரணும்?'

'உனக்காக எங்கேயும் வருவேன். ஆனா ஏனோ எனக்கு இங்க நம்ம நாட்டுல இருக்கிறதுதான் விருப்பம்டா.'
'அது உண்மைதான் மார்க், அதுவுமில்லாம எங்க போனாலும் நம்ம சனங்களோட வாழறதுலதானே சந்தோசமிருக்கு'

'ஆனா நம்ம சனங்கள்தானேடா இதையெல்லாம் ஏதோ பேய் பலாப்பழத்தைப் பார்க்கிற மாதிரி பார்க்குது?'
'நம்ம சனங்களும் வேணும். ஆனா அதுகளோட இந்த சின்னப்புத்தியையும் சகிச்சுக் கொள்ளணும். என்னதான்டா பண்றது... என்னைப் பெத்தவங்களே இப்பிடியிருக்கிறாங்க.. மற்றவங்களை குறைசொல்ல முடியுமா? எனக்கு ஒருநேரம் செத்துடலாமா என்றுகூட இருக்கு!'

'ஹேய்.. டோண்ட் டேக் திஸ் மச் ஸீரியஸ். இவ்வளவு படிச்சிருக்கிறவள் நீயே இப்பிடி யோசிக்கலாமா. கோபம் வந்தால் யாரையாவது கொல்லணும் போல இருக்கு என்டு சொல்லு. ஐ மே அண்டர்ஸடேண்ட். பட் உன்னை நீயே அழிச்சிக்கிறதெல்லாம்.. டூ மச்டா!'

'ஐ'ம் ஸொறி. உங்களாலதான் எதையுமே செய்ய முடியாம இருக்கிறேன். இப்படிப் பேசிப்பேசியே என்னைக் கவுத்திட்டடா நீ!' என்று அவன் தலையிலே செல்லக் குட்டு ஒன்று வைத்தேன்.

'என்ன 'நீங்க உங்க' எல்லாம் போய் கடைசில 'டா' வந்;திட்டுது போல!' என்று கிசுகிசுத்தவாறு என் இடையில் கைபோட்டு வளைத்து அணைத்துக் கொண்டான். யாரும் பார்த்து விடுவார்களோ என்று கூச்சமாக இருந்தாலும் அவனது செய்கையை உள்ளுக்குள் விரும்பினேன். என்னைத் தன் மார்போடு அணைத்து முத்தமிட மாட்டானா என்று மனம் ஏங்கியது. என்னை வெட்கம் பிடுங்கித் தின்றது. திடீரென என்ன நினைத்தானோ தெரியவில்லை. முகத்தை நெருங்கி வந்துவிட்டு ஏனோ அதற்குமேல் முன்னேறாமல் என்னை விடுவித்துவிட்டான்.

இருவரும் அருகிலிருந்த ஒரு வேப்பமரத்தின் கீழிருந்த சிமென்ட் பெஞ்சில் உட்கார்ந்தோம்.
போன மாதத்தை விட வெட்கத்தின் அளவு கூடியிருப்பதை தெளிவாக உணர்ந்தேன். அப்படியானால் சிகிச்சை பலனளிக்கத் தொடங்கிவிட்டது என்றுதானே அர்த்தம். இதையும் அவனிடம் கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

'என்ன மகாராணிக்கு என்ன முகமெல்லாம் இப்படிச் சிவந்திருக்கு? அதுசரி இப்ப உனக்கு எல்லாம் ஓகேவா? ஏதாவது கொம்ப்ளய்ண்ட் இருக்கா. நேற்றுகூட நம்ம ஸர்ஜன் கோல் எடுத்து விசாரிச்சாருடா. இதுவரைக்கும் எத்தனையோ பேருக்கு ப்ளாஸ்டிக் ஸர்ஜரி செய்திருந்தாலும் உனக்காகச் செய்ததுதான் அவருக்கு மனநிறைவு தந்த விடயமாம் என்றெல்லாம் சொல்லிட்டிருந்தார். பாவம் நல்ல மனிசன்.'
'அதனாலதானே அவரோட பேர்சனல் ஃபீஸ் கூட வேணாம்;டாரு. ஹொஸ்பிடல் சார்ஜ் மட்டுந்தானே. நல்லாருக்கணும் அந்த டொக்டர். நீங்களும் பாவம். எனக்காக எவ்வளவு காசு உங்க பொஸ்ஸுக்கிட்ட கடனா வாங்கி வாங்கிச் செலவழிச்சிட்டீங்க. அந்த அழகான பைக்கைக் கூட வித்திட்டீங்க.'

