Monday, December 5, 2016

மூதூர் மொகமட் ராபிக்கு மீண்டும் முதலிடம்!





திருகோணமலை மாவட்ட இலக்கிய கலைப்பெரு விழாவும் பரிசளிப்பும் இன்றைய தினம் பிற்பகலில் திருகோணமலை மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. மாவட்டத்திலுள்ள பிரதேச செயலாளர் பிரிவுகளைச்சேர்ந்த போட்டியாளர்களிடையே பாடசாலை மட்டத்திலும் திறந்த பிரிவிலுமாக நடாத்தப்பட்ட கலை இலக்கியப்போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு சான்றிதழும் புத்தகப்பரிசுகளும் வழங்கப்பட்டன.



ஏற்கனவே திருகோணமலை பிரதேச மட்டத்தில் இவ்வாண்டிற்கான சிறுகதையாக்கப் போட்டியில் (திறந்த பிரிவில்) முதலிடத்தைப் பெற்றிருந்த எனது நண்பரும் ஊக்குவிப்பாளருமான திரு. மூதூர் மொகமட் ராபி மாவட்ட மட்டப்போட்டியிலும் முதலிடத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது

Wednesday, November 23, 2016

'முயல்களும் மோப்ப நாய்களும்'





மூதூர் மொகமட் ராபி எழுதிய சிறுகதைத் தொகுப்பான 'முயல்களும் மோப்ப நாய்களும்' நூலின் அறிமுகவிழா கடந்த 14.11. 2016 திங்கட்கிழமை முழுநிலா நாளில் மாலை 4.00 மணியளவில் வெகுசிறப்பாக நிகழ்ந்தது. 

திருகோணமலையிலிருந்து வெளிவரும் 'நீங்களும் எழுதலாம்' கவிதைச் சிற்றிதழின் வாசக வட்டத்தின் ஏற்பாட்டில் திருகோணமலைநகராட்சி மன்றத்தின் பொதுநூலத்தின் கேட்போர் கூடத்தில் நிகழ்ந்த மேற்படி அறிமுக நிகழ்வுக்கு எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், பாடசாலை அதிபர்கள், விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், வைத்தியர்கள், சட்டத்தரணிகள், அரச ஊழியர்கள் உட்படஏராளமான பார்வையாளர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர்.

 
நிகழ்வை 'நீங்களும் எழுதலாம்' கவிதைச் சிற்றிதழின் ஆசிரியரும் சிறந்த இலக்கிய ஆர்வலருமான திரு. எஸ். ஆர். தனபாலசிங்கம் ஆசிரியர் தலைமை தாங்க வரவேற்புரையை பொதுநூலகத்தின் உதவி நூலகர் திரு.கே வரதகுமார் நிகழ்த்தினார். அவர் தனது உரையில் திருகோணமலை பொதுநூலகம் வெறுமனே நூல்களை இரவல் தருவதும் பின்னர் பெற்றுக்கொள்வதுமான நிறுவனமாக அன்றி இப்பிரதேசத்தின் இலக்கிய முயற்சிகளுக்கு மேலும் உறுதுணையாகச் செயற்படவிருப்பதாகத் தெரிவித்தார்.

நூலின் அறிமுகத்தை நிகழ்த்திய கவிஞர் ஷெல்லிதாசன், மூதூர் மொகமட் ராபியின் இலக்கிய முயற்சிகளைப் பாராட்டிப் பேசினார். 
 

சிறுகதை நூலின் முதற் பிரதியை நூலாசிரியர் வழங்கி வைக்க பிரபல சிரேஷ்ட சட்டத்தரணியும் சிறந்த இலக்கிய ஆர்வலருமான திரு. ஏ.ஜெகசோதி பெற்றுக்கொண்டார். இரண்டாவது பிரதியை தனது பெற்றோர்களும் ஓய்வு பெற்ற அதிபர்களுமான திரு. ஏ.எம் புஹாரி மற்றும் திருமதி அம்ரா புஹாரி ஆகியோருக்கு நூலாசிரியர் வழங்கிக்கௌரவித்தார்.

மேற்படி நூல் மர்ஹும் ஏ. எச். என்சுதீன் அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்யப்பட்டிருந்த காரணத்தால் அன்னாரது இளைய மகளும் கிண்ணியா வைத்தியசாலை ஊழியருமான திருமதி. ரிஸ்னா நஸீருக்கு வழங்கி வைக்கப்பட்டது. சபையோருக்கும் நூலின் பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டன. 

அதனையடுத்து நூலின் விமர்சனத்தைப் புரிவதற்காக திருகோணமலை மாவட்ட நீதிமன்றப் பதிவாளர் திரு. எம். எஸ். எம். நியாஸ், சட்டத்தரணியும் எழுத்தாளருமான திரு. எம். சீ. சபருள்ளாஹ் மற்றும் ஆசிரியை திருமதி. எஸ். சந்திரகலா ஆகியோர் முறையே அடுத்தடுத்து அழைக்கப்பட்டனர்.

திரு. எம். எஸ். எம். நியாஸ் தனது விமர்சனத்தில், மூதூர் மொகமட் ராபி சமகாலப் பிரச்சினைகளின் மீது தனக்குள்ள  சமூகக் கோபத்தை கதைகளில்  காண்பித்திருப்பதாகக் கூறியதோடு  அவற்றை எளிமையாகவும் நுணுக்கமாகவும்  அவர் வடிவமைத்திருக்கும் பாங்கினை சிலாகித்துப் பேசினார். 
 
சட்டத்தரணி திரு. எம் சீ. சபருள்ளா உரையாற்றுகையில், கிரிக்கட் ஆட்டத்தில் தான் ரசிக்கும் இந்திய அதிரடித்துடுப்பாட்ட வீரர் வீரேந்திர  ஷேவாக்கின் அதிரடித் துடுப்பாட்டத்துடன் ராபியின் எழுத்து நடையை ஒப்பிட்டுப்பேசினார். தனக்கு வழங்கப்பட்டுள்ள நேரம் போதாதிருப்பதைக் குறிப்பிட்ட அவர், கையிலெடுத்தால் கீழே வைப்பதற்கு மனமில்லாது  ரசித்துப்படித்து முடிக்கவேண்டும் என்ற ஆவலைத்தூண்டும் வகையில் மொகமட்  ராபியின் கதைகள் இருப்பதாகக்குறிப்பிட்டார். அவர் இந்நூலை மிகவும் ரசித்துப் படித்ததாகவும் அவரின் கதைகள் பற்றி விரைவில் தனது முகநூலில் ஆழமான விமர்சனமொன்றை எழுதவிருப்பதாகவும் கூறினார்.

பெண் எழுத்தாளரான திருகோணமலை தி/மெதடிஸ்த பெண்கள் கல்லூரியின் ஆசிரியை  திருமதி. எஸ். சந்திரகலா, பொதுவாக இலக்கிய நிகழ்வுகளில் பெண்களுக்குரிய வாய்ப்புகள் போதியளவு ஆற்றப்படாததைக் குறிப்பிட்டு இந்நிகழ்வில் ஒரு பெண்ணின் குரல் ஒலிக்கவேண்டும் என்று கருதி தனக்கு வழங்கப்பட்ட சந்தர்ப்பத்திற்காக 'நீங்களும் எழுதலாம்' ஆசிரியர் திரு. தனபாலசிங்கம் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். மொகமட் ராபியின் கதைகளை மிகவும் உணர்பூர்வமாக சிலாகித்துப் பேசினார். குறிப்பாக, கள்ள மௌனங்கள், விசுவரூபம் கதைகளைக் குறித்து சில சமூகத்தினரிடையே காணப்படும்  போலிப்புனிதம் காக்கும் இழிகுணத்தையும் அவற்றை விடுத்து கலந்துபேசி சமூக நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

இறுதியாக, நூலாசிரியரான திரு. எம். பீ. முகம்மது ரஃபி (மூதூர் மொகமட் ராபி) தனது ஏற்புரையில், நூல் வெளியீடுகள் போன்ற இலக்கிய நிகழ்வுகளில் விருப்பத்துடன் கலந்துகொள்வோரின் தொகை அருகிச் செல்லும்போக்கு குறித்துப் பேசினார். இலக்கிய நிகழ்வுகளுக்கு வந்து அமர்ந்திருப்பவர்களின் பெறுமதியான நேரத்தை வீணடிக்கும் அநாவசியமான சொற்பொழிவுகளையும் சம்பிரதாயங்களையும் விடுத்து மேற்படி நிகழ்வுகளை சுவாரசியமானதாகவும் காத்திரமானதாகவும் நடாத்த வேண்டுமென்றும் அவ்வாறு செய்தால்தான்  மறுமுறை அழைக்கும்போது ஆர்வமாக வர எத்தனிப்பார்கள் என்றும் குறிப்பிட்டார்.

அவர் மேலும் பேசுகையில், இளைய தலைமுறையினரிடம் இலக்கிய ஆர்வத்தை ஏற்படுத்துவதில் பாடசாலை ஆசிரியர்கள் குறிப்பாக தமிழ் மொழியை கற்பிக்கும் ஆசிரியர்கள், ஆசிரியைகள் சிறப்பான பங்களிப்பை புரியமுடியும் என்பதோடு இன்றுள்ள கைத்தொலைபேசி முகநூல் போன்ற நவீன சாதனங்கள் மற்றும் சமூகவலைத்தளங்களுக்கூடாகக் கூட அவற்றினை பரந்தளவில் ஆற்றிட முடியும் என்றார்.

இறுதியாக, நன்றியுரையை நிகழ்த்திய சிரேஷ்ட இலக்கிய ஆர்வலரான திரு. வீ.ரீ. நவரெத்தினம் அவர்கள் நிகழ்வுக்கு வருகை தந்தவர்களுக்கும் உதவியோர்களுக்கும் நன்றி தெரிவித்ததுடன் தனது நூல் வெளியீட்டு அனுபவங்களை நகைச்சுவை தொனிக்கப்பேசி அதுவரையில் அமைதியாகவிருந்த சபையோரை சிரிப்பிலாழ்த்தி சிந்திக்க வைத்ததோடு நூல் அறிமுக நிகழ்வு இனிதே நிறைவடைந்தது.
 
-Omar Mukthar

 
 

Friday, June 3, 2016

நூல் விமர்சனம்:


 மூதூர் மொகமட் ராபி யின்
'இலுப்பம் பூக்கள்' :


வாசலெங்கும் நிறைந்து போய்க் கிடக்கின்ற வாசனைப் பூக்கள்:






1990களில் 'நிழலாக சில நிஜங்கள்' கதையோடு தனது சிறுகதைப் பயணத்தை ஆரம்பித்தாலும், 2012ம் ஆண்டுக்குப் பின்னரேயே கதைகள் எழுதுவதற்கான ஊக்கிகள் தனது மூளையின் நியுரோன்களை பிசாசு கணங்களின் நகங்களைக்; கொண்டு பிறாண்டியது என்று சொல்லியவாறு, 21 வருட காலத்துள் பத்தொன்பது கதைகளையே எழுத முடிந்தது என்றாலும் 2012க்குப்பின்னர் கதைகளின் வளர்ச்சி நான்காம் கியரில் கார்ப்பெட் வீதிகளில் வழுக்கிக் கொண்டு செல்லுகின்றது என்று தனது கதைகளின்; அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுகின்ற மூதூர் மொகமட் ராபியின் பதினைந்து கதைகள் அடங்கிய 'இலுப்பம் பூக்கள்' 2014ம் ஆண்டு அவரது முதற் தொகுதியாக வெளிவந்தது.


