Wednesday, June 11, 2014

நந்திக்கடலில் உண்மையில் நடந்தது என்ன?




 
Print Friendly
ltte.prabakaran-dead-20விடுதலைப் புலிகளின் தலைவராக இருந்த பிரபாகரன், யுத்தமுனையில் உயிரிழந்து 5 ஆண்டுகள் முடிகின்றன. பற்பல காரணங்களுக்காக இதை நன்கு தெரிந்த சிலர்கூட, வெளியே சொல்ல விரும்புவதில்லை. வேறு சிலருக்கோ, இப்போது பிரபாகரன் இறந்து விட்டார் என்பது தெரியும். ஆனால், எப்படி இறந்தார் என்பது தெரியாது.

இதைப்பற்றி எந்த தமிழ் மீடியாவும் வாய் திறக்க விரும்புவதில்லை. காரணம், துரோகிப் பட்டம் கிடைக்கலாம் என்ற அச்சம். நாமும் (விறுவிறுப்பு) இது பற்றி எழுதவில்லை. காரணம், எம்மிடமும் முழுமையாக தகவல்கள் இதுவரை இருக்கவில்லை.
பிரபாகரன் இறந்த விதம் எப்படி என்பதை யாரிடம் கேட்டு அறியலாம் என்றால், தற்போது உள்ள ஒரே சாய்ஸ், இலங்கை ராணுவம் தான்.
யுத்தம் முடிந்தபின் சமீபத்தில் இலங்கையில் பாதுகாப்பு அமைச்சகத்தின் அனுமதியுடன் சில ராணுவ உயரதிகாரிகளிடம் இருந்து பெற்ற தகவல்களை தொகுத்து இந்த கட்டுரையில் தருகிறோம்.
 

2009-ம் ஆண்டு மே, 17-ம் தேதி. மாலை 4 மணி.

முள்ளிவாய்க்கால் பகுதியில் மிகச் சிறிய இடத்துக்குள், சுமார் 2 சதுர கி.மீ. பரப்பளவுக்குள் விடுதலைப் புலிகளை பாக்ஸ் அடித்துவிட்ட ராணுவத்தின் வெவ்வேறு படைப்பிரிவுகள், யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் இறுதி தாக்குதலுக்கு தயாராகின.
இந்த நேரத்துக்குள், புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் இருந்த பொதுமக்கள் ஏராளமான எண்ணிக்கையில், ராணுவம் நின்றிருந்த பகுதிக்குள் செல்ல தொடங்கி விட்டனர். ஆரம்பத்தில் நூற்றுக்கணக்கில் என்று தொடங்கி, பின் ஆயிரக் கணக்கில் பொதுமக்கள் ராணுவப் பகுதியை நோக்கி நகரத் தொடங்கியதை, விடுதலைப் புலிகளால் தடுக்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.

இரவு 7 மணி.

அதிரடிப்படை-8 முற்றுகையிட்டு நின்றிருந்த இடத்தின் ஊடாக சரணடைய வந்த ஆயிரக்கணக்கானவர்களை சோதனை செய்து, ராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் அனுப்பிக்கொண்டு இருந்தார்கள். அந்த கூட்டத்தில், துப்பாக்கியை வீசிவிட்டு, சரணடைய வந்த விடுதலைப் புலிகள் உறுப்பினர்களும் அதிக எண்ணிக்கையில் இருந்தார்கள்.

இரவு 10 மணி.

இதற்குமேல் சரணடைய வந்தவர்கள் யாரையும், ராணுவ பகுதிக்குள் உள்ளே அனுமதிப்பதில்லை என முடிவு எடுக்கப்பட்டது. காரணம், இந்த பகுதியூடாக விடுதலைப் புலிகள் அதிக எண்ணிக்கையில் சரணடைவதால், இருளில் சரணடைவது போல வந்து புலிகள் தாக்குதல் நடத்தலாம் என்ற முன்னெச்சரிக்கை.

18-ம் தேதி அதிகாலை 1.30 மணி.

