Sunday, May 12, 2013

சுஜாதா எழுதாத சுஜாதா கதை :

 
 
 
மதுமிதா சில குறிப்புகள்

 
 
 
 








மதுமிதாவின் ஹேண்ட் பேகிலிருந்த‌ வஸ்துக்கள்…

காலியான‌ மினி வெல்வெட் பௌச், கண்ணாடி, சீப்பு, ஹேர் பின், ஹேர் க்ளிப், ரப்பர் பேண்ட், சேஃப்டி பின், ஸ்டிக்கர் பொட்டு, ரோஸ் பௌடர், டியோட்ரண்ட், பெர்ஃப்யூம், லிப் கார்ட், சன்ஸ்க்ரீன் லோஷன், ஃபேஸ் க்ரீம், மாய்ஸ்ச்சரைசர், நெயில் பாலீஷ், ஐ லைனர், வெட் டிஷ்யூ, மௌத் ஃப்ரெஷ‌னர், ஸ்விஸ் சாக்லேட், சூயிங் கம், கந்தர் சஷ்டி கவசம், Hopeless (Colleen Hoover) பேப்பர்பேக், ஐஃபோன் 5, ஐசிஐசிஐ மாஸ்டர் ப்ளாட்டினம் டெபிட் கார்ட், ஹெடிஎப்சி விசா சிக்னேச்சர் க்ரெடிட் கார்ட், சில புதிய இந்திய ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள், கிழிந்த‌ விஸ்வரூபம் பட பிவிஆர் டிக்கெட்கள் இரண்டு (10 பிப்ரவரி 2013), மணிப்பால் ஹாஸ்பிடல் கார்ட், பேண்ட் எய்ட், அனாசின், அவில், ஐபில் மாத்திரைக‌ள், பயன்படுத்தப்படாத சோஃபி சைட் வால்ஸ் சானிடரி நாப்கின், ஓர் ஆணின் வேர்வை கர்ச்சீஃப் மற்றும் காமசூத்ரா ப்ளெஷர் காண்டம்கள்.
~0~
மதுமிதாவுக்கு Orkutல் வந்திருந்த‌ Testimonialsலிருந்து…

Senthilnathan – Dec 02, 2011

நான் இதுவரைக்கும் நேர்ல பாத்ததிலயே சூப்பர் ஃபிகரு.

Vidhya S. – Apr 13, 2010
hmm. tym’s not enuf 2 describe tis wonderful frend- but lemme tel u wat it strikes 2 me now. madhu is a happy go lucky person. not much bothered bout nythg in life. kind, jovial, loving, caring, stupid.
 ~0~
மதுமிதாவின் Wardrobeலிருந்த‌ T-Shirtகளிலிருந்து…

Forbidden Fruits, Braille System, HTTP 403, Sample Specimen: Not For Sale, Catch Me If You Can, Click Here To Continue, Biological Inflation, Testers Wanted, Ripen Mangoes, This Is Not Touch-Me-Not.
 ~0~
மதுமிதாவின் ஐஃபோன் Bluetooth Received Filesலிருந்த ஃபோட்டோ…

(இது சென்ஸார் செய்யப்படுகிறது – ஆசிரியர்)
  ~0~
மதுமிதாவின் படுக்கையில் சிதறிக் கிடந்தவை…

11-inch Apple MacBook Air லேப்டாப், The Music Messiah (Ilayaraaja) டிவிடி, காமக்கடும்புனல் (மகுடேசுவரன்) கவிதைத் தொகுப்பு, கரீனா கபூர் படம் போட்ட ஃபிப்ரவரி 2013 VOGUE இதழ், இதய விடிவிலான சிவப்பு நிறத்திலான‌ குட்டி குஷன் தலையணை, கழற்றி எறியப்பட்ட‌ Wonderbra ப்ரேஸியர், Wacoal பேண்டீஸ், சால்வ் செய்யப்பட்ட‌ Rubik’s Cube, ஐஃபோன் சார்ஜர், குடித்து மீந்திருந்த மதுக்கோப்பை – அதில் கிடந்த ஒரு சிறிய‌…
  ~0~
 மதுமிதாவின் Apple MacBook Airலிருந்த‌ திரைப்படங்கள்

 Gangs of Wasseypur – 1 & 2, Inception, நந்தலாலா, The Isle, Love Sex Aur Dhokha, ஆரண்ய காண்டம், ரெட்ட்யூப் வலைதளத்திலிருந்து தரவிற‌க்கப்பட்ட சில பாலியல் படங்கள்.
   ~0~
மதுமிதாவின் ஐஃபோன் Messagesலிருந்து (Sent Items)…
Pappu
03-May-2012 21:09
sorry
 ~0~
மதுமிதாவின்  Yahoo! Messenger உரையாடலிலிருந்து…
———— IM 01 Jun 10:55 ————
Madhumitha : “யாரோ ஒருத்தன் தினம் மெசேஜ் அனுப்பி டார்ச்சர் பண்றான்டி, Idiot”
Saranya : “என்ன Lovable Idiot-ஆ? ;-)
Madhumitha : “ம். இல்ல‌. Sweet Bastard! :-)
Saranya : “அட, வெட்கத்தைப் பாருங்கடா!”
Madhumitha : “ச்சீய், போடி!”
  ~0~
மதுமிதாவுக்கு வந்திருந்த Birthday Cardலிருந்து…
 ம‌துமிதா எனப்படும் 17 வயது தேவதையே,
என் உயிர் குடிக்க‌ நிறைய மார்க்கமுண்டு.
ப்ளீஸ், உன் அழகை அதற்கு வீணாக்காதே!
Infinite more happy returns of the day and night ;-)
உந்தன் பப்பு,
Jul 21, 2012.
   ~0~
மதுமிதாவின் ரெக்கார்டட் Skype சம்பாஷணை ஒன்று…
 “டாடி தந்த‌ பர்த்டே கிஃப்ட் ஓர் அற்புதம். எத்தனை பணக்காரன் என்றாலும் இந்தப் பரிசு கொஞ்சம் ஜாஸ்தி. உடலின் பாகம் மாதிரி அதை எப்போதும் என்னுடனேயே வைத்துக் கொள்ள விரும்புகிறேன். Love you, dad. But பப்பு கார்ட் ஒரு riot. I am having my periods, now. முட்டி வலிக்கிறது. ஆனால் பப்பு மனசுக்கு சுகமாய் இருக்கிறான்.”
 ~0~
மதுமிதா Hopeless நாவலில் அடிக்கோடிட்டிருந்த வரி…
“That moment when your lips touched mine? You stole a piece of my heart that night”
 ~0~
மதுமிதாவின் Facebook தளத்திருந்து…
 Madhumitha Natarajan
August 13, 2012 at 12:09am via mobile ·
காதலில் விழுந்தேன்!
Unlike · Comment · Unfollow Post · Share · Promote
Baskaran Deivasikamani, காயத்ரி சேஷாத்ரி, Victor Antony and 723 others like this.
View all 1026 comments
Victor Antony Who is that lucky guy? Aug 19, 2012 at 2:55am • Like
பார்வதி யமுனா கடைசில நீயும் விழுந்துட்டியா? Aug 20, 2012 at 1:11am • Unlike
Madhumitha Natarajan விழாமலே இருக்க முடியுமா! Aug 20, 2012 at 1:30am via mobile • Like
Write a comment…
~0~
மதுமிதாவின் ஐஃபோன் Messagesலிருந்து (Inbox)…
Pappu
30-Sep-2012 11:27
movie at pvr

 ~0~
மதுமிதா blogger வலைப்பதிவிலிருந்து… 
மதுமிதா மனசிலே…
 சில்MISSION
 திரையரங்க மெல்லிருட்டின்
தித்திக்கும் சில்மிஷங்களில்
திட்டித் தீர்க்கின்றேனுன்னை –
அடுத்தடுத்த‌ கட்டங்களுக்கு
அழகாய் அனுமதித்தவாறே.
Posted by மதுமிதா On Sunday, October 06, 2012

~0~
மதுமிதாவின் 2012 Personal Diaryயிலிருந்து…
November 5, Monday
எதற்கு பயந்திருந்தேனோ அல்லது எதை விரும்பினேனோ அது நடந்தே விட்டது. பப்பு திருட்டுப் பயல் எப்படித் தான் காண்டம் பாக்கெட் தயாராய்க் கையில் வைத்திருந்தானோ, ஆச்சரியம்தான்! ஒருவகையில் என்னைப்போல் அவனும் இந்நிகழ்விற்கென‌ எப்போதும் தயாராகவே இருந்திருக்கிறான் எனத் தோன்றுகிறது. பழுத்த அனுபவமுள்ள ஒரு டூரிஸ்ட் கைட் தனக்கு மிகப் பரிச்சயமான ஊரினை அலட்சியமாகச் சுற்றிக் காட்டுவதைப் போலத் தான் பப்பு இன்று நடந்து கொண்டான்.
அந்த விசித்திர‌ப் பள்ளத்தாக்குகளுக்கு, அந்த மிக‌ அழகிய மலைமுகடுகளுக்கு எந்தப் பதட்டமில்லாமல் புன்னகையுடன் என்னைக் கை பிடித்தழைத்துச் சென்றான். ஒரே சமயத்தில் ஒரு ராட்சசனைப் போலவும் ஒரு குழந்தையைப் போலவும் மாறி மாறி என்னை ஆக்ரமித்தான். கிட்டதட்ட‌ சாகடித்தான் என்று தான் சொல்ல வேண்டும்.
இதன் ஞாபகமாய் பப்புவின் கர்ச்சீஃப்பை எடுத்து வந்து விட்டேன். அது எப்போதும் என்னோடு என் கைப்பையில் இருக்கும். இன்னமும் என் உடம்புக்குள் ஆங்காங்கே இனித்துக் கொண்டிருக்கிறான் ராஸ்கல். கொஞ்சம் வெட்கமாய்க் கூட‌ இருக்கிறது.
எல்லாம் முடிந்து இதை எழுதிக் கொண்டிருக்கும் இக்கணம் மிகச் சந்தோஷமாக உணர்கிறேன். காரணமேயில்லாமல் உப்புக்கண்ணீர் கன்னங்களில் பிசுபிசுக்கிறது.
Anyway, Virgin Mary turned into Bloody Mary, today. Let me celebrate it with a sip of Diva Vodka!
~0~
மதுமிதாவின் ஐஃபோன் Messagesலிருந்து (Draft)…
Shit, that’s not enough. I need you again and again, da.
 ~0~
மதுமிதாவின் blogger வலைப்பதிவின் draftலிருந்து…
மதுமிதா மனசிலே… · Post · காதல் காதல் காதல் · Publish · Save · Preview · Close
Compose | HTML
இந்த பப்பு ராட்சசன். மூன்றாம் முறைக்கு காண்டம் தீர்ந்து விட்டது. ஐபில் என்று ஏதோ ஒரு மாத்திரை இருக்கிறதாம், இன்று வாங்கி வ‌ருகிறேன் என்று சொல்லி இருக்கிறான். 36 மணி நேரத்துக்குள் போட்டுக் கொண்டால் எந்தப் பிரச்சனையும் இல்லையாம். இந்தப் பப்புவுக்கு எப்படித் தான் எல்லா விஷயமும் தெரிகிறதோ!
  ~0~
மதுமிதாவின் ஐஃபோன் Facetime உரையாடல் ஒன்று…
Pappu
15-Dec-2012 20:47
“அப்பாவிடம் சொல்லி விடப் போகிறேன்!”
“அதுக்கு என்ன அவசரம், அவசியம் இப்போ?”
“பொய் சொல்ல முடியல, பப்பு. சல்ஸா க்ளாஸ், ப்யானோ க்ளாஸ், ஜேஈஈ களாஸ் எல்லாம் கட் பண்றேன். ஃப்ரெண்ட்ஸ் கூட காஃபி டே, க்ரூப் ஸ்டடி, கெட்டுகெதர்னு அப்பாகிட்ட பொய் சொல்லிட்டு உன்கிட்ட வந்து படுத்துக்கறேன். And I really feel guilty.”
“:-(“
 ~0~
மதுமிதாவின் Gmail – Sent Itemsலிருந்து…
from   Madhumitha N. <madhumitha1995@gmail.com>
to    “Natarajan Muthuraman” <mail2natarajan@gmail.com>
date   Sat, Dec 22, 2012 at 11:28 PM
subject            Help me, daddy!
டியர் டாடி,
எல்லாவற்றையுமே உங்களுடன் நேரிலேயே பேசிப் பழக்கப்பட்ட எனக்கு இதை மட்டும் உங்கள் முகம் பார்த்துச் சொல்ல முடியவில்லை. பயமோ, தயக்கமோ, வெட்கமோ காரணம் என்று நான் சொன்னால் நீங்கள் வழக்கம் போல் வீடதிரச் சிரிப்பீர்கள் எனத்தெரியும். நான் முதன் முதலில் இருமியபடி புகைப்பிடித்ததும், மெலிதாக மதுவ‌ருந்தியதும் உங்களுடன் தான். அம்மா தவறிய பின் இத்தனை ஆண்டுகளில் நீங்கள் எப்போதும் என்னை மகள் என்று போலி மரியாதை காட்டித் தள்ளி வைத்துப் பார்த்ததாய் நினைவில்லை. நானும் அப்படியே – always your friend.
ஆனால் இவ்விஷயம் ச‌ற்று வேறு மாதிரியானது. இதிலெல்லாம் ஒரு முடிவெடுக்க எனக்கு புத்தி வந்து விட்டதா என உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். இருக்கட்டும்.
நான் கேட்டதெல்லாம் வாங்கித் தந்தீர்கள் என்று சொன்னால் கூட அது உண்மை திரித்ததாகி விடும். எந்தப் பொருள் என்றாலும், எவ்வளவு விலை என்றாலும் நான் கேட்க நினைக்கும் முன்பே அது என் கைகளில் இருந்தே பழகி விட்டது. கடந்து என் பிறந்த நாளுக்கு நீங்கள் தந்த பிறந்த நாள் பரிசு ஒரு மிகச்சிறந்த உதாரணம்.
இப்போது நான் கேட்கவிருப்பது அதையெல்லாம் விட மதிப்பானது; விலை மதிப்பே இல்லாதது என்று சொல்வது தான் சரியாக இருக்கும் – அது உங்கள் கௌரவம்.
ஆம். கோடீஸ்வரரான உங்கள் மகள் எந்த வசதியும் இல்லாத, இப்போதைக்கு நிரந்தரமாக ஒரு வேலை கூட அற்ற ஓர் ஆசாமியைக் காதலிக்கிறாள் என்பது உங்களுக்கு நிச்சயம் அகௌரவம் தான். பப்பு என்ன ஜாதி என்பது கூட எனக்கு இன்று வரைக்கும் தெரியாது. அவனுக்கே தெரிந்திருக்குமா என்பதும் சந்தேகம் தான்.
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் எனக்குத் தெரியும். பப்பு திட்டமாய் நல்லவன் – உங்களை விட, என்னை விட‌. மற்றதெல்லாம் என் கண்ணுக்கு தெரியவில்லை. அவனைப் பார்த்துப் பேசினால் உங்களுக்கும் நிச்சயம் பிடிக்கும். மயக்கி விடுவான்!
பதினெட்டு வயது கூட ஆகாத‌ எனக்கு என்ன அவசரம் என இப்போதும் உங்களுக்குத் தோன்றலாம். இதை உங்களிடமிருந்து மறைக்க மறைக்க அடிக்கடி பொய் சொல்ல வேண்டியிருக்கிறது; நிறைய கள்ளம் செய்ய‌ வேண்டியிருக்கிறது. எல்லாம் புதிதாய் இருக்கிறது. எனக்கே என்னைப் பிடிக்கவில்லை. அதையெல்லாம் நிறுத்த வேண்டும்.
இதைப் படித்துக்கொண்டிருக்கும் இக்கணம் உங்களுக்கு எத்தனை அதிர்ச்சியாக இருக்கும் என்பதைக் துல்லியமாக உணர்கிறேன். ஆனால் எனக்கு வேறு மார்க்கம் இல்லை. நீங்கள் ஒப்புக்கொண்டால் அதை இந்தப் புத்தாண்டுப் பரிசாகக் கொள்வேன்.
காத்திருக்கிறேன்.
Cheers,
மது
 ~0~
மதுமிதாவின் Twitter தளத்திருந்து…
மதுமிதா @madhumitha140                               Dec 31, 2012
பிடிக்காத கல்யாணத்தில் வாழ்வதை விட பிடித்த‌‌ காதலுக்காக சாகலாம்.‌
Expand
Sowmya @arattaigirl                                          Dec 31, 2012
குழந்தைகள் திரும்ப வாங்கி விடக்கூடிய பொருட்களையே போட்டு உடைக்கின்றன.. பெரியவர்களைப் போல மனங்களை அல்ல!
Retweeted by மதுமிதா
Expand
மதுமிதா @madhumitha140                               Dec 31, 2012
@writercsk பெத்த பொண்ண விட மத்ததெல்லாம் முக்கியமாப் போச்சா?
View conversation
மதுமிதா @madhumitha140                               Dec 31, 2012
Money, status, caste and blah-blah.. #love #fuck-off
Expand
 ~0~
மதுமிதாவின் Gtalk – Chat Historyயிலிருந்து…
from   பப்பு பப்பு <pappuinlove@gmail.com>
to    madhumitha1995@gmail.com
date   Fri, January 11, 2013 at 10:15 PM
subject            Chat with பப்பு பப்பு
பப்பு: மது
me: sollu pappu
பப்பு: என்ன ஆச்சு?
me: no change. still same. வேற மாப்பிள்ளை பாக்கறார்.
பப்பு: முடிவா என்ன சொல்றார்?
me: அவரு முருங்கை மர‌ வேதாளம்டா பப்பு.
பப்பு: so?
me: let us wait.
பப்பு: எவ்வளவு நாள்?
me: days, months or may be years too.
பப்பு: ஒத்துக்குவார்னு இன்னமும் நம்புறியா?
me: what to do, then?
பப்பு: சரி, விடு.
me: dai, chellam, kovama?
பப்பு: இல்ல‌.
me: இல்லன்னு சொல்றதுலயே கோவம் தெரியுதே.
பப்பு: கோபம் தான். ஆனா உன்னால என்ன பண்ண முடியும்?
me: true. am helpless. ஆனா hopeless இல்ல‌.
பப்பு: பாக்கலாம்
me: எதுவுமே முடியலைனா அதான் எப்பவுமே கையில வச்சிருக்கிறனே. அதை…
பப்பு: ச்சீ. என்ன எப்பப் பாத்தாலும் இதே பேச்சு. சரி, வெயிட் பண்ணலாம், மது.
me: I love you da, pappu.
பப்பு: ம்.
me: goodnight.
 ~0~
மதுமிதாவின் unofficial மரணவாக்குமூலத்திலிருந்து…

