Tuesday, August 23, 2011

மிகப்பெரும் சமூக ஆபத்தை நோக்கி...



ஏன் இந்த மர்ம மனிதர்கள்?











ன்ன தலைப்பு குழப்புகின்றதா? உண்மைதான்! 'யார் இந்த...' என்றுதான் தலைப்பிட்டிருக்க வேண்டும். ஆனால்  'ஏன் இந்த...' என்பதுதான் பொருத்தம் என்பதை இக்கட்டுரையை முழுமையாக வாசித்தால் புரியும்.

அண்மைக்காலமாக மர்மமனிதர்களைப் பற்றி யாராவது ஏதாவது பேசாதிருந்தால் ஒன்றில் அவர்கள் ஊமைகளாகவோ அல்லது சுய உணர்வு இல்லாதவர்களாகவோதான் இருக்க முடியும். அந்தளவுக்கு நமது மக்கள் அனைவரினதும் குறிப்பாக தமிழ், மற்றும் தமிழ்பேசும் மக்கள் வாழுமிடங்களில் பேசு பொருளாக மாறிவிட்டார்கள்  இந்த மர்ம மனிதர்கள்.

இவர்கள் யார்....? என்பதுதான் இன்று பலரின் கேள்வியாக இருந்து வருகின்றது. இதைப்பற்றி எழுதாத பத்திரிகைகளோ ஊடகங்களோ கிடையாது எனலாம். அந்தளவுக்கு எல்லோரும் உண்மைகளையும் அவற்றோடு சேர்த்து தங்கள் கற்பனைகளையும் கலந்து நிறையவே எழுதி விட்டார்கள்.

இவர்கள் யார் என்ற கேள்விக்கு தற்போது நாட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து வரும் சம்பவங்களும் அந்தச் சம்பவங்கள் அனைத்திலும்  தெளிவாகத் தோன்றும்  பொதுவான தன்மைகளும்  பதிலை யூகிப்பதற்கு உதவி வருகின்றன. அந்தச் சம்பவங்களின் இடமும் ஆட்களும்தான் வேறுபடுகின்றார்களே தவிர மற்றப்படி இந்த மர்ம மனிதர்களின் தாக்குதல் சம்பவங்களில் பொதுவான நான்கு அல்லது ஐந்து அம்சங்கள்தான் சாரமாக உள்ளது.

1. பாதுகாப்பற்ற வீடுகளில் உள்ள அல்லது சுலபமாக அணுகக்கூடிய பெண்களை இலக்கு வைத்து மறைந்திருந்து தாக்குதல்.

2. தாக்கிவிட்டுத் சடுதியாகத் தப்பியோடுதல் அல்லது பிரதேசவாசிகளிடம் அகப்படுதல்

3. தாக்கி விட்டுத் தப்பியோடினால் குறிப்பிட்ட 'சில இடங்களை' நோக்கி ஓடிச்சென்று மறைதல் அல்லது பிரதேசவாசிகளிடம் மாட்டிக்கொண்டால் சட்டத்தின் கைகளில் ஒப்படைக்கப்படல்.

4. அவ்வாறு  ஒப்படைக்கப்பட்ட  பின்பு தடுத்து வைத்தலோ அல்லது நீதிமன்ற விசாரணையோ இன்றி விடுவிக்கப்படல்.

5. மர்ம மனிதர்கள் வெறும் வதந்திதான். பொதுமக்கள் யாரும் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று  மக்களுக்குத் தெரிவித்தல்.

இப்போது யோசித்துப் பாருங்கள்... இவற்றைச் செய்பவர்கள் யார் என்பது இலேசாகப் புரிந்திருக்கும். 'ஓ! அதுதான் எங்களுக்கு எப்பவோ தெரியுமே' என்பவர்கள் முதலில் ஒன்றைப் புரிந்து கொண்டால் நல்லது. யார் என்பதை யூகிப்பது ஒன்றும் சிரமமில்லைதான். ஆனால் இதை ஏன் அவர்கள் செய்கின்றார்கள்..? என்பதற்கு விடை காண்பதற்கு நாம் இந்த விடயத்தை சற்று ஆழமாக நோக்கியாக வேண்டும்.

