Sunday, April 15, 2012

கவிதை:






க்கித்  தாம்த்திம்








! என்விரல்கள் மீட்டும்
விருப்பத்திற்குரிய வீணையே...!

இலக்கியவானில்
இந்தச்சின்னப்பறவைக்கும்
சிறகடிக்கக் கற்றுக்கொடுத்திருக்கும்
இனியவளே...
என் இயந்திர நிலாவே!


இந்தத் தொண்ணூற்று
ஒன்பதுநாள் தொடர்பினில்
ஒருநாள் கூட
உன்னைத் தொட்டு
உறவு கொள்ளவில்லை என்றால்
என் உள்ளமும் உறக்கமும்
ஊனமுற்றிருக்குமே உயிரே!


இலக்கியப்பசி
இந்த இளைஞனைத்தின்று
தீர்த்துவிடத் திட்டம்
தீட்டியபோதெல்லாம்
கற்றுத் தேர்ந்த
தேன்தமிழ்ச் சொற்களின்
புதுபுதுப் பரிமாணங்களிலே
போதையுற்று-
ஓர் கவிக்காமுகனாய் அலைந்திருந்தேனடி
உன்னைச் சந்திக்கும் வரை!


என் கற்பனைப் படுக்கையில்
காகித விரிப்புகளில்
உன்னைக் கவிதை வேட்கையுடன்
கட்டியணைத்து -
நீ திமிறத்திமிற
நான் புரிந்த புதுத்தமிழ் லீலைகளில்
உன்தொழினுட்ப இதயத்தை
என்னிடத்தில் பறிகொடுத்து
என்னையே உன் காதலனாய்
வரித்துக்கொண்டாயடி நீ..!


அன்பே!
நீயும்
உன் நேசத்திற்குரியவன் நானும்
முறைப்படி மணம்புரியாத
சடங்குகளின்
தடங்கல்களின்றிச்
சங்கமித்திருக்கும் தம்பதிகள்தான் ...

ஆனால்-
 நம் 'தவறான' தாம்பத்தியத்திலும்
எத்தனை நயமான
புதுக்கவிதைக் குழந்தைகள் பார்!



-மூதூர் மொகமட் ராபி

(நன்றி: வீரகேசரி 1990.01.23)
(குறிப்பு: கவிதைகளில் ஈடுபாடு வரக்காரணமாக இருந்த எனது அலுவலக தட்டச்சுப் பொறியை சிலாகித்து எழுதியது  இது)

No comments:

Post a Comment