Wednesday, December 25, 2013

உலகம் போற்றும் உத்தமபுத்திரன்!







 




ஞ்சகம் நெஞ்சிலே
மிஞ்சியவன் வதனம்போல்
கறுத்துக் கிடந்தது - அன்றைய
பெத்தலகேம் நகரத்து வானம்!
 

000
 
பட்டறைத்தீயிலே
பழுக்கக் காய்ச்சிய
வெட்டிரும்புத் துண்டுபோல
கீழ்வானின் விளிம்பில்
ஒளிவீசி உயரத்தோன்றியது
ஓர் விடிவெள்ளி!
 

000
 
 
சிப்பியின் வயிற்றிலே சிறுமுத்தும்
சேற்றுக் குளத்திலே செந்தாமரையும்
ஏழைகளின் வீடுகளில்
எழில்மங்கையர் கூட்டமும்
மாட்டுத்தொழுவத்திலே
உலகம் போற்றும் உத்தமபாலனும்
உதிப்பதுதான்
இவ்வுலகில் நியதியோ?
 

000
 

காட்டுவழியிலே கட்டின்றி அலையும்
மேய்ச்சல் மந்தைக்கோர் மேய்ப்பன் போல
கூச்சல் குழப்பம் கொலைகள் புரியும்
கொள்கையில்லா மாந்தர் மறைந்திட
மீண்டும் வந்துபிறவாயோ
இரக்கம் நிறைந்த இறைமைந்தனே!
 
000
 
 
 
 
 
 
 

உலகம் முழுவதும் வாழும்
 
கத்தோலிக்க நண்பர்களுக்கு
 
உற்சாகமான
 
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!
 
 
-சிறகுகள்
 
 

Tuesday, December 24, 2013

0610400600661166264400661411041606024100




ரு பத்திக்கு அல்லது கட்டுரைக்குத் தலைப்பாக இலக்கங்களை இடுவது இதற்கு முதல் நடந்திருக்கின்தோ தெரியவில்லை. ஆனால் இதைத் தவிர இந்த பத்திக்கு வேறு எதையும் தலைப்பாக இட நான் விரும்பவில்லை.



"அதுசரி, இந்த இலக்கத்திற்கு என்ன அர்த்தம் ?"

என்று கேட்கின்றீர்களா..?

அதற்காக நீங்கள் 1996ம் ஆண்டுக்கு சென்று திரும்ப வேண்டும்.

ஆம், 1996ம் ஆண்டு.

அதுவரையில் ஏனைய அணிகளால் ஏறத்தாழ ஒரு கற்றுக்குட்டி அணியாகவே கருதப்பட்டு வந்த இலங்கை கிரிக்கட் அணி உலகக்கிண்ணத்தை வெற்றிகொண்டு அனைவரின் புருவங்களையும் உயர்த்தச் செய்த ஆண்டு அது !

அதுமட்டுமல்ல.. உலகக்கிண்ணத்தை இலங்கை அணி கைப்பற்றுவதற்கு பெரிதும் காரணமாக இருந்தவரான  அதிரடித் துடுப்பாட்ட வீரர் Sanath Jayasuriya  ஏப்ரல் மாதத்தில் சிங்கப்பூரில் நடந்த ஒரு சுற்றுப்போட்டியில் பாகிஸ்தான் அணிக்கெதிராக 48 பந்துகளில் சதமடித்து சாதனை நிகழ்த்தியிருந்த வருடமும் அதுதான்.

அதே 1996ம் வருடத்தின் அக்டோபர் மாதத்தில் கென்யாவிலே இலங்கை, பாகிஸ்தான், கென்யா மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதும் Sameer Four Nations Cup எனும் ஒருநாள் சர்வதேச கிரிக்கட் சுற்றுப்போட்டி நடந்து கொண்டிருந்தது.

அதேவேளையில் 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கட் போட்டிகளுக்காக கரீபியன் தீவுகளிலே தங்கியிருந்தது பாகிஸ்தான் இளைஞர் அணி. அந்த அணியின் முகாமையாளருக்கு இரவு 2 மணியளவிலே கென்யாவில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வருகின்றது...

சுழல் பந்து வீச்சாளர் முஸ்தாக் அஹமட் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருப்பதால் இளைஞர் அணியிலிருந்து சுழல்பந்து வீச்சாளர் ஒருவரை உடனடியாக கென்யாவுக்கு அனுப்பி வைக்குமாறு அணியின் முகாமையாளர் கேட்டுக்கொண்டார். அவரும் உடனடியாக மறுநாள் காலையில் தமது அணியிலிருந்த ஓர் சுறுசுறுப்பான இளைஞனை விமானத்தில் நைரோபிக்கு அனுப்பி வைத்தார்.


அந்த இளைஞன் நைரோபி மைதானத்தில் வலைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பாகிஸ்தான் அணியின் ஜாம்பவன்களான  அணித் தலைவர் சயீட் அன்வர், வக்கார் யூனுஸ், ரமீஜ் ராஜா, இஜாஸ் அஹமட், ஆகியோருடன் இணைந்து கொண்டான்.


இந்த இளைஞன் இணைந்து கொண்ட பின்பு பாகிஸ்தானுக்கு கென்ய அணியுடன் போட்டி இருந்தது. அது ICC யின் 1123 வது சர்வதேச ஒருநாள் போட்டியாகும். அதுவே அந்த இளைஞனுக்கு அறிமுகப்போட்டியும் கூட.


அந்தப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற கென்ய அணி துடுப்பாட்டத்தை தேர்ந்தெடுத்திருந்தது. ஆகவே முதலில் பந்துவீசிய பாகிஸ்தான் அணிக்காக அந்த இளைஞனும் பந்து வீசும் வாய்ப்பைப் பெற்றான். தனது  10 ஓவர்களிலே வெறும் 32 ஓட்டங்களை மட்டும் கொடுத்திருந்தான். ஆயினும் விக்கட் எதனையும் பெறமுடியவில்லை. ஆனாலும் அதே போட்டியில் தன்னைப் போலவே மற்றுமொரு அறிமுக வீரராக ஆடிய கென்யா அணியின் Tony Suji, சக்லைன் முஸ்தாக்கின் பந்து வீச்சில் வழங்கிய பிடியெடுப்பை எடுத்து ஆட்டமிழக்கச் செய்திருந்தான். அதைத் தவிர அந்தப் போட்டியில் வேறு சொல்லிக் கொள்ளும்படியாக எதுவும் நிகழவில்லை.


கென்ய அணியின் 148 எனும் இலகுவான இலக்கை துரத்திய பாகிஸ்தான் 41 ஓவரில் ஆறுவிக்கட்டுகளை மட்டும் இழந்து வெற்றி பெற்றதால் துடுப்பாட்ட வரிசையில் 7வது நிலையிலிருந்த அந்தப் புதிய இளைஞனுக்கு தன் அறிமுகப்போட்டியில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.


அடுத்த நாள் : அக்டோபர் 4ம் திகதி...


நடைபெறவிருந்த போட்டி மிகவும் முக்கியமானது. ஆம், பாகிஸ்தான் அணி மிகவும் வலுவான நிலையிலிருந்த உலகக்கிண்ணச் சாம்பியன் இலங்கை அணியை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.




 நடந்து முடிந்த போட்டிகளின் முடிவுகளின்படி தென்னாபிரிக்க அணி ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு தெரிவாகியிருந்தது. இதனால் இறுதிப்போட்டியில் தெ.ஆபிரிக்க அணியை எதிர் கொள்வது இலங்கை அணியா அல்லது பாகிஸ்தான் அணியா என்பதைத் தீர்மானிக்கும் போட்டியாகவும் அது இருந்தது.

பாகிஸ்தான் அணி இறுதியாட்டத்திற்குள் நுழைவதானால் இரு வழிகள் மட்டுமே இருந்தன.


1. முதலில் துடுப்பெடுத்தாடினால் இலங்கை அணியை அதிக ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தாக வேண்டும்.


அல்லது
 

2.  இலங்கை அணி விதிக்கும் இலக்கைத் துரத்துவதானால் போட்டியை 50 ஓவர்கள் வரை காத்திருக்காமல் ஒரு குறிப்பிட்ட ஓவர்களுக்குள் அதனை விரைவாகச் செய்து முடிக்க வேண்டும்.


எவ்வாறாயினும் இலங்கை அணிக்கு எதிராக பாகிஸ்தான் அதிரடியாக ரன்கள் குவித்தால் மட்டுமே இறுதியாட்டத்தை சந்திக்லாம் என்ற பெரும் நிர்ப்பந்தமிருந்தது.


அதேவேளை அணியிலுள்ள எல்லோருமே அதிரடியாக ஆட ஆரம்பித்தால் அதற்கேற்றபடி விக்கட்டுகளையும் விரைவாக இழக்க வேண்டி வரலாம் என்பதால் இதற்காக என்ன செய்யலாம் என்று குறித்த போட்டிக்கு முதல் நாள் நிகழ்ந்த வலைப் பயிற்சியின் போது  அணித் தலைவர்  சயீட் அன்வர் யோசனையிலாழ்ந்திருந்தார்.


அப்போது அவருக்கு கரீபியன் தீவிலிருந்து வந்த அந்தப் புதிய இளைஞனின் மீது பார்வை சென்றது.  அணியின் பயிற்சி ஆட்டத்தில் பந்து வீச்சுப் பயிற்சிக்காக இந்த இளைஞனை சிறிது நேரம் துடுப்பாடச் செய்திருந்தார்கள்.  அப்போது தமது அணியின் அத்தனை வீச்சாளர்களின் பந்தையும் அவன் அநாயசமாக அடித்து விளாசிக் கொண்டிருந்ததைக் கண்டு வியந்தார்.


அவர் மனதிலே ஒரு திட்டம் உருவானது.



அக்டோபர் 04, 1996 :


அன்று ஒரு வெள்ளிக்கிழமை. போட்டிக்காக தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து மைதானத்திற்கு வந்திறங்கினார்கள் பாகிஸ்தான் அணியினர். நாணயச் சுழற்சியில் வெற்றியீட்டிய இலங்கை அணி பந்துவீசத் தயாரானது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்தது பாகிஸ்தான் அணி.


தலவைர் சயீட் அன்வரும் சலீம்  எலாஹியும் ஆரம்ப வீரர்களாக களமிறங்கி ஆடிக் கொண்டிருந்தார்கள். பாகிஸ்தானை அதிக ஓட்டங்கள் எடுக்கவே விடக்கூடாது என்பதையுணர்ந்து வெகு இறுக்கமான களத்தடுப்புடன் மிக நேர்த்தியாக பந்து வீசிக் கொண்டிருந்தார்கள் இலங்கை வீரர்கள். அதனால் ஓவருக்கு 4 அல்லது 5 ஓட்டங்கள் என்ற சராசரியைத் தாண்ட முடியாமல் ஆடிக்கொண்டிருந்தார்கள்.


அதேவேளை தனது முதலாவது சர்வதேச துடுப்பாட்டத்தை ஆடுவதற்காக உடைமாற்றும் அறையில் தனது கால்காப்புகளைக் கட்டிக்கொண்டு வக்கார் யூனிசின் துடுப்பை வைத்துக் கொண்டு சில துடுப்பாட்ட நுணுக்கங்களை ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தான் அந்த 16 வயது மட்டுமே நிரம்பிய புதிய இளைஞன்.


பாகிஸ்தான் அணியின் ஓட்ட எண்ணிக்கை 60 ஆக இருந்த 10 வது ஓவரிலே சலீம் எலாஹி 23 ஓட்டத்துடன் குமார தர்மசேனவின் பந்து வீச்சில் முரளிதரனிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்து திரும்பினார்.


இப்போது அந்த இளைஞன் ஹெல்மெட்டை அணிந்து கொண்டு களமிறங்கத் தயாராகின்றான்.


சக வீரர்கள் அவனுக்கு வாழ்த்துத் தெரிவித்து அனுப்பி வைக்க களத்தில் ஆட்டமிழக்காது நின்றிருக்கும் அணித் தலைவருடன் இணைந்து கொள்வதற்காக மைதானத்தினுள் இறங்கி சூரியனைத் திரும்பிப் பார்த்து விட்டு நடக்கின்றான். 