டியர் பப்பு,

இந்நாள் நமக்கு முதல் வேலண்டைன்ஸ் டே மட்டுமல்ல; கடைசியானதும் கூட‌!

இதை நீ படிக்கும் நேரத்தில் நிச்சயம் நான் உயிருடன் இருக்கப்போவதில்லை. நீ எண்ணிக் கொண்டிருந்தாயா தெரியாது – இக்கணம் நீ களைத்துறங்கக் காரணமான கலவி எண்ணிக்கையில் நூறாவது. இந்த நூறில் ஒவ்வொன்றையுமே தனித்தனியே அதனதன் பிரத்யேக அடையாளங்களுடன் எனக்கு நினைவு கூரவியலும். எப்போதும் வற்புறுத்தி அணியச் செய்யும் நானே இன்று காண்டம் வேண்டாம் என்று சொன்னது ஆச்சரியமாய் இருந்திருக்கலாம். அல்லது எப்போதுமே ‘அதற்கு’ மட்டும் மறுத்து விடுபவள் இன்று தானாக‌ முன் வந்ததும் விசித்திரமாகத் தோன்றியிருக்கலாம்.
கடிதம் மட்டுமல்ல, கலவி கூட இதுவே கடைசி. அணுஅணுவாய் அனுபவித்த இன்பத்துக்கெல்லாம் இறுதி நாள். ஆம். நான் செத்துக்கொண்டிருக்கிறேன். கொஞ்ச கொஞ்சமாய், ஆனால் வேக‌ வேகமாய். இன்று நீ களித்துக் கிடந்த என் தேகம் உண்மையில் அரைப்பிணம். வரும் போதே அதை விழுங்கி விட்டுத்தான் வந்தேன்.

எப்போதும் கைப்பையில் வைத்திருக்கும் என் அப்பா தந்த‌ பரிசே எனக்கு எமனாய் விடியும் என்று அவர் நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார். தெரியும் போது மிக வருத்தப்படுவார். தலையிலடித்துக் கொண்டு தேம்பி அழுவார். அம்மா இறந்த போது அப்படித்தான் செய்தார் – எனக்குத் தெரிந்து அது தான் அவர் கடைசியாக அழுததும் கூட. ஒத்துக் கொண்டிருக்கலாமோ என்று கூட அப்போது யோசிப்பார். பாவமாய் இருக்கிறது. என்னை அவர் புரிந்து கொள்ளாதது போல் நானும் அவரை சரியாய்ப் புரிந்து கொள்ளாமலேயே மரித்துப் போவதற்காய் உச்சமாய் வருந்துகிறேன்.
ஆனால் இப்போது அப்பா நிச்சயம் ஒத்துக்கொள்ள மாட்டார் என்பது எனக்குத் புரிந்து விட்டது. வீட்டில் இப்போதெல்லாம் நிறைய கண்டிஷன்கள். போகும் இடம் சொல்ல வேண்டும், திரும்பும் நேரம் சொல்ல வேண்டும். எட்செட்ரா எட்செட்ரா. இப்போது கூட ஏரோபிக்ஸ் க்ளாஸ் போவதாகப் பொய் சொல்லித் தான் வந்திருக்கிறேன். லேட்டாகி விட்டது. ஏற்கனவே ஆங்காங்கே தேட ஆரம்பித்திருப்பார்கள். தேடட்டும்.
அப்பா எனக்கு கல்யாணத்திற்கு மாப்பிள்ளை பார்க்கிறார். ஐரோப்பிய மாப்பிள்ளை. நிரம்பப் படித்திருக்கிறான். பெரிய வசதிக்காரன். பிஸ்னஸில் மகாபுத்திசாலி. அதை விட‌ முக்கியமாய் எங்கள் ஜாதிக்காரன். கொஞ்சம் நாள் போனால் எனக்கே அவனைப் பிடித்து விடுமோ என்று பயமாய் இருக்கிறது. நான் உனக்குக் கிடைக்கமாட்டேன் என்பது ஏமாற்றம் தான். ஆனால் துரோகத்தை விட ஏமாற்றம் தரும் வலி குறைவு தான். வேறொரு ஆணுடன் கலந்து நான் உனக்கு துரோகம் செய்ய விரும்பவில்லை.
என் அப்பாவிற்குப்பின் நீ தான் என் வாழ்க்கையில் முக்கியமான ஆசாமி. ஒரு கட்டத்தில் அவரை விடவும் நீ முக்கியமானவனாகத் தோன்றப் போய், இப்போது உயிரை விடுவது வரை வந்தாயிற்று. நினைத்தபடி வாழவியலாவிடில் வாழ்ந்தென்ன லாபம். ஓர் அரசியை போல் கம்பீரமாய் இறந்து போவதே சௌக்கியம், சௌகரியம்.
ஃப்ராஸ்டின் “Miles to go before I sleep” நினைவுக்கு வந்து சங்கடப் படுத்துகிறது. எத்தனை கனவுகள், எத்தனை ஆசைகள் எல்லாம் சற்று நேரத்தில் பூஜ்யமாகப் போகிற‌து. எல்லாவற்றிலுமே எனக்கு அவசரம் என்பார் அப்பா – இப்போது சாவிலும்.
உண்ட சங்கதி தன் வேலையைக் காட்ட ஆரம்பித்து விட்டது, பப்பு. உன்னிடத்தில் உன் மடியில் தான் உயிரை விட வேண்டும் என்ற பாழாய்ப் போன செண்டிமெண்ட் தான் என்னை இங்கே இழுத்தது. இதையே எனது Dying Declaration ஆக‌ போலீஸில் சேர்ப்பித்து விடு – உயிரற்ற உடலையும். பின் உனக்கு ஒரு தொந்தரவும் வராது.
இன்னுமொரு உதவி. கடைசி ஆசை என்று கூட சொல்லலாம் – Autopsy முடிந்தபின் சாத்தியமான என் அத்தனை உடற்பாகங்களையும் தானம் செய்ய விரும்புகிறேன்.
ஐ லவ் யூ டா, பப்பு. See you சொல்ல முடியாது; அதனால் Bye மட்டும்.
Cheers,
மது.
14/02/2013
 ~0~
 தினத்தந்தி (பெங்களூர் பதிப்பு, 15-02-2013) நாளிதழிலிருந்து…

அனாதைப் பெண் பிணம் – மர்ம நபர் வெறிச்செயல்
போலீஸ் தீவிர விசாரணை
பெங்களூர், ஃபிப்.14–
ஈஜிபுரா அருகே இன்னர் ரிங் ரோடை ஓட்டியிருக்கும் ஆர்மிக்கு சொந்தமான காட்டுப் பகுதியில் நேற்று அடையாளம் தெரியாத 18வயது மதிக்கத்தக்க பெண் பிணம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. மிகக்கொடூரமான நிலையில் வயிறு கிழித்து கொலை செய்து அடையாளம் காண முடியாத அளவில் முகம் சிதைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோரமங்களா இன்ஸ்பெக்டர் ப‌சவப்பா வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
 ~0~
மதுமிதாவின் Post-Mortem Reportலிருந்து…
“கூர்மையான துருவேறிய ஆயுதத்தினால் (உதா: பேனாக்கத்தி‌) வயிற்றுப் பகுதி 3 இஞ்ச் ஆழத்துக்கு கிழிக்கப்பட்டு, பெருங்குடல் முழுக்க சேதாரமான‌தால் உடனடி மரணம். தவிர உணவுக்குழாய்ப்பாதை முழுக்கவும் ஆழமான‌ சிறுசிறு கீறல்கள்.”
  ~0~
மதுமிதாவின் அப்பா நடராஜனின் வாக்குமூலத்திலிருந்து…
“அந்த காலியான‌ மினி வெல்வெட் பௌச்சில் இருந்திருந்தவை பிறந்தநாள் பரிசாக நான் கொடுத்த ரூ. நூறு கோடி மதிப்புள்ள பதினேழு தென்னாப்பிரிக்க‌ வைரங்கள்!”
  ~0~
 (மதுமிதா கொலை வழக்கின் போலீஸ் விசாரணைக் குறிப்புகளிலிருந்து)


-CSK
 
Thanks: tamilpaper.net

Sunday, May 5, 2013

இலங்கை முஸ்லிம் அரசியல் : நேற்று - இன்று - நாளை




நேற்று - 1915 - 2000
இலங்கை முஸ்லிம்களின் அரசியல் என்பது இலங்கையின் வரலாற்றுடனும் அதன் பாரம்பரிய, கலாசார பண்பாட்டு அம்சங்களுடனும் மிக வலுவான தொடர்பைக் கொண்டது.
கி.மு தொடங்கிய ஆரியரின் வருகையும் அதனைத் தொடர்ந்த இந்துக்களின் வருகையும் இடம்பெற்ற அதே காலத்தில் சர்வதேச கடலோடிகளான அறபிகளுடைய வருகையும் இலங்கையில் நிகழ்ந்திருக்கின்றது. கி.பி. 7ம் நூற்றாண்டிலேயே இலங்கையில் இஸ்லாமிய மார்க்கம் அறிமுகமாகின்றது. அன்று தொடங்கி இலங்கை மன்னர்களுடன் முஸ்லிம்களுக்கு நெருக்கமான தொடர்புகள் இருந்தன.

