Saturday, April 21, 2012

தூங்கா நகரத்தில்....





கிழிந்து தொங்கும்

முஸ்லீம் தலைவர்களின்

முகமூடிகள்..!




ட்டைக்கடித்து மாட்டைக்கடித்து... என்பார்களே அதுபோலத்தான்... அன்று அனுராதபுரத்தில் ஒட்டுப்பள்ளம் எனும் கிராமத்தில் காலம் காலமாக இருந்து வந்த முஸ்லீம்களின் ஸியாரம் ஒன்றை இடித்துத் தரை மட்டமாக்கினார்கள்.
இதோ இப்போது ஏறத்தாழ 60 வருடங்களாக முஸ்லீம் வர்த்தகப் பெருமக்கள் தங்கள் ஐங்காலத் தொழுகையையும் வெள்ளிக்கிழமை விசேட ஜும்மாத் தொழுகையையும் நிறைவேற்றிவருகின்ற தம்புள்ள பள்ளி வாசலை இடித்துத் தகர்க்க முயன்றுள்ளார்கள்.


இலங்கை ஒரு பௌத்த நாடு. அது பௌத்தர்களுக்கு மட்டுமே சொந்தமானது. மற்றவர்கள் அனைவரும் குடியேறியவர்கள் என்ற புளித்துப்போன வாதத்தை முன்வைத்தே இவ்வாறான பேரினவாத நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். அவர்கள் சொல்வதுபோல இலங்கையில் குடியேறியவர்களும் அவர்களின் வம்சாவளிகளும் வெளியேறித்தான் ஆகவேண்டுமென்றால் அதனைச் சொல்லிக் கொண்டிருப்பவர்கள் உட்பட அனைவரும் நாட்டைவிட்டு வெளியேறிவிட  வேண்டியிருக்கும்.


கடந்த 60 வருடகாலமாக இருந்து வருகின்ற ஒரு பள்ளிவாசலின் மீது இத்தனை காலமும் இல்லாது இப்போது மட்டும் திடீரென இனவாதக் கும்பல்களுக்கு அக்கறை வந்ததன் காரணமென்ன? வியாபாரப் போட்டியாகத்தான் இருக்க வேண்டும். தூங்கா நகரம் என்று பெயர் பெற்ற வர்த்தக நகரம்தான் தம்புள்ள. அங்கு காலாகாலமாக முஸ்லீம்களும் சிங்களவர்களும் வியாபாரம் செய்து வந்திருக்கின்றனர். ஆரம்பத்தில் உள்ளுரிலே பயிராகும் காய்கறி பழவகைகளை விற்பனை செய்வதிலே சிங்களவர்களும் வீட்டுப் பாவனைப் பொருட்கள், கட்டிடப்பொருட்கள், வாகன உதிரிப்பாகங்கள் போன்ற இதர வியாபாரங்களில் முஸ்லீம்களும் ஈடுபட்டு வந்தனர்.



பின்பு மெல்ல சகல வியாபாரங்களிலும் இரு இனத்தவர்களும் ஈடுபடத் தொடங்கியதும் இயல்பாகவே வர்த்தகப்போட்டி உண்டாக ஆரம்பித்தது. இதனால் இயல்பாகவே உண்டாகும் எரிச்சல் உணர்வுகளை இனவாத சக்திகள் பயன்படுத்தி அங்கு இனமுறுகல் நிலைமைகளை ஏற்படுத்துவதற்கு முயன்று வந்துள்ளன. இருப்பினும் இவ்வாறான முறுகல்கள்  சுமுகமான வியாபார நலன்களுக்கு இடைஞ்சலாகவே அமையும் என்பதால் சிங்கள முஸ்லீம் வர்த்தகர்கள் ஏதோ ஒருவிதத்தில் அனுசரித்து விட்டிருக்கின்றனர்.


நாட்டின் சர்வதேச உறவு நிலைகள் சீர்குலைந்து விலைவாசி அதிகரித்து பொருளாதார நிலைப்பாடுகள் கேள்விக்குறியாகியுள்ள நிலையில் பொதுமக்களின் கவனத்தை வேறுவிடயங்களிலே திருப்பி விடவேண்டிய அவசியமும் அண்மைக் காலமாக இனமுறுகலைத் தூண்டிவிடும் போக்கு அதிகரித்து வருவதற்கு ஒரு காரணமாக இருக்கலாமோ என்று நினைக்கத் தோன்றுகின்றது.


நன்றாக உற்று நோக்கினால் பலசரக்குக்கடை முதல் பாராளுமன்றம் வரை பல்வேறு மட்டத்திலும் இத்தகைய போக்கு அவ்வப்போது முன்னெடுக்கப்பட்டே வருகின்றது. இவ்வாறான நிலைமைகள் ஏற்பட்டால் யாருக்கு இலாபம் உள்ளதோ அத்தகையோர்களே இதன் பின்னணியிலே இருந்துகொண்டு நேரடியாகவும் மறைமுகமாகவும் தூண்டி வருவதை அறியமுடிகின்றது. இதிலே அரச அதிகாரிகள் முதல் அரசியல்வாதிகள் வரை இருந்து வருகின்றனர்.


அவை ஒருபுறமிருக்கட்டும், இவ்வளவு அமளி துமளி ஏற்பட்டுமுள்ள போதிலும் நமது முஸ்லீம் அரசியல் தலைவர்கள் எவராவது இதுவரை இந்த விடயம் தொடர்பாக தங்களது திருவாய் மலர்ந்தருளியிருக்கின்றார்களா? ஒரு வன்மையான கண்டனமோ அல்லது இதனைக் கட்டுப்படுத்துவதற்கு உருப்படியாக ஒரு காரியத்தையாவது செய்திருக்கின்றார்களா? தங்களது அரசியல் இலாபத்திற்காக உணர்ச்சி வசப்பட்டு அறிக்கைகள் விடும் கறுப்புக் கோட்டு கனவான்களும் வெள்ளையுடை வேந்தர்களும் குறுநில தாதாக்களும் இப்போது எங்கே போனார்கள்? அல்லது எப்படிக் குறட்டை விட்டார்கள்?


அந்த அமைச்சர் பேரீச்சம்பழம் சாப்பிட்டார் இந்த அமைச்சர் பல்லுக்குத்தினார் என்று தமிழ்நாடு குமுதம் பாணியில் 'காத்திரமான' அரசியல் அந்தரங்கம் எழுதும் நவநாகரிக மணியான நமது முஸ்லீம் செய்திப் பத்திரிகைகளால் சொறிந்து விடப்படும் முஸ்லீம் அமைச்சர்கள்  எங்கே? பிரதிநிதிகள் எங்கே? இவர்கள் எல்லோரும் தம்புள்ளைப் பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகைக்காக வந்த முஸ்லீம்கள் ஆர்ப்பாட்டம் செய்த இனவாதக்கும்பலிடம் சிக்கி பாதுகாப்பின்றி இருந்தபோது எங்கே போனார்கள்?


கொஞ்சம் தேடிப்பார்த்துச் சொல்கிறீர்களா?

- Jesslya Jessly

No comments:

Post a Comment