சம கால இலங்கையின் சிறுகதை இலக்கியத்தில் மொகமட் ராபியின் எழுத்துகளுக்கு தனி வேறான இட ஒதுக்கீடு செய்வதற்கான தகுதிகளை அவரது கதைகள் சொல்லிக் கொண்டிருக்கின்றன என்பதனை அவரது கதைகளை தொடர்ந்து வாசித்து வருகின்றவன் என்ற காரணத்தினாலும், இந்தத் தொகுதியின் கதைகளை ஒருசேர வாசித்த மனோநிலையிலும் குறிப்பிடுவதில் குறற்மில்லையெனக் கருதுகின்றேன். இவரது கதை உலகம் வேறு. அதன் மாந்தர்கள் வேறு. புதிதாக யோசிக்கின்ற 'அன்ட்ராய்ட்' சிந்தனையாளர்.


மூதூரின் வ. அ. இராசரத்தினம் தொடக்கம், வரால் மீன்கள் தந்த அமானுல்லா மற்றும் ஜலசமாதி தந்த உபைதுல்லா ஆகியோரின் பட்டியலில் தன்னை இணைத்துக் கொள்ளுகின்ற மொகமட் ராபி அவர்களிடமிருந்து தனது மாறுபட்ட கதைகளுக்கூடாக 'இவன் வேற மாதிரி' என்று புதிய கதைகளோடும் புதிய கதைக்கருக்களோடும் வெளிப்படுகின்றார்.


முன்னையவர்கள் தாம் சார்ந்த கடலையும் கடல் சார்ந்த மாந்தரையும் அவர்களின் எல்லைகள் கடந்த துயரங்களையும், விளிம்பு நிலை மக்களின் வலி பொழிகின்ற வீக்கங்களையும், வறுமைக்கு வாழ்க்கைப்பட்ட வயிற்றுப் பிழைப்புக்காரர்களையும் தமது கதைகளில் அழைத்து வந்து அடங்காத அலைகளூடாக கொந்தளித்துக் கொண்டிருக்கின்ற போது, மொகமட் ராபி தனது கதைக் களத்தினை வேறு திசைகளிலிருந்தும் வேறு புலங்களிலிருந்தும் வாங்கிக் கொண்டு வந்து புதிய கோணங்களில் தன்னை புகுத்திக் கொள்ளுகின்றார்.


ஓர் ஆங்கில ஆசிரியராக பணி புரிகின்ற மொகமட் ராபி இந்த டிஜிட்டல் நூற்றாண்டு பற்றி யோசித்து நோவாக் கலங்களில் காலங்களை கடந்து செல்ல ஆசைப்படுவதும், தன்னைச் சுற்றியுள்ள சூழலின் வெளிகளில் நிகழ்ந்து கொண்டிருக்கின்ற உண்மைகளையும் யதார்த்தங்களையும் ரியலிச எல்லைக்குள் கொண்டு வரமுற்படுவதனையும் அவரது சிறுகதைகளில் காண முடிகின்றது.


தனது அனுபவங்களையும், அனுபவமல்லாத ஆனால் யதார்த்தத்துக்கு நெருக்கமானதையும், நேரடியாக தன்னுள் ஒளிபரப்பாகின்ற சம்பவங்களின் தொகுப்புகளையும் வழமையாக கைக்கொள்ளப்படும் பாணியிலிருந்தும், வார்ததைகளின் பிரயோகங்களிலிருந்தும் மாறுபட்டு வேறோர் தொனியில் தொனிக்க முற்படுவதனை அவரது 'இலுப்பம் பூக்கள்' தொகுதியில் கண்டு கொள்கின்றேன்.

இந்தத் தொகுதியை முற்றிலுமாக வாசித்து முடிக்கின்ற போது ஒன்று மட்டும் மிகத் தெளிவாகும். மொகமட் ராபி வழமையான கதை சொல்லுகின்ற சிறுகதைப் புள்ளிக்குள்ளிருந்து கொண்டு, அதன் மரபுக்குள் வசித்துக் கொண்டு சொல்லும் விதத்தையும் சொல்லும் மொழியையும் மாற்றியிருக்கின்றார் என்பதனை கண்டு கொள்ளலாம். பல நல்ல கதையாளர்கள் இப்படி செய்திருப்பது நாம் அறிந்ததே. அதாவது அடிப்படைகளை மாற்றாமல் விதிகளுடைத்தல்.


இந்தத் தொகுதியில் உள்ள சில கதைகள் அவரது கல்விச் சூழலையும், அந்த சூழலின் அனக்கொண்டா விஷத்தில் ஊறிப்போன அரசகல்வி நிறுவனங்களின் அழுக்கு உடல்களையும் அம்மணப்படுத்துகின்றன. மிக நீண்ட காலமாக ஆசிரியப் பணியில் உள்ள மொகமட் ராபி தான் சந்தித்த தான் அனுபவித்த தான் துயருற்ற, தான் விரக்தித்த அந்தக்கல்விச் சூழலை தனது கதைக்குள் மிக லாவகமாகக் கொண்டு வந்து விடுகின்றபோது அரச கல்விப்புலத்தின் அழுக்குகள் எமது முகத்தில் கருமை நிறத்தில் வந்து குந்திக்கொள்ளுகின்றன.


இந்தத் தொகுதியின் நான்கு கதைகள் கல்விப்புலத்தினை அடிப்படையாகக் கொண்ட அதேவேளை பெரும்பாலான கதைகள் பிரச்சினைகள் பற்றி பேசுவதனையே பிரதானமாகக் கொண்டுள்ளதனையும் அவதானிக்கலாம். 1. சம்பள நிலுவை, 2. இலுப்பம் பூக்கள், 3. நான் எனும் நீ, மற்றும் 4. ஒரு கதையின் கதை ஆகிய நான்கு கதைகளும் தான் சார்ந்த கல்விப் பிரிவின் கேவலங்களையும் அவலங்களையும் கதையாடல் செய்கின்றன. 'சம்பள நிலுவை'யில் தனது சம்பள நிலுவைக் காசோலையை எடுத்துக் கொள்வதற்காக ஓர் அப்பாவி ஆசிரியன் வலயக் கல்விப் பணிமனையில் படுகின்ற பாடும், அந்தரமும் யதார்த்தத்தின் உச்சம். இப்போதெல்லாம் கல்விப் பணிமனைகள் அரசியலின் அனுசரணையில் அநியாயக்கார கும்பலினால் ஆக்கிரமிக்கப்பட்டுக் கிடக்கின்றன. பாவம் இலட்சிய தாகமுள்ள ஆசிரிய சமூகம்.


'நான் எனும் நீ' யில் பாடசாலையை அலிபாபா குகையாக மாற்றிக்கொண்டு திருட்டுப் புரிகின்ற அதிபரின் கொள்ளை பிஸினஸ் கமிராவில் பதிவாகி விடுகின்றபோது அதிலிருந்து தப்பிக்கொள்வதற்காக அப்பாவி ஆசிரியரின் மீது கருணையே இல்லாமல் பாலியல் குறற்றசாட்டுப்பத்திரம் தயாரிக்கின்ற அசிங்கம் பிடித்த அதிபரினால் அழுத்தம்கூடி இறந்து போகின்ற அந்த அப்பாவி கௌரவ ஆசிரியனின் மரணத்தில் எவ்வளவோ உண்மைகளும் எவ்வளவோ கொடுமைகளும் கண்ணுக்குத் தெரியாத வைரசுகளாக மாறி காயப்படுத்தி விடுகின்றன மனசை.


'இலுப்பம் பூக்கள்' மற்றும் 'ஒரு கதையின் கதை' இரண்டும் ஒரேநேர் கோட்டில் பயணிக்கின்ற ரயில் பெட்டிக் கதைகள். ஒரே பாதை இன்டர் ரிலேட்டட் கதைகள். இரு வேறு கதைகள். இரு வேறு சம்பவங்கள். ஒரே கதைக் களம்.. அதே கதா பாத்திரங்கள். இரண்டையும் சேர்த்து வாசிக்கின்ற போது இரண்டு கதைகளுக்குள்ளும் ஒரு பொதுப்பண்பினை உணர்ந்து கொள்ளலாம். இரண்டு கதைகளுக்குமான நடுப்புள்ளியில் கதாசிரியரே நின்று கொண்டிருக்கின்றார் என்பதனை பத்துப் பேரை சாட்சிக்கு அழைத்து நிரூபிக்க வேண்டிய தேவை இல்லை என்பது என் வாதம்.


நன்றாகப் படிப்பிக்கின்ற ஆசிரியர்களுக்கு நடக்கின்ற கொடுமைகளையும், ஒன்றுக்குக்கும் உதவாத பேர்வழிகளின் ஒதுங்குமிடமாய் வலயக் கல்விப் பணிமனை மாறிவிட்டிருக்கின்ற மலட்டுத்தனத்தினையும், இஸ்ரேலின் அஜென்டாவின் கீழ் செயலாற்றுகின்ற ஐக்கிய நாடுகள் சபை போல வலயக்கல்விப் பணிப்பாளர் சிலரது அஜென்டாவின் கீழ் வேலை செய்கின்ற கேவலத்தையும், கல்வி அதிகாரிகள் என்ற பெயரில் நல்ல ஆசிரியர்களை ஃபுட் போலாக்கிக் கல்வியின் மீது தாம் நினைத்ததுபோல ஆடிக் கொண்டிருக்கும் ஷைத்தான்களையும் பற்றி மொகமட் ராபி இந்த இரண்டு கதைகiளிலும் சொல்லும் போது நேரடியாக பட்ட ஒருவனால்தான் இந்த யதார்த்தம் வெளி வரும் என்று எனது உள் மனசு உரக்கச் சொல்லுகின்றது.


தவிரவும் இந்த இரண்டு கதைகளையும் அவர் தைரியமாக துணிகரமாக தான் சார்ந்த துறையின் அசிங்கங்களினை வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருப்பது ஓர் எழுத்துக்காரனின் நேர்மையை மதிப்பீடு செய்ய உதவுகின்றது. குறித்த இந்த நான்கு கல்வி சார் கதைகளையும் படிக்கின்ற போது கிண்ணியாவின் கல்வி வலயமும் அதில் எந்த வித வேலையுமில்லாமல் மாதாந்தம் சம்பளம் எடுத்துக் கொண்டிருக்கின்றவர்கள் பற்றியும், அரசியல் மற்றும் தகுதியில்லாத அதிபர்களால் சாக்கடையாகிக் கொண்டிருக்கின்ற பாடசாலைகளும் , ஆசிரிய பயிற்சி நிலையமும் எனக்குள் வந்து கதறியழுகின்ற காட்சியை தவிர்க்க முடியமாற் போய் விடுகின்றன.


பலிக்கடா, என்ன விலை அழகே, மியூறியன் கிறேட்டர் ஆகிய மூன்று கதைகளும் சயன்ஸ் ஃபிக்ஷன்ஸ் ரகம். இலங்கையின் சிறுகதைத் துறையினைப் பொறுத்த வரை விஞ்ஞானப் புனை கதைகள் என்பது எப்போதுமே வெறுமை தட்டிப்போய்க்கிடக்கின்றன. யாரும் விஞ்ஞானப் புனை கதைகள் எழுதுவதற்கு முன் வருவதுமில்லை அதற்காக ஆகக் குறைந்தது முனைவதுமில்லை. விஞ்ஞானப் புனைகதைகள் தொடர்பில் அறியாமையும் தெரியாமையும் அதனை எழுதுவது தொடர்பிலான அச்சமுமே எமது எழுத்தாளப் பெருந்தகைகளுக்கு மத்தியில் இன்னும் இருந்து கொண்டிருக்கின்றது. அவ்வப்போது சில விஞ்ஞானப் புனை கதைகளை வாசிக்கின்ற அபூர்வங்கள் மட்டுமே இங்கே நமக்கு கிடைக்கின்ற அனுபவங்கள். தீரன் நௌஷாத் தனது 'வெள்ளி விரல்' தொகுதியில் ஒரு
விஞ்ஞானப் புனைகதை எழுதியிருக்கின்றார்.


