Friday, December 20, 2013

கிரிக்கட் : பூச்சியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியம்








பூச்சியம் என்பது ஒரு வினோதமான பிறவி.

 
கணித்தில் அது இருக்குமிடத்தை பொறுத்து அதன் பெறுமதியும் பயன்பாடும் வேறுபடும். கிரிக்கட்டைப் பொறுத்தவரையில் அது எப்படியுள்ளது என்ற சுவாரசியமான தகவல்களைப் பார்ப்போம்.
 
 
முதலிலே ஆண்களுக்கான ஒருநாள் சர்வதேச போட்டிகளை பூச்சியம் படுத்தும் பாட்டைப் பார்த்துவிடுவோம்.



 பூச்சியத்தில் அவுட் ஆகாத வீரர்கள் :



• மொத்தமாக இதுவரையில் 23 வீரர்கள் இருந்தபோதிலும்  தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்காக ஆடிய வீரர் கெப்லர் வெஸல்ஸ் முதன்மையானவர்  - 


ஆம், 105 இன்னிங்ஸ்கள் ஆடியும் ஒருதடவை கூட பூச்சியத்தில் அவுட் ஆகாத வீரர் என்ற அழியாப் பெருமைக்குரியவர்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால்  இவர் பந்தை எதிர்கொள்ளும்போது எப்போதுமே மூன்று விக்கட் கோல்களும் பந்துவீச்சாளருக்கும் பிரதான நடுவருக்கும் நன்கு தெரியத்தக்கவாறு விலகி நின்று எதிர்கொள்வதுதான் வழமை.

• இலங்கை அதிரடி வீரர்  சனத் ஜயசூரிய  - 433 இன்னிங்ஸ்கள் ஆடி 34 தடவை பூச்சியத்திலே ஆட்டமிழந்த சாதனை இவருடையது.


(அடுத்த நிலையில் இருப்பவர்  பாகிஸ்தான்  'சிக்ஸர் சக்கரவர்த்தி'  சஹீத் அப்ரிதி  343இன்னிங்ஸ்கள் - 29 தடவை )




 அறிமுகப் போட்டியிலேயே பூச்சியத்தை ருசித்தவர்கள் :


 இந்தப்  பட்டியல் ஜனாதிபதி சால்வை போல நீண்டது.


அன்றைய / இன்றைய பெரும் அதிரடி மன்னர்களும் கிரிக்கட் ஜாம்பவான்களும் இதற்குள் அடக்கம்.


அவர்களுள் முக்கியமானவர் நமது சாதனை மன்னன் சச்சின் டெண்டுல்கர்!
இவர் 1989ல் பாகிஸ்தான் அணியின் வகார் யூனிஸின் பந்துவீச்சில், சந்தித்த 2வது பந்தில் வாசீம் அக்ரமிடம் பிடிகொடுத்து டக் அவுட்டானார் என்பது  குறிப்பிடத் தக்கது.


அறிமுகப் பூச்சியர்கள்... மன்னிக்கவும்!  பூச்சியம் பெற்ற வீரர்கள் எல்லோரது பெயரையும் தருவது கடினம் என்பதால் இவர்களுள் அதிக பந்துகளை எதிர்கொண்ட பின்பு பூச்சியத்தோடு பெவிலியனுக்கு மீண்ட மூவரை மட்டும் தருகின்றேன். இதோ:


21 : ஜீ. ப்ளவர் (இங்கிலாந்து) -1983
14 : ஹாருனுர் ரஷீட் (பங்களாதேஷ்) - 1988
13 : டீ. ஜே. ப்ராங்க்ளின் (நியூசிலாந்து) - 1983


• முதலாவது பூச்சியத்தை ருசிப்பதற்கு முன்பு அதிக இன்னிங்ஸை ஆடியவர்களில் முதன்மையானவர் இலங்கையைச் சேர்ந்த முன்னாள் சுழல் பந்துவீச்சாளரும் தற்போதைய ICC நடுவருமாகிய குமார தர்மசேன.

இவர் அறிமுகமானதிலிருந்து 72 இன்னிங்ஸ்கள் ஆடியபின்பே பூச்சியத்தை பார்த்தவர்.

Note : இவர் , குமார தர்மசேன  இலங்கை அணிக்காக ஆடும் காலத்தில் நடுவர்கள் தெளிவாக அவுட் கொடுத்த பின்பும் 'ஒருவேளை திரும்ப அழைக்க மாட்டார்களா' என்பது போல முகத்தை வைத்துக்கொண்டு திரும்பிப் பார்த்து பார்த்து பெவிலியனுக்கு நடப்பதிலும்  முதன்மையானவர்.


70 இன்னிங்ஸ் - சீ. ஜீ. க்ரீனிஜ் (அவுஸ்திரேலியா)
68 இன்னிங்ஸ் - சீ. டீ. மக்மில்லன் (தென்னாபிரிக்கா)




• அதிக இன்னிங்ஸ்களை தொடர்ந்து பூச்சியமின்றிக் கடந்தவர்கள் :



 இவர்களுள்  முதன்மையானவர்  இந்தியாவின் முன்னாள் கப்டன் ராகுல் டராவிட்.  இவர் 120 இன்னிங்ஸ்களை பூச்சியமின்றி ஆடியிருந்தார்.


• நியூசிலாந்தின் முன்னாள் கப்டன் மார்ட்டின் க்ரோவ்  பூச்சியமே இல்லாமல் கடந்த இன்னிங்ஸ்கள்  119 .


• தென்னாபிரிக்காவின் முன்னாள் கப்டன் கெப்லர் வெஸ்ஸல்ஸ் அவரது 105 இன்னிங்ஸையுமே பூச்சியம் இல்லாமலே கடந்து ஓய்வும் பெற்று விட்டார்.



 அடுத்தடுத்த இன்னிங்ஸ்களிலே தொடர்ந்து பூச்சியத்தை வரித்துக்கொண்டவர்களிலே ...


• பந்து வீச்சாளர்களும் இறுதி ஆட்டக்காரர்களுமே இந்தப்  பட்டியலில்  அதிகமுள்ளனர்.


• இவர்களிலே 4 தடவை தொடர் பூச்சியம்  – மே. தீவுகளின் லோகி, இலங்கையின் விக்கிரமசிங்க, சிம்பாப்வேயின் ஓலங்கா, இங்கிலாந்தின் வைட்,


• 3 முறை தொடர் பூச்சிய பட்டியலிலே பலர் உள்ளனர். பந்து வீச்சாளர்களும் இறுதியாட்டக்காரர்களும் அதிகமுள்ள பட்டியலிலே அவுஸ்திரேலியாவின் ஆச்சரியமாக ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.


• 3 முறை தொடர் பூச்சிய சாதனையை இரு தடவை நிகழ்த்தியிருப்பவர் இலங்கையின் 'சிலிங்கா சிங்கம்'  லசித் மலிங்க. (contd)



தொகுப்பு : Jesslya Jessly
 
நன்றி : Cricinfo

Wednesday, December 18, 2013

சிறுகதை : அரச நிவாரணம்







'சில்மியா.. என்ன புள்ள நீ.. நம்மட வளவுக்குள்ள நடக்கிற மார்க்க விசயங்கள் ஒண்டுக்கும் வாறாயில்ல.. நேத்து மத்தியானம் கூட ஹில்மா வூட்டுல.. அன்வர் மௌலவிட பயான் நடந்திச்சு.. தெரியுமா? எல்லாருக்குஞ் சொல்லி விட்டாங்களே..'

அருகிலிருக்கும் சில்லறைக் கடைக்குச் சென்று மத்தியானச் சமையலுக்குத் தேவையான பலசரக்கு சாமான்கள் வாங்கிக்கொண்டு திரும்பி வரும் வழியில் என் அயல் வீட்டுக்காரியான நிஸ்மிதான் கேட்டாள்.

'எங்க நிஸ்மீ.. ஒண்ணுக்கும் நேரமில்ல. அவர வேலைக்கும் புள்ளைகளை ஸ்கூலுக்கும் அனுப்பினா சாப்பாடு செய்து எடுக்கவே நேரம் சரியாருக்கு.. இதுக்குள்ள எங்க...?'




'அப்பிடிச் சொல்லாத புள்ள.. இந்த வளவுக்குள்ள குடியிருக்கிறவங்கள்ல எத்தினை பேர்தான வாறாங்க தெரியுமா? எல்லாருக்கும் வேலைதான்.. ஆனா மவுத்துக்குப் பொறவு நாம போற எடத்துக்கும் கொஞ்சம் தேடத்தானே வேணும்..  வெளியூருலயெல்லாம் நம்மளைப்போல பொம்புளைகள் எவ்வளவோ பேரு தப்லீக் ஜமாத் வேலை செய்யிறாங்க தெரியுமா? இது நம்ம காலடியில நம்ம அயலுக்குள்ளேயே அவங்க வந்து மார்க்க உபதேசம் பண்ண வாராங்க.. அதுக்கும் நாம வராட்டி எப்படி?'

'சரி பாப்பம் வரத்தான் வேணும் நிஸ்மீ. சரி, அடுப்புல கறி கொதிக்;குது.. ஸ்கூல் விட்டு புள்ளைகள் வாற நேரமாச்சு. நான் வாறேன்' என்று வீட்டை நோக்கி வேகமாக நடந்தேன்.

நிஸ்மியையும் என்னையும்போல இன்னும் நிறையப் பெண்கள் ஒரே வளவுக்குள் இருந்தாலும் நாங்கள் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்வதற்கு கூட நேரமே இருப்பதில்லை. அவரவர் குடும்ப காரியங்களைப் பார்ப்பதற்கே பொழுது சரியாகி விடுவதால் அவ்வப்போது இப்படி வழியில் சந்தித்துப் பேசினால்தான் உண்டு.







ன்னொரு நாள்...

'சில்மி, நான் கேக்குறனென்டு ஒண்ணும் நெனைக்காத.. நீ ஏன் வெளியில போகக்கொள்ள இன்னும் சல்வார்தான் போட்டுட்டுப் போறா..'

'ஏண்டி சல்வாருக்கென்ன..? அது ஸாரியை விட நல்லா முழு உடம்பையும் மூடித்தானே இருக்கு' என்று ஆச்சரியமாகக் கேட்டேன்.

'ஆங்.. அது மரியாதையான உடுப்புத்தான். ஆனா இப்ப நம்மட பொம்பிளைகள் எல்லாரும் அபாயாதானே போடுறாங்க.. இந்த வளவுக்குள்ளேயும் பாரு நான், நம்மட நுஸ்ரத், பேபி, மேல் வீட்டு ஹில்மா எல்லாரும் அபாயாக்கு மாறிட்டாங்க தெரியுமா.. என்னைப் போல நீயும் போடேன்.' என்றாள் நிஸ்மி சிரித்தவாறு.

'ஆ.. போடத்தான் வேணும்.. ஆனா எப்பிடிடீ இந்த வெயில் வெக்கைக்குள்ள ஸாரியும் உடுத்து அதுக்கு மேலால அதையும் போடுறீங்க..?'

'எப்பயுமா போடுறம்..? அவரோட வெளியில எங்கேயாவது போகக்குள்ளதானே போடுறம்.. ஆனா அரபு நாட்டுல பாரு.. அந்த வெயிலுக்குள்ளயும் எல்லாம் போடுதுகள்தானே..'




'அந்த ஊருல பாலைவனம்.. அங்க அடிக்கடி மணல்புயல் வீசுறதாலதான் அப்படி உடுப்புகள் சரி. அங்க பொம்புளைகளுக்கு மட்டுமில்ல.. ஆம்புளைகளுக்கும் கிட்டத்தட்ட அதேபோலத்தான் தலை காதையெல்லாம் மூடி உடுப்பு இருக்கு என்டு வெளிநாட்டுக்குப் போன நம்ம பெனாட உம்மா சொல்லுவா..?'

'அதுவுஞ் சரிதான். அதுகள்ற சுவாத்தியத்துக்கேத்த உடுப்பை அதுகள் போடுதுகள்.. என்ன? என்ன இருந்தாலும் உடம்பை தலையிலருந்து கால் வரைக்கும் மூடுதுதானே அது'

'ஆனா நீ அபாயாவைப் போட்டுக்கிட்டு அவரோட பைக்ல பின்னாலருந்து போகக்குள்ள பாத்தேன்.. உன்ட கீழ்க்கால் வரைக்கும் தெரியுதே நிஸ்மி..'

