Thursday, February 7, 2013

கமல், DDH சுக்கு என்ன பதில்?






கோவிந்த் நிஹிலானியும் கமல்ஹாசனும் வசனமெழுதிய படம் குருதிப் புனல். கமல்ஹாசன்தான் நாயகன். போலிஸ் அதிகாரி வேடம். சிறைபிடிக்கப்பட்ட தீவிரவாதியிடம், அவன் சினிமாவைப் பார்த்து பலஹீனமான இளைஞர்களை நம்பியிருப்பதாக அந்த போலிஸ் அதிகாரி வசனம் பேசுவதாக காட்சி வரும்.


இந்த வசனத்தின்படி சினிமா பார்க்கும் இளைஞர்களை பலவீனமானவர்கள் என்பதாக சித்தரிக்க முடிந்த கமல்ஹாசனால், அந்த பலவீனமான ரசிகர்களைக் கொண்டே, தனக்கென ஓர் உயர்ந்த பிம்பத்தை உருவாக்கிக் கொள்ளவும் முடிந்திருக்கிறது.


தன்னளவில் பலத்தை அதிகரித்துக்கொண்டு ஒரு ஹீரோவாக வளர்ந்த கமல்ஹாசன், புதுமைகளுக்குப் பெயர் போனவர். வித்தியாசமான மேக்கப், காட்சி அமைப்புகளில் பரிசோதனை முயற்சி, பத்து வேடங்கள், வயது கடந்த கிழவனை ஹீரோவாகக் காட்டும் சினிமா… இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.. இதெல்லாம் Movie Making எனப்படும் சினிமா எடுப்பதில் மட்டும் செய்து கொண்டிருந்த புதுமைகள். இப்போது சினிமாவை விற்பதில் புதுமை செய்யலாம் என நினைத்துத் தனது புதிய படமான விஸ்வரூபத்தினை., டிடிஎச் தொலைக்காட்சியில் ரிலீஸ் என்று அறிவித்தார். அதுவும் அந்தப் படம் ஜனவரி 10ம்தேதி இரவு ஒன்பதரை மணிக்கு டிடிஎச் சானல்களில் காட்டப்படும்.. அதன் பின்னர் மறுநாள் ஜனவரி 11ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிப்பு வெளியானது. ஏர்டெல் டிடிஎச் சேவைக்காக பிரத்யேக ப்ரஸ் மீட் நடந்து இந்தத் திட்டம் மிக வேகமாக பிரபலமடையத் தொடங்கியது.


இது மாதிரி டிடிஎச் ரிலீஸ் செய்ய பல டிடிஎச் சேவை நிறுவனங்கள் முன்வந்தன. அந்த நிறுவனங்களின் சானல்களில் இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளரும், கதாநாயகனுமான கமல்ஹாசனே தோன்றி விளம்பரங்கள் செய்தார். இதன் அடிப்படையில் இந்த திரைப்படத்தை, டிடிஎச் சானலில் பார்க்க ஒரே ஒரு காட்சிக்கு ஆயிரம் ரூபாய் கட்டணம் சந்தாதாரர்கள் கட்ட வேண்டும் என்று அறிவிக்கப்பட்ட்து. கமல்ஹாசனின் விளம்பரத்தினால் ஈர்க்கப்பட்டவர்கள் இந்த சந்தாவினைக் கட்டத் தொடங்கினார்கள். இப்படி வசூல் ஆன தொகை ஒரு கட்டத்தில் முன்னூறு கோடியினைக் கடந்ததாக செய்திகள் வெளியாகின. இந்தச் சமயத்தில் இந்த திரைப்படத்தை டிடிஎச் தளத்தில் வெளியிட தியேட்டர் ஓனர்கள் தரப்பிலிருந்து எதிர்ப்பு வந்தது.
திரைப்படத்தினை சினிமா தியேட்டர்களில் தான் வெளியிட வேண்டும். டிடிஎச்-சில் வெளியிட்டால் அது சினிமா தியேட்டர்களின் வருவாயைப் பாதிக்கும் என்பது தியேட்டர் முதலாளிகள் தரப்பின் வாதம்.

