Friday, August 3, 2012

சிறுகதை: மூதூர் மொகமட் ராபி








மணல் தீவுகள்




'ஹலோ! எக்ஸ்க்யூஸ்மீ, உங்கட இந்த நம்பர்ல இருந்து இரவு நிறைய மிஸ்ட்கோல் வந்திருக்கு...யாரு நீங்க...என்ன விசயமா எடுத்தீங்....?' முழுவாக்கியத்தையும் நான் கேட்டு முடிக்கவில்லை.

'அடச்சீ!  நீங்களா...? நீங்கள்ளாம் ஒரு மனிசனா..?' என்றது எதிர்முனையிலிருந்து  ஒரு நடுத்தர வயதுப் பெண்ணின் குரல். எனக்குத் தூக்கி வாரிப்போட்டது.

'ஹலோ! நீங்க..' என்று ஆரம்பித்த என்னைப் பேசவே விடவில்லை!

' சீ வாயை மூடுங்க! இரவு முழுக்க நானும் என்ட பிள்ளைகளும் கூப்பிட்ட நேரம் போனைத் தூக்காமல் கல்லு மாதிரி இருந்திட்டு.. இப்ப விடியிற நேரம் வந்து என்ன ....க்கு எடுக்கிறீங்கள்..? ஆங்.. இப்ப எதுக்கு எடுத்த நீங்கள்...ஆ?'  என்று அதட்டியது  அந்தக் குரல்.

'ஹலோ.. முதல்ல நீங்க யாரு...? நான் யாரேண்டு நினைச்சுட்டுப் பேசுறீங்க நீங்க...?' என்றேன்  ஆச்சரியம் நீங்காமல்.

'ஆங்! அதெல்லாம் சும்மா நடிக்க வேணாம் சரியா..? இஞ்ச பாருங்க..! எங்கட பிள்ளைகள் பொம்பிளைப் பிள்ளைகள்..சின்னதுகள்... அதுகளுக்கு படிப்பிக்கிற ஆள் நீங்க! இப்படித்தான் செய்யிறதா...?' என்று பட்டாசு வெடித்தது.

அடுத்த முனையிலே பேசும் பெண்குரலை என்னால் அடையாளங் காணமுடியவில்லை என்பதால் அந்தப் பெண்குரல் படபடவென்று பொரிந்து கொண்டிருப்பதை வேறுவழியின்றி கேட்டுக்கொண்டேயிருந்தேன்.

'......இந்தா! இரவு அதுகள்ற போனைப் பாத்திட்டு சரியான அடி அதுகளுக்கு. பாவம் உங்களால அதுகள் ரெண்டும் எனக்கிட்ட அடி வேண்டிட்டு அழுதழுது இந்தா..ஸ்கூலுக்கும்போக எழும்பாமப் படுக்குதுகள் சந்தோஷமா உங்களுக்கு? சே!'

என்ன விடயமென்று எனக்கு தலைகால் புரியவேயில்லை.  ஆனால் ஏதோ கைத்தொலைபேசியுடன்  தொடர்பான ஒரு விபரீதம் அந்தப் பெண்ணுக்கு நடந்திருக்கின்றது என்பதும் என்னை யாரோவென்று நினைத்து தவறுதலாக  ஏசிக்கொண்டிருக்கிறாள் என்பது மட்டும் இலேசாகப் புரிந்தது. செல்போனை கட்டிலில் போட்டுவிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தேன். அது விடாமல் கீச்சுக்குரலிலே வசைபாடியவாறேயிருந்தது.

நான்  மிக அண்மையில்தான் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் பட்டப்படிப்பை முடித்து வெளியேறியுள்ள 26 வயது இளைஞன். இன்னும் அரசாங்க வேலை எதுவும் கிடைக்காததால் இங்கே கிழக்கின் தலைநகரில் புறநகர்ப் பகுதியிலுள்ள ஒரு மசூதி ஒன்றின் வாடகை அறையில் தங்கியிருந்து நகரிலுள்ள தனியார் கல்வி நிலையங்கள் பலவற்றிலே விஞ்ஞானபாடம் கற்பிக்கும் ஒரு பகுதிநேர ஆசிரியராக இருந்து வருகின்றேன். வார இறுதியிலே மட்டும் 40 கிலோமீற்றர் தள்ளியிருக்கும் ஊருக்கு ஒருதடவை போய்விட்டு மறுநாளே திரும்பி வந்து விடுவது எனது வழமை.


நேற்றைய தினம் எனது ஊரைச்சேர்ந்த மூன்று இளைஞர்கள் கடல் குளிக்கச்சென்று மூழ்கி உயிரிழந்த விபரீதம் பற்றி வானொலிச் செய்தியில் கேட்டேன். செய்தியிலே குறிப்பிடப்பட்ட பெயரையும் வயதையும் வைத்து அவர்கள் எனது தாய்வழி தூரத்து உறவினர்கள் என்பதை அறிந்ததும் பதறியடித்து அறையைப் பூட்டிவிட்டு ஊருக்கு பஸ்ஸேறிச் சென்றுவிட்டேன்.



மூன்று மரணவீடுகளிலும் துக்கம் விசாரித்து ஆறுதல்கூறி இயன்ற ஒத்தாசைகளையெல்லாம் புரிந்துவிட்டு இன்று அதிகாலையிலேதான் மீண்டும் அறைக்குத் திரும்பியிருந்தேன். பிரயாணக் களைப்புடன் கட்டிலில் விழுந்து கிடந்தபோது  இடுப்பினருகே ஏதோ உறுத்தியது. அதை எடுத்துப் பார்த்தால் முந்தியதினம் மரணவீட்டுக்குச் செல்லும் அவசரத்திலே நான் மறந்துபோய் அறையிலேயே விட்டுச் சென்ற கைத்தொலைபேசி. மரணவீட்டின் சோக நிகழ்வுகளிலே செல்போனை முற்றாக மறந்துவிட்டிருந்த எனது ஞாகபசக்தியை நொந்துகொண்டேன்.


இந்த ஊரிலே எனக்குள்ள ஒரே ஆத்ம நண்பன் இந்த செல்போன் என்பதால் அதை வாஞ்சையுடன் தடவிக் கொடுத்தபடி அதன் ஒளிரும் திரையைப் பார்த்தபோது இரவு நான் எடுக்கத்தவறிய பல அழைப்புகள் (missed calls) திரையிலே வரிசைகட்டிக் கிடந்தன. அவற்றிலே ஒரு புதிய இலக்கத்திலிருந்து மட்டும் ஏராளமான அழைப்புகள் கிடப்பது கண்டு வியந்துபோய் அந்த இலக்கத்தை அழுத்தி அழைப்பை ஏற்படுத்தி விசாரிக்கப்போய்தான் இதுவரை நான் வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கும் அந்த அதட்டலும் வசைபாடலும்...!

அந்தப் பெண்மணி என்னை விடுவதாக இல்லை. மீண்டும் மெதுவாக போனைக் காதில் வைத்தேன்

'.....இப்படியான வேலைகள் செய்வீங்களென்டு கனவிலயும்...நான் நினைக்கேல்ல மாஸ்டர்....' என்று பொரிந்து கொண்டிருந்த அந்தப் பெண் சிறிது இடைவெளி விட்டார்.  ஆனால் நிச்சயம் அது என்மீது கொண்ட பரிதாபம் காரணமாக இருக்காது. மூச்சு வாங்குவதற்காகவோ அல்லது தொண்டையைச் செருமிக் கொள்வதற்காகவோதான் இருக்க வேண்டும்.


'ஹலோ அக்கா! கொஞ்சம் நிப்பாட்டுங்க!'  சட்டென்று கிடைத்த இடைவெளிக்குள்ளே அதிரடியாகப் புகுந்து அதட்டல்போட்டு அவரின் சரவெடியை ஒருவாறு நிறுத்தினேன்.


' அக்கா, நீங்க இப்ப பத்து நிமிஷமா என்ட செலவிலதான் எனக்கே ஏசிக்கொண்டிருக்கிறீங்க  தெரியுமா?  தயவு செய்து கொஞ்சம் நீங்கள் யாரு....இப்ப என்ன விசயம் சம்பந்தமா ஏசிக்கொண்டிருக்கிறீங்க என்டு சொல்லிப்போட்டு ஏசுறீங்களா?..' என்றதும் சிலவினாடிகள் மௌனத்தின் பின்பு மறுமுனையின் தொடர்பு அறுந்து போனது.


' அதட்டலுக்கு பயந்திட்டாரா  அல்லது திரும்ப ரோஷத்திலே தன்னுடைய செலவில்  ஏசப்போகிறாரா புரியவில்லை.... இதென்ன வம்புடா இது?' என்று போனை உடனே அணைத்துச் சட்டைப்பையினுள் போட்டுக் கொண்டேன்.
மனம் நிம்மதியில்லாமல் தவித்தது.


அறையை விட்டு வெளியேறி பள்ளிவாசலை நோக்கி நடந்தேன். குழாய் நீரில் முகம், கை கால்களைச் சுத்தம் செய்தபின் அதிகாலைத் தொழுகையை நிறைவேற்றிவிட்டு தொழுகைக்கூடத்தின் ஒருபக்கச் சுவரோரமாக சாய்ந்து அமர்ந்து கொண்டேன். இப்போது மனம் சிறிது லேசாக இருந்ததுபோல உணர்ந்தேன்.


'யார் இவ...? ஏன் இப்படி ஒரேயடியாகத் துள்ளுறா..அப்படி என்னதான் நடந்திருக்கும்?' என்று நிதானமாக யோசித்தபோதுதான் அந்தப் பெண் போனிலே சற்றுமுன்பு கூறிய வார்த்தைகள் நினைவுக்கு வந்தன.


'இஞ்ச பாருங்க எங்கட பிள்ளைகள் பொம்பிளைப் பிள்ளைகள்... சின்னதுகள்' மற்றும் 'படிப்பிக்கிற ஆள் நீங்களே இப்படிச் செய்யலாமா?' என்ற அந்தப் பெண்ணின் வார்த்தைகள் எனக்குள் பல்வேறு யூகங்களையும் தோற்றுவித்தது. அப்படியானால்...அந்தப் பெண்மணி என்னிடம் படிக்கின்ற யாரோ மாணவிகளின் தாயாகத்தான் இருக்க வேண்டும். எத்தனை பேர்தான் என்னிடம் படிக்கின்றார்கள்... அதிலே யாராக இருக்கும்? ஆனால் நான் அவர்களிலே யாருக்கும் என்னுடைய கைத்தொலைபேசியின் இலக்கத்தை கொடுத்திருக்கவில்லையே..'




சட்டென்று ஏதோ ஒரு பொறிதட்டவே மீண்டும் கைத்தொலைபேசியை இயக்கி ஆராயத் தொடங்கினேன். எனது விரல்கள் குறுஞ்செய்திக்குரிய உள்பெட்டியை (inbox) ஐச் சொடுக்கியதும் அது ஏறத்தாழ நிறைந்து கிடப்பது தெரிந்தது. அதுவும்கூட ஒரு குறிப்பிட்ட இலக்கத்திலிருந்து வந்த குறுஞ்செய்திகளால்தான் வழிந்து கொண்டிருந்தது.  அந்த இலக்கத்தை உற்றுப் பார்த்தவுடன்  திடுக்கிட்டேன்.


ஆம், அது சற்றுமுன் என்னை உண்டு இல்லையென்று ஆக்கிய அந்தப் பெண்ணின் இலக்கம்!

 "ஆ! இதென்ன கூத்து இது?" என்று பள்ளிவாசலினுள் இருக்கின்றேன் என்பதையும் மறந்து வாய்விட்டு கத்தியே விட்டேன். சற்றுத் தள்ளி ஓரமாக அமர்ந்து குர்ஆன் ஓதிக் கொண்டிருந்த மசூதியின் முஅத்தினார் (தொழுகை உதவியாளர்) என்னைச் சந்தேகமாய் ஒருதடவை பார்த்துவிட்டு மீண்டும் ஓதலானார்.


தொலைபேசித் திரையிலிருந்து கண்ணை விலக்காமலே பள்ளிவாசலை விட்டு இறங்கி வெளிமுற்றத்திற்கு வந்தேன். காகங்கள் கரைந்து கொண்டிருக்க வானம் வெளுத்திருந்தது. பள்ளி வளாகத்திலே இரண்டொரு கார்களும் வேன்களும் சில லொறிகளும் தரித்துக் கிடந்தன. அவற்றின் முன்புறக் கண்ணாhடிகளிலே இரவு பெய்தபனி படிந்து கிடந்தது. பிரதான வீதியில் வாகனங்கள் ஒன்றையொன்று துரத்திக்கொண்டிருக்க பள்ளிவாசலுக்கு எதிரேயிருந்த தேனீர்க்கடையிலிருந்து நாகூர் ஹனீபாவின் இஸ்லாமிய கீதம் ஒன்று காற்றில் பரவிவந்தது.


முற்றத்திலிருந்த மணல் குவியலின் மீது அமர்ந்து கொண்டேன். மனம் காரணமில்லாத பதட்டத்திலிருந்தாலும் நிதானத்தை வரவழைத்துக் கொண்டு  அந்தக் குறுஞ்செய்திகளை அவை வந்த ஒழுங்கிலேயே அடியிலிருந்து ஒவ்வொன்றாகத் திறந்து படிக்கலானேன்.