ஆனால் மொகமட் ராபி இந்தத் தொகுதியில் மூன்று சயன்ஸ் ஃபிக்ஷன்களை தந்திருக்கின்றார். 'பலிக்கடா' லைக்கா நாய் பற்றிய விண்வெளிக்கதை. வாசிக்கின்ற போது சற்று குழப்பத்தை உண்டு பண்ணி விடுகின்றது. 'என்ன விலை அழகே' சயன்ஸ் ஃபிக்ஷனுக்கு நெருக்கமானது. முற்று முழுதான சயன்ஸ் ஃபிக்ஷனல்ல.


'மியூறியன் கிறேட்டர்' முழுதான சயன்ஸ் ஃபிக்ஷனின் அனுபவத்தினை தந்து விடுகின்ற விஞ்ஞான வித்தை. ஆர்தர் சீ கிளார்க் தனமான இந்தக் கதையினை வாசிக்கின்ற போது சுஜாதாவும், ஆர்னிக்கா நாசரும் நமது வாசலுக்கு வந்து சுகம் விசாரித்து விட்டுப் செல்கின்றனர்.


எனினும் மொகமட் ராபியின் இந்தக் கதை சயன்ஸ் ஃபிக்ஷனில் தனியாகத் தெரிகின்றது. நிறைய மெனக்கெட்டிருக்கின்றார் இந்தக் கதைக்காக என்பது மட்டும் புரிகின்றது. புனை கதை என்றாலும் வெறுமனே கற்பனையில் மட்டும் விஞ்ஞானத்தை சொல்லப் போனால் அந்தக் கதை அம்புலிமாமாக் கதையாகி விடுகின்ற ஆபத்துகள் நிறையவே இருக்கின்றன. அதனால்தான் மொகமட் ராபி இந்தக் கதைக்காக நிறைய பாடு பட்டிருக்கின்றார். நிறையத் தேடியிருக்கின்றார். அவரது கதையில் வந்து விழுகின்ற விஞ்ஞான அரும் பதங்கள் அவர் இதற்காக ரெஃபரன்சுக்காக புத்தகங்கள் புரட்டி எடுத்திருக்கின்றார் என்பதனைக் காட்டுகின்றது.


'எனது பெயர் இன்சாப்' கதை தனியே சயன்ஸ் ஃபிக்ஷன் என்ற வரையறைக்குள் கொண்டு வரமுடியாது. இன்ஃபோர்மேட்டிவ் ப்ளஸ் சயன்ஸ் ரியலிசக் கதை இது. ஃபிக்ஷனைத் தாண்டி பூமியின் கிரேவிட்டி சம்பந்தமான விஞ்ஞான எடுகோளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்தக் கதை ஃபிக்ஷனைத் தள்ளி விட்டு ரியலிசத்துக்குள் வந்து நிற்கின்றது. அதனால்தான் ரியலிசம் கலந்த ஃபிக்ஷன் என்று இந்தக் கதையினை மதிப்பீடு செய்ய முடிகின்றது.


இந்தத் தொகுதியில் என்னை பிரமிக்க வைத்த கதைகளுள் ஒன்று 'கரைகள் தேடும் ஓடங்கள்'. இலங்கையின் தமிழ்ச் சிறுகதைப்பரப்பில் பேசப்படாமலே பல சங்கதிகள் மூலைக்குள் குந்திக் கொண்டு அழுதுகொண்டிருக்கின்றன. வழமையான பல்லவிகளோடு (சில விதி விலக்குகள் தவிர) தமது கதைகளுக்கு தாளக் கட்டுகளுக்குள் மெட்டமைத்துக் கொண்டு கட்டுகளுக்குள் தம்மை கடிவாளமிடுகின்ற இலங்கையின் தமிழ் சிறுகதைப் பரப்பில் நானறிந்த வரை யாரும் தொடாத ஒரு விடயத்தை மொகமட் ராபி தொட்டிருக்கின்றார்.


திருநங்கையாகின்ற அல்லது அரவாணியாகின்ற (Trans Gender) ஒருவனின் அல்லது ஒருத்தியின் மனோநிலைகளில் சதாவும் கத்தி வீசிக் கொஞ்சம் கொஞ்சமாய் கொன்று கொண்டிருக்கின்ற எமது சமூகக் கட்டமைப்பில் சொந்த ரத்தங்களே புரிந்து கொள்ளாத நிலையில் அணைப்பதற்கும் அறுதல் தருவதற்குமென ஒரு நபர் வந்து விடுகின்ற போது ஏற்படுகின்ற ஆறுதலையும், வாழ்வின் மீதான பிடிப்பினையும் மொகமட் ராபி சொல்லுகின்ற விதம் ரசனைகளில் ஏலக்காய் வாசம்.


இந்தத் தொகுதியில் கரைகள் தேடும் ஓடங்களை மிகக் கடுமையாக ரசித்தேன். கதையின் முடிவில் துயரத்தை அள்ளி எமது கைகளில் தந்து விட்டுச் செல்லுகின்ற மொகமட் ராபி அதனூடாக தனது கதையினை வெற்றி பெறச் செய்வதோடு அழவும் வைத்து விடுகின்றார். இலங்கையில் யாரும் பேசாத ஒரு சங்கதியை எடுத்து கதையாக்கித் தந்த மொகமட் ராபியின் மனோ நிலையில் பரவுகின்ற வித்தியாசத்தை உணருகின்றேன். இந்தக் கதையை சில இடங்களில் நக்கலும் நையாண்டியுமாக, சில இடங்களில் சீரியசாக என்று கலந்து சமூகம் ஒதுக்கித் தள்ளுகின்ற ஒரு திருநங்கைக்கு வாழ்வின் மீது பிடிப்பை ஏற்படுத்துகின்ற கதாபாத்திரத்தின் மீது பெயர் சொல்ல முடியாத நேசத்தை பொருத்தி விடுகின்றார்.


'வேடிக்கை மனிதர்கள்' தாடிகளையும் ஜிப்பாக்களையும் தஸ்பீஹ் மணிகளையும் வைத்துக்கொண்டு மார்க்கத்தின் மரியாதைக்குரிய மனிதர்களாக மாறிவிடுகின்ற வெளி வேஷங்களை துகிலுரிகின்ற கதை. வெளி வேஷங்களுக்கே மரியாதை கொடுத்து பழக்கப்பட்டு விட்ட நமது சமூகத்தின் மார்க்கத்தின் மீதான பார்வையில் உள்ள கோளாறினை கேள்விக்குள்ளாக்குவதோடு, ஆன்மீகம் என்ற சொல்லுக்கு தப்லீக் சமூகம் கொடுத்துள்ள கருத்தினை தகர்த்தெறிகின்றார்.


வெறுமனே {ஹகுகுல்லாவுக்குள் மட்டும் தம்மை சுருக்கிக் கொண்டு, {ஹக்குக்குல் இபாதாவான சமூக வாழ்வின் அத்தியாவசியங்களிலிருந்து நைசாக கழன்று கொண்டவர்கள் மீது சாட்டை வீசுகின்ற மொகமட் ராபி, இந்தக் கதையின் முடிவில் 'அடடா மிச்சம் நன்றி அமீர் சாப் உங்களுக்கு பெரிய மனசு. ஆனால் பாருங்க நான் உங்கட சீட்ல இருக்குறத விட இப்படியே நின்றுட்டு வரத்தான் விரும்புறேன். தேங்க்ஸ்' என்று கூறி விட்டு சற்று முன்னே தள்ளிப் போய் சாரதிக்குப் பக்கத்திலே நின்று கொண்டான், இம்தியாஸ் எனப்படும் முன்னால் சரவணபவன்' என்று கதையை முடிக்கின்ற போது மொகமட் ராபி ஒட்டு மொத்தக் கதையையும் மீண்டும் மனசுக்குள் ரயிலோட்டிப் பார்க்கின்றார்.


மறைந்த மாபெரும் இஸ்லாமிய அறிஞரும், மேதையுமான அபுல் ஹசன் அலி நத்வி சொல்வது போல 'இலங்கை போன்று முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழ்கின்ற நாடுகளில் இஸ்லாத்தை சொல்லத் தேவையில்லை நீங்கள். மாற்றாக மார்க்கம் சொல்லுகின்ற ஒரு முஸ்லிமாக வாழ்ந்து காட்டுங்கள். அதுவே மிகப் பெரிய தஃவா' என்பது இந்தக் கதையை வாசித்த போது என்னை சுய பரிசோதனை செய்து பார்த்துக்கொண்டேன்.


உண்மைதான் தாடிகளுக்கும் நீண்ட ஜிப்பாக்களுக்கும் பள்ளி இபாதாக்களுக்கும் மட்டும் முக்கியத்துவம் கொடுத்து சமூக வாழ்வில் பேணப்பட வேண்டிய மார்க்கக் கடமைகளை மறந்து போய்விட்ட எமது சமூகத்தின் வெளிவேஷங்கள் களையப்பட வேண்டுமென்ற செய்தியினை சொல்லுகின்ற இந்தக் கதை போலிகளின் மீதான நேர்மையான விமர்சனம்.


'மணல் தீவுகள்' கதை நவீன உலகின் செல் ஃபோன் கலாசாரத்தால் சீரழிந்து கொண்டிருக்கின்ற இளவட்டங்கள் பற்றிய கதை. கதையின் கரு சின்னதென்றாலும் ஒரு திரைக்கதை போல மொகமட் ராபி விரித்துச் செல்லுகின்ற அழகு வாசிக்க வைக்கின்றது. பல மரணங்கங்களுக்கும், தற்கொலைகளுக்கும் காரணமாக இருக்கின்ற கைபேசிக் கலாச்சாரத்தின் கொடூரத்தை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக மொகமட் ராபி பதியத் தவறி விட்டாரோ என்று தோன்றுகின்றது.


'சிலந்திக் கூடுகள்' கதை காதலின் துரோகம் பற்றி சொல்லுகின்ற காலாகாலத்துக்குமான கதை என்றாலும் கதையை ஜவ்வு மாதிரி இழுக்காமல் அதன் போக்கிலே விட்டு சம்பவங்களை கோர்வையாக்கி மொகமட் ராபி தருகின்ற போது வாசிப்பானுபவம் காதலின் துரோகத்தை நொந்து கொண்டாலும், இரு வேறு பட்ட காதல் கதைகளை குழப்பி இரண்டாவது காதல் கதையை அழுத்தமாக்கும் முயற்சியில் மொகமட் ராபி இறங்கியிருக்கின்றார்.


இரண்டாவது காதலுக்கு அழுத்தம் கொடுக்கின்ற ராபி, அதனையே மையக் கருத்தாக எடுத்திருந்தால் முதற் காதல் கதை அநாவசியமானது. முதல் காதல் கதை வழமையான மித்திரன் அல்லது ராணி இதழ்க் கதை வடிவில் சென்று இடை வேளைக்குப் பின்னர் இரண்டாம் காதல் கதை அழுத்தத்தை ஆக்கிரமித்துக் கொள்கின்றது. இந்த இடத்தில் இரண்டாம் காதலையே ஒரு காதலாக்கி அதன் துரோகத்தை பதிவு செய்திருந்தால் சுப்ரமணியபுரம் படத்தின் துரோகங்களை பார்த்த திருப்தி ஏற்பட்டிருக்கும். இந்தக் கதை அதனை செய்யத் தவறி விட்டது ராபி.


'விழியில் வடியும் உதிரம்' கதை இந்த் தொகுதியின் இன்னுமொரு நட்சத்திரக் கதை. இந்தத் தொகுதியின் போர்க்காலக் கதை இது மட்டுமே. மரத்தால் விழுந்த ஒரு தமிழ் இளைஞனை மாடு மிதித்து அப்புறம் ஆர்மிக்காரன் தனது சூக்களால் மிதித்து என்று செல்லுகின்ற கதையில் மனித நேயத்துக்கும் போருக்கும் சம்பந்தமில்லை என்று சப்தமிட்டு அழுகின்றார் மொகமட் ராபி.