இறுதியாக 1815ல் வீழ்ச்சி கண்டி இராசதானியத்தில் முஸ்லிம்கள் கனிசமான பங்கினை வகித்தார்கள் என்பது 2ம் இராஜசிங்க மன்னன் முஸ்லிம்களுக்கு வழங்கிய பரிசில்கள், நன்கொடைகள் என்பவற்றின் மூலம் இன்றுவரை உறுதிப்படுத்தப்படக் கூடியதாக அமைகின்றது.

ஒல்லாந்தருடையதும் போர்த்துக்கீசருடையதுமான ஆட்சிக் காலங்களில் முஸ்லிம்கள் அரசியல் ரீதியாக நெருக்கடிகளை எதிர்கொள்ளாவிடினும்; வர்த்தக ரீதியாக நெருக்கடிகளை எதிர்கொண்டார்கள் என வரலாற்றுக் குறிப்புகள் குறிப்பிடுகின்றன. ஆனால் ஆங்கிலேயரின் ஆட்சிக்காலப்பகுதியில் முஸ்லிம்கள் மிகவும் மதிக்கப்பட்ட ஒரு சூழலை அவதானிக்க முடியும். பிர்த்தானியரின் அடிப்படைக் கோட்பாடாகிய (Divide and Rule) பிரித்தாளும் போக்கு இலங்கையிலும் வெற்றிகரமாக அமுல்படுத்தப்பட்டது. இத்தகைய நடைமுறையால் பாதிப்புக்குள்ளான இலங்கைச் சமூகத்தவருள் முஸ்லிம் சமூகமும் அடங்கும்.

1915ல் இடம் பெற்ற சிங்கள முஸ்லிம் கலவரம் முஸ்லிம்கள் இலங்கையில் தனியான இனம் என்பதை நிறுவியது. கலவரத்தை அடக்கும் முகமாக சிங்கள சமூகத்தின் முக்கிய தலைவர்களை பிர்த்தானியப் பொலிசார் சிறைப்பிடித்தனர். D.S.சேனாநாயகா, F.R.சேனாநாயகா உட்பட பல தேசியவாதத் தலைவர்கள் சிறைப்பிடிக்கத்தலைப்பட்டனர். அப்போது படித்த இலங்கையர்; சார்பில் தேசியப் பேரவையில் அங்கத்துவம் வகித்த சேர். பொன் இராமநாதன் கடல் மார்க்கமாக பிர்த்தானியா சென்று அங்குள்ள பிரபுக்கள் சபையில் வாதாடி சிறைப்பிடிக்கப்பட்ட சிங்களத் தலைவர்களை விடுதலை செய்தார். இதனால் சேர்.பொன் இராமநாதன் சிங்களவர்களால் பெரிதும் மதிக்கப்பட்டார் அவர் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தும் சிங்களவர்களால் பாரிய வரவேற்பு ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

12 குதிரைகள் பூட்டிய தேரில் அவரை வரவேற்க முயன்று இறுதியில் உற்சாக மேலீட்டால் சிங்களவர்கள் தமது கரங்களினால் வடம் பிடித்து தேர்இழுத்தனர். அவ்வாறு கொழும்பு பிரதான வீதிகளினூடாக ஊர்வலம் வருகின்ற போது அப்பகுதியில் உள்ள முஸ்லிம் வர்த்தக ஸ்தலங்கள் சேதமாக்கப்பட்டன.

இது ஒரு சுமையான வரலாற்றுச் சம்பவம் என்பதை விட இனத்துவத்திற்கான வேர்கள் ஆளவேர்பிடுவதற்கு மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட சதிநடவடிக்கையேயன்றி வேறில்லை.

உண்மையில் முஸ்லிம்களுக்கும் சிங்களவருக்குமான இனத்துவமோதல் என்பதைவிட சிங்கள-தமிழ்-முஸ்லிம்களுக்கான முக்கோணச்சமரின் தொடக்க விழாவே 1915ல் பிர்த்தானியரினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டது. சிங்களவர் தரப்பில் மேல்நாட்டுச் சிங்களவர் அல்லது கண்டிச்சிங்களவர் என்றும் கரையோரச் சிங்களவர் என்றும் முஸ்லிம்களில் இலங்கை - இந்திய முஸ்லிம்கள் சோனகர் - மலாயர் என்றும் தமிழர்களில் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் என்றும் மலைநாட்டுத் தமிழர் என்றும் பிரித்தாளும் வடிவங்கள் நீண்டு கொண்டே சென்றன. சேர்.பொன் இராமநாதனுடைய - முஸ்லிம்களும் தமிழர்களே என்ற விவாதத்தை எதிர்த்து A.M.Aஅஸீஸ் முடுக்கிவிட்ட எதிர்வாதங்கள் பொன்னம்பலத்தின் விவாதத்திற்கு ஆப்புவைத்தன.

என்றாலும் முஸ்லிம் தமிழ் உறவில் பொன் இராமநாதன் ஒரு நீங்காத பிரிகோட்டை வரைந்தார் என்றே கொள்ளப்படுகின்றது. 1915 - 1930 வரை சிங்கள - முஸ்லிம் முரண்பாடுகளும் 1930 ற்குப் பின்னர் சிங்கள - தமிழ் முரண்பாடாகவும் இலங்கை இனத்துவப் போராட்டத்தில் மூழ்கி இனத்துவ அடையாளத்தையும் வேறுபாட்டையும் ஒரு விதியாகக் கொள்கின்ற துர்ப்பாக்கிய நிலை தோற்றுவிக்கப்பட்டது. அத்தகைய இனத்துவ அடிப்படையில் சிந்திக்கின்ற ஒரு சூழல் இன்றுவரை தொடர்கின்றது.

சுதந்திரத்திற்கு முற்பட்ட இலங்கை அரசியலில் முஹம்மதியர்களுக்கான விஷேட தனியார் (திருமண) சட்டங்கள் 1806 ம் ஆண்டுகளில் பிர்த்தானியர்களால் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. 1905 ல் M.C. அப்துல் காதிர் உடைய துருக்கித் தொப்பிப்போராட்டம் தொடங்கி 1915 வரை பொன் இராமநாதனுடைய தமிழர் அடையாளத்திற்கு எதிரான A.M.A.அஸீஸ் உடைய விவாதங்கள் வரை நோக்குமிடத்து பிர்த்தானியர்களை விடவும் சிங்கள - தமிழ் மக்களுடைய ஆதிக்க எண்ணமே மேலோங்கியிருந்தது.

1930 களில் சோனகர் என்றும் மலாய சமூகத்தவர் என்றும் பிரிந்து கிடந்த முஸ்லிம் சமூக அரசியல் 1939 ல் கூட்டப்பட்ட அரசியல் மாநாட்டைத் தொடர்ந்து வலுவான முஸ்லிம் அரசியல் என்ற நிலைக்குத் திரும்பியது. சோனகர் சமூகப்பிரதிநிதிகள் ராசிக் பரீத் தலைமையிலும் மலாய் சமூகப் பிரதிநிதிகள் T.B.ஜாயா தலைமையிலும் செயற்பட்டனர். இருப்பனும் பிந்திய காலங்களில் கூட்டாக சமூகப் போராட்டம் தொடக்கப்பட்டது. வர்த்தகத் துறையில் அதிக ஈடுபாடு கொண்ட முஸ்லிம்களின் கல்வி நிலைமை மிக மோசமானதாகக் காணப்பட்டது.

1891ன் கணிப்பின் படி படித்த முஸ்லிம் ஆண்கள் 30.5% பெண்கள் 1.5% மாகவுமே காணப்பட்டது. இந்நிலைமை பின்னர் மிகவும் வீழ்ச்சி கண்டது. முஸ்லிம் அரசியல் வாதிகளின் தலையாய பிரச்சினையாக முஸ்லிம்களின் கல்விப்பிரச்சினை அடையாளப்படுத்தப்பட்டது.

சர்வசன வாக்கெடுப்புக்கு முன்னர் - படித்த, பணம் படைத்தோருக்கு மட்டுமே வாக்குரிமை வழங்கப்பட்டது. பின்னர் டொனமூர் சீர்திருத்தங்களின் போது சர்வசன வாக்குரிமை வழங்கப்பட்டது. எனவே முஸ்லிம்களுடைய வாக்காளர் பலம் சர்வசன வாக்குரிமை வழங்கலூடாக சற்றே முன்னேற்றம் கண்டது. இருப்பினும் கொழும்பை மையமாகக் கொண்ட முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கும் கொழும்பு தவிர்ந்த வெளிமாவட்ட முஸ்லிம்களுக்கும் இடையே நெருக்கமான உறவுகள் அவதானிக்கப்படவில்லை.

மாற்றமாக முறண்பட்ட கருத்துகளும் தன்மைகளுமே வலுவாகக் காணப்பட்டது. குறிப்பாக கிழக்கிலங்கையில் பெறும்பான்மையாக வாழ்ந்த முஸ்லிம்கள், தாம் கொண்டிருந்த ஆட்புல எல்லையின் அடிப்படையிலும் தமது அரசியல் சார்ந்த செயற்பாடுகளிலும் கொழும்புத் தலைமைத்துவத்திற்கு அதிக ஈடுபாடு இருப்பதாக உணரவில்லை, காரியப்பர் போன்ற தலைவர்கள் கிழக்கில் அரசியல் நிலைமைகளைத் தீர்மானித்தனர்.

இருப்பினும் பிற்பட்ட காலங்களில் இந்நிலையில் மாற்றங்கள் தோன்றின. கொழும்பு அரசியல் தலைவர்களுடன் சுமுகமான உறவுகள் ஏற்படுத்தப்பட்டன. சுதந்திரத்திற்கு மிகக் கிட்டிய காலத்தில் இலங்கை அரசியலில் தமிழ் - சிங்கள பிரிவினைகள் மேலோங்கத் தொடங்கின. டொனமூர் சீர்திருத்த சபையிடம் ஜி.ஜி. பொன்னம்பலம் முன்வைத்த 50:50 திட்டம் S.W.R.D.பண்டார நாயக்கா போன்றோரின் சிங்கள மொழி முன்மொழிவுகள் நிலைமையின் மோசமான தன்மையினை எடுத்துக் காட்டுகின்றன. 1931ல் அறிமுகப்படுத்தப்பட்ட சர்வசன வாக்கெடுப்பானது இனத்துவ ரீதியான பிரதிநிதிகளை தேசிய பேரவைக்குத் தெரிவு செய்வதற்கு வாய்ப்பாக அமைந்தது என்ற கருத்தும் நிலவுகின்றது.

இவ்வாறாக சுதந்திர இலங்கைக்குள் நுழைகின்ற போது இனத்துவ அடயாளங்களை மிகத் தெளிவாக சுமந்து கொண்டே நுழைந்தோம். இங்குதான் தமிழ் - முஸ்லிம்- முஸ்லிம் - சிங்கள இனத்துவ உறவுகளின் தெளிவான தன்மையும் புரிந்துகொள்தல் வேண்டும். அதாவது தமிழ் - முஸ்லிம் உறவில் உள்ள விரிசல் தமிழ் - சிங்கள உறவில் உள்ள விரிசல் இரண்டும் முஸ்லிம்களை வடகிழக்கிற்கு வெளியில் சிங்களவர்களுடன் கூட்டிணைந்து விட்டது.

எனவே அப்போதைய கொழும்பை மையமாகக் கொண்ட முஸ்லிம் தலைவர்கள் பெறும்பான்மைக் கட்சிகளுடன் தம்மை இணைத்துக் கொண்டார்கள். அதேபோன்றே வடகிழக்கில் தமிழ் அரசியல் தலைவர்கள் முஸ்லிம்களுடன் நல்லிணக்கத்தைப் பேண முற்பட்டதையும் அங்கு நிலவிய அரசியல் உறவுகளை இங்கு சுட்டிக்காட்ட முடியும்.

செனட்டர் ராசிக் பரீத் தொடங்கி பதியுத்தீன் மஹ்மூத், மாக்கான் மாக்கார், நெய்னாமரிக்கார், எச்.எஸ். ஸ்மாயில் போன்ற மூத்த அரசியல் வாதிகள் பலர் பெறும்பான்மை சமூகத்துடன் கூட்டிணைந்த அரசியல் போக்கையே முஸ்லிம்களுடைய அரசியல் போக்காக கருதினர். இது மிக நீண்ட காலம் செல்லுபடியாகும் போக்காக அமையவில்லை முஸ்லிம் அரசியல் வாதிகளின் சில முற்போக்கான செயற்திட்டங்களால் முஸ்லிம்களின் கல்வி, சமூக, பண்பாட்டு, அம்சங்களிலும் அரச துறை வேலைவாய்ப்புக்களிலும் ஓரளவு முன்னேற்றம் ஏற்படுத்தப் பட்டது.