' ஸேர், நீங்க சாப்பிட்டீங்களா...?' என்று தமிழ் எழுத்துகளிலே விசாரித்தது முதலாவது குறுஞ்செய்தி. எனக்கு வரும் குறுஞ்செய்திகள் பொதுவாக ஆங்கிலத்தில் மட்டும்தான் வருவதனால் எனது தொலைபேசியிலே தமிழ் எழுத்துகளில் செய்தி அனுப்பும் வசதியை நான் பெற்றிருக்கவில்லை. 
யோசனையுடன் அடுத்த செய்தியைப் பார்த்தால், 'சேர் நீங்க நோம்பு பிடிக்கிறீங்களா?' என்று கேட்டது. 'இரவு வந்தனங்கள் சேர்!' என்றது ஒன்று. 'ஏன் சேர் தாடியை எடுத்திட்டீங்க?' என்றது மற்றொன்று.. 'சேர் விஞ்ஞான டெஸ்ட்டில நீங்க சொன்ன கேள்விகள் வந்தது!' இப்படியே சாதாரண சுகவிசாரிப்புக்களாக ஆரம்பித்து மெல்ல மெல்ல... 'ஏன் சேர் இப்படியெல்லாம் அசிங்கமாய பதில் message போடுறீங்க?' என்றும் 'சேர் மரியாதை மிக முக்கியம்' என்றும் பின்பு, 'சேர் நீங்க நக்கல் அடிக்கிற மாதிரி இருக்கு..' என்று தொடர்ந்து ஒருநிலையிலே, 'என்ன நீங்க ஓவராத்தான் போறீங்க?  கூடாத மெஸேஜ் அனுப்பினால் நாங்களும் ஏசித்தான் மெஸேஜ் அனுப்புவோம்' என்றெல்லாம் செய்திகளின் தன்மை வலுக்கத் தொடங்குவதை உணர்ந்தேன். மனம் பதற்றமாகி பரபரப்போடு அத்தனை செய்திகளையும் திறந்து படிக்கப் படிக்க  எனது முகம் பாறையாய் இறுகிப்போனது. சிறிதுநேரம் என்ன செய்வதென்று தெரியாமல் அப்படியே குந்தியிருந்தேன்.


'என்ன மாஸ்டர் தம்பி, ஊருக்குப்போய் வந்தாச்சா?' என்று கேட்டபடி தொழகைக்கூடத்திலிருந்து கீழே இறங்கி வந்து வேகமாக நடக்க ஆரம்பித்தார்  முஅத்தினார்.

'ஓ! ஓம் நானா..! ஸஹர் செஞ்ச கையோட பஸ் ஏறினதுதான்' என்று பதில் கூறினேன்.

வயோதிபரான அவருக்கு இரத்த அழுத்த வியாதி இருப்பதால் விடிந்ததும் பள்ளிவாசல் வளாகத்தைச் சுற்றிச் சில வளையங்கள் நடப்பது வழமை. அன்றைய தினம் பள்ளிவாசல் வளாகத்தினுள்ளே லொறிகள், வேன்கள், கார்கள் என்று அதிகமான வாகனங்கள் தரித்து நின்றிருந்ததால் அவரது நடைக்குத் தடங்கல்கள் அதிகமிருந்தன. இதனால் அவர் சற்றுச் சிரமப்பட்டே நடைப் பயிற்சியைச் செய்து கொண்டிருந்தார். அவர் நடக்கும் திசையிலே சற்றுத் தூரத்தில் நின்றிருந்த ஒரேமாதிரியான இரு அழகான புதிய கார்கள் என் கண்ணில் பட்டன.  அருகருகே நின்றிருந்த அந்தக் கார்களில் ஒன்று அடர்பச்சை நிறத்திலும் மற்றையது வெளிர் மஞ்சள்  நிறத்திலும் இருந்தன.

அப்பொழுதுதான் எனது மூளையிலே சட்டென ஒரு மின்னல் பளிச்சிட்டது.

ஒருவேளை போனில் ஏசியது அந்த 'ப்ளக் அண்ட் வைற்'ஸின் தாயாக இருக்குமோ? அவர் கதைத்த விடயங்களையும் எனக்கு வந்திருந்த மெஸேஜ்களையும் பார்க்கும்போது நிச்சயம் எனது அனுமானம் சரியென்றுதான் தோன்றியது.


நகரை அண்டியுள்ள கிராமம் ஒன்றிலே நான் கற்பிக்கும் தனியார் டியூட்டரியில் ஒன்பதாம் வகுப்பிலே படிக்கும் இரட்டைச் சகோதரிகளான இரு மாணவிகளைத்தான்  'ப்ளக் அண்ட் வைற்ஸ்'  என்பது. ஆனால் வேடிக்கை என்னவென்றால் இருவரையும் காண்பித்து இரட்டைச்சகோதரிகள் என்று தெரியாதவர்கள் யாரிடமாவது சொல்கின்றோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதைக் கேட்பவர்கள் விழுந்து விழுந்து சிரிப்பார்கள்.
அந்தளவுக்கு அந்த இரு பெண்பிள்ளைகளிடமும் நிறம் தோற்றம் குணம் முதற்கொண்டு அத்தனையிலும் வித்தியாசங்கள்தான் அதிகம். ஆம், ஒருத்தி பால்போல பளிச்சென்று இருந்தால் மற்றவள் கன்னங்கரேல் கருங்காலி நிறத்திலிருப்பாள். ஒருத்திக்கு அழகான பெரிய விழிகள் என்றால் மற்றவளுக்கு யானைக்குப்போல சிறிய கண்கள். ஒருத்தி என்னுடைய பாடத்தில் படு கெட்டிக்காரி. ஆனால் மற்றவளோ சாதாரண ரகம். ஒருத்தி வெகுநிதானமானவளென்றால் மற்றவள் படு பரபரப்பானவள். அப்படியொரு விநோதமான சேர்க்கையுள்ள இரட்டையர்களாக அவர்களை இறைவன் படைத்திருந்தான். அதனால்தான் அவர்களை 'ப்ளக் அண்ட் வைற்ஸ்' என்பது. அப்படிச் சொன்னால்தான் எல்லோருக்கும் தெரியும்.


இரண்டு பேருமே ஒரே வகுப்பில் இருப்பதால் கற்பித்தலின்போது வகுப்பறைச் சூழலைக் கலகலப்பாக்குவதற்காக இரட்டையர்கள் இருவரையும் அவ்வப்போது வேடிக்கையாக நான் கேலிசெய்வதுமுண்டு. நான் மட்டுமல்ல, அவர்களது சக வகுப்பு மாணவ மாணவிகளிலிருந்து டியூட்டரி நடத்துனர் வரையில் அவர்கள் இருவரையும் 'பென்குயின்ஸ்'  மற்றும் 'பன்டா பியர்ஸ்' என்றெல்லாம் கேலி செய்வது வழமைதான்.
 


விஞ்ஞான பாடத்தில் வரும் சுவாரஸ்யமான விடயங்களுடன் தொடர்புபடுத்தி நான் கேலி செய்வதால் வெளிப்படையாக என்னைச் செல்லமாகக் கோபித்துக் கொள்வார்களாயினும் அந்த இருவருக்கும் என்மீது  ஒரு தனிப்பிரியமிருக்கத்தான் செய்தது. 'சாப்பிட்டீங்களா சேர்?' என்றோ 'இன்டைக்கு ஸ்கூலுக்குப் போகும்போது உங்களைக் கண்ட நாங்கள் ஸேர்!' என்றெல்லாம் ஏதாவது சொல்லிக் கொண்டே இருப்பார்கள் அந்த இருவரும். நானும் அவர்களின் அன்பைப் புரிந்தவனாக பொறுமையாகப் பதில் கூறுவதுண்டு.


அந்தப் பெண்கள் ஆசிரியர்கள் எல்லோருடனும் மேலதிக அக்கறையுடன் பழகுவதற்கு அவர்களிருவரின் தாயின் கதைதான் காரணம். அதை ஒருநாள் டியூட்டரிப் பொறுப்பாளர் என்னிடம் விபரமாகக் கூறி முடித்தபோது ஏதோ 70 களில் வெளிவந்த ஒரு பழைய தமிழ் அல்லது ஹிந்தி திரைப்படத்தின் கதையைக் கேட்பது போலிருந்தது.


அந்தத் தாய் ஒரு பாடசாலை மாணவியாக இருந்த காலத்திலே பருவக்கோளாறு காரணமாக  தனது பெற்றோரின் விருப்பத்திற்கு எதிராக ஓர் இளைஞனைக் காதலித்து வீட்டைவிட்டு வெளியேறி அவனை மணமுடித்திருந்தாராம். மனமுதிர்ச்சியற்ற வயதிலே திருமண வாழ்வை ஆரம்பித்த காரணத்தினாலோ என்னவோ இருவருக்குமிடையே இருந்த இளம்வயதின் கவர்ச்சிகள் தீர்ந்ததும் அந்தத் திருமண பந்தம் சில மாதங்களுக்குள்ளேயே முடிவுக்கு வரவேண்டியதாகிப்போனதாம். 



தன்னை நம்பி வீட்டைவிட்டு வந்தவளைக் கர்ப்பிணியாக்கிய அந்த பொறுப்பற்ற இளைஞன்  அவளைக் கைவிட்டு எங்கோ சென்றுவிட  நிராதரவானாள் நமது இரட்டைகளின் தாய்.  பெற்றோரிடமும் திரும்பிச் செல்ல முடியாத நிலையிலே வேறுவழியின்றி தற்கொலைக்கு முயன்றவளை அதிஷ்டசவமாக பாடசாலை ஆசிரியையான ஒரு வயது முதிர்ந்த கத்தோலிக்கப் பெண்துறவிதான்  காப்பாற்றியிருந்தாராம்.



நமது 'ப்ளக் அன்ட் வைற்ஸ்' பிறக்கும் வரையிலே தனது ஆலய விடுதியிலே அடைக்கலம் கொடுத்திருந்த அந்தப் பெண் துறவி, தொண்டு நிறுவனமொன்றின் உதவியோடு அவர்களுக்கு வீடு ஒன்றைக் கட்டித்தந்ததோடு தான் மரணமடையும் வரை தாயையும் இரட்டைக் குழந்தைகளையும் தனது பராமரிப்பிலேயே வைத்திருந்தார்.



இதனிடையே ஒருநாள் மனைவியைக் கைவிட்டுச்சென்ற இளைஞன் மனம் திருந்தி தனது மகள்களாகிய இரட்டைச் சிறுமிகளைப் பற்றியும் கேள்வியுற்று அவர்களைக் காண திரும்பி வந்திருந்தானாம்.  ஆனால் துரதிஷ்டவசமாக அவன் வீட்டுக்கு வந்த சிறிது நேரத்திலேயே  சந்தேகத்தின்பேரில் சீருடைக் காவலர்களால் கொண்டு செல்லப்பட்டுவிட்டானாம்.  அதன்பிறகு அவனைப்பற்றிய தகவலே இல்லாதிருந்ததாம். எவ்வளவோ முயன்றும் அவனை எங்கே கொண்டு போனார்கள் என்று அறியவே முடியவில்லையாம். நமது நாட்டின் காணாமல் போனோர்களின் பட்டியலில் அவனும் இடம்பிடித்து விட்டானாம்.


சூழ்நிலை காரணமாக அந்தத் தாயும் சகோதரிகளும் வறுமையுடன் போராடியே வளர்ந்திருந்தார்களாம். அதன் பிறகு பல வருடங்களாக கூலிவேலைகளைச் செய்து தனது இரு பெண்களையும் வளர்த்து வந்தாராம் அந்தப் பெண். அவர்களின் நிலைமையை அறிந்துதான் எங்கள் டியூட்டரி பொறுப்பாளர் அவர்களிடம் கட்டணம் கூட அறவிடுவதில்லையாம்.



நீண்ட காலமாக தந்தை என்ற ஆணின் துணையும் அரவணைப்பும் இன்றியே வாழ்ந்து வருவதால்தான் அந்த இரட்டைச் சகோதரிகள் தம்மீது அக்கறையுடன் கற்பிக்கும் ஆண் ஆசிரியர்களிடம் அதீத அன்புரிமை பாராட்டுகின்ற இயல்புகளைச் சற்றுத் தூக்கலாகவே கொண்டிருக்கின்றார்களாம் என்று அவர்களின் கதையைக் கூறி முடித்தார் பொறுப்பாளர்.


அந்த மாணவிகளின் மிகை  இயல்புகள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பாடங்களைக் கற்பித்து முடிக்கவேண்டிய அவசரத்தில் இருக்கும் எனக்கு சிலவேளைகளிலே தொல்லையாய் கூட அமைந்து விடுவதுண்டு. அப்படியான வேளைகளிலே இலேசாக அவர்களிருவரையும் கடிந்து கொண்டும் விடுவேன். அப்படி ஏதாவது செய்துவிட்டால் போதும் இரட்டைச் சகோதரிகளின் முகங்கள் வெட்டிப்போட்ட வாழையிலைபோல துவண்டு தொங்கி விடும். வீட்டுக்குப்போனதும் அழப்போகும் அழுகையை தங்களது கண்களிலே அடைகாத்து வைத்திருப்பார்கள் இருவரும்.



மீண்டும் பழைய நிலையை அடைய சில நாட்களாகும். அதுவரை என்னோடு சிறு ஊடல்கொண்டு பேசாமல் திரிவார்கள். சிலவேளைகளிலே வகுப்பிலே கண்கள் கலங்கி அழுவதும்கூட நடக்கும். நானும் அதைக் கவனிக்காதது போலவே இருந்து விடுவேன். உண்மையிலேயே எனக்கிருக்கும் வேலைப்பளுவில் இதையெல்லாம் கவனிக்க முடிவதில்லையாயினும் அவர்களது குடும்ப நிலையை அறிந்திருந்ததால் மனதின் சிறுமூலையிலே மெல்லிய அனுதாபம் இருந்துகொண்டே இருக்கும். அதனால் கூடிய விரைவிலேயே அந்தக் கெட்டிக்காரப் பெண்களை அவர்களது படிப்பை நினைத்தாவது ஏதாவது உயர்வாகப்பேசி இயல்பு நிலைக்குக் கொண்டுவந்து விடுவேன்.

 அந்த இரட்டைச் சகோதரிகளிடம் ஏன் நான் இப்படியெல்லாம் அனுதாபமாய் நடந்து கொள்கின்றேன் என்பது எனது வகுப்பிலே கற்கும் பல மாணவர்களுக்கும் சில மாணவிகளுக்கும் புரிவதில்லை. இதனால் அவர்களில் சிலர் துணிந்து, "சேர், நீங்க 'ப்ளாக் அண்ட் வைட்ஸ்' க்குப் பயங்கர ஸப்போர்ட்தானே ஸேர்..?'" என்று செல்லக்கோபத்தோடு என்னைக் கலாய்ப்பதுமுண்டு.


