Tuesday, January 31, 2012

கிரிக்கட்:







எழுச்சிகளும் வீழ்ச்சிகளும்








கிரிக்கட் விளையாட்டில் என்ன நடந்தாலும் அது இன்றும் கனவான்களின் விளையாட்டாக -குறைந்தபட்சம் பெயரளவிலாவது- கருதப்பட்டுத்தான் வருகின்றது. ஆனால் காலத்துக்குக் காலம் அவ்விளையாட்டில் நாட்டாண்மை செய்பவர்கள் மட்டும் சங்கீதக் கதிரை விளையாட்டுப் போல மாறிக் கொண்டேயிருக்கின்றார்கள்.

ஒரு காலத்தில் எகிறும் வேகப்பந்து வீச்சால் மிரட்டி ஏனைய அணிகளை ஆக்கிரமித்து ஆட்டிப்படைத்தது மேற்கிந்தியத்தீவுகள் அணி. பின்பு அது மெல்ல மெல்ல சுழல்பந்து வீச்சாளர்களின் கைகளுக்குத் தாவியதிலே முறையே இந்திய பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய துணைக்கண்ட அணிகளின் ஆக்கிரமிப்புகளும் உருவானது.

அதன் பின்னர்  பாகிஸ்தான் அணியின் வழியில் வேகத்தையும் சுழலையும் பயன்படுத்தி ஆனால் சரியான விகிதத்தில் கலந்துகட்டி ஒரு தசாப்த காலத்திற்கும் மேலாக அவுஸ்திரேலிய அணி மேலாண்மை செய்து கொண்டிருந்தது. அதன் பின்னர் அண்மைக் காலத்தில் இந்திய அணியும் இங்கிலாந்து அணியும் மாற்றி மாற்றிப் பலம்பெற்று வந்திருந்தன.

ஒருகாலத்தில் ஆட்டிப்படைத்த அணிகள் ஒரேயடியாகச் சரிவுக்குள்ளாவதும் வீழ்ந்து கிடந்த அணிகள் பலம்பெற்று எழுவதுமான போக்குகள் தொடர்ந்தாலும் அண்மைக்காலத்தில் டெஸ்ட் மற்றும் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தரப்படுத்தல்களை அறிமுகப்படுத்திய பின்னர் அதில் முதலிடத்தைப் பெறுவதற்கும் அதைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வதற்கும் முக்கிய அணிகளுக்கிடையில் பெரும் இழுபறிகள் நிகழ்ந்து வருகின்றதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

அதுவும் அவுஸ்திரேலிய டெஸ்ட் அணி தனது நீண்டகால  முதலிடக் கிரீடத்தைப் பறிகொடுத்த பின்னர் அந்த இடத்திற்கான இழுபறிகள் சூடுபிடித்தன. 2011 உலகக்கிண்ணச் சாம்பியனான இந்திய அணி துணைக்கண்டத்தில் நிகழ்ந்த டெஸ்ட் தொடர்களை வென்றவுடன் அந்த இடத்தை எட்டியது. இருந்த போதிலும் அதிலே நீண்டகாலம் தாக்குப் பிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி ஆஷஸ் தொடரை வென்ற இங்கிலாந்து, திறமையான வீரர்கள் இருந்தும் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும்  உட்பூசல்களால் துவண்டு கிடந்த பாகிஸ்தான் அணியை காயடித்து முதலிடத்தை எட்டி இன்றுவரை அதில் இருந்து வருகின்றது.

இந்த நிலையில்தான் வலுவான நிலையில் இருந்த இந்தியாவுக்குச் சோதனைக்காலம் 2011ன் பிற்பகுதியில்  ஆரம்பித்தது. அனுபவம் வாய்ந்த Big Three  எனப்படும் சச்சின்,ட்ராவிட், லக்ஷ்மன் ஆகியவர்களையும் சேவக், டோனி, காம்பிர், விராட் கோஹ்லி, சகீர்கான் ஆகிய நட்சத்திர வீரர்களையும் நம்பி இங்கிலாந்தில் களமிறங்கியது. ஆனால் நான்கு டெஸ்ட்கள் கொண்ட தொடரில் அவர்களுக்கு ஒரு போட்டியைத்தானும் வெற்றிபெற...வெற்றிபெறுவது இருக்கட்டும் தோல்வியைத் தவிர்க்கும் வகையில் draw (சமநிலை) செய்யக்கூட முடியவில்லை. முழுமையான வெள்ளையடிப்பு! (Whitewash)


மறுபுறம் 2010ம் ஆண்டில் இங்கிலாந்துத் தொடரில் தொடரைப் பறிகொடுத்துத் தோல்வியடைந்தது மட்டுமன்றி Spot-Fixing  ஆட்ட நிர்ணயச்சதியில் சிக்கி தனது மூன்று முக்கிய வீரர்களையும் இழந்து  ஊமைக் காயமடைந்திருந்த பாகிஸ்தான் அணியை ஆண்டு 2011 வெற்றிகளால் ஒத்தமிட்டது.