இருப்பினும் இலங்கை போன்ற பல்லின சமூகங்கள் வாழும் நாடொன்றில் ஒவ்வொரு இனத்துவக் குழுக்களும் எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வாக இப்போக்கு அமையவில்லை. பல்லின சமூகங்கள் வாழும் நாடொன்றில் குறித்த ஒரு சமூகம் தனது பெறும்பான்மைப் பலத்தைப் பிரயோகித்து சிறுபான்மைகளை அடக்க முயல்வதும், அவர்களது உரிமைகள் விடயத்தில் பொடுபோக்காக செயற்படுவதும் தவிர்க்க முடியாதது.

அத்துடன் அச்சமூகம் தனது மத, கலாசார அம்சங்களுக்கு முக்கியத்துவம் வழங்கும் அதேவேளை ஏனைய மத, கலாசார அம்சங்களை மதிக்காத சூழல் இன்றுவரை பரவலாக உணரப்படுகின்றது. எனவே பல்லின சமூகம் வாழும் நாடொன்றில் அவர்களது உரிமைகள் பாதுகாக்கப்படும் விதத்தில் சமமான அதிகாரப் பகிர்வும் ஆட்சி முறைமையும் அவசியப்படுகின்றன. இது இன்று பொதுவாக உலக அரங்கில் ஏற்று நடைமுறைப்படுத்தும் அம்சம். இந்தியா போன்ற நாடுகள் இதற்குத் தக்க முன்னுதாரணமாக இருக்கின்றன.

இலங்கையில் 1978 வரையான காலப்பகுதியில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த சுதந்திரக் கட்சியும், ஐ.தேசியக் கட்சியும் சிறுபான்மைகள் விடயத்தில் மிகவும் கடுமையான போக்கையே கடைபிடித்தனர். அதன் உச்சகட்ட வெளிப்பாடே இன்றைய வன்முறைக் கலாசாரமும் யுத்த சூழலுமாகும். குறிப்பாக முஸ்லிம்களுடைய விடயத்தில் இரண்டு பெரும்பான்மைகளும் தமது சுயஉருவத்தை அவ்வப்போது வெளிக்காட்டியே வந்துள்ளன. சில சந்தர்ப்பங்களில் அவை வன்முறைகளாக வெடித்தன, ஆனாலும் பல சந்தர்ப்பங்களில் அவை தனிப்பட்ட பழிவாங்கல்களாகவே தொடர்ந்தன.

சோனகர் என்றதும் கல்வி, தொழில்வாய்ப்பு, இதர அரச துறைகள், வைத்தியம், கட்டடநிர்மானம், வர்த்தகம், விவசாயம், காணிப்பகிர்வு என ஏராளமான துறைகளில் ஒதுக்கப்பட்டும் புறக்கணிக்கப்பட்டுமே வந்துள்ளனர். எனவே இத்தகைய அடக்கு முறைகள் பாரபட்சங்கள் என்பவற்றிற்கு நிரந்தரத் தீர்வு சட்டரீதியான தீர்வாக மட்டுமே அமையும் அன்றி வேறொன்றாக அமையாது. அத்தகைய சட்டரீதியான தீர்வை முன்மொழிவதும் அதற்கான சரியான உத்தரவாதத்தைப் பெற்றுக் கொள்வதும், அத்தீர்வின் நடைமுறை வடிவத்தை உறுதிப்படுத்துவதும், பெறும்பான்மை அரசியல் கட்சிகளுடன் கூட்டிணைந்து கொண்டு அரசியல் நடாத்துவதால் எட்டப்படமுடியாததாகும்.

எனவே இத்தகைய நீண்ட பின்புலத்தின் அடிப்படையிலேயே முஸ்லிம்கள் தனித்த அரசியல் சக்தியாக மாறவேண்டும் என்ற கருத்து முன்மொழியப்பட்டது. இலங்கை அரசியலில் முஸ்லிம் காங்கிரஸின் தோற்றம் ஒரு புதிய பரிமானத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக வடகிழக்கின் தமிழ்ப் பெறும்பான்மைத் தலைவர்கள் இதுவரை காலமும் தம்முல் ஒன்றாக ஒரு பிரிவினர்களாக அடையாளப்படுத்தி அடக்க முற்பட்ட ''தமிழ்ப்போசும் இஸ்லாமியர்கள்" அல்லது இஸ்லாமியத் தமிழர்கள் என்ற முஸ்லிம் சமூகம் தன்னை ஒரு தனித்துவமான இனத்துவம் என்று பிரகடனப்படுத்தியது.

ஏ.எம்.ஏ அஸீஸ் சேர். பொன் இராமநாதனுடன் தொடக்கிய விவாதத்திற்கு விடையாக எம்.எச்.எம் அஷ்ரப் முஸ்லிம் காங்கிரஸை நிறுவினார். சிங்கள பெறும்பான்மைக் கட்சியினர் முஸ்லிம் காங்கிரஸின் வரவை தூரத்து சவாலாகவே நினைத்தனர். ஆனால் சிங்கள இனவாத, பௌத அமைப்புக்களும், குறிப்பாக தமிழ் ஈழப்போராட்ட அமைபபுக்களும் ''முளையிலேயே கிள்ளி எறியப்படவேண்டிய அமைப்பாக" மு.காவைக் கருதினர். குறிப்பாக வடகிழக்கில் வலுப்பெற்றுவந்த தமிழ்ப் பேரினவாதம் முஸ்லிம்களை அடக்கியாள முற்பட்டது. தமிழ் அரசியல் போராட்டத்தில் முஸ்லிம்களையும் ஒன்றிணைத்து செயற்பட்டதைப்போன்று ஆயுதப்போராட்டத்திலும் முஸ்லிம்களை உள் வாங்க முற்பட்டது. ஆனால் தீர்வுகள், கோரிக்கைகள் விடயத்தில் முஸ்லிம்களுக்குரிய பங்கு திட்டமிட்டு மறுக்கப்பட்டு வந்தது. இதனை உணர்ந்தே குறிப்பாக வடகிழக்கை மையப்படுத்தி முஸ்லிம் காங்கிரஸ் நிறுவப்பட்டது.

தக்பீர் கோஷங்களுடனும், இஸ்லாத்தையும் இஸ்லாமிய விழுமியங்களையும் பாதுகாப்பதற்கும் - இஸ்லாமிய அரசியலை நிறுவுவதற்கான நிறுவன அமைப்பாகவுமே முஸ்லிம் காங்கிரஸ் தோன்றியது. இந்த அடிப்படை முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரை வெகுவாக வரவேற்கப்பட்டது. வலுவான ஆதரவுத்தளங்கள் குறிப்பாக வடகிழக்கிலும் பொதுவாக இலங்கையெங்கும் முஸ்லிம் காங்கிரஸிற்கு கிடைத்தது. 1989 - 90 வரையான 10 வருடத்தினுள் 11 பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்று அரசின் தீர்மானிக்கும் சக்தியாக முஸ்லிம் காங்கிரஸ் வளர்ச்சி கண்டது என்றால், அது அந்தக் கட்சியின் தலைமைத்துவம் மற்றும் உறுப்பினர்களின் உழைப்பு என்பதற்கு அப்பால் அவர்கள் முன்வைத்த ''இஸ்லாமிய மயப்படுத்தப்பட்ட பிரசாரங்களும் முஸ்லிம் சமூகத்திடம் நிலவிய நீண்டகால அரசியல் வெற்றிடமும் என்பதுவே பொறுத்தம்.

1988 - 2000 வரையான 3 பொதுத்தேர்தல்களும் முஸ்லிம் காங்கிரஸின் பெரிமிதமான வளர்ச்சியைக் காட்டும் அதேவேளை 2000 ற்குப்பிந்திய காலம் உடனடி வீழ்ச்சியைக் குறித்துக் காட்டுகின்றது. முஸ்லிம் சமூக அரசியல் வரலாற்றில் முஸ்லிம் காங்கிரஸின் தோற்றம் முதல் 2000 ம் ஆண்டு வரையான காலம் மிகுந்த கவனத்தை ஈர்க்கும் முக்கிய நிகழ்வுகள் நிறைந்த காலமாகும்.

1990 ல் வடக்கில் இடம்பெற்ற விடுதலைப் புலிகளின் பலவந்த இனச்சுத்திகரிப்பும் கிழக்கில் அரங்கேரிய மனித படுகொலைகளும் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றின் நடந்தேறிய மிக மோசமான இனத்துவ அராஜகமாகவே கொள்ளப்படுதல் வேண்டும். 1915 ல் நடந்தேறிய கண்டிக்கலவரம் முஸ்லிம்களின் உடமைகளையும் பொருளாதாரத்தளங்களையும் மையப்படுத்தியதாகவே அமைந்தது. அவர்களது இருப்பு குறித்து எவ்வித அச்சப்பாடும் தோன்றியிருக்கவில்லை. அது சிங்கள இனத்துவத்தின் மேலாதிக்க எண்ணத்தின் வெளிப்பாடு.

அதற்கு தமிழ்த் தலைவர்களும் பக்க வாத்தியம் வாசித்தனர். ஆனால் 1990 ல் வடகிழக்கில் இடம்பெற்ற இனச்சுத்திகரிப்பும் - மனிதப்படுகொலைகளும் தமிழ்ப் பேரினவாதம் முஸ்லிம்களின் இருப்பை பூண்டோடு அழிக்க, வன்முறைக் கலாசாரத்தைப் பயன்படுத்திய வடிவைக் காண்கின்றோம் . எனவே இரு பெறும்பேரினவாதங்களுக்குள் அகப்பட்டுக் கொண்ட முஸ்லிம் சமூகம் தனது தெரிவாக முஸ்லிம் காங்கிரஸை தெரிவுசெய்து கொண்டது. தென்னிலங்கையில் பெறும்பான்மைக் கட்சிகளுடன் இணைந்திருந்த முஸ்லிம் அரசியல் வாதிகளால் அடையமுடியாத பேரம் பேசும் பலம் முஸ்லிம் காங்கிரஸிற்கு கிடைக்கப்பெற்றது.

இதற்கு எதிராக பெறும்பான்மை சமூகங்கள் தமது திட்டமிட்ட செயற்பாடுகளை தொடக்கிவிட்டன. பொதுவான முஸ்லிம் சமூகத்தை திருப்திப்படுத்தும் போக்கில் பெறும்பான்மைக் கட்சிகள் முஸ்லிம் அரசியல் வாதிகளை பெறும்பான்மை வாக்குப்பலத்தைப் பயன்படுத்தி பாராளுமன்றம் அனுப்பிவைத்தனர். மறுபுறத்தில் சிங்கள பேரினவாத கட்சிகள் இனத்துவேசத்துடன் சிங்கள இனவாத வாக்குகளை சேகரிக்கத் தொடங்கினர். குறிப்பாக JVP - JHU போன்ற கட்சிகள் இனத்துவேச கோசங்களை முன்வைத்தன. அதைவிட மேலான முஸ்லிம் காங்கிரஸின் உட்கட்சிப ;பூசலை வலுவாக்கி கட்சிப் பலவீனப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்தன.

தமிப்பேரினவாத தீவிரவாதிகள் ஆயுதமுனையில் முஸ்லிம் காங்கிரஸை ஒழித்துக் கட்ட முயற்சித்தனர். இத்தகைய இக்கட்டான சூழல் முஸ்லிம்காங்கிரஸின் இருப்பையும் செல்வாக்கையும் மேலும் வலுப்படுத்தின. முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அரசியல் நகர்வாக கருதப்பட்ட தேசிய ஐக்கிய முன்னனி (NUA) முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் ஒழுங்கின் சிறப்பான வடிவமாக கருதப்பட்டது. இருப்பினும் வன்முறையாளர்களின் வெடிகுண்டு - மு.கா தலைவர்களின் மூச்சை நிறுத்தியது.

பெறும்பான்மைக் கட்சிகளின் உட்கட்சிப் பூசல்களுக்கான வேலைத்திட்டம் கட்சியின் மூச்சை நிறுத்தியது. சிங்கள இனவாதக் கோஷங்களும் அதற்கு ஆதரவாக எழுந்த அலைகளும் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் போக்கை நிலை தடுமாற வைத்தது. இதுவே 2000 ம் ஆண்டு வரையான முஸ்;லிம் அரசியலின் வரலாறாக அமைந்துவிட்டது.

இனவாத சிந்தனைப் படையெடுப்பில் தொடக்கப்பட்ட இலங்கை அரசியலில் முஸ்லிம் அரசியலும் நிர்ப்பந்தமாக இனவாதத்துள் இழக்கப்பட்டது. 1915 - 2000 ஆண்டு முஸ்லிம் அரசியலில் மத்தளமாக இரு பேரினவாதங்களினாலும் மாறி மாறி அடிபட்டுக் கொண்டே வந்திருக்கின்றது. முஸ்லிம்கள் தமக்கான அரசியல் ஒழுங்கை தனித்துவமாக சிந்திக்க சுதந்திரம் பெற்றதன் பின்னர் 40 வருடங்கள் தேவைப்பட்டிருக்கின்றது. ஆனாலும் இஸ்லாமிய அரசியலின் சரியான வடிவத்தினுள் முஸ்லிம் சமூகம் இன்றுவரை நகரவில்லை என்ற கசப்பான உண்மை இங்கு உணர்த்தப்பட வேண்டும்.

ஆனால் மிகவிரைவில் முஸ்லிம் அரசியல் சீர்படுத்தப்பட வேண்டிய தேவை பலராலும் உணரப்படுகின்றது.