இன்னும் சிறிது நேரத்தில் நடக்கப்போவதை அறியாதவர்களாக சனத் ஜயசூரிய உட்பட இலங்கை அணியினர் வெகு சாதாரணமாக அவனைப் பார்த்தவாறு அடுத்த பந்து வீச்சுக்குத் தயாராகின்றனர். 


மறுமுனையில் நின்றிருக்கும் சயீட் அன்வர் அவனிடம் ஏதோ கூறிவிட்டு தோளிலே தட்டி உற்சாகப்படுத்திவிட்டு நகர்கின்றார். புதிய துடுப்பாட்ட வீரனைப் பதற்றமடையச் செய்து அவுட் செய்வதற்காக சுற்றிலும் களத்தடுப்பை இறுக்கமாக்குகின்றனர் இலங்கை வீரர்கள்.




முதலாவது பந்து வீச்சை தடுத்தாடுகின்றான்.



இரண்டாவது பந்துவீச்சை வெகு அநாயாசமாக தூக்கியடிக்க பந்து மைதானத்திற்கு வெளியே போய் விழுகின்றது. இதை எதிர் பாராத பந்து வீச்சாளர் அடுத்த பந்தை யோக்கர் பந்தாக வீச அதை தடுத்தாடி ஒரு ஓட்டம் பெறுகின்றான். அடுத்த பந்தை வேகமாக கட் செய்து அடிக்க அது பவுண்டரியாகின்றது.


அதன் பிறகு இலங்கை அணிக்கு நடந்த கதைதான் முக்கியம்!


ஆம், இலங்கை அணியின் தலைவர் அர்ஜுனா ரணதுங்கவுக்கு அங்கு என்ன நடக்கின்றது என்பது புரியவே வெகுநேரமானது. புதிய இளைஞன் இலங்கை அணியின் பந்து வீச்சைத் துவம்சம் புரிய ஆரம்பித்தான். சிக்ஸ்களும் பவண்டரிகளும் அடுத்தடுத்துப் பறந்தன.


சட்டெனச் சுதாரித்துக்கொண்ட இலங்கையணி, இருக்கும் பந்து வீச்சாளர்களையெல்லாம் அடுத்தடுத்து மாற்றிப் பார்த்தது.


ஆனால் பாவம் அத்தனை முயற்சியும் காட்டாற்று வெள்ளத்திற்கு கடற்கரை மணலில் கட்டிய அணைபோலானதுதான் மிச்சம்.


வேகமென்றாலென்ன சுழலென்றாலென்ன சகலருக்கும் ஒரே சிகிச்சைதான்.

Six.. four... six... four....  six   என்று  boundaries  மழை பொழியவாரம்பித்தது.


சிக்ஸர்களுக்குப் பறந்த பந்துகளையெல்லாம் கார் பார்க்கிற்குள்  சிறுவர்கள் தேடித்தேடிப் பொறுக்க ஆரம்பித்தார்கள்.


தொலைக்காட்சியில் ஆட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்த பலருக்கு  ஒன்றுமே புரியவில்லை. நாம் பார்ப்பது நேரடி ஒளிபரப்பா அல்லது நடந்து முடிந்த ஆட்டமொன்றின் ஹைலைட் நிகழ்ச்சியா என்று சந்தேகம் வரத் தொடங்கியது.


18வது  பந்திலே 50 வது ரன்னை எட்டியவன் 37 வது பந்திலே 101 ரன்களை எடுத்து இதோ இன்று 2013 ஆண்டு வரையிலே 17 வருடங்களாக  இன்னும் கூட முறியடிக்கப்படாதிருக்கும் உலக சாதனையை நிகழ்த்தினான்.


50 நிமிடங்களில் மொத்தமாக 40 பந்து வீச்சுகளையும் எதிர்கொண்டவன் சர்வதேச சதத்தை மிக இளம் வயதிலே (16 வருடங்கள் 217 நாட்கள்) பெற்ற வீரனாகவும் அந்த நேரத்தில் ஒரு இன்னிங்ஸில் அதிகூடிய சிக்ஸர்கள் (11) எனும் சாதனையைச் சமப்படுத்திய துடுப்பாட்டக்காரனாகவும் மிளிர்ந்தான்.



அன்று தனது முதலாவது இன்னிங்ஸில் உலக சாதனையை முறியடித்து அணியை இறுதியாட்டத்திற்கு நுழையச் செய்த அந்த அழகிய துறுதுறுப்பான 16  வயது அந்த இளைஞன் அன்றைய உலகச் சம்பியன் இலங்கை அணியின் ஒவ்வொரு பந்துவீச்சையும் எப்படித் துவம்சம் செய்தான் என்பதைத்தான் மேலே நீங்கள் தலைப்பிலே காணும்  இலக்கங்கள் வரிசையாக காண்பிக்கின்றன.


"அதுசரி, அந்த இளைஞன் யார் ?" என்று அப்பாவித்தனமாகக்
கேட்பவர்களுக்காக மட்டும் இதைக் கூறுகின்றேன்:

அந்த இளைஞன் பாகிஸ்தான் அணியின் அதிரடி,   Shahid Afridi! 


தவிர, வேறு யாராக இருக்க முடியும்..?


0610400600661166264400661411041606024100

 
Note:

Sameer Four Nations Cup, sixth qualifying match

PAKISTAN v SRI LANKA

Toss: Sri Lanka.

Sensational batting by teenage leg-spinner Shahid Afridi swept Pakistan into the final. He was promoted to No. 3 - he had not batted in his only previous international - and dashed to a hundred in 37 balls, 11 fewer than the limited-overs international record set by Jayasuriya against Pakistan in Singapore six months earlier. He was said to be 16 years 217 days old, but he looked older, and the ages of several established Pakistani players had recently been challenged. His brilliance was not in dispute. In all, he scored 102 from 40 balls, with 11 sixes (equalling Jayasuriya's record) and six fours, out of 126 for the second wicket.
 
The full innings was : 0610400600661166264400661411041606024100.
 
He took 41 off the 11 balls he faced from Jayasuriya, whose ten overs went for 94, though he also managed three wickets. The ground was not especially small, and most of the sixes went into the car park, anyway. They would have been sixes almost anywhere. Nor were they slogs; it was an exhibition of wonderful clean hitting. After Afridi was out, Saeed Anwar scored a more sedate 115 from 120 balls and Pakistan galloped to 371, the second-highest total ever scored in a one-day international. Sri Lanka had little hope of winning, but could still reach the final ahead of Pakistan on net run-rate if they scored 290. When Waqar Younis reduced them to 27 for four, that looked unlikely. But Aravinda de Silva scored an intelligent, unflustered 122 from 116 balls, sharing century stands with Ranatunga and Dharmasena. Sri Lanka entered the final over, from Waqar, needing 11 to qualify; Vaas hit a six and a four, then was bowled with one ball remaining.

Man of the Match :  Shahid Afridi.

Thanks: Cricinfo
 
- Jesslya Jessly

Sunday, December 22, 2013

இஸ்லாம் உண்மையிலேயே வாளால்தான் பரப்பட்டதா?








ஸ்லாம் வாளால் பரப்பட்ட மதம் என்றொரு வாதம் அதன் தொடக்க காலத்திலிருந்தே இருந்து வந்திருக்கிறது. இதற்கான முதன்மையான ஆதாரங்களாக அவ்வாதத்தை கூறுபவர்கள் முகம்மது நடத்திய போர்களையும், பிற நாடுகளுக்கு முகம்மது அனுப்பிய கடிதங்களையும் முன்வைக்கிறார்கள். முகம்மது நடத்திய போர்கள் மதத்தை பரப்பும் நோக்கத்திற்காக நடத்தப்பட்டவை அல்ல என்பதை ஏற்கனவே பார்த்திருக்கிறோம். அடுத்து முகம்மது அனுப்பிய கடிதங்களைக் கவனிப்போம்.

மதீனாவில் முகம்மது ஓர் அரசை ஏற்படுத்திய பிறகு, தொடர்ச்சியாக போர்களை நடத்தி பொருளாதார ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் அந்த அரசை உறுதிப்படுத்திய பிறகு அண்டை நாடுகளுக்கு முகம்மது கடிதங்களை அனுப்புகிறார். இஸ்லாத்திற்கு அழைப்புவிடுத்து எழுதப்பட்டதாக கூறப்படும் அந்தக் கடிதங்களில் அவர் குறிப்பிட்டிருக்கும் முதன்மையான செய்தி, “மதீனாவில் ஏற்பட்டிருக்கும் புதிய அரசின் மேலாண்மையை ஏற்றுக் கொள்ளுங்கள், அவ்வாறு நீங்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டால் போர் தொடுக்கப்பட்டு உங்கள் நாடு கைப்பற்றப்படும்” என்பது தான். அந்த கடிதங்களில் ஒன்று ஓமன் நாட்டில் சோஹார் கோட்டையில் இன்றும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது. அந்தக் கடிதத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு இவ்வாறு இருக்கிறது,

Peace be upon the one who follows the right path! I call you to Islam. Accept my call, and you shall be unharmed. I am God’s Messenger to mankind, and the word shall be carried out upon the miscreants. If, therefore, you recognize Islam, I shall bestow power upon you. But if you refuse to accept Islam, your power shall vanish, my horses shall camp on the expanse of your territory and my prophecy shall prevail in your kingdom.

இது அப்பட்டமாக ஓமன் நாட்டு மன்னரை மிரட்டுகிறது. இது போன்று அபிசீனியா, எகிப்து, பாரசீகம், ரோம் யமாமா, சிரியா நாட்டு மன்னர்களுக்கும் அனுப்பப் பட்டிருக்கிறது. அந்தக் கடிதங்களில் மிரட்டல் தான் இருக்கிறதே அன்றி அழைப்பு இல்லை. இதைக் கொண்டு தான் இஸ்லாம் வாளால் பரப்பட்ட மதம் என்கிறார்கள். இதை எதிர் கொள்வதற்காக தமிழ் இஸ்லாமிய பரப்புரையாளர்கள் அந்தக் கடிதங்களை அதன் வீரியத்தைக் குறைத்து “நீ இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் ஈடேற்றம் பெறுவாய்” என்று மொழிபெயர்த்து சமாளிக்கிறார்கள்.

அபிசீனிய(எத்தியோப்பியா) மன்னனுக்கு எழுதிய கடிதம்

Peace be upon him who follows true guidance and believes in Allah and His Messenger. I bear witness that there is no god but Allah Alone with no associate, He has taken neither a wife nor a son, and that Muhammad is His slave and Messenger. I call you unto the fold of Islam; if you embrace Islam, you will find safety,
நேர்வழியைப் பின்பற்றி அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொண்டு, வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன் அவனுக்கு இணை துணை யாருமில்லை அவன் தனக்கென எவரையும் மனைவியாகவோ அல்லது பிள்ளையாகவோ எடுத்துக் கொள்ளவில்லை நிச்சயமாக முஹம்மது அவனது அடிமையாகவும் தூதராகவும் இருக்கிறார்கள் என்று சாட்சி கூறுவோருக்கு ஈடேற்றம் உண்டாகுக! நான் உமக்கு இஸ்லாமிய அழைப்பை விடுக்கிறேன். நிச்சயமாக நான் இஸ்லாமியத் தூதராவேன். நீ இஸ்லாத்தை ஏற்றுக்கொள், ஈடேற்றம் பெறுவாய்.

எகிப்து மன்னனுக்கு எழுதிய கடிதம்

Peace be upon him who follows true guidance. Thereafter, I invite you to accept Islam. Therefore, if you want security, accept Islam. If you accept Islam, Allah, the Sublime, shall reward you doubly. But if you refuse to do so, you will bear the burden of the transgression of all the Copts.