டிடிஎச்-சில் படம் பார்க்கும் ரசிகர்கள் வெறும் மூன்று சதவிகிதம்தான். அதனாலே தியேட்டரில் படம் பார்க்கச் செல்லும் ரசிகர்கள் கூட்டம் மாறப் போவதில்லை. தியேட்டர் ஓனர்களின் பயமும் எதிர்ப்பும் நியாயமில்லை. அநாவசியமானது, அர்த்தமில்லாதது என்று விளக்கம் சொல்லி கமல்ஹாசனின் அறிக்கையும் பேட்டியும் வெளியானது. அந்த அறிவிப்பில், வீட்டிலே சுவற்றிலே பெருமாள் படம் தொங்கிக் கொண்டிருக்கிறது என்பதற்காக திருப்பதிக்கு பெருமாளை வழிபடச் செல்கின்றவர்கள் குறைந்துவிட்டார்களா என்ன, வீட்டிலே சிறந்த சமையல் மூலம் சுவையான உணவு கிடைக்கிறது என்பதற்காக மக்கள் ஹோட்டலுக்குப் போவதில்லையா என்ன என்று மிகவும் உருக்கமாக கமல்ஹாசன் சொன்னதை யாரும் மறந்திருக்கமாட்டார்கள்.


ஹயாத் ரீஜென்சி ஹோட்டலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கமல்ஹாசன், தொழில் செய்யும் உரிமையை இந்த அரசாங்கமும், குடியரசும் எனக்குக் கொடுத்திருக்கிறது. இதைத் தடுப்பது சட்டப்படி குற்றம் என்பதாகவும் சொன்னார்.


இந்த திரைப்படத்தை டிடிஎச்சில் வெளியிட இருக்கும் தனக்கு இதனால் பல தியேட்டர் உரிமையாளர்கள் சங்கங்களிடமிருந்து மிரட்டல் வருவதாகப் பேட்டிகளில் சொன்ன கமல்ஹாசன், இது குறித்து காவல் துறையில் புகாரும் தந்தார். மிரட்டலுக்குத் தான் பயப்படப் போவதில்லை என்றும் படம் திட்டமிட்டபடி ஜனவரி 10ம் தேதி டிடிஎச்-சில் வெளியாகும் என்றும் அறிவித்தார்.


தனக்கு சட்டப்படி இருக்கும் உரிமையைக் குறிப்பிடும் கமல்ஹாசன், இந்தப் படத்தின் வெளியீட்டைத் தள்ளிவைத்திருப்பதாகவும், அப்படி செய்ய தன்னை யாரும் நிர்பந்திக்கவில்லை எனவும், அப்படி யாரும் தன்னை நிர்பந்திக்க இயலாது என்றும் பேட்டியில் சொன்னார்.


அதே பேட்டியில், இந்தப் படத்தை டிடிஎச்-சில் வெளியிடும் அதே நாளில், திரையரங்குகளிலும் வெளியிட வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்களின் சங்கங்கள் கோரிக்கை வைத்திருப்பதாகவும், சினிமா துறையின் நன்மையினைக் கருதி அந்தக் கருத்தினை தான் ஏற்றுக் கொள்ளக் கூடும் என சூசகமாகத் தெரிவித்தார். தனது உழைப்பும் உரிமையுமான இந்தப் படத்தினை எப்படி எங்கே வெளியிட வேண்டும் என முடிவு செய்யும் அதிகாரம் தனக்கே இருப்பதாகவும், இதற்கு எதிராக தனக்கு இடர் தருகின்றவர்கள் Competion Act 2002 ன் ஷரத்துகளின் படி Competition Commisison of India உரைத்துள்ள தீர்ப்புகளின்படி தவறு இழைத்தவர்களாக ஆகின்றார்கள் என்றும் சொல்லி, அதன் அடிப்படையில் பதிமூன்று பேருக்கு வக்கீல் நோட்டிஸ் அனுப்பியிருப்பதாகவும் பேட்டியின் போது சொன்னார்.


தன்னை நம்பி , டிடிஎச் மூலம் இந்தப் படத்தை வெளியிட தன்னுடன் இணைந்து நின்ற டிடிஎச் சேனல்களைத் தன்னுடைய பார்ட்னர்கள் என்றே குறிப்பிட்ட கமல்ஹாசன், அவர்களைத் தான் கைவிடப் போவதில்லை என அழுத்தமாகப் பல முறை அந்தப் பேட்டியில் குறிப்பிட்டார்.