இன்று 2000 க்கு பின்னர்

முஸ்லிம் காங்கிரஸின் தலைவரின் படுகொலையைத் தொடர்ந்து மு.காவினுள் தோன்றிய பிளவுகளும், முஸ்லிம் சமூகத்தில் முளைத்துவிட்ட அரசியல் கட்சிகளும், பெரும்பான்மை (UNP- PA) கட்சிகளும், குறிப்பாக பேரினவாதக் கட்சிகளும் (JVP) முஸ்லிம் பிரதிநிதிகளை உள்வாங்கிக் கொள்வது, அமைச்சுப் பதவிகள் தருவது, முக்கிய மேடைகளில் ஏற்றுவது இன்றைய எமது அரசியல் வறலாராக பதிவாகிக் கொண்டிருக்கின்றன.

முஸ்லிம்களின் உரிமைகள், கோரிக்கைகள், அரசியல் இலக்கு என எல்லாமே இழக்கப்பட்டுவிட்ட ஒரு சூழ்நிலையில் இத்தகைய சோடிப்புக்களை பொதுவாக அவதானிக்க முடியும். முஸ்லிம்கள் அரசியல் தலைவர்கள், அரசியலில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று வந்தவர்கள் அல்ல, சொத்தும், சுகமும் அனுபவிப்புக்களும் அவர்களது எதிர்பார்ப்புக்களாக இருந்ததில்லை. இவை அனைத்தும் அவர்களது அரசியல் வரவுக்கு முன்னர் ஆனால் அரசியல் பிரவேசத்தின் பின்னர் மரணம்வரை அமைச்சுப் பொறுப்பும், சொத்தும்,சுகமும் இலக்குகளாக மாறிப்போகும் நிலையே இன்றைய முஸ்லிம் அரசியலின் இலட்சினை.

சிங்கள பேரினவாதம் ஒருபுறம் தமிழ்த் தீவிரவாதம் மறுபுறமாக முஸ்லிம் சமூகத்தைத் தாக்கியழிக்கும் நேரத்திலும் முஸ்லிம் அரசியலின் அறிக்கை அரசியலில் மாற்றமில்லை. சில நிகழ்வுகளைக் குறித்துப் பேசுவதை விடவும் பொதுவாக எடுத்து நோக்கினால்.

  • தென்னிலங்கையின் இனவாத வன்முறைகள் - இனத்துவேச முயற்சிகள்.
  • வடகிழக்கில் தீவிரவாதத்தின் அடாவடித்தனங்கள் படுகொலைகள் - இனச்சுத்திகரிப்புக்கள்.
  • சுனாமி அனர்த்த நிவாரணத்தில் காட்டப்படும் பாரபட்சங்கள்.
  • நில அபகரிப்புக்கள் - வர்த்தக, பொருளாதார முடக்கங்கள்.
  • இனப்பிரச்சினைத்தீர்வு குறித்த பேச்சுவார்த்தைகளில் திட்டமிட்ட புறக்கணிப்புகள்.

என முஸ்லிம் சமூகத்தின் மீதான அத்துமீறல்கள் தொடரும் அதேவேளை - முஸ்லிம் அரசியல் இவற்றுக்குத் தரும் தீர்வுகள் எதுவும் காத்திரமாக அமைவதாகத் தெரிவதில்லை. இவை நிகழ்கால் யதார்த்தங்கள்.

சிவில் சமூக அரசியல் முன்னை விட சற்று முனைப்புடன் செயற்படுவதாகத் தென்படுகின்ற பொழுதும் அதன் வகிபாகம் எந்தளவுக்கு முஸ்லிம் அரசியலில் தாக்கமுடையதாக இருக்கின்றது. என்பது இன்னமும் தெளிவில்லாமலேயே தொடர்கின்றது. MCSL - முஸ்லிம் அமைப்புக்களின் சம்மேளனம் சிவில் சமூகம் சார்பாக காத்திரமான நகர்வுகளை மேற்கொண்ட பொழுதும் அதனால் முஸ்லிம் அரசியலை நேரான பாதைக்குக் கொண்டுவர முடியும், என்று கூறமுடியாது.

அதற்கு நியாயமான பல காரணிகள் எமது சமூகத்தில் இன்னும் நிலவுகின்றன. ஆனாலும் குறிப்பாக இப்பிரச்சினை விவாகரத்தில் முஸ்லிம் கவுன்சில் காத்திரமான அழுத்தத்தை பிரயோகிக்க போதுமானது.

பொதுவாக இலங்கையின் அரசியலின் தற்போதைய ஸ்திரமற்ற தன்மையும், இனப்பிரச்சினையின் பல்பட்ட தன்மையும் முஸ்லிம்களின் அரசியல் குறித்த அவதானத்தை மேலும் வலுப்படுத்துகின்றது. ஆனால் முஸ்லிம்களின் அரசியல் சார்ந்த மிகச்சரியான நிலைப்பாடுகளை பலமாக வெளிப்படுத்த வேண்டிய இச்சந்தர்ப்பத்தில் முஸ்லிம்களுடைய இலக்கற்ற அரசியல் போக்கானது முஸ்லிம் சமூக அரசியல் குறித்த பல கேள்விகளை எழுப்பிவிட்டுள்ளது.

நாளை
இதே நிலையில் முஸ்லிம் அரசியல் தொடருவது ஒரு ஆரோக்கியமான அறிகுறியாக அமையாது. தற்போதைய முஸ்லிம் கட்சிமுறைமைகளும் சந்தர்ப்பவாத அரசியலும் நாளடைவில் முஸ்லிம் சமூகத்தால் புறக்கணிக்கப்படும். ஏனெனில் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தேவை எவ்வளவு யதார்த்தமானதோ அதே போன்று அத்தேவை இஸ்லாமிய அடிப்படைகளில் நின்றே நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதும் யதார்த்தமானது.

இதனையே முஸ்லிம் காங்கிரஸின் வரவும் அது சுமந்து வந்த ''இஸ்லாமிய அரசியல்" பிரச்சாரமும் அதற்கு தோள்கொடுத்த முஸ்லிம் சமூகத்தின் ஆதரவுத்தளமும் சுட்டிக்காட்டுகின்றன. முஸ்லிம் சமூகம் அதன் மார்க்கத்தின் பால் கொண்டுள்ள அபரிமிதமான பற்றும் இதற்குக் காரணமாகும். எனவே முஸ்லிம் சமூகத்தின் நாளைய அரசியல் இஸ்லாத்தை ஒரு பக்கத்தில் வைத்துவிட்டு இலகுவாக மேற்கொள்ளும் அரசியலாக அமையாது.

இலங்கை போன்ற அனைத்து வளங்களும் நிறைவாகக் கொண்ட தேசமொன்றை இனவாதம் என்ற குறுகிய சிந்தனையால் சூறையாடும் பெறும்பான்மை அரசியல் வாதிகளாயினும் சிறுபான்மை அரசியல், தீவிரவாத சக்திகளாயினும், அந்நிய ஆதிக்கங்களாயினும் இலங்கையின் பொதுநலன், தேசிய அபிவிருத்தி பற்றி சிந்திக்கும் சக்தியால் நிச்சயம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். எனவே அத்தகைய பலம் பொருந்திய சக்தியின் பிரதான கர்த்தாவாகவோ அல்லது சாதாரண பங்காளியாகவோ முஸ்லிம் சமூகம் தன்னை அமைத்துக் கொள்ளவேண்டும்.

இலங்கையில் புறையோடிப்போயுள்ள பல நூற்றாண்டுகள் பலமை பொருந்திய இனத்துவப் போக்கை உடைத்தெறிய முடியாவிடினும் அதனால் தேசிய அபிவிருத்திக்கும் பொதுநலன்களுக்கும் ஏற்படும் பாதகங்களையாவது தடுத்து நிறுத்தமுடியும் இதுவே முஸ்லிம்களின் நாளைய அரசியல் அமைப்பாக இருத்தல் அவசியமாகும்.

எமது இளைஞர்கள், எமது சந்ததிகள், எமது மார்க்கம் என எல்லாவற்றின் நலன் குறித்தும் மிகப் பொதுவாக பரந்தளவில் சிந்திக்கும் எவரும் இத்தகைய முடிவை நோக்கி வருவதே மிகப் பொறுத்தமானதும் முற்போக்கானதுமாகும்.

Thanks : A. Asmin  (SpiderPath)

Thursday, May 2, 2013

நல்லுபதேசம் Vs.பதில் பதேசம்

 

னிய நண்பர்களே,
 
அண்மையில் ஒரு நண்பர்  நல்லுபதேசம் எனும் தலைப்பிலே மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியிருந்தார். அதற்கு எனது பதிலை அனுப்பியிருந்தேன்.  அவற்றை நீங்களும் படித்துப் பாருங்கள். எனது பதில் நல்லுபதேசத்திற்கு அவர் இன்னும் பதில் தரவில்லை. அவ்வாறு தருவாராயின் அதனையும் எதிர்காலத்தில் இணைக்கின்றேன்.
 
 
 
அன்புள்ள இஸ்லாமிய சகோதரியே!
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஜப்னா முஸ்லிமில் வெளியிடப்பட்ட பழைய கட்டுறை ஒன்றைத் தேடிச்செல்லும்போது ஒரு கொமாண்டில் உங்களைப் பார்த்தேன். உங்களைப் பற்றிய தகவல்களை வாசித்தேன்.
 
சகோதரியே! நானும், நீங்களும் உலகிலுள்ள அனைவரும் வீணாகப் படைக்கப்பட்டவில்லை. நாம் முஸ்லிம்கள். மறுமை வாழ்வு பற்றி நம்பிக்கை வைத்துள்ளவர்கள். சுவர்க்கம் பற்றியும், அதன் இன்பங்கள் பற்றியும், நரகம் பற்றியும், அதன் அகோரம் பற்றியும் அறிந்துள்ளோம்.
சகோதரியே! ஷைத்தான் எங்களை எப்போதும் வழிகெடுப்பவன். நரகில் தள்ளுவதே அவனின் குறிக்கோள்.
 
உங்கள் விபரங்களில் பல மார்க்கத்தின் அடிப்படைக்கு மாற்றமானதாக இருப்பதைப் பார்த்து கவலையடைந்தேன். ஓரிரு வரிகள் உங்களுக்கு உபதேசமாக எழுதுவோம் என்றே எழுதுகிறேன். நேர்வழி அல்லாஹ்விடமிருந்து மட்டுமே.
 
இசைகளிலும், சங்கீதங்களிலும், சினிமாக்களிலும் மூழ்கி வாழ்ந்த பலர் இன்று மண்ணறையில் வாழ்கின்றனர். அவர்களுக்கு வழங்கப்பட்ட சோதனை எனும் இவ்வாழ்வில் அவர்கள் தோல்வியுற்றவர்கள். நீங்களும் அந்நிலையிலே வாழாது இஸ்லாமிய ஓர் பெண்ணாக, இஸ்லாமிய ஒழுக்கங்களைப் பேணி வாழ்பவளாக இருந்தால் படைத்தவன் அல்லாஹ்வின் அன்பும் உங்களுக்குக் கிடைக்கும். மறுமையில் சுவர்க்க மாதராக நீங்கள் மாறிவிடுவீர்கள். எனவே மனிதனை இறை சிந்தனையை விட்டும் ஒதுக்கும் உலக இன்பங்களில் மூழ்கி மறுமையில் கைசேதப்படுவதை விட இறைவனின் பொருத்தத்துக்குரியவளாக வாழ்வதே ஈருலக வெற்றிக்கான வழி என்பதை ஞாபகமூட்டுகின்றேன்.
சகோதரன்
அபூ ஸஃத்
 
 
 
 
நண்பரே அபூ ஸஃத்
 
உங்களது அக்கறைக்கு மிக்க நன்றி.
 
ஜாஃப்னா முஸ்லீம் தளத்தில் பிரசுரமான எந்தக் கட்டுரைக்கான பின்னூட்டத்தினை  படித்து இந்த 'நல்வழிப்படுத்தும் முயற்சி" யில் நீங்கள் இறங்க வேண்டியேற்பட்டது என்பதை குறிப்பிடவில்லையே.. !
 
ஆனாலும் இதுவரையில் நான் எனது கருத்துக்களை சரியாகத்தான் கூறியிருக்கின்றேன் என்பதிலே எனக்கு சிறிதும் சந்தேகமில்லை.
 
இஸ்லாமியப் பெண் என்பவள் முட்டாளாகத்தான் இருக்க வேண்டுமென்ற அவசியம் கிடையாது. இறைவன் அருளிய சமத்துவமானதும் உண்மையானதுமான மார்க்கத்தை இடையில் வந்துபோன ஆண்கள் நீங்கள் உங்கள் நலன்களுக்கேற்றபடியெல்லாம் வளைத்து பெண்களின் நலன்களுக்கு எதிராக ஆக்கி வைத்திருப்பதற்காக உங்கள் விருப்பங்களுக்கு ஏற்றபடிதான் நடந்துகொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை.
 
பெண்ணிடமே பிறந்து பெண்ணிடமே வளர்ந்து வாலிபப்பருவம் வந்ததும் பெண்ணையே கேலி செய்யும் நீங்கள் எங்களுக்கு நல்வழிகூறும் தகுதியற்றவர்கள். பெண்ணிடம் இன்பம் துய்ப்பதும் பின்பு வயதாகி நாடி தளர்ந்ததும், ஆண்களைப் பாவத்தில் வீழ்த்த வந்த பிசாசுகள் நாங்கள் என்று பயான் செய்வதும்தானே ஆண்களாகிய நன்றி கெட்ட மனிதர்களின் குணம்...?
 
