Monday, July 30, 2012

'திருநெல்வேலிக்கே அல்வா...?







விமர்சனங்களுக்கே ஒரு  விமர்சனம்!






'திருநெல்வேலிக்கே அல்வாவா?' என்ற பாணியில் 'என்னது, விமர்சனத்திற்கே விமர்சனமா?' என்று விழிவிரிய ஆச்சரியப்படுவதை சற்று ஒத்திப்போட்டுவிட்டு நீங்கள்  தொடர்ந்து படித்தால் நாம் உடனடியாகவே விடயத்திற்கு வந்துவிடலாம்.


இந்த உலகிலே மனிதனால் இன்னும் அறியப்படாத விடயங்கள் வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் அப்படிக் அறியப்பட்டவற்றிலே அவனால் விமர்சிக்கப்படாத விடயங்களே இல்லையென்று அடித்துச்சொல்லலாம்.

சமையல் கலை முதற்கொண்டு இசை, இலக்கியம், சினிமா, விளையாட்டு, அரசியல், வியாபாரம்... என்று பொதுவாக எல்லாத் துறைகளிலுமே விமர்சனமும் விமர்சிப்பவர்களும் இருந்துகொண்டுதான் இருக்கின்றார்கள். அதுபோலவே விமர்சனம் ஆரம்பமான அந்தக் கல்தோன்றி கடவுள் தோன்றாக்காலம் முதற்கொண்டு விமர்சனத்தை விரும்பாதவர்;களும் இவ்வுலகிலே இருந்து கொண்டேதானிருக்கின்றார்கள்.

மேலோட்டமாகப் பார்த்தால், விமர்சித்தல் என்பது ஏதோ தவறான விடயம் போலத்தான்; தோற்றமளிப்பதுண்டு.  அதற்குரிய காரணங்களும் இருக்கத்தான் செய்கின்றன. ஏனெனில் எல்லாவற்றிலும் நல்ல விடயங்களும் தீய விடயங்களும் இருப்பதைப்போலவே விமர்சனங்களிலும் இருவகையுண்டு. ஒன்று ஆக்கபூர்வமான விமர்சனம் மற்றையது அவதூறுபூர்வமான விமர்சனம். (அழிவுபூர்வமானது என்று சொல்வேனென்றுதானே எதிர்பார்த்தீர்கள்? )

'சாப்பாடு என்னவோ நல்லாத்தான் இருக்கு. ஆனால் அந்த மாசிச் சம்பல்தான்  கெடுத்து விட்டுது பாருங்க' என்று மூக்குப் பிடிக்கச் சாப்பிட்ட ஒருவர் போகின்ற போக்கிலே கல்யாண சமையலைப் பற்றி இப்படி விமர்சித்துவிட்டுச் சென்றால் இரவெல்லாம் கண்விழித்து ஓடியாடிக் கஷ்டப்பட்டுச் சமைத்தவர்களுக்கு எப்படியிருக்கும்..?

அதேபோல கற்பனை வளத்துடன் மாய்ந்து மாய்ந்து எழுதும் எழுத்தாளன், பலகோடி பணத்தையும் உழைப்பையும் கொட்டித் தயாரிக்கும் திரைப்படத் தயாரிப்பாளன், நாள் முழுவதும் வெய்யிலிலே பட்டை உரியும் விளையாட்டு வீரன், இரவு பகலாய் சண்டைக் காட்சிகளிலும் உணர்வுக்காட்சிகளிலும் உடலைப்பணயம் வைக்கும் நடிகன், மூளையைக்கசக்கி நுட்பத்திறமையுடன் கோர்ப்புச் செய்யும் ஓர் இசைக் கலைஞன், மக்களிடம் நல்லபேரும் வாக்குகளும் வாங்கிவிட உழைக்கும் அரசியல்வாதி...

இவர்கள் அத்தனைபேரும் மிகுந்த பிரயாசையுடன் வெளிப்படுத்தும் தத்தமது படைப்புகளையும் முயற்சிகளையும் தலைக்குமேலாகச் சுழலும் ஒரு மின்விசிறியின் கீழே மேஜை போட்டு உட்கார்ந்து மடிக்கணனியை வைத்துக்கொண்டு யாரோ சிலர் சுளுவாக விமர்சித்து விட்டுச் செல்கின்றபோது ஆத்திரம் வராமல் வேறு என்னதான் வரும்?