'அதென்னடி செய்யுறது.. முந்தி மாதிரி பைக்ல சைடால இருந்து போனா ட்ரபிக் பொலீஸ்காரன் எழுதிறானாம்.. அதுதான் அப்பிடி. என்னமோ நாம எல்லாத்திலயும் நம்மட மார்க்கம் சொல்ற மாதிரித்தான் இருக்கணும் சில்மீ. நான் வாறன் அடுப்புல சோறு இருக்கு!' என்று விரைந்தாள் நிஸ்மி.







ற்றுமொரு தினம்..

'என்ன சில்மி, நா அவ்வளவு சொல்லியும் நீ நேத்து பயானுக்கு வராம வுட்டுட்டியே..?'

'அது வந்து இவன் சின்னவனை  நேர்ஸரியிலருந்து கூட்டி வரப்போனதில லேட்டாகிட்டுது நிஸ்மீ..'

' பரவாயில்ல நீ பிந்தியென்டாலும் வந்திருக்கலாமே.. வட்டி வாங்குறது வட்டி குடுக்கிறது எவ்வளவு பாவம் என்டதை என்ன அழகா நம்மட பஷீர் மவுலவி எடுத்துச் சொன்னாரு தெரியுமா..?'

'அப்பிடியா..? வட்டி குடுக்கிறதும் பாவமென்டா.. எங்கடவரு பேங்க்ல லோனெல்லாம் எடுத்திருக்காரு அதுக்கு வட்டி வெட்டுறானே.. நிஸ்மீ!'

' அதுவும் பாவந்தான்..! அதுக்குத்தான் உனக்கிட்ட பயானுக்கு வா என்டு சொல்றது.. அப்பிடி வந்திருந்தா நீ லோன் எடுக்க வாணாமென்டு உன்ட புருசன்ட சொல்லியிருக்கலாமில்லியா..?'

'அதுக்கென்னடி பண்றது.. வேலைக்குப் போய் வாறதுக்கு பைக் வாங்கிறதுக்கு யாரு காசு தாறது..? அதான் டிப்பாட்மென்ட்ல பைக் லோன் எடுத்தாரு. அதுசரி ஒன்ட அவரு எப்பிடி புது ஆட்டோ வாங்கினாரு? லீஸிங்ல வாங்கினென்டு கேள்விப்பட்டேனே?'

'இல்லல்ல.. நாந்தான் சீட்டுப் போட்டு ரெண்டு லெச்சம் காசு குடுத்தேன்.. அடுத்த மாதம் முடியுது. நீயும் அடுத்த சீட்டுக்குச் சேர்ந்து லோன் காசைக் கொண்டு போய்க் கட்டிரு.. என்னமோ சில்மி.. நாளைக்கு படைச்சவன் ரப்புக்கிட்ட நாம எல்லாரும் கணக்குக் குடுக்கணும். அவன் எல்லாம் அறிஞ்சவன். இருட்டில மறைவுல நடக்கிறதையும் அறிய வல்லவன்..'
'பாப்பம்.. அப்படித்தான் செய்ணும் நிஸ்மீ. நான் வாறேன். சுமைலாவை டியூசனுக்கு அனுப்பணும்'

பிறிதொரு நாள்..

'அக்கா அக்கா!' என்று யாரோ கூப்பிட்டார்கள்.

சமையலறையினுள் வேலையாக இருந்த நான் வெளியே வந்து பார்த்தபோது கையில் பைலுடன் ஒரு இளம் பெண் நின்றிருந்தாள்.

'அக்கா நான் சமூர்த்தி ஒப்ஃபிசிலிருந்து வாறேன். யுத்த காலத்தில பாதிக்கப்பட்டவங்கள்ற விபரம் எடுக்க வந்திருக்கிறம். அப்படி யாராவது உங்கட குடும்பத்தில இருக்காங்களா?' என்றபடி உள்ளே வந்தாள்.




'ஆ.. வாங்க தங்கச்சி. எங்கட வாப்பா முந்தி கடத்துப்பட்டவரு அதைப் போடலாமா?'

'எந்த வருசம் கடத்துப்பட்டவரு..?' என்று பேனையைத் திறந்தாள் அந்த யுவதி.

'அது வந்து 1988ம் வருசம் நடந்தது.. மரக்கறி கொண்டுவர தம்புள்ளைக்கு ட்ரைவராப் போனவருதான். இடையில யாரோ வேனோட கடத்திக் கொண்டு போயிட்டாங்க. இன்னும் திரும்பவேயில்ல உயிரோட இருக்காரா இல்லையாண்டு கூடத் தெரியாது' சொல்லும்போதே எனக்கு அந்த சிறுவயதுத் துயரம் மனதிலே நிழலாடி லேசாக அழுகை வரும்போலிருந்தது. கண்களை தாவணித் தலைப்பில் துடைத்துக் கொண்டேன்.

'1982ம் ஆண்டில இருந்து 2009 வரையில பதியலாம் அக்கா. ஆனா நீங்க கலியாணங் கட்டியிருக்கிறதால உங்கட குடும்பத்தில இதைப் பதிய ஏலாது. உங்களுக்கு கலியாணங்கட்டாத சகோதரம் யாராவது இருந்தா சொல்லுங்க. அவங்கட பேர்ல இதைப் பதியலாம். அரசாங்க நிவாரணம் கிடைக்கும்'

'அப்படி யாரும் இல்ல தங்கச்சி. என்ட சகோதரம் எல்லாரும் கலியாணம் கட்டிட்டாங்க. போன மாதம்தான் கடைசித் தங்கச்சிட கல்யாணம் கூட நடந்தது'

'சரி, அக்கா அப்ப நான் போய்ட்டு வாறேன்'

'இருங்க தங்கச்சி டீ ஏதும் குடிச்சிட்டு போகலாம்' என்றேன்.

'இல்லக்கா இந்த வளவுக்குள்ள இருக்கிற உங்கட மற்றக் குடும்ப ஆக்கள்ட விபரமும் பதியணும்.. நான் வாறேன்' என்று அவள் வாசல் கேட்டைக் கடந்து சென்றுவிட்டாள்.

அந்தப் பெண் சென்று சிறிது நேரத்தில், 'அடியே சில்மி.. அந்த சமூர்த்திக்காரி இஞ்சயும் வந்தாளா? யுத்த காலத்தில காணாமப் போனவங்களையெல்லாம் பதியிறாங்களாம்.. ஒங்கட வாப்பாட பேரைக் குடுத்தியா நீ? அரசாங்கத்தால நெறையக் காசு தரப்போறானாம்டி.. டீவியில சொன்னாங்க..' என்று பதறியபடி என் கேற்றைத் திறந்துகொண்டு ஓட்டமும் நடையுமாக உள்ளே விரைந்து வந்தாள் நிஸ்மி.

'இல்லை நிஸ்மீ. அது வந்து எங்க வாப்பாவுக்கு கலியாணமாகாத பிள்ளைகள் இருந்தாதான் தருவாங்களாம் என்று சொல்லிட்டாள். அதுதான் பதிய இல்ல.'

'போடி இவளே! ஒனக்கு புத்தியேயில்லடி'

'ஏண்டி அப்படிச் சொல்றா?'

'பிறகென்னடி..? எங்கட வாப்பாவும்தான் ஒங்கட வாப்பா தொலைஞ்ச நேரம்தான் மவுத்தாப் போனாரு. எனக்கும் சகோதரம் எல்லாரும் கலியாணங் கட்டிட்டாங்கதான்... ஆனா நான் நிவாரணத்துக்குப் பதிஞ்சுட்டேன் தெரியுமா?

' எப்பிடிடீ.. நிஸ்மீ? ஒங்க வாப்பா நெஞ்சு வருத்தம் வந்துதானே மவுத்தாகினாங்க?'

'ஓ! ஆனா அது யாருக்குடி தெரியப்போவுது..? நான் புலி புடிச்சிப்போய் அடிச்சிக் கொன்டுட்டாங்கன்டுதான் குடுத்திருக்கேன். அரசாங்கம்தானே சில்மி காசு தரப்போவுது.. அதால  நான் என்ட தங்கச்சி நுஸ்ரத்தை இன்னும் கலியாணங்கட்ட இல்லண்டு போட்டுப் பதிஞ்சிட்டுத்தான் வாறேன். நீயும் உன்ட தங்கச்சி றிஸானாட பேர்ல பதிஞ்சிருக்கலாமேடி மடைச்சி.. அது போன மாசம்தானே கலியாணங்கட்டுனிச்சு..? சரி சரி, நான் வாறண்டி' என்றபடி என் வீட்டு கேற்றைக் கடந்து தன் வீடுநோக்கி விரைந்தாள்  நிஸ்மி.

'எங்கடி நிஸ்மீ இப்பிடி அவசரமா ஓடுறா? கொஞ்சம் இரேன்?'

' இல்லடி, நான் போய்ட்டு வாறேன், லுஹர் தொழணும்..!'




-'மூதூர்' மொகமட் ராபி
(2013.12.12)




( குறிப்பு:  பயான் - இஸ்லாமிய மதப் பிரசங்கம்,  அபாயா – உடலை முமுமையாக மூடி பெண்கள் அணியும் மேலங்கி,  ரப்பு - இறைவன்,  மவுத்து – மரணம், )


 

Tuesday, December 17, 2013

நாடகம் : கோவில்யானை



நாடகப்பாத்திரங்கள்
 
 
 
 
 
சூரியகோடி - அமரபுரத்துஅரசன்
வஜ்ரி - அந்த அரசனுடைய ஒரேகுமாரன்
நித்தியராமன் - அமரபுரத்தில் ஒரு பெருஞ்செல்வன்
ரணதீரன் - அந்த நாட்டுக் குதிரைப்படைத் தலைவரில் ஒருவன்
சாத்தான் - அமரபுரத்துக் காளிகோயில் பூசாரி.
சந்திரவர்மன் - அங்கதேசத்து அரசன்மகன்; வஜ்ரிக்குத் தோழன்
வஜ்ரலேகை - நித்தியராமன்மகள்; வஜ்ரியின் காதலி
மந்திரிகள், சேனாதிபதிகள், வேலையாட்கள், தோழிகள் முதலியோர்.

காட்சி - 1
 
[அமரபுரத்தில் மிகக் கீர்த்தியும் செல்வமும் உடைய காளிகோயிற் புறத்தே விரிந்த பூஞ்சோலை; சுனைகளும் தடங்களும் நீரோடைகளும் நெருங்கி ஒளிர்வது. அங்கு ஒரு லதாமண்டபத்தில் வஜ்ரலேகை தனியே வீற்றிருக்கிறாள். முன் மாலைப்பொழுது; மிக அழகிய வெயிலொளி.]

வஜ்ரலேகை : (தனக்குள்ளே பேசிக்கொள்ளுகிறாள்.) நல்லையடா நீ! விதியே, நல்லை நீ. ஐந்து பிராயம் ஆகுமுன்னே என் தாயைக் கொன்றுவிட்டாய். என் பிதா தம்முடைய செல்வங்களையும் கவலைகளையும் ஒருங்கே ஒன்று, பத்து, நூறாயிரமாகப் பெருக்குவதிலேயே எப்போதும் ஈடுபட்டுப் போயினர். என்னைத் தவிர வேறுயாருக்கும் தம்பிடி செல்வம் உடைமையாகி விடாதபடி காக்கும் பொருட்டுத் தாம் இரண்டாந்தாரம் விவாகம் செய்யாமல் நிறுத்திக்கொண்டார். என் பொருட்டே தாம் உயிர்த்திருப்பதாகச் சொல்கிறார். என் குழந்தைகளும் என் புருஷனும் நானும் சந்தோஷமாக வாழ்ந்திருப்பதைத் தாம்பார்த்து விட்டுத்தான் சாகவேண்டும் என்ற எண்ணம் வைத்திருக்கிறார்.

