Thursday, April 11, 2013

முதல் மனிதன் விண்வெளிப்பயணம் - 50 ஆண்டுகள்



 


 

 

யூரி
ககாரின்
 
 
சோவியத் விண்வெளி வீரர் யூரி ககாரின் வோஸ்டாக் I விண்கலத்தில் உயரே பறந்து உலகைச் சுற்றிவந்து 108 நிமிடங்கள் பாதுகாப்புடன் பயணம் செய்து பூமிக்கு மிண்டும் திரும்பிய முதன் மனித விண்வெளிப் பயணத்தின் 50வது ஆண்டு நிறைவை ஏப்ரல் 12 குறிக்கிறது.
 
சோவியத் ஒன்றியத்திற்கும் அமெரிக்காவிற்கும் இடையே பனிப்போர்ப் போட்டி நடக்கையில், “விண்வெளிப் போட்டிஅன்று அழைக்கப்பட்டதின் உச்சக்கட்டத்தில் ககாரினின் பணி நடந்தது; இது அக்டோபர் 1957ல் முதலில் பூமியைச் சுற்றிய விண்வெளிக்கலமான ஸ்புட்நிக்கை வெற்றிகரமாக அனுப்பிய முதல் பெரும் சோவியத் விண்வெளி வெற்றியில் தொடங்கியது.
 
பல சோவியத் விண்வெளிமுதல்முதலான சாதனைகளில்ஸ்புட்நிக் ஒன்றுதான். இதற்கு முதலில் வான்வெளிக்கு ஒரு உயிருள்ள விலங்கான லைக்கா என்னும் நாய் அனுப்பப்பட்டது, ககாரின் முதல் மனிதன், பூமியை ஒரே நேரத்தில் இரு விண்கலங்கள் சுற்றிவரும் இணைந்த விண்வெளி முயற்சி, இரு மனிதர்கள் முதன் முதலாக ஒன்றாக விண்வெளியில் பறந்தது, விண்வெளியின் முதல் பெண்ணாக வாலென்டினா டெர்ஷ்கோவா பறந்து சென்றது, முதல் முதலில் விண்வெளிவீரர் அலெக்சி லியோநோவ் விண்வெளியில் நடந்து ஆகியவை நிகழ்ந்தன.
 
சோவியத் விண்வெளித் திட்டத்தின் ஆரம்ப வெற்றிகள் அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எப். கென்னடியை பெரும் செல்வம் படைத்த, மிகச் சக்தி வாய்ந்த முதலாளித்துவ நாட்டை ஒரு தசாப்தத்திற்குள் ஒரு மனிதனை சந்திரனுக்குள் இறக்க வேண்டும் என்ற ஆக்கிரோஷ முயற்சிக்கு உறுதிப்பாடு கொடுக்க வைத்தது. ககாரினின் வெற்றிகரமான பணி அவரை உலகெங்கிலும் ஒரு மாபெரும் வீரராக ஆக்கியதற்கு ஒரு மாதம் கடந்த பின்னர் கென்னடி அத்தகைய உறுதிமொழியைக் கொடுத்திருந்தார்.
 
மத்திய ஆசியாவில் ஸ்டார் சிட்டியின் சோவியத் விண்தளத்தில் இருந்து ககாரின் புறப்பட்டுச் சென்ற வோஸ்டோக் I, பிந்திய தரங்களின் கண்ணோட்டத்தில் ஒரு சிறிய, தொழில்நுட்பத்தில் அதிக வளர்ச்சி அடையாத ஒரு கருவி ஆகும். முழு விண்கலமுமே 10,000 பவுண்டுகளுக்கும் குறைவான எடையைக் கொண்டிருந்தது; 15 அடி நீளத்தில் ஒரு கூம்பு வடிவில், 6 அடி விட்டத்தையே கொண்டிருந்தது. ககாரின் 5’ 2” உயரம்தான் இருந்தார், அவருடைய சிறிய உடலமைப்பு விண்பயணத்திற்கு ஒரு முக்கியத் தகுதியாக இருந்தது.
 
 
விண்வெளிவீரரும் பயணத்தில் முற்றிலும் வெறும் பயணியாகத்தான் இருந்தார்; கட்டுப்பாடுகள் எதையும் அவர் கொண்டிருக்கவில்லை; அவை அனைத்தும் தரையில் இருந்து தொலை இயக்குமுறையில் செயல்பட்டன. பின்னர் அவர் தான் விண்வெளியில் பறந்த முதல் மனிதனா அல்லது கடைசி நாயா என்பது பற்றித் தனக்கு உறுதியாகத் தெரியவில்லை என்று நகைச்சுவையுடன் கூறினார்.
 
