Sunday, January 22, 2012

குச்சியா துப்பாக்கியா?



சபாஷ்!

சரியான போட்டி!






தி எனப்படும் ஆதிநாராயணன்  ஒரு நேர்மையான பொலீஸ் உயரதிகாரி. அதேவேளை ஒரு சராசரி மனிதனாக சமூக அவலங்கள் பற்றிய விமர்சனமும் கோபமும் கொண்டவன். சமூகக் குற்றவாளிகளையும் நியாயம் மறுக்கப்பட்டதற்காகப் போராடும் தீவிரவாதிகளையும் வேறுபிரித்துப் புரிந்துகொள்ளும் அறிவுள்ள அதேவேளை அரசு இயந்திரத்தைக் குழப்புவதற்காக அப்பாவிப் பொதுமக்களின் உயிர்களையும் உடைமைகளையும் அழிவுக்குள்ளாக்கும் நாசவேலைகளில் அவர்கள் ஈடுபடுவதை வன்மையாக எதிர்ப்பவன்.


தன்னைப் போலவே நேர்மையான மற்றொரு அதிகாரியான நண்பன் அப்பாஸுடன் சேர்ந்து பத்ரி என்பவனின் தலைமையில் இயங்கும் ஒரு தீவிரவாதக்கும்பலை மடக்குவதற்காகத் திட்டமொன்றை இரகசியமாய் செயற்படுத்துகின்றான்.


அந்தத் திட்டத்தின் போக்கிலே ஒருநாள் காரொன்றிலே வரும் சில தீவிரவாதிகளை மடக்கிப் பிடிக்கின்றனர். அவர்களில் காரை ஓட்டிவந்தவனைத் தவிர மற்றவர்களை உயிருடன் பிடிக்க முடியவில்லை. இதனால் 'நான் வெறும் கூலிக்கு அமர்த்தப்பட்ட வன்; தீவிரவாதிகளுக்கும் எனக்கும் எதுவித தொடர்புமில்லை' என்று சாதித்துக் கொண்டிருக்கும் அந்தக் கார்ச் சாரதியை தனது காவலில் வைத்து விசாரிக்கின்றான் ஆதி.


பொலீஸ் காவலில் இருவரும் விளக்கு வெளிச்சத்தின் கீழ் எதிரெதிராக அமர்ந்திருக்க ஆரம்பமாகின்றது விசாரணை.

தீவிரவாதிகளின் குண்டுவெடிப்பில் பலியான குழந்தைகளின் உடல்களின் புகைப்படங்களை அவன் முன்னே பரப்புகிறான் ஆதி...

 'இதெல்லாம் ப்ளாக் அண்ட் வைட்! கலர்ல பார்க்கணும் ஒரே ரத்தம்! ஆனா ஒரே கலர்! இதுல ஒரு போட்டோ ம்ம்.. இது.. டைம் மெகசின்ல கலர்ல வந்துது. உலகப்புகழ் நமக்கு எப்படியெல்லாம் கிடைக்குது பார்த்தியா?


உன்னப் பார்த்தா இந்த மாதிரி வீண்பலி குடுக்கிற கூட்டத்தில இருக்கிறவன் மாதிரித் தெரியலியே..? You are seem to be driven by an idiology! சித்தாந்தத்தினால உந்தப்பட்டவன் மாதிரி இருக்கேன்னு சொன்னேன். உன்னப் பார்த்தாப் படிச்சவன் மாதிரித் தெரியுது..உன் கண்ணுல கலாசார பலம் தெரியுது. மத்தவங்க உயிர்கள் மேல மரியாதை இல்லாத இந்த மாதிரி ஆளுங்களப் பத்தி என்ன நெனைக்கிற..?