அந்த எண்ணம் அவர் மனத்தை அட்டை போலக் கௌவிக்கொண்டிருக்கிறது. நல்லவேளை! எனக்கு இன்னும் கணவனும் குழந்தைகளும் ஏற்படவில்லை. அந்த நிலைமை இன்றைக்கு ஏற்பட்டால், அவர் அதைப் பார்த்துவிட்டு இன்றைக்கே இறந்துபோய் விடுவார் என்று தோன்றுகிறது. மேலும், இந்த எண்ணத்தை வைத்துக்கொண்டு, விரைவில் மணம் புரிந்துகொள்ளும்படி என்னைச் சதா அரித்துக்கொண்டே இருக்கிறார். செல் அரிப்பது போல் அரிக்கிறார். எனக்கோ வயது பதினாறு கழியவில்லை. ஆண்மக்களும் பெண்மக்களும் என்னை மிக அழகுடையவளென்று கருதுகிறார்கள். இந்தத் தேசத்து அரசன் மகனும் மகாசுந்தரபுருஷனும் இளம் பெண்களால் பிரத்தியட்ச மன்மதன் என்று போற்றப்படுவோனுமாகிய வஜ்ரி என்மீது பெருங்காதல் கொண்டிருக்கிறான். இப்படி எல்லா வகையிலும் குறைவின்றி இருக்கும் என் மனத்தைக் கூட விதியே, அடாவிதியே, விதியே, பாழ்த்த விதியே, நீ ஓயாமல் தீயிடைப்பட்ட புழுவைப் போலே துடித்துக்கொண்டிருக்கும்படி செய்வாயெனில் பொருளில்லார், அழகில்லார், மிடிமைக்கும் நோய்களுக்கும் இரைப்பட்டார் - மற்றைய மாதர்களின் மனத்தை என்படச்செய்வாயோ அறிகிலேன். கணவரை இழந்து, பொருளும் இன்றி, அழகும் இளமையும் தவறிய ஸ்திரீகள், காதல் சுவை இனியில்லையென்று தீர்ந்த நிலையுடையோர் எத்தனை ஆயிரம், எத்தனை லக்ஷம், எத்தனை கோடி! அவர்களுடைய அக வாழ்க்கை எங்ஙனம் இயலுகிறதோ? அவர்கள் மனத்தை எத்தனை கவலைப் புழுக்கள்அரிக்கின்றனவோ? அவர்கள் எங்ஙனம் ஆவிதரித்து நிற்கின்றனரோ அறிகிலேன். ஆ! இளமை கழிந்த பிறகும் காதல் சாகாதன்றோ? மனிதர், விதவைகளாகும்படி பலாத்காரம் செய்தாலும் இயற்கை நெறிமாறுமா? எல்லா உயிர்களுக்கும் எப்படியாவது சிறிது சிறிது சுகம் கிடைக்கத்தான் செய்யும். மேலும், உலகத்தில் இன்பம் யாருக்குமே இல்லை என்றும் இவ்வுலகம் எல்லா உயிர்களுக்கும் எப்போதுமே துன்பமயந்தான் என்றும் இந்தக் கோயில் தலைவியாகிய விலாஸினி சொல்வதுதான் ஒருவேளை உண்மையோ எப்படியோ? அப்போது, எனக்குள்ள செல்வமும் இளமையும் பேரழகும் எனக்கு இன்பந்தராமல் இருப்பது வியப்பாக மாட்டாதன்றோ? ஹும்! அப்படி இராது; இந்த உலகத்தில் ஏற்படக்கூடிய பலவகைத் துன்பங்களுக்குச் செல்வம் முதலியன மருந்தாகு மென்பதில் ஐயமே இல்லை. இன்பம் தவறாமல் இருப்பதற்கு வேண்டிய சௌகரியங்கள் பெரும்பாலும் நமக்கு இருக்கின்றன. இன்னும் எங்கேயோ ஒரு குறை இருக்கிறது. அதைக் கண்டுபிடித்து நிவிருத்தி செய்துவிட வேண்டும். இந்த உலகம் மாற்ற வொண்ணாத துன்ப இயற்கையுடையது என்போரின் வார்த்தையை நான் நம்பவே மாட்டேன்; மாட்டேன்; மாட்டேன்; மாட்டேன்! இங்கு நித்திய இன்பம் கண்டுபிடிக்க முடியுமென்று நமது வேதாரண்ய குரு சொல்வதையே நான் நம்புகிறேன்.
ஆனால்,அங்ஙனம் இன்பம் எய்தாதபடி நம்மைத் தடுக்கும் குறை எது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்.

(இவ்வாறு தன் மனத்துள்ளே பேசி வருகையில், கடைசி வசனம் அவளையும் மீறி உரத்த குரலில் வந்துவிட்டது. அப்போது அங்கு ரணதீரன் வருகிறான்.)

ரணதீரன் : பெண்ணே, உனக்கு நல்ல காதலன் இல்லாத குறைதான் இருக்கக் கூடியது. (நகைக்கிறான்.)

வஜ்ரலேகை : நீர் யார்?

ரண : அமரபுரத்து வேந்தனுடைய குதிரைப்படையில் நான் ஒரு தளகர்த்தன்.

வஜ்ர : இங்கு ஏன் வந்தீர்?

ரண : கோவிலுக்குப் பூஜைக்காக வந்தேன். மாலைப்பொழுது மிக இனிமையாகத் தோன்றிற்று. சோலையில் சிறிதுநேரம் உலாவி மகிழ்வோம் என்ற எண்ணத்தால் இப்புறம் வந்தேன். இங்கு வந்து நெடுநேரமாக நிற்கிறேன். உன் முகத்தையே பார்த்துக்கொண்டு நின்றேன். ஆனால் இதுவரை நீ என்னைத் திரும்பிப் பார்க்கவில்லை. ஏதோ, ஆழ்ந்த யோசனையில் இருக்கிறாய் என்று தெரிந்துகொண்டேன். கடைசியாக ஒரு வார்த்தை இரைந்து சொன்னாய். அதற்கு மறுமொழி சொன்னேன்.

வஜ்ர : நல்லது; நீர் போய்வரலாம்.

ரண : கண்மணியே, நின்மீது நான் கரைகடந்த காதலுடையேன்.

வஜ்ர : இங்கு நில்லாமல் போம்.

ரண : நான் இந்நகரத்துக்குத் திரைப்படையில் ஒரு தளபதி. என் பிதா பெரிய சேனாபதிகளில் ஒருவராக இருந்து, சமீபத்திலே நடந்த வங்கத்துப் போரில் மிக வீரத்துடன் உயிர் துறந்தார். எனக்குச் சைனியத்தில் நல்ல மதிப்பு இருக்கிறது. அரசன் நேரே என்மீது மிக்க அன்பு வாய்ந்தவன். ஆதலால் என்னை யாரோ ஒரு சாதாரண மனிதனாகக் கருதி நீ பேசுவது சரியல்ல. நான் உன்னைக் காதல் செய்வதால் உனக்கு எவ்வித அவமானமும் விளையாது. நான் உன்னை உலகறிய மணம் புரிந்துகொள்ளும் நோக்கமுடையேன். குலத்தில் க்ஷத்திரியன். நாட்டில் உயர்ந்த உத்தியோகம் வகிக்கிறேன். ஆதலால் நீ என்னை எவனோ கதியற்றவனென்று கருதிப் பேசுவதை நிறுத்தி எனக்கு அருள் புரிய வேண்டும். உன்னையன்றி உறுபுகல் வேறில்லை. உன்னைக் கண்ட அளவிலே காதல் கொண்டேன். இது முதற்காட்சியில் விளைந்த காதல். இதுவரை எத்தனையோ ஆயிரம் மகளிருடனே பழகியிருக்கின்றேன். எவளிடத்தும் என்மனம் இங்ஙனம் வீழ்ச்சி பெற்றதில்லை. நீ எனக்குக் கடவுள் காட்டிய பெருங்களிக்கோலம். என்னை இகழாதே! என்னைத் துரத்தாதே; என்மீது கருணை கொள். என்னைக் காதல்செய். எனக்கு நீயே கதி.
வஜ்ர : நீர் இங்கிருந்து போக உடம்படுகிறீரா, இல்லையா?

ரண : நீ நான் கேட்டதற்கு இரண்டில் ஒன்று மறுமொழி சொல். பிறகு நான் போய்விடுகிறேன்; நீ என்னைக் காதல் புரிந்து மணம் செய்துகொள்ள உடம்படுகிறாயா, இல்லையா?

வஜ்ர : நான் உம்மை மணம் புரிதல் சாத்தியப்படாது.

ரண : ஏன்?

வஜ்ர : நான் மற்றொருவனுக்கு என் சுகத்தை ஏற்கனவே வசப்படுத்தி விட்டேன்.

ரண : அவன் யாவனோ?

வஜ்ர : அவன் . . . அவன் . . . அவன் . . . இந்நகரத்தரசன் மகன், வஜ்ரி.
(அந்தச் சமயத்தில் வஜ்ரி வருகிறான். அவனைக் கண்டவுடன் ரணதீரன் கை கூப்பி வணங்குகிறான்.)

வஜ்ரி : கண்மணி! என் பெயரை எதற்காகச் சொல்லுகிறாய்? இந்த - நின் பெயர் என்ன தம்பி? ரணதீரனன்றோ? ஆம் - இந்த ரணதீரனை உனக்கு முன்னமே தெரியுமா?

வஜ்ர : நான் இவரை இதற்கு முன் பார்த்ததில்லை. இப்போது தான் இவர் இங்கு வந்தார். ‘யார் பொருட்டுக் காத்திருக்கிறாய்?’ என்று என்னிடம் கேட்டார். ஆதலால் நின் பெயரைச் சொன்னேன். நீ ஏன் இத்தனை கால தாமதப்பட்டு வந்தாய்?

(ரணதீரன் வணங்கி விடைபெற்றுச் செல்கிறான்.)

வஜ்ரி : நான் அம்மன் கோயில்யானையுடன் விளையாடிக்கொண்டிருப்பதில் எதிர்பார்த்ததற்கு மேல் அதிகப்பொழுது செலவிடும்படி நேர்ந்துவிட்டது. அங்கதேசத்து வேந்தன் மகன் சந்தரவர்மன் இந்நகரத்துக்கு வந்திருக்கிறான். அவனையும் கோயிலுக்கு அழைத்து வந்தேன். நானும் யானையும் விளையாடுவதைப் பார்த்து அவன் சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தான். அவன்மனம் விகற்பப்படாமல் அவனுக்கு உபசாரங்கள் செய்து அவனை அனுப்பிவிட்டு நேரே இங்கே வருகிறேன். அது நிற்க. நீ ஏதோ அஞ்சினவள் போலே காணப்படுகிறாயே. அந்த ரணதீர மூடன் நீ பயப்படும்படி ஏதேனும் செய்தானா? அப்படியானால் சொல்; அவனை இப்பொழுதே தேடிக்கொண்டு வரும்படி செய்து தக்க சிக்ஷை விதிக்கிறேன்.

வஜ்ர : அவன் தவறாக நடக்கவில்லை. நீ என்னை எப்போது மணம் புரிந்துகொள்ளப் போகிறாய்?

வஜ்ரி : என்கண்ணே, சந்திரவர்மனுடைய தங்கையை மணம் புரிந்துகொள்ளும்படி என் பிதா வற்புறுத்துகிறார். அந்த விஷயத்துக்காகத்தான் சந்திரவர்மனும் இங்கு வந்திருக்கிறான். நான் எப்படியாவது தந்திரம் பண்ணி அதைக் கலைத்து விடுகிறேன். பிறகு உடனே உன் விஷயத்தைப் பற்றி என் பிதாவுடன் பேசி அவரை நமது மணத்துக்கு இணங்கும்படி செய்துவிடுவேன். நீ பயப்படாதே. அடுத்த தை மாஸத்தில் நாம் மணம் புரிந்துகொள்வோம். அதுவரை, கருணை கூர்ந்து பொறுத்திரு.

வஜ்ர : ஏற்கனவே நீ என்மீது காதல் கொண்டிருப்பதனால், அங்கத்தரசன் மகளை மணம் புரிவது சாத்தியம் இல்லை என்று இப்போதே உன் பிதாவிடம் தெளிவாகவும் வெளிப்படையாகவும் நீ ஏன் சொல்லிவிடக் கூடாது?



வஜ்ரி : அங்ஙனம் சொல்லுதல் இப்போது சாத்தியம் இல்லை. என்னுடைய பிதாவின் குணம் உனக்குத் தெரியாது. அவர் வழியிலேயே நாம் விட்டுத் திருப்புவதுதான் அவரிடம் காரியத்தை வெல்லும்வழி.

(இருவரும் பிரிந்து செல்லுகின்றனர்.)


காட்சி - 2
 
 
[நித்தியராமன் வீடு. காலை நேரம். நித்தியராமன் காலையுணவு கழித்துச்
சந்தோஷமாகத் தாம்பூலம் தரித்துக்கொண்டிருக்கிறான். அப்பொழுது அவனிடம் ஒரு வேலையாள் வந்து சொல்லுகிறான்.]


வேலையாள் : ஐயனே, தங்களைத் தரிசனம் செய்ய வேண்டுமென்ற கருத்துடன் வெளியே ஒருவர் வந்து காத்திருக்கிறார்.

நித்தியராமன் : பெயர் விசாரித்தாயோ?

வேலையாள் : இல்லை; பார்த்தால் சைனியத்தைச் சேர்ந்தவர் போலே தோன்றுகிறது.