ரயிலில் சந்திக்கின்ற பார்த்தீபன் எனும் தனது உயிரை பணயம் வைத்து தனது பேர்சை மீட்டுத்தந்து கொழும்பு செல்லுகின்ற அந்த புகை வண்டியில் அந்த இளைஞனை புலி என்று ஆர்மிக்காரன் பிடித்துச் செல்லும் போது அவன் அவனது தாய் கதறுகின்ற அலறலை கேட்கத்தான் முடிகின்றது. எதுவும் செய்ய முடியாத கையறு நிலையை உருவாக்கி விட்ட யுத்தத்தின் மீது ஏற்படுகின்ற வெறுப்பும் விரக்தியும் ஆழம் காண முடியா சமுத்திரத்தைப் போல பரந்து விரிகின்றது என்பதனை சொல்லுகின்ற இந்தக் கதை மொகமட் ராபிக்கு பெயர் வாங்கிக் கொடுக்கக் கூடிய கதை. ஓட்டமாவடி அரபாத் மற்றும் தீரன் நௌஷாத் போன்றோர் போர்க்கால கதை சொல்லிகளாக இருக்கின்றார்கள். மொகமட் ராபியின் இந்த ஒற்றைக் கதையும் அதற்குள் அடங்கும்.


'சுற்றுலா' கதையில் மூதூர் போன்ற முஸ்லிம் கிராமங்களில் காவாலிகள் கலாச்சாரத்தின் காவலர்களாக மாறி விடுவதனையும், விளிம்பு நிலைப் பெண்கள் மீதான சமூகத்தின் அடக்கு முறையையும், சுய நலத்தோடு சதாவும் இயங்கிக் கொண்டிருக்கின்ற பச்சோந்திகளையும், தற்போது ஓரளவுக்கேனும் அந்த பெண்ணடிமைத்தனமும் பெண் பற்றிய பிரக்ஞையும் மாறி இருக்கின்றது என்று கதையை நகர்த்தும் மொகமட் ராபி வெறுமனே சிறு உரையாடல்கள் மற்றும் ஓரிரு ஃ;ப்ளஷ் பெக்குகளோடு கதையை முடித்து விடுவது ஏனோ மொகமட் ராபி சொல்ல வந்த மையக் கருத்தை விட்டு விலகி நிற்கின்றதோ என்ற சந்தேகத்தை எழுப்புகின்றது.


'கரையொதுங்கும் முதலைகள்' உரையாடல்கள் மூலம் வெள்ள நிவாரணங்களிலும் இதர அனர்த்த நிவாரணங்களிலும் ஊரில் அரச அதிகாரிகளால் நடாத்தப்படுகின்ற லஞ்ச ஊழல்கள் பற்றிய கதை. வெறுமனே எக்கச்சக்க உரையாடல்களோடு கதை நகருகையில் சற்று அயர்ச்சியினைத் தந்தாலும் கதையின் முடிவில் ஒரு ஆறுதல் பெருமூச்சுக்கு அபயமளிக்கின்றார் மொகமட் ராபி.


ஒட்டு மொத்தத்தில் மொகமட் ராபியின் இலுப்பம் பூக்கள் கனதியான கதைகளின் நவீன அல்பம். பெரும்பாலான கதைகளில் தன்னை ஒரு புதிய கதை சொல்லியாகக் காட்டுகின்ற மொகமட் ராபி, மூதூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர், அங்கு வாழ்ந்தவர் என்றாலும் போரின் எல்லாவித துயரப் பாடல்களையும் கேட்டு விட்ட மூதூர் மண்ணையும் மூதூர் மக்களையும் ஏன் இவர் தனது கதைகளுக்கூடாக பதிவு செய்யாமலே போய் விட்டார் என்பதில் எனக்கு வருத்தமும் கவலையும் இருக்கின்றது. அதனைத் தாண்டி இலங்கையின் சிறுகதைப் பரப்பில் ஒரு பேசப்படக்கூடிய காத்திரமான கதைத் தொகுதியை மொகமட் ராபி இலுப்பம் பூக்களாக தந்திருக்கின்றார் என்பதனை ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.


இலுப்பம் பூக்கள் வாசித்து முடித்த பின்னரும் மனசுக்குள் இறைந்தே கிடக்கின்றது.

-கிண்ணியா சபருள்ளா
2016-06-03

Thursday, March 24, 2016

சிறுகதை: உபச்சாரம்











தொன்றும் வழக்கமான விஷயமல்ல. ராகுலனை செஃப்பே(முதலாளி) வலியக்கூப்பிட்டு
“உனக்கின்னும் ஒரு கிழமை ஊர்லாப்(விடுமுறை) இருக்கு......... மேலதிமாய் இன்னும் ஒரு கிழமை தாறன்....... இந்த மாதம் நீ; வெளியில எங்காவது போக விரும்பினால் போய்வரலாம்............ ”என்றான்.

“ஓ........ஜா.....!”

மனதுள் சந்தோஷப்பனி தூவ அதைத்தாங்கமுடியாத தவிப்புடன் ராகுலன் விசிலும் வாயுமாய் வீடுவந்து சேர்ந்தான.; இரவுமுழுதும் மனைவி லதாவுடன் பிரான்ஸ{க்குப் போவதா, இல்லை சுவிஸ{க்குப் போவதா என விவாதித்தும் ஒரு தீர்மானத்திற்கும் வரமுடியவில்லை. சுவிஸில் லதாவின் அண்ணன் குடும்பமிருக்கிறது. பிரான்ஸிலோ ராகுலனுக்கு உறவுகள் ஏராளம்.
கடைசியில் என்றும் போல் லதாவே வென்றுவிட எண்ணிறந்த பலகாரவகைகளாலும,; அண்ணனின் குழந்தை மயூரனுக்கு வாங்கிய ஏராளம் பரிசுப்பொருட்களாலும் டிக்கி நிரம்பி வழியவழி;ய அவர்களது கார் அஷ்டமி,நவமி, மரணயோகம், கரிநாள் தவிர்த்த ஓர் நல்லோரையில் ஷ_ரிச் நோக்கிக் கோலாகலமாய் புறப்பட்டது.

எட்டு மணிநேரச்சவாரிக்களைப்போடு ஷ_ரிச்சில் அண்ணன் வீட்டுவாசலை அடைந்தும் உள்ளே அடிஎடுத்து வைக்க மேலும் நாலு மணிநேரம் நற்றவமியற்ற வேண்டியிருக்கும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அண்ணனும் அண்ணியும் வேலைக்குப் போனதாக ஏப்றன் கட்டிக்கொண்டு கண்ணாடி ஜன்னல்கதவுகளைத் துடைத்துக்கொண்டு நின்ற அயல்வீட்டுக்காரி செப்பினாள்.

“அப்போ அவர்கள் பேபி....? ”

“எங்காவது ஹோர்ட்டில் (குழந்தைகள் பராமரிப்பகம்) விட்டிருக்கலாம்!.”
இவர்கள் நிலமையை அறிந்தும் சுவிஸ்க்காரி அந்நியரை அதுவும் கறுத்த வெளிநாட்டுக்காரரை தன் வீட்டுக்குள் அழைத்து உட்காருங்கோ என்று உபசரித்துவிடுவாளா என்ன.......
தன்பாட்டுக்குக் கதவைச்சாத்திக்கொண்டு உள்ளே போனாள்.

அண்ணியும் வேலைக்குப்போய்விடுவாள்...... பகலில் யாருமிருக்கமாட்டோம்
என்பதை முதலி;லேயே சொல்லித்தொலைத்திருந்தால்....... இரவு வந்துசேரும்படியாகப் புறப்பட்டிருக்கலாம். இப்படிக் கைக்குழந்தையுடன் தெருத்தூங்கவேண்டியிருந்திராது. “சுவிஸ{க்குவருகிறோம்.” என்று ரெலிபோன் பண்ணியபோதே அண்ணன் உள்ளுக்கிழுத்தது ஏனென்று இப்N;பாதான் லதாவுக்கு மெல்ல ஓடி வெளித்தது. எனினும் ராகுலனை மேலும் குழப்பவேண்டாமேயென்று சமர்த்தாயிருந்தாள்.
ராகுலன் லதாவைக் கல்யாணம் கட்டுவதற்கு முன் அவனை ஷ_ரிச் ரெயில்நிலையத்துக்கே வந்து காத்துக்கிடந்து வார்த்தைக்கு வார்த்தை “அத்தான்.........அத்தான்.........” என்று அன்பொழுக அழைத்து நிலபாவாடை விரிக்காத குறையாக அழைத்துப்போனதும் இN;த மைத்துனன்தான்.

பயணத்திற்கான ஏற்பாடுகளைக் கவனித்ததில் முதலிரண்டுநாளும் இருவருக்குமே சரியான தூக்கமில்லை. பயணத்தின்போது உட்கார்ந்தது போதாதென்று மேலும் தொடர்ந்து காரில் உட்கார்ந்திருக்;க இருக்க முதுகுத்தண்டுவடம் ஜிவ்ஜிவ்வென்றுவலித்தது.
கொஞ்சம் நடந்து திரிந்தால் நல்லாயிருக்கும் போலிருந்தது. ஆனாலும் களைப்பும் அசதியும் அனுமதிப்பதாயில்லை.
குளிர்வேறு. காரைச்சூடுபண்ண அடிக்கடி ஸ்ரார்ட் பண்ணவேண்டியிருந்தது.
உடம்பைக்கொண்டுபோய் கட்டிலில் எப்போதான் எறிவோம் என்றிருந்தது.
அவர்கள் எப்போதுதான் வருவார்கள்.......... இது எப்போசாத்தியமாகும் என்று தெரியாமல் வெட்டிக்கு வீதியில் காத்திருப்பது இரத்தஅழுத்தத்தை உச்சத்திற்குக்கொண்டுபோக குழந்தைவேறு பசியெடுத்து அலறத்தொடங்கினாள். அவளுக்குப் பால் கரைக்க வேண்டிய வெந்நீர் வேறு தீர்ந்துவிட்டிருந்தது.
ஒரு ரெஸ்ரோறன்டைத் தேடிப்போய் கேட்;டபோது அவன் உள்ளே பைப்பில் பிடித்திருக்கவேணும் “ வெந்நீர் ” என்று சொல்லிக்கொண்டு வந்து கொடுத்தான். அச்சூட்டில் மா கட்டிபட்டுக் கரைய மறுத்தது.
“ வேறேதாவது கடையில கேட்டுப்பார்ப்பமே..... ” என்று காரைக்கிளம்பவும் ஒருவாறாக விருந்தோம்புவார் காரும் வந்து லான்ட் பண்ணியது. ”

இவ்வளவு நேரம் தெருவில் காக்கவைத்ததிற்காக ஒரு “சொறி”யாவது சொல்லவேணுமே...... ஊஹ_ம்! “ இத்தனை மணிக்கு வந்துசேர்வோம் என்று உறுதியாக முன்பே சொல்லாதது உங்களது தப்புத்தான் ” என்றார்கள்.
அதையிட்டு ஒருவிவாதம் நடத்த அவர்களிடம் மேலும் சக்தியில்லை. மௌனம் காத்தனர்.
வழியில் சாப்பிடுவதற்காகப் பண்ணிக் கொண்டுவந்த சான்ட்விச்சுகள் நிறையவே எஞ்சிக்கிடந்தன. அவை எல்லோருக்கும் இரவுச்சாப்பாட்டிற்குப் போதுமானதாக இருந்தன.

லதா எடுத்துச்சென்ற விளையாட்டுச்சாமான்கள், உடுப்புகள், பட்சணங்கள் அண்ணாவின் குழந்தை மயூரனை கவர்ந்துவிட அவளுடன் ஏதோ பலகாலம் பழகியவன் ‘அத்தே அத்தே’ என்று இழைந்தான்.