முதலில் ஒன்றைப் தெரிந்து கொள்ளுங்கள். இந்தத் தாக்குதல்களைச் செய்பவர்கள் நமது சமூகத்திலே சாதாரணமாக காணப்படும் தொழில்ரீதியான திருடர்களோ பகுதி நேரத் திருடர்களோ கிடையாது. இவை எதுவுமே திருட்டுக்கான தாக்குதல்கள் அல்ல. ஏனெனில் இதுவரை அறியப்பட்ட தாக்குதல்களில் திருட்டுக்கான எந்த ஆதாரமும் இதுவரை அகப்படவில்லை. சிறுசிறு குற்றச் செயல்களிலே ஈடுபடுகின்ற சமூகவிரோதிகளோ அல்லது மனப்பிறழ்வு ஆசாமிகளோ கூடக் கிடையாது. ஏனெனில் சிறிதும் பயமின்றி குறுகிய நேரத்துக்குள் தாக்குதலைத் திட்டமிட்டுச் செய்யும் பாணியே அதைக் கூறுகின்றது.

வழமையான நமது மாண்புமிகு ஊர்த் திருடர்கள் சமூகவிரோதிகளிடம் ஒரு பழக்கமுள்ளது. 'எங்கே மாட்டிக் கொண்டுவிடுவோமோ'  என உள்ளுர்வாசிகளுக்கு பயந்து பயந்துதான் எதையாவது செய்வது வழமை. அப்படிச் செய்யும்போது பரபரப்புக் காரணமாக நிறைய விடயங்களைச் சொதப்பலாகச் செய்து மாட்டிக் கொள்வார்கள். அல்லது தடயங்களை விட்டுச் செல்வார்கள்.

இந்த மர்ம மனிதர்கள் யாரும் எதிர்பாராத நேரத்திலே  திடீரெனத் தாக்குவது, எவ்வளவு உயரமான இடங்களுக்கும் சட்டெனத் தாவிக்குதித்தேறிச் செல்வது, விரைவாக ஓடுவது, சட்டென மறைந்து கொள்வது தங்களை மறைத்துக் கொள்ள சில திரவியங்களைப் பூசிக்கொள்வது ஆகிய நேரில் பாரத்த பொதுமக்களின் வர்ணனைகளை வைத்துப் பார்க்கும் போது நிச்சயமாக இவர்கள் திறமையாகப் பயிற்சி பெற்ற ஆட்களாகத்தான் இருக்க வேண்டும்.

தவிர இரவு பகலாகக் காவலிருக்கும் உள்ளுர்வாசிகளின் கண்காணிப்பையும் தாண்டி எந்த வேளையிலும் தங்களது தாக்குதல் இலக்குக்கு வந்து சேருவதும் தாக்குதல் முடிவடைந்ததும் உடனடியாக இடத்தை விட்டு அப்புறப்படுவதும் சந்தேகத்துக்குரியதாகவுள்ளது. பொதுமக்கள் பலரின் அபிப்பிராயப்படி 'சில வாகனங்கள்' ஊருக்குள் வந்து சென்ற பின்புதான் இவர்கள் வருவதும் அதேபோல மறைவதும் இடம்பெறுகின்றது. எனவே இந்த மர்ம மனிதர்களின் நடவடிக்கைகளின் பின்னணியில் சமூகத்தில் அங்கீகாரம் பெற்ற சில வலுவான சக்திகள் இருந்து வருகின்றன என்பதை நாம் அனுமானிக்கலாம்.

அதுமட்டுமன்றி வழமையாக பசிக்குத் தேங்காய் திருடும் ஓர் ஏழைத் தொழிலாளியைக் கூட ஆர்ப்பட்டமாய் 'கண்டுபிடிக்கும்'  அத்துடன் நையப்புடைத்து வீரத்தைக் காட்டும் நமது சட்டத்தின் காவலர்கள் இந்த மர்ம மனிதர்கள் விடயத்தில் மட்டும் ஏன் இவ்வளவு கருணாமூர்த்திகளாக இருக்கின்றார்கள்?