 அடிபட்ட புலியாகி பாகிஸ்தான் அணி சிலிர்த்து எழுந்ததில், அந்த ஆண்டில் மட்டும்  நியூசிலாந்து,  இலங்கை சிம்பாப்வே மற்றும் பங்களாதேஷ் அணிகளைப் புரட்டிப் போட்டது. அந்த நான்கு தொடர்களையும் தோல்வியின்றியே வென்றிருந்தது. மேற்கிந்தியத் தீவுகள் அணியுடன் மட்டுமே ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் தோல்வி கண்டது. அதிலும் தொடரை சமன் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 கெப்டன் கூல் மகேந்திரசிங் டோனி தலைமையிலான இந்திய அணிக்கு மீண்டும் கடந்த 2011 கிறிஸ்மஸ் தினத்தை அடுத்து வரும் Boxing Day (மோதல் தினம்) முதல் கொண்டு இவ்வருடம் ஜனவரி வரை அவுஸ்திரேலியாவில் காயடிப்பு ஆரம்பமானது. முதல் மூன்று போட்டிகளையும் இன்னிங்ஸ்களால் அதுவும் ஐந்து நாட்கள் கூட காத்திருக்காமல் தோற்று முடித்தார்கள். சரி, தொடர்தான் கைநழுவிப்போனது கடைசியும் நான்காவதுமான டெஸ்ட்டில் ஓர் ஆறுதல் வெற்றியாவது தருவார்களா? என்று பார்த்தால்...வெற்றியென்ன  ஆறுதல் ட்ரா கூடத் தரவில்லை. 





ஆனால் ஓரேயொரு விடயம் ஆறுதல். என்ன தெரியுமா? அதாவது கடைசித் தோல்வியை மட்டும் பெரும் பிரயத்தனம் பண்ணி ஐந்தாம் நாள் வரை கொண்டு சென்றதுதான். அதிலும் இன்னிங்ஸ் தோல்வியையும் ஆஸி அணித்தலைவர் மைக்கல் க்ளார்க் புண்ணியத்தில் -அவர் follow on கொடுக்காமல் இரண்டாம் இன்னிங்ஸை விளையாடியதால்- தவிர்த்திருக்கிறார்கள். அந்தத் தொடரின் ஒரேயொரு இந்தியச் சதத்தை விராட் கோஹ்லி மட்டும் முதல் இன்னிங்ஸில் அடித்திருந்தது மட்டுமே வித்தியாசம்.


அதேவேளை புதிய ஆண்டான 2012ஐயும்  வெற்றிகரமாகத் துவக்கியுள்ளது பாகிஸ்தான் அணி. மிஸ்பா-உல்-ஹக் தலைமையிலான டெஸ்ட் அணி தரநிலையில் முதலிடத்திலுள்ள இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சித் தோல்விகளைப் பரிசளித்து வஞ்சம் தீர்த்துள்ளது. பாலைவன மைதானங்களில் நடந்து வரும் 3 போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடரின் முதலாவது போட்டியில் 10 விக்கட்டுக்களால் அபார வெற்றியீட்டிய பாகிஸ்தான் இரண்டாவது போட்டியிலே  வெறும் 145 என்ற சுலபமாக இலக்கைத் துரத்தி இலகுவாக வெற்றியீட்டியிருக்க வேண்டிய ஆங்கிலத் துடுப்பாட்ட வீரர்களை சுழலில் சிக்கவைத்து 72 ஓட்டங்களால் வீழ்த்தித் தொடரையும் கைப்பற்றியுள்ளது.