அதிரடிப்படை-8 தளபதி கர்னல் ஜி.வி.ரவிப்பிரியவுக்கு காவலரணில் இருந்து போன் அழைப்பு வந்தது. “சுமார் 100 பொதுமக்கள் சரணடைய வேண்டும் என்று வந்திருக்கிறார்கள்”
“இரவில் யாரையும் அனுமதிக்க முடியாது. அவர்களை நாளை காலை பகல் வெளிச்சத்தில் வரச் சொல்லுங்கள்” என்றார் ரவிப்பிரிய.
இதற்கு காவலரணில் இருந்த ராணுவ அதிகாரி, “இந்த பொதுமக்கள் கடலேரியில் (நந்திக்கடலுடன் இணைப்பாக உள்ள ஏரி) நிற்கிறார்கள்.
இடுப்பளவு தண்ணீரில் நின்றபடி, தம்மை அனுமதிக்கும்படி கோருகிறார்கள். பெண்கள், குழந்தைகளும் உள்ளார்கள். குழந்தைகள் வீரிட்டு அழுகின்றன” என்றார்.
“எப்படி இருந்தாலும் அனுமதிக்க முடியாது. அவர்களை மீண்டும் நாளை வரச் சொல்லுங்கள்”
இந்த தகவல், தண்ணீரில் நின்றிருந்த பொதுமக்களுக்கு சொல்லப்பட்டது. “வந்த வழியே திரும்பி போங்கள். மீண்டும் நாளை வாருங்கள்”
தம்மை உள்ளே அனுமதிக்க மாட்டார்கள் என்பது அந்த பொதுமக்களுக்கு நன்கு புரிந்தவுடன், காட்சி மாறியது. பெண்கள், குழந்தைகளுடன் நின்றிருந்த ‘பொதுமக்கள்’ 20 பேர், தமது பைகளில் இருந்து பல ரகத்திலான துப்பாக்கிகளை எடுத்தார்கள்.
58-வது கெமுனு வாட்ச் படைப்பிரிவால் அமைக்கப்பட்டிருந்த காவலரண்கள் இரண்டை நோக்கி சுட்டபடியே, அந்த இடத்தில் ராணுவ முற்றுகையை உடைக்க முயன்றார்கள்.
முள்ளிவாய்க்காலுக்குள் முடிக்கப்பட்டு இருந்த புலிகளின் முக்கியஸ்தர்கள், ராணுவ முற்றுகையை உடைத்துக்கொண்டு, வெளியேறும் திட்டம் இது என்று ராணுவத்துக்கு புரிந்து போனது. துப்பாக்கியால் சுட்டபடி தண்ணீரில் முன்னேறி வந்தவர்களை நோக்கி, அதிரடிப்படை-8 ராணுவத்தினர் திருப்பி சுட தொடங்கினார்கள்.
இதையடுத்து, துப்பாக்கியால் சுட்டபடி முன்னேற முயன்றவர்களால் நேரே வர முடியவில்லை. தண்ணீருக்கு உள்ளே இடது புறம் திரும்பி ஓடி, நந்திக் கடலோரம் தண்ணீரில் வளர்ந்திருந்த புதர்களுக்குள் மறைந்தார்கள். அந்த புதர்களை நோக்கி, அதிரடிப்படை-8 ராணுவத்தினர் RPG (Rocket-Propelled Grenade) தாக்குதலை நடத்தினார்கள்.
ராக்கெட்டுகள், அந்த புதர்களை சிதறடித்ததில், அதற்குள் மறைந்திருந்த அனைவரும் கொல்லப்பட்டனர். சில மணி நேரத்தின் பின் சூரிய வெளிச்சம் வந்தபின், புதர்களுக்குள் இறந்து கிடந்தவர்களின் உடல்களை ராணுவம் வெளியே இழுத்து போட்டபோது, விடுதலைப் புலிகளின் தளபதிகள் சூசை, சொர்ணம், ஆகிய இருவரும் அடையாளம் காணப்பட்டனர்.
அந்த 20 பேரில் பிரபாகரன் இல்லை.

