Saturday, March 1, 2014

முள்மரம்












வீட்டு முற்றத்திலே
வெகுநாட்களாய் -
வேர்பிடித்து நின்றிருந்தது
ஒரு வெறிபிடித்த முள்மரம்



மல்லிகைச்செடி வாங்கி 
மலர்ப்பாத்தி செய்தவேளை
மண்ணோடு மண்ணாய்க்கிடந்து
மறைவாய் முளைத்தது
அந்த முள்மரம்..



ஊற்றிய நீரையெல்லாம்
உறிஞ்சிக் குடித்து
விலைவாசி போல் வேர்விட்டு
விரைந்து வளர்ந்தது
அந்த முள்மரம்



இலைகள் நிறையவிட்டு
இலைக்கணுவில் முட்கள் வைத்து
இறுமாந்து நின்றிருந்தது
அந்த முள்மரம்



தன் வேர்செல்லும் இடமெல்லாம்
வேறு மரங்கள் வளராமல்
வேரோடு ஒழித்துக்கட்டி
அதிகாரம் பேசி நின்றிருந்தது
அந்த முள்மரம்..



ஒன்றும் விடாமல்
ஒழித்துக்கட்டி 
ஒற்றை மரமாய் அது நின்றவேளை
உட்புறமாய் கறையான் அரித்து
உழுத்துப்போனதில்..



ஆயிரம் செடிகொடிகள்
அதன்கீழே அநியாயமாய் நசிந்து சாக
தடுமாறிச் சரிந்து வீழ்ந்து
சத்தமின்றி ஒழிந்து போனது
அந்த முள்மரம்!

-மூதூர் மொகமட் ராபி

No comments:

Post a Comment