மறுநாள் காலை அண்ணன் வேலைக்கப்புறப்பட தானும் வெளிக்கிட்டுக்கொண்டு வந்த அண்ணியார் சுகுணா லதாவுக்குச் சொன்னாள்:
“ நானும் ஓரிடத்தை போகவேணும்...... வரக்கொஞ்சம் செல்லும் செல்லும். ”
ஓரிடத்துக்கு என்றால்...... “அதைப்பற்றி மேலே கேளாதே” என்பதுதான் அதற்குரிய உளவியல். இது லதா அறியாததா?
அவர்கள் குழந்தை மயூரனையும் இழுத்து வைத்துச் சட்டையை அணிவிக்கையில் மட்டும் லதா சொன்னாள்:
“மயூரன் நிற்கட்டும் அண்ணி நான் பார்த்துக் கொள்ளமாட்டனே...... ”
“ வேண்டாம் லதா அவன் பயங்கரக்குழப்படிவிடுவன், ஒருவருக்கும் அடங்கான்......... ”
அதற்கு முன்N;னபின்N;ன ஒருநாளும் முகம் பார்த்திராமலேயே லதாவைக்கண்டதிலிருந்து அவன் குழைஞ்சு அவளுடன் சேர்ந்தமாதிரியைப் பார்க்க அப்படி அது அடம்பிடிக்கிற குழந்தைமாதிரியே தெரியவில்லை. இயல்பில் குழந்தைகளில் அதீதபிரியமுள்ள லதாவுக்கு மொழுமொழுவென்றிருந்த அவனுடன் விளையாடவேணும்போலவும் ஆசையாயிருந்தது. இருந்தும் அவனையும் அவர்கள் வெளியே இழுத்துக்கொண்டு போவதன் சூத்திரம் முழுவதும் அறியாமல் வற்புறுத்திக்கேட்கவும் தயங்கினாள்.

அவர்கள் புறப்பட்டுப் போனபின்பு குசினியுள் போய்ப்பார்த்தார்கள். நார்முடையொன்றுள் கொஞ்சம் முளைவிட்ட உருளைக்கிழங்கு, புருவமெனக் குனித்தும் வாடியும்போன ஒரு கூர்க்கன் (கெக்கரிக்காய்), ஒரு பிளாஸ்டிக் பைக்குள்(எழுதித்தான் எடுப்பித்தார்களோ?) கோழிகூடக் கொறிக்கத் தயங்கும் ஒரு சுண்டு குறுணல்அரிசி தவிர வெளியாய் வேறொரு சமைக்கக்கூடிய வஸ்த்தும் இருப்பதற்கான தடயங்கள் ஒன்றும் புலப்படவில்லை.
பிறிட்ஜைத் திறந்து பார்த்தார்கள். யார்சாபமோ ஐஸ{டன் ஐஸாய் கல்லாய்ச் சமைந்துபோய் மல்லாக்கக் கிடந்தது ஒரு கோழி (அதுவும் கிறில் பண்ணுவதற்கான மலிவுப்பதிப்பு ). அதையங்கிருந்து பெயர்த்தெடுக்கக்கூடிய ஈட்டியோ, வேலன்ன ஒருபோர்க்கருவியோ, கடப்பாரையோ தென்படுகிறதா என்று தேடினார்கள்.
திடீரென கி.செ.துரையின் கதையொன்றில் சிவபதமடைந்த தேதி தெரியாத கோழியைச்சாப்பிட்ட ஒருவர் வயிற்றுள் கடுஞ்சமர்மூண்டு கலக்கி அவதிப்படுத்திய சம்பவம் ஞாபகம் வரவும்.........
அந்த எண்ணத்தை அதிலேயே போட்டுவிட்டு ஆபைசழள ஆயசமவ தேடிப்போய் ஆட்டிறைச்சி மற்றும் சாமான்கள் வாங்கிவந்து சமைத்துச் சாப்பிட்டார்கள்.
மாலையானதும் அண்ணன்குடும்பம் வந்து சேர்ந்தது. சாப்பாடானதும் அண்ணன் செற்றிக்குள் சாய்கோணத்தில் இருந்துகொண்டு ராகுலனிடம் ஜெர்மனியில் தனிநபர் வருமானம், சேமிப்பு சாத்தியஅசாத்தியங்கள், நடப்பு வட்டிவீதங்கள், மற்றும் அத்யாவசிய நுகர்ச்சிப்பண்டங்களின் விலைதலைகள் பற்றி உசாவினார். பின்னொரு கோழித்தூக்கம் போட்டார். அலாம் வைத்தது போல் ஏழு மணிக்கு எழும்பி பாத்றூம் போனார். பின் ஜாக்கெட்டை மாட்டினார்.
“எனக்கு ஒரு அலுவலிருக்கு வெளியில.” என்று வெளியேறியவர்தான் எல்லாரும் படுக்கைக்குப்போனதன் மேல் பதினொருமணிக்கு வந்து பூனைமாதிரி ஓசைப்படாமல் மாடியேறிப் போனார்.

மறுநாளும் இதே செயன்முறைகள் நேரசூசிகை போட்டதுபோல் நடந்தேறின. ஆனால் அண்ணியார் சுகுணாமட்டும் கொஞ்சம் மாற்றி தான் தையல்கிளாஸ{க்குப் போவதாகச் சொன்னாள்.

மூன்றாம்நாள் காலை புறப்படமுதல் அண்ணியார் லதாவிடம் சொன்னாள் : “ மயூரனை கின்டர் ஹோர்ட் ஒன்றில கொஞ்சநாளாய் விடுகிறனாங்கள்........ புதுசில தனிய நிக்கிறானில்ல அழுகிறான்....... அதுதான் நானும் போய்க்கூட நிக்கிறனான்........தனிய நிற்கப்பழகிட்டனென்றால் நானுமெங்கையென்டாலும் பார்ட் டைம் ஜொப்புக்குப் போகலாமென்றார் இவர்......... அவரும் தனியாளாய் அடிச்சு என்னத்தைத்தான் மிச்சம் பிடிக்கிறது இந்த நாட்டில இருக்கிற விலைவாசியி;ல...... ”

அன்று மாலை அவர்கள் வந்திறங்கக்கூடிய நேரந்தான்....... ரெலிபோன் அடிக்கிறது. எடுப்பதா விடுவதா என்று லதா குழம்பவும்..... மீண்டும் மீண்டும் மீண்டும் அடிக்கிறது.
ராகுலன் சொன்னான் “போய் எடும் சிலவேளை கொண்ணனாய்கூட இருக்கலாம் ”

போய் எடுத்தால் மறுமுனையில்.........
“குறுய்ஸ் கொட்..... நான் சூசாரா.... மன்னிக்கவேணும் அப்போது உன்னிடம் உறுதிப்படுத்திக்கொள்ள மறந்துவிட்டேன்..........துகுணா........ நீ முன்னர் ஒத்துக்கொண்டபடி அடுத்த வார இறுதிநாட்கள் இரண்டும் என்னுடைய ஷிப்ட் வேலையையும் சேர்த்துச்செய்வாய்தானே....?”
(வியட்னாமோ தாய்லாந்துக்காரி....... வார்த்தைகளை நசித்தும் சப்பியும் மழலை பேசினாள்.)
“மன்னிக்கவேணும் நான் சுகுணாவல்ல..... அவர் வீட்டுவிருந்தாளி. இது சுகுணா வாறநேரந்தான் நீங்கள் அவர் வந்த பிறகு பேசுவது நல்லது. குறுய்ஸ் கொட்.....! ”

சுகுணா அண்ணனைத் திருமணம் செய்தாலோ செய்யாமலிருந்தாலோ நெருங்கிய உறவுக்காரியாதலால் தங்களை ஏகமாய் வரவேற்பாள், உபசரிப்பாள், வாஞ்சையாய் பாந்தமாய் இருப்பாள், கதைப்பாளென்று எண்ணி எதிர்பார்த்து வந்த லதாவுக்கு அவள் ஏதோ கடன்காசைக் கேட்கப் போயிருக்கிறவர்களிடம் பேசுவதுமாதிரி; முகங்கொடுக்காமல் கதைக்கிறதும் திருப்பிறதும் பெரும் ஏமாற்றமாயும் அவமதிப்பாயுமிருந்தது, ஆனாலும் ராகுலனிடம் வெளியாகச் சொல்லமுடியவில்லை.

வெளியில் போயிருந்த அவர்கள் வீடு திரும்பவும் லதா அண்ணியாரிடம் சொன்னாள்:
“சூ....சாரா என்று யாரோ போன் எடுத்தார்கள் ”
திடீரென்று அவள் முகம் கலவரமாகியது. மறைத்துக்கொண்டு ஆனால் குரலில் சற்றுப்பதட்டத்துடன் கேட்டாள்:
“எ...எ..எ.என்னவாம்..........? ”
“எனக்கு அவள் பேசிய சுவிஸ்ஜெர்மன் ஒண்டும் விளங்கேல்லை...... எதுக்கும் நீங்கள் வந்தாப்போல எடுங்கோ என்றன்...வைச்சிட்டாள்”; என்ற பிறகுதான் அவளுக்கு மூச்சு வந்தது.

உதட்டை வலிந்து மலர்த்தி எமது தலைவி சந்திரிகாவைப் போலொரு சிரிப்பை உதிர்த்துவிட்டு“ என்னோட தையல்கிளாஸ{க்கு வாற ஒரு தாய்லாந்துப்பிள்ளை..”என்றாள்.
நாலாம்நாள் மாலை அண்ணன் சாப்பிட்டபின்னால் பான்பராக் போட்டுக்கொண்டு கோழித்தூக்கம் போடமுதல் திருவாய்மலர்ந்தார். “ஜெர்மனியைப்போல இல்லை..... இஞ்சை........ கண்டகண்டபாட்டுக்கு ஆக்களைப் பிடிச்சு அனுப்பிறாங்கள்....... நீங்களும் அறிஞ்சிருப்பியள்தானே............. எந்த நேரமும் விசாக்காட்டைப் பிடுங்கிக்கொண்டு ஊருக்கேத்திற நிலமை எங்களுக்கும் வரலாம்........ முந்தி உளைச்சதுகளை அப்பிடியே வீட்டுக்குக்குடுத்தன்........ அடுத்தவளுக்குச் சீதனங்கொடுத்தன்........ லதாவைக்கூப்பிட்டன் கையிருப்பு காலி. இனிமேற்கொண்டு பார்ட் டைம் ஜொப் ஏதாவது பண்ணிக்கிண்ணினால்த்தான் நாலு காசைப்பார்க்கலாம் அதுதான் இப்ப கொஞ்சநாளா பின்னேரத்தில பார்ட் டைம் ஜொப்பொன்றுக்குப் போறனான்............. ”


ராகுலனுக்கு அவர் கையிருப்பை அறிவதில் ஓரு சுவாரஸ்யமுமில்லை. அவன் பேச்சில் அசிரத்தையாய் முகட்டைப் பார்த்துக்கொண்டிருந்தான். அண்ணாச்சி தொடர்ந்தார்..........