கட்டுப்பாடுகளை அகற்றுவதற்கு ஒரு அவசரக்காலத் திறவு கோல் இருந்தது. ஆனால் முக்கிய கவலை பயணத் துவக்கத்தின் புவி ஈர்ப்புச் சக்தியால் அல்லது எடையற்ற தன்மையினால் வான்வெளியில்  ககாரின் செயல் இழந்துவிடுவாரா என்பதாக இருந்தது. அவருடைய இதயம் தொடர்ந்து இரத்தப் போக்கைச் செயல்படுத்துமா? அவருடைய கண்கள் சரியான பார்வையைக் கொண்டிருக்குமா, அல்லது அவருடைய மூளை ஒழுங்காக வேலை செய்யுமா? இதுவரை பூமியின் சூழலுக்கு அப்பால் எந்த மனிதனும் பயணித்தது இல்லை என்பதால், சூரியனின் கதிரியக்கம், காமா கதிர்களின் இயக்கம் அல்லது வேறு எந்த எதிர்பாராத ஆபத்துக்களுடைய பாதிப்பு, ஏன் ஒருவேளை அவர் மனநோய்வாய்ப்படவும் கூடும் என்ற அச்சங்கள் இருந்தன.
 




விண்வெளிவீரர் ஒன்றும் ஸ்திரமற்றவர் அல்ல. மாறாக அவருடைய மிகத்தீவிர அமைதித்தன்மை, வெளிச் செல்லும், மகிழ்ச்சியான ஆளுமை ஆகியவற்றினால்தான் அவர் நேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். பயிற்சியில் ஈடுபட்டிருந்த 19 விண்வெளி வீரர்கள் பற்றிய இரகசிய வாக்கெடுப்பு விண்வெளியின் முதல் மனிதனாக ககாரின் வேண்டும் என்பதற்கு 17 வாக்குகளைக் கொடுத்தது. விண் பயணத்திற்கு 20 நிமிடங்களுக்கு முன்பு பேழையில் அவர் கட்டப்பட்டிருந்த நிலையில் விண்வெளிக்கு சீறிப் பாய இருக்கும்போது அவருடைய நாடித்துடிப்பு சீராக ஒரு நிமிடத்திற்கு 64 தடவைதான் இருந்ததாக ஒரு குறிப்பு தெரிவிக்கிறது.
 
கடந்த வாரம்தான் ஏராளமான 1961ஆம் ஆண்டு சோவியத் சகாப்த ஆவணங்கள் இரகசியம் அற்றவை என்று ரஷ்ய அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டன. அவற்றுள் வோஸ்டோக் பணி சோகத்தில் முடிந்தால் ககாரினால் எழுதப்பட்ட தன்னுடைய குடும்பத்திற்கு அனுப்பப்பட வேண்டிய வரைவுக்கடிதமும் அடங்கியுள்ளது. இது நம்பமுடியாத ஆபத்துக்களை எதிர்கொள்ளுகையில்கூட அவருக்கு இருந்த பெரும் மன அமைதியை நிரூபிக்கிறது.
 
அக்கடிதம் பற்றி Novaya Gazeta வெளியிட்டுள்ள சுருக்கத்தில் அவர் இவ்வாறு எழுதியுள்ளார்:
 
இயந்திரத்தின்  வன்பொருள்களை (hardware)  நான் முழுமையாக நம்புகிறேன். அது தோல்வி அடையாது. ஆனால் சாதாரணமாக ஒரு மனிதனே தரையில் நடக்கும்போது தடுக்கிக் கீழே விழுந்து தன் கழுத்தை முறித்துக் கொள்ளுகிறார். எனவே ஏதேனும் விபத்து நடக்கலாம். அவ்வாறு நடந்தால்......நீங்கள் ஒன்றும் துயரத்தில் நேரத்தை வீணடிக்க வேண்டாம். வாழ்க்கை என்பது வாழ்க்கைதான்; ஒரு காரில் மோதப்படக்கூடிய ஆபத்தில் இருந்து எந்த மனிதனுக்கும் பாதுகாப்பு இல்லை.”
 