நேர்வழியைப் பின்பற்றுவோருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்.நான் உங்களுக்கு இஸ்லாமிய அழைப்பை விடுக்கிறேன். இஸ்லாமை ஏற்றுக்கொள்க. ஈடேற்றம் அடைவீர். இஸ்லாமை ஏற்றுக்கொள்க. அல்லாஹ் உங்களுக்கு இருமுறை நற்கூலி வழங்குவான். ”நீங்கள் புறக்கணித்து விட்டால் கிப்தி இனத்தவர்களின் குற்றமும் உங்களையே சாரும்”

பெர்சிய (ஈரான்) மன்னனுக்கு எழுதிய கடிதம்

Peace be upon him who follows true guidance, believes in Allah and His Messenger and testifies that there is no god but Allah Alone with no associate, and that Muhammad is His slave and Messenger. I invite you to accept the religion of Allah. I am the Messenger of Allah sent to all people in order that I may infuse fear of Allah in every living person, and that the charge may be proved against those who reject the Truth. Accept Islam as your religion so that you may live in security, otherwise, you will be responsible for all the sins of the Magians

நேர்வழியைப் பின்பற்றி, அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொண்டு, வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை அவன் தனித்தவன் அவனுக்கு இணை துணை யாருமில்லை அவன் தனக்கென எவரையும் மனைவியாகவோ பிள்ளையாகவோ எடுத்துக் கொள்ளவில்லை நிச்சயமாக முஹம்மது அவனது அடிமையாகவும் தூதராகவும் இருக்கிறார்கள் என்று சாட்சி கூறுவோருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்! நான் அல்லாஹ்வின் புறத்திலிருந்து அனைத்து மக்களுக்கும் அனுப்பப்பட்ட தூதராவேன். உயிருள்ளவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக, இறைநிராகரிப்பாளர்களுக்கு அவனது தண்டனையின் வாக்கு உறுதி ஆவதற்காக என்னை அவன் தூதராக அனுப்பியிருக்கிறான். நீங்கள் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளுங்கள் ஈடேற்றம் பெறுவீர்கள் ”நீங்கள் மறுத்துவிட்டால் மஜூஸிகளின் (நெருப்பை வணங்குபவர்களின்) குற்றமெல்லாம் உங்களையே சாரும்

ரோம் நாட்டு மன்னனுக்கு எழுதிய கடிதம்

Blessed are those who follow true guidance. I invite you to embrace Islam so that you may live in security. If you come within the fold of Islam, Allah will give you double reward, but in case you turn your back upon it, then the burden of the sins of all your people shall fall on your shoulders

நேர்வழியை பின்பற்றியவருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்! இஸ்லாமை ஏற்றுக்கொள் ஈடேற்றம் அடைவாய் இஸ்லாமை ஏற்றுக்கொள் அல்லாஹ் உனக்கு கூலியை இருமுறை வழங்குவான் நீ புறக்கணித்து விட்டால் உமது கூட்டத்தினர் அனைவரின் குற்றமும் உன்னையே சாரும்.

யமாமா நாட்டு மன்னனுக்கு எழுதிய கடிதம்

Peace be upon him who follows true guidance. Be informed that my religion shall prevail
everywhere. You should accept Islam, and whatever under your command shall remain yours

நேர் வழியைப் பின்பற்றுவோருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும். குதிரையும் ஒட்டகமும் எதுவரை செல்ல முடியுமோ அதுவரை எனது மார்க்கம் வெற்றி பெரும். இஸ்லாமை ஏற்றுக் கொள்ளுங்கள். ஈடேற்றம் பெறுவீர்கள். உங்களுக்குக் கீழ் உள்ள பகுதிகளையெல்லாம் உங்களுக்கே தந்துவிடுகிறேன்

சிரியா நாட்டு மன்னனுக்கு எழுதிய கடிதம்

Peace be upon him who follows true guidance, believes in it and regards it as true. I invite you to
believe in Allah Alone with no associate, thenceafter your kingdom will remain yours

நேர்வழியைப் பின்பற்றி, அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு, அவனை உண்மையாக ஏற்றுக் கொண்டவருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்! தனக்கு இணை துணை இல்லாத ஏகனான அல்லாஹ் ஒருவனையே நீர் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று நான் உங்களை அழைக்கிறேன். அப்படி செய்தால் உங்கள் ஆட்சி உங்களிடமே நிலைத்திருக்கும்

இந்தக் கடிதங்கள் மூலம் இஸ்லாம் பரவியதா என்றால் இல்லை என்பது தான் பதில். ஒரு சில மன்னர்கள் அழைப்பை ஏற்றுக் கொண்டார்கள். சில மன்னர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் எகிப்துக்கு அனுப்பிய கடிதத்துக்கு பதிலாக முகம்மதின் கோரிக்கையை நாசூக்காக மறுத்து மரியா, ஷிரின் எனும் இரண்டு அழகிய பெண்களை பரிசாக அனுப்பிவைக்கிறான் எகிப்தின் மன்னன்.  மரியாவை வைத்துக் கொண்டு (இஸ்லாமிய வரலாற்றில் இந்த மரியாவைச் சுற்றி பெரும் பூகம்பமே ஏற்பட்டது. மட்டுமல்லாமல் குரானில் பல வசனங்களை இரக்க(!) வேண்டியதிருந்தது. அதை பின்னர் பார்க்கலாம்) ஷிரினை ஹசன் பின் தாபித் என்பவருக்கு வழங்கி விட்டார். (ஷிரின் ஒரு அரவாணி என்றும் கூறப்படுகிறது) ஆக இஸ்லாத்திற்கான அழைப்பு அழகான ஒரு அடிமைப் பெண்ணோடு முடிந்து போனது.

இந்த நாடுகளுக்கு கடிதம் அனுப்பியதுடன் பணி முடிந்து விட்டது. உலக மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்க வந்த அல்லாவின் தூதன் நானே என அறிவித்துக் கொண்டு அந்த நாட்டு மக்களை இஸ்லாமுக்கு மாற்றுவதற்கு செய்த முயற்சிகள் என்ன? ஒன்றுமில்லை ஆனால் அடிபணிந்த நாடுகளிடமிருந்து முறையாக வரி வசூல் செய்யப்பட்டன. ஆளுனர்கள் அனுப்பி வைக்கப்பட்டார்கள். இது அரசியலில் சேருமா? ஆன்மீகத்திலா?

முதன்மையான கேள்விக்கு வரலாம். 

என்னுடைய புதிய கொள்கையை அல்லது இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கூறுவதற்கும், உன்னுடைய நாட்டை நான் பிடித்துக் கொள்வேன் என்று கூறுவதற்கு என்ன தொடர்பு? இஸ்லாத்துக்கு வாருங்கள் என அழைக்கலாம், வந்தால் ஏற்றுக் கொள்ளலாம், மறுத்தால் புரியவைக்கலாம் அல்லது விட்டு விடலாம். ஆனால், உன்னுடைய நாட்டை நான் பிடித்துக் கொள்வேன் என்று கூறினால் அதன் பொருள் என்ன? முகம்மது ஒற்றை ஒருவரைக் கூட இஸ்லாத்துக்கு மாற்றிவிட முடியாது. ஏனென்றால் யார் இஸ்லாத்துக்கு மாற்றுவது யாரை வழிகேட்டில் விட்டு விடுவது என்பதை தீர்மானிப்பது அல்லாதான். அதிகாரத்தில் முகம்மதுக்கு எந்த பங்கும் இல்லை. இதைக் கூறுவதும் ஒரு குரான் வசனம் தான். முகம்மது தன் நெருங்கிய உறவினர் ஒருவரை சாகும் தருவாயிலும் எப்படியவது இஸ்லாத்திற்கு கொண்டு வந்து விட வேண்டும் என்பதற்காக கடும் முயற்சிகளை மேற்கொள்கிறார். அப்போது இரங்கும்(!) குரான் வசனம் முகம்மதால் ஒற்றை ஒருவரைக்கூட இஸ்லாத்திற்கு மற்றவைக்க முடியாது, அல்லாவின் உதவி இல்லாவிட்டால் என்று முகம்மதை எச்சரிக்கிறது. அப்படி என்றால் முகம்மது எகிறிக்குதித்து முஸ்லீமாக மாறவில்லை என்றால் நாட்டை பிடுங்கிக் கொள்வேன் என்று கடிதம் எழுதுவது ஏன்? இதற்கு ஆட்சி அதிகாரம் தவிர வேறேதும் நோக்கங்கள் இருந்திருக்க முடியுமா? இஸ்லாமியர்கள் என தங்களை அழைத்துக் கொள்வோர் சிந்திக்க வேண்டிய நேரம் இது.

Thanks: Senkodi



இதற்கு நம்மவர்களின் பதில் என்ன?

மிரட்டலா அல்லது படுகொலையா? 

-Omar Mukthar

Friday, December 20, 2013

கிரிக்கட் : பூச்சியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியம்








பூச்சியம் என்பது ஒரு வினோதமான பிறவி.

 
கணித்தில் அது இருக்குமிடத்தை பொறுத்து அதன் பெறுமதியும் பயன்பாடும் வேறுபடும். கிரிக்கட்டைப் பொறுத்தவரையில் அது எப்படியுள்ளது என்ற சுவாரசியமான தகவல்களைப் பார்ப்போம்.
 
 
முதலிலே ஆண்களுக்கான ஒருநாள் சர்வதேச போட்டிகளை பூச்சியம் படுத்தும் பாட்டைப் பார்த்துவிடுவோம்.



 பூச்சியத்தில் அவுட் ஆகாத வீரர்கள் :



• மொத்தமாக இதுவரையில் 23 வீரர்கள் இருந்தபோதிலும்  தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்காக ஆடிய வீரர் கெப்லர் வெஸல்ஸ் முதன்மையானவர்  - 


ஆம், 105 இன்னிங்ஸ்கள் ஆடியும் ஒருதடவை கூட பூச்சியத்தில் அவுட் ஆகாத வீரர் என்ற அழியாப் பெருமைக்குரியவர்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால்  இவர் பந்தை எதிர்கொள்ளும்போது எப்போதுமே மூன்று விக்கட் கோல்களும் பந்துவீச்சாளருக்கும் பிரதான நடுவருக்கும் நன்கு தெரியத்தக்கவாறு விலகி நின்று எதிர்கொள்வதுதான் வழமை.

• இலங்கை அதிரடி வீரர்  சனத் ஜயசூரிய  - 433 இன்னிங்ஸ்கள் ஆடி 34 தடவை பூச்சியத்திலே ஆட்டமிழந்த சாதனை இவருடையது.


(அடுத்த நிலையில் இருப்பவர்  பாகிஸ்தான்  'சிக்ஸர் சக்கரவர்த்தி'  சஹீத் அப்ரிதி  343இன்னிங்ஸ்கள் - 29 தடவை )




 அறிமுகப் போட்டியிலேயே பூச்சியத்தை ருசித்தவர்கள் :


 இந்தப்  பட்டியல் ஜனாதிபதி சால்வை போல நீண்டது.


அன்றைய / இன்றைய பெரும் அதிரடி மன்னர்களும் கிரிக்கட் ஜாம்பவான்களும் இதற்குள் அடக்கம்.


அவர்களுள் முக்கியமானவர் நமது சாதனை மன்னன் சச்சின் டெண்டுல்கர்!
இவர் 1989ல் பாகிஸ்தான் அணியின் வகார் யூனிஸின் பந்துவீச்சில், சந்தித்த 2வது பந்தில் வாசீம் அக்ரமிடம் பிடிகொடுத்து டக் அவுட்டானார் என்பது  குறிப்பிடத் தக்கது.


அறிமுகப் பூச்சியர்கள்... மன்னிக்கவும்!  பூச்சியம் பெற்ற வீரர்கள் எல்லோரது பெயரையும் தருவது கடினம் என்பதால் இவர்களுள் அதிக பந்துகளை எதிர்கொண்ட பின்பு பூச்சியத்தோடு பெவிலியனுக்கு மீண்ட மூவரை மட்டும் தருகின்றேன். இதோ:


21 : ஜீ. ப்ளவர் (இங்கிலாந்து) -1983
14 : ஹாருனுர் ரஷீட் (பங்களாதேஷ்) - 1988
13 : டீ. ஜே. ப்ராங்க்ளின் (நியூசிலாந்து) - 1983


• முதலாவது பூச்சியத்தை ருசிப்பதற்கு முன்பு அதிக இன்னிங்ஸை ஆடியவர்களில் முதன்மையானவர் இலங்கையைச் சேர்ந்த முன்னாள் சுழல் பந்துவீச்சாளரும் தற்போதைய ICC நடுவருமாகிய குமார தர்மசேன.