“அங்கை சமையலெண்ணை லீற்றர் ஒண்டரை மார்க்கென்றியள்.........இஞ்ச லீட்டர் அஞ்சு பிராங்கெல்லே..........வரேக்க மட்டும் உந்தப்பெரிய கொம்பியில பத்து லீற்றர் கேசில ஒரு பத்து அடிச்சந்திருந்தா....... சும்மா ஐநூறு மார்க் வெளிச்சிருக்கும்.......... ”

(ராகுலன் மனதுள் -யாருக்கு.....?-)
கதை மீண்டும் பொருண்மியத்திக்கிலே செல்ல அறுவை தாங்காமல் ராகுலன் கேட்டான்:

“உங்கடை ஷ--_ரிச்சில என்னதான் விஷேசம்........ அதைச்சொல்லுங்கோ......... ”

“ விஷேசமெண்டு......?- ”

“இங்க யாரும் ரூரிஸ்ட்டுக்கள் வந்தால் என்னத்தைப் போய்ப்பார்க்கிறவை....? ”

“ நானூறு கிலோ மீட்டர் தள்ளி..........ஜெனீவா என்றால் யூ.என்.ஓ கட்டிடத்தைச்சொல்லலாம்......... இஞ்சை ஒரு நூற்றைம்பது இருநூறு கிலோமீட்டரில ஒரு சேர்ச் இருக்காம் ........எங்கட சனமும் சிலது போறது......... வடக்கை ஷெளகவுசனில ஒரு நீர்வீழ்ச்சியிருக்காம்.......... நானென்றால் இதொண்டுக்குமின்னும் போகேல்ல.........இருக்கிற வேலைக் கரைச்சலுகளுக்கை எங்களுக்கெங்கால நேரம்.........? ”

லதா ஆற்றாமல் கேட்டாள்:
“அப்ப ஒரு ஆபத்து அந்தரத்துக்குத்தன்னும் உங்களுக்கு லீவு எடுக்கேலாதோ அண்ணை? ”

“இப்ப மற்ற வேலைக்குத்தான் லீவெடுத்தாலும்.......
பார்ட் டைம் வேலைக்கு எடுத்தேனென்டால் எங்கையெண்டிருக்கிற நம்ம சனமே ஓடிப்போய் புகுந்திடும்.......... பிறகு கோவிந்தாதான்...........கிறிஸ்மஸ் லீவுக்கை வந்திருந்தியளெண்டால் சோக்காய் எல்லாம் பார்த்திருக்கலாம்........ ”

(ராகுலன் மனதுக்குள் “ இதுதான் ஸ்னோ மலையாய் கொட்டிக்கிடக்கு பார்.......- ”
என்றிருப்பான்.)

இவர்கள் ஒரு நாளாவது லீவு போட்டுவிட்டு தம்மோடு சந்தோஷமாக நிற்பார்கள் அல்லது ஏதாவது ஒரு இடத்திற்குக் கூட்டிப்போவார்கள் என்ற நம்பிக்கை அறவே பொய்த்து இவர்களது -பொருள் முதல் உலகம்- வேறென்பதும் புரிந்து போயிற்று.

சடுதியான காலநிலை மாற்றம் ஒத்துக்கொள்ளவில்லையோ என்னவோ லதாவின் குழந்தைக்கு பகல் முழுவதும் லேசாக உடம்பு காய்ந்தது. பின்னேரமும் கொஞ்சம் சிணுங்கிக்கொண்டிருந்தாள். மயூரனுக்கும் காய்ச்சல் தொற்றிக்கொண்டுவிடும் என்ற பயத்தில்போலும் அண்ணனும், அண்ணியும் மாலை முழுவதும் மாடியில் இருந்த தம்படுக்கையறையே கதியென்று கிடந்தார்கள். கீழிறங்கவேயில்லை.

அண்ணன் பார்ட் டைம் வேலைக்குப்போய்வந்து மீண்டும் கடுவன் பூனைமாதிரி; மாடிக்கு ஏறிப்போனான்.
அண்ணி குசினிக்குள்ளிருந்து சாப்பாடு எடுத்துக்கொண்டு போய் அவனுக்குக் கொடுத்தாள். ஒரு சம்பிரதாயத்திற்குக்கூட அவர்களை

“என்ன..... குழந்தைக்கு இப்ப எப்பிடியிருக்கு....?”
என்று விசாரிக்கவில்லை. லதாவும் தன்னுள் உதிர்ந்து போயிருந்தாள். ராகுல் தன் குடும்பத்தைப்பற்றி அவர்கள் விருந்தோம்பும் பாங்குபற்றி மிகமட்டமாக எடைபோடப்போகிறான் என்ற பயத்தில் மௌனம் காத்தாள். ராகுலுக்கும் அவர்கள் போக்கால் அங்கே மேற்கொண்டு தங்க அதைரியமாகவும், கூச்சமாகவும் இருந்தது.
இரவுமுழுவதும் குழந்தை அடிக்கடி சற்றே கண்ணயர்வதும் பின் எழும்பி அழுவதுமாயிருந்தது. இருவரும் மாறிமாறி தோளில் தூக்கிப் போட்டுக்கொண்டு சிறிய கூடத்திலும் ஆளோடியிலும் உலாத்தினார்கள்.

குழந்தையின் அழுகையில் அண்ணன்காரனுக்கு வந்த உறக்கம் கலைந்து கலைந்து போனது, சினமுண்டானது. அடுத்த தடவை தூக்கம் கலைந்தபோது எரிச்சலுடன் எழும்பி வெளியேவந்து மாடிப்படியில நின்று அதட்டினான்.

“ ஏய்........ லதா உந்தப்பிள்ளையைக் கொஞ்சம் அழாமல்தான் பாரன்....... மனுஷர் விடியவேலைக்குப் போகவேணுமல்லே.......- ”


“பிள்ளைக்குச்சாடையாய் மேல் காயுது அண்ணை... அதுதான் அழுகிறாள்.... ”


"சுகமில்லையெண்டால் நேரத்தோட டொக்டரிட்டை காட்டியிருந்திருக்கலாமில்லை! ”


அற்பப்பயலே அவர்கள் உனது விருந்தினர்கள். நீயல்லவா டாக்டரிடம் கூட்டிப்போயிருக்க வேணும்.

“ பராசெற்றோமோல் ஒன்று குடுத்திருக்கிறன்...... தணியுதோ பார்ப்பம்....”

“ என்ன குடுத்தியோ....... இனியும் கத்தினால் மயூரனும் எழும்பி
வாசிக்கத்தொடங்கிடுவான்........ பிறகெனக்கு வெளியில குதிக்கிறதைத்தவிர வேறை ஒண்டுஞ்செய்யேலா...........”

பிள்ளையே பெற்றுக்கொள்ளாதவன் மாதிரி அவன் பொழிந்துவிட்டு உள்ள போகவும் ராகுலன் லதாவின் காதில் மெல்ல ஆனால் உறுதியான குரலில் சொன்னான்:

“நாங்கள் உறவென்று நம்பி பிழையான இடத்துக்கு வந்திட்டம்............ இப்ப பிள்ளைக்குச் சட்டையைப் போட்டிட்டு...... நீரும் உடன வெளிக்கிடுறீர். இதுக்கு மேலயுமிங்கை ஒரு நிமிஷந்தன்னும் என்னால தங்கேலாது......... ”

லதா ஒரு மறுப்பும் சொல்லவில்லை. அவனோடு ஓசைப்படாது வெளிக்கிட்டாள். குழந்தையின் சாமான்கள் எல்லாம் சரிதானாவென்று இன்னொருதரம் சரிபார்த்துவிட்டு தம் சூட்கேஸ்களைத் தூக்கிக் கொண்டு மெதுவாய் வெளியேறிக் கதவைச்சாத்தினார்கள்.

காரில் போய் அமர்ந்த பின்புதான் இயல்பாக மூச்சேவிடவே முடிந்தது. நிம்மதி உண்டானது.

கார் சுவிற்சலாந்து-ஜெர்மனி எல்லை நகரமான பாசலை அண்மிக்கவும்
மலைகளும், அதன் சாரலில் அமைந்திருந்த அழகழகான வீடுகளும,; பள்ளத்தாக்குகளும், தூரிகையால் இழுத்துவிட்டது போலிருந்த நதிகளும், பாலங்களும், சுரங்கப்பாதைகளும்; மறைந்து விடை பெற்றன. சமதரையிலான விரைவுசாலையில் மணிக்கு 120 கி.மீ வேகங்கொள்ள அனுமதித்திருந்தார்கள்.
எதிர்த்திசையில் ஆபிரிக்க இறக்குமதியான வெள்ளாடுகளை நிறைத்துக்கொண்டு வேகமாக வந்த பாரவுந்தொன்று அவர்களது காரையும் சற்றே குலுக்கிவிட்டு சுவிஸ் நோக்கி அம்புருவிப்பறந்தது.
சற்றே பயந்துவிட்ட லதா சொன்னாள்:- “கண் மண் தெரியாதமல் அவன் பறக்கிற வேகத்தைப்பார்த்தியளே........?”

“எல்லாம் கொண்ணன் கோவிச்சுக்கொள்ளப்போறாரெண்ட பயத்திலதான்........”

“என்ன அண்ணை கோவிக்கப்போறாரெண்டோ....... என்னப்பா சொல்லுறியள்.......? ”

“அதெல்லாம் அவர் எங்களுக்காக ஓடர் பண்ணின ஆடுகளல்லே....... அதுதான் விருந்துக்கு லேட்டானால் கொண்ணை கோவிச்சுக்கொள்ளப்போறாரேயெண்டு கிலியில பறக்கிறான்.......”

சுவிஸ் நோக்கிக் கார் திரும்பியதிலிருந்தே சிரிப்பைத் தனியாகவே கழற்றி வைத்திருந்த லதா கண்களில் நீர் முட்டும்வரை கனிந்து குலுங்கிச்குலுங்கிச் சிரித்தாள்.

“என்னவோ தெரியாதப்பா அண்ணை முந்தி முந்தியிப்படியில்லை..... இப்ப சரியாய் மாறித்தான் விட்டார். அண்ணியோட சேர்ந்து எதுக்கெடுத்தாலும் , ஒரு இடத்தை போறம், ஒரு சாமான் வேண்டவேணும், ஒரு ஆக்கள் தந்தவை, ஒரு பகுதி வரும், ஒரு அலுவலிருக்கு......... என்று சஸ்பென்ஸ் வைத்துத்தான் கதைக்கிறார். ”

“அது சஸ்பென்ஸ் மாத்திரமில்லை... மற்றவர்களை நாங்கள் ஒரு இடைவெளியோடதான் வைத்திருக்கிறம் என்கிறதின்ற படிமம் அது..! ”

அண்ணாச்சி அவர்கள் வீடு தேடிவந்து “ நாங்கள் வேலைப்பழுவில உங்களைச் சரியாய் உபசரிக்காம விட்டிட்டம்....... மன்னிச்சுக்கொள்ளுங்கோ.”
என்று வந்து சாஷ்டங்கமாய் காலிலெல்லாம் வீழ்ந்துவிடப்போவதில்லை. ஆனால் சிலவேளை சொல்லிக்கொள்ளாமல் வந்ததுக்காக ரெலிபோனில் ஏதாவது பெனாத்தலாம். வீட்டுக்கு வந்ததும் முதலில் ரெலிபோன் இணைப்பைப் பிடுங்கிவிட்டார்கள்.
குழந்தையை டாக்டரிடம் கொண்டுபோய்க் காட்டியதில் அன்று மாலையே காய்ச்சல் சுகமாகித் தவழ்ந்தோடித்திரிந்தது.

மறுநாள் மாலை தோட்டத்தில் சாய்வுகதிரையைப் போட்டுக்கொண்டு ராகுலன் ஹேர்மன் ஹெஸ்ஸவின் சித்தார்த்தாவை வாசித்துக்கொண்டிருக்கையில் அங்கே சிற்றுண்டியும் சேமியாப்பாயாசமும் கொண்டு வந்த லதாவைக்கேட்டான்:

“ ஊர்லாப்தான் இன்னும் ஒரு கிழமை இருக்கே.... பாரீஸுக்குப் போவமே.....? ”

அப்போ அவனை லதா மேற்கண்ணால் பார்த்த ஓர் பார்வையிருக்கே.........ச்சொச்சொச்சொ!

நாங்கள் மெல்ல மாறுவோமே.. ராகுலன் அதை தனியே ரசிக்கட்டும்.

-திரு. பொ. கருணாகர மூர்த்தி

Thanks :En Puthu Veedu

Wednesday, February 24, 2016

ஷிர்க்கும் வஹாபிசமும்










வஹாபிசம் பற்றி தி இந்துவில் சமஸ் எழுதியிருந்த கட்டுரை இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் விவாதத்துக்கு உள்ளாகி இருக்கிறது. அந்தக் கட்டுரையை இன்றுதான் படிக்க முடிந்தது. நான் ஏற்கெனெவே ஷிர்க் ஒழிப்பு மாநாடு பற்றி எழுதியிருந்த ஒரு சிறு பதிவு என் முகநூல் வரலாற்றிலேயே அதிகபட்ச பகிர்வுகளைக் கொண்டிருந்ததாலும் எனக்கு அடிப்படியிலேயே இருக்கும் இஸ்லாமிய வரலாறு பற்றிய அக்கறை காரணமாகவும் இன்னொரு பதிவு எழுதலாம் என்று யோசித்தேன்.