உடனே நானும் கடுமையான சிந்தனை வயப்பட்டதுபோல பாசாங்கு செய்து, "பிள்ளைகளே.. கவனியுங்கள்!  ஒரு ஆசான் எனப்படுபவர் அவரது மாண்புமிகு மாணவச்செல்வங்கள் அனைவருக்கும் பொதுவானவர் என்று இலைகுழை ஆடையுடுத்து தாடிமீசை வைத்திருந்த நமது முன்னோர்களாகிய காட்டுமிராண்டிகள் கல்வெட்டுக்களிலே எழுதிவிட்டுச் சென்றிருக்கின்றார்கள், தெரியுமோ?"  என்று திடீரெனச் செந்தமிழில் பேசி அவர்களைப் பதிலுக்குக் கலாய்ப்பேன்.

உடனே வகுப்பே சுவாரஸ்யமாகிவிடும்.

"ஸேர், எனக்கொரு சந்தேகம்! கல்வெட்டு எழுதும்போது பிழைவிட்டா எதை வச்சு சேர் அழிச்சிருப்பாங்க...?'" என்பான் ஒரு வால் பையன்.

"அதுதானே...எதை வச்சு அழிச்சிருப்பாங்க?"  என்பேன் நானும் உண்மையான சந்தேகத்தோடு.

"அழிச்சிருக்கவே மாட்டாங்க ஸேர்!" என்பாள் ஒருத்தி.

"ம்ம்..அப்படியா சேதி? ஆகா! எப்பிடி இளவரசியே இவ்வளவு ஆணித்தரமாக அடித்துச் சொல்கிறீர்கள்?"  என்பேன் நானும் நையாண்டி குறையாமல்.

"அதுவந்து ஸேர்.. பிழைவிட்டா மட்டும் என்ன, பின்னால வாறவங்களுக்குப் புரியவா போகுது என்டு நினைச்சி பேசாம விட்டிருப்பாங்க, ஸேர்"  என்பாள் அவள். 

மொத்த வகுப்புமே சிரிசிரியெனச் சிரித்து கலகலப்பாகி விடும்!


இப்படியாக அனைவரையும் சமாளித்தவாறு சுவாரசியமாப் போகும் எனது விஞ்ஞானபாடம். தவிர,  அந்த இரட்டையர்களை சக மாணவிகளோ மாணவர்களோ ஒருபோதும் கோபித்ததுகூடக் கிடையாது என்றால் நம்புவீர்களா?  அந்தளவுக்கு தங்களது நல்ல இயல்புகளாலும் திறமையாலும் அனைவரது அபிமானத்தையும் பெற்றிருந்தார்கள் அந்த 'ப்ளாக் அண்ட் வைற்' சகோதரிகள்.

"என்ன தம்பி... தனிய.. இருந்து...ஹா..ஆ!..இப்பிடி.. மனசுக்குள்ள சிரிக்கிறீங்க..?" என்றபடி மீண்டும் என்முன்னே வந்து நின்றார், முஅத்தின்.  நடைப்பயிற்சியால் மூச்சு வாங்கியது அவருக்கு.

"ஏன் நானா இப்படி நோன்பையும் புடிச்சிக்கிட்டு உடம்பை வருத்திறீங்க?"

"என்ன தம்பி செய்யுறது போன க்ளினிக்கில டாக்குத்தர் சொல்லிப்போட்டான் ஒவ்வொரு நாளும் காலையில நடக்காட்டி...ங்ஆ!  அதாலதான் நோம்பெல்லாம் பார்க்க ஏலாது வாப்பா..! அதுசரி போன காரியம் என்னாச்சு?" என்று கேட்டார்.

கடல் குளிக்கச் சென்று நீரில் மூழ்கிய ஊர் இளைஞர்களின் விபரத்தை பொறுமையாகச் சொல்லி முடித்தேன்.

"யா அல்லாஹ்! இந்த நோம்பு காலத்துலயும் இப்பிடித் தோணியை எடுத்திட்டுப் போய் கடல்ல விளையாடிச் சாவணுணுமா..?  யார்ர புள்ளைகள் வாப்பா..அது? சின்னப்பயலுவளா?"

"ஆங்..மூணுபேரும் தூரத்துச் சொந்தக்காரங்கதான் நானா. ஒருவன் ரஜீஸ், 28 வயசு..மற்றவன் ஸஹீர், மிஸ்பா ரெண்டுபேருக்கும் 19 வயசு இந்த வருஷம் ஏயெல் எடுக்கிற பொடியன்கள்..!"

"அப்பிடியா பாவமே?"  என்ற முஅத்தின் திடீரெனத் திரும்பி, "என்ன பேர் வாப்பா சொன்னீங்க..?"  என்று ஆச்சரியமாய்க் கேட்டார்.

"ஏன் நானா?" என்றேன் அவரது ஆச்சரியத்தைப் பார்த்து. "இல்ல..இல்ல எங்கயோ கேள்விப்பட்ட பேரு மாதிரி இரிக்குதேண்டுதான் பாத்தன்.." என்று ஏதோ சொல்ல வாயெடுத்தவரை அப்போது பார்த்து பள்ளிவாசலில் நின்றிருந்த வாகனம் ஹோன் அடித்துக் கூப்பிடவே அவசரமாகச் சென்று விட்டார் அவர். முஅத்தின் வேலைகளோடு பள்ளிவாசலில் தரித்து நிற்கும் வாகனங்களின் பண வசூல் வேலைகளையும் அவரேதான் கவனித்துக் கொள்வதால் எப்போதுமே இப்படித்தான் பாவம். ஓயாத வேலை அவருக்கு.

பள்ளிக்கிணற்றடிக்குச் சென்று குளித்துமுடித்து, பரீட்சைத்தாள் ஆயத்தம் செய்வதற்காக அறையைப் பூட்டிக்கொண்டு பொதுநூலகத்திற்குப் புறப்பட்டேன். பள்ளிவாசல் வளாகத்தை விட்டு வெளியிலிருக்கும் பஸ்தரிப்பில் நான் காத்து நின்ற போது அந்த வழியாகச் சென்ற இரு மாணவிகள், "குட்மோர்னிங் ஸேர்" என்று கூறியவாறு என்னைக் கடந்து சென்றார்கள்.

உடனே, மீண்டும் எனக்கு அந்த 'ப்ளக் அன்ட் வைற்ஸ்'  நினைவுக்கு வந்து விட்டார்கள். இந்தப் பிரச்சினையை எப்படிக் கையாளலாம் என்றே புரியவில்லை. 'சே! அவர்களுடைய போனிலிருந்து என்னுடைய போனுக்கு வந்த செய்திகளுக்காக எனக்கு ஏன் அந்தத் தாய் அப்படி ஏசினார் என்பதுதான் இன்னும் புரியாத புதிராகவே இருந்தது.

அந்தப் பெண்ணை மீண்டும் போனிலே அழைத்துப் பேசிப் பார்த்தாலென்ன என்று கூட யோசித்தேன். ஆனால் சும்மா கிடந்ததை உசுப்பேற்றி விட்டது போலாகி விடுமோ..? என்றும் பயந்தேன். எதற்கும் கொஞ்சம் விட்டுப் பிடிப்போம் என்று தீர்மானித்துக் கொண்டவனாக வந்த பஸ்ஸிலே ஏறினேன்.

***

பொதுநூலகத்தின் உசாத்துணைப் பகுதியில் நான் பரீட்சைக்குரிய வினாத்தாள் தயாரிப்பிலே மும்முரமாக இருந்தேன்.  ஆனாலும் அப்போது கூட அதிகாலையிலே என்னை ஏசிய முகம் தெரியாத பெண்ணின் எண்ணமாகவே இருந்தது.  ஏதோ ஒரு விபரீதம் நடக்கக் காத்திருப்பது போலவே மனம் அமைதியின்றி உழன்றது.



'இரவெல்லாம் பூட்டிய அறைக்குள்ளே கிடந்த போனுக்கு அவர்களது போனிலிருந்து  மெஸேஜ்கள் வந்திருக்கின்றது என்றால்  என்னை ஏன் ஏசுகின்றார்கள்..?'  என்ற யோசனை மீண்டும் மீண்டும் என்னைக் கொன்று தின்று கொண்டிருந்தது. அந்த மெஸேஜ்களிலே கூட... 'ஏன் சேர் இப்படியெல்லாம் அசிங்கமாய் பதில் எழுதுகிறீர்கள்?' என்றும் 'சேர் மரியாதை மிக முக்கியம்' என்றும் இருந்தது நினைவுக்கு வந்தது. அப்படியானால்... எனது போனிலிருந்தும் மெஸேஜ் போயிருக்க வேண்டும் என்றுதானே அர்த்தம்?.. ஆனால் யாருமில்லாத அறைக்குள்ளே கிடந்த போனிலிருந்து எப்படி மெஸேஜ் போகும்..?' என்று யோசித்தவாறு வெகுஇயல்பாக எனது போனிலுள்ள send message பகுதிக்குச் சென்று பார்த்தேன்.

அதுவும் நிறைந்துதான் கிடந்தது.

சரி என்று என்னால் அனுப்பப்பட்டிருந்த பழைய செய்திகளை பார்க்கலாம் என்று சொடுக்கியதுதான் தாமதம் மைகாட்! என் கண்களையே நம்ப முடியவில்லை. அந்தப் பெண்ணின் இலக்கத்திற்கு மட்டும் 19 மெஸேஜ்கள் - அவை அத்தனையும் வாசிக்கவே கூசும் படுஆபாசமான கொச்சையான மெஸேஜ்கள்-  அனுப்பப் பட்டிருந்தது தெரியவந்தது. அதுவும் நேற்றிரவு நான் மரணவீட்டிலே இருந்த சமயத்திலே!

அப்படியானால்.. நேற்று மதியம் நான் மறந்துபோய் அறையிலே விட்டுச்சென்ற செல்போனை யாரோ கையாண்டிருக்கிறார்கள் என்றுதானே அர்த்தம்..?

ஆனால் அது.. எப்படி?...எப்படிச் சாத்தியம்?

பூட்டியிருந்த அறைக்குள்ளே வந்து  இதை யார் செய்திருக்க முடியும்? அப்படி வந்தவர்கள் ஏறத்தாழ எண்பதினாயிரம் ரூபா பெறுமதியான இந்த வெளிநாட்டு போனைத் திருடிச் செல்லாமல் ஏன் இப்படி எனது மாணவிகளின் இலக்கத்துக்கு ஆபாசச் செய்தி அனுப்பியிருக்க வேண்டும்..? அப்படியானால் எனக்கு வேண்டுமென்றே கெட்ட பெயரை ஏற்படுத்தித் தரவேண்டுமென்று நினைக்கும் யாரோ இங்கே இருக்கின்றார்களா..? எனக்குப் பயமும் பிரமிப்புமாகச் சேர்ந்து தலையைச் சுற்றியது. சிறிதுநேரம் பிரமை பிடித்தவன் போல அப்படியே அமர்ந்திருந்தேன்.

'இல்லை..! இதை இப்படியே விடக்கூடாது' உடனடியாகக் கண்டுபிடித்தே ஆகவேண்டும் என்ற ஆவேசம் உண்டாகவே எல்லாவற்றையும் நிறுத்திவிட்டு பஸ்ஸைப் பிடித்து மீண்டும் நான் தங்கியிருந்த பள்ளிவாசல் வாடகை அறைக்கு வந்து சேர்ந்தேன். அந்தப் பிரதேசமே ஆள் நடமாட்டம் குறைந்து அமைதியாயிருந்தது. அறையைத் திறக்க முன்பு அதன் கதவையும் பூட்டுகளையும் நோட்டமிட்டேன். அவை எல்லாமே வேறுயாரும் திறக்கமுடியாதளவுக்குப் பாதுகாப்பாகத்தான் இருந்தன.


என்னைத் தவிர, முஅத்தினாரிடம் மட்டும்தான் இந்த அறைக்குரிய மற்றொரு திறப்பு உள்ளது. அதுவும் நானேதான் ஒரு முற்காப்புக்காக அவரிடம் கொடுத்து வைத்திருந்தது. 

அப்படியானால் முஅத்தின் நானாவைத்தான் சந்தேகப்படுவதா, சே! அவருக்கு இப்படிச் செய்ய வேண்டிய தேவை என்ன? அத்தோடு சாதாரண தொலைபேசியே அதிகம் பாவித்தறியாத வயோதிபர் அவர். அப்படியானால் யார் இந்த சதிவேலையைச் செய்திருப்பார்கள்? கண்ணுக்குத் தெரியாமல் செயல்படும் எனது எதிரிகளோடுதானா இத்தனை நாளும் இந்த இடத்திலே நான் இருந்து கொண்டிருக்கின்றேன் என்று எண்ணியபோது உடலெல்லாம் உள்ளுர நடுங்கியது எனக்கு.

மனமெல்லாம் வெறுமையாகி கால்கள் பலமிழந்தது போலிருக்க அறையைக் கூடத் திறக்காமல் அப்படியே வாசலிலே அமர்ந்து கொண்டேன்.


 "தம்பீ வந்திட்டீங்களா? "    சற்றுத் தூரத்தில் முஅத்தின் என்னை நோக்கி வந்து கொண்டிருப்பது தெரிந்தது.

 "காலம்பொறயிலருந்து ஒங்களத்தானே தம்பி தேடிக்கிட்டிருக்கேன்... விடியப்புறம் சொல்ல நெனச்சிக்கிட்டு இருந்தேன்..அதுக்குள்ளே வந்து எங்கயோ குர்பான் ஆடு தக்பீர் பண்றதுக்குக் கூட்டிக்கிட்டுப் போயிட்டானுகள்...திரும்பி வந்து பாத்தா ஒங்கள காணல்லியே..' என்றவாறு என்னை நோக்கி வந்தார் முஅத்தின்.

'என்ன விசயம் நானா?' என்றேன் கசப்புடன்.

' தம்பீ, நேத்து காலம்பற நீங்க ஊருக்குப்போன பொறவு... லுஹர்  நேரம் மூணு இளந்தாரிப் பொடியனொள் மோட்ட சைக்கிள்ள வந்தானுவொள். இஞ்ச எங்கயோ இண்டவிக்கோ  செமினாருக்கோ போகணுமாம். ஒரு ராவு தங்கி நிண்டு போறதுக்கு றூம் கேட்டானொள். அந்த நேரம் ஒரு றூமும் கிடையாது. பொறவு ஒங்கட பேரைச் சொல்லி இஞ்சயா இரிக்கிங்க எண்டு கேட்டானொள். நானும் ஓம் மாஸ்டர் தம்பி இஞ்சதான் இரிக்கிற... இப்ப ஊருக்கு மையத்து வூட்டுக்குப் போயிருக்கிறாருண்டு சொன்னேன்... ஒங்கட பக்கத்து ஊர்தானாம் தெரியுமாம் என்டு பயலுவள் சொன்னதால நாந்தான் நிண்டுட்டுப் போட்டுப் போகட்டும் என்டு உங்கட றூமைத் தொறந்து வுட்டேன் வாப்பா.. படுத்துக் கெடந்து காலம்பற சுபஹு தொழுத கையோட பொயிட்டானுவள்...! பிரச்சினையில்லையே ..தம்பீ..?