நித்திய : ஓஹோ! அப்படியானால் உடனே வரச்சொல்.

வேலையாள் : கட்டளைப்படி.

(உடனே சில க்ஷணங்களில் ரணதீரன் வந்து புகுகிறான்.)

நித்திய : தாங்கள் வெகுநேரமாகக் காத்திருக்கிறீர்களா? உட்காருங்கள். தங்கள் பெயர் யாது?

ரண : இப்போதுதான் வந்தேன். என் பெயர் ரணதீரன். நான் இந்நகரத்து அரசனுடைய குதிரைப்படைத் தலைவரில் ஒருவன்.

நித்திய : இங்கு எதன் பொருட்டு விஜயம் செய்தீர்கள்?

ரண : தங்களிடம் ஒரு வரம் கேட்கும் பொருட்டு.

நித்திய : என்ன வரம்?

ரண : தங்கள் குமாரியை எனக்கு மணம் புரிவிக்க வேண்டும்.

நித்திய : ஓ! ஐயமின்றி நடத்தலாம். உம்மைப் பார்த்தால் ஆணுக்கு ஆண் மையலுறத் தக்க அழகுடன் விளங்குகிறீர். உயர்ந்த உத்தியோகம் பார்க்கிறீர். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதுபோல் உம்முடைய முகத்தை நோக்கிய அளவில் நல்ல குணவான் என்று தெரிகிறது. அப்படியே செய்யலாம். ஆனால்,அந்தப் பெண்ணுடைய சம்மதத்தையும் தெரிந்துகொள்ள வேண்டும். அவளுக்கு ஒரு தக்க வரன் தேடிக்கொடுத்து, அவள் தன் கணவனுடனும் குழந்தைகளுடனும் மகிழ்ந்து வாழ்வதைக் காணும் பொருட்டாகவே நான் இன்னும் உயிர் தரித்திருக்கிறேன். எனக்கு இவ்வுலகத்தில் வேறு எவ்விதமான பற்றுதலும் இல்லை. அவளை நீர் நேரே பார்த்து அவளுடைய சம்மதத்தைத் தெரிந்துகொண்டீரா? இளம் பிள்ளைகள் - அதிலும் இக்காலத்துப் பிள்ளைகளுக்கு இதெல்லாம் சொல்லிக் கொடுக்க வேண்டுமா? அல்லது இப்போதே இங்கு அவளை வரவழைத்துக் கேட்போமே? யாரடா, ஏ வேலையாள்!

ரண : ஹா, ஹா, ஹா, வேண்டாம், வேண்டாம்! வேலையாளைக் கூப்பிடாதேயுங்கள். அவளையும் இப்போது இங்கே அழைப்பித்தல் வேண்டாம். தாங்கள் அவளிடம் தனியாகப் பேசி என்னை மணம் புரிந்துகொள்ளச் சொல்ல வேண்டும். அவள் என்னை ஏற்கனவே பார்த்திருக்கிறாள். என்னை ஒருவாறு விரும்பவும் செய்கிறாள் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், வேறொரு கொடிய துஷ்டனுடைய மயக்கத்தில் வீழ்ந்திருக்கிறாளாதலால் என்னை மணம் புரிய இயலாது என்கிறாள். அவன் வெறுமே இவளை மயக்கித் தன் இஷ்டம்போல் சிறிது காலம் வைத்துக்கொண்டிருந்து, அப்பால் சாற்றை உறிஞ்சிக்கொண்டு பழத்தோலை எறிந்து விடுவது போலே இவளை எறிந்துவிடக் கருதியிருக்கிறான். அவன் இவளைச் சடங்குகளுடன் சாஸ்திரோக்தமாக மணம் புரியப்போவதில்லை அவனால் அங்ஙனம் செய்ய முடியாது.

நித்திய : அவன் யார்? அவன் யார்? யார் அந்தப் பாதகன்?




ரண : அதை நான் சொல்லமாட்டேன். பின்னிட்டுத் தங்களுக்கே தெரியும். இந்தச் செய்தியை நான் சொன்னதாகக்கூடத் தங்கள் குமாரியிடம் தாங்கள் தெரிவிக்கக்கூடாது. தெரிவித்தால் காரியம் கெட்டுப்போகும். என்னை அவள் மணம் புரியவேண்டியது தங்கள் விருப்பம் என்பதை மாத்திரம் வற்புறுத்த வேண்டும். நான் இப்போது போய், நாளைக் காலையில் வருகிறேன். அப்போது எனக்கு முற்றும் அநுகூலமான உத்தரம் கொடுப்பீர்களென்று நம்புகிறேன்.
நித்திய : நல்லது, நீர் போய் வாரும். நல்ல சமயத்தில் எச்சரிக்கை கொடுக்க வந்தீர். பெரிய உபகாரம் செய்தீர். உமக்கே என் பெண்ணைக் கொடுக்கிறேன். யோசனை வேண்டுவதில்லை.

(ரணதீரன் போகிறான்.)

நித்திய : யாரடா, வேலையாள்!

(வேலையாள் வருகிறான்.)

வேலையாள் : ஐயனே, யாது கட்டளை?

நித்திய : வஜ்ரலேகையை அழைத்துவா.

வேலையாள் : குழந்தை வஜ்ரலேகை வீட்டில் இல்லை. சிறிது நேரத்துக்கு முன்புதான் வெளியே ஒரு தோழியுடன் சென்றாள். காளிகோயில் பெரிய பூசாரி வீட்டுக்குப் போயிருப்பதாகத் தோன்றுகிறது.

நித்திய : சரி; நீ போ. (வேலையாள் சென்ற பிறகு நித்தியராமன் தனக்குள்ளே யோசனை செய்கிறான்.) நாமும் அங்கே தான் போய்ப் பார்ப்போம். அந்தப் பூசாரி யோகியென்றும், மந்திரவாதியென்றும் பிரசித்தி அடைந்திருக்கிறான். அவனிடம் இந்தப் பெண்ணுடைய எதிர்கால வாழ்க்கையைப் பற்றி விசாரணை செய்யலாம். இவள் அங்கே போன நோக்கத்தையும் தெரிந்து வரலாம். என் வஜ்ரலேகையின் உள்ளத்தை மயக்கி அவளை வீழ்த்த விரும்புவதாக ரணதீரனாலே தெரிவிக்கப்பட்ட பாதகனைப் பற்றிய உளவுகளும் அங்கே கிடைக்கலாம் என்று தோன்றுகிறது.

(புறப்படுகிறான்.)



காட்சி - 3
 

[ராஜா சூரியகோடியின் அரண்மனையில் ஓர்அறை. அங்கு அரசன் தனியே ஒரு பொன்னாசனத்தின் மேல் வீற்றிருக்கிறான். அவனெதிரே மற்றோர் ஆசனத்தில் காளிகோயில் பெரிய பூசாரியாகிய சாத்தன் (முன்னர் சாத்தான் என உள்ளது) இருக்கிறான்.]


சூரியகோடி : இத்தனையும் மெய்தானா?

சாத்தன் : ஆம்.

சூரிய : இல்லையெனில்?

சாத் : என்னைச் சிரச்சேதம் செய்துவிடலாம்.

சூரிய : சரி. உண்மையென்று வைத்துக்கொள்வோம். இதைத் தடுக்க வழியில்லையா?

சாத் : எதைத் தடுக்க?

சூரிய : எல்லாவற்றையும். முதலாவது, நம் மகன் வஜ்ரி அந்தச் செட்டிமகளை மணம் புரியாதபடி தடுக்க வேண்டும்.

சாத் : அதற்கு வழி நான்அறியேன்.

சூரிய : உன்பலம், உன் சாஸ்திரபலம், உன்னுடைய கிரக நக்ஷத்திரங்களின் பலம் இத்தனையையும் கொண்டு இதைத் தடுக்க முடியாதா? தள்ளும், நான் செய்கிறேன்.

சாத் : தங்களால் முடியாது.

சூரிய : அது எப்படி?

சாத் : மனிதர், பூதங்கள், தேவகணங்கள், யாவராலும் காதலின் வலிமையைக் கடக்க முடியாது. தங்களுடைய குமாரனும் அப்பெண்ணும் தம்முள்ளே மெய்யான காதல் கொண்டிருக்கின்றனர்.

சூரிய : எப்படி? எப்படி? மெய்க்காதலா? அதன் இயல்பு என்னே? எங்குளது? அதனைக் காவியங்களிலன்றி நாம் உலக வாழ்க்கையில் காண்பதில்லை. தோன்றி மறையும் விருப்பமே இயற்கையில் உள்ளது. அது மெய்க் காதலாகாதன்றோ?

சாத் : காவியத்துக் காதல் எங்ஙனமோ தங்கள் மகனுக்கும் அச்செட்டி மகளுக்குமிடையே மூண்டு விட்டது.

சூரிய : அதைத் தடுப்பேன். தடுத்தே தீர்வேன்.

சாத் : முடியாது; முடியவே முடியாது.

சூரிய : என் சொல்லுக்கு இணங்காவிடின் வஜ்ரிக்குப் பட்டம் இல்லை என்று நீக்கிவிட்டு மற்றொரு குமாரனை ஸ்வீகாரம் செய்துகொள்வேன். என் விருப்பத்தைக் கேள். அந்த ரணதீரன் என்ற குதிரைப்படைத் தலைவன் செட்டி மகளாகிய வஜ்ரலேகையை மணம்புரிந்து கொள்ள வேண்டும். நமது வஜ்ரி அங்க தேசத்து அரசன் மகளை மணம் புரிந்து கொள்ள வேண்டும். இப்படி நடந்தால் எல்லோர் மனமும் திருப்தி அடையும். இவ்விரண்டு விவாகங்களையும் இநத மாத முடிவுக்குள்ளேயே நடத்தி விடலாம் என்று நினைக்கிறேன். இது என் தீர்ப்பு. இதை நீ இப்போதே போய் வஜ்ரி, செட்டி, ரணதீரன் எல்லோருக்கும் தெரிவித்து விடு. என் ஆக்கினையைக் கடந்து என் நாட்டில் ஒன்றும் நடக்கக் கூடாது.

சாத் : ஐயனே, ஹூணதேசத்திலிருந்து, சிறிது காலத்துக்கு முன்பு ஒரு படிப்புள்ள வியாபாரி இங்கு வந்திருந்தார். அவர் எனக்கு ஒரு கதை சொன்னார். தேவரீர் இப்போது கொடுத்த உத்தரவைக் கேட்டபோது எனக்கு அந்தக் கதை நினைப்புக்கு வருகிறது. அந்தக் கதையிலே, ஹூணதேசத்து வேந்தன் ஒருவன், தன்மந்திரியுடன் கடற்கரையிலே அலைமோதும் இடத்தில் சென்று நாற்காலிகள் போட்டு உட்கார்ந்து கொண்டு கடலை நோக்கி, ‘கடலே, நான் பூமண்டல சக்கரவர்த்தி; என் கட்டளைகளுக்கு நீயும் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்; இதோ ஒரு கட்டளையிடுகிறேன். முதலாவது அதன்படி நட. நாம் இருக்கும் இடத்தில் அலை எறியாதே; சற்றுப் பின்னே விலகிப்போ’ என்றானாம். உடனே, தற்செயலாகக் கடலில் பிரமாண்டமானதோர் புதிய அலை வந்து அவ்விருவரின் நாற்காலியையும் மோதிக்கொண்டு போய்விட்டதாம். அவர்கள் உயிர் தப்புவது பெருங்கஷ்டமாயிற்றாம். அந்த ஹூணராஜன் ஜடமான கடலுக்கு ஆக்கினை பிறப்பித்து வெட்கமடைந்தான். தாங்களோ, ஸூக்ஷ்ம சக்திகளுக்குள்ளே ஸப்த ஸாகரங்களும் கலந்த சக்தியென்று சொல்லத் தக்கதாகிய மூலசக்தியை எதிர்த்துக் கட்டளை போட உத்தேசிக்கிறீர்கள். ஆலை பலாவாக்கினாலும் ஆக்கலாம். மனிதருக்குள்ளே தலைமைப்பட்டோரிடம் வீண் கட்டளை பிறப்பிக்கும் இயல்பு நேராமற் செய்வது பெருங்கஷ்டம்.

(அரண்மனை வாயிலில் கூகூ என்று பலவிதமான ஒலிகள் எழுகின்றன. நாலைந்து வேலையாட்கள் தலை அவிழ, மொழிகுழற, அரசன் முன்னே வந்து நிற்கின்றனர். ஒவ்வொருவனும் இன்னது சொல்வதென்று அறியாமல் திணறுகிறான்.)