வஹாபிசம் அடிப்படைவாதம் அல்ல என்று சொல்லும் வாதத்தை முதலில் பார்க்கலாம்.


மத அடிப்படைவாதம், அதாவது Religious Fundamentalism என்பதற்கு ஆக்ஸ்ஃபோர்ட் அகராதி பின் வரும் அர்த்தத்தை கொடுக்கிறது:


Fundamentalism: The strict maintenance of the ancient or fundamental doctrines of any religion or ideology.
-Concise Oxford Dictionary - Tenth Edition


அதாவது ஒரு மதத்தின் மறை நூலை, அது எழுதப் பட்ட காலத்தை கருத்தில் கொள்ளாமல் எந்தக் காலத்துக்கும் அதில் குறிப்பிட்ட மாதிரியே பின் பற்ற நினைப்பதற்கு ‘மத அடிப்படைவாதம்’ என்று பெயர். இது முதன் முதலில் கிறித்துவ ப்ராடஸ்டன்ட் மதத்தின் மூலம் ஆரம்பித்தது. இன்றைய சமூக மாறுதல்களை கருத்தில் கொள்ளாமல், இரண்டாயிரம் வருடத்திய பைபிளில் என்ன சொல்லி இருக்கிறதோ அதன் படியே இன்றும் வாழ முயற்சிக்க வேண்டும் என்று கிறித்துவர்களில் ஒரு பிரிவினர் கருத ஆரம்பிக்க அதற்கு அடிப்படைவாதம் என்று பெயரிடப் பட்டது.


அதே மாதிரி மற்ற மதத்திலும் கருதும் குழுவினர் அடிப்படைவாதிகள், அதாவது religious fundamentalists என்று அழைக்கப் பட்டார்கள். இந்த விளக்கத்தின் படி  இந்துத்வா அபிமானிகள் ஹிந்து அடிப்படைவாதிகள் என்று அழைக்கப் படுகிறார்கள்.


இதே தியரிப்படிதான் வஹாபிசத்தையும் விளக்க வேண்டும். இஸ்லாத்தில் இடைப்பட்ட காலத்தில் எழுந்த மாற்றங்கள் எல்லாவற்றையும் துறந்து ‘தூய இஸ்லாம்’ நோக்கிப் போக வேண்டும் என்று முன்னெடுப்பதும் அடிப்படைவாதம்தான். வஹாபிசம் தூய இஸ்லாத்தைத்தான் முன்வைப்பதால் அவர்களையும் அடிப்படைவாதிகள் என்றுதான் அழைக்க வேண்டும்.


மேலும் ‘நாங்கள் எங்கள் மதத்தில் இருக்கும் மூட நம்பிக்கைகளைத்தான் ஒழிக்கப் போராடுகிறோம்,’ என்று பேசுவது நியாயமான விவாதமாக பார்க்கப் படுகிறது. அதைப் பார்க்கலாம்.


முதலில் இந்த சர்ச்சையே தவ்ஹீத் இயக்கம் ‘ஷிர்க் ஒழிப்பு மாநாடு’ நடத்தியதில்தான் ஆரம்பித்தது. ஷிர்க் என்பதற்கு செவ்வியல் அரபி மொழியில் ‘சம நிலை’ அல்லது ‘தொடர்பு’ என்று அர்த்தம். அதாவது வேறு ஒரு கடவுளை அல்லாவுடன் சம நிலையில் வைத்துப் பேசுவது என்று பொருள் கொள்கிறார்கள். ஆதியில், அதாவது இஸ்லாத்தின் துவக்கத்தில் அல்-மனத், அல்-லத், உஸ்ஸா என்கிற மூன்று பண்டைய அரபிக் கடவுளர்களுடன் அல்-லாஹ்-வையும் சேர்த்து ‘சம நிலையில்’ வைத்துப் பார்த்தனர். இதனை முஹம்மது கண்டித்தார். (அவர் ஆரம்பத்தில் இதனை ஏற்றுக் கொண்டார் என்று ஒரு தனி தியரி இருக்கிறது; ஆனால் நவீன இஸ்லாமிய ஆய்வாளர்கள் இதனை மறுதலிக்கிறார்கள். அது இங்கே தேவையில்லாத சர்ச்சை. எனவே அதில் புக வேண்டாம்.)  


ஷிர்க் என்பதன் ஆதார சிந்தனை இதுதான். இதனையே கொஞ்சம் பண்டைய அரேபியா விட்டு விஸ்தரித்துப் பார்த்தால் படைப்பு, காத்தல், அழிப்பு என்று எந்த வேலையை செய்வதாக நம்பப் படும் கடவுளர்கள் எல்லாமே ஷிர்க்-கின் கீழ் வருவார்கள். அதாவது விஷ்ணு காக்கும் கடவுள் என்று யார் நம்பினாலும் அது ஷிர்க்-தான். ஏனெனில் அல்லா மட்டுமே காப்பவர் என்கிற சிந்தனையை அது மறுதலிக்கிறது. சிலைகளை என்று மட்டும் அல்ல பொதுவாக எந்த சக்தியையுமே கடவுளாக வழிபடுவதையே ‘ஷிர்க்’ என்றுதான் பொருள் கொள்ள வேண்டும். அதைத்தான் பண்டைய அரேபியாவில் செய்தார்கள். எனவே இது வெறும் இஸ்லாத்தில் உள்ள ‘மூட நம்பிக்கைகளுக்கு’ எதிரானது என்று மட்டுமே பொருள் கொள்வது அப்படி சொல்பவர்களுக்கே ஷிர்க்-கின் வரலாறு தெரியவில்லை என்றுதான் புரிந்து கொள்ள வேண்டும். அல்லது வேண்டுமென்றே விவாதத்தை திசை திருப்புகிறார்கள் என்றும் பொருள் கொள்ளலாம்.


சரி, பிரச்சனை மூட நம்பிக்கைகள்தான் என்றே எடுத்துக் கொண்டாலும், எது மூட நம்பிக்கை என்ற கேள்வி வருகிறது. அதன் ஆங்கில வார்த்தை superstition-க்கு ஆக்ஸ்போர்ட் அகராதியை கேட்டால் பின்வரும் விளக்கம் தருகிறது:


'A widely held but irrational belief in supernatural influences.'


இதில் முக்கியமான வார்த்தை ‘irrational’ அதாவது அர்த்தமற்ற நம்பிக்கைகள் அல்லது ஆதாரமற்ற நம்பிக்கைகள். இப்படிப் பார்த்தால் எந்த ஒரு மத நம்பிக்கையையும் ஆதாரமற்றது, அதாவது மூட நம்பிக்கை என்று சொல்லி விடலாம். இயேசு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார், ராமர் அயோத்தியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில்தான் பிறந்தார், பிள்ளையாரின் சொந்தத் தலை வெட்டப் பட்டதும் பார்வதி ஒரு யானைத் தலையை பொருத்தி அவரை காப்பாற்றினார், குரான் இறைவனால் ஜிப்ரில் தேவதை மூலம் நேரடியாக இறைத் தூதருக்கு வழங்கப் பட்டது போன்ற எதுவுமே நிரூபிக்க முடியாத, ஆதாரமற்ற நம்பிக்கைகள்தாம். இந்த மாதிரி எந்த மத நம்பிக்கைகளையுமே நாம் கேள்வி கேட்டு அவற்றை மூட நம்பிக்கைகள் என்று புறந்தள்ளி விட முடியும்.


அப்படி எல்லாம் இல்லை, ஒரு மதம் உருப் பெரும் போது கிடைத்த விஷயங்கள் எல்லாமே நன்னம்பிக்கைகள், அதற்குப் பிறகு நடந்த மாற்றங்கள் எல்லாமே மூடத்தனம், என்கிற ஒரு விளக்கத்தை நாம் முன் வைத்தால் அதுவும் கேள்விக்கு உள்ளாகும்.


உதாரணத்துக்கு தலித்துகள் தீண்டத் தகாதவர்கள்; அவர்கள் கோயிலுக்குள் நுழையக் கூடாது என்பது ஒரிஜினல் ஹிந்து மத நம்பிக்கை. இவை பண்டைய ஹிந்து மதப் புத்தகங்களில் காணப்படும் விஷயங்கள். ஆனால் தீண்டாமையை ஒழித்தது, தலித்துகளை கோயிலுக்குள் அனுமதித்தது எல்லாமே நவீன மாறுதல்கள். ஒருவேளை யாராவது ஒரு தீவிர பிராமணர் கிளம்பிவந்து, ‘தலித்துகளுக்கு உரிமை கொடுத்தது எல்லாமே மூட நம்பிக்கைகள், ஹிந்து மதத்துக்கு எதிரானவை, ஆகவே இவற்றைக் களைந்து தூய ஹிந்து மதத்தை கொண்டு வர வேண்டும்,’ என்று இன்று போராடத் துவங்கினால் அவற்றை நாம் ஏற்றுக் கொள்வோமா?


அதே போலதான் இந்த வஹாபிச ‘மூட நம்பிக்கை’ வாதங்களும். இவர்கள் வாதத்தைப் பொறுத்த வரையில் ஷியா பிரிவு கூட மூட நம்பிக்கைதான். ஆனால் அந்தப் பிரிவுக்கான ஆதார சிந்தனைகள் நபிகள் இறப்புக்கு உடனேயே துவங்கி விட்டவை. ஷியா - சுன்னி என்பதே நபிகள் இறப்புக்குப் பின் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டி நடந்த அரசியலின் தொடர்ச்சிதான். இதில் சுன்னிதான் நன்னம்பிக்கை, ஷியா மூட நம்பிக்கை என்பதே தவறான வாதம். ஏனெனில் அதே வாதத்தை ஷியாக்கள் கூட இவர்களுக்கு எதிராக முன் வைக்க முடியும்.


சூஃபி சிந்தனைகளும் கூட ஏறக்குறைய நபிகள் காலத்துக்கு உடனேயே துவங்கி விட்டன. அலி இபின் அபி தாலிப், நபிகளின் மருமகன்தான் சூபி சிந்தனைகளின் ஊற்று என்று நம்பப் படுகிறது. அதே போல அப்த்-அல்லா இபின் முஹம்மத் இபின் அல்-ஹனஃப்பியா என்பவர்தான் முதல் சூஃபி துறவி என்று கருதப் படுகிறார். இவரின் காலம் எட்டாம் நூற்றாண்டு. அதாவது இந்த சிந்தனைகளும் ஏறக்குறைய இஸ்லாத்துடன் சேர்ந்தே வளர்ந்தன. சொல்லப் போனால் நடுவில் முளைத்த விஷயம் என்பது வஹாபிசம்தான். சூஃபி, ஷியா இவர்கள் எல்லோரும் சேர்ந்து வஹாபிசம்தான் மூட நம்பிக்கை சொன்னால் அதில் கொஞ்சமாவது நியாயம் இருக்கும்.


ஒவ்வொரு மதமும் காலத்துக்கு ஏற்பவும், அந்தந்த மதம் பரவுகின்ற இடங்களுக்கு ஏற்பவும் மாற்றங்களை சந்தித்துக் கொண்டு வருகிறது. ஐரோப்பாவில் பரவிய கிறித்துவம் ஈஸ்டர் என்கிற பண்டைய ஐரோப்பியப் பண்டிகையை தனக்குள் உள்வாங்கிக் கொண்டது. (ஒரு கொசுறுத் தகவல்: ஈஸ்டர் என்பது யூஷ்டர் என்கிற அதிகாலைக்கு சொந்தமான ஜெர்மானியக் கடவுளில் இருந்து மருவியது. யூஷ்ருக்கும் பண்டைய வேதக் கடவுளான உஷஸ்-க்கும் சம்பந்தம் இருக்கிறது. உஷஸ், உஷா என்பதெல்லாம் அதிகாலையைக் குறிக்கும் சொற்கள். காலையில் விழித்து எழுதலை ஏற்படுத்தும் கடவுள் சம்பந்தப் பட்டதாக இருப்பதால் இயேசு விழித்து எழுந்ததை இதனோடு இணைத்து கொண்டாடத் துவங்கி விட்டார்கள்.)