'பிரச்சினை..யில்லையா? எவ்வளவு வாங்கினீங்க அவனுகளுக்கிட்ட?' என்று கேட்பதற்கு பற்றிக்கொண்டு வந்த கோபத்தை உதடுகளிலே வைத்து அடக்கிக் கொண்டு பேசாமலிருந்தேன்.

'ஆனா தம்பீ.. ஒங்கட பொஸ்தகம் சாமானுவள் எதையும் தொடப்படாது என்டு சொல்லித்தான் உள்ளேயே வுட்டேன் தம்பீ...?' என்று என் முகத்தைப் பார்க்கத் திராணியின்றி வேறு எங்கோ பார்த்துக்கொண்டுதான் பேசினார்.

'என்ன தம்பீ, ஒண்ணுமே பேசுறீங்க இல்ல..? ஒங்கட சொந்தமெண்டு சொன்னதாலதான்...'  என்றார் குற்றவுணர்வுடன் குனிந்தபடி. அவரைப் பார்க்கப் பாவமாகவும் இருந்தது.

 " அதுசரி, எப்பிடி ஆக்கள் நானா? பேர் ஏதாவது சொன்னானுகளா.....?' என்றேன் எனது எரிச்சலை வெளியிலே காட்டாமல்.

 "ஆ! இரிங்க...! இப்படி நீங்க கேப்பீங்கண்டுதான் எதுக்கும் இருக்கட்டுமெண்டு பள்ளிக்குள்ள வாற வாகனத்தை பதியிற கொப்பியில கடசிப்பக்கத்துல அவனொள் பள்ளிய வுட்டுப் போறநேரம் மூணு பேர்ர பேரையும் கேட்டுஎழுதி வைச்சிருக்கேன் தம்பீ. இரிங்க..அதைக் கொஞ்சம் எடுத்திக்கிட்டு வாறேன்" என்று மசூதியின் மெயின்கேற்றுடன் இருக்கும் வாகனப் பதிவுக்கூண்டை நோக்கி வேகமாக நடந்தார் முஅத்தினார்.

அவர் வரும்வரை என்னுடைய ஆவலை அடக்க முடியவில்லை.
சட்டென அவரை முந்திக்கொண்டு, வாகனப்பதிவுக் கூண்டை நோக்கி ஓடிச்சென்று அந்தக் கொப்பியை எடுத்து அவசர அவசரமாக படபடவெனத் தட்டிப் பார்த்தேன்.


அந்த பெரிய ஸீ ஆர் கொப்பியின் கடைசிப் பக்கத்தின் ஒரு மூலையிலே ரஜீஸ், மிஸ்பா,  ஸஹீர் என்று நேற்றைய தினம் நீரில் மூழ்கி இறந்துபோன இளைஞர்கள் மூவரின் பெயர்களும் எழுதப்பட்டிருந்தது.

The End


- மூதூர் மொகமட் ராபி

Wednesday, August 1, 2012

சிறுகதை : ஷாஜஹான்


 ஃப்ரீ வீஸாவும் சிக்கன் ஷவர்மாவும்










வன் ஏசுகிறானா இல்லை என்னிடம் ஏதாவது செல்லம் கொஞ்சுகிறானா என்றே விளங்கவில்லை. முன்னமே கேள்விப்பட்டது போலவே அந்த மொழி கொஞ்சம் இனிமையாக இருப்பது போல்தான் பட்டது. ஒரு வகையான ராகம் அதன் ஒவ்வொரு சொல்லிலும் விரவிக்கிடந்தது. அதை அவன் உச்சரித்த குரலில் ஒருவித வசீகரமும் இருந்தது. பொதுவாகவே எல்லா அரபிகளுக்கும் அந்த வசீகரம் வாய்த்திருக்கும். அவர்கள் பேசும் மொழியின் இனிமையால் அவ்வசீகரம் கைகூடியதா இல்லை அவர்களது குரலின் வசீகரம் அம்மொழியை இனிமையாக ஆக்கிவிட்டிருந்ததா என்பதை என்னால் இன்றுவரை புரிந்துகொள்ள முடியவில்லை. இப்பொழுது என் முகத்தை நோக்கி உமிழப்பட்டுக் கொண்டிருக்கும் வசைச் சொற்களின் இனிமையும் அப்படிப்பட்டதே. ஆனால் கொழுத்தும் வெயிலுடன் கூடிய இந்தக்காலைப் பொழுது அதை ரசிக்க முடியாதவனாய் என்னைச் செய்திருந்தது. அரபு வானத்தின் சூரியன் எங்களது சூரியனை விட வீரியம் மிக்கது, அரபிகளின் மனத்தைப்போலவே. ரொட்டித்துண்டை சீண்டிக்கொண்டிருக்கும் ஒரு காகத்திடமிருந்து இன்னொரு காகம் வந்து கொத்திப்பறித்த பின் அதைப் பறிகொடுத்த காகம் பார்க்குமே ஒரு பார்வை... அப்படி ஒரு பார்வையை அவன் மீது வீசிவிட்டு, அந்தப் பார்வையின் அர்த்தத்தை முழுவதுமாக அவன் புரிந்துகொள்ளும் முன்பே 'சுக்ரன்' என்றுவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன்.

'ஆயாளு எந்தா பறஞ்சதுந்நு மனசிலாயோ...?' என்று சம்ஸுக்கா கேட்டதற்கு, 'என்னத்தைப் பெரிசாப் பறஞ்சிருக்கப் போறான்..? பாஸ்போர்ட் வேணும்டா இருநூறு தினாரோட வாடா வேசி மகனேன்டு பறஞ்சிருப்பான்'.
 
சம்ஸுக்கா இதழ் பிரியாத சிரிப்பொன்று சிரித்தார். இந்தச் சிரிப்பை அவரால் மட்டுமே சிரிக்கமுடியுமென நான் நினைக்கிறேன். எப்போதாவது அபூர்வமாகத்தான் அப்படிச் சிரிப்பார். அந்த அரபிக்காரனிடம் இப்போது போவதில் பயனில்லை என்று அவர் ஏற்கனவே சொல்லியிருந்தும் கூட நான் தான் அவரை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றிருந்தேன். அரபிகள் மிக்க கருணையாளர்கள் என்று நான் எண்ணியிருந்த ஒரு காலமும் உண்டு. அந்த எண்ணத்தின் மிச்ச சொச்சம் ஏதோ என் மூளையில் எங்கோ பதிந்து கிடந்திருக்க வேண்டும். அதுதான் மறுபடியும் என்னை இங்கு இழுத்து வந்து இலங்கைத் தேசத்தின் ஒரு ஓரத்தில் என்னைப் பற்றி இன்னும் முட்டாள்த் தனமாக நம்பிக்கை கொண்டிருக்கும் என் தாய்க்கு வேசிப்பட்டமும் வாங்கிக் கொடுத்திருக்கிறது. அலுத்துக் கொண்டே தளர்ந்து நடக்கையில் சம்ஸுக்கா  வழியிலிருந்த கேரள ரெஸ்டோரன்டுக்குள் நுளைந்து சாயாவுக்கு ஓடர் கொடுத்தார். வரும்போது இதே ரெஸ்டோரன்டில்தான் பூரியும் பாஜியும் வாங்கிக் கொடுத்திருந்தார். கடந்த சில மாதங்களாக என் உணவுக்குப் படியளப்பவர் அவர்தான். ஓசியில் குடிக்கும் சாயா என்பதைக் குறித்துக் கொஞ்சம் கூடக் கூச்சமின்றி சாயாவை ரசித்துக் குடித்துக்கொண்டிருந்தேன். நான் சற்று வாடியிருப்பதைப் பார்த்து'வெசமிக்கண்டா...' என்று அவர் சொல்ல நினைத்திருப்பார் போலும். சொல்லவில்லை. கடந்த ஆறு மாத காலத்துக்குள் நான் என் நிலையை நினைத்து கழிவிரக்கம் கொண்டோ கவலைப்பட்டோ அவர் பார்த்ததே இல்லை என்பதுதான் காரணம். ஒருவேளை 'என்ன ஜென்மம் இவன்?'என்றுகூட சிலநேரம் அவர் யோசித்திருக்கக்கூடும். அவர் நினைத்தாரோ இல்லையோ நான் என்னைப்பற்றி அப்படி பல நேரங்களில் நினைப்பதுண்டு.
 
இப்பொழுது தொத்திக்கொண்டிருக்கும் இந்த ஹோட்டல் வேலையில் நிலைத்தால் எப்படியும் இன்னொரு ஆறு மாசத்திற்குள் பாஸ்போர்ட்டை மீட்டுவிடலாம்தான். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அதை மீட்கும் பாரம் மட்டுமே என் தலையில் சுமத்தப்பட்டிருக்கவில்லையே... இருக்கும் பாரங்களின் விசை இமைகளை ஈர்த்து, இடுக்கி போட்டு இழுப்பதால் இழந்த இரவுத் தூக்கங்களை நினைத்துப்பார்க்கிறேன். வெளிநாடு போகிறேன் பேர்வழி என்று ஏற்கனவே இரண்டு முறை வாப்பாவின் நெஞ்சில் ஏறி நான் மிதித்த மிதியில் ஏகப்பட்ட கடன். கட்டாரில் ஆறு மாசம், சவூதியில் இரண்டு மாசம். திரும்பி வந்த இரண்டு தடவையும் அவரின் முகத்தில் முழிக்கவே திராணியற்று அவரில்லாத சமயங்களாகப் பார்த்து வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு அவர் வரும் முன்பே ஓடிக்கொண்டிருந்தேன். இப்படி வீட்டை விட்டு நான் அந்நியமாகிக் கொண்டிருந்த நிலையில் நல்ல வடிவான காதலொன்றும் வந்து சேர்ந்து கல்யாணமும் செய்து கொண்டபோது வாப்பாவுக்கும் எனக்குமான உறவு முற்றிலுமாக அறுந்து போனது. கிட்டத்தட்ட ஒரு ஏழெட்டு மாதம் வீட்டுக்குச் செல்லவேயில்லை. பின்னர் மெல்ல மெல்ல உம்மாவைத் தாளித்து வீட்டில் ஒண்டினேன். அப்போதும் வாப்பா இல்லாத நேரங்களிலேயே போக்குவரத்து. 'இந்த அடப்புக்குள்ள அவன் வந்தா அவன்ட காலை வெட்டிப் போட்டுருவன்'  என்று அவர் சொல்லியிருந்தார்.
 
'இல்ல..நான் அவள 'முடிக்கத்தான்' போறன்...'  என்று பள்ளித்தலைவர் மற்றும் குடும்பப் பெரியவர்களின் முன்னிலையில் நான் அடம்பிடித்து நின்ற அந்தப் பொழுதில்தான் எங்கள் வாப்பா கண்கலங்கியதை முதன் முறையாகப் பார்த்ததாக பின்பொரு தரம் தாஹிர் மச்சான் என்னோடு பேசிக்கொண்டிருக்கும்போது சொன்னார். தாய்மாமா என்ற முறையில் எங்கள் வாப்பாவின் மீது அவர் நல்ல மரியாதை கொண்டிருந்தார். வாப்பா கலங்கியதைப் பார்த்து தனக்கும் அழுகை வந்ததாகச் சொன்னார். இன்றைக்கே 'காவின்'எழுதவேண்டும் என்று நான் எடுத்திருந்த தீவிர முடிவு, வீட்டில் ஏற்படுத்தியிருந்த இறுக்கமான, மிகவும் குழப்பமான சூழ்நிலை காரணமாக அப்போது நான் யாருடையவும் முகத்தையோ கண்களையோ நேருக்கு நேர் பார்க்கத் துணியவில்லை. வாப்பா கண்கலங்கியதைக் கூடப் பார்க்காமல் தலைகுனிந்துதான் நின்றிருந்தேன். வாப்பா அன்று நிறையப் பேசினார் என்று நினைக்கிறேன். என்னை நோக்கி ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. கிராம சேவைப் பிரிவுக்கு ஒன்று அல்லது இரண்டு என்ற ரீதியில்'கள்ளத்தொடர்பு' வைத்திருக்கும் 'ஊர்ப்பெரியவரை' விளித்து மதித்துப் பேசிக்கொண்டிருந்தார். அவரோ இடைக்கிடை 'அது சரி', 'அது சரி' என்று சொல்லிக்கொண்டிருந்ததாக ஞாபகம். அப்போது வாப்பா பேசிய பெரும்பாலான சொற்கள் நான் கொண்டிருந்த பித்தத்தின் காரணமாகவோ என்னவோ என் புறச்செவிகளைத் தொட்டு உள்ளே நுளையும் வழி மூடப்பட்டிருந்ததால் வெறுமனே காற்றில் கரைந்து போயின.
 