மீண்டும் சற்று பின்நோக்கி போகலாம். 17-ம் தேதி. இரவு 7 மணி.

சவிந்திர சில்வா தலைமையிலான 58-வது படைப்பிரிவினர், கும்மிருட்டு காரணமாக அன்றைய ஆபரேஷனை நிறுத்தினார்கள். இதையடுத்து, முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து புறப்பட்ட சவிந்திர சில்வா, கிளிநொச்சியில் அமைந்திருந்த 58-வது படைப்பிரிவு தலைமையகத்துக்கு செல்ல கிளம்பினார். அவர் கிளிநொச்சியை சென்றடைந்த போது, நள்ளிரவு நேரமாகி விட்டிருந்தது.
58-வது படைப்பிரிவு தலைமையகத்தில், முள்ளிவாய்க்காலுக்கு மேலே பறந்து கொண்டிருந்த உளவு விமானம் எடுத்து அனுப்பிய போட்டோக்களை ஆராய்ந்து கொண்டிருந்தார் சவிந்திர சில்வா.

நேரம் அதிகாலை 1.30.

இந்த நேரத்தில், முள்ளிவாய்க்கால் 58-வது படைப்பிரிவு ஆபரேஷன் சென்டரில் இருந்து போன் அழைப்பு வந்தது. விடுதலைப் புலிகள் ராணுவ முற்றுகையை உடைப்பதற்காக தாக்குதல் நடத்துவதாகவும், 53-வது படைப்பிரிவு முற்றுகையிட்ட இடத்தில் தாக்குதல் நடப்பதாகவும் சொல்லப்பட்டது.
53-வது படைப்பிரிவின் முற்றுகை லைன் மீது தாக்குதல் நடந்தால், அதற்கு அடுத்ததாக உள்ள முற்றுகை லைன், தமது படைப்பிரிவாக 58-வது டிவிஷனுக்குரியது என்பதால், மீண்டும் முள்ளிவாய்க்கால் நோக்கி புறப்பட்டார் சவிந்திர சில்வா.
கிளிநொச்சியில் இருந்து முள்ளிவாய்க்கால் நோக்கி புறப்பட்ட சவிந்திர சிலாவாவின் ஜீப் புதுக்குடியிருப்பை நெருங்கிய நிலையில், அவரது வாக்கி-டாக்கியில் அழைத்தால், ராணுவ உளவுப்பிரிவை சேர்ந்த அதிகாரி ஒருவர்.
“53-வது படைப்பிரிவின் முற்றுகை லைனை உடைக்க தாக்குதல் நடத்தும் குழுவில், பிரபாகரனும், பொட்டு அம்மானும் இருப்பதாக தகவல் கிடைத்தது. அவர்கள், அங்கிருந்த ராணுவ அம்புலன்ஸ் ஒன்றை கைப்பற்றியிருப்பதாக புலிகளின் ரேடியோ ட்ராக்ஸ்மிஷனில் இருந்து தெரிகிறது” என்றார் உளவுப்பிரிவு அதிகாரி.
இதையடுத்து ஜீப்பில் இருந்தபடியே தனது படைப்பிரிவுக்கு உத்தரவிட்டார் சவிந்திர சில்வா, “அனைத்து வாகன நடமாட்டங்களையும் உடனே நிறுத்தவும். காயமடைந்தவர்களை ஏற்றிச் செல்லும் அம்புலன்ஸ் உட்பட, எந்த வாகனமும் அசையக்கூடாது.