எங்களது கல்வியை உரிமைகளை நசுக்குவது பற்றித் தட்டிக்கேட்டால் உடனே மேற்கத்திய அரைகுறை ஆடையணியும் பெண்களோடு எங்களை நீங்களாகவே ஒப்பிட்டு தாழ்த்துகின்றீர்கள். உங்களுடைய ஆண் மேலாதிக்கத்தை எதிர்ப்பதற்காக நாங்கள் ஒன்றும் தறிகெட்டு வாழ ஆசைப்படுகின்றோம் என்று அர்த்தமில்லை.
 
ஒழுக்கத்தை முதலிலே நீங்கள் கற்றுக்கொள்ளுங்கள். ஒருபெண் சிறிது அரைகுறையாக வந்தாலும் அவளைப் பார்த்து மனதாலேயே கற்பை இழப்பவர்கள் ஆண்களாகிய நீங்கள்தான். உங்களது பலகீனங்களை மறைக்கத்தான் நீங்கள் பெண்களை போர்த்திக் கொண்டு இருக்கச் சொல்லுகின்றீர்களே தவிர நல்ல நோக்கத்தில் அல்ல. ஆம் பெண்ணை சக மனிதனாக எண்ணாத மானங்கெட்ட கோழைகள் நீங்கள்.
 
பெண்களுக்கு சமவுரிமை தராத விடயங்கள் ஆண்களாகிய உங்களுக்கு எவ்வளவு புனிதமாக இருந்தாலும் அது எங்கள் கால்தூசுக்குச் சமானம்.
 
ஜெஸ்லியா ஜெஸ்லி
 
 
 
 
 
 
 
 
 
 
 


Saturday, April 27, 2013

சிறுகதை : திலீப், முஸம்மில் மற்றும் தீசன் குரூஸ்







துவரையில் ஒருபோதும் பார்த்திராத ஓர் அழகான இளம்பெண் தனது இனிய குரலில், 'எக்ஸ்க்யூஸ்மீ ஸேர்.. யூ ஹேவ் டூ அட்டெண்ட் திஸ் கோல் ரைட் நவ்! எக்ஸ்க்யூஸ்மீ ஸேர்.. யூ ஹேவ் டூ அட்டெண்ட் திஸ் கோல் ரைட் நவ்!.... எக்ஸ்க்யுஸ்மீ...'   என்று இடைவிடாமல் தொடர்ந்து சொல்லியவாறு வெகுநெருக்கமாக வந்து அதரம் குவித்து.. 

'டேய் யாருடையோ போன் அடிக்குது. அதை எடுத்துத் தொலைங்களேண்டா! ஞாயித்துக்கிழமையிலயும்! நிம்மதியா தூங்க விட மாட்டாணுகள். சே!' என்று யாரோ எரிச்சலோடு அதட்டினார்கள்.

உடனே அந்த அழகி சட்டென்று பின்வாங்கி உடைந்து உதிர அந்த இடத்தில் ஒட்டடைபிடித்த ஓட்டுக்கூரையும் சோகையாய் சுழன்று கொண்டிருந்த ஒரு பழைய மின்விசிறியும் தெரிந்தது. 

சட்டென்று எழுந்து உட்கார்ந்தான் திலீப். இரவு வெகுநேரம்வரை விழித்திருந்து வரைபடங்களைத் தயாரித்து முடித்து விட்டுத் தூங்கச் சென்றதால் கண்கள் இரண்டும் தீயைக் கக்கின.

'எக்ஸ்க்யூஸ்மீ ஸேர்.. யூ ஹேவ் டூ அட்டெண்ட்...' நச்சரித்த செல்போனை தடவித் தேடியெடுத்தான். 'ரிங்டோன் என்ன ஓட்டோமட்டிக்கா மாறிட்டுதா?' என்று யோசித்தவாறு அதன் வயிற்றிலே ஒரு அழுத்து அழுத்திவிட்டுக் காதிலே வைத்தான். 

'ஹலோ.. யாரு?'

'ஆ! தம்பீ நாந்தான் தீசன்! தீசன் குரூஸ் அண்ணண் பேசுறேன் ஞாபகமிருக்கா.. என்னை..?' என்றது மறுமுனை.

'ஆங்...! சொல்லுங்க!' என்றான் திலீப் தூக்கக் கலக்கத்தில் யாரென்று புரியாமலே.

'ஜீவநதியில இந்த மாதம் வந்த உங்கட கதையை படிச்சன் தம்பீ.. மிச்சம் நல்லாருந்தது.. நல்லா எழுதியிருக்கிறீங்க அதுல என்ன விசேசமென்டா...' என்று தொடங்கி ஏதேதோ சொல்லிக்கொண்டே போனார் மறுமுனை. முதலில் திலீப்புக்கு எதுவுமே புரியவில்லை. திடீரென ஒரு சந்தேகம் பொறிதட்டவே பேசிக்கொண்டிருந்த செல்போனை சட்டெனத் திருப்பிப் பார்த்தான். அப்போதுதான் விடயமே புரிந்தது.

அது அவனுடைய போன் அல்ல.

ஆம். அது அவனது அறை நண்பன் முஸம்மிலுடைய போன். இருவருடைய செல்போன்களும் பார்வைக்கு ஒன்றுபோலவே இருப்பவை. இரவு திலீப்புக்கு அருகிலேதான் படுத்திருந்தான் முஸம்மில். இப்போது படுக்கையில் அவனைக் காணவில்லை. 

திலீப்பும் முஸம்மிலும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள்தான். ஆனால் ஒருவருக்கொருவர் அறிமுகமாகி நண்பர்களானது என்னவோ வேலைநிமித்தம் இங்கே நுவரெலியாவுக்கு வந்த பின்புதான். ஆம் இரண்டு வருடங்களுக்கு முன்பு வீதி அபிவிருத்திசபையில் தொழினுட்ப உத்தியோத்தராக நியமனம் கிடைத்து நுவரெலியாவுக்கு வந்திருந்த திலீப் எங்கு தங்குவது என்று புரியாமல் தடுமாறி நின்றபோது தனது குவார்ட்டஸில் அடைக்கலம் தந்தவன் முஸம்மில்தான். அவன் ஏற்கனவே இங்குள்ள ஒரு தமிழ் கலவன் பாடசாலையில் விஞ்ஞான ஆசிரியராக கற்பித்துக் கொண்டிருந்தான்.

முஸம்மில் ஓர் ஆசிரியர் மட்டுமல்லாது வளர்ந்து வரும் ஒரு இளம் எழுத்தாளனும் கூட. திலீப்பும் அவனுடைய வாசகர்களிலே ஒருவன்தான்.  முஸம்மிலின் விஞ்ஞானபூர்வமான எழுத்தாற்றல் மற்றும் வித்தியாசமான விடயங்களை எழுத்தில் முயன்று பார்க்கும் ஆர்வம் ஆகியவற்றை அவனுக்கு மிகவும் பிடிக்கும்.

இருந்தாலும் முஸம்மிலின் சில இலக்கியக் கொள்கைகள் திலீப்பின் ஆன்மீக நம்பிக்கைகளுடன் ஒத்துப்போவதில்லை. இதனால் அவை பற்றி முஸம்மிலை கிண்டலடித்த வண்ணமே இருப்பது திலீப்பின் வழமை. இதனால் அவர்களிடையே அவ்வப்போது சிறு முரண்பாடுகளும் விவாதங்களும் எழுவதுண்டு. ஆனால் இவை எவையுமே அவர்கள் இருவரின் நட்புக்கு இடைஞ்சலாக இதுவரை இருந்ததில்லை என்றால் நம்புவீர்களா..?
முஸம்மிலின் எழுத்தாற்றலை திலீப் எவ்வளவுதான் கிண்டலடித்தாலும் அவற்றை அவன் விளையாட்டாகவே எடுத்துக்கொள்வான்.  மிஞ்சிப்போனால் அவனும் திலீப்புக்கு ஈடுகொடுத்து பதில் நையாண்டி புரிவானே தவிர ஒருபோதும் கோபித்துக் கொண்டதேயில்லை. அதுதான் முஸம்மிலிடம் திலீப்புக்கு மிகவும் பிடித்த குணமே.

எதிர்ச்சுவரில் நேரம் காலை 7:20 ஆகிவிட்டிருந்தது. இத்தனை சுவாரஸ்யமாக முஸம்மிலின் கதை ஒன்றைப் பற்றி போனிலே மூச்சுவிடாமல் பாராட்டிக்கொண்டிருக்கும் நபரை இடைமறித்து, 'அண்ணே, நான் முஸம்மில் இல்லை திலீப். அவனோட ஒரே அறையில் வாடகைக்குத் தங்கியிருக்கிற நண்பன்' என்று எப்படிச் சொல்வது..? என்று யோசித்தான் திலீப்
ஆனால் அவரோ அவனது தவிப்பை அறியாமல் தொடர்ந்து பேசிக்கொண்டேயிருந்தார்.

 '...உங்களுக்கிட்ட அந்த தைரியமும் நேர்மையுமிருக்கு தம்பீ. இஞ்சை எழுதிற ஆக்கள் நிறையப்பேர் அப்படியில்ல.. தெரியுமா?  நீங்க ஒரு முஸ்லிமாக இருந்தாலும்.. தம்பீ கேக்கிறீங்களா...?'

'ஆங்.. கேக்கிறன் நீங்க சொல்லுங்கண்ண..' என்று சமாளித்து வைத்தான். அவர் சொல்லிக் கொண்டே போக 'முஸம்மில் எங்கே போனான்.. இவரை எப்படிச் சமாளிப்பது..?' என்பதிலேயே திலீப்பின் யோசனை ஓடிக்கொண்டிருந்தது. இடையிலே போனைக் கட் செய்வோமா என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது அறைவாசலிலே நிழலாடியது.

முஸம்மில்தான் கையிலே இரு டீ கப்களுடன் வந்தான்.

'ஆ! திலீப் நீ எழும்பிட்டியாடா? இந்தா டீ குடி! என்னடா இது என்ட போன்ல பேசிட்டிருக்கிறா..யாருடா அது?' என்று சொல்லிக் கொண்டே வந்தவனைப் பேசவிடாமல் வாயில் விரலைவைத்து மௌனமாக்கினான். பின்பு அவனிடம் போனைக் கொடுத்து விட்டு, 'போங்கடா நீங்களும் உங்கட கதைகளும்' என்று மனதுக்குள் திட்டிவிட்டு டீயை உறிஞ்சினான் திலீப். போனோடு வெளியிலே சென்று சிறிது நேரத்தின் பின்பு மீண்டும் உள்ளே வந்தான் முஸம்மில்.

'என்ன பேசி முடிச்சிட்டியா..? அதுசரி முஸம்மில், அந்தாள் என்ன உன்னைப் போய் இப்பிடிப் பாராட்டிக்கிட்டேயிருக்கிறான்..? யாரு அது?'

 ' ஏன் உனக்குப் பொறுக்காதே. டேய், அவரு நல்ல திறமையான ஒரு எழுத்தாளர்டா. அதோட நல்ல விமர்சகரும் கூட. ஆனா எளிமையானவர். பிரபல்யத்தையே விரும்பாதவர்டா. நோட் த பொயிண்ட், மனிசன் நல்லா எழுதிறவங்களை மட்டும் வஞ்சகமில்லாம பாராட்டும்...'

'அதுதான்டா முஸம்மில் நானும் யோசிக்கிறேன்.. உன்னைப் போய் ஏன் பாராட்டினாரு என்று..?'

'டேய் திலீப், அவரு சாதாரண ஆள் இல்லடா. அவரைப்பற்றி நீ படித்தோ அல்லது நேரில சந்தித்தோ அறிந்தால்தான் அவருரோட பாராட்டு எவ்வளவு பெரிய அங்கீகாரம் என்றதை புரிஞ்சு கொள்வாய்..'

'அப்படியெண்டா பாவம் அவரு உன்னோட எழுத்துகளை சரியாப் படிக்கலையோ என்னவோ?'

'அடிவாங்கப்போறடா நீ.. உனக்கு என்ட எழுத்தென்டா ஒரு நக்கல் என்ன..? இருந்து பாருடா ஒரு நாளைக்கு நீயே என்ட சிறுகதைப் புத்தகங்களையெல்லாம் தேடி அலையப்போறா'

'எதுக்குடா பழைய பேப்பருக்கா..?'

உடனே அவன் பொய்க்கோபத்தோடு துரத்தி வர டீக்கப்பை அப்படியே வைத்துவிட்டு எழுந்து பாத்ரூமுக்குள் ஓடிப்போய் கதவைச் சாத்திக்கொண்ட திலீப் உள்ளேயிருந்து நக்கலாகச் சிரித்தான். கூடவே இருந்த அறை நண்பர்களும் அவர்களது வேடிக்கை விளையாட்டை ரசித்தார்கள்.

'மவனே திலீப், அதுக்குள்ளேயே கிட. வெளியே வந்திடாத. என்ட திறமையைப் பத்தி நீயே ஒரு நாளைக்கு வந்து எனக்கிட்டச் சொல்ல வைக்காட்டி நான் முஸம்மில் இல்லடா'

'அப்படியா..? எதற்கும் வேற நல்ல பேர் ஒண்டு ரெடியா வச்சுக்க!'

'சரி, சரி கெதியா வெளியே வாடா. நான் குளிச்சிட்டு ஊருக்கு போகணும்'

இவ்வாறு வேடிக்கைப் பேச்சுகளோடு ஆரம்பித்த அந்த விடுமுறை நாளின் காலைப்பொழுது முஸம்மில் தவணை விடுமுறைக்கு ஊருக்கும் கிளம்புவதோடு முடிவடைந்தது. அவன் புறப்பட்டுப்போகும்போது எழுத்தாளர் தீசன் குரூஸ் எழுதிய சில இலக்கிய நூல்களை திலீப்புக்கு வாசிக்கும்படி தந்துவிட்டுத்தான் சென்றான்.