இதே போலத்தான் இந்தியாவிலும் பல்வேறு மதங்கள் காலப் போக்கில் ஒன்றிடம் இருந்து இன்னொன்று உள்வாங்கி சில சடங்குகள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை பின் பற்றுகின்றன. இந்த மாதிரி கலப்படங்கள் எல்லாமே அநியாயம் என்று கருதுபவர்கள் உலகம் எங்குமே பொதுவாக கலாச்சாரங்களுக்கு எதிராகவே இருந்திருக்கிறார்கள். ஜெர்மனியில் ஹிட்லர் இந்த மாதிரிதான் தூய ஆரியம் போதித்தார். ஹெட்கேவர் ஆர்எஸ்எஸ் துவக்கி தூய ஹிந்துத்துவம் போதித்தார். இலங்கையில் புத்த பிக்குகள் தூய பௌத்தத்தை போதித்தனர். அரேபியாவில் வஹாப் தூய இஸ்லாம் போதித்தார். இந்த ‘தூய்மை’யின் விளைவுகள் எல்லாமே கடைசியில் கடும் ரத்தக் களரியில் மட்டுமே முடிந்திருக்கின்றன. இதில் வஹாபிசம் கொஞ்சம் தேவலாம், தூய ஆரியம் ரொம்ப மோசம் என்கிற ரேங்கிங்-குக்கே இடம் இல்லை. வாய்ப்பு கிடைத்தது, வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது மட்டுமே வித்தியாசம். ஐரோப்பாவில் ஹிட்லருக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. அரேபியாவில் இபின் சவுத்-க்கு கிடைத்தது. எண்பதுகள் வரை ஹெட்கேவர் ஆட்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கவில்லை. 1992ல் கிடைத்தது; 2002ல் கிடைத்தது. வாய்ப்புக் கிடைத்தபோது என்ன செய்தார்கள் என்பது நமக்கெல்லாம் தெரியும். இப்போது என்ன முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பதையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

அதேதான் வஹாபிசத்துக்கும் நடக்கும். சவூதி அரேபியா, ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா, பாகிஸ்தானின் பக்தூன்க்வா மாநிலம் போன்ற பகுதிகளில் நிலவும் பிரச்சனைகளில் எல்லாம் வஹாபிகளுக்கு பங்கு இருக்கிறது. கடந்த  இருபது ஆண்டுகளில் மத்திய கிழக்கு மற்றும் தெற்காசிய பகுதிகளில் ஷியாக்கள் கொல்லப்பட்டது, தர்காக்கள் தகர்க்கப் பட்டது போன்றவற்றின் பின்னணியில் வஹாபிச சிந்தனை இருந்திருக்கிறது.  வஹாபிகள் மூட நம்பிக்கையை எதிர்க்கவில்லை. இவர்கள்தான் மூட நம்பிக்கையின் மொத்தக் கொள்முதல்காரர்கள். இவர்கள் தூய்மையை போதிக்கவில்லை. இவர்களே இஸ்லாத்தின் மொத்த அழுக்கிற்கும் சொந்தக் காரர்கள். அமைதியை, நல்லிணக்கத்தை, கலாச்சார மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை விரும்பும் ஒவ்வொரு உண்மையான முஸ்லிமும் கடுமையாக எதிர்க்க வேண்டியவர்கள் வஹாபிகள். இவர்களுக்கு வேர் கொடுப்பது பெரும் கேட்டில் கொண்டு போய் முடியும். ஆனால் இன்னமும் அது இங்கே வேர் பிடிக்கவில்லை என்பது ஒரு நல்ல விஷயம். காரணம் அந்த அளவுக்கு ஆழமாக பண்பாட்டுக் கலப்பு இங்கே நிகழ்ந்திருக்கிறது. பன்மைக் கலாசாரத்துக்கு இந்தியாவுக்கே முன் உதாரணமாக நம் மாநிலம் இருந்திருக்கிறது.  பாபர் மசூதி இடிப்பு நடந்த போதே அமைதி காத்தவர்கள் நம் தமிழக இஸ்லாமியர்கள். அப்படிப்பட்டவர்கள் இந்த வஹாபிச அழுக்கையும் இங்கிருந்து துடைத்து எறிவார்கள் என்கிற உறுதியான நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

Thanks :Tharkasasthiran

Saturday, February 6, 2016

ஜெஸ்லியா பேட்டி தொடர்ச்சி...







0 பல மாதங்களுக்குப் பிறகு உங்கள் பேட்டியைத் தொடருகின்றேன். இத்தனை கால இடைவெளி எதற்கு என்று கூறுங்கள்.

பல்கலைக்கழகத்தில் நான் பயிலும் கற்கை நெறிக்குரிய பரீட்சைகளுக்காக ஆயத்தப்படுத்த வேண்டியிருந்தேன்.

0 முன்புபோல ஜாஃப்னா முஸ்லீம், கிண்ணியா நெற் போன்ற இணையத்தளங்களிலே இடம்பெறுகின்ற செய்திகள் மற்றும் ஆக்கங்களுக்கு விமர்சனங்கள் இடுகின்றீர்களா? உங்கள் விமர்சனங்களுக்கு இப்போதும் எதிர்வினைகள் வருகின்றனவா?

கிண்ணியா நெற் என்ன காரணமோ தெரியவில்லை தற்போது மிகவும் மெதுவாக செயற்படுகின்றது. செய்திகளைப் புதுப்பிப்பதற்கு கூட வாரக்கணக்கில் எடுத்துக்கொள்கின்றார்கள்.

 ஜாஃப்னாமுஸ்லீம் தளத்தில் என்னுடைய பின்னூட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. ஆயினும், தங்களுக்குச் சிக்கலாக கருதும் தர்க்கரீதியான பின்னூட்டங்களை இடம்பெற்றுவிடாதவாறு கவனமாகப் பார்த்துக்கொள்கின்றார்கள். அதன் மூலமாக எனது கருத்துகளுடன் கருத்துக்களால் மோதமுடியாதவர்களையும் அல்லது அவ்வாறு மோதினாலும் மூக்குடைபடக்கூடியவர்களையும் காப்பதற்கு நினைக்கின்றார்கள் போலும்.

தங்களை தைரியமானவர்களாக காண்பித்துக்கொள்ளும் ஆண்கள், நேர்மையானதும் நடுநிலையானதும் மிகுந்த நாகரீகமான வார்த்தையுடனும் புரியப்படும் ஒரு பெண்ணின் விமர்சனத்துக்கு ஏன் பயப்பட வேண்டும்?

பெண்பிள்ளைகளென்றால் இளக்காரமாகப் பார்க்கும் ஆணாதிக்கப் புத்தியுடையவர்கள்தான் நேர்மையான விமர்சனங்களை இருட்டடிப்புச் செய்ய முனைவார்கள்.

0 தற்போதைய அரசியல் சூழ்நிலைபற்றி உங்கள் பார்வை எவ்வாறுள்ளது?

சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த நேர்மையாகவும் நடுநிலைமையாகவும் சிந்திக்கத்தெரிந்த ஒரு சாதாரண குடிமகளின் யோக்கியமான பார்வைதான் என்னுடையதும்.

கடந்த காலங்களில் அநீதி இழைத்தவர்களுக்குரிய தண்டனைகள் வழங்கப்படுவதோடு பெரும்பான்மை சமூகத்தின் நம்பிக்கையை வென்றெடுக்கும் விதமாக சிறுபான்மை மக்கள் கௌரவமாக வாழத்தக்கதான அரசியல் தீர்வு பெறப்பட வேண்டும்.

0 இறைச்சிக்காக மாடு அறுக்கப்படுவது பற்றிய கண்ணேட்டம்..?

இந்த விடயத்திலும் ஏற்கனவே பலர் குறிப்பிட்ட கருத்துகளையே நான் வழிமொழிய வேண்டியுள்ளது. உணவுக்காக உயிர்களை அல்லது விலங்குகளைக் கொல்லக்கூடாது என்ற ரீதியில்தான் மாடுகளை அறுப்பது விமர்சிக்கப்படுகின்றது என்றால் நாம் பட்டினி கிடந்து சாகவேண்டியதுதான் நியாயம்.

தாவரங்கள் கூட உயிருள்ளவைதானே. விலங்குகளில் மீன்கள் முதல்கொண்டு எதையுமே உண்ண முடியாது. ஆயினும் அரசியல் ஆதாயத்துக்காகத்தான் இவ்விடயம் பெரிதாக்கப்படுகின்றது என்றால் சிறிது காலத்திற்கு நாமும் அதற்கு ஒத்துழைப்பதுதான் விவேகமானது. கட்டாக்காலி மாடுகள் பெருகியதும் அவர்களே அழைத்து வந்து இறைச்சிக்கடை அமைத்துத் தருவார்கள்.

0 அண்மைக்காலமாக சுன்னி மற்றும் ஷியாக்கள் விடயம் பெரிதாகப் பேசப்படுகின்றதே..?

'மதநம்பிக்கை'  என்ற சொல்லை ஒருதடவை உச்சரித்துப் பாருங்கள்!

மதங்கள் அனைத்துமே நம்பிக்கைகளின் அடிப்படையில் உருவானவையே. மொழிகள் எவ்வாறு தோன்றி வளர்ந்தனவோ அவ்வாறுதான் மதங்களும் காலத்துக்கு காலம் அவற்றைப் பின்பற்றுபவர்களாலும் அவற்றோடு முரண்படுபவர்களாலும் மாற்றங்களுக்குட்பட்டே வந்திருக்கின்றன.

ஒரு மதச்சடங்கை எடுத்துக்கொண்டால் கூட இதுதான் சரி என்று அடித்துக் கூறுபவர்களும் இல்லை என்று வாதிடுபவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். அவரவர் நம்பிக்கைகள் அவரவருக்கு உயர்வானதாகத் தோன்றுவது இயல்பே. ஒருகூட்டத்தினருக்கு உத்தமமாகத் தென்படும் விடயம் பிறிதொரு கூட்டத்திற்கு அவ்வாறு தோன்றாதிருக்கவும் கூடும்.
இவை முற்றிலும் நம்பிக்கை சார்ந்த பிரச்சினைகள். அவரவர் நம்பிக்கைகளை நம்புவதற்கும் பின்பற்றுவதற்கும் இருக்கும் சுதந்திரத்தை அனுமதிப்பதே நல்லது என்று தோன்றுகின்றது.

0 அப்படி அனுமதிப்போமானால் மக்கள் ஆளுக்கொரு மதப்பிரிவுகளோடு புறப்பட்டு வந்துவிடுவார்களே?

இறைவன் தன்னுடைய உண்மையான மதத்தை பாதுகாப்பதற்கு வலுவுள்ளவன். எத்தனை பிரிவுகள் கிளம்பினாலும் அவற்றுள் உண்மையான மார்க்கத்தைத்தானே இறைவன் போஷிப்பான்..? ஏனையவற்றுக்கு அதாவது மாற்றுப் பிரிவுகளுக்கு இறைவனுடைய ஆதரவு இருக்காதல்லவா..?

பிரபலமான அரசியல் கட்சிகளில் இருந்து பிரிந்து வருபவர்கள், தமது ஆதாயத்துக்காக ஏறத்தாழ அதேபெயருடன் கூடிய மாற்றுக்கட்சிகளை உருவாக்குவதுபோல மதப்பிரிவுகளையும் உருவாக்கி விடுவார்களோ என்று அச்சமடைய வேண்டியளவுக்குத்தான் இன்றுள்ள ஆன்மீக நிலைமை இருக்கின்றது பார்த்தீர்களா..?

(தொடரும்)