இவர் அறிமுகமானதிலிருந்து 72 இன்னிங்ஸ்கள் ஆடியபின்பே பூச்சியத்தை பார்த்தவர்.

Note : இவர் , குமார தர்மசேன  இலங்கை அணிக்காக ஆடும் காலத்தில் நடுவர்கள் தெளிவாக அவுட் கொடுத்த பின்பும் 'ஒருவேளை திரும்ப அழைக்க மாட்டார்களா' என்பது போல முகத்தை வைத்துக்கொண்டு திரும்பிப் பார்த்து பார்த்து பெவிலியனுக்கு நடப்பதிலும்  முதன்மையானவர்.


70 இன்னிங்ஸ் - சீ. ஜீ. க்ரீனிஜ் (அவுஸ்திரேலியா)
68 இன்னிங்ஸ் - சீ. டீ. மக்மில்லன் (தென்னாபிரிக்கா)




• அதிக இன்னிங்ஸ்களை தொடர்ந்து பூச்சியமின்றிக் கடந்தவர்கள் :



 இவர்களுள்  முதன்மையானவர்  இந்தியாவின் முன்னாள் கப்டன் ராகுல் டராவிட்.  இவர் 120 இன்னிங்ஸ்களை பூச்சியமின்றி ஆடியிருந்தார்.


• நியூசிலாந்தின் முன்னாள் கப்டன் மார்ட்டின் க்ரோவ்  பூச்சியமே இல்லாமல் கடந்த இன்னிங்ஸ்கள்  119 .


• தென்னாபிரிக்காவின் முன்னாள் கப்டன் கெப்லர் வெஸ்ஸல்ஸ் அவரது 105 இன்னிங்ஸையுமே பூச்சியம் இல்லாமலே கடந்து ஓய்வும் பெற்று விட்டார்.



 அடுத்தடுத்த இன்னிங்ஸ்களிலே தொடர்ந்து பூச்சியத்தை வரித்துக்கொண்டவர்களிலே ...


• பந்து வீச்சாளர்களும் இறுதி ஆட்டக்காரர்களுமே இந்தப்  பட்டியலில்  அதிகமுள்ளனர்.


• இவர்களிலே 4 தடவை தொடர் பூச்சியம்  – மே. தீவுகளின் லோகி, இலங்கையின் விக்கிரமசிங்க, சிம்பாப்வேயின் ஓலங்கா, இங்கிலாந்தின் வைட்,


• 3 முறை தொடர் பூச்சிய பட்டியலிலே பலர் உள்ளனர். பந்து வீச்சாளர்களும் இறுதியாட்டக்காரர்களும் அதிகமுள்ள பட்டியலிலே அவுஸ்திரேலியாவின் ஆச்சரியமாக ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.


• 3 முறை தொடர் பூச்சிய சாதனையை இரு தடவை நிகழ்த்தியிருப்பவர் இலங்கையின் 'சிலிங்கா சிங்கம்'  லசித் மலிங்க. (contd)



தொகுப்பு : Jesslya Jessly
 
நன்றி : Cricinfo

Wednesday, December 18, 2013

சிறுகதை : அரச நிவாரணம்







'சில்மியா.. என்ன புள்ள நீ.. நம்மட வளவுக்குள்ள நடக்கிற மார்க்க விசயங்கள் ஒண்டுக்கும் வாறாயில்ல.. நேத்து மத்தியானம் கூட ஹில்மா வூட்டுல.. அன்வர் மௌலவிட பயான் நடந்திச்சு.. தெரியுமா? எல்லாருக்குஞ் சொல்லி விட்டாங்களே..'

அருகிலிருக்கும் சில்லறைக் கடைக்குச் சென்று மத்தியானச் சமையலுக்குத் தேவையான பலசரக்கு சாமான்கள் வாங்கிக்கொண்டு திரும்பி வரும் வழியில் என் அயல் வீட்டுக்காரியான நிஸ்மிதான் கேட்டாள்.

'எங்க நிஸ்மீ.. ஒண்ணுக்கும் நேரமில்ல. அவர வேலைக்கும் புள்ளைகளை ஸ்கூலுக்கும் அனுப்பினா சாப்பாடு செய்து எடுக்கவே நேரம் சரியாருக்கு.. இதுக்குள்ள எங்க...?'




'அப்பிடிச் சொல்லாத புள்ள.. இந்த வளவுக்குள்ள குடியிருக்கிறவங்கள்ல எத்தினை பேர்தான வாறாங்க தெரியுமா? எல்லாருக்கும் வேலைதான்.. ஆனா மவுத்துக்குப் பொறவு நாம போற எடத்துக்கும் கொஞ்சம் தேடத்தானே வேணும்..  வெளியூருலயெல்லாம் நம்மளைப்போல பொம்புளைகள் எவ்வளவோ பேரு தப்லீக் ஜமாத் வேலை செய்யிறாங்க தெரியுமா? இது நம்ம காலடியில நம்ம அயலுக்குள்ளேயே அவங்க வந்து மார்க்க உபதேசம் பண்ண வாராங்க.. அதுக்கும் நாம வராட்டி எப்படி?'

'சரி பாப்பம் வரத்தான் வேணும் நிஸ்மீ. சரி, அடுப்புல கறி கொதிக்;குது.. ஸ்கூல் விட்டு புள்ளைகள் வாற நேரமாச்சு. நான் வாறேன்' என்று வீட்டை நோக்கி வேகமாக நடந்தேன்.

நிஸ்மியையும் என்னையும்போல இன்னும் நிறையப் பெண்கள் ஒரே வளவுக்குள் இருந்தாலும் நாங்கள் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்வதற்கு கூட நேரமே இருப்பதில்லை. அவரவர் குடும்ப காரியங்களைப் பார்ப்பதற்கே பொழுது சரியாகி விடுவதால் அவ்வப்போது இப்படி வழியில் சந்தித்துப் பேசினால்தான் உண்டு.







ன்னொரு நாள்...

'சில்மி, நான் கேக்குறனென்டு ஒண்ணும் நெனைக்காத.. நீ ஏன் வெளியில போகக்கொள்ள இன்னும் சல்வார்தான் போட்டுட்டுப் போறா..'

'ஏண்டி சல்வாருக்கென்ன..? அது ஸாரியை விட நல்லா முழு உடம்பையும் மூடித்தானே இருக்கு' என்று ஆச்சரியமாகக் கேட்டேன்.

'ஆங்.. அது மரியாதையான உடுப்புத்தான். ஆனா இப்ப நம்மட பொம்பிளைகள் எல்லாரும் அபாயாதானே போடுறாங்க.. இந்த வளவுக்குள்ளேயும் பாரு நான், நம்மட நுஸ்ரத், பேபி, மேல் வீட்டு ஹில்மா எல்லாரும் அபாயாக்கு மாறிட்டாங்க தெரியுமா.. என்னைப் போல நீயும் போடேன்.' என்றாள் நிஸ்மி சிரித்தவாறு.

'ஆ.. போடத்தான் வேணும்.. ஆனா எப்பிடிடீ இந்த வெயில் வெக்கைக்குள்ள ஸாரியும் உடுத்து அதுக்கு மேலால அதையும் போடுறீங்க..?'

'எப்பயுமா போடுறம்..? அவரோட வெளியில எங்கேயாவது போகக்குள்ளதானே போடுறம்.. ஆனா அரபு நாட்டுல பாரு.. அந்த வெயிலுக்குள்ளயும் எல்லாம் போடுதுகள்தானே..'




'அந்த ஊருல பாலைவனம்.. அங்க அடிக்கடி மணல்புயல் வீசுறதாலதான் அப்படி உடுப்புகள் சரி. அங்க பொம்புளைகளுக்கு மட்டுமில்ல.. ஆம்புளைகளுக்கும் கிட்டத்தட்ட அதேபோலத்தான் தலை காதையெல்லாம் மூடி உடுப்பு இருக்கு என்டு வெளிநாட்டுக்குப் போன நம்ம பெனாட உம்மா சொல்லுவா..?'

'அதுவுஞ் சரிதான். அதுகள்ற சுவாத்தியத்துக்கேத்த உடுப்பை அதுகள் போடுதுகள்.. என்ன? என்ன இருந்தாலும் உடம்பை தலையிலருந்து கால் வரைக்கும் மூடுதுதானே அது'

'ஆனா நீ அபாயாவைப் போட்டுக்கிட்டு அவரோட பைக்ல பின்னாலருந்து போகக்குள்ள பாத்தேன்.. உன்ட கீழ்க்கால் வரைக்கும் தெரியுதே நிஸ்மி..'

'அதென்னடி செய்யுறது.. முந்தி மாதிரி பைக்ல சைடால இருந்து போனா ட்ரபிக் பொலீஸ்காரன் எழுதிறானாம்.. அதுதான் அப்பிடி. என்னமோ நாம எல்லாத்திலயும் நம்மட மார்க்கம் சொல்ற மாதிரித்தான் இருக்கணும் சில்மீ. நான் வாறன் அடுப்புல சோறு இருக்கு!' என்று விரைந்தாள் நிஸ்மி.







ற்றுமொரு தினம்..

'என்ன சில்மி, நா அவ்வளவு சொல்லியும் நீ நேத்து பயானுக்கு வராம வுட்டுட்டியே..?'

'அது வந்து இவன் சின்னவனை  நேர்ஸரியிலருந்து கூட்டி வரப்போனதில லேட்டாகிட்டுது நிஸ்மீ..'

' பரவாயில்ல நீ பிந்தியென்டாலும் வந்திருக்கலாமே.. வட்டி வாங்குறது வட்டி குடுக்கிறது எவ்வளவு பாவம் என்டதை என்ன அழகா நம்மட பஷீர் மவுலவி எடுத்துச் சொன்னாரு தெரியுமா..?'

'அப்பிடியா..? வட்டி குடுக்கிறதும் பாவமென்டா.. எங்கடவரு பேங்க்ல லோனெல்லாம் எடுத்திருக்காரு அதுக்கு வட்டி வெட்டுறானே.. நிஸ்மீ!'

' அதுவும் பாவந்தான்..! அதுக்குத்தான் உனக்கிட்ட பயானுக்கு வா என்டு சொல்றது.. அப்பிடி வந்திருந்தா நீ லோன் எடுக்க வாணாமென்டு உன்ட புருசன்ட சொல்லியிருக்கலாமில்லியா..?'

'அதுக்கென்னடி பண்றது.. வேலைக்குப் போய் வாறதுக்கு பைக் வாங்கிறதுக்கு யாரு காசு தாறது..? அதான் டிப்பாட்மென்ட்ல பைக் லோன் எடுத்தாரு. அதுசரி ஒன்ட அவரு எப்பிடி புது ஆட்டோ வாங்கினாரு? லீஸிங்ல வாங்கினென்டு கேள்விப்பட்டேனே?'

'இல்லல்ல.. நாந்தான் சீட்டுப் போட்டு ரெண்டு லெச்சம் காசு குடுத்தேன்.. அடுத்த மாதம் முடியுது. நீயும் அடுத்த சீட்டுக்குச் சேர்ந்து லோன் காசைக் கொண்டு போய்க் கட்டிரு.. என்னமோ சில்மி.. நாளைக்கு படைச்சவன் ரப்புக்கிட்ட நாம எல்லாரும் கணக்குக் குடுக்கணும். அவன் எல்லாம் அறிஞ்சவன். இருட்டில மறைவுல நடக்கிறதையும் அறிய வல்லவன்..'
'பாப்பம்.. அப்படித்தான் செய்ணும் நிஸ்மீ. நான் வாறேன். சுமைலாவை டியூசனுக்கு அனுப்பணும்'

பிறிதொரு நாள்..

'அக்கா அக்கா!' என்று யாரோ கூப்பிட்டார்கள்.

சமையலறையினுள் வேலையாக இருந்த நான் வெளியே வந்து பார்த்தபோது கையில் பைலுடன் ஒரு இளம் பெண் நின்றிருந்தாள்.

'அக்கா நான் சமூர்த்தி ஒப்ஃபிசிலிருந்து வாறேன். யுத்த காலத்தில பாதிக்கப்பட்டவங்கள்ற விபரம் எடுக்க வந்திருக்கிறம். அப்படி யாராவது உங்கட குடும்பத்தில இருக்காங்களா?' என்றபடி உள்ளே வந்தாள்.