சூரிய : என்னேடா கிளர்ச்சி! எதன் பொருட்டு இத்தனை அல்லோலகல்லோலம்? யாது நிகழ்ந்தது? சொல்லுமின்களடா!
முதல் வேலையாள்: ஒரு குடம் ரத்தம்!

இரண்டாம் வேலையாள்: மண்டை கீறிப் போய்விட்டது . . . மூக்கில்குத்தி . . . வாய் கிழிந்திருக்கிறது!

மூன்றாம் வேலையாள்: பிரக்கினை போய்விட்டது!

முதல் வேலையாள்: பிரக்கினை திரும்ப வந்துவிட்டது! இளவரசன் இன்னும் சாகவில்லை.
சூரிய : என்னடா? யார், யார்? இளவரசனா? வஜ்ரியா? நடந்தது என்ன? அவனை யார் வெட்டினார்கள்? தெளிவாகச் சொல்.

முதல் வேலையாள்: காளிகோயில் யானை. அதற்கு மதம் ஏறியிருக்கிறது. முன்பு இரண்டு கால்களுக்கு மாத்திரம் சங்கிலி போட்டுக் கட்டியிருந்தார்கள். இப்போது ஒரு வாரமாக நான்கு கால்களுக்கும் விலங்கிட்டிருக்கிறார்கள். அங்க தேசத்தரசன் மகனோடு, நம் இளவரசன் யானைக்குப் பழம் கொடுக்கப் போனார்.
சூரிய : கோயில்யானையா? என் மகனையா அடித்தது? நான் கெட்டேன் - ஆ! மகனே!


(மூர்ச்சை போட்டு விழுந்துவிட்டான்.)


சாத்தன் : கேளப்பா, ஏ வேலையாள்! இளவரசனைப் பற்றிப் பிறகு கவனிப்போம். முதலாவது இங்கு மூர்ச்சை போட்டு விழுந்திருக்கும் அரசனுக்கு வேண்டிய சிகிச்சைகள் செய்ய வேண்டும். இவரைத் தூக்குங்கள்; படுக்கை அறையிலே கொண்டு போடுங்கள். நான் குணப்படுத்தி விடுகிறேன்.
(வேலையாட்கள் மூர்ச்சை போட்டு விழுந்த சூரிய கோடியைத் தூக்கிக் கொண்டு செல்லுகின்றனர்.)


காட்சி- 4
 

[அரண்மனை. வஜ்ரியும் அங்கத்தரசன் மகன் சந்திரவர்மனும் வஜ்ரலேகையும் இருக்கின்றனர்.]

சந்திரவர்மன் : எதற்கும் வஜ்ரி இப்போது அதிகமாக வார்த்தை சொல்லாமல் இருப்பது நன்று. யார் வந்தாலும் அவர்களுக்கு நானே மறுமொழிகள் சொல்லலாம் என்றும், வஜ்ரி வாய் திறந்தாலே கெடுதி என்றும், அரண்மனை வைத்தியர் பலமான எச்சரிக்கை கொடுத்துப் போனார். நடந்ததை நான் சொல்லுகிறேன்.

வஜ்ரலேகை : சரி, நீங்களே சொல்லுங்கள். முழு விவரமும் சொல்ல வேண்டும்.

சந்திர : அந்த யானைக்கு மதமேறியிருக்கிறதென்று எங்களிடம் யாரும் தெரிவிக்கவில்லை. நாங்கள் - இருவரும் அங்கே போன போது பாகன் இல்லை. புறத்து வேலியைச் சுற்றி நூற்றுக்கணக்கான ஜனங்கள் நின்றுகொண்டிருந்தனர். அந்த யானைக்குச் சமீபமாக வஜ்ரி நேரே சென்றான். நானும் வேலிப் புறத்தே நின்றேன். தொலைவிலிருந்து பார்த்தால் போதுமென்று நான் சொன்னேன். வஜ்ரி அது தனக்கு மிகப் பழக்கமென்றும் தன்னிடம் பூனைக் குட்டி போலே நடந்துகொள்ளும் என்றும் சொல்லி விட்டுச் சமீபத்திலே சென்றான்.

வஜ்ர : ஆம், நமது வஜ்ரியை வேலிப் புறத்தே கண்டால், நின்றுகொண்டிருக்கும் அந்த யானை கீழே படுத்துத் துதிக்கையைத் தூக்கி வணங்கி விட்டு மறுபடி எழுந்து நிற்கும். நான் நேராகவே பன்முறை இதனைப் பார்த்திருக்கிறேன்.

சந்திர : ஆனால் இந்தமுறை துரதிருஷ்டவசத்தால் இவன் நேரே தன் முகத்தைக் காட்டாமல் தலையைக் குனிந்து கொண்டு யானையிடம் சென்றான். அப்படிக்கு அது அதிகமாக ஒன்றும் செய்யவில்லை. துதிக்கையால் இவளைத் [இவனைத்] தள்ளி வீழ்த்திவிட்டது. கீழே ஒரு கல் மண்டையில் அடித்து ரத்தம் வெள்ளமாகப் பெருகிற்று. யானை அதைக் கண்ட மாத்திரத்தில் திடுக்கிட்டுப் போய்விட்டது. அப்போது நான் அந்த யானையின் முகத்தை உற்று நோக்கினேன்; ஓரிரு க்ஷணங்கள் தன் துதிக்கையால் வஜ்ரியின் கால்களைத் துழாவிக்கொண்டிருந்தது. இவன் பிரக்கினையின்றிக் கீழே அதன் முன்பு வீழ்ந்து கிடக்கிறான். ‘உம், உம்’ என்று ஒருவித உறுமுதல் இவன் வாயினின்றும் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. யானை, தன் தந்தையுடைய கடிகாரத்தை வீழ்த்தியுடைத்து விட்டுப் பின் பச்சாதாபமெய்தும் குழந்தை விழிப்பது போலே விழித்துக்கொண்டு நின்றது. ஓரிரு க்ஷணங்களுக்கப்பால், நான் மனத்தைத் தைரியப்படுத்திக்கொண்டு வேலிக்குள் இறங்கி இவனை வெளியே தூக்கி வந்தேன். வெளியே கொண்டு வந்து நிறுத்திய அளவிலே இவனுக்குப் பிரக்கினை மீண்டு விட்டது. இதுதான் நடந்த சங்கதி.

வஜ்ர : ரத்தச் சேதம் மிகவும் அதிகம் என்கிறார்களே!

சந்திர : ரத்தம் அதிகம் வடிந்து சென்றுவிட்டது எனினும் காயம் பெரிது அல்ல. உயிருக்கு அபாயம் இல்லை. காயம் சிறிதுதான். வைத்தியர் வந்து உதிரத்தைக் கழுவிக்கட்டுக் கட்டும்போது நான் நன்றாகப் பார்த்தேன். புண் சிறிது.

வஜ்ரி : கண்ணே நீ அஞ்சாதே! நின் பொருட்டாக நான் பிழைப்பேன்.
(இங்ஙனம் அவன் சொல்லுகையில் அவன் வாய் வழியாக ரத்தம் ஒழுகுதல் கண்டு வஜ்ரலேகை மூர்ச்சை போட்டு விடுகிறாள். அவளைத் தெளிவித்து எழுப்புதற்குரிய முயற்சிகளைச் சந்திரவர்மன் செய்கிறான். பிறகு அவளையும் ஒரு தோழியையும் பல்லக்கில் ஏற்றி வீட்டுக்கு அனுப்பி விடுகிறார்கள்.)


ந்திரவர்மன் : ஆ! காதலென்பதை இன்றுதான் கண்டேன். வஜ்ரி, நீ அதிருஷ்டசாலி. உன்னை யானை அடித்ததுகூட எனக்குப் பொறாமை உண்டாக்குகிறது. என்னை ஒரு யானை அடித்து, எனக்காக ஒரு பெண் இப்படி மூர்ச்சை போட்டு விழுவதை நான் பார்க்க விரும்புகிறேன். ஸ்திரீகள் மூர்ச்சையுறுதல் புதுமை அல்ல. ஆனாலும் இவளுடைய மூர்ச்சை மாதிரி வேறு. இவளுடைய காதலே புதிது. ஆ! வஜ்ரி! நீ அதிருஷ்டசாலிகளிலே சிறந்தவன். இனி என் தங்கையை நீ மணம் புரிந்துகொள்வதென்ற பேச்சை அடியோடு நிறுத்தி விடுவதற்குரிய ஏற்பாடுகள் நானே செய்கிறேன். உன் பிதாவுக்கும் நானே தெளிவேற்படுத்துகிறேன். நீ எதற்கும் யோசனை பண்ணாதே. இப்போது நீ இங்கே தனியாக இருப்பது நன்று. யாரிடமும் பேசாதே. வாய் திறக்கக் கூடாது. தூங்க முயற்சி பண்ணு. நான் போய் வருகிறேன்.


(விடை பெற்றுச் செல்லுகிறான்.)



காட்சி - 5
 


[அமரபுரத்து அரசனாகிய சூரிய கோடியின் சபை. மந்திரிகள் சேனாதிபதிகள் முதலியோர் புடை சூழ அரசன் வீற்றிருக்கிறான். அந்தச் சபையில் சத்தியராமன்1, வஜ்ரலேகை இருவரும் வந்திருக்கிறார்கள். வஜ்ரியும் தலை, வாய்களுக்குக் கட்டுகள் கட்டிக்கொண்டு வந்து வீற்றிருக்கிறான்.]

சூரியகோடி: சபையோர்களே, குடிகளே,! தசரதன் ஸ்ரீராமமூர்த்தியை மகனாகப் பெற்று மகிழ்ந்தான். நான் வஜ்ரியைப் பெற்றேன். இவன் ஆண்டிலே குறைந்தவனாயினும், அறிவிலும் வீர்த்தன்மையிலும் இக்காலத்து ராஜகுமாரர்களுக்குள்ளே சிறந்து விளங்குகிறான். கல்வி கேள்விகளிலே இவன் நம்நாட்டுப் பண்டித சிகாமணிகளால் பெரிதும் வியக்கப்படுகிறான். இவன் பெரிய வேதாந்தி என்றும் ஆன்ம ஞானி என்றும் பல மேதாவிகள் தெரிவிக்கிறார்கள்.

(Note:1. இந்த ஓரிடத்திலும் பின்னர் ஓரிடத்திலும் நித்தியராமன் என்னும் பெயர் சத்தியராமன் என உள்ளது. பிற இடங்களில் எல்லாம் நித்தியராமன் என்னும் வடிவமே உள்ளது.)

இன்றுகாலையிலே இவன் ஏறக்குறைய இறந்து பட்டானென்ற செய்தி இந்த நகர் முழுதும் பரவிக் குடிகளனை வரையும் பெருந்துயரில் வீழ்த்திற்று. இன்று மாலை இவன் நேரே நமது சபைக்கு வந்து, தனக்கு லேசான உராய்தலையன்றி வேறொன்றும் இல்லை என்று சொல்லி நம்மிடையே பூர்ணசந்திரனைப் போல் வீற்றிருக்கிறான். இவனுக்கு நீங்கள் எல்லீரும் மனப்பூர்வமான ஆசீர்வாதங்கள் செய்தருள வேண்டும். இவனை வானவர் மார்க்கண்டன் போலே வாழ்விக்கக் கடவர். இன்று உங்களுக்கெல்லாம் நான் மிகவும் சந்தோஷமான செய்தி ஒன்று சொல்லப் போகிறேன். என் மகன் ஞானியாதலால் பல விஷயங்களில் சாதாரண லௌகிக வழக்கங்களை மீறி நடக்கிறான். அது எனக்குப் பல சமயங்களில் வருத்தம் உண்டாக்குகிறது. எனினும் என் செய்யலாம்? அவன் செய்வதுதான் நியாயமென்று பல முதியோர்களே சொல்லுகின்றனர். நாம் முற்கால விதிகளால் கட்டுப்பட்டிருக்கிறோம். அவன் எதிர்கால நிலை உணர்ந்தவனா கையால், எதிர் காலவிதிகளின்படி நடக்கிறானென்று பண்டிதர்கள் சொல்லுகிறார்கள். திருஷ்டாந்தமாக, எங்கள் குலத்துக்குள்ள பொது வழக்கத்தின்படி இவனுக்கு ஒரு ராஜகுமாரியையே மணம் புரிவிக்க வேண்டுமென்று நான் நிச்சயித்திருந்தேன். இவனோ, நமது நகரத்து வைசியர்களில் மிகக் கீர்த்தி பெற்ற சத்தியராமச் செட்டியின் குமாரியையே மணம் புரிய உடம்படுகிறான். எதிர்கால உலகத்தில் காதல் ஒன்றையன்றி அசாசுவதமான பதவி வேற்றுமைகளைக் கருதி விவாக சம்பந்தங்கள் செய்துகொள்ளப்பட மாட்டாவாம். அதற்கு இவன் தானே ஒரு வழிகாட்டியாக நின்று, அமரபுரத்து அரண்மனையில் பட்ட மஹிஷியாக ஒரு வைசியகுமாரியைப் புகுத்த விரும்புகிறான். என் விருப்பத்தை மாற்றி நான் இவனுடைய கருத்துக்கு இணங்கி விட்டேன்.