நியாயம்தானே? சரி, இப்போது மறுதலையாகச் சிந்தித்துப் பார்ப்போம்...

ஒரு விடயம் மிகுந்த பிரயாசத்துடன் செய்யப்படுகின்றது என்பதற்காக மட்டுமே அது சிறப்பானதாகவும் சமூகப்பயனுடையதாகவும் அமைந்துவிடுமா?

இரவெல்லாம் கண்விழித்து.. பார்த்துப் பார்த்து சமைத்த திருமண உணவு சுவையில்லாமல் அமைந்துவிடுவதில்லையா? மாய்ந்த மாய்ந்து எழுதிய ஆக்கம் வெகுசாதாரணமாக ஆகிவிடுவதில்லையா? பிரபலங்கள் ஒன்றுகூடி பிரயாசையுடன் உருவாக்கிய திரைப்படம் பெட்டிக்குள்ளேயே முடங்கிவிடுவதில்லையா என்ன?

கல்யாணச் சாப்பாட்டை வேண்டுமானால்; பெருந்தன்மையாக உண்;டு சமாளித்து எழுந்து ஒருநடை மணமக்களை வாழ்த்தியபின் போட்டோவுக்குப் போஸும் வீடியோவில் அசடும் வழிந்துவிட்டுத் திரும்பி விடலாம். அது சபைமரியாதை மட்டுமல்ல ஓர் உயர்ந்த பண்பும் கூட.

ஆனால் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களிலும் வெளிவரும் சமூக விழுமியங்களுடன் தொடர்புடைய கருத்து வெளிப்பாடுகள் ஆக்கங்கள் அரசியல் ஆய்வுகள் போன்ற விடயங்களிலெல்லாம் அவ்வாறு பெருந்தன்மையுடன் 'பேசாமல்' இருந்து விடலாமா?

எந்தவொரு படைப்பாளியும் தனது படைப்பைப் பற்றிய மக்களின் கருத்தை அறிந்தால்தான் அவரால் மேலும் வெற்றிகரமான படைப்புக்களை உருவாக்கி அந்தத்துறையிலே உயரிய நிலையை எய்த முடியும். மக்களின் கருத்தை தனது படைப்புக்களின் மீது வைக்கப்படும் விமர்சனங்களிலிருந்துதான் ஒரு படைப்பாளியால் விரைவாகவும் சுலபமாகவும்  பெற்றுக்கொள்ள முடியும்.
ஒர் உணவுச்சாலையின் நிருவாகிகள், 'சாப்பாடு எப்படியிருக்கின்றது?' என்று வாடிக்கையாளர்களிடம்; கேட்பது அதிலேயுள்ள குறை நிறைகள் பற்றிய விபரங்களை அறிந்து மேலும் சிறப்பான உணவை வழங்குவதற்காகத்தானேயன்றி வெறுமனே அவர்களோடு அளவளாவும் ஆசையினால் அல்ல என்பதைப்; புரிந்து கொள்வதற்கு பெரிய பட்டப்படிப்புகளெல்லாம்  அவசியமில்லை.


விமர்சனங்களை முன்வைப்பவர்களுக்கும் சில பொறுப்புகள் உள்ளன.


ஒரு படைப்பை விமர்சிக்கும்போது முன்பு குறிப்பிட்டதுபோல அது ஆக்கபூர்வமானதாகவும் படைப்பாளியின் நிறைகுறைகளைச் சுட்டிக்காட்டுவதிலே உயர்ந்தபட்ச ஊடகநாகரீகம் பேணுவதாகவும் இருத்தல் வேண்டும். அதேவேளை தனிப்பட்ட குரோதத்துடன் படைப்பையோ படைப்பாளியையோ மட்டந்தட்டுவதும்  மிகை அபிமானத்துடன் அளவுமீறிப் புகழ்ந்துரைப்பதும் சரியான விமர்சனமாக இருக்கவே முடியாது.