'ஆ.. வாங்க தங்கச்சி. எங்கட வாப்பா முந்தி கடத்துப்பட்டவரு அதைப் போடலாமா?'

'எந்த வருசம் கடத்துப்பட்டவரு..?' என்று பேனையைத் திறந்தாள் அந்த யுவதி.

'அது வந்து 1988ம் வருசம் நடந்தது.. மரக்கறி கொண்டுவர தம்புள்ளைக்கு ட்ரைவராப் போனவருதான். இடையில யாரோ வேனோட கடத்திக் கொண்டு போயிட்டாங்க. இன்னும் திரும்பவேயில்ல உயிரோட இருக்காரா இல்லையாண்டு கூடத் தெரியாது' சொல்லும்போதே எனக்கு அந்த சிறுவயதுத் துயரம் மனதிலே நிழலாடி லேசாக அழுகை வரும்போலிருந்தது. கண்களை தாவணித் தலைப்பில் துடைத்துக் கொண்டேன்.

'1982ம் ஆண்டில இருந்து 2009 வரையில பதியலாம் அக்கா. ஆனா நீங்க கலியாணங் கட்டியிருக்கிறதால உங்கட குடும்பத்தில இதைப் பதிய ஏலாது. உங்களுக்கு கலியாணங்கட்டாத சகோதரம் யாராவது இருந்தா சொல்லுங்க. அவங்கட பேர்ல இதைப் பதியலாம். அரசாங்க நிவாரணம் கிடைக்கும்'

'அப்படி யாரும் இல்ல தங்கச்சி. என்ட சகோதரம் எல்லாரும் கலியாணம் கட்டிட்டாங்க. போன மாதம்தான் கடைசித் தங்கச்சிட கல்யாணம் கூட நடந்தது'

'சரி, அக்கா அப்ப நான் போய்ட்டு வாறேன்'

'இருங்க தங்கச்சி டீ ஏதும் குடிச்சிட்டு போகலாம்' என்றேன்.

'இல்லக்கா இந்த வளவுக்குள்ள இருக்கிற உங்கட மற்றக் குடும்ப ஆக்கள்ட விபரமும் பதியணும்.. நான் வாறேன்' என்று அவள் வாசல் கேட்டைக் கடந்து சென்றுவிட்டாள்.

அந்தப் பெண் சென்று சிறிது நேரத்தில், 'அடியே சில்மி.. அந்த சமூர்த்திக்காரி இஞ்சயும் வந்தாளா? யுத்த காலத்தில காணாமப் போனவங்களையெல்லாம் பதியிறாங்களாம்.. ஒங்கட வாப்பாட பேரைக் குடுத்தியா நீ? அரசாங்கத்தால நெறையக் காசு தரப்போறானாம்டி.. டீவியில சொன்னாங்க..' என்று பதறியபடி என் கேற்றைத் திறந்துகொண்டு ஓட்டமும் நடையுமாக உள்ளே விரைந்து வந்தாள் நிஸ்மி.

'இல்லை நிஸ்மீ. அது வந்து எங்க வாப்பாவுக்கு கலியாணமாகாத பிள்ளைகள் இருந்தாதான் தருவாங்களாம் என்று சொல்லிட்டாள். அதுதான் பதிய இல்ல.'

'போடி இவளே! ஒனக்கு புத்தியேயில்லடி'

'ஏண்டி அப்படிச் சொல்றா?'

'பிறகென்னடி..? எங்கட வாப்பாவும்தான் ஒங்கட வாப்பா தொலைஞ்ச நேரம்தான் மவுத்தாப் போனாரு. எனக்கும் சகோதரம் எல்லாரும் கலியாணங் கட்டிட்டாங்கதான்... ஆனா நான் நிவாரணத்துக்குப் பதிஞ்சுட்டேன் தெரியுமா?

' எப்பிடிடீ.. நிஸ்மீ? ஒங்க வாப்பா நெஞ்சு வருத்தம் வந்துதானே மவுத்தாகினாங்க?'

'ஓ! ஆனா அது யாருக்குடி தெரியப்போவுது..? நான் புலி புடிச்சிப்போய் அடிச்சிக் கொன்டுட்டாங்கன்டுதான் குடுத்திருக்கேன். அரசாங்கம்தானே சில்மி காசு தரப்போவுது.. அதால  நான் என்ட தங்கச்சி நுஸ்ரத்தை இன்னும் கலியாணங்கட்ட இல்லண்டு போட்டுப் பதிஞ்சிட்டுத்தான் வாறேன். நீயும் உன்ட தங்கச்சி றிஸானாட பேர்ல பதிஞ்சிருக்கலாமேடி மடைச்சி.. அது போன மாசம்தானே கலியாணங்கட்டுனிச்சு..? சரி சரி, நான் வாறண்டி' என்றபடி என் வீட்டு கேற்றைக் கடந்து தன் வீடுநோக்கி விரைந்தாள்  நிஸ்மி.

'எங்கடி நிஸ்மீ இப்பிடி அவசரமா ஓடுறா? கொஞ்சம் இரேன்?'

' இல்லடி, நான் போய்ட்டு வாறேன், லுஹர் தொழணும்..!'




-'மூதூர்' மொகமட் ராபி
(2013.12.12)




( குறிப்பு:  பயான் - இஸ்லாமிய மதப் பிரசங்கம்,  அபாயா – உடலை முமுமையாக மூடி பெண்கள் அணியும் மேலங்கி,  ரப்பு - இறைவன்,  மவுத்து – மரணம், )


 

Tuesday, December 17, 2013

நாடகம் : கோவில்யானை



நாடகப்பாத்திரங்கள்
 
 
 
 
 
சூரியகோடி - அமரபுரத்துஅரசன்
வஜ்ரி - அந்த அரசனுடைய ஒரேகுமாரன்
நித்தியராமன் - அமரபுரத்தில் ஒரு பெருஞ்செல்வன்
ரணதீரன் - அந்த நாட்டுக் குதிரைப்படைத் தலைவரில் ஒருவன்
சாத்தான் - அமரபுரத்துக் காளிகோயில் பூசாரி.
சந்திரவர்மன் - அங்கதேசத்து அரசன்மகன்; வஜ்ரிக்குத் தோழன்
வஜ்ரலேகை - நித்தியராமன்மகள்; வஜ்ரியின் காதலி
மந்திரிகள், சேனாதிபதிகள், வேலையாட்கள், தோழிகள் முதலியோர்.

காட்சி - 1
 
[அமரபுரத்தில் மிகக் கீர்த்தியும் செல்வமும் உடைய காளிகோயிற் புறத்தே விரிந்த பூஞ்சோலை; சுனைகளும் தடங்களும் நீரோடைகளும் நெருங்கி ஒளிர்வது. அங்கு ஒரு லதாமண்டபத்தில் வஜ்ரலேகை தனியே வீற்றிருக்கிறாள். முன் மாலைப்பொழுது; மிக அழகிய வெயிலொளி.]

வஜ்ரலேகை : (தனக்குள்ளே பேசிக்கொள்ளுகிறாள்.) நல்லையடா நீ! விதியே, நல்லை நீ. ஐந்து பிராயம் ஆகுமுன்னே என் தாயைக் கொன்றுவிட்டாய். என் பிதா தம்முடைய செல்வங்களையும் கவலைகளையும் ஒருங்கே ஒன்று, பத்து, நூறாயிரமாகப் பெருக்குவதிலேயே எப்போதும் ஈடுபட்டுப் போயினர். என்னைத் தவிர வேறுயாருக்கும் தம்பிடி செல்வம் உடைமையாகி விடாதபடி காக்கும் பொருட்டுத் தாம் இரண்டாந்தாரம் விவாகம் செய்யாமல் நிறுத்திக்கொண்டார். என் பொருட்டே தாம் உயிர்த்திருப்பதாகச் சொல்கிறார். என் குழந்தைகளும் என் புருஷனும் நானும் சந்தோஷமாக வாழ்ந்திருப்பதைத் தாம்பார்த்து விட்டுத்தான் சாகவேண்டும் என்ற எண்ணம் வைத்திருக்கிறார்.

அந்த எண்ணம் அவர் மனத்தை அட்டை போலக் கௌவிக்கொண்டிருக்கிறது. நல்லவேளை! எனக்கு இன்னும் கணவனும் குழந்தைகளும் ஏற்படவில்லை. அந்த நிலைமை இன்றைக்கு ஏற்பட்டால், அவர் அதைப் பார்த்துவிட்டு இன்றைக்கே இறந்துபோய் விடுவார் என்று தோன்றுகிறது. மேலும், இந்த எண்ணத்தை வைத்துக்கொண்டு, விரைவில் மணம் புரிந்துகொள்ளும்படி என்னைச் சதா அரித்துக்கொண்டே இருக்கிறார். செல் அரிப்பது போல் அரிக்கிறார். எனக்கோ வயது பதினாறு கழியவில்லை. ஆண்மக்களும் பெண்மக்களும் என்னை மிக அழகுடையவளென்று கருதுகிறார்கள். இந்தத் தேசத்து அரசன் மகனும் மகாசுந்தரபுருஷனும் இளம் பெண்களால் பிரத்தியட்ச மன்மதன் என்று போற்றப்படுவோனுமாகிய வஜ்ரி என்மீது பெருங்காதல் கொண்டிருக்கிறான். இப்படி எல்லா வகையிலும் குறைவின்றி இருக்கும் என் மனத்தைக் கூட விதியே, அடாவிதியே, விதியே, பாழ்த்த விதியே, நீ ஓயாமல் தீயிடைப்பட்ட புழுவைப் போலே துடித்துக்கொண்டிருக்கும்படி செய்வாயெனில் பொருளில்லார், அழகில்லார், மிடிமைக்கும் நோய்களுக்கும் இரைப்பட்டார் - மற்றைய மாதர்களின் மனத்தை என்படச்செய்வாயோ அறிகிலேன். கணவரை இழந்து, பொருளும் இன்றி, அழகும் இளமையும் தவறிய ஸ்திரீகள், காதல் சுவை இனியில்லையென்று தீர்ந்த நிலையுடையோர் எத்தனை ஆயிரம், எத்தனை லக்ஷம், எத்தனை கோடி! அவர்களுடைய அக வாழ்க்கை எங்ஙனம் இயலுகிறதோ? அவர்கள் மனத்தை எத்தனை கவலைப் புழுக்கள்அரிக்கின்றனவோ? அவர்கள் எங்ஙனம் ஆவிதரித்து நிற்கின்றனரோ அறிகிலேன். ஆ! இளமை கழிந்த பிறகும் காதல் சாகாதன்றோ? மனிதர், விதவைகளாகும்படி பலாத்காரம் செய்தாலும் இயற்கை நெறிமாறுமா? எல்லா உயிர்களுக்கும் எப்படியாவது சிறிது சிறிது சுகம் கிடைக்கத்தான் செய்யும். மேலும், உலகத்தில் இன்பம் யாருக்குமே இல்லை என்றும் இவ்வுலகம் எல்லா உயிர்களுக்கும் எப்போதுமே துன்பமயந்தான் என்றும் இந்தக் கோயில் தலைவியாகிய விலாஸினி சொல்வதுதான் ஒருவேளை உண்மையோ எப்படியோ? அப்போது, எனக்குள்ள செல்வமும் இளமையும் பேரழகும் எனக்கு இன்பந்தராமல் இருப்பது வியப்பாக மாட்டாதன்றோ? ஹும்! அப்படி இராது; இந்த உலகத்தில் ஏற்படக்கூடிய பலவகைத் துன்பங்களுக்குச் செல்வம் முதலியன மருந்தாகு மென்பதில் ஐயமே இல்லை. இன்பம் தவறாமல் இருப்பதற்கு வேண்டிய சௌகரியங்கள் பெரும்பாலும் நமக்கு இருக்கின்றன. இன்னும் எங்கேயோ ஒரு குறை இருக்கிறது. அதைக் கண்டுபிடித்து நிவிருத்தி செய்துவிட வேண்டும். இந்த உலகம் மாற்ற வொண்ணாத துன்ப இயற்கையுடையது என்போரின் வார்த்தையை நான் நம்பவே மாட்டேன்; மாட்டேன்; மாட்டேன்; மாட்டேன்! இங்கு நித்திய இன்பம் கண்டுபிடிக்க முடியுமென்று நமது வேதாரண்ய குரு சொல்வதையே நான் நம்புகிறேன்.
ஆனால்,அங்ஙனம் இன்பம் எய்தாதபடி நம்மைத் தடுக்கும் குறை எது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்.