இந்த நேரத்தில், 53-வது படைப்பிரிவின் முற்றுகை லைனை தாக்கிய விடுதலைப்புலிகள் அணி, 58-வது படைப்பிரிவின் முற்றுகை லைனை நோக்கி வந்துவிட்டது. மீண்டும் வாக்கி-டாக்கியில் ஒரு தகவல் வந்தது. “ராணுவ அம்புலன்ஸ் ஒன்று அந்த பகுதியில் நகர்கிறது. என்ன செய்வது?”
ஜீப்பில் பயணித்தபடியே பயரிங் ஆர்டர் கொடுத்தார் சவிந்திர சில்வா. அப்போது நேரம், அதிகாலை 3 மணி.
அம்புலன்ஸை நோக்கி 58-வது படைப்பிரிவினர் ராக்கெட் தாக்குதல் நடத்த, அது தீப்பிடித்தது. “அம்புலன்ஸூக்குள் இருந்தது யார் என பார்த்துவிட்டு உடனே எனக்கு தகவல் தாருங்கள்” என்றார், சவிந்திர சில்வா.
சில நிமிடங்களில் அந்த தகவல் வந்தது. “அம்புலன்ஸூக்குள் கருகிய நிலையில் இரு உடல்கள் உள்ளன. ஒன்று குள்ளமான பருத்த நபர். மற்றையவர் உயரமான நபர். முகங்கள் அடையாளம் தெரியாதபடி கருகியுள்ளன”
இதையடுத்து, அந்த இருவரும், பிரபாகரனும், பொட்டு அம்மானும் என நினைத்தார் சவிந்திர சில்வா. (ஆனால், அந்த உடல்களுக்கு உரியவர்கள், பிரபாகரனும், பொட்டு அம்மானும் அல்ல)
பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார் என நினைத்த சவிந்திர சில்வா, முள்ளிவாய்க்கால் செல்லும் திட்டத்தை கைவிட்டு, புதுக்குடியிருப்பு சந்தியில் அமைந்திருந்த 53-வது டிவிஷன் தலைமையகத்தை சென்றடைந்தபோது, நேரம் அதிகாலை 5 மணி.
அங்கே அவருக்கு மற்றொரு செய்தி காத்திருந்தது. 53-வது படைப்பிரிவு முற்றுகை லைனை உடைக்க வந்த விடுதலைப் புலிகளின் ஒரு பிரிவினர், முற்றுகை லைனை உடைத்துக்கொண்டு, ஏற்கனவே 58-வது படைப்பிரிவால் கிளியர் செய்யப்பட்ட யாருமற்ற பகுதிக்குள் (No man’s land) சுமார் 1 கி.மீ. வரை இருளில் சென்று விட்டது தெரியவந்தது.
உடனடியாக, ராணுவ வாகனங்களில் துரத்திச் சென்று அவர்களை தாக்கினர், ராணுவத்தினர். சிலர் கொல்லப்பட்டனர், சிலர் காயமடைந்து வீழ்ந்த நிலையில் கைப்பற்றப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் ஒருவர், பிரபாகரனின் மகன் சார்ள்ஸ் ஆன்டனி.
சார்ள்ஸ் ஆன்டனி கொல்லப்பட்டபோது, கையில் ஒரு துப்பாக்கியுடன் இருளில் ஓடிக்கொண்டு இருந்தார்.
 