இந்த 27 வயது முன்னாள் போர்விமானி நேர்த்தியான உடல் நிலைமையில் இருந்தார். 8G எனப்படும் புவி ஈர்ப்புச் சக்தி அழுத்தங்கள் அவர் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்பதால் அப்படித்தான் இருக்க வேண்டும். இந்நிலையில் 150 இறாத்தல் எடையுடைய மனிதன் அரை டன் கனத்திற்கும் மேலாக இருப்பதாக உணர்வார். மீண்டும் பூமியின் வட்டத்தினுள் நுழையும்போது ககாரினின் முகம் நன்கு காணக்கூடிய வகையில் இறுக்கமடைந்து இருந்தது. ஆனால் அந்தச் சோதனையை அவர் கடந்து பாரசூட்டைப் பாதுகாப்பாக வெளியே தள்ளி ஐரோப்பிய ரஷ்யாவில் சரடோவிற்கு அருகே ஒரு விவசாயியின் நிலத்தில் இறங்கினார்.
 
இந்த விண்கலம் ஒரு முறைதான் பூமியைச் சுற்றி வந்திருந்தது; முதலில் கிழக்குப்புறம் சைபீரியாவைக் கடந்து, பின்னர் செங்குத்தாக முழு பசிபிக் பெருங்கடல் பகுதியையும் வட மேற்கில் இருந்து தென்கிழக்கு வரை கடந்து, தென் அமெரிக்காவை அதன் தென்மேற்குக் கண்டத்தின் கடைசி முனையில் கடந்து அதன் பின் வடகிழக்கே அட்லான்டிக் பெருங்கடலைக் கடந்து, ஆபிரிக்கா, மத்திய கிழக்கைக் கடந்து அது தொடங்கிய இடத்தில் இருந்து ஒரு சில நூறு மைல்கள் அப்பால் இறங்கியது.
 
ஒரு முக்கியமான கட்டத்தில் சோவியத்தின் தரைக் கட்டுப்பாட்டு மையத்தினர் விண்கலத்தைத் தாங்கள் இழந்துவிடுவோமோ என அஞ்சினர். வோஸ்டோக் பூமியின் சுற்றினை மீண்டும் அடைந்தபோது, இறங்கும் பகுதியை பயணித்த பகுதியுடன் பிணைத்திருந்த மின்னிணைப்புக் கம்பிகள் தனியாகப் பிரியவில்லை. விண்கலம் மிகப் பெரிய அளவில் அதிர்விற்கு உட்பட்டது; பின்னர் மறுபடியும் நுழைவதில் விளைந்த பெரும் உஷ்ணத்தில் மின்னிணைப்புக் கம்பிகள் எரிந்து போயின. எதிர்பார்ரத்தபடி வோஸ்டோக்கின் இரு பகுதிகள் தனித்தனியே விலகின; பயணித்த பிரிவு எரிந்து, இறங்கும்  பிரிவு பூமியை நோக்கிப் பாயத் தொடங்கியது; அதன் 400 கிலோகிராம் வெப்பப் பாதுகாப்பு அதற்குப் போதுமான பாதுகாப்பைக் கொடுத்தது. இறுதி இறங்குதலுக்கு ககாரின் வெளிப்பட்டபோது, விண்வெளி வீரரும், வோஸ்டோக்கும் வெற்றிகரமாக பாரச்சூட் முறையில் இறங்கின.
 
ககாரின் மற்றும் அவருடைய வெற்றிகரமான பணியும் சோவியத் ஒன்றியத்தின் சிக்கல்கள் நிறைந்த பெரும் சோக வரலாற்றின் விளைவுகள் ஆகும். ககாரினுடைய பெற்றோர்கள் ஐரோப்பிய ரஷ்யாவின் மேற்குப் புற எல்லையில் உள்ள ஸ்மொலென்ஸ்க் ஒப்ஸ்லாஸ்ட் பகுதியில் க்ளுஷினோ கிராமத்தில் வசித்து வந்தனர். அவருடைய தந்தை ஒரு பயிற்சி பெற்ற தொழிலாளி, தச்சு வேலை பார்ப்பவர்; அவருடைய தாயார் பால் பண்ணை மாடுகளைப் பராமரித்து வந்தார். ககாரின் மார்ச் 9, 1934ல் கட்டாய கூட்டு விவசாய முறைப் பிரச்சாரரத்தை ஸ்ராலின் ஆக்கிரோஷமாக நடத்தி முடிந்த காலத்தில் பிறந்தார்.
 