இந்தப் படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர், படத்தின் கதாநாயகன், சினிமா ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற முன்னணி நடிகர் எனும் அடிப்படையில், டிடிஎச் சானல்களின் விளம்பரம் மூலம் தியேட்டருக்கு வருவதற்கு ஒருநாள் முன்பு, டிவி சேனலில் இந்த திரைப்படம் வரும் என்கிற நம்பிக்கையை உண்டாக்கி, ரசிகர்களை சிறப்புச் சந்தா செலுத்த வைத்திருந்த தன்னுடைய செயலைக் குறித்து கமல்ஹாசன் இந்தப் பேட்டியில் எந்த வார்த்தையும் பேசவில்லை. இது அவரை நம்பி சந்தா செலுத்திய ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது.


விஸ்வரூபம் படத்தின் வெளியீட்டுத் தேதி தள்ளி வைக்கப்பட்டது. இதை கமல்ஹாசன் அறிவித்த நிலையில், டிடிஎச் சேனல்களும் செயலில் இறங்கின. கமல் முன்னர் அறிவித்தபடி இந்தப் படம் திரையரங்கில் வெளியாவதற்கு முன்னரே டிடிஎச் சேனல்களில் வெளியாகாது என்று சொல்லி சில சேனல்கள் சந்தா செலுத்தியவர்களுக்குப் பணத்தைத் திருப்பித் தரத் தொடங்கின. ஆனால், வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றப்பட்ட நிலைதான்.


பணம் செலுத்திய சந்தாதாரர்கள் டிடிஎச் சேவை வழங்கும் சேனல்களின் தொலைப்பேசி சேவை வழியே மேலும் விபரம் தெரிந்து கொள்ள முயன்றனர்.. ஆனால் அவர்களுக்கு திட்டவட்டமான பதில் கிடைக்கவில்லை. இந்த திரைப்படம் எப்படியும் ஒரு நாள் டிடிஎச் சேனல்களில் வெளியாகும்; ஒளிபரப்பாகும் தினத்தன்று பார்த்துக் கொள்ளுங்கள் என்ற பொறுப்பற்ற பதில் கிடைத்தவர்கள்தான் ஏராளம். இந்த நிலையில், தங்கள் பணம் திரும்பக் கிடைக்குமா என்கிற குழப்பம் பலருக்கும் நீடித்தது.


புதிதாக, ‘விஸ்வரூபம் படம், திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஜனவரி 25ம் தேதி 500 அரங்குகளுக்குக் குறையாமல் தமிழகமெங்கும் திரையிடப்பட இருக்கிறது’ எனும் அறிவிப்பை வெளியிட்டது இந்தப் படத்தைத் தயாரிக்கும் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல். ஆனால், முன்னர் அறிவித்தபடி டிடிஎச் சேனல்களில் இந்த திரைப்படம் வெளியாகுமா, ஆகாதா எந்த தேதியில் வெளியாகும் என்பன போன்ற திட்டவட்ட அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.


தன்னுடைய பேட்டியிலும், திரையரங்க உரிமையாளர்களுக்கும், தனக்கும் இருக்கும் சர்ச்சைகள், சுமூக உறவு ஏற்பட மேற்கொள்ளும் முயற்சிகள் குறித்து மட்டுமே பேசிய கமல்ஹாசன், ரசிகர்கள் குறிப்பாக டி.எச் சேனல்களில் இவரது படத்தைப் பார்ப்பதற்கு பணம் கட்டிய ரசிகர்களைப் பற்றி எதுவும் பேசவில்லை. பிறகு, டைம்ஸ் ஆஃப் இந்தியாவில், கமல்ஹாசன் என்னுடைய பணம் எங்கே என்றொரு வெளிப்படையான கடிதம் வெளியானது.


டிடிஎச் சானல்களில் கவர்ச்சிகரமான விளம்பரம் செய்து, ரசிகர்களைப் பணம் கட்ட வைக்கக் காரணமான கமல்ஹாசனுக்கு, தான் தொழில் செய்வதில், இடைஞ்சல் வந்த நிலையில், தனக்குள்ள சட்டபூர்வமான உரிமையினை, ஆணித்தரமாக சொன்ன கமல்ஹாசனுக்கு, தான் தொழில் செய்வதைத் தடுத்து மிரட்டுகிறார்கள் என்று காவல் துறையிடம் நேரில் சென்று புகார் கொடுத்து, பாதுகாப்பு வேண்டிய கமல்ஹாசனுக்கு, தனக்கிருக்கும் சட்டபூர்வமான உரிமையினை எடுத்துச் சொல்லி இடர் தந்தவர்களுக்கு வக்கீல் நோட்டிஸ் அனுப்பிய கமல்ஹாசனுக்கு, சட்டத்தின் மூலமாகவே சில கேள்விகளை முன் வைக்கலாம்.