000





முஸம்மில் ஊருக்குச் சென்று சில நாட்கள் கழிந்திருந்தன.

ஒருநாள் வேலைத்தளம் ஒன்றைப் பார்வையிடுவதற்காக தலவாக்கலை வரையில் திலீப் போய் வரவேண்டியிருந்தது. இப்படியான தூரப்பயணங்களுக்கு அலுவலக பிக்அப் வாகனத்தை எடுத்துக்கொண்டு போவதுதான் அவனது வழமை. ஆனால் அன்றைய தினம் கண்டியிலிருக்கும் பிரதான அலுவலகத்திலிருந்து சீப்ஃ எஞ்சினியர் நுவரெலியாவுக்கு வரவேண்டியிருந்ததால் வாகனம் அங்கு சென்றிருந்தது. பஸ்ஸிலே தலவாக்கலைக்குச் சென்றுவரத் தாமதமாகும் என்பதால் வேறுவழியின்றி தன்னுடைய மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு புறப்பட்டான் திலீப்.

நுவரெலியா ஆர்டீஏ அலுவலகத்திற்கு திலீப் வந்து சேர்ந்த இந்த இரண்டு வருடத்தில் பஸ்ஸிலும் ரயிலிலும் அலுவலக பிக்அப் வாகனத்திலும் ஹற்றன், கண்டி, வெலிமடை, பதுளை என்று எத்தனையோ ஊர்களுக்கு எவ்வளவோ பயணங்கள்..  ஆனால் மலைப்பிரதேசத்தில் பைக்கில் இவ்வளவு தூரம் செல்லும் முதல் பயணம் அன்றுதான் என்பதால் அது அவனுக்கு வித்தியாசமாகவும் புத்துணர்ச்சியாகவும் இருந்தது.

இதமான குளிர்காற்று முகத்தில் மோதிக்கொண்டிருக்க துடைத்துவிட்டது போன்ற நீலவானப்பின்னணியில் பச்சை மலைகள் முழுவதும் நிறைந்திருந்த தேயிலைத் தோட்டங்களை ஊடுருவிக்கொண்டு பாம்பாய் நெளியும் நெடுஞ்சாலையினூடாக
'வளைந்து நெளிந்து போகும் பாதை மங்கை மோக கூந்தலோ...'

என்ற கண்ணதாசனின் பாடல் வரிகளை முணுமுணுத்தவாறு சிட்டாய் பறந்து கொண்டிருந்தான். வழியில் அங்காங்கே முதுகிலே கூடைகளோடு கொழுந்துபறிக்கும் பெண்கள் வரிசையாகத் தென்பட்டார்கள்.

நுவரெலியாவிலிருந்து புறப்பட்டு ஏறத்தாழ அரைமணி நேரத்தில் லிந்துலையை தாண்டினான். அங்கு ஒரு கொண்டை ஊசி வளைவிலே அவன் திரும்பிய போது வீதியின் ஓரத்திலே ஒரு முதியவர் கையிலே ஹெல்மெட் ஒன்றுடன் தனியாக நின்றிருந்தார். அவரைத் தாண்டிச் செல்கையில் திலீப்பின் முகத்தை அவர் உற்றுப் பார்த்து கைகளை அசைத்தது போல அவனுக்குத் தோன்றியது. சிறிது தூரம் சென்ற பின்புதான் ஏதோ நினைத்தவன் சட்டென பைக்கை ஓரமாக நிறுத்தினான்.

உடனே அவனை நோக்கி அவர் ஓடிவருவதை பின்பார்வைக் கண்ணாடியில் கண்டான். அவரது வேகத்தைப் பார்க்கும்போது ஏதும் அவசரமான விடயம் போலிருந்தது.

'தம்பி, அவசரமாவோ போறீங்கள்..? நான் கொஞ்சம் தலவாக்கல வரைக்கும் வரேலுமா?'

அருகில் வந்ததும் அவனுக்கு இதற்கு முன்பு அவரை எங்கோ பார்த்திருப்பது போலத் தோன்றியது. அவனது பயணம் சிறிது அவசரமாக இருந்தாலும் ஏனோ அவருக்கு உதவிசெய்ய வேண்டும் போலிருந்தது.

'சரி ஏறுங்க ஐயா! ஆனா கொஞ்சம் கவனமாகப் பிடிச்சிருங்க.. நான் கொஞ்சம் பாஸ்ட்டாக ஓடுவன்'.

'ஆ! சரி, தம்பி நீங்க போற மாதிரி போங்கோ!' என்று பின்புறம் தொற்றிக்கொண்டார் அவர்.

'என்ன ஐயா ஏதும் அவசரப் பயணமா..?'

'இல்ல ஒரு வேலையா மகளின்ட மாப்பிள்ளையோட தலவாக்கலைக்கு பைக்ல வந்தேன். வழியில பைக் பழுதாகிட்டுது. 'ஒரு கராஜ்ல பைக்கை செய்து எடுத்திட்டு வாரேன் நீங்க பஸ்ல போய் முன்னால இறங்குங்க' என்டு சொல்லிட்டாரு.. மிச்ச நேரமா நிக்கிறன் பஸ்ஸே இல்ல அதுதான்...'

அவரை ஏற்றிக்கொண்டு சிறிது தூரம் போனதும் ஓரிடத்தில் சட்டென மழைபிடித்துக் கொண்டது. உடனே பாதையோரத்திலிருந்த ஒரு சிறிய தேனீர்க் கடையோரமாக பைக்கை நிறுத்திவிட்டு இருவரும் இறங்கி கடையினுள்ளே அமர்ந்தனர்.

'இரண்டு டீ போடுங்க!'

'தம்பீ ஒன்றுக்கு சீனி போட வேண்டாம்..!'

'என்ன... டயபட்டீஸ் இருக்கு போல' என்று கேட்டான் சிறிது புன்னகைத்தவாறு.

'வயசாகிட்டுதே.. கவலைகளும் அதிகம் என்ன செய்வது? தம்பி எங்க வேலை செய்கிறீங்க?'

அவன் சொன்னான். அதன் பிறகு தொடர்ந்து அவர்களது உரையாடலில் ஒருவரையொருவர் அறிமுகம் செய்து கொண்டார்கள். அவர் திருகோணமலையில் ஒரு பாடசாலை அதிபராக இருந்து பின்னர் ஓய்வுபெற்றவராம். மனைவியின் திடீர் மறைவின் பின்பு தற்போது இடம்பெயர்ந்து ராகலையில் வசிக்கும் தனது மகள் ஒருவருடன் தங்கியிருக்கின்றாராம். இப்போது பத்திரிகை வாசிப்பது, ஆக்கங்கள் எழுதுவது, மகளின் குழந்தைகளோடு நேரத்தைச் செலவிடுவது என்று பொழுதைக் கழிப்பதாகவும் சொன்னார்.

'பேப்பருக்கு எழுதிறது என்று சொன்னீங்கதானே.. ஐயா. என்ன எழுதுவீங்க செய்தியா..?'

'இல்ல தம்பீ கட்டுரைகள், கதைகள்.. சில நேரம் கவிதைகளும் எழுதிறதுதான். இப்பவெல்லாம் என்னுடைய எழுத்து மூலம்தான் மற்றவங்களுக்கும் ஓரளவு என்னைத் தெரிஞ்சிருக்கு. முந்தி பாடசாலை அதிபராக வேலை செய்த காலங்கள்ல அதுக்கெல்லாம் நேரமிருந்ததில்ல.. ஒபிஸ் ஸ்கூல் என்டு காலம் ஓடிட்டுது. இப்பதான் கொஞ்சம் நேரம் கிடைக்குது'

'அப்படியென்டால் உங்கட ஸ்கூல் அனுபவங்களைத்தான் கூடுதலா எழுதுவீங்க போல'

'அப்படியில்ல தம்பி.. இன்னமும் நம்மட சனங்கள் படுகிற கஸ்டங்களைத்தான் நான் எழுதிறன்.. என்ட சொந்த கஸ்டத்தை எழுதி என்ன பலன்?'

'ஓ அப்படியா? அப்ப நீங்க சமூக நோக்கமுள்ள எழுத்தாளர் போல..' இதைச் சொல்லும்போது ஏனோ திலீப்புக்கு முஸம்மிலின் நினைவு வந்தது. அவனைப்பற்றியும் அவரிடம் பேசலாமென்று நினைத்துக் கொண்டிருந்தபோதுதான் ஒரு விடயம் நடந்தது.

'ஒருவன் எழுதினாலே சமூகநோக்கம்தான் அதில இருக்க வேணும் என்று நினைப்பவன்தான் தம்பி ஒரு உண்மையான படைப்பாளி!' என்று குரலை சட்டென உயர்த்தி சற்றுக் காட்டமாக கூறினார்.

திலீப் சிறிது பயந்து போனான். கடைக்குள் அமர்ந்திருந்த சிலர் சட்டென அவர்களைத் திரும்பிப் பார்த்தார்கள்.

இதை அவன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.  'ஏன் இவர் இப்படி திடீரென உணர்ச்சி வசப்பட்டார். இப்போது என்ன செய்யலாம்..?' என்று யோசித்தவாறே வெளியே பார்த்தான். இலக்கியத்துறையில் திலீப்புக்கு ஓரளவு ஈடுபாடு இருந்தபோதிலும் அவர் இவ்வளவு ஸீரியஸானது சிறிது வேடிக்கையாக இருந்தது.

'சரி ஐயா, டீயைக்குடிங்க ஆறிடப்போகுது'

மழை மேலும் பலமாகப் பெய்து கொண்டிருந்தது. வீதியெங்கும் வெள்ளம் கரைபுரண்டோடிக் கொண்டிருந்தது. இப்போதைக்கு பயணத்தை தொடர முடியாது என்பதால் டீயை உறிஞ்சும் அவரையே வைத்த கண்வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் திலீப்.

'எக்ஸ்க்யூஸ்மீ... உங்களுக்கு ப்ரசரும் இருக்குதா ஐயா...?'

அவர் உடனே சிரித்து விட்டார்.  'ஏன் தம்பி... நான் சத்தமா கத்திட்டேனா? இப்பல்லாம் எழுதிற சிலபேரையும் அவங்கட எழுத்துகளையும் பார்க்கேக்க ஹை ப்ரசரும் வந்திரும் போலத்தான் இருக்குது.. ஒரு சமூகப்பற்று கிடையாது.. தமிழறிவு போதாது.. என்னவோ எல்லாரும் ஆடுறாங்கண்டு வயித்து வலிக்காரனும் ஆடினானாம் என்கிற மாதிரி உப்பு சப்பில்லாம எழுதுதுகள்..'

சொல்லும்போதே அவரது கழுத்து நரம்புகள் புடைத்துக் கிளம்பியதைப் பார்த்தான் அவன்.

'அது வந்து உலகத்தில எல்லாமே மாறுகிறதுதானே ஐயா. அதுபோலத்தான் இதுவும். அதுக்கு நாங்க என்னதான் பண்ணலாம்? இதுக்காக நீங்க உங்களை ஏன் ஐயா...'

'தம்பீ உங்களுக்கு சீத்தலைச் சாத்தனார் என்டாத் தெரியுமே...?' என்று கேட்டார் திடீரென்று. அவனுக்கு திக்கென்றது.

'ஆங்.. ம்ம்! ஒரு தமிழ்ப்புலவர்தானே...?' என்றான் குத்துமதிப்பாக.

'அதுசரி, அவருக்கு அந்தப் பெயர் ஏன் வந்ததென்று தெரியுமே...?'

'வேற சிகரட் ஏதும் வேணுமா அண்ண..?' என்று கேட்ட கடைப்பையனை மனதுக்குள் வாழ்த்திக் கொண்டான் திலீப்.

'இல்ல போதும்!' என்று கடைப்பையனிடம் அவன் ஐநூறு ரூபா ஒன்றை நீட்ட அவனது கையை தட்டி விட்டு சட்டென எழுந்துவிட்டார் அந்த மனிதர். விரைந்து போய் கல்லாவில் இருந்தவரிடம் தனது சட்டைப்பையிலிருந்து காசைக் கொடுத்து விட்டு வந்து மீண்டும் அமர்ந்தார் அவர்.

'அதுசரி, எப்படி ஐயா இந்த வயதிலும் இவ்வளவு உசாரா இருக்கிறீங்க..?'

'அதை பிறகு சொல்றன், யாராவது தமிழில எழுதும்போது பிழைவிட்டா தன்ட தலையிலேயே குட்டிக் கொள்வாராம்.  அப்படிக் குட்டிக்குட்டி வந்த காயங்களால் தலைமுழுதும் சீழ்பிடித்துத்தான் செத்தாராம்..'

'அப்பிடியா..?'

'அன்டைக்கு பாருங்க ஒருவன் இன்டநெட்டில இப்படி எழுதியிருக்கிறான்..
'தலைவரின் அணுதாபச் செய்தி கேட்டு தொண்டர்கல் மேளும் கவளையடைந்தனர்' என்று. சிறுகதைகள் என்று பலபேர் எழுதிறாங்கள். அம்புலிமாமா கதைகள் போல இருக்கு. வாக்கியப் பந்தியை உடைத்து படிக்கட்டுகளாக்கி கவிதை எழுதிறாங்க சே!'

'...........'

'அப்பிடித்தான் இப்ப உள்ள சிலபேர் பேப்பர்லயும் புத்தகங்கள்லயும் பெயர் வந்தால் போதும் வெறும் புகழுக்காக பொறுப்பில்லாம எழுதிறதை வாசிக்கேக்க ஐயோ.. இதயம் வெடிச்சி செத்தாலென்ன என்று தோணுது தம்பீ!'
'சரி டென்ஸனாகாதீங்க பெரிசு. நீங்க இப்படியானவங்கள்ற எழுத்துகளைப் படிக்காதீங்க..'