ஸ்மோலென்ஸ்க் இரண்டாம் உலகப் போர்க்காலத்தில் நாஜிக்களால் கைப்பற்றப்பட்டு, ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. ககாரினுடைய குடும்பத்தினர் அவர்களுடைய வீட்டில் இருந்து ஒரு ஜேர்மனிய அதிகாரியால் வெளியேற்றப்பட்டிருந்தனர். அவர்கள் ஒரு மண் குடிசை ஒன்றைக் கட்டிக் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் அதில் வசித்து வந்தனர். ககாரினுடன் பிறந்த இரு மூத்தவர்கள் நாஜி ஜேர்மனிக்கு 1943ல் அடிமைத் தொழிலாளிகளாக நாடுகடத்தப்பட்டிருந்தனர். ஆனால் மூன்றாம் குடியரசு அழிக்கப்பட்டபின் தப்பிப் பிழைத்துத் தாயகம் திரும்பினர்
 

 
 
போர் முடிந்தபின் வந்த தசாப்தத்தில் ககாரின் விமானங்களை ஓட்டுவதில் முன்கூட்டிய ஆர்வத்தைக் காட்டி, விமானப்படையில் சேர்ந்து, பின்னர் விமானிகள் பாடசாலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு விண்வெளித் திட்டத்திலும் சேர்க்கப்பட்டார்.
 
சோவியத் விண்வெளித் திட்டத்தின் தந்தை முதன்மை ராக்கெட் வடிவமைப்பாளரான சேர்ஜே கொரோலியேவ் ஆவார். 1930களில் களையெடுப்பின்போது ஸ்ராலினிச ஆட்சியில் கொடும் சிறைமுகாம்களில் ஆறு ஆண்டு காலம் இருந்தும், தப்பிப் பிழைத்திருந்தார். சோவியத் ஏவுகணை திட்டத்திற்காக விடுவிக்கப்பட்டபோது 1966ல் அவர் புற்று நோயால் இறக்கும் வரை, அவருடைய பெயர் பாதுகாப்புக் காரணங்கள் கருதி பகிரங்கமாக வெளியிடப்படவில்லை.
 
சோவியத் ஏவுகணைத் திட்டம் 1950களின் ஆரம்ப ஆண்டுகளில் அமெரிக்கர்களுடையதை விட அதிக முன்னேற்றத்தில் இருந்தது. இதற்கு ஓரளவு காரணம் மிகச் சிறந்த விஞ்ஞானியும் பொறியியில் வல்லுனருமான கொன்ஸ்ரன்ரீன் திஸ்லோகொவ்ஸ்கி  (1957-1935) உடைய முன்னோடிப் பணிகள்தாம். அவர் தற்கால ஜேட் மற்றும் ராக்கெட் உந்துதல்களின் கோட்பாட்டு வடிவமைப்பு முழுவதையும் அபவிருத்தி செய்திருந்தார். அதே நேரத்தில் ஒரு ஜார் மன்னர் சகாப்த காலத்தில் பள்ளியில் கணக்கு ஆசிரியராகவும் பணி புரிந்து வந்திருந்தார்.
 
1903 ஒட்டியே  The Exploration of Cosmic Space by Means of Reaction Devices  என்ற நூலை திஸ்லோகொவ்ஸ்கி வெளியிட்டிருந்தார். இது ஒரு விண்கலம் பூமியைச் சுற்றி வருவதற்குத் தேவையான வேகத்தைக் கணக்கிட்டு, ஒரு நீர்மையான பிராணவாயு, நீர்மையான ஹைட்ரஜன் ஆகியவற்றை எரிபொருளாகப் பயன்படுத்துவதின் மூலம் ஒரு பலகட்ட ராக்கெட்டுகள்  சாதிக்கப்படலாம் என்று கூறியிருந்தார். இது அரை நூற்றாண்டுக்காலத்திற்குப் பின் விண்வெளித் தொழில்நுட்பத்தில் உண்மையில் ஏற்பட்ட போக்கின் முன்னிழலாக அமைந்தது.
 
இக்கோட்பாட்டு வெற்றிகளின் நடைமுறைச் சாதனை பொருளாதார ஒழுங்கமைப்பு, தொழில்துறை, மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றில் பின்தங்கியிருந்த ரஷியா மகத்தான முன்னேற்றங்களைக் கொண்டதால்தான் ஏற்பட்டது. இது அக்டோபர் 1917 புரட்சி, சோவியத் ஒன்றியம் நிறுவப்பட்டது மற்றும் ஒரு திட்டமிட்ட பொருளாதாரத்திற்கான உலகின் முதல் முயற்சி ஆகியவற்றால்தான் நிகழ்ந்தது.
 
