Thursday, January 12, 2012

உடைவது சிலை - ஓயாத நிலை!





தொடரும் சிலை உடைப்புகள்!








ண்மையில் ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் கொழும்பிலே நடாத்திய ஆரப்பாட்ட ஊர்வலத்தையும் அதனைத் தொடர்ந்து நிகழ்ந்து வரும் இழுபறிகள் பற்றிய செய்திகளையும் தொலைக்காட்சி, பத்திரிகைகள், வானொலி மற்றும் பிற ஊடகங்களிலும் அறிந்திருக்கலாம்.

இந்த ஆர்ப்பாட்டம் மற்றும் எதிர்ப்பு ஊர்வலத்தின்போது மாணவர்கள் எழுப்பிய கோஷங்களையும் கையில் ஏந்தியிருந்த சுலோகங்களையும் அவதானித்தபோது அவர்களுக்கும் பல்கலைக்கழக உபவேந்தர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கும் இடையே நீண்டகால முறுகல்நிலை இருந்து வருவது அப்பட்டமாகத் தெரிந்தது. ஆனாலும் மாணவர்களின் போராட்டம் ஓர் ஆர்ப்பாட்டமாக வெடித்துக்  கிளம்புவதற்கு உடனடிக் காரணமாக அமைந்தது பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவப்பட்டிருந்த ஒரு சிலையின் உடைப்பு!


பல்கலைக்கழக மாணவர்களின் முன்னைய போராட்டங்களை நினைவூட்டும் வகையில் நிறுவிப் போற்றப்பட்டிருந்த ஒரு விடுதலைச்சிலை அன்றைய தினம் அதிகாலையில் குண்டுவைத்துத் தகர்க்கப்பட்டிருந்தது. இந்த விஷமவேலைக்கு யார் காரணம் என்று தெரியாத போதிலும் உபவேந்தர்தான் பின்னணி என்று மாணவர்களும் மாணவர்களின் உள்சதிவேலை என்று உபவேந்தரும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். பிரச்சினை இன்னும் சுமுக நிலையை எட்டப்படாத நிலையில் வழமைபோலவே பல்கலைக்கழகம் காலவரையறையின்றி...


சரி, அது  இருக்கட்டும் ஒருபுறம்!



 






இப்போது அறியப்படும் மற்றொரு செய்தியும் ஒரு சிலை உடைப்புத்தான்.
இது நிகழ்ந்திருப்பது தீவின் கிழக்கில் மட்டக்களப்புக்கும் காத்தான்குடிக்கும் இடைப்பட்ட பிரதேசமான ஆரையம்பதியில். மட்டக்களப்பு என்றதும் சட்டென யாருக்கும் நினைவுக்கு வருவது பாடும் மீன்களும் சுவாமி விபுலானந்தரும்தான்.


சுவாமி விபுலானந்தரைப் போன்றே தமிழ்கூறும் நல்லுலகம் போற்றும் மற்றுமொரு மேதையான  சுவாமி விவேகானந்தரின் உருவச்சிலைதான் விஷமிகளால் உடைக்கப்பட்டிருக்கின்றது. அதுவும் அந்தச் சிலை நிறுவப்பட்ட தினத்திலேயே சேதப்படுத்தப்பட்டுள்ளதுதான் வேதனை. இதனை யார் செய்திருப்பார்கள் என்ற தேடலில் நேரமும் உழைப்பும்தான் விரயமாகுமே தவிர வேறுபயன்கள் கிடைக்கப்போவதில்லை.







இதேபோல ஒரு சம்பவம் சில மாதங்களுக்கு முன்பு திருகோணமலை நகரிலும் நடந்தேறியதை பலர் மறந்திருப்பீர்கள். அதிலே பாதிக்கப்பட்டவர் தமிழ் பேசும் மக்களால் பெரிதும் போற்றப்படும் தந்தை செல்வநாயகத்தின்  உருவச்சிலை. தற்போது அவரது வேறு ஒரு சிலை அதேயிடத்தில் நிறுவப்பட்டுள்ள போதிலும் மீண்டும் அதே போல ஒரு விஷமச்செயல் நிகழாது என்பதற்கு ஒரு உத்தரவாதமும் கிடையாது.


அதேவேளை இதே திருகோணமலை நகரிலே சில வருடங்களுக்கு முன்னர் ஒரு உருவச்சிலை தொடர்பாக நிகழ்ந்த அமைதியின்மையும் அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த வன்செயல்களும் ஏனோ ஞாபக அரங்கேறுகின்றன. பல இரத்தக்களறிகள்.. சில உயிர்ப்பலிகள்.. நீதிமன்றத் தலையீடுகள் என்றெல்லாம் இழுபட்டு கடைசியில் பிரதான பஸ்தரிப்பு நிலையத்தின் இடது முனையிலே மிகவும் பாதுகாப்பாகி, முன்னிலும் பெரிதாகி, மேலும் சாந்தமாகி  பீடம் அமர்ந்தார் கொல்லாமையைப் போதித்த போதி-மாதவன்!

- Jesslya Jessly


குறிப்பு:   தினக்குரல் (2009.05.03 ஞாயிறு)  பத்திரிகையில் வெளியான  நண்பர் மூதூர் மொகமட் ராபி யின் இந்தக் கவிதை இன்றைய எனது பத்திக்கும் பொருத்தமாக இருக்கின்றதல்லவா?



இன்றைய

திருகோணமலை!



வீதிக்கு வீதி சிறுகோயில்
தெருவுக்கு ஒரு பள்ளிவாசல்
சந்திகள் தோறும் மாதாசிலை
உச்சிமலையிலே புத்தபகவான்!


மூன்று புறமும் வங்கக்கடல்
நான்குதிசையும் காவல் அரண்
நெடிதுயர்ந்த நீதிமன்றம்
நின்றுபோகும் மணிக்கோபுரம்!


அலறியோடும் ஆம்பலன்சுகள்
அகதிகள் வழியும் ஆஸ்பத்திரி
காற்றும் வராத வாடகை வீடு
கனவிலும் ஓடும் கேபிள் டீவி!


ஓய்வே இல்லாத மனிதர்கள்
டியூஷன் குறையாத குழந்தைகள்
செல்போன் தின்னும் இளைஞர்கள்
செத்துப்போன லைப்ரரிகள்!


வயதுமீறிய ஆசைகள்
வசதிகள் பார்த்திடும் வேகங்கள்
மனசு முழுவதும் கொடூரங்கள்
குப்பைகளிலே குழந்தைப் பிணங்கள்!


-மூதூர் மொகமட் ராபி-

No comments:

Post a Comment