ltte.prabakaran-dead-21

மீண்டும் சற்று பின்நோக்கி போகலாம். 2009-ம் ஆண்டு மே, 17-ம் தேதி. மாலை 6 மணி.

விடுதலைப் புலிகள் இருந்த சிறிய பகுதியை சுற்றி முற்றுகையிட்டிருந்த இலங்கை ராணுவ படைப்பரிவுகளில், 58-வது, 59-வது படைப்பிரிவுகளின் முற்றுகை லைன் பாதுகாப்பு ஏற்பாடுகளை செக் பண்ணிக்கொண்டு இருந்த தளபதி லெப். கர்னல் செனக விஜேசூர்யவுக்கு போன் அழைப்பு வந்தது.
பேசியவர், வன்னி ஆபரேஷன் கமான்டர், மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூர்ய.
“விடுதலைப் புலிகளின் ரேடியோ தொடர்புகளை ஒட்டுக் கேட்டதில் இருந்து, இன்றிரவு அவர்கள் முற்றுகை லைனை உடைத்துக் கொண்டு வெளியேறும் திட்டம் ஒன்று வைத்திருப்பது தெரிகிறது. அவர்கள் தமது ரேடியோ உரையாடலில் படகுகள் பற்றி பேசினர். எனவே, இந்த தாக்குதல் நந்திக்கடல் பக்கம் இருந்து வரலாம். உங்களது டிவிஷன் பாதுகாப்பு லைனை பலமாக வைத்திருங்கள். இன்றிரவு தாக்குதல் நடக்கலாம் என சொல்கிறது எம்.ஐ. (மிலிட்டரி இன்டெலிஜென்ஸ்)” என்றார்.
செனக விஜேசூர்யாதான், 59-வது படைப்பிரிவு, நந்திக்கடல் கரையில் முற்றுகை லைன் அமைத்திருந்த செக்டருக்கு கமாண்டர்.
மாலை 6 மணிக்கு இருட்ட தொடங்கியிருந்த நேரத்தில், நந்திக்கடல் பகுதியில் எந்த நடமாட்டமும் இல்லை என்பதை அவர் கவனித்தார்.
இந்த நந்திக்கடல் என்பது கடல் ஏரி. சுமார் 5 கி.மீ. அகலமானது. சில இடங்களில் இடுப்பளவு தண்ணீர் (மேலே போட்டோ பார்க்கவும்) சில இடங்களில் ஆழம் அதிகம். கரையில் சில இடங்களில் மாங்குரோவ் புதர்கள் உள்ளன.

இரவு 7 மணி.

நந்திக்கடலில் தொலைவில் இரு படகுகள் வருவது முழுமையாக இருள் சூழாததால் சாதாரண கண்களுக்கே தெரிந்தன. இரு படகுகளும் கடல்புலிகளின் படகுகள் என்பதை அவற்றின் ஷேப்பை வைத்தே தெரிந்து கொள்ள முடிந்தது. 59-வது படைப்பிரிவு முற்றுகை லைன் இருந்த இடத்தை நோக்கி வந்த இரு படகுகளும் கரையில் இருந்து 2 கி.மீ. தொலைவில் நின்று விட்டன.
கரையில் முற்றுகை லைனில் இருந்த தனது சிப்பாய்களுக்கு, படகுகளை நோக்கி சுட வேண்டாம் என கடுமையாக உத்தரவு கொடுத்திருந்தார், செனக விஜேசூர்ய. “படகில் இருந்து சுட்டால்கூட திருப்பி சுட வேண்டாம்”
இதற்கு காரணம் என்னவென்றால், கரையில் இருந்து இவர்கள் சுட்டால், எந்தெந்த இடங்களில் இவர்களது சக்தி வாய்ந்த துப்பாக்கிகள் உள்ளன என்பதை கடல்புலி படகில் உள்ளவர்கள் தெரிந்து கொள்வார்கள் என்பதே!
கடல்புலி படகுகள் இரண்டும் அந்த காரணத்துக்காகதான் வந்து நின்றன போலிருக்கிறது. சுமார் அரை மணி நேரம் நின்று விட்டு, திரும்பி சென்றுவிட்டன.

இரவு 8 மணி.

மீண்டும் இரு படகுகள் வந்து அதே இடத்தில் நின்றன என்பதை military night google equipments மூலம் பார்க்க முடிந்தது. இம்முறை அந்த படகுகள் அரை மணி நேரத்தில் திரும்பி செல்லவில்லை. தொடர்ந்து அங்கேயே நின்றிருந்தன.

இரவு 11 மணி.