தொழிலாள வர்க்கத்திடம் இருந்து ஸ்ரானலிச அதிகாரத்துவம் அதிகாரத்தை நெறியற்றுக் கைப்பற்றி, அரசியல் படுகொலைகளில் ஈடுபட்டு ஒரு முழுத் தலைமுறையைச் சேர்ந்த புரட்சியாளர்களையும் கொலை செய்து, இறுதியில் அக்டோபர் புரட்சியின் விளைவுகளால் நிறுவப்பட்டிருந்து சொத்துடமை உறவுகளையும் தகர்த்தது.
 
ஆனால் பிந்தைய சோவியத் வளர்ச்சியில் இருந்த துன்பகரமான  முரண்பாடுகள் ஒருபுறம் இருந்தாலும், தொழில்துறை வளர்ச்சி, தொழிலாள வர்க்கத்தின் வளர்ச்சி என்பன அக்டோபர் புரட்சியில் உந்துதலால் ஏற்பட்டவை. இது சோவியத் ஒன்றியம் நாஜி ஜேர்மனியை இராணுவ முறையில் தோற்கடித்ததையும், போருக்குப் பிந்தைய சோவியத் பொருளாதாரத்தின் வளர்ச்சியையும் சாத்தியமாக்கியது.  இதில் விண்வெளி ஆராய்ச்சியின் முதல் ஆண்டுகளில் ஏற்பட்ட விரைவான தொழில்நுட்ப முன்னேற்றமும் அடங்கும்.
 

 
 
சோவியத் வாழ்வின் முரண்பாடுகளை ககாரினின் வெற்றிகர விண்வெளிப்பயணம் சரியான முறையில் காட்டியது. அதுவும் அக்டோபர் புரட்சிக்கும் இறுதியாக 1991ல் சோவியத் ஒன்றியம் ஸ்ராலினிசத்தால் கலைக்கப்பட்டதற்கும் கிட்டத்தட்ட நடுப்பகுதியில் இது நடந்தது.
 
பூமியின் சூழலை விட்டு நீங்கும் முதன் மனிதன் என்னும் முறையில் வரலாறு படைக்கத் தயாராக இருந்தபோது, கோரோலெய்வ் அவர் மாஸ்கோவிற்குத் திரும்பி வரும்போது தேவையான உணவு பற்றிய விவாதத்தில் ஈடுபட்டார். கோரோலெய்வ் அவரிடம் தேனீர், கொத்திறைச்சி ,  இனிப்புக் கட்டி, பழப்பாகு  ஆகியவை போதுமான அளவிற்கு அவருக்கும் இருக்கும் என்றார். ராக்கெட் விஞ்ஞானியிடம் ககாரின் கூறினார்:
 
  “முக்கியமான விடயம் கொத்திறைச்சி உண்டு என்பதுதான்.”
 
அவருடைய வரலாற்றுச் சிறப்பு மிக்க விண்வெளிப்பயணம் தோற்றுவித்த உலகம் முழுவதிலான பரபரப்பைத் தொடர்ந்து, ககாரின் 27 வயதிலேயே நடைமுறையில் அவர் விரும்பிய உத்தியோகத்தைத் தொடருவதிலிருந்து  தடைக்கு உட்பட்டுவிட்டார். பிந்தைய பயணங்களில் இருப்புப் பட்டியலில் அவருடைய பெயர் சேர்க்கப்பட்டிருந்தாலும்கூட, அவர் மீண்டும் விண்வெளிக்குப் பயணிக்க அனுமதிக்கப்படவில்லை
 
 மாஸ்கோ அதிகாரத்துவம் அவருடைய பெரும்புகழைத் தன் அரசியல் ஆதாயத்திற்கு சுரந்து கொள்ள விரும்பி, இந்தத் தேசிய வீரர் பின்னர் ஒரு பேரழிவில் இடருக்கு உட்பட்டுவிடக்கூடாது என விரும்பியது. ஆனால் அத்தகைய முன்னெச்சரிக்கையும் போதுமானதாக இல்லை. ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் ககாரின் ஒரு வாடிக்கையான பயிற்சிப் பணியில் ஈடூபட்டிருந்த பொழுது, அவருடைய மிக் போர் ஜேட் விமானம் கீழே விழுந்து எரிந்து, அவரையும் அவருடைய துணை விமானியையும் கொன்றுவிட்டது. அப்பொழுது அவருக்கு 34 வயதுதான் நிரம்பியிருந்தது.
 
-Patrick Martin
 
Thanks : World Socialist Website 

No comments:

Post a Comment