'ஆ.. அது எப்படி முடியும் தம்பீ..? நம்மவங்க எழுத்துகள் எல்லாத்தையும் வாசிக்க வாசிக்கத்தானே இன்றைய இலக்கியப் போக்கு புரியும். அது சிறுபராயத்தில இருந்து வருகிற பலவருசப் பழக்கமல்லவா? இவ்வளவு காலமும் எப்படியோ ரசிச்சும் சகிச்சும் காலத்தை ஓட்டிட்டேன்.. ஆனால் இப்ப எழுதிறதுகள்ற தரத்தைப் பார்த்தா தற்கொலை செய்து கொள்ளலாம் போலிருக்கு...' என்று மீண்டும் பல்லை நறநறத்தார்.

அவரது கோபத்தைப் பார்த்து மனிதருக்கு அங்கேயே ஏதும் ஆகிவிடுமோ என்று பயந்தான் திலீப்.

'என்னைக்காவது இந்தக் கிழவன் திடீர்னு செத்தா அது ஒரு மோசமான எழுத்தைப் படிச்சதினாலதான் இருக்கும்..' என்று கூறிவிட்டுச் சத்தமாகச் சிரித்தார்.

'சரி, வாங்க ஐயா! மழை விட்டுட்டுது போகலாம்!' என்று அவரை அழைத்துக் கொண்டு பயணத்தைத் தொடர்ந்தான் அவன். தலவாக்கலையில் அவர் செல்ல வேண்டிய தனியார் வங்கி வந்ததும் இறங்கிக்கொண்டார். திலீப்புக்கு அவரது நன்றியைத் தெரிவித்துவிட்டு படிகளிலே ஏறத் தொடங்கினார். அப்போதுதான் அவனுக்கு சட்டென ஏதோ ஞாபகம் வந்து அவரிடம் கேட்டான்.

'ஐயா உங்க பேரென்ன...?'

ஆனால்  அவருக்கு காதில் விழவில்லை போலும்; அவனைப் பார்த்து மீண்டும் முறுவலித்துவிட்டு வேகமாக படிகளிலே உயர்ந்து மறைந்து விட்டார்.

'சே! இவ்வளவு நேரம் பேசிக்கொண்டு வந்தும் அவருடைய பேரைக்கேட்காமல் போனோமே' என்று நொந்தான். ஆனாலும் அவசரமாக போக வேண்டியிருந்ததால் சுணங்கவில்லை அவன். ஏனோ அந்த மனிதரை நினைக்கப் பாவமாக இருந்தது திலீப்புக்கு. தமிழின் மீதும் இலக்கியத்தின் மீதும் அவருக்கிருந்த பிடிவாதமான அக்கறையை வியந்துகொண்டே தனது அவசரப் பயணத்தைத் தொடர்ந்தான்.




000




து நடந்து ஒரு மாதம் கழிந்திருந்தது.

ஒருநாள் சனிக்கிழமை காலை 11 மணியிருக்கும். அன்றைய வேலைத்தலத்திலிருந்து மோட்டார் சைக்கிளிலே தனது அலுவலகத்திற்குத் திரும்பிக்கொண்டிருந்தான் திலீப். விக்டோரியா பூங்காவைக் கடந்து முதல் சுற்றுவட்டத்தை நெருங்கியபோது முஸம்மிலிடமிருந்து ஒரு போன்கோல் வந்தது. பைக்கை ஒரு ஓரமாக நிறுத்தினேன்.

'திலீப், நீ இப்ப எங்க இருக்கிறா..?'

'இங்க டவுண்லதான் நிக்கிறன், ஏன்டா?'

'கொஞ்சம் நம்ம றூம் வரைக்கும் வந்திட்டுப்போ!'

'நீ ஸ்கூலுக்குப் போகல்லயா..?'

'இல்ல போய் ஹாப்ஃடே லீவு போட்டு வந்திட்டேன். நீ நேர்ல வாயேன் சொல்றேன்'

உடனே பைக்கைத் திருப்பிக்கொண்டு எங்கள் வாடகை வீட்டுக்குச் விரைந்தான் திலீப். வீட்டு வாசலிலேயே பதட்டமாக நின்றிருந்தான் முஸம்மில். திலீப்பைப் பார்த்ததும், 'திலீப், மத்தியானம் நீ ஃப்ரீயா...?' என்று கேட்டான்

'ஏன் இப்பவே ப்ரீதான்.. என்ன விசயம்?'

'ஒருக்கா ராகலை வரைக்கும் பைக்ல போய் வரணும். எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர் காலமாகிட்டார்டா திலீப்!'

'ஓ! யாரு உன்ட ஸ்கூல் பார்ட்டியா...?'

'இல்ல இவரு வேற.. தீசன் குரூஸ் என்று ஒரு எழுத்தாளர். யேய் திலீப் மறந்திட்டியா..நீ? அன்டைக்கு ஒருநாள் என்ட போன்ல உன்னோட பேசினாரே ஞாபகமிருக்கா.. அவர்ட புக்ஸ் தந்தேனேடா வாசிக்க. அவருதான்டா பாவம் நல்ல மனிசன் மச்சான்'

'ஓ அவரா! முஸம்மில் அவரை நானும் பாத்திருக்கண்டா'

'இல்லடா.. அவரை உனக்குத் தெரியாது'

'இல்லடா மச்சான் எனக்கு அவரைத் தெரியுமென்டுதான் நினைக்கிறேன்! நான் சொல்றவர்தானா அவரெண்டு சொல் பார்ப்போம்' என்று விட்டு முஸம்மில் பாடசாலை விடுமுறைக்கு ஊருக்குப்போன மறுவாரம் தலவாக்கலை போகும் வழியில் தான் சந்தித்த மனிதரின் கதையைக் கூறி முடித்தான் திலீப்.

'ஓம்டா அவர்தாண்டா... அவரேதான். எனக்குப் பிடிச்ச எழுத்தாளர் தீசன் குரூஸ்! அவருக்குத்தான் நீ பைக்ல லிப்ட் குடுத்திருக்கிறாய்' என்று உறுதிப்படுத்தினான் முஸம்மில்.

திலீப்புக்கும் கவலையாகவே இருந்தது. தமிழ் இலக்கியத்தையும் அது நேர்த்தியாக படைக்கப்படவேண்டும் என்றும் எவ்வளவு உணர்ச்சிவசப்பட்டுப் பேசிக்கொண்டிருந்தார் என்பதையும் அவனுக்குச் சொன்னான்.

'ஓம் திலீப், ஒரு நல்ல திறமையான எழுத்தாளர்டா. ஆனா பிரபல்யத்தை விரும்பாதவரு. மனிசன் நல்லா எழுதிறவங்களை வஞ்சகமில்லாம பாராட்டும். அதே நேரம் பொறுப்பில்லாம யாராவது எழுதினா கோபம் வந்து கிழிகிழியென்டு கிழிச்சிடுவாருடா.'

'ஓம்டா.. நீ தந்த அவரோட புக்ஸ் எல்லாம் படிச்சேன்டா நான். அவருட பேச்சைப் பார்த்தாலே தெரியுதே. அவரு உண்மையில நல்ல இலக்கிவாதிதான். மோசமான எழுத்துகளை வாசிச்சா தான் உடனே செத்துப் போயிடுவேன் என்றுகூட என்னிடம் அன்டைக்குச் சொல்லிட்டிருந்தார்டா..'
'உண்மையாவாடா..? பாவம், அவருக்குத்தான் எவ்வளவு தமிழ் பற்று பாத்தியா?'

'சரி, எங்க சீஃப் எஞ்சினியர் கண்டிக்குப் போயிட்டார். இனி இரவு லேட்டாதான் வருவார். இப்பவே வா வெளிக்கிடுவோம். பின்னேரம் மழை வரும். ஜேர்கின் எடுத்துக்கோ..'

திலீப்பும் முஸம்மிலும் ராகலையை அடைந்தபோது மதியம் கடந்து விட்டிருந்தது.  ராகலை தமிழ் கலவன் பாடசாலையைத் தாண்டியபோது வழிமுழுவதும்  'இலக்கிய மணி எழுத்தாளர் தீசன் குரூஸ்; அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி' என்று சின்னதும் பெரியதுமாக ஏராளமான வெண்ணிறப் பதாகைகள் அவர்களை வரவேற்றன. மரணவீட்டு வாலிலே பெரிய டென்ட்ற் கட்டப்பட்டிருக்க ஏராளமானோர் குழுமியிருந்தனர். அவர்கள் போகும்போதே அந்த எழுத்தாளரின் பூதவுடலை மயானத்திற்கு எடுத்துச்செல்ல ஆலோசித்துக் கொண்டிருந்தனர்.




இருவரும் தாமதிக்காது வீட்டினுள் சென்று அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதும் பிரேதப் பெட்டியை முறையாக மூடி சகல சடங்குகளையும் முடித்து வெளியிலெடுத்தார்கள். உள்வீட்டிலிருந்து எழுந்த அழுகைச் சத்தத்தோடு வெடியோசைகளும் கிறிஸ்தவ மதப்பாடல்களும் ஒலிக்க ஏறத்தாழ அரைகிலோ மீற்றர் நீளமான ஊர்வலத்தில்  தீசன் குரூஸ் அவர்களின் பூதவுடல் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
உள்ளுர் தேவாலய மயானத்தில் இறுதிக் கிரியைகள் முழுவதும் நிறைவேறியதும் திலீப்பும் முஸம்மிலும் மீண்டும் அவரது வீட்டிற்குச்சென்றனர். அவரது குடும்ப உறுப்பினர்களை சந்தித்து ஆறுதல் கூறிவிட்டு இறுதியாக விடைபெற்று மீண்டும் நுவரெலியாவுக்குத் திரும்பினார்கள்.

000





தீசன் குரூஸ் அவர்கள் மறைந்து சில வாரங்கள் கடந்திருந்தன.


ஒருநாள் முஸம்மில் பாடசாலையிலிருந்து நேரே திலீப்பின் அலுவலகத்திற்கு வந்திருந்தான். அவனது கையில் இரண்டு மதிய உணவுப்பொதிகளும் ஒரு பிரபல தமிழ் வாரப் பத்திரிகையும் இருந்தன.

'என்னடா சாப்பாட்டை கொண்டே வந்திட்டியா? சரி வா கெண்டீன்ல போய் சாப்பிடலாம்' என்று இருக்கையிலிருந்து எழுவதற்கு முயன்ற திலீப்பைப் பிடித்து அமர்த்தினான் முஸம்மில்.

'திலீப் இதைப் படிச்சுப்பாரு..!'

'என்ன புதிசா உன்ட கதை ஏதும் வந்திருக்கா..?' என்று கேட்டான்.

'உனக்குத்தான் என்ட கதைகள் பிடிக்காதே.. இது என்னுடைய எழுத்துத் திறமையின் அருமையை நீ அறிவதற்கு ஒரு ஆதாரம்.. முதல்ல படிச்சுப் பாரு'
பத்திரிகையைப் பிரித்துப் பார்த்தான் திலீப். அதிலே 'அண்மையில் மறைந்த எழுத்தாளர் இலக்கியமணி தீசன் குரூஸ் அவர்கள் பற்றிய நினைவுக் குறிப்புகள்' என்று ஒரு முழுப்பக்கம் வெளிவந்திருந்தது. அதிலே அவரது படமும் அவரைப்பற்றிய வாழ்க்கைக்குறிப்புகளும் பிரசுரமாகியிருந்தன.

'ஆர்டிக்கிள் பெரிசா இருக்கேடா.. சாப்பிட்டு வந்து படிப்போமே..'

'ஓகே.. ஆனா இப்ப இதை மட்டும் பார் போதும்' என்று அவன் காட்டிய மூலையில் மரணச் சடங்கில் அவர்கள் பார்த்த எழுத்தாளர் தீசன் குரூஸின் மகளின் படமும் பேட்டியும் வெளியாகியிருந்தது.. அது ஒரு நீண்ட பேட்டி.
'அவட முழுப்பேட்டியையும் பிறகு படிக்கலாம். இந்த கடைசிப் பகுதியை மட்டும் வாசிச்சுப்பாரு இப்ப!' என்று அவன் விரல்கள் காட்டிய இடத்திலே...


கேள்வி: உங்கள் தந்தையாரின் வாசிப்புப் பற்றி...?


பதில்: எனது தந்தை தீசன் குரூஸ் அவர்கள் தனது இறுதி மூச்சு வரை வாசித்துக் கொண்டுதான் இருந்தவர். ஆம், தனது ஓய்வுக் கதிரையிலே அமர்ந்து ஒரு சிறுகதைத் தொகுதி ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தபோதுதான் அவர் திடீரென மாரடைப்பினால் இறந்தார். அந்த நூலை விரல்களால் பற்றியபடியேதான் அவரது ஆவி பிரிந்து கர்த்தரிடம் போய்ச் சேர்ந்தது.


கேள்வி: அப்படியா? அவர் வாசித்த அந்த கடைசி நூல் எது என்பது பற்றிக் கூறமுடியுமா?


பதில்: ஆம்! அது ஒரு சிறுகதைத் தொகுதி. அதை முஸம்மில் எனும் ஓர் இளம் எழுத்தாளர் ஒருவர் எழுதியிருந்ததாக ஞாபகம்...' 


என்று தொடர்ந்தது அந்த நீண்ட பேட்டி.




 
-மூதூர் மொகமட் ராபி
(2013.04.23)