அதேவேளை விமர்சனங்களை எதிர்கொள்ளும் படைப்பாளிகளும் தம்மீது சரியான கோணத்திலே முன்வைக்கப்படும் விமர்சனங்களை திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ள முன்வரவேண்டும். 'நான் எவ்வளவு பெரிய படைப்பாளி. இவர்கள் எப்படி என் படைப்பில் குறைகாணலாம்' என்று இறுமாப்புடன் நடந்து கொள்ளாமல் நம்மை நாமே சுயவிமர்சனம் செய்துபார்த்தல் அவசியம். அவ்வாறு செய்யும்போதுதான் நமது படைப்பிலுள்ள நிறைகுறைகளை நாமே அறிந்து அவற்றை செப்பனிடக்கூடிய வாய்ப்புக் கிடைக்கும். மாறாக நமது படைப்பின் மீது அநாவசியமான அவதூறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தால் அதனைத் துணிவுடன் எதிர்கொள்ளவும் நமது அதிருப்தியை நாகரீகமான விதத்திலே  சுட்டிக்காட்டவும் நமக்கு உரிமையுள்ளது அல்லவா?.

அவதூறு விமர்சனங்களைப் புரிபவர்களிடம் அல்லது அவர்களது விமர்சனங்கள் வெளியாகும் அதே ஊடகங்களிடம் குறிப்பிட்ட விமர்சனம் பற்றிய நமது கருத்துரைகளை தர்க்கரீதியாக முன்வைத்து பதிலளிக்கலாம். அவ்வாறு செய்யும்போது நமது படைப்பையும் அதற்குரிய விமர்சனங்களையும் படிக்கும் வாசகர்களுக்கும் விமர்சனம் பற்றிய நமது கருத்துக்களையும் அறியக்கூடியதாக இருக்கும். நம்மீது வைக்கப்படும் விமர்சனம் உண்மையிலேயே அவதூறுக்குரியதொன்றாக இருந்தால் அதை நமது எதிர்க்கருத்துக்களின் உதவியோடு வாசகனும் புரிந்து கொள்வான் அல்லவா? இவ்வாறு தொடர்ந்து நாம் செய்து வந்தால் அவதூறு விமர்சனம் செய்பவர்கள் நிச்சயம் வாசகர்களால் அடையாளங் காணப்பட்டு ஆதரவையும் இழந்து விடுவார்கள். நாளடைவிலே அவதூறு விமர்சனத்தை கைவிட்டு ஓட வேண்டிய நிலை அவர்களுக்கு நிச்சயம் ஏற்படும்.


அதைவிடுத்து விமர்சனங்களே செய்யவேண்டாம் என்று வேண்டுவதாலோ அல்லது அத்தகையோரை வசைபாடுவதாலோ உருப்படியான விளைவுகள் எதுவும் ஏற்படப்போவதில்லை. மாறாக 'விமர்சனங்களை தாங்கிக்கொள்ள முடியாதவர்கள் இவர்கள்' என்ற ஏளனப்பார்வைதான் நம்மீது உருவாகும்.
விமர்சனங்களை எதிர்கொள்ள மறுப்பதால் ஏற்படும் இழப்பு படைப்பாளிக்குத்தான் சென்றுசேரும்;. ஏனெனில் விமர்சனங்களை எதிர்கொள்ளும் ஒரு படைப்பாளியின் ஆற்றலும் திறமையும் இடைவிடாது பாய்ந்தோடும் நீரோடையை ஒத்திருக்கும். ஆனால் விமர்சனங்களே இல்லாதபோது அந்த ஆரோக்கியமான நீரோடை மெல்ல ஒடுங்கி தேங்கிய சேற்றுக்குட்டையாக மாறிவிடும் அபாயம் உண்டாகின்றது.