(இவ்வாறு தன் மனத்துள்ளே பேசி வருகையில், கடைசி வசனம் அவளையும் மீறி உரத்த குரலில் வந்துவிட்டது. அப்போது அங்கு ரணதீரன் வருகிறான்.)

ரணதீரன் : பெண்ணே, உனக்கு நல்ல காதலன் இல்லாத குறைதான் இருக்கக் கூடியது. (நகைக்கிறான்.)

வஜ்ரலேகை : நீர் யார்?

ரண : அமரபுரத்து வேந்தனுடைய குதிரைப்படையில் நான் ஒரு தளகர்த்தன்.

வஜ்ர : இங்கு ஏன் வந்தீர்?

ரண : கோவிலுக்குப் பூஜைக்காக வந்தேன். மாலைப்பொழுது மிக இனிமையாகத் தோன்றிற்று. சோலையில் சிறிதுநேரம் உலாவி மகிழ்வோம் என்ற எண்ணத்தால் இப்புறம் வந்தேன். இங்கு வந்து நெடுநேரமாக நிற்கிறேன். உன் முகத்தையே பார்த்துக்கொண்டு நின்றேன். ஆனால் இதுவரை நீ என்னைத் திரும்பிப் பார்க்கவில்லை. ஏதோ, ஆழ்ந்த யோசனையில் இருக்கிறாய் என்று தெரிந்துகொண்டேன். கடைசியாக ஒரு வார்த்தை இரைந்து சொன்னாய். அதற்கு மறுமொழி சொன்னேன்.

வஜ்ர : நல்லது; நீர் போய்வரலாம்.

ரண : கண்மணியே, நின்மீது நான் கரைகடந்த காதலுடையேன்.

வஜ்ர : இங்கு நில்லாமல் போம்.

ரண : நான் இந்நகரத்துக்குத் திரைப்படையில் ஒரு தளபதி. என் பிதா பெரிய சேனாபதிகளில் ஒருவராக இருந்து, சமீபத்திலே நடந்த வங்கத்துப் போரில் மிக வீரத்துடன் உயிர் துறந்தார். எனக்குச் சைனியத்தில் நல்ல மதிப்பு இருக்கிறது. அரசன் நேரே என்மீது மிக்க அன்பு வாய்ந்தவன். ஆதலால் என்னை யாரோ ஒரு சாதாரண மனிதனாகக் கருதி நீ பேசுவது சரியல்ல. நான் உன்னைக் காதல் செய்வதால் உனக்கு எவ்வித அவமானமும் விளையாது. நான் உன்னை உலகறிய மணம் புரிந்துகொள்ளும் நோக்கமுடையேன். குலத்தில் க்ஷத்திரியன். நாட்டில் உயர்ந்த உத்தியோகம் வகிக்கிறேன். ஆதலால் நீ என்னை எவனோ கதியற்றவனென்று கருதிப் பேசுவதை நிறுத்தி எனக்கு அருள் புரிய வேண்டும். உன்னையன்றி உறுபுகல் வேறில்லை. உன்னைக் கண்ட அளவிலே காதல் கொண்டேன். இது முதற்காட்சியில் விளைந்த காதல். இதுவரை எத்தனையோ ஆயிரம் மகளிருடனே பழகியிருக்கின்றேன். எவளிடத்தும் என்மனம் இங்ஙனம் வீழ்ச்சி பெற்றதில்லை. நீ எனக்குக் கடவுள் காட்டிய பெருங்களிக்கோலம். என்னை இகழாதே! என்னைத் துரத்தாதே; என்மீது கருணை கொள். என்னைக் காதல்செய். எனக்கு நீயே கதி.
வஜ்ர : நீர் இங்கிருந்து போக உடம்படுகிறீரா, இல்லையா?

ரண : நீ நான் கேட்டதற்கு இரண்டில் ஒன்று மறுமொழி சொல். பிறகு நான் போய்விடுகிறேன்; நீ என்னைக் காதல் புரிந்து மணம் செய்துகொள்ள உடம்படுகிறாயா, இல்லையா?

வஜ்ர : நான் உம்மை மணம் புரிதல் சாத்தியப்படாது.

ரண : ஏன்?

வஜ்ர : நான் மற்றொருவனுக்கு என் சுகத்தை ஏற்கனவே வசப்படுத்தி விட்டேன்.

ரண : அவன் யாவனோ?

வஜ்ர : அவன் . . . அவன் . . . அவன் . . . இந்நகரத்தரசன் மகன், வஜ்ரி.
(அந்தச் சமயத்தில் வஜ்ரி வருகிறான். அவனைக் கண்டவுடன் ரணதீரன் கை கூப்பி வணங்குகிறான்.)

வஜ்ரி : கண்மணி! என் பெயரை எதற்காகச் சொல்லுகிறாய்? இந்த - நின் பெயர் என்ன தம்பி? ரணதீரனன்றோ? ஆம் - இந்த ரணதீரனை உனக்கு முன்னமே தெரியுமா?

வஜ்ர : நான் இவரை இதற்கு முன் பார்த்ததில்லை. இப்போது தான் இவர் இங்கு வந்தார். ‘யார் பொருட்டுக் காத்திருக்கிறாய்?’ என்று என்னிடம் கேட்டார். ஆதலால் நின் பெயரைச் சொன்னேன். நீ ஏன் இத்தனை கால தாமதப்பட்டு வந்தாய்?

(ரணதீரன் வணங்கி விடைபெற்றுச் செல்கிறான்.)

வஜ்ரி : நான் அம்மன் கோயில்யானையுடன் விளையாடிக்கொண்டிருப்பதில் எதிர்பார்த்ததற்கு மேல் அதிகப்பொழுது செலவிடும்படி நேர்ந்துவிட்டது. அங்கதேசத்து வேந்தன் மகன் சந்தரவர்மன் இந்நகரத்துக்கு வந்திருக்கிறான். அவனையும் கோயிலுக்கு அழைத்து வந்தேன். நானும் யானையும் விளையாடுவதைப் பார்த்து அவன் சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தான். அவன்மனம் விகற்பப்படாமல் அவனுக்கு உபசாரங்கள் செய்து அவனை அனுப்பிவிட்டு நேரே இங்கே வருகிறேன். அது நிற்க. நீ ஏதோ அஞ்சினவள் போலே காணப்படுகிறாயே. அந்த ரணதீர மூடன் நீ பயப்படும்படி ஏதேனும் செய்தானா? அப்படியானால் சொல்; அவனை இப்பொழுதே தேடிக்கொண்டு வரும்படி செய்து தக்க சிக்ஷை விதிக்கிறேன்.

வஜ்ர : அவன் தவறாக நடக்கவில்லை. நீ என்னை எப்போது மணம் புரிந்துகொள்ளப் போகிறாய்?

வஜ்ரி : என்கண்ணே, சந்திரவர்மனுடைய தங்கையை மணம் புரிந்துகொள்ளும்படி என் பிதா வற்புறுத்துகிறார். அந்த விஷயத்துக்காகத்தான் சந்திரவர்மனும் இங்கு வந்திருக்கிறான். நான் எப்படியாவது தந்திரம் பண்ணி அதைக் கலைத்து விடுகிறேன். பிறகு உடனே உன் விஷயத்தைப் பற்றி என் பிதாவுடன் பேசி அவரை நமது மணத்துக்கு இணங்கும்படி செய்துவிடுவேன். நீ பயப்படாதே. அடுத்த தை மாஸத்தில் நாம் மணம் புரிந்துகொள்வோம். அதுவரை, கருணை கூர்ந்து பொறுத்திரு.

வஜ்ர : ஏற்கனவே நீ என்மீது காதல் கொண்டிருப்பதனால், அங்கத்தரசன் மகளை மணம் புரிவது சாத்தியம் இல்லை என்று இப்போதே உன் பிதாவிடம் தெளிவாகவும் வெளிப்படையாகவும் நீ ஏன் சொல்லிவிடக் கூடாது?



வஜ்ரி : அங்ஙனம் சொல்லுதல் இப்போது சாத்தியம் இல்லை. என்னுடைய பிதாவின் குணம் உனக்குத் தெரியாது. அவர் வழியிலேயே நாம் விட்டுத் திருப்புவதுதான் அவரிடம் காரியத்தை வெல்லும்வழி.

(இருவரும் பிரிந்து செல்லுகின்றனர்.)


காட்சி - 2
 
 
[நித்தியராமன் வீடு. காலை நேரம். நித்தியராமன் காலையுணவு கழித்துச்
சந்தோஷமாகத் தாம்பூலம் தரித்துக்கொண்டிருக்கிறான். அப்பொழுது அவனிடம் ஒரு வேலையாள் வந்து சொல்லுகிறான்.]


வேலையாள் : ஐயனே, தங்களைத் தரிசனம் செய்ய வேண்டுமென்ற கருத்துடன் வெளியே ஒருவர் வந்து காத்திருக்கிறார்.

நித்தியராமன் : பெயர் விசாரித்தாயோ?

வேலையாள் : இல்லை; பார்த்தால் சைனியத்தைச் சேர்ந்தவர் போலே தோன்றுகிறது.

நித்திய : ஓஹோ! அப்படியானால் உடனே வரச்சொல்.

வேலையாள் : கட்டளைப்படி.

(உடனே சில க்ஷணங்களில் ரணதீரன் வந்து புகுகிறான்.)

நித்திய : தாங்கள் வெகுநேரமாகக் காத்திருக்கிறீர்களா? உட்காருங்கள். தங்கள் பெயர் யாது?

ரண : இப்போதுதான் வந்தேன். என் பெயர் ரணதீரன். நான் இந்நகரத்து அரசனுடைய குதிரைப்படைத் தலைவரில் ஒருவன்.

நித்திய : இங்கு எதன் பொருட்டு விஜயம் செய்தீர்கள்?

ரண : தங்களிடம் ஒரு வரம் கேட்கும் பொருட்டு.

நித்திய : என்ன வரம்?

ரண : தங்கள் குமாரியை எனக்கு மணம் புரிவிக்க வேண்டும்.

நித்திய : ஓ! ஐயமின்றி நடத்தலாம். உம்மைப் பார்த்தால் ஆணுக்கு ஆண் மையலுறத் தக்க அழகுடன் விளங்குகிறீர். உயர்ந்த உத்தியோகம் பார்க்கிறீர். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதுபோல் உம்முடைய முகத்தை நோக்கிய அளவில் நல்ல குணவான் என்று தெரிகிறது. அப்படியே செய்யலாம். ஆனால்,அந்தப் பெண்ணுடைய சம்மதத்தையும் தெரிந்துகொள்ள வேண்டும். அவளுக்கு ஒரு தக்க வரன் தேடிக்கொடுத்து, அவள் தன் கணவனுடனும் குழந்தைகளுடனும் மகிழ்ந்து வாழ்வதைக் காணும் பொருட்டாகவே நான் இன்னும் உயிர் தரித்திருக்கிறேன். எனக்கு இவ்வுலகத்தில் வேறு எவ்விதமான பற்றுதலும் இல்லை. அவளை நீர் நேரே பார்த்து அவளுடைய சம்மதத்தைத் தெரிந்துகொண்டீரா? இளம் பிள்ளைகள் - அதிலும் இக்காலத்துப் பிள்ளைகளுக்கு இதெல்லாம் சொல்லிக் கொடுக்க வேண்டுமா? அல்லது இப்போதே இங்கு அவளை வரவழைத்துக் கேட்போமே? யாரடா, ஏ வேலையாள்!