எனது பிடிவாதத்தால் அன்றிரவே அனைத்தும் நடந்தேறி, தேக்கி வைத்திருந்த உடல் வெப்பம் முழுவதும் முதலிரவில் வடிந்து பெருந்தூக்கம் ஆட்கொண்டிருக்கையில்,மதுவருந்திவிட்டு  உறங்குபவன் நடுச்சாமத்தில் தண்ணீர் விடாய்க்கத் திடுக்கிட்டு விழிப்பது போல் விழித்தேன். முன்னிரவில் காற்றில் கரைந்துபோன வாப்பாவின் வார்த்தைகளில் சில அந்தப் 'புதிய' அறையின் சுவர்களை நிறைத்திருக்கக் கண்டேன். ஊர்த்தலைவரிடம் வாப்பா பேசிக்கொண்டிருந்தார், 'இவ்வளவு நாளும் உழைக்கப் போறாக... என்ன உழைக்கீங்க...எவ்வளவு உழைக்கீங்க...என்ன செய்றீங்கன்டு கேட்டிருப்பனா? அவக உழைக்கிறத என்ன செஞ்சாக...? பவுடர்ப் பொட்டியும் குளோன் போத்தலும் வாங்கியே செலவழிச்சாங்... அவகளுக்குப் பிறகு நாலு புள்ளைகள் கிடக்கு... அதுகளுக்கு ஒரு டொஃபித் துண்டாச்சும் வாங்கிக் கொடுத்திருப்பாகளா...? மத்தாக்கள் வாங்கித் தின்டு குடிக்கிறதப் பாத்து என்ட புள்ளைகளும் ஆசைப்படுந்தானே..?பின்னேரத்துல ஒரு டேஸ்ட் கிழங்குப் பார்சல் வாங்கிட்டு வந்து குடுக்க நமக்குக் கட்டாதுன்டு மார்க்கட்டுக்குப் போய் மையறுக்கிழங்கு வாங்கிட்டு வந்து நானே பொரிச்சுக் குடுப்பன் என்ட பிள்ளைகளுக்கு... இப்புடியிரிக்கி வூட்டு நிலம...இதெல்லாம் இவகளுக்குத் தெரியுமான்டு கேளுங்க ஹாஜியார் பாப்பம்....'
 
இப்படி சில இரவுகளில் கண் விழிப்பதும் வாப்பாவின் குரல் சுவர்களில் கேட்பதும் நிகழ்ந்தது. அதற்குப் பயந்து கண்விழிக்கும் தருணத்தையெல்லாம் காமத்தில் கரைக்க முயற்சித்தேன். காலப்போக்கில் அந்த சுவர்க்குரல் தொலைந்து போனது.
 
பேசிக்கொண்டிருக்கும்போது, '...அப்படிப்பட்ட மனுசனைக் கத்த வச்சிட்டியேடா' என்று தாஹிர் மச்சான் சொல்ல, 'எப்படிப்பட்ட...?' என்று கேட்டு அதற்குப் பதிலாக ஒரு முறைப்பையே பதிலாகப் பெற்றேன். சற்று நேரம் கழித்து 'இல்ல...மச்சான்..நான் எப்படியாவது கஷ்டப்பட்டு அவகளுக்கு உதவி செய்வன்' என்று நான் சொன்னபோது என்னை அவர் பார்த்த பார்வையை இப்போதும் என்னால் மறக்கமுடியவில்லை.
 
'முதல் ஏதாவது வேலைய ஒழுங்காப் பாத்து பொண்டாட்டியக் காப்பாத்துற வழியப் பாரு,இனி கடன் அது இதுண்டு கேட்டு என்னைத் தொந்தரவு படுத்தாத!' என்று சொன்னார்.
 
இரண்டு வருடங்கள் எப்படியோ கழிந்து போனபின் தொடர்ந்து நான் கஷ்டப்படுவதைக் காணச்சகிக்காமல் உம்மாதான் யாரிடமோ நகையை வாங்கி அடகு வைத்து விட்டுக் காசு தந்தா. அந்தக் காசைக்கொண்டு வந்து இறங்கிய இடம் குவைத். ஆறு மாதத்தில் அரபிக்கார எஜமானனிடம் சொல்லிக்கொள்ளாமல் வேலை பார்க்குமிடத்தை விட்டுப் பாய வேண்டிய நிலை ஏற்பட்டு, வெளியிலே நல்ல வேலை கிடைத்தும் பாஸ்போர்ட் அவனிடம் இருப்பதால் வேலையிலும் நிரந்தரமாகச் சேர முடியாத துர்ப்பாக்கியம். வேலை தரும் புதிய அரபிக்கு பாஸ்போர்ட் முதலிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. சம்ஸுக்கா  மட்டும் இல்லையென்றால் மூன்றாவது தடவையாகவும் வெறுங்கையுடன் ஊர்போய்ச்சேர வேண்டியிருந்திருக்கும்.. அவர்தான் உறுதியாகச் சொன்னார் 'எந்தெங்கிலும் பணி கிட்டும். நீ போகண்டா' என்று. கைக்குழந்தையுடனிருக்கும் என் மனைவி, படித்துக்கொண்டிருக்கும் என் இரண்டு தங்கச்சிகள், கொள்ளிச்சைக்கிள் இழுக்கும் வாப்பா... இவர்களைப் பற்றிய கவலை என்னைவிட அவருக்கு அதிகமாக இருந்தது ஏனென்று புரியவில்லை. குவைத்தில் வாழுகின்றவர்களில் என் மீது அக்கறை கொண்ட ஒரே ஜீவன் இவர்தான். ஊர்க்காரர்கள்,சில பல உறவுக்காரர்கள் என்று இங்கிருந்த போதும் எவரையும் நான் நாடுவதில்லை. ஏனென்று தெரியவில்லை, ஊர், ஊர்க்காரர்கள் என்றாலே வெறுப்பாக இருந்தது. இன்றுகூட தான் வேலைக்குச் செல்லும் நேரத்தை எனக்காக ஒத்திப்போட்டு விட்டு வந்து இந்த அரபு முதலையிடம் தூஷண வார்த்தைகளை சம்ஸுக்கா  கேட்டுக்கொண்டிருந்தார்.
 
'எந்தடா பலமாயிட்டு யோசிக்குந்நு?' என்று சம்ஸுக்கா கேட்டபோது, 'ஒண்ணுமில்ல க்கா' என்று விட்டு கண்ணீர்த்துளிகளை மறைக்கத் தூரத்தே பார்ப்பவனைப்போல் நடித்தேன். 'சிகரெட் ஒந்நு வலி' என்று வாங்கித் தந்தார். அவர் புகைப்பதில்லை.
 
கடந்த சில மாதங்களாகத் தெரிந்தவர்கள் யாரையும் சந்திப்பதை நிறுத்தி விட்டேன். முக்கியமாக எங்கள் ஊர்க்காரர்களை. இந்த வேலை கிடைக்கும் முன்பு ஹோட்டலில் வேலை செய்துகொண்டிருந்த போது காசிம் ரைவர் நானா வந்து அரை போத்தல் கசிப்புக் கேட்டார். கடையிலிருக்கும் சிங்களப் பொடியனிடம் சொல்லிக் கொடுக்கச் சொன்னேன். அவர் ஊருக்குச் சென்றபோது நான் குவைத்தில் கசிப்புச்சாராயம் வித்துக் காசு சம்பாதிப்பதாகவும் விரைவில் பொலிஸில் மாட்டி கை வெட்டப்படுவேன் என்பதாகவும் எனது குடும்பத்தைச் சேர்ந்த யாரிடமோ சொல்லித் தொலைக்க, போன் எடுத்துப் பேசும்போது உம்மா ஒரே அழுகை. 'இப்புடியெல்லாம் காசு சம்பாரிக்கத் தேவல்ல கிளி... புடி பட்டா அரபிகள் கைய வெட்டிப்போட்டுருவானுகளாம்.. உழைக்காட்டியும் பரவால்ல..இஞ்ச வந்துரு மனெ.' என்று ஒப்பாரி.
 
'இல்லம்மா...வாற மாசம் வேற நல்ல வேலையொன்டு கிடச்சிடும்'
 
உம்மா நேத்திக்கடன் ஏதும் வைத்திருப்பா போல. அது பலித்து விட்டிருக்கிறது என்றே நம்பினேன். ஆண்டு அனுபவிக்கிறது என்று சொல்வார்களே.. அதற்கேற்ற மாதிரி ஒரு வேலை. 'வோல்பேப்பர்' ஒட்டுவது. அரபிகளின் வீடுகளுக்கும் அலுவலகங்களுக்கும் சென்று செய்து முடித்து சம்பளமும் சலுகைகளும் பெறக்கூடிய வேலை. எனது எஜமான் நிர்ணயித்துள்ள சம்பளத்தை விடப் பல மடங்கு உயர்த்திச் சொல்லி அரபிகளை சுரண்டத் தோதான வேலை. முக்கியமான பல்வேறு அலுவலகங்களுக்கும் பணிக்குச் சென்றிருக்கிறேன். ஆள் அடையாள அட்டை (பதாகா) வழங்கும் அலுவலகம் உட்பட. அங்குதான் பதாகாவை அச்சிட்டே வழங்குகின்றார்கள். சாமான்யமாக அங்கெல்லாம் நம்மைப் போன்ற யாரும் நுழைந்துவிட முடியாது. அங்கு நான் ஒட்டிய கறுப்பு நிற சுவர்த்தாள் அந்த அதிகாரிக்குப் பிடித்து விட, என்னைப்பற்றி விசாரித்தான். பாஸ்போர்ட் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் முன்னாள் அரபு முதலாளியிடம் பறிகொடுத்துவிட்ட நான் ஒரு 'ஓடுகாலி' என்பதைச் சொன்னேன். அவன் சிரித்து விட்டு பதாகா அவசியமில்லை என்றும், ஏதாவது பிரச்சினை என்றால் தனக்கு போன் பண்ணுமாறும் கூறி நம்பரும் முப்பது தினாரும் தந்தான். ஒரு நாளில் முப்பது தினார் என்பது என் போன்றவர்களுக்கு ரொம்பவே அதிகம். முன்னர் நான் செய்த ஹோட்டல் வேலையில் எனக்குக் கிடைத்தது மாதமொன்றுக்கு ஐம்பது தினார். இப்போது நான் தனியாகக் குடியிருக்கும் அறை வாடகையே மாதத்துக்கு ஐம்பது தினார். ஒரு மனிதனின் வாழ்க்கை மிகக் குறுகிய காலப்பகுதிக்குள் இப்படியெல்லாம் மாறுமா என்ன?
 
மேற்படி பல்வேறு அலுவலகங்களுக்கும் நான் வேலைக்குச் சென்றிருந்தாலும் கூட நான் அதிகமும் பணி புரிய விழைவது பெருநகரங்களில் வசிக்கும் குவைத்திகள் தங்களது 'சின்னவீடுகளுக்குக்' கட்டிக்கொடுத்திருக்கும் பெரிய வீடுகளில்தான். நான் வசிப்பது குவைத் நாட்டின் மூன்றாவது பெரிய நகரம். அதிக பொலிஸ் சோதனைகளுக்குள்ளாவதும் இந்த நகரம் தான். இங்கு சகலமும் நடக்கும்; சகலதும் கிடைக்கும். இந்த நகரத்தில் விசேசமாக நான் கண்டது ஒன்று உண்டு. வேறு பெருநகரங்களில் வசிக்கும் அரபுச் சீமான்கள் பலர் தங்களது ஐந்தாம் ஆறாம் துணைவிகளுக்காக இந்நகரத்திலேயே வீடு கட்டி, பிளாட் வாங்கிக் கொடுத்திருந்தார்கள் என்பதுதான் அது. இந்நகரம் அதற்கென்றே உருவாக்கப்பட்டது போல்தான் தோன்றியது எனக்கு. அந்தளவுக்கு 'சின்னவீடுகளால்' இது நிரம்பி வழிந்தது. இவ்வாறான வீடுகளுக்கு வேலைக்குச் செல்வதென்பது எனக்குக் கொண்டாட்டம். நேர்த்தியாக வேலை செய்ய வேண்டும். அது அந்த அரபியின் வைப்பாட்டிக்குப் பிடிக்கவும் வேண்டும். அவள் அந்த அரபியின் முன்னிலையில் அழகாக இருக்கிறது என்று ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் போதும் அதன் பின் நாம் கேட்கும் தினார்களைத் தர அந்த சீமான்கள் தயங்குவதே இல்லை. அந்தப் பெண்ணுக்குப் பிடித்துப் போய்விட்ட சுவர்த்தாளை ஒட்டியவனல்லவா?நம் மதிப்பு ஏறிவிடும். அவள் முன்னிலையில் தனது தயாள குணத்தைக் காட்ட வேண்டிய ஒரு கட்டாயம் உருவாகிவிட்டதாகக் கற்பனை செய்து கொண்டு கேட்பதை விட அதிகமாகக் கொடுப்பார்கள். நூறு நூற்றைம்பது தினார் மதிப்புடைய உயர் ரக மது போத்தல்களையெல்லாம் கேட்டுப் பெற்று வந்திருக்கிறேன். தருவார்கள், ஆனால் எதையும் 'அவள்' முன்னிலையில் கேட்க வேண்டும். அதற்கு முன், அவள் மனைவியா இல்லை வைப்பாட்டிதானா என்பதை அறிந்து கொள்ளும் திறமையும் இதற்கு அவசியம். அது எனக்கு இருந்தது.
 
இந்த வேலை கிடைத்த பின் இரண்டொரு முறை சம்ஸுக்காவைப் பார்க்கச் சென்றிருந்தேன். நான் சந்தித்த அற்புதமான மனிதர் சம்ஸுக்கா . மலையாளி. வயதில் என்னை விட இரண்டு மடங்கு மூத்தவர். சுமார் பதினெட்டு வருடங்களுக்கு முன் குவைத்துக்கு வந்தவர். பதினெட்டு வருட சம்பாத்தியத்தில் ஆறு தங்கைகளுக்கும் திருமணம் செய்து கொடுத்துவிட்ட திருப்தியுடன் இருக்கிறார். ஆம், அவரது குடும்பத்தில் அவர் ஒரே ஆண்பிள்ளை.  இப்போதுதான் தனது ஒரே மகளுக்காக மாளிகை போன்ற ஒரு வீட்டைக் கட்டி முடித்திருக்கிறார். இனி மகளின் திருமணத்திற்கான நகைநட்டுக்கள் சாமான்கள் சேர்க்க வேண்டும். மிஞ்சி மிஞ்சிப்போனால் ஒன்றரை அல்லது இரண்டு வருடம் என்பது அவர் கணக்கு. அதன் பின், குவைத்தை விட்டுப்போய் விடுவேன் என்று சொல்லுவார். தன் வாழ்வின் இறுதிப்பகுதியைத் தனது சொந்த ஊரில் மனைவி மகளுடன் கழிப்பது பற்றிய கற்பனையில் இருந்தார். சில நேரங்களில் 'தன் இளமை முழுவதையும் இங்கே பாழாக்கிவிட்டோமே' என்ற விசனம் அவருக்கு ஏற்படும். அவ்வாறு மன உளைச்சல் ஏற்படுகின்ற வேளைகளில் முப்பது தினார் கொடுத்து ஈராக்கிய மது வாங்கிக் கொண்டு வந்து என்னுடன் சேர்ந்து அருந்துவார். ஆனால் மனப்பாரத்தை இறக்கி வைக்க வேண்டுமே என்று ஒரு வார்த்தை கூடப் பேசமாட்டார். ஆனால் ஒன்று மட்டும் அடிக்கடி சொல்லுவார். எக்காரணம் கொண்டும் வெளிநாட்டில் பணிபுரியும் ஒருவனைத் தனது மகளுக்குத் திருமணம் செய்து கொடுப்பதில்லை என்பதுதான் அது. மிகக் குறைந்த சம்பளமெனினும் பரவாயில்லை; சொந்த ஊரில் பணி புரியும் மாப்பிள்ளையே அவரது இலட்சியம்.
 
