Tuesday, January 29, 2013

கவிதை : ஓர் ஒப்புதல் வாக்கு மூலம்!






ஓ! ரிசானா...!

எனக்கு மூச்சு முட்டுகிறது.
முள்ளந்தண்டு வளைகிறது.
மூன்றாவது தடவையாகவும் செய்த
ஹஜ்ஜை நினைக்கையிலே!


000


ரிசானா....!

மறுமையில்
கன்னத்திலும் விலாவிலும்
சூடு போடப் படுமாமே...!
ஸக்காத் என்ற பெயரில்
ஐந்துரூபா குற்றியை
சுண்டிவிட்டதை நினைக்கையிலே!

000


ரிசானா...!

எனக்கு அவமானமாக இருக்கிறது.
'சீதனம் ஒழிக' என்று
இன்னும் மைக்குக்கு முன்னால்
கத்திக் கொண்டிருப்பதை நினைக்கையிலே!


000


ரிசானா...!

உன் போல் வீடென்ற பெயரில்
ஆட்டுக் கொட்டில்களில் வாழ்பவரையறியாது
ஆறடி மண்ணை மறந்து...
அந்த அறை,  இந்த அறையென்று
ஆடம்பர மாளிகை கட்டுவதை நினைக்கையிலே!


000

ரிசானா...!

ஒரு வேளை உணவும்
உடுத்தவோர் நல்லாடையும் தேடி
கடல் கடக்க வைத்து
நாம் பாலையில்
பலியாக்கியதை அறிந்ததும்
அல்லாஹ்வை நினைத்து...
என் அங்கமெல்லாம் நடுங்குகிறது.
ஒவ்வொரு பிள்ளைக்கும்
ஒன்றுக்கு நான்கு உடை எடுத்து
நெய்யொழுக பிரியாணியை
பிசைந்து அலைந்து கொட்டி
வேடிக்கையாய்....
வாடிக்கையாய்.....
வாழ்வதை நினைத்தால்!


000


ரிசானா...!

என்றோ ஒருநாளில்
எனக்கு மனசாட்சி
வேலைசெய்து விடுமோ
என்றுதான்
பயமாக  இருக்கிறது,
வாக்குப் 'பொறுக்கி' விற்று
நான் பெற்ற
பில்லியன்களை நினைக்கையிலே!

 
-மூதூர் முகம்மதலி ஜின்னாஹ்
2013 .01. 29
 

No comments:

Post a Comment