Tuesday, January 3, 2012

இன்னா செய்தாரை...!



ஒரு அதிபரும்  
ஒரு இறப்பர் முத்திரையும்!







முதல்நியமனம் கிடைத்து தொடர்ச்சியாக நான்கு வருடங்கள் எனது ஊரிலுள்ள பாடசாலையில் கடமையாற்றியபின்பு திருகோணமலை வலயத்திலுள்ள பாடசாலை ஒன்றிற்கு இடம் மாற்றம் பெற்று வந்திருந்தேன்.


அது ஆறாம் தரம் வரை மட்டுமேயுள்ள ஓர் சிறு பாடசாலை. ஒழுங்கான சுற்றுமதிலோ அடைப்புவேலியோ கிடையாது. அங்கு கடமையாற்றும் அதிபர் முதல் ஆசிரியர்கள் வரை அநேகர் நகரிலிருந்து வந்து செல்பவர்கள். இதனால் ஏறத்தாழ காலையில் கூடி பிற்பகலில் கலையும் அங்காடி போலத்தான் பாடசாலையும் நடந்து வந்தது.


அதிபர் நடுத்தர வயதைத் தாண்டிய மனிதர்.


நேர முகாமைத்துவம் என்றால், 'அது எந்த ஊருக்குப்போகும் வழி?' என்று கேட்பார். காலைக் கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போது தான் வீட்டிலிருந்து கொண்டு வந்திருக்கும் உணவுப் பொதியைப் பிரித்து பாண் துண்டுகளை மென்று தின்னும் அவரிடம் தனிமனித ஒழுக்கம் எவ்வாறிருக்கும் என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளலாம்.


அவருக்கு பாடசாலை நடவடிக்கைகளை விட அவர் வீட்டில் வைத்து நடாத்தும் துணிமணி வியாபாரமே முக்கியமாக இருந்தது. இதனால் காலையில் பாடசாலைக்கு நேரம் கழித்துத்தான் வருகை தருவார். அவரது அலுவலகம் திறக்கும் வரை ஆசிரியர்கள் உட்பட அனைவரும் காத்துக்கிடக்க வேண்டும்.


அதிபர் அல்லது அவரது உதவியாகச் செயற்பட்ட ஓர் பறங்கி இனத்தவரான ஆசிரியை வந்து, பக்கத்து வீடொன்றில் இருந்து அலுவலகத் திறப்புக்கோர்வையைப் பெற்று வந்தால்தான் பாடசாலைச் சுத்தம் உட்பட சகல கருமங்களும் ஆரம்பிக்கும். இதற்கிடையில் நேரம் முதலாம் பாடவேளை முடிவடைவயும் தறுவாயாகிவிடும்.



எனது கிராமத்து பாடசாலையில் சிறந்த முகாமைத்துவத்தின் கீழ் கடமையாற்றிப் பழகியிருந்த எனக்கு இந்தப்பாடசாலை நிருவாகத்தின் கீழ் பணிபுரிவது எப்படியிருந்திருக்கும். எவ்வளவுதான் முயன்ற போதிலும் இவரது நேர்த்தியற்ற போக்குகளுடன் சமரசம் செய்ய முடியாதிருந்தது. அத்துடன் நிர்வாக ரீதியாகச் சில தொல்லைகளையும் எனக்கு தர ஆரம்பித்திருந்தார். இதனால் அதிபருக்கும் எனக்குமிடையிலே சிறுசிறு முரண்பாடுகள் ஏற்படலாயின.

அது  ஒரு பிரச்சினையாக வெளித்தோன்றுவதற்கிடையிலே சிறிதுகாலம் பனிப்போர் நிலையில் இருந்து வந்தது. அந்தப் பனிப்போர் காலத்தில் நிகழ்ந்த சுவாரசியமான அனுபவம்தான் இது!








நான் முரண்பட்டதிலிருந்து அதிபருக்கு என்னிலும் மற்றவர்களிலும் சந்தேகம் தோன்றி  வலுவடைய ஆரம்பித்தது. தனது நடவடிக்கைகளில் அதிருப்தியுற்றிருக்கும் நானும் மற்றவர்களும் எங்கே தனக்கு ஏதாவது சதி செய்து விடுவோமோ என்று உள்ளுக்குள் நடுங்கத் தொடங்கினார். அதுவும் குறிப்பாக என்னில்தான் அதிக ஐயம் கொண்டிருந்தார் அவர்.


அந்தப் பீதியில் அடுத்த வகுப்பறைக்குச் செல்வதென்றால் கூட தனது அலுவலகத்தை  பூட்டிவிட்டுத்தான் செல்வார்.  அதிபரது இந்த அவசியமற்ற குலைநடுக்கத்தைப் பார்த்து ஆசிரியர்களாகிய நாங்கள் உள்ளுக்குள் சிரித்துக் கொள்வதுண்டு.  நாள் செல்லச் செல்ல அவரது பீதி முற்றி அலுவலக இறப்பர் முத்திரைகளைக் கூட தனது காற்சட்டைப் பைகளுக்குள் வைத்துக்கொண்டு அலையுமளவுக்கு ஆகிவிட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.


ஒருநாள் மதிய நேரம் புழுக்கம் தாங்காமல் அலுவலகத்தை  பூட்டிவிட்டு மைதானத்தினருகேயிருந்த மாமரத்தின் கீழே உலாவிக் கொண்டிருந்தார் அதிபர். அவ்வாறு உலாவிக் கொண்டிருந்தவர் சட்டென தனக்குப் பின்னே யாரோ நடமாடுவது கண்டு திரும்பினார்.


ஒரு மாணவன் தனது உள்ளங்கைகளைப் பொத்தியவாறு நின்றிருந்தான்.


'சேர்! இந்தாங்க, இது கீழே எங்கேயோ விழுந்து கிடந்துதாம். இதை உங்களுக்கிட்ட குடுத்திட்டு வரச் சொன்னார்'   என்றபடி அவன் நீட்டிய கையில் இருந்தது,


அதிபரது இறப்பர் முத்திரை!


'இது எப்படிடா..?' என்று குழம்பிய அதிபர் அவசர அவசரமாக தனது காற்சட்டைப்பையினுள் கைவிட்டுத்தடவிப் பார்த்தார். அது கிழிந்து ஓட்டையாகி இருந்தது!


அவமானத்தில் முகம் சிவந்த அவர்,  "யார் தந்தது?" என்றார், ஆச்சரியத்துடன்.


'அந்தா நிக்கிறாரு... அந்த சேர்தான்' என்று அந்த மாணவன் கை காட்டிய திசையில் நின்று கொண்டிருந்தவன் வேறு யாருமல்ல;

அடியேன்தான்!



-மூதூர் மொகமட் ராபி


No comments:

Post a Comment