அவர் பேசாவிட்டாலும், போதையேறினால் நான் பலமாகவே பேசுவேன். என்னைப்பற்றிப் பலவாறு வெறியில் புலம்பிக் கொண்டிருப்பேன். அவற்றில் பெரும்பாலானவை சம்ஸுக்கா காலையில் சொல்லும்போது தான் தெரியவரும். அப்படித்தான் ஒருமுறை கேட்டார், 'ஏன்டே...கிழங்குப் பொரி வாங்கிக்கொடுக்கிறது எந்தா...நின்டே வல்லிய லட்ஷியமோ?'
 
நான் வேலை இல்லாமல் சிரமப்பட்ட நாட்களில் எனக்கு உண்டியும் உறையுளும் அளித்த அவருக்குப் பிரதியுபகாரமாக ஏதாவது நானும் செய்ய வேண்டும் என நினைத்து பலமுறை முயன்றிருக்கிறேன். மிக நாசூக்காக அவற்றை மறுத்து விடுவார். அவரைப்பார்க்கச் சென்ற சந்தர்ப்பங்களில் வாங்கிச்சென்ற பழங்கள் தின்பண்டங்கள் போன்ற பொருட்களை மட்டும் ஏற்றுக்கொண்டார். வேலையைப் பற்றி, தங்குமிடத்தைப் பற்றியெல்லாம் விசாரிப்பார். எதற்கும் நான் உண்மை சொன்னதில்லை. ஐம்பது தினார் வாடகை கொடுத்து தனியே அறை எடுத்துத் தங்கியிருக்கிறேன் என்பதைச் சொன்னால் ஏசி விடுவாரோ என்ற பயத்தின் காரணமாக அவரை என் இருப்பிடத்திற்கு அழைக்கவுமில்லை.


இந்த ஒரு வருடத்தில் நான் முழுவதுமாக மாறிப்போயிருந்தேன். வாரத்தில் ஒருமுறை மனைவியுடனும் உம்மாவுடனும் போனில் பேசினேன். மாதத்திற்கொருமுறை இருவருக்கும் செலவுக்குப் பணமனுப்பினேன். இது இரண்டையும் தவிர ஏறக்குறைய ஊரை நான் மறந்தே விட்டிருந்தேன். ஏற்கனவே வெளிநாடு சென்றதில் ஏற்பட்ட கடன்களை கொஞ்சம் கொஞ்சமாக அடைத்துக்கொண்டிருப்பதாக உம்மா சொன்னா. முழுவதுமாக அடைத்திருக்க முடியும். ஆனால் நான் தான் முழுப்பணத்தையும் அனுப்புவதில்லையே. எனது செலவுகள் பல வழிகளில் பெருகிவிட்டிருந்தன. என்ன வழிகள் என்று இங்கே விபரிக்கப்போவதில்லை.
 
இந்த இடத்தில் நான் சம்ரியாவை சந்தித்ததைப் பற்றிச் சொல்ல வேண்டும். உண்மையைச் சொல்லப்போனால் இந்தக்கதையை அவளிடமிருந்துதான் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் என் குடும்பக் கதையெல்லாம் சொல்லி நேரத்தைப் போக்கடித்து விட்டேன். எனது சிங்களத் தோழி ஒருத்தி அடிக்கடி 'உங்கள் ஊர்க்காரி ஒருத்தி எனக்கு பெஸ்ட் ஃபிரண்ட்' என்று சொல்லிக் கொண்டிருந்தாள். மட்டுமின்றி அவளைப் பற்றிய பல ஆச்சரியமூட்டும் தகவல்களையும் சொல்லி வைத்திருந்தாள். இருப்பினும் பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் வந்ததே இல்லை. தற்செயலாக ஒருமுறை சந்திக்க நேர்ந்தபோது...சந்திக்காமலேயே போயிருக்கலாமே என்று இன்று வரை எண்ணச் செய்யக்கூடியவளாக அவள் இருந்தாள்.
 
அவள் எனது ஊர் மட்டுமல்ல, எனது நெருங்கிய நண்பர்களில் ஒருவனான நிஸாமின் தங்கையும் கூட. பாடசாலையில் என்னைவிட ஒரு வகுப்பு குறையப் படித்தாள். அந்நூர் பாடசாலைக்கு ஒரு செமினாருக்காகச் சென்றபோது தான் முதன்முதலாக அவளைச் சந்தித்தேன். நண்பர்கள் மூலமாகக் கேள்விப்பட்டது போலவே ரொம்ப அழகு. நண்பனின் தங்கை என்ற ஒரே காரணத்தினால் மட்டுமே எல்லோரும் அவளிடம் கண்ணியமாக நடந்து கொண்டோமே தவிர நண்பர்களுக்கெல்லாம் உள்ளே 'நப்ஸ்''  துடித்துக் கொண்டிருந்தது எனக்குத் தெரியும். அழகி.
 

உயர்தரம் படிக்காமல் சின்ன வயசிலேயே திருமணம்...விவாக ரத்து... வெளிநாட்டு வாழ்க்கை... மறுமணம்...அதிலும் தோல்வி...குடும்பத்தினரின் உதாசீனம்... பணக்கஷ்டம்... மறுபடி வெளிநாடு என்று இப்படியான எல்லாப் பெண்களுக்குமுரிய சோகக் கதைகள் அவளிடம் நிறையவே இருந்தன. ஊரில் இருந்தபோது இரண்டொரு முறையே அவளுடன் பேசியிருப்பேன். அதுவும் நிஸாமைப் பார்க்கப் போகும் சந்தர்ப்பங்களில்தான். அங்கிருக்கும்போது எனக்கும் அவளுக்கும் இடையில் நடந்த உரையாடல் பெரும்பாலும் இவ்வாறுதான் அமைந்திருக்கும். நான் வெளியில் நின்று 'நிஸாம்' எனக் குரல் கொடுக்க அவள் 'நானா இல்ல..வெளியில போயிரிக்காரு' என்பாள். அல்லது நிஸாம் வீட்டிலிருக்கும்போது என்றால் எனது அழைப்புக்கான பதிலை அவனிடம் சொல்வாள் 'நானா! உங்கள யாரோ கூப்பிட்றாக' என்று. இவற்றைத் தவிர அவளிடம் பேச எந்த வாய்ப்பும் எனக்குக் கிடைத்தில்லை. ஆனால், இங்கே அவளைச் சந்தித்தபோது நிறையப் பேசக் கிடைத்தது. என்றால் எனக்கல்ல, அந்த சந்தர்ப்பம் அவளுக்கே கிடைத்தது எனச் சொல்ல வேண்டும். அந்தளவுக்கு அவள் நிறையப் பேசினாள். நீண்ட நாட்களாகப் பேச்சுத்துணைக்கு ஆளே கிடைக்காமல் இருட்டறை ஒன்றில் அடைக்கப்பட்டிருந்த ஒருத்தியைப்போலப் பேசினாள். நான் நினைக்கிறேன் என்னுடன் பழகத்தொடங்கிய ஒரு வார காலத்துக்குள்ளாகவே அவளைப் பற்றிய அநேக விசயங்களை அவள் மூலமாகவே அறிந்து கொண்டேன் என்று. இத்தனைக்கும் ஒரே ஊர்க்காரன் என்ற ரீதியில் அந்த நட்பு அமைந்திருக்கவில்லை. அவளது நெருக்கமான தோழியாகிய இஷானி என்ற சிங்களப் பெண்ணுக்கு நான் நல்ல நண்பன் என்ற அடிப்படையிலே அது அமைந்திருந்த்து. காரணம் கருதியே நானும் நிஸாமின் பெயரைத் தவறியும் உச்சரித்து விடாமல் பழகினேன். தவிரவும், என்னைப்பற்றி அளவுக்கு மிஞ்சி நல்லத்தனமாகப் புகழ்ந்து இஷானி வழங்கிய சான்றிதழும் ஒரு காரணம். அவளுக்கு என்னை ரொம்பப் பிடித்துப்போய் விட்டிருந்தது. அதெப்படி என் குடும்பத்திலுள்ளவர்களைத் தவிர மற்றவர்கள் அனைவருக்கும் என்னைப் பிடித்துப் போகின்றதென்பது எனக்கு விளங்காத விசயங்களில் ஒன்று, கிட்டத்தட்ட கணிதப்பாடம் போல.
 
இரண்டொரு முறை 'உன்னை எங்கயோ பாத்த மாதிரியே இருக்கு'எனக்கூறியிருக்கிறாள். பழகத்தொடங்கிய ஒரு மாத்திற்குப் பின் ஒரு மாலைப்பொழுதில் இஷானியுடன் வந்திருந்தாள். மூவரும் ஒரு கஃப்டீரியாவில் அமர்ந்து  ஒரு லெபனான் தேசத்து 'சிக்கன் ஷவர்மா'வைச்  சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அதை மறுபடியும் சொன்னாள். இனிமேலும் மறைக்க விரும்பாமல் நான் 'ஓம், பாத்திருக்கம்...' என்றேன்.
 
'எங்க?'
 
'அந்நூர் ஸ்கூல்ல... ஓ எல் செமினார்ல...'
 
ஒரு தேர்ந்த நடிகைக்கு உரிய பாவனைகளுடன் புருவமுயர்த்தி உதடுகளைச் சுழித்து தோள்களைக் குலுக்கி 'ப்ச்... ஞாபகமில்லயே...' என்றாள்.
 
'ஒரு மஞ்சக்கலர் ரோசாப்பூவோட மூணு பேரு சுத்தித் திரிஞ்சீங்களே ஞாபகமிரிக்கா...? நீ..பேபி...மறுகா இன்னொருத்தி...பேரு தெரியா.. தெத்துப் பல்லுடின்டு சொல்லிச் சிரிச்சீங்களே...பிறகு நிஸாமைத் தேடி நான் உங்கட வீட்ட வரக்கொள்ள விறைச்சுப் போய் நின்டாயே.. ஞாபகமிருக்கா...?'
 
நிஸாமின் பெயரை உச்சரித்ததும் திருக்கை வாலால் விளாசப்பட்ட நாய் ஒன்று மிரண்டு பார்ப்பது போலப் பார்த்தாள். அன்றிலிருந்து சரியாக ஒரு வாரம் அவள் என்னோடு பேசவில்லை. போன் பண்ணினால் எடுப்பதில்லை. நிறையத் தடவைகள் முயற்சித்துவிட்டு கடைசியாக 'தேங்ஸ்' என்று ஒரு எஸ் எம் எஸ் அனுப்பினேன். அந்த உத்தி பலனளித்தது. என்னத்துக்குத்  'தேங்ஸ்?' என்று பதில் வந்தது. இந்த முறை நான் பதில் அனுப்பவில்லை. சற்றுப் பொறுத்து போன் பண்ணினாள். நான் எடுக்கவில்லை. இரண்டு நாட்கள் முயற்சித்துவிட்டு மூன்றாவது நாள் இஷானியுடன் என் அறைக்குத் தேடி வந்திருந்தாள். சற்றே அழுதாள்.
 
அவளிடம் கேள்விகள் கேட்பதில்லை என்ற என் கொள்கயினால் தர்மசங்கடமான சூழ்நிலைகள் உருவாகாமல் நான் பார்த்துக்கொண்டேன்.  மேலும், நான் பள்ளிக்கூட்த்தில் படிக்கும்போது கடைப்பிடித்த அதே கண்ணியத்தை அவளிடம் எப்போதும் கடைப்பிடித்தது அவளுக்கு என்மீது நல்லபிப்பிராயத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். மனம் விட்டுப் பேசுவாள். நல்ல வருமானம் என்று சொன்னாள்...ஊரில் மிகப் பெரிய வீடு ஒன்றைக் கட்டிக் கொண்டிருப்பதாகச் சொன்னாள். குவைத்தில் சொந்தமாக நான்கு டாக்ஸிகள் ஓடுகின்றன. அதாவது நான்கு ட்ரைவர்களுக்கு அவள் வேலை வழங்கிய எஜமானி என்ற நிலையில் இருந்தாள். வாழ்க்கை பற்றி எனக்கே பிடிபடாத தத்துவங்களெல்லாம் பேசுவாள். அவள் 'ஃப்ரீயாக' இருக்கின்ற பகல் பொழுதுகளில் மாத்திரமே அவளைச் சந்திக்க முடியும். இரவுகளில் போன் பண்ணவோ பேசவோ முடியாது. அவளது தற்காலிக கணவனான மலையாளி வேலை முடிந்து வந்துவிடுவான். இவன் மூன்றாவது தற்காலிகக் கணவன் என்று இஷானி சொன்னாள். 'அவனுக்கு இவளைப் பற்றித் தெரியாதா?' என்று கேட்டதற்கு, 'அவள் ஆண்களிடம் உண்மையாக நடந்துகொள்வதை விட்டு ரொம்ப காலமாகிவிட்டது' என்றாள்.
 

கையில் காசில்லாத தருணங்களில் காசும் தந்திருக்கிறாள். 'காசில்லாம உலகமில்ல..வாழ்க்கையுமில்ல' என்பது தான் அவள் சொன்னதிலேயே எனக்குத் தெரிந்திருந்த தத்துவம். பெரும்பாலும் தரித்திரத்தில் உழல்கின்ற அனைவருக்கும் இது தெரிந்த தத்துவமாகவே இருக்கும். அதிலும் என்னைப் போன்ற தரித்திரக்காரர்களுக்கு என்றால் சொல்லவும் வேண்டுமா?
 