'அதுதான் இப்ப அவரோட புதுக்கார் இருக்கே. இன்றைக்கு இரவு 11 மணி வரைக்கும் இது நம்ம கார்தான்...?'

'ஆ! அப்ப சாமத்துலயா நம்ம போட்ல போகிற பயணம்? எனக்கேலாப்பா கடல்ல குளிர் நடுங்கும். கடைசில பாருங்க அங்க போய்ச் சேர்றதுக்குள்ள நான் குளிர்ல செத்தே போயிடுவேன். நீங்க இருந்து அழப்போறீங்க. ஏன் பகல்ல போனா என்னவாம்?' என்று சிணுங்கினேன்.

'ஆங், போகலாம்! உன் மச்சான்மார் நேவிக்காரன் இருக்கிறானே? வெத்திலை பாக்கு வச்சு வந்து கூட்டிட்டுப் போவான். பிறகு நீயும் நானும் முக்காடு போட்டுட்டுப்போய் ட்ரிங்கோ ஜெற்றியில இறங்கிறதை டீவியில காட்டுவான் பரவாயில்லயா? ப்ளெங்கட் ஸ்வெட்டர் க்ளவ்ஸ் எல்லாம் இருக்கு..  அதெல்லாம் ஒண்ணும் சாக மாட்டாய் நீ. எல்லாம் என்னோட பொஸ் தந்தது!'

'சரி வாங்க போகலாம்.' என்று எழுந்து காரை நோக்கி நடந்தேன்.

'தனூஷா! கொஞ்சம் நில்லு! உனக்கு இப்ப எல்லாம் நோர்மலா இருக்குதா? எப்படியும் ஹோர்மோன்ஸ் ஸ்டிமியுலேஷன் ஸ்கேனிங் பார்க்க நாம ஒரு தடவை கொழும்புக்கு போய் வந்திருக்கத்தான் வேணும்டா. சே! அதுக்குள்ள இந்தப் பிரயாணம் ஓக்கேயாயிடுச்சு பாரு.'

'அதெல்லாம் ஓக்கே. பீரியட்ஸ் கூட ரெகுலராயிட்டுது. எல்லாம் சரியாகி வந்துதான் என்ன? எங்க வீட்டு ஆக்களே முதல்ல என்ட பிரச்சினையைப் புரிஞ்சிக் கொள்றாங்கல்லயே. நீங்க அம்மாக்கிட்ட சொல்லி விளங்கப்படுத்தினதாலதான் ஓரளவு என்டாலும் ஒத்துக்கிட்டாங்க. என்டாலும் என்ட சகோதரங்கள் மற்ற உறவுகளெல்லாம் என்னை ஒரு பெண்பிள்ளை என்றே நினைக்கிறதில்ல. அவங்க என்னை உறவு என்று சொல்லிக்கொள்றதுக்கே விரும்புறாங்க இல்ல மார்க்.'

'..........'

'கோயிலுக்குப் போறதுக்கென்று எல்லாரும் வெளிக்கிடுவாங்க. நானும் வெளிக்கிட்டவுடனே சட்டென்று எல்லாரும் போகாம நின்றிடுவாங்க. ஒரு விசேஷத்துக்குக் கூட என்னை வீட்டுல விட்டுட்டு ரகசியமாக போயிடுவாங்க தெரியுமா? இத்தனைக்கும் என் குடும்பத்தில உள்ளவங்க யாரையும் விட நான் அழகிலயும் நிறத்திலயும் வடிவாத்தானே இருக்கிறேன்? பிறகு ஏன் எனக்கு இப்படியெல்லாம் செய்யிறாங்க. எனக்கு எப்படியிருக்கும் யோசிச்சுப் பாருங்க. இன்றைக்குக் கூட கோயிலுக்குத் தனியாகத்தான் வந்தேன்.'