சித்தாந்தம் எதுவாக வேணும்னா இருக்கட்டுமே..சாமி,மதம், அரசியல், மக்கள்நல மேம்பாடு இப்படியெல்லாம் சொல்லிட்டா உயிரைப் பறிக்கிற உரிமை வந்திடுமா என்ன? அதுக்காக ஒரு கன்னத்தில அடிச்சா மறுகன்னத்தைக் காட்டுங்கன்னு சொல்லல்ல.. உங்க கோபத்தை எங்ககிட்ட காட்டுங்க ..அதான் சாகிறதுக்குத்தான் தயாரா இருக்கிறோமே..யார் கண்டா, செத்துப்போன இந்த இருபத்தைஞ்சு முப்பது குழந்தைகள்ல ஒண்ணு ரெண்டு உன்னைப்போல தீவிரவாதியாகக் கூட வந்திருக்கலாமில்லியா?

இதைக் கேட்டதும் நக்கலாகக் கைதட்டுகின்றான் பிடிபட்ட அந்தத் தீவிரவாதி.

' என்ன ஏதாவது தப்பாகப் பேசிட்டேனா.. உங்க நம்பிக்கைக்கு விரோதமா ஏதாவது சொல்லிட்டேனா? சரி, நீங்க நம்பறது எதுன்னு சொல்லுங்க அதைப்பத்திப் பேசுவோம்..எதிலயாவது நம்பிக்கை இருக்கா? கண்டிப்பா கடவுள் நம்பிக்கை இருக்காது..எனக்கும் இல்ல அப்படீன்னா நம்புவியா?


இந்த பாரு எனக்கு அடிச்சுப் பேசவைக்கிறதில நம்பிக்கை இல்ல...நீயே பேசு...எனக்குக் காது இருக்கு கேட்கும்! நானும் ஒன்ன மாதிரி மனுசன்தானே? எனக்கும் ஒன்ன மாதிரி சமுதாயக் கோபமெல்லாம் இருக்கு! உன் கோபம் எனக்குப் புரியும். நீ என்னை நம்பலாம். நான் ஒரு நேர்மையான பொலீஸ் ஓபிஸர்!'  என்று கூற ஆதியைப் பார்த்து நக்கலாகச் நமுட்டுச்சிரிப்பொன்று சிரிக்கின்றான் அந்த ட்ரைவர்.


'அப்படிச் சிரிக்காதே! என்னோட நேர்மையை கேலி செஞ்சாப் பிடிக்காது. சிரி..! இப்ப சிரிப்பே.. அப்புறம் அழுவே! அப்புறம் பேசுவே..இன்னும் கொஞ்சம் அழுத்தினா நெஜம் கூடப்பேசுவே. எனக்கு நெறையப் பொறுமையும் நேரமும் இருக்கு!'

என்று அத்துடன் வீட்டுக்குத் திரும்பும் ஆதிக்கு தான் விசாரித்துக் கொண்டிருக்கும் அந்த ட்ரைவர்தான் தீவிரவாதிகளின் தலைவன் பத்ரி என்பது  மறுநாள் எதிர்பாராதவிதமாகத் தெரிய வருகின்றது.


அவசர அவசரமாக மீண்டும் பொலீஸ் காவலறைக்கு வருகின்றான் ஆதி.


இப்போது ஆதிக்கும் பத்ரிக்கும் இடையே நிகழும் உரையாடலைக் கேளுங்கள் நண்பர்களே!


'என்னடா நீ இவ்வளவு திமிரா பயப்படாம இருக்கியேன்னு யோசிச்சிட்டே இருந்தேன். ம்ம்.. பார்த்ததுமே தெரிஞ்சிருக்கணும் நீ அடியாள் டைப் இல்லேன்னு.. பத்ரி! இப்ப நீதான் தலைவன்னு தெரிஞ்சப்புறம் பெச்சு வார்த்தையை ஆரம்பிக்கலாமே! சி எம் கூட டைரக்டா பேசலாம். ஏறபாடு செய்ய முடியும்'


'ஒங்க பேச்சுவார்த்தையில எனக்கு நம்பிக்கையில்ல...நான் போராளி!'