இரண்டு படகுகள் தெரிந்த இடத்தில் இப்போது 4 படகுகள் தெரிந்தன. 4 படகுகளில் ஒரேயொரு படகு கரையை நோக்கி வரத் தொடங்கியது. கரையில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் வந்துவிட்ட அந்தப் படகில் இருந்து கரையை நோக்கி சுட தொடங்கினார்கள். அந்த நேரத்தில் பின்னணியில் கரையில் இருந்து 2 கி.மீ. தொலைவில் பல படகுகள் தெரியத் தொடங்கின. அவை கரையை நோக்கி வேகமெடுப்பது தெரிந்தது.
விடுதலைப் புலிகள் 59-வது படைப்பிரிவு முற்றுகை லைனை உடைப்பதற்காக வந்து கொண்டு இருக்கிறார்கள் என்பது கரையில் இருந்த ராணுவத்துக்கு புரிந்தது.
அந்த இருளில், சுமார் எத்தனை படகுகள் வருகின்றன என்பதை கரையில் இருந்தவர்களால் ஜட்ஜ் பண்ண முடியவில்லை.
முதலில் கரைக்கு அருகே வந்த படகை நோக்கி சுடும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சில ரவுண்ட் மோட்டார் தாக்குதல்கள் அந்த படகை நோக்கி மேற்கொண்டதில், அந்தப் படகு மூழ்கியது.
இதற்குள் ஏராளமான எண்ணிக்கையில் படகுகள் கரையை நெருங்கி வரத் தொடங்கி விட்டன.
ராணுவம் கரையில் இருந்து சுடத் தொடங்கியது. சில படகுகள் மூழ்கின. சில படகுகள் தப்பி கரையை அடைந்தன. அதிலிருந்து விடுதலைப் புலிகள் சுட்டபடி கரையில் குதித்தார்கள்.
அடுத்த சில நிமிடங்களில் பெரிய வெடிச் சத்தங்கள் இரண்டை கேட்டார் செனக விஜேசூர்ய. 59-வது படைப்பிரிவின் முற்றுகை லைனில் இருந்த காவலரண்கள் வெடிப்பது தெரிந்தது.
விடுதலைப் புலிகளின் தற்கொலை படையினர், உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு, 59-வது படைப்பிரிவின் முற்றுகை லைனில் இருந்த காவலரண் பங்கர்களுக்குள் குதித்து வெடிகுண்டுகளை வெடிக்க வைத்ததால் ஏற்பட்ட வெடிப்பு அது.
அந்த இரு பங்கர்களுக்குள் இருந்த அனைத்து ராணுவத்தினரும், கொல்லப்பட்டனர்.
இப்போது, 59-வது படைப்பிரிவின் முற்றுகை லைனில் உடைப்பு ஏற்பட்டு விட்டது. அந்த இரு பங்கர்கள் இருந்த இடத்தில் யாரும் இல்லை.
படகுகளில் வந்த விடுதலைப் புலிகள், அந்த இடத்தின் ஊடாக ஊடுருவி செல்ல தொடர்ந்து சுட்டபடி ஓடிவந்தார்கள்.
முன்னால் வந்தவர்கள் தற்கொலை படையினர்.  இவர்கள்தான் நிஜ தாக்குதல் படை.
ராணுவம், தாம் இழந்த இரு பங்கர்களையும் மீண்டும் கைப்பற்றும் முயற்சியில் இறங்கவே இல்லை. அதற்கு என்ன காரணம் என்பதை அடுத்த சில நிமிடங்களில் விடுதலைப் புலிகள் தெரிந்து கொண்டார்கள்.
அந்த காரணம் என்ன தெரியுமா?