முதல்கேள்வி :


கமல்ஹாசன் முன்னர் விளம்பரங்களில் அறிவித்ததுபோல் திரையரங்குகளில் வெளியாகும் முன்பு, டி.டி எச் சேனல்களில் ஏன் விஸ்வரூபம் வெளியாகவில்லை?
இந்தப் படத்தை டி. டி ஹெச் சானல்களில் வெளியிட்ட மறுநாளே திரையரங்குகளில் வெளியிட வேண்டும். நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின்படி விளம்பரத்தில் சொன்னபடி சேவை வழங்க வேண்டும். இது கமல்ஹாசனுக்குத் தெரியுமா ?


விளம்பரங்களில் சொன்னபடி திரையரங்குகளில் படத்தை வெளியிடுவதற்கு முன்பு டிடிஎச் சானல்களில் வெளியிடாத நிலையில், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின்படி அவர் Misleading Advertisement செய்தவராகவும், Unfair Trade Practiceக்குத் துணை போனவர் ஆகிறார் என்று கருத வாய்ப்புள்ளது என்பதை கமல்ஹாசன் தெரிந்து வைத்திருக்கிறாரா?


இரண்டாவதுகேள்வி :



திரையரங்குகளுக்கு முன்பு, டிடிஎச் சேனல்களில் விஸ்வரூபம் வெளி வராத நிலையில் அதற்கான நியாயமான காரணத்தினை நுகர்வோருக்குச் சொல்லவும் கடமைப்பட்டவராகிறார் என்பது கமல்ஹாசனுக்குத் தெரியுமா?
அப்படி காரணம் சொல்லாமல் இருப்பது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின்படி சேவைக் குறைவு என்று கருத வாய்ப்பு உண்டு என்பதும் கமல்ஹாசனுக்குத் தெரியுமா



மூன்றாவது கேள்வி



இந்த சந்தா வசூல் விவாகரத்தில் இத்தனை கோடி வசூல் ஆன நிலையில் சந்தாதாரர்களுக்கு விளம்பரத்தில் சொன்னபடி முதலில் திரைப்படம் வெளியிடப்படாத நிலை இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 418ன் படி மோசடி என கருத வாய்ப்புண்டாகும் என்று தெரியுமா?

இந்தக் கேள்விகளுக்கு கமல்ஹாசன் பதில் சொல்வாரா என்பது தெரியவில்லை. ஆனால் அவர் பதில் சொல்வாரேயானால் அவர் சொன்னது போலவே பக்ரீத் பண்டிகையின் போது விருந்து வைத்து ஏழைக் குழந்தைகளுக்கு பிரியாணி செய்து பரிமாறலாம். முன்பு ஒருதரம் ஆனந்தவிகடன் பேட்டியில் கமல்ஹாசன் ஆசைப்பட்டு சொன்னது மாதிரி, அவர் மோகன் தாஸ் கரம் சந்த் காந்தியையும் அந்த விருந்துக்கு அழைக்கலாம். விருந்துக்கு அழைப்பவரின் நேர்மை, காந்திக்குப் பிடிக்குமா என்பதையும் Moral Angle-லில் நின்று கொண்டு கமல்ஹாசன் யோசித்துப் பதில் சொல்லலாம்.

One man cannot do right in one department of life whilst he is occupied in doing wrong in any other department of life. Life is indivisible whole

என்று சொல்லி அப்படியே கடைபிடித்தவர் காந்தி.

-சந்திரமௌளீஸ்வரன்
Thanks: Tamilpapaernet.com

1 comment:

  1. மொக்கைப் படமாக மாறிடுமோ என்று பயந்துதான் இப்படியெல்லாம் விளம்பரம்ப்படுத்துகிராறோ தெரியாது...

    இதெல்லாம் ஒரு விளம்பரப்படுத்தல் யுக்திதான்

    ReplyDelete