அதனுடன், எனக்கு வயதுமுதிர்ந்து விட்டபடியால், இவனுக்கு மகுடம் சூட்டி விட்டு நான் மிஞ்சியுள்ள வாழ்க்கையை ராஜ்யப் பொறுப்புகளின்றி அமைதியுடன் கழிக்க நிச்சயித்திருக்கிறேன்.

மந்திரிகளே, குருக்களே, சேனாதிபதிகளே, நண்பர்களே!

என் மகன் வஜ்ரிக்கும் வஜ்ரலேகைக்கும் விவாகச் சடங்குகள் இந்த வாரத்துக்குள்ளே தொடங்கிவிடும். இனி உங்களுக்கு ராஜா வஜ்ரி, ராணி வஜ்ரலேகை. இந்திரனும் இந்திராணியும் போல் இவ்விருவரும் நீடுழி ஆட்சி புரிய இந்நாடு மிகவும் கீர்த்தியும் சகல நன்மைகளும் பெற்று ஓங்குக!

(வாத்தியகோஷம். வெடிகள் தீர்த்தல் முதலிய ஆரவாரங்கள்.)

-ஸி. சுப்பிரமண்யபாரதியார்

(கலைமகள் , ஜனவரி, 1951, பக். 83-90)
 
 
Thanks : Kaalachuvadu

Monday, December 16, 2013

சிறுகதை : அதே நாள்.. அதே நேரம்!







யில்வே குவார்ட்டஸில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்த சரக்கு எஞ்சின் சாரதி லசந்த பெரேராவுக்கு சரியாக அதிகாலை 4.55க்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. தூக்கம் கலையாமலே, 'நிமால்.. என்னடா இது..? அதுக்குள்ள எழுப்பிக்கிட்டு.. எட்டு மணிக்குத்தானே ட்யூட்டி?'

'அண்ணே.. ஒடனே எழும்பி கெதியா வேர்ஹவ்சுக்கு வாங்கண்ண..!' அவன் குரலில் ஒட்டியிருந்த கலவரம் அவரது தூக்கக் கலக்கத்தை முறித்துப்போட்டது. நிமால் அவரோடு எஞ்சின் உதவியாளனாக வேலை செய்பவன்.

'என்னடா இப்பிடி பதறுற.. எஞ்சின்ல ஏதும் பிரச்சினையா..?'

'எஞ்சினே பிரச்சினையாகிட்டுண்ணே..' என்று ஆரம்பித்து அவன் விபரத்தைச் சொன்னதும் அவரது இதயம் சில கணங்கள் நின்று போனது. அவசர அவசரமாக முகம் கழுவி உடைமாற்றி அடுத்த அறையில் கம்ப்யூட்டரைக் கூட அணைக்க மறந்து தூங்கிக் கொண்டிருந்த மகனை எழுப்பி கதவைப் பூட்டிக்கொள்ளச் சொல்லிவிட்டு தெமட்டகொடைக்கு விரைந்தார் லசந்த பெரேரா.

ரயில்வே வேர்ஹவுஸில் ஒரு பெரும்கூட்டமே கூடியிருந்தது.

'என்ன லசந்த இப்பிடிப் பண்ணிட்டே.. எத்தனை தரம் சொல்லியிருக்கேன் எஞ்சினை ஸ்டார்ட்ல வைக்காத வைக்காதேன்னு.. இப்ப பாரு உன்ட 'கலுபல்லா' எஞ்சின் ஆளே இல்லாம எங்க வரைக்கும் போயிருக்கு பாத்தியா? கல்கிசையில வச்சு ஊர்ச் சனங்கள் தொரத்திப்போய் ஏறி ரத்மலானையில வச்சுத்தான் கஷ்டப்பட்டு நிப்பாட்டிருக்காங்க தெரியுமா? இப்ப என்ன பண்றது..? ஹெட் ஒஃபிசிலருந்து டெலிபோன் மேல டெலிபோனா வந்திட்டேயிருக்கு.. இப்ப என்னைத்தான் சஸ்பெண்ட் பண்ணுவாங்க பாரு' என்றார் வேர்ஹவுஸ் எஞ்சினியர் இல்யாஸ்.

'அதை இரவெல்லாம் ஸ்டாட்ல வச்சாத்தான் ஸேர் காலையில கிளப்பலாம். அப்படி ஒரு 60 வருசத்துப் பழைய எஞ்சினை வச்சுக்கிட்டு நான் இருபத்தியாறு வருசமா மாரடிக்கிறேன்.. அதெல்லாம் நம்ம டிப்பாரட்மென்டுக்குத் தெரிய வராது.. இதுக்கு மட்டும் வந்திடுவாங்க ஸேர்'

'அதெல்லாம் நம்ம சொல்ல ஏலாது லசந்த. அதெப்படி உன்னோட 'கலுபல்லா' அதுவாக கிளம்பி அவ்வளவு தூரம் போகும்?'

'அதுதான் ஸேர் நானும் யோசிக்கிறேன். இதுக்கு முதல் ஒருதடவை கூட இப்பிடி நடக்கயில்லியே.. ப்ரேக் லீவர் எல்லாம் சரியாத்தான் போட்டு வச்சிருந்தேன். அதை யாராவது ரிலீஸ் பண்ணாம கிளம்பவே கிளம்பாதே.. வேணுமென்றே யாராவது செய்திருப்பாங்களா..?'

'சேச்சே! இங்க உன்னைத்தவிர யாருக்கு அதுக்கிட்ட போகத் தைரியமிருக்கு? 'கலுபல்லா' என்றது கூட நீ வச்ச பேருதானே? அது உனக்கிட்ட மட்டும்தான் சொல்லுக்கேட்கும்.. வா இப்ப ஒருக்கா நாம ரத்மலானைக்குப் போயிட்டு வருவோம்.. நிமால் நீயும் வந்து ஏறு!'

'ஸேர், திடீரெண்டு குவாட்டஸ்லருந்து ஓடி வந்திட்டன். மகன் ஸ்கூலுக்குப் போகணும். இன்டைக்கு மனுஷியும் வீட்ல இல்ல.. ஊருக்குப் போயிருக்கா நான் ஒருக்கா..' என்று இழுத்தார் பெரேரா.

'ஐயோ.. நிலைமை தெரியாம பேசிட்டிருக்கிறியே.. உன்ட மகன் என்ன நேர்ஸரிக்கா போறான்? ஏஎல் படிக்கிற பையன்தானே.. அதெல்லாம் பாத்துக்குவான். இன்டைக்கு முழுக்க விசாரணை அது இதென்டு சோறு தண்ணியில்லாம அலையப்போறோம். இப்ப ரெண்டு பேரும் வாகனத்துல வந்து ஏறுங்க!' என்றபடி தன்னுடைய பிக்-அப்பை நோக்கி முன்னால் நடந்தார்.

'சே! அவசரத்துல செல்போனைக்கூட கொண்டு வரலடா நிமால்' என்றபடி இல்யாஸ் எஞ்சினியரைப் பின்தொடர்ந்தார் லசந்த.

'கிட்டத்தட்ட 15-16 கிலோமீற்றர் கல்கிசை போகும் வரைக்கும் எத்தினை ஸ்டேசன்..? இடையில யாருமே கவனிக்காம இருக்கிறதென்டா நம்ம ரயில்வே எவ்வளவு கவனக்குறைவா இருந்திருக்கு பாத்தீங்களா ஸேர்?' என்றான் நிமால்.

'நல்லவேளை.. அந்த நேரம் ட்ரக்குல இடையில வேற ரயில் எதுவும் வரல்ல. அப்பிடி வந்திருந்தால் நாம மூணுபேரும் இப்படிப் பேசிக்கிட்டிருக்க மாட்டோம். அந்த அல்லாஹ்தான் காப்பாத்துனான்'

இரத்மலானையில் மூவரும் சென்று இறங்கியபோது அங்கு நின்றிருந்த 'கலுபல்லா' ஒன்றுமே நடவாததுபோல அமைதியாக நின்றிருக்க ரயில்வே அதிகாரிகள் பொதுமக்கள் டீவி கமராக்கள் என்று கூட்டம் எஞ்சினை மொய்த்திருந்தது. புகையிரத வீதியோரமாக இருந்த கடைத்தெருவிலே பொலீஸ் மக்கள் கூட்டத்தை விரட்டியடித்துக் கொண்டிருந்தார்கள்.

'இவர்தான் அந்த எஞ்சின் ட்றைவராம்'

'இவரால மட்டும்தான் இதை ஓட்ட ஏலுமாம்?'

'ஏதோ ஆவிகள்ற வேலைதானாம்' என்று கூட்டத்தில் இஷ்டத்திற்கு அவிழ்த்தார்கள்.

அதற்குள் உள்ளுர் தொலைக்காட்சிச் சேனலில் இன்டவியூவுக்கு வந்தவர்கள் போல டை கட்டியிருந்த மூன்றுபேர் காமிராவைப் பார்த்து, 'இன்று அதிகாலை 1.45 மணியளவில் மருதானை மாளிகாவத்தை புகையிரத திருத்த நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆளில்லாத எஞ்சின் ஒன்று தானாகவே புறப்பட்டு..'  என்று மாற்றி மாற்றி மூன்று மொழியிலும் ப்ரேக்கிங் நியூஸ் வாசித்தார்கள்.



000
 
 

 

ரவு லசந்த பெரேரா குவார்ட்டசுக்கு வந்து சேர்ந்தபோது அவரது மகன் வீட்டிலிருக்கவில்லை. வீட்டுத் திறப்பை பூச்சாடியின் கீழ் வைத்துவிட்டுப் போயிருந்தான். கதவைத் திறந்து அங்கிருந்த குஷன் கதிரையில் களைத்துப்போய் லசந்த விழுந்தார். டீவியில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ரயில்வே அமைச்சரை ஒரு பிடிபிடித்துக்கொண்டிருந்தார்.

அப்போது கதிரையில் கிடந்த செல்போன் சிணுங்கியது. ஊருக்குச் சென்றிருந்த அவருடைய மனைவி மல்காந்தி.

'ஹலோ! சொல்லு'

'என்னங்க.. எத்தினை கோல் எடுத்தன்.. ஏன் இவ்வளவு நேரமும் போனை எடுக்கல்ல?  என்ன நடந்தது..? நான் டீவியில் பாத்துத்தான் விசயத்தையே அறிஞ்சேன். அங்க இப்ப என்னதான் நடக்குது..? நான் காலையில கிளம்பி வரவா?' என்றாள் மூச்சு விடாமல்.

'ஒண்ணுமில்ல மல்.. இன்டைக்கு சாமத்துல நம்ம 'கலுபல்லா' தன்ட பாட்டுக்கு கிளம்பி ரத்மலான வரைக்கும் போயிட்டுது.. நான் எவ்வளவு சொல்லியும் டிப்பாட்மென்ட்டுல கேக்குறாங்க இல்லப்பா. விசாரணை முடியும் வரைக்கும் என்னையும் நிமாலையும் சஸ்பெண்ட் பண்ணியிருக்காங்க..'

'இதென்ன அநியாயம்..? நீங்க நிப்பாட்டிட்டு வீட்டுக்கு வந்த பிறகு எஞ்சின் தானாகக் கிளம்பிப்போனா அதுக்கு நீங்க என்ன பண்ணுவீங்க.. வேர்ஹவுஸ் ஆக்கள்தானே பாத்திருக்கணும். உங்களை எப்படி வேலையிலிருந்து நிப்பாட்டலாம்?'

'அதுசரிதான்.. கவலைப்படாத.. காரணத்தை விசாரிச்சுக் கண்டு பிடிக்கும் வரைக்கும்தான் சஸ்பெண்ட். நீ வர வேணாம். நான் சமாளிச்சுக்கிறேன்.. எங்க இல்யாஸ் மஹத்தயா இது சம்பந்தமா எனக்கு சப்போர்ட்டாகத்தான் இருக்கிறாரு.. எங்கட யூனியன் ஆக்களும் சஸ்பெண்டை எதிர்த்து நாளைக்கு ஸ்ட்ரைக் ஒண்ணு பண்ண இருக்கிறாங்க.. மல், எனக்கு ஒரே ஒரு கவலைதான்.'