நேற்று மாலை கடைசியாக அவளைச் சந்தித்த போது, கேட்கக் கூடாது என நினைத்திருந்த அந்தக் கேள்வியைக் கேட்டே விட்டேன். 'உனது 'இந்த' வாழ்க்கையப் பற்றி உனது குடும்பத்தினருக்குத் தெரியுமா?' என்று. மிக இயல்பாக 'தெரியும்' என்றாள்.
 
'நானாவுக்கு?'
 
'தெரிஞ்சத்தால தான் அவரு கதைக்கிறல்ல..' என்றாள். 'ஊர்ல இருக்கிற சில சொந்தக்காராக்களுக்கே தெரியும்..நானா குவைத்திலயே இரிக்காரு..அவருக்குத் தெரியாம இரிக்குமா?'  என்று சிரித்த போது ஒரு கணம் அவள் முகத்தில் குழந்தை ஒன்று தோன்றி மறைந்ததைக் கண்டேன். விழிகளில் நான் சென்றபிறகு அழுவதற்கான அழுகை தயாராக இருந்தது. ஆனால் அந்தக் குழந்தைமையை தனது கர்வத்தாலும் வைராக்கியத்தாலும் அவள் கொன்று மனதிற்குள் எப்போதோ புதைத்து விட்டிருக்க வேண்டும் என்பது எனக்குத் தெரிந்தே இருந்தது. நான் இருக்கும்போது அழுது விடக்கூடாது என்பதை விட, தன் இளமையும் உடலும் ஒத்துழைக்கும் வரை உழைத்துவிட்டு ஊருக்குச்சென்று தான் வாழப்போகும் செல்வந்த வாழ்வைப் பற்றிய கனவே அவள் கண்ணீரைத் தடுத்து நின்ற பெரும் திரை என்பதும் எனக்குத் தெரியும்.
 

இந்நிலையில், இவளைப்பற்றி எனக்குத் தெரியும் என்பது நிஸாமுக்குத் தெரிய நேர்ந்தால் அவனது மனநிலை எப்படியிருக்கும் என்பதைப் பற்றிக் கற்பனை செய்ய முயன்றது பெரும் வலிதரும் அனுபவமாக இருந்தது. ஒரு இரண்டு வருடங்களுக்கு அவனைச் சந்திக்கவே கூடாது என்று அந்த இடத்திலேயே முடிவெடுத்து விட்டேன்.
 

அமைதியாக இருந்த என்னை நோக்கி ஒரு ரெட்புல் பானத்தை நீட்டும்போது, '{ஹம்..காசு... காசிருந்தா எல்லாரும் மத்த எல்லாத்தையும் மறந்துடுவாங்க.' என்றாள். எத்தனை பெரிய யதார்த்தம்? அவள் சொன்னது வேறு அர்த்ததில் என்றாலும் பணம் கைகளில் சேரத்தொடங்கிய பின் நான் மறந்தவைகளைப் பற்றி ஒரு கணம் எண்ணினேன். அவள் தந்த பானத்தைக் குடித்து விட்டு வெளிக்கிட்டு அந்தத் தொடர்மாடிக் குடியிருப்பை விட்டு அகலத் தொடங்கினேன்.
 

உடல்நிறை எண்பத்தாறு கிலோவைத் தாண்டியபிறகு படிகளில் ஏறி இறங்குவது எனக்கு மிகவும் சிரமம். எப்போதும் எலவேட்டர்களையே நாடும் நான் அன்று என்னை மறந்து படிகளில் இறங்கினேன். தளர்ந்துபோய் இருந்தேன். சம்ஸுக்காவும் சம்ரியாவும் மாறி மாறி மனதில் ஊர்ந்து கொண்டிருந்தனர். இருவரும் இரு துருவங்கள். என்றாலும் கூட இருவருக்குமிடையிலான பொதுத்தன்மை என் நெற்றிப்பொட்டில் அடித்தது. இருவருமே செல்வம் சேர்க்கும் பொருட்டு தங்கள் இளமையை விற்றவர்கள்...இதைச் சிந்தித்த அந்தக் கணத்தில்தான் முதன்முதலாக வாழ்க்கை என்னைப் பயமுறுத்தத் தொடங்கியது.
 
நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் சம்ரியாவைச் சந்திக்கும் முன்பு உம்மாவுக்குக் கோல் எடுத்திருந்தேன்.
 
'அனிஸாக்கு ஏ.எல். ரிசல்ஸி வந்திட்டு. கெம்பஸும் கிடைக்கல..கொலேஜும் கிடைக்கல..அவளாவது படிச்சிக் கிடிச்சி ஒரு வேலை வெட்டிக்குப் போவான்டு நினைச்சிக்கிட்டிருந்தம்...அதுவும் நடக்கல...என்ட குமருகள எப்படித்தான் கர சேக்கப் போறனோ...? அல்லா....' என்ற அழுகை வார்த்தைகள் படியிறங்கும் தோறும் காதுகளில் அறைந்து கொண்டேயிருந்தன. கீழ்த் தளத்துக்கு வந்ததும் வராததுமாக போனில் இலக்கங்களை அழுத்தினேன்.
 
'உம்மா...நாந்தான் கதைக்கன்... அவள அழுது குழறிக்கிட்டு இரிக்க வேணான்டு சொல்லுங்க... காசனுப்புறன். ஜீ.ஏ.கிவ் பதியச் சொல்லுங்க. அவள் படிக்கட்டும்..' என்று விட்டு உடனே துண்டித்தேன். மனதில் சம்ஸுக்காவும் அவரது ஆறு தங்கைகளும் சிரித்துக்கொண்டிருந்தார்கள்.
 
எனது அறைக்குச்செல்ல டாக்ஸி பிடிக்க வேண்டும். ஆனால் நடந்துகொண்டிருந்தேன். அங்கிருந்த பெட்ரோல் பங்க் முனை தாண்டியதும் 'தால்...' என்ற அதட்டல் கேட்டது. இரண்டு போலிஸ்காரர்கள் நின்றுகொண்டிருந்தனர். உயரமானவன் என்னை உற்றுப் பார்த்து 'ஜீப் பதாகா!' என்றான். எடுத்து நீட்டியதும் கையிலிருந்த மடிக்கணினி போன்ற ஆனால் அதை விடச்சிறிய சாதனத்தில் எனது அடையாள அட்டை இலக்கத்தை ஒற்றிப் பார்த்துவிட்டு அதன் திரையை மற்றவனிடம் நீட்டினான். அவன் எனது இடது கையைப் பற்றி முறுக்கி 'யெல்லா..' என்றவனாக என்னைக் காரினுள் தள்ளித் திணித்தான். உள்ளே ஏற்றியதும் முதல் வேலையாக எனது போனைப்பறித்து பெற்றியையும் சிம் கார்டையும் கழற்றியெடுத்தான். 'எந்த நாடு?' என்று அரபியில் கேட்டான். 'ஸ்ரீலங்கா' என்ற போது நீண்ட நாட்களுக்குப் பிறகு ஊர் ஞாபகம் திரண்டு வந்தது.
 
எனது முன்னாள் அரபு எஜமானன் என் மீது போலிசில் அளித்திருந்த புகாரின் பேரில் நான் கைது செய்யப்பட்டிருக்கிறேன் என்பது போலிஸ் நிலையத்தில் எனக்குத் தெரிவிக்கப்பட்டது. வீஸா இல்லாமல் குவைத்திலிருந்த குற்றத்திற்குமாகச் சேர்ந்து என்னை சிறையில் தள்ளினார்கள். சிறிய சிறை. நல்ல உணவு கிடைத்தது. ஐந்தாவது நாளில் இரண்டாவது சிறைக்கு மாற்றப்பட்டேன். அது சுமார் ஆயிரத்து ஐந்நூறு பேர் தங்கியிருந்த பெரிய சிறை. அங்கும் நல்ல சாப்பாடு. மெடிக்கல் செக்கப் எல்லாம் நடந்தது.  அங்கிருந்தபோதுதான் ஒரு கருணை மிக்க போலிஸ்காரனின் உதவியால் எனது தற்போதைய எஜமானனுக்கு தகவல் சொல்ல முடிந்தது. பதினோராவது நாள் என்னுடைய எஜமானன் வந்து என்னைச் சந்தித்தான். இருநூறு தினார்களைக் கொடுத்து என்னுடைய பாஸ்போர்ட்டை மீட்டு என்னிடம் தந்தான். அதைப் போலிஸார் வாங்கி பெரிய சீல் ஒன்று குத்தி என்னிடம் தந்தார்கள். எக்ஸிட். உடனடியாக நான் குவைத்தை விட்டு வெளியேற வேண்டும் என்பதைக் குறிக்கும் சீல் அது. இரண்டு வருடங்களுக்குப் பின்பே என்னால் இனி இம்மண்ணில் கால் வைக்க முடியும்.  'நான் வெளியேறப்போகும் செய்தியை சம்ஸுக்காவுக்குச் சொல்லமுடியுமா?'என என் எஜமானனிடம் கேட்டேன், 'கண்டிப்பாக' என்றான். 'கவலைப்படாதே இரண்டு வருடங்களுக்குப் பிறகு உனக்கு நான் வீஸா அனுப்புவேன்' என்று நம்பிக்கை தந்தான். ஆம், எஜமானனே! நான் வரவேண்டும்...கண்டிப்பாக வரத்தான் வேண்டும்.
 
விமானநிலையத்துக்கு சம்ஸுக்கா வந்திருந்தார். போலிஸார் அருகில் சென்று சந்திக்க விடவில்லை. கண்ணாடித் தடுப்புகளுக்கு வெளியே நின்ற அவரைப் பார்த்தபோது 'போய் வருகிறேன் சகோதரா' என்று மனதுக்குள் நினைத்தேன். நான் நினைத்தது அவரது இதயத்துக்குக் கேட்டது போல் இதழ் பிரியாத அவரது சிரிப்புடன் தலையசைத்து கையிலிருந்த பொலிதீன் பையை உயர்த்திக் காட்டினார். பையிலிருந்த நான் விரும்பிப் புகைக்கும் டன்ஹில் சில்வர் சிகரெட் கார்ட்கள் எனக்குத் தெளிவாக விளங்கின.
 
சாதாரணப் பயணிகள் செல்லும் வழியாலன்றி நேரடியாகப் போலிஸ் வண்டியிலேயே நான் விமானத்தினருகில் கொண்டுசெல்லப்பட்டேன். விமானத்தில் ஏறும் முன்பாக என்னிடமிருந்து பிடுங்கப்பட்ட போனும் போர்டிங் பாஸ் குத்தப்பட்ட பாஸ்போர்ட்டும் திருப்பித் தரப்பட்டன. வானை செம்மேகங்கள் தழுவிக் களைத்துப் பிரியும் நேரத்தில் விமானம் புறப்பட்டது. கண்ணாடியினூடாக வானவெளி மெல்ல மெல்ல மங்கி வெளிக்காட்சிகள் மறைந்து இருண்ட கண்ணாடியில் இப்போது என் முகம் மட்டுமே நிழலாகத் தெரிந்தது. கொழும்பில் இறங்கியவுடன் சம்ரியாவுக்கு போன் பண்ணி நாடு திரும்பியதைச் சொல்ல வேண்டும். ஒரு பலமான நன்றியையும் சொல்லவேண்டும். என்னத்துக்கு நன்றி? என்று கேட்பாள். காசுதான் எல்லாம் என்பதை வார்த்தைகளால் சொல்லியும், காசு ஒன்றுமேயில்லை என்பதைச் சொல்லாமலும் புரிய வைத்தாயே...அதற்கு! என்பதைச் சொல்லக்கூடாது.
 
வீட்டு ஞாபகம் வந்தது. பாரம் ஏற்றிச் சைக்கிளைத் தொடர்ந்து மிதிப்பதால் உண்டாகும் கால் வலியுடன் வாப்பா அவதிப்பட்டுப் படுத்திருக்கும்போது இரண்டு தங்கைகளும் அவர் கால்களருகில் அமர்ந்து காய்ச்சப்பட்ட 'சித்தாலேப' தைலத்தைத் தேய்த்து கால்களை உருவிவிடும் காட்சியைப் பலபோது நான் கண்டிருக்கிறேன். அந்தக்கால்களை ஒருமுறை தொட்டுப்பார்க்கும் ஏக்கம் நெஞ்சை நிரப்பித் தொண்டையை அடைக்க வெடித்து அழத்தொடங்கினேன்.

-ஷாஜகான் 

Thanks: Kalkudahmuslims.net

Monday, July 30, 2012

'திருநெல்வேலிக்கே அல்வா...?







விமர்சனங்களுக்கே ஒரு  விமர்சனம்!






'திருநெல்வேலிக்கே அல்வாவா?' என்ற பாணியில் 'என்னது, விமர்சனத்திற்கே விமர்சனமா?' என்று விழிவிரிய ஆச்சரியப்படுவதை சற்று ஒத்திப்போட்டுவிட்டு நீங்கள்  தொடர்ந்து படித்தால் நாம் உடனடியாகவே விடயத்திற்கு வந்துவிடலாம்.


இந்த உலகிலே மனிதனால் இன்னும் அறியப்படாத விடயங்கள் வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் அப்படிக் அறியப்பட்டவற்றிலே அவனால் விமர்சிக்கப்படாத விடயங்களே இல்லையென்று அடித்துச்சொல்லலாம்.

சமையல் கலை முதற்கொண்டு இசை, இலக்கியம், சினிமா, விளையாட்டு, அரசியல், வியாபாரம்... என்று பொதுவாக எல்லாத் துறைகளிலுமே விமர்சனமும் விமர்சிப்பவர்களும் இருந்துகொண்டுதான் இருக்கின்றார்கள். அதுபோலவே விமர்சனம் ஆரம்பமான அந்தக் கல்தோன்றி கடவுள் தோன்றாக்காலம் முதற்கொண்டு விமர்சனத்தை விரும்பாதவர்;களும் இவ்வுலகிலே இருந்து கொண்டேதானிருக்கின்றார்கள்.