 

இதை வேறுவிதமாகச் சொன்னால் 2010ல் இங்கிலாந்து மண்ணில் பெற்ற தோல்விக்கும் அவமானங்களுக்குமாய்ச் சேர்த்து அபுதாபியின் பாலைவன மண்ணில் வைத்துச் சூடாக பழிவாங்கியுள்ளது. இதை நான் எழுதுகையில்(2012.01.29) மேலும் ஒரு டெஸ்ட் போட்டி மீதமுள்ளது. அதிலே எதுவும் நடக்கலாம். எனினும் இந்தத் தொடர் வெற்றி பாகிஸ்தானுக்கு புதுரத்தம் பாய்ச்சியிருக்கும் என்பதிலே சந்தேகமில்லை.



அதேவேளை தொடர்ச்சியாக இரு தொடர்களிலே எட்டு டெஸ்ட்களைத் தோற்று நொந்து நொதித்துப் போயிருக்கும் இந்திய அணியை விமர்சனக் கணைகளால் சரமாரியாக குத்தியெடுக்கின்றார்கள் ஊடக வாலாக்கள். ஆனால் ஒன்று இந்திய அணி சிறிய ஒரு வெற்றியைப் பெற்று விட்டால் போதும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு அளவுக்கு மீறி ஆடுபவர்களும் இதே ஆட்கள்தான். வெற்றிகளின் போது புகழ் வெளிச்சத்தில் மறைக்கப்படுகின்ற பலவீனங்களெல்லாம் தோல்வியடையும்போதுதான் கோரமாய்ப் பல்லிளிக்கும் என்பது இந்திய அணிக்கு மட்டும் எப்போதும் நன்கு பொருந்தும்.


இந்தியா,இலங்கை போன்ற துணைக்கண்டத்துக்குரிய கிரிக்கட்  நிர்வாகத்தினரின்  மீது ஒரு வழமையான விமர்சனமுள்ளது. அதாவது சுற்றுலா அணிகளைத் தமது சொந்த மைதானங்களில் எதிர்கொள்ளும்போது ஆடுகளங்களை பெரும்பாலும் தமக்குச்  சாதகமான வகையில் மட்டுமே தயாரிப்புச் செய்வது. இதனால் பொதுவாக சுற்றுலா அணிகளை  இலகுவாக வெற்றி பெற்றுவிடுவது வழமை. ஆனால் இங்கிலாந்து, நியூசிலாந்து,அவுஸ்திரேலியா போன்ற நாடுகளின் மைதானங்களில் வேறுபட்ட காலநிலை நிபந்தனைகளின் கீழ் விளையாடும்போது சிரமங்களை எதிர்நோக்க வேண்டியிருக்கின்றது. அந்த மைதானங்களில் எகிறிவரும் வேகப்பந்துகளை சமாளிக்க முடியாமல் திணறுகின்றார்கள்.


இதற்குப் பதிலாக,  சொந்த மைதானங்களைத் தனியே சுழல்பந்து வீச்சுகளுக்கு மட்டுமல்லாமல் இரு அணியினருக்கும் ஏற்ற விதமாக நடுநிலையாக சமதரத்தில் களத்தயாரிப்புச் செய்து ஆடிவரும்போது அதனால் கிடைக்கும் நீண்டகால பலன் மூலமாக வெளிநாடுகளிலும் நடுநிலை மைதானங்களிலும் வெற்றி பெறக்கூடிய வல்லமை கிடைக்கும். மாறாக உள்நாட்டில் தோற்று விடுவோமோ என்று எதிர்மறையாகச் சிந்தித்து ஆடுகளங்களைத் தயார் செய்தால் இங்கிலாந்து, நியுசிலாந்து போன்ற நாடுகளின் மைதானங்களில் வெற்றிபெறுவதையோ தோல்விகளைத் தவர்ப்பதையோ நினைத்துப் பார்க்கக்கூட முடியாது. இந்த உண்மைகளை என்றோ உணர்ந்து செயற்பட்டிருந்தால் இன்றைய இந்திய அணியின் பரிதாப நிலை  தவிர்க்கப்பட்டிருக்கும் என்பது கிரிக்கட் வல்லுனர்கள் பலரின் கருத்தாகும்.



 
நடந்து முடிந்த இரட்டை வெள்ளையடிப்புக்கு வீரேந்தர் சேவாக் மற்றும் ராகுல் ட்ராவிட் போன்றோர் நொண்டிச் சாக்குப் போக்குகளைக் கூறிக் கொண்டிராமல் இனிமேலாவது மேற்கூறியவை போன்ற விமர்சனங்களை  கருத்தில் கொள்வார்களா பார்க்கலாம்?

-'Mutur' Mohammed Rafi


No comments:

Post a Comment