'சொல்லுங்கப்பா.. என்ன அது?'

'கலுபல்லா மற்ற எஞ்சின்கள் மாதிரியில்ல. அது கோளாறு புடிச்சது. ஆனா நான் சொன்னதைக் கேட்கும்.. ஆமா, நானாகவே கண்டுபுடிச்ச ஒரு டெக்னிக்லதான் அதை நான் கிளப்புவேன். அதால.. என்னைத் தவிர வேற யாராலயும் கலுபல்லாவை லேசில கிளப்ப ஏலாது.. அந்த டெக்னிக்கை என்கூட வேலை செய்யிற க்ளீனர் நிமாலுக்குக் கூட நான் காட்டிக் குடுத்ததில்ல.. அப்படியிருக்க எப்படி அது தன்னால போயிருக்கும் என்டதுதானப்பா.. தெரியல்ல'

'ஏன் தெரியாது? அது எனக்குத் தெரியுமே..'

'ஏய் என்ன சொல்றாய் நீ?'

'அதுதான் என்னையும் நம்ம மகன் வசந்தயும் ஒருநாள் உங்கட கலுபல்லாவில கொழும்புக்கு கூட்டிப்போனீங்களே.. அப்ப எப்பிடி அதைக்கிளப்புறதென்டு எங்களுக்கு காட்டினீங்களே.. மறந்திட்டீங்களா?'

'அட ஆமாம். நானே மறந்திட்டன்.. அப்ப நீதான் நேற்றிரவு தங்கால்லயிலருந்து பறந்து வந்து கலுபல்லாவைக் கிளப்பி விட்டுட்டுத் திரும்பிப்போனியா என்ன?'

'பகிடி இருக்கட்டும்.. போகாந்திய விகாரைக்கு போய் எதுக்கும் ஒரு பூஜை ஒண்டு செய்துட்டு வாங்கப்பா.. ஏதாவது ஆவி வேலையோ என்னமோ யாருக்குத் தெரியும்?' என்றாள்.

000
 
 

 

தற்கடுத்து வந்த நாட்கள் முழுவதும் விசாரணை, யூனியன் போராட்டம் என்று அலைந்து திரிந்ததில் வீட்டையே கவனிக்க முடியவில்லை லசந்த பெரேராவினால்.

'என்னங்க நானும் ஊரிலேருந்து வந்த நாளிலேருந்து பார்க்கிறேன்.. என்ன எப்ப பார்த்தாலும் இப்பிடி ஓயாம யோசிச்சுக்கிட்டே இருக்கிறீங்க?' என்று கேட்டாள் மல்காந்தி.

'இல்ல.. ஒண்ணுமில்ல மல்'

'அட என்னங்க இது? அதுதான் உங்கட சஸ்பென்சனை நீக்கி திங்கட் கிழமை வேலைக்கு வரச்சொல்லிட்டாங்கதானே.. இன்னும் எதுக்கு மண்டையைக் குடைஞ்சிட்டிருக்கிறீங்க.. உங்க எஞ்சின் எப்பிடி தனியா கிளம்பிச்செண்டா?'

'ஓமோம்.. அது எப்பிடி மல்..?'

'ஐயோ..கடவுளே! அதை விடவே மாட்டீங்களா..? இவன் நம்மட வசந்த அடுத்த வருசம் எக்ஸாம் எடுக்கிறான் தெரியும்தானே. ஆனா இப்ப கொஞ்ச நாளா ஒழுங்காப் படிக்காம கம்ப்யூட்டர்ல இரவு விடியவிடிய இருந்து வேற ஏதோவெல்லாம் பண்ணிக்கிட்டிருக்கான். ஹெட்போனைப் போட்டுக்கிட்டு யாரோடயெல்லாம் பேசிக்கிட்டிருக்கான். நான் கேட்டால் பேஸ்புக் பிரண்ட்ஸ் என்றான். கொஞ்சம் கவனிக்க மாட்டீங்களா?' என்றாள்.

'ஓ! அதுவா? இதெல்லாம் இப்ப சகஜம்தான் மல். ஆனா படிப்பைக் கெடுத்துக்காம பண்ணாப் பரவாயில்லை.. சரி நான் பாக்கிறேன்'

000
 
 


 

மீண்டும் வேலைக்குச் சேர்ந்ததும் நிமாலுடன் சேர்ந்து இரத்மலானை ஸ்டேஸனுக்குச் சென்று அங்கு நின்றிருந்த கலுபல்லா எஞ்சினை ஓட்டி வந்தார் லசந்த பெரேரா.

'கலுபல்லா' ஒரு பழைய காலத்து தயாரிப்பு என்பதால் எஞ்சினின் அத்தனை இயக்கு பாகங்களும் இரும்பாலானவை. எஞ்சினைக் கிளப்புவதற்கு வேண்டிய லீவரை நகர்த்துவதற்கு அசாத்திய பலமும் பழக்கமும் வேண்டும். அதற்காகவே குறுக்கு வழியொன்றை தெரிந்து வைத்திருந்தார். உட்புறமாக சிக்னல் பெனலின் கீழிருக்கும் பெட்டியைத் திறந்து சாவி ஒன்றினால் ஒரு குறிப்பிட்ட ஸ்க்ரூவை தளர்த்திவிட்டால் அந்த லீவரை ஒரு சிறுகுழந்தையால் கூட சுலபமாக இயக்கிவிட முடியும். இது லசந்தவிற்கு மட்டுமே தெரிந்த ரகசியம். இது எப்படி வெளியே தெரிந்திருக்க முடியும் என்பதுதான் எவ்வளவு யோசித்தும் அவருக்கு பிடிபடாதிருந்தது.

வேர்ஹவுஸ் வரும் வழிமுழுவதும் எஞ்சினின் உள்ளேயுள்ள அத்தனை பாகங்களையும் வெகுகவனமாக ஆராய்ந்து கொண்டே வந்தார் லசந்த. ஒரு தேர்ந்த துப்பறிவாளனைப்போல கீழே கிடந்த சிறு துரும்பைக்கூட விடாமல் சேகரித்தார். அவற்றுள் சிகரட் துண்டுகள், செல்போன் ரீசார்ஜ் கார்டுகள், இரண்டொரு சூயிங்கம் கவர்கள், பாக்குச் சீவல்கள் போன்ற பொருட்கள் கிடந்தன. சிகரட் அவருடைய ப்ராண்ட்தான். பாக்குச் சீவல்கள் நிமாலுடையது. ஆனால் ஸ்ட்ராபெரி படம்போட்டிருந்த அந்த சூயிங்கம் கவர்கள் யாருடையவை என்று புரியவில்லை என்றாலும் அவற்றை இதற்கு முன்பு எங்கோ பார்த்தது போலிருந்தது அவருக்கு. சரி, விசாரணைக்கு வந்த அதிகாரிகள் யாருக்காவது சூயிங்கம் சாப்பிடும் பழக்கம் இருந்திருக்கலாம் என்று நினைத்துக்கொண்டு அத்தோடு விட்டுவிட்டார்.

மண்டையை அரித்துக் கொண்டிருந்தது ஒரே கேள்வி மட்டும்தான்: 'எப்படித் தனியாகக் கிளம்பியது இந்தக் கலுபல்லா?'

இரவும் பகலும் தினசரி மனதை அரித்துக் கொண்டிருந்ததால் லசந்தவினால் சரியாகத் தூங்கக்கூட முடியாதிருந்தது. வீட்டில் மனைவியிடமும் மகனிடமும் மட்டுமல்லாமல் வேலைத்தளத்தில் சகஊழியர்களிடமும் இதைப்பற்றியே பேசியவாறு இருந்தார். ஆரம்பத்தில் சுவாரசியமாக கேட்டுக்கொண்டிருந்தவர்கள் எல்லோரும் நாளடைவில் இந்தப் பேச்சை ஆரம்பித்தாலே நழுவ ஆரம்பித்தார்கள்.


000
 
 

 

ருநாள் வேலைத்தளத்திலுள்ள பொறியிலாளர் அலுவலகத்துக்குப் போயிருந்தார் லசந்த. அப்போது தன் மேசையில் இருந்த கம்ப்யூட்டரில் ஏதோ பொறித்துக் கொண்டிருந்தார் இல்யாஸ் எஞ்சினியர். அவரைக் கண்டதும், 'லசந்த இஞ்ச வா! ஒரு விஷயம் தெரியுமா?' என்றார்.

'என்ன ஸேர்?'

'ஆளில்லாம எஞ்சின் கிளம்பிப்போனது இப்ப மட்டுமில்ல முந்தியும் நடந்திருக்கு.. அதுவும் இந்த வேர்ஹவுஸ்லேயே நடந்திருக்கு தெரியுமா?'

'அப்பிடியா..? எப்ப ஸேர்? நான் அப்படி ஏதும் கேள்விப்படல்ல. அப்படியெண்டா அது இருபத்தியாறு வருசத்துக்கும் முதல்லதான் நடந்திருக்கும்..'

'ஹா! அதுவந்து  நீ நான் எல்லாரும் அப்ப பிறந்தே இருக்க மாட்டோம் தெரியுமா? அதாவது வெள்ளைக்காரன் ஆண்ட காலத்துல.. அப்பதான் அது நடந்திருக்கு..!'

'அப்படியா ஸேர்..?'

'ஆமா.. சரியா நூறு வருசத்துக்கு முன்னால 1913ம் வருசம் அதுவும் சரியா இதே டிசம்பர் மாசம் அதே 5ம் திகதிதான் ஒரு எஞ்சின் தனியா கிளம்பி கோட்டை ஸ்டேஷன் வரைக்கும் ஆளில்லாம போயிருக்கு தெரியுமா?'

'ஸேர் விளையாடாதீங்க..! அது எப்படி சரியா அதே திகதியில..? நம்ப ஏலாம இருக்கு..'

'நீ நம்ப மாட்டாய் என்டுதான் விபரத்தை என்னோட பேஸ்புக்ல சேவ் பண்ணி வச்சிருக்கிறேன். கொஞ்சம் இரு காட்டுறேன்.. லசந்த நீ மயக்கம் ஏதும் போட்டுறாத.. இன்னொரு விசயமும் இருக்கு.. 1913 டிசம்பர் 5ல் புறப்பட்டுப்போன எஞ்சினும் நம்ம கலுபல்லா மாதிரி விடியக்காலையில 1.30 மணிக்கும் 2.00 மணிக்கும் இடையிலதான் போயிருக்குதாம்.. இதுக்கு என்ன சொல்லுறது?'

'ஸேர்.. இதெல்லாம் உண்மையா.. எங்கருந்து இதெல்லாம் எடுத்தீங்க..? நம்பவே முடியல்ல!'

'நம்ம டிப்பார்ட்மென்ட்ல விசாரணை நடக்குது தெரியுந்தானே..? முதல் ஏதாவது இதே போல நடந்திருக்கா என்று தேடிப் பாத்திருக்காங்க.. அந்த நேரந்தான் தற்செயலாக பழைய ரெக்கோட்ஸ்ல வெள்ளைக்காரங்க காலத்து ஆட்கள் இதைத் தெளிவா எழுதி வச்சிருக்கிறது தெரியவந்திருக்கு.. ம்.. இந்தா பாரு அந்த சம்பவத்தைப்பற்றிய நியூஸ்.. நீ இங்லீஷ் வாசிப்பாய்தானே.. அதோட ஸ்கேன் பண்ணிய லொக் ஷீட்டும் இருக்கு பார்!' என்று அவரது கம்ப்யூட்டர் திரையைக் காட்டினார் இல்யாஸ்.


“The Department of Railways of Ceylon is conducting investigations into an incident in which a train engine had travelled from Dematagoda to Kotte without a driver. The Railway Control Room said that the engine which was powered at around 1.45 a.m. today had operated from Dematagoda owing to a break malfunction. Thereafter, the moving train engine was stopped by a group of linesmen of Kotte Railway station… 1913.12.05



' அட.. ஆமாம்! இதென்ன கூத்து? அதுவும் அதே நாள் அதே நேரம்.. ஸேர்.. இது மல்காந்தி சொல்றது போல ஆவிகளோட வேலையாத்தான் இருக்கும் போல.. இல்லாட்டி எப்பிடி ஸேர் இப்பிடி?'