மேலோட்டமாகப் பார்த்தால், விமர்சித்தல் என்பது ஏதோ தவறான விடயம் போலத்தான்; தோற்றமளிப்பதுண்டு.  அதற்குரிய காரணங்களும் இருக்கத்தான் செய்கின்றன. ஏனெனில் எல்லாவற்றிலும் நல்ல விடயங்களும் தீய விடயங்களும் இருப்பதைப்போலவே விமர்சனங்களிலும் இருவகையுண்டு. ஒன்று ஆக்கபூர்வமான விமர்சனம் மற்றையது அவதூறுபூர்வமான விமர்சனம். (அழிவுபூர்வமானது என்று சொல்வேனென்றுதானே எதிர்பார்த்தீர்கள்? )

'சாப்பாடு என்னவோ நல்லாத்தான் இருக்கு. ஆனால் அந்த மாசிச் சம்பல்தான்  கெடுத்து விட்டுது பாருங்க' என்று மூக்குப் பிடிக்கச் சாப்பிட்ட ஒருவர் போகின்ற போக்கிலே கல்யாண சமையலைப் பற்றி இப்படி விமர்சித்துவிட்டுச் சென்றால் இரவெல்லாம் கண்விழித்து ஓடியாடிக் கஷ்டப்பட்டுச் சமைத்தவர்களுக்கு எப்படியிருக்கும்..?

அதேபோல கற்பனை வளத்துடன் மாய்ந்து மாய்ந்து எழுதும் எழுத்தாளன், பலகோடி பணத்தையும் உழைப்பையும் கொட்டித் தயாரிக்கும் திரைப்படத் தயாரிப்பாளன், நாள் முழுவதும் வெய்யிலிலே பட்டை உரியும் விளையாட்டு வீரன், இரவு பகலாய் சண்டைக் காட்சிகளிலும் உணர்வுக்காட்சிகளிலும் உடலைப்பணயம் வைக்கும் நடிகன், மூளையைக்கசக்கி நுட்பத்திறமையுடன் கோர்ப்புச் செய்யும் ஓர் இசைக் கலைஞன், மக்களிடம் நல்லபேரும் வாக்குகளும் வாங்கிவிட உழைக்கும் அரசியல்வாதி...

இவர்கள் அத்தனைபேரும் மிகுந்த பிரயாசையுடன் வெளிப்படுத்தும் தத்தமது படைப்புகளையும் முயற்சிகளையும் தலைக்குமேலாகச் சுழலும் ஒரு மின்விசிறியின் கீழே மேஜை போட்டு உட்கார்ந்து மடிக்கணனியை வைத்துக்கொண்டு யாரோ சிலர் சுளுவாக விமர்சித்து விட்டுச் செல்கின்றபோது ஆத்திரம் வராமல் வேறு என்னதான் வரும்?

நியாயம்தானே? சரி, இப்போது மறுதலையாகச் சிந்தித்துப் பார்ப்போம்...

ஒரு விடயம் மிகுந்த பிரயாசத்துடன் செய்யப்படுகின்றது என்பதற்காக மட்டுமே அது சிறப்பானதாகவும் சமூகப்பயனுடையதாகவும் அமைந்துவிடுமா?

இரவெல்லாம் கண்விழித்து.. பார்த்துப் பார்த்து சமைத்த திருமண உணவு சுவையில்லாமல் அமைந்துவிடுவதில்லையா? மாய்ந்த மாய்ந்து எழுதிய ஆக்கம் வெகுசாதாரணமாக ஆகிவிடுவதில்லையா? பிரபலங்கள் ஒன்றுகூடி பிரயாசையுடன் உருவாக்கிய திரைப்படம் பெட்டிக்குள்ளேயே முடங்கிவிடுவதில்லையா என்ன?

கல்யாணச் சாப்பாட்டை வேண்டுமானால்; பெருந்தன்மையாக உண்;டு சமாளித்து எழுந்து ஒருநடை மணமக்களை வாழ்த்தியபின் போட்டோவுக்குப் போஸும் வீடியோவில் அசடும் வழிந்துவிட்டுத் திரும்பி விடலாம். அது சபைமரியாதை மட்டுமல்ல ஓர் உயர்ந்த பண்பும் கூட.

ஆனால் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களிலும் வெளிவரும் சமூக விழுமியங்களுடன் தொடர்புடைய கருத்து வெளிப்பாடுகள் ஆக்கங்கள் அரசியல் ஆய்வுகள் போன்ற விடயங்களிலெல்லாம் அவ்வாறு பெருந்தன்மையுடன் 'பேசாமல்' இருந்து விடலாமா?

எந்தவொரு படைப்பாளியும் தனது படைப்பைப் பற்றிய மக்களின் கருத்தை அறிந்தால்தான் அவரால் மேலும் வெற்றிகரமான படைப்புக்களை உருவாக்கி அந்தத்துறையிலே உயரிய நிலையை எய்த முடியும். மக்களின் கருத்தை தனது படைப்புக்களின் மீது வைக்கப்படும் விமர்சனங்களிலிருந்துதான் ஒரு படைப்பாளியால் விரைவாகவும் சுலபமாகவும்  பெற்றுக்கொள்ள முடியும்.
ஒர் உணவுச்சாலையின் நிருவாகிகள், 'சாப்பாடு எப்படியிருக்கின்றது?' என்று வாடிக்கையாளர்களிடம்; கேட்பது அதிலேயுள்ள குறை நிறைகள் பற்றிய விபரங்களை அறிந்து மேலும் சிறப்பான உணவை வழங்குவதற்காகத்தானேயன்றி வெறுமனே அவர்களோடு அளவளாவும் ஆசையினால் அல்ல என்பதைப்; புரிந்து கொள்வதற்கு பெரிய பட்டப்படிப்புகளெல்லாம்  அவசியமில்லை.


விமர்சனங்களை முன்வைப்பவர்களுக்கும் சில பொறுப்புகள் உள்ளன.


ஒரு படைப்பை விமர்சிக்கும்போது முன்பு குறிப்பிட்டதுபோல அது ஆக்கபூர்வமானதாகவும் படைப்பாளியின் நிறைகுறைகளைச் சுட்டிக்காட்டுவதிலே உயர்ந்தபட்ச ஊடகநாகரீகம் பேணுவதாகவும் இருத்தல் வேண்டும். அதேவேளை தனிப்பட்ட குரோதத்துடன் படைப்பையோ படைப்பாளியையோ மட்டந்தட்டுவதும்  மிகை அபிமானத்துடன் அளவுமீறிப் புகழ்ந்துரைப்பதும் சரியான விமர்சனமாக இருக்கவே முடியாது.


அதேவேளை விமர்சனங்களை எதிர்கொள்ளும் படைப்பாளிகளும் தம்மீது சரியான கோணத்திலே முன்வைக்கப்படும் விமர்சனங்களை திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ள முன்வரவேண்டும். 'நான் எவ்வளவு பெரிய படைப்பாளி. இவர்கள் எப்படி என் படைப்பில் குறைகாணலாம்' என்று இறுமாப்புடன் நடந்து கொள்ளாமல் நம்மை நாமே சுயவிமர்சனம் செய்துபார்த்தல் அவசியம். அவ்வாறு செய்யும்போதுதான் நமது படைப்பிலுள்ள நிறைகுறைகளை நாமே அறிந்து அவற்றை செப்பனிடக்கூடிய வாய்ப்புக் கிடைக்கும். மாறாக நமது படைப்பின் மீது அநாவசியமான அவதூறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தால் அதனைத் துணிவுடன் எதிர்கொள்ளவும் நமது அதிருப்தியை நாகரீகமான விதத்திலே  சுட்டிக்காட்டவும் நமக்கு உரிமையுள்ளது அல்லவா?.

அவதூறு விமர்சனங்களைப் புரிபவர்களிடம் அல்லது அவர்களது விமர்சனங்கள் வெளியாகும் அதே ஊடகங்களிடம் குறிப்பிட்ட விமர்சனம் பற்றிய நமது கருத்துரைகளை தர்க்கரீதியாக முன்வைத்து பதிலளிக்கலாம். அவ்வாறு செய்யும்போது நமது படைப்பையும் அதற்குரிய விமர்சனங்களையும் படிக்கும் வாசகர்களுக்கும் விமர்சனம் பற்றிய நமது கருத்துக்களையும் அறியக்கூடியதாக இருக்கும். நம்மீது வைக்கப்படும் விமர்சனம் உண்மையிலேயே அவதூறுக்குரியதொன்றாக இருந்தால் அதை நமது எதிர்க்கருத்துக்களின் உதவியோடு வாசகனும் புரிந்து கொள்வான் அல்லவா? இவ்வாறு தொடர்ந்து நாம் செய்து வந்தால் அவதூறு விமர்சனம் செய்பவர்கள் நிச்சயம் வாசகர்களால் அடையாளங் காணப்பட்டு ஆதரவையும் இழந்து விடுவார்கள். நாளடைவிலே அவதூறு விமர்சனத்தை கைவிட்டு ஓட வேண்டிய நிலை அவர்களுக்கு நிச்சயம் ஏற்படும்.


அதைவிடுத்து விமர்சனங்களே செய்யவேண்டாம் என்று வேண்டுவதாலோ அல்லது அத்தகையோரை வசைபாடுவதாலோ உருப்படியான விளைவுகள் எதுவும் ஏற்படப்போவதில்லை. மாறாக 'விமர்சனங்களை தாங்கிக்கொள்ள முடியாதவர்கள் இவர்கள்' என்ற ஏளனப்பார்வைதான் நம்மீது உருவாகும்.
விமர்சனங்களை எதிர்கொள்ள மறுப்பதால் ஏற்படும் இழப்பு படைப்பாளிக்குத்தான் சென்றுசேரும்;. ஏனெனில் விமர்சனங்களை எதிர்கொள்ளும் ஒரு படைப்பாளியின் ஆற்றலும் திறமையும் இடைவிடாது பாய்ந்தோடும் நீரோடையை ஒத்திருக்கும். ஆனால் விமர்சனங்களே இல்லாதபோது அந்த ஆரோக்கியமான நீரோடை மெல்ல ஒடுங்கி தேங்கிய சேற்றுக்குட்டையாக மாறிவிடும் அபாயம் உண்டாகின்றது.


நமது சமூகத்திலே பெரும் எழுத்தாளர்கள் என்று கருதப்படுகின்ற பலரிடம் விமரிசனங்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இல்லாதிருப்பதைக் காணலாம். தம்மையும் தமது படைப்புக்களையும் பாராட்டிப் புகழ்ந்து வைக்கப்படுகின்ற விமர்சனக் கண்ணோட்டங்களை மட்டுமே காண்பதற்கும் ஏற்பதற்கும் தயாராக இருக்கின்றனரே தவிர தமது குறைகள் சுட்டிக்காட்டப்படுவதை விரும்புவது கிடையாது. அவ்வாறான விமர்சனத்தை - சுஜாதாவின் பாணியிலே கூறினால் - நாய் கொண்டு வந்துபோட்ட வஸ்துவைப் பார்ப்பதுபோலத்தான்  பார்ப்பார்கள்.


பொதுவாக விமர்சனங்கள் மறுக்கப்படும் இடங்களிலேதான் பின்னடைவுகளும் துரோகங்களும் செழித்து வளருகின்றன என்பார்கள். இது எல்லாத் துறைகளுக்கும் மிகவும் பொருந்தும்.  இந்த எளிய தத்துவம் எத்தனை உண்மையானது என்பதைப் புரிந்து கொள்வதற்கு நமது நாட்டிலே நிகழ்ந்து முடிந்த உள்நாட்டுயுத்த வரலாறு ஒன்றே போதுமானது.


மனிதாபிமான உணர்வுகளுடனும் இடதுசாரிச் சிந்தனைகளுடனும் விடுதலைகாணப் புறப்பட்ட படித்த புத்திஜீவி இளைஞர்கள் ஆரம்ப காலங்களிலே மக்களின் விமர்சனங்களுக்கு மதிப்புக்கொடுத்து சுயவிமர்சனங்களோடு தமது போராட்டங்களை முன்னெடுத்து வெற்றிகரமாக விளங்கினர்.


ஆனால் பிற்காலங்களிலே அவர்கள் சுயவிமர்சனங்களை தவிர்த்ததோடு தம்மீது பொதுமக்களினால் முன்வைக்கப்பட்ட நியாயமான விமர்சனங்களையும் மறுத்துச் செயற்பட ஆரம்பித்தார்கள். இதனால் படிப்படியாக ஜனநாயக மறுப்புடன் கூடிய சகபோராளிகளையும்  மக்களையும் கொன்று குவிக்கத்தக்க அராஜகப்போக்கிலான சிறுசிறு ஆயுதக்குழுக்களாக ஆனார்கள். காலப்போக்கில் தமக்கிடையே ஒற்றுமையிழந்து மோதுண்டு ஒருவரையொருவர் இரக்கமின்றி அழித்தொழித்ததுடன் இறுதியிலே முழுமையாக இல்லாதொழிந்துபோனார்கள்.


ஒரு விடுதலைப் போராட்டம் சரியான பாதையிலே முன்னெடுக்கப்படுவதற்கு விசுவாசமான போராளிகள் இருப்பது முக்கியமானது. விசுவாசமான போராளிகளை வளர்த்தெடுப்பதற்கு விமர்சனங்கள் மிக அவசியமானவை. அந்த விமர்சனங்கள் புறக்கணிக்கப்படும்போதுதான் தவறான வழிகாட்டல், தலைமை வழிபாடுகள், தனிநபர் பயங்கரவாதம், காட்டிக்கொடுப்புகள், துரோகங்கள் போன்ற பிழையான விடயங்கள் உருவாகி வளர்ச்சியடைந்து ஒருகட்டத்திலே மொத்தப் போராட்டத்தையே நிலைகுலையச்செய்துவிடும்.
ஒரு விடுதலைப் போராட்டமும் முழுமையாக அழிவடைந்ததற்கு எத்தனையோ புறக்காரணிகள் இருந்தபோதிலும்கூட விமர்சனங்களை மறுத்து ஒதுக்கியதுதான் முதற்கோணலாக அமைந்து விட்டிருக்கின்றது என்றால் அது மிகையல்ல.

பொதுமக்களின் பார்வைக்காக வெளிவருகின்ற வருகின்ற எந்தவொரு சமூகவிழுமியங்களுடன் தொடர்புடைய படைப்பக்களுக்கும் விமர்சனம் எத்தனை அவசியமானது என்பதற்கு இதைவிடச் சிறந்த உதாரணத்தை நாம் தேடிப்பெற முடியாது.


- Jesslya Jessly