தொழிலுக்கும் செல்லாமல் இரவு முழுவதும் தூக்கமின்றி கூட்டமாகக் கண்விழித்திருந்துக் காவலிருந்து, பலர் முன்னிலையில் கையும் களவுமாகப் பிடித்துக் கொடுக்கப்படும் சந்தேக மர்ம நபர்களை ஒரு மரியாதைக்காவது தடுப்புக்காவலுக்குட்படுத்தாமல் விடுவித்து விடுமளவுக்கு அகிம்சா மூர்த்திகளாக அதுவும் ஒரே சமயத்தில் ஆகிப்போனதன் மர்மம்தான் என்ன?

இதனை திட்டமிட்டு நடாத்துபவர்களை பொதுமக்களின் கோபாவேசமான தாக்குதல்கிளிலிருந்து காப்பாற்றுவது ஒன்றுதான் ஏதோ தங்களது தலையாய கடமை என்பது போலவும் மற்றதெல்லாம் வதந்தி என்பது போலவும்தான் நடந்து கொள்கின்றார்கள்,  நமது வரிப்பணத்திலே நம்மைப் 'பாதுகாக்கும்' நமது சட்டத்தின் காவலர்கள்! என்ன வேடிக்கை இது.

வீதி விபத்தில் பாதசாரியை மோதிவிட்டுத் காவல் நிலையத்தை நோக்கித் தப்பியோடும் பஸ் சாரதியையும் இந்த மர்ம மனிதர்களையும் ஒன்றுபோலவே பார்க்கும் நமது காவல் தெய்வங்களின் கருணைதான் என்னே. ஆகா..ஆகா..அற்புதம்!

எது எவ்வாறான போதிலும் இந்த மர்மங்களுக்கு ஒரு வலுவான பின்னணி இருக்கத்தான் செய்கின்றது. இந்த திட்டமிட்டு வரவழைத்துக் கொண்ட பயங்கர நிலைமையை வைத்து எதைச் சாதிக்க விரும்புகின்றார்களோ அதற்கு எதிர்மாறான நிலைமையையே சம்பந்தப்பட்டவர்கள் எதிர்கொள்ள நேரிடும் என்பது மட்டும் உறுதி.

இதற்காகச் செய்யப்படும் தகிடுதத்தங்களை எத்தனை சாதுரியமாக மறைத்தாலும் கூட உண்மை எனும் சூரியன் ஒருநாள் எதிர்பாரத திசையில்; உதிக்கவே செய்வான். அன்று, இதற்கு முன்பு இவ்வுலகில் இறுமாந்து வாழ்ந்த எத்தனையோ ஆதிக்க சக்திகளின் இரும்புக் கோட்டைகள் தவிடுபொடியானதைப் போல இந்த மக்கள் விரோத சக்திகளும் மண்ணோடு மண்ணாகியே ஆகவேண்டும் என்பது மட்டும் நிஜம்.

இறுதியாக....

 இதை எழுதிக் கொண்டிருக்கும்போது கடைசியாகக் கிடைக்கும் செய்திகளின்படி தற்போது அடுத்தடுத்து நடந்து வரும் சம்பவங்களால் விரக்தியுற்ற பொதுமக்கள் தங்கள் எஜமானர்களின் சம்பிரதாயமான ஆலோசனைகளையும் பசப்புரைகளையும் தூக்கி வீசிவிட்டு சட்டத்தை தங்களது சொந்தக் கைகளிலே எடுத்து விட்டிருக்கின்றார்கள் என்று தெரியவருகின்றது.


இது மட்டும் தொடரும் உண்மையானால், நமது நாட்டில்  இதுவரை நடந்த எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிட்டுவிடக்கூடிய மிகப்பெரிய சமூக ஆபத்து இது ஒன்றுதான்! 


-Jesslya Jessly



இரத்தத்தில் கையை நனைப்பவன் கண்ணீரால்தான்
அதைக் கழுவியாக வேண்டும்!

No comments:

Post a Comment