'யாரு உன்ட மனுஷியா? அதுசரி.. ஆவிக்கு லொக் ஷீட், நியூஸ் எல்லாம் வாசிக்கத் தெரியுதாக்கும்.. ஒருவேளை இங்லீஷ் ஆவி போல' என்று சிரித்தார் இல்யாஸ். அவரோடு சேர்ந்து அலுவலகத்தில் இருந்தவர்கள் எல்லோரும் சிரித்தார்கள்.

000
 
 

 

 
 
'அப்பா, நாளைக்கு ஸ்கூல்ல பேரண்ட்ஸ் மீட்டிங் இருக்கு. உங்களைக் கூட்டிட்டு வரச்சொன்னாங்க நீங்க வாறீங்களாப்பா..?' லசந்த பெரேரா நைட் ட்யூட்டி முடிந்து வீட்டுக்கு வந்தபோது பாடசாலை யூனிபோம் அணிந்து ஷு மாட்டிக்கொண்டிருந்தபடி கேட்டான் மகன் வசந்த.

'இல்லடா எனக்கு தொடர்ந்து நைட் டியூட்டி இருக்கு.. காலையில தூங்கியாகணும் மகன். அம்மாவைக் கூட்டிட்டுப்போ!'

'சரி, நான் வாறன். எந்தக்காலத்துலடா உன்ட அப்பா ஸ்கூலுக்கு வந்திருக்கிறாரு?..' என்றபடி சமையலறையிலிருந்து வெளிப்பட்ட மல்காந்தி,


'டேய் வசந்த!  என்னடா இது ஸ்கூலுக்குப் போற நேரம் சூயிங்கத்தை வாயில் போடுற.. இப்படியே போயிடாதடா! துப்பிட்டுப்போ!?' என்று சத்தம் போட்டாள் மல்காந்தி.

'சரி.. சரி' என்று விட்டுப் பாடசாலைக்குப் போய் விட்டான் அவன்.

' ஐயோ! ஏண்டி புள்ளைய போற நேரத்தில ஏசிட்டிருக்கிற..?'

'பின்ன என்னங்க..  எப்ப பாத்தாலும் அவன்ட கூட்டாளி இம்ரான் வெளிநாட்டுல இருந்து அனுப்புன சூயிங்கத்தை ஆடு மாதிரி சப்பிக்கிட்டே இருக்கிறான்.'

' சரிசரி, மல்காந்தி.. இஞ்ச வா கொஞ்சம்!'

'என்னங்க.. பசிக்குதா?'

'அதில்ல.. அந்த கொம்ப்யூட்டரைக் கொஞ்சம் ஓன் பண்ணு. உனக்கொரு அதிசயமான விசயம் ஒண்டு காட்டணும்.' என்று இல்யாஸ் எஞ்சினியர் நேற்று மாலை கூறிய நூறுவருடங்களுக்கு முந்திய கதையை மனைவியிடம் ஆர்வமாகக் கூறினார் லசந்த.

'என்ன சொல்றீங்க நான் நம்ப மாட்டேன்'

'என்னாலயும் நம்பேலாமத்தான்டி இருந்திச்சு.. ஆனா இல்யாஸ் மஹத்தயா அவர்ட பேஸ்புக்ல காட்டினாரு.. இரு உனக்கும் காட்டுறேன்..'

இருவரும் பேசிக்கொண்டே மகனின் அறைக்குள் வந்தபோது அவனுடைய கம்ப்யூட்டர் அணைக்கப்படாமல் ஸ்க்ரீன் ஸேவர் இயங்கிக் கொண்டிருந்ததைக் கண்டார்கள்.

'இப்பிடித்தாங்க இவன்.. லைட்டைக் கூட ஓப்ஃ பண்ண மாட்டான். எல்லாமே அவனுக்கு விளையாட்டாக இருக்கு. எதையுமே சீரியஸா எடுக்கிறதில்ல..'

'சரி, விடு, சின்னப் பையன்தானே..?' என்றபடி கம்ப்யூட்டரில் தன்னுடைய ஃபேஸ் புக்கை ஸைன் இன் செய்வதற்காகத் தயாரான லசந்த பெரேரா மகன் வசந்தவின் பேஸ்புக் பக்கம் சைன் அவுட் செய்யப்படாமல் திறந்து இருப்பதைக் கண்டார்..

அதிலே வசந்த தன்னுடைய சிறுவயதுப் புகைப்படங்களையெல்லாம் நிரப்பி வைத்திருந்தான். லசந்தவும் மல்காந்தியும். அதைப் பார்த்து விட்டு இன்னும் செல்லச் செல்ல தங்களுடைய திருமணப் படங்கள் குடும்பத்தாரின் படங்களையெல்லாம் பார்த்தார்கள். இலங்கை கிரிக்கட் அணி வீரர்களின் படங்களும் நிறைய இருந்தன.

'பார்த்தியா மல்காந்தி நம்மட பழைய படங்களையும் எடுத்து ஸ்கேன் பண்ணிப் போட்டிருக்கிறான் ராஸ்கல்'

'ஆமாங்க.. அங்க பாருங்க.. 'என்னுடைய தெய்வங்கள் இவர்கள்' என்று நம்ம படத்துக்குக் கீழே எழுதியிருக்கிறான்..'


'Yes, நம்ம ஒரே புள்ளை பாசக்காரன்தான்.. இல்ல?'

'இது என்னங்க இந்தப்படம் உங்கட தெமட்டகொட வேர்ஹவுஸ் மாதிரியிருக்கு.. ஆனா பழைய கால படம் போல கறுப்பு வெள்ளையில இருக்கு.. வெள்ளைக் காரன்லாம் இருக்கிறான். என்னமோ இங்லீஷ்ல நிறைய எழுதியிருக்கு..?'

' இரு.. இரு! நானும் பார்க்கிறேன்..' என்று அதை முழுமையாக வாசித்தார். வாசித்து முடித்ததும் ஆச்சரியத்தால் அவர் கண்கள் அகல விரிந்தன.


'ஏய்..மல்காந்தி, இது வந்து நான் சொன்னேனே 1913ல் நடந்த விசயம்தான்.. ஆனா இந்த நியூஸ் இவனுக்கு எப்பிடி கிடைச்சுது அதுவும் போன அக்டோபர் மாதத்தில?'

'என்ன சொல்றீங்க நீங்க..?'

'இல்ல.. எங்க ரயில்வே டிப்பார்ட்மெண்ட்டுக்கே நேற்றுத்தான் தெரிஞ்ச 100 வருசத்துக்கு முந்தின விசயம் இவனுக்கு மட்டும் எப்பிடி போன அக்டோபர் மாசத்தில படத்தோட கிடைச்சுது..?'

'ஒருவேளை இன்டர் நெற்றுல போய் எடுத்திருப்பானோ.. அப்படியென்றாலும் எதற்காக இதை அவன் தேட வேண்டும்.. எதற்கும் இந்தத் தகவல் எங்கேயிருந்து வந்திருக்குதென்று தேடிப்பார்ப்போம்' என்று யோசித்து தடவியதில் இம்ரான் ஜான் என்பவனிடமிருந்து அந்தப் படமும் தகவலும் கூட ஒரு மெஸேஜும்  வசந்தவுக்கு வந்திருப்பது தெரிந்தது.

அந்த மெஸேஜை திறந்து வாசித்தார்கள் லசந்த பெரோவும் அவரது மனைவி மல்காந்தியும்.  அந்த மெஸேஜில் இருந்த செய்தி இதுதான்:

Hi Vasantha,

I'm fine. How are you Machchan? இதோட இருக்கிற படத்தையும் செய்தியையும் பாரு மச்சான். நீ நம்ப மாட்டாய் என்டதுக்காகத்தான் அனுப்புறன்டா.. 1913.12.05 இதுதான் அந்த டேட். சரிதானே? நான் ஏற்கனவே சொன்னது போல நான் சொன்ன அதே நாள்ல அதே டைமுக்கு செய்து விடு. அதுக்குப் பிறகு பாரு நடக்கிறத..

இதே மாதிரி வேர்ல்ட்ல பல சம்பவங்கள் நடந்திருக்கு.. நீ The same date & The same incident என்ற வெப் சைட்ல போய்ப் பாரு. நிறைய details இருக்கு.. ஆனா அதை இப்பிடி நடக்குமென்டு முன்கூட்டியே நாம நெற்ல முன்கூட்டியே சொன்னா அதோட பவரே வேறடா.. நான் சொல்றபடி மட்டும் செய்து பாரு.. எலகிரிதான் மச்சி!

டேய், உன்னை நம்பித்தான் எத்தனையோ டொலர் டொலரா பந்தயங் கட்டியிருக்கேன்.. சொதப்பிடாத. சரியா டிசம்பர் 05 வியாழக்கிழமை 1.45க்கு எப்படியாவது கிளப்பி விட்டுடு. அது கொஞ்ச தூரம் போனாக்கூட போதும்டா.. அடுத்த நாள் நியூஸ்ல வந்திட்டா சரி..! அதுக்குப் பிறகு நம்ம ரேஞ்சே வேறடா இப்பருந்தே ரெடியாகு! மறந்திடாதே.

அதுசரி நான் அனுப்பிவச்ச Stawberry Chewin-gum pack எப்படியிருக்குடா..? செம கிக்குல்ல?  byeடா!



000
 
 
-மூதூர் மொகமட் ராபி
(2013.12.15)

ஆசிரியர்கள் Vs மாணவர்கள்



 


"இன்றைய தனியார்மய சூழலில் கல்வி என்பதே கடைச்சரக்காய் ஆகிவிட்ட பிறகு ஆசிரியப் பணி மட்டும் எப்படி தளிர்களை உருவாக்கும் கவனத்துடனும், கண்னியத்துடனும் இருக்கும்? ஆசிரியர்களுக்கு கொடுக்கும் மதிப்பை மாணவர்கள் கொடுக்கத் தயாராகவே இருக்கிறார்கள். ஆனால் அந்த மதிப்பைப் பெறுவதற்கு ஆசிரியர்கள் தகுதியாக இருக்கிறார்களா? என்பது மிகப் பெரிய கேள்விக்குறி. நுகர்வுக் கலாச்சார வெறியில் சமூகப் பொறுப்பற்று திரிகிறார்கள் என்றாலும் சிறு தூண்டுதல் செய்தாலும் அதைப் பற்றிக் கொண்டு பற்றிஎரிய மாணவர்கள் என்றும் ஆயத்தமாகவே இருக்கிறார்கள். ஆனால் அந்தத் தூண்டுதலை செய்யும் சுடர்களைத்தான் தனியார்மயம் தணித்து விட்டது.


பொதுவாக கல்வி என்பது மாணவர்களுக்கு கற்கும் ஆசையை தூண்ட வேண்டும். ஆனால் மெக்காலே கல்வி முறையும், கல்வி தனியார்மயமும் சேர்ந்து மாணவர்களை ரப்பர் ஸ்டாம்புகளாக தயாரித்துத் தள்ளுகிறது என்பதோடு மட்டுமல்லாமல் கற்கும் அனுபவத்தை விட்டே வெருண்டோட வைக்கிறது. அதனால் தான் மாணவப் பருவத்திலிருந்து மனிதனாக பதவி உயர்வு பெறுவோர் தேடல் எனும் சிந்தனையே இல்லாமல் இருக்கிறார்கள். எல்லா மாணவர்களுக்குமே தேடல் அனுபவம் தூண்டப்பட வேண்டும் என்றால் அது வெறுமனே கல்வியையும் ஆசியர்களையும் மட்டுமே சார்ந்ததல்ல. சமூகச் சூழலையும் முக்கியமாக உள்ளடக்கியது.


ரஷ்யக் கல்வி முறைக்கும் இந்தியா (இலங்கை போன்ற நாடுகளின்) கல்வி முறைக்கும் உள்ள வித்தியாசமாக ஒன்றைச் சுட்டிக் காட்டுவார்கள்.


நூலில் இருக்கும் யானையை சுட்டிக்காட்டி இது என்ன என்று கேட்டால் இந்தியக் குழந்தை யானை என்று சொல்லும், ரஷ்யக் குழந்தை யானையின் படம் என்று சொல்லும்.


இந்த நுணுக்கமான வேறுபாடு கற்பிக்கும் முறையிலிருந்து ஏற்படுவதில்லை. மாறாக சமூக அக்கரையுடன் கல்வி மாறும் போது ஏற்படுவது. அத்தகைய சமூக மாற்றத்துக்காக நாம் உழைக்க முன்வரும் போது மாணவர்களும் அந்த இலக்கை எட்டிப் பிடிப்பார்கள்."


-'இந்த பயந்தாரி சொன்னதுதான் சரி' எனும் செங்கொடியின் பதிவிலிருந்து