புலிகளின் தற்கொலை தாக்குதல்களால் இரு பங்கர்கள் அழிக்கப்பட்டு, பாதுகாப்பு லைன் உடைக்கப்பட்ட இடத்தை நோக்கி, ராணுவம் 12.7mm எந்திர துப்பாக்கிகளை இரு திசையில் இருந்தும் திருப்பி விட்டிருந்தது.
அந்த துப்பாக்கிகள் சடசடவென வெடிக்க தொடங்கின. முற்றுகை லைனை ஊடுருவி செல்ல ஓடிவந்த விடுதலைப் புலிகள், நேரே வந்து, 12.7mm எந்திர துப்பாக்கி குண்டு மழையில் சிக்கிக் கொண்டார்கள்.
சுமார் 15 நிமிட குண்டுமழைதான். தாக்குதலுக்கு வந்த அனைவரது துப்பாக்கிகளும் ஓய்ந்து விட்டிருந்தன. நேரமும் நள்ளிரவை கடந்து விட்டிருந்தது.
மறுநாள் காலைதான் (18-ம் தேதி), இந்த முற்றுகை உடைப்பு தாக்குதலுக்கு வந்த புலிகள் பற்றிய விபரத்தை ராணுவம் தெரிந்து கொண்டது.
நந்திக்கடல் கரையில், சுமார் 120 விடுதலைப் புலிகளின் உடல்கள் கிடந்தன. வந்த அனைவருமே, வாட்டசாட்டமான ஆட்கள். நன்கு ஆயுதம் தரித்திருந்தனர். ஒவ்வொருவரிடமும் இரவில் பார்க்கும் உபகரணங்கள், ஒவ்வொரு லைட் மெஷின் துப்பாக்கி, ஒவ்வொரு ஜெனரல் பர்ப்பஸ் மெஷின் துப்பாக்கி இருந்தன. ஒவ்வொருவரின் உடலிலும், தற்கொலை அங்கிகள் காணப்பட்டன.
அவர்களின் அடையாள பட்டிகளில் (dog tags) உள்ள இலக்கங்களை பார்த்தபோது, அவர்கள் புலிகளின் மிகவும் சீனியர் படையணி என்று தெரிந்தது.
இந்த தாக்குதலில் இருந்து ராணுவம் ஒரு விஷயத்தை புரிந்து கொண்டது.
புலிகளின் மிக சீனியர் அணி ஒன்றை, அதுவும் நூற்றுக்கு மேற்பட்டவர்களை, நன்கு ஆயுதம் தரித்து, அனைவருக்கும் தற்கொலை அங்கி கொடுத்து அனுப்புகிறார்கள் என்றால், அந்த வழியாக மிகமிக முக்கியமான ஒருவர் தப்பித்துச் செல்ல திட்டமிட்டு இருந்திருக்கின்றனர்.
அது அநேகமாக பிரபாகரனாக இருக்கலாம்.
ஆனால், தாக்குதல் தோல்வியில் முடிந்தது. 59-வது படைப்பிரிவின் பாதுகாப்பு லைனை உடைத்து ஊடுருவி செல்ல முடிந்திருக்கவில்லை.
இவர்களுக்கு பின்னால் வந்திருந்த பிரபாகரன், திரும்பி சென்றிருக்க முடியாது, அதே நேரத்தில் 12.7mm எந்திர துப்பாக்கி குண்டு மழையை கடந்து சென்றிருக்கவும் முடியாது என்பதை புரிந்து கொண்ட ராணுவம், மற்றொரு விஷயத்தையும் ஊகித்துக் கொண்டது.
அது என்னவென்றால், பிரபாகரனும், நந்திக்கடலை அண்மித்த பகுதியில் எங்கோதான் இருக்க வேண்டும்.
பெரும்பாலும் நந்திக்கடல் கரையில் மாங்குரோவ் புதர்கள் அடர்ந்த பகுதிகளில் மறைந்திருக்கலாம். அந்தப் பகுதியை அதுவரை ராணுவம் கிளியர் செய்திருக்கவில்லை.
 