ரண : ஹா, ஹா, ஹா, வேண்டாம், வேண்டாம்! வேலையாளைக் கூப்பிடாதேயுங்கள். அவளையும் இப்போது இங்கே அழைப்பித்தல் வேண்டாம். தாங்கள் அவளிடம் தனியாகப் பேசி என்னை மணம் புரிந்துகொள்ளச் சொல்ல வேண்டும். அவள் என்னை ஏற்கனவே பார்த்திருக்கிறாள். என்னை ஒருவாறு விரும்பவும் செய்கிறாள் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், வேறொரு கொடிய துஷ்டனுடைய மயக்கத்தில் வீழ்ந்திருக்கிறாளாதலால் என்னை மணம் புரிய இயலாது என்கிறாள். அவன் வெறுமே இவளை மயக்கித் தன் இஷ்டம்போல் சிறிது காலம் வைத்துக்கொண்டிருந்து, அப்பால் சாற்றை உறிஞ்சிக்கொண்டு பழத்தோலை எறிந்து விடுவது போலே இவளை எறிந்துவிடக் கருதியிருக்கிறான். அவன் இவளைச் சடங்குகளுடன் சாஸ்திரோக்தமாக மணம் புரியப்போவதில்லை அவனால் அங்ஙனம் செய்ய முடியாது.

நித்திய : அவன் யார்? அவன் யார்? யார் அந்தப் பாதகன்?




ரண : அதை நான் சொல்லமாட்டேன். பின்னிட்டுத் தங்களுக்கே தெரியும். இந்தச் செய்தியை நான் சொன்னதாகக்கூடத் தங்கள் குமாரியிடம் தாங்கள் தெரிவிக்கக்கூடாது. தெரிவித்தால் காரியம் கெட்டுப்போகும். என்னை அவள் மணம் புரியவேண்டியது தங்கள் விருப்பம் என்பதை மாத்திரம் வற்புறுத்த வேண்டும். நான் இப்போது போய், நாளைக் காலையில் வருகிறேன். அப்போது எனக்கு முற்றும் அநுகூலமான உத்தரம் கொடுப்பீர்களென்று நம்புகிறேன்.
நித்திய : நல்லது, நீர் போய் வாரும். நல்ல சமயத்தில் எச்சரிக்கை கொடுக்க வந்தீர். பெரிய உபகாரம் செய்தீர். உமக்கே என் பெண்ணைக் கொடுக்கிறேன். யோசனை வேண்டுவதில்லை.

(ரணதீரன் போகிறான்.)

நித்திய : யாரடா, வேலையாள்!

(வேலையாள் வருகிறான்.)

வேலையாள் : ஐயனே, யாது கட்டளை?

நித்திய : வஜ்ரலேகையை அழைத்துவா.

வேலையாள் : குழந்தை வஜ்ரலேகை வீட்டில் இல்லை. சிறிது நேரத்துக்கு முன்புதான் வெளியே ஒரு தோழியுடன் சென்றாள். காளிகோயில் பெரிய பூசாரி வீட்டுக்குப் போயிருப்பதாகத் தோன்றுகிறது.

நித்திய : சரி; நீ போ. (வேலையாள் சென்ற பிறகு நித்தியராமன் தனக்குள்ளே யோசனை செய்கிறான்.) நாமும் அங்கே தான் போய்ப் பார்ப்போம். அந்தப் பூசாரி யோகியென்றும், மந்திரவாதியென்றும் பிரசித்தி அடைந்திருக்கிறான். அவனிடம் இந்தப் பெண்ணுடைய எதிர்கால வாழ்க்கையைப் பற்றி விசாரணை செய்யலாம். இவள் அங்கே போன நோக்கத்தையும் தெரிந்து வரலாம். என் வஜ்ரலேகையின் உள்ளத்தை மயக்கி அவளை வீழ்த்த விரும்புவதாக ரணதீரனாலே தெரிவிக்கப்பட்ட பாதகனைப் பற்றிய உளவுகளும் அங்கே கிடைக்கலாம் என்று தோன்றுகிறது.

(புறப்படுகிறான்.)



காட்சி - 3
 

[ராஜா சூரியகோடியின் அரண்மனையில் ஓர்அறை. அங்கு அரசன் தனியே ஒரு பொன்னாசனத்தின் மேல் வீற்றிருக்கிறான். அவனெதிரே மற்றோர் ஆசனத்தில் காளிகோயில் பெரிய பூசாரியாகிய சாத்தன் (முன்னர் சாத்தான் என உள்ளது) இருக்கிறான்.]


சூரியகோடி : இத்தனையும் மெய்தானா?

சாத்தன் : ஆம்.

சூரிய : இல்லையெனில்?

சாத் : என்னைச் சிரச்சேதம் செய்துவிடலாம்.

சூரிய : சரி. உண்மையென்று வைத்துக்கொள்வோம். இதைத் தடுக்க வழியில்லையா?

சாத் : எதைத் தடுக்க?

சூரிய : எல்லாவற்றையும். முதலாவது, நம் மகன் வஜ்ரி அந்தச் செட்டிமகளை மணம் புரியாதபடி தடுக்க வேண்டும்.

சாத் : அதற்கு வழி நான்அறியேன்.

சூரிய : உன்பலம், உன் சாஸ்திரபலம், உன்னுடைய கிரக நக்ஷத்திரங்களின் பலம் இத்தனையையும் கொண்டு இதைத் தடுக்க முடியாதா? தள்ளும், நான் செய்கிறேன்.

சாத் : தங்களால் முடியாது.

சூரிய : அது எப்படி?

சாத் : மனிதர், பூதங்கள், தேவகணங்கள், யாவராலும் காதலின் வலிமையைக் கடக்க முடியாது. தங்களுடைய குமாரனும் அப்பெண்ணும் தம்முள்ளே மெய்யான காதல் கொண்டிருக்கின்றனர்.

சூரிய : எப்படி? எப்படி? மெய்க்காதலா? அதன் இயல்பு என்னே? எங்குளது? அதனைக் காவியங்களிலன்றி நாம் உலக வாழ்க்கையில் காண்பதில்லை. தோன்றி மறையும் விருப்பமே இயற்கையில் உள்ளது. அது மெய்க் காதலாகாதன்றோ?

சாத் : காவியத்துக் காதல் எங்ஙனமோ தங்கள் மகனுக்கும் அச்செட்டி மகளுக்குமிடையே மூண்டு விட்டது.

சூரிய : அதைத் தடுப்பேன். தடுத்தே தீர்வேன்.

சாத் : முடியாது; முடியவே முடியாது.

சூரிய : என் சொல்லுக்கு இணங்காவிடின் வஜ்ரிக்குப் பட்டம் இல்லை என்று நீக்கிவிட்டு மற்றொரு குமாரனை ஸ்வீகாரம் செய்துகொள்வேன். என் விருப்பத்தைக் கேள். அந்த ரணதீரன் என்ற குதிரைப்படைத் தலைவன் செட்டி மகளாகிய வஜ்ரலேகையை மணம்புரிந்து கொள்ள வேண்டும். நமது வஜ்ரி அங்க தேசத்து அரசன் மகளை மணம் புரிந்து கொள்ள வேண்டும். இப்படி நடந்தால் எல்லோர் மனமும் திருப்தி அடையும். இவ்விரண்டு விவாகங்களையும் இநத மாத முடிவுக்குள்ளேயே நடத்தி விடலாம் என்று நினைக்கிறேன். இது என் தீர்ப்பு. இதை நீ இப்போதே போய் வஜ்ரி, செட்டி, ரணதீரன் எல்லோருக்கும் தெரிவித்து விடு. என் ஆக்கினையைக் கடந்து என் நாட்டில் ஒன்றும் நடக்கக் கூடாது.

சாத் : ஐயனே, ஹூணதேசத்திலிருந்து, சிறிது காலத்துக்கு முன்பு ஒரு படிப்புள்ள வியாபாரி இங்கு வந்திருந்தார். அவர் எனக்கு ஒரு கதை சொன்னார். தேவரீர் இப்போது கொடுத்த உத்தரவைக் கேட்டபோது எனக்கு அந்தக் கதை நினைப்புக்கு வருகிறது. அந்தக் கதையிலே, ஹூணதேசத்து வேந்தன் ஒருவன், தன்மந்திரியுடன் கடற்கரையிலே அலைமோதும் இடத்தில் சென்று நாற்காலிகள் போட்டு உட்கார்ந்து கொண்டு கடலை நோக்கி, ‘கடலே, நான் பூமண்டல சக்கரவர்த்தி; என் கட்டளைகளுக்கு நீயும் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்; இதோ ஒரு கட்டளையிடுகிறேன். முதலாவது அதன்படி நட. நாம் இருக்கும் இடத்தில் அலை எறியாதே; சற்றுப் பின்னே விலகிப்போ’ என்றானாம். உடனே, தற்செயலாகக் கடலில் பிரமாண்டமானதோர் புதிய அலை வந்து அவ்விருவரின் நாற்காலியையும் மோதிக்கொண்டு போய்விட்டதாம். அவர்கள் உயிர் தப்புவது பெருங்கஷ்டமாயிற்றாம். அந்த ஹூணராஜன் ஜடமான கடலுக்கு ஆக்கினை பிறப்பித்து வெட்கமடைந்தான். தாங்களோ, ஸூக்ஷ்ம சக்திகளுக்குள்ளே ஸப்த ஸாகரங்களும் கலந்த சக்தியென்று சொல்லத் தக்கதாகிய மூலசக்தியை எதிர்த்துக் கட்டளை போட உத்தேசிக்கிறீர்கள். ஆலை பலாவாக்கினாலும் ஆக்கலாம். மனிதருக்குள்ளே தலைமைப்பட்டோரிடம் வீண் கட்டளை பிறப்பிக்கும் இயல்பு நேராமற் செய்வது பெருங்கஷ்டம்.

(அரண்மனை வாயிலில் கூகூ என்று பலவிதமான ஒலிகள் எழுகின்றன. நாலைந்து வேலையாட்கள் தலை அவிழ, மொழிகுழற, அரசன் முன்னே வந்து நிற்கின்றனர். ஒவ்வொருவனும் இன்னது சொல்வதென்று அறியாமல் திணறுகிறான்.)

சூரிய : என்னேடா கிளர்ச்சி! எதன் பொருட்டு இத்தனை அல்லோலகல்லோலம்? யாது நிகழ்ந்தது? சொல்லுமின்களடா!
முதல் வேலையாள்: ஒரு குடம் ரத்தம்!

இரண்டாம் வேலையாள்: மண்டை கீறிப் போய்விட்டது . . . மூக்கில்குத்தி . . . வாய் கிழிந்திருக்கிறது!

மூன்றாம் வேலையாள்: பிரக்கினை போய்விட்டது!

முதல் வேலையாள்: பிரக்கினை திரும்ப வந்துவிட்டது! இளவரசன் இன்னும் சாகவில்லை.
சூரிய : என்னடா? யார், யார்? இளவரசனா? வஜ்ரியா? நடந்தது என்ன? அவனை யார் வெட்டினார்கள்? தெளிவாகச் சொல்.

முதல் வேலையாள்: காளிகோயில் யானை. அதற்கு மதம் ஏறியிருக்கிறது. முன்பு இரண்டு கால்களுக்கு மாத்திரம் சங்கிலி போட்டுக் கட்டியிருந்தார்கள். இப்போது ஒரு வாரமாக நான்கு கால்களுக்கும் விலங்கிட்டிருக்கிறார்கள். அங்க தேசத்தரசன் மகனோடு, நம் இளவரசன் யானைக்குப் பழம் கொடுக்கப் போனார்.
சூரிய : கோயில்யானையா? என் மகனையா அடித்தது? நான் கெட்டேன் - ஆ! மகனே!


(மூர்ச்சை போட்டு விழுந்துவிட்டான்.)


சாத்தன் : கேளப்பா, ஏ வேலையாள்! இளவரசனைப் பற்றிப் பிறகு கவனிப்போம். முதலாவது இங்கு மூர்ச்சை போட்டு விழுந்திருக்கும் அரசனுக்கு வேண்டிய சிகிச்சைகள் செய்ய வேண்டும். இவரைத் தூக்குங்கள்; படுக்கை அறையிலே கொண்டு போடுங்கள். நான் குணப்படுத்தி விடுகிறேன்.
(வேலையாட்கள் மூர்ச்சை போட்டு விழுந்த சூரிய கோடியைத் தூக்கிக் கொண்டு செல்லுகின்றனர்.)