'ம்! அப்ப இங்கயே சாகவேண்டியதுதான்!'


'நான் செத்தா விழுற விதையில ஆயிரம் பத்ரி மொளைப்பாங்க!'


'அதெல்லாம் மொளைக்க மாட்டாங்க! நீ செத்தா பயம்தான் மொளைக்கும்! (சிரிப்புடன்) நீ கனவு கண்டிட்டிருக்கிற புரட்சி இயக்கம் இதெல்லாம் என்னிக்கோ நீர்த்துப் போச்சு..ஒனக்குச் சித்தாத்தம் கத்துக்கொடுத்தபெரியவங்கள்ளாம் செத்துப்போயிட்டாங்க..பாதிப்பேர்..
ரிட்டயராயிட்டாங்க...இப்ப மிச்சம் இருக்கிறது ஒன்னமாதிரி ஆளுங்கதான் பொறுக்கிக்கும் போராளிக்கும் கலப்புத் திருமணம் செஞ்சதில பொறந்த புள்ளை நீ ஒனக்கப்புறமிருக்கிற சந்ததிய உத்துப்பார் சினிமா பாத்து வளர்ந்த பலகீனமான கூட்டம்தான் தெரியும்.. அவங்கள அரசாங்கம் விலைக்கு வாங்கிடும் இல்ல மிதிச்சி நசுக்கிடும்!'


' அதுக்கு முன்னால உங்க அரசாங்கமே விலைக்குவரும்.  அப்போ பாம்பை நசுக்கிற மாதிரி தலையை மிதிச்சி நசுக்கிடுவோம். ஆனா கொஞ்சநேரம் வால் மட்டும் துள்ளிட்டிருக்கும். இப்போ தலையில கால் வச்சாச்சு... அதான் நீ ரொம்பத் துள்ளறே!'


'இரு...இரு! நீ மிதிச்சது தலையா வாலாங்கறது பேசவேண்டியவன் பேசினாப்புறம்தானே தெரியும்?'


சில குறுக்கீடுகளுக்குப் பிறகு மீண்டும் தொடருகின்றது உரையாடல்


'உனக்குத் தூக்குத் தண்டனை இல்லாம என்னால செய்ய முடியும்..
அரசாங்கம் ஒரு சின்ன டீலுக்கு ஒத்துப்போறமாதிரி என்னால செய்ய முடியும்.. நம்மளோட இந்தச் சண்டை இப்போதைக்குத்தீரப் போறதில்ல... தற்காலிகத் தோல்வியை சமரசப்பேச்சுவார்த்தையா மாத்திக்கறதுதானே கெட்டிக்காரத்தனம்? உனக்குத் தெரியாததா...நான் சொல்லிக் கொடுக்கணுமா? ஒத்துக்க! சிம்ப்பிள் டீல்!'


'எங்கிட்டேயே டீல் பேசறியா? நான் உனக்கொரு ஓபர் சொல்றேன். இட்ஸ் ட்டூ எ டீல் ஓகே?'


'ஓகே, சொல்லு!'


'நீ தோற்கிற சைட்ல இருந்துக்கிட்டு உன் திறமைய வேஸ்ட் பண்ணிக்கிட்டிருக்கிற...எங்க சைடுக்கு வா! ஜெயிக்கிற சைட்! எங்ககூட உங்க ஆளுங்க நெறையப் பேர் இருக்காங்க'


'யூ பாஸ்டர்ட். என்ன ஒனக்கு வேலை செய்யச் சொல்றியா? நான் யார் கூடப் பேசிட்டிருக்கிற தெரியுமா?


'ஆதி!  DCP! நேர்மையான கொம்பன்!'


'கரெக்ட்! ரொம்ப நேர்மையான கொம்பன்..! நான் நம்பற நேர்மைக்காகவே வாழ்ந்திட்டிருக்கிறவன்!'