 
lanka-20140518-2
 
(உயிரிழந்த போது, பிரபாகரனிடம் இருந்தவை)
 
இந்த முடிவுக்கு ராணுவம் வந்து, நந்திக்கடல் கரையோரமாக சில பகுதிகளில் தேடியதில் யாருமில்லை. இதற்குள் இருள் சூழ்ந்துவிட்டது.
 
இந்தக் கட்டத்தில், அவர்களது தேடுதல் வேட்டை நடைபெறாத பகுதி, சுமார் 800 மீட்டர் நீளமும், 20 மீட்டர் அகலமும் உள்ள மாங்குரோவ் புதர்கள் இருந்த பகுதிதான்.
மறுநாள் காலையில், அதிரடிப்படை-8ன் பிரிவாக இருந்த 4-வது விஜயபா படையினர், அந்த புதர்களில் தேடுதலை தொடங்கினார்கள். இவர்கள் புதர்களை நோக்கி சுட்டபடி நகர்ந்து செல்ல, ஒரு இடத்தில் புதர்களுக்கு உள்ளேயிருந்து எந்திரத் துப்பாக்கிகள் வெடிக்க தொடங்கின.
இந்த தகவல், அதிரடிப்படை-8 தளபதி கர்னல் ஜி.வி.ரவிப்பிரியவுக்கு உடனே தெரிவிக்கப்பட்டது.
“கேட்கும் ஓசைகளை வைத்து கணிப்பிட்டால், சுமார் 20 துப்பாக்கிகள் அங்கிருந்து சுடுகின்றன” என்ற விபரமும் கூறப்பட்டது.
அந்த புதர்களுக்குள் சிலர் மறைந்திருப்பது, உறுதியானவுடன், மேலும் இரு தேடுதல் அணிகளை அனுப்பினார், ரவிப்பிரிய.
மூன்று அணிகளும் சுட்டபடி நகர, நந்திக்கடல் கரை தண்ணீரில் உள்ள அந்த புதர்களில் இருந்த மூவர் இவர்களிடம் உயிருடன் பிடிபட்டனர்.
அவர்களை விசாரித்ததில், அவர்கள் பிரபாகரனின் பாடிகார்டுகள் எனவும், பிரபாகரனும் மேலும் 30 பேரும் நந்திக்கடல் கரை தண்ணீரில் உள்ள அந்த மாங்குரோவ் புதர்களில் மறைந்திருக்கும் விஷயம் தெரியவந்தது.
இதையடுத்து, மூன்று தேடுதல் அணியை சேர்ந்தவர்கள் அனைவரும் அந்த புதர்களை நோக்கி சராமாரியாக சுட்டுத்தள்ள தொடங்கினார்கள்.
சிறிது நேரத்தில், புதர்களுக்கு உள்ளேயிருந்து ஒலித்த துப்பாக்கி ஓசைகள் நின்று போயின. அதன் பின்னரே, ராணுவம் புதர்களை நோக்கி சுடுவதை நிறுத்தியது.
சிறிது நேரத்தின்பின், தண்ணீரில் இறங்கி புதர்களில் உடல்களை தேடும் நடவடிக்கை தொடங்கியது. உடல்கள் ஒவ்வொன்றாக வெளியே வந்தன.
அதிரடிப்படை-8ஐ சேர்ந்த சார்ஜென்ட் முத்து பண்டா என்பவர், “இங்குள்ள உடல் ஒன்று பிரபாகரனின் போல உள்ளது” என தெரிவித்தார்.
கர்னல் ஜி.வி.ரவிப்பிரிய, அந்த உடல், பிரபாகரனின் உடல்தான் என்பதை உறுதி செய்தார்.
இவர்கள் உடலை கண்டெடுத்த போது, உடல் சூடு மீதமிருந்தது. அதிலிருந்து, சில நிமிடங்களுக்கு முன்புதான் அவர் இறந்திருப்பார் என ஊகித்தார்கள்.
அந்த உடலில், த.வி.பு. 001 (தமிழீழ விடுதலைப்புலிகள் 001) என்ற இலக்கமுடைய அடையாளப் பட்டி (dog tag) இருந்தது.
அது தவிர, இரு பிஸ்டல்கள், ஒரு T-56 எந்திரத் துப்பாக்கி (டெலஸ்கோப் பொருத்தப்பட்டது), ஒரு சாட்டலைட் போன், பிரபாகரனின் பெயர் பொறிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் அடையாள அட்டை, ஒரு மருந்து சீசாவுக்குள் டயாபடிக் மருந்துகள் ஆகியவை இருந்தன.
நாம் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல, இதுதான் இலங்கை ராணுவத் தரப்பில் சொல்லப்பட்ட விபரங்கள். அவர்களது கூற்றுப்படி பிரபாகரன் இறந்தது, 5 ஆண்டுகளுக்கு முன், சரியாக இதே நாள் (19-ம் தேதி, மே 2009), காலையில்…!!!!
–விறுவிறுப்பு–
 
 
Thanks : Viruviruppu
 

No comments:

Post a Comment