காட்சி- 4
 

[அரண்மனை. வஜ்ரியும் அங்கத்தரசன் மகன் சந்திரவர்மனும் வஜ்ரலேகையும் இருக்கின்றனர்.]

சந்திரவர்மன் : எதற்கும் வஜ்ரி இப்போது அதிகமாக வார்த்தை சொல்லாமல் இருப்பது நன்று. யார் வந்தாலும் அவர்களுக்கு நானே மறுமொழிகள் சொல்லலாம் என்றும், வஜ்ரி வாய் திறந்தாலே கெடுதி என்றும், அரண்மனை வைத்தியர் பலமான எச்சரிக்கை கொடுத்துப் போனார். நடந்ததை நான் சொல்லுகிறேன்.

வஜ்ரலேகை : சரி, நீங்களே சொல்லுங்கள். முழு விவரமும் சொல்ல வேண்டும்.

சந்திர : அந்த யானைக்கு மதமேறியிருக்கிறதென்று எங்களிடம் யாரும் தெரிவிக்கவில்லை. நாங்கள் - இருவரும் அங்கே போன போது பாகன் இல்லை. புறத்து வேலியைச் சுற்றி நூற்றுக்கணக்கான ஜனங்கள் நின்றுகொண்டிருந்தனர். அந்த யானைக்குச் சமீபமாக வஜ்ரி நேரே சென்றான். நானும் வேலிப் புறத்தே நின்றேன். தொலைவிலிருந்து பார்த்தால் போதுமென்று நான் சொன்னேன். வஜ்ரி அது தனக்கு மிகப் பழக்கமென்றும் தன்னிடம் பூனைக் குட்டி போலே நடந்துகொள்ளும் என்றும் சொல்லி விட்டுச் சமீபத்திலே சென்றான்.

வஜ்ர : ஆம், நமது வஜ்ரியை வேலிப் புறத்தே கண்டால், நின்றுகொண்டிருக்கும் அந்த யானை கீழே படுத்துத் துதிக்கையைத் தூக்கி வணங்கி விட்டு மறுபடி எழுந்து நிற்கும். நான் நேராகவே பன்முறை இதனைப் பார்த்திருக்கிறேன்.

சந்திர : ஆனால் இந்தமுறை துரதிருஷ்டவசத்தால் இவன் நேரே தன் முகத்தைக் காட்டாமல் தலையைக் குனிந்து கொண்டு யானையிடம் சென்றான். அப்படிக்கு அது அதிகமாக ஒன்றும் செய்யவில்லை. துதிக்கையால் இவளைத் [இவனைத்] தள்ளி வீழ்த்திவிட்டது. கீழே ஒரு கல் மண்டையில் அடித்து ரத்தம் வெள்ளமாகப் பெருகிற்று. யானை அதைக் கண்ட மாத்திரத்தில் திடுக்கிட்டுப் போய்விட்டது. அப்போது நான் அந்த யானையின் முகத்தை உற்று நோக்கினேன்; ஓரிரு க்ஷணங்கள் தன் துதிக்கையால் வஜ்ரியின் கால்களைத் துழாவிக்கொண்டிருந்தது. இவன் பிரக்கினையின்றிக் கீழே அதன் முன்பு வீழ்ந்து கிடக்கிறான். ‘உம், உம்’ என்று ஒருவித உறுமுதல் இவன் வாயினின்றும் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. யானை, தன் தந்தையுடைய கடிகாரத்தை வீழ்த்தியுடைத்து விட்டுப் பின் பச்சாதாபமெய்தும் குழந்தை விழிப்பது போலே விழித்துக்கொண்டு நின்றது. ஓரிரு க்ஷணங்களுக்கப்பால், நான் மனத்தைத் தைரியப்படுத்திக்கொண்டு வேலிக்குள் இறங்கி இவனை வெளியே தூக்கி வந்தேன். வெளியே கொண்டு வந்து நிறுத்திய அளவிலே இவனுக்குப் பிரக்கினை மீண்டு விட்டது. இதுதான் நடந்த சங்கதி.

வஜ்ர : ரத்தச் சேதம் மிகவும் அதிகம் என்கிறார்களே!

சந்திர : ரத்தம் அதிகம் வடிந்து சென்றுவிட்டது எனினும் காயம் பெரிது அல்ல. உயிருக்கு அபாயம் இல்லை. காயம் சிறிதுதான். வைத்தியர் வந்து உதிரத்தைக் கழுவிக்கட்டுக் கட்டும்போது நான் நன்றாகப் பார்த்தேன். புண் சிறிது.

வஜ்ரி : கண்ணே நீ அஞ்சாதே! நின் பொருட்டாக நான் பிழைப்பேன்.
(இங்ஙனம் அவன் சொல்லுகையில் அவன் வாய் வழியாக ரத்தம் ஒழுகுதல் கண்டு வஜ்ரலேகை மூர்ச்சை போட்டு விடுகிறாள். அவளைத் தெளிவித்து எழுப்புதற்குரிய முயற்சிகளைச் சந்திரவர்மன் செய்கிறான். பிறகு அவளையும் ஒரு தோழியையும் பல்லக்கில் ஏற்றி வீட்டுக்கு அனுப்பி விடுகிறார்கள்.)


ந்திரவர்மன் : ஆ! காதலென்பதை இன்றுதான் கண்டேன். வஜ்ரி, நீ அதிருஷ்டசாலி. உன்னை யானை அடித்ததுகூட எனக்குப் பொறாமை உண்டாக்குகிறது. என்னை ஒரு யானை அடித்து, எனக்காக ஒரு பெண் இப்படி மூர்ச்சை போட்டு விழுவதை நான் பார்க்க விரும்புகிறேன். ஸ்திரீகள் மூர்ச்சையுறுதல் புதுமை அல்ல. ஆனாலும் இவளுடைய மூர்ச்சை மாதிரி வேறு. இவளுடைய காதலே புதிது. ஆ! வஜ்ரி! நீ அதிருஷ்டசாலிகளிலே சிறந்தவன். இனி என் தங்கையை நீ மணம் புரிந்துகொள்வதென்ற பேச்சை அடியோடு நிறுத்தி விடுவதற்குரிய ஏற்பாடுகள் நானே செய்கிறேன். உன் பிதாவுக்கும் நானே தெளிவேற்படுத்துகிறேன். நீ எதற்கும் யோசனை பண்ணாதே. இப்போது நீ இங்கே தனியாக இருப்பது நன்று. யாரிடமும் பேசாதே. வாய் திறக்கக் கூடாது. தூங்க முயற்சி பண்ணு. நான் போய் வருகிறேன்.


(விடை பெற்றுச் செல்லுகிறான்.)



காட்சி - 5
 


[அமரபுரத்து அரசனாகிய சூரிய கோடியின் சபை. மந்திரிகள் சேனாதிபதிகள் முதலியோர் புடை சூழ அரசன் வீற்றிருக்கிறான். அந்தச் சபையில் சத்தியராமன்1, வஜ்ரலேகை இருவரும் வந்திருக்கிறார்கள். வஜ்ரியும் தலை, வாய்களுக்குக் கட்டுகள் கட்டிக்கொண்டு வந்து வீற்றிருக்கிறான்.]

சூரியகோடி: சபையோர்களே, குடிகளே,! தசரதன் ஸ்ரீராமமூர்த்தியை மகனாகப் பெற்று மகிழ்ந்தான். நான் வஜ்ரியைப் பெற்றேன். இவன் ஆண்டிலே குறைந்தவனாயினும், அறிவிலும் வீர்த்தன்மையிலும் இக்காலத்து ராஜகுமாரர்களுக்குள்ளே சிறந்து விளங்குகிறான். கல்வி கேள்விகளிலே இவன் நம்நாட்டுப் பண்டித சிகாமணிகளால் பெரிதும் வியக்கப்படுகிறான். இவன் பெரிய வேதாந்தி என்றும் ஆன்ம ஞானி என்றும் பல மேதாவிகள் தெரிவிக்கிறார்கள்.

(Note:1. இந்த ஓரிடத்திலும் பின்னர் ஓரிடத்திலும் நித்தியராமன் என்னும் பெயர் சத்தியராமன் என உள்ளது. பிற இடங்களில் எல்லாம் நித்தியராமன் என்னும் வடிவமே உள்ளது.)

இன்றுகாலையிலே இவன் ஏறக்குறைய இறந்து பட்டானென்ற செய்தி இந்த நகர் முழுதும் பரவிக் குடிகளனை வரையும் பெருந்துயரில் வீழ்த்திற்று. இன்று மாலை இவன் நேரே நமது சபைக்கு வந்து, தனக்கு லேசான உராய்தலையன்றி வேறொன்றும் இல்லை என்று சொல்லி நம்மிடையே பூர்ணசந்திரனைப் போல் வீற்றிருக்கிறான். இவனுக்கு நீங்கள் எல்லீரும் மனப்பூர்வமான ஆசீர்வாதங்கள் செய்தருள வேண்டும். இவனை வானவர் மார்க்கண்டன் போலே வாழ்விக்கக் கடவர். இன்று உங்களுக்கெல்லாம் நான் மிகவும் சந்தோஷமான செய்தி ஒன்று சொல்லப் போகிறேன். என் மகன் ஞானியாதலால் பல விஷயங்களில் சாதாரண லௌகிக வழக்கங்களை மீறி நடக்கிறான். அது எனக்குப் பல சமயங்களில் வருத்தம் உண்டாக்குகிறது. எனினும் என் செய்யலாம்? அவன் செய்வதுதான் நியாயமென்று பல முதியோர்களே சொல்லுகின்றனர். நாம் முற்கால விதிகளால் கட்டுப்பட்டிருக்கிறோம். அவன் எதிர்கால நிலை உணர்ந்தவனா கையால், எதிர் காலவிதிகளின்படி நடக்கிறானென்று பண்டிதர்கள் சொல்லுகிறார்கள். திருஷ்டாந்தமாக, எங்கள் குலத்துக்குள்ள பொது வழக்கத்தின்படி இவனுக்கு ஒரு ராஜகுமாரியையே மணம் புரிவிக்க வேண்டுமென்று நான் நிச்சயித்திருந்தேன். இவனோ, நமது நகரத்து வைசியர்களில் மிகக் கீர்த்தி பெற்ற சத்தியராமச் செட்டியின் குமாரியையே மணம் புரிய உடம்படுகிறான். எதிர்கால உலகத்தில் காதல் ஒன்றையன்றி அசாசுவதமான பதவி வேற்றுமைகளைக் கருதி விவாக சம்பந்தங்கள் செய்துகொள்ளப்பட மாட்டாவாம். அதற்கு இவன் தானே ஒரு வழிகாட்டியாக நின்று, அமரபுரத்து அரண்மனையில் பட்ட மஹிஷியாக ஒரு வைசியகுமாரியைப் புகுத்த விரும்புகிறான். என் விருப்பத்தை மாற்றி நான் இவனுடைய கருத்துக்கு இணங்கி விட்டேன்.

அதனுடன், எனக்கு வயதுமுதிர்ந்து விட்டபடியால், இவனுக்கு மகுடம் சூட்டி விட்டு நான் மிஞ்சியுள்ள வாழ்க்கையை ராஜ்யப் பொறுப்புகளின்றி அமைதியுடன் கழிக்க நிச்சயித்திருக்கிறேன்.

மந்திரிகளே, குருக்களே, சேனாதிபதிகளே, நண்பர்களே!

என் மகன் வஜ்ரிக்கும் வஜ்ரலேகைக்கும் விவாகச் சடங்குகள் இந்த வாரத்துக்குள்ளே தொடங்கிவிடும். இனி உங்களுக்கு ராஜா வஜ்ரி, ராணி வஜ்ரலேகை. இந்திரனும் இந்திராணியும் போல் இவ்விருவரும் நீடுழி ஆட்சி புரிய இந்நாடு மிகவும் கீர்த்தியும் சகல நன்மைகளும் பெற்று ஓங்குக!

(வாத்தியகோஷம். வெடிகள் தீர்த்தல் முதலிய ஆரவாரங்கள்.)

-ஸி. சுப்பிரமண்யபாரதியார்

(கலைமகள் , ஜனவரி, 1951, பக். 83-90)
 
 
Thanks : Kaalachuvadu