 'சரி, அவங்கட கதையெல்லாம் விடு. இனி உன்னால அடுத்தவங்க துணையில்லாமலே சுதந்திரமா வாழ இயலும். கையில உன்னோட படிப்புக்குரிய சேர்ட்டிபிக்கட்ஸ் எல்லாம் பக்காவா இங்லீஷ்ல ட்ரான்ஸ்லேட் செய்து ரெடியா வச்சிருக்கேன். அங்க போய் சேர்ந்து செட்டிலானதும் படிக்கலாம். பிறகென்ன நல்ல வேலை கிடைக்கும். இப்பிடி இடையிலே சோர்ந்து போயிட்டியென்டா இத்தனை நாள் நீ பட்ட கஷ்டத்திற்கும்  நானெடுத்த முயற்சிக்கும் பலனில்லாமப் போயிடும்.'

'சரி, நம்ம போட் அங்க போய்ச்சேர எத்தனை நாளாகும் மார்க்?'

'ஒரு பத்து பதினைஞ்சு நாளாகலாம். ஆனா கடல் நிலைமைகளைச் சொல்ல இயலாதுடா'

'சரி மார்க், இனி உங்களை நான் டிஸ்கரேஜ் பண்ண மாட்டேன். சரி, எனக்குத் தூக்கம் வருது.' என்றபடி நான் அவனது தோளிலே சாய்ந்ததும் காரை ஓட்டிக்கொண்டே இடது கையால் என்னை அணைத்துக் கொண்டான் மார்க்.

கடற்கரைக் காற்று இதமாய் வீசிக்கொண்டிருக்க கார் நிலாவெளியை நோக்கி தொடர்ந்து ஓடிக்கொண்டேயிருந்தது.


 
 
ரு குளிர்நிறைந்த அக்டோபர் மாதத்தின் அதிகாலையில் திடீரென வெளிச்சமும் சப்தங்களும் உறுத்த நான் கண்விழித்தபோது, நிலாவெளிக் கடற்கரையிலிருந்து ஆண்களும் பெண்களும் குழந்தை குட்டிகளுமாய் எழுபத்தைந்து பேருடன்  புறப்பட்டு பதினொரு நாட்கள் கடினமானதொரு நெடும்பயணம் செய்து வந்த எங்கள் படகைச்சூழ நீலநிற கப்பற்படைச் சீருடையும் கறுப்புநிற கூலிங் க்ளாஸ்களும் அணிந்த வெள்ளைக்கார கடற்படை மாலுமிகள் ஆங்கிலத்திலே இரைச்சலாய்ப் பேசிக்கொண்டு நின்றிருந்தார்கள்.

 "Ok Guys! You are saved. Now, you all have to get-down from your boat for the initial Medical Checking before entering  the Christmas Island!" 


கரையிலிருந்து எங்களைத் தங்களது கப்பற்படைப் படகுக்குள் இறங்குமாறு மெகா போனில் அறிவித்துக் கொண்டிருக்க படகிலே எங்களோடு வந்த மக்களெல்லாம்  அந்த வெள்ளைக்காரர்களின் நேவிப்படகுக்குள்ளே இறங்குவதற்காக தங்களது மூட்டை முடிச்சுகளுடன் முண்டியடித்துக் கொண்டிருந்தார்கள்.

இத்தனை நாளும் அத்தனைபேரும் முடங்கிக் கிடந்து பயணம்புரிந்த அந்தப் பெரிய மீன்பிடிப்படகின் இருளான உள்ளறையிலிருந்து நானும் மேலேறி வந்தபோது இத்தனை ஆரவாரங்களுக்கு மத்தியிலும் படகின் மேல்தளத்திலே ஓர் ஓரமாய் குளிரிலே இன்னும் உறங்கிக் கொண்டிருக்கும் மார்க் கெமிலஸைப் பார்த்தேன். 'எப்படி இவ்வளவு இரைச்சலுக்கும் இடையிலும் இந்தக் குறும்புக்காரன் இன்னும் வேண்டுமென்றே தூங்கிக் கொண்டிருக்கின்றான்' என்ற கோபத்திலே அவனை எழுப்புவதற்காக நான் தொட்டுப்பார்த்தபோது..

அவன் உடம்பு ஐஸ்கட்டியாய் விறைத்துச் சில்லிட்டுப்போயிருந்தது.




-மூதூர் மொகமட் ராபி
(2012.11.13)