நமது சமூகத்திலே பெரும் எழுத்தாளர்கள் என்று கருதப்படுகின்ற பலரிடம் விமரிசனங்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இல்லாதிருப்பதைக் காணலாம். தம்மையும் தமது படைப்புக்களையும் பாராட்டிப் புகழ்ந்து வைக்கப்படுகின்ற விமர்சனக் கண்ணோட்டங்களை மட்டுமே காண்பதற்கும் ஏற்பதற்கும் தயாராக இருக்கின்றனரே தவிர தமது குறைகள் சுட்டிக்காட்டப்படுவதை விரும்புவது கிடையாது. அவ்வாறான விமர்சனத்தை - சுஜாதாவின் பாணியிலே கூறினால் - நாய் கொண்டு வந்துபோட்ட வஸ்துவைப் பார்ப்பதுபோலத்தான்  பார்ப்பார்கள்.


பொதுவாக விமர்சனங்கள் மறுக்கப்படும் இடங்களிலேதான் பின்னடைவுகளும் துரோகங்களும் செழித்து வளருகின்றன என்பார்கள். இது எல்லாத் துறைகளுக்கும் மிகவும் பொருந்தும்.  இந்த எளிய தத்துவம் எத்தனை உண்மையானது என்பதைப் புரிந்து கொள்வதற்கு நமது நாட்டிலே நிகழ்ந்து முடிந்த உள்நாட்டுயுத்த வரலாறு ஒன்றே போதுமானது.


மனிதாபிமான உணர்வுகளுடனும் இடதுசாரிச் சிந்தனைகளுடனும் விடுதலைகாணப் புறப்பட்ட படித்த புத்திஜீவி இளைஞர்கள் ஆரம்ப காலங்களிலே மக்களின் விமர்சனங்களுக்கு மதிப்புக்கொடுத்து சுயவிமர்சனங்களோடு தமது போராட்டங்களை முன்னெடுத்து வெற்றிகரமாக விளங்கினர்.


ஆனால் பிற்காலங்களிலே அவர்கள் சுயவிமர்சனங்களை தவிர்த்ததோடு தம்மீது பொதுமக்களினால் முன்வைக்கப்பட்ட நியாயமான விமர்சனங்களையும் மறுத்துச் செயற்பட ஆரம்பித்தார்கள். இதனால் படிப்படியாக ஜனநாயக மறுப்புடன் கூடிய சகபோராளிகளையும்  மக்களையும் கொன்று குவிக்கத்தக்க அராஜகப்போக்கிலான சிறுசிறு ஆயுதக்குழுக்களாக ஆனார்கள். காலப்போக்கில் தமக்கிடையே ஒற்றுமையிழந்து மோதுண்டு ஒருவரையொருவர் இரக்கமின்றி அழித்தொழித்ததுடன் இறுதியிலே முழுமையாக இல்லாதொழிந்துபோனார்கள்.


ஒரு விடுதலைப் போராட்டம் சரியான பாதையிலே முன்னெடுக்கப்படுவதற்கு விசுவாசமான போராளிகள் இருப்பது முக்கியமானது. விசுவாசமான போராளிகளை வளர்த்தெடுப்பதற்கு விமர்சனங்கள் மிக அவசியமானவை. அந்த விமர்சனங்கள் புறக்கணிக்கப்படும்போதுதான் தவறான வழிகாட்டல், தலைமை வழிபாடுகள், தனிநபர் பயங்கரவாதம், காட்டிக்கொடுப்புகள், துரோகங்கள் போன்ற பிழையான விடயங்கள் உருவாகி வளர்ச்சியடைந்து ஒருகட்டத்திலே மொத்தப் போராட்டத்தையே நிலைகுலையச்செய்துவிடும்.
ஒரு விடுதலைப் போராட்டமும் முழுமையாக அழிவடைந்ததற்கு எத்தனையோ புறக்காரணிகள் இருந்தபோதிலும்கூட விமர்சனங்களை மறுத்து ஒதுக்கியதுதான் முதற்கோணலாக அமைந்து விட்டிருக்கின்றது என்றால் அது மிகையல்ல.

பொதுமக்களின் பார்வைக்காக வெளிவருகின்ற வருகின்ற எந்தவொரு சமூகவிழுமியங்களுடன் தொடர்புடைய படைப்பக்களுக்கும் விமர்சனம் எத்தனை அவசியமானது என்பதற்கு இதைவிடச் சிறந்த உதாரணத்தை நாம் தேடிப்பெற முடியாது.


- Jesslya Jessly

No comments:

Post a Comment