'நான் நம்பற கொள்கைக்காகவே சாகத் தயாராயிருக்கிறவன்.இப்ப சொல்லு... யார் கொம்பன்?'



'ம்? நீதான்! வாய்கிழியப் பேசுறதில. பத்ரி நீ சொல்றது மத்தவங்களுக்குக் கேட்டாதான் நீ சொல்றதும் புரியும்! அரசாங்கம் பேசினா இந்த ஒலகத்துக்கே கேக்கும். நீ பேசினா இந்த ரூம்ல எனக்கு மட்டும்தான் கேக்கும்!


எப்படியிருக்கிறது உரையாடல்? இன்னுமிருக்கிறது கேளுங்கள்.


ஒரு கட்டத்தில் பொலீஸ் துறையினுள்ளே கூட ஊடுருவியிருக்கும் தீவிரவாதி பத்ரியின் பலம் ஆதிக்குத் தெரிய வருகின்றது. இதனால் பத்ரியை அடித்துக் காயப்படுத்திவிட்டு ஆஸ்பத்ரிக்கு எடுத்துச் செல்வதுபோல போக்குக் காட்டி ஒதுக்கப்புறமாக ஓரிடத்தில் வைத்து சுட்டுத்தள்ளுவதற்காகத் துப்பாக்கிமுனையில் நிறுத்துகின்றான் ஆதி.


'பத்ரி! இதுதான் நீ சாகப்பொற இடம்...ஆஸ்பத்திரிக்குப்போற வழியில தப்பிச்சிப்போக முயற்சி பண்ணின சுட்டேன் செத்திட்டே அவ்வளவுதான்'

'இப்ப புரியதா...? ஒரு மனுசனை பொறுமையோட எல்லைக்கே விரட்டி அவனுக்குக் கிடைக்க வேண்டிய நியாயத்தைப் பறிச்சிட்டா உன்னமாதிரி ஆளு கூட கோபம் வந்து என்னை மாதிரியே தீவிரவாதியாகிடுவான்'


'நீதான் கொள்கைக்காகச் சாகிற கொம்பனாச்சே... எங்கே சாகு! எப்படிச் சாகிறென்னு பார்க்கிறேன்'.


'தேவைப்படும்போது மட்டும்தான் நாங்க உயிரைத் தியாகம் செய்வோம் தேவையில்லாம உயிரை விரயம் பண்றது எனக்குப் பிடிக்காது. உன்னை மாதிரி சம்பளம் பென்சன் செத்தா இன்ஷுரன்ஸ் இதெல்லாம் கிடையாது. எங்களோடது சேவை நோக்கமுள்ள சமுதாயம்தான். Free social service society! இப்ப சொல்லு யாரு பெரியவன்?'


'ஆமாடா.. இந்த யாரு பெரியவன் என்ற இந்தச் சின்னத்தனமான போட்டியில சிக்கித்தான்  உங்க கூட்டமே சின்னாபின்னமாச்சு. யார் பெரியவன்னு தைரியமிருந்த சொஸைட்டியில வந்த காட்டு! சேவை செய்!  காட்டுல இருந்து என்னடா பண்றீங்க?'


'நான்  செய்யத் தயாராக இருக்கேன். ஆனா செய்ய விடுவான்களா உன் முதலாளிங்க.. அரசியல்வாதிங்க..? உன்னைத் திட்டம் போட்டு ட்ரெயினிங் கொடுத்து பொலீஸ்காரனாக்கிய அதே அரசியல்வாதிங்கதான் என்னைக் காட்டுக்குள்ள வச்சித் தீவிரவாதியாக்கினான் வைச்சிருக்கிறான். எதையும் திங்கிற அந்த அரசியல் பன்னிங்களைத் தொரத்தினாத்தான் நீயும் நானும் நன்மை செய்ய முடியும்!'


'அந்தப் பன்னிங்களத் தொரத்த குச்சி போதும்! துப்பாக்கி தேவையில்ல.. அரசியலைத் திருத்த பல வழிகள் இருக்கு. துப்பாக்கியால பொறக்கிற அரசியல் துப்பாக்கியாலதான்  சாகும். துப்பாக்கி புரட்சிக்குத் தேவையான ஆயுதம்ங்கி நம்பிக்கை  எல்லோருக்குமே போயிட்டிருக்கு.


'அப்போ நீ எதுக்குத் துப்பாக்கி வச்சிருக்க?'


'நீதான் காரணம்! உங்கமாதிரி ஆளுங்ககிட்டயிருந்து என்னையும் என்னை நம்பியிருக்கிறவங்களையும் பாதுகாக்கணுமில்ல?'

'அப்போ எங்களப் பார்த்து பயமிருக்குங்கற உண்மையை நீ ஒத்துக்கிறே?'

'உண்மையை ஒத்துக்கிற தைரியம் எங்கிட்ட இருக்கு...அதுக்குத் தைரியமில்லாத முட்டாள் நீதான்?'

'பேசிக்கிட்டேயிருக்கே....? கொல்லத்தான என்னை இங்க கொண்டு வந்தே Go ahead! 'ரொம்ப கோபமாயிருக்கேல்ல. ஆனா உன்னால என்னக் கொல்ல முடியாது!'

'அப்படியா!'

'ஆனா..எந்த உறுத்தலும் இல்லாம உன்ன என்னால கொல்ல முடியும். உன்னோட முட்டாள்தனமான சட்டம் நீ ஆசைப்படற எதையுமே செய்ய விடாது. நீ என்னைக் கொன்னுட்டா உன்னோட மிடில்க்ளாஸ் மனசாட்சி உன்ன உறுத்தி உறுத்திக் கொன்னுடும். என்னைக் கொல்றதுக்காக நீ நம்பற நேர்மையை நீ மதிக்கிற காக்கிச்சட்டையை கறைபடுத்த முடியும்னா அதுவும் எனக்கு வெற்றிதான். Go ahead! I'm honoured go ahead!


'பத்ரி! இந்த விளையாட்டுல ஜெயிக்கிறதோ தோற்கிறதோ முக்கியமில்ல. சாகிறதும் உயிரோட இருக்கிறதும்தான். Thanks, நல்ல நேரத்தில நல்லபுத்தி சொன்னே. ஆனா.. கெட்டிக்காரத்தனமாப் பேசி சாவுலருந்து தப்பிச்சிட்டதா நெனைக்காதே.. இன்னும் கொஞ்ச நாள்ல சாகிற வரம் கேட்டு நீ என்கிட்ட கெஞ்சப்போறே. வீரம்னா என்ன தெரியுமா? பயம் இல்லாத மாதிரி நடிக்கிறதுதான். உன் பயத்தை உன் கண்ணுல நா பார்த்திட்டேன்! அதை மெதுவா..நிதானமா..வெளிய கொண்டு வந்து ஒனக்கே அறிமுகப்படுத்தியிருக்கிறேன். நான் அதுல எக்ஸ்பர்ட்!'

இப்படிப் போகிறது நண்பர்களே, அந்த உரையாடல்.


இவை ஏறத்தாழ பத்து வருடங்களுக்கு முன்பு திரையிடப்பட்ட குருதிப் புனல் படத்தில் வரும் உரையாடல்கள். இவற்றில் அடங்கியிருக்கும் கருத்துகள்  நம் ஒவ்வொருவருக்கும் உடன்பாடானவையா இல்லையா என்பது தெரியாவிட்டாலும்  அவை  இன்றும் கூட உறைக்கின்ற -யதார்த்தங்கள் என்றாவது புரிந்து கொள்ளலாம் அல்லவா?


இதைப்பற்றி உங்கள் கருத்துகளைக் கூறுங்கள் நண்பர்களே!


-'Mutur' Mohammed